MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.15 பாவநாசத்திருப்பதிகம்
    பண் - பழம்பஞ்சுரம்
    திருச்சிற்றம்பலம்

    145 பற்றற் றார்சேற் பழம்பதியைப்
    பாசூர் நிலாய பவளத்தைச்
    சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத்
    தீண்டற் கரிய திருவுருவை
    வெற்றி யூரில் விரிசுடரை
    விமலர் கோனைத் திரைசூழ்ந்த
    ஒற்றி யூரெம் உத்தமனை
    உள்ளத் துள்ளே வைத்தேனே.

    வெற்றியூரென்பது வைப்புத்தலங்களிலொன்று. 4.15.1
    146 ஆனைக் காவில் அணங்கினை
    ஆரூர் நிலாய அம்மானைக்
    கானப் பேரூர்க் கட்டியைக்
    கானூர் முளைத்த கரும்பினை
    வானப் பேரார் வந்தேத்தும்
    வாய்மூர் வாழும் வலம்புரியை
    மானக் கயிலை மழகளிற்றை
    மதியைச் சுடரை மறவேனே. 4.15.2
    147 மதியங் கண்ணி ஞாயிற்றை
    மயக்கந் தீர்க்கும் மருந்தினை
    அதிகை மூதூர் அரசினை
    ஐயா றமர்ந்த ஐயனை
    விதியைப் புகழை வானோர்கள்
    வேண்டித் தேடும் விளக்கினை
    நெதியை ஞானக் கொழுந்தினை
    நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே. 4.15.3
    148 புறம்ப யத்தெம் முத்தினைப்
    புகலூர் இலங்கு பொன்னினை
    உறந்தை யோங்கு சிராப்பள்ளி
    உலகம் விளக்கு ஞாயிற்றைக்
    கறங்கு மருவிக் கழுக்குன்றிற்
    காண்பார் காணுங் கண்ணானை
    அறஞ்சூழ் அதிகை வீரட்டத்
    தரிமான் ஏற்றை அடைந்தேனே.

    உறந்தையென்பது உறையூர். 4.15.4
    149 கோலக் காவிற் குருமணியைக்
    குடமூக் குறையும் விடமுணியை
    ஆலங் காட்டி லந்தேனை
    அமரர் சென்னி யாய்மலரைப்
    பாலிற் றிகழும் பைங்கனியைப்
    பராய்த் துறையெம் பசும்பொன்னைச்
    சூலத் தானைத் துணையிலியைத்
    தோளைக் குளிரத் தொழுதேனே.

    குடமூக்கென்பது கும்பகோணம். 4.15.5
    150 மருக லுறையுமா ணிக்கத்தை
    வலஞ் சுழியின் மாலையை
    கருகா வூரிற் கற்பகத்தைக்
    காண்டற் கரிய கதிரொளியைப்
    பெருவே ளூரெம் பிறப்பிலியைப்
    பேணு வார்கள் பிரிவரிய
    திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச்
    சிந்தை யுள்ளே வைத்தேனே. 4.15.6
    151 எழிலார் இராச சிங்கத்தை
    இராமேச் சுரத்தெம் எழிலேற்றைக்
    குழலார் கோதை வரைமார்பிற்
    குற்றா லத்தெங் கூத்தனை
    நிழலார் சோலை நெடுங்களத்து
    நிலாய நித்த மணாளனை
    அழலார் வண்ணத் தம்மானை
    அன்பி லணைத்து வைத்தேனே. 4.15.7
    152 மாலைத் தோன்றும் வளர்மதியை
    மறைக்காட் டுறையும் மணாளனை
    ஆலைக் கரும்பி னின்சாற்றை
    அண்ணா மலையெம் அண்ணலைச்
    சோலைத் துருத்தி நகர்மேய
    சுடரிற் றிகழுந் துளக்கிலியை
    மேலை வானோர் பெருமானை
    விருப்பால் விழுங்கி யிட்டேனே. 4.15.8
    153 சோற்றுத் துறையெஞ் சோதியைத்
    துருத்தி மேய தூமணியை
    ஆற்றிற் பழனத் தம்மானை
    ஆல வாயெம் மருமணியை
    நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ள்
    நெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத்
    தோற்றக் கடலை அடலேற்றைத்
    தோளைக் குளிரத் தொழுதேனே. 4.15.9
    154 புத்தூ ருறையும் புனிதனைப்
    பூவ ணத்தெம் போரேற்றை
    வித்தாய் மிழலை முளைத்தானை
    வேள்விக் குடியெம் வேதியனைப்
    பொய்த்தார் புரமூன் றெரித்தானைப்
    பொதியில் மேய புராணனை
    வைத்தேன் என்றன் மனத்துள்ளே
    மாத்தூர் மேய மருந்தையே.

    மாத்தூரென்பது - திருவாமாத்தூர். 4.15.10
    155 முந்தித் தானே முளைத்தானை
    மூரி வெள்ளே றூர்ந்தானை
    அந்திச் செவ்வான் படியானை
    அரக்க னாற்றல் அழித்தானைச்
    சிந்தை வெள்ளப் புனலாட்டிச்
    செஞ்சொன் மாலை யடிசேர்த்தி
    எந்தை பெம்மான் என்னெம்மான்
    என்பார் பாவ நாசமே. 4.15.11

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book