MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.29 திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    284 ஊனினுள் ளுயிரை வாட்டி
    யுணர்வினார்க் கெளிய ராகி
    வானினுள் வான வர்க்கும்
    அறியலா காத வஞ்சர்
    நானெனிற் றானே யென்னு
    ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
    தேனும்இன் னமுது மானார்
    திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.1
    285 நொய்யவர் விழுமி யாரும்
    நூலினுள் நெறியைக் காட்டும்
    மெய்யவர் பொய்யு மில்லார்
    உடலெனும் இடிஞ்சில் தன்னில்
    நெய்யமர் திரியு மாகி
    நெஞ்சத்துள் விளக்கு மாகிச்
    செய்யவர் கரிய கண்டர்
    திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.2
    286 வெள்ளியர் கரியர் செய்யர்
    விண்ணவ ரவர்கள் நெஞ்சுள்
    ஒள்ளியர் ஊழி யூழி
    யுலகம தேத்த நின்ற
    பள்ளியர் நெஞ்சத் துள்ளார்
    பஞ்சமம் பாடி யாடுந்
    தெள்ளியர் கள்ளந் தீர்ப்பார்
    திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.3
    287 தந்தையுந் தாயு மாகித்
    தானவன் ஞான மூர்த்தி
    முந்திய தேவர் கூடி
    முறைமுறை இருக்குச் சொல்லி
    எந்தைநீ சரண மென்றங்
    கிமையவர் பரவி யேத்தச்
    சிந்தையுட் சிவம தானார்
    திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.4
    288 ஆறுடைச் சடையர் போலும்
    அன்பருக் கன்பர் போலுங்
    கூறுடை மெய்யர் போலுங்
    கோளர வரையர் போலும்
    நீறுடை யழகர் போலும்
    நெய்தலே கமழு நீர்மைச்
    சேறுடைக் கமல வேலித்
    திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.5
    289 ஞாலமும் அறிய வேண்டின்
    நன்றென வாழ லுற்றீர்
    காலமுங் கழிய லான
    கள்ளத்தை ஒழிய கில்லீர்
    கோலமும் வேண்டா ஆர்வச்
    செற்றங்கள் குரோத நீக்கில்
    சீலமும் நோன்பு மாவார்
    திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.6
    290 புரிகாலே நேசஞ் செய்ய
    இருந்தபுண் டரீகத் தாரும்
    எரிகாலே மூன்று மாகி
    இமையவர் தொழநின் றாரும்
    தெரிகாலே மூன்று சந்தி
    தியானித்து வணங்க நின்று
    திரிகாலங் கண்ட எந்தை
    திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.7
    291 காருடைக் கொன்றை மாலை
    கதிர்மதி அரவி னோடும்
    நீருடைச் சடையுள் வைத்த
    நீதியார் நீதி யுள்ளார்
    பாரொடு விண்ணும் மண்ணும்
    பதினெட்டுக் கணங்க ளேத்தச்
    சீரொடு பாட லானார்
    திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.8
    292 ஓவாத மறைவல் லானும்
    ஓதநீர் வண்ணன் காணா
    மூவாத பிறப்பி லாரும்
    முனிகளா னார்கள் ஏத்தும்
    பூவான மூன்றும் முந்நூற்
    றறுபது மாகும் எந்தை
    தேவாதி தேவ ரென்றுந்
    திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.9
    293 அங்கங்க ளாறு நான்கும்
    அந்தணர்க் கருளிச் செய்து
    சங்கங்கள் பாட ஆடுஞ்
    சங்கரன் மலைஎ டுத்தான்
    அங்கங்கள் உதிர்ந்து சோர
    அலறிட அடர்த்து நின்றுஞ்
    செங்கண்வெள் ளேற தேறுந்
    திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.10
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சொர்னபுரீசர், தேவியார் - சுகந்தவனநாயகி.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book