MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.31 திருக்கடவூர் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    304 பொள்ளத்த காய மாயப்
    பொருளினைப் போக மாதர்
    வெள்ளத்தைக் கழிக்க வேண்டில்
    விரும்புமின் விளக்குத் தூபம்
    உள்ளத்த திரியொன் றேற்றி
    உணருமா றுணர வல்லார்
    கள்ளத்தைக் கழிப்பர் போலுங்
    கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.1
    305 மண்ணிடைக் குரம்பை தன்னை
    மதித்துநீர் மைய லெய்தில்
    விண்ணிடைத் தரும ராசன்
    வேண்டினால் விலக்கு வாரார்
    பண்ணிடைச் சுவைகள் பாடி
    ஆடிடும் பத்தர்க் கென்றுங்
    கண்ணிடை மணியர் போலுங்
    கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.2
    306 பொருத்திய குரம்பை தன்னுட்
    பொய்நடை செலுத்து கின்றீர்
    ஒருத்தனை யுணர மாட்டீர்
    உள்ளத்திற் கொடுமை நீக்கீர்
    வருத்தின களிறு தன்னை
    வருத்துமா வருத்த வல்லார்
    கருத்தினில் இருப்பர் போலுங்
    கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.3
    307 பெரும்புலர் காலை மூழ்கிப்
    பித்தற்குப் பத்த ராகி
    அரும்பொடு மலர்கள் கொண்டாங்
    கார்வத்தை யுள்ளே வைத்து
    விரும்பிநல் விளக்குத் தூபம்
    விதியினால் இடவல் லார்க்குக்
    கரும்பினிற் கட்டி போல்வார்
    கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.4
    308 தலக்கமே செய்து வாழ்ந்து
    தக்கவா றொன்று மின்றி
    விலக்குவா ரிலாமை யாலே
    விளக்கதிற் கோழி போன்றேன்
    மலக்குவார் மனத்தி னுள்ளே
    காலனார் தமர்கள் வந்து
    கலக்கநான் கலங்கு கின்றேன்
    கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.5
    309 பழியுடை யாக்கை தன்னிற்
    பாழுக்கே நீரி றைத்து
    வழியிடை வாழ மாட்டேன்
    மாயமுந் தெளிய கில்லேன்
    அழிவுடைத் தாய வாழ்க்கை
    ஐவரால் அலைக்கப் பட்டுக்
    கழியிடைத் தோணி போன்றேன்
    கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.6
    310 மாயத்தை அறிய மாட்டேன்
    மையல்கொள் மனத்த னாகிப்
    பேயொத்துக் கூகை யானேன்
    பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீ
    நேயத்தால் நினைய மாட்டேன்
    நீதனே நீசனேன் நான்
    காயத்தைக் கழிக்க மாட்டேன்
    கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.7
    311 பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து
    பாழுக்கே நீரி றைத்தேன்
    உற்றலாற் கயவர் தேறா
    ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்
    எற்றுளேன் என்செய் கேன்நான்
    இடும்பையால் ஞான மேதுங்
    கற்றிலேன் களைகண் காணேன்
    கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.8
    312 சேலின்நேர் அனைய கண்ணார்
    திறம்விட்டுச் சிவனுக் கன்பாய்ப்
    பாலுநற் றயிர்நெய் யோடு
    பலபல ஆட்டி யென்றும்
    மாலினைத் தவிர நின்ற
    மார்க்கண்டற் காக வன்று
    காலனை யுதைப்பர் போலுங்
    கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.9
    313 முந்துரு இருவ ரோடு
    மூவரு மாயி னாரும்
    இந்திர னோடு தேவர்
    இருடிகள் இன்பஞ் செய்ய
    வந்திரு பதுகள் தோளால்
    எடுத்தவன் வலியை வாட்டிக்
    கந்திரு வங்கள் கேட்டார்
    கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர், தேவியார் - அபிராமியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book