MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.39 திருவையாறு - திருநேரிசை
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    384 குண்டனாய்ச் சமண ரோடே
    கூடிநான் கொண்ட மாலைத்
    துண்டனே சுடர்கொள் சோதீ
    தூநெறி யாகி நின்ற
    அண்டனே அமரர் ஏறே
    திருவையா றமர்ந்த தேனே
    தொண்டனேன் தொழுதுன் பாதஞ்
    சொல்லிநான் திரிகின் றேனே. 4.39.1
    385 பீலிகை இடுக்கி நாளும்
    பெரியதோர் தவமென் றெண்ணி
    வாலிய தறிகள் போல
    மதியிலார் பட்ட தென்னே
    வாலியார் வணங்கி ஏத்துந்
    திருவையா றமர்ந்த தேனோ
    டாலியா எழுந்த நெஞ்சம்
    அழகிதா எழுந்த வாறே. 4.39.2
    386 தட்டிடு சமண ரோடே
    தருக்கிநான் தவமென் றெண்ணி
    ஒட்டிடு மனத்தி னீரே
    உம்மையான் செய்வ தென்னே
    மொட்டிடு கமலப் பொய்கைத்
    திருவையா றமர்ந்த தேனோ
    டொட்டிடும் உள்ளத் தீரே
    உம்மைநான் உகந்திட் டேனே. 4.39.3
    387 பாசிப்பல் மாசு மெய்யர்
    பலமிலாச் சமண ரோடு
    நேசத்தா லிருந்த நெஞ்சை
    நீக்குமா றறிய மாட்டேன்
    தேசத்தார் பரவி யேத்துந்
    திருவையா றமர்ந்த தேனை
    வாசத்தால் வணங்க வல்லார்
    வல்வினை மாயு மன்றே. 4.39.4
    388 கடுப்பொடி யட்டி மெய்யிற்
    கருதியோர் தவமென் றெண்ணி
    வடுக்களோ டிசைந்த நெஞ்சே
    மதியிலி பட்ட தென்னே
    மடுக்களில் வாளை பாயுந்
    திருவையா றமர்ந்த தேனை
    அடுத்துநின் றுன்னு நெஞ்சே
    அருந்தவஞ் செய்த வாறே. 4.39.5
    389 துறவியென் றவம தோரேன்
    சொல்லிய செலவு செய்து
    உறவினால் அமண ரோடும்
    உணர்விலேன் உணர்வொன் றின்றி
    நறவமார் பொழில்கள் சூழ்ந்த
    திருவையா றமர்ந்த தேனை
    மறவிலா நெஞ்ச மேநன்
    மதியுனக் கடைந்த வாறே. 4.39.6
    390 பல்லுரைச் சமண ரோடே
    பலபல கால மெல்லாஞ்
    சொல்லிய செலவு செய்தேன்
    சோர்வனான் நினைந்த போது
    மல்லிகை மலருஞ் சோலைத்
    திருவையா றமர்ந்த தேனை
    எல்லியும் பகலு மெல்லாம்
    நினைந்தபோ தினிய வாறே. 4.39.7
    391 மண்ணுளார் விண்ணு ளாரும்
    வணங்குவார் பாவம் போக
    எண்ணிலாச் சமண ரோடே
    இசைந்தனை ஏழை நெஞ்சே
    தெண்ணிலா எறிக்குஞ் சென்னித்
    திருவையா றமர்ந்த தேனைக்
    கண்ணினாற் காணப் பெற்றுக்
    கருதிற்றே முடிந்த வாறே. 4.39.8
    392 குருந்தம தொசித்த மாலுங்
    குலமலர் மேவி னானுந்
    திருந்துநற் றிருவ டியுந்
    திருமுடி காண மாட்டார்
    அருந்தவ முனிவ ரேத்துந்
    திருவையா றமர்ந்த தேனைப்
    பொருந்திநின் றுன்னு நெஞ்சே
    பொய்வினை மாயு மன்றே. 4.39.9
    393 அறிவிலா அரக்க னோடி
    அருவரை எடுக்க லுற்று
    முறுகினான் முறுகக் கண்டு
    மூதறி வாளன் நோக்கி
    நிறுவினான் சிறுவி ரலால்
    நெரிந்துபோய் நிலத்தில் வீழ
    அறிவினால் அருள்கள் செய்தான்
    திருவையா றமர்ந்த தேனே. 4.39.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book