MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.41 திருச்சோற்றுத்துறை - திருநேரிசை
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    404 பொய்விரா மேனி தன்னைப்
    பொருளெனக் காலம் போக்கி
    மெய்விரா மனத்த னல்லேன்
    வேதியா வேத நாவா
    ஐவரால் அலைக்கப் பட்ட
    ஆக்கைகொண் டயர்த்துப் போனேன்
    செய்வரால் உகளுஞ் செம்மைத்
    திருச்சோற்றுத் துறைய னாரே. 4.41.1
    405 கட்டராய் நின்று நீங்கள்
    காலத்தைக் கழிக்க வேண்டா
    எட்டவாங் கைகள் வீசி
    எல்லிநின் றாடு வானை
    அட்டமா மலர்கள் கொண்டே
    ஆனஞ்சும் ஆட்ட ஆடிச்
    சிட்டராய் அருள்கள் செய்வார்
    திருச்சோற்றுத் துறைய னாரே. 4.41.2
    406 கல்லினாற் புரமூன் றெய்த
    கடவுளைக் காத லாலே
    எல்லியும் பகலு முள்ளே
    ஏகாந்த மாக ஏத்தும்
    பல்லில்வெண் டலைகை யேந்திப்
    பல்லிலந் திரியுஞ் செல்வர்
    சொல்லுநன் பொருளு மாவார்
    திருச்சோற்றுத் துறைய னாரே. 4.41.3
    407 கறையராய்க் கண்ட நெற்றிக்
    கண்ணராய்ப் பெண்ணோர் பாகம்
    இறையராய் இனிய ராகித்
    தனியராய்ப் பனிவெண் டிங்கட்
    பிறையராய்ச் செய்த வெல்லாம்
    பீடராய்க் கேடில் சோற்றுத்
    துறையராய்ப் புகுந்தெ னுள்ளச்
    சோர்வுகண் டருளி னாரே. 4.41.4
    408 பொந்தையைப் பொருளா வெண்ணிப்
    பொருக்கெனக் காலம் போனேன்
    எந்தையே ஏக மூர்த்தி
    யென்றுநின் றேத்த மாட்டேன்
    பந்தமாய் வீடு மாகிப்
    பரம்பர மாகி நின்று
    சிந்தையுட் டேறல் போலுந்
    திருச்சோற்றுத் துறைய னாரே. 4.41.5
    409 பேர்த்தினிப் பிறவா வண்ணம்
    பிதற்றுமின் பேதை பங்கன்
    பார்த்தனுக் கருள்கள் செய்த
    பாசுப தன்றி றமே
    ஆர்த்துவந் திழிவ தொத்த
    அலைபுனற் கங்கை யேற்றுத்
    தீர்த்தமாய்ப் போத விட்டார்
    திருச்சோற்றுத் துறைய னாரே. 4.41.6
    410 கொந்தார்பூங் குழலி னாரைக்
    கூறியே காலம் போன
    எந்தையெம் பிரானாய் நின்ற
    இறைவனை ஏத்தா தந்தோ
    முந்தரா அல்கு லாளை
    யுடன்வைத்த ஆதி மூர்த்தி
    செந்தாது புடைகள் சூழ்ந்த
    திருச்சோற்றுத் துறைய னாரே. 4.41.7
    411 அங்கதி ரோன வனை
    அண்ணலாக் கருத வேண்டா
    வெங்கதி ரோன் வழியே
    போவதற் கமைந்து கொண்மின்
    அங்கதி ரோன வனை
    யுடன்வைத்த ஆதி மூர்த்தி
    செங்கதி ரோன்வ ணங்குஞ்
    திருச்சோற்றுத் துறைய னாரே. 4.41.8
    412 ஓதியே கழிக்கின் றீர்கள்
    உலகத்தீர் ஒருவன் றன்னை
    நீதியால் நினைக்க மாட்டீர்
    நின்மலன் என்று சொல்லீர்
    சாதியா நான்மு கனுஞ்
    சக்கரத் தானுங் காணாச்
    சோதியாய்ச் சுடர தானார்
    திருச்சோற்றுத் துறைய னாரே. 4.41.9
    413 மற்றுநீர் மனம்வை யாதே
    மறுமையைக் கழிக்க வேண்டிற்
    பெற்றதோர் உபாயந் தன்னாற்
    பிரானையே பிதற்று மின்கள்
    கற்றுவந் தரக்க னோடிக்
    கயிலாய மலைஎ டுக்கச்
    செற்றுகந் தருளிச் செய்தார்
    திருச்சோற்றுத் துறைய னாரே. 4.41.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - தொலையாச்செல்வர், தேவியார் - ஒப்பிலாம்பிகை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book