MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    கோவை செட்டிபாளையம்
    மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய
    திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது

    நூலின் காலம் - 18-ஆம் நூற்றாண்டு
    இரா. ந. கல்யாணசுந்தரம் ஏடு பெயர்த்து எழுதிய தேதி: 16 - ஆகஸ்டு - 1939
    வையவிரி வலையுலா வைப்பு - நா. கணேசன், ஹூஸ்டன்

    காப்பு
    பின்முடுகு வெண்பா

    வல்லோர் புகழ்பேரூர் வாழ்பட்டி நாதன்மேற்
    சொல்லுங்கண் ணாடிவிடு தூதுக்கு - வெல்லுநட
    னம்பயில உம்பர்தொழு நம்பனரு ளும்பெரிய
    கம்பகும்பத் தும்பிமுகன் காப்பு

    நூல்

    சிவபெருமான் துதி

    கார்போலும் மேனியனுங் கஞ்சமலர்ப் புங்கவனும்
    பார்கீண்டும் விண்பறந்தும் பன்னெடுநாள் - ஆர்வமுடன்

    தேடி வருந்தித் திரிந்துந் தெரியாமல்
    நீடுசுட ராவுயர நின்றருள்வோன் - பீடுடைய

    தக்கன் சிரத்தைத் தகர்த்துத் தகர்ச்சிரத்தை
    மிக்கத் திருத்தும் விறலாளன் - இக்குதனுக்

    காமாரி சூலதரன் காரிலகு கந்தரத்தன்
    தீமைப் புரத்தைச் சிரித்தெரித்த - கோமான்

    விடையன் நிருத்தமிடு மெய்யன் அலகைப்
    படையன் உமைக்குப் பதியான் - முடிவிலாச்

    சங்கரன்வெண் ணீற்றன் சதாசிவன்கங் காளனெரி
    தங்குங் கரத்தன் சபாபதியன் - கொங்கவிழும்

    கூவிளமார் கங்கைமதி கோளரவு தும்பைகொன்றைப்
    பூவறுகு சூடும் புரிசடையான் - காவியும்வெங்

    காலுஞ்செந் தாமரையும் கார்விடமுஞ் சாகரமும்
    வேலுங் கருவிளமும் மீனமும் - நீலவண்டும்

    மானுமம்பும் மாவடுவும் வாளுமொப்பற் றேயகன்று
    தானே யிரண்டுஞ் சரியாகி - வானுலகில்

    மண்ணுலகில் உற்பவித்து வாழும் உயிர்க்கெல்லாம்
    எண்ணில் அருளளித்தும் இன்புற்ற - கண்ணிணைசேர் 10

    பேதை மரகதமாம் பெண்ணைத்தன் மெய்யிலொரு
    பாதியிலே வைத்துகந்த பட்டீசன் - தீதணுகாப்

    பேரைநகர் வாழும் பெருமான்றன் மெய்யழகோர்
    காரணமாய் உன்னிடத்தே காணுதலுஞ் - சீரிலகு

    கண்ணாடியின் சிறப்பு

    சுந்தரங்கள் எல்லாம் தொகுப்பில் ஒருவடிவாய்ச்
    சுந்தரரைக் காட்டும் தொழிலாடி - அந்தரத்தில்

    அம்புவியில் உள்ளபொருள் அத்தனையு நீயாடிக்
    கம்பிதஞ்செய் வித்திடுவாய் கஞ்சனமே - கொம்பனையார்

    வித்துருமப் பொற்றரள மிக்கபணி பெற்றிடினு
    மத்தவளை யுற்றிருப்பா யத்தமே - முத்தநகை

    மானார் கபோல வளத்துவமை பார்க்கிலுனைத்
    தானே புகழுந் தருப்பணமே - மானேயார்

    நாட்டங்கம் நாற்றிசையும் நாடிலுமுன் னேயசைய
    மாட்டாமற் செய்தபடி மக்கலமே - நீட்டுபதி

    னாறுபசா ரஞ்சிவனுக்கு அன்பினொடு செய்யவதில்
    மாறிலா தேந்துமொளி வட்டமே - வீறுலகில்

    தன்னேரி லாதமன்னன் தானிருக்கும் ஆசனத்தின்
    முன்னே யிருக்கு முகுரமே - துன்னியிடும்

    பைந்தார் நகரிற் படுதிரவி யங்களினில்
    ஐந்தா மதில்முதற்கண் ணாடியே - முந்து 20

    நயமான லோகத்தில் நாடுவாய் நற்கல்
    நயமாகில் அங்கே நடிப்பாய் - இயல்பான

    அப்பு வழியே அருஞ்சரக்குக் கொண்டணைவார்
    கப்பல் நடத்தியிடு கண்மணியே - துப்புறுவார்

    ஆசையினால் வேதாந்த ஆகமநூல் பார்க்குமவர்
    நாசியிலே நின்றுணர்த்து நாயகமே - பேசரிய

    நண்ணுபொறி ஐந்தினையு நாடவறி யாதவென்றன்
    கண்ணிணைக்கும் கண்மணியாய்க் காட்டிடுவாய் - விண்ணுமண்ணும்

    எட்டுத் திசையோடு இருந்தவொரு பத்தினையும்
    கட்டுத் தவிர்த்திடுவாய் காணாதே - மட்டாரும்

    நூலணிந்த மெய்வலத்தை நொய்தினிட மாக்கியிடப்
    பாலைவலப் பாலிருத்தும் பக்குவனே - சால

    இரசமுடன் சேர்ந்திருப்ப தென்றறியார் உன்னை
    நிரசமென்று சொல்லுவது நேரோ - பரவசமாய்க்

    கண்ணாடி யுண்டதனங் கண்ணாடி நில்லாமற்
    கண்ணாடி யேன்விரும்புங் கண்ணாடி - திண்ணமதாய்

    மின்னார்க்கும் ஆடவர்க்கும் வேண்டுபொருள் வெவ்வேறே
    சொன்னாலும் உன்னையே சூழ்ந்துகொண்டு - முன்னிருத்திப்

    பம்பரத்தை வென்றதனப் பைந்தொடியா ருங்கடல்சூழ்
    அம்புவியைத் தாங்கும் அரசருமே - தம்பல்லைக் 30

    கெஞ்சிப் பணிந்திட்டுன் கீழ்ப்பட்டார் பாரிலுன்னை
    மிஞ்சினபேர் ஆருரையாய் மெல்லோனே - அஞ்சீர்

    அயனுக்கும் கண்ணாடிக்கும் சிலேடை

    நிறையுஞ் சராசரங்கள் நீடும் தராதலத்தில்
    மறைநாலு வாயான மாண்பால் - நிலையாத

    கஞ்சனம்பேர் காட்டுகையாற் காதலித்தோர்க் கானதினாற்
    பஞ்சடிசேர் மானாரைப் பண்ணுறலாற் - கஞ்சமலர்த்

    தேவனே யென்று தெரியும் பெரியோரிப்
    பூவுலகில் உன்னையே போற்றிடுவார் - மேவிவரு

    அரிக்கும் கண்ணாடிக்கும் சிலேடை

    கஞ்சனங் கம்படலாற் கட்டுண் டமைந்ததினால்
    அஞ்சொலார் தன்கைவசம் ஆனதினால் - மிஞ்ச

    ஒருவடிவாய் நின்றமையால் உள்ளே தெரிய
    உருவெடுத்துக் காட்டுகையால் ஓதும் - பெருவானும்

    மேதினியும் எல்லாந்தன் மெய்யில் அடக்குகையால்
    ஆதிநா ராயணநீ யாமெனலாம் - கோதிலார்

    அரனுக்கும் கண்ணாடிக்கும் சிலேடை

    பாகத் திருத்தலாற் பன்னீருந் தங்கினதாற்
    சோகத்தை யார்க்குந் துடைத்தலால் - மாகத்தைத்

    தந்துள்ளே காட்டுகையால் தக்கவருள் நாட்டுகையாற்
    சிந்துகே சம்முரித்துச் சேர்ந்தமையால் - முந்தவரும்

    அம்பலத்தில் ஆடியென்றும் ஆனதினால் பேரைநகர்
    நம்பனுக்கு நேரான நாயகமே - உம்பருக்கும் 40

    எட்டாமே மூவருக்கும் ஏமமாய் நின்றருளும்
    பட்டீசன் என்றுமனம் பாவிப்போன் - இட்டமுடன்

    ஆருறினுங் கைசேரு மத்தமே ரூபமதாய்ச்
    சேருவாய் கீழ்மேல் சிறப்பிலதாய்ப் - பாரிற்

    கணிகைமா தென்றுன்னைக் காணலாங் கண்ணே
    இணைபகரா வாழ்வே இனிதே - கணவருடன்

    ஊடுங் கனங்குழையார்க்கு உற்ற குணந்திருத்த
    ஆடவர்கை கூப்பி அடிபணிந்தால் - நாடாதே

    தோயார் கபோலத்தைத் தொட்டுமுத்தம் இட்டவுடன்
    வேயனைய தோளியர்கள் மேவுவது - மாயிலெல்லாம்

    ஆடியே யுன்றனெழி லாங்கபோ லங்கணினைக்
    கூடினதால் அன்றோ குணவானே - நாடியிடும்

    பெண்ணவர்கள் தங்குணமும் பெட்பும் பெருமையுநீ
    உண்ணயந்து கண்டிருப்பாய் உத்தமனே - கண்ணிணையாய்

    உன்னையே நட்புக்கு உறுதியென எண்ணியது
    முன்னமே வள்ளுவனார் மூதுரையிற் - சொன்ன

    நவிறொறு நூனயம் போலும் பயிறொறும்
    பண்புடை யாளர் தொடர்பாம் - புவியிற்

    புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதாம்
    நட்பாங் கிழமை தருமாம் - நுணுக்கமாய்ச் 50

    சொன்ன முறையின் படிநின் தொடர்புளதாற்
    பின்னை ஒருவரையும் பேசுவனோ - கன்னியர்கள்

    அந்தக் கரணம் அவருரைக்கு முன்னேநீ
    சிந்தை தனிலுணர்ந்து தேர்ந்திடுவாய் - பந்தமெலாம்

    கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்று
    மாறாநீர் வையக் கணியென்றுங் - கூறாமுன்

    ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
    தெய்வத்தோ டொப்பக் கொளலென்றும் - வையமெலாம்

    போற்றுதிரு வள்ளுவனார் பூவுலகோர்க் கேயினிதாய்ச்
    சாற்றுபொரு ளின்பயனீ தானாமே - ஏற்றரிய

    ஆடியே என்றன் அருமை நலங்களெலாங்
    கூடி யிருந்ததிந்தக் கொற்றவனே - மூடியென்னப்

    பேய்க்குரைத்தால் உண்மையினைப் பேசமனம் நாணினதால்
    தாய்க்கொழித்த சூலுமுண்டோ தாரணியில் - சேய்க்குப்

    பசிவருத்தங் கண்டிடின்நல் பாலருத்தித் தாய்தன்
    சிசுவைப் புரக்குஞ் செயல்போல் - நிசமாக

    எந்தன் கருத்தில் இருந்த படிமுடித்துத்
    தந்திடுவாய் நல்ல தருப்பணமே - அந்தரங்கம்

    பட்டீசுவரப் பெருமான் திருத்தசாங்கம்

    சொல்லக்கேள் வேத சொரூபவா னந்தனுக்கு
    வில்லுருவ மாய்வளைந்து மேவலினாற் - பொல்லா 60

    இடுக்கண் எவர்க்கும் இயற்றும் அரக்கன்
    எடுக்க இசைக்கும் இயல்பாற் - கடுத்துவரு

    மாருதத்தைப் போக்கிவிட மாட்டாமல் தன்முடியில்
    ஓர்முடியைச் சிந்தும் உரத்தினால் - வாரிதியில்

    வானவருந் தானவரும் வாசுகியி லேபிணித்துத்
    தானே கடைந்திடுமத் தானமையால் - வானளவு

    போமேரு மந்தரமும் போகுமோ ஒப்புக்கே
    ஆமோ எனவே அசைவற்றுப் - பூமியிலே

    அந்தரத்தோர் போற்ற அதிசயங்கள் சேருநிச
    மந்தரமதாம் வௌ;ளி மலையினான் - பந்தவினை

    பிந்திடவே செய்யும் பிரயாகை யாமெனவே
    வந்துலவு நற்காஞ்சி மாநதியான் - சந்ததமுந்

    தண்டரளந் தங்குமொளிர் சங்குலவுங் கந்தமலர்
    வண்டுலவும் கொங்கு வளநாடன் - அண்டர்புகழ்

    வாசவனும் நான்முகனும் மாயவனும் மாமகிமை
    பேசரிய போதிவனப் பேரூரன் - ஆசையுடன்

    துன்றவரி வண்டினங்கள் துங்கநற வுண்டுகொஞ்சு
    மன்றல்நிறை கொன்றைமலர் மாலையான் - குன்றிடாப்

    போகமுறுஞ் சுந்தரர்க்குப் போயொளிக்குஞ் சாலிவயல்
    பாகமது காட்டுமிட பப்பரியான் - மாகடத்தின் 70

    வீறுபடும் எண்டிசைசேர் வேழமிரு நான்கினையும்
    மாறுபடச் செய்யுமத வாரணத்தான் - நீறணிந்த

    அண்ணலைவந் திப்போர்க்கு அரும்பதந்தந் தோமெனவே
    விண்ணளந்து காட்டும் விடைக்கொடியான் - எண்ணரிதாய்க்

    காட்டுஞ் சராசரங்கள் காணுமிவை அத்தனையு
    மூட்டுவிப்போ மென்றறையு மும்முரசான் - காட்டிமறை

    செப்பும் இருவினையுஞ் செய்யு முறைபிறழா
    மப்பொசியு மாறாத வாணையினான் - ஒப்பிலதாம்

    பாகனைய தேமொழியம் பாமுனைகூர் வேல்விழிதன்
    பாகனெழில் பேரைவளர் பட்டீசன் - சோகமெனுங்

    கோதிலாக் காரைக்கால் அம்மை குடியிருக்கும்
    பாதனெழில் பேரைவளர் பட்டீசன் - ஓதரிய

    காலனுக்கோர் காலன் கரியினுரி போர்த்திடுகா
    பாலியெழில் பேரைவளர் பட்டீசன் - கோலமிகு

    நடராசர் பவனி

    மீனத் திரவிபுக விள்ளரிய உத்திரநாள்
    ஆன தினத்தில் அதிசயமாய் - வானுலவு

    போதிவளர் நீழல்தனில் பொன்றிகழு மன்றிலான்
    காதற் றிருநடனங் காட்டுதலுங் - கோதிலயன்

    மாலிந் திரன்கருடன் வானோருங் கின்னரரும்
    கோலமிகு கந்தருவர் கூறுதவத் - தாலுயர்ந்த 80

    நாரதனே ஆதியாம் ஞான இருடிகளும்
    சேரவர சம்பலத்தே சென்றிறைஞ்சி - ஆர்வமுடன்

    எங்கள்மனக் கண்மணியே எங்கள் தவப்பயனே
    எங்கள் பவந்தொலைக்கும் எங்கோவே - சங்கரனே

    கங்கை முடிக்கணிந்த கண்ணுதலே போற்றிநிதம்
    மங்கை பிரியாத வாமத்தாய் - திங்களோடு

    ஆற்றைச் சடைக்கணிந்த அண்ணலே போற்றிதிரு
    நீற்றை அணிந்த நிமலவெனப் - போற்றியிடப்

    பூதலத்தோர் எல்லாம் புனிதநதி தோய்ந்துதங்கள்
    நீதி கரும நியமமுற்றி - நாதனடி

    கண்டிறைஞ்சிப் போற்றிசெய்து காமியமும் ஆணவமும்
    பண்டுவரு மாயையுமுப் பற்றுவிடக் - கண்டே

    அரகர என்றேதான் அன்புடன்கை கூப்பி
    அரகர என்றேநான் அண்டி - அரகனக

    மன்றிற் றிருநடஞ்செய் மங்கைபங்க னைத்தொழுதேன்
    குன்றனைய தோள்களுநற் குண்டலமுங் - கொன்றையணி

    செக்கர்ச் சடையுந் திருநுதலுஞ் செங்கரமும்
    மிக்கபணி பூண்டிருந்த மெய்யழகும் - ஒக்கவே

    கண்டுமனங் காதலித்துக் கண்குளிரச் சேவித்துக்
    கொண்டுநின்றேன் அப்பொழுது கூத்தாடும் - புண்டரிகப் 90

    பாதத்திற் பூமாரி பத்தரருச் சித்திடவே
    வேதவொலி எங்கும் மிகவொலிப்ப - வீதியெலாந்

    துந்துபிக ளேமுழங்கச் சொல்லரிய பல்லியங்கள்
    இந்தநிலம் எல்லாம் இசைந்தார்ப்பப் - பைந்தொடிமின்

    பச்சைப்பெண் பாகன் பவனிவந்தான் பின்தொடர்ந்து
    நச்சுவிழி யாருடனே நான்போந்தேன் - பச்சிமத்து

    வீதியிலோர் பாதியிலே மேவுதலும் பச்சையுமை
    காதலினால் அங்கோர் கலகமிட்டு - நாதனுடன்

    ஊடித் திருக்கோயி லுட்புகுந்தாள் சூலதரன்
    ஓடித் திருப்ப உபாயமின்றி - வாடிமனங்

    கன்றினதைக் கண்டிருந்த காமன் சரந்தொடுத்தே
    இன்றுபழி தீர்ப்பன் எனவிசைந்தான் - குன்றவில்லி

    பாகம் பிரியாத பச்சைமயி லைப்பிரிந்த
    மோகக் கனல்குழித்து முன்போந்தான் - சோகமுறல்

    கண்டென்னைக் கண்டானே கையசைத்தான் புன்முறுவல்
    கொண்டான் புருவநெற்றி கோட்டினான் - வண்டுலவுங்

    கொன்றைமலர் மாலையிற்கை கொண்டெடுத்துக் காட்டினான்
    குன்றனைய தோளிற்கை கொண்டணைத்தான் - நின்றவெனைப்

    பாதாதி கேசமுதற் பார்த்தான் புறம்போந்தான்
    நீதான் எனது நிலைகுறித்தே - ஓதரிய 100

    நாண மடமச்சம் நற்பயிர்ப்பு நான்கினையும்
    வீணிலே சூறைகொண்டு மேவிடுதல் - நீணிலத்தில்

    உன்னைப்போல் வாருளரோ ஒண்டொடியார் தங்கள்முன்
    என்னைமயல் செய்வதுனக்கு ஏற்குமோ - உன்னரிய

    அம்பலவா மாரனர சம்பலவா எந்தனுடல்
    அம்பளவா கத்தோணும் ஆசையினால் - நம்பும்

    உடையும் வளையும் உனக்கீந்தேன் உள்ள
    முடையும் வளையு முரித்தானே - அடியாள்

    அறைவதெலாங் கேட்டுங்கே ளாதவன்போற் போதல்
    முறைதானோ சொல்லாய் முதல்வா - சிறிதுநாள்

    உண்ணச்சோ றின்றி உடுக்கப் புடவையின்றி
    எண்ணிலகந் தோறும் இரக்குநாள் - நுண்ணிடையார்

    பிச்சையிட வந்தவர்க்கும் பேசரிய மாலுதவ
    நிச்சயமாய் கையறிவாய் நின்றனக்கு - உச்சவநா

    ளாகியொரு பெண்ணைவரும் அங்கசனம் புக்கிறை
    யாகக் கொடுத்தல் அறமாமோ - ஆகமதிற்

    பிச்சையிட வந்ததனப் பேதையர்க்கும் பேறுதரும்
    உச்சவத்தில் வந்துதொழும் ஒண்டொடிக்கும் - நிச்சயமா

    ஆசை கொடுக்கவென்றே ஆய்ந்தறிந்தா யாமென்றே
    ஏசிவிட்டேன் காதினிற்கொண்டு ஏகுதலும் - பாசவினை 110

    நீக்கி அருள்தந்து நிட்டையினால் முன்சென்மப்
    பாக்கியத்தைத் தேர்ந்தறியப் பண்ணுவித்துத் - தாக்குபவ

    மாற்றுந் திருவா வடுதுறைநற் றேசிகன்றாள்
    போற்று முனிக்குழுவும் பூதலத்தே - தோற்றுந்

    தரும புரக்குருவின் தாள்பரவி நெஞ்சில்
    ஒருமைபெற நிற்பாரும் ஓங்கி - அருமையுறு

    சாந்தலிங்க மூர்த்தி சரணமலர் தான்துதித்துப்
    போந்த அடியார்கள் போற்றிசைத்துத் - தீந்தமிழில்

    மூவர் தமிழும் முதிர்ந்த பெருந்துறையார்
    தூவு தமிழுந் தொலையாத - ஆவலுடன்

    பண்ணோ டிசைத்திடலும் பாரிலெவ ரும்போற்றுந்
    தண்ணார்சொல் ஞானசிவாச் சாரியர்தான் - எண்ணரிய

    வேதம் உரைத்திடவும் மேலோன் அதுவுமொரு
    காதிலே கேட்டகன்றான் காசினியில் - தீதகலும்

    கோயில்முன் னேநின்றான் கொம்பனைக்குத் தூதுவிட்டான்
    ஆயிழையும் ஊடல்தவிர்ந் தங்குவந்து - தூயவனைப்

    பாதம் பணிந்தாள் பதியும் எடுத்தணைத்துக்
    காதலுடன் போந்து கனகசபை - ஓதரிய

    ஆசனத்தில் வீற்றிருந்தான் நான்சென் றடிபணிந்துன்
    ஆசைவலைக் கென்னை அகப்படுத்திப் - பாசமிகு 120

    மாலையிட்டாய் கொன்றைமலர் மாலையிட வேநினைந்து
    மாலைதனில் என்மனைக்கு வாவென்று - சாலவே

    கண்ணாரக் கையாலே காட்டினேன் சாடையெலாங்
    கண்ணாலே கண்டான் கழல்பணிந்தேன் - பண்ணார்சொல்

    மாதருடன் கோபுரத்து வாயிலின்முன் வந்திறைஞ்சிப்
    போதுமென என்மனைக்குப் போதலுமே - தேடியப்போ

    தாய் செய்கை

    வந்தனையே காணமிகு வந்தனையே செய்துவந்தேன்
    வந்தனையே என்று மடியிருத்திச் - சுந்தரஞ்சேர்

    செங்கரங்கள் தங்குவளை சிந்தினமெய் துன்றுகலை
    பங்கமுறு கின்றவென்றன் பைந்தொடிக்கு - யங்க

    மிகுந்து கனன்று வெதும்பு தனங்கள்
    சுகந்தம் உலர்ந்து துலங்கச் - சகந்தனிலே

    பெண்களிலை யோவென்றன் பெண்ணையார் பார்த்தனரோ
    கண்பட்ட தென்றுநுதற் காப்பிட்டாள் - தண்மலர்ப்பூஞ்

    சேக்கைத் துகள்போக்கிச் சேர்க்கவுடல் வேர்க்குமனல்
    தீய்க்கவென் தாய்க்குமனந் தேக்கிடவே - நோய்க்குப்பனி

    நீரிறைத்து வீசியுமின் னேரிழைக்குக் கண்ணூறு
    தீரிதெனக் காணிக்கை செப்பனிட்டாள் - சூரியன்தேர்

    மேலைப் புணரிதனில் மேவுதலுங் கீழ்த்திசைசேர்
    வேலைதனில் வட்டமதி மேற்றோன்ற - மாலையிலே 130

    வந்தெனது மையல்தனை மாற்றிடவே வாரனென்றே
    அந்தரங்கஞ் சொல்லிவந்தார் ஆதலினால் - தந்தியுரி

    போர்த்துச் சபாபதியார் புன்முறுவல் கொண்டணையிற்
    சேர்த்த வருவான் திரமென்றே - பார்த்திருந்தேன்

    மன்மதன் முதலியோர்

    அப்போது மாரன் அளிநாண் கருப்புவில்முல்
    லைப்போது கொண்டுவந்தே ஆர்ப்பரித்தான் - எப்போதும்

    ஆண்மைசெய் பேதையர்பால் அல்லால்மற் றோரிடத்தில்
    தாண்மை வருமென்றே தலைப்பட்ட - கீண்மையனே

    உன்னையன்று கொன்றவன்பால் உன்வலிமை காட்டாதே
    என்னையின்று வென்றதனால் என்னபயன் - முன்னவன்றாள்

    காமாரி என்றொருபேர் காட்டுபட்டி நாதனைப்போய்ப்
    பூமாரி செய்திடுதல் பொற்பாமே - மாமதனாம்

    உன்றனுக்கும் ஆண்மை உளதாகு முன்னாலே
    என்றனுக்கு மெத்த இனிதாமே - என்று

    பிரித்துரைக்கக் கேட்டுப் பிரதிசொல்லா தென்னை
    வருத்தக் கரும்பை வளைத்துத் - திரித்தளிநாண்

    பூட்டிமலர் வாளியெலாம் பொற்குடத்தை வென்றுகரிக்
    கோட்டினையுங் காட்டிலே கூட்டிவிடப் - போட்டிசெயும்

    பந்துத் தனங்களிற்புண் பட்டிடவே எய்துவிட்டான்
    இந்துவுமப் புண்ணில் எரியைவிட்டான் - சந்தங் 140

    கலந்துவரு தென்றலதற் காற்றாதே உள்ளங்
    குலைந்து மிகவருத்தங் கொண்டேன் - மெலிந்ததுடல்

    மெத்தப் பரவசமாய் வெய்துயிர்த்தேன் கண்ணிணைக்கு
    நித்திரையும் அற்றேன் நினைவற்றேன் - புத்தியெலாம்

    போதிமன்றி லேநடஞ்செய் புண்ணியன்பா லன்றியுறுந்
    தாதைதாய் சுற்றத்தார் தான்வேண்டேன் - மேதினியில்

    தூது

    உன்னைப்போல் தூதாங்கு உரைப்பாரோ உற்றுரைத்து
    நன்னயங்கள் காட்டி நவிலுதற்குக் - கன்னியரே

    தங்கள் வருத்தம் தவிர்ப்பாரல் லாலெனது
    கொங்கை வருத்தங் குறிப்பாரோ - பைங்கிளியும்

    அன்னமும்வண் டுங்குயிலும் அன்றிலுந்தா ராவுமயில்
    இன்ன பிறவும் எதிர்நின்று - சொன்னதையே

    சொல்லும் பிரிதுரைத்துச் சொல்லும் வகையுணர்ந்தது
    இல்லையலாது அங்கிரைகண்டு ஏகுமே - வல்லை

    தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
    நன்றி பயப்பதாந் தூதாய் - சகத்தினிலே

    கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
    தக்கது அறிவதாந் தூதென்று - மிக்க

    கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
    எண்ணி உரைப்பான் தலையே - படிமீதில் 150

    வள்ளுவனார் சொன்னமொழி வாய்மையெல்லாம் நின்றனக்கே
    உள்ளதுதான் வேறார் உணர்ந்தவர்காண் - ஔ;ளியநாள்

    உத்திரத்தின் பின்வந் துறுநாள் உனதுபெயர்
    எத்திசையும் போற்ற இசைக்குமே - உத்திரமும்

    சித்திரையுங் கன்னியிடஞ் செம்பாதி நட்பிசையும்
    நித்தியமா இந்நாள் நிறைந்திருக்கும் - தத்தையெனும்

    பச்சையுமை யாள்மெய்யிற் பட்டீசன் சேர்ந்ததுவும்
    நிச்சையமாய் அத்தமன்றோ நீதியாய் - உச்சிதமாய்

    பட்சமுறும் உன்றனுக்கும் பட்டீச னார்தனக்கும்
    நட்புச் சரிதானே நன்றிசெயும் - மத்திமத்திற்

    சென்றுரைக்கில் அத்தனுக்குச் சித்தமதில் அத்தமுறும்
    நன்றென்றே நாடி நலனுரைப்பார் - இன்றேதான்

    சுத்த தருப்பணமே தூயவொளி வட்டமே
    அத்தமே கஞ்சனமே ஆடியே - எத்துபடி

    மக்கலமே பார்கை வழுத்து முகுரமே
    மிக்க வருத்தமெலாம் விள்ளுதற்குத் - தக்கவனே

    நீயன்றி வேறுலகில் நேயத்தார் இல்லையெங்கள்
    நாயகன்முன் நீசென்று நண்ணுவையேல் - ஆயிழையாள்

    பாலையரன் பால்காட்டிப் பானுவளித் தன்னைமதி
    போலவே காட்டியதார் போதியில்வாழ் - மேலவன்றான் 160

    அன்றுசெயுஞ் சித்துவிளை யாடலைப்போ லேநீயும்
    இன்றுசெய்தாய் என்றுமிக இன்புறுவேன் - சென்றதனால்

    வெல்வாய் மருமாலை மேலவன்றான் தந்திடவே
    சொல்வாய்கண் ணாடியே தூது. 162

    கண்ணாடி விடுதூது முற்றிற்று
    சுபம்

    Goto Main book