MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.57. திருஆவடுதுறை - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    548 மஞ்சனே மணியு மானாய்
    மரகதத் திரளு மானாய்
    நெஞ்சுளே புகுந்து நின்று
    நினைதரு நிகழ்வி னானே
    துஞ்சும்போ தாக வந்து
    துணையெனக் காகி நின்று
    அஞ்சலென் றருள வேண்டும்
    ஆவடு துறையு ளானே. 4.57.1
    549 நானுகந் துன்னை நாளும்
    நணுகுமா கருதி யேயும்
    ஊனுகந் தோம்பும் நாயேன்
    உள்ளுற ஐவர் நின்றார்
    தானுகந் தேயு கந்த
    தகவிலாத் தொண்ட னேன்நான்
    ஆனுகந் தேறு வானே
    ஆவடு துறையு ளானே. 4.57.2
    550 கட்டமே வினைக ளான
    காத்திவை நோக்கி ஆளாய்
    ஒட்டவே ஒட்டி நாளும்
    உன்னையுள் வைக்க மாட்டேன்
    பட்டவான் தலைகை யேந்திப்
    பலிதிரிந் தூர்கள் தோறும்
    அட்டமா வுருவி னானே
    ஆவடு துறையு ளானே. 4.57.3
    551 பெருமைநன் றுடைய தில்லை
    யென்றுநான் பேச மாட்டேன்
    ஒருமையால் உன்னை உள்கி
    உகந்துவா னேற மாட்டேன்
    கருமையிட் டாய வூனைக்
    கட்டமே கழிக்கின் றேன்நான்
    அருமையா நஞ்ச முண்ட
    ஆவடு துறையு ளானே. 4.57.4
    552 துட்டனாய் வினைய தென்னுஞ்
    சுழித்தலை அகப்பட் டேனைக்
    கட்டனாய் ஐவர் வந்து
    கலக்காமைக் காத்துக் கொள்வாய்
    மட்டவிழ் கோதை தன்னை
    மகிழ்ந்தொரு பாகம் வைத்து
    அட்டமா நாக மாட்டும்
    ஆவடு துறையு ளானே. 4.57.5
    553 காரழற் கண்ட மேயாய்
    கடிமதிற் புரங்கள் மூன்றும்
    ஓரழல் அம்பி னாலே
    யுகைத்துத்தீ எரிய மூட்டி
    நீரழற் சடையு ளானே
    நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
    ஆரழல் ஏந்தி யாடும்
    ஆவடு துறையு ளானே. 4.57.6
    554 செறிவிலேன் சிந்தை யுள்ளே
    சிவனடி தெரிய மாட்டேன்
    குறியிலேன் குணமொன் றில்லேன்
    கூறுமா கூற மாட்டேன்
    நெறிபடு மதியொன் றில்லேன்
    நினையுமா நினைய மாட்டேன்
    அறிவிலேன் அயர்த்துப் போனேன்
    ஆவடு துறையு ளானே. 4.57.7
    555 கோலமா மங்கை தன்னைக்
    கொண்டொரு கோல மாய
    சீலமே அறிய மாட்டேன்
    செய்வினை மூடி நின்று
    ஞாலமாம் இதனுள் என்னை
    நைவியா வண்ணம் நல்காய்
    ஆலமா நஞ்ச முண்ட
    ஆவடு துறையு ளானே. 4.57.8
    556 நெடியவன் மலரி னானும்
    நேர்ந்திரு பாலும் நேடக்
    கடியதோர் உருவ மாகிக்
    கனலெரி யாகி நின்ற
    வடிவின வண்ண மென்றே
    என்றுதாம் பேச லாகார்
    அடியனேன் நெஞ்சி னுள்ளார்
    ஆவடு துறையு ளானே. 4.57.9
    557 மலைக்குநே ராய ரக்கன்
    சென்றுற மங்கை அஞ்சத்
    தலைக்குமேற் கைக ளாலே
    தாங்கினான் வலியை மாள
    உலப்பிலா விரலால் ஊன்றி
    ஒறுத்தவற் கருள்கள் செய்து
    அலைத்தவான் கங்கை சூடும்
    ஆவடு துறையு ளானே. 4.57.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book