MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.64 திருவீழிமிழலை - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    619 பூதத்தின் படையர் பாம்பின்
    பூணினர் பூண நூலர்
    சீதத்திற் பொலிந்த திங்கட்
    கொழுந்தர்நஞ் சழுந்து கண்டர்
    கீதத்திற் பொலிந்த ஓசைக்
    கேள்வியர் வேள்வி யாளர்
    வேதத்தின் பொருளர் வீழி
    மிழலையுள் விகிர்த னாரே. 4.64.1
    620 காலையிற் கதிர்செய் மேனி
    கங்குலிற் கறுத்த கண்டர்
    மாலையின் மதியஞ் சேர்ந்த
    மகுடத்தர் மதுவும் பாலும்
    ஆலையிற் பாகும் போல
    அண்ணித்திட் டடியார்க் கென்றும்
    வேலையின் அமுதர் வீழி
    மிழலையுள் விகிர்த னாரே. 4.64.2
    621 வருந்தின நெருநல் இன்றாய்
    வழங்கின நாளர் ஆற்கீழ்
    இருந்துநன் பொருள்கள் நால்வர்க்
    கியம்பினர் இருவ ரோடும்
    பொருந்தினர் பிரிந்து தம்பால்
    பொய்யரா மவர்கட் கென்றும்
    விருந்தினர் திருந்து வீழி
    மிழலையுள் விகிர்த னாரே. 4.64.3
    622 நிலையிலா வூர்மூன் றொன்ற
    நெருப்பரி காற்றம் பாகச்
    சிலையுநா ணதுவு நாகங்
    கொண்டவர் தேவர் தங்கள்
    தலையினாற் றரித்த என்பும்
    தலைமயிர் வடமும் பூண்ட
    விலையிலா வேடர் வீழி
    மிழலையுள் விகிர்த னாரே. 4.64.4
    623 மறையிடைப் பொருளர் மொட்டின்
    மலர்வழி வாசத் தேனர்
    கறவிடைப் பாலின் நெய்யர்
    கரும்பினிற் கட்டி யாளர்
    பிறையிடைப் பாம்பு கொன்றைப்
    பிணையல்சேர் சடையுள் நீரர்
    விறகிடைத் தீயர் வீழி
    மிழலையுள் விகிர்த னாரே. 4.64.5
    624 எண்ணகத் தில்லை அல்லர்
    உளரல்லர் இமவான் பெற்ற
    பெண்ணகத் தரையர் காற்றிற்
    பெருவலி யிருவ ராகி
    மண்ணகத் தைவர் நீரில்
    நால்வர்தீ யதனில் மூவர்
    விண்ணகத் தொருவர் வீழி
    மிழலையுள் விகிர்த னாரே. 4.64.6
    625 சந்தணி கொங்கை யாளோர்
    பங்கினர் சாம வேதர்
    எந்தையும் எந்தை தந்தை
    தந்தையு மாய ஈசர்
    அந்தியோ டுதயம் அந்த
    ணாளர்ஆன் நெய்யால் வேட்கும்
    வெந்தழ லுருவர் வீழி
    மிழலையுள் விகிர்த னாரே. 4.64.7
    626 நீற்றினை நிறையப் பூசி
    நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு
    ஏற்றுழி ஒருநா ளொன்று
    குறையக்கண் நிறைய விட்ட
    ஆற்றலுக் காழி நல்கி
    யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
    வீற்றிருந் தளிப்பர் வீழி
    மிழலையுள் விகிர்த னாரே. 4.64.8
    627 சித்திசெய் பவர்கட் கெல்லாஞ்
    சேர்விடஞ் சென்று கூடப்
    பத்திசெய் பவர்கள் பாவம்
    பறைப்பவர் இறப்பி லாளர்
    முத்திசை பவள மேனி
    முதிரொளி நீல கண்டர்
    வித்தினில் முளையர் வீழி
    மிழலையுள் விகிர்த னாரே. 4.64.9
    628 தருக்கின அரக்கன் தேரூர்
    சாரதி தடைநி லாது
    பொருப்பினை யெடுத்த தோளும்
    பொன்முடி பத்தும் புண்ணாய்
    நெரிப்புண்டங் கலறி மீண்டு
    நினைந்தடி பரவத் தம்வாள்
    விருப்பொடுங் கொடுப்பர் வீழி
    மிழலையுள் விகிர்த னாரே. 4.64.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வீழியழகீசுவரர், தேவியார் - சுந்தராம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book