MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.71 திருநாகைக்காரோணம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    688 மனைவிதாய் தந்தை மக்கள்
    மற்றுள சுற்ற மென்னும்
    வினையுளே விழுந்த ழுந்தி
    வேதனைக் கிடமா காதே
    கனையுமா கடல்சூழ் நாகை
    மன்னுகா ரோணத் தானை
    நினையுமா வல்லீ ராகில்
    உய்யலாம் நெஞ்சி னீரே. 4.71.1
    689 வையனை வைய முண்ட
    மாலங்கந் தோண்மேற் கொண்ட
    செய்யனைச் செய்ய போதிற்
    திசைமுகன் சிரமொன் றேந்துங்
    கையனைக் கடல்சூழ் நாகைக்
    காரோணங் கோயில் கொண்ட
    ஐயனை நினைந்த நெஞ்சே
    அம்மநாம் உய்ந்த வாறே. 4.71.2
    690 நிருத்தனை நிமலன் றன்னை
    நீணிலம் விண்ணின் மிக்க
    விருத்தனை வேத வித்தை
    விளைபொருள் மூல மான
    கருத்தனைக் கடல்சூழ் நாகைக்
    காரோணங் கோயில் கொண்ட
    ஒருத்தனை உணர்த லால்நாம்
    உய்ந்தவா நெஞ்சி னீரே. 4.71.3
    691 மண்டனை இரந்து கொண்ட
    மாயனோ டசுரர் வானோர்
    தெண்டிரை கடைய வந்த
    தீவிடந் தன்னை யுண்ட
    கண்டனைக் கடல்சூழ் நாகைக்
    காரோணங் கோயில் கொண்ட
    அண்டனை நினைந்த நெஞ்சே
    அம்மநாம் உய்ந்த வாறே. 4.71.4
    692 நிறைபுனல் அணிந்த சென்னி
    நீணிலா அரவஞ் சூடி
    மறையொலி பாடி யாடல்
    மயானத்து மகிழ்ந்த மைந்தன்
    கறைமலி கடல்சூழ் நாகைக்
    காரோணங் கோயில் கொண்ட
    இறைவனை நாளு மேத்த
    இடும்பைபோய் இன்ப மாமே. 4.71.5
    693 வெம்பனைக் கருங்கை யானை
    வெருவவன் றுரிவை போர்த்த
    கம்பனைக் காலற் காய்ந்த
    காலனை ஞால மேத்தும்
    உம்பனை உம்பர் கோனை
    நாகைக்கா ரோண மேய
    செம்பொனை நினைந்த நெஞ்சே
    திண்ணம்நாம் உய்ந்த வாறே. 4.71.6
    694 வெங்கடுங் கானத் தேழை
    தன்னொடும் வேட னாய்ச்சென்
    றங்கமர் மலைந்து பார்த்தற்
    கடுசரம் அருளி னானை
    மங்கைமார் ஆட லோவா
    மன்னுகா ரோணத் தானைக்
    கங்குலும் பகலுங் காணப்
    பெற்றுநாங் களித்த வாறே. 4.71.7
    695 தெற்றினர் புரங்கள் மூன்றுந்
    தீயினில் விழவோ ரம்பால்
    செற்றவெஞ் சிலையர் வஞ்சர்
    சிந்தையுட் சேர்வி லாதார்
    கற்றவர் பயிலும் நாகைக்
    காரோணங் கருதி யேத்தப்
    பெற்றவர் பிறந்தார் மற்றுப்
    பிறந்தவர் பிறந்தி லாரே. 4.71.8
    இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 4.71.9
    696 கருமலி கடல்சூழ் நாகைக்
    காரோணர் கமல பாதத்
    தொருவிரல் நுதிக்கு நில்லா
    தொண்டிறல் அரக்க னுக்கான்
    இருதிற மங்கை மாரோ
    டெம்பிரான் செம்பொ னாகந்
    திருவடி தரித்து நிற்கத்
    திண்ணம்நாம் உய்ந்த வாறே. 4.71.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர்,
    தேவியார் - நீலாயதாட்சியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book