MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    3. பதஞ்சலிச்சருக்கம் (59-157 )

    இந்தவகைவளர்புலிக்காலெழின்முனிவன்றெளிந்தெந்தை
    யந்தமிலாவாநந்த நிருத்தமளித்தருளென்று
    பந்தமறப்பணிந்திருப்பப் பரவுபதஞ்சலியவன்பால்
    வந்தபடியிருந்தபடிபோனபடி வகுத்துரைப்பாம்.

    இ-ள். ஞானஞேயங்களுக்குப் பிறிவில்லாமையால் ஞானந்தானே ஞேயத்தைத் தரிசிப்பிக்குமென்
    றறிந்த வகையினாலே பெரிய தேசையுடைய வியாக்கிரபாத முனி சித்தந் தெளிந்து சுவாமியே
    முடிவில்லா வாநந்த நிருத்த முந்தரிசிப்பித் தருளுவாயாக வென்றுஅதுக்குவிலக் காயிருக்கும்
    பந்தபாச நீங்கச் சிவார்ச்சனை பண்ணியிருப்ப யாவரும் பரவும் பதஞ்சலிபோபலத்தினாலே
    வியாக்கிர பாதரருகேவந்தபடி நெடுநாள் தவசு பண்ணி யிருந்தபடி எமக்குத் தெரிந்த மரியாதைகூறு
    படுத்திச் சொல்லுவாம் - எ-று. (3-1)

    பரந்தபெரும்பாற்கடலிற் பள்ளிகொள்வானொழிந்தொருநா
    ளருந்தவமாரனந்தன்மிசை யரியசங்கரவென்று
    கரங்கள்சிரமிசைமுகிழ்ப்பக் கணணருவிசொரியநிமிர்ந்
    திருந்தனன்முன்சலியாத வெழுதுமணிவிளக்கென்ன.

    இ-ள். அகன்று விசாலமாகிய பெரிய திருப்பாற்கடலிற் பெருந்தவமிக்க நாக சயனத்திற்
    பள்ளிகொள்ளுஞ் செய்கையை யொழிந்தொரு நாள் மகா விஷ்ணுவானவர் அரகர
    சங்கரவென் றுச்சரித்துக் கைகளானவை தலைமேலே யேறிக்குவியா நிற்பக் கண்களருவிபாய
    வாயுமுன் சலியாத சித்திர தீபம்போலப் பத்மாசனம் விளங்க இருந்தார்--- எ-று. (3-2)

    திருமகளுமணுகாது திகைத்தயரத்திரந்துபணி
    பரிசனமுமிகநடுங்கப் பராநந்தபராயணனாய்ப்
    பொருவிலனுபவநீங்கிப் புவிமிடைந்ததிருளெனவந்
    திருபரிதியெழுகிரிபோ லிருகண்மலர்தரவிருந்தான்.

    இ-ள். இப்பரிசுகண்ட மகாலட்சுமியும் அணுகப் பயப்பட்டுத் திகைத்து நிற்பக் குற்றந் தீர்ந்த
    அடிமையானசேடனும் மற்றப் பரிசனங்களும் நம்பால் அபராத முண்டோவென்று மிகவும்
    நடுங்கப் பரமானந்தத்திலே பரவசராய் ஒப்பில்லாத சிவானுபவ நீங்கிப் பூமியில் அந்தகார
    மேலிட்டதென்ன இரண்டாதித்தர் கூடிவந்து திக்கும் உதய பருப்பதம்போல விழி
    மலர்ந்திருந்தார். எ-று. (3.3)

    புண்டரிகவிழிமலர்ந்து புணரமளிகழிந்துபுனல்
    கொண்டுநியதிகண்முடித்துக் குலவியமண்டபமேறித்
    தண்டரளமணிப்பந்தர்த் தமனியப்பூந்தவிசின்மிசை
    யண்டர்தொழவந்திருந்தா னாநந்தவனந்தலுடன்.

    இ-ள்: செந்தாமரைக் கண்விழித்து நித்திரை பொருந்தின நாக சயன நீங்கி சுத்தசலங்
    கொண்டனுட்டானம் பண்ணி முடித்து நவரத்தினப் பிரகாசம் பரந்த மண்டபத்திலேறிக்
    குளிர்ந்த முத்தின்பந்தற்கீழிட்ட பொலிவினையுடைய பொற்சிங்காசனத்தின் மேலே
    பிரமாதி தேவர்கள்வந்து நமஸ்கரிக்கச் சுக நித்திரையுடனே சாக்கிரங் கலந்திருந்தார் - எ-று ( 3-4)

    தாழ்ந்தமடையுடைபுனல்போற் றம்பிரானடங்கருதி
    யாழ்ந்தவினைவழிமாற்றி யாநந்தபரவசனாய்
    வாழ்ந்தளவில்பேரின்ப வாரிவழியேயொழுகி
    வீழ்ந்தகருத்தினைமீட்டு மேட்டுமடைப்புலமேற்றான்.

    இ-ள்: பள்ளமடையை யெடுத்தோடுஞ்சலம்போல் பரமசிவம் தாருகா வனத்தில் நடித்தருளிய
    நிருத்த நந்தத்தில் கருத்தைச் செலுத்தித்தாம் முன்பழுந்துந் துன்பக்குழியை மாற்றி ஒழியாத
    சுகபரவசராய் வாழ்ந்து அளவில்லாத ஞானங்களிலே கருத்தேறினார். - எ-று. (3-5)

    தெள்ளுமனந்தெளிபொழுதிற் திருந்தநந்தனடிவணங்கி
    வள்ளலேயடியேனா மலரமளிமிசைமுன்போற்
    பள்ளிகொள்ளாதுணராதிப் பரிசிருந்தபடியடியேற்
    கிள்ளபடியருள்செய்ய வேண்டுமெனவுரைசெய்தான்,.

    இ-ள்: கலங்கின மனந்தெளிந்து வடய ஞானத்திலே யுறைந்தனவில் கிரகிரத்தியனாயிருக்கிற
    சேடனமஸ்கரித்து அபீஷடவரதனே அடியேனாகிய விரிந்தவமளிதனில் முன்புபோலப் பள்ளி
    கொள்ளாமலும் உணராமலும் இப்படி யொரு பிரகாரத்திலே யெழுந்தருளியிருந்தபடி
    அடியேனுக்குச் சத்தியமாக அருளிச் செய்ய வேண்டுமென்று விண்ணப்பஞ் செய்தான்.-எ- று. (3.6)

    ஆங்கவனுநகைத்தருள்கூர்ந் தநந்தனிருவலர்கமலப்
    பூங்குழலுமிருவென்று புகன்றெனையாளுடைப்புனிதன்
    றாங்கரியபெருங்கருணைத் தன்மையினாலெனக்களித்த
    வோங்குதிருவருள்கேட்கி லுலவாதென்றுரைசெய்தான்.

    இ-ள் அவ்விடத்து மகாவிட்டுணு நகைத்தருளி அதிக பிரியத்துடனே சேடனையும் பெரிய
    தாமரையிலிருக்குந் திருமகளையும் நோக்கியிருங்களென் றருளிச்செய்து என்னையாண்டுகொண்ட
    இயற்கையான சுத்தன் என்னாற் பெறுதற்கரிதாகிய பெரிய காருண்யத்தினியற்கையாலே
    எனக்குப் பிரசாதித்த மேலான அனுக்கிரகத்தை உள்ளபடி நீங்கள் கேட்கவென்னில்
    ஒருகாலத்திலு முடியாதென்றார்.- எ-று. (3-7)

    மன்னுமொளிவளர்பொருவில் வடகயிலைமலைமருந்தைச்
    சென்னியுறத்தொழநென்னற் றிருந்துதிருமுகமதனா
    லென்னைவரவழைத்தருளி நகைத்தருள்கூர்ந்தென்கைமிசைத்
    தன்னிகரில்கரமூன்றி யெழுந்திருந்தான்றனித்துணைவன்

    இ-ள் வைகுந்தத்துக்கும் மநோவதிக்கும் நடுவாய் நிலைபெற்ற சோதிரூபமாயுயர்ந்த
    ஒப்பில்லாத உத்தர கயிலாசமலையில் சூக்மாவேஷ்டையான மருந்தை நேற்றியான்சென்று
    சிரசார வணங்கின மாத்திரத்திலே உயிர்களுக்குத் தோன்றாத்துணையாகிய அந்தப்பரமேசுவரர்
    பிரசன்னம் பொருந்தின திருமுகத்தினாலே என்னைத் தம்மருகே வரவழைத்தருளநகைத்து
    அருள் கூர்ந்து பவிஷயக்கிருத்தியத்தை நினைந்து அபயாஸ்தங்கொடுத்து என்கையின்மேலே
    தம்மொப்பில்லாத ஸ்ரீயத்தத்தையூன்றி யெழுந்தருளினார்-எ-று (3-8)

    எழுந்தபொழுதொளிர்சங்கமெம்மருங்குமிகமுழங்கத்
    தழங்குமருமறைபரவத்தாவில்கணம்புடைசூழச்
    செழுந்தவர்கண்மிடைந்தேத்தத்தேவரணிதொழத்திங்கட்
    கொழுந்தணியும்பெருமான்ககுலகிரியினடியணைந்தான்.

    இ-ள் வீரசிங்காதனத்தில் நின்றும் இழிந்தெழுந்தருளினபொழுது பானுகம்பனால் ஊதப்படாநின்ற
    பிரகாசம் பொருந்திய சங்குகள் எத்திக்குஞ் செவிடுபட முழங்கவும் ஒலிக்கா நின்ற வேதங்கள்
    பரவுதல் செய்யவும் குற்றமிலாத கணநாதர்கள் சூழ்ந்து சேவிக்கவும் வளவிய நித்தியவனுட்டான
    தருப்பணரான தபோதனர் நெருங்கித் துதிக்கவும் தேவர்கள் கூட்டந்தொழவும் அர்த்தசந்திர
    சடாதரனாகிய எம்பெருமான் அந்தக்கயிலாயத்தின் அடிவாரத்தை யணைந்தார்- எ-று. (3-9)

    மேயதொருமண்டபத்துவிரைந்தணைந்துதாருவனத்
    தூயவருமுனிவருளஞ்சோதிப்போநமக்கிசைய
    நீயரிவையுருவாகிநிலவுகெனவருள்செய்து
    நாயகனுந்திருமேனிநயங்கிளரவலங்கரித்தான்.

    இ-ள் அவ்விடத்துத் திருவுள்ளத்துக்குப் பொருந்தின தோரேகாந்த மண்டபத்தில் துரிதத்திலெழுந்தருளி
    தேவதாருவனத்திற் பரிசுத்தராயிருக்கிற நாற்பத்தெண்ணாயிரம் ருஷிகளான பெரியோருடைய
    சித்தபாகம் பரீட்சிப்போம் நாம் கொண்ட வேடத்துக்குப் பொருந்த நீயும் ஸ்திரீ ரூபத்தைக்கொண்டு
    நம்முடனே கூட வருவாயாக வென்றெனக்கருளிச்செய்து ஆத்தும நாயகனுந் தம்முடையதிருமேனி
    யழகுவிளங்க அலங்கரித்துக்கொண்டார்- அஃதெங்ஙனமென்னில்.(3-10)

    திருவடியின்மிதியடியுந்திகழுடைவெண்கோவணமேன்
    மருவரையும்புரிநூலும்வலஞ்சுழியுந்தியுமார்பு
    மொருவரையுமிருவரையும்புரையாதவுயர்தோளும்
    பரவருநற்பொக்கணமுந்தமருகமும்பலிக்கலனும்

    இ-ள் ஸ்ரீபாதத்திலேமிதித் தருளின மிதியடியும் விளங்கப்பட்ட திருவுடையாடையும் உட்சாத்தும்
    இதுகள் பொருந்திய திருவரையும் முப்புரியான திருஎஞ்ஞோவீதமும் வலமாகச் சுழித்த திருவுந்தியும்
    திருமார்பும் அதிற்சா முத்திரிகா லக்ஷணம் பொருந்தின ஏகரேகையும் உதயாஸ்தமனமென்னும்
    இரண்டு பருவதங்களும் ஒவ்வாத உயர்ந்த திருத்தோள்களும் யாவர்க்கும் பரவுதற்கரிதாகிய
    நல்ல விபூதிப்பையும், தமருகமும் பிக்ஷா பாத்திரமும்- எ-று. (3-11)

    சீராருந்திருமிடறுஞ்செங்கனிவாய்ப்புன்சிரிப்பு
    மேராரும்வார்காதுமிலகுவிழித்தொழினயப்பும்
    வேராருந்திருநுதற்கீழ்விருப்புருவத்திருப்புருவந்
    தாராநிற்குங்கமலத்தனிமலர்போற்றிருமுகமும்.

    இ-ள் சிறப்பு நிறைந்த நீலமணிபோல் விளங்கின கண்டமும் செய்ய கனிவாயிற் றோன்றுகின்ற
    சிறுமூரலும் அழகு நிறைந்தவார் காதும் ஒளி சிறந்த திருஷ்டியின் தொழில் நயமும் வேர்வு
    நிறைந்த திருநெற்றியிற் கீழாக விருப்பமே வடிவாயிருக்கிற திருப்புருவத்தைத் தன்னிடத்திலே
    தோற்றுவிக்கும் மலர்ந்ததொரு செங்கமலம் போன்ற திருமுகமண்டலமும்-எ-று (3-12)

    பொட்டுமலிதிருநுதலும்புரிந்துமுரிந்திசைந்தசைந்த
    மட்டுமலிகருங்குழலும்வளர்பவளவொளிமழுங்க
    விட்டுவிளங்கியவெழிலார்மேனியுமாய்மெல்லியலார்
    பட்டுவிழும்படியில்விழும்படியழகின்படிவமென

    இ-ள் அகலிய பொட்டுப்பொருந்தின திருநெற்றியும், நெறித்துச்சுருண்டு தன்னிலொத்து
    அலைந்த மணமிகுத்திருக்கிற கரிய திருக்கேசமும் பவள வொளியுங்கருகச் செவ்வொளிவிட்டு
    விளங்கின அழகு நிறைந்த திருமேனி யுடையதுமாகிய இவ்வடிவைக்கண்டு மாதர்கள்
    மோகப்பட்டு விழுந்தன்மைபோல ஆடவர்களும் விழும்படி அழகின் உருவம்போல-எ-று (3-13)

    மன்னனெதிருறுமளவில்வளரிருடாரகைகுழறிற்
    றென்னமலர்மயிர்சொருகியிலகநுதற்றிலகமுகம்
    பன்னரியதுகிலுடுத்துப்படர்தானைபின்போக்கித்
    தன்னிகரிறலைமுலைமேற்றனிக்காறைதனிழற்றுவக்கி

    இ-ள் என் சுவாமியான தேவராசனெனக்கெதிர்ப் படுமளவில் (யான் வடிவுகொண்ட
    தெவ்வண்ணமெனில்) நீண்டகங்குலுடனே நக்ஷத்திரங்கள் சலந்தாற்போல அகத்திலே
    பலமலருங்கலந்து திருகிமுடித்து அளகம் பிரகாசிக்கவும் நெற்றியிலிட்ட சிறு பொட்டினாலே
    மிக சோபையுண்டாகவும் விலையிடுதற்கரிய பட்டு வத்திரத்தை யுடுத்து அதன் முந்தானையை
    ஏகாசமாகப் போட்டு இந்த முந்தானையை வலக்கைக்குள்ளாலே வாங்கி முலை மீதணிந்த
    பதக்கத்தின்மேலே பிணித்துவைத்து -எ-று (3-14)

    மாமணிநற்பாடகமுமலிவித்தோர்வல்லியெனப்
    பூமலிசெங்கரத்துடனப்புண்ணியனேர்புணர்பொழுதிற்
    காமனெழிலழித்தவனுங்காமுறுவோனெனவெனது
    தீமைவிழிக்கடைநோக்கிச்சிறுமுறுவலிறைசெய்தான்.

    இ-ள் பெரிய நவரத்தினப் பாடகமும் அழகுபெற மிகவணிந்து பூத்ததொருவல்லி சாதக்
    கொம்புபோலக் கையிலேயொரு பூங்கொத்தை மிகப்பிடித்துத் தருமமூர்த்தியான
    ஸ்ரீகண்ட பரமீசுரன் சந்நதியிலேசென்று பொருந்தின வளவிலே காமனழகை யெரித்த
    அந்தக் கடவுளும் காமவிருப்பங் கொண்டவன்போலே எனது கொலைத் தொழில்
    பொருந்தின பார்வையை மோகத்துடனே பார்த்து மந்தகாசமுஞ் சற்றே பண்ணினார் -எ-று (3-15)

    அவ்வரையிலிமயமயிலமர்ந்திருப்பவகிலத்துப்
    பொய்விரவாமுனிவரிவன்புகழியக்கனெனவுணரச்
    செவ்வரைமேனியினடியேன்சேயிழையாய்ப்பின்செல்லச்
    சைவமுனிவர்களிருக்குந்தாருவனமதுசார்ந்தான்

    இ-ள் அந்தக் கயிலாசத்தில் ஈசுவரி தனித்தெழுந்தருளி யிருக்க உலகவாசனை யற்ற
    இருடிகள் இவன் கீர்த்திபொருந்தின இயக்கனாக வேண்டுமென்று யோசிக்கச்
    செம்பவளக்குன்று போலுந் திருமேனியுடையவர் அடிமையாகிய யான் ஸ்திரீயாகப்
    பின்செல்லச் சிவபத்தரான இருடிகள் தபசு பண்ணிக்கொண்டிருக்கிற தேவ தாருவனத்தை
    யணிகினார்-எ-று (3-16)

    சென்றுமுனிவர்களிருக்குந்தெருத்தலைச்சேரியிற்சிறிந்து
    முன்றிலிடைத்துடிமுழக்கிமுறுவன்மிகமுகமலர்த்தித்
    துன்றுபலிகொணர்ந்தணையுஞ்சுரிகுழலாரெழினோக்கி
    யன்றிறைவனின்றுபுரியபிநயமாயிரகோடி

    இ-ள் ஆச்சிரமமளவாக எழுந்தருளி இருடிகளிருக்குந் தெருவில் முந்தின பன்னசாலையிலே
    புகுந்து நடுமுற்றத்திலே நின்று தமருகத்தை முழக்கி முகத்தினிடத்தி லொளிவிளங்க
    நகைத்தருளிக் கைநிறையப் பிக்ஷை கொண்டு வந்து அருகே நிற்கும் இருஷிபத்தினிகளுடைய
    அழகைக்கண்டு அப்போது தன்னுடைய வினோதத்தினாலே பண்ணின வபிநயம் ஆயிரகோடியாம்-எ-று (3-17)

    எண்ணரியவபிநயங்களிறைபுரியநிறைகற்பிற்
    பண்ணமருமொழிமுனிவர்பார்ப்பனிகள்பலரீண்டி
    நண்ணருநாண்மடமச்சம்பயிர்ப்பென்னுமிவைநழுவக்
    கண்ணுதலோனிருமருங்குமொன்றாகக்கைக்கொண்டார்.

    இ-ள் சுவாமியானவர் எண்ணிறந்த அபிநயங்களைப் பண்ண நிறைந்த கற்பும் இசைக்கொப்பான
    மொழியுமுடைய இருஷிபத்தினிகள் பலர் கூடிக் கிட்டுதற்கரிய இயல்பான நாணம்,
    கொளுத்தக்கொண்டு கொண்டது விடாத மடப்பம் பேதைமையால் அச்சம் பயிலாதபொருளி
    லருவருப்பான பயிர்ப்பு என்னும் நாலுங் கைநழுவ விட்டுப் பாலலோசனனிரண்டு
    புறமுமொன்றாக வளைந்து கொண்டார்கள்-- எ-று. (3-18)

    சாயவார்குழலொருகைகலையொருகையுறத்தாங்கிப்
    பாயவாள்விழியருவிபரவசராயெதிர்பயில்வார்
    தூயவாய்த்திருவாயிற்றுலங்குநகையெனமொழிவா
    ராயவாவினியெம்மையணைந்தரளாயெனவயர்வார்

    இ-ள். நீளியகுழல் சரியுஅதனை யொருகையினாலும் வீழும் மேகலையை யொருகையினாலும்
    இறுகப் பிடித்துக்கொண்டு வாளையொத்த கண்களில் நின்றும் அருவிபாய மோக வசத்தராகி
    கைஞ்ஞெகிழ எதிர்சென்று பொருந்துவார் சிலர், திருவாயினிடத்து நகையானது சுத்தமாய்
    விளங்குகின்றது என்பார்கள் சிலர், எங்களுக்கிசைந்தவனே மால் கொண்ட எம்மை இப்போது
    தழுவிக் கொண்டருளென்று மோகித்து விழுவார் சிலர்--- எ-று. (3-19)

    ஐயமிடவென்றுகடிதரிசுகொடுபுறப்பட்டுக்
    கையமரவமுதாக்கிக்கலத்திடுவார்நிலத்திடுவார்
    கொய்யுமலரிலையுடனேகுவித்தகரத்துடன்கொணர்ந்து
    நையுமடகெனவிடுவார்நாமுய்ந்தோமெனநவில்வார்

    இ-ள். பிக்ஷையிடவேண்டுமென்று கடுக அரிசியள்ளிக்கொண்டு புறப்பட்டு மேலிட்ட
    காமாக்கினியாலும் விகாரவியர் வினாலுங் கையே பாத்திரமாக அதை அமுது சமைத்துப்
    பிக்ஷாபாத்திரத்தி லிடுமாறுபோலக் கண்ணும் மனமும் வேற்று விகாரப் படுகையால்
    நிலத்திடுவார் சிலர், ஸ்ரீபாதத்திலே அர்ச்சிக்கவெடுத்த பத்திர புட்பங்களை
    அஞ்சலியத்தத்துடனே கொண்டுவந்து மயங்கிப் பிட்சா பாத்திரத்திலே நன்றாக
    வெந்தசாதம் போலாக அதனை இடுவார்கள் சிலர் இப்படி வடிவுமிகுந்ததொரு
    நாயகனைப்பெற்றோ மாதலால் நாமே பிழைத்தோமென்பார்சிலர்-- எ-று. (3-20)

    முன்பிச்சைவரைக்கண்டமுகமென்பார்முயங்கிரதி
    மன் பிச்சைவனப்பகழிமாரிசொரிந்திடுமென்பார்
    பின்பிச்சைகொண்டுவரப்பெரும்பிச்சையளித்தகல்வா
    ரென்பிச்சைகெடவுருகவெமக்கிரங்காரெனவயர்வார்

    இ-ள். இந்த மகேஸ்வரரைப் பார்க்குமிடத்து முன்பு புகண்ட முகச்சாயலா யிருக்கின்றது
    என்பார் சிலர், பொருந்தப்பட்ட இரதிமணவாளனாகிய மன்மதன் தூணியில் நின்றும்
    அம்புகளை ஒவ்வொன்றாக வாங்கி சரவருஷமாக வருஷித்திடு மென்பார் சிலர் பின்னே
    யொரு பிடிப் பிச்சை கொண்டுவர எமக்குத் தாங்கரிய பித்தைத் தந்த கலப்பொம்இவர்
    என்புமிச்சையுங் கெடும்படி நாம் வருந்தவும் நமக்கு இரங்கியருளார் என்று
    சிலர்சொல்லுவார்கள். எ-று ( 3-21)
    ----------------------------

    பிச்சு-ஐவனப்பகழிஎன்பதற்கு காமவெறியைத்தருகின்ற பஞ்சபாணங்களெனவும்
    ஒருபொருள்கொள்க.

    நில்லுமினவளைதாருநீரென்றுதகைந்தொன்று
    சொல்லிவிடுமெனவணைவார்துணைகொண்மணிமுலைகாட்டி
    யில்லுமிதுவெனமொழிவாரெவ்விடமுமிடமென்பார்
    புல்லியிடுமெல்லையுடன்போதுதுநாமெனப்புகல்வார்.

    இ-ள் நீரிவ்விடத்திலே நில்லும் போவீராகி லெம்முடைய வளயலைத்தந்து போமென்று
    தடுத்துச் சம்மதியில்லாமையைச் சொல்லி விடுமென்று தொடர்வார்கள் சிலர், தம்மிலொத்து
    முத்துவடம் பொருந்தும் ஸ்தனங்கள் தோன்றநின்று எம்முடையமனையுமிது தூரமில்லையென
    மொழிவார்கள் சிலர், உமக்குப் பொருத்தமானவிடமே யெமக்கும் பொருத்தமான விடமென்பார்கள்
    சிலர், நீர் சேரவேண்டுமென்று நினைத்திருக்கிற யிடத்தளவும் நாங்கள் வருகிறோமென்று
    சொல்லுவார்கள் சிலர்-எ-ற (3-22)

    ஐயமுளதிலதிடையென்றறிவிப்பாரெனநிற்பா
    ரையமுளதிலதுயிர்வந்தணைந்துகொளென்பவர்போல்வா
    ரையமனாமெனக்கணைகொண்டநங்கனடர்ந்தலையாமை
    யையமனாவெமைநோக்கியஞ்சலெனாயெனவயர்வார்

    இ-ள் பிச்சையுண்டு இடையில்லையென்று அறிவிப்பாரைப்போல எதிரே வந்து நிற்பார் சிலர்,
    எமதுடலில் உயிர் வாழ்க்கையுண்டு அது இல்லையென்கிற சந்தேகம் இல்லையாம்படி
    வந்தணைந்து பிழைப்பித்துக் கொள்ளென்பவரை யொப்பார் சிலர், ஐந்தியமன்போலப்
    பஞ்ச பாணங்களைக் கொண்டு காமராசன் மேலிட்டுப் பொருதாமல் தேவதேவனே
    பயப்படாதிருங்களென்று அருளிச் செய்யாமலிருக்கின்றீரென்று அயர்வார் சிலர்.- எ-று. (3-23)

    ஆடுவாராடாதவபிநயங்கள்பலபுரிவா
    ரோடுவாரோடாமோவுண்கலனிங்குமக்கென்பார்
    கூடுவார்கூடாதகுழலலையக்குழன்மொழியாற்
    பாடுவார்பாடாகமேல்விழுவார்பலராகி

    இ-ள் (விஷய ஆநந்தக்கடல் மேலிட்டு) ஆடுவார்சிலர், உலகத்தில் நடவாத சேட்டா
    விதங்களைப் பலவாகப் பண்ணுவார்சிலர் (பலமுறை திரும்பிப் பார்க்கின்றாரென்று
    விரைந்து) ஓடுவார் சிலர், தலையோடாமோ உமக்குப் பிக்ஷா பாத்திரமென்பார்சிலர்,
    பின்னும் சமீபத்திற் செல்லுவார்கள், வாரி முடிக்கக்கூடாத மயிரலையைக் குழலிசை
    போன்ற மொழியாற் பாடுவார்கள் சிலர், பலர்கூடித் தாங்கள் கொண்ட கோட்பாடு
    பொருந்தத் திருமேனியின் மேல் விழுவார்கள். (3-24)

    பேதையர்கண்முதலாகப்பேரிளம்பெண்மையர்முடிவா
    மாதரவரிருமருங்குமறுகுமறுகிடைநெருங்கி
    யோதமெழுந்தெனநிலவுமொலியுயர்வானுறநகைத்து
    நாதனெழுந்தருளவயனானணைந்தபடிநவிலவேன்.

    இ-ள் பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவைதெரிவை பேரிளம் பெண் என
    ஏழுவகைப் பருவமுள்ள மாதர்களி யாவரும் இரண்டுபக்கமும் மயங்குகிற நடுத்தெருவில்
    சத்த சமுத்திரமும் ஒன்றாய்க் கூடிச் சத்தித் தெழுந்ததுபோல ஒலிக்கும் ஓசை யண்டகோளகையைக்
    கடந்தப் பாலுஞ்செல்ல நகைத்தருளித் தம்பிரனார் மற்றொரு வீதியில் எழுந்தருள அவ்விடத்தி
    யான்சென்று பொருந்திச் செய்த பிரகாரஞ் சொல்லுவேன்-எ-று (3-25)

    கற்புடையமடந்தையெனக்கருதரிதாய்க்கண்டவர்கள்
    பொற்புடையபொதுமகளாப்புகல்வரிதாம்பொலிவினதா
    யற்புதமாய்ச்சிவந்துநிமிர்ந்தகன்றவயில்விழிக்கண்கள்
    விற்புருவத்துடன்முனிவர்விழியிலக்காவிடுமளவில்

    இ-ள் உடையினாலும் நடையினாலும் கையிற்பிடித்த பூவினாலும் குல ஸ்திரீயென்று கருதக்
    கூடாமையாய்ப் பார்த்தவர்களுக்கு நாயகன் பின்னே நிழல் போலப் புறவடி பார்த்து நடக்கையால்
    அழகிய வேசிகளாகச் சொல்ல வொணாணாத தன்மையுமாயிருக்கின்ற கபட வேஷத்தைத்
    தரித்து ஆச்சரியத்தை யுடைத்தாய்ச் செவ்வரி பரந்து நீண்டு விசாலம் பொருந்திய
    கண்களாகிய கூர்மையுள்ள அம்பினைப் புருவமாகிய வில்லிலே தொடுத்து என்னைப்பார்த்த
    விருடிகள் கண்களே குறியாகவிட்ட மாத்திரத்திலே - எறு (3-26)

    எண்ணரியதிறலினர்களிடுநூலேகுறியாகத்
    திண்ணியநெஞ்சவைகுலையச்சிகையவிழவுடைநழுவப்
    பண்ணலருமபிநயங்கள்பலபுரிந்துபரவசரா
    யண்ணலெதிரேனைநோக்கியாதரித்தாரருமுனிவர்

    இ-ள் மட்டிடவொண்ணாத ஞான வீரமிகுந்த முனிவர்கள் உபவீதமொன்றுமே அடையாளமாகத்
    திடச் சித்தங்கலங்கக் குடுமி குலைய உடுத்த மரவுரிகள் நழுவிவிழ வேறொருவர் பண்ணுதற்கரிய
    பல சிங்காரச் சேட்டைகளைப் பண்ணிக் காமமோகராய் என்னுடைய நாயகன் சந்நிதியிலே
    என்னைக்கண்டு மகாவிருடிகள் ஆசைப்பட்டார்கள்-எ-று (3-27)

    எவராலுமென்னாலுமெய்தரியானேய்வுற்றுத்
    தவராசிலிடங்கடொறுந்தாவில்பலிகொளநடந்தான்
    சிவராகமடைவோரிற்சேயிழையாமெனநோக்கு
    பவராகாரபராதபரம்பரையோராயினார்.

    இ-ள் பிரமாதிகளாலும் என்னாலுஞ் சொப்பனத்திலுங் காண்பதற்கரியான் சுவேச்சையினாலே
    இயக்கவுருவத்தைக் கொண்டு மகாவிருடிகளுடைய குற்றமற்ற பன்னசாலை கடோறுஞ் சுத்தான
    பிச்சை கொள்வதற்கு நடந்தான் அந்தச் சிவத்தின் உண்மையை அறிந்து
    அன்புவைப்பவர்கள்போல் என் சொரூபத்தை எண்ணி யறியாமல் இவளொரு
    ஸ்திரீயென்றுகருதி விகாரங்கொண்ட முனிவர்கள் சோட்டைகளடைவே பண்ணி
    அபராதத்துக்குப் பழை யோராயினார்கள்-எ-று (3-28)

    கோவமிகுமுதுமுனிவரொன்றாகக்குழுமியெழுந்
    தாவதெனாமிவனிந்தவாச்சிரமத்தஞ்சாதே
    காவன்மிகுங்கற்பழித்தகாபாலியெனக்கனன்று
    தாவமிகும்படிபரவாச்சாபங்கள்பலவிட்டார்

    இ-ள். இப்படியே ஆசாரவீனம் வரக்கண்டு கோபமிகுத்த விருத்தரான ருஷிகளெல்லாருங்கூடி
    வெட்கங்கொண்டு இப்படி வரலாமோவென்று எப்படிப்பட்ட அசுராகளி ராக்கதர் சித்த
    வித்தியாதரர்களாலும் அண்டொணாத சிவார்ச்சனை மிகுந்தநம்முடைய் வாச்சிரமத்தில்
    பயப்படாமல் இந்தக்கபாலி வந்து பதிவிர்தா பாவத்தை குலைத்தானென்று குரோதனராய்
    அக்கணத்திலே கோபமிகும்படி பூலோகத்திலே நடவாத எண்ணிறந்த சாபங்கள்
    அதியுக்கிரமாக இட்டார்கள் - எ-று. (3-29)

    இட்டபலசாபங்களிறைவனயன்மேவாது
    கெட்டபடிகண்டுசினங்கெடாதமனத்தினராகி
    நட்டமளித்தருளென்றுதகைவார்போலெதிரநண்ணிச்
    சிட்டமலிதருகுண்டந்திருமுன்னேதிகழ்வித்தார்

    இ-ள். தாங்கள் சபித்த வெகுவித சாபங்களுந் தம்பிரானாரருகே செல்லாமல்
    வியாத்தமானது கண்டு மனத்தி லாறாதகோபத்தை யுடையவர்களாகி தேவரீரெங்களுக்கு
    ஆநந்த நிருத்தந் தெரிசிப்பித்தருளுமென்று தகையுவவர் போலே யெதிர்ப்பட்டு
    சுவாமிக்கு முன்னே பெருமை மிகுத்த குண்டத்தைச் சமைத்தார்கள்-எ.று. (3-30)

    எஞ்சாதவழலிருத்தியெடுத்துமனுக்கணித்தோதி
    நஞ்சானதிரவியங்கணாடியவைபலகோலி
    நெஞ்சாலுநினைவரியநிருமலனேயிலக்காக
    வஞ்சாதேயவிசாரமவிசாரத்தமைந்தார்கள்

    இ-ள். அந்தக்குண்டத்தில் குறைவுபடாத அக்கினியைத்தாபித்து மந்திரம் உச்சரித்து
    அந்த யாகத்துக்குரிய விஷத்திர வியங்களை விசாரித்து அவை மிகுதியாகக் கொண்டு
    மனத்துக்கும் எட்டாத பரமசிவமே யிலட்சியமாகப் பயப்படாமல் விசார ஈனத்தினாலே
    அவிசார ஓமத்தைப்பண்ணினார்கள்-எ-று. விஷத்திரவியங்களாவன -
    எட்டி முதலியனவாம். (3-31)

    கருத்தின்விழிசிவந்தமுனிக்கணத்திலுதிப்பித்த
    வெரித்ததிருமுழுவையைநேரேவுதலுமெந்தைபிரான்
    சிரித்தருளியதுபிடித்துத்திருகரத்தினகநுதியா
    லுரித்தவுரிபசும்பட்டாவுடைதொடைமேலுறவுடுத்தான்

    இ-ள். தெளிவுள்ள மனத்தினும் மிகச்சிவந்த கண்களையுடைய தாருகாவனத் திருடிகள்
    க்ஷணமாத்திரையில் அவிசார வோமத்திற பிறப்பித்த கோபித்துக் கெர்ச்சிக்கா நின்ற
    வியாக்கிரத்தைத் தம்பிரானார் முன்னே விடுதலும் எந்தைபிரானார் திருப்புன் முறுவல்செய்து
    எதிர்த்த அந்தப்புலியைப் பிடித்துத் திருக்கரத்தினுனி நகத்தாலே யுரித்துத் தோலைச் செவ்விய
    பட்டுவத்திரம் போலத் தொடையளவும் பொருந்த உடுத்தருளினார்--- எ-று. (3-32)

    ஏரடங்கு குண்டத்தி னெரிவயிற்றிற் பிறந்தெழுந்த
    பாரிடங்க ளாரிடமாம் பரிசனமா யினபயிலச்
    சீரடைந்த மணிமுச்சிச் செய்யவிழி வெள்ளெயிற்றுக்
    கார்விடங்கொ ளொருபுயங்கங் கடிதுவரக் கைக்கொண்டான்.

    இ-ள். அழகு செறிந்த குண்டத்திலிட்ட அவிசாரவோமத் தீயினிடத்தில் உற்பத்தியான
    அனந்தபூதங்கள் ஏகாங்கியாயிருக்கிற தம்பிரானார்க்கு முனிவர்கள் வரக்காட்டின
    ஊழியக்காரரைப்போலப் பணிவிடைசெய்ய ஒளிமிகுத்த இரத்தினச் சுடிகையுஞ் சிவந்த
    விழியுமுடைய வெள்ளெயிற்றிற் கறுத்த விடம்பொருந்தின தொருபாம்பும் விரைவுடன்வர
    அதனை இடக் கரத்திலே முன்கைக் கடகமாக அணிந்துகொண்டார் -- எ-று. (3-33)

    மைவிஞ்சு நெடுந்தடித்தின் வார்குழல்வார் சடையாகத்
    தெவ்வன்ப ரெதிரிரண்டு திருக்கரங்க ளுருத்தெழமுற்
    கைவந்த நிலியமலர்க் கால்வந்து கலந்திசைப்பப்
    பவ்வங்கொண் முழுநஞ்சு நுதல்விழியும் பாரித்தான்

    இ-ள். அந்தகாரத்தை நீக்கி மேலிட்ட நெடிய மின்னல்களைப்போலே முந்தி நீண்ட
    கரிய குழலானதே நீண்ட சடையாகவும், அஞ்ஞானத்திலே மாற்றாரான பத்தர்களாகிய
    அந்த இருடிகள் முன்னே முந்தின திருக்கரங்களுமன்றி இரண்டு திருக்கரங்களுண்டாகித்
    தோன்றவும், முன்னே திடமான தாண்டவம் செங்கமலம் போன்ற ஸ்ரீபாதத்திற் கூடிப்பொருந்தவும்,
    திருப்பாற் கடலிலே தோன்றின குறைவற்ற விஷத்தைக் கண்டத்திலும் நெற்றியிலே கண்ணையும்
    வெளிப்படக் காட்டினார்-- எ-று. (3-34)

    ஏய்ந்தவனன் முன்னுகர்ந்த விருளுமிழ்வ தெனவெரிவாய்ப்
    போந்ததிரு மெரிமுச்சிப் பொறிவிழிவெண் பறகுறளன்
    சீந்தரவத் துடனரவந் திகழவர வரனெதிரே
    பாய்ந்தருளி வெரிநெரியும் படியடிமேற் பயில்வித்தான்

    இ-ள். பொருந்தின அக்கினியானது இதற்குமுன் விழுங்கின இருளை இப்போது
    உமிழ்ந்தாற்போல குண்டத்தினக்கினியில்நின்றும் புறப்பட்டுப் பயங்கரமான ஆர்ப்பரவத்தையும்
    எரிகின்ற குஞ்சியையும் தீப்பொறி சிந்தும் விழிகளையும் வெண்மையுடைய பற்களையும்
    வாமன ரூபத்தையுமுடைய முயல்கள் சீந்தும் பாம்பைக் கையிலே கொண்டு கெர்ச்சித்து
    மிகவதிர்ந்து வரக்கண்டு தம்பிரானார் விரைவிலே யெதிர்ப்பட்டருளி முயல்கன் கீழ்ப்படப்
    பாய்ந்து அவன் முதுகு நெரியும்படி ஸ்ரீபதத்திலே மிதிதிதருளினார்---எ-று.(3-35)

    மலங்கவெரி தரவேந்தி மந்திரங்கள் வரக்கரத்தா
    லலம்புசிலம் பணியாகத் திருவடியி லமரவித்துத்
    துலங்குபல சடைதாழத் துணங்கைகணந் துதைவிப்ப
    வலங்கலணி தடந்தோளா னருநடமா டுதல்புரிந்தான்

    இ-ள் அந்தமுனிவர்களேவின யாவும் தளர்ந்தபின் அக்கினிதன்னை வரவி- அந்த அக்கினியைத்
    திருக்கரத்திலேந்தியருளி உச்சாடனமான மந்திரங்கள் ஆகரிஷண கற்பனையால்வர அதை
    ஓசையுள்ள அழகிய திருச்சிலம்புக்குத் தரிசுமாக ஸ்ரீபாதத்திற் கரத்தாற்சாத்தி மின்போலத்
    துலங்கும் பலசடை தாழ்ந்தலையக் கணநாதர்கள் துணங்கைக் கூத்தை மிகச்செய்யக் கொன்றை
    மாலையை யணிந்த பெரிய தோளையுடையவர் அரிய நடனஞ்செய்ய விரும்பினார்-எ-று
    தரிசுஎன்பது-சிலம்புக்குள்போடுஞ்சிறுபரல். (3-36)

    தாகத்தா லலைந்துமிகத் தளர்ந்துதவ வலிசலித்த
    மோகத்தா லிழந்தனலு மந்திரமும் விடமுடிந்த
    சோகத்தா னிராயுதராய்த் துளங்குநட மிறைதொடங்கும்
    வேகத்தா லருமுனிவ ரொன்றாக வீழ்ந்தார்கள்

    இ-ள் ஒமாக்கினியுட்டினத்தாலுண்டாகிய தாகத்தினால்வாடி தபோபலங் குறைந்த
    மயக்கத்தினாலே மிகத் தளர்ந்து தங்கள் செயலற்று அக்கினியையும் மந்திரத்தையும்
    ஏவ அவைகள் பொன்விதனத்தினாலே தங்களுக்குரிய கருவியின்றிப் பயங்கரமான
    நடனத்தைத் தம்பிரானார் செய்யத் தொடங்குற வேகத்தினாலே பெரிய முனிவர்களெல்லாரும்
    வியாமோகதராய் விழுந்தார்கள்- எ-று. (3-37)
    ----------------------
    வியாமோகமென்பது -ஆச்சரியத்தால் மோகித்தல்.

    நடமுயலும் பொழுதஞ்சி நடுநடுங்கி நானயரக
    கடகமென விடதரத்தைக் கட்டியவங் கைகவித்த
    விடையில்விடை யுடனெடுவா னெய்தியிடத் தணைந்தகுல
    மடவரலை மகிழ்ந்தவண்மேன் மலர்ந்தகடைக் கண்வைத்தான்.

    இ-ள் அந்த நிருத்தவேகம் பொறுக்க மாட்டாமல் பயப்பட்டு நடுநடுங்கியானு
    மூர்ச்சிதனாகக்கண்டு சர்ப்பக்கடக தாரிதமான அழகிய திருக்கரத்தாலே யென்னை
    அஞ்சாதே யென்றமைத் தருளின அவதரத்தில் இடப வாகனத்துடன் ஆகாச
    மார்க்கத்தில் வந்து இடப்பக்கத்திலே பொருந்தின பார்வதியார் மீது பிரியப்பட்டு
    அவர்மேலே இடத்திருக்கைக்கண் வைத்தருளினார். (3-38

    வேறு.

    அரிவை யணைந்தபி னெங்கணு மலர்மழை யண்டா பொழிந்தனர்
    பிரம புரந்தரா வந்தனை பெருகினர் முன்புற வின்புறு
    முருவ மொழிந்திக ழென்பழை யுடலது கொண்டு பணிந்தெதிர்
    மரிவ நடுங்கியொ ருங்குதன் மலைமகள் கண்டு மகிழ்ந்தனள்.

    இ-ள். பரமேசுவரி யெழுந்தருளினபின்பு தேவர்களெங்கும் புட்பவருஷம் வருஷித்தார்கள்.
    பிரமேந்திராதியர்கள் அஷ்டாங்க பஞ்சாங்கங்களினாலே சந்நிதியிலே வந்தனையை
    வெகுவிதமாகப் பண்ணினார்கள். இருஷிகளின்புறும் மோகினி வேடத்தை நீங்கி
    அடியாரிகழுமென்னுடைய பழைய மாயா சரீரத்தைக் கொண்டு சர்வேசுரனைப்
    பணிந்து முன்புபோல கூசாமலெதிரே நிற்கப் பயப்பட்டுப் (பிரமேந்திராதிகளுக்குப்
    பின்னே) யொளித்து நிற்கிறதைக்கண்டு பரமேசுவரி மிகவு மகிழ்ந்தருளினார். -எ-று (3-39)

    விரவிய வங்கண னெங்கணும் விரிசடை மண்டி யலைந்திட
    வெரிவிரி செங்கை சுழன்றிட விடிதுடி கொண்டிட வெண்டிசை
    பரிபுர புண்டரி கந்தகு பதயுக ளம்பல ருந்தொழ
    வருள்புரி யெந்தை மடந்தையு மதிர நடங்க டொடங்கினன்.

    இ-ள் நிருத்தத்தொழில் பொருந்தின பரமேசுவரன் விரிந்தசடை திக்கெங்கு மசையவும்
    சுவாலாக்கினியை ஏந்தின கரம் கொள்ளிவட்டம்போலே சுழன்றிடவும் எட்டுத்திக்கிலுமுள்ள
    யிடியோசையைத் துடியோசை கொள்ளவும் சிலம்பணிந்த செங்கமலம் போன்ற இரண்டு
    திருவடிகளையும் யாவருந் தொழவும் கிருபாகரராயிருக்கிற தம்பிரானார் பரமேசுவரியும்
    நடுங்க வெகுவிதமான நிருத்தத்துள் பயங்கர நிருத்தத்தைத் தொடங்கினார்-எ-று (3-40)

    கரண மனந்த முயன்றொலி கலவு சிலம்பணி குஞ்சித
    சரண மிலங்க வலம்புரி தருகர மும்பொலி வுந்தகு
    திரணகின் மங்கை நெடுங்கய றிருநய னங்கள் செறிந்திடு
    புரணமு மொன்றிய வென்றிகொள் பொருவில் புயங்க முயங்கினன்.

    இ-ள் திருவிளையாட்டினால்அநந்தமான கரணங்களை நடித்து ஓசை பொருந்தின
    சிலம்பணிந்த குஞ்சித பாதங்கள் விளங்க சாமுத்திரிய இலக்கணத்திலுத்தமமான
    வலம்புரிச்சங்க ரேகைபொருந்திய செங்கையும் அழகும் இணையொத்துத் திரண்டதனமுமுள்ள
    பார்வதிதேவியின் கயனெடுங்கண்ணும் எந்தை திருநயங்கள் பொருந்தின பார்வையும்
    அதிலொருப்பட்ட மனமும் மனதொத்த பாவமும் பாவமொத்த ரசமும் பொருந்தின
    பாசத்தைத் தள்ளின சுத்த நிருத்தமான ஒப்பில்லாத புயங்ககரணத்தைப் பொருந்தினார்-எ-று

    புனித புயங்க முயங்கிய பொழுத வனுந்த னடந்தரு
    மினிமை நுகர்ந்த மடந்தையு மெழில்விடை யும்பெறு கென்றரு
    ணனிமிக வென்கணு மங்கண னகைதர வுய்ந்து வணங்கினன்
    மனமுரு கும்படி யன்புடன் வளர்விழி யின்பு வழங்கினன்.

    இ-ள் சுத்தமாகிய நடனஞ்செய்யத் தொடங்கினபொழுது தம்பிரானாரும்
    தம்முடைய நிருத்தத்திலுண்டான இன்பத்தை யனுபவித்த பரமேசுவரியை
    அழகிய விடபவாகனமேற்கொள்ளென்று அருளி அருளுடனே மிகுதியாகத் தம்பிரானார்
    என்னைப்பார்த்து நகைத்தருள அப்போது கிருதார்த்தனாகி நான் வந்தனைசெய்தேன
    கல்லொத்த நெஞ்சுஞ் கரையும்படி பத்திமி குருஞானப் பார்வையைப் பிரசாதித்தருளினார் -
    எ - று.(3-42)

    அயருமருந்தவர்தம்பழி யகலநினைந்தருளங்கண
    சயசயசங்கரவென்றெதிர் தரையில்விழுந்துபணிந்தனர்
    நயநடனுந்தகுமங்கவர் நவையெவையுந்தொகவந்திருண்
    முயலகனொன்றுகவென்றதன் முதுகதிரும்படிநின்றனன்.

    இ- ள். மோகித்துக்கிடக்கிற அரிய தவத்தையுடைய விருடிகள் தம்பிரானார் ஞானக்கண்ணைக்
    கொடுத்தபின் கிருபாகரனே எங்கள் குற்றம் பொறுத்த ருள் சய சயசங்கரனேயென்று
    சந்நிதியிலேயே காங்கமாகப் பூமியில் விழுந்து நமஸ்கரித்தார்கள். அனுக்கிரக நிருத்த
    மூர்த்தியு மிரட்சிக்கத்தக்க அந்த விருடிகளை வியாபரித்த ஆணவசத்திகளெல்லாங் கூடிவந்து
    ஆணவமூலமாயிருக்கிற முயலகனைப் பொருந்துகவென்று ஆய்கஞாபித்து அதனுடைய (
    சத்திபொருந்தின) முதுகு நெரியும்படி மிதித்து நின்றருளினார் - எ - று (3-43)

    பண்டையவிருள்பறியும்படி பங்கயபதமுதவும்பொழு
    தெண்டிகழிருடிகளகண்டன ரின்புறுதிருநடமன்பொடு
    கண்டனர் வெருவினர்நுண்டுளி கண்டருமருவிசொரிந்தனர்
    குண்டிகைகுசையிசைதண்டுகள் கொண்டெதிர்குணலைமலிந்தனர்.

    இ-ள். அநாதியே தம்மைமறைத்த ஆணவ நீங்கும்படி தம்பிரானார் திருவடித் தாமரையை
    அருளின பொழுது நாற்பத்தெண்ணாயிர மிருடிகளுங் கண்டார்கள் கண்டதே தென்னில்
    முன்பு நடனஞ்செய்த சவுககிய நிருத்தத்தை அன்புடனே கூடிக் கண்டார்கள் மிகுந்த
    பயங்கொண்டவர்களாகிக் கண்களி லிருந்தும் ஆநநத பாஷ்பத்தைப் பொழிந்து கமண்டலம்
    தெர்ப்பைப்புல் பொருந்தின தண்டு இவைகளைக் கைக்கொண்டு சந்நிதியிலே குணலைக்
    கூத்தைச் செய்தார்கள் - எ-று . (3-44)

    சூடினர்கரமலரஞ்சலி சூழ்வுறவமரர்துதைந்தனர்
    நாடியகருவிகொடும்புரு நாரதரிசைபடியும்படி
    பாடிலர்தெளிவிலர்நின்றனா பாரிடநிலவுதுனங்கைகொ
    டாடினகரணமிடுந்தொழி லாயினர்கணபரநாதர்கள்.

    இ-ள். சுற்றுநெருங்கின தேவர்களஞ்சலி யத்தராய் நின்றார்கள் தும்புரு நாரதர்கள்
    மனந்தெளிவிலராய் எண்ணப்பட்ட வீணை வாத்தியங்கொண்டு இசைபொருந்தும்படி
    பாடினா்களில்லை பூதகணங்கள் பொருந்தின துணங்கைக் கூத்தாடின உறுதிகரணம்
    இடுந்தொழிலே யாயினரெண்ணிறந்த கணநாதர்கள் - எ-று (3-45)

    காரணமென்பது கூத்தின் விகற்பம்

    அங்கரிபிரமபுரந்தரரண்டர்கண்முனிவர்கண்டமு
    மிங்கெமதினியந‌டஞ்சிவலிங்கமதிசையநினைந்தொளிர்
    கொங்கலர்பலமல‌ரன்பொடுகொண்டடிவழிபடுமென்றுயர்
    மங்குலினிடைவிடைதங்கியமங்கையொடிறைவன்மறைந்தனன்.

    இ-ள்.(இப்படியே நிகழும் அவ்விடத்து) அரி-பிரமன்-இந்திரன்-தேவர்கள்
    இருடிகள் பூதகண முதலானோர் யாவரும் எம்முடய ஆநந்த நிருத்தத்தையிப்போது
    இவ்விடத்து உண்டாகிய இந்தச் சிவலிங்கத்தினிடமாகத் தியானித்து - விளங்கும்
    மணம் விரிந்த பல புட்பங்களாலே திரிசந்தியு நாடோறும் பூசை பண்ணிப் போற்றுங்களென்று
    இடபத்திலே பொருந்தின பரமேசுவரியுடனே பரமேசுவரன் பரமாகாசத்திலே மறைந்தருளினார்-
    எ-று. (3-46)

    இறைமறைதருதிசைமுன்றெழு தெவர்களுமகல்வுழிவென்றிகொ
    ளறிவுறுமொருமையனந்தநின்னமளியினெருநலமர்ந்தொளிர்
    கறைவளர்மிடறனடந்தொழுகலவியினலமொடுகண்படு
    முறைதருதுயரமொழிந்தனனெனமுகமலரமொழிந்தனன்.

    இ-ள் பரமசிவம் மறைந்தருளின திசையை நோக்கி நமஸ்கரித்து யாவருமகன்றபின் ஞான
    வீரத்திலே பொருந்து மொருப்பாடுடைய ஆதிசேஷனே நீயாகிய சயனத்தில் நேற்றுப்
    பொருந்தி நீலவொளி விளங்கின விடத்தைத் திருமிடற்றிலுடையவனது நிருத்தந்தொழுத
    இன்பத்தோடே சாக்கிரம் சொப்பனஞ் சுழுத்தி துரியந் துரியாதித மென்னும்
    பஞ்சாவத்தையிற் படுந் துக்கத்தை நீங்கி அருளால் அமிதமாக இருந்தனன் என்று
    முகாரவிந்த சேவை விளங்க மகாவிஷ்ணு அருளிச் செய்தார்-எ.று. (3-47)

    அண்டனதுய‌ர்ந‌ட‌ன‌மென்றலும‌ஞ்ச‌லிசிர‌முற‌வ‌ன்பொடு
    க‌ண்ட‌வ‌ரென‌மிக‌நுண்டுளிகண்‌ட‌ர‌வுருகுத‌ல்க‌ண்ட‌ரி
    தொண்டினரிவர்பணியென்பணிசுந்தரனடிபணியென்பணி,
    பண்டெனதணையிவரென்றுகொள்பண்பொழிவினியெனநொந்தனன்.

    இ-ள். ப‌கிர‌ண்ட க‌ர்த்தாவினுடைய ஆந‌ந்த நிருத்த மென்ற மாத்திர‌த்திலே ப‌த்திமிகுதியினால்
    அஞ்ச‌லியான‌து சிர‌முற ஆந‌ந்த நிருத்த‌ங்க‌ண்டு க‌ளி கூர்ந்த‌வ‌ரைப்போலே க‌ண்ணாண‌து
    மிக‌வுநுண்டுளித் தாரைகொள்ள ம‌ன‌து நீராளமா யுருகிப் புள‌க‌த்துட‌னே நின்ற ப‌ர‌வ‌ச‌த்தை
    ம‌காவிஷ்ணு க‌ண்டு இவர் த‌ம்பிரானார்க்குரிய தொண்ட‌ர் இவ‌ர்க்குப் ப‌ணியேதென்னில்
    எலும்பு மாலை ய‌ணிந்த ப‌ர‌ம‌சிவ‌த்தின் திருவ‌டித் தொண்டாகும் என்ப‌ணியோவெனில்
    இன்று முத‌ல் இவ‌ரென‌க்குப் பாய‌லென்னும் புத்தியை யொழித்த‌லென்று சொன்ன
    மாத்திர‌த்திலே சேட‌ன் மிக‌வும் வித‌ன‌ப்ப‌ட்டான்.- எ-று. (3-48)

    இனிய‌ணையென‌ந‌னிதுஞ்சுத‌லிசைவில‌தென‌துள‌நின்ப‌ணி
    த‌ந‌ய‌னைமுய‌ல‌மொழிந்துயாத‌வ‌முய‌ல்வ‌துத‌குமென்ற‌லு
    மனமிகவுருகியனந்தனும்வரதனதினியநடந்தொழு
    துனைவினிதெனினுமகன்றிடுதொழினினைவரிதெனநொந்தனன்.

    இ-ள் நீசயனமாயிருக்க நான் அந்த சயனத்தில் நித்திரை செய்ய என் மனதிற்
    பொருத்தமில்லை உன் பணியான பாயற்றொழில் செய்ய உன் பிள்ளையைக்
    கற்பித்து நீ மேலான தவங்களிலே முயலுகிறதே யுனக்குறுதியென்று மகாவிஷ்ணு
    சொல்லச் சேடனெஞ்சங் கரைந்து நெக்குருகி அபீஷ்ட வரதனுடைய இனிய
    நிருத்தஞ் சீக்கிரத்திலே தொழுமருட்பாடே மிகவு மினிதெனினுந் தேவரீர நீங்கும்
    வகை நினைக்கவும் போகாதென்று விதனப் பட்டான்- எ-று. (3-49)

    மாதவன்மிகவுமகிழ்ந்திறைவாழ்வடகயிலைமருங்குற
    நிதவமுயல்கயல்கொண்டகணேரிழையதிபனும்வந்துநி
    னாதரவமரவரம்பலவாசறவருடருமென்றபி
    னேதமில்பொருவிலனந்தனுமேசறுமரியையிறைஞ்சினன்.

    இ-ள் சேடனுடைய அடிமைத்திறத்துக்குப் புருடோத்தமன் மிகவும் பிரியப்பட்டு
    ஸ்ரீகண்டபரமேசுரன் வாழ்ந்தெழுந்தருளுயிருக்கும் உத்தர கைலாய பாரிசத்திலே
    நீபோய்த் தவசு பண்ணு அங்கயற்கண்ணுமாபதியும் உன்னுடைய தபத்தலத்திலே
    யெழுந்தருளி உன்ஆசை தீர வேண்டின வரமெல்லாந்தந்து மலத்திரைய முநீக்கி
    அருளுண்டாக்குமென்று மகாவிஷ்ணு உபதேசித்தபின்பு குற்றமும் ஒப்புமில்லாத
    சேடனுங் குற்றமற்ற மகாவிஷ்ணுவை நமஸ்கரித்தான் -எ-று

    குற்றமில்லாத மகாவிஷ்ணுவென்றது தம்பிரானார் ஸ்ரீயத்தம்பற்றின பரிக்கிரகசத்தியாய்
    ஞானதிருஷ்டிபெற்றதனா லெனக்கொள்க. (3-50)

    விரவரியருள்கொடனந்தனும்விரைவொடுதகவிடைகொண்டபின்
    மருவருதலைவன்மகிழ்ந்துறைவளர்வடகயிலைமருங்குற
    விரிபணமணிவெயில்சிந்திடவிரிவிழிகதிரைவிழுங்கிட
    வெரியெரிதிசைதொறுமண்டிடவிகழ்வறுதவமதிசைந்தனன்.

    இ-ள் தன்னை நீங்காத மகாவிஷ்ணுவினனுமதியுடனே சேடனும் சடுதியிலே தவம் பொருந்த
    விடைகொண்டபின்பு கனவிலுந் தேவர்க்குங்கிட்டு தற்கரியவனாகிய அரிபிரமாதிகளுக்குந்
    தலைவன் வாழ்ந்தருளியிருக்கிற உயர்ந்த உத்தர கயிலாய பாரிசத்திலே மகாவிஷ்ணு
    சொன்னவிடத்திலே வந்து அக்கினி கற்பித்து அகன்ற படங்களிலிருக்கிற ஆயிரமிரத்தினங்களும்
    ஆதித்திய கிரணங்களைத் தள்ளவும் பல்லாயிரம் விழிகள் ஆதித்தனைத் தன்னுடைய
    பிரகாரத்துள்ளே யடக்கவும் சுவாலிக்கிற பஞ்சாக்கினி எவ்விடத்தும் அன்னியமான
    திக்குகடோறும் போய் நிறையவும் பந்தபாசத்தை நீக்குகிற தபசைப் பண்ணினான்--எ-று (3-51)

    வேறு.

    தவமிகமுயலும்போதுதன்னுயிர்ப்புமிழ்வதன்றிப்
    பவனெனுமுணவுங்கொள்ளான்பலபகலகலவும்பாரான்
    சிவனடிகாணுங்கண்கடிப்பியமாகுவான்போ
    லுவமனில்கதிரோனுட்புக்குருகிநேரோடவைத்தான்.

    இ-ள். தபசைப் பண்ணுங்காலத்தில் தன்னுடைய சுவாசமுமிரேசக மொழிந்து பூரக
    கும்ப‌ங்க‌ங்க‌ளும் ப‌ண்ணான் காற்றாகிய த‌ன‌க்குரிய உண‌வையுங் கொள்ளான்
    நெடுங்கால‌ஞ் செல்வ‌துஞ் சிந்தியான் த‌ம்பிரானார் ஸ்ரீபாத‌ங்க‌ளை இனிமேற்காண‌ப்
    போகிற க‌ண்க‌ளைச் சுத்த‌மாக்குவான்போல ஒப்பில்லாத ஆதித்திய ம‌ண்ட‌ல‌த்துக்குள்ளே
    சென்றுருகி இர‌ண்ட‌ற‌ப் ப‌ண்ணினான்- எ-று. (3-52)

    இன்னவாற‌‌ருந்த‌வ‌ங்களிவ‌னியற்றிட‌ந‌ட‌ஞ்செய்
    ம‌ன்ன‌ன்மாமுனிவ‌ரைப்போல்வாய்மைகள‌ள‌ப்பானாகி
    முன்ன‌ய‌னாகிய‌ன்ன‌முதுகிட‌மாக‌வேறி
    ய‌ன்ன‌வனெதிரேசென்றான‌வ‌னுமாத‌ர‌ங்க‌ள்செய்தான்.

    இ-ள். இப்ப‌டியே ய‌திக‌க‌டூர‌மான த‌ப‌சை யிவ‌ன்செய்ய நிருத்த கிருத்திய‌ஞ் செய்கிற தேவ‌தேவ‌ன்
    தேவ‌தாருவ‌ன‌த்திலே இருடிகளுடைய சித்த சுத்த‌ம் ப‌ரீட்சிக்க வ‌ந்தாற்போல முந்த‌ப் பிர்மாவாகி
    அன்ன‌த்தின் மேற்கொண்டு சேட‌னுக்கெதிரே சென்றான் சேடனு மிந்தப் பிர்மாவைக்க‌ண்டு
    அங்கிகார‌ஞ் செய்தான்- எ-று. (3-53)

    செய்த‌வ‌ன்ற‌ன்னைநோக்கிச்சின‌வ‌ர‌வுருவோய்செல்ல‌ன்
    மெய்திக‌ழ்த‌வ‌ங்க‌ள்போதும்விர‌வுபோக‌ங்க‌ள்வீடு
    பொய்த‌காவித்தைசித்திபொருந்துவ‌தொன்றெம‌க்குக்
    கொய்துரைத‌ருதுமென்றுகூறினான்முனிவ‌ர்கோமான்.

    இ-ள். பிர‌ம‌தேவ‌ன் த‌ப‌த்தை ப‌ண்ணுகிற சேட‌னைப் பார்த்து க‌டூர‌மான ச‌ர்ப்ப
    வேட‌த்தையுடைய‌வ‌னே ச‌ரீர‌ம் வ‌ருந்த‌ப் ப‌ண்ணின த‌பசு இதுவ‌ரைக்கும் போதும்
    பொருந்த‌ப்ப‌ட்ட இந்திராதி போக‌ங்க‌ள் ந‌ம்முடைய சாலோக சாமீப‌சாரூப சாயுச்சியாதி
    ப‌த‌ங்கள் அசத்தியம் பொருந்தாத வித்தைபதினாலு அட்டமாசித்தி என்னும் இவற்றில்
    வேண்டுவனவொன்றைத் தெரிந்தே எம்முன் சொல்லுவாயாக தருவோமென்று பிர்மா
    அருளிச்செய்தார்- எ-று. (3-54)

    வாச‌க‌ங்கேட்ட‌ன‌ந்த‌ன்ம‌கிழ்ந்தியான்புக‌ழ்ந்த‌ழைத்த
    தீச‌னையென்னவேண்டிற்றெவ‌ர்த‌ரின‌ன்றுன‌க்குப்
    பேசுகென்றனைத்தும்வேண்டாப்பெற்றிக‌ண்ட‌ய‌னிக‌ழ்ந்திங்
    கேச‌றுத‌வ‌ஞ்செய்வான்வேறென்ன‌பெற‌விய‌ம்புகென்ன.

    இ-ள். இவ்வாறு சொன்ன பிர்மாவின் வார்த்தையைக் கேட்ட சேடன் காண
    விரும்பித்துதித்து யானழைத்தது பரமேசுரனை அங்ங‌ன‌மிருக்க நீ வ‌ந்ததே தென்ன
    உன‌க்கு வேண்டின தொன்றை யார் த‌ந்தால் ந‌ன்று அதனைச் சொல்லுவாய‌ாக‌வென
    வினவின யாவையும் அவனுக்கு வேண்டாத கருத்தறிந்து பிரமதேவன் அபேட்சித்து
    இவ்விட‌த்தில் குற்றிமில்லாத த‌ப‌த்தைச் செய்யும‌து வேறினி யென்ன ப‌ய‌னைப் பெற‌ச்
    சொல்லென்றார்- எ-று. (3-55)

    முத்தியுமுடிவிலாதபோகமுநாலிரண்டாஞ்
    சித்தியும்வித்தையாவுஞ்செய்வதென்றிகழ்வனத்தி
    லத்தனன்றெவர்க்குநலகுமாநந்தநிருத்தங்காணும்
    பித்தமேலிட்டதென்றுபேசினானேசிலர்தான்,

    இ-ள் உன்னுடைய பதமுத்தியும் ஒழியாத இந்திராதி போகமும் அட்ட மாசித்தியும்
    வேதாதி சர்வகலையும் இவைகொண்டு செய்வதென்ன விளங்குந் தேவதாருவனத்தில்
    தம்பிரானாரப்போது யாவர்க்கும் அருளின ஆநந்த குற்றமில்லாத சேடன்-எ-று (3-56)

    முந்தயனவனைநோக்கிமுடியநீமுடியாதொன்றைச்
    சிந்தனைசெய்தபித்துத்தீர்தராதெனநகைத்தங்
    கந்தமில்சுதந்தரத்தோனார்சொலவனத்திலன்று
    வந்தருணடம்புரிந்தான்மதியிலாயெனவுரைத்தான்.

    இ-ள் தேவருஷிகளுக்குப் பிரதானனான பிரமாசேடனைப் பார்த்து ஒரு காலுமுடியாத
    தொன்றை முடியவேண்டுமென்று கருதின உன்னுடைய பிராந்திஞானம் முடியப்
    போகிறதில்லை யென்று நகைத்தருளி அந்நாளந்த தேவதாருவனத்திலே முடிவிலாத
    சுதந்தர சத்திமானாயுள்ள பரமேசுரனார் யார் வேண்டவந்து அருள் நடமாடினார்
    புத்தியில்லாதவனே யென்றான்-எ-று (3-57)

    ஆலவாயனந்தனென்று மாடுவானவனேயன்றோ
    சாலவாதரித்தாற்றானே தருபவன்றாரானென்றா
    லேலுமிங்கென்னவன்னத் திறையவனந்தோவந்தோ
    காலமுமநேகஞ்சென்றுங் கழிந்திலதாசையென்றான்.

    இ-ள் விஷமூறும் வாயினையுடைய அனந்தன் அனவரத தாண்டவஞ் செய்யுமவன்
    சிவனன்றோ தானே நடன தரிசனம் தந்தருளுமவன் அதனைத் தரிசிக்க வேண்டுமென்று
    மிகவும் விரும்பினால் தந்தருளானென்று சொன்னால் அந்த வார்த்தை பொருந்துவதோ
    என்றுசொல்ல அன்னவாகனனான இறைவன் விதனப்பட்டு ஐயொவையோ அனேகங் காலம்
    போயிருக்கையிலு மிவனாசை ஒழியவில்லை யென்றார்.-எ-று (3-58)

    நொந்தபங்கயனைநோக்கி நுடங்குடலளவேயன்றோ
    வந்தமில்காலஞ்சேய்த்தன் றதுவுமென்றயரக்கண்டு
    மிந்தநீயிறந்தாற்பேறிங் கென்னெனவனந்தனின்றென்
    சிந்தையிங்கிதுவாச்செத்துந் திருநடங்காண்பேனென்றான்.

    இ-ள் இப்படி விதனப்பட்ட பிர்மாவைப்பார்த்துச் சேடன் என்னுடைய சரீரமுள்ள மட்டுமல்லவோ
    நீர் முடிவில்லாத காலமென்றது தூரமன்று அந்தச்சரீரமு மொழியக்கண்டு இப்படிக்கொத்த
    நீயிறந்தாலெந்த வுடலிலே யிங்கே நிருத்தங் காண்பாயென்ன சேடனானவனிப்போது
    என்னுடைய சித்தம் இந்த ஆநந்த நிருத்தத்திலே யாதலாலச் சரீரம் விட்டாலும் இந்தக்
    கருத்தே வித்தாக மற்றொரு சரீரமெடுத்துங் காண்பேனென்றான்-எ-று (3-59)

    ஆங்கவனுறுதிகேளா வன்னமேயானாநல்கித்
    தீங்கில்பங்கயனேமுன்னைத் தேவர்கண்மலர்கள்சிந்த
    வோங்கிருங்கணங்கள்சூழ வொண்ணுதற்றிலகவல்லிப்
    பூங்குழலுமையாள்பாகம் புரந்தரனாயிருந்தான்.

    இ-ள் சேடனுடைய அலைவற்ற திடவார்த்தையைக் கேட்டு அன்னத்தை இடபமாக்கி
    பாசாதீதனாயுள்ள பிர்மாவே அரிபிரமாதிகள் புட்பவருஷம் வருஷிக்கவும் தேவர்களுக்கு
    மேலான ஏகாதசவுருர்திர கணங்கள் சூழவும் நல்ல நெற்றித் திலகத்தையுடைய ஒப்பற்ற
    வல்லிசாதக் கொம்பு போன்று புட்பகேசி யென்கிற திருநாமத்தையுடைய உமையவளை
    வாம பாகத்திலே வைத்தருளி ஸ்ரீகண்டபர மேசுவரனாகி யெழுந்தருளியிருந்தார் -எ-று (3-60)

    கண்ட போதனந்தனஞ்சிக் கரசரணாதிகம்பித்
    தண்டனேபோற்றியாண்டவமலனேபோற்றிதிங்கட்
    டுண்டனேபோற்றிநாயேன் சொன்னவைபொறுப்பாய்போற்றி
    கொண்டனேர்கண்டாபோற்றி கூத்தனேபோற்றிபோற்றி.

    இ-ள் பிரமசொரூபத்தைச் சிவசொரூபமாகக் கண்ட போதுசேடன் பயப்பட்டுக் கரசரணாகதி
    அவயவங் கண்டுங்கி நின்று பகிரண்ட கர்த்தாவே யிரட்சி பெத்த முத்திகளிலெனக்குப்
    பிரணனாய நின்று ஆண்டுகொண்ட நிமலனே யிரட்சி அர்த்த சந்திரனைச் சடா
    மகுடத்திலே தரித்த சிவனே யிரட்சி நாயேன் புத்திபூர்வமாகச் சொன்ன பிரதியுத்தரங்களைப்
    பொறுத் தருளுவானே யிரட்சி காளமேகத்துக் கொத்த கண்டத்தை யுடையவனே யிரட்சி
    ஆடிய கூத்தனே யிரட்சி யிரட்சி-எ-று (3-61)

    ஆண்டிடவேண்டிவந்தவமலனேபோற்றியென்று
    மாண்டகுமனங்கரைந்துமண்மிசைவீழ்ந்திறைஞ்ச
    நீண்டசெஞ்சடையானானைநோசெலவுகைத்தணைத்துக்
    காண்டகுகருணைநல்கிக்கைத்தலமுடிமேல்வைத்து.

    இ-ள் எனையாட் கொண்டருள நினைத்தருளி யித்தனைதூரம் எழுந்தருளின சுத்தனே
    யிரட்சியென்று திட சித்தம் நீராளமாயுருகிப் பூமியிலே விழுந்திறைஞ்சின வளவில்
    நீளிய செஞ்சடையோன் இடபத்தைச் சேடனுக் கெதிரே செல்ல வுகைத்தருளி
    அதன்பன் அவனை யணைத்தருளிக் காணத்தக்க பாவனா தீட்சை பண்ணி யிவனுடைய
    தலைமேலே ஸ்ரீயத்தம் வைத்து-எ-று

    காண்டகு கருணை நல்கிக் கைத்தல முடிமேல் வைத்து என்பது பாவனா தீட்சையும்
    பரிச தீட்சையுமெனக் கொள்க (3-62)

    இப்படித்தங்கள்செய்தாலன்றிநம்மினியகூத்து
    மெய்ப்படத்தெரியாதன்று விளங்கிடக்கடவதுன்ற
    னெய்ப்புறுதுயரந்தீர்கவெனவுரைத்தெம்மையுண்மை
    செப்புதுமுணர்கவென்றுகூறினான்றேவதேவன்.

    இ-ள் இவ்வண்ணந் திடமான தபசுகள்செய்தாலொழிய நம்முடைய ஆநந்த நிருத்தம்
    சத்தியமாகத் தெரியாது அந்நாள் வெளிப்படத்தோன்றக் கடவது தபசுசெய்து இளைத்த
    உன்னுடைய விதனத்தைத் தீர்வாயாகவென்று அருளிச்செய்து இனி நம்முடைய சத்தியத்தைச்
    சொல்லுவோம் அறிவாயாகவென்று தேவர்கள் தேவரருளிச் செய்தார் -எ-று

    இதில் அன்று என்னுஞ் சுட்டு வருங்காலச் சுட்டெனக்கொள்க (3-63)

    வையகமாயையின்கண்வினைவழிவருங்கடாதி
    செய்பவனொழியத்தோன்றாச்சீலத்தவுயிர்கள்சேர்தற்
    கெவ்வகையுணர்வுண்டெனனிலிலங்குமைந்தொழிலியாவு
    முய்வகையாலியற்றற்கியாமுளோமெனவுரைத்து.

    இ-ள் நாதாதி பிரிதிவி யந்த மானதத்துவமெல்லாஞ் சுத்தமாயை அசுத்தமாயை என்னும்
    இரண்டு காரணத்திலும் ஆன்மாவின் கனமசீவன மேதுவாகத் தோன்றும், அஃதெங்ஙனமெனில்
    குடஞ்-சால்-கரக முதலானவை நிமித்த காரணமான குலாலனை யொழிந்து உண்டாவன வல்லவென்கிற
    சீலத்தை ஒக்கும், கிஞ்சிக்கினனான ஆன்மா செடத்துவங்களைப் பொருந்திப் புசிக்க அறிவெப்டி
    யுண்டாமெனில் விளங்கிய பஞ்ச கிருத்திய பேதமெல்லாங் கன்மசாமியம் வரும்படி செய்தற்கு
    அநாதியே பிராணனாய நின்று நாம் நடத்து வோமென் றருளிச்செய்து - எ-று (3-64)

    சகளநிடகளமெமக்குத்தஞ்சமாமேனியாநீ
    யுகளமுமுணரிறசத்தியுபாதானமாகப்பாச
    நிகளமதகற்றவன்பாநோநிகழுருவமொன்றொன்
    றகளமாய்ஞானமேயாயகண்டமாயமாந்ததன்றே.

    இ-ள் சகளநிட்களமும் நமக்குப் பரிக்கிரக ரூபமுஞ் சைவதந்திர ரூபமு மாயிருக்கும் இந்த
    இரண்டு ரூபங்களையும் நீயின்று விசாரிக்கில் அசுத்தமாயை சுத்தமாயைஎன்னு மிகைவளை
    யுபாதானமாகக் கொண்டு பாசவிலங்கை முறிக்கும்படிக்குச் சகலர் பிரளயாகலரிவர்களுடைய
    கனம சாமியத்திலே யிவர்களைப் போலத் தூலசூக்குமமாய் வந்து சத்திநிபாதம் பண்ணிப்
    பாசச்சேதம் பண்ணிச் சுத்த கேவலத்திலே கூட்டுகிற கிரியா சத்திய திட்டானமானரூபமொன்ற
    மற்றொன்று விஞ்ஞான கலரிற் பக்குவரில பரமுத்தறகு, நிராதிகாரமா யிரட்சிக்குமிடத்தில்
    கலாதீதமு மாய் ஞானமுமாய்க் கண்டிக்கப்படாத ஞாகும் அபரமுத்தற்கு ரட்சிக்குமிடத்துச்
    சாதி காரணரூபமாயிருக்கும்- எ-று. (3-65)

    இதற்குப்பிரமாணம் சிவம் சத்தி நாதம் விந்து என்கிற பிரமாணத்தையுங் கண்டுகொள்க.
    சகளநிட்களம் நமக்குத் தஞ்சமாமேனியென்பதற்குச் சிவசத்தி யென்பாருமுளர், கிருத்தியத்துக்குச்
    சுத்தமாயை அசுத்தமாயையை யதிட்டிக்கும் தொழியத்தான் செய்யாதாதலான் மறுக்கப்பட்டது. (3-65)

    இருவகையிவைகடந்தவியல்புநம்மொளியாஞான
    வுருவமாநந்தமானவுயிரியாம்பெயரெமக்குப்
    பரபதம்பரமஞானம்பராற்பரமிலதுகாத்த
    றிருமலியிச்சைசெய்திதிகழ்நடமாகுமன்றே.

    இ-ள் முன்சொல்லப்பட்ட சகளம் நாலுக்கும் நிட்களம் நாலுக்குமப் பாலாகி நம்முடைய
    பிரகாசமான சுபாவசத்தியே நமக்குவடிவு இதற்கு ஞேயமான பிராணன்நாம் எமக்குப்
    பரபதம் பரமஞானம் பராற்பரமென்றுபெயர் சங்காரம் இரட்சை சிருட்டி திரோபவம்
    அநுக்கிரகம் என்கிற பஞ்சகிருத்தியம் நம்முடைய கூத்து.-எ-று (3-66)

    ஆரணமனைத்துநாநின்றாடுதுமென்றுபோற்றுங்
    காரணங்காலந்திக்குக்கருத்திடங்காணமாட்டா
    சீரணிதேவதாருவுனத்திடைத்தெரியநின்று
    நாரணன்முதலோர்காணநாடகநடித்தஞான்று.

    இ-ள் அநந்தமான வேதங்களும் அநவரத தாண்டவம் நாம் பண்ணுவோமென்று துதியாநிற்கும்
    இன்ன காரணத்தினாலே யின்றும் இன்ன காலத்திலேயென்றும் இன்ன திக்கிலேயென்றும்
    இன்ன விடத்திலேயென்றும் அறியமாட்டா அழகு விளங்கின தேவாரு வனத்தினடுவே
    தெரியநின்று நாரணன் முதலோர் காண நிருத்தஞ் செய்தநாள்-எ-று (3-67)

    அன்றவருனம்பொறாமையலைந்தமையறிந்துநாமும்
    வென்றிகொண்டங்கணொய்தின்விட்டனமுனக்குமின்று
    நின்றிடமிதுவாய்க்காட்டுநிலயமன்றதுபொறுக்கு
    மன்றுளதென்றானிந்தவையகம்வாழ்வதாக.

    இ-ள் அந்நாட்பெரிய தேவதாருவனம் பூமிக்கு மத்தியமல்லாத படியினாலே அசைந்த
    படியைக்கண்டு நாமும் வெற்றி யுடைத்தான நடங்கள் சிறிது பொழுதிற் றீர்ந்து விட்டோம்
    உனக்குமிப்போது இவ்விடத்திலே நின்று தெரிசிப்பிக்குங் கூத்தன்று சத்தியமான ஆநந்த
    நிருத்தத்துக்கு அதிட்டானமான ஞானசபை யொன்றுண்டென்றருளிச் செய்தார் இந்த
    வையகம் வாழ்வதாக. (3-68)

    அனந்தனுந்தொழுதுபோற்றியடியனேனுய்யத்தேவ
    ரினந்தருமறைகள்காணாதிலகுமன்றுலகிலுண்டாய்
    நினந்தமிலருளாற்காட்டுநினைவுமுண்டாகிநீயே
    வனந்தனில்வந்தாயென்றால்வாழ்ந்தனனன்றோவென்றான்.

    இ-ள் சேடனும் வணங்கித் துதித்து யான் பிறவிக்கடலிலே யாழாமற் கரையேறிப்
    பிழைக்க அரிபிரமாதிகள் வேதங்கள் காண்பரிதாய்ப் பிரத்தியட்சம் அநுமானம்
    ஆகமமென்கிற பிரமாணங்களுக்கும் அப்பாலாய் எப்போதும் எல்லாப் பதார்த்தங்களிலும்
    விளங்கா நிற்கும் ஞானசபை இவ்வுலகத்திலே ஓரிடத்திலே யுண்டாய் தேவரீருடைய
    ஆதியந்தமில்லாத பூரண ஞானத்தினாலே காட்ட வேண்டுமென்கிற சுட்டறிவுமுண்டாகிச்
    சர்வ வியாபியாயிருக்கிற தேவரீரே ஏகதேசருமாய்ப் போக்குவரவு முடையருமாய்
    அத்தில்லைவனத்தில் வந்தீராகில் கிருதார்த்தனானேன் அன்றோவென்றான்- எ-று. (3-69)

    வலங்கைமான் மழுவோன் போற்றும் வாளர வரசை நோக்கி
    யலைந்திடும் பிண்ட மண்ட மவைசம மாத லாலே
    யிலங்கைநே ரிடைபோ மற்றை யிலங்குபிங் கலையா நாடி
    நலங்கிள ரிமய நேர்போ நடுவுபோஞ் சுழுனை நாடி.

    இ-ள். வெற்றி பொருந்தின ஸ்ரீயத்தங்களிலே மானுமழுவுந்தரித்த பரமேசுரர்-புகழ்ந்து
    வினவுஞ் சேடனைப் பார்த்து தாபரமாயிரக்கிற அண்ட சிருட்டியும் சங்கமமான சரீரசிருட்டியுமொக்கு
    மாதலாலே சரீரத்தில் இடைநாடி யிடத்திலும் பிங்கலை நாடி வலத்திலுஞ் சுழுமுனைநாடி
    நடுவிலும் போமாறுபோல இந்தப்பரதகண்டத்தில் இடைநாடி யிலங்கைக்கு நேரேபோம்
    பிங்கலைநாடி நன்றாக வுயர்ந்த இமய பருவதத்துக்கு நேரேபோம் இந்த இரண்டு
    நாடிக்குநடுவே போஞ்சுழு முனைநாடி - எ-று. (3-70)

    நாடரு நடுவி னாடி நலங்கிளர் தில்லை நேர்போய்க்
    கூடுமங் கதனின் மூலக் குறியுள ததற்குத் தென்னர்
    மாடுறு மறைகள் காணா மன்னுமம் பலமொன் றுண்டங்
    காடுது மென்று மென்றா னென்னையா ளுடைய வையன்.

    இ-ள் தாரணாதிகளாசை கூடாதவர்களுக்கு நாடுதற்கரிய சுழுமுனைநாடி நன்மை மிகுந்த
    தில்லைவனத்திற் செவ்வையே போய்க்கூடும் அந்தப் பதியில் ஸ்ரீமூலத்தானமுடைய
    தம்பிரானார் சுயம்புவான குறிகண்டு அந்தச் சிவலிங்கத்துக்குத் தெற்காக நாலு திக்கிலுஞ்
    சூழ்ந்து பொருந்தின வேதங்களுக் கெட்டாத நிலை பெற்ற அம்பலமொன்றுண்டு
    அவ்விடத்திலே அநவரத தாண்டவஞ் செய்வோமென்றார் என்னையாளுடைய
    ஐயர்-எ-று (3-71)

    மற்றது சிதம்ப ரத்த வாய்மையான் மாயா நீர்மைப்
    பற்றுட னழியா தென்றும் பயின்றுள துயிர்க ளெண்ணி
    னற்றவஞ் செய்தா னீடு நாடரு ஞான நாட்டம்
    பெற்றவர் காண்பர் காணப் பெறாதவர் பிறப்ப ரன்றே.

    இ-ள். முன்சொன்ன அம்பலஞ் சத்தியமான ஞானாகாச மாதலால் நிவிர்த்தியாதி
    பஞ்சகலா சூநியம் பிறந்த மகாசங்கார காலத்தினுமழியாது ஆதியந்த சூநியமா யெக்காலமும்
    பொருந்தியுள்ளது சுத்தாத்துமாக்க ளெண்ணிறந்த சிவபுண்ணியத்தைச் செய்தால் முன்செய்த
    சிவ புண்ணியத்தினாலே கன்மசாமியம் பிறந்த அளவில் ஆசாரியனாலே சத்தி நிபாதமு
    மலபாகமு முண்டாகிப் பாசச்சேதம் பண்ணி யொழியாத ஞானக்கண்ணைப் பெற்றவரே
    அரிபிரமாதிகள் நாடுதற்கரிதான சிதம்பரத்தைக் காண்பார்கள் இப்படிக்காண ஞானதிருட்டி
    பெறாதவர் எண்பத்து நான்கு நூறாயிரமச்சிலும் பிறந்துழல்வர்.

    மாயா நீர்மைப் பற்றென்றது மந்திரபதவன்ன புவனத்துவ கலைகள். (3-72)

    நீயினிக்காளவாயுநுலவெரிகதிரார்கண்ணு
    மாயிரஞ்சிரமுங்கண்டாலஞ்சிடுமகிலமுன்னே
    தூயவத்திரியுந்தாரந்துலங்கநசூயைதானுஞ்
    சேயெனநின்னைவேண்டித்திருந்தருந்தவம்புரிந்தார்.

    இ-ள் நீயினி யோருபாயஞ் சொல்லக்கேள் நஞ்சுநிறைந்த பேழ் வாய்களும் சோமசூரியாக்கினி
    பிரகாசங்களிலும் மிகுந்த பிரகாசத்தையுடைய கண்களும் ஆயிரம்பணா மவுலிகளுமாயிருக்கக்
    கண்டால் உலகப் பிராணிகள் மிகப் பயப்படுவார்கள் நெடுநாளைக்கு முன்னே ஒருஇதியாசமுண்டு
    அஃதெங்ஙனமெனில் பரிசுத்தனான அத்திரியென்கிற ஓரிருடியும் அநசூயை யென்கிற பத்தினியும்
    பிள்ளையில்லாமல் தங்களுக்கு உன்னைப் பிள்ளையாகப் பெற வேண்டுமென்று விஷ்ணுவை
    நோக்கித் தவசு செய்தார்கள்- எ-று. (3-73)

    அரியவர்க்குன்னையீந்தானன்றுநீபிறத்தலஞ்சி
    யிருதுவாய்ப்பநிதையாய்வந்தேற்றவஞ்சலிப்பாலெய்தி
    மருவுமைந்தலையோர்பாலமாசுணமாகக்கண்டு
    பரிவினாற்பயத்தானீப்பப்பதஞ்சலியானபண்பால்.

    இ-ள் விஷ்ணு உன்னை அவர்களுக்குப் புத்திரனாகக் கொடுத்தான் அப்போது நீ சனனமாகப்
    பயப்பட்டு ருதுவாய் ஸ்நானஞ்சிய்து பரிசுத்தையாய்க் கரையிலேவந்தேற்ற கையிலே வந்து நீ
    ஐந்துதலை பொருந்தின சிறுபாம்பாகக் கண்டு பரிவினாலும் பயத்தினாலுங் கைவிடப் பாதத்திலே
    விழுகையாலே பதஞ்சலியென்று பண்புபற்றிய பெயருனக்குண்டாதலால்- எ-று. (3-74)

    ஆங்கதுவாகியிந்தவனந்தனாநினைவினோடும்
    பாங்கினானீங்கலாகாப்பதஞ்சலியென்னுநாமந்
    தாங்கிநீநாகலோகந்தகுவழிசார்கநாப்ப
    ணோங்கலொன்றுளதுதென்பாலுயாபிலவழியுமுண்டால.

    இ-ள் அந்தவுடலாகி இந்தச் சேஷபுத்தியுடனே சற்குணம் விடப்படாத பதஞ்சலியென்கிற
    நாமத்தைத் தரித்து நீ நாகலோகத்துக்குப் பொருந்தின வழியே போகக் கடவை
    நரகலோகத்துக்கு நடுவே யொருமலை யுண்டு அதற்குத் தென்புறமாக வுயர்ந்த
    பெலத்து வாரமுண்டு-எ-று (3-75)

    திடமதன்முடிவுதில்லைத்திகழ்வனமாகும்வாய்தல்
    விடவடபாலிலாலமென்னிழறன்னிலந்தத்
    தடவரைக்கொழுந்துமூலத்தானமாங்குறியாயிந்தப
    புடவியிலமராபோற்றும்பொற்பமரற்புதத்த.

    இ-ள்.சத்தியமாக அந்த பிலத்துவாரத்தின் முடிவு விளங்குந் தில்லைக் காடாயிருக்கும்
    அந்தபெலத்து வாரத்தை நீங்கின அளவில் வடக்காக ஆல மரத்தின் குளிர்ந்தநிழலில் நாம்
    உனக்கு முன்னே சொன்ன பெரிய மலையின் கொழுந்து மூலத்தான லிங்க மூர்த்தியாய்
    இப்பூமியில் தேவர்கள் தொழும்படியான பொலிவுள்ள அற்புதத்தையு‌டையது.- எ-று. (3-76)

    பூசைய‌ங்கியற்றிக்கூத்தும்புந்திசெய்தரும்புலிககா
    லாசிலாமுனியிருந்தாவ‌னுட‌ன‌ம‌ர்க‌நாமு
    மோசைகொள்பூசம்பொன்னோடுடுறுதின‌ம்பொருந்துமுச்சி
    தேசுறுந‌ட‌நீர்காண‌ச்செய்துமென்ற‌ருளிச்செய்தான்.

    இ-ள். அவ்விட‌த்திலே ந‌ம்முடைய நிருத்த‌ங்காண வேண்டுமென்று ம‌ன‌சார வேண்டிக்கொண்டு
    பூசைசெய்து அரிய வியாக்கிர‌பாத‌னென்கிற சுத்த ருக்ஷி யிருக்கிறான் அவ‌னுட‌னே நீயும்
    போய்க் கூடுவாயாக நாம் பிர‌சித்த‌மான தைப்பூச‌த்தில் வியாழ‌க்கிழ‌மையுட‌னே கூடின
    சித்த யோக‌த்தில் ம‌த்தியான கால‌த்திலே அவ்விட‌த்திலே பிர‌காச‌மான ஆந‌ந்த
    நிருத்த‌த்தை நீங்க‌ள் காண‌ப் ப‌ண்ணுவோ மென்ற‌‌ருளிச் செய்தார்.-ஏ-று- (3-77)

    திருவ‌ருள் பெற்றும‌ற்றைத்திகழன‌‌ந்த‌னும்விழுந்து
    ப‌ரிவொடுப‌ணிந்தெழுந்துப‌ர‌வ‌ச‌னாகிநிற்பப்
    புரிகுழ‌லுமையாளோடும்பூத‌முங்கணமும்போற்ற
    விருவிசும்ப‌த‌னில‌விண்ணோரிறைய‌வ‌னுற‌ம‌றைந்தான்.

    இ-ள். அநுக்கிர‌க‌ம் பெற்ற‌‌த‌னாலே விளங்கின சேட‌னும் பூமியிலே விழுந்து ப‌த்தியுட‌னே
    ந‌ம‌ஸ்க‌ரித்து எழுந்து பரவசனாகி நிற்ப நெறித்த கூந்த‌லினையுடைய பார்வ‌தியாரோடு
    பூத‌ங்க‌ளுங் கண நாத‌ர்க‌ளும் போற்ற பெரிய ஆகாய‌த்துக்கு ந‌டுவே தேவ‌தேவ‌னந்தர‌த்தான‌ம்
    ப‌ண்ணினா‌ர்-எ-று.

    இதிற் பெரிய விசும்பென்றது நாலு பூதங்களுக்கும் இடங்கொடுத்து நிற்கையாலெனக் கொள்க. (3-78)

    அண்ண‌லார்ம‌றைந்த‌போத‌ங்காசைநேராசையோடு
    ம‌ண்ணிலேவீழ்ந்திறை‌ஞ்சிசிவான‌வ‌ன‌ருளால‌ந்தத
    துண்ணெனுமுருவ‌நீங்கித்தொழுப‌த‌ஞ்ச‌லியாமேனித்
    திண்ண‌மாரிலிங்க‌மாக‌ச்சில‌ப‌க‌ல்சிந்தைசெய்தான்.

    இ-ள்.அவ்விட‌த்தில் ப‌ர‌மேஸ்வ‌ர‌ர் ம‌றைந்த அள‌வில் அத்திக்கை நோக்கி அன்புட‌ன்
    பூத‌ல‌த்திலே விழுந்து பணிந்து த‌ம்பிரானார் திருவ‌ருளினாலே க‌ண்டார் ப‌ய‌ப்ப‌டுகிற
    சேட‌னுருவ‌ம் போய் க‌ண்ட‌வ‌ர்க‌ள் ந‌ம‌ஸ்க‌ரிக்கும் ப‌த‌ஞ்ச‌லி ரூப‌ம் பெற்றுச் சில கால‌ம்
    ப‌ர‌மேஸ்வ‌ர‌ரைத் தியான‌ஞ் செய்தார் - எ-று. (3-79)

    வேட்டுவ‌ற்குறித்த‌ப‌ச்சைமென்புழுப்போல‌நாத‌ன்
    காட்டிய‌மேனிகொண்டுக‌ண்ட‌துதொழுதுப‌ண்டை
    நாட்டெதி ரணைய வண்ண னயந்தவர் கேட்டு நாக
    ரீட்டமுந் தலைவ ரானா ரியாவரு மெதிர்கொண் டார்கள்.

    இ-ள். வேட்டுவனாகிய குளவியைக் குறித்திருந்த பச்சைப் புழுவானது குளவியின்மேனி
    கொண்டாற் போலப் பதஞ்சலி வேடத்தை நினைத்திருந்து தம்பிரானார் திருவுள்ளத்தினாலே
    கற்பித்த அந்த வேடத்தைக் கொண்டு தனக்குப் பதஞ்சலி வேஷமாகக் கண்டு இந்த சரீரத்தைக்
    கூட்டின அருளைத் தொழுது பழைய நாகலோகத்துக்குச் சமீபமாகச் சென்று பொருந்த
    நம்முடையிராசர் வந்தாரென்ற பிரிய வார்த்தையைக்கேட்டு வாசுகி தக்கன் கார்க்கோடன்
    பதுமன் மகாபதுமன் சங்கபாலன் குளிகன் அநந்தன் முதலான நாக ராசாக்களுமெதிர்
    கொண்டார்கள்--- எ-று.(3-80)

    மண்டிவந் தெதிர்கொண் டார்க்கு மாசுண வரசர் சூழ
    வண்டர்தம் பெருமா னல்கு மருவரை யமலன் மேனி
    கண்டுவந் திறைஞ்ச நின்ற கார்க்கோடன் முதலோர் போற்றி
    விண்டுநீ பணிவா னென்கொல் வேண்டிய தென்று ரைத்தார்

    இ-ள். நெருங்கிவந் தெதிர்கொண்டு முழங்கப் பிரிய வார்த்தைகள் சொல்லுஞ் சர்ப்ப
    ராசாக்கள் சூழவந்து தேவதேவனருளிச் செய்த பெரிய மலையாக மூலத்தானமுடைய
    தம்பிரானார் திருமேனியைக் கண்டு பிரியத்துடனே நமஸ்கரிக்கச் சூழநின்ற சர்ப்ப
    ராசாக்களில் கார்க்கோடன் முதலான இராசாக்கள் இந்த மலையை ஒருபொருளாக
    எண்ணி நீர் விரும்ப வேண்டிய காரணம் என்ன என்றார்கள்- எ-று. (3-81)

    காதலி னோக்கி யுள்ள கைப்பொருள் கண்டோர் யார்க்கும்
    பாதிடு முரவோர் போலிப் பருப்பதம் பாத லக்கீழ்ப்
    போதமார் தான மெல்லை தில்லையாய்ப் பொருந்தி வாழு
    நாதனார் காணு மென்று கூறினா னாக ராசன்

    இ-ள். தங்களிடத்துள்ள பொருள்களையெல்லாம் மிகுந்த ஆசையுடனே கண்டவர்
    எல்லார்க்கும் வரையாமற் பகுந்து கொடுக்கும் பெரியாரைப் போல இந்தப்பர்வதம்
    பாதாளம் ஏழுக்கும் கீழாகச் சொல்லப்பட்ட சொற்பொருள் முடிந்த விடமதிட்டானம்
    முடிவுக்கு எல்லை சிதம்பரமாகப் பொருந்தி விளங்கும் நம்முடைய சுவாமிதான்
    காணுமென்று நாக இராசன் சொன்னான்.

    இதிற் பாதலக்கீழ் என்பதற்கு பாதாளமேழினுங்கீழ் சொற்கழிவு பாத மலரென்கிற
    பிரமாணத்தையும் கண்டுகொள்க. (3-82)

    அலைபணத் தலைவா யாமு னறிந்தவா கேட்டி யாயிற்
    றலைவனே மலையென் றெண்ணிச் சங்கித்து மிருந்து மிந்தப்
    பிலவழி கீழுற் றெல்லை பெற்றில மேலுஞ் சாலச்
    செலவரி தென்று மீண்டுந் தெளிவில மென்று செப்பி

    இ-ள். அலைபோன்ற படத்தையுடைய அரசனே யாங்களறிந்த முறைமையை
    நீ கேட்பாயாகில் இந்தச் சுவாமியே இந்த மலையென்றெண்ணிச் சந்தேகித் திருப்போம்
    பின்னையுமிது இன்னதென்றறியவென்று இந்த பிலத்து வாரத்திற் கீழ்நோக்கிப்போகிற
    வளைவழியே சென்றும் முடிந்திடங் காணப் பெற்றோமில்லை யிந்த வளைவழியே
    மேனோக்கிப் போகியும் போகப் படாமல் மீண்டு வருவோமாதலாலிது எங்களுக்குத்
    தெரியப் போகாதென்று சொல்லி - எ-று. (3-83)

    அத்தகுவாய்மையாலேயவர்களாதரித்துப்போற்றிப்
    பத்தியாலிறைஞ்சக்கண்டுபதஞ்சலியவரைநீங்கிச்
    சுத்தமார்பிலம்வணங்கித்துணைவனேதுணையாவுன்னி
    யித்தலந்துயரநீங்கவேறுவானேறலுற்றான்.

    இ-ள். அவர்களப்படிச் சொன்னதினாலே யிந்தமலையைப் பெரிய சத்தியமான சிவரூபமென்று
    அறிந்து சர்ப்ப ராசாக்களெல்லாரும் ஆசையும் பத்தியும் பொருந்தி நமஸ்கரிக்கக் கற்பித்துப்
    பதஞ்சலி மகாருஷி சர்ப்ப ராசாக்களை நீங்கிச் சுத்தமான பிலத்துவாரத்தை நமஸ்கரித்து
    உயிர்த்துணைவனை வழித் துணைவனாகத் தியானித்து இந்த உலகத்தில் ஆன்மாக்கள்
    துக்கமான நரகலோகத்தினின்று சிவலோகத்துக் கேறும்படி நரகலோகத்தினின்று
    பூலோகத்தில் வர பிலத்துவார வழியாய் ஏறினார்- - எ-று. (3-84)

    அரவரையாடவாடுமண்ணலஞ்செழுத்துங்கண்ணாக்
    காவிலாவழியாலெண்ணில்காலங்கள்கழியவேறிக்
    குரைகடன்மணியுமுத்தும்பவளமுங்கூலமுங்கொண்டு
    திரைநிரைவணங்குந்தில்லைத்திருவெல்லைசேரவந்தான்.

    இ-ள். திருவரையிற் பாம்பாடும்படி நிருத்தஞ்செய்யும் பரமேசுரன் பஞ்சாக்ஷரமே கண்ணாக
    வெளியான வழியா லெண்ணிறந்த காலங்கழிய ஏறி ஆரவாரஞ் செய்யுங் கடலானது
    மாணிக்கமும் முத்தும் பவளமும் மரக்கலங்களும் கொண்டுவந்து காணிக்கையிட்டுத் திரை
    நிரையாலே வணங்குந் தில்லைத் திருவெல்லைக்குச் சமீபமாக வந்தார் - எ-று. (3-85)

    உருகிடவுள்ளங்கண்ணீரோவாமலொழுகவுச்சிக்
    கரகமலங்கள்கூம்பக்கணபணமணிவிளங்கத்
    திருவருள்வளரஞாலஞ்சிவமயமாகமாயா
    விருள்கெடஞானபாநுவெனநிலமேலெழுந்தான்.

    இ-ள். பூபாரந்தாங்குகிறோமென்கிற அகங்காரத்தாலும் பதினாலு லோகங்களையுஞ்
    சிருட்டித்த பிரமாவையுந் திருவுந்தியிற் றோற்றுவித்த விஷ்ணுவைத் தாங்குகிறோமென்கிற
    அகங்காரத்தாலும் சிக்கென்று வச்சிராகாரம் போன்றிருக்கின்ற அந்தகரணந் தேவதாருவனத்தில்
    நிருத்தம் விட்ணுவின் பக்கலிலே கேட்டு மெத்தென்று பின்பு கயிலாய பாரிசத்தில் ஶ்ரீகண்ட
    பரமேசுரன் தீக்கையினாலே நெகிழ்ந்துடைந்து பின்பு நாகலோகத்திற் சுயம்புலிங்க தரிசன
    காரணத்தினாலும் பெலத்து வாரத்திலுண்மையினாலுஞ் சத்திநிபாதம் உதித்தமையாலும்
    இதற்கு முன்காணாத வாச்சரியத்தைக் காண்கையினாலும் நீராளமாயுருக சிற்றூற்றில்
    பிரமப்பிரளயம் போலக்கரை புரண்டு கண்களாலே யொழியாத தாரைகொள்ள உச்சியிற்கு
    விந்த கராம்புயங்களிந்தத் தலத்தில் தாபர சங்கமாதிகள் சேரச் சிவமாகத் தோன்றுதலால்
    அநவரதமுங்குவிந்து செல்ல நெருங்கின பணாரத்தினங்கள் ஞானப் பிரகாசத்தினாலே
    விளங்க அநாதியே யாண வசத்தியைப் பிரேகரித்திடுந் தமோமயமாகிய திரோதனம்
    அருளாய்ப் பிரகாகிப்பிக்க இந்தப் பூலோகத்தில் ஆன்மாக்கள் சிவபத்திபெற ஒழியாத
    வாணவமொழிய இப்படியெழும் ஞான சூரியனைப்போலே அப்பெலத்து வாரத்திலே
    நின்று பூமியிலெழுந்தார். (3-86)

    எழுந்தருள்வனமிறைஞ்சியிருந்தவர்கண்டுகாணாச்
    செழுந்தவவுருவைநோக்கித்திருமுனிதிகைப்பத்திங்கட்
    கொழுந்தணிவேணியண்ணலருளினாற்கொழும்புலிக்கா
    லழுந்துமாதவனைநேர்சென்றாதரவதனாற்கண்டான்.

    இ-ள் எழுந்திருந்த மாத்திரத்தில் நிட்களமான தில்லை வனத்தை நமஸ்கரித்து
    இருந்தபடியைக் கண்டு இதற்குமுன் கண்டறியாத திவ்வியமானதபோ
    வேடத்தைப்பார்த்து வியாக்கிர பாதர் இவர் யாரோஎன்று திகைப்ப
    இளம்பிறையை வேணியிலே பொருந்தின சுவாமியருளிச் செய்தபடியே
    கொழுவிய புலிக்கால் பொருந்தின முனியின் எதிரேசென்று மிகுந்த ஆதரத்தினாலே
    பதஞ்சலி கண்டார் -எ-று (3-87)

    மங்கலவுருவாமேனிமாமுனியதிசயித்துச்
    செங்கைகளேந்திமேனித்திகழவுகண்டுவந்துசெல்வா
    வெங்குறைவாய்நீபோவதெவ்வளவேதுநாமஞ்
    சங்கைகள்கலவெல்லாஞ்சாற்றுகவென்றுசெப்ப.

    இ-ள் திவ்விய சரீரத்தையுடைய வியாக்கிரபாதமுனி மிகவும் ஆச்சரியப்பட்டு
    பதஞ்சலியினுடைய தேசசு மிகுந்த சரீரத்தைக்கண்டு இருகையுமே நதியுபசாரஞ்
    சொல்லி அருட்செல்வனே நீ யெங்கே யிருப்பாய் நீயெவ்விடங் குறித்துப் போகின்றாய்
    உனது பெயரேது என்னுடைய சந்தேகங்கெட இவைகளெல்லாம் வகுத்துச்
    சொல்வாயாகவென்று கேட்கச் சொல்லுவார்-எ-று (3-88)

    அடுபுலித்தாளோய்கேள்யானனந்தனாநந்தமான
    நடநெடுவனத்துளண்ணனயந்தவாநல்கியென்னை
    நெடியவனமளிகொள்ளாநீர்மையானீப்பநீங்கித்
    தடவரைமருங்கேயானுந்தவம்பலகாலஞ்சார

    இ-ள் பாசச்சேதம் பண்ணியுள்ள வியாக்கிரபாதரே கேட்பீராக நான் ஆதிசேஷன் உயர்ந்த
    தேவதாருவனத்திலே தம்பிரானானந்த நிருத்தம் பண்ணின பிரகாரத்தை விஷ்டுணு எனக்கு
    அநுக்கிரகித்து என்னாதரத்தைக்கண்டு என்மேலே விஷ்டுணு பள்ளி கொள்ளாமற்ற பசு
    பண்ணக் கற்பிக்க யானும் போய்ப் பெரிய கயிலாய பாரிசத்திலே நெடுங்காலந்த பசுபண்ண-
    எ-று. (3-89)

    வாசமாமலரோனாகி வாய்மைகளளந்துதானாந்
    தேசினிலணைந்துவந்தென் சிரமிசைக்கரமிருத்திப்
    பாசமதகலநாயேன் பதஞ்சலியாகநல்கி
    யாசிலாவுபதேசங்களளவிலாவகையளித்து.

    இ-ள். வாசனை பொருந்திய தாமரைப் பொகுட்டில் வீற்றிருக்கும் பிரமனாகி வந்து
    என்னுடைய சித்த சுத்தியறிந்து பின்னர் தம்முடைய திருமேனியைப் பொருந்தி எனக்கு
    நேரே இடபத்தையுகைத்தருளிப் பஞ்சபாச நீங்க என்தலையிற் சிவாஸ்தம் வைத்தருளி
    அடியேன் பதஞ்சலிரூபங் கொள்ளும்படி திருவுள்ளம் செய்தருளி குற்றமில்லாத உபதேசங்களினாலே
    யொன்றாலு மளவிடப்படாத தம்முடைய உண்மையு முணர்த்தி மேலும் ஒன்று அருளிச் செய்ததுங்
    கேட்பாயாக வென்றார்- எ-று. (3-90)

    வேண்டிநங்கூத்துக்காண வியாக்கிரபாதனென்னு
    மாண்டகுமுனியுந்தில்லைவனத்தின்னவனுநீயுந்
    தாண்டவங்காண்டிர்நாகத்தலத்துயர்பிலத்தாலேறி
    யாண்டிருவென்றானென்றானருமுனியயர்ந்துவீழ்ந்தான்.

    இ-ள் நம்முடைய ஆநந்த நிருத்தங் காணவேண்டி வியாக்கிர பாதனென்னும் பேரையுடைய பெரிய
    முனியும் தில்லைவனத்திலே யிருக்கிறான் அந்த முனியும் நீயுமாகக்கூடி நம்முடைய தாண்டவத்தைக்
    காணக் கடவீர் நாகலோக வழியாகச் சென்று பில வழியாலேயேறி அவ்விடத்திலே யிருவென்று
    திருவுளம் பற்றினாரென்ற மாத்திரத்திலே வியாக்கிர பாதமுனி பரவசராய் வீழ்ந்தார்--எ-று (3-91)

    அருள்புரிகருணைவெள்ளத்தழுத்தினானென்னையண்ண
    றிருவுளம்பற்றயான்முன்செய்தவமென்னோவின்றென்
    றுருகினான்கண்ணீர்வாரவுயர்பதஞ்சலிநீதந்த
    கரவிலாவருளாமென்றுகைகளாற்கட்டிக்கொண்டான்.

    இ-ள். தம்பிரானாரொளி பொருந்தின கருணை சாகரத்திலே என்னை யாழ்வித்தார் இவ்வாறு
    திருவுளம்பற்ற நான் முன்னேசெய்த சிவபுண்ணியமே தோவென்று பலகாலும் உரைத்து அருள்
    மேலிட்டுக் கண்ணீர் தாரைகொள்ள நின்றுருகினான் உருகி பெரிய பதஞ்சலியே நீ கொண்டுவந்து
    தந்த பிரிய வார்த்தைகள் மறைப்பில்லாத வருள்தானே யென்று வந்து கைகளினாலே கட்டிக்
    கொண்டார்-- எ-று. (3-92)

    திண்ணமார்சிறியோன்பெற்றசெல்வமாமென்னஞானக்
    கண்ணினாலமலன்கூத்துக்கண்டுளங்களித்தான்போன்றங்
    கெண்ணிலாவின்பமுற்றங்கிலங்குபொற்கயத்துமூழ்கப்
    பண்ணிநாண்மலரான்மூலப்பரமர்தாள்பணியவுய்த்தான்

    இ-ள். வலிமை பொருந்திய வறுமையடைந்தவன் செல்வம் பெற்ற தன்மை போலவும் ஞான
    திருஷ்டியினாலே சிவபெருமானுடய ஆநந்த நிருத்தங்கண்டு சித்தங்களித்தார் போலவும்
    எண்ணிலாதபர மாநந்தம் பொருந்தி அவ்விடத்தில் விளங்கும் புண்டரீகப் பொய்கையிலே
    மூழ்கப் பண்ணி நாட்பூவினாலே திருமூலத்தானமுடைய தம்பிரானார் ஸ்ரீபாதத்திலே
    நமஸ்கரிப்பித்தார் -- எ-று. (3-93)

    வலங்கொண்டுகுடபாற்றெய்வவாவியின்மூழ்குவித்து
    நலங்கிளர்தன்னையாண்டநாதனைவணங்கநல்கித்
    தலம்புணர்பன்னசாலைதகுவித்துச்சாகமூல
    பலங்களுமிலங்கப்பின்னாட்பரிந்தருள்விருந்தளித்தான்.

    இ-ள். பிரதக்ஷனமாக வந்துசென்று மேற்புறத்திற் றிவ்விய பொய்கையில் மூழ்குவித்துக்
    கிருபையின் மிகுதியினாலே தம்மையாண்ட திருப்புலீச்சுரமுடைய தம்பிரானாரையும் வணங்குவித்து
    அவ்விடத்திற் பொருந்தின பன்னசாலையிலே கொண்டுபோய் அன்று கழித்து மறுநாள் மிகுந்த பரிவுடனே
    சாகமூல பலாதிகளினாலே விருந்திட்டார்-- எ-று. (3-94)

    மனக்களிகூருநாளில்வனமதன்குடபாற்றெய்வப்
    புனற்றடங்கண்டுமூழ்கிப்புணர்குணகரைமேற்போற்றத்
    தனக்குமோர்நாயனாரைத்தாபித்துவணங்கித்தங்க
    வனித்தமில்சாலைவாவியதன்வடபாலமைத்தான்.

    இ-ள். இருவரும் அன்பினாலே களி கூர்ந்திருக்கும் நாளில் ஓர்நாள் அந்தப் புலீச்சுரத்துக்கு மேற்
    புறத்திற்போய்த் திவ்வியமாயிருக்கிற ஒரு பொய்கையைக் க‌ண்டு ஸ்நான‌ஞ் செய்து அந்த‌க்
    குள‌த்துக்குக் கீழ்கரையிலே தாம் வ‌ழிபட த‌ம‌க்கும் ஒரு சிவ‌லிங்க‌ப் பெரும‌னைத் தாபித்துப்
    பூசித்து இருக்க நித்த‌மான ச‌லிப்பில்லாத ப‌ன்ன‌சாலையைக் குள‌த்துக்கு வ‌ட‌க்கே க‌ட்டினார்
    ப‌த‌ஞ்ச‌லி ம‌காமுனி-- எ-று. (3-95)

    ஆங்கிட‌மாக‌நாளும‌ம‌ர்ந்த‌ன‌ந்தேச்சுர‌த்துந்
    தீங்கில்வ‌ன்புலீச்சுர‌த்துந்திக‌ழ்சீர்மூல‌த்தான‌த்து
    மோங்கிய‌நாத‌ன்பாத‌முற‌வுற‌வ‌ண‌ங்கியாட
    லீங்க‌ளித்த‌ருளுகென்ற‌ங்கிருவ‌ருமிருந்தார‌ன்றே.

    இ-ள். அந்த‌ப் ப‌ன்ன‌சாலையே இருப்பிட‌மாக‌ப் பொருந்தி நாள்தோறும் திருவ‌ன‌ந்தேச்சுர‌த்திலும்
    குற்றமில்லாத வ‌ள‌ப்ப‌ம்பொருந்திய திருப்புலீச்சுரத்திலும் விள‌ங்கும் ஸ்ரீமூல‌த்தான‌த்தும் விள‌ங்கிய
    த‌ம்பிரானார் திருவ‌டிக‌ளைப் ப‌ற்றிப் பொருந்த அருச்சித்து வ‌ண‌ங்கி ஆந‌ந்த நிருத்த‌ம் இவ்விட‌த்திலே
    த‌ந்த‌ருளும்என்று பூசாந்த‌த்திலே வேண்டிக்கொண்டு அந்த‌த் த‌ல‌த்திலே இருவ‌ரும் த‌ப‌சு ப‌ண்ணிக்
    கொண்டு இருந்தார்க‌ள்-- எ-று. (3-96)

    வெண்டிரையொலியார்தில்லைமிகுவனவிலங்கியாவும்
    பண்டைநம்புலியனன்றிப்பாம்பனும்வந்தானென்று
    திண்டிறற்களநிமிர்த்துச்செவிகளுஞ்சிலிர்த்தியேங்கி
    மண்டியகாலஞ்செல்லமருங்குறவணைந்தவன்றே.

    இ-ள். வெண்மையாகிய அலைகளயுடைய கடலோசை முழங்குந் தில்லை வனத்தில்நெருங்கின
    மிருகாதிகளெல்லாம் முன் நம்முடனே கூடித்திரிகிற புலியனுமன்றி இப்போது ஒரு பாம்பனும் வந்து
    இவனைக் கூடினான் அதேதோ வென்று பயப்பட்டுத் திண்ணிய திறலையுடைய கழுத்துயர வெறித்துப்
    பார்த்துச் செவிகளும் சிலிர்த்திப் பார்த்துப் பயப்பட்டு அகலநின்று நெடுங்காலஞ் சென்று பழகினபின்
    முன்போலவே கூடச் சஞ்சரித்தன-- எ-று. (3-97)

    நாடொறுமையந்தோறுநவநவமாகவந்து
    கூடினரநேகராகக்குழகனைவழிபட்டேத்தித்
    தாடலையுறப்பணிந்தோர்தழைநிழற்சார்ந்திருந்தென்
    பூடுருகிடுமாறண்ணலுரைத்தவாவிரித்தவாயில்.

    இ-ள். இருவினை ஒப்புஞ் ச‌த்திநி பாத‌முமுடைய ஆன்மாக்க‌ள் நாள் தோறும் கால‌ங்க‌ள் தோறும்
    புதுமை புதுமையாக வ‌ந்து அநேக‌ம் பேர் கூட்ட‌மாகித் தம்பிரானாரை அருச்சித்துத் தோத்திர‌ஞ்
    செய்து சீர்பாத‌ஞ் சென்னியிற் பொருந்த வ‌ண‌ங்கி ஒரு குளிர்ந்தமர நிழ‌லைப் பொருந்தியிருக்க
    என்புந்த‌சையும் நீராள மாம்படி தம்பிரானா ரருளிச்செய்த பிரகாரத்தைப் பத‌ஞ்சலி சொல்லிப்
    பாராட்டிக் கொண்டிருந்த அவதரத்திலே-- எ-று. (3-98)

    வந்தவர்சொல்லக்கேட்டமன்றுளதென்றவெல்லை
    சிந்தையாலிறைஞ்சிச்சென்றுசிரமுறப்பணிந்துகூத்துப்
    புந்தியால்வணங்கிமேனிபுளகமும்பொலியப்போந்தங்
    கிந்தவாறெண்ணில்காலமிருவருமேகுவித்தார்.

    இ-ள். வந்தமுனிவர்கள் ஒருஞானசபை இவ்விடத்திலுண்டென்று சொல்லக்கேட்டு அவ்வெல்லையைச்
    சித்தத்தினாலே நமஸ்கரித்து அவ்விடத்திலே போய்த் தலையாரவணங்கி ஆந‌ந்த நிருத்த‌தையும்
    புந்தியினாலே வ‌ண‌ங்கிப் பாவனா த‌ரிச‌ன‌த்தினாலே தேக‌ம் புள‌க‌த்துடனே பொலிய மீண்டு இப்படியே
    அவ்விரண்டு பேருடனும் இருந்து எண்ணிறந்த காலத்தைப் போக்கினார்கள். (3-99)

    பத‌ஞ்சலிச்சருக்கம் முற்றிற்று.
    ஆக திருவிருத்தம்--157.
    ------------------