MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    2. போற்றிப் பஃறொடை
    இயற்றியவர்: உமாபதி சிவம் (காலம் : கி.பி.1309)

    பூமன்னு நான்முகத்தோன் புத்தேளி ராங்கவர் கோன்
    மாமன்னு சோதி மணிமார்ப - னாமன்னும்
    வேதம்வே தாந்தாம் விளக்கஞ்செய் விந்துவுடன்
    நாதநா தாந்த நடுவேதம் - போதத்தால்
    ஆமளவுந் தேட அளவிறந்த வப்பாலைச்
    சேம வொளியெவருந் தேரும்வகை - மாமணிசூழ்
    மன்று ணிறைந்து பிறவி வழக்கறுக்க
    நின்ற நிருத்த நிலைபோற்றி - குன்றாத
    பல்லுயிர்வெவ் வேறு படைத்து மவைகாத்து
    மெல்லை யிளைப் பொழிய விட்டுவைத்துந் தொல்லையுறும்.

    அந்தமடி நடுவென் றெண்ண வளவிருந்து
    வந்த பெரிய வழிபோற்றி - முந்துற்ற
    நெல்லுக் குமிதவிடு நீடு செம்பிற் காளிதமுந்
    தொல்லைக் கடறோன்றத் தோன்றுவரு - மெல்லாம்
    ஒருபுடை யொப்பாய்த்தா னுள்ளவா றுண்டாய்
    அருவமா யெவ்வுயிரு மார்த்தே - யுருவுடைய
    மாமணியை யுள்ளடக்கு மாநாகம் வன்னிதனைத்
    தானடக்குங் காட்டத் தகுதியும் போன் - ஞானத்தின்
    கண்ணை மறைத்த கடிய தொழி லாணவத்தால்
    எண்ணஞ் செயன்மாண்ட வெவ்வுயிர்க்கு முண்ணாடிக்
    கட்புலனாற் காணார்தங் கைகொடுத்த கோலேபோற்

    பொற்புடைய மாயைப் புணர்ப்பின்கண் - முற்பால்
    தனுகரண மும்புவன முந்தந் தவற்றான்
    மனமுதலாவந்தவிகா ரத்தால் - வினையிரண்டுங்
    காட்டி யதனாற் பிறப்பாக்கிக் கைகொண்டு
    மீட்டறிவு காட்டும் வினைபோற்றி - நாட்டுகின்ற
    வெப்பிறப்பு முற்செ யிருவினையா நிச்சயித்துப்
    பொற்புடைய தந்தைதாய் போகத்துட் கர்ப்பமாய்ப்
    புல்லிற் பனிபோற் புகுந்திவலைக் குட்படுங்கால்
    எல்லைப் படாவுதரத் தீண்டியதீப் - பல்வகையா

    லங்கே கிடந்த வநாதியுயிர் தம்பசியால்
    எங்கேனுமாக வெடுக்குவென - வெங்கும்பிக்
    காயக் கருக்குழியிற் காத்திருந்துங் காமியத்துக்
    கேயக்கை, கான்முதலா யெவ்வுறுப்பு - மாசறவே
    செய்து திருத்திப்பின்பி யோகிருத்தி முன்புக்க
    வையவழி யேகொண் டணைகின்ற - பொய்யாத
    னல்லவமே போற்றியம் மாயக்கா றான்மறைப்ப
    நல்ல வறிவொழிந்து நன்குதீ - தொல்லையுறா
    வக்காலந் தன்னிற் பசியையறி வித்தழுவித்
    துக்காவி சொரத்தா யுண்ணடுங்கி மிக்கோங்குஞ்.

    சிந்தையுருக முலையுருகுந் தீஞ்சுவைப்பால்
    வந்துமடுப் பக்கண்டு வாழ்ந்திருப்பப் - பந்தித்த
    பாசப் பெருங்கயிற்றாற் பல்லுயிரும் பாலிக்க
    நேசத்தை வைத்த நெறிபோற்றி - பாசற்ற
    பாளைப் பசும்பதத்தும் பாலனா மப்பதத்து
    நாளுக்கு நாட்சகல ஞானத்து - மூள்வித்துக்
    கொண்டாள வாளக் கருவிகொடுத் தொக்க நின்று
    பண்டாரி யான படி போற்றி - தண்டாத
    புன்புலால் போர்த்த புழுக்குரம்பை மாமனையில்
    அன்புசேர் கின்றனகட் டைந்தாக்கி - முன்புள்ள

    உண்மை நிலைமை யொருகா லகலாது
    திண்மை மலத்தாற் சிறையாக்கிக் - கண்மறைத்து
    மூலவருங் கட்டிலுயிர் மூடமா யுட்கிடப்பக்
    கால நியதி யதுகாட்டி - மேலோங்கு
    முந்திவியன் கட்டிலுயிர் சேர்த்துக் கலைவித்தை
    யந்தவராக மவைமுன்பு - தந்த
    தொழிலறி விச்சை துணையாக மானி
    நெழிலுடைய முக்குணமுமெய்தி - மருளோடு
    மன்னு மிதயத்திற் சித்தத்தாற் கண்ட பொருள்
    இன்ன பொருளென் றியம்பவொண்ணா - வந்நிலை போய்க்

    கண்டவியன் கட்டிற் கருவிகளீ ரைந்தொழியக்
    கொண்டுநியமித்தற்றை நாட்கொடுப்பப் - பண்டை
    யிருவினையான் முன்புள்ள வின்பத்துன் பங்கள்
    மருவும்வகை யங்கே மருவி - யுருவுடனின்
    றோங்கு நுதலாய வோலக்க மண்டபத்திற்
    போங்கருவி யெல்லாம் புகுந்தீண்டி - நீங்காத
    முன்னை மலத்திருளுண் மூடா வகையகத்துள்
    துன்னுமிரு ணீக்குஞ் சுடரேபோ - லந்நிலையே
    சூக்கஞ் சுடருருவிற் பெய்து தொழிற்குரியர்
    ஆக்கிப் பணித்த வறம் போற்றி - வேட்கைமிகு

    முண்டிப் பொருட்டா லொருகா லவியாது
    மண்டியெரி யும்பெருந்தீ மாற்றுதற்குத் திண்டிறல் சேர்
    வல்லார்கள் வல்ல வகையாற் றொழில்புரிதல்
    எல்லா முடனே யொருங்கிசைந்து - செல்காலை
    முட்டாமற் செய்வினைக்கும் முற்செய்வினைக் குஞ் செலவு
    பட்டோ லை தீட்டும் படிபோற்றி - நட்டோ ங்கு
    மிந்நிலைமை மானுடருக் கேயன்றி யெண்ணிலா
    மன்னுயிர்க்கு மிந்த வழக்கேயாய் - முன்னுடைய
    நாணாள் வரையி லுடல்பிரித்து நல்வினைக்கண்
    வாணாளின் மாலா யயனாகி - நீணாகர்
    வானாடர் கோமுதலாய் வந்த பெரும்பதத்து
    நானா விதத்தா நலம் பெறுநாள் - தான்மாள
    வெற்றிக் கடுந்தூதர் வேகத் துடன் வந்து
    பற்றித்தம் வெங்குருவின் பாற்காட்ட விற்றைக்கும்

    இல்லையோ பாவி பிறவாமை யென்றெடுத்து
    நல்லதோ ரின்சொ னடுவாகச் - சொல்லியிவர்
    செய்திக்குத் தக்க செயலுறுத்து வீரென்று
    வெய்துற் றுரைக்க விடைகொண்டு - மையறருஞ்
    செக்கி னிடைத்திரித்துந் தீவாயி லிட்டெரித்துந்
    தக்கநெருப் புத்தூண் தழுவுவித்து - மிக்கோங்கு
    நாராசங் காய்ச்சிச் செவிமடுத்து நாவரிந்து
    மீராவுன் னூனைத்தின் நென்றடித்தும் - பேராமல்
    அங்காழ் நரகத் தழுத்துவித்தும் பின்னுந்தம்
    வெங்கோப மாறாத வேட்கையரா - யிங்கொருநாள்
    எண்ணிமுதற் காணாத வின்னற் கடுநரகம்
    பன்னொடுநாட் செல்லும் பணிகொண்டு - முன்னாடிக்
    கண்டு கடன்கழித்தல் காரியமா மென்றண்ணிக்
    கொண்டுவரு நோயின் குறிப்பறிவார் - மண்டெரியிற்
    காச்சிச் சுடவறுக்கக் கண்ணுரிக்க நன்னிதிய
    மீய்த்துத்தாய் தந்தைதம ரின்புறுதல் - வாய்த்த நெறி

    யோடியதே ரின்கீ ழுயிர்போன கன்றாலே
    நீடுபெரும் பாவமின்றே நீங்குமென - நாடித்தன்
    மைந்தனையு மூர்ந்தோன் வழக்கே வழக்காக
    நஞ்சனைய சிந்தை நமன்றூதர் - வெஞ்சினத்தால்
    அல்ல லுறுத்து மருநரகங் கண்டுநிற்க
    வல்ல கருணை மறம்போற்றி - பல்லுயிர்க்கும்
    இன்ன வகையா லிருவினைக்க ணின்றருத்தி
    முன்னைமுத லென்ன முதலில்லோ - நல்வினைக்கண்
    எல்லா வுலகு மெடுப்புண் டெடுப்புண்டு
    செல்காலம் பின்னரகஞ் சேராமே - நல்லநெறி
    யெய்துவதோர் காலந்தன் னன்பரைக்கண் டின்புறுதல்

    உய்யு நெறிசிறிதே யுண்டாக்கிப் - பையவே
    மட்டாய் மலராய் வருநாளின் முன்னைநாண்
    மொட்டா யுருவா முறைபோலக் - கிட்டியதோர்
    நல்ல பிறப்பிற் பிறப்பித்து நாடும்வினை
    யெல்லை யிரண்டு மிடையொப்பிற் - பல் பிறவி
    யத்தமதிலன்றோ வளவென்று பார்த்திருந்து
    சத்தி பதிக்குந் தரம் போற்றி - முத்திதரு
    நன்னெறிவிஞ் ஞானகலர் நாடுமல மொன்றினையு
    மந்நிலையே யுண்ணின் றறுத்தருளிப் - பின்னன்பு

    மேவா விளங்கும் பிரளயா கலருக்குத்
    தேவாய் மலகன்மந் தீர்த்தருளிப் -பூவலயந்
    தன்னின்று நீங்காச் சகலர்க் கவர்போல
    முன்னின்று மும்மலந்தீர்த் தாட்கொள்கை - யன்னவனுக்

    காதிகுண மாதலினா லாடுந் திருத்தொழிலுஞ்
    சோதி மணிமிடற்றுச் சுந்தரமும் - பாதியாம்
    பச்சை யிடமும் பவளத் திருச்சடைமேல்
    வைச்ச நதியு மதிக் கொழுந்து - மச்சமற
    வாடு மரவு மழகார் திருநுதன்மேல்
    நீடுருவ வன்னி நெடுங்கண்ணும் - கேடிலயங்
    கூட்டுந் தமருகமுங் கோல வெரியகலும்
    பூட்டரவக் கச்சும் புலியதளும் - வீட்டின்ப
    வெள்ளத் தழுத்தி விடுந்தா ளினுமடியார்
    உள்ளத் தினும்பிரியா வொண்சிலம்புங் - கள்ளவினை

    வென்று பிறப்பறுக்கச் சாத்திவீ ரக்கழலும்
    ஒன்றுமுருத் தோன்றாம லுள்ளடக்கி - யென்றும்
    இறவாத வின்பத் தெமையிருத்த வேண்டிப்
    பிறவா முதல்வன் பிறந்து - நறவாருந்
    தாருலா வும்புயத்துச் சம்பந்த நாதனென்று
    பேரிலா நாதனொரு பேர்புனைந்து - பாரோர்தம்

    உண்டி யுறக்கம் பயமின்ப மொத்தொழுகிக்
    கொண்டு மகிழ்ந்த குணம் போற்றி - மிண்டாய
    வாறு சமயப் பொருளுமறி வித்தவற்றிற்
    பேறின்மை யெங்களுக்கே பேறாக்கித் - தேறாத
    சித்தந் தெளியத் திருமேனி கொண்டுவரும்
    அத்தகைமை தானே யமையாமல் - வித்தகமாஞ்
    சைவ நெறியிற் சமய முதலாக
    வெய்து மபிடேக மெய்துவித்துச் - செய்யதிருக்
    கண்ணருளா நோக்கிக் கடியபிறப் பாற்பட்ட
    புண்ணு மிருவினையும் போயகல - வண்ணமலர்க்

    கைத்தலத்தை வைத்தருளிக் கல்லாய நெஞ்சுருக்கி
    மெய்த்தகைமை யெல்லாம் விரித்தோதி - யொத்தொழுகுஞ்
    சேணா ரிருள்வடிவுஞ் செங்கதிரோன் பானிற்பக்
    காணா தொழியுங் கணக்கேபோ - லாணவத்தின்
    ஆதி குறையாம லென்பா லணுகாமல்
    நீதி நிறுத்து நிலைபோற்றி - மேதக்கோர்
    செய்யுஞ் சரியை திகழ்கிரியா யோகத்தால்
    எய்துஞ்சீர் முத்திபத மெய்துவித்து - மெய்யன்பாற்
    காணத் தகுவார்கள் கண்டாற் றமிப்பின்பு
    நாணத் தகுஞான நன்னெறியை - வீணே

    யெனக்குத் தரவேண்டி யெல்லாப் பொருட்கு
    மனக்கு மலரயன்மால் வானோர் - நினைப்பினுக்குந்
    தூரம்போ லேயணிய சுந்தரத்தா ளென்றலைமேல்
    ஆரும் படிதந் தருள்செய்த - பேராளன்
    தந்தபொரு ளேதென்னிற் றான்வேறு நான்வேறாய்
    வந்து புணரா வழக்காக்கி - முந்தியென்றன்
    உள்ளமென்று நீங்கா தொளித்திருந்து தோன்றி நிற்குங்
    கள்ளமின்று காட்டுங் கழல்போற்றி - வள்ளன்மையால்
    தன்னைத் தெரிவித்துத் தன்றாளி நுட்கிடந்த
    வென்னைத் தெரிவித்த வெல்லையின்கண் -மின்னாரும்

    வண்ண முருவ மருவுங் குணமயக்கம்
    எண்ணங் கலைகாலமெப்பொருளு - முன்னமெனக்
    கில்லாமை காட்டிப்பின்பெய்தியவா காட்டியினிச்
    செல்லாமை காட்டுஞ் செயல்போற்றி - யெல்லாம்போய்த்
    தம்மைத் தெளிந்தாராய்த் தாமே பொருளாகி
    யெம்மைப் புறங்கூறி யின்புற்றுச் - செம்மை
    யவிகாரம் பேசு மகம்பிரமக் காரர்
    வெளியா மிருலில் விடாதே - யொளியாய்நீ
    நின்ற நிலையே நிகழ்த்தி யொருபொருள்வே
    றின்றியமை யாமை யெடுத்தோதி - யொன்றாகச்

    சாதித்துத் தம்மைச் சிவமாக்கி யிப்பிறவிப்
    பேதந் தனிலின்பப் பேதமுறாப் - பாதகரோ
    டேகமாய்ப் போகாம லெவ்விடத்துங் காட்சி தந்து
    போகமாம் பொற்றாளி நுட்புணர்த்தி - யாதியுடன்
    நிற்க வழியா நிலையிதுவே யென்றருளி
    யொக்க வியாபகந்தன் நுட்காட்டி - மிக்கோங்கு
    மாநந்த மாக்கடலி லாரா வமுதளித்துத்
    தான்வந்து செய்யுந் தகுதியினால் - ஊனுயிர்தான்
    முன்கண்ட காலத்து நீங்காத முன்னோனை
    யென்கொண்டு போற்றிசைப்பேன் யான்

    போற்றி திருத்தில்லை போற்றி சிவபோகம்
    போற்றியவன் மெய்ஞ்ஞானப் புண்ணிய நூல் - போற்றியெங்கள்
    வெம்பந்த வாழ்க்கைவிட வேறாய்வந் துண்ணின்ற
    சம்பந்த மாமுனிபொற் றாள்.

    முற்றும்