MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    12. திருச்சாழல் - சிவனுடைய காருணியம்
    (தில்லையில் அருளியது /நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

    பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
    பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ
    பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டடென்னை
    ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. 255

    என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன்
    துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ?
    மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்
    தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ. 256

    கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
    தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ
    தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்
    காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. 257

    அயனை அனங்கனை அந்தகளைச் சந்திரனை
    வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ
    நயனங்கள் மூன்றுடை நாயகனே தண்டித்தால்
    சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ. 258

    தக்கனையும் எச்சையும் தலையறுத்துத் தேவர்கணம்
    தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ?
    தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு
    எச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன் காண் சாழலோ. 259

    அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
    நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ?
    நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
    சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ. 260

    மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
    சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ?
    சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
    பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ. 261

    கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த
    ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ?
    ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட
    மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ. 262

    தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்
    பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ
    பெண்பா லுகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர்
    விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ. 263

    தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை
    ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ
    ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்
    வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ. 264

    நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து
    கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ
    கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர்
    தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ. 265

    கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி
    ஆனா லவனுக்கிங் காட்படுவார் ஆரேடி?
    ஆனாலும் கேளாய் அயனுந் திருமாலும்
    வானாடர் கோவும் வழியடியார் சாழலோ. 266

    மலையரையன் பொற்பாவை வாள்நுதலான் பெண்திருவை
    உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ
    உலகறியத் தீவேளே தொழிந்தனனேல் உலகனைத்துங்
    கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ. 267

    தேன்புக்க தண்பனைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
    தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ?
    தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
    ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ. 268

    கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
    இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ
    தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
    இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ. 269

    நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை
    அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ
    அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங்
    கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோ டே சாழலோ. 270

    அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதரியும்
    நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ?
    நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியோ
    எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ. 271

    சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி
    நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ?
    நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தானடிக்கீழ்
    அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ. 272

    அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
    எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
    எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினும்
    தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ. 273

    அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கினையும்
    இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ?
    அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல்
    திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ. 274

    திருச்சிற்றம்பலம்