MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    இராமாவதாரம் (கம்பராமாயணம்)
    1. Bala kandam part 1, பால காண்டம்

    1. ஆற்றுப் படலம்
    2. நாட்டுப் படலம்
    3. நகரப் படலம்
    4. அரசியற் படலம்
    5. திரு அவதாரப் படலம்
    6. கையடைப் படலம்
    7. தாடகை வதைப் படலம்
    8. வேள்விப் படலம்
    9. அகலிகைப் படலம்
    10. மிதிலைக் காட்சிப் படலம்

  1. பாயிரம்
    கடவுள் வாழ்த்து

  2. உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
    நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
    அலகு இலா விளையாட்டு உடையார் - அவர்
    தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. 1

  3. சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை
    எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றினுள்
    முற் குணத்தவரே முதலோர்; அவர்
    நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ. 2

  4. ஆதி, அந்தம், அரி என, யாவையும்
    ஓதினார், அலகு இல்லன, உள்ளன,
    வேதம் என்பன - மெய்ந் நெறி நன்மையன்
    பாதம் அல்லது பற்றிலர்-பற்று இலார். 3

  5. அவையடக்கம்

  6. ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
    பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
    ஆசை பற்றி அறையலுற்றேன்-மற்று, இக்
    காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! 4

  7. நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் - எனை!-
    வைத வைவின் மராமரம் ஏழ் துளை
    எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
    செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே. 5

  8. வையம் என்னை இகழவும், மாசு எனக்கு
    எய்தவும், இது இயம்புவது யாது எனின்,-
    பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
    தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே. 6

  9. துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
    உறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்
    நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
    பறை அடுத்தது போலும்-என் பாஅரோ. 7

  10. முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
    உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்:-
    பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும்,
    பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ? 8

  11. அறையும் ஆடரங்கும் படப் பிள்ளைகள்
    தறைவில் கீறிடின், தச்சரும் காய்வரோ?
    இறையும் ஞானம் இலாத என் புன் கவி,
    முறையின் நூல் உணர்ந்தாரும், முனிவரோ? 9

  12. நூல் வழி

  13. தேவபாடையின் இக் கதை செய்தவர்
    மூவர் ஆனவர் தம்முளும், முந்திய
    நாவினான் உரையின்படி, நான் தமிழ்ப்
    பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ. 10

  14. இடம்

  15. நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
    இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
    தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
    சடையன் வெண்ணெய் நல்லூர்வயின் தந்ததே. 11

  16. 1. ஆற்றுப் படலம்



  17. மழை பொழிதல்

  18. ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,
    தாசு அலம்பு முலையவர் கண் எனும்
    பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
    கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்: 1

  19. நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
    ஆறு அணிந்து சென்று, ஆர்கலி மேய்ந்து, அகில்,
    சேறு அணிந்த முலைத் திருமங்கை தன்
    வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே. 2

  20. பம்பி மேகம் பரந்தது, பானுவால்
    நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்;
    அம்பின் ஆற்றுதும் என்று, அகன் குன்றின்மேல்,
    இம்பர் வாரி எழுந்தது போன்றதே. 3

  21. புள்ளி மால் வரை பொன் என நோக்கி, வான்,
    வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்,
    உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயும் அவ்
    வள்ளியோரின், வழங்கின - மேகமே. 4

  22. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுதல்

  23. மானம் நேர்ந்து, அறம் நோக்கி, மனு நெறி
    போன தண் குடை வேந்தன் புகழ் என,
    ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத்
    தானம் என்ன, தழைத்தது-நீத்தமே. 5

  24. தலையும் ஆகமும் தாளும் தழீஇ, அதன்
    நிலை நிலாது, இறை நின்றது போலவே,
    மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்,
    விலையின் மாதரை ஒத்தது-அவ் வெள்ளமே. 6

  25. மணியும், பொன்னும், மயில் தழைப் பீலியும்,
    அணியும் ஆனை வெண்கோடும், அகிலும், தண்
    இணை இல் ஆரமும், இன்ன கொண்டு ஏகலான்,
    வணிக மாக்களை ஒத்தது-அவ் வாரியே. 7

  26. பூ நிரைத்தும், மென் தாது பொருந்தியும்,
    தேன் அளாவியும், செம் பொன் விராவியும்,
    ஆனை மா மத ஆற்றொடு அளாவியும்,
    வான வில்லை நிகர்த்தது-அவ் வாரியே. 8

  27. மலை எடுத்து, மரங்கள் பறித்து, மாடு
    இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்,
    அலை கடல்-தலை அன்று அணை வேண்டிய
    நிலையுடைக் கவி நீத்தம்-அந் நீத்தமே. 9

  28. ஈக்கள் வண்டொடு மொய்ப்ப, வரம்பு இகந்து
    ஊக்கமே மிகுந்து, உள் தெளிவு இன்றியே,
    தேக்கு எறிந்து வருதலின்,-தீம் புனல்-
    வாக்கு தேன் நுகர் மாக்களை மானுமே. 10

  29. பணை முகக் களி யானை பல் மாக்களோடு
    அணி வகுத்தென ஈர்த்து, இரைத்து ஆர்த்தலின்,
    மணி உடைக் கொடி தோன்ற வந்து ஊன்றலால்,
    புணரிமேல் பொரப் போவதும் போன்றதே. 11

  30. சரயு நதியின் சிறப்பும், நால் வகை நிலத்திலும் அது ஓடியச் சிறப்பும்

  31. இரவிதன் குலத்து எண் இல் பல் வேந்தர்தம்
    பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,
    சரயு என்பது-தாய் முலை அன்னது, இவ்
    உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம். 12

  32. கொடிச்சியர் இடித்த சுண்ணம், குங்குமம், கோட்டம், ஏலம்,
    நடுக்குறு சந்தம், சிந்தூரத்தொடு நரந்தம், நாகம்,
    கடுக்கை, ஆர், வேங்கை, கோங்கு, பச்சிலை, கண்டில் வெண்ணெய்,
    அடுக்கலின் அளிந்த செந் தேன், அகிலொடு நாறும் அன்றே. 13

  33. எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி,
    வயின் வயின், எயிற்றி மாதர், வயிறு அலைத்து ஓட, ஓடி,
    அயில் முகக் கணையும் வில்லும் வாரிக் கொண்டு, அலைக்கும் நீரால்,
    செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே. 14

  34. செறி நறுந் தயிரும், பாலும், வெண்ணெயும், சேந்த நெய்யும்,
    உறியொடு வாரி உண்டு, குருந்தொடு மருதம் உந்தி,
    மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால்,
    பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே. 15

  35. கதவினை முட்டி, மள்ளர் கை எடுத்து ஆர்ப்ப ஓடி,
    நுதல் அணி ஓடை பொங்க, நுகர் வரி வண்டு கிண்ட,
    ததை மணி சிந்த உந்தி, தறி இறத் தடக் கை சாய்த்து,
    மத மழை யானை என்ன, மருதம் சென்று அடைந்தது அன்றே. 16

  36. முல்லையைக் குறிஞ்சி ஆக்கி, மருதத்தை முல்லை ஆக்கி,
    புல்லிய நெய்தல் தன்னைப் பொரு அரு மருதம் ஆக்கி,
    எல்லை இல் பொருள்கள் எல்லாம் இடைதடுமாறும் நீரால்,
    செல்லுறு கதியில் செல்லும் வினை என, சென்றது அன்றே. 17

  37. காத்த கால் மள்ளர் வெள்ளக் கலிப் பறை கறங்க, கைபோய்ச்
    சேர்த்த நீர்த் திவலை, பொன்னும் முத்தமும் திரையின் வீசி,
    நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து, பார் கிழிய நீண்டு,
    கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்தது அன்றே. 18

  38. கல்லிடைப் பிறந்து, போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்,
    எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்னத்
    தொல்லையில் ஒன்றே ஆகி, துறைதொறும், பரந்த சூழ்ச்சிப்
    பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல், பரந்தது அன்றே. 19

  39. நீர் பாய்ந்து யாவையும் எழிலுடன் விளங்குதல்

  40. தாது, உகு சோலைதோறும், சண்பகக் காடுதோறும்,
    போது அவிழ் பொய்கைதோறும், புதுமணல்-தடங்கள்தோறும்,
    மாதவி வேலிப் பூக வனம் தொறும், வயல்கள் தோறும்,
    ஓதிய உடம்புதோறும் உயிர் என, உலாயது அன்றே. 20

  41. மிகைப் பாடல்கள்

  42. காப்பு

  43. ஒன்று ஆய், இரண்டு சுடர் ஆய், ஒரு மூன்றும் ஆகி,
    பொன்றாத வேதம் ஒரு நான்கொடு, ஐம்பூதம் ஆகி,
    அன்று ஆகி, அண்டத்து அகத்து ஆகி, புறத்தும் ஆகி,
    நின்றான் ஒருவன்; அவன் நீள் கழல் நெஞ்சில் வைப்பாம். 1

  44. நீலம் ஆம் கடல் நேமி அம் தடக்கை
    மாலை மால் கெட, வணங்குதும் மகிழ்ந்தே. 2

  45. காயும் வெண்பிறை நிகர் கடு ஒடுங்கு எயிற்று
    ஆயிரம் பணாமுடி அனந்தன் மீமிசை,
    மேய நான்மறை தொழ, விழித்து உறங்கிய
    மாயன் மா மலர் அடி வணங்கி ஏத்துவாம். 3

  46. மாதுளங் கனியை, சோதி வயங்கு இரு நிதியை, வாசத்
    தாது உகுநறு மென் செய்ய தாமரைத் துணை மென் போதை,
    மோது பாற்கடலின் முன் நாள், முளைத்த நால் கரத்தில் ஏந்தும்
    போது தாயாகத் தோன்றும் பொன் அடி போற்றிசெய்வாம். 4

  47. பராவ அரு மறை பயில் பரமன், பங்கயக்
    கராதலம் நிறைபயில் கருணைக் கண்ணினான்,
    அரா-அணைத் துயில் துறந்து அயோத்தி மேவிய
    இராகவன், மலர்அடி இறைஞ்சி ஏத்துவாம். 5

  48. கலங்கா மதியும், கதிரோன் புரவிப்
    பொலன் கா மணித் தேரும், போகா இலங்கா
    புரத்தானை, வானோர் புரத்து ஏறவிட்ட
    சரத்தானை, நெஞ்சே! தரி. 6

  49. நாராயணாய நம! என்னும் நல் நெஞ்சர்
    பார் ஆளும் பாதம் பணிந்து, ஏத்துமாறு அறியேன்;
    கார் ஆரும் மேனிக் கருணாகர மூர்த்திக்கு
    ஆராதனை என் அறியாமை ஒன்றுமே. 7

  50. பராவரும் இராமன், மாதோடு இளவல் பின் படரக் கான்போய்,
    விராதனை, கரனை, மானை, கவந்தனை, வென்றிகொண்டு,
    மராமரம், வாலி மார்பு, துளைத்து, அணை வகுத்து, பின்னர்,
    இராவணன் குலமும் பொன்ற எய்து, உடன் அயோத்தி வந்தான். 8

  51. தருகை நீண்ட தயரதன்தான் தரும்
    இரு கை வேழத்து இராகவன் தன் கதை
    திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட,
    குருகை நாதன் குரை கழல் காப்பதே. 9

  52. அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி,
    அஞ்சிலே ஒன்று ஆறு ஆக, ஆர் உயிர் காக்க ஏகி,
    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்று வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான். 10

  53. எவ் இடத்தும், இராமன் சரிதை ஆம்
    அவ் இடத்திலும், அஞ்சலி அத்தனாய்,
    பவ்வ மிக்க புகழ்த் திருப் பாற்கடல்
    தெய்வ தாசனைச் சிந்தை செய்வாம் அரோ. 11

  54. பொத்தகம், படிகமாலை, குண்டிகை, பொருள் சேர் ஞான
    வித்தகம் தரித்த செங் கை விமலையை, அமலைதன்னை,
    மொய்த்த கொந்து அளக பார முகிழ் முலைத் தவள மேனி
    மைத் தகு கருங் கண் செவ் வாய் அணங்கினை, வணங்கல் செய்வாம். 12

  55. தழை செவி, சிறு கண், தாழ் கைத் தந்த சிந்துரமும், தாரை
    மழை மதத் தறு கண் சித்ர வாரண முகத்து வாழ்வை,
    இழை இடைக் கலசக் கொங்கை இமகிரி மடந்தை ஈன்ற
    குழவியைத் தொழுவன், அன்பால்-குறைவு அற நிறைக என்றே. 13

  56. எக் கணக்கும் இறந்த பெருமையன்,
    பொக்கணத்தன், புலி அதள் ஆடையன்,
    முக்கண் அத்தன், வரம் பெற்ற மூப்பனை,
    அக் கணத்தின் அவன் அடி தாழ்ந்தனம். 14

  57. தனியன்

  58. நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற,
    ஆரணக் கவிதை செய்தான், அறிந்த வான்மீகி என்பான்;
    சீர் அணி சோழ நாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன்,
    கார் அணி கொடையான், கம்பன், தமிழினால் கவிதை செய்தான். 1

  59. அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த
    தம்பிரான் என்ன, தானும் தமிழிலே தாலை நாட்டி,
    கம்ப நாடு உடைய வள்ளல், கவிச் சக்ரவர்த்தி, பார்மேல்
    நம்பு பாமாலையாலே நரர்க்கும் இன் அமுதம் ஈந்தான். 2

  60. வாழ்வு ஆர்தரு வெண்ணெய் நல்லூர்ச் சடையப்பன் வாழ்த்துப் பெற,
    தாழ்வார் உயர, புலவோர் அக இருள் தான் அகல,
    போழ் வார் கதிரின் உதித்த தெய்வப் புலமைக் கம்ப நாட்டு
    ஆழ்வார் பதத்தைச் சிந்திப்பவர்க்கு யாதும் அரியது அன்றே. 3

  61. அம்பு அரா அணி சடை அரன் அயன் முதல்
    உம்பரால், முனிவரால், யோகரால், உயர்
    இம்பரால், பிணிக்க அரும் இராம வேழம் சேர்
    கம்பர் ஆம் புலவரைக் கருத்து இருத்துவாம். 4

  62. சம்பு, அ(ந்)நாள், தன் உமை செவி சாற்று பூங்
    கொம்பு அனாள்தன் கொழுநன் இராமப் பேர்
    பம்ப நாள் தழைக்கும் கதை பாச் செய்த
    கம்பநாடன் கழல் தலையில் கொள்வாம். 5

  63. இம்பரும் உம்பர் தாமும் ஏத்திய இராம காதை
    தம்பமா முத்தி சேர்தல் சத்தியம் சத்தியம்மே;
    அம்பரம்தன்னில் மேவும் ஆதித்தன் புதல்வன் ஞானக்
    கம்பன் செங் கமல பாதம் கருத்துற இருத்துவாமே. 6

  64. ஆதவன் புதல்வன் முத்தி அறிவினை அளிக்கும் ஐயன்,
    போதவன் இராம காதை புகன்றருள் புனிதன், மண்மேல்
    கோது அவம் சற்றும் இல்லான், கொண்டல் மால்தன்னை ஒப்பான்,
    மா தவன் கம்பன் செம் பொன் மலர் அடி தொழுது வாழ்வாம். 7

  65. ஆவின் கொடைச் சகரர் ஆயிரத்து நூறு ஒழித்து,
    தேவன் திருவழுந்தூர் நல் நாட்டு, மூவலூர்ச்
    சீர் ஆர் குணாதித்தன் சேய் அமையப் பாடினான் -
    கார் ஆர் காகுத்தன் கதை. 8

  66. எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின்மேல், சடையன் வாழ்வு
    நண்ணிய வெண்ணெய்நல்லூர் தன்னிலே கம்பநாடன்
    பண்ணிய இராம காதை பங்குனி அத்த நாளில்,
    கண்ணிய அரங்கர் முன்னே, கவி அரங்கேற்றினானே. 9

  67. கழுந்தராய் உன கழல் பணியாதவர் கதிர் மணி முடிமீதே
    அழுந்த வாளிகள் தொடு சிலை இராகவ! அபிநவ கவிநாதன்
    விழுந்த நாயிறுஅது எழுவதன்முன், மறை வேதியருடன் ஆராய்ந்து,
    எழுந்த நாயிறு விழுவதன்முன் கவி பாடியது எழுநூறே. 10

  68. கரை செறி காண்டம் ஏழு, கதைகள் ஆயிரத்து எண்ணூறு,
    பரவுறு சமரம் பத்து, படலம் நூற்றிருபத் தெட்டே;
    உரைசெயும் விருத்தம் பன்னீராயிரத்து ஒருபத்தாறு;
    வரம்மிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணூற்றாறே. 11

  69. தராதலத்தின் உள்ள தமிழ்க் குற்றம் எல்லாம்
    அராவும் அரம் ஆயிற்று அன்றே - இராவணன்மேல்
    அம்பு நாட்டு ஆழ்வான் அடி பணியும் ஆதித்தன்
    கம்ப நாட்டு ஆழ்வான் கவி. 12

  70. இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம் எய்தி, அரசு ஆண்டு இருந்தாலும்,
    உம்பர் நாட்டில் கற்பகக் கா ஓங்கும் நீழல் இருந்தாலும்,
    செம்பொன்மேரு அனைய புயத் திறல் சேர் இராமன் திருக் கதையில்,
    கம்பநாடன் கவிதையில்போல், கற்றோர்க்கு இதயம் களியாதே. 13

  71. நாரதன் கருப்பஞ் சாறாய், நல்ல வான்மீகன் பாகாய்,
    சீர் அணி போதன் வட்டாய், செய்தனன்; காளிதாசன்,
    பார் அமுது அருந்தப் பஞ்சதாரையாய்ச் செய்தான்; கம்பன்,
    வாரம் ஆம் இராமகாதை வளம் முறை திருத்தினானே. 14

  72. நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே;
    தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
    சென்மமும் மரணமும் இன்றித் தீருமே -
    இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால். 15

  73. ஓர் ஆயிரம் மகம் புரி பயனை உய்க்குமே;
    நராதிபர் செல்வமும் புகழும் நல்குமே,
    விராய் எணும் பவங்களை வேர் அறுக்குமே-
    இராம என்று ஒரு மொழி இயம்பும் காலையே. 16

  74. மற்று ஒரு தவமும் வேண்டா; மணி மதில் இலங்கை மூதூர்
    செற்றவன் விசயப் பாடல் தெளிந்து, அதில் ஒன்று தன்னைக்
    கற்றவர், கேட்போர், நெஞ்சில் கருதுவோர், இவர்கள் பார்மேல்
    உற்று அரசு ஆள்வர்; பின்னும் உம்பராய் வீட்டில் சேர்வார். 17

  75. வென்றி சேர் இலங்கையானை வென்ற மால் வீரம் ஓத
    நின்ற ராமாயணத்தில் நிகழ்ந்திடு கதைகள் தம்மில்
    ஒன்றினைப் படித்தோர் தாமும், உரைத்திடக் கேட்டோ ர் தாமும்,
    நன்று இது என்றோர் தாமும், நரகம் அது எய்திடாரே. 18

  76. இறு வரம்பில் இராம என்றோர், உம்பர்
    நிறுவர் என்பது நிச்சயம்; ஆதலால்,
    மறு இல் மாக்கதை கேட்பவர் வைகுந்தம்
    பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ? 19

  77. அன்ன தானம், அகில நல் தானங்கள்,
    கன்னி தானம், கபிலையின் தானமே,
    சொன்ன தானப் பலன் எனச் சொல்லுவார்-
    மன் இராம கதை மறவார்க்கு அரோ. 20

  78. வட கலை, தென் கலை, வடுகு, கன்னடம்,
    இடம் உள பாடை யாதுஒன்றின் ஆயினும்,
    திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை
    அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே. 21

  79. இத் தலத்தின் இராமாவதாரமே
    பத்திசெய்து, பரிவுடன் கேட்பரேல்,
    புத்திரர்த் தரும்; புண்ணியமும் தரும்;
    அத் தலத்தில் அவன் பதம் எய்துமே. 22

  80. ஆதி அரி ஓம் நம நராயணர் திருக்கதை அறிந்து, அனுதினம் பரவுவோர்,
    நீதி அனுபோக நெறி நின்று, நெடுநாள் அதின் இறந்து, சகதண்டம் முழுதுக்கு
    ஆதிபர்களாய்அரசுசெய்து,உளம்நினைத்தது கிடைத்து,அருள்பொறுத்து,முடிவில்
    சோதி வடிவு ஆய், அழிவு இல் முத்தி பெறுவார் என உரைத்த, கருதித் தொகைகளே. 23

  81. இராகவன் கதையில், ஒரு கவிதன்னில் ஏக பாதத்தினை உரைப்போர்,
    பராவ அரும் மலரோன் உலகினில், அவனும் பல் முறை வழுத்த, வீற்றிருந்து,
    புராதன மறையும் அண்டர் பொன் பதமும் பொன்றும் நாள்அதனினும், பொன்றா
    அரா அணை அமலன் உலகு எனும் பரம பதத்தினை அடைகுவர் அன்றே. 24

  82. இனைய நல் காதை முழுதும் எழுதினோர், ஓதினோர், கற்றோர்,
    அனையதுதன்னைச் சொல்வோர்க்கு அரும்பொருள் கொடுத்துக் கேட்டோர்,
    கனை கடல் புடவி மீது காவலர்க்கு அரசு ஆய் வாழ்ந்து,
    வினையம் அது அறுத்து, மேல் ஆம் விண்ணவன் பதத்தில் சேர்வார். 25

  83. நாடிய பொருள் கைகூடும்; ஞானமும் புகழும் உண்டாம்;
    வீடு இயல் வழிஅது ஆக்கும்; வேரி அம் கமலை நோக்கும்;-
    நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய, வாகை
    சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே. 26

  84. வான் வளம் சுரக்க! நீதி மனு நெறி முறை எந் நாளும்
    தான் வளர்ந்திடுக! நல்லோர்தம் கிளை தழைத்து வாழ்க!
    தேன் வளர்ந்து அறாத மாலைத் தெசரத ராமன் செய்கை
    யான் அளந்து அறிந்த பாடல் இடையறாது ஒளிர்க, எங்கும்! 27

  85. பாயிரம்

  86. எறிகடல் உலகம் தன்னுள் இன் தமிழ்ப் புலவர்க்கு எல்லாம்
    முறுவலுக்கு உரியதாக மொழிந்தெனன்; மொழிந்த என் சொல்
    சிறுமையும், சிலை இராமன் கதைவழிச் செறிதல் தன்னால்,
    அறிவுடை மாந்தர்க்கு எல்லாம், அமிழ்தம் ஒத்து இருக்கும் அன்றே. 9-1

  87. பால காண்டம்

  88. 2. நாட்டுப் படலம்


    கோசல நாட்டு வளம்

  89. வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்,
    தீம் கவி, செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்;
    ஆங்கு, அவன் புகழ்ந்த நாட்டை, அன்பு எனும் நறவம் மாந்தி,
    மூங்கையான் பேசலுற்றான் என்ன, யான் மொழியலுற்றேன். 1

  90. வரம்பு எலாம் முத்தம்; தத்தும் மடை எலாம் பணிலம்; மா நீர்க்
    குரம்பு எலாம் செம்பொன்; மேதிக் குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
    பரம்பு எலாம் பவளம்; சாலிப் பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
    கரும்பு எலாம் செந் தேன்; சந்தக் கா எலாம் களி வண்டு ஈட்டம். 2

  91. மருத நில வளம்

  92. ஆறு பாய் அரவம், மள்ளர் ஆலை பாய் அமலை, ஆலைச்
    சாறு பாய் ஓதை, வேலைச் சங்கின் வாய்ப் பொங்கும் ஓசை,
    ஏறு பாய் தமரம், நீரில் எருமை பாய் துழனி, இன்ன
    மாறு மாறு ஆகி, தம்மில் மயங்கும்-மா மருத வேலி. 3

  93. தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
    கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
    தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
    வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ. 4

  94. தாமரைப் படுவ, வண்டும் தகை வரும் திருவும்; தண் தார்க்
    காமுகர்ப் படுவ, மாதர் கண்களும் காமன் அம்பும்;
    மா முகில் படுவ, வாரிப் பவளமும் வயங்கு முத்தும்;
    நாமுதல் படுவ, மெய்யும் நாம நூல் பொருளும் மன்னோ. 5

  95. நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி;
    தாரிடை உறங்கும் வண்டு; தாமரை உறங்கும் செய்யாள்;
    தூரிடை உறங்கும் ஆமை; துறையிடை உறங்கும் இப்பி;
    போரிடை உறங்கும் அன்னம்; பொழிலிடை உறங்கும் தோகை. 6

  96. படை உழ எழுந்த பொன்னும், பணிலங்கள் உயிர்த்த முத்தும்,
    இடறிய பரம்பில் காந்தும் இன மணித் தொகையும், நெல்லின்
    மிடை பசுங் கதிரும், மீனும், மென் தழைக் கரும்பும், வண்டும்,
    கடைசியர் முகமும், போதும், -கண்மலர்ந்து ஒளிரும் மாதோ. 7

  97. தெள் விளிச் சீறியாழ்ப் பாணர் தேம் பிழி நறவம் மாந்தி,
    வள் விசிக் கருவி பம்ப, வயின்வயின் வழங்கு பாடல்,
    வெள்ளி வெண் மாடத்து உம்பர், வெயில் விரி பசும் பொன் பள்ளி,
    எள்ள அருங் கருங் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்றே. 8

  98. ஆலைவாய்க் கரும்பின் தேனும், அரி தலைப் பாளைத் தேனும்,
    சோலை வீழ் கனியின் தேனும், தொடை இழி இறாலின் தேனும்,
    மாலைவாய் உகுத்த தேனும்,-வரம்பு இகந்து ஓடி, வங்க
    வேலைவாய் மடுப்ப-உண்டு, மீன் எலாம் களிக்கும் மாதோ. 9

  99. பண்கள் வாய் மிழற்றும் இன் சொல் கடைசியர் பரந்து நீண்ட
    கண், கை, கால், முகம், வாய், ஒக்கும் களை அலால் களை இலாமை,
    உண் கள் வார் கடைவாய் மள்ளர், களைகிலாது உலாவி நிற்பர்;-
    பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால்? 10

  100. புதுப் புனல் குடையும் மாதர் பூவொடு நாவி பூத்த
    கதுப்பு உறு வெறியே நாறும், கருங் கடல் தரங்கம்; என்றால்,
    மதுப்பொதி மழலைச் செவ்வாய், வாள் கடைக் கண்ணின் மைந்தர்
    விதுப்பு உற நோக்கும், மின்னார் மிகுதியை விளம்பலாமே? 11

  101. வெண் தளக் கலவைச் சேறும், குங்கும விரை மென் சாந்தும்,
    குண்டலக் கோல மைந்தர் குடைந்த, நீர்க் கொள்ளை, சாற்றின்,
    தண்டலைப் பரப்பும், சாலி வேலியும், தழீஇய வைப்பும்,
    வண்டல் இட்டு ஓட, மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ. 12

  102. சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செங் கால் அன்னம்,
    மால் உண்ட நளினப் பள்ளி, வளர்த்திய மழலைப் பிள்ளை,
    கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த
    பால் உண்டு, துயில, பச்சைத் தேரை தாலாட்டும்-பண்ணை. 13

  103. குயில்இனம் வதுவை செய்ய, கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை
    அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகுசெய்ய,
    பயில் சிறை அரச அன்னம் பல் மலர்ப் பள்ளிநின்றும்
    துயில் எழ, தும்பி காலைச் செவ்வழி முரல்வ-சோலை. 14

  104. மக்கள் பொழுது போக்கும் வகை

  105. பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்,
    பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,
    மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்,
    விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்; 15

  106. கறுப்புறு மனமும், கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி,
    உறுப்புறு படையின் தாக்கி, உறு பகை இன்றிச் சீறி,
    வெறுப்பு இல, களிப்பின் வெம் போர் மதுகைய, வீர ஆக்கை
    மறுப்பட, ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும்; 16

  107. எருமை நாகு ஈன்ற செங் கண் ஏற்றையோடு ஏற்றை, சீற்றத்து
    உரும் இவை என்னத் தாக்கி, ஊழுற நெருக்கி, ஒன்றாய்
    விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன; அதனை நோக்கி,
    அரி இனம் குஞ்சி ஆர்ப்ப, மஞ்சுற ஆர்க்கின்றாரும்; 17

  108. முள் அரை முளரி வெள்ளை முளை இற, முத்தும் பொன்னும்
    தள்ளுற, மணிகள் சிந்த, சலஞ்சலம் புலம்ப, சாலில்
    துள்ளி மீன் துடிப்ப, ஆமை தலை புடை கரிப்ப, தூம்பின் -
    உள் வரால் ஒளிப்ப, -மள்ளர் உழு பகடு உரப்புவாரும்; 18

  109. கடல் வாணிகம்

  110. முறை அறிந்து, அவாவை நீக்கி, முனிவுழி முனிந்து, வெஃகும்
    இறை அறிந்து, உயிர்க்கு நல்கும், இசை கெழு வேந்தன் காக்கப்
    பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம் தன்னில், பொன்னின்
    நிறை பரம் சொரிந்து, வங்கம், நெடு முதுகு ஆற்றும், நெய்தல். 19

  111. வளம் பல பெருக்கி, மள்ளர் விருந்தோடு மகிழ்ந்திருத்தல்

  112. எறிதரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள்
    குறிகொளும் போத்தின் கொல்வார்; கொன்ற நெல் குவைகள் செய்வார்;
    வறியவர்க்கு உதவி, மிக்க, விருந்து உண மனையின் உய்ப்பார்,
    நெறிகளும் புதைய, பண்டி நிறைத்து, மண் நெளிய ஊர்வார். 20

  113. கதிர் படு வயலின் உள்ள, கடி கமழ் புனலின் உள்ள,
    முதிர் பயன் மரத்தின் உள்ள, முதிரைகள் புறவின் உள்ள,
    பதிபடு கொடியின் உள்ள, படி வளர் குழியின் உள்ள,-
    மதுவளம் மலரில் கொள்ளும் வண்டு என-மள்ளர், கொள்வார். 21

  114. முந்து முக் கனியின், நானா முதிரையின், முழுத்த நெய்யின்,
    செந் தயிர்க் கண்டம், கண்டம், இடை இடை செறிந்த சோற்றின்,
    தம்தம் இல் இருந்து, தாமும், விருந்தோடும், தமரினோடும்,
    அந்தணர் அமுத உண்டி அயிலுறும் அமலைத்து எங்கும். 22

  115. செல்வச் செழிப்பு

  116. பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து
    உருவ உண் கணை, ஒண் பெடை ஆம் எனக்
    கருதி, அன்பொடு காமுற்று, வைகலும்,
    மருத வேலியின் வைகின, வண்டுஅரோ. 23

  117. வேளை வென்ற முகத்தியர் வெம் முலை,
    ஆளை, நின்று முனிந்திடும், அங்கு ஒர் பால்;
    பாளை தந்த மதுப் பருகி, பரு
    வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம். 24

  118. ஈர நீர் படிந்து, இந் நிலத்தே சில
    கார்கள் என்ன, வரும், கரு மேதிகள்;
    ஊரில் நின்ற கன்று உள்ளிட; மென் முலை
    தாரை கொள்ள, தழைப்பன சாலியே. 25

  119. முட்டு இல் அட்டில், முழங்குற வாக்கிய
    நெட்டுலைக் கழுநீர் நெடு நீத்தம் தான்,
    பட்ட மென் கமுகு ஓங்கு படப்பை போய்,
    நட்ட செந் நெலின் நாறு வளர்க்குமே. 26

  120. சூட்டுடைத் துணைத் தூ நிற வாரணம்
    தாள்-துணைக் குடைய, தகை சால் மணி
    மேட்டு இமைப்பன; மின்மினி ஆம் எனக்
    கூட்டின் உய்க்கும், குரீஇயின் குழாம் அரோ. 27

  121. தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும்,
    ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும்,
    தேயும் நுண் இடை சென்று வணங்கவும்,
    ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார். 28

  122. தினைச் சிலம்புவ, தீம் சொல் இளங் கிளி;
    நனைச் சிலம்புவ, நாகு இள வண்டு; பூம்
    புனைச் சிலம்புவ, புள் இனம்; வள்ளியோர்
    மனைச் சிலம்புவ, மங்கல வள்ளையே. 29

  123. பெருகிக் கிடக்கும் நால் நில வளம்

  124. குற்ற பாகு கொழிப்பன -கோள் நெறி
    கற்றிலாத கருங் கண் நுளைச்சியர்
    முற்றில் ஆர முகந்து, தம் முன்றிலில்,
    சிற்றில் கோலிச் சிதறிய முத்தமே. 30

  125. துருவை மென் பிணை ஈன்ற துளக்கு இலா
    வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான்
    உரும் இடித்தெனத் தாக்குறும் ஒல் ஒலி
    வெருவி, மால் வரைச் சூல் மழை மின்னுமே. 31

  126. கன்றுடைப் பிடி நீக்கிக் களிற்றினம்
    வன் தொடர்ப் படுக்கும், வன வாரி சூழ்
    குன்றுடைக் குல மள்ளர் குழூஉக் குரல்,
    இன் துணைக் களி அன்னம் இரிக்குமே. 32

  127. வள்ளி கொள்பவர் கொள்வன, மா மணி;
    துள்ளி கொள்வன, தூங்கிய மாங்கனி;
    புள்ளி கொள்வன, பொன் விரி புன்னைகள்;
    பள்ளி கொள்வன, பங்கயத்து அன்னமே. 33

  128. கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில்
    கன்று உறக்கும்-குரவை, கடைசியர்,
    புன் தலைப் புனம் காப்புடைப் பொங்கரில்
    சென்று இசைக்கும் - நுளைச்சியர் செவ்வழி. 34

  129. சேம்பு கால் பொரச் செங்கழுநீர்க் குளத்
    தூம்பு கால, சுரி வளை மேய்வன-
    காம்பு கால் பொர, கண் அகல் மால் வரை,
    பாம்பு நான்றெனப் பாய் பசுந் தேறலே. 35

  130. ஈகையும் விருந்தும்

  131. பெருந் தடங் கண் பிறைநுதலார்க்கு எலாம்,
    பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
    வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்,
    விருந்தும், அன்றி, விளைவன யாவையே? 36

  132. ஊட்டிடத்தும் குடிகளிடத்தும் உள்ள பொருள்கள்

  133. பிறை முகத் தலை, பெட்பின், இரும்பு போழ்,
    குறை நறைக் கறிக் குப்பை, பருப்பொடு,
    நிறை வெண் முத்தின் நிறத்து அரிசிக் குவை,
    உறைவ-கொட்பின ஊட்டிடம் தோறெலாம். 37

  134. கலம் சுரக்கும், நிதியம்; கணக்கு இலா,
    நிலம் சுரக்கும், நிறை வளம்; நல் மணி
    பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
    குலம் சுரக்கும், ஒழுக்கம்-குடிக்கு எலாம். 38

  135. நல்லவற்றின் நலனும், தீயன செய்யாமையும்

  136. கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இலாமையால்;
    சீற்றம் இல்லை, தம் சிந்தையின் செம்மையால்;
    ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால்,
    ஏற்றம் அல்லது, இழிதகவு இல்லையே. 39

  137. நெறி கடந்து பரந்தன, நீத்தமே;
    குறி அழிந்தன, குங்குமத் தோள்களே;
    சிறிய, மங்கையர் தேயும் மருங்குலே;
    வெறியவும், அவர் மென் மலர்க் கூந்தலே. 40

  138. பல் வகைப் புகைகள்

  139. அகில் இடும் புகை, அட்டில் இடும் புகை,
    நகல் இன் ஆலை நறும் புகை, நான் மறை
    புகலும் வேள்வியில் பூம்புகையோடு அளாய்,
    முகிலின் விம்மி, முயங்கின எங்கணும். 41

  140. மகளிரின் அங்கம் போன்ற இயற்கை எழில்

  141. இயல் புடைபெயர்வன, மயில்; மணி இழையின்
    வெயில் புடைபெயர்வன; மிளிர் முலை; குழலின்
    புயல் புடைபெயர்வன, பொழில்; அவர் விழியின்
    கயல் புடைபெயர்வன, கடி கமழ் கழனி. 42

  142. இடை இற, மகளிர்கள், எறி புனல் மறுகக்
    குடைபவர், துவர் இதழ் மலர்வன, குமுதம்;
    மடை பெயர் அனம் என மட நடை, அளகக்
    கடைசியர் முகம் என மலர்வன, கமலம். 43

  143. ஒப்பிலா மகளிர் விழி

  144. விதியினை நகுவன, அயில் விழி; பிடியின்
    கதியினை நகுவன, அவர் நடை; கமலப்
    பொதியினை நகுவன, புணர் முலை, கலை வாழ்
    மதியினை நகுவன, வனிதையர் வதனம். 44

  145. பகலினொடு இகலுவ, படர் மணி; மடவார்
    நகிலினொடு இகலுவ, நளி வளர் இளநீர்;
    துகிலினொடு இகலுவ, சுதை புரை நுரை; கார்
    முகிலினொடு இகலுவ, கடி மண முரசம். 45

  146. பெருகித் திகழும் பல் வளம்

  147. காரொடு நிகர்வன, கடி பொழில்; கழனிப்
    போரொடு நிகர்வன, புணர்மலை; அணை சூழ்
    நீரொடு நிகர்வன, நிறை கடல்; நிதி சால்
    ஊரொடு நிகர்வன, இமையவர் உலகம். 46

  148. நெல் மலை அல்லன-நிரை வரு தரளம்;
    சொல் மலை அல்லன-தொடு கடல் அமிர்தம்;
    நல் மலை அல்லன-நதி தரு நிதியம்;
    பொன் மலை அல்லன-மணி படு புளினம். 47

  149. இளையவர் பந்து பயில் இடமும், ஆடவர் கலை தெரி கழகமும்

  150. பந்தினை இளையவர் பயில் இடம்,-மயில் ஊர்
    கந்தனை அனையவர் கலை தெரி கழகம்,-
    சந்தன வனம் அல, சண்பக வனம் ஆம்;
    நந்தன வனம் அல, நறை விரி புறவம்; 48

  151. மடவாரின் பேச்சழகும், காட்சிப் பொருள்களும்

  152. கோகிலம் நவில்வன, இளையவர் குதலைப்
    பாகு இயல் கிளவிகள்; அவர் பயில் நடமே
    கேகயம் நவில்வன; கிளர் இள வளையின்
    நாகுகள் உமிழ்வன, நகை புரை தரளம். 49

  153. பழையர்தம் மனையன, பழ நறை; நுகரும்
    உழவர்தம் மனையன, உழு தொழில்; புரியும்
    மழவர்தம் மனையன, மணஒலி; இசையின்
    கிழவர்தம் மனையன, கிளை பயில் வளை யாழ். 50

  154. கோதைகள் சொரிவன, குளிர் இள நறவம்;
    பாதைகள் சொரிவன, பரு மணி கனகம்;
    ஊதைகள் சொரிவன, உறை உறும் அமுதம்;
    காதைகள் சொரிவன, செவி நுகர் கனிகள்; 51

  155. இடம் கொள் சாயல் கண்டு, இளைஞர் சிந்தைபோல்,
    தடங் கொள் சோலைவாய், மலர் பெய் தாழ் குழல்
    வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்
    தொடர்ந்து போவன-தோகை மஞ்ஞையே. 52

  156. நாட்டில் வறுமை முதலியன இல்லாமை

  157. வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
    திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
    உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
    வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால். 53

  158. எள்ளும், ஏனலும், இறுங்கும், சாமையும்,
    கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும்,
    அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும்,
    தள்ளும் நீர்மையின், தலைமயங்குமே. 54

  159. உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினைப்
    பெயரும் பல் கதிப் பிறக்குமாறுபோல்,
    அயிரும், தேனும், இன் பாகும், ஆயர் ஊர்த்
    தயிரும், வேரியும், தலைமயங்குமே. 55

  160. விழாவும் வேள்வியும்

  161. கூறு பாடலும், குழலின் பாடலும்,
    வேறு வேறு நின்று இசைக்கும் வீதிவாய்,
    ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம் என,
    சாறும் வேள்வியும் தலைமயங்குமே. 56

  162. மூக்கில் தாக்குறும் மூரி நந்தும், நேர்
    தாக்கின் தாக்குறும் பறையும், தண்ணுமை
    வீக்கின் தாக்குறும் விளியும், -மள்ளர்தம்
    வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே. 57

  163. குழந்தைக்கு பால் ஊட்டும் தாய்

  164. தாலி ஐம்படை தழுவு மார்பிடை
    மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்
    பாலின் ஊட்டுவார் செங் கை, பங்கயம்
    வால் நிலா உறக் குவிவ மானுமே. 58

  165. மக்களின் ஒழுக்கத்தால் அறம் நிலைபெறுதல்

  166. பொற்பின் நின்றன, பொலிவு; பொய் இலா
    நிற்பின், நின்றன, நீதி; மாதரார்
    அற்பின் நின்றன, அறங்கள்; அன்னவர்
    கற்பின் நின்றன, கால மாரியே. 59

  167. சோலை மா நிலம் துருவி, யாவரே
    வேலை கண்டு தாம் மீள வல்லவர்?-
    சாலும் வார் புனல் சரயுவும், பல
    காலின் ஓடியும் கண்டது இல்லையே! 60

  168. வீடு சேர, நீர் வேலை, கால் மடுத்து
    ஊடு பேரினும், உலைவு இலா நலம்
    கூடு கோசலம் என்னும் கோது இலா
    நாடு கூறினாம்; நகரம் கூறுவாம். 61

  169. மிகைப் பாடல்கள்

  170. காளையர் சேறுதன்னைக் கலந்து, உடன் மிதித்து, நட்ட
    தாள்களும் கழுநீர் நாறும்; தடக் கையும் அதுவே நாறும்;
    ஆளையும் சீறிப் பீறி, அணி மலர்க் கமுகில் பாய்ந்த
    வாளையும், பாளை நாறும்; வயல்களும் அதுவே நாறும். 14-1

  171. பால காண்டம்

  172. 3. நகரப் படலம்


    அயோத்தி மாநகரின் அழகும் சிறப்பும்

  173. செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய கூரிய தீம் சொல்
    வல்லிய கவிஞர் அனைவரும், வடநூல் முனிவரும், புகழ்ந்தது; வரம்பு இல்
    எவ் உலகத்தோர் யாவரும், தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற
    அவ் உலகத்தோர், இழிவதற்கு அருத்தி புரிகின்றது-அயோத்தி மா நகரம். 1

  174. நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ! நிறை நெடு மங்கல நாணோ!
    இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின் இருக்கையோ! திருமகட்கு இனிய
    மலர்கொலோ!மாயோன்மார்பில்நன்மணிகள் வைத்தபொற் பெட்டியோ!வானோர்
    உலகின் மேல் உலகோ! ஊழியின் இறுதி உறையுளோ! யாது என உரைப்பாம்? 2

  175. உமைக்கு ஒருபாகத்து ஒருவனும்,இருவர்க்கு ஒரு தனிக் கொழுநனும்,மலர்மேல்
    கமைப் பெருஞ் செல்வக் கடவுளும், உவமை கண்டிலா நகர்அது காண்பான்,
    அமைப்பு அருங் காதல் அது பிடித்து உந்த, அந்தரம், சந்திராதித்தர்
    இமைப்பு இலர்திரிவர்; இது அலால்அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ!3

  176. அயில் முகக் குலிசத்து அமரர்கோன் நகரும்,அளகையும் என்று இவை,அயனார்
    பயிலுறவு உற்றபடி, பெரும்பான்மை இப் பெருந் திரு நகர் படைப்பான்;
    மயன் முதல் தெய்வத் தச்சரும் தம்தம் மனத் தொழில் நாணினர் மறந்தார்;-
    புயல் தொடு குடுமி நெடு நிலை மாடத்து இந் நகர் புகலுமாறு எவனோ? 4

  177. புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்னும் ஈது அரு மறைப் பொருளே;
    மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார்?
    எண்அருங்குணத்தின்அவன்,இனிதுஇருந்து,இவ்ஏழ்உலகுஆள்இடம்என்றால்,
    ஒண்ணுமோ, இதனின் வேறு ஒரு போகம் உறைவு இடம் உண்டு என உரைத்தல்? 5

  178. தங்கு பேர் அருளும் தருமமும்,துணையாத் தம் பகைப்புலன்கள் ஐந்துஅவிக்கும்
    பொங்கு மா தவமும், ஞானமும், புணர்ந்தோர் யாவர்க்கும் புகலிடம் ஆன
    செங் கண் மால் பிறந்து, ஆண்டு, அளப்ப அருங் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால்,
    அம் கண் மா ஞாலத்து இந் நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ? 6

  179. நகர மதிலின் மாட்சி

  180. நால் வகைச் சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன, மதி தோய்
    மால்வரைக் குலத்துஇனியாவையும் இல்லை;ஆதலால்,உவமை மற்றுஇல்லை;
    நூல் வரைத் தொடர்ந்து, பயத்தொடு பழகி, நுணங்கிய நுவல அரும் உணர்வே
    போல் வகைத்து; அல்லால், உயர்வினோடு உயர்ந்தது என்னலாம்-பொன் மதில் நிலையே. 7

  181. மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால், வேதமும் ஒக்கும்; விண் புகலால்,
    தேவரும் ஒக்கும்; முனிவரும் ஒக்கும், திண் பொறி அடக்கிய செயலால்;
    காவலின், கலை ஊர் கன்னியை ஒக்கும்; சூலத்தால், காளியை ஒக்கும்;
    யாவையும் ஒக்கும், பெருமையால்; எய்தற்கு அருமையால், ஈசனை ஒக்கும். 8

  182. பஞ்சி, வான் மதியை ஊட்டியது அனைய படர் உகிர், பங்கயச் செங் கால்,
    வஞ்சிபோல் மருங்குல், குரும்பைபோல் கொங்கை, வாங்குவேய் வைத்தமென் பணைத் தோள்,
    அம்சொலார் பயிலும் அயோத்தி மாநகரின்அழகுடைத்து அன்று எனஅறிவான்,
    இஞ்சி வான் ஓங்கி, இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்துளதே! 9

  183. கோலிடை உலகம் அளத்தலின், பகைஞர் முடித் தலை கோடலின், மனுவின்
    நூல் நெறி நடக்கும் செவ்வையின், யார்க்கும் நோக்க அருங் காவலின், வலியின்,
    வேலொடு வாள், வில் பயிற்றலின், வெய்ய சூழ்ச்சியின், வெலற்கு அரு வலத்தின்,
    சால்புடை உயர்வின், சக்கரம் நடத்தும் தன்மையின்,-தலைவர் ஒத்துளதே! 10

  184. சினத்து அயில், கொலை வாள், சிலை,மழு,தண்டு,சக்கரம்,தோமரம்,உலக்கை,
    கனத்திடைஉருமின்வெருவரும்கவண்கல்,என்றுஇவைகணிப்புஇல;கொதுகின்
    இனத்தையும்,உவணத்துஇறையையும்,இயங்கும்காலையும்,இதம்அலநினைவார்
    மனத்தையும், எறியும்பொறி உள என்றால்,மற்று இனிஉணர்த்துவது எவனோ?11

  185. பூணினும் புகழே அமையும்என்று,இனையபொற்பில் நின்று,உயிர் நனிபுரக்கும்,
    யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும் இரவிதன் குலமுதல் நிருபர்-
    சேணையும் கடந்து, திசையையும் கடந்து,- திகிரியும், செந் தனிக் கோலும்,
    ஆணையும் காக்கும்; ஆயினும், நகருக்கு அணி என இயற்றியது அன்றே. 12

  186. ஆழ்ந்த அகழியின் மாண்பு

  187. அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலைகடல் சூழ்ந்தன அகழி,
    பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ் போய், புன் கவி எனத் தெளிவு இன்றி,
    கன்னியர் அல்குல்-தடம் என யார்க்கும் படிவு அருங் காப்பினது ஆகி,
    நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது;-நவிலலுற்றது நாம். 13

  188. ஏகுகின்ற தம் கணங்களோடும் எல்லை காண்கிலா,
    நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா,
    மேகம், மொண்டு கொண்டு எழுந்து, விண் தொடர்ந்த குன்றம் என்று,
    ஆகம் நொந்து நின்று தாரை அம் மதிற்கண் வீசுமே. 14

  189. அந்த மா மதில் புறத்து, அகத்து எழுந்து அலர்ந்த, நீள்
    கந்தம் நாறு பங்கயத்த கானம், மான மாதரார்
    முந்து வாள் முகங்களுக்கு உடைந்து போன மொய்ம்பு எலாம்
    வந்து போர் மலைக்க, மா மதில் வளைந்தது ஒக்குமே. 15

  190. சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும் முற்று பார் எலாம்
    போழ்ந்த மா கிடங்கிடைக் கிடந்து பொங்கு இடங்கர் மா,-
    தாழ்ந்த வங்க வாரியில், தடுப்ப ஒணா மதத்தினால்,
    ஆழ்ந்த யானை மீள்கிலாது அழுந்துகின்ற போலுமே. 16

  191. ஈரும் வாளின் வால் விதிர்த்து, எயிற்று இளம் பிறைக் குலம்
    பேர மின்னி வாய் விரித்து, எரிந்த கண் பிறங்கு தீச்
    சோர, ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கா மா,-
    போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே. 17

  192. ஆளும் அன்னம் வெண் குடைக் குலங்களா, அருங் கராக்
    கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானையோ,
    தாள் உலாவு பங்கயத் தரங்கமும் துரங்கமா,
    வாளும், வேலும், மீனம் ஆக, -மன்னர் சேனை மானுமே. 18

  193. விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளி கட்டி, உள்ளுறப்
    பளிங்கு பொன்-தலத்து அகட்டு அடுத்துறப் படுத்தலின்,
    தளிந்த கல்-தலத்தொடு, அச் சலத்தினை, தனித்துறத்
    தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல் தேவராலும் ஆவதே? 19

  194. அகழியைச் சூழ்ந்த சோலை

  195. அன்ன நீள் அகன் கிடங்கு சூழ்கிடந்த ஆழியைத்
    துன்னி, வேறு சூழ்கிடந்த தூங்கு, வீங்கு, இருட் பிழம்பு
    என்னலாம், இறும்பு சூழ்கிடந்த சோலை; எண்ணில், அப்
    பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே. 20

  196. நால் வாயில் தோற்றமும், ஓவியப் பொலிவும்

  197. எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற; முன்னம், மால்,
    ஒல்லை, உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த; வான்
    மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறுறா வழக்கினால்
    நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன-வாயிலே. 21

  198. தா இல் பொன்-தலத்தின், நல் தவத்தினோர்கள் தங்கு தாள்
    பூ உயிர்த்த கற்பகப் பொதும்பர் புக்கு ஒதுக்குமால் -
    ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ, வந்து அணைந்திடாது,
    ஓவியப் புறாவின் மாடு இருக்க ஊடு பேடையே. 22

  199. எழு நிலை மாடம்

  200. கல் அடித்து அடுக்கி, வாய் பளிங்கு அரிந்து கட்டி, மீது
    எல்லுடைப் பசும் பொன் வைத்து, இலங்கு பல் மணிக் குலம்
    வில்லிடைக் குயிற்றி, வாள் விரிக்கும் வெள்ளி மா மரம்
    புல்லிடக் கிடத்தி, வச்சிரத்த கால் பொருத்தியே, 23

  201. மரகதத்து இலங்கு போதிகைத் தலத்து வச்சிரம்
    புரை தபுத்து அடுக்கி, மீது பொன் குயிற்றி, மின் குலாம்
    நிரை மணிக் குலத்தின் ஆளி நீள் வகுத்த ஒளிமேல்
    விரவு கைத்தலத்தின் உய்த்த மேதகத்தின் மீதுஅரோ, 24

  202. ஏழ் பொழிற்கும் ஏழ் நிலத்தலம் சமைத்ததென்ன, நூல்
    ஊழுறக் குறித்து அமைத்த உம்பர் செம் பொன் வேய்ந்து, மீச்
    சூழ் சுடர்ச் சிரத்து நல் மணித் தசும்பு தோன்றலால்,
    வாழ் நிலக் குலக் கொழுந்தை மௌலி சூட்டியன்னவே. 25

  203. மாளிகைகளின் அமைப்பும் எழிலும்

  204. திங்களும் கரிது என வெண்மை தீற்றிய
    சங்க வெண் சுதையுடைத் தவள மாளிகை-
    வெங் கடுங் கால் பொர, மேக்கு நோக்கிய,
    பொங்கு இரும் பாற்கடல்-தரங்கம் போலுமே. 26

  205. புள்ளி அம் புறவு இறை பொருந்தும் மாளிகை,
    தள்ள அருந் தமனியத் தகடு வேய்ந்தன,
    எள்ள அருங் கதிரவன் இள வெயிற் குழாம்
    வெள்ளி அம் கிரிமிசை விரிந்த போலுமே. 27

  206. வயிர நல் கால் மிசை, மரகதத் துலாம்,
    செயிர் அறப் போதிகை, கிடத்தி, சித்திரம்
    உயிர் பெறக் குயிற்றிய, உம்பர் நாட்டவர்
    அயிர் உற இமைப்பன, அளவு இல் கோடியே. 28

  207. சந்திர காந்தத்தின் தலத்த, சந்தனப்
    பந்தி செய் தூணின்மேல் பவளப் போதிகை,
    செந் தனி மணித் துலாம் செறிந்த, திண் சுவர்
    இந்திர நீலத்த, எண் இல் கோடியே. 29

  208. பாடகக் கால் அடி பதுமத்து ஒப்பன,
    சேடரைத் தழீஇயின, செய்ய வாயின,
    நாடகத் தொழிலின, நடுவு துய்யன,
    ஆடகத் தோற்றத்த, அளவு இலாதன. 30

  209. புக்கவர் கண் இமை பொருந்துறாது, ஒளி
    தொக்குடன் தயங்கி, விண்ணவரின் தோன்றலால்,
    திக்குற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு
    ஒக்க நின்று இமைப்பன, உம்பர் நாட்டினும். 31

  210. அணி இழை மகளிரும், அலங்கல் வீரரும்,
    தணிவன அறநெறி; தணிவு இலாதன
    மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது
    பணி பிறிது இயன்றில; பகலை வென்றன. 32

  211. வானுற நிவந்தன; வரம்பு இல் செல்வத்த;
    தான் உயர் புகழ் எனத் தயங்கு சோதிய;
    ஊனம் இல் அறநெறி உற்ற எண் இலாக்
    கோன் நிகர் குடிகள்தம் கொள்கை சான்றன. 33

  212. அருவியின் தாழ்ந்து, முத்து அலங்கு தாமத்த;
    விரி முகிற்குலம் எனக் கொடி விராயின;
    பரு மணிக் குவையன; பசும் பொன் கோடிய;
    பொரு மயில் கணத்தன;-மலையும் போன்றன. 34

  213. கொடிகள் பறக்கும் அழகு

  214. அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின,
    முகிலொடு வேற்றுமை தெரிகலா, முழுத்
    துகிலொடு நெடுங் கொடிச் சூலம் மின்னுவ;-
    பகல் இடு மின் அணிப் பரப்புப் போன்றவே. 35

  215. துடி இடைப் பணை முலைத் தோகை அன்னவர்
    அடி இணைச் சிலம்பு பூண்டு அரற்று மாளிகைக்
    கொடியிடைத் தரள வெண் கோவை சூழ்வன;-
    கடியுடைக் கற்பகம் கான்ற மாலையே. 36

  216. காண் வரு நெடு வரைக் கதலிக் கானம் போல்,
    தாள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன;
    வாள் நனி மழுங்கிட மடங்கி, வைகலும்
    சேண் மதி தேய்வது, அக் கொடிகள் தேய்க்கவே. 37

  217. மாளிகைகளின் ஒளிச் சிறப்பும் மணமும்

  218. பொன் திணி மண்டபம் அல்ல, பூத் தொடர்
    மன்றுகள்; அல்லன மாட மாளிகை;
    குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம்;
    முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே. 38

  219. மின் என, விளக்கு என, வெயிற் பிழம்பு என,
    துன்னிய தமனியத் தொழில் தழைத்த அக்
    கன்னி நல் நகர் நிழல் கதுவலால் அரோ,
    பொன்னுலகு ஆயது, அப் புலவர் வானமே! 39

  220. எழும் இடத்து அகன்று, இடை ஒன்றி, எல் படு
    பொழுதிடைப் போதலின், புரிசைப் பொன் நகர்,
    அழல் மணி திருத்திய அயோத்தியாளுடை
    நிழல் எனப் பொலியுமால்-நேமி வான் சுடர். 40

  221. ஆய்ந்த மேகலையவர் அம் பொன் மாளிகை
    வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய்த்
    தோய்ந்த மா கடல் நறுந் தூபம் நாறுமேல்,
    பாய்ந்த தாரையின் நிலை பகரல் வேண்டுமோ? 41

  222. ஆடலும் பாடலும்

  223. குழல் இசை மடந்தையர் குதலை, கோதையர்
    மழலை,-அம் குழல் இசை; மகர யாழ் இசை,
    எழில் இசை மடந்தையர் இன் சொல் இன் இசை,
    பழையர்தம் சேரியில் பொருநர் பாட்டு இசை. 42

  224. கண்ணிடைக் கனல் சொரி களிறு, கால் கொடு
    மண்ணிடை வெட்டுவ; வாட் கை மைந்தர்தம்
    பண்ணைகள் பயில் இடம் குழி படைப்பன;
    சுண்ணம் அக் குழிகளைத் தொடர்ந்து தூர்ப்பன. 43

  225. பந்துகள் மடந்தையர் பயிற்றுவாரிடைச்
    சிந்துவ முத்தினம்; அவை திரட்டுவார்
    அந்தம் இல் சில தியர்; ஆற்ற குப்பைகள்,
    சந்திரன் ஒளி கெட, தழைப்ப, தண் நிலா. 44

  226. அரங்கிடை மடந்தையர் ஆடுவார்; அவர்
    கருங் கடைக் கண் அயில் காமர் நெஞ்சினை
    உருங்குவ; மற்று, அவர் உயிர்கள் அன்னவர்
    மருங்குல்போல் தேய்வன; வளர்வது, ஆசையே. 45

  227. பொழிவன சோலைகள் புதிய தேன் சில;
    விழைவன தென்றலும் மிஞிறும் மெல்லென
    நுழைவன; அன்னவை நுழைய, நோவொடு
    குழைவன, பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையே. 46

  228. இறங்குவ மகர யாழ் எடுத்த இன் இசை
    நிறங் கிளர் பாடலான் நிமிர்வ; அவ்வழி
    கறங்குவ வள் விசிக் கருவி; கண் முகிழ்த்து
    உறங்குவ, மகளிரோடு ஓதும் கிள்ளையே. 47

  229. மங்கையரின் அழகு மேனி

  230. குதை வரிச் சிலைநுதல் கொவ்வை வாய்ச்சியர்
    பதயுகத் தொழில்கொடு, பழிப்பு இலாதன
    ததை மலர்த் தாமரை அன்ன தாளினால்,
    உதைபடச் சிவப்பன, உரவுத் தோள்களே. 48

  231. பொழுது உணர்வு அரிய அப் பொரு இல் மா நகர்த்
    தொழு தகை மடந்தையர் சுடர் விளக்கு எனப்
    பழுது அறு மேனியைப் பார்க்கும் ஆசைகொல்,
    எழுது சித்திரங்களும் இமைப்பு இலாதவே? 49

  232. தணி மலர்த் திருமகள் தங்கு மாளிகை
    இணர் ஒளி பரப்பி நின்று இருள் துரப்பன,
    திணி சுடர் நெய்யுடைத் தீ விளக்கமோ?
    மணி விளக்கு; அல்லன மகளிர் மேனியே. 50

  233. மதங்கியரின் ஆடல் பாடல்

  234. பதங்களில், தண்ணுமை, பாணி, பண் உற
    விதங்களின், விதி முறை சதி மிதிப்பவர்
    மதங்கியர்; அச் சதி வகுத்துக் காட்டுவ
    சதங்கைகள்; அல்லன புரவித் தார்களே. 51

  235. மாந்தரின் மகிழ்ச்சி

  236. முளைப்பன முறுவல்; அம் முறுவல் வெந் துயர்
    விளைப்பன; அன்றியும், மெலிந்து நாள்தொறும்
    இளைப்பன நுண் இடை; இளைப்ப, மென் முலை
    திளைப்பன, முத்தொடு செம் பொன் ஆரமே. 53

  237. தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை
    முழை விழை, கிரி நிகர் களிற்றின் மும் மத
    மழை விழும்; விழும்தொறும், மண்ணும் கீழ் உறக்
    குழை விழும்; அதில் விழும், கொடித் திண் தேர்களே. 54

  238. ஆடு வாம் புரவியின் குரத்தை யாப்பன,
    சூடுவார் இகழ்ந்த அத் தொங்கல் மாலைகள்;
    ஓடுவார் இழுக்குவது, ஊடல் ஊடு உறக்
    கூடுவார் வன முலை கொழித்த சாந்தமே. 55

  239. இளைப்ப அருங் குரங்களால், இவுளி, பாரினைக்
    கிளைப்பன; அவ் வழி, கிளர்ந்த தூளியின்
    ஒளிப்பன மணி; அவை ஒளிர, மீது தேன்
    துளிப்பன, குமரர்தம் தோளின் மாலையே. 56

  240. விலக்க அருங் கரி மதம் வேங்கை நாறுவ;
    குலக் கொடி மாதர் வாய் குமுதம் நாறுவ;
    கலக் கடை கணிப்ப அருங் கதிர்கள் நாறுவ;
    மலர்க் கடி நாறுவ, மகளிர் கூந்தலே. 57

  241. கோவை இந் நகரொடு எண் குறிக்கலாத அத்
    தேவர்தம் நகரியைச் செப்புகின்றது என்?
    யாவையும் வழங்கு இடத்து இகலி, இந் நகர்
    ஆவணம் கண்டபின், அளகை தோற்றதே! 58

  242. அதிர் கழல் ஒலிப்பன; அயில் இமைப்பன;
    கதிர் மணி அணி வெயில் கால்வ; மான்மதம்
    முதிர்வு உறக் கமழ்வன; முத்தம் மின்னுவ;
    மதுகரம் இசைப்பன;-மைந்தர் ஈட்டமே. 59

  243. வளை ஒலி, வயிர் ஒலி, மகர வீணையின்
    கிளை ஒலி, முழவு ஒலி, கின்னரத்து ஒலி,
    துளை ஒலி, பல் இயம் துவைக்கும் சும்மையின்
    விளை ஒலி, -கடல் ஒலி மெலிய, விம்முமே. 60

  244. மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்,
    அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்,
    உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம்,
    பன்ன அருங் கலை தெரி பட்டி மண்டபம். 61

  245. இரவியின் சுடர் மணி இமைக்கும், தோரணத்
    தெரிவினின் சிறியன, திசைகள்; சேண் விளங்கு
    அருவியின் பெரியன, ஆனைத் தானங்கள்;
    பரவையின் பெரியன, புரவிப் பந்தியே. 62

  246. சூளிகை மழை முகில் தொடக்கும் தோரண
    மாளிகை மலர்வன, மகளிர் வாள் முகம்;
    வாளிகள் அன்னவை மலர்வ; மற்று அவை,
    ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே. 63

  247. மன்னவர் கழலொடு மாறு கொள்வன,
    பொன் அணித் தேர் ஒலி, புரவித் தார் ஒலி;
    இன் நகையவர் சிலம்பு ஏங்க, ஏங்குவ,
    கன்னியர் குடை துறைக் கமல அன்னமே. 64

  248. நகர மாந்தரின் பொழுது போக்குகள்

  249. ஊடவும், கூடவும், உயிரின் இன் இசை
    பாடவும், விறலியர் பாடல் கேட்கவும்,
    ஆடவும், அகன் புனல் ஆடி அம் மலர்
    சூடவும், பொழுது போம்-சிலர்க்கு, அத் தொல் நகர். 65

  250. முழங்கு திண் கட கரி மொய்ம்பின் ஊரவும்,
    எழும் குரத்து இவுளியொடு இரதம் ஏறவும்,
    பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர
    வழங்கவும், பொழுது போம்-சிலர்க்கு, அம் மா நகர். 66

  251. கரியொடு கரி எதிர் பொருத்தி, கைப் படை
    வரி சிலை முதலிய வழங்கி, வால் உளைப்
    புரவியில் பொரு இல் செண்டு ஆடி, போர்க் கலை
    தெரிதலின், பொழுது போம்-சிலர்க்கு, அச் சேண் நகர். 67

  252. நந்தன வனத்து அலர் கொய்து, நவ்விபோல்
    வந்து, இளையவரொடு வாவி ஆடி, வாய்ச்
    செந் துவர் அழிதரத் தேறல் மாந்தி, சூது
    உந்தலின் பொழுது போம்-சிலர்க்கு, அவ் ஒள் நகர். 68

  253. கொடிகளும், தோரண வாயில் முதலியவும்

  254. நானா விதமா நளி மாதிர வீதி ஓடி,
    மீன் நாறு வேலைப் புனல் வெண் முகில் உண்ணு மாபோல்,
    ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீப் போய்,
    வான் ஆறு நண்ணி, புனல் வற்றிட நக்கும் மன்னோ. 69

  255. வன் தோரணங்கள் புணர் வாயிலும், வானின் உம்பர்
    சென்று ஓங்கி, மேல் ஓர் இடம் இல் எனச் செம் பொன் இஞ்சி-
    குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசைக் குப்பை என்ன-
    ஒன்றோடு இரண்டும், உயர்ந்து ஓங்கின, ஓங்கல் நாண. 70

  256. காடும், புனமும், கடல் அன்ன கிடங்கும், மாதர்
    ஆடும் குளனும், அருவிச் சுனைக் குன்றும், உம்பர்
    வீடும், விரவும் மணப் பந்தரும், வீணை வண்டும்
    பாடும் பொழிலும், மலர்ப் பல்லவப் பள்ளி மன்னோ! 71

  257. செல்வமும் கல்வியும் சிறந்த அயோத்தி

  258. தெள் வார் மழையும், திரை ஆழியும் உட்க, நாளும்,
    வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள்-
    கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும்
    கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ. 72

  259. கல்லாது நிற்பார் பிறர் இன்மையின், கல்வி முற்ற
    வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை;
    எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே,
    இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ. 73

  260. ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து, எண் இல் கேள்வி
    ஆகும் முதல் திண் பணை போக்கி, அருந் தவத்தின்
    சாகம் தழைத்து, அன்பு அரும்பி, தருமம் மலர்ந்து,
    போகங் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே. 74

  261. மிகைப் பாடல்கள்

  262. அரைசு எலாம் அவண; அணி எலாம்அவண; அரும் பெறல்மணி எலாம்அவண;
    புரைசை மால் களிறும், புரவியும், தேரும், பூதலத்து யாவையும், அவண;
    விரைசுவார், முனிவர்; விண்ணவர், இயக்கர், விஞ்சையர், முதலினோர் எவரும்
    உரை செய்வார் ஆனார்; ஆனபோது, அதனுக்கு உவமை தான் அரிதுஅரோ, உளதோ? 6-1

  263. எங்கும் பொலியும் பரஞ் சுடர் ஆகி, எவ் உயிரும்
    மங்கும் பிறவித் துயர் அற, மாற்று நேசம்
    தங்கும் தருமத்து உரு ஆகி, தரணி மீது
    பொங்கும் கருணைப் புத்தேள் கருத்து யாம் எவன் புகல்வோம்? 74-1

  264. வேதம் அதனுள் விளைபொருள் விகற்பத்துள் அடங்காச்
    சோதி மயமாய்த் துலங்கி, தொல் உயிர்த் தொகை பலவாய்,
    ஓது புவனம் உதரத்துள் ஒடுக்கியே, பூக்கும்
    ஆதி முதல்வன் அமர் இடம் அயோத்தி மா நகரம். 74-2

  265. பால காண்டம்

    4. அரசியற் படலம்


    தயரதன் மாண்பு

  266. அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்;
    செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்;
    இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்
    மொய்ம் மாண் கழலோன் - தரு நல் அற மூர்த்தி அன்னான். 1

  267. ஆதிம் மதியும், அருளும், அறனும், அமைவும்,
    ஏதில் மிடல் வீரமும், ஈகையும், எண் இல் யாவும்,
    நீதிந் நிலையும், இவை, நேமியினோர்க்கு நின்ற
    பாதி; முழுதும் இவற்கே பணி கேட்ப மன்னோ. 2

  268. மொய் ஆர்கலி சூழ் முது பாரில், முகந்து தானக்
    கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;
    மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்த்த, யாரும்
    செய்யாத, யாகம் இவன் செய்து மறந்த மாதோ. 3

  269. தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
    சேய் ஒக்கும், முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
    நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
    ஆயப் புகும்கால், அறிவு ஒக்கும்;-எவர்க்கும், அன்னான். 4

  270. ஈந்தே கடந்தான், இரப்போர் கடல்; எண் இல் நுண் நூல்
    ஆய்ந்தே கடந்தான், அறிவு என்னும் அளக்கர்; வாளால்
    காய்ந்தே கடந்தான், பகை வேலை; கருத்து முற்றத்
    தோய்ந்தே கடந்தான், திருவின் தொடர் போக பௌவம். 5

  271. வெள்ளமும், பறவையும், விலங்கும், வேசையர்
    உள்ளமும், ஒரு வழி ஓட நின்றவன்;
    தள்ள அரும் பெரும் புகழ்த் தயரதப் பெயர்
    வள்ளல்; வள் உறை அயில் மன்னர் மன்னனே. 6

  272. உலகமனைத்தையும் ஒரு குடைக் கீழ் ஆள்பவன்

  273. நேமி மால் வரை மதில் ஆக, நீள் புறப்
    பாம மா கடல் கிடங்கு ஆக, பல் மணி
    வாம மாளிகை மலை ஆக, மன்னற்குப்
    பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே. 7

  274. பாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால்
    மே வரும் கை அடை வேலும் தேயுமால்;
    கோவுடை நெடு மணி மகுட கோடியால்
    சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால். 8

  275. தயரதனின் குடையும் செங்கோலும்

  276. மண்ணிடை உயிர்தொறும் வளர்ந்து, தேய்வு இன்றி,
    தண் நிழல் பரப்பவும், இருளைத் தள்ளவும்,
    அண்ணல்தன் குடை மதி அமையும்; ஆதலான்,
    விண்ணிடை மதியினை மிகை இது என்பவே. 9

  277. தயரதன் அரசு செய்யும் திறம்

  278. வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்,
    உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்,
    செயிர் இலா உலகினில், சென்று, நின்று, வாழ்
    உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான். 10

  279. குன்றென உயரிய குவவுத் தோளினான்,
    வென்றி அம் திகிரி, வெம் பருதியாம் என,
    ஒன்றென உலகிடை உலாவி, மீமிசை
    நின்று, நின்று, உயிர்தொறும் நெடிது காக்குமே. 11

  280. எய் என பழு பகை எங்கும் இன்மையால்,
    மொய் பெறாத் தினவு உறு முழவுத் தோளினான்,
    வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
    செய் எனக் காத்து, இனிது அரசு செய்கின்றான். 12

  281. மிகைப் பாடல்கள்

  282. விரிகதிர் பரப்பி, மெய்ப் புவனம் மீது இருள்
    பருகுறும் பரிதி அம் குலத்தில், பார்த்திபன்
    இரகு, மற்று அவன் மகன் அயன் என்பான், அவன்
    பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே. 5-1

  283. பால காண்டம்

    5. திரு அவதாரப் படலம்



  284. மகப் பேறு இல்லாமை குறித்து தயரதன் வசிட்டனிடம் வருந்துதல்

  285. ஆயவன், ஒரு பகல், அயனையே நிகர்
    தூய மா முனிவனைத் தொழுது, தொல் குலத்
    தாயரும், தந்தையும், தவமும், அன்பினால்
    மேய வான் கடவுளும், பிறவும், வேறும், நீ; 1

  286. எம் குலத் தலைவர்கள், இரவிதன்னினும்
    தம் குலம் விளங்குறத் தரணி தாங்கினார்,
    மங்குநர் இல் என, வரம்பு இல் வையகம்,
    இங்கு, நின் அருளினால், இனிதின் ஓம்பினேன். 2

  287. அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற,
    உறு பகை ஒடுக்கி, இவ் உலகை ஓம்பினேன்;-
    பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்
    மறுகுவது என்பது ஓர் மறுக்கம் உண்டுஅரோ. 3

  288. அருந் தவ முனிவரும், அந்தணாளரும்,
    வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார்;
    இருந் துயர் உழக்குநர் என் பின் என்பது ஓர்
    அருந் துயர் வருத்தும், என் அகத்தை என்றனன். 4

  289. முன்னம் அமரர்க்குத் திருமால் அருளியதை வசிட்டன் சிந்தித்தல்

  290. முரசு அறை செழுங் கடை, முத்த மா முடி,
    அரசர் தம் கோமகன் அனைய கூறலும்,
    விரை செறி கமல மென் பொருட்டில் மேவிய
    வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான்- 5

  291. அலை கடல் நடுவண், ஓர் அனந்தன் மீமிசை,
    மலை என விழி துயில்வளரும் மா முகில்,
    கொலைதொழில் அரக்கர்தம் கொடுமை தீர்ப்பென் என்று,
    உலைவுறும் அமரருக்கு உரைத்த வாய்மையே. 6

  292. பாக சாதனந்தனைப் பாசத்து ஆர்த்து, அடல்
    மேகநாதன், புகுந்து இலங்கை மேய நாள்,-
    போக மா மலர் உறை புனிதன்,- மீட்டமை,
    தோகை பாகற்கு உறச் சொல்லினான் அரோ. 7

  293. இருபது கரம், தலை ஈர்-ஐந்து, என்னும் அத்
    திருஇலி வலிக்கு, ஒரு செயல் இன்று, எங்களால்;
    கரு முகில் என வளர் கருணை அம் கடல்
    பொருது, இடர் தணிக்கின் உண்டு எனும் புணர்ப்பினால். 8

  294. திரை கெழு பயோததித் துயிலும், தெய்வ வான்
    மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால்,
    கர கமலம் குவித்து இருந்த காலையில்,-
    பரகதி உணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன், 9

  295. கரு முகில் தாமரைக் காடு பூத்து, நீடு
    இரு சுடர் இரு புறத்து ஏந்தி, ஏந்து அலர்த்
    திருவொடும் பொலிய, ஓர் செம்பொன் குன்றின்மேல்
    வருவபோல், கலுழன்மேல் வந்து தோன்றினான். 10

  296. எழுந்தனர், கறைமிடற்று இறையும்; தாமரைச்
    செழுந் தவிசு உவந்த அத் தேவும் சென்று, எதிர்
    விழுந்தனர் அடிமிசை விண்ணுளோரொடும்;
    தொழும்தொறும், தொழும் தொறும், களி துளங்குவார். 11

  297. ஆடினர்; பாடினர்; அங்கும் இங்குமாய்
    ஓடினர்; உவகை மா நறவு உண்டு ஓர்கிலார்;
    வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால்,
    சூடினர், முறை முறை துளவத் தாள்-மலர். 12

  298. பொன்வரை இழிவது ஓர் புயலின் பொற்பு உற,
    என்னை ஆள் உடையவன் தோள்நின்று எம்பிரான்,
    சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து, அரி
    துன்னு பொற் பீடமேல் பொலிந்து தோன்றினான். 13

  299. விதியொடு முனிவரும், விண்ணுளோர்களும்,-
    மதி வளர் சடைமுடி மழுவலாளனும்
    அதிசயமுடன் உவந்து, அயல் இருந்துழி-
    கொதி கொள் வேல் அரக்கர் தம் கொடுமை கூறுவார்: 14

  300. ஐ-இரு தலையினோன் அனுசர் ஆதியாம்
    மெய் வலி அரக்கரால், விண்ணும் மண்ணுமே
    செய் தவம் இழந்தன; -திருவின் நாயக!-
    உய் திறம் இல்லை என்று உயிர்ப்பு வீங்கினார். 15

  301. எங்கள் நீள் வரங்களால், அரக்கர் என்று உளார்,
    பொங்கு மூஉலகையும் புடைத்து அழித்தனர்;
    செங் கண் நாயக! இது தீர்த்தி; இல்லையேல்,
    நுங்குவர் உலகை, ஓர் நொடியில் என்றனர். 16

  302. என்றனர், இடர் உழந்து, இறைஞ்சி ஏத்தலும்,
    மன்றல் அம் துளவினான், வருந்தல்; வஞ்சகர்-
    தம் தலை அறுத்து, இடர் தணிப்பென் தாரணிக்கு;
    ஒன்று நீர் கேண்ம் என, உரைத்தல் மேயினான்: 17

  303. வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய்,
    கானினும், வரையினும், கடி தடத்தினும்,
    சேனையோடு அவதரித்திடுமின் சென்று என,
    ஆனனம் மலர்ந்தனன் -அருளின் ஆழியான்: 18

  304. மசரதம் அனையவர் வரமும், வாழ்வும், ஓர்
    நிசரத கணைகளால் நீறுசெய்ய, யாம்,
    கச ரத துரக மாக் கடல்கொள் காவலன்,
    தசரதன், மதலையாய் வருதும் தாரணி. 19

  305. வளையொடு திகிரியும், வடவை தீதர
    விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்,
    இளையர்கள் என அடி பரவ ஏகி, நாம்,
    வளைமதில் அயோத்தியில் வருதும் என்றனன். 20

  306. என்று அவன் உரைத்தபோது, எழுந்து துள்ளினார்;
    நன்றிகொள் மங்கல நாதம் பாடினார்;-
    மன்றல் அம் செழுந் துளவு அணியும் மாயனார்,
    இன்று எமை அளித்தனர் என்னும் ஏம்பலால். 21

  307. போயது எம் பொருமல் என்னா, இந்திரன் உவகை பூத்தான்;
    தூய மா மலர் உளோனும், சுடர்மதி சூடினோனும்,
    சேய் உயர் விசும்பு உளோரும், தீர்ந்தது எம் சிறுமை என்றார்;
    மா இரு ஞாலம் உண்டோ ன், கலுழன்மேல் சரணம் வைத்தான். 22

  308. என்னை ஆளுடைய ஐயன், கலுழன் மீது எழுந்து போய
    பின்னர், வானவரை நோக்கி, பிதாமகன் பேசுகின்றான்:
    முன்னரே எண்கின்வேந்தன் யான்-என, முடுகினேன்; மற்று,
    அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடுமின் என்றான். 23

  309. தருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான், எனது கூறு
    மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும் என்ன;
    இரவி, மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத;
    அரியும், மற்று எனது கூறு நீலன் என்று அறைந்திட்டானால். 24

  310. வாயு, மற்று எனது கூறு மாருதி எனலும், மற்றோர்,
    காயும் மற்கடங்கள் ஆகி, காசினி அதனின்மீது
    போயிடத் துணிந்தோம் என்றார்; புராரி, மற்று யானும் காற்றின்
    சேய் எனப் புகன்றான்; மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ . 25

  311. அருள் தரும் கமலக் கண்ணன் அருள்முறை, அலர் உளோனும்,
    இருள் தரும் மிடற்றினோனும், அமரரும், இனையர் ஆகி
    மருள் தரும் வனத்தில், மண்ணில், வானரர் ஆகி வந்தார்;
    பொருள் தரும் இருவர் தம் தம் உறைவிடம் சென்று புக்கார். 26

  312. புதல்வரை அளிக்கும் வேள்வி செய்ய வசிட்டன் கூறுதல்

  313. ஈது, முன் நிகழ்ந்த வண்ணம் என, முனி, இதயத்து எண்ணி,
    மாதிரம் பொருத திண் தோள் மன்ன! நீ வருந்தல்; ஏழ்-ஏழ்
    பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி,
    தீது அற முயலின், ஐய! சிந்தைநோய் தீரும் என்றான். 27

  314. வேள்வி செய்ய வேண்டுவது யாது என தயரதன் வினவுதல்

  315. என்ன மா முனிவன் கூற, எழுந்த பேர் உவகை பொங்க,
    மன்னவர்மன்னன், அந்த மா முனி சரணம் சூடி,
    உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது உண்டோ ?
    அன்னதற்கு, அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி என்றான். 28

  316. கலைக்கோட்டு முனிவனைக் கொண்டு வேள்வி செய்யுமாறு வசிட்டன் உரைத்தல்

  317. மாசு அறு சுரர்களோடு மற்றுளோர் தமையும் ஈன்ற
    காசிபன் அருளும் மைந்தன், விபாண்டகன், கங்கை சூடும்
    ஈசனும் புகழ்தற்கு ஒத்தோன், இருங் கலை பிறவும் எண்ணின்
    தேசுடைத் தந்தை ஒப்பான், திருவருள் புனைந்த மைந்தன், 29

  318. வரு கலை பிறவும், நீதி மனுநெறி வரம்பும், வாய்மை
    தரு கலை மறையும், எண்ணின், சதுமுகற்கு உவமை சான்றோன்,
    திருகலை உடைய இந்தச் செகத்து உளோர் தன்மை தேரா
    ஒரு கலை முகச் சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும். 30

  319. பாந்தளின் மகுட கோடி பரித்த பார் அதனில் வைகும்
    மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன், மா தவத்தன், எண்ணின்
    பூந் தவிசு உகந்து உளோனும், புராரியும், புகழ்தற்கு ஒத்த
    சாந்தனால் வேள்வி முற்றின், தணையர்கள் உளர் ஆம் என்றான். 31

  320. கலைக்கோட்டு முனிவனை அழைத்து வரும் வழி பற்றி தயரதன் கேட்டல்

  321. ஆங்கு, உரை இனைய கூறும் அருந் தவர்க்கு அரசன், செய்ய
    பூங் கழல் தொழுது, வாழ்த்தி, பூதல மன்னர் மன்னன்,
    தீங்கு அறு குணத்தால் மிக்க செழுந் தவன் யாண்டை உள்ளான்?
    ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி, இறைவ! என்றான். 32

  322. கலைக்கோட்டு முனிவனின் வரலாற்றை வசிட்டன் உரைத்தல்

  323. புத்து ஆன கொடு வினையோடு அருந் துயரம் போய் ஒளிப்ப,-புவனம் தாங்கும்
    சத்து ஆன குணம் உடையோன், தயையினொடும் தண் அளியின் சலை போல்வான்,
    எத்தானும் வெலற்கு அரியான்,மனுகுலத்தே வந்து உதித்தோன்,இலங்கும் மோலி
    உத்தானபாதன்,-அருள் உரோமபதன் என்றுஉளன்,இவ் உலகை ஆள்வோன்;33

  324. அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடுங் காலம் அளவது ஆக,
    மின்னி எழு முகில் இன்றி வெந் துயரம் பெருகுதலும், வேத நல் நூல்
    மன்னு முனிவரை அழைத்து, மா தானம் கொடுத்தும், வான் வழங்காது ஆக,
    பின்னும், முனிவரர்க் கேட்ப, கலைக்கோட்டு-முனி வரின், வான் பிலிற்றும் என்றார்.34

  325. ஓத நெடுங் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும்
    கோது இல் குணத்து அருந் தவனைக் கொணரும் வகை யாவது? எனக் குணிக்கும் வேலை
    சோதி நுதல், கரு நெடுங் கண், துவர் இதழ் வாய், தரள நகை, துணை மென் கொங்கை,
    மாதர் எழுந்து, யாம் ஏகி, அருந் தவனைக் கொணர்தும் என, வணக்கம் செய்தார். 35

  326. ஆங்கு, அவர் அம் மொழி உரைப்ப, அரசன் மகிழ்ந்து, அவர்க்கு, அணி, தூசு, ஆதி ஆய
    பாங்கு உள மற்றவை அருளி, பனிப் பிறையைப் பழித்த நுதல், பணைத்த வேய்த் தோள்,
    ஏங்கும் இடை,தடித்த முலை,இருண்ட குழல்,மருண்ட விழி,இலவச் செவ்வாய்ப்
    பூங்கொடியீர்! ஏகும் என, தொழுது இறைஞ்சி, இரதமிசைப் போயினாரே. 36

  327. ஓசனை பல கடந்து, இனி ஒர் ஓசனை
    ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி,
    பாசிழை மடந்தையர், பன்னசாலை செய்து,
    ஆசு அறும் அருந் தவத்தவரின் வைகினார். 37

  328. அருந் தவன் தந்தையை அற்றம் நோக்கியே,
    கருந் தடங் கண்ணியர், கலை வலாளன் இல்
    பொருந்தினர்; பொருந்துபு, விலங்கு எனாப் புரிந்து
    இருந்தவர் இவர் என, இனைய செய்தனர். 38

  329. அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து,
    இருக்க என, இருந்த பின், இனிய கூறலும்,
    முருக்கு இதழ் மடந்தையர் முனிவனைத் தொழா,
    பொருக்கென எழுந்து போய், புரையுள் புக்கனர். 39

  330. திருந்து இழையவர், சில தினங்கள் தீர்ந்துழி,
    மருந்தினும் இனியன வருக்கை, வாழை, மாத்
    தருங் கனி பலவொடு, தாழை இன் கனி,
    அருந் தவ, அருந்து என, அருந்தினான் அரோ. 40

  331. இன்னவன் பல் பகல் இறந்தபின், திரு
    நல் நுதல் மடந்தையர், நவை இல் மாதவன் -
    தன்னை, எம் இடத்தினும், சார்தல் வேண்டும் என்று,
    அன்னவர் தொழுதலும், அவரொடு ஏகினான். 41

  332. விம்முறும் உவகையர், வியந்த நெஞ்சினர்,
    அம்ம! ஈது, இது என, அகலும் நீள் நெறி,
    செம்மை சேர் முனிவரன் தொடரச் சென்றனர்;-
    தம் மனம் என மருள் தையலார்களே. 42

  333. வளநகர் முனிவரன் வருமுன், வானவன்
    களன் அமர் கடு எனக் கருகி, வான் முகில்,
    சள சள என மழைத் தாரை கான்றன-
    குளனொடு நதிகள் தம் குறைகள் தீரவே. 43

  334. பெரும் புனல், நதிகளும் குளனும், பெட்பு உற,
    கரும்பொடு செந்நெலும் கவின் கொண்டு ஓங்கிட,
    இரும் புயல் ககன மீது இடைவிடாது எழுந்து
    அரும் புனல் சொரிந்து போது, அரசு உணர்ந்தனன். 44

  335. காமமும், வெகுளியும், களிப்பும், கைத்த அக்
    கோமுனி இவண் அடைந்தனன் கொல்-கொவ்வை வாய்த்
    தாமரை மலர் முகத் தரள வாள் நகைத்
    தூம மென் குழலினர் புணர்த்த சூழ்ச்சியால்? 45

  336. என்று எழுந்து, அரு மறை முனிவர் யாரொடும்
    சென்று, இரண்டு ஓசனை சேனை சூழ்தர,
    மன்றல் அம் குழலியர் நடுவண், மா தவக்
    குன்றினை எதிர்ந்தனன் - குவவுத் தோளினான். 46

  337. வீழ்ந்தனன் அடிமிசை, விழிகள் நீர் தர;
    வாழ்ந்தனெம் இனி என, மகிழும் சிந்தையான்,
    தாழ்ந்து எழு மாதரார் தம்மை நோக்கி, நீர்
    போழ்ந்தனிர் எனது இடர், புணர்ப்பினால் என்றான். 47

  338. அரசனும் முனிவரும் அடைந்த ஆயிடை,
    வர முனி, வஞ்சம் என்று உணர்ந்த மாலைவாய்,
    வெருவினர் விண்ணவர்; வேந்தன் வேண்டலால்,
    கரை எறியாது அலை கடலும் போன்றனன். 48

  339. வள் உறு வயிர வாள் மன்னன், பல் முறை,
    எள்ள அரு முனிவனை இறைஞ்சி, யாரினும்
    தள்ள அருந் துயரமும், சமைவும், சாற்றலும்,
    உள் உறு வெகுளி போய் ஒளித்த தாம் அரோ. 49

  340. அருள் சுரந்து, அரசனுக்கு ஆசியும் கொடுத்து,
    உருள் தரும் தேரின்மீது ஒல்லை ஏறி, நல்
    பொருள தரும் முனிவரும் தொடரப் போயினன் -
    மருள் ஒழி உணர்வுடை வரத மா தவன். 50

  341. அடைந்தனன், வள நகர் அலங்கரித்து எதிர்
    மிடைந்திட, முனியொடும் வேந்தன்; கோயில் புக்கு,
    ஒடுங்கல் இல் பொன் குழாத்து உறையுள் எய்தி, ஓர்
    மடங்கல்-ஆதனத்தின்மேல் முனியை வைத்தனன். 51

  342. அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி, வேறு
    உரைக்குவது இலது என உவந்து, தான் அருள்
    முருக்கு இதழ்ச் சாந்தையாம் முக நலாள்தனை,
    இருக்கொடு விதிமுறை இனிதின் ஈந்தனன். 52

  343. வறுமை நோய் தணிதர வான் வழங்கவே,
    உறு துயர் தவிர்ந்தது, அவ் உலகம்; வேந்து அருள்
    செறிகுழல் போற்றிட, திருந்து மா தவத்து
    அறிஞன், ஆண்டு இருக்குநன்; அரச! என்றனன். 53

  344. கலைக்கோட்டு முனிவனை அழைக்கத் தயரதன் உரோமபதன் நாட்டுக்குச் செல்லுதல்

  345. என்றலுமே,முனிவரன்தன் அடிஇறைஞ்சி,ஈண்டு ஏகிக் கொணர்வென்என்னா,
    துன்று கழல் முடிவேந்தர் அடி போற்ற, சுமந்திரனே முதல்வர் ஆய
    வன் திறல் சேர் அமைச்சர் தொழ, மா மணித் தேர் ஏறுதலும், வானோர் வாழ்த்தி,
    இன்று எமது வினை முடிந்தது எனச் சொரிந்தார் மலர் மாரி, இடைவிடாமல். 54

  346. காகளமும் பல் இயமும் கனை கடலின் மேல் முழங்க, கானம் பாட,
    மாகதர்கள், அரு மறை நூல் வேதியர்கள், வாழ்த்து எடுப்ப, மதுரச் செவ் வாய்த்
    தோகையர் பல்லாண்டு இசைப்ப, கடல்-தானை புடை சூழ, சுடரோன் என்ன
    ஏகி, அரு நெறி நீங்கி, உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே. 55

  347. உரோமபதன் தயரதனை எதிர்கொண்டழைத்து உபசரித்தல்

  348. கொழுந்து ஓடிப் படர் கீர்த்திக் கோவேந்தன் அடைந்தமை சென்று ஒற்றர் கூற,
    கழுந்து ஓடும் வரி சிலைக் கைக் கடல்-தானை புடை சூழ, கழற் கால் வேந்தன்,
    செழுந் தோடும் பல் கலனும் வெயில் வீச, மாகதர்கள் திரண்டு வாழ்த்த,
    எழுந்து ஓடும் உவகையுடன் ஓசனை சென்றனன் - அரசை எதிர்கோள் எண்ணி. 56

  349. எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் - தனைக் கண்ணுற்று, எழிலி நாண
    அதிர்கின்ற பொலந் தேர் நின்று அரசர்பிரான் இழிந்துழி, சென்று அடியில் வீழ,
    முதிர்கின்ற பெருங் காதல் தழைத்து ஓங்க, எடுத்து இறுக முயங்கலோடும்,
    கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி, இவை உரைத்தான் - களிப்பின் மிக்கான்: 57

  350. யான் செய்த மா தவமோ! இவ் உலகம் செய் தவமோ! யாதோ! இங்ஙன்,
    வான் செய்த சுடர் வேலோய்! அடைந்தது? என, மனம் மகிழா மணித் தேர் ஏற்றி,
    தேன் செய்த தார் மௌலித் தேர் வேந்தைச் செழு நகரில் கொணர்ந்தான் - தெவ்வர்
    ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவுத் தோளான் 58

  351. ஆடகப் பொன் சுடர்,இமைக்கும் அணி மாடத் திடை,ஓர் மண்டபத்தை அண்மி,
    பாடகச் செம் பதும மலர்ப் பாவையர் பல்லாண்டு இசைப்ப, பைம் பொன் பீடத்து,
    ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி, கடன்முறைகள் யாவும் நேர்ந்து,
    தோடு துற்ற மலர்த் தாரான் விருந்து அளிப்ப, இனிது உவந்தான், சுரர் நாடு ஈந்தான்.59

  352. கலைக்கோட்டு முனிவனை தயரதன் விருப்பப்படி அயோத்திக்கு அழைத்துவருவதாக
    உரோமபதன் கூறல்

  353. செவ்வி நறுஞ் சாந்து அளித்து, தேர் வேந்தன் தனைநோக்கி, இவண் நீ சேர்ந்த
    கவ்வை உரைத்து அருள்தி என, நிகழ்ந்த பரிசு அரசர்பிரான் கழறலோடும்,
    அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அருந் தவனைக் கொணர்ந்து ஆங்கண் விடுப்பென்; ஆன்ற
    செவ்வி முடியோய்!எனலும்,தேர்ஏறிச் சேனையொடும்அயோத்தி சேர்ந்தான்.60

  354. உரோமபதன் வேண்ட, கலைக்கோட்டு முனிவன் மனைவியுடன் அயோத்திக்குப் புறப்படுதல்

  355. மன்னர்பிரான் அகன்றதன்பின்,வயவேந்தன்,அருமறைநூல் வடிவம் கொண்டது
    அன்ன முனிவரன் உறையுள்தனை அணுகி,அடிஇணைத்தாமரைகள் அம்பொன்
    மன்னு மணி முடி அணிந்து, வரன்முறை செய்திட, இவண் நீ வருதற்கு ஒத்தது
    என்னை? என, அடியேற்கு ஓர் வரம் அருளும்; அடிகள்! என, யாவது? என்றான். 61

  356. புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க பெருந்தகைதன் புகழில் பூத்த
    அறன்ஒன்றும் திருமனத்தான்,அமரர்களுக்கு இடர்இழைக்கும் அவுணர் ஆயோர்
    திறல் உண்ட வடிவேலான்,தசரதன் என்று,உயர்கீர்த்திச் செங்கோல்வேந்தன்,
    விறல் கொண்ட மணி மாட அயோத்திநகர் அடைந்து, இவண் நீ மீள்தல்! என்றான். 62

  357. அவ் வரம் தந்தனம்; இனித் தேர் கொணர்தி என, அருந் தவத்தோன் அறைதலோடும்,
    வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன், அடி இறைஞ்சி, வேந்தர்வேந்தன்
    கவ்வை ஒழிந்து உயர்ந்தனன் என்று, அதிர் குரல் தேர் கொணர்ந்து, இதனில், கலை வலாள!
    செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக! என, ஏறிச் சிறந்தான் மன்னோ. 63

  358. முனிவன் போவதைக் கண்டு, தேவர்கள் மகிழ்தல்

  359. குனி சிலை வயவனும் கரங்கள் கூப்பிட,
    துனி அறு முனிவரர் தொடர்ந்து சூழ்வர,
    வனிதையும், அரு மறை வடிவு போன்று ஒளிர்
    முனிவனும், பொறிமிசை நெறியை முன்னினார். 64

  360. அந்தர துந்துமி முழக்கி, ஆய் மலர்
    சிந்தினர், களித்தனர் - அறமும் தேவரும் -
    வெந்து எழு கொடு வினை வீட்டும் மெய்ம்முதல்
    வந்து எழ அருள் தருவான் என்று எண்ணியே. 65

  361. தயரதன் மகிழ்வுடன் முனிவனை எதிர்கொள்ளல்

  362. தூதுவர் அவ் வழி அயோத்தி துன்னினார்;
    மாதிரம் பொருத தோள் மன்னர்மன்னன்முன்
    ஓதினர், முனி வரவு; ஓத, வேந்தனும்,
    காதல் என்ற அளவு அறும் கடலுள் ஆழ்ந்தனன். 66

  363. எழுந்தனன் பொருக்கென, இரதம் ஏறினன்;
    பொழிந்தன மலர் மழை; ஆசி பூத்தன;
    மொழிந்தன பல் இயம்; முரசம் ஆர்த்தன;
    விழுந்தன தீவினை, வேரினோடுமே. 67

  364. தயரதன் அடிவணங்க, முனிவன் ஆசி கூறுதல்

  365. பிதிர்ந்தது எம் மனத் துயர்ப் பிறங்கல் என்று கொண்டு,
    அதிர்ந்து எழு முரசுடை அரசர் கோமகன்
    முதிர்ந்த மா தவமுடை முனியை, கண்களால்
    எதிர்ந்தனன், ஓசனை இரண்டொடு ஒன்றினே. 68

  366. நல் தவம் அனைத்தும், ஓர் நவை இலா உருப்
    பெற்று, இவண் அடைந்தெனப் பிறங்குவான் தனை,
    சுற்றிய சீரையும், உழையின் தோற்றமும்,
    முற்று உறப் பொலிதரு மூர்த்தியான் தனை, 69

  367. அண்டர்கள் துயரமும், அரக்கர் ஆற்றலும்,
    விண்டிடப் பொலிதரும் வினை வலாளனை,
    குண்டிகை, குடையொடும், குலவு நூல் முறைத்
    தண்டொடும், பொலிதரு தடக் கையான் தனை, 70

  368. இழிந்து போய் இரதம், ஆண்டு, இணை கொள் தாள் மலர்
    விழுந்தனன், வேந்தர்தம் வேந்தன், மெய்ம்மையால்,
    மொழிந்தனன் ஆசிகள்-முதிய நான்மறைக்
    கொழுந்து மேல் படர் தரக் கொழுகொம்பு ஆயினான். 71
    தயரதன் முனிவனுடன் அயோத்தியை அடைதல்

  369. அயல் வரும் முனிவரும் ஆசி கூறிட,
    புயல் பொழி தடக் கையால் தொழுது, பொங்கு நீர்க்
    கயல் பொரு விழியொடும் கலை வலாளனை,
    இயல்பொடு கொணர்ந்தனன், இரதம் ஏற்றியே. 72

  370. அடி குரல் முரசு அதிர் அயோத்தி மா நகர்
    முடியுடை வேந்தன், அம் முனிவனோடும், ஓர்
    கடிகையின் அடைந்தனன், -கமல வாள் முக
    வடிவுடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே. 73

  371. வசிட்டனுடன் கலைக்கோட்டு முனிவன் அரசவை அடைதல்

  372. கசட்டுறு வினைத் தொழில் கள்வராய் உழல்
    அசட்டர்கள் ஐவரை அகத்து அடக்கிய
    வசிட்டனும், அரு மறை வடிவு போன்று ஒளிர்
    விசிட்டனும், வேத்தவை பொலிய மேவினார். 74

  373. தயரதன் கலைக்கோட்டு முனிவனை உபசரித்து மொழிதல்

  374. மா மணி மண்டபம் மன்னி, மாசு அறு
    தூ மணித் தவிசிடை, சுருதியே நிகர்
    கோ முனிக்கு அரசனை இருத்தி, கொள் கடன்
    ஏமுறத் திருத்தி, வேறு, இனைய செப்பினான்: 75

  375. சான்றவர் சான்றவ! தருமம், மா தவம்,
    போன்று ஒளிர் புனித! நின் அருளில் பூத்த என்
    ஆன்ற தொல் குலம் இனி அரசின் வைகுமால்;
    யான் தவம் உடைமையும், இழப்பு இன்றாம் அரோ. 76

  376. முனிவன் தன்னை அழைத்த காரணம் வினாவுதல்

  377. என்னலும், முனிவரன் இனிது நோக்குறா,
    மன்னவர்மன்ன! கேள்: வசிட்டன் என்னும் ஓர்
    நல் நெடுந் தவன் துணை; நவை இல் செய்கையால்,
    நின்னை இவ் உலகினில் நிருபர் நேர்வரோ? 77

  378. என்று இவை பற்பல இனிமை கூறி, நல்
    குன்று உறழ் வரி சிலைக் குவவுத் தோளினாய்!
    நன்றி கொள் அரி மகம் நடத்த எண்ணியோ,
    இன்று எனை அழைத்தது இங்கு? இயம்புவாய்! என்றான். 78

  379. மைந்தர் இல்லாக் குறையை மன்னன் தெரிவித்தல்

  380. உலப்பு இல் பல் ஆண்டு எலாம், உறுகண் இன்றியே,
    தலப் பொறை ஆற்றினென்; தனையர் வந்திலர்;
    அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை
    நலப் புகழ் பெற, இனி நல்க வேண்டுமால். 79

  381. மைந்தரை அளிக்கும் வேள்வி இயற்றவேண்டும் என முனிவன் கூறுதல்

  382. என்றலும், அரச! நீ இரங்கல்; இவ் உலகு
    ஒன்றுமோ? உலகம் ஈர் - ஏழும் ஓம்பிடும்
    வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்
    இன்று நீ இயற்றுதற்கு எழுக, ஈண்டு! என்றான். 80

  383. மன்னன் யாகசாலையில் புகுதல்

  384. ஆயதற்கு உரியன கலப்பை யாவையும்
    ஏயெனக் கொணர்ந்தனர்; நிருபர்க்கு ஏந்தலும்,
    தூய நல் புனல் படீஇ, சுருதி நூல் முறை
    சாய்வு அறத் திருத்திய சாலை புக்கனன். 81

  385. முனிவன் பன்னிரு திங்கள் வேள்வி இயற்றி, மகவு அருள் ஆகுதி வழங்குதல்

  386. முழங்கு அழல் மும்மையும் முடுகி, ஆகுதி
    வழங்கியே, ஈர்-அறு திங்கள் வாய்த்த பின்,
    தழங்கின துந்துமி; தா இல் வானகம்
    விழுங்கினர் விண்ணவர், வெளி இன்று என்னவே. 82

  387. முகமலர் ஒளிதர மொய்த்து, வான் உளோர்,
    அக விரை நறு மலர் தூவி, ஆர்த்து எழ,
    தகவுடை முனியும், அத் தழலின் நாப்பணே,
    மக அருள் ஆகுதி வழங்கினான் அரோ. 83

  388. வேள்வித் தீயில் பூதம் எழுந்து, சுதை நிகர் பிண்டத்தைத் தரையில் வைத்து மறைதல்

  389. ஆயிடை, கனலின் நின்று, அம் பொன் தட்டினில்
    தூய நல் சுதை, நிகர் பிண்டம் ஒன்று, - சூழ்
    தீ எரிப் பங்கியும், சிவந்த கண்ணும் ஆய்,
    ஏயென, பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே. 84

  390. வைத்தது தரைமிசை, மறித்தும் அவ் வழி
    தைத்தது பூதம். அத் தவனும், வேந்தனை,
    உய்த்த நல் அமுதினை, உரிய மாதர்கட்கு,
    அத் தகு மரபில்நின்று, அளித்தியால் என்றான். 85

  391. முனிவன் பணித்தபடி, தயரதன் தம் மனைவியர் மூவர்க்கும் பிண்டத்தைப் பகிர்ந்து அளித்தல்

  392. மா முனி பணித்திட, மன்னர் மன்னவன்,
    தூம மென் சுரி குழல் தொண்டைத் தூய வாய்க்
    காமரு கோசலை கரத்தில், ஓர் பகிர்,
    தாம் உற அளித்தனன், சங்கம் ஆர்த்து எழ. 86

  393. கைகயன் தனையைதன் கரத்தும், அம் முறைச்
    செய்கையின் அளித்தனன், தேவர் ஆர்த்து எழ-
    பொய்கையும், நதிகளும், பொழிலும், ஓதிமம்
    வைகுறு கோசல மன்னர் மன்னனே. 87

  394. நமித்திரர் நடுக்குறு நலம் கொள் மொய்ம்புடை
    நிமித் திரு மரபுளான், முன்னர், நீர்மையின்
    சுமித்திரைக்கு அளித்தனன் - சுரர்க்கு வேந்து, இனிச்
    சமித்தது என் பகை என, தமரொடு ஆர்ப்பவே. 88

  395. பிதிர்ந்து வீழ்ந்ததையும் தயரதன் சுமித்திரைக்கு அளித்தல்

  396. பின்னும், அப் பெருந்தகை, பிதிர்ந்து வீழ்ந்தது-
    தன்னையும், சுமித்திரைதனக்கு நல்கினான் -
    ஒன்னலர்க்கு இடமும், வேறு உலகின் ஓங்கிய
    மன்னுயிர்தமக்கு நீள் வலமும், துள்ளவே. 89

  397. வேள்வி முடிந்தபின் தயரதன் அரசவைக்கு வருதல்

  398. வாம் பரி வேள்வியும், மகாரை நல்குவது
    ஆம் புரை ஆகுதி பிறவும், அந்தணன்
    ஓம்பிட முடிந்தபின், உலகு காவலன்
    ஏம்பலோடு எழுந்தனன் - யாரும் ஏத்தவே. 90

  399. முருடொடு பல் இயம் முழங்கி ஆர்த்தன;
    இருள் தரும் உலகமும் இடரின் நீங்கின;
    தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி,
    அருள் தரும் அவையில் வந்து அரசன் எய்தினான். 91

  400. தேவர் முதலிய யாவர்க்கும் சிறப்புச் செய்து, சரயு நதியில் தயரதன் நீராடுதல்

  401. செய்ம் முறைக் கடன் அவை திறம்பல் இன்றியே
    மெய்ம் முறைக் கடவுளோர்க்கு ஈந்து, விண்ணுளோர்க்கு
    அம் முறை அளித்து, நீடு அந்தணாளர்க்கும்
    கைம் முறை வழங்கினன், கனக மாரியே. 92

  402. வேந்தர்கட்கு, அரசொடு, வெறுக்கை, தேர், பரி,
    வாய்ந்த நல் துகிலொடு, வரிசைக்கு ஏற்பன
    ஈந்தனன்; பல் இயம் துவைப்ப ஏகி, நீர்
    தோய்ந்தனன் - சரயு நல் துறைக்கண் எய்தியே. 93

  403. தயரதன் வசிட்டனை வணங்குதல்

  404. முரசு இனம் கறங்கிட, முத்த வெண்குடை
    விரசி மேல் நிழற்றிட, வேந்தர் சூழ்தர,
    அரசவை அடைந்துழி, அயனும் நாண் உற
    உரை செறி முனிவன் தாள் வணங்கி, ஓங்கினான். 94

  405. தம்மை வணங்கிய தயரதனுக்கு ஆசி கூறி, கலைக்கோட்டு முனிவன் தன் இருப்பிடத்திற்கு மீள்தல்

  406. அரிய நல் தவமுடை வசிட்டன் ஆணையால்,
    இரலை நல் சிருங்க மா இறைவன் தாள் தொழா,
    உரிய பற்பல உரை பயிற்றி, உய்ந்தனென்;
    பெரிய நல் தவம் இனிப் பெறுவது யாது? என்றான். 95

  407. எந்தை! நின் அருளினால் இடரின் நீங்கியே
    உய்ந்தனென் அடியனேன் என்ன, ஒண் தவன்,
    சிந்தையுள் மகிழ்ச்சியால் வாழ்த்தி, தேர்மிசை
    வந்த மா தவரொடும் வழிக்கொண்டு ஏகினான். 96

  408. ஏனைய முனிவரும் ஆசி வழங்கி நீங்குதல்

  409. வாங்கிய துயருடை மன்னன், பின்னரும்,
    பாங்குரு முனிவர் தாள் பழிச்சி ஏத்தல் கொண்டு,
    ஓங்கிய உவகையர் ஆசியோடு எழா,
    நீங்கினர்; இருந்தனன், நேமி வேந்தனே. 97

  410. தேவிமார் மூவரும் கருவுறுதல்

  411. தெரிவையர் மூவரும், சிறிது நாள் செலீஇ,
    மருவிய வயாவொடு வருத்தம் துய்த்தபின்,
    பொரு அரு திரு முகம் அன்றி, பொற்பு நீடு
    உருவமும், மதியமோடு ஒப்பத் தோன்றினார். 98

  412. கோசலை வயிற்றில் திருமால் அவதரித்தல்

  413. ஆயிடை, பருவம் வந்து அடைந்த எல்லையின்,
    மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட,
    வேய் புனர்பூசமும், விண்ணுளோர்களும்,
    தூய கற்கடகமும், எழுந்து துள்ளவே, 99

  414. சித்தரும், இயக்கரும், தெரிவைமார்களும்,
    வித்தக முனிவரும், விண்ணுளோர்களும்,
    நித்தமும், முறை முறை நெருங்கி ஆர்ப்புற,
    தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே. 100

  415. ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து,
    அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்
    கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை,
    திரு உறப் பயந்தனள் - திறம் கொள் கோசலை. 101

  416. கைகேயி மைந்தனைப் பெறுதல்

  417. ஆசையும், விசும்பும், நின்று அமரர் ஆர்த்து எழ,
    வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துற,
    பூசமும் மீனமும் பொலிய, நல்கினாள்,
    மாசு அறு கேகயன் மாது மைந்தனை. 102

  418. சுமித்திரை இரு மகவு ஈன்றாள்

  419. தளை அவிழ் தருவுடைச் சயிலகோபனும்,
    கிளையும், அந்தரமிசைக் கெழுமி ஆர்ப்புற,
    அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வுற,
    இளையவற் பயந்தனள், இளைய மென் கொடி. 103

  420. படம் கிளர் பல் தலைப் பாந்தள் ஏந்து பார்
    நடம் கிளர்தர, மறை நவில நாடகம்,
    மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட,
    விடம் கிளர் விழியினாள், மீட்டும், ஈன்றனள். 104

  421. வானவர் மகிழ்ச்சி

  422. ஆடினர் அரம்பையர்; அமுத ஏழ் இசை
    பாடினர் கின்னரர்; துவைத்த பல் இயம்;
    வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால்,
    ஓடினர், உலாவினர், உம்பர் முற்றுமே. 105

  423. புதல்வர் பிறந்ததைச் சேடிமார் தயரதனிடம் தெரிவித்தலும்,
    சோதிடர் ஆய்ந்து, நாள் முதலியன நன்று என்பதும்

  424. ஓடினர் அரசன்மாட்டு, உவகை கூறி நின்று
    ஆடினர், சிலதியர்; அந்தணாளர்கள்
    கூடினர்; நாளொடு கோளும் நின்றமை
    நாடினர்; உலகு இனி நவை இன்று என்றனர். 106

  425. தயரதன் புனல் படிந்து, தானம் செய்து பின் குழந்தைகளைப் பார்த்தல்

  426. மா முனிதன்னொடு, மன்னர் மன்னவன்,
    ஏமுறப் புனல் படீஇ, வித்தொடு இன் பொருள்
    தாம் உற வழங்கி, வெண் சங்கம் ஆர்ப்புற,
    கோ மகார் திருமுகம் குறுகி நோக்கினான். 107

  427. புதல்வர் பிறந்த மகிழ்ச்சியில் தயரதன் புரிந்த நற்பணிகள்

  428. இறை தவிர்ந்திடுக பார், யாண்டு ஒர் ஏழ்; நிதி
    நிறை தரு சாலை தாள் நீக்கி, யாவையும்,
    முறை கெட, வறியவர் முகந்து கொள்க எனா,
    அறை பறை என்றனன் - அரசர் கோமகன். 108

  429. படை ஒழிந்திடுக; தம்பதிகளே, இனி,
    விடை பெறுகுக, முடி வேந்தர்; வேதியர்,
    நடையுறு நியமமும் நவை இன்று ஆகுக;
    புடை கெழு விழாவொடு பொலிக, எங்கணும். 109

  430. ஆலையம் புதுக்குக; அந்தணாளர்தம்
    சாலையும், சதுக்கமும், சமைக்க, சந்தியும்;
    காலையும் மாலையும், கடவுளர்க்கு, அணி
    மாலையும் தீபமும், வழங்குக என்றனன். 110

  431. செய்தி கேட்ட நகர மாந்தரின் மகிழ்ச்சி

  432. என்புழி, வள்ளுவர், யானை மீமிசை
    நன் பறை அறைந்தனர்; நகர மாந்தரும்,
    மின் பிறழ் நுசுப்பினார் தாமும், விம்மலால்,
    இன்பம் என்ற அளக்க அரும் அளக்கர் எய்தினார். 111

  433. ஆர்த்தனர் முறை முறை அன்பினால்; உடல்
    போர்த்தன புளகம்; வேர் பொடித்த; நீள் நிதி
    தூர்த்தனர், எதிர் எதிர் சொல்லினார்க்கு எலாம்;-
    தீர்த்தன் என்று அறிந்ததோ அவர்தம் சிந்தையே? 112

  434. பண்ணையும் ஆயமும், திரளும் பாங்கரும்,
    கண் அகன் திரு நகர் களிப்புக் கைம்மிகுந்து,
    எண்ணெயும், களபமும், இழுதும், நானமும்,
    சுண்ணமும், தூவினார் - வீதிதோறுமே. 113

  435. பன்னிரண்டு நாள் கழித்து வசிட்டன் குழந்தைகளுக்குப் பெயரிடுதல்

  436. இத்தகை மா நகர், ஈர்-அறு நாளும்,
    சித்தம் உறும் களியோடு சிறந்தே,
    தத்தமை ஒன்றும் உணர்ந்திலர்; தாவா
    மெய்த் தவன் நாமம் விதிப்ப மதித்தான். 114

  437. இராமன், பரதன், இலக்குவன், சத்துருக்கன், என நால்வருக்கும் பெயர் வைத்தல்

  438. சுரா மலைய, தளர் கைக் கரி எய்த்தே,
    அரா-அணையில் துயில்வோய்! என, அந் நாள்,
    விராவி, அளித்தருள் மெய்ப்பொருளுக்கே,
    இராமன் எனப் பெயர் ஈந்தனன் அன்றே. 115

  439. சுரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
    விரத மறைப் பொருள் மெய்ந்நெறி கண்ட
    வரதன், உதித்திடு மற்றைய ஒளியை,
    பரதன் எனப் பெயர் பன்னினன் அன்றே. 116

  440. உலக்குநர் வஞ்சகர்; உம்பரும் உய்ந்தார்;
    நிலக் கொடியும் துயர் நீத்தனள்; இந்த,
    விலக்க அரு மொய்ம்பின் விளங்கு ஒளி நாமம்,
    இலக்குவன் என்ன, இசைத்தனன் அன்றே, 117

  441. முத்து உருக்கொண்டு செம் முளரி அலர்ந்தால்
    ஒத்திருக்கும் எழிலுடைய இவ் ஒளியால்,
    எத் திருக்கும் கெடும் என்பதை எண்ணா,
    சத்துருக்கன் எனச் சாற்றினன் நாமம். 118

  442. பெயரிட்ட போது தயரதன் தானம் செய்து உவத்தல்

  443. பொய் வழி இல் முனி, புகல்தரு மறையால்,
    இவ் வழி, பெயர்கள் இசைத்துழி, இறைவன்
    கை வழி, நிதி எனும் நதி கலைமறையோர்
    மெய் வழி உவரி நிறைந்தன மேன்மேல். 119

  444. தம் குமாரர்கள் மீது தயரதன் கொண்ட அன்பு

  445. காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே,
    ஓவிய எழிலுடை ஒருவனை அலது, ஓர்
    ஆவியும் உடலமும் இலது என, அருளின்
    மேவினன் - உலகுடை வேந்தர்தம் வேந்தன். 120

  446. குமாரர்களின் வளர்ச்சி

  447. அமிர்து உகு குதலையொடு அணி நடை பயிலா,
    திமிரம் அது அற வரு தினகரன் எனவும்,
    தமரமதுடன் வளர் சதுமறை எனவும்,
    குமரர்கள் நிலமகள் குறைவு அற வளர் நாள்- 121

  448. வசிட்டன் கல்வி கற்பித்தல்

  449. சவுளமொடு உபநயம் விதிமுறை தருகுற்று,
    இ(வ்)அளவது என ஒரு கரை பிறிது இலவா,
    உவள் அரு மறையினொடு ஒழிவு அறு கலையும்,
    தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே. 122

  450. படைப் பயிற்சி

  451. யானையும், இரதமும், இவுளியும், முதலா
    ஏனைய பிறவும், அவ் இயல்பினில் அடையுற்று,
    ஊன் உறு படை பல சிலையொடு பயிலா,
    வானவர் தனிமுதல், கிளையொடு வளர, 123

  452. முனிவர் முதலிய யாவரும் குமாரர்களை விரும்புதல்

  453. அரு மறை முனிவரும், அமரரும், அவனித்
    திருவும், அந் நகர் உறை செனமும், நம் இடரோடு
    இரு வினை துணிதரும், இவர்களின்; இவண் நின்று
    ஒரு பொழுது அகல்கிலம், உறை என உறுவார். 124

  454. இராமனும் இலக்குவனும், பரதனும் சத்துருக்கனும், இணைபிரியாதிருத்தல்

  455. ஐயனும் இளவலும், அணி நிலமகள்தன்
    செய்தவம் உடைமைகள் தெரிதர, நதியும்,
    மை தவழ் பொழில்களும், வாவியும், மருவி,
    நெய் குழல் உறும் இழை என நிலைதிரிவார். 125

  456. பரதனும் இளவலும், ஒருநொடி பகிராது,
    இரதமும் இவுளியும் இவரினும், மறைநூல்
    உரைதரு பொழுதினும், ஒழிகிலர்; எனை ஆள்
    வரதனும் இளவலும் என மருவினரே. 126

  457. நான்கு குமாரரும் முனிவரர் இருப்பிடம் சென்று மாலையில் மீள்தள்

  458. வீரனும், இளைஞரும், வெறி பொழில்களின்வாய்,
    ஈரமொடு உறைதரு முனிவரரிடை போய்,
    சோர் பொழுது, அணிநகர் துறுகுவர்; எதிர்வார்,
    கார் வர அலர் பயிர் பொருவுவர், களியால். 127

  459. ஏழையர் அனைவரும், இவர் தட முலை, தோய்
    கேழ் கிளர் மதுகையர், கிளைகளும், இளையார்
    வாழிய! என, அவர் மனன் உறு கடவுள்-
    தாழ்குவர்-கவுசலை தயரதன் எனவே. 128

  460. கடல் தரு முகில், ஒளிர் கமலம் அது அலரா,
    வட வரையுடன் வரு செயல் என, மறையும்
    தடவுதல் அறிவு அரு தனி முதலவனும்,
    புடை வரும் இளவலும் என, நிகர் புகல்வார். 129

  461. நகரத்தவரின் நலனை இராமன் உசாவுதலும், அவர்கள் உவந்து விடையளித்தலும்

  462. எதிர் வரும் அவர்களை, எமையுடை இறைவன்,
    முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா,
    எது வினை? இடர் இலை? இனிது நும் மனையும்?
    மதி தரு குமரரும் வலியர்கொல்? எனவே, 130

  463. அஃது, ஐய! நினை எமது அரசு என உடையேம்;
    இஃது ஒரு பொருள் அல; எமது உயிருடன் ஏழ்
    மகிதலம் முழுதையும் உறுகுவை, மலரோன்
    உகு பகல் அளவு என, உரை நனி புகல்வார். 131

  464. யாவரும் போற்ற, இராமன் இனிது இருத்தல்

  465. இப் பரிசு, அணி நகர் உறையும் யாவரும்,
    மெய்ப் புகழ் புனைதர, இளைய வீரர்கள்
    தப்பு அற அடி நிழல் தழுவி ஏத்துற,
    முப் பரம் பொருளினும் முதல்வன் வைகுறும். 132

  466. மிகைப் பாடல்கள்


  467. பொறை இலா அறிவு, போகப் புணர்ப்பு இலா இளமை, மேவத்
    துறை இலா வனச வாவி, தூசு இலார் போலித் தூய்மை,
    நறை இலா மலரும், கல்வி நலம் இலாப் புலமை, நன்னீர்ச்
    சிறை இலா நகரும், போலும், சேய் இலாச் செல்வம் என்றான். 4-1

  468. சுடு தொழில் அரக்கரால் தொலைந்து, வான் உளோர்,
    சுடு அமர் களன் அடி கலந்து கூறலும்,
    படு பொருள் உணர்ந்த அப் பரமன், யான் இனி
    அடுகிலென் என மறுத்து, அவரொடு ஏகினான். 5-1

  469. கறை மிடற்று அண்ணலும் கடவுளோர்களும்
    மறை முதற் கிழவனை வந்து நண்ணலும்,
    முறைமையின் கடன் முறை முற்றி, முண்டகத்து
    இறைவனும், அவரொடும் இனிதின் ஏகினான். 5-2

  470. வடவரைக் குடுமியின் நடுவண், மாசு அறு
    சுடர் மணி மண்டபம் துன்னி, நான்முகக்
    கடவுளை அடி தொழுது, அமர கண்டகர்
    இடி நிகர் வினையம் அது இயம்பினான் அரோ. 5-3

  471. என்று இனையன பல இயம்பி, எங்கணும்,
    கன்றி, அவ் அரக்கரை அழித்துக் காத்தியேல்,
    ஒன்றிய உயிர்களும் உலகு யாவையும்
    இன்று நீ படைத்தி என்று இசைத்து, பின்னரும். 5-4

  472. ஆயவர் அயன் முதல் அமரர், ஈறு இலா
    நாயகன் இரு பதம் நயந்து, சிந்தைமீது
    ஓய்வு இலாது, அவன் அரு மறைகள் ஓதியே,
    நேயமோடு இருந்து, இவை நிகழ்த்தல் மேயினார். 8-1

  473. காத்தி நீ எமை; காக்கிலர்தம்மை யாம்
    ஏத்தியே இளைத்தோம்; இறைவா! இடர்ப்
    பார்த்தியோ?-திருப் பாற்கடற் பள்ளியின்
    மூர்த்தியே! முதல்வா! முகில் மேனியாய்! 8-2

  474. அந்தகாரத்து அரக்கர் செய் தீமையால்,
    நொந்துளோம்; இறைவா! நொடிப் போதினில்
    வந்து மாற்றிடும் வண்ணம் எமக்கு அருள்-
    எந்தையே! கருணாகரனே! எனா. 8-3

  475. அறி துயில் எழுந்தனன், அமரர் கூப்பிடும்
    மறை மொழித் துதி ஒலி வந்து இசைக்கவே;
    நிறை குணத்து அமரர்கள் நினைத்து அழைப்பதை,
    இறைவனும், திரு உளத்து அறிந்து, அங்கு எய்தவே. 9-1

  476. வானவர் அம் முறை வழங்க, மா மதித்
    தேன் உறும் இதழி அம் தெரியல் வேணியான்
    ஆனவர் தமைக் கரம் அமைத்து அங்கு, ஐயனைத்
    தான் முகம் நோக்கியே சாற்றல் மேயினான். 15-1

  477. எனக் கலை மா முகச் சிருங்கன் இவ் உரை-
    தனைச் சொல, தரணிபர்க்கு அரசன் தான் மகிழ்ந்து,
    அனைத்து உலகு உயிரொடும் அறங்கள் உய்ய, தம்
    மனத் துயர் அகன்றிட, வணங்கிக் கூறுவான். 78-1

  478. மேடம் ஆம் மதி; திதி நவமி; மீன் கழை;
    நீடு உறு மாலை கற்கடகம்; நீதி சேர்
    ஓடை மா களிறு அனான் உதய ராசி கோள்
    நாடின், ஏகாதசர் நால்வர் உச்சரே. 106-1

  479. என்றனர் சாதகம் ஈசற்கு; ஏனையர்
    தம் தமக்கும் தகும் முறையில், தாம் தெரிந்து,
    ஒன்றிய தமனியத்து எழுதி ஓதினார்-
    வன் திறல் சுரர் குரு வாழ்த்து எடுப்பவே. 106-2

  480. நோக்கினன் களிப்பு எழ; நுணங்கு கேள்வி நூல்
    ஆக்கிய முனிவனை வணங்கி, ஐய! என்
    பாக்கியம் பலித்தது, இப் பாலர் என்று, பார்
    காக்குறும் அரசனும், கழறல் மேயினான். 107-1

  481. சுந்தரப் பொடிகளும் செம் பொற் சுண்ணமும்
    சந்தனம் நீரொடு கலந்து, தையலார்
    பந்தியில், சிவறியால் சிதற, பார் மிசை
    இந்திரவில் எனக் கிடந்தது எங்குமே. 115-1

  482. அரு மறை நெறி வழி, அரசனும், அன்னப்
    பிரசனம் மதலையர் பெறு வழி உதவி,
    கரை அறு திரு நகர் விழவொடு களியர்,
    இருமையும் உதவுறு தானமும் ஈந்தான். 120-1

  483. பால காண்டம்

    6. கையடைப் படலம்



  484. மகிழ்வுடன் வாழ்ந்த தயரதன்

  485. அரசர்தம் பெருமகன், அகிலம் யாவையும்
    விரசுறு தனிக் குடை விளங்க, வென்றி சேர்
    முரசு ஒலி கறங்கிட, முனிவர் ஏத்துற,
    கரை செயல் அரியது ஓர் களிப்பின் வைகும் நாள், 1

  486. நனை வரு கற்பக நாட்டு நல் நகர்
    வனை தொழில் மதி மிகு மயற்கும் சிந்தையால்
    நினையவும் அரியது, விசும்பின் நீண்டது, ஓர்
    புனை மணி மண்டபம் பொலிய எய்தினான். 2

  487. தயரதன் அரியணையில் வீற்றிருக்க, விசுவாமித்திர முனிவனின் வருகை

  488. தூய மெல் அரியணைப் பொலிந்து தோன்றினான்;
    சேய் இரு விசும்பிடைத் திரியும் சாரணர்,
    நாயகன் இவன்கொல்? என்று அயிர்த்து, நாட்டம் ஓர்
    ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கினார். 3

  489. மடங்கல்போல் மொய்ம்பினான் முன்னர், மன்னுயிர்
    அடங்கலும் உலகும் வேறு அமைத்து, தேவரோடு
    இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு எனாத்
    தொடங்கிய, துனி உறு, முனிவன் தோன்றினான். 4

  490. தயரதன் முனிவனை வணங்கி உபசரித்து மொழிதல்

  491. வந்து முனி எய்துதலும், மார்பில் அணி ஆரம்,
    அந்தரதலத்து இரவி அஞ்ச, ஒளி விஞ்ச,
    கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும்
    இந்திரன் என, கடிது எழுந்து அடி பணிந்தான். 5

  492. பணிந்து, மணி செற்றுபு குயிற்றி அவிர் பைம் பொன்
    அணிந்த தவிசு இட்டு, இனிது அருத்தியொடு இருத்தி,
    இணைந்த கமலச் சரண் அருச்சனை செய்து, இன்றே
    துணிந்தது, என் வினைத் தொடர் எனத் தொழுது சொல்லும்: 6

  493. நிலம் செய் தவம் என்று உணரின், அன்று; நெடியோய்! என்
    நலம் செய் வினை உண்டு எனினும், அன்று; நகர், நீ, யான்
    வலம் செய்து வணங்க, எளிவந்த இது முந்து என்
    குலம் செய் தவம் என்று இனிது கூற, முனி கூறும்: 7

  494. தயரதனை விசுவாமித்திரன் புகழ்தல்

  495. என் அனைய முனிவரரும் இமையவரும் இடையூறு ஒன்று உடையரானால்,
    பல் நகமும் நகு வெள்ளிப் பனிவரையும், பாற்கடலும், பதும பீடத்து
    அந் நகரும், கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும்
    பொன் நகரும், அல்லாது, புகல் உண்டோ ? இகல் கடந்த புலவு வேலோய்! 8

  496. இன் தளிர்க் கற்பக நறுந் தேன் இடை துளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து,
    நின்று அளிக்கும் தனிக் குடையின் நிழல் ஒதுங்கி, குறை இரந்து நிற்ப, நோக்கி,
    குன்று அளிக்கும் குல மணித் தோள் சம்பரனைக் குலத்தோடும் தொலைத்து, நீ கொண்டு
    அன்று அளித்த அரசு அன்றோ, புரந்தரன் இன்று ஆள்கின்றது?-அரச! என்றான். 9

  497. தயரதன் கை கூப்பித் தொழுது, யான் செய்வது அருளுக! என வேண்டுதல்

  498. உரைசெய்யும் அளவில், அவன் முகம் நோக்கி, உள்ளத்துள் ஒருவராலும்
    கரை செய்ய அரியது ஒரு பேர் உவகைக் கடல் பெருக, கரங்கள் கூப்பி,
    அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென்; மற்று, இனிச் செய்வது அருளுக! என்று,
    முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய, பின் மொழியும் முனிவன், ஆங்கே: 10

  499. வேள்வி காக்க தயரதனிடம் கரிய செம்மலை முனிவன் வேண்டல்

  500. தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு, தவம் செய்வோர்கள்
    வெருவரச் சென்று அடை காம வெகுளி என, நிருதர் இடை விலக்கா வண்ணம்,
    செருமுகத்துக் காத்தி என, நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
    ஒருவனைத் தந்திடுதி என, உயிர் இரக்கும் கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்.11

  501. தயரதன் துயர் உறுதல்

  502. எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த
    புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தாலெனச் செவியில் புகுதலோடும்,
    உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த, ஆர் உயிர் நின்று ஊசலாட,
    கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடுந் துயரம்-காலவேலான்.12

  503. தயரதன் தானே வந்து வேள்வி காப்பேன் எனல்

  504. தொடை ஊற்றின் தேன் துளிக்கும் நறுந் தாரான் ஒருவண்ணம் துயரம் நீங்கி,
    படையூற்றம் இலன்; சிறியன் இவன்; பெரியோய்! பணி இதுவேல், பனி நீர்க் கங்கை
    புடை ஊற்றும் சடையானும், புரந்தரனும், நான்முகனும், புகுந்து செய்யும்
    இடையூற்றுக்கு இடையூறாய், யான் காப்பென்; பெரு வேள்விக்கு எழுக! என்றான். 13

  505. விசுவாமித்திர முனிவனின் கோபம்

  506. என்றனன்; என்றலும், முனிவோடு எழுந்தனன், மண் படைத்த முனி; இறுதிக் காலம்
    அன்று என, ஆம் என இமையோர் அயிர்த்தனர்; மேல் வெயில் கரந்தது; அங்கும் இங்கும்
    நின்றனவும் திரிந்தன; மேல் நிவந்த கொழுங் கடைப் புருவம் நெற்றி முற்றச்
    சென்றன; வந்தது நகையும்; சிவந்தன கண்; இருண்டன, போய்த் திசைகள் எல்லாம்.14

  507. வசிட்டன் உரையால் தயரதன் தெளிதல்

  508. கறுத்த மா முனி கருத்தை உன்னி, நீ
    பொறுத்தி என்று அவற் புகன்று, நின் மகற்கு
    உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
    மறுத்தியோ? எனா, வசிட்டன் கூறுவான்: 15

  509. பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
    மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல்,
    ஐய! நின் மகற்கு அளவு இல் விஞ்சை வந்து
    எய்து காலம் இன்று எதிர்ந்தது என்னவே, 16

  510. தயரதன் இராம இலக்குவரை முனிவனிடம் ஒப்புவித்தல்

  511. குருவின் வாசகம் கொண்டு, கொற்றவன்,
    திருவின் கேள்வனைக் கொணர்மின், சென்று என,-
    வருக என்றனன் என்னலோடும், வந்து
    அருகு சார்ந்தனன், அறிவின் உம்பரான். 17

  512. வந்த நம்பியைத் தம்பிதன்னொடும்
    முந்தை நான்மறை முனிக்குக் காட்டி, நல்
    தந்தை நீ, தனித் தாயும் நீ, இவர்க்கு;
    எந்தை! தந்தனென்; இயைந்த செய்க! என்றான். 18

  513. இராம இலக்குவருடன் முனிவன் புறப்படுதல்

  514. கொடுத்த மைந்தரைக் கொண்டு, சிந்தை முந்து
    எடுத்த சீற்றம் விட்டு, இனிது வாழ்த்தி, மேல்
    அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம் எனா,
    நடத்தல் மேயினான், நவைக்கண் நீங்கினான். 19

  515. ஆயுதம் தாங்கி இராம இலக்குவர் முனிவன் பின் செல்லுதல்

  516. வென்றி வாள் புடை விசித்து, மெய்ம்மைபோல்
    என்றும் தேய்வுறாத் தூணி யாத்து, இரு
    குன்றம் போன்று உயர் தோளில், கொற்ற வில்
    ஒன்று தாங்கினான் - உலகம் தாங்கினான். 20

  517. அன்ன தம்பியும் தானும், ஐயன் ஆம்
    மன்னன் இன் உயிர் வழிக் கொண்டாலென,
    சொன்ன மா தவன் - தொடர்ந்து, சாயைபோல்,
    பொன்னின் மா நகர்ப் புரிசை நீங்கினான். 21

  518. மூவரும் சரயு நதியை அடுத்த சோலையைச் சேர்தல்

  519. வரங்கள் மாசு அற, தவம் செய்தோர்கள் வாழ்
    புரங்கள் நேர் இலா நகரம் நீங்கிப் போய்,
    அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று
    இரங்கு வார் புனல் சரயு எய்தினார். 22

  520. கரும்பு கால் பொரக் கழனி வார்ந்த தேன்
    வரம்பு மீறிடு மருத வேலிவாய்,
    அரும்பு கொங்கையார் அம் மெல் ஓதிபோல்
    சுரும்பு வாழ்வது ஓர் சோலை நண்ணினார். 23

  521. தீய்ந்த சோலையைக் கண்டு இராமன் வினாவுதல்

  522. தாழும் மா மழை தவழும் நெற்றியால்
    சூழி யானைபோல் தோன்றும் மால் வரைப்
    பாழி மா முகட்டு உச்சி, பச்சை மா
    ஏழும் ஏற, போய் ஆறும் ஏறினார். 24

  523. தேவு மாதவன் - தொழுது, தேவர்தம்
    நாவுள் ஆகுதி நயக்கும் வேள்வியால்
    தாவும் மா புகை தழுவு சோலை கண்டு,
    யாவது ஈது? என்றான் - எவர்க்கும் மேல் நின்றான். 25

  524. மிகைப் பாடல்கள்

  525. அப்பெருந் திருவொடும் அகில நாதன் என்று,
    எப்பெரும் புவனமும் இறைஞ்சி ஏத்தவே,
    தப்ப அருந் தருமமும் தயாவும் தாங்கியே,
    ஒப்புரவுடன் அவன் உவந்து வாழும் நாள். 1-1

  526. அரிஅணை மிசை தனில், அழகு மன்றினில்,
    புரி தவம் மிகு பதப் பொற்பின் நீடு அருள்
    அரசர்கள் முடி படி அணைய, அம் பொனின்
    உரை பொடி மலை குவை ஒப்ப குப்பையோ. 1-2

  527. இனைய சோலை மற்று யாவது? என்று, மா
    முனிவ! கூறு என முதல்வன் கூறலும்,
    பனுவல் வேத நூல் பகரும் மா தவன்,
    தனு வலாய்! இதன் தன்மை கேள் எனா, 24-1

  528. சம்பரப் பெயர்த் தானவ(ன்)னுடன்
    உம்பர் கோமகன் அமர் உடன்ற நாள்,
    வெம்பி, மற்று அவன் வெற்றி கொண்ட போது,
    அம்பரம் இழந்து, அவனி வந்தனன்; 24-2

  529. அவனி வந்து, மன்னவர் இடம்தொறும்,
    தவனன் என்னவே தான் உழன்று, அறிந்து,
    இவனில் வேறு மற்றுஇல்லை எற்கு எனா,
    உவன் விரும்பி வந்து, உந்தை நாடு உறா, 24-3

  530. இந்த இவ் இடத்து எய்தி, இந்திரன்,
    சந்த வார் பொழில் தரு ஒர் ஐந்தையும்
    வந்து நிற்க எனா, மன நினைப்பின்முன்
    முந்து வந்து மா முரல நின்றவால். 24-4

  531. நின்ற சோலைவாய், நியமம் நித்தமும்
    குன்றல் இன்றியே செய்து கொண்டு, அவன்
    நன்றியால் இருந்து, அரசை நண்ணியே,
    துன்று சோலையின் தொழில் உணர்த்தினான். 24-5

  532. உருவம் மாறி, வேறு உருவமாகியே,
    நிருப! நின் குடை நிழலின் நிற்றலும்,
    பரிவின் நோக்கி, நீ பகர்தியால் எனத்
    தருவின் நாயகந்தான் விளம்பினான்: 24-6

  533. சதமகன் தனைச் சம்பரன் எனும்
    மதமகன் துரந்து அரசு வவ்வினான்;
    கதம் அகன்றிடாக் கனக வெற்பு அவன்
    விதம் அகன்று வந்து, உன்னை மேவினேன். 24-7

  534. என்றபோது தன் இரதம் ஏறியே
    சென்று, மற்று அவன் சேனையோடு உகக்
    கொன்று, வாசவன் அரசு கொள்ளவே
    அன்று அளித்து, மீண்டு அயோத்தி மேவினான். 24-8

  535. அன்னது ஆதலின் அவனி வந்த கா
    இன்ன நாமம், இச் சோலை என்றலும்,
    மன்னர்மன்னவன் மதலை, நன்று எனா,
    பின்னை நன்று உயிர்ப் பிரியம் ஆயினார். 24-9


  536. பால காண்டம்

    7. தாடகை வதைப் படலம்



  537. விசுவாமித்திரன் கூறிய அங்க நாட்டு வரலாறும், காமன் ஆச்சிரமப் பெருமையும்

  538. திங்கள் மேவும் சடைத் தேவன்மேல், மாரவேள்,
    இங்கு நின்று எய்யவும், எரிதரும் நுதல் விழிப்
    பொங்கு கோபம் சுட, பூளை வீ அன்ன தன்
    அங்கம் வெந்து, அன்று தொட்டு அனங்கனே ஆயினான். 1

  539. வாரணத்து உரிவையான் மதனனைச் சினவு நாள்,
    ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால், இவண் எலாம்,
    ஆரணத்து உறையுளாய்! அங்க நாடு; இதுவும், அக்
    காரணக் குறியுடைக் காமன் ஆச்சிரமமே. 2

  540. பற்று அவா வேரொடும் பசை அற, பிறவி போய்
    முற்ற, வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று
    உற்ற வானவன், இருந்து யோகு செய்தனன் எனின்,
    சொற்றவாம் அளவதோ, மற்று இதன் தூய்மையே? 3

  541. இரவு தங்கி, மறுநாள் மூவரும் ஒரு பாலைவனம் சேர்தல்

  542. என்று, அ(வ்) அந்தணன் இயம்பலும், வியந்து, அவ் வயின்
    சென்று, வந்து எதிர் தொழும் செந் நெறிச் செல்வரோடு
    அன்று உறைந்து, அலர் கதிர்ப் பரிதி மண்டிலம் அகன்
    குன்றின் நின்று இவர, ஓர் சுடு சுரம் குறுகினார். 4

  543. பாலை நிலத்தின் தன்மை

  544. பருதிவானவன் நிலம் பசை அறப் பருகுவான்
    விருது மேற்கொண்டு உலாம் வேனிலே அல்லது ஓர்
    இருது வேறு இன்மையால், எரி சுடர்க் கடவுளும்
    கருதின், வேம் உள்ளமும்; காணின், வேம் நயனமும். 5

  545. படியின்மேல் வெம்மையைப் பகரினும், பகரும் நா
    முடிய வேம்; முடிய மூடு இருளும் வான் முகடும் வேம்;
    விடியுமேல், வெயிலும் வேம்; மழையும் வேம்; மின்னினோடு
    இடியும் வேம்; என்னில், வேறு யாவை வேவாதவே? 6

  546. விஞ்சு வான் மழையின்மேல் அம்பும் வேலும் பட,
    செஞ்செவே செருமுகத்து அன்றியே, திறன் இலா
    வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து
    அஞ்சினார் நெஞ்சுபோல், என்றும் ஆறாது அரோ. 7

  547. பேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெருங் கள்ளியின்
    தாய் பிளந்து உக்க கார் அகில்களும், தழை இலா
    வேய் பிளந்து உக்க வெண் தரளமும், விட அரா
    வாய் பிளந்து உக்க செம் மணியுமே-வனம் எலாம். 8

  548. பாரும் ஓடாது; நீடாது எனும் பாலதே:
    சூரும் ஓடாது; கூடாதுஅரோ: சூரியன்
    தேரும் ஓடாது, மா மாகம் மீ; தேரின், நேர்
    காரும் ஓடாது; நீள் காலும் ஓடாது அரோ. 9

  549. கண் கிழித்து உமிழ் விடக் கனல் அரா-அரசு கார்
    விண் கிழித்து ஒளிரும் மின் அனைய பல் மணி, வெயில்
    மண் கிழித்திட எழும் சுடர்கள், மண்மகள் உடல்
    புண் கிழித்திட எழும் குருதியே போலுமே. 10

  550. புழுங்கு வெம் பசியொடு புரளும் பேர் அரா
    விழுங்க வந்து எழுந்து எதிர் விரித்த வாயின்வாய்,
    முழங்கு திண் கரி புகும் முடுகி-மீமிசை
    வழங்கு வெங் கதிர் சுட, மறைவு தேடியே! 11

  551. ஏக வெங் கனல் அரசிருந்த, காட்டினில்
    காகமும் கரிகளும் கரிந்து சாம்பின;-
    மாக வெங் கனல் எனும் வடவைத் தீச் சுட,
    மேகமும் கரிந்து இடை வீழ்ந்த போலுமே. 12

  552. கானகத்து இயங்கிய கழுதின் தேர்க் குலம்,
    தான் அகத்து எழுதலால் தலைக் கொண்டு ஓடிப்போய்,
    மேல் நிமிர்ந்து எழுந்திடில் விசும்பும் வேம் எனா,
    வானவர்க்கு இரங்கி, நீர் வளைந்தது ஒத்ததே! 13

  553. ஏய்ந்த அக் கனலிடை எழுந்த கானல்-தேர்,
    காய்ந்த அக் கடு வனம் காக்கும் வேனிலின்
    வேந்தனுக்கு அரசு வீற்றிருக்கச் செய்தது ஓர்
    பாய்ந்த பொன் காலுடைப் பளிக்குப் பீடமே! 14

  554. தா வரும் இரு வினை செற்று, தள்ள அரும்
    மூவகைப் பகை அரண் கடந்து, முத்தியில்
    போவது புரிபவர் மனமும், பொன் விலைப்
    பாவையர் மனமும், போல் பசையும் அற்றதே! 15

  555. பொரி பரல் படர் நிலம் பொடிந்து கீழ் உற
    விரிதலின், பெரு வழி விளங்கித் தோன்றலால்,
    அரி மணிப் பணத்து அரா-அரசன் நாட்டினும்
    எரி கதிர்க்கு இனிது புக்கு இயங்கல் ஆயதே! 16

  556. வெம்மையை தாங்கும் ஆற்றல் பெற இராம இலக்குவருக்கு இரண்டு மந்திரங்களை முனிவன் உபதேசித்தல்

  557. எரிந்து எழு கொடுஞ் சுரம் இனையது எய்தலும்,
    அருந் தவன், இவர், பெரிது அளவு இல் ஆற்றலைப்
    பொருந்தினர் ஆயினும், பூவின் மெல்லியர்;
    வருந்துவர் சிறிது என மனத்தின் நோக்கினான். 17

  558. நோக்கினன் அவர் முகம்; நோக்க, நோக்குடைக்
    கோக் குமரரும் அடி குறுக, நான்முகன்
    ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அவ் வழி
    ஊக்கினன்; அவை அவர் உள்ளத்து உள்ளினார். 18

  559. அந்த நிலம் அழிந்த காரணத்தை முனிவனிடம் இராமன் வினாவுதல்

  560. சுழி படு கங்கை அம் தொங்கல் மோலியான்
    விழி பட வெந்ததோ? வேறுதான் உண்டோ ?
    பழி படர் மன்னவன் பரித்த நாட்டினூங்கு
    அழிவது என்? காரணம், அறிஞ! கூறு என்றான். 19

  561. விசுவாமித்திரன் தாடகையின் வரலாறு கூறுதல்

  562. என்றலும், இராமனை நோக்கி, இன் உயிர்
    கொன்று உழல் வாழ்க்கையள், கூற்றின் தோற்றத்தள்,
    அன்றியும் ஐ-இருநூறு மையல் மா
    ஒன்றிய வலியினள், உறுதி கேள் எனா, 20

  563. மண் உருத்து எடுப்பினும், கடலை வாரினும்,
    விண் உருத்து இடிப்பினும், வேண்டின், செய்கிற்பாள்;
    எண் உருத் தெரிவு அரும் பாவம் ஈண்டி, ஓர்
    பெண் உருக் கொண்டெனத் திரியும் பெற்றியாள்; 21

  564. பெரு வரை இரண்டொடும், பிறந்த நஞ்சொடும்,
    உரும் உறழ் முழக்கொடும், ஊழித் தீயொடும்,
    இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம் எனின்,
    வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே; 22

  565. சூடக அரவு உறழ் சூலக் கையினள்;
    காடு உறை வாழ்க்கையள்;-கண்ணின் காண்பரேல்,
    ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!-
    தாடகை என்பது அச் சழக்கி நாமமே; 23

  566. உளப் பரும் பிணிப்பு அறா உலோபம் ஒன்றுமே
    அளப்ப அருங் குணங்களை அழிக்குமாறுபோல்,
    கிளப்ப அருங் கொடுமைய அரக்கி கேடு இலா
    வளப் பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள்; 24

  567. இலங்கை அரசன் பணி அமைந்து, ஒர் இடையூறா,
    விலங்கள் வலிகொண்டு, எனது வேள்வி நலிகின்றாள்;-
    அலங்கல் முகிலே!-அவள் இ(வ்) அங்க நிலம் எங்கும்
    குலங்களொடு அடங்க நனி கொன்று திரிகின்றாள்; 25

  568. முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம்
    தன் உணவு எனக் கருது தன்மையினள்;-மைந்த!-
    என் இனி உணர்த்துவது? இனிச் சிறிது நாளில்
    மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும் என்றான். 26

  569. தாடகையின் உறைவிடத்தை இராமன் வினாவுதல்

  570. அங்கு, உறுவன் அப் பரிசு உரைப்ப, அது கேளா,
    கொங்கு உறை நறைக் குல மலர்க் குழல் துளக்கா,
    எங்கு உறைவது, இத் தொழில் இயற்றுபவள்? என்றான் -
    சங்கு உறை கரத்து ஒரு தனிச் சிலை தரித்தான். 27

  571. தாடகை உறையும் மலையை முனிவன் காட்ட, தாடகை அங்குத் தோன்றுதல்

  572. கைவரை எனத் தகைய காளை உரை கேளா,
    ஐவரை அகத்திடை அடைத்த முனி, ஐய!
    இவ் வரை இருப்பது அவள் என்பதனின் முன்பு, ஓர்
    மை வரை நெருப்பு எரிய வந்ததென, வந்தாள். 28

  573. தாடகையின் தோற்றம்

  574. சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
    நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச்
    சலம் புக, அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப்
    பிலம் புக, நிலக் கிரிகள் பின் தொடர, வந்தாள் 29

  575. இறைக்கடை துடித்த புருவத்தள், எயிறு என்னும்
    பிறைக் கடை பிறக்கிட மடித்த பில வாயள்,
    மறைக் கடை அரக்கி, வடவைக் கனல் இரண்டு ஆய்
    நிறைக் கடல் முளைத்தென, நெருப்பு எழ விழித்தாள். 30

  576. கடம் கலுழ் தடங் களிறு கையொடு கை தெற்றா,
    வடம் கொள, நுடங்கும் இடையாள், மறுகி வானோர்
    இடங்களும், நெடுந் திசையும், ஏழ் உலகும், யாவும்,
    அடங்கலும் நடுங்க, உரும் அஞ்ச, நனி ஆர்த்தாள். 31

  577. தாடகை ஆரவாரத்துடன் அவர்களை நோக்கி நகைத்து, வீர உரை பகர்தல்

  578. ஆர்த்து, அவரை நோக்கி நகைசெய்து, எவரும் அஞ்ச,
    கூர்த்த நுதி முத் தலை அயில் கொடிய கூற்றைப்
    பார்த்து, எயிறு தின்று, பகு வாய்முழை திறந்து, ஓர்
    வார்த்தை உரைசெய்தனள்-இடிக்கும் மழை அன்னாள்- 32

  579. கடக்க அரும் வலத்து எனது காவல் இது; யாவும்
    கெட, கருவறுத்தனென்; இனி, சுவை கிடக்கும்
    விடக்கு அரிது எனக் கருதியோ? விதிகொடு உந்த,
    படக் கருதியோ?-பகர்மின், வந்த பரிசு! என்றே. 33

  580. வேல் கொண்டு எறிவேன்? எனத் தாடகை சினந்து வருதல்

  581. மேகம் அவை இற்று உக விழிந்தனள், புழுங்கா,
    மாக வரை இற்று உக உதைத்தனள்; மதித் திண்
    பாகம் எனும் முற்று எயிறு அதுக்கி, அயில் பற்றா,
    ஆகம் உற உய்த்து, எறிவென் என்று, எதிர் அழன்றாள். 34

  582. பெண் என்றெண்ணி இராமன் கணை தொடாதிருத்தல்

  583. அண்ணல் முனிவற்கு அது கருத்து எனினும், ஆவி
    உண் என, வடிக் கணை தொடுக்கிலன்; உயிர்க்கே
    துண்ணெனும் வினைத்தொழில் தொடங்கியுளளேனும்,
    பெண் என மனத்திடை பெருந்தகை நினைந்தான். 35

  584. இராமன் கருத்தறிந்த முனிவன், இவள் பெண் அல்லள்; கொல்லுதி எனல்

  585. வெறிந்த செம் மயிர் வெள் எயிற்றாள், தனை
    எறிந்து கொல்வென் என்று ஏற்கவும், பார்க்கிலாச்
    செறிந்த தாரவன் சிந்தைக் கருத்து எலாம்
    அறிந்து, நான்மறை அந்தணன் கூறுவான்: 36

  586. தீது என்றுள்ளவை யாவையும் செய்து, எமைக்
    கோது என்று உண்டிலள்; இத்தனையே குறை;
    யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்,
    மாது என்று எண்ணுவதோ?-மணிப் பூணினாய்! 37

  587. நாண்மையே உடையார்ப் பிழைத்தால், நகை;
    வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர்
    தோண்மையே இவள் பேர் சொலத் தோற்குமேல்,
    ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே? 38

  588. இந்திரன் இடைந்தான்; உடைந்து ஓடினார்,
    தந்திரம் படத் தானவர், வானவர்;
    மந்தரம் இவள் தோள் எனின், மைந்தரோடு,
    அந்தரம் இனி யாதுகொல், ஆண்மையே? 39

  589. கறங்கு அடல் திகிரிப் படி காத்தவர்
    பிறங்கடைப் பெரியோய்! பெரியோரொடும்
    மறம்கொடு, இத் தரை மன்னுயிர் மாய்த்து, நின்று,
    அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ? 40

  590. சாற்றும் நாள் அற்றது எண்ணி, தருமம் பார்த்து,
    ஏற்றும் விண் என்பது அன்றி, இவளைப் போல்,
    நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர்
    கூற்றும் உண்டுகொல்?-கூற்று உறழ் வேலினாய்! 41

  591. மன்னும் பல் உயிர் வாரி, தன் வாய்ப் பெய்து
    தின்னும் புன்மையின் தீமையது ஏது? -ஐய!-
    பின்னும் தாழ் குழல் பேதைமைப் பெண் இவள்
    என்னும் தன்மை, எளிமையின் பாலதே! 42

  592. ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட்
    சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்;
    ஆறி நின்றது அருள் அன்று; அரக்கியைக்
    கோறி என்று, எதிர் அந்தணன் கூறினான். 43

  593. முனிவனின் ஏவலுக்கு இராமன் இசைந்து கூறுதல்

  594. ஐயன் அங்கு அது கேட்டு, அறன் அல்லவும்
    எய்தினால், அது செய்க! என்று ஏவினால்,
    மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
    செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு என்றான். 44

  595. தாடகை சூலப் படையை ஏவ, இராமன் அம்பால் அதனைத் துணித்தல்

  596. கங்கைத் தீம் புனல் நாடன் கருத்தை, அம்
    மங்கைத் தீ அனையாளும் மனக்கொளா,
    செங் கைச் சூல வெந் தீயினை, தீய தன்
    வெங் கண் தீயொடு மேற்செல வீசினாள். 45

  597. புதிய கூற்று அனையாள் புகைந்து ஏவிய
    கதிர் கொள் மூஇலைக் கால வெந் தீ, முனி
    விதியை மேற்கொண்டு நின்றவன்மேல், உவா
    மதியின்மேல் வரும் கோள் என, வந்ததே. 46

  598. மாலும், அக் கணம் வாளியைத் தொட்டதும்,
    கோல வில் கால் குனித்ததும், கண்டிலர்;
    காலனைப் பறித்து அக் கடியாள் விட்ட
    சூலம் அற்று வீழ் துண்டங்கள் கண்டனர். 47

  599. தாடகை கல் மழை பொழிய, இராமன் அம்பு மழையால் தடுத்தல்

  600. அல்லின் மாரி அனைய நிறத்தவள்,
    சொல்லும் மாத்திரையின், கடல் தூர்ப்பது ஓர்
    கல்லின் மாரியைக் கைவகுத்தாள்; அது
    வில்லின் மாரியின், வீரன் விலக்கினான். 48
    மின்னொடும் அசனியோடும் வீழ்வதே போல-வீழ்ந்தாள். 50

  601. இராம பாணம் தாடகையின் நெஞ்சில் ஊடுருவ, அவள் மாய்ந்து மண்ணில் வீழ்தல்

  602. சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
    அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
    கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று, கல்லாப்
    புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே! 49

  603. பொன் நெடுங் குன்றம் அன்னான், புகர் முகப் பகழி என்னும்
    மன் நெடுங் கால வன் காற்று அடித்தலும், -இடித்து, வானில்
    கல் நெடு மாரி பெய்யக் கடையுகத்து எழுந்த மேகம்,
    மின்னொடும் அசனியோடும் வீழ்வதே போல-வீழ்ந்தாள். 50

  604. பொடியுடைக் கானம் எங்கும் குருதிநீர் பொங்க வீழ்ந்த
    தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த் தாடகை, தலைகள்தோறும்
    முடியுடை அரக்கற்கு, அந் நாள், முந்தி உற்பாதம் ஆக,
    படியிடை அற்று வீழ்ந்த வெற்றி அம் பதாகை ஒத்தாள். 51

  605. கான் திரிந்து ஆழி ஆகத் தாடகை கடின மார்பத்து
    ஊன்றிய பகழி வாயூடு ஒழிகிய குருதி வெள்ளம்
    ஆன்ற அக் கானம் எல்லாம் பரந்ததால்-அந்தி மாலைத்
    தோன்றிய செக்கர் வானம் தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்தே! 52

  606. வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத,
    காசு உலாம் கனகப் பைம் பூண், காகுத்தன் கன்னிப் போரில்,
    கூசி, வாள் அரக்கர்தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி,
    ஆசையால் உழலும் கூற்றும், சுவை சிறிது அறிந்தது அன்றே. 53

  607. தேவர்கள் மகிழ்ந்து வாழ்த்துதல்

  608. யாமும் எம் இருக்கை பெற்றேம்; உனக்கு இடையூறும் இல்லை;
    கோமகற்கு இனி நீ தெய்வப் படைக்கலம் கொடுத்தி என்னா,
    மா முனிக்கு உரைத்து, பின்னர், வில் கொண்ட மழை அனான்மேல்
    பூமழை பொழிந்து வாழ்த்தி, விண்ணவர் போயினாரே. 54

  609. மிகைப் பாடல்கள்

  610. உள்ளிய காலையின் ஊழித் தீயையும்
    எள்ளுறு கொழுங் கனல் எரியும் வெஞ்சுரம்,
    தெள்ளு தண் புனலிடைச் சேறல் ஒத்தது;
    வள்ளலும், முனிவனை வணங்கிக் கூறுவான்: 18-1

  611. கல் நவில் தோளினாய்! கமலத் தோன் அருள்
    மன்னுயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து,
    இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே
    அன்னவள் யாவள் என்று அறையக் கேட்டியால்: 20-1

  612. இயக்கர்தம் குலத்துளான், உலகம் எங்கணும்
    வியக்குறும் மொய்ம்பினான், எரியின் வெம்மையான்,
    மயக்கு இல் சற்சரன், எனும் வலத்தினான், அருள்
    துயக்கு இலன் சுகேது என்று உளன் ஒர் தூய்மையான். 20-2

  613. அன்னவன் மகவு இலாது அயரும் சிந்தையான்,
    மன் நெடுந் தாமரை மலரின் வைகுறும்
    நல் நெடு முதல்வனை வழுத்தி, நல் தவம்
    பல் நெடும் பகல் எலாம் பயின்ற பான்மையான். 20-3

  614. முந்தினன் அரு மறைக் கிழவன், முற்றும் நின்
    சிந்தனை என்? என,சிறுவர் இன்மையால்
    நொந்தனென்; அருள்க என, நுணங்கு கேள்வியாய்!
    மைந்தர்கள் இலை; ஒரு மகள் உண்டாம் என்றான். 20-4

  615. பூ மட மயிலினைப் பொருவும் பொற்பொடும்,
    ஏமுறு மதமலை ஈர்-ஐஞ்ஞூறுடைத்
    தாம் மிகு வலியொடும், தனயை தோன்றும்; நீ
    போ என, மலர் அயன் புகன்று போயினான். 20-5

  616. ஆயவன் அருள்வழி, அலர்ந்த தாமரைச்
    சேயவள் என வளர் செவ்வி கண்டு, இவட்கு
    ஆயவன் யார்கொல்? என்று ஆய்ந்து, தன் கிளை
    நாயகன், சுந்தன் என்பவற்கு நல்கினான். 20-6

  617. காமனும் இரதியும் கலந்த காட்சி ஈது
    ஆம் என, இயக்கனும் அணங்கு அனாளும், வேறு
    யாமமும் பகலும் ஓர் ஈறு இன்று என்னலாய்,
    தாம் உறு பெருங் களிச் சலதி மூழ்கினார். 20-7

  618. பற்பல நாள் செலீஇ, பதுமை போலிய
    பொற்பினாள் வயிற்றிடை, புவனம் ஏங்கிட,
    வெற்பு அன புயத்து மாரீசனும், விறல்
    மல் பொரு சுவாகுவும், வந்து தோன்றினார். 20-8

  619. மாயமும், வஞ்சமும், வரம்பும் இல் ஆற்றலும்,
    தாயினும் பழகினார் தமக்கும் தேர்வு ஓணாது,
    ஆயவர் வளர்வுழி, அவரை ஈன்ற அக்
    காய் சினத்து இயக்கனும், களிப்பின் மேன்மையான். 20-9

  620. தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர,
    மோதுறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடு
    மாதவன் உறைவிடம் அதனின் வந்து, நீள்
    பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான். 20-10

  621. விழைவு அறு மா தவம் வெஃகினோர் விரும்பு
    உழை, கலை, இரலையை உயிர் உண்டு, ஓங்கிய
    வழை முதல் மரன் எலாம் மடிப்ப, மா தவன்
    தழல் எழ விழித்தனன்; சாம்பல் ஆயினான். 20-11

  622. மற்றவன் விளிந்தமை மைந்தர் தம்மொடும்
    பொற்றொடி கேட்டு, வெங் கனலின் பொங்குறா,
    முற்றுற முடிக்குவென் முனியை என்று எழா,
    நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள். 20-12

  623. இடியொடு மடங்கலும் வளியும் ஏங்கிட,
    கடி கெட அமரர்கள், கதிரும் உட்கிட,
    தடியுடை முகில் குலம் சலிப்ப, அண்டமும்
    வெடிபட, அதிர்ந்து, எதிர் விளித்து மண்டவே. 20-13

  624. தமிழ் எனும் அளப்ப அருஞ் சலதி தந்தவன்
    உமிழ் கனல் விழி வழி ஒழுக, உங்கரித்து
    அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
    இழிக! என, உரைத்தனன், அசனி எஞ்சவே. 20-14

  625. வெருக்கொள, உலகையும் விண்ணுளோரையும்
    முருக்கி, எவ் உயிரும் உண்டு, உழலும் மூர்க்கராம்
    அரக்கர்கள் ஆயினர், அக் கணத்தினில்
    உருக்கிய செம்பென உமிழ் கண் தீயினர். 20-15

  626. ஆங்கு அவன், வெகுளியும், அறைந்த சாபமும்
    தாங்கினர்; எதிர் செயும் தருக்கு இலாமையின்,
    நீங்கினர்; சுமாலியை நேர்ந்து, நின்கு யாம்
    ஓங்கிய புதல்வர் என்று, உறவு கூர்ந்தனர். 20-16

  627. அவனொடும் பாதலத்து அநேக நாள் செலீஇ,
    தவன் உறு தசமுகன் தனக்கு மாதுலர்
    இவர் என, புடைத்து அழித்து, உலகம் எங்கணும்,
    பவனனின் திரிகுநர், பதகி மைந்தர்கள். 20-17

  628. மிகும் திறல் மைந்தரை வேறு நீங்குறா,
    தகும் தொழில் முனிவரன் சலத்தை உன்னியே,-
    வகுந்துவின் வசுவரி வதிந்தது இவ் வனம்
    புகுந்தனள்,-அழல் எனப் புழுங்கும் நெஞ்சினாள். 20-18

  629. மன்னர் மன்னவன் காதல! மற்றும் ஒன்று
    இன்னம் யான் உரைக்கின்றது யாது எனின்,
    முன் ஓர் காலம் நிகழ்ந்த முறைமை ஈது
    என்ன ஓதலுற்றான் தவத்து ஈறு இலான். 39-1

  630. பிருகு என்னும் பெருந் தவன் தன் மனை
    வரு கயல் கண் கியாதி, வல் ஆசுரர்க்கு
    உருகு காதலுற, உறவாதலே
    கருதி, ஆவி கவர்ந்தனன், நேமியான். 39-2

  631. வானகத்தினில், மண்ணினில், மன்னுயிர்
    போனகம் தனக்கு என்று எணும் புந்திய
    தானவன் குமுதிப் பெயராள்தனை
    ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர்கோன், 39-3

  632. ஆதலால், அரிக்கு, ஆகண்டலன் தனக்கு,
    ஓது கீர்த்தி உண்டாயது அல்லால், இடை
    ஏதம் என்பன எய்தியவோ? சொலாய்-
    தாது அடர்ந்து தயங்கிய தாரினாய்! 39-4

  633. ஏக்கமோடும் இமையவர் எங்கணும்,
    வாக்கின் முந்துற மாயை வளர்ப்பவள்,
    மூக்கும் வார் செவியும் முறை போயிட,
    தாக்கும் வள்ளற்கு இளவலும் தாக்கினான். 48-1

  634. விலக்கி நின்று, அவன் வெங் கணை விரைவினில் விலக்கி,
    கலக்கம் வானவர் தவிர்ந்திட, காலனும் கலங்கத்
    துலக்கி, வையகத்து இடுக்கணும் முனிவர்தம் துயரும்
    உலக்க, ஊழித் தீ ஒப்பது ஓர் கணை தொடுத்து எய்தான். 48-2

  635. பால காண்டம்

    8. வேள்விப் படலம்




  636. விசுவாமித்திரர் இராமனுக்குப் படைக்கலம் வழங்குதல்

  637. விண்ணவர் போய பின்றை, விரிந்த பூமழையினாலே
    தண்ணெனும் கானம் நீங்கி, தாங்க அருந் தவத்தின் மிக்கோன்,
    மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய்
    அண்ணல்தன் சொல்லே அன்ன, படைக்கலம் அருளினானே. 1

  638. ஆறிய அறிவன் கூறி அளித்தலும், அண்ணல்தன்பால்,
    ஊறிய உவகையோடும், உம்பர்தம் படைகள் எல்லாம்,
    தேறிய மனத்தான் செய்த நல்வினைப் பயன்கள் எல்லாம்
    மாறிய பிறப்பில் தேடி வருவபோல், வந்த அன்றே. 2

  639. இராமன் ஏவலுக்கு படைகள் அமைந்து நிற்றல்

  640. மேவினம்; பிரிதல் ஆற்றேம்; வீர! நீ விதியின் எம்மை
    ஏவின செய்து நிற்றும், இளையவன் போல என்று
    தேவர்தம் படைகள் செப்ப, செவ்விது என்று அவனும் நேர,
    பூவைபோல் நிறத்தினாற்குப் புறத்தொழில் புரிந்த அன்றே. 3

  641. வழியில் எதிர்ப்பட்ட நதியைக் குறித்து இராமன் வினாவுதலும், முனிவனின் விடையும்

  642. இனையன நிகழ்ந்த பின்னர், காவதம் இரண்டு சென்றார்;
    அனையவர் கேட்க, ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகித் தோன்ற,
    முனைவ! ஈது யாவது? என்று, முன்னவன் வினவ, பின்னர்,
    வினை அற நோற்று நின்ற மேலவன் விளம்பலுற்றான்: 4

  643. எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள் என்று,
    அம் முனி புகல, கேளா, அதிசயம் மிகவும் தோன்ற,
    செம்மலும் இளைய கோவும், சிறிது இடம் தீர்ந்த பின்னர்,
    மைம் மலி பொழில் யாது? என்ன, மா தவன் கூறலுற்றான்: 5

  644. நதியை அடுத்த சோலையின் சிறப்பை இராமன் கேட்க, முனிவன் எடுத்துரைத்தல்

  645. தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை என்று எண்ணும்
    மங்கைமார் சிந்தை போலத் தூயது; மற்றும் கேளாய்:
    எங்கள் நான்மறைக்கும், தேவர் அறிவிற்கும், பிறர்க்கும், எட்டாச்
    செங் கண் மால் இருந்து, மேல்நாள் செய் தவம் செய்தது அன்றே. 6

  646. பாரின்பால், விசும்பின்பாலும், பற்று அறப் படிப்பது அன்னான்
    பேர் என்ப; அவன் செய் மாயப் பெரும் பிணககு ஒருங்கு தேர்வார்
    ஆர்? என்பான்; அமல மூர்த்தி கருதியது அறிதல் தேற்றாம்;
    ஈர்-ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து, இப்பால். 7

  647. முனிவன் உரைத்த மாவலி வரலாறு

  648. ஆனவன் இங்கு உறைகின்ற அந் நாள்வாய்
    ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
    ஏனம் எனும் திறல் மாவலி என்பான்,
    வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்; 8

  649. செய்தபின், வானவரும் செயல் ஆற்றா
    நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான்;
    ஐயம் இல் சிந்தையர் அந்தணர் தம்பால்,
    வையமும் யாவும் வழங்க, வலித்தான்; 9

  650. ஆயது அறிந்தனர் வானவர், அந் நாள்;
    மாயனை வந்து வணங்கி இரந்தார்;
    தீயவன் வெந் தொழில் தீர் என நின்றார்;
    நாயகனும், அது செய்ய நயந்தான். 10

  651. காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
    வால்-அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய்,
    நீல நிறத்து நெடுந்தகை வந்து, ஓர்
    ஆல் அமர் வித்தின் அருங் குறள் ஆனான். 11

  652. முப்புரிநூலினன், முஞ்சியன், விஞ்சை
    கற்பது ஒர் நாவன், அனல் படு கையன்,
    அற்புதன்,-அற்புதரே அறியும் தன்
    சிற்பதம் ஒப்பது ஒர் மெய்க்கொடு-சென்றான். 12

  653. அன்று அவன் வந்தது அறிந்து, உலகு எல்லாம்
    வென்றவன், முந்தி வியந்து எதிர் கொண்டான்;
    நிந்தனின் அந்தணர் இல்லை; நிறைந்தோய்!
    எந்தனின் உய்ந்தவர் யார் உளர்? என்றான். 13

  654. ஆண்தகை அவ் உரை கூற, அறிந்தோன்,
    வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி,
    நீண்ட கையாய்! இனி, நின்னுழை வந்தோர்
    மாண்டவர்; அல்லவர் மாண்பு இலர் என்றான். 14

  655. சிந்தை உவந்து எதிர், என் செய்? என்றான்;
    அந்தணன், மூஅடி மண் அருள், உண்டேல்;
    வெந் திறலாய்! இது வேண்டும் எனா முன்,
    தந்தனென் என்றனன்; வெள்ளி, தடுத்தான்: 15

  656. கண்ட திறத்து இது கைதவம்; ஐய!
    கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்;
    அண்டமும் முற்றும் அகண்டமும், மேல்நாள்,
    உண்டவன் ஆம்; இது உணர்ந்துகொள் என்றான். 16

  657. நினைக்கிலை; என் கை நிமிர்ந்திட வந்து,
    தனக்கு இயலாவகை தாழ்வது, தாழ்வு இல்
    கனக் கரியானது கைத்தலம் என்னின்,
    எனக்கு இதன்மேல் நலம் யாது கொல்? என்றான். 17

  658. துன்னினர் துன்னலர் என்பது சொல்லார்,
    முன்னிய நல் நெறி நூலவர்; முன்வந்து,
    உன்னிய தானம் உயர்ந்தவர் கொள்க
    என்னின், இவன் துணை யாவர் உயர்ந்தார்? 18

  659. வெள்ளியை ஆதல் விளம்பினை, மேலோர்
    வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால்,
    எள்ளுவ என் சில? இன் உயிரேனும்
    கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால். 19

  660. மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது
    ஏந்திய கைகொடு இரந்தவர்;-எந்தாய்!-
    வீந்தவர் என்பவர்; வீந்தவரேனும்,
    ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே? 20

  661. அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்;
    கொடுப்பவர் முன்பு, கொடேல் என நின்று,
    தடுப்பவரே பகை; தம்மையும் அன்னார்
    கெடுப்பவர்; அன்னது ஒர் கேடு இலை என்றான். 21

  662. கட்டுரையின், தம கைத்து உள போழ்தே
    இட்டு, இசைகொண்டு, அறன் எய்த முயன்றோர்
    உள் தெறு வெம் பகை ஆவது உலோபம்;
    விட்டிடல் என்று விலக்கினர் தாமே. 22

  663. முடிய இம் மொழி எலாம் மொழிந்து, மந்திரி,
    கொடியன் என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன்;
    அடி ஒரு மூன்றும், நீ, அளந்து கொள்க என,
    நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான். 23

  664. கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்,
    பயந்தவர்களும் இகழ் குறளன், பார்த்து எதிர்
    வியந்தவர் வெருக் கொள, விசும்பின் ஓங்கினான் -
    உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே. 24

  665. நின்ற கால் மண் எலாம் நிரப்பி, அப்புறம்
    சென்று பாவிற்றிலை, சிறிது பார் எனா;
    ஒன்ற, வானகம் எலாம் ஒடுக்கி, உம்பரை
    வென்ற கால் மீண்டது, வெளி பெறாமையே. 25

  666. உலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு
    அலகு இலாது, அவ் அடிக்கு, அன்பன் மெய்யதாம்,
    இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்,-
    சிலை குலாம் தோளினாய்!-சிறியன் சாலவே! 26

  667. உரியது இந்திரற்கு இது என்று, உலகம் ஈந்து போய்,
    விரி திரைப் பாற்றுடல் பள்ளி மேவினான்;
    கரியவன், உலகு எலாம் கடந்த தாள் இணை
    திருமகள் கரம் செக்கச் சிவந்து காட்டிற்றே! 27

  668. திருமால் இருந்த இடமே வேள்விக்கு ஏற்ற இடம் என முனிவன் கூறுதல்

  669. ஆதலால், அரு வினை அறுக்கும்; ஆரிய!
    காதலால் கண்டவர் பிறவி காண்குறார்;
    வேதநூல் முறைமையால் வேள்வி முற்றுவேற்கு,
    ஈது அலாது இல்லை, வேறு இருக்கற்பாலதே. 28

  670. இராம இலக்குவர் காவல் இருக்க, முனிவன் வேள்வி தொடங்குதல்

  671. ஈண்டு இருந்து இயற்றுவென் யாகம், யான் எனா,
    நீண்ட பூம் பழுவத்தை நெறியின் எய்தி, பின்
    வேண்டுவ கொண்டு, தன் வேள்வி மேவினான்,
    காண்தகு குமரரைக் காவல் ஏவியே. 29

  672. எண்ணுதற்கு, ஆக்க, அரிது இரண்டு-மூன்று நாள்
    விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை,
    மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்,
    கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர். 30

  673. இராமன் முனிவனிடம் தீய அரக்கரின் வருகைப் பற்றி வினாவல்

  674. காத்தனர் திரிகின்ற காளை வீரரில்
    மூத்தவன், முழுது உணர் முனியை முன்னி, நீ,
    தீத் தொழில் இயற்றுவர் என்ற தீயவர்,
    ஏத்த அருங் குணத்தினாய்! வருவது என்று? என்றான். 31

  675. அது சமயம் அரக்கர் ஆரவாரம் செய்து வருதல்

  676. வார்த்தை மாறு உரைத்திலன், முனிவன், மோனியாய்;
    போர்த் தொழில் குமரனும், தொழுது போந்தபின்,
    பார்த்தனன் விசும்பினை; -பருவ மேகம்போல்
    ஆர்த்தனர், இடித்தனர், அசனி அஞ்சவே. 32

  677. அரக்கர் சேனையின் திறன்

  678. எய்தனர்; எறிந்தனர்; எரியும், நீருமாய்ப்
    பெய்தனர்; பெரு வரை பிடுங்கி வீசினர்;
    வைதனர்; தெழித்தனர்; மழுக் கொண்டு ஓச்சினர்;
    செய்தனர், ஒன்று அல தீய மாயமே. 33

  679. ஊன் நகு படைக்கலம் உருத்து வீசின,
    கானகம் மறைத்தன, கால மாரி போல்;
    மீன் நகு திரைக் கடல் விசும்பு போர்த்தென,
    வானகம் மறைத்தன, வளைந்த சேனையே. 34

  680. வில்லொடு மின்னு, வாள் மிடைந்து உலாவிட,
    பல் இயம் கடிப்பினில் இடிக்கும் பல் படை,
    ஒல் என உரறிய ஊழிப் பேர்ச்சியுள்,
    வல்லை வந்து எழுந்தது ஓர் மழையும் போன்றவே. 35

  681. அரக்கரை இலக்குவனுக்கு இராமன் காட்டுதல்

  682. கவருடை எயிற்றினர்; கடித்த வாயினர்;
    துவர் நிறப் பங்கியர்; சுழல் கண் தீயினர்;
    பவர் சடை அந்தணன் பணித்த தீயவர்
    இவர் என, இலக்குவற்கு இராமன் காட்டினான். 36

  683. உடனே அம்பு எய்து வீழ்த்துவதாக இலக்குவன் கூறுதல்

  684. ஈண்ட அக் குமாரனும், கடைக் கண் தீ உக,
    விண்தனை நோக்கி, தன் வில்லை நோக்கினான்;
    அண்டர் நாயக! இனிக் காண்டி, ஈண்டு அவர்
    துண்டம் வீழ்வன என, தொழுது சொல்லினான். 37

  685. வேள்விச் சாலையின்மேல் இராமன் சரக்கூடம் அமைத்தல்

  686. தூம வேல் அரக்கர்தம் நிணமும் சோரியும்
    ஓம வெங் கனலிடை உகும் என்று உன்னி, அத்
    தாமரைக் கண்ணனும், சரங்களே கொடு,
    கோ முனி இருக்கை, ஓர் கூடம் ஆக்கினான். 38

  687. இராமன் போர் செய்யத் தொடங்குதல்

  688. நஞ்சு அட எழுதலும் நடுங்கி, நாள்மதிச்
    செஞ் சடைக் கடவுளை அடையும் தேவர்போல்,
    வஞ்சனை அரக்கரை வெருவி, மா தவர்,
    அஞ்சனவண்ண! நின் அபயம் யாம் என்றார். 39

  689. தவித்தனன் கரதலம்; கலங்கலீர் என,
    செவித்தலம் நிறுத்தினன், சிலையின் தெய்வ நாண்;
    புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன்;
    குவித்தனன், அரக்கர்தம் சிரத்தின் குன்றமே. 40

  690. இராமனின் அம்பு சுபாகுவைக் கொன்று, மாரீசனைக் கடலில் சேர்த்தல்

  691. திருமகள் நாயகன் தெய்வ வாளிதான்,
    வெருவரு தாடகை பயந்த வீரர்கள்
    இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது; அங்கு
    ஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே. 41

  692. இறவாது எஞ்சிய அரக்கர்கள் அஞ்சி ஓடுதல்

  693. துணர்த்த பூந் தொடையலான் பகழி தூவினான்;
    கணத்திடை விசும்பினைக் கவித்துத் தூர்த்தலால்,
    பிணத்திடை நடந்து இவர் பிடிப்பர் ஈண்டு எனா
    உணர்த்தினர், ஒருவர்முன் ஒருவர் ஓடினார். 42

  694. பிற போர்க் கள நிகழ்ச்சிகள்

  695. ஓடின அரக்கரை உருமின் வெங் கணை
    கூடின; குறைத் தலை மிறைத்துக் கூத்து நின்று
    ஆடின; அலகையும், ஐயன் கீர்த்தியைப்
    பாடின; பரந்தன, பறவைப் பந்தரே. 43

  696. தேவர்கள் இராமனை வாழ்த்துதல்

  697. பந்தரைக் கிழித்தன, பரந்த பூ மழை;
    அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன;
    இந்திரன் முதலிய அமரர் ஈண்டினார்;
    சுந்தர வில்லியைத் தொழுது வாழ்த்தினார். 44

  698. புனித மா தவர் ஆசியின் பூ மழை பொழிந்தார்;
    அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த;
    முனியும், அவ் வழி வேள்வியை முறைமையின் முற்றி,
    இனிய சிந்தையன், இராமனுக்கு இனையன இசைத்தான்; 45

  699. வேள்வியை இனிது முடித்த முனிவன் இராமனைப் பாராட்டுதல்

  700. பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை
    போக்கி, நிற்கு இது பொருள் என உணர்கிலென் - புவனம்
    ஆக்கி, மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி,
    காக்கும் நீ, ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே. 46

  701. யான் இனி செய்யவேண்டிய பணி யாது? என இராமன் முனிவனைக் கேட்டல்

  702. என்று கூறிய பின்னர், அவ் எழில் மலர்க் கானத்து,
    அன்று, தான் உவந்து, அருந் தவ முனிவரோடு இருந்தான்;
    குன்றுபோல் குணத்தான் எதிர், கோசலை குருசில்,
    இன்று யான் செயும் பணி என்கொல்? பணி! என இசைத்தான். 47

  703. முனிவன் சனகன் வேள்வியைக் காணச் செல்வோம் என்று சொல்ல, மூவரும் மிதிலைக்குப் புறப்படுதல்

  704. அரிய யான் சொலின், ஐய! நிற்கு அரியது ஒன்று இல்லை;
    பெரிய காரியம் உள; அவை முடிப்பது பின்னர்;
    விரியும் வார் புனல் மருதம் சூழ் மிதிலையர் கோமகன்
    புரியும் வேள்வியும், காண்டும் நாம்; எழுக! என்று, போனார். 48

  705. மிகைப் பாடல்கள்

  706. மானச மடுவில் தோன்றி வருதலால், சரயு என்றே
    மேல் முறை அமரர் போற்றும் விழு நதி அதனினோடும்,
    ஆன கோமதி வந்து எய்தும் அரவம் அது என்ன, அப்பால்
    போனபின், பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார். 4-1

  707. சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த தூ நதி யாவது? என்றே,
    வரமுனிதன்னை, அண்ணல் வினவுற, மலருள் வைகும்
    பிரமன் அன்று அளித்த வென்றிப் பெருந்தகைக் குசன் என்று ஓதும்
    அரசர்கோன் அளித்த மைந்தர் அரு மறை அனைய நால்வர்; 4-2

  708. குசன், குசநாபன், கோது இல் குணத்தின் ஆதூர்த்தன், கொற்றத்து
    இசை கெழு வசு, என்று ஓதும் இவர் பெயர்; இவர்கள் தம்முள்,
    குசன் கவுசாம்பி, நாபன் குளிர் மகோதயம், ஆதூர்த்தன்
    வசை இல் தன்மவனம், மற்றை வக் கிரிவிரசம், வாழ்ந்தார். 4-3

  709. அவர்களில் குசநாபற்கே ஐ-இருபதின்மர் அம்சொல்
    துவர் இதழ்த் தெரிவை நல்லார் தோன்றினர் வளரும் நாளில்
    இவர் பொழில்-தலைக்கண் ஆயத்து எய்துழி, வாயு எய்தி,
    கவர் மனத்தினனாய், அந்தக் கன்னியர் தம்மை நோக்கி, 4-4

  710. கொடித்தனி மகரம் கொண்டான் குனி சிலைச் சரத்தால் நொந்தேன்;
    வடித் தடங் கண்ணீர்! என்னை மணத்திர் என்று உரைப்ப, எந்தை
    அடித்தலத்து உரைத்து, நீரோடு அளித்திடின், அணைதும் என்ன,
    ஒடித்தனன் வெரிநை; வீழ்ந்தார், ஒளி வளை மகளிர் எல்லாம். 4-5

  711. சமிரணன் அகன்றதன் பின், தையலார், தவழ்ந்து சென்றே,
    அமிர்து உகு குதலை மாழ்கி, அரசன் மாட்டு உரைப்ப, அன்னான்,
    நிமிர் குழல் மடவார்த்தேற்றி, நிறை தவன் சூளி நல்கும்
    திமிர் அறு பிரமதத்திற்கு அளித்தனன், திரு அனாரை. 4-6

  712. அவன் மலர்க் கைகள் நீவ, கூன் நிமிர்ந்து, அழகு வாய்த்தார்;
    புவனம் முற்றுடைய கோவும், புதல்வர் இல்லாமை, வேள்வி
    தவர்களின் புரிதலோடும், தகவு உற, தழலின் நாப்பண்,
    கவனவேகத் துரங்கக் காதி வந்து உதயம்செய்தான். 4-7

  713. அன்னவன் தனக்கு, வேந்தன், அரசொடு, முடியும் ஈந்து,
    பொன்னகர் அடைந்த பின்னர், புகழ் மகோதயத்தில் வாழும்
    மன்னவன் காதிக்கு, யானும், கவுசிகை என்னும் மாதும்,
    முன்னர் வந்து உதிப்ப, அந்த முடியுடை வேந்தர் வேந்தன். 4-8

  714. பிருகுவின் மதலை ஆய, பெருந் தகைப் பிதாவும் ஒவ்வா,
    இரிசிகன் என்பவற்கு மெல்லியலாளை ஈந்தான்;
    அரு மறையவனும் சில் நாள் அறம் பொருள் இன்பம் முற்றி,
    விரி மலர்த் தவிசோன் தன்பால் விழுத் தவம் புரிந்து மீண்டான். 4-9

  715. காதலன் சேணின் நீங்க, கவுசிகை தரிக்கலாற்றாள்,
    மீது உறப் படாலுற்றாள், விழு நதி வடிவம் ஆகி;
    மா தவர்க்கு அரசு நோக்கி, மா நிலத்து உறுகண் நீக்கப்
    போதுக, நதியாய் என்னா, பூமகன் உலகு புக்கான். 4-10

  716. எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம்,
    தடுப்பது நினக்கு அழகிதோ, தகவு இல் வெள்ளி?
    கொடுப்பது விலக்கு கொடியோய்! உனது சுற்றம்
    உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்!. 21-1

  717. குறியவன் கையில் நீர் விழாமல், குண்டிகை
    மறிபட, வாமனன் மலர்க் கைத் தர்ப்பையால்,
    செறிவது நீக்கிட, சிதைந்து கண் உடைந்து
    உறு துயர் வெள்ளியும் ஒதுங்கிப் போயினான். 23-1

  718. நீட்டிய வேலையில் நீரை மாற்றினான்;
    நாட்டம் அது அகத்துளான், சிலம்பின் நாமத்தான்,
    ஓட்டினன் தருப்பையை; உடை கண் நீர் விழ,
    வாட்டம் இல் அந்தணன் மலர்க் கை நீட்டினான். 23-2

  719. பால காண்டம்

    9. அகலிகைப் படலம்



  720. மூவரும் சோணை நதியை அடைய, சூரியன் மறைதல்

  721. அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின
    நலம் பெய் பூண்முலை, நாகு இள வஞ்சியாம் மருங்குல்,
    புலம்பும் மேகலைப் புது மலர், புனை அறல் கூந்தல்,
    சிலம்பு சூழும் கால், சோணை ஆம் தெரிவையைச் சேர்ந்தார். 1

  722. நதிக்கு வந்து அவர் எய்தலும், அருணன் தன் நயனக்
    கதிக்கு முந்துறு கலின மான் தேரொடும், கதிரோன்,
    உதிக்கும் காலையில் தண்மை செய்வான், தனது உருவில்
    கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான்போல், கடல் குளித்தான். 2

  723. மூவரும் இரவு சோலையில் தங்குதல்

  724. கறங்கு தண் புனல், கடி நெடுந் தாளுடைக் கமலத்து
    அறம் கொள் நாள்மலர்க் கோயில்கள் இதழ்க் கதவு அடைப்ப,
    பிறங்கு தாமரைவனம் விட்டு, பெடையொடு களி வண்டு
    உறங்குகின்றது ஓர் நறு மலர்ச் சோலை புக்கு, உறைந்தார். 3

  725. மூவரும் கங்கை நதியைக் காணுதல்

  726. காலன் மேனியின் கருகு இருள் கடிந்து, உலகு அளிப்பான்
    நீல ஆர்கலி, தேரொடு நிறை கதிர்க் கடவுள்,
    மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த
    மூல தாமரை முழு மலர் முளைத்தென, முளைத்தான். 4

  727. அங்கு நின்று எழுந்து, அயன் முதல் மூவரும் அனையார்,
    செங் கண் ஏற்றவன் செறி சடைப் பழுவத்தில் நிறை தேன்
    பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால், பொன்னியைப் பொருவும்
    கங்கை என்னும் அக் கரை பொரு திரு நதி கண்டார். 5

  728. மூவரும் மிதிலை சேர்தல்

  729. பள்ளி நீங்கிய, பங்கயப் பழன நல் நாரை,
    வெள்ள வான் களை களைவுறும் கடைசியர் மிளிர்ந்த
    கள்ள வாள் நெடுங் கண் நிழல், கயல் எனக் கருதா,
    அள்ளி, நாணுறும், அகன் பணை மிதிலை நாடு அணைந்தார். 6

  730. மிதிலை நாட்டு வளம்

  731. வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க,
    அரும்பு நாள்மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப,
    நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறு மலர் யாழின்,
    கரும்பு, பாண் செய, தோகை நின்று ஆடுவ-சோலை. 7

  732. பட்ட வாள் நுதல் மடந்தையர், பார்ப்பு எனும் தூதால்,
    எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் கொதிப்ப,
    வட்ட நாள் மரை மலரின் மேல், வயலிடை மள்ளர்
    கட்ட காவி அம் கண் கடை காட்டுவ-கழனி. 8

  733. தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர,
    கூவும் மென் குயில் குதலையர் குடைந்த தண் புனல்வாய்,
    ஓவு இல் குங்குமச் சுவடு உற, ஒன்றோடு ஒன்று ஊடி,
    பூ உறங்கினும், புன் உறங்காதன - பொய்கை. 9

  734. முறையினின் முது மேதியின் முலை வழி பாலும்,
    துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும்,
    அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும், அழி தேம்
    நறையும் அல்லது, நளிர் புனல் பெருகலா-நதிகள். 10

  735. இழைக்கும் நுண் இடை இடைதர, முகடு உயர் கொங்கை,
    மழைக் கண், மங்கையர் அரங்கினில், வயிரியர் முழவம்
    முழக்கும் இன் இசை வெருவிய மோட்டு இள மூரி
    உழக்க, வாளைகள் பாளையில் குதிப்பன-ஓடை. 11

  736. படை நெடுங் கண் வாள் உறை புக, படர் புனல் மூழ்கி,
    கடைய முன் கடல் செழுந் திரு எழும்படி காட்டி,
    மிடையும், வெள் வளை புள்ளொடும் ஒலிப்ப, மெல்லியலார்
    குடைய, வண்டினம் கடி மலர் குடைவன-குளங்கள். 12

  737. அகலிகை கல்லாய்க் கிடந்த மேட்டைக் காணுதல்

  738. இனைய நாட்டினில் இனிது சென்று, இஞ்சி சூழ் மிதிலை
    புனையும் நீள் கொடிப் புரிசையின் புறத்து வந்து இறுத்தார்;
    மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி
    கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடைக் கண்டார். 13

  739. கல்லின்மேல் இராமனது பாத தூளி பட, அகலிகை பழைய வடிவம் பெற்று எழல்

  740. கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,-
    உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம்
    கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,-
    பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்: 14

  741. அகலிகையை வரலாறு

  742. மா இரு விசும்பின் கங்கை மண் மிசைக் கொணர்ந்தோன் மைந்த!
    மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள்,
    தீவினை நயந்து செய்த தேவர்கோன் தனக்குச் செங் கண்
    ஆயிரம் அளித்தோன் பன்னி; அகலிகை ஆகும் என்றான். 15

  743. பொன்னை ஏய் சடையான் கூறக் கேட்டலும், பூமி கேள்வன்,
    என்னையே! என்னையே! இவ் உலகு இயல் இருந்த வண்ணம்!
    முன்னை ஊழ் வினையினாலோ! நடு ஒன்று முடிந்தது உண்டோ ?
    அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக! என்றான். 16

  744. அவ் உரை இராமன் கூற, அறிவனும், அவனை நோக்கி,
    செவ்வியோய்! கேட்டி: மேல்நாள், செறி சுடர்க் குலிசத்து அண்ணல்
    அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி,
    நவ்விபோல் விழியினாள்தன் வன முலை நணுகலுற்றான்; 17

  745. தையலாள் நயன வேலும், மன்மதன் சரமும், பாய,
    உய்யலாம் உறுதி நாடி உழல்பவன், ஒரு நாள் உற்ற
    மையலால் அறிவு நீங்கி, மா முனிக்கு அற்றம் செய்து,
    பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான். 18

  746. புக்கு, அவளோடும், காமப் புது மண மதுவின் தேறல்
    ஒக்க உண்டு இருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்,
    தக்கது அன்று என்ன ஓராள்; தாழ்ந்தனள் இருப்ப, தாழா
    முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான். 19

  747. சரம் தரு தபம் அல்லால் தடுப்ப அருஞ் சாபம் வல்ல
    வரம் தரு முனிவன் எய்த வருதலும், வெருவி, மாயா,
    நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள்;
    புரந்தரன் நடுங்கி, ஆங்கு ஓர் பூசை ஆய்ப் போகலுற்றான். 20

  748. தீ விழி சிந்த நோக்கி, செய்ததை உணர்ந்து, செய்ய
    தூயவன், அவனை, நின் கைச் சுடு சரம் அனைய சொல்லால்,
    ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று
    ஏயினன்; அவை எலாம் வந்து இயைந்தன், இமைப்பின் முன்னம். 21

  749. எல்லை இல் நாணம் எய்தி, யாவர்க்கும் நகை வந்து எய்தப்
    புல்லிய பழியினோடும் புரந்தரன் போய பின்றை,
    மெல்லியலாளை நோக்கி, விலைமகள் அனைய நீயும்
    கல் இயல் ஆதி என்றான்; கருங்கல் ஆய், மருங்கு வீழ்வாள். 22

  750. பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே; அன்பால்,
    அழல்தருங் கடவுள் அன்னாய்! முடிவு இதற்கு அருளுக! என்ன,
    தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரதராமன் என்பான்
    கழல்-துகள் கதுவ, இந்தக் கல் உருத் தவிர்தி என்றான். 23

  751. இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்: இனி, இந்த உலகுக்கு எல்லாம்
    உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ ?
    மை வண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே! உன்
    கை வண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன். 24

  752. அகலிகை இராமன் பாதம் பணிந்து செல்லுதல்

  753. தீது இலா உதவிசெய்த சேவடிக் கரிய செம்மல்,
    கோது இலாக் குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு
    மா தவன் அருள் உண்டாக வழிபடு; படர் உறாதே,
    போது நீ, அன்னை! என்ன பொன் அடி வணங்கி போனாள். 25

  754. அகலிகையை கௌதமரிடம் சேர்த்த பின் மூவரும் மிதிலையில் புறமதிலை அடைதல்

  755. அருந்தவன் உறையுள்தன்னை அனையவர் அணுகலோடும்,
    விருந்தினர்தம்மைக் காணா, மெய்ம் முனி, வியந்த நெஞ்சன்,
    பரிந்து எதிர் கொண்டு புக்கு, கடன் முறை பழுதுறாமல்
    புரிந்தபின், காதி செம்மல் புனித மா தவனை நோக்கி, 26

  756. அஞ்சன வண்ணத்தாந்தன் அடித் துகள் கதுவாமுன்னம்,
    வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள்;
    நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக! என்ன,
    கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும், கருத்துள் கொண்டான். 27

  757. குணங்களால் உயர்ந்த வள்ளல் கோதமன் கமலத் தாள்கள்
    வணங்கினன், வலம் கொண்டு ஏத்தி, மாசு அறு கற்பின் மிக்க
    அணங்கினை அவன் கை ஈந்து, ஆண்டு அருந் தவனோடும், வாச
    மணம் கிளர் சோலை நீங்கி, மணி மதில் கிடக்கை கண்டார். 28

  758. மிகைப் பாடல்கள்

  759. இனைய சோலை மற்று யாது? என இராகவன் வினவ,
    வினை எலாம் அற நோற்றவன் விளம்புவான்; மேல்நாள்,
    தனையவர் ஆனவர்க்கு இரங்கியே, காசிபன் தனது
    மனையுளாள் தவம் புரிந்தனள், இவண் என வலித்தான். 3-1

  760. அண்ட கோளகைக்கு அப்புறத்து, என்னை ஆளுடைய
    கொண்டல் நீள் பதத்து எய்தி, ஓர் விஞ்சையர் கோதை,
    புண்டரீக மென் பதத்தியைப் புகழ்ந்தனள்; புகழ,
    வண்டு அறா மது மாலிகை கொடுத்தனள் மகிழ்ந்து. 3-2

  761. அன்ன மாலையை யாழிடைப் பிணித்து, அயன் உலகம்,
    கன்னி மீடலும், கசட்டுறு முனி எதிர் காணா,
    என்னை ஆளுடை நாயகிக்கு இசை எடுப்பவள் என்று,
    அன்னள் தாள் இணை வணங்கி நின்று ஏத்தலும், அனையாள். 3-3

  762. உலகம் யாவையும் படைத்து, அளித்து, உண்டு, உமிழ், ஒருவன்
    இலகு மார்பகத்து இருந்து, உயிர் யாவையும் ஈன்ற
    திலக வாணுதல் சென்னியில் சூடிய தெரியல்,
    அலகு இல் மா முனி பெறுக என் அளித்தனள் அளியால், 3-4

  763. தெய்வ நாயகி சென்னியின் சூடிய தெரியல்,
    ஐய! யான் பெறப் புரிந்தது எத் தவம்? என ஆடி,
    வெய்ய மா முனி சென்னியில் சூடியே, வினை போய்
    உய்யும் ஆறு இது என்று உவந்து வந்து, உம்பர் நாடு அடைந்தான். 3-5

  764. பெய்யும் மா முகில் வெள்ளிஅம் பிறங்கல் மீப் பிறழும்
    செய்ய தாமரை ஆயிரம் மலர்ந்து, செங் கதிரின்
    மொய்ய சோதியை மிலைச்சிய முறைமை போன்று ஒளிரும்
    மெய்யினோடு, அயிராவதக் களிற்றின் மேல் விலங்க, 3-6

  765. அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி, அனங்கன்
    சரம் பெய் தூணியின் தளிர் அடி நூபுரம் தழைப்ப,
    கரும்பையும் சுவை கைப்பித்த குதலையர், விளரி
    நிரம்பு பாடலோடு ஆடினர், வீதிகள் நெருங்க, 3-7

  766. நீல மால் வரை தவழ்தரு கதிர் நிலாக் கற்றை
    போலவே, இரு புடையினும், சாமரை புரள,
    கோல மா மதி குறைவு அற நிறைந்து, ஒளி குலாவி,
    மேல் உயர்ந்தென வெள்ளி அம் தனிக் குடை விளங்க, 3-8

  767. தழங்கு பேரியும், குறட்டொடு பாண்டிலும், சங்கும்,
    வழங்கு கம்பலை மங்கல கீதத்தை மறைப்ப,
    முழங்கு நான்மறை, மூரிநீர் முழக்கு என, உலகை
    விழுங்க, மால் வரும் விழா அணி கண்டு உளம் வியந்தான். 3-9

  768. தனை ஒவ்வாதவன் மகிழ்ச்சியால், வாசவன் தன் கை
    வனையும் மாலையும் நீட்டலும், தோட்டியால் வாங்கி,
    துனை வலத்து அயிராவதத்து எருத்திடைத் தொடுத்தான்;
    பனை செய் கையினால் பறித்து அடிப்படுத்தது, அப் பகடு. 3-10

  769. கண்ட மா முனி விழி வழி ஒழுகு வெங் கனலால்,
    அண்ட கூடமும் சாம்பராய் ஒழியும் என்று, அழியா,
    விண்டு நீங்கினர் விண்ணவர்; இரு சுடர் மீண்ட;
    எண் திசாமுகம் இருண்டது; சுழன்றது எவ் உலகும். 3-11

  770. புகை எழுந்தன, உயிர்த்தொறும்; எயில் பொடித்தவனின்
    நகை எழுந்தன; நிவந்தன புருவம், நல் நுதலில்;
    சிகை எழும் சுடர் விழியினன், அசனியும் திகைப்ப,
    மிகை எழுந்திடு சதமக! கேள் என வெகுண்டான். 3-12

  771. பூத நாயகன், புவிமகள் நாயகன், பொரு இல்
    வேத நாயகன், மார்பகத்து இனிது வீற்றிருக்கும்
    ஆதி நாயகி விருப்புறு தெரியல் கொண்டு அணைந்த
    மாதராள்வயின் பெற்றனென், முயன்ற மா தவத்தால். 3-13

  772. இன்று நின் பெருஞ் செவ்வி கண்டு, உவகையின் ஈந்த
    மன்றல் அம் தொடை இகழ்ந்தனை; நினது மா நிதியும்
    ஒன்று அலாத பல் வளங்களும் உவரி புக்கு ஒளிப்ப,
    குன்றி, நீ துயர் உறுக என உரைத்தனன், கொதித்தே. 3-14

  773. அரமடந்தையர், கற்பகம், நவ நிதி, அமிர்தம்,
    சுரபி, வாம்பரி, மதமலை, முதலிய தொடக்கத்து
    ஒரு பெரும் பொருள் இன்றியே உவரி புக்கு ஒளிப்ப
    வெருவி ஓடின, கண்ணன் வாழ் வெண்ணெய் மேவாரின். 3-15

  774. அந்த வேலையில், இந்திரன் சிந்தை நொந்து அழிந்து,
    வந்து, வானவ முனிவனை வழிபட்டு வழுத்த,
    நந்தும் நின் பெருஞ் செல்வம் மால் அருளினால், நயக்க
    முந்தும் என்று சாபத்தினின் மோக்கமும் மொழிந்தான். 3-16

  775. வெய்ய மா முனி வெகுளியால் விண்ணகம் முதலாம்
    வையம் யாவையும் வறுமை நோய் நலிய, வானோரும்,
    தையல் பாகனும், சதுமுகக் கடவுளும், கூடி,
    செய்ய தாமரைத் திரு மறு மார்பனைச் சேர்ந்தார். 3-17

  776. வெஞ் சொல் மா முனி வெகுளியால் விளைந்தமை விளம்பி,
    கஞ்ச நாள் மலர்க் கிழவனும், கடவுளர் பிறரும்,
    தஞ்சம் இல்லை; நின் சரணமே சரண் எனச் செப்ப,
    அஞ்சல், அஞ்சல்! என்று உரைத்தனன், உலகு எலாம் அளந்தோன். 3-18

  777. மத்து மந்தரம்; வாசுகி கடை கயிறு; அடை தூண்
    மெத்து சந்திரன்; சுராசுரர் வேறு வேறு உள்ள
    கொத்து இரண்டு பால் வலிப்பவர்; ஓடதி கொடுத்து,
    கத்து வாரிதி மறுகுற, அமிழ்து எழக் கடைமின்; 3-19

  778. யாமும் அவ் வயின் வருதும்; நீர் கதுமென எழுந்து
    போமின் என்று அருள்புரிதலும், இறைஞ்சினர் புகழ்ந்து,
    நாமம் இன்று எனக் குனித்தனர், நல்குரவு ஒழிந்தது.
    ஆம் எனும் பெருங் களி துளக்குறுதலால், அமரர். 3-20

  779. மலை பிடுங்கினர்; வாசுகி பிணித்தனர்; மதியை
    நிலை பெறும்படி நட்டனர்; ஓடதி நிரைத்தார்;
    அலை பெறும்படி பயோததி கடைந்தனர்; அவனி
    நிலை தளர்ந்திட, அனந்தனும், கீழுற நெளித்தான். 3-21

  780. திறல் கொள் ஆமை ஆய், முதுகினில் மந்தரம் திரிய
    விறல் கொள் ஆயிரம் தடக் கைகள் பரப்பி, மீ வலிப்ப,
    மறன் நிலாம் முனி வெகுளியால் மறைந்தன வரவே,
    அறன் இலா மனத்து அடைகிலா நெடுந் தகை அமைத்தான். 3-22

  781. இறந்து நீங்கின யாவையும், எம்பிரான் அருளால்,
    பிறந்த; அவ்வயின் சுராசுரர் தங்களில் பிணங்க,
    சிறந்த மோகினி மடந்தையால், அவுணர்தம் செய்கை
    துறந்து மாண்டனர்; ஆர் அமிர்து அமரர்கள் துய்த்தார். 3-23

  782. வெருவும் ஆலமும் பிறையும் வெள் விடையவற்கு அளித்து,
    தருவும் வேறு உள தகைமையும் சதமகற்கு அருளி,
    மருவு தொல் பெரு வளங்களும் வேறு உற வழங்கி,
    திருவும் ஆரமும் அணிந்தனன், சீதர மூர்த்தி, 3-24

  783. அந்த வேலையில் திதி பெருந் துயர் உழந்து அழிவாள்,
    வந்து காசிபன் மலரடி வணங்கி, என் மைந்தர்
    இந்திராதியர் புணர்ப்பினால் இறந்தனர்; எனக்கு ஓர்
    மைந்தன் நீ அருள், அவர் தமை மடித்தலுக்கு என்றாள். 3-25

  784. என்று கூறலும், மகவு உனக்கு அளித்தனம்; இனி, நீ,
    சென்று பாரிடை, பருவம் ஓர் ஆயிரம் தீர,
    நின்று, மா தவம் புரிதியேல், நினைவு முற்றுதி என்று
    அன்று கூறிட, புரிந்தனள் அருந்தவம் அனையாள். 3-26

  785. கேட்ட வாசவன், அன்னவட்கு அடிமையில் கிடைத்து,
    வாட்டம் மா தவத்து உணர்ந்து, அவள் வயிற்று உறு மகவை
    வீட்டியே எழு கூறு செய்திடுதலும், விம்மி,
    நாட்டம் நீர் தர, மருந்து எனும் நாமமும் நவின்றான். 3-27

  786. ஆயது இவ் இடம்; அவ் இடம் அவிர் மதி அணிந்த
    தூயவன் தனக்கு உமைவயின் தோன்றியே, தொல்லை
    வாயுவும் புனல் கங்கையும் பொறுக்கலா வலத்த
    சேய் வளர்ந்தருள் சரவணம் என்பதும் தெரிந்தான். 3-28

  787. இந்த மா நதிக்கு உற்று உள தகைமை யாவும்,
    எந்தை! கூறுக என்று இராகவன் வினவுற, எனை ஆள்
    மைந்த! நின் திரு மரபு உளான், அயோத்தி மா நகர் வாழ்
    விந்தை சேர் புயன், சகரன், இம் மேதினி புரந்தான். 5-1

  788. விறல் கொள் வேந்தனுக்கு உரியவர் இருவரில், விதர்பை
    பொறையின் நல்கிய அசமஞ்சற்கு அஞ்சுமான் புதல்வன்;
    பறவை வேந்தனுக்கு இளைய மென் சுமதி முன் பயந்த
    அறனின் மைந்தர்கள் அறுபதினாயிரர் வலத்தார். 5-2

  789. திண் திறல் புனை சகரனும், தனையர் சேவகங்கள்
    கண்டு, முற்றிய அய மகம் புரிதலும், கனன்று,
    வண்டு துற்று தார் வாசவற்கு உணர்த்தினர், வானோர்;
    ஒண் திறல் பரி கபிலனது இடையினில் ஒளித்தான். 5-3

  790. வாவு வாசிபின் சென்றனன் அஞ்சுமான் மறுகி,
    பூவில் ஒர் இடம் இன்றியே நாடினன் புகுந்து,
    தேவர் கோமகன் கரந்தமை அறிந்திலன், திகைத்து,
    மேவு தாதைதன் தாதைபால் உரைத்தனன், மீண்டு. 5-4

  791. கேட்ட வேந்தனும், மதலையர்க்கு அம்மொழி கிளத்த,
    வாட்டம் மீக் கொள, சகரர்கள் வடவையின் மறுகி,
    நாட்டம் வெங் கனல் பொழிதர, நானிலம் துருவி,
    தோட்டு நுங்கினர் புவியினை, பாதலம் தோன்ற. 5-5

  792. நூறு யோசனை அகலமும் ஆழமும் நுடங்கக்
    கூறு செய்தனர், என்பரால், வட குணதிசையில்;
    ஏறு மா தவக் கபிலன்பின் இவுளி கண்டு, எரியின்
    சீறி, வைதனர்; செருக்கினர், நெருக்கினர்; செறுத்தார். 5-6

  793. மூளும் வெஞ் சினத்து அருந்தவன் முனிந்து, எரி விழிப்ப,
    பூளைசூடிதன் நகையினில் எயில் பொடிந்தனபோல்,
    ஆளும் மைந்தர் ஆரு அயுதரும் சாம்பர் ஆய் அவிந்தார்;
    வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு உரைத்தனர், வேயர். 5-7

  794. உழைத்த வெந் துயர்க்கு ஈறு காண்கிலன்; உணர்வு ஒழியா,
    அழைத்து மைந்தன் தன் மைந்தனை, அவர் கழிந்தனரேல்,
    இழைத்த வேள்வி இன்று இழப்பதோ? என, அவன் எழுந்து,
    தழைத்த மா தவக் கபிலன் வாழ் பாதலம் சார்ந்தான். 5-8

  795. விண்டு நீங்கினர் உடல் உகு பிறங்கல் வெண் நீறு
    கண்டு, நுண்ணெனும் மனத்தினன், கபில மா முனிதன்
    புண்டரீக மென் தாள் தொழுது எழுந்தனன் புகழ,
    கொண்டு போக, நின் இவுளி! என்று, உற்றதும் குறித்தான். 5-9

  796. பழுதிலாதவன் உரைத்த சொல் கேட்டலும், பரிவால்
    தொழுது, வாம் பரி கொணர்ந்து, அவி சுரர்களுக்கு ஈயா,
    முழுதும் வேள்வியை முற்றுவித்து, அரசனும் முடிந்தான் -
    எழுது கீர்த்தியாய்!-மைந்தனுக்கு அரசியல் ஈந்து. 5-10

  797. சகரம் தொட்டலால், சாகரம் எனப் பெயர் தழைப்ப,
    மகர வாரிதி சிறந்தது; மகிதலம் முழுதும்
    நிகர் இல் மைந்தனே புரந்தனன்; இவன் நெடு மரபில்,
    பகிரதன் எனும் பார்த்திபன் பருதி ஒத்து உதித்தான். 5-11

  798. உலகம் யாவையும் பொது அறத் திகிரியை உருட்டி,
    இவரும் மன்னவன் இருந்துழி, இறந்தவர் சரிதம்,
    அலகு இல் தொல் முனி ஆங்கவற்கு உரைத்திட, அரசன்
    திலகம் மண் உற வணங்கி நின்று, ஒரு மொழி செப்பும்: 5-12

  799. கொடிய மா முனி வெகுளியின் மடிந்த எம் குரவர்
    முடிய நீள் நிரயத்தினில் அழுந்திடு முறைமை
    கடியுமாறு, எனக்கு அருந் தவம் அமைகுறு கருமம்,
    அடிகள்! சாற்றுக என்றலும், அந்தணன் அறைவான்: 5-13

  800. வையம் ஆளுடை மன்னவர் மன்னவ! மடிந்தோர்
    உய்ய, நீள் தவம் ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கே,
    செய்ய நாள் மலர்க் கிழவனை நோக்கி, நீ செய்தி;
    நையல்! என்று இனிது உரைத்தனன், நவை அறு முனிவன், 5-14

  801. ஞாலம் யாவையும் சுமந்திரன் தன்வயின் நல்கி,
    கோலும் மா தவத்து இமகிரி மருங்கினில் குறுகி,
    காலம் ஓர் பதினாயிரம் அருந் தவம் கழிப்ப,
    மூல நான்மறைக் கிழவனும் வந்து, இவை மொழிவான்: 5-15

  802. நின் பெருந் தவம் வியந்தனம்; நினது நீள் குரவர்,
    முன்பு இறந்தனர், அருந் தவன் முனிவின்; ஆதலினால்,
    மன் பெரும் புவிஅதனில், வான் நதி கடிது அணுகி,
    என்பு தோயுமேல், இருங் கதி பெறுவர் என்று இசைத்தான். 5-16

  803. மாக மா நதி புவியிடை நடக்கின், மற்று அவள்தன்
    வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு அன்றி வேறு அரிதால்;
    தோகை பாகனை நோக்கி, நீ அருந்தவம் தொடங்கு என்று
    ஏகினான், உலகு அனைத்தும் எவ் உயிர்களும் ஈன்றான். 5-17

  804. மங்கை பாகனை நோக்கி, முன் மொழிந்தன வருடம்
    தங்கு மா தவம் புரிதலும், தழல் நிறக் கடவுள்
    அங்கு வந்து, நின் கருத்தினை முடித்தும் என்று அகன்றான்;
    கங்கையைத் தொழ, காலம் ஐயாயிரம் கழித்தான். 5-18

  805. ஒரு மடக் கொடி ஆகி வந்து, உனது மா தவம் என்?
    பொரு புனல் கொடி வரின், அவள் வேகம் ஆர் பொறுப்பார்?
    அரன் உரைத்த சொல் வினோதம்; மற்று இன்னும் நீ அறிந்து,
    பெருகு நல் தவம் புரிக! என, வர நதி பெயர்ந்தாள். 5-19

  806. கரந்தை, மத்தமோடு, எருக்கு அலர், கூவிளை, கடுக்கை,
    நிரந்த பொற் சடை நின் மலக் கொழுந்தினை நினையா,
    அரந்தை உற்றவன், இரண்டரை ஆயிரம் ஆண்டு
    புரிந்து நல் தவம் பொலிதர, வரை உறை புனிதன், 5-20

  807. எதிர்ந்து, நின் நினைவு என்? என, இறைஞ்சி, எம் பெரும!
    அதிர்ந்து, கங்கை ஈது அறைந்தனள் என்றலும், அஞ்சேல்!
    பிதிர்ந்திடா வகை காத்தும் என்று ஏகிய பின்றை,
    முதிர்ந்த மா தவம் இரண்டரை ஆயிரம் முடித்தான். 5-21

  808. பெருகும் நீரொடு, பூதியும், வாயுவும், பிறங்கு
    சருகும், வெங் கதிர் ஒளியையும், துய்த்து, மற்று எதையும்
    பருகல் இன்றியே, முப்பதினாயிரம் பருவம்,
    உருகு காதலின் மன்னவன் அருந் தவம் உழந்தான். 5-22

  809. உந்தி அம்புயத்து உதித்தவன் உறைதரும் உலகும்
    இந்திராதியர் உலகமும், நடுக்குற இரைத்து,
    வந்து தோன்றினள் வர நதி; மலைமகள் கொழுநன்
    சிந்திடாது, ஒரு சடையினில் கரந்தனன் சேர. 5-23

  810. புல் நுனித் தரு பனி என, வர நதி, புனிதன்
    சென்னியில் சுரந்து ஒளித்தலும், வணங்கினன், திகைத்து,
    மன்னன் நிற்றலும், வருந்தல்; நம் சடையள், வான் நதி இன்று
    என்ன விட்டனன், ஒரு சிறிது; அவனி போந்து இழிந்தாள். 5-24

  811. இழிந்த கங்கைமுன், மன்னவன் விரைவொடும் ஏக,
    கழிந்த மன்னவர் கதி பெற முடுகிய கதியால்,
    அழுந்தும் மா தவச் சன்னுவின் வேள்வியை அழிப்ப,
    கொழுந்து விட்டு எரி வெகுளியன், குடங்கையில் கொள்ளா, 5-25

  812. உண்டு உவந்தனன், மறை முனிக் கணங்கள் கண்டு உவப்ப,
    கண்ட வேந்தனும் வணங்கி, முன் நிகழ்ந்தன கழற,
    கொண்டு போக! என, செவிவழிக் கொடுத்தனன்; குதித்து,
    விண்டு நீங்கினர் உடல் உகு பொடியில் மேவினளே. 5-26

  813. நிரையம் உற்று உழல் சகரர்கள் நெடுங் கதி செல்ல,
    விரை மலர் பொழிந்து ஆர்த்தன, விண்ணவர் குழாங்கள்;
    முரைசம் முற்றிய பல்லியம் முறை முறை முழங்க,
    அரைசன், அப்பொழுது, அணி மதில் அயோத்தி மீண்டு அடைந்தான். 5-27

  814. அண்ட கோளகைப் புறத்தது ஆய், அகிலம் அன்று அளந்த
    புண்டரீக மென் மலரடிப் பிறந்து, பூமகனார்
    கொண்ட தீர்த்தம் ஆய், பகிரதன் தவத்தினால் கொணர,
    மண்தலத்து வந்து அடைந்தது, இம் மா நதி, மைந்த! 5-28

  815. சகரர்தம் பொருட்டு அருந் தவம் பெரும் பகல் தள்ளி,
    பகிரதம் கொணர்ந்திடுதலால், பகிரதி ஆகி,
    மகிதலத்திடைச் சன்னுவின் செவி வழி வரலால்,
    நிகர் இல், சானவி எனப் பெயர் படைத்தது, இந் நீத்தம். 5-29

  816. என்று கூறலும், வியப்பினோடு உவந்தனர், இறைஞ்சி,
    சென்று தீர்ந்தனர் கங்கையை; விசாலை வாழ் சிகரக்
    குன்றுபோல் புயத்து அரசன் வந்து, அடி இணை குறுக,
    நின்று, நல் உரை விளம்பி, மற்று அவ் வயின் நீங்கா, 5-30

  817. மது மலைந்த் வெண் தரளமும், (வயிரமும்), மணியும்,
    கதிர் வளம் செயும் பவளமும், கழுத்திடைக் காட்டி,
    எதிர் மலைந்த பைங் கூந்தலை இன வண்டு (நணுக),
    புது மணம் செயும் மடந்தையர் போன்றன-பூகம். 7-1

  818. அந்த இந்திரனைக் கண்ட அமரர்கள், பிரமன் முன்னா
    வந்து, கோதமனை வேண்ட, மற்று அவை தவிர்த்து, மாறாச்
    சிந்தையின் முனிவு தீர்ந்து, சிறந்த ஆயிரம் கண் ஆக்க,
    தம் தமது உலகு புக்கார்; தையலும் கிடந்தாள், கல் ஆய். 23-1

  819. வண்ண வார் குழலினாட்கும் வானவர் தமக்கும் ஆகேன்;
    எண்ணி நான் செய்த குற்றம், முனிவ! நீ பொறுத்தி என்ன,
    பண்ணிய உறுப்பில் கோடல் பத்து நூறு அவையும் போக,
    அண்ணிய விண்ணில் ஆளிக்கு ஆயிர நயனம் என்றான். 23-2

  820. பால காண்டம்

    10. மிதிலைக் காட்சிப் படலம்



  821. மிதிலையில் அசைந்தாடிய கொடிகள்

  822. மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து,
    செய்யவள் இருந்தாள் என்று, செழு மணிக் கொடிகள் என்னும்
    கைகளை நீட்டி அந்தக் கடி நகர், கமலச் செங் கண்
    ஐயனை, ஒல்லை வா என்று அழைப்பது போன்றது அம்மா! 1

  823. நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணிக் கொடிகள் எல்லாம்,
    தரம் பிறர் இன்மை உன்னி, தருமமே தூது செல்ல,
    வரம்பு இல் பேர் அழகினாளை, மணம் செய்வான் வருகின்றான் என்று,
    அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின், ஆடக் கண்டார். 2

  824. பகல் கதிர் மறைய, வானம் பாற்கடல் கடுப்ப, நீண்ட
    துகில் கொடி, மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி நின்ற,
    முகில்-குலம் தடவும் தோறும் நனைவன, முகிலின் சூழ்ந்த
    அகில்-புகை கதுவும் தோறும் புலர்வன, ஆடக் கண்டார். 3

  825. மூவரும் மிதிலையினுள் புகுதல்

  826. ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து, அவயவம் அமைக்கும் தன்மை
    யாது? எனத் திகைக்கும் அல்லால், மதனற்கும் எழுத ஒண்ணாச்
    சீதையைத் தருதலாலே, திருமகள் இருந்த செய்ய
    போது எனப் பொலிந்து தோன்றும், பொன் மதில், மிதிலை புக்கார். 4

  827. விழுமிய வீதிகளைக் கடந்து செல்லுதல்

  828. சொற்கலை முனிவன் உண்ட சுடர் மணிக் கடலும், துன்னி
    அல் கடந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல,
    வில் கலை நுதலினாரும், மைந்தரும், வெறுத்து நீத்த
    பொன் கலன் கிடந்த மாட நெடுந் தெருஅதனில் போனார். 5

  829. தாறு மாய் தறுகண் குன்றம் தட மத அருவி தாழ்ப்ப,
    ஆறும் ஆய், கலின மா விலாழியால் அழிந்து, ஓர் ஆறு ஆய்,
    சேறும் ஆய், தேர்கள் ஓடத் துகளும் ஆய், ஒன்றோடு ஒன்று
    மாறு மாறு ஆகி, வாளா கிடக்கிலா மறுகில், சென்றார். 6

  830. தண்டுதல் இன்றி ஒன்றி, தலைத்தலைச் சிறந்த காதல்
    உண்டபின், கலவிப் போரின் ஒசிந்த மென் மகளிரேபோல்,
    பண் தரு கிளவியார்தம் புலவியில் பரிந்த கோதை,
    வண்டொடு கிடந்து, தேன் சோர், மணி நெடுந் தெருவில் சென்றார். 7

  831. வீதிகளில் கண்ட காட்சிகள்

  832. நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல்,
    தைவரு மகர வீணை தண்ணுமை தழுவித் தூங்க,
    கை வழி நயனம் செல்ல, கண் வழி மனமும் செல்ல,
    ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார். 8

  833. பூசலின் எழுந்த வண்டு மருங்கினுக்கு இரங்கிப் பொங்க,
    மாசு உறு பிறவி போல வருவது போவது ஆகி,
    காசு அறு பவளச் செங் காய் மரகதக் கமுகு பூண்ட
    ஊசலில், மகளிர், மைந்தர் சிந்தையொடு உலவக் கண்டார். 9

  834. வரப்பு அறு மணியும், பொன்னும், ஆரமும், கவரி வாலும்,
    சுரத்திடை அகிலும், மஞ்ஞைத் தோகையும், தும்பிக் கொம்பும்,
    குரப்பு அணை நிரப்பும் மள்ளர் குவிப்புற, கரைகள்தோறும்
    பரப்பிய பொன்னி அன்ன ஆவணம் பலவும் கண்டார். 10

  835. வள் உகிர்த் தளிர்க் கை நோவ மாடகம் பற்றி, வார்ந்த
    கள் என நரம்பு வீக்கி, கையொடு மனமும் கூட்டி,
    வெள்ளிய முறுவல் தோன்ற, விருந்து என மகளிர் ஈந்த
    தெள் விளிப் பாணித் தீம் தேன் செவி மடுத்து, இனிது சென்றார். 11

  836. கொட்பு உறு கலினப் பாய் மா, குலால் மகன் முடுக்கி விட்ட
    மட் கலத் திகிரி போல, வாளியின் வருவ, மேலோர்
    நட்பினின் இடையறாவாய், ஞானிகள் உணர்வின் ஒன்றாய்,
    கட்புலத்து இனைய என்று தெரிவு இல, திரியக் கண்டார். 12

  837. தயிர் உறு மத்தின் காம சரம் பட, தலைப்பட்டு ஊடும்
    உயிர் உறு காதலாரின், ஒன்றை ஒன்று ஒருவகில்லா,
    செயிர் உறு மனத்த ஆகி, தீத் திரள் செங் கண் சிந்த,
    வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார். 13

  838. வாளரம் பொருத வேலும், மன்மதன் சிலையும், வண்டின்
    கேளொடு கிடந்த நீலச் சுருளும், செங் கிடையும், கொண்டு,
    நீள் இருங் களங்கம் நீக்கி, நிரை மணி மாட நெற்றிச்
    சாளரம்தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார். 14

  839. பளிக்கு வள்ளத்து வாக்கும் பசு நறுந் தேறல் மாந்தி,
    வெளிப்படு நகைய ஆகி, வெறியன மிழற்றுகின்ற,
    ஒளிப்பினும், ஒளிக்க ஒட்டா ஊடலை உணர்த்துமா போல்,
    களிப்பினை உணர்த்தும் செவ்விக் கமலங்கள் பலவும் கண்டார். 15

  840. மெய் வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள்ளும்
    பை அரவு அல்குலார் தம் உள்ளமும், பளிங்கும், போல,
    மை அரி நெடுங் கண் நோக்கம் படுதலும் கருகி, வந்து
    கை புகின் சிவந்து, காட்டும் கந்துகம் பலவும் கண்டார். 16

  841. கடகமும், குழையும், பூணும், ஆரமும், கலிங்க நுண் நூல்
    வடகமும், மகர யாழும் வட்டினி கொடுத்து, வாசத்
    தொடையல் அம் கோதை சோர, பளிக்கு நாய் சிவப்பத் தொட்டு;
    படை நெடுங் கண்ணார் ஆடும் பண்ணைகள் பலவும் கண்டார். 17

  842. பங்கயம், குவளை, ஆம்பல், படர் கொடி வள்ளை, நீலம்,
    செங் கிடை, தரங்கம், கெண்டை, சினை வரால், இனைய தேம்ப;
    தங்கள் வேறு உவமை இல்லா அவயவம் தழுவி, சாலும்
    மங்கையர் விரும்பி ஆடும் வாவிகள் பலவும் கண்டார். 18

  843. இயங்கு உறு புலன்கள் அங்கும் இங்கும் கொண்டு ஏக ஏகி,
    மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வு இது என்ன,
    புயங்களில் கலவைச் சாந்தும், புணர் முலைச் சுவடும் நீங்கா,
    பயம் கெழு குமரர் வட்டு-ஆட்டு ஆடு இடம் பலவும் கண்டார். 19

  844. வெஞ் சினம் உருவிற்று என்னும் மேனியர், வேண்டிற்று ஈயும்
    நெஞ்சினர், ஈசன் கண்ணில் நெருப்பு உறா அனங்கன் அன்னார்,
    செஞ் சிலைக் கரத்தர், மாதர் புலவிகள் திருத்திச் சேந்த
    குஞ்சியர், சூழ நின்ற மைந்தர் தம் குழாங்கள் கண்டார். 20

  845. பாகு ஒக்கும் சொல் பைங் கிளியோடும் பல பேசி,
    மாகத்து உம்பர் மங்கையர் நாண மலர் கொய்யும்
    தோகைக் கொம்பின் அன்னவர்க்கு அன்னம் நடை தோற்றுப்
    போகக் கண்டு, வண்டுஇனம் ஆர்க்கும் பொழில் கண்டார். 21

  846. அரண்மனையைச் சூழ்ந்துள்ள அகழியை அடைந்தனர்

  847. உம்பர்க்கு ஏயும் மாளிகை ஒளி நிழல் பாய,
    இம்பர்த் தோன்றும் நாகர்தம் நாட்டின் எழில் காட்டி,
    பம்பிப் பொங்கும் கங்கையின் ஆழ்ந்த, படை மன்னன்
    அம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும், அகழ் கண்டார். 22

  848. கன்னிமாடத்தில் நின்ற சீதையின் பேர் எழில்

  849. பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவேபோல்
    தென் உண் தேனின் தீம் சுவை, செஞ் சொற் கவி இன்பம்-
    கன்னிம் மாடத்து உம்பரின் மாடே, களி பேடோடு
    அன்னம் ஆடும் முன் துறை கண்டு, அங்கு, அயல் நின்றாள். 23

  850. செப்பும்காலை, செங் கமலத்தோன் முதல் யாரும்,
    எப் பெண்பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும்,
    அப் பெண் தானே ஆயின போது, இங்கு, அயல் வேறு ஓர்
    ஒப்பு எங்கே கொண்டு, எவ் வகை நாடி, உரை செய்வேம்? 24

  851. உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம் வைக்கும்
    கமையாள் மேனி கண்டவர், காட்சிக் கரை காணார்,
    இமையா நாட்டம் பெற்றிலம் என்றார்; இரு கண்ணால்
    அமையாது என்றார்-அந்தர வானத்தவர் எல்லாம். 25

  852. வென்று அம் மானை, தார் அயில் வேலும் கொலை வாளும்
    பின்ற, மானப் பேர் கயல் அஞ்ச, பிறழ் கண்ணாள்,
    குன்றம் ஆட, கோவின் அளிக்கும் கடல் அன்றி,
    அன்று அம் மாடத்து உம்பர் அளிக்கும் அமுது ஒத்தாள். 26

  853. பெருந்தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு பெண்ணைத்
    தரும், தான் என்றால், நான்முகன் இன்னும் தரலாமே?-
    அருந்தா அந்தத் தேவர் இரந்தால், அமிழ்து என்னும்
    மருந்தே அல்லாது, என் இனி நல்கும் மணி ஆழி? 27

  854. அனையாள் மேனி கண்டபின், அண்டத்து அரசு ஆளும்
    வினையோர் மேவும் மேனகை ஆதி மிளிர் வேற் கண்
    இனையோர், உள்ளத்து இன்னலினோர்; தம் முகம் என்னும்
    பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே? 28

  855. மலர்மேல் நின்று இம் மங்கை இவ் வையத்திடை வைக,
    பல காலும் தம் மெய் நனி வாடும்படி நோற்றார்
    அலகு ஓவு இல்லா அந்தணரோ? நல் அறமேயோ?
    உலகோ? வானோ? உம்பர்கொலோ? ஈது உணரேமால்! 29

  856. தன் நேர் இல்லா மங்கையர், செங்கைத் தளிர் மானே!
    அன்னே! தேனே! ஆர் அமிழ்தே! என்று அடி போற்றி,
    முன்னே, முன்னே, மொய்ம் மலர் தூவி, முறை சார,
    பொன்னே சூழும் பூவின் ஒதுங்கிப் பொலிகின்றாள். 30

  857. பொன் சேர் மென் கால் கிண்கிணி, ஆரம், புனை ஆரம்,
    கொன் சேர் அல்குல் மேகலை, தாங்கும் கொடி அன்னார்
    தன் சேர் கோலத்து இன் எழில் காண, சத கோடி
    மின் சேவிக்க மின் அரசு என்னும்படி நின்றாள். 31

  858. கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவையெல்லாம்
    வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழி கொண்டாள்;
    சொல்லும் தன்மைத்து அன்று அது; குன்றும், சுவரும், திண்
    கல்லும், புல்லும், கண்டு உருக, பெண் கனி நின்றாள். 32

  859. வெங் களி விழிக்கு ஒரு விழவும் ஆய், அவர்
    கண்களின் காணவே களிப்பு நல்கலால்,
    மங்கையர்க்கு இனியது ஓர் மருந்தும் ஆயவள்,
    எங்கள் நாயகற்கு, இனி, யாவது ஆம்கொலோ? 33

  860. இழைகளும் குழைகளும் இன்ன, முன்னமே,
    மழை பொரு கண் இணை மடந்தைமாரொடும்
    பழகிய எனினும், இப் பாவை தோன்றலால்,
    அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே! 34

  861. இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டு, காதல் கொள்ளுதல்

  862. எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
    கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
    உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
    அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். 35

  863. நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை
    ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன;
    வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
    தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே. 36

  864. பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து,
    ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்,
    வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்,
    இருவரும் மாறிப் புக்கு, இதயம் எய்தினார். 37

  865. மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்,
    ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார் -
    கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
    பிரிந்தவர் கூடினால், பேசல் வேண்டுமோ? 38

  866. இராமன் முனிவருடன் போக அவன் நினைவால் சீதை ஓவியப்பாவைபோல் நிற்றல்

  867. அந்தம் இல் நோக்கு இமை அணைகிலாமையால்,
    பைந்தொடி, ஓவியப் பாவை போன்றனள்;
    சிந்தையும், நிறையும், மெய்ந் நலனும், பின் செல,
    மைந்தனும், முனியொடு மறையப் போயினான். 39

  868. சீதையின் காதல் நோய்

  869. பிறை எனும் நுதலவள் பெண்மை என் படும்?-
    நறை கமழ் அலங்கலான் நயன கோசரம்
    மறைதலம், மனம் எனும் மத்த யானையின்
    நிறை எனும் அங்குசம் நிமிர்ந்து போயதே! 40

  870. மால் உற வருதலும், மனமும் மெய்யும், தன்
    நூல் உறு மருங்குல்போல், நுடங்குவாள்; நெடுங்
    கால் உறு கண் வழிப் புகுந்த காதல் நோய்,
    பால் உறு பிரை என, பரந்தது எங்குமே. 41

  871. நோம்; உரும் நோய் நிலை நுவலகிற்றிலள்;
    ஊமரின், மனத்திடை உன்னி, விம்முவாள்;
    காமனும், ஒரு சரம் கருத்தின் எய்தனன் -
    வேம் எரிஅதனிடை விறகு இட்டென்னவே. 42

  872. நிழல் இடு குண்டலம் அதனின், நெய் இடா,
    அழல் இடா, மிளிர்ந்திடும் அயில் கொள் கண்ணினாள்,
    சுழலிடு கூந்தலும் துகிலும் சோர்தர,
    தழல் இடு வல்லியே போல, சாம்பினான். 43

  873. தழங்கிய கலைகளும், நிறையும், சங்கமும்,
    மழுங்கிய உள்ளமும், அறிவும், மாமையும்,
    இழந்தவள்-இமையவர் கடைய, யாவையும்,
    வழங்கிய கடல் என-வறியள் ஆயினாள். 44

  874. வருந்திச் சோர்ந்த சீதையைத் தோழியர் மலர்ப்படுக்கையில் சேர்த்தல்

  875. கலம் குழைந்து உக, நெடு நானும் கண் அற,
    நலம் குழைதர, நகில்முகத்தின் ஏவுண்டு,
    மலங்கு உழை என, உயிர் வருந்திச் சோர்தர,
    பொலங் குழை மயிலைக் கொண்டு, அரிதின் போயினார். 45

  876. காதொடும் குழை பொரு கயற் கண் நங்கை தன்
    பாதமும் கரங்களும் அனைய பல்லவம்
    தாதொடும் குழையொடும் அடுத்த, தண் பனிச்
    சீத நுண் துளி, மலர் அமளிச் சேர்த்தினார். 46

  877. காதல் நோயால் துயருற்ற சீதையின் நிலை

  878. தாள் அறா நறு மலர் அமளி நண்ணினாள்-
    பூளை வீ புரை பனிப் புயற்குப் தேம்பிய
    தாள தாமரைமலர் ததைந்த பொய்கையும்,
    வாள் அரா நுங்கிய மதியும், போலவே. 47

  879. மலை முகட்டு இடத்து உகு மழைக்கண் ஆலிபோல்,
    முலை முகட்டு உதிர்ந்தன, நெடுங் கண் முத்துஇனம்;
    சிலை நுதற்கடை உறை செறிந்த வேர்வு, தன்
    உலை முகப் புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்ததே. 48

  880. கம்பம் இல் கொடு மனக் காம வேடன் கை
    அம்பொடு சோர்வது ஓர் மயிலும் அன்னவள்,
    வெம்புறு மனத்து அனல் வெதுப்ப, மென் மலர்க்
    கொம்பு என, அமளியில் குழைந்து சாய்ந்தனள். 49

  881. சொரிந்தன நறு மலர் சுருக் கொண்டு ஏறின;
    பொரிந்தன கலவைகள், பொரியின் சிந்தின;
    எரிந்த வெங் கனல் சுட, இழையில் கோத்த நூல்
    பரிந்தன; கரிந்தன, பல்லவங்களே. 50

  882. நோய் முதல் அறியாது, தாதியர் முதலியோர் தவித்தல்

  883. தாதியர், செவிலியர், தாயர், தவ்வையர்,
    மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கின்ர்;
    யாதுகொல் இது? என, எண்ணல் தேற்றலர்;
    போதுடன் அயினி நீர் சுழற்றிப் போற்றினர். 51

  884. காதல் நோயால் துயருற்ற சீதையின் தோற்றம்

  885. அருகில் நின்று அசைகின்ற ஆலவட்டக் கால்
    எரியினை மிகுத்திட, இழையும், மாலையும்,
    கரிகுவ, தீகுவ, கனல்வ, காட்டலால்,
    உருகு பொற் பாவையும் ஒத்துத் தோன்றினாள். 52

  886. அல்லினை வகுத்தது ஓர் அலங்கற் காடு எனும்;
    வல் எழு; அல்லவேல், மரகதப் பெருங்
    கல் எனும், இரு புயம்; கமலம் கண் எனும்;
    வில்லொடும் இழிந்தது ஓர் மேகம் என்னுமால். 53

  887. நெருக்கி உள் புகுந்து, அரு நிறையும் பெண்மையும்
    உருக்கி, என் உயிரொடு உண்டு போனவன்
    பொருப்பு உறழ் தோள் புணர் புண்ணியத்தது
    கருப்பு வில் அன்று; அவன் காமன் அல்லனே! 54

  888. உரைசெயின், தேவர்தம் உலகு உளான் அலன்-
    விரை செறி தாமரை இமைக்கும் மெய்ம்மையால்;
    வரி சிலைத் தடக் கையன், மார்பின் நூலினன்,
    அரசிளங் குமரனே ஆகல்வேண்டுமால். 55

  889. பெண் வழி நலனொடும், பிறந்த நாணொடும்,
    எண்வழி உணர்வும், நான் எங்கும் காண்கிலேன் -
    மண் வழி நடந்து, அடி வருந்தப் போனவன்,
    கண் வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம்? 56

  890. இராமனை நினைத்து சீதை உருகுதல்

  891. இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,
    சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,
    சுந்தர மணி வரை தோளுமே, அல;
    முந்தி, என் உயிரை, அம் முறுவல் உண்டதே! 57

  892. படர்ந்து ஒளி பரந்து உயிர் பருகும் ஆகமும்,
    தடந் தரு தாமரைத் தாளுமே, அல;
    கடம் தரு மா மதக் களி நல் யானைபோல்,
    நடந்தது, கிடந்தது, என் உள்ளம் நண்ணியே. 58

  893. பிறந்துடை நலம் நிறை பிணித்த எந்திரம்,
    கறங்குபு திரியும் என் கன்னி மா மதில்
    எறிந்த அக் குமரனை, இன்னும், கண்ணிற் கண்டு,
    அறிந்து, உயிர் இழக்கவும் ஆகுமேகொலாம்? 59

  894. என்று இவை இனையன விளம்பும் ஏல்வையின்,
    நின்றனன், இவண் எனும்; நீங்கினான் எனும்;
    கன்றிய மனத்து உறு காம வேட்கையால்,
    ஒன்று அல, பல நினைந்து, உருகும் காலையே. 60

  895. அந்திமாலையின் தோற்றமும்

  896. அன்ன மென் நடையவட்கு அமைந்த காமத் தீ,
    தன்னையும் சுடுவது தரிக்கிலான் என,
    நல் நெடுங் கரங்களை நடுக்கி, ஓடிப் போய்,-
    முன்னை வெங் கதிரவன் - கடலில் மூழ்கினான். 61

  897. விரி மலர்த் தென்றல் ஆம் வீசு பாசமும்,
    எரி நிறச் செக்கரும், இருளும், காட்டலால்,
    அரியவட்கு அனல் தரும் அந்திமாலையாம்
    கரு நிறச் செம் மயிர்க் காலன் தோன்றினான். 62

  898. மீது அறை பறவை ஆம் பறையும், கீழ் விளி
    ஓத மென் சிலம்பொடும், உதிரச் செக்கரும்,
    பாதக இருள் செய் கஞ்சுகமும், பற்றலால்,
    சாதகர் என்னவும் தகைத்து - அம் மாலையே. 63

  899. மாலைப் பொழுதில் சீதையின் மன நிலையும் புலம்பலும்

  900. கயங்கள் என்னும் கனல் தோய்ந்து, கடி நாள் மலரின் விடம் பூசி,
    இயங்கு தென்றல் மன்மதவேள் எய்த புண்ணினிடை நுழைய,
    உயங்கும் உணர்வும், நல் நலமும், உருகிச் சோர்வாள் உயிர் உண்ண
    வயங்கு மாலை வான் நோக்கி, இதுவோ கூற்றின் வடிவு? என்றாள். 64

  901. கடலோ? மழையோ? முழு நீலக் கல்லோ? காயா நறும் போதோ?
    படர் பூங் குவளை நாள் மலரோ? நீலோற்பலமோ? பானலோ?-
    இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ? என்று தளர்வாள்முன்,
    மடல் சேர் தாரான் நிறம் போலும் அந்தி மாலை வந்ததுவே! 65

  902. மை வான் நிறத்து, மீன் எயிற்று, வாடை உயிர்ப்பின், வளர் செக்கர்ப்
    பை வாய் அந்திப் பட அரவே! என்னை வளைத்துப் பகைத்தியால்?
    எய்வான் ஒருவன் கை ஓயான்; உயிரும் ஒன்றே; இனி இல்லை;
    உய்வான் உற, இப் பழி பூண, உன்னோடு எனக்குப் பகை உண்டோ ? 66

  903. ஆலம் உலகில் பரந்ததுவோ? ஆழி கிளர்ந்ததோ? அவர்தம்
    நீல நிறத்தை எல்லோரும் நினைக்க, அதுவாய் நிரம்பியதோ?
    காலன் நிறத்தை அஞ்சனத்தில் கலந்து குழைத்து, காயத்தின்
    மேலும், நிலத்தும், மெழுகியதோ?-விளைக்கும் இருலாய் விளைந்ததுவே! 67

  904. வெளி நின்றவரோ போய் மறைந்தார்; விலக்க, ஒருவர்தமைக் காணேன்;
    எளியள், பெண் என்று இரங்காதே, எல்லி யாமத்து இருளூடே,
    ஒளி அம்பு எய்யும் மன்மதனார், உனக்கு இம் மாயம் உரைத்தாரோ?
    அளியென் செய்த தீவினையே! அந்தி ஆகி வந்தாயோ? 68

  905. நெய் விளக்கு அகற்றி, மணி விளக்கு அமைத்துத் தோழியர் உபசரித்தல்

  906. ஆண்டு, அங்கு, அனையாள், இனைய நினைந்து அழுங்கும் ஏல்வை, அகல் வானம்
    தீண்ட நிமிர்ந்த பெருங் கோயில், சீத மணியின் வேதிகைவாய்,
    நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய என்று, அங்கு, அவை நீக்கி,
    தூண்டல் செய்யா மணி விளக்கின் சுடரால், இரவைப் பகல் செய்தார். 69

  907. திங்களின் தோற்றம்

  908. பெருந் திண் நெடு மால் வரை நிறுவி, பிணித்த பாம்பின் மணித் தாம்பின்
    விரிந்த திவலை பொதிந்த மணி விசும்பின் மீனின் மேல் விளங்க,
    இருந்த அமரர் கலக்கிய நாள், அமுதம் நிறைந்த பொற்கலசம்
    இருந்தது இடை வந்து எழுந்தது என எழுந்தது - ஆழி வெண் திங்கள். 70

  909. வண்டு ஆய், அயன் நான்மறை பாட, மலர்ந்தது ஒரு தாமரைப் போது,
    பண்டு ஆலிலையின்மிசைக் கிடந்து, பாரும் நீரும், பசித்தான்போல்,
    உண்டான் உந்திக் கடல் பூத்தது; ஓதக் கடலும், தான் வேறு ஓர்
    வெண் தாமரையின் மலர் பூத்தது ஒத்தது - ஆழி வெண் திங்கள். 71

  910. புள்ளிக் குறி இட்டென ஒள் மீன் பூத்த வானம் பொலி கங்குல்
    நள்ளில், சிறந்த இருட் பிழம்பை நக்கி நிமிரும் நிலாக் கற்றை, -
    கிள்ளைக் கிளவிக்கு என்னாம்கொல்?-கீழ்பால் திசையின்மிசை வைத்த
    வெள்ளிக் கும்பத்து இளங் கமுகின் பாளை போன்று விரிந்துளதால், 72

  911. வண்ண மாலை கைபரப்பி, உலகை வளைந்த இருள் எல்லாம்
    உண்ண எண்ணி, தண் மதியத்து உதயத்து எழுந்த நிலாக் கற்றை-
    விண்ணும் மண்ணும் திசை அனைத்தும் விழுங்கிக் கொண்ட, விரி நல் நீர்ப்
    பண்ணை வெண்ணெய்ச் சடையன் தன் புகழ்போல்-எங்கும் பரந்துளதால், 73

  912. நீத்தம் அதனில் முளைத்து எழுந்த நெடுவெண் திங்கள் எனும் தச்சன்,
    மீ, தன் கரங்கள் அவை பரப்பி, மிகு வெண் நிலவு ஆம் வெண் சுதையால்,
    காத்த கண்ணன் மணி உந்திக் கமல நாளத்திடைப் பண்டு
    பூத்த அண்டம் பழையது என்று, புதுக்குவானும் போன்றுளதால். 74

  913. தாமரை மலர் குவிய, ஆம்பல் அலர்தல்

  914. விரை செய் கமலப் பெரும் போது, விரும்பிப் புகுந்த திருவினொடும்
    குரை செய் வண்டின் குழாம் இரிய, கூம்பிச் சாம்பிக் குவிந்துளதால்;
    உரை செய் திகிரிதனை உருட்டி, ஒரு கோல் ஓச்சி, உலகு ஆண்ட
    அரைசன் ஒதுங்க, தலை எடுத்த குறும்பு போன்றது, அரக்கு ஆம்பல். 75

  915. சீதை நிலவை பழித்துரைத்தல்

  916. நீங்கா மாயையவர் தமக்கு நிறமே தோற்றுப் புறமே போய்,
    ஏங்காக் கிடக்கும் எறி கடற்கும், எனக்கும், கொடியை ஆனாயே-
    ஓங்கா நின்ற இருளாய் வந்து, உலகை விழுங்கி, மேன்மேலும்
    வீங்கா நின்ற கர் நெருப்பினிடையே எழுந்த வெண் நெருப்பே! 76

  917. கொடியை அல்லை; நீ யாரையும் கொல்கிலாய்;
    வடு இல் இன் அமுதத்தொடும், வந்தனை,
    பிடியின் மென் நடைப் பெண்ணொடு; என்றால், எனைச்
    சுடுதியோ?-கடல் தோன்றிய திங்களே! 77

  918. காதல் நோயால் சீதை பட்ட பாடு

  919. மீது மொய்த்து எழு வெண் நிலவின் கதிர்
    மோது மத்திகை மென் முலைமேல் பட,
    ஓதிமப் பெடை வெங் கனல் உற்றென,
    போது மொய்த்த அமளிப் புரண்டாள் அரோ! 78

  920. நீக்கம் இன்றி நிமிர்ந்த நிலாக் கதிர்
    தாக்க, வெந்து தளர்ந்து சரிந்தனள்;
    சேக்கை ஆகி மலர்ந்த செந்தாமரைப்
    பூக்கள் பட்டது அப் பூவையும் பட்டனள். 79

  921. வாச மென் கலவைக் களி வாரி, மேல்
    பூசப் பூசப் புலர்ந்து புழுங்கினள்;
    வீச வீச வெதும்பினள், மென் முலை;-
    ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம்கொலோ? 80

  922. மலர்ப் படுக்கை கரிய, சேடியர் மேலும் மலர் கொண்டு வந்து குவித்தல்

  923. தாயரின் பரி சேடியர், தாது உகு
    வீ, அரித் தளிர், மெல் அணை, மேனியில்
    காய் எரிக் கரியக் கரிய, கொணர்ந்து,
    ஆயிரத்தின் இரட்டி அடுக்கினார். 81

  924. கன்னி நல் நகரில், கமழ் சேக்கையுள்,
    அன்னம், இன்னணம் ஆயினள்; ஆயவள்,
    மின்னின் மின்னிய, மேனி கண்டான் எனச்
    சொன்ன அண்ணலுக்கு உற்றது சொல்லுவாம். 82

  925. மிகைப் பாடல்கள்

  926. இன்ன பல் வளங்கள் எல்லாம் இனிதுற நோக்கி, யார்க்கும்
    முன்னவன் ஆய தேவும், முனிவனும், இளைய கோவும்,
    பொன்னகர் இறையும் மற்றைப் பூதலத்து அரசும் ஒவ்வா
    மன்னவன் சனகன் கோயில் மணி மதில் புறத்தைச் சேர்ந்தார். 20-1

  927. நங்கையர் விழிக்கு நல் விழவும் ஆய், அவர்
    இங்கிதத்தொடு தொழுது இறைஞ்சும் தேவும் ஆய்,
    அங்கு அவர்க்கு அமுதும் ஆய், வந்த சானகி
    எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்கொலோ? 32-1

  928. தீங்கு செய் அரக்கர் தம் வருக்கம் தீயவும்,
    ஓங்கிய தவங்களும், உலகும், வேதமும்
    தாங்கி மேல் வளரவும், தழைத்த சானகி
    ஆங்கு அவன் வடிவினை அகத்தில் உன்னுவாள். 52-1

  929. அப்புறத்து அலை கடல் அலர்ந்த தாமரை
    ஒப்புற இந்து என்று உதித்த ஒள் அழல்
    வெப்புறு வெங் கதிர் பரப்ப, விண் எலாம்
    கொப்புளங் கொண்டென, உடுக்கள் கூர்ந்தவே. 76-1