MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    Kamba Ramayanam aaraniya kandam Part 2
    கம்பராமாயணம் ஆரணிய காண்டம்
    8. மாரீசன் வதைப் படலம்
    9. இராவணன் சூழ்ச்சிப் படலம்
    10. சடாயு உயிர் நீத்த படலம்
    11. அயோமுகிப் படலம்
    12. கவந்தன் படலம்
    13. சவரி பிறப்பு நீங்கு படலம்

  1. ஆரணிய காண்டம்

    8. மாரீசன் வதைப் படலம்


    மாரீசன் இராவணன் வந்த காரணத்தை வினவுதல்

  2. இருந்த மாரீசன், அந்த இராவணன் எய்தலோடும்,
    பொருந்திய பயத்தன், சிந்தை பொருமுற்று வெருவுகின்றான்,
    கருந் தட மலை அன்னானை எதிர்கொண்டு, கடன்கள் யாவும்
    திருந்திய செய்து, செவ்வித் திருமுகம் நோக்கிச் செப்பும். 1

  3. சந்த மலர்த் தண் கற்பக நீழல் தலைவற்கும்,
    அந்தகனுக்கும், அஞ்ச அடுக்கும் அரசு ஆள்வாய்!
    இந்த வனத்து, என் இன்னல் இருக்கைக்கு, எளியோரின்
    வந்த கருத்து என்? சொல்லுதி என்றான் - மருள்கின்றான். 2

  4. சீதையைக் கவர இராவணன் மாரீசனின் துணை வேண்டுதல்

  5. ஆனது அனைத்தும்; ஆவி தரித்தேன், அயர்கின்றேன்;
    போனது, பொற்பும்; மேன்மையும் அற்றேன், புகழோடும்,
    யான் அது உனக்கு இன்று எங்ஙன் உரைக்கேன் இனி? என்னா
    வானவருக்கும் நாண அடுக்கும் வசை மன்னோ? 3

  6. வன்மை தரித்தோர் மானிடர்; மற்று அங்கு, அவர் வாளால்
    நின் மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந்தார்;
    என் மரபுக்கும் நின் மரபுக்கும் இதன்மேல் ஓர்
    புன்மை, தெரிப்பின், வேறு இனி எற்றே? புகல்-வேலோய்! 4

  7. திருகு சினத்தார் முதிர மலைந்தார்; சிறியோர், நாள்
    பருகினர் என்றால், வென்றி நலத்தின் பழி அன்றோ?
    இரு கை சுமந்தாய்! இனிதின் இருந்தாய்! இகல் வேல் உன்
    மருகர் உலந்தார்; ஒருவன் மலைந்தான், வரி வில்லால். 5

  8. வெப்பு அழியாது என் நெஞ்சம் உலர்ந்தேன், விளிகின்றேன்;
    ஒப்பு இலர் என்றே, போர் செயல் ஒல்லேன்; உடன் வாழும்
    துப்பு அழி செவ் வாய் வஞ்சியை வௌவ, துணை கொண்டிட்டு,
    இப் பழி நின்னால் தீரிய வந்தேன், இவண் என்றான். 6

  9. மாரீசன் இராவணனுக்கு அறிவுரை பகர்தல்

  10. இச் சொல் அனைத்தும் சொல்லி, அரக்கன், எரிகின்ற
    கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன் என்னக் கிளராமுன்,
    சிச்சி என, தன் மெய்ச் செவி பொத்தி, தெருமந்தான்;
    அச்சம் அகற்றி, செற்ற மனத்தோடு அறைகின்றான்; 7

  11. மன்னா! நீ உன் வாழ்வை முடித்தாய்; மதி அற்றாய்
    உன்னால் அன்று ஈது; ஊழ்வினை என்றே உணர்கின்றேன்;
    இன்னாவேனும் யான் இது உரைப்பென் இதம் என்னா,
    சொன்னான் அன்றே அன்னவனுக்குத் துணிவு எல்லாம். 8

  12. அற்ற கரத்தொடு, உன் தலை நீயே அனல் முன்னில்
    பற்றினை உய்த்தாய்; பற்பல காலம் பசி கூர
    உற்று, உயிர் உள்ளே தேய, உலந்தாய்; பினை அன்றோ
    பெற்றனை செல்வம்? பின் அது இகழ்ந்தால் பெறல் ஆமோ? 9

  13. திறத் திறனாலே, செய் தவம் முற்றித் திரு உற்றாய்,
    மறத் திறனாலோ? சொல்லுதி-சொல் ஆய் மறை வல்லோய்!-
    அறத் திறனாலே எய்தினை அன்றோ? அது, நீயும்
    புறத் திறனாலே பின்னும் இழக்கப் புகுவாயோ? 10

  14. நாரம் கொண்டார், நாடு கவர்ந்தார், நடை அல்லா
    வாரம் கொண்டார், மற்று ஒருவற்காய் மனை வாழும்
    தாரம் கொண்டார், என்ற இவர் தம்மைத் தருமம் தான்
    ஈரும் கண்டாய்; கண்டகர் உய்ந்தார் எவர்? ஐயா! 11

  15. அந்தரம் உற்றான், அகலிகை பொற்பால் அழிவுற்றான்;
    இந்திரன் ஒப்பார், எத்தனையோர் தாம் இழிவுற்றார்?
    செந் திரு ஒப்பார் எத்தனையோர் நின் திரு உண்பார்;
    மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய், மதி அற்றாய். 12

  16. செய்தாயேனும், தீவினையோடும் பழி அல்லால்
    எய்தாது, எய்தாது, எய்தின், இராமன், உலகு ஈன்றான்,
    வைதால் அன்ன வாளிகள் கொண்டு, உன் வழியோடும்
    கொய்தான் அன்றே, கொற்றம் முடித்து, உன் குழு எல்லாம்? 13

  17. என்றால், என்னே? எண்ணலையே நீ, கரன் என்பான்,
    நின் தானைக்கு மேல் உளன் என்னும் நிலை? அம்மா!
    தன் தானைத் திண் தேரொடும் மாளத் தனு ஒன்றால்
    கொன்றான்; முற்றும் கொல்ல, மனத்தில் குறிகொண்டான். 14

  18. வெய்யோர் யாரே, வீர விராதன் துணை வெய்யோர்?
    ஐயோ! போனான், அம்பொடும், உம்பர்க்கு அவன் என்றால்,
    உய்வார் யாரே நம்மில் எனக் கொண்டு, உணர்தோறும்,
    நையாநின்றேன்; நீ இது உரைத்து நலிவாயோ? 15

  19. மாண்டார், மாண்டார்; நீ இனி மாள்வார் தொழில் செய்ய
    வேண்டா, வேண்டா; செய்திடின், உய்வான் விதி உண்டோ?
    ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன்? அறம் நோனார்
    ஈண்டார்; ஈண்டு ஆர் நின்றவர்? எல்லாம் இலர் அன்றோ? 16

  20. எம்பிக்கும் என் அன்னைதனக்கும் இறுதிக்கு ஓர்
    அம்பு உய்க்கும் போர் வில்லிதனக்கும், அயல் நிற்கும்
    தம்பிக்கும், என் ஆண்மை தவிர்ந்தே தளர்வுற்றேன்;
    கம்பிக்கும் என் நெஞ்சு, அவன் என்றே; கவல்கின்றேன். 17

  21. நின்றும், சென்றும், வாழ்வன யாவும் நிலையாவால்;
    பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாய்; புலை ஆடற்கு
    ஒன்றும் உன்னாய்; என் உரை கொள்ளாய்; உயர் செல்வத்து,
    என்றும், என்றும், வைகுதி; ஐயா! இனி; என்றான். 18

  22. இராவணன் சினந்து உரைத்தல்

  23. கங்கை சடை வைத்தவனோடும் கயிலை வெற்பு ஓர்
    அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணித் தோள்
    இங்கு ஓர் மனிதற்கு எளிய என்றனை என, தன்
    வெங் கண் எரிய, புருவம் மீதுற, விடைத்தான். 19

  24. நிகழ்ந்ததை நினைத்திலை; என் நெஞ்சின் நிலை, அஞ்சாது
    இகழ்ந்தனை; எனக்கு இளைய நங்கை முகம் எங்கும்
    அகழ்ந்த வரை ஒப்பு உற அமைத்தவரை, ஐயா!
    புகழ்ந்தனை; தனிப் பிழை; பொறுத்தனென் இது என்றான். 20

  25. மீண்டும் மாரீசன் உரைத்தல்

  26. தன்னை முனிவுற்ற தறுகண் தகவிலோனை
    பின்னை முனிவுற்றிடும் எனத் தவிர்தல் பேணான்,
    உன்னை முனிவுற்று உன் குலத்தை முனிவுற்றாய்;
    என்னை முனிவுற்றிலை; இது என்? என இசைத்தான். 21

  27. எடுத்த மலையே நினையின், ஈசன், இகல் வில்லாய்
    வடித்த மலை, நீ இது, வலித்தி என, வாரிப்
    பிடித்த மலை, நாண் இடை பிணித்து ஒருவன் மேல் நாள்
    ஒடித்த மலை, அண்ட முகடு உற்ற மலை அன்றோ? 22

  28. யாதும் அறியாய்; உரை கொளாய்; இகல் இராமன்
    கோதை புனையாமுன், உயிர் கொள்ளைபடும் அன்றே;
    பேதை மதியால், இஃது ஓர் பெண் உருவம் என்றாய்;
    சீதை உருவோ? நிருதர் தீவினை அது அன்றோ? 23

  29. உஞ்சு பிழையாய் உறவினோடும் என உன்னா,
    நெஞ்சு பறைபோதும்; அது நீ நினையகில்லாய்;
    அஞ்சும் எனது ஆர் உயிர்; அறிந்து அருகு நின்றார்,
    நஞ்சு நுகர்வாரை, இது நன்று எனலும் நன்றோ? 24

  30. ஈசன் முதல் மற்றும் இமையோர் உலகும், மற்றைத்
    தேசம் முதல் முற்றும், ஓர் இமைப்பின் உயிர் தின்ப-
    கோசிகன் அளித்த கடவுட் படை, கொதிப்போடு
    ஆசு இல, கணிப்பு இல, இராமன் அருள் நிற்ப. 25

  31. வேதனை செய் காம விடம் மேலிட மெலிந்தாய்;
    தீது உரை செய்தாய்; இனைய செய்கை சிதைவு அன்றோ?
    மாதுலனும் ஆய், மரபின் முந்தை உற வந்தேன்,
    ஈது உரை செய்தேன்; அதனை, எந்தை! தவிர்க என்றான். 26

  32. மறுத்தால் உன்னை ஒழிப்பேன் என இராவணன் மாரீசனிடம் கூறல்

  33. என்ன, உரை இத்தனையும், எத்தனையும் எண்ணிச்
    சொன்னவனை ஏசின அரக்கர் பதி சொன்னான்;
    அன்னை உயிர் செற்றவனை அஞ்சி உறைகின்றாய்;
    உன்னை, ஒருவற்கு ஒருவன் என்று உணர்கை நன்றோ? 27

  34. திக்கயம் ஒளிப்ப, நிலை தேவர் கெட, வானம்
    புக்கு, அவர் இருக்கை புகைவித்து, உலகம் யாவும்
    சக்கரம் நடத்தும் எனையோ, தயரதன் தன்
    மக்கள் நலிகிற்பர்? இது நன்று வலி அன்றோ? 28

  35. மூஉலகினுக்கும் ஒரு நாயகம் முடித்தேன்;
    மேவலர் கிடைக்கின், இதன்மேல் இனியது உண்டோ?
    ஏவல் செயகிற்றி, எனது ஆணை வழி, எண்ணிக்
    காவல் செய் அமைச்சர் கடன் நீ கடவது உண்டோ? 29

  36. மறுத்தனை எனப் பெறினும், நின்னை வடி வாளால்
    ஒறுத்து, மனம் உற்றது முடிப்பென்; ஒழிகல்லேன்;
    வெறுப்பன கிளத்தலும் இத் தொழிலை விட்டு, என்
    குறிப்பின் வழி நிற்றி, உயிர்கொண்டு உழலின் என்றான். 30

  37. மாரீசன் உடன்படல்

  38. அரக்கன் அஃது உரைத்தலோடும், அறிந்தனன் அடங்கி, நெஞ்சம்
    தருக்கினர் கெடுவர் என்றல் தத்துவ நிலையிற்று அன்றோ?
    செருக்குநர்த் தீர்த்தும் என்பார்தம்மின் ஆர் செருக்கர்? என்னா,
    உருக்கிய செம்பின் உற்ற நீர் என, உரைக்கலுற்றான்: 31

  39. உன் வயின் உறுதி நோக்கி, உண்மையின் உணர்த்தினேன்; மற்று,
    என் வயின் இறுதி நோக்கி, அச்சத்தால் இசைத்தேன் அல்லேன்;
    நன்மையும் தீமை அன்றே, நாசம் வந்து உற்ற போது?
    புன்மையின் நின்ற நீராய்! செய்வது புகல்தி என்றான். 32

  40. இராவணனின் சூழ்ச்சி

  41. என்றலும், எழுந்து புல்லி, ஏறிய வெகுளி நீங்கி,
    குன்று எனக் குவிந்த தோளாய்! மாரவேள் கொதிக்கும் அம்பால்
    பொன்றலின் இராமன் அம்பால் பொன்றலே புகழ் உண்டு அன்றோ?
    தென்றலைப் பகையைச் செய்த சீதையைத் தருதி என்றான். 33

  42. ஆண்டையான் அனைய கூற, அரக்கர் ஓர் இருவரோடும்,
    பூண்ட என் மானம் தீரத் தண்டகம் புக்க காலை,
    தூண்டிய சரங்கள் பாய, துணைவர் பட்டு உருள, அஞ்சி
    மீண்ட யான், சென்று செய்யும் வினை என்கொல்? விளம்புக! என்றான். 34

  43. ஆயவன் அனைய கூற, அரக்கர் கோன், ஐய! நொய்து உன்
    தாயை ஆர் உயிர் உண்டானை, யான் கொலச் சமைந்து நின்றேன்!
    போய், ஐயா! புணர்ப்பது என்னே என்பது பொருந்திற்று ஒன்றோ?
    மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் அவளை என்றான். 35

  44. புறத்து இனி உரைப்பது என்னே? புரவலன் தேவிதன்னைத்
    திறத்துழி அன்றி, வஞ்சித்து எய்துதல் சிறுமைத்து ஆகும்;
    அறத்து உளதுஒக்கும் அன்றே? அமர்த்தலை வென்று கொண்டு, உன்
    மறத் துறை வளர்த்தி, மன்ன! என்ன மாரீசன் சொன்னான். 36

  45. ஆனவன் உரைக்க, நக்க அரக்கர்கோன், அவரை வெல்லத்
    தானையும் வேண்டுமோ? என் தடக் கை வாள் தக்கது அன்றோ?
    ஏனையர் இறக்கின், தானும் தமியளாய் இறக்கும் அன்றே
    மானவள்? ஆதலாலே, மாயையின் வலித்தும் என்றான். 37

  46. தேவியைத் தீண்டாமுன்னம், இவன் தலை சரத்தின் சிந்திப்
    போம் வகை புணர்ப்பன் என்று, புத்தியால் புகல்கின்றேற்கும்
    ஆம் வகை ஆயிற்று இல்லை; ஆர் விதி விளைவை ஓர்வார்?
    ஏவிய செய்வது அல்லால், இல்லை வேறு ஒன்று என்று, எண்ணா. 38

  47. என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது? இயம்புக? என்றான்,
    பொன்னின் மான் ஆகிப் புக்கு, பொன்னை மால் புணர்த்துக என்ன,
    அன்னது செய்வென் என்னா, மாரீசன் அமைந்து போனான்;
    மின்னு வேல் அரக்கர்கோனும் வேறு ஒரு நெறியில் போனான். 39

  48. மாரீசனின் எண்ணமும் செயலும்

  49. மேல்நாள் அவர் வில் வலி கண்டமையால்,
    தான் ஆக நினைந்து சமைந்திலனால்,
    மான் ஆகுதி என்றவன் வாள் வலியால்,
    போனான் மனமும், செயலும் புகல்வாம். 40

  50. வெஞ் சுற்றம் நினைந்து உகும்; வீரரை வேறு
    அஞ்சுற்று மறுக்குறும்; ஆழ் குழி நீர்
    நஞ்சு உற்றுழி, மீனின் நடுக்குறுவான்
    நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால். 41

  51. அக் காலமும், வேள்வியின், அன்று தொடர்ந்து
    இக் காலும், நலிந்தும் ஓர் ஈறு பெறான்;
    முக் காலின் முடிந்திடுவான் முயல்வான்
    புக்கான் அவ் இராகவன் வைகு புனம். 42

  52. மாரீசன் பொன்மானாய்ப் போதல்

  53. தன் மானம் இலாத, தயங்கு ஒளி சால்
    மின் வானமும் மண்ணும் விளங்குவது ஓர்
    பொன் மான் உருவம் கொடு போயினனால்-
    நன் மான் அனையாள்தனை நாடுறுவான். 43

  54. கலைமான் முதல் ஆயின கண்ட எலாம்,
    அலை மானுறும் ஆசையின், வந்தனவால்-
    நிலையா மன, வஞ்சனை, நேயம் இலா
    விலை மாதர்கண் யாரும் விழுந்தெனவே. 44

  55. பொய் ஆம் என ஓது புறஞ்சொலினால்
    நையா இடை நோவ நடந்தனளால்-
    வைதேவி, தன் வால் வளை மென் கை எனும்
    கொய்யா மலரால் மலர் கொய்குறுவாள். 45

  56. உண்டாகிய கேடு உடையார், துயில்வாய்
    எண் தானும் இயைந்து இயையா உருவம்
    கண்டார் எனலாம் வகை, கண்டனவால்-
    பண்டு ஆரும் உறா இடர்படறுவாள். 46

  57. காணா இது, கைதவம் என்று உணராள்
    பேணாத நலம்கொடு பேணினளால்-
    வாழ்நாள் அவ் இராவணன் மாளுதலால்,
    வீழ் நாள் இல் அறம் புவி மேவுதலால். 47

  58. மானைக் கண்டு மயங்கிய சீதை இராமனை அணுகுதல்

  59. நெற்றிப் பிறையாள் முனம் நின்றிடலும்,
    முற்றிப் பொழி காதலின் முந்துறுவாள்,
    பற்றித் தருக என்பென் எனப் பதையா,
    வெற்றிச் சிலை வீரனை மேவினளால். 48

  60. ஆணிப் பொனின் ஆகியது; ஆய் கதிரால்
    சேணில் சுடர்கின்றது; திண் செவி, கால்,
    மாணிக்க மயத்து ஒரு மான் உளதால்;
    காணத் தகும் என்றனள், கை தொழுவாள். 49

  61. இம் மான் இந் நிலத்தினில் இல்லை எனா,
    எம்மான் இதனைச் சிறிது எண்ணல் செயான்,
    செம் மானவள் சொல்கொடு, தே மலரோன்
    அம்மானும், அருத்தியன் ஆயினனால். 50

  62. இலக்குவன் மாய மான் அது என உரைத்தல்

  63. ஆண்டு, அங்கு, இளையான் உரையாடினனால்
    வேண்டும் எனலாம் விழைவு அன்று இது எனா;
    பூண் துஞ்சு பொலங் கொடியோய்! அது நாம்
    காண்டும் எனும் வள்ளல் கருத்து உணர்வான். 51

  64. காயம், கனகம்; மணி, கால், செவி, வால்;
    பாயும் உருவோடு இது பண்பு அலவால்;
    மாயம் எனல் அன்றி, மனக் கொளவே
    ஏயும்? இறை மெய் அல என்ற அளவே. 52

  65. இவ்வாறு இருக்கலாகாதோ என இராமன் வினவுதல்

  66. நில்லா உலகின் நிலை, நேர்மையினால்
    வல்லாரும் உணர்ந்திலர்; மன் உயிர்தாம்
    பல் ஆயிரகோடி பரந்துளவால்;
    இல்லாதன இல்லை-இளங் குமரா! 53

  67. என் என்று நினைத்தது, இழைத்து உளம்? நம்
    கன்னங்களின் வேறு உள காணுதுமால்;
    பொன்னின் ஒளி மேனி பொருந்திய ஏழ்
    அன்னங்கள் பிறந்தது அறிந்திலையோ? 54

  68. முறையும் முடிவும் இலை, மொய் உயிர் என்று,
    இறைவன் இளையானொடு இயம்பினனால்;
    பறையும் துணை, அன்னது பல் நெறி போய்
    மறையும் என, ஏழை வருந்தினளால். 55

  69. இராமன் சீதையுடன் சென்று மானைக் காணுதல்

  70. அனையவள் கருத்தை உன்னா, அஞ்சனக் குன்றம் அன்னான்,
    புனையிழை! காட்டு அது என்று போயினான்; பொறாத சிந்தைக்
    கனை கழல் தம்பி பின்பு சென்றனன், கடக்க ஒண்ணா
    வினை என வந்து நின்ற மான் எதிர் விழித்தது அன்றே. 56

  71. நோக்கிய மானை நோக்கி, நுதியுடை மதியின் ஒன்றும்
    தூக்கிலன்; நன்று இது என்றான்; அதன் பொருள் சொல்லல் ஆகும்?
    சேக்கையின் அரவு நீங்கிப் பிறந்தது தேவர் செய்த
    பாக்கியம் உடைமை அன்றோ? அன்னது பழுது போமோ? 57

  72. என் ஒக்கும் என்னல் ஆகும்? இளையவ! இதனை நோக்காய்;
    தன் ஒக்கும் உவமை அல்லால், தனை ஒக்கும் உவமை உண்டோ?
    பல், நக்க தரளம் ஒக்கும், பசும் புல்மேல் படரும் மெல் நா
    மின் ஒக்கும்; செம் பொன், மேனி; வெள்ளியின் விளங்கும் புள்ளி. 58

  73. வரி சிலை மறை வலோனே! மான் இதன் வடிவை, உற்ற
    அரிவையர், மைந்தர், யாரே ஆதரம் கூர்கிலாதார்?
    உருகிய மனத்த ஆகி, ஊர்வன, பறப்ப, யாவும்
    விரி சுடர் விளக்கம் கண்ட விட்டிலின் வீழ்வ காணாய்! 59

  74. ஆரியன அனைய கூற, அன்னது தன்னை நோக்கி,
    சீரியது அன்று இது என்று, சிந்தையில் தெளிந்த தம்பி,
    காரியம் என்னை, ஈண்டுக் கண்டது கனக மானேல்?
    வேரி அம் தெரியல் வீர! மீள்வதே மேன்மை என்றான். 60

  75. அற்று அவன் பகராமுன்னம், அழகனை, அழகியாளும்
    கொற்றவன் மைந்த! மற்றைக் குழைவுடை உழையை, வல்லை
    பற்றினை தருதி ஆயின், பதியிடை அவதி எய்தப்
    பெற்றுழி, இனிது உண்டாடப் பெறற்கு அருந் தகைமைத்து என்றாள். 61

  76. மான் குறித்து இராம-இலக்குவரின் மாறுபாடு

  77. ஐய நுண் மருங்குல் நங்கை அஃது உரைசெய்ய, ஐயன்,
    செய்வென் என்று அமைய, நோக்கத் தெளிவுடைத் தம்பி செப்பும்;
    வெய்ய வல் அரக்கர் வஞ்சம் விரும்பினார் வினையின் செய்த
    கைதவ மான் என்று, அண்ணல்! காணுதி கடையின் என்றான். 62

  78. மாயமேல், மடியும் அன்றே வாளியின்; மடிந்தபோது
    காய் சினத்தவரைக் கொன்று உடன் கழித்தோமும் ஆதும்;
    தூயதேல், பற்றிக் கோடும்; சொல்லிய இரண்டின் ஒன்று
    தீயதே? உரைத்தி என்றான்-தேவரை இடுக்கண் தீர்ப்பான். 63

  79. பின் நின்றார் இனையர் என்றும் உணர்கிலம்; பிடித்த மாயம்
    என் என்றும் தெளிதல் தேற்றாம்; யாவது ஈது என்றும் ஓராம்;
    முன் நின்ற முறையின் நின்றார் முனிந்துள வேட்டம் முற்றல்,
    பொன் நின்ற வயிரத் தோளாய்! புகழ் உடைத்தாம் அன்று என்றான். 64

  80. பகையுடை அரக்கர் என்றும், பலர் என்றும், பயிலும் மாயம்
    மிகையுடைத்து என்றும், பூண்ட விரதத்தை விடுதும் என்றல்
    நகையுடைத்து ஆகும் அன்றே? ஆதலின் நன்று இது என்னா,
    தகையுடைத் தம்பிக்கு, அந் நாள், சதுமுகன் தாதை சொன்னான். 65

  81. அடுத்தவும் எண்ணிச் செய்தல், அண்ணலே! அமைதி அன்றோ?
    விடுத்து, இதன் பின் நின்றார்கள் பலர் உளர் எனினும், வில்லால்
    தொடுத்த வெம் பகழி தூவித் தொடர்ந்தனென், விரைந்து சென்று
    படுக்குவென்; அது அன்று ஆயின், பற்றினென் கொணர்வென் என்றான். 66

  82. ஆயிடை, அன்னம் அன்னாள், அமுது உகுத்தனைய செய்ய
    வாயிடை, மழலை இன் சொல் கிளியினின் குழறி, மாழ்கி,
    நாயக! நீயே பற்றி நல்கலைபோலும் என்னா,
    சேயரிக் குவளை முத்தம் சிந்துபு சீறிப் போனாள். 67

  83. இளையவனை இருத்தி, இராமன் மான் பின் செல்லல்

  84. போனவள் புலவி நோக்கி, புரவலன், பொலன் கொள் தாராய்!
    மான் இது நானே பற்றி, வல்லையின் வருவென், நன்றே;
    கான் இயல் மயில் அன்னாளைக் காத்தனை இருத்தி என்னா,
    வேல் நகு சரமும், வில்லும், வாங்கினன் விரையலுற்றான். 68

  85. முன்னமும் மகவாய் வந்த மூவரில் ஒருவன் போனான்;
    அன்ன மாரீசன் என்றே அயிர்த்தனன், இதனை; ஐய!
    இன்னமும் காண்டி; வாழி, ஏகு என, இரு கை கூப்பி,
    பொன் அனாள் புக்க சாலை காத்தனன் புறத்து நின்றே. 69

  86. மந்திரத்து இளையோன் வாய்மொழி மனத்துக் கொள்ளான்;
    சந்திரற்கு உவமை சான்ற வதனத்தாள் சலத்தை நோக்கி,
    சிந்துரப் பவளச் செவ்வாய் முறுவலன், சிகரச் செவ்விச்
    சுந்தரத் தோளினான், அம் மானினைத் தொடரலுற்றான். 70

  87. மிதித்தது மெல்ல மெல்ல; வெறித்தது வெருவி; மீதில்
    குதித்தது; செவியை நீட்டி, குரபதம் உரத்தைக் கூட்டி,
    உதித்து எழும் ஊதை, உள்ளம், என்று இவை உருவச் செல்லும்
    கதிக்கு ஒரு கல்வி வேறே காட்டுவது ஒத்தது அன்றே. 71

  88. நீட்டினான், உலகம் மூன்றும் நின்று எடுத்து அளந்த பாதம்;
    மீட்டும் தாள் நீட்டற்கு, அம்மா! வேறும் ஓர் அண்டம் உண்டோ?
    ஓட்டினான், தொடர்ந்த தன்னை, ஒழிவு அற நிறைந்த தன்மை,
    காட்டினான் அன்றி, அன்று, அக் கடுமை யார் கணிக்கற்பாலார்? 72

  89. குன்றிடை இவரும்; மேகக் குழுவிடைக் குதிக்கும்; கூடச்
    சென்றிடின், அகலும்; தாழின், தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும்;
    நின்றதே போல நீங்கும்; நிதிவழி நேயம் நீட்டும்
    மன்றல் அம் கோதை மாதர் மனம் எனப் போயிற்று, அம்மா! 73

  90. காயம் வேறு ஆகி, செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே?
    ஏயுமே; என்னின் முன்னம் எண்ணமே இளவற்கு உண்டே,
    ஆயுமேல் உறுதல் செல்லாம்; ஆதலால், அரக்கர் செய்த
    மாயமே ஆயதே; நான் வருந்தியது என்றான் -வள்ளல். 74

  91. இராமன் அம்புக்கு மாரீசன் வீழ்தல்

  92. பற்றுவான், இனி, அல்லன்; பகழியால்
    செற்று, வானில் செலுத்தல் உற்றான் என
    மற்று அம் மாய அரக்கன் மனக்கொளா,
    உற்ற வேதத்தின் உம்பரின் ஓங்கினான். 75

  93. அக் கணத்தினில், ஐயனும், வெய்ய தன்
    சக்கரத்தின் தகைவு அரிது ஆயது ஓர்,
    செக்கர் மேனிப் பகழி செலுத்தினான் -
    புக்க தேயம் புக்கு இன் உயிர் போக்கு எனா. 76

  94. நெட்டிலைச் சரம் வஞ்சனை நெஞ்சுறப்
    பட்டது; அப்பொழுதே, பகு வாயினால்,
    அட்ட திக்கினும், அப்புறமும் புக
    விட்டு அழைத்து, ஒரு குன்று என வீழ்ந்தனன். 77

  95. இராமன் சாலைக்கு விரைதல்

  96. வெய்யவன், தன் உருவோடு வீழ்தலும்,
    செய்யது அன்று எனச் செப்பிய தம்பியை,
    ஐயன் வல்லன்; என் ஆர் உயிர் வல்லன் நான்
    உய்ய வந்தவன் வல்லன் என்று உன்னினான். 78

  97. ஆசை நீளத்து அரற்றினன் வீழ்ந்த அந்
    நீசன் மேனியை, நின்று உற நோக்கினான்;
    மாசு இல் மா தவன் வேள்வியில் வந்த மா-
    ரீசனே இவன் என்பதும் தேறினான். 79

  98. புழைத்த வாளி உரம் புக, புல்லியோன்,
    இழைத்த மாயையின், என் குரலால் எடுத்து
    அழைத்தது உண்டு; அது கேட்டு அயர்வு எய்துமால்,
    மழைக் கண் ஏழை என்று, உள்ளம் வருந்தினான். 80

  99. மாற்றம் இன்னது, மாய மாரீசன் என்று,
    ஏற்ற காலையின் முன் உணர்ந்தான் எனது
    ஆற்றல் தேரும் அறிவினன்; ஆதலால்,
    தேற்றுமால் இளையோன் எனத் தேறினான். 81

  100. மாள்வதே பொருள் ஆக வந்தான் அலன்;
    சூழ்வது ஓர் பொருள் உண்டு; இவன் சொல்லினால்
    மூள்வது ஏதம்; அது முடியாமுனம்
    மீள்வதே நலன் என்று, அவன் மீண்டனன். 82

  101. மிகைப் பாடல்கள்

  102. ஆயிரம் கடல் கையுடையானை மழு வாளால்
    ஏ எனும் உரைக்குள் உயிர் செற்ற எதிர் இல்லன்
    மேய விறல் முற்றும் வரி வெஞ் சிலையினோடும்
    தாயவன் வலித் தகைமை யாம் உறு தகைத்தோ. 25-1

  103. ஆரணிய காண்டம்

    9. இராவணன் சூழ்ச்சிப் படலம்



  104. சங்கு அடுத்த தனிக் கடல் மேனியாற்கு
    அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம்;
    கொங்கு அடுத்த மலர்க் குழல் கொம்பனாட்கு
    இங்கு அடுத்த தகைமை இயம்புவாம். 1

  105. சீதையின் துயரம்

  106. எயிறு அலைத்து முழை திறந்து ஏங்கிய,
    செயிர் தலைக்கொண்ட, சொல் செவி சேர்தலும்,
    குயில் தலத்திடை உற்றது ஓர் கொள்கையாள்,
    வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள். 2

  107. பிடித்து நல்கு, இவ் உழை என, பேதையேன்
    முடித்தனென், முதல் வாழ்வு என, மொய் அழல்
    கொடிப் படித்தது என, நெடுங் கோள் அரா,
    இடிக்கு உடைந்தது என, புரண்டு ஏங்கினாள். 3

  108. குற்றம் வீந்த குணத்தின் எம் கோமகன்
    மற்று அவ் வாள் அரக்கன் புரி மாயையால்,
    இற்று வீழ்ந்தனன் என்னவும், என் அயல்
    நிற்றியோ, இளையோய்! ஒரு நீ? என்றாள். 4

  109. இலக்குவனின் தெளிவுரை

  110. எண்மை ஆர் உலகினில், இராமற்கு ஏற்றம் ஓர்
    திண்மையார் உளர் எனச் செப்பற்பாலரோ?
    பெண்மையால் உரைசெயப் பெறுதிரால் என,
    உண்மையான், அனையவட்கு உணரக் கூறினான். 5

  111. ஏழுமே கடல், உலகு ஏழும் ஏழுமே,
    சூழும் ஏழ் மலை, அவை தொடர்ந்த சூழல்வாய்
    வாழும் ஏழையர் சிறு வலிக்கு, வாள் அமர்,
    தாழுமே, இராகவன் தனிமை? தையலீர்! 6

  112. பார் என, புனல் என, பவன, வான், கனல்
    பேர் எனைத்து, அவை, அவன் முனியின் பேருமால்;
    கார் எனக் கரிய அக் கமலக் கண்ணனை
    யார் எனக் கருதி, இவ் இடரின் ஆழ்கின்றீர்? 7

  113. இடைந்துபோய் நிசிசரற்கு இராமன், எவ்வம் வந்து
    அடைந்த போது அழைக்குமே? அழைக்குமாம் எனின்,
    மிடைந்த பேர் அண்டங்கள் மேல, கீழன,
    உடைந்துபோம்; அயன் முதல் உயிரும் வீயுமால். 8

  114. மாற்றம் என் பகர்வது? மண்ணும் வானமும்
    போற்ற, வன் திரிபுரம் எரிந்த புங்கவன்
    ஏற்றி நின்று எய்த வில் இற்றது; எம்பிரான்
    ஆற்றலின் அமைவது ஓர் ஆற்றல் உண்மையோ? 9

  115. காவலன், ஈண்டு நீர் கருதிற்று எய்துமேல்,
    மூவகை உலகமும் முடியும்; முந்து உள,
    தேவரும், முனிவரும் முதல செவ்வியோர்
    ஏவரும், வீழ்ந்துளார்; மற்று அறமும் எஞ்சுமால். 10

  116. பரக்க என் பகர்வது? பகழி, பண்ணவன்
    துரக்க, அங்கு அது, பட, தொலைந்து சோர்கின்ற
    அரக்கன் அவ் உரை எடுத்து அரற்றினான்; அதற்கு
    இரக்கம் உற்று இரங்கலிர்; இருத்திர் ஈண்டு என்றான். 11

  117. சீதை ஏச, இலக்குவன் ஏகுதல்

  118. என்று அவன் இயம்பலும், எடுத்த சீற்றத்தள்,
    கொன்றன இன்னலள், கொதிக்கும் உள்ளத்தள்,
    நின்ற நின் நிலை, இது நெறியிற்று அன்று எனா,
    வன் தறுகண்ணினள், வயிர்த்துக் கூறுவாள். 12

  119. ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்;
    பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும், நீ
    வெருவலை நின்றனை; வேறு என்? யான், இனி
    எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென், ஈண்டு எனா, 13

  120. தாமரை வனத்திடைத் தாவும் அன்னம்போல்
    தூம வெங் காட்டு எரி தொடர்கின்றாள்தனை,
    சேம விற் குமரனும் விலக்கி, சீறடிப்
    பூ முகம் நெடு நிலம் புல்லி, சொல்லுவான்; 14

  121. துஞ்சுவது என்னை? நீர் சொன்ன சொல்லை யான்
    அஞ்சுவென்; மறுக்கிலென்; அவலம் தீர்ந்து இனி,
    இஞ்சு இரும்; அடியனேன் ஏகுகின்றனென்;
    வெஞ் சின விதியினை வெல்ல வல்லமோ? 15

  122. போகின்றேன் அடியனேன்; புகுந்து வந்து, கேடு
    ஆகின்றது; அரசன் தன் ஆணை நீர் மறுத்து,
    ஏகு என்றீர்; இருக்கின்றீர் தமியிர் என்று, பின்
    வேகின்ற சிந்தையான் விடை கொண்டு ஏகினான். 16

  123. இரும்பெனேல், எரியிடை இறப்பரால் இவர்;
    பொருப்பு அனையானிடைப் போவெனே எனின்,
    அருப்பம் இல் கேடு வந்து அடையும்; ஆர் உயிர்
    விருப்பனேற்கு என் செயல்? என்று, விம்மினான். 17

  124. அறம்தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம்;
    இறந்துபாடு இவர்க்கு உறும் இதனின் இவ் வழித்
    துறந்து போம் இதனையே துணிவென்; தொல் வினைப்
    பிறந்து, போந்து, இது படும், பேதையேன் எனா. 18

  125. போவது புரிவல் யான்; புகுந்தது உண்டு எனின்
    காவல்செய் எருவையின் தலைவன் கண்ணுறும்;
    ஆவது காக்கும் என்று அறிவித்து, அவ் வழி,
    தேவர் செய் தவத்தினால் செம்மல் ஏகினான். 19

  126. இராவணன் தவக் கோலத்தில் தோன்றுதல்

  127. இளையவன் ஏகலும், இறவு பார்க்கின்ற
    வளை எயிற்று இராவணன், வஞ்சம் முற்றுவான்,
    முளை வரித் தண்டு ஒரு மூன்றும், முப் பகைத்
    தளை அரி தவத்தர் வடிவம், தாங்கினான். 20

  128. ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன்;
    சேண் நெறி வந்தது ஓர் வருத்தச் செய்கையன்;
    பாணியின் அளந்து இசை படிக்கின்றான் என,
    வீணையின் இசைபட வேதம் பாடுவான். 21

  129. பூப் பொதி அவிழ்ந்தன நடையன்; பூதலம்
    தீப் பொதிந்தாமென மிதிக்கும் செய்கையன்;
    காப்பு அரு நடுக்குறும் காலன், கையினன்;
    மூப்பு எனும் பருவமும் முனிய முற்றினான். 22

  130. தாமரைக் கண்ணொடு ஏர் தவத்தின் மாலையன்;
    ஆமையின் இருக்கையன்; வளைந்த ஆக்கையன்;
    நாம நூல் மார்பினன்; நணுகினான் அரோ-
    தூ மனத்து அருந்ததி இருந்த சூழல்வாய். 23

  131. தோம் அறு சாலையின் வாயில் துன்னினான்;
    நா முதல் குழறிட நடுங்கும் சொல்லினான்;
    யாவர் இவ் இருக்கையுள் இருந்துளீர்? என்றான் -
    தேவரும் மருள்தரத் தெரிந்த மேனியான். 24

  132. சீதை இராவணனை வரவேற்றல்

  133. தோகையும், அவ் வழி, தோம் இல் சிந்தனைச்
    சேகு அறு நோன்பினர் என்னும் சிந்தையால்,
    பாகு இயல் கிளவியாள், பவளக் கொம்பர் போன்று,
    ஏகுமின் ஈண்டு என, எதிர்வந்து எய்தினாள். 25

  134. வெற்பிடை மதம் என வெயர்க்கும் மேனியன்,
    அற்பின் நல் திரை புரள் ஆசை வேலையன்,
    பொற்பினுக்கு அணியினை, புகழின் சேக்கையை,
    கற்பினுக்கு அரசியை, கண்ணின் நோக்கினான். 26

  135. தூங்கல் இல் குயில் கெழு சொல்லின், உம்பரும்
    ஓங்கிய அழகினாள் உருவம் காண்டலும்,
    ஏங்கினன் மன நிலை யாது என்று உன்னுவாம்?
    வீங்கின, மெலிந்தன, வீரத் தோள்களே. 27

  136. புன மயில் சாயல்தன் எழிலில், பூ நறைச்
    சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின் -
    இனம் எனக் களித்துளது என்பது என்? அவன்
    மனம் எனக் களித்தது, கண்ணின் மாலையே. 28

  137. சேயிதழ் தாமரைச் சேக்கை தீர்ந்து இவண்
    மேயவன் மணி நிறம் மேனி காணுதற்கு
    ஏயுமே இருபது? இங்கு இமைப்பு இல் நாட்டங்கள்
    ஆயிரம் இல்லை! என்று, அல்லல் எய்தினான். 29

  138. அரை கடை இட்ட முக்கோடி ஆயுவும்
    புரை தபு தவத்தின் யான் படைத்த போதுமே,
    நிரை வளை முன் கை இந் நின்ற நங்கையின்
    கரை அறு நல் நலக் கடற்கு? என்று உன்னினான். 30

  139. தேவரும், அவுணரும், தேவிமாரொடும்,
    கூவல்செய் தொழிலினர், குடிமை செய்திட,
    மூஉலகமும் இவர் முறையின் ஆள, யான்
    ஏவல் செய்து உய்குவென், இனி என்று உன்னினான். 31

  140. உளைவுறு துயர் முகத்து ஒளி இது ஆம் எனின்,
    முளை எயிறு இலங்கிடும் முறுவல் என்படும்?
    தளை அவிழ் குழல் இவட் கண்டு தந்த என்
    இளையவட்கு அளிப்பென், என் அரசு என்று எண்ணினான். 32

  141. ஆண்டையான் அனையன உன்னி, ஆசை மேல்
    மூண்டு எழு சிந்தனை, முறை இலோன் தனைக்
    காண்டலும், கண்ணின் நீர் துடைத்த கற்பினாள்,
    ஈண்டு எழுந்தருளும் என்று, இனிய கூறினாள். 33

  142. இயற்கை நடுங்க இராவணன் இருந்தான்

  143. ஏத்தினள்; எய்தலும், இருத்திர் ஈண்டு என,
    வேத்திரத்து ஆசனம் விதியின் நல்கினாள்;
    மாத் திரிதண்டு அயல் வைத்த வஞ்சனும்,
    பூத் தொடர் சாலையின் இருந்த போழ்தினே. 34

  144. நடுங்கின, மலைகளும் மரனும்; நா அவிந்து,
    அடங்கின, பறவையும்; விலங்கும் அஞ்சின;
    படம் குறைந்து ஒதுங்கின, பாம்பும்;-பாதகக்
    கடுந் தொழில் அரக்கனைக் காணும் கண்ணினே. 35

  145. தீய இராவணன் வினவ சீதை விடையளித்தல்

  146. இருந்தவன், யாவது இவ் இருக்கை? இங்கு உறை
    அருந்தவன் யாவன்? நீர் யாரை? என்றலும்,
    விருந்தினர்; இவ் வழி விரகு இலார் என,
    பெருந் தடங் கண்ணவள் பேசல் மேயினாள்; 36

  147. தயரதன் தொல் குலத் தனையன்; தம்பியோடு
    உயர் குலத்து அன்னை சொல் உச்சி ஏந்தினான்,
    அயர்வு இலன், இவ் வழி உறையும்; அன்னவன்
    பெயரினைத் தெரிகுதிர், பெருமையீர்! என்றாள். 37

  148. கேட்டனென், கண்டிலென்; கெழுவு கங்கை நீர்
    நாட்டிடை ஒரு முறை நண்ணினேன்; மலர்
    வாள் தடங் கண்ணி! நீர் யாவர் மா மகள்,
    காட்டிடை அரும் பகல் கழிக்கின்றீர்? என்றான். 38

  149. அனக மா நெறி படர் அடிகள்; நும் அலால்
    நினைவது ஓர் தெய்வம் வேறு இலாத நெஞ்சினான்
    சனகன் மா மகள்; பெயர் சனகி; காகுத்தன்
    மனைவி யான் என்றனள், மறு இல் கற்பினாள். 39

  150. சீதையின் கேள்விக்கு இராவணன் விடையளித்தல்

  151. அவ்வழி அனையன உரைத்த ஆயிழை,
    வெவ் வழி வருந்தினிர், விளைந்த மூப்பினிர்,
    இவ் வழி இரு வினை கடக்க எண்ணினிர்,
    எவ் வழி நின்றும் இங்கு எய்தினீர்? என்றாள். 40

  152. இந்திரற்கு இந்திரன்; எழுதல் ஆகலாச்
    சுந்தரன்; நான்முகன் மரபில் தோன்றினான்;
    அந்தரத்தோடும் எவ் உலகும் ஆள்கின்றான்;
    மந்திரத்து அரு மறை வைகும் நாவினான். 41

  153. ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால் வரை
    ஊசி-வேரொடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான்;
    ஆசைகள் சுமந்த பேர் அளவில் யானைகள்
    பூசல் செய் மருப்பினைப் பொடி செய் தோளினான். 42

  154. நிற்பவர், கடைத்தலை நிறைந்து தேவரே;
    சொல் பகும், மற்று, அவன் பெருமை சொல்லுங்கால்;
    கற்பகம் முதலிய நிதியம் கையன;
    பொற்பு அகம், மான நீர் இலங்கைப் பொன் நகர். 43

  155. பொன்னகரத்தினும், பொலன்கொள் நாகர்தம்
    தொல் நகரத்தினும், தொடர்ந்த மா நிலத்து
    எந் நகரத்தினும், இனிய; ஈண்டு, அவன்
    நல் நகரத்தன நவை இலாதன. 44

  156. தாளுடை மலருளான் தந்த, அந்தம் இல்
    நாளுடை வாழ்க்கையன்; நாரி பாகத்தன்
    வாளுடைத் தடக் கையன்; வாரி வைத்த வெங்
    கோளுடைச் சிறையினன்; குணங்கள் மேன்மையான். 45

  157. வெம்மை தீர் ஒழுக்கினன்; விரிந்த கேள்வியன்;
    செம்மையோன்; மன்மதன் திகைக்கும் செவ்வியன்;
    எம்மையோர் அனைவரும், இறைவர் என்று எணும்
    மும்மையோர் பெருமையும் முற்றும் பெற்றியான். 46

  158. அனைத்து உலகினும் அழகு அமைந்த நங்கையர்
    எனைப் பலர், அவன் தனது அருளின் இச்சையோர்;
    நினைத்து, அவர் உருகவும், உதவ நேர்கிலன்;
    மனக்கு இனியாள் ஒரு மாதை நாடுவான். 47

  159. ஆண்டையான் அரசு வீற்றிருந்த அந் நகர்,
    வேண்டி, யான் சில் பகல் உறைதல் மேவினேன்;
    நீண்டனென் இருந்து, அவற் பிரியும் நெஞ்சிலேன்,
    மீண்டனென் என்றனன், வினையம் உன்னுவான். 48

  160. சீதை-இராவணன் வாக்குவாதம்

  161. வேதமும் வேதியர் அருளும் வெஃகலா
    சேதன மன் உயிர் தின்னும், தீவினைப்
    பாதக அரக்கர்தம் பதியின் வைகுதற்கு
    ஏது என்?-உடலமும் மிகை என்று எண்ணுவீர்! 49

  162. வனத்திடை மாதவர் மருங்கு வைகலிர்;
    புனல் திரு நாட்டிடைப் புனிதர் ஊர் புக
    நினைத்திலிர்; அற நெறி நினைக்கிலாதவர்,
    இனத்திடை வைகினிர்; என் செய்திர்! என்றாள். 50

  163. மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு இலான், மறுவின் தீர்ந்தார்,
    வெங் கண் வாள் அரக்கர் என்ன வெருவலம்; மெய்ம்மை நோக்கின்
    திங்கள் வாள் முகத்தினாளே! தேவரின் தீயர் அன்றே;
    எங்கள் போலியர்க்கு நல்லார் நிருதரே போலும் என்றான். 51

  164. சேயிழை-அன்ன சொல்ல,-தீயவர்ச் சேர்தல் செய்தார்
    தூயவர் அல்லர், சொல்லின், தொழ் நெறி தொடர்ந்தோர் என்றாள்;
    மாய வல் அரக்கர் வல்லர், வேண்டு உரு வரிக்க என்பது,
    ஆயவள் அறிதல் தேற்றாள்; ஆதலின், அயல் ஒன்று எண்ணாள். 52

  165. அயிர்த்தனள் ஆகும் என்று, ஓர் ஐயுறவு அகத்துக் கொண்டான்;
    பெயர்த்து, அது துடைக்க எண்ணி, பிறிதுறப் பேசலுற்றான்;
    மயக்கு அறும் உலகம் மூன்றின் வாழ்பவர்க்கு, அனைய வல்லோர்
    இயற்கையின் நிற்பது அல்லால், இயற்றல் ஆம் நெறி என்? என்றான். 53

  166. திறம் தெரி வஞ்சன், அச் சொல் செப்பலும், செப்பம் மிக்காள்,
    அறம் தரு வள்ளல், ஈண்டு இங்கு அருந் தவம் முயலும் நாளுள்,
    மறம்தலை திரிந்த வாழ்க்கை அரக்கர் தம் வருக்கத்தோடும்,
    இறந்தனர் முடிவர்; பின்னர், இடர் இலை உலகம் என்றாள். 54

  167. மானவள் உரைத்தலோடும், மானிடர், அரக்கர்தம்மை
    மீன் என மிளிரும் கண்ணாய்! வேர் அற வெல்வர் என்னின்,
    யானையின் இனத்தை எல்லாம் இள முயல்கொல்லும்; இன்னும்,
    கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான். 55

  168. மின் திரண்டனைய பங்கி விராதனும், வெகுளி பொங்கக்
    கன்றிய மனத்து வென்றிக் கரன் முதல் கணக்கிலோரும்,
    பொன்றிய பூசல் ஒன்றும் கேட்டிலிர் போலும் என்றாள்-
    அன்று அவர்க்கு அடுத்தது உன்னி, மழைக் கண் நீர் அருவி சோர்வாள். 56

  169. வாள் அரி வள்ளல்; சொன்ன மான் கணம் நிருதரானார்;
    கேளொடு மடியுமாறும், வானவர் கிளருமாறும்,
    நாளையே காண்டிர் அன்றே; நவை இலிர், உணர்கிலீரோ?
    மீள அருந் தருமம் தன்னை வெல்லுமோ பாவம்? என்றாள். 57

  170. மாய வேடம் சிதைய இராவணன் சீற்றத்துடன் எழல்

  171. தேனிடை அமுது அளாய அன்ன மென் சில சொல் மாலை,
    தானுடைச் செவிகளூடு தவழுற, தளிர்த்து வீங்கும்
    ஊனுடை உடம்பினானும், உரு கெழு மானம் ஊன்ற,
    மானிடர் வலியர் என்ற மாற்றத்தால், சீற்றம் வைத்தான். 58

  172. சீறினன், உரைசெய்வான், அச் சிறு வலிப் புல்லியோர்கட்கு
    ஈறு, ஒரு மனிதன் செய்தான் என்று எடுத்து இயம்பினாயேல்,
    தேறுதி நாளையே; அவ் இருபது திண் தோள் வாடை
    வீறிய பொழுது, பூளைவீ என வீவன் அன்றே? 59

  173. மேருவைப் பறிக்க வேண்டின், விண்ணினை இடிக்க வேண்டின்,
    நீரினைக் கலக்க வேண்டின், நெருப்பினை அவிக்க வேண்டின்
    பாரினை எடுக்க வேண்டின், பல வினை-சில சொல் ஏழாய்!
    யார் எனக் கருதிச் சொன்னாய்?-இராவணற்கு அரிது என்? என்றான். 60

  174. அரண் தரு திரள் தோள்சால உள எனின், ஆற்றல் உண்டோ?
    கரண்ட நீர் இலங்கை வேந்தைச் சிறைவைத்த கழற்கால் வீரன்
    திரண்ட தோள் வனத்தை எல்லாம், சிறியது ஓர் பருவம் தன்னில்,
    இரண்டு தோள் ஒருவன் அன்றோ, மழுவினால் எறிந்தான்? என்றாள். 61

  175. என்று அவள் உரைத்தலோடும், எரிந்தன நயனம்; திக்கில்
    சென்றன திரள் தோள்; வானம் தீண்டின மகுடம்; திண் கை
    ஒன்றொடு ஒன்று அடித்த, மேகத்து உரும் என; எயிற்றின் ஒளி
    மென்றன; வெகுளி பொங்க, விட்டது மாய வேடம். 62

  176. இராவணனின் அரக்க வடிவு கண்டு சீதை ஐயுறல்

  177. இரு வினை துறந்த மேலோர் அல்லர்கொல் இவர்? என்று எண்ணி,
    அரிவையும், ஐயம் எய்தா ஆர் இவன் தான்? என்று, ஒன்றும்
    தெரிவு அரு நிலையளாக, தீ விடத்து அரவம் தானே
    உரு கெழு சீற்றம் பொங்கி, பணம் விரித்து உயர்ந்தது ஒத்தான். 63

  178. ஆற்றவெந் துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின்;
    ஏற்றம் என் நினைக்கல் ஆகும்? எதிர் அடுத்து இயம்பல் ஆகும்
    மாற்றம் ஒன்று இல்லை; செய்யும் வினை இல்லை; வரிக்கல் ஆகாக்
    கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என, குலைவு கொண்டாள். 64

  179. விண்ணவர் ஏவல் செய்ய, வென்ற என் வீரம் பாராய்;
    மண்ணிடைப் புழுவின் வாழும் மானிடர் வலியர் என்றாய்;
    பெண் எனப் பிழைத்தாய் அல்லை; உன்னை யான் பிசைந்து தின்ன
    எண்ணுவென் என்னின், பின்னை என் உயிர் இழப்பேன் என்றான். 65

  180. குலைவுறல், அன்னம்! முன்னம், யாரையும் கும்பிடா என்
    தலைமிசை மகுடம் என்ன, தனித்தனி இனிது தாங்கி,
    அலகு இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய,
    உலகம் ஈர்-ஏழும் ஆளும் செல்வத்துள் உறைதி என்றான். 66

  181. சீதையின் கற்பு

  182. செவிகளைத் தளிர்க் கையாலே சிக்குறச் சேமம் செய்தாள்;
    கவினும் வெஞ் சிலைக் கை வென்றிக் காகுத்தன் கற்பினேனை,
    புவியிடை ஒழுக்கம் நோக்காய்; பொங்கு எரி, புனிதர் ஈயும்
    அவியை நாய் வேட்டதென்ன, என் சொனாய்? அரக்க! என்னா, 67

  183. புல் நுனை நீரின் நொய்தாப் போதலே புரிந்து நின்ற
    என் உயிர் இழத்தல் அஞ்சி, இற் பிறப்பு அழிதல் உண்டோ?
    மின் உயிர்த்து உருமின் சீறும் வெங் கணை விரவாமுன்னம்,
    உன் உயிர்க்கு உறுதி நோக்கி, ஒளித்தியால் ஓடி என்றாள். 68

  184. என்று அவள் உரைக்க, நின்ற இரக்கம் இல் அரக்கன், எய்த
    உன் துணைக் கணவன் அம்பு, அவ் உயர் திசை சுமந்த ஓங்கல்
    வன் திறல் மருப்பின் ஆற்றல் மடித்த என் மார்பில் வந்தால்,
    குன்றிடைத் தொடுத்து விட்ட பூங் கணைகொல் அது என்றான். 69

  185. அணங்கினுக்கு அணங்கனாளே! ஆசை நோய் அகத்துப் பொங்க,
    உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை உதவி, உம்பர்க்
    கணம் குழை மகளிர்க்கு எல்லாம் பெரும் பதம் கைக்கொள் என்னா,
    வணங்கினன்-உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான். 70

  186. சீதை இலக்குவனை அழைத்தல்

  187. தறைவாய் அவன் வந்து அடி தாழுதலும்,
    கறை வாள் பட ஆவி கலங்கினள்போல்,
    இறைவா! இளையோய்! என ஏங்கினளால்-
    பொறைதான் உரு ஆனது ஓர் பொற்பு உடையாள். 71

  188. இராவணன் பன்னசாலையோடு சீதையை எடுத்து ஏகுதல்

  189. ஆண்டு, ஆயிடை, தீயவன் ஆயிழையைத்
    தீண்டான், அயன் மேல் உரை சிந்தைசெயா;
    தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால்,
    கீண்டான் நிலம்; யோசனை கிழொடு மேல். 72

  190. கொண்டான் உயர் தேர்மிசை; கோல் வளையாள்
    கண்டாள்; தனது ஆர் உயிர் கண்டிலளால்;
    மண் தான் உறும் மின்னின் மயங்கினளால்;
    விண்தான் எழியா எழுவான் விரைவான். 73

  191. சீதை அரற்றுதல்

  192. விடு தேர் என, வெங் கனல் வெந்து அழியும்
    கொடிபோல் புரள்வாள்; குலைவாள்; அயர்வாள்;
    துடியா எழுவாள்; துயரால் அழுவாள்;
    கடிதா, அறனே! இது கா எனுமால். 74

  193. மலையே! மரனே! மயிலே! குயிலே!
    கலையே! பிணையே! களிறே! பிடியே!
    நிலையே உயிரே? நிலை தேடினிர் போய்,
    உலையா வலியாருழை நீர் உரையீர்! 75

  194. செஞ் சேவகனார் நிலை நீர் தெரிவீர்;
    மஞ்சே! பொழிலே! வன தேவதைகாள்!
    அஞ்சேல் என நல்குதிரேல், அடியேன்
    உஞ்சால், அதுதான் இழிவோ? உரையீர்! 76

  195. நிருதாதியர் வேர் அற, நீல் முகில் போல்
    சர தாரைகள் வீசினிர், சார்கிலிரோ?
    வரதா! இளையோய்! மறு ஏதும் இலாப்
    பரதா! இளையோய்! பழி பூணுதிரோ? 77

  196. கோதாவரியே! குளிர்வாய், குழைவாய்!
    மாதா அனையாய்! மன்னே தெளிவாய்;
    ஓதாது உணர்வாருழை, ஓடினை போய்,
    நீதான் வினையேன் நிலை சொல்லலையோ? 78

  197. முந்தும் சுனைகாள்! முழை வாழ் அரிகாள்!
    இந்தந் நிலனோடும் எடுத்த கை நால்-
    ஐந்தும், தலை பத்தும், அலைந்து உலையச்
    சிந்தும்படி கண்டு, சிரித்திடுவீர். 79

  198. எள்ளி நகையாடும் இராவணனைச் சீதை இடித்துரைத்தல்

  199. என்று, இன்ன பலவும் பன்னி, இரியலுற்று அரற்றுவாளை,
    பொன் துன்னும் புணர் மென் கொங்கைப் பொலன்குழாய்! போரில் என்னைக்
    கொன்று, உன்னை மீட்பர் கொல், அம் மானிடர்? கொள்க என்னா,
    வன் திண் கை எறிந்து நக்கான் - வாழ்க்கைநாள் வறிது வீழ்ப்பான். 80

  200. வாக்கினால் அன்னான் சொல்ல, மாயையால் வஞ்ச மான் ஒன்று
    ஆக்கினாய், ஆக்கி, உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றைப்
    போக்கினாய்; புகுந்து கொண்டு போகின்றாய்; பொருது நின்னைக்
    காக்குமா காண்டி ஆயின், கடவல் உன் தேரை என்றாள். 81

  201. மீட்டும் ஒன்று உரைசெய்வாள்; நீ வீரனேல், விரைவில் மற்று உன்
    கூட்டம் ஆம் அரக்கர்தம்மைக் கொன்று, உங்கை கொங்கை மூக்கும்
    வாட்டினார் வனத்தில் உள்ளார், மானிடர் என்ற வார்த்தை
    கேட்டும், இம் மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ? 82

  202. இராவணன் கூற்றுக்கு சீதை எதிர்மொழி கூறல்

  203. மொழிதரும் அளவில், நங்கை! கேள் இது; முரண் இல் யாக்கை
    இழிதரு மனிதரோடே யான் செரு ஏற்பன் என்றால்,
    விழி தரும் நெற்றியான் தன் வெள்ளி வெற்பு எடுத்த தோட்குப்
    பழி தரும்; அதனின் சாலப் பயன் தரும், வஞ்சம் என்றான். 83

  204. பாவையும் அதனைக் கேளா, தம் குலப் பகைஞர் தம்பால்
    போவது குற்றம்! வாளின் பொருவது நாணம் போலாம்!
    ஆவது, கற்பினாரை வஞ்சிக்கும் ஆற்றலே ஆம்!
    ஏவம் என், பழிதான் என்னே, இரக்கம் இல் அரக்கர்க்கு? என்றாள். 84

  205. மிகைப் பாடல்கள்

  206. ஓவரு கவனம்மது உற்றுச் சென்றுளான்,
    பாவரு சாலையுள் பொருந்த நோக்குறா,
    யாவர், இவ் இருக்கையுள் இருந்த நீர்? என்றான் -
    தேவரும் இடர் உறத் திரிந்த மேனியான். 24-1

  207. மேனகை, திலோத்தமை, முதல ஏழையர்,
    வானகம் துறந்து வந்து, அவன் தன் மாட்சியால்
    ஊனம் இல் அடைப்பை, கால் வருடல், ஒண் செருப்பு,
    ஆனவை முதல் தொழில் அவரது ஆகுமே. 43-1

  208. சந்திரன், இரவி என்பவர்கள்தாம், அவன்
    சிந்தனை வழி நிலை திரிவர்; தேசுடை
    இந்திரன் முதலிய அமரர், ஈண்டு, அவன்
    கந்து அடு கோயிலின் காவலாளரே. 43-2

  209. என்றனள்; அபயம், புட்காள்! விலங்குகாள்! இராமன் தேவி,
    வென்றி கொள் சனகன் பேதை, விதியினால் அரக்கன் தேர்மேல்
    தென் திசைசிறைபோகின்றேன்; சீதை என் பெயரும் என்றாள்;
    சென்று அது சடாயு வேந்தன் செவியிடை உற்றது அன்றே. 84-1

  210. ஆரணிய காண்டம்

    10. சடாயு உயிர் நீத்த படலம்


    இராவணனை கழுகு அரசன் சடாயு எதிர்த்தல்

  211. என்னும் அவ் வேலையின்கண், எங்கு அடா போவது? என்னா,
    நில் நில் என்று, இடித்த சொல்லன், நெருப்பு இடைப் பரப்பும் கண்ணன்
    மின் என விளங்கும் வீரத் துண்டத்தன்; மேரு என்னும்
    பொன் நெடுங் குன்றம் வானில் வருவதே பொருவும் மெய்யான்; 1

  212. பாழி வன் கிரிகள் எல்லாம் பறித்து, எழுந்து, ஒன்றோடு ஒன்று
    பூழியின் உதிர, விண்ணில் புடைத்து, உறக் கிளர்ந்து பொங்கி,
    ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதர, முழுதும் வீசும்
    ஊழி வெங் காற்று இது என்ன, இரு சிறை ஊதை மோத. 2

  213. சாகை வன் தலையொடு மரமும் தாழ, மேல்
    மேகமும் விண்ணின் மீச்செல்ல, மீமிசை
    மாக வெங் கலுழன் ஆம் வருகின்றான் என,
    நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே. 3

  214. யானையும், யாளியும், முதல யாவையும்,
    கான் நெடு மரத்தொடு தூறு கல் இவை
    மேல் நிமிர்ந்து இரு சிறை விசையின் ஏறலால்,
    வானமும் கானமும் மாறு கொள்ளவே. 4

  215. உத்தமன் தேவியை, உலகொடு ஓங்கு தேர்
    வைத்தனை! ஏகுவது எங்கு? வானினோடு
    இத்தனை திசையையும் மறைப்பென், ஈண்டு எனா,
    பத்திரச் சிறைகளை விரிக்கும் பண்பினான்; 5

  216. வந்தனன்-எருவையின் மன்னன்; மாண்பு இலான்
    எந்திரத் தேர் செலவு ஒழிக்கும் எண்ணினான்;
    சிந்துரக் கால், சிரம், செக்கர் சூடிய
    கந்தரக் கயிலையை நிகர்க்கும் காட்சியான். 6

  217. சடாயு சீதையிடம் அஞ்சவேண்டாம் எனக் கூறி, இராவணனுக்கு அறிவுரை கூறுதல்

  218. ஆண்டு உற்ற அவ் அணங்கினை, அஞ்சல் எனா,
    தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான்,
    மூண்டுற்று எழு வெங் கதம் முற்றிலனாய்,
    மீண்டுற்று உரையாடலை மேயினனால்; 7

  219. கெட்டாய் கிளையோடும்; நின் வாழ்வை எலாம்
    சுட்டாய்; இது என்னை தொடங்கினை? நீ
    பட்டாய் எனவே கொடு பத்தினியை
    விட்டு ஏகுதியால், விளிகின்றிலையால். 8

  220. பேதாய்! பிழை செய்தனை; பேர் உலகின்
    மாதா அனையாளை மனக்கொடு, நீ
    யாது ஆக நினைத்தனை? எண்ணம் இலாய்?
    ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ? 9

  221. உய்யாமல் மலைந்து, உமர் ஆர் உயிரை
    மெய்யாக இராமன் விருந்திடவே,
    கை ஆர முகந்து கொடு, அந்தகனார்,
    ஐயா! புதிது உண்டது அறிந்திலையோ? 10

  222. கொடு வெங் கரி கொல்லிய வந்ததன்மேல்
    விடும் உண்டை கடாவ விரும்பினையே?
    அடும் என்பது உணர்ந்திலை ஆயினும், வன்
    கடு உண்டு, உயிரின் நிலை காணுதியால்! 11

  223. எல்லா உலகங்களும், இந்திரனும்,
    அல்லாதவர் மூவரும், அந்தகனும்,
    புல்வாய் புலி கண்டதுபோல்வர் அலால்;
    வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ? 12

  224. இம்மைக்கு, உறவோடும் இறந்தழியும்
    வெம்மைத் தொழில், இங்கு, இதன்மேல் இலையால்;
    அம்மைக்கு, அரு மா நரகம் தருமால்;
    எம்மைக்கு இதம் ஆக இது எண்ணினை, நீ? 13

  225. முத் தேவரின் மூல முதற் பொருள் ஆம்
    அத் தேவர் இம் மானிடர்; ஆதலினால்,
    எத் தேவரோடு எண்ணுவது? எண்ணம் இலாய்!
    பித்தேறினை ஆதல் பிழைத்தனையால். 14

  226. புரம் பற்றிய போர் விடையோன் அருளால்
    வரம் பெற்றவும், மற்று உள விஞ்சைகளும்,
    உரம் பெற்றன ஆவன-உண்மையினோன்
    சரம் பற்றிய சாபம் விடும் தனையே. 15

  227. வான் ஆள்பவன் மைந்தன், வளைத்த விலான்,
    தானே வரின், நின்று தடுப்பு அரிதால்;
    நானே அவண் உய்ப்பென், இந் நன்னுதலை;
    போ, நீ கடிது என்று புகன்றிடலும். 16

  228. இராவணன் சீதையை விட மறுத்தல்

  229. கேட்டான் நிருதர்க்கு இறை, கேழ் கிளர் தன்
    வாள் தாரை நெருப்பு உக, வாய் மடியா,
    ஓட்டாய்; இனி நீ உரை செய்குநரைக்
    காட்டாய் கடிது என்று, கனன்று உரையா. 17

  230. வரும் புண்டரம்! வாளி உன் மார்பு உருவிப்
    பெரும் புண் திறவாவகை பேருதி நீ;
    இரும்பு உண்ட நீர் மீளினும், என்னுழையின்
    கரும்பு உண்ட சொல் மீள்கிலள்; காணுதியால். 18

  231. சடாயு சீதைக்கு அபயம் அளித்தல்

  232. என்னும் அளவில், பயம் முன்னின் இரட்டி எய்த,
    அன்னம் அயர்கின்றது நோக்கி, அரக்கன் ஆக்கை
    சின்னம் உறும் இப்பொழுதே; சிலை ஏந்தி, நங்கள்
    மன்னன் மகன் வந்திலன் என்று, வருந்தல்; அன்னை! 19

  233. முத்து உக்கனபோல் முகத்து ஆலி முலைக்கண் வீழ,
    தத்துற்று, அயரேல்; தலை, தால பலத்தின் ஏலும்
    கொத்து ஒப்பன கொண்டு, இவன் கொண்டன என்ற ஆசை
    பத்திற்கும் இன்றே பலி ஈவது பார்த்தி என்றான். 20

  234. சடாயு நிகழ்த்திய பெரும் போர்

  235. இடிப்பு ஒத்த முழக்கின், இருஞ் சிறை வீசி எற்றி,
    முடிப் பத்திகளைப் படி இட்டு, முழங்கு துண்டம்
    கடிப்பக் கடிது உற்றவன், காண்தகும் நீண்ட வீணைக்
    கொடிப் பற்றி ஒடித்து, உயர் வானவர் ஆசி கொண்டான். 21

  236. அக் காலை, அரக்கன், அரக்கு உருக்கு அன்ன கண்ணன்,
    எக் காலமும், இன்னது ஓர் ஈடு அழிவுற்றிலாதான்
    நக்கான், உலகு ஏழும் நடுங்கிட, நாகம் அன்ன
    கைக் கார் முகத்தோடு கடைப் புருவம் குனித்தான். 22

  237. சண்டப் பிறை வாள் எயிற்றான் சர தாரை மாரி
    மண்ட, சிறகால் அடித்தான் சில; வள் உகீரால்
    கண்டப்படுத்தான் சில; காலனும் காண உட்கும்
    துண்டப் படையால், சிலை துண்ட துண்டங்கள் கண்டான். 23

  238. மீட்டும் அணுகா,-நெடு வெங் கண் அனந்த நாகம்
    வாட்டும் கலுழன் என, வன் தலை பத்தின் மீதும்
    நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் - சேம வில் கால்
    கோட்டும் அளவில், மணிக் குண்டலம் கொண்டு எழுந்தான். 24

  239. எழுந்தான் தட மார்பினில், ஏழினொடு ஏழு வாளி
    அழுந்தாது கழன்றிடப் பெய்து, எடுத்து ஆர்த்து, அரக்கன்
    பொழிந்தான், புகர் வாளிகள் மீளவும்; போர்ச் சடாயு
    விழுந்தான் என, அஞ்சினர், விண்ணவர் வெய்து உயிர்த்தார். 25

  240. புண்ணின் புது நீர் பொழியப் பொலி புள்ளின் வேந்தன்,
    மண்ணில், கரனே முதலோர் உதிரத்தின் வாரிக்-
    கண்ணில் கடல் என்று கவர்ந்தது கான்று, மீள
    விண்ணில் பொலிகின்றது ஓர் வெண் நிற மேகம் ஒத்தான். 26

  241. ஒத்தான் உடனே உயிர்த்தான்; உருத்தான்; அவன் தோள்
    பத்தோடு பத்தின் நெடும் பத்தியில் தத்தி, மூக்கால்
    கொத்தா, நகத்தால் குடையா, சிறையால் புடையா,
    முத்து ஆர மார்பில் கவசத்தையும் மூட்டு அறுத்தான். 27

  242. அறுத்தானை, அரக்கனும், ஐம்பதொடு ஐம்பது அம்பு
    செறித்தான் தட மார்பில்; செறித்தலும், தேவர் அஞ்சி
    வெறித்தார்; வெறியாமுன், இராவணன் வில்லைப் பல்லால்
    பறித்தான் பறவைக்கு இறை, விண்ணவர் பண்ணை ஆர்ப்ப. 28

  243. எல் இட்ட வெள்ளிக் கயிலைப் பொருப்பு, ஈசனோடும்,
    மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி,
    வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் எனப் பொலிந்தான் -
    சொல் இட்டு அவன் தோள் வலி, யார் உளர் சொல்ல வல்லார்? 29

  244. மீளா நிறத்து ஆயிரங் கண்ணவன் விண்ணின் ஓட,
    வாளால் ஒறுத்தான் சிலை வாயிடை நின்றும் வாங்கி,
    தாளால் இறுத்தான் - தழல் வண்ணன் தடக் கை வில்லைத்
    தோளால் இறுத்தான் துணைத் தாதைதன் அன்பின் தோழன். 30

  245. ஞாலம் படுப்பான், தனது ஆற்றலுக்கு ஏற்ற நல் வில்
    மூலம் ஒடிப்புண்டது கண்டு, முனிந்த நெஞ்சன்,
    ஆலம் மிடற்றான் புரம் அட்டது ஓர் அம்பு போலும்
    சூலம் எடுத்து ஆர்த்து எறிந்தான், மறம் தோற்றிலாதான். 31

  246. ஆற்றான் இவன் என்று உணராது, எனது ஆற்றல் காண் என்று
    ஏற்றான் எருவைக்கு இறை, முத்தலை எஃகம், மார்பில்;
    மேல் தான் இது செய்பவர் யார்? என, விண்ணுளோர்கள்
    தோற்றாது நின்றார், தம் தோள்புடை கொட்டி ஆர்த்தார். 32

  247. பொன் நோக்கியர்தம் புலன் நோக்கிய புன்கணோரும்
    இன் நோக்கியர் இல் வழி எய்திய நல் விருந்தும்,
    தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர் தம்மைச் சார்ந்த
    மென் நோக்கியர் நோக்கமும், ஆம் என மீண்டது அவ் வேல். 33

  248. வேகமுடன், வேல இழந்தான் படை வேறு எடாமுன்,
    மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர்ப்
    பாகம் தலையைப் பறித்து, படர் கற்பினாள்பால்
    மோகம் படைத்தான் உளைவு எய்த, முகத்து எறிந்தான். 34

  249. எறிந்தான் தனை நோக்கி, இராவணன், நெஞ்சின் ஆற்றல்
    அறிந்தான்; முனிந்து, ஆண்டது ஓர் ஆடகத் தண்டு வாங்கி,
    பொறிந்தாங்கு எரியின் சிகை பொங்கி எழ, புடைத்தான்;
    மறிந்தான் எருவைக்கு இறை, மால் வரை போல மண்மேல். 35

  250. மண்மேல் விழுந்தான் விழலோடும், வயங்கு மான் தேர்
    கண்மேல் ஒளியும் தொடராவகை, தான் கடாவி,
    விண்மேல் எழுந்தான்; எழ மெல்லியலாளும், வெந் தீ
    புண்மேல் நுழையத் துடிக்கின்றனள்போல், புரண்டாள். 36

  251. கொழுந்தே அனையாள் குழைந்து ஏங்கிய கொள்கை கண்டான்;
    அழுந்தேல் அவலத்திடை; அஞ்சலை அன்னம்! என்னா,
    எழுந்தான்; உயிர்த்தான்; அட! எங்கு இனிப் போவது? என்னா,
    விழுந்தான் அவன் தேர் மிசை, விண்ணவர் பண்ணை ஆர்ப்ப. 37

  252. பாய்ந்தான்; அவன் பல் மணித் தண்டு பறித்து எறிந்தான்;
    எய்ந்து ஆர் கதித் தேர்ப் பரி எட்டினொடு எட்டும் எஞ்சித்
    தீய்ந்து ஆசு அற வீசி, அத் திண் திறல் துண்ட வாளால்
    காய்ந்தான்; கவர்ந்தான் உயிர்; காலனும் கைவிதிர்த்தான். 38

  253. திண் தேர் அழித்து, ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி
    விண்தான் மறைப்பச் செறிகின்றன, வில் இலாமை,
    மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின், வச்சைமாக்கள்
    பண்டாரம் ஒக்கின்றன, வள் உகிரால் பறித்தான். 39

  254. மாச் சிச்சிரல் பாய்ந்தென, மார்பினும் தோள்கள்மேலும்
    ஓச்சி, சிறகால் புடைத்தான்; உலையா விழுந்து
    மூச்சித்த இராவணனும் முடி சாய்ந்து இருந்தான்;
    போச்சு; இத்தனை போலும் நின் ஆற்றல்? எனப் புகன்றான். 40

  255. அவ் வேலையினே முனிந்தான்; முனிந்து ஆற்றலன்; அவ்
    வெவ் வேல் அரக்கன் விடல் ஆம் படை வேறு காணான்;
    இவ் வேலையினே, இவன் இன் உயிர் உண்பென் என்னா,
    செவ்வே, பிழையா நெடு வாள் உறை தீர்த்து, எறிந்தான். 41

  256. இராவணன் தெய்வ வாள் எறிய சடாயு வீழ்தல்

  257. வலியின் தலை தோற்றிலன்; மாற்ற அருந் தெய்வ வாளால்
    நலியும் தலை என்றது அன்றியும், வாழ்க்கை நாளும்
    மெலியும் கடை சென்றுளது; ஆகலின், விண்ணின் வேந்தன்
    குலிசம் எறியச் சிறை அற்றது ஓர் குன்றின், வீழ்ந்தான். 42

  258. சீதை துயர்க்கடலில் ஆழ்தல்

  259. விரிந்து ஆர் சிறை கீழ் உற வீழ்ந்தனன், மண்ணின்; விண்ணோர்
    இரிந்தார்; இழந்தாள் துணை என்ன, முனிக் கணங்கள்
    பரிந்தார்; படர் விண்டுவின் நாட்டவர் பைம் பொன் மாரி
    சொரிந்தார்; அது நோக்கிய சீதை துளக்கம் உற்றாள். 43

  260. வெள்கும் அரக்கன் நெடு விண் புக ஆர்த்து, மிக்கான்;
    தொள்கின் தலை எய்திய மான் எனச் சோர்ந்து நைவாள்,
    உள்கும்; உயிர்க்கும்; உயங்கும்; ஒரு சார்வு காணாள்,
    கொள் கொம்பு ஒடிய, கொடி வீழ்ந்தது போல் குலைந்தாள். 44

  261. வன் துணை, உளன் என வந்த மன்னனும்
    பொன்றினன், எனக்கு இனிப் புகல் என்? என்கின்றாள்;
    இன் துணை பிரிந்து, இரிந்து, இன்னல் எய்திய
    அன்றில் அம் பெடை என அரற்றினாள் அரோ. 45

  262. அல்லல் உற்றேனை, வந்து, அஞ்சல் என்ற, இந்
    நல்லவன் தோற்பதே? நரகன் வெல்வதே?
    வெல்வதும் பாவமோ? வேதம் பொய்க்குமோ?
    இல்லையோ அறம்? என, இரங்கி ஏங்கினாள். 46

  263. நாண் இலேன் உரைகொடு நடந்த நம்பிமீர்!
    நீள் நிலை அறநெறி நின்றுளோர்க்கு எலாம்
    ஆணியை, உந்தையர்க்கு அமைந்த அன்பனை,
    காணிய வம் என, கலங்கி விம்மினாள். 47

  264. கற்பு அழியாமை என் கடமை; ஆயினும்
    பொற்பு அழியா வலம் பொருந்தும் போர்வலான்
    வில் பழியுண்டது, வினையினேன் வந்த
    இல் பழியுண்டது என்று, இரங்கி ஏங்கினாள். 48

  265. எல் இயல் விசும்பிடை இருந்த நேமியாய்!
    சொல்லிய அற நெறி தொடர்ந்த தோழமை
    நல் இயல் அருங் கடன் கழித்த நம்பியைப்
    புல்லுதியோ? என, பொருமிப் பொங்கினாள். 49

  266. வான் வழி அரக்கன் ஏகல்

  267. ஏங்குவாள் தனிமையும், இறகு இழந்தவன்
    ஆங்குறு நிலைமையும், அரக்கன் நோக்கினான்;
    வாங்கினன், தேரிடை வைத்த மண்ணொடும்,
    வீங்கு தோள்மீக் கொடு, விண்ணின் ஏகினான். 50

  268. விண்ணிடை வெய்யவன் ஏகும் வேகத்தால்,
    கண்ணொடு மனம் அவை சுழன்ற கற்பினாள்,
    உள் நிறை உணர்வு அழிந்து ஒன்றும் ஓர்ந்திலள்;
    மண்ணிடை, தன்னையும் மறந்து, சாம்பினாள். 51

  269. இனி என்ன ஆகுமோ என எண்ணி சடாயு இரங்கல்

  270. ஏகினன் அரக்கனும், எருவை வேந்தனும்
    மோக வெந் துயர் சிறிது ஆறி, முன்னியே
    மாகமே நோக்கினென்; வஞ்சன் வல்லையில்
    போகுதல் கண்டு, அகம் புலர்ந்து சொல்லுவான்; 52

  271. வந்திலர் மைந்தர்தாம்; மருகிக்கு எய்திய
    வெந் துயர் துடைத்தனென் என்னும் மெய்ப் புகழ்
    தந்திலர், விதியினார்; தரும வேலியைச்
    சிந்தினர்; மேல் இனிச் செயல் என் ஆம்கொலோ? 53

  272. வெற்றியர் உளர் எனின், மின்னின் நுண் இடைப்
    பொன்-தொடிக்கு இந் நிலை புகுதற்பாலதோ?
    உற்றதை இன்னது என்று உணரகிற்றிலேன்;
    சிற்றவை வஞ்சனை, முடியச் செய்ததோ? 54

  273. பஞ்சு அணை பாம்பணை ஆகப் பள்ளி சேர்
    அஞ்சனவண்ணனே இராமன்; ஆதலால்,
    வெஞ் சின அரக்கனால் வெல்லற்பாலனோ?
    வஞ்சனை இழைத்தனன், கள்ள மாயையால். 55

  274. வேர் அற அரக்கரை வென்று, வெம் பழி
    தீரும், என் சிறுவனும், தீண்ட அஞ்சுமால்
    ஆரியன் தேவியை அரக்கன், நல் மலர்ப்
    பேர் உலகு அளித்தவன் பிழைப்பு இல் சாபத்தால். 56

  275. பருஞ் சிறை இன்னன பன்னி உன்னுவான்,
    அருஞ் சிறை உற்றனள் ஆம் எனா, மனம்;
    பொரும் சிறை அற்றதேல், பூவை கற்பு எனும்
    இருஞ் சிறை அறாது என, இடரின் நீங்கினான். 57

  276. அம் சிறை குருதி ஆறு அழிந்து சோரவும்,
    வஞ்சியை மீட்டிலென் என்னும் மானமும்,
    செஞ்செவே மக்கள்பால் சென்ற காதலும்,
    நெஞ்சுற, துயின்றனன் உணர்வு நீங்கலான். 58

  277. சீதை சிறையுறல்

  278. வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டுபோய்,
    செஞ்செவே திரு உருத் தீண்ட அஞ்சுவான்,
    நஞ்சு இயல் அரக்கியர் நடுவண், ஆயிடை,
    சிஞ்சுப வனத்திடைச் சிறைவைத்தான் அரோ. 59

  279. எதிர்பாராத வகையில் இராம இலக்குவர் சந்தித்தல்

  280. இந் நிலை இளையவன் செயல் இயம்பினாம்;
    பொன் நிலை மானின் பின் தொடர்ந்து போகிய
    மன் நிலை அறிக என, மங்கை ஏவிய
    பின் இளையவன் நிலை பேசுவாம் அரோ. 60

  281. ஒரு மகள் தனிமையை உன்னி, உள் உறும்
    பருவரல் மீதிடப் பதைக்கும் நெஞ்சினான்,
    பெருமகன் தனைத் தனிப் பிரிந்து பேதுறும்
    திரு நகர்ச் செல்லும் அப் பரதன் செய்கையான். 61

  282. தெண் திரைக் கலம் என விரைவில் செல்கின்றான்;
    புண்டரீகத் தடங்காடு பூத்து, ஒரு
    கொண்டல் வந்து இழிந்தன கோலத்தான் தனைக்
    கண்டனன்; மனம் எனக் களிக்கும் கண்ணினான். 62

  283. துண்ணெனும் அவ் உரை தொடர, தோகையும்
    பெண் எனும் பேதைமை மயக்க, பேதினால்
    உள் நிறை சோரும் என்று, ஊசலாடும் அக்
    கண்ணனும் இளவலைக் கண்ணுற்றான் அரோ. 63

  284. புன் சொற்கள் தந்த பகுவாய் அரக்கன் உரை பொய் எனாது, புலர்வாள்
    வன் சொற்கள் தந்து மட மங்கை ஏவ, நிலை தேர வந்த மருளோ?
    தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு, தனியே,
    என் சொல் கடந்து, மனமும் தளர்ந்த இள வீரன் வந்த இயல்பே. 64

  285. என்று உன்னி, என்னை விதியார் முடிப்பது? என எண்ணி நின்ற இறையை,
    பொன் துன்னும் வில் கை இள வீரன் வந்து புனை தாள் இறைஞ்சு பொழுதில்
    மின் துன்னு நூலின் மணி மார்பு அழுந்த, விரைவோடு புல்லி, உருகா-
    நின்று, உன்னி வந்த நிலை என்கொல்? என்று, நெடியோன் விளம்ப, நொடிவான். 65

  286. இல்லா, நிலத்தின் இயையாத, வெஞ் சொல் எழ, வஞ்சி எவ்வமுற, யான்
    வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன, மதியாள், மறுக்கம் உறுவாள்
    நில்லாது மற்று இது அறி, போதி என்ன, நெடியோய் புயத்தின் வலி என்
    சொல்லால் மனத்தின் அடையாள், சினத்தின் முனிவோடு நின்று துவள்வாள். 66

  287. ஏகாது நிற்றிஎனின், யான் நெருப்பின் இடை வீழ்வென் என்று, முடுகா,
    மா கானகத்தினிடை ஓடலோடும், மனம் அஞ்சி, வஞ்ச வினையேன்
    போகாது இருக்கின், இறவாதிருக்கை புணராள் எனக்கொடு உணரா,
    ஆகாது இறக்கை; அறன் அன்று; எனக்கொடு, இவண் வந்தது என்ன, அமலன். 67

  288. சாவாதிருத்தல் இலள் ஆனது உற்றது; அதையோ, தடுக்க முடியாது;
    ஆஆ! அலக்கண் உறுவாள், உரைத்த பொருளோ, அகத்தின் அடையாள்;
    காவா நிலத்தின் வரும் ஏதம்; மற்று அது ஒழியாது; கைக்கொடு அகலப்
    போவார், பிரிக்க முயல்வார், புணர்ந்த பொருள் ஆம் இது என்று தெருளா. 68

  289. வந்தாய் திறத்தில் உளதன்று, குற்றம்; மடவாள் மறுக்கம் உறுவாள்,
    சிந்தாகுலத்தொடு உரைசெய்த செய்கை அது தீரும் என்று தெளிவாய்;
    முந்தே தடுக்க, ஒழியாது, எடுத்த வினையேன் முடித்த முடிவால்,
    அந்தோ கெடுத்தது என, உன்னி உன்னி அழியாத உள்ளம் அழிவான். 69

  290. பாணிக்க நின்று பயன் ஆவது என்னை? பயில் பூவை அன்ன குயிலைக்
    காணின், கலந்த துயர் தீரும்; அன்றி அயல் இல்லை என்று, கடுகி,
    சேண் உற்று அகன்ற நெறியூடு சென்று, சிலை வாளி அன்ன விசை போய்,
    ஆணிப் பசும் பொன் அனையாள் இருந்த அவிர் சோலை வல்லை அணுகா. 70

  291. இராமனின் திகைப்பு

  292. ஓடி வந்தனன்; சாலையில், சோலையின் உதவும்
    தோடு இவர்ந்த பூஞ் சுரி குழலாள்தனைக் காணான்;
    கூடு தன்னுடையது பிரிந்து, ஆர் உயிர், குறியா,
    தேடி வந்து, அது கண்டிலது ஆம் என, நின்றான். 71

  293. கைத்த சிந்தையன், கனங் குழை அணங்கினைக் காணான்-
    உய்த்து வாழ்தர வேறு ஒரு பொருள் இலான்; உதவ
    வைத்த மா நிதி, மண்ணொடும் மறைந்தன, வாங்கிப்
    பொய்த்துளோர் கொள, திகைத்து, நின்றானையும் போன்றான். 72

  294. மண் சுழன்றது; மால் வரை சுழன்றது; மதியோர்
    எண் சுழன்றது; சுழன்ற அவ் எறி கடல் ஏழும்;
    விண் சுழன்றது; வேதமும் சுழன்றது; விரிஞ்சன்
    கண் சுழன்றது; சுழன்றது, கதிரொடு மதியும். 73

  295. அறத்தைச் சீறும்கொல்? அருளையே சீறும்கொல்? அமரர்
    திறத்தைச் சீறும்கொல்? முனிவரைச் சீறும்கொல்? தீயோர்
    மறத்தைச் சீறும்கொல்? என்கொலோ முடிவு? என்று, மறையின்
    நிறத்தைச் சீறும்கொல் நெடுந்தகையோன்? என, நடுங்கா. 74

  296. நீல மேனி அந் நெடியவன் மன நிலை திரிய,
    மூல காரணத்தவனொடும் உலகெலாம் முற்றும்
    காலம் ஆம் என, கடையிடு கணிக்க அரும் பொருள்கள்
    மேல கீழுற, கீழன மேலுறும் வேலை. 75

  297. தேர்ச் சுவடு கண்டு, அதனைத் தொடர்ந்து செல்லுதல்

  298. தேரின் ஆழியும் தெரிந்தனம்; தீண்டுதல் அஞ்சிப்
    பாரினோடு கொண்டு அகழ்ந்ததும் பார்த்தனம், பயன் இன்று
    ஓரும் தன்மை ஈது என் என்பது, உரன் இலாதவர்போல்;
    தூரம் போதல்முன் தொடர்தும் என்று, இளையவன் தொழலும். 76

  299. ஆம்; அதே இனி அமைவது என்று, அமலனும், மெய்யில்
    தாம வார் கணைப் புட்டிலும் முதலிய தாங்கி,
    வாம மால் வரை மரன் இவை மடிதர, வயவர்
    பூமிமேல் அவன் தேர் சென்ற நெடு நெறி போனார். 77

  300. மண்ணின்மேல் அவன் தேர் சென்ற சுவடு எலாம் மாய்ந்து,
    விண்ணின் ஓங்கியது ஒரு நிலை; மெய் உற வெந்த
    புண்ணினூடு உறு வேல் என, மனம் மிகப் புழுங்கி
    எண்ணி, நாம் இனிச் செய்வது என்? இளவலே! என்றான். 78

  301. தெற்கு நோக்கியது எனும் பொருள் தெரிந்தது, அத் திண் தேர்;
    மற்கு நோக்கிய திரள் புயத்து அண்ணலே! வானம்,
    விற்கு நோக்கிய பகழியின் நெடிது அன்று; விம்மி,
    நிற்கும் நோக்கு இது என் பயத்தது? என, இளையவன் நேர்ந்தான். 79

  302. துண்டு பட்ட வீணைக்கொடி கண்டு, சடாயு போர் செய்ததை அறிதல்

  303. ஆகும்; அன்னதே கருமம் என்று, அத் திசை நோக்கி,
    ஏகி, யோசனை இரண்டு சென்றார்; இடை எதிர்ந்தார்,
    மாக மால் வரை கால் பொர மறிந்தது மான,
    பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார்மேல். 80

  304. கண்டு, கண்டகரோடும், அக் காரிகை பொருட்டால்
    அண்டர் ஆதியர்க்கு ஆர் அமர் விளைந்தது? என்று அயிர்த்தார்;
    துண்ட வாளினின் சுடர்க் கொடி துணிந்தது என்று உணரா,
    புண்டரீகக் கண் புனல் வர, புரவலன் புகல்வான். 81

  305. நோக்கினால், ஐய! நொய்து இவண் எய்திய நுந்தை
    மூக்கினால் இது முறிந்தமை முடிந்ததால்; மொய்ம்பின்
    தாக்கினான்; நடு அடுத்தது தெரிகிலம்; தமியன்;
    யாக்கை தேம்பிடும்; எண் அரும் பருவங்கள் இறந்தான். 82

  306. நன்று சாலவும்; நடுங்க அரும் மிடுக்கினன்; நாமும்,
    சென்று கூடல் ஆம்; பொழுது எலாம் தடுப்பது திடனால்;
    வென்று மீட்கினும் மீட்குமால்; வேறுற எண்ணி,
    நின்று தாழ்த்து ஒரு பயன் இலை என்றலும், நெடியோன். 83

  307. படைக்கலன்கள் சிதைந்து கிடத்தல்

  308. தொடர்வதே நலம் ஆம் என, படிமிசைச் சுற்றிப்
    படரும் கால் என, கறங்கு என, செல்லுவார் பார்த்தார்;
    மிடல் கொள் வெஞ் சிலை, விண் இடு வில் முறிந்தென்ன,
    கடலின்மாடு உயர் திரை என, கிடந்தது கண்டார். 84

  309. சிலை கிடந்ததால், இலக்குவ! தேவர் நீர் படைத்த
    மலை கிடந்தென வலியது; வடிவினால் மதியின்
    கலை கிடந்தன்ன காட்சியது; இது கடித்து ஒடித்தான்;
    நிலை கிடந்தவா நோக்கு என, நோக்கினன் நின்றான். 85

  310. நின்று, பின்னரும் நெடு நெறி கடந்து, உற நிமிரச்
    சென்று நோக்கினர்; திரி சிகைக் கொடு நெடுஞ் சூலம்
    ஒன்று, பல் கணை மழை உறு புட்டிலோடு இரண்டு
    குன்று போல்வன கிடந்த கண்டு அதிசயம் கொண்டார். 86

  311. மறித்தும் சென்றனர்; வானிடை வயங்குற வழங்கி
    எறிக்கும் சோதிகள் யாவையும் தொக்கன எனலாம்,
    நெறிக் கொள் கானகம் மறைதர, நிருதர்கோன் நெஞ்சின்,
    பறித்து வீசிய, கவசமும் கிடந்தது பார்த்தார். 87

  312. கான் கிடந்தது மறைதர, கால் வயக் கலிமாத்
    தான் கிடந்துழிச் சாரதி கிடந்துழிச் சார்ந்தார்;
    ஊன் கிடந்து ஒளிர் உதிரமும் கிடந்துளது; உலகின்
    வான் கிடந்தது போல்வது கிடந்துழி வந்தார். 88

  313. கண்டு, அலங்கு தம் கைத்தலம் விதிர்த்தனர்-கவின் ஆர்
    விண் தலம் துறந்து, இறுதியின் விரி கதிர் வெய்யோன்
    மண்டலம் பல மண்ணிடைக் கிடந்தென, மணியின்
    குண்டலம் பல, குலமணிப் பூண்களின் குவியல். 89

  314. ஒருவனொடு பொருதவர் மிகப் பலர் போலும் என இராமன் கூறல்

  315. தோள் அணிக் குலம் பல உள; குண்டலத் தொகுதி
    வாள் இமைப்பன பல உள; மணி முடி பலவால்;
    நாள் அனைத்தையும் கடந்தனன், தமியன், நம் தாதை;
    யாளி போல்பவர் பலர் உளர் பொருதனர்; இளையோய்! 90

  316. பொருதவன் இராவணன் ஒருவனே என இலக்குவன் கூறல்

  317. திருவின் நாயகன் உரைசெய, சுமித்திரை சிங்கம்,
    தருவின் நீளிய தோள் பல, தலை பல, என்றால்
    பொருது தாதையை இத்தனை நெறிக் கொடு போனான்
    ஒருவனே, அவன் இராவணன் ஆம் என உரைத்தான். 91

  318. சடாயுவைக் கண்டு, இராமன் புலம்புதல்

  319. மிடல் உள் நாட்டிய தார் இளையோன் சொலை மதியா,
    மிடலுண் நாட்டங்கள் தீ உக நோக்கினன் விரைவான்,
    உடலுள் நாட்டிய குருதிஅம் பரவையின் உம்பர்,
    கடலுள் நாட்டிய மலை அன்ன தாதையைக் கண்டான். 92

  320. துள்ளி, ஓங்கு செந் தாமரை நயனங்கள் சொரிய,
    தள்ளி ஓங்கிய அமலன், தன் தனி உயிர்த் தந்தை
    வள்ளியோன் திரு மேனியில், தழல் நிற வண்ணன்
    வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலை என, வீழ்ந்தான். 93

  321. உயிர்த்திலன் ஒரு நாழிகை; உணர்விலன்கொல் என்று
    அயிர்த்த தம்பி புக்கு, அம் கையின் எடுத்தனன், அருவிப்
    புயல் கலந்த நீர் தெளித்தலும், புண்டரீகக் கண்
    பெயர்த்து, பைப்பைய அயர்வு தீர்ந்து, இனையன பேசும்: 94

  322. தம் தாதையரைத் தனையர் கொலை நேர்ந்தார்
    முந்து ஆரே உள்ளார்? முடிந்தான் முனை ஒருவன்;
    எந்தாயே! எற்காக நீயும் இறந்தனையால்;
    அந்தோ! வினையேன் அருங் கூற்றம் ஆனேனே! 95

  323. பின் உறுவது ஓராதே பேதுறுவேன் பெண்பாலாள்-
    தன் உறுவல் தீர்ப்பான், தனி உறுவது ஓராதே,
    உன் உறவு, நீ தீர்த்தாய்; ஓர் உறவும் இல்லாதேன்
    என் உறுவான் வேண்டி இடர் உறுவேன்? எந்தாயே! 96

  324. மாண்டேனே அன்றோ? மறையோர் குறை முடிப்பான்
    பூண்டேன் விரதம்; அதனால் உயிர் பொறுப்பேன்;
    நீண்டேன் மரம் போல, நின்று ஒழிந்த புன் தொழிலேன்;
    வேண்டேன், இம் மா மாயப் புன் பிறவி வேண்டேனே! 97

  325. என் தாரம் பற்றுண்ண ஏன்றாயை, சான்றோயை,
    கொன்றானும் நின்றான்; கொலையுண்டு நீ கிடந்தாய்;
    வன் தாள் சிலை ஏந்தி, வாளிக் கடல் சுமந்து
    நின்றேனும் நின்றேன்; நெடு மரம் போல் நின்றேனே! 98

  326. சொல் உடையார் என் போல் இனி உளரோ? தொல் வினையேன்
    இல் உடையாள் காண, இறகு உடையாய்! எண் இலாப்
    பல் உடையாய்! உன்னைப் படை உடையான் கொன்று அகல,
    வில் உடையேன் நின்றேன்; விறல் உடையேன் அல்லேனோ? 99

  327. சடாயு மூர்ச்சை தெளிந்து இராம இலக்குவரை உச்சி மோந்து நடந்தவை உரைத்தல்

  328. அன்னா! பல பலவும் பன்னி அழும்; மயங்கும்;
    தன் நேர் இலாதானும் தம்பியும் அத் தன்மையனாய்;
    உன்னா, உணர்வு சிறிது உள் முளைப்ப, புள்ளரசும்,
    இன்னா உயிர்ப்பான், இருவரையும் நோக்கினான். 100

  329. உற்றது உணராது, உயிர் உலைய வெய்துயிர்ப்பான்
    கொற்றவரைக் கண்டான்; தன் உள்ளம் குளிர்ப்புற்றான்;
    இற்ற இரு சிறகும், இன்னுயிரும், ஏழ் உலகும்
    பெற்றனனே ஒத்தான்; பெயர்த்தேன் பழி என்றான். 101

  330. பாக்கியத்தால், இன்று, என் பயன் இல் பழி யாக்கை
    போக்குகின்றேன்; கண்ணுற்றேன், புண்ணியரே! வம்மின் என்று
    தாக்கி அரக்கன் மகுடத் தலை நிகர்த்த
    மூக்கினால் உச்சி முறைமுறையே மோக்கின்றான். 102

  331. வஞ்சனையால் வந்த வரவு என்பது என்னுடைய
    நெஞ்சகமே முன்னே நினைவித்தது; ஆனாலும்,
    அம் சொல் மயிலை, அருந்ததியை, நீங்கினிரோ,
    எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும்? என்று உரைத்தான். 103

  332. என்று அவன் இயம்பலும், இளைய கோமகன்,
    ஒன்றும் ஆண்டு உறு பொருள் ஒழிவுறாவகை,
    வன் திறல் மாய மான் வந்தது ஆதியா
    நின்றதும், நிகழ்ந்ததும், நிரப்பினான் அரோ. 104

  333. இராம இலக்குவருக்கு சடாயு ஆறுதல் கூறுதல்

  334. ஆற்றலோன் அவ் உரை அறைய, ஆணையால்
    ஏற்று, உணர்ந்து, எண்ணி, அவ் எருவை வேந்தனும்,
    மாற்ற அருந் துயர் இவர் மனக் கொளாவகை
    தேற்றுதல் நன்று என, இனைய செப்புவான்: 105

  335. அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ?
    துதி அறு பிறவியின் இன்ப துன்பம்தான்
    விதி வயம் என்பதை மேற்கொளாவிடின்,
    மதி வலியால் விதி வெல்ல வல்லமோ? 106

  336. தெரிவுறு துன்பம் வந்து ஊன்ற, சிந்தையை
    எரிவுசெய்து ஒழியும் ஈது இழுதை நீரதால்;
    பிரிவுசெய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை
    அரிவு செய் விதியினார்க்கு அரிது உண்டாகுமோ? 107

  337. அலக்கணும் இன்பமும் அணுகும் நாள், அவை
    விலக்குவம் என்பது மெய்யிற்று ஆகுமோ?
    இலக்கு முப்புரங்களை எய்த வில்லியார்,
    தலைக் கலந்து, இரந்தது தவத்தின் பாலதோ? 108

  338. பொங்கு வெங் கோள் அரா, விசும்பு பூத்தன
    வெங் கதிர்ச் செல்வனை விழுங்கி நீங்குமால்;
    அம் கண் மா ஞாலத்தை விளக்கும் ஆய் கதிர்த்
    திங்களும், ஒரு முறை வளரும் தேயுமால். 109

  339. அந்தரம் வருதலும், அனைய தீர்தலும்,
    சுந்தரத் தோளினிர்! தொன்மை நீரவால்;
    மந்திர இமையவர் குருவின் வாய்மொழி
    இந்திரன் உற்றன எண்ண ஒண்ணுமோ? 110

  340. தடைக்க அரும் பெரு வலிச் சம்பரப் பெயர்க்
    கடைத் தொழில் அவுணனால், குலிசக்கையினான்
    படைத்தனன் பழி, அது, பகழி வில் வலாய்!
    துடைத்தனன் நுந்தை, தன் குவவுத் தோளினால். 111

  341. பிள்ளைச் சொல் கிளி அனாளைப் பிரிவுறல் உற்ற பெற்றி,
    தள்ளுற்ற அறமும் தேவர் துயரமும், தந்ததேயால்;
    கள்ளப் போர் அரக்கர் என்னும் களையினைக் களைந்து வாழ்தி;
    புள்ளிற்கும், புலன் இல் பேய்க்கும், தாய் அன்ன புலவு வேலோய்! 112

  342. வடுக் கண், வார் கூந்தலாளை, இராவணன் மண்ணினோடும்
    எடுத்தனன் ஏகுவானை, எதிர்ந்து எனது ஆற்றல்கொண்டு
    தடுத்தனேன், ஆவது எல்லாம்; தவத்து, அரன் தந்த வாளால்,
    படுத்தனன், இங்கு வீழ்ந்தேன்; இது இன்று பட்டது என்றான். 113

  343. இராமன் சீற்றமுடன் எழுதல்

  344. கூறின மாற்றம் சென்று செவித்தலம் குறுகாமுன்னம்,
    ஊறின உதிரம், செங் கண்; உயிர்த்தன, உயிர்ப்புச் செந் தீ;
    ஏறின புருவம் மேல் மேல்; இரிந்தன சுடர்கள் எங்கும்;
    கீறினது அண்டகோளம்; கிழிந்தன கிரிகள் எல்லாம். 114

  345. மண்ணகம் திரிய, நின்ற மால் வரை திரிய, மற்றைக்
    கண் அகன் புனலும் காலும் கதிரொடும் திரிய, காவல்
    விண்ணகம் திரிய, மேலை விரிஞ்சனும் திரிய, வீரன்,
    எண் அரும் பொருள்கள் எல்லாம் என்பது தெரிந்தது அன்றே? 115

  346. குறித்த வெங் கோபம் யார்மேல் கோளுறும்கொல்? என்று அஞ்சி,
    வெறித்து நின்று, உலகம் எல்லாம் விம்முறுகின்ற வேலை,
    பொறிப் பிதிர் படலை, செந் தீப் புகையொடும் பொடிப்ப, பொம் என்று
    எறிப்பது ஓர் முறுவல் தோன்ற இராமனும் இயம்பலுற்றான்: 116

  347. பெண் தனி ஒருத்திதன்னை, பேதை வாள் அரக்கன் பற்றிக்
    கொண்டனன் ஏக, நீ இக் கோளுற, குலுங்கல் செல்லா
    எண் திசை இறுதி ஆன உலகங்கள் இவற்றை, இன்னே,
    கண்ட வானவர்களோடும் களையுமாறு, இன்று காண்டி. 117

  348. தாரகை உதிருமாறும், தனிக் கதிர் பிதிருமாறும்,
    பேர் அகல் வானம் எங்கும் பிறங்கு எரி பிறக்குமாறும்,
    நீரொடு நிலனும் காலும், நின்றவும், திரிந்த யாவும்,
    வேரொடு மடியுமாறும், விண்ணவர் விளியுமாறும். 118

  349. இக் கணம் ஒன்றில், நின்ற ஏழினோடு ஏழு சான்ற
    மிக்கன போன்று தோன்றும், உலகங்கள் வீயுமாறும்
    திக்குடை அண்ட கோளப் புறத்தவும் தீந்து, நீரின்
    மொக்குளின் உடையுமாறும், காண் என, முனியும் வேலை, 119

  350. வெஞ் சுடர்க் கடவுள் மீண்டு, மேருவில் மறையலுற்றான்;
    எஞ்சல் இல் திசையில் நின்ற யானையும் இரியல்போன;
    துஞ்சின உலகம் எல்லாம் என்பது என்? துணிந்த நெஞ்சின்,
    அஞ்சினன், இளைய கோவும்; அயல் உளோர்க்கு அவதி உண்டோ ? 120

  351. சடாயு சீற்றம் தணித்தல்

  352. இவ் வழி நிகழும் வேலை, எருவைகட்கு இறைவன், யாதும்,
    செவ்வியோய்! முனியல்; வாழி! தேவரும் முனிவர்தாமும்,
    வெவ் வலி வீர! நின்னால் வெல்லும் என்று ஏமுற்று உய்வார்
    எவ் வலி கொண்டு வெல்வார், இராவணன் செயலை? என்றான். 121

  353. நாள்செய்த கமலத்து அண்ணல் நல்கிய நவை இல் ஆற்றல்
    தோள் செய்த வீரம் என்னில் கண்டனை; சொல்லும் உண்டோ?
    தாள் செய்ய கமலத்தானே முதலினர், தலை பத்து உள்ளாற்கு
    ஆட் செய்கின்றார்கள்; அன்றி, அறம் செய்கின்றார்கள் யாரே? 122

  354. தெண் திரை உலகம் தன்னில், செறுநர்மாட்டு ஏவல் செய்து
    பெண்டிரின் வாழ்வர் அன்றே? இது அன்றோ தேவர் பெற்றி!
    பண்டு உலகு அளந்தோன் நல்க, பாற்கடல் அமுதம் அந் நாள்
    உண்டிலர் ஆகில், இந் நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ? 123

  355. வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைக,
    கொம்பு இழை மானின் பின் போய், குலப் பழி கூட்டிக் கொண்டீர்;
    அம்பு இழை வரி வில் செங் கை ஐயன்மீர்! ஆயும் காலை,
    உம் பிழை என்பது அல்லால், உலகம் செய் பிழையும் உண்டோ? 124

  356. ஆதலால், முனிவாய் அல்லை; அருந்ததி அனைய கற்பின்
    காதலாள் துயரம் நீக்கி, தேவர்தம் கருத்தும் முற்றி,
    வேதநூல் முறையின் யாவும் விதியுளி நிறுவி, வேறும்
    தீது உள துடைத்தி என்றான் - சேவடிக் கமலம் சேர்வான். 125

  357. புயல் நிற வண்ணன், ஆண்டு, அப் புண்ணியன் புகன்ற சொல்லை,
    தயரதன் பணி ஈது என்ன, சிந்தையில் தழுவிநின்றான்;
    அயல் இனி முனிவது என்னை? அரக்கரை வருக்கம் தீர்க்கும்
    செயல் இனிச் செயல் என்று எண்ணி, கண்ணிய சீற்றம் தீர்ந்தான். 126

  358. சடாயுவின் மரணம்

  359. ஆயபின், அமலன்தானும், ஐய! நீ அமைதி என்ன,
    வாயிடை மொழிந்தது அன்றி, மற்று ஒரு செயலும் உண்டோ?
    போயது அவ் அரக்கன் எங்கே? புகல் என, புள்ளின் வேந்தன்
    ஓய்வினன்; உணர்வும் தேய, உரைத்திலன்; உயிரும் தீர்ந்தான். 127

  360. சீதம் கொள் மலருளோனும் தேவரும் என்பது என்னே?
    வேதங்கள் காண்கிலாமை, வெளிநின்றே மறையும் வீரன்
    பாதங்கள் கண்ணின் பார்த்தால்; படிவம் கொள் நெடிய பஞ்ச
    பூதங்கள் விளியும் நாளும் போக்கு இலா உலகம் புக்கான். 128

  361. வீடு அவன் எய்தும் வேலை, விரிஞ்சனே முதல மேலோர்,
    ஆடவர்க்கு அரசனோடு தம்பியும், அழுது சோர,
    காடு அமர் மரமும் மாவும் கற்களும் கரைந்து காய்ந்த,
    சேடரும் பாருளோரும் கரம் சிரம் சேர்த்தார் அன்றே. 129

  362. தளர்ந்த இராமனை இலக்குவன் தேற்றுதல்

  363. அறம்தலை நின்றிலாத அரக்கனின், ஆண்மை தீர்ந்தேன்;
    துறந்தனென், தவம் செய்கேனோ? துறப்பெனோ உயிரை? சொல்லாய்;
    பிறந்தனென் பெற்று நின்ற பெற்றியால், பெற்ற தாதை
    இறந்தனன்; இருந்துளேன் யான்; என் செய்கேன்? இளவல்! என்றான். 130

  364. என்றலும், இளைய கோ அவ் இராமனை இறைஞ்சி, யாண்டும்
    வென்றியாய்! விதியின் தன்மை பழியல விளைந்தது ஒன்றோ?
    நின்று இனி நினைவது என்னே? நெருக்கி அவ் அரக்கர்தம்மைக்
    கொன்றபின் அன்றோ, வெய்ய கொடுந் துயர் குளிப்பது? என்றான். 131

  365. எந்தை! நீ இயம்பிற்று என்னை? எண்மையன் ஆகி, ஏழைச்
    சந்த வார் குழலினாளைத் துறந்தனை தணிதியேனும்,
    உந்தையை உயிர் கொண்டானை உயிருண்ணும் ஊற்றம் இல்லாச்
    சிந்தையை ஆகிநின்று, செய்வது என் செய்கை? என்றான். 132

  366. இருவரும் சடாயுவிற்கு இறுதிக் கடன் செய்தல்

  367. அவ் வழி இளவல் கூற, அறிவனும் அயர்வு நீங்கி,
    இவ் வழி இனைய எண்ணின் ஏழைமைப்பாலது என்னா,
    வெவ் வழி பொழியும் கண்ணீர் விலக்கினன், விளிந்த தாதை
    செவ் வழி உரிமை யாவும் திருத்துவம்; சிறுவ! என்றான். 133

  368. இந்தனம் எனைய என்ன, கார் அகில் ஈட்டத்தோடும்
    சந்தனம் குவித்து, வேண்டும் தருப்பையும் திருத்தி, பூவும்
    சிந்தினன், மணலின் வேதி தீது அற இயற்றி, தெண் நீர்
    தந்தனன்; தாதை தன்னைத் தடக் கையான் எடுத்துச் சார்வான். 134

  369. ஏந்தினன் இரு கைதன்னால்; ஏற்றினன் ஈமம்தன்மேல்;
    சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன்; தலையின் சாரல்
    காந்து எரி கஞல மூட்டி, கடன்முறை கடவாவண்ணம்
    நேர்ந்தனன் - நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான். 135

  370. தளிர்த்தன கிளர்ந்த மேனித் தாமரைக் கெழுமு செம்பூத்
    துளித்தன அனைய என்னத் துள்ளி சோர் வெள்ளக் கண்ணன்
    குளித்தனன், கொண்டல், ஆற்று, குளித்தபின், கொண்ட நல் நீர்
    அளித்தனன் - அரக்கர்ச் செற்ற சீற்றத்தான் - அவலம் தீர்ந்தான். 136

  371. மீட்டு இனி உரைப்பது என்னே? விரிஞ்சனே முதல மேல், கீழ்
    காட்டிய உயிர்கள் எல்லாம் அருந்தின; களித்த போலாம்;
    பூட்டிய கைகளால், அப் புள்ளினுக்கு அரசை, கொள்க என்று,
    ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே! 137

  372. பல் வகைத் துறையும், வேதப் பலிக் கடன் பலவும், முற்றி,
    வெல் வகைக் குமரன் நின்ற வேலையின், வேலை சார்ந்தான் -
    தொல் வகைக் குலத்தின் வந்தான் துன்பத்தால், புனலும் தோய்ந்து,
    செல் வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்ன, வெய்யோன். 138

  373. மிகைப் பாடல்கள்

  374. பின்னவன் உரையினை மறுத்து, பேதையேன்,
    அன்னவன் தனைக் கடிது அகற்றினேன்; பொரு
    மன்னவன் சிறை அற மயங்கினேன்; விதி
    இன்னமும் எவ் வினை இயற்றுமோ? எனா. 45-1

  375. சடாயுவைத் தடிந்த வாளைச் சடுதியில் விதிர்க்கக் கண்டாள்;
    தடால் எனக் கபாடம் சாத்தி, சாலையுள் சலித்தாள் அந்தோ;
    விடாது அட மண்ணை விண்மேல் விரைந்து எடுத்து உச்சி வேட்டான்,
    குடா மதி கோனைச் சேரும் கோமுகன் - குறளி ஒத்தான். 58-1

  376. பெண்ணை விட்டு அமைந்திடின் பிழையது ஆம் என,
    உள் நிறை கூடமும் உவந்த சாலையும்,
    மண்ணினில் இராமன் மார்பு அமர்ந்த ஆதியும்
    விண்ணினில் மேதினி வேண்டி எய்தினாள். 58-2

  377. முன்னமே பூமியை முகந்து, பாதலம்,
    தன்னிலே தரித்தன சயமும் தந்திலது
    என்னவே, மாகம்மீது ஏகினான் செய
    உன்னியே இராவணன் உவந்ததொத்துஅரோ. 58-3

  378. சடாயுவும் சாய்ந்தனன்; சனகி சாய்ந்தனள்;
    விடா செயம் ஏதியும் பிற கதி வேறு உளோன்
    தொடா மறைக் கிரியையும் சுவைத்த கோமகன்
    அடாத மேற் செயல் எலாம் அமைத்தல் என் சயம்? 58-4

  379. மூன்று பத்து ஒருபது முந்து யோசனை
    ஏன்றது; பாவையும், ஏது? என்று எண்ணும்முன்,
    தோன்றினன் சுபாரிசன்; தொழுது, தொல் உலகு
    ஈன்றவள் இவள் என, இசைத்து இறைஞ்சியும். 58-5

  380. இசைக் கடல் உறைபவ! இலங்கை வேந்தன் நீ;
    திசைப்படாப் புவனம் உன் செல்வம்; என்னதோ
    வசைக் கடல் வாழ்வு; இது வழக்கு என்று எண்ணியோ,
    துசக் கடல் மொழி செலத் தொழுது போயினான்? 58-6

  381. தேன்றிரும் இராவணன் சேற என்று எதிர்ந்து,
    ஊன்று செம்பாதி சேய் தூண்டத் தூண்டிட,
    மூன்று தன் பதத்தில் ஒன்று இழிந்த மொய் கரத்து
    ஊன்று தண்டு ஒடிந்தென வீழ ஓடினான். 59-1

  382. ஆரணிய காண்டம்

    11. அயோமுகிப் படலம்



  383. நெடு வரைச் சாரலில் இராம இலக்குவர் தங்கியிருத்தல்

  384. அந்தி வந்து அணுகும்வேலை, அவ் வழி, அவரும் நீங்கி,
    சிந்துரச் செந் தீக் காட்டு ஓர் மை வரைச் சேக்கை கொண்டார்;
    இந்திரற்கு அடங்கல் செல்லா இராக்கதர் எழுந்ததென்ன
    வெந் துயர்க்கு ஊற்றம் ஆய விரி இருள் வீங்கிற்று அன்றே. 1

  385. துயர மிகுதியால் தூக்கமின்றி இருத்தல்

  386. தேன் உக அருவி சிந்தி, தெருமரல் உறுவ போல,
    கானமும் மலையும், எல்லாம் கண்ணின் நீர் உகுக்கும் கங்குல்,
    மானமும் சினமும் தாதை மரணமும், மைந்தர் சிந்தை
    ஞானமும் துயரும் தம்முள் மலைந்தென, நலிந்த அன்றே. 2

  387. மெய் உற உணர்வு செல்லா அறிவினை வினையின் ஊக்கும்
    பொய் உறு பிறவிபோல, போக்க அரும் பொங்கு கங்குல்,
    நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர, உயிர்ப்பு நீள,
    கையறவு உறுகின்றாரால்; காணல் ஆம் கரையிற்று, அன்றே. 3

  388. யாம் அது தெரிதல் தேற்றாம்; இன் நகைச் சனகி என்னும்
    காமரு திருவை நீத்தோ? முகமதி காண்கிலாதோ?
    தே மரு தெரியல் வீரன் கண் எனத் தெரிந்த செய்ய
    தாமரை, கங்குற் போதும், குவிந்திலாத் தன்மை என்னோ? 4

  389. பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டிமாட்டு
    நண்ணிய பிரிவு செய்த நவையினார் நவையில் உள்ளத்து,
    எண்ணியது அறிதல் தேற்றாம்; இமைத்தில, இராமன் என்னும்
    புண்ணியன் கண்ணும், வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே. 5

  390. வண்டு உளர் கோதைச் சீதை வாள் முகம் பொலிய வானில்
    கண்டனென் என்று, வீரற்கு, ஆண்டு ஒரு காதல் காட்ட,
    தண் தமிழ்த் தென்றல் என்னும் கோள் அராத் தவழும் சாரல்,
    விண் தலம் விளக்கும் செவ்வி வெண் மதி விரிந்தது அன்றே. 6

  391. களியுடை அனங்கக் கள்வன் கரந்து உறை கங்குற்காலம்
    வெளிபடுத்து, உலகம் எங்கும் விளங்கிய நிலவின் வெள்ளம்-
    நளி இருள் பிழம்பு என்று, ஈண்டு, நஞ்சொடு கலந்த நாகத்
    துளை எயிற்று ஊறல் உற்றதாம் என-சுட்டது அன்றே. 7

  392. இடம்படு மானத் துன்பம், இருள்தர, எண்ணின் தீர்ந்தான்
    விடம் பரந்தனையது ஆய வெண் நிலா வெதுப்ப, வீரன்,
    படம் பரந்தனைய அல்குல், பால் பரந்தனைய இன் சொல்,
    தடம் பெருங் கண்ணினாள்தன் தனிமையை நினையலுற்றான். 8

  393. சீதையை நினைத்து இராமன் வருந்துதல்

  394. மடித்த வாயன்; வயங்கும் உயிர்ப்பினன்,
    துடித்து வீங்கி, ஒடுங்குறு தோளினன்;
    பொடித்த தண் தளிர்ப் பூவொடு மால் கரி
    ஒடித்த கொம்பு அனையாள்திறத்து உன்னுவான்: 9

  395. வாங்கு வில்லன் வரும், வரும் என்று, இரு
    பாங்கும், நீள் நெறி பார்த்தனளோ? எனும்-
    வீங்கும் வேலை விரி திரை ஆம் என,
    ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான். 10

  396. தன் நினைந்திலள் என்பது சாலுமோ-
    மின் நினைந்த விலங்கும் எயிற்றினான்,
    நில் நில் என்று, நெருங்கியபோது அவள்
    என் நினைந்தனளோ? என எண்ணுமால். 11

  397. நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின்
    வஞ்ச வாயில் மதி என மட்குவாள்,
    வெஞ் சினம் செய் அரக்கர் தம் வெம்மையை
    அஞ்சினான்கொல்? என்று ஐயுறுமால் என்பான். 12

  398. பூண்ட மானமும், போக்க அருங் காதலும்,
    தூண்ட நின்று, இடை தோமுறும் ஆர் உயிர்,
    மீண்டு மீண்டு வெதுப்ப, வெதும்பினான்,
    வேண்டுமோ எனக்கு இன்னமும் வில்? என்பான். 13

  399. வில்லை நோக்கி நகும்; மிக வீங்கு தோட்-
    கல்லை நோக்கி நகும்; கடைக்கால் வரும்
    சொல்லை நோக்கித் துணுக்கெனும்-தொல் மறை
    எல்லை நோக்கினர் யாவரும் நோக்குவான். 14

  400. கூதிர் வாடை வெங் கூற்றினை நோக்கினன்;
    வேத வேள்வி விதிமுறை மேவிய
    சீதை என்வயின் தீர்ந்தனளோ? எனும்-
    போதகம் எனப் பொம் என் உயிர்ப்பினான். 15

  401. நின்று பல் உயிர் காத்தற்கு நேர்ந்த யான்,
    என் துணைக் குல மங்கை ஓர் ஏந்திழை
    தன் துயர்க்குத் தகவு இலென் ஆயினேன்;
    நன்று நன்று, என் வலி? என, நாணுமால். 16

  402. சாயும், தம்பி திருத்திய தண் தளிர்;
    தீயும், அங்கு அவை; தீய்தலும், செல் இருந்து
    ஆயும்; ஆவி புழுங்க அழுங்குமால்-
    வாயும் நெஞ்சும் புலர மயங்குவான். 17

  403. பிரிந்த ஏதுகொல்? பேர் அபிமானம்கொல்?
    தெரிந்தது இல்லை; திரு மலர்க்கண் இமை
    பொருந்த, ஆயிரம் கற்பங்கள் போக்குவான்;
    இருந்தும் கண்டிலன்; கங்குலின் ஈறுஅரோ. 18

  404. வென்றி விற் கை இளவலை! மேல் எலாம்
    ஒன்று போல உலப்பு இல் நாள்கள் தாம்
    நின்று காண்டி அன்றே? நெடுங் கங்குல்தான்
    இன்று நீள்வதற்கு ஏது என்? என்னுமால். 19

  405. நீண்ட மாலை மதியினை, நித்தமும்
    மீண்டு மீண்டு மெலிந்தனை, வெள்குவாய்;
    பூண்ட பூணவள் வாள் முகம் போதலால்,
    ஈண்டு, சால விளங்கினை என்னுமால். 20

  406. நீள் நிலாவின் இசை நிறை தன் குலத்து,
    ஆணி ஆய பழி வர, அன்னது
    நாணி, நாடு கடந்தனனாம்கொலோ
    சேண் உலாம் தனித் தேரவன்? என்னுமால். 21

  407. சுட்ட கங்குல் நெடிது எனச் சோர்கின்றான்,
    முட்டு அமைந்த நெடு முடக்கோனொடு
    கட்டி, வாள் அரக்கன், கதிரோனையும்
    இட்டனன்கொல் இருஞ் சிறை? என்னுமால். 22

  408. துடியின் நேர் இடை தோன்றலளாம் எனின்,
    கடிய கார் இருள் கங்குலின் கற்பம் போய்
    முடியும் ஆகின், முடியும், இம் மூரி நீர்
    நெடிய மா நிலம் என்ன, நினைக்குமால். 23

  409. திறத்து இனாதன, செய் தவத்தோர் உற
    ஒறுத்து, ஞாலத்து உயிர்தமை உண்டு, உழல்
    மறத்தினார்கள் வலிந்தனர் வாழ்வரேல்,
    அறத்தினால் இனி ஆவது என்? என்னுமால். 24

  410. தேனின் தெய்வத் திரு நெடு நாண் சிலைப்
    பூ நின்று எய்யும் பொரு கணை வீரனும்,
    மேல் நின்று எய்ய விமலனை நோக்கினான்;
    தான் நின்று எய்யகில்லான், தடுமாறினான். 25

  411. உழந்த யோகத்து ஒருமுதல் கோபத்தால்
    இழந்த மேனியும் எண்ணி இரங்கினான்-
    கெழுந்தகைக்கு ஒரு வன்மை கிடைக்குமோ,
    பழந்துயர்க்குப் பரிவுறும் பான்மையால்? 26

  412. நீலமான நிறத்தன் நினைந்தவை
    சூலம் ஆகத் தொலைவுறும் எல்லையில்,
    மூல மா மலர் முன்னவன் முற்றுறும்
    காலம் ஆம் என, கங்குல் கழிந்ததே. 27

  413. வெள்ளம் சிலம்பு பாற்கடலின் விரும்பும் துயிலை வெறுத்து, அளியும்
    கள்ளும் சிலம்பும் பூங் கோதைக் கற்பின் கடலில் படிவாற்கு,
    புள்ளும் சிலம்பும்; பொழில் சிலம்பும்; புனலும் சிலம்பும்; புனை கோலம்
    உள்ளும் சில் அம்பும் சிலம்பாவேல் உயிர் உண்டாகும் வகை உண்டோ ? 28

  414. மயிலும் பெடையும் உடன் திரிய, மானும் கலையும் மருவி வர,
    பயிலும் பிடியும் கட கரியும் வருவ, திரிவ, பார்க்கின்றான்;
    குயிலும், கரும்பும், செழுந்தேனும், குழலும், யாழும், கொழும் பாகும்,
    அயிலும், அமுதும், சுவை தீர்த்த மொழியைப் பிரிந்தான் அழியானோ? 29

  415. முடி நாட்டிய கோட்டு உதயத்து முற்றம் உற்றான்-முது கங்குல்
    விடி நாள் கண்டும், கிளி மிழற்றும் மென் சொல் கேளா, வீரற்கு, ஆண்டு
    அடி நாள், செந் தாமரை ஒதுங்கும் அன்னம் இவளால், யான் அடைந்த
    கடி நாள் கமலத்து என அவிழ்த்துக் காட்டுவான்போல், கதிர் வெய்யோன். 30

  416. பொழிலை நோக்கும்; பொழில் உறையும் புள்ளை நோக்கும்; பூங்கொம்பின்
    எழிலை நோக்கும்; இள மயிலின் இயலை நோக்கும்; இயல்பு ஆனாள்
    குழலை நோக்கி, கொங்கை இணைக் குவட்டை நோக்கி, அக் குவட்டின்
    தொழிலை நோக்கி, தன்னுடைய தோளை நோக்கி, நாள் கழிப்பான். 31

  417. சீதையைக் கவர்ந்த அரக்கனைத் தேட இராம இலக்குவர் முயல்தல்

  418. அன்ன காலை, இள வீரன், அடியின் வணங்கி, நெடியோய்! அப்
    பொன்னை நாடாது, ஈண்டு இருத்தல் புகழோ? என்ன, புகழோனும்,
    சொன்ன அரக்கன் இருக்கும் இடம் துருவி அறிதும் தொடர்ந்து என்ன,
    மின்னும் சிலையார் மலை தொடர்ந்த வெயில் வெங் கானம் போயினரால். 32

  419. ஆசை சுமந்த நெடுங் கரி அன்னார்
    பாசிலை துன்று வனம் பல பின்னா,
    காசு அறு குன்றினொடு ஆறு கடந்தார்;
    யோசனை ஒன்பதொடு ஒன்பது சென்றார். 33

  420. மண்படி செய்த தவத்தினில் வந்த
    கள் படி கோதையை நாடினர், காணார்,
    உள் படி கோபம் உயிர்ப்பொடு பொங்க,
    புள் படியும் குளிர் வார் பொழில் புக்கார். 34

  421. ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான்;
    நாரியை எங்கணும் நாடினன், நாடி,
    பேர் உலகு எங்கும் உழன்று, இருள் பின்னா,
    மேருவின்-வெங் கதிர்-மீள மறைந்தான். 35

  422. அரண்டு, அருகும் செறி அஞ்சன புஞ்சம்
    முரண்டன போல், இருள் எங்கணும் முந்த,
    தெருண்ட அறிவில்லவர் சிந்தையின் முந்தி,
    இருண்டன, மாதிரம் எட்டும் இரண்டும். 36

  423. இளிக்கு அறை இன் சொல் இயைந்தன, பூவை,
    கிளிக்கு அறையும் பொழில், கிஞ்சுக வேலி,
    ஒளிக் கறை மண்டிலம் ஒத்துளது, ஆங்கு ஓர்
    பளிக்கு அறை; கண்டு, அதில் வைகல் பயின்றார். 37

  424. இலக்குவன் நீர் தேடிச் செல்லுதல்

  425. அவ் இடை எய்திய அண்ணல் இராமன்
    வெவ் விடைபோல் இள வீரனை, வீர!
    இவ் இடை நாடினை, நீர் கொணர்க என்றான்;
    தெவ் இடை வில்லவனும் தனி சென்றான். 38

  426. இலக்குவனைக் கண்ட அயோமுகி காமுறுதல்

  427. எங்கணும் நாடினன்; நீர் இடை காணான்;
    சிங்கம் எனத் தமியன் திரிவானை,
    அங்கு, அவ் வனத்துள், அயோமுகி என்னும்
    வெங் கண் அரக்கி விரும்பினள் கண்டாள். 39

  428. நல் மதியோர் புகல் மந்திர நாமச்
    சொல் மதியா அரவின் சுடர்கிற்பாள்
    தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள்;
    மன்மதன் ஆம் இவன் என்னும் மனத்தாள். 40

  429. அழுந்திய சிந்தை அரக்கி, அலக்கண்
    எழுந்து உயர் காதலின் வந்து, எதிர் நின்றாள்;
    புழுங்கும் என் நோவொடு புல்லுவென்; அன்றி,
    விழுங்குவெனோ என விம்மல் உழந்தாள். 41

  430. இரந்தனென் எய்தியபோது, இசையாது
    சுரந்தனனேல், நனி கொண்டு கடந்து, என்
    முரஞ்சினில் மேவி முயங்குவென் என்று,
    விரைந்து எதிர் வந்தனன், தீயினும் வெய்யான். 42

  431. உயிர்ப்பின் நெருப்பு உமிழ்கின்றனள்; ஒன்ற
    எயிற்றின் மலைக் குலம் மென்று இனிது உண்ணும்
    வயிற்றள்; வயக் கொடு மாசுணம் வீசு
    கயிற்றின் அசைத்த முலை, குழி கண்ணாள்; 43

  432. பற்றிய கோள் அரி, யாளி, பணிக்கண்
    தெற்றிய பாத சிலம்பு சிலம்ப,
    இற்று உலகு யாவையும் ஈறுறும் அந் நாள்,
    முற்றிய ஞாயிறு போலும் முகத்தாள். 44

  433. ஆழி வறக்க முகக்க அமைந்த
    மூழை எனப் பொலி மொய் பில வாயாள்;
    கூழை புறத்து விரிந்தது ஓர் கொட்பால்,
    ஊழி நெருப்பின் உருத்தனை ஒப்பாள்; 45

  434. தடி தடவ, பல தலை தழுவ, தாள்
    நெடிது அடைய, குடர் கெழுமு நிணத்தாள்;
    அடி தடவ, பட அரவம் இசைக்கும்
    கடி தடம் உற்றவள், உருமு கறிப்பாள்; 46

  435. இவை இறை ஒப்பன என்ன, விழிப்பாள்;
    அவை குளிர, கடிது அழலும் எயிற்றாள்;
    குவை குலையக் கடல் குமுற உரைப்பாள்;
    நவை இல் புவித்திரு நாண நடப்பாள். 47

  436. நீள் அரவச் சரி, தாழ், கை, நிரைத்தாள்;
    ஆள் அரவப் புலி ஆரம் அணைத்தாள்;
    யாளியினைப் பல தாலி இசைத்தாள்;
    கோள் அரியைக் கொடு தாழ் குழை இட்டாள்; 48

  437. அரக்கியை யார் என இலக்குவன் வினவல்

  438. நின்றனள், ஆசையின் நீர் கலுழும் கண்
    குன்றி நிகர்ப்ப, குளிர்ப்ப விழிப்பாள்
    மின் திரிகின்ற எயிற்றின் விளக்கால்,
    கன்று இருளில் திரி கோளரி கண்டான். 49

  439. பண்டையில் நாசி இழந்து பதைக்கும்
    திண் திறலாளொடு தாடகை சீராள்;
    கண்டகர் ஆய அரக்கர் கணத்து ஓர்
    ஒண்தொடி ஆம், இவள் என்பது உணர்ந்தான். 50

  440. பாவியர் ஆம் இவர், பண்பு இலர்; நம்பால்
    மேவிய காரணம் வேறு இலை என்பான்;
    மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய்!
    யாவள் அடீ? உரைசெய், கடிது என்றான். 51

  441. அயோகியின் காம வெறி

  442. பேசினன், அங்கு அவள் பேசுற நாணாள்;
    ஊசல் உழன்று அழி சிந்தையளும்தான்,
    நேசம் இல், அன்பினளாயினும், நின்பால்
    ஆசையின் வந்த அயோமுகி என்றாள். 52

  443. பின்னும் உரைப்பவள், பேர் எழில் வீரா!
    முன்னம் ஒருத்தர் தொடா முலையோடு உன்
    பொன்னின் மணித் தட மார்பு புணர்ந்து, என்
    இன் உயிரைக் கடிது ஈகுதி என்றாள். 53

  444. ஆறிய சிந்தையள் அஃது உரைசெய்ய,
    சீறிய கோளரி கண்கள் சிவந்தான்;
    மாறு இல் வார் கணை, இவ் உரை வாயில்
    கூறிடின், நின் உடல் கூறிடும் என்றான். 54

  445. மற்று அவன் அவ் உரை செப்ப, மனத்தால்
    செற்றிலள்; கைத் துணை சென்னியில் வைத்தாள்;
    கொற்றவ! நீ எனை வந்து உயிர் கொள்ளப்
    பெற்றிடின், இன்று பிறந்தனென் என்றாள். 55

  446. வெங் கதம் இல்லவன் பின்னரும், மேலோய்!
    இங்கு நறும் புனல் நாடுதி என்னின்,
    அங்கையினால் எனை, அஞ்சலை என்றால்,
    கங்கையின் நீர் கொணர்வென் கடிது என்றாள். 56

  447. சுமித்திரை சேய் அவள் சொன்ன சொல் அன்ன
    கமித்திலன்; நின் இரு காதொடும் நாசி
    துமிப்பதன் முன்பு அகல் என்பது சொல்ல,
    இமைத்திலள், நின்றனள், இன்ன நினைந்தாள். 57

  448. எடுத்தனென் ஏகினென், என் முழைதன்னுள்
    அடைத்து, இவன் வெம்மை அகற்றிய பின்னை,
    உடற்படுமால், உடனே உறும் நன்மை;
    திடத்து இதுவே நலன் என்று, அயல் சென்றாள். 58

  449. அயோமுகி இலக்குவனை தூக்கிச் செல்லுதல்

  450. மோகனை என்பது முந்தி முயன்றாள்;
    மாக நெடுங் கிரி போலியை வவ்வா
    ஏகினள்-உம்பரின் இந்துவொடு ஏகும்
    மேகம் எனும்படி-நொய்தினின் வெய்யாள். 59

  451. மந்தரம் வேலையில் வந்ததும், வானத்து
    இந்திரன் ஊர் பிடி என்னலும், ஆனாள்;
    வெந் திறல் வேல் கொடு சூர் அடும் வீரச்
    சுந்தரன் ஊர்தரு தோகையும் ஒத்தாள். 60

  452. ஆங்கு அவள் மார்பொடு கையின் அடங்கி,
    பூங் கழல் வார் சிலை மீளி பொலிந்தான்;
    வீங்கிய வெஞ் சின வீழ் மத வெம் போர்
    ஓங்கல் உரிக்குள் உருத்திரன் ஒத்தான். 61

  453. இப்படி ஏகினள், அன்னவள், இப்பால்
    அப்பு இடை தேடி நடந்த என் ஆவித்
    துப்புடை மால் வரை தோன்றலன் என்னா,
    வெப்புடை மெய்யொடு வீரன் விரைந்தான். 62

  454. இலக்குவனைக் காணாத இராமன் துயருறுதல்

  455. வெய்து ஆகிய கானிடை மேவரும் நீர்
    ஐது ஆதலினோ? அயல் ஒன்று உளதோ?
    நொய்தாய் வர, வேகமும் நொய்திலனால்,
    எய்தாது ஒழியான்; இது என்னைகொலாம்? 63

  456. நீர் கண்டனை இவ் வழி நேடினை போய்,
    சார் கொண்டு என, இத்துணை சார்கிலனால்;
    வார் கொண்டு அணி கொங்கையை வவ்வினர்பால்
    போர் கொண்டனனோ? பொருள் உண்டு இது எனா, 64

  457. அம் சொல் கிளி அன்ன அணங்கினை முன்
    வஞ்சித்த இராவணன் வவ்வினனோ?
    நஞ்சின் கொடியான் நடலைத் தொழிலால்,
    துஞ்சுற்றனனோ, விதியின் துணிவால்? 65

  458. வரி விற் கை என் ஆர் உயிர் வந்திலனால்;
    தரு சொல் கருதேன்; ஒரு தையலை யான்
    பிரிவித்தனென் என்பது ஓர் பீழை பெருத்து
    எரிவித்திட, ஆவி இழந்தனனோ? 66

  459. உண்டாகிய கார் இருள் ஓடு ஒருவன்
    கண்தான்; அயல் வேறு ஒரு கண் இலெனால்;
    புண்தான் உறு நெஞ்சு புழுங்குறுவென்;
    எண்தான் இலென்; எங்ஙனம் நாடுகெனோ? 67

  460. தள்ளா வினையேன் தனி ஆர் உயிர் ஆய்-
    உள்ளாய்! ஒரு நீயும் ஒளித்தனையோ?
    பிள்ளாய்! பெரியாய்! பிழை செய்தனையால்;
    கொள்ளாது உலகு உன்னை; இதோ கொடிதே! 68

  461. பேரா இடர் வந்தன பேர்க்க வலாய்!
    தீரா இடர் தந்தனை; தெவவர் தொழும்
    வீரா! எனை இங்ஙன் வெறுத்தனையோ?
    வாராய், புறம் இத்துணை வைகுதியோ? 69

  462. என்னைத் தரும் எந்தைய, என்னையரை,
    பொன்னைப் பொருகின்ற பொலங் குழையால்-
    தன்னை, பிரிவேன்; உளென் ஆவதுதான்,
    உன்னைப் பிரியாத உயிர்ப்பு அலவோ? 70

  463. பொன் தோடு இவர்கின்ற பொலங் குழையாள்-
    தன்-தேடி வருந்து தவம்புரிவேன்,
    நின்-தேடி வருந்த நிரப்பினையோ?
    என்-தேடினை வந்த இளங் களிறே! 71

  464. இன்றே இறவாது ஒழியேன்; எமரோ
    பொன்றாது ஒழியார், புகல்வார் உளரால்;
    ஒன்றாகிய உன் கிளையோரை எலாம்
    கொன்றாய்; கொடியாய்! இதுவும் குணமோ? 72

  465. மாந்தா முதல் மன்னவர்தம் வழியில்,
    வேந்து ஆகை துறந்தபின், மெய் உறவோர்
    தாம் தாம் ஒழிய, தமியேனுடனே
    போந்தாய்; எனை விட்டனை போயினையோ? 73

  466. என்னா உரையா, எழும்; வீழும்; இருந்து
    உன்னா, உணர்வு ஓய்வுறும்; ஒன்று அலவால்;
    மின்னாது இடியாது, இருள்வாய் விளைவு ஈது
    என் ஆம்? எனும், என் தனி நாயகனே. 74

  467. நாடும், பல சூழல்கள் தோறும் நடந்து;
    ஓடும், பெயர் சொல்லி உளைந்து; உயிர் போய்
    வாடும் வகை சோரும்; மயங்குறுமால்-
    ஆடும் களி மா மத யானை அனான். 75

  468. கமையாளொடும் என் உயிர் காவலில் நின்று
    இமையாதவன், இத்துணை தாழ்வுறுமோ?
    சுமையால் உலகூடு உழல் தொல் வினையேற்கு,
    அமையாதுகொல் வாழ்வு? அறியேன் எனுமால். 76

  469. அரக்கியின் அலறல்

  470. அறப் பால் உளதேல், அவன் முன்னவன் ஆய்ப்
    பிறப்பான் உறில், வந்து பிறக்க எனா,
    மறப் பால் வடி வாள் கொடு, மன் உயிரைத்
    துறப்பான் உறுகின்ற தொடர்ச்சியின்வாய். 77

  471. பேர்ந்தான், நெடு மாயையினில் பிரியா;
    ஈர்ந்தான், அவள் நாசி பிடித்து, இளையோன்;
    சோர்ந்தாள் இடு பூசல் செவித் துளையில்
    சேர்ந்து ஆர்தலுமே, திருமால் தெருளா, 78

  472. பரல் தரு கானகத்து அரக்கர், பல் கழல்
    முரற்று அரு வெஞ் சமம் முயல்கின்றார், எதிர்
    உரற்றிய ஓசை அன்று; ஒருத்தி ஊறுபட்டு,
    அரற்றிய குரல்; அவள் அரக்கியாம் எனா, 79

  473. இராமன் இலக்குவனை தேடிச் சேர்தல்

  474. அங்கியின் நெடும் படை வாங்கி, அங்கு அது
    செங் கையில் கரியவன் திரிக்கும் எல்லையில்,
    பொங்கு இருள் அப் புறத்து உலகம் புக்கது;
    கங்குலும், பகல் எனப் பொலிந்து காட்டிற்றே. 80

  475. நெடு வரை பொடிபட, நிவந்த மா மரம்,
    ஒடிவுற, நிலமகள் உலைய, ஊங்கு எலாம்,
    சட சட எனும் ஒலி தழைப்பத் தாக்கவும்,
    முடுகினன் இராமன், வெங் காலின் மும்மையான். 81

  476. ஒருங்கு உயர்ந்து, உலகின்மேல் ஊழிப் பேர்ச்சியுள்
    கருங் கடல் வருவதே அனைய காட்சித் தன்
    பெருந் துணைத் தம்முனை நோக்கி, பின்னவன்
    வருந்தலை வருந்தலை வள்ளியோய்! எனா. 82

  477. வந்தனென் அடியனேன்; வருந்தல், வாழி! நின்
    அந்தம் இல் உள்ளம் என்று, அறியக் கூறுவான்,
    சந்த மென் தளிர் புரை சரணம் சார்ந்தனன்;
    சிந்தின நயனம் வந்தனைய செய்கையான். 83

  478. ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன்,
    ஈற்று இளங் கன்றினைப் பிரிவுற்று, ஏங்கி நின்று,
    ஆற்றலாது அரற்றுவது, அரிதின் எய்திட,
    பால் துறும் பனி முலை ஆவின் பான்மையான். 84

  479. நடந்தது கூற இராமன் வேண்டுதல்

  480. தழுவினன் பல் முறை; தாரைக் கண்ணின் நீர்
    கழுவினன், ஆண்டு அவன் கனக மேனியை;
    வழுவினையாம் என மனக் கொடு ஏங்கினேன்;
    எழு என, மலை என, இயைந்த தோளினாய்! 85

  481. என்னை ஆங்கு எய்தியது? இயம்புவாய் என,
    அன்னவன் அஃது எலாம் அறியக் கூறலும்,
    இன்னலும், உவகையும், இரண்டும் எய்தினான்-
    தன் அலாது ஒரு பொருள் தனக்கு மேல் இலான். 86

  482. ஆய்வுறு பெருங் கடல் அகத்துள் ஏயவன்
    பாய் திரை வருதொறும், பரிதற்பாலனோ?
    தீவினைப் பிறவி வெஞ் சிறையில் பட்ட யாம்,
    நோய், உறு துயர் என நுடங்கல் நோன்மையோ? 87

  483. மூவகை அமரரும், உலகம் மும்மையும்
    மேவ அரும் பகை எனக்கு ஆக மேல்வரின்,
    ஏவரே கடப்பவர்? எம்பி! நீ உளை
    ஆவதே வலி; இனி அரணும் வேண்டுமோ? 88

  484. பிரிபவர் யாவரும் பிரிக; பேர் இடர்
    வருவன யாவையும் வருக; வார் கழல்
    செரு வலி வீர! நின்-தீரும் அல்லது,
    பருவரல், என்வயின் பயிலற்பாலதோ? 89

  485. வன் தொழில் வீர! போர்வலி அரக்கியை
    வென்று, போர் மீண்டனென் என, விளம்பினாய்;
    புன் தொழில் அனையவள், புகன்ற சீற்றத்தால்
    கொன்றிலைபோலுமால்? கூறுவாய் என்றான். 90

  486. துளைபடு மூக்கொடு செவி துமித்து உக,
    வளை எயிறு இதழொடு அரிந்து, மாற்றிய
    அளவையில் பூசலிட்டு அரற்றினாள் என,
    இளையவன் விளம்பிநின்று இரு கை கூப்பினான். 91

  487. தொல் இருள் தனைக் கொலத் தொடர்கின்றாளையும்,
    கொல்லலை; நாசியைக் கொய்து நீக்கினாய்;
    வல்லை நீ; மனு முதல் மரபினோய் என,
    புல்லினன் - உவகையின் பொருமி விம்முவான். 92

  488. வருண மந்திரம் சொல்லி வான் நீர் உண்ணல்

  489. பேர அருந் துயர் அறப் பேர்ந்துளோர் என,
    வீரனும், தம்பியும் விடிவு நோக்குவார்,
    வாருணம் நினைந்தனர்; வான நீர் உண்டு,
    தாரணி தாங்கிய கிரியில் தங்கினார். 93

  490. கல் அகல் வெள்ளிடை, கானின் நுண் மணல்,
    பல்லவம், மலர் கொடு படுத்த பாயலின்,
    எல்லை இல் துயரினோடு இருந்து சாய்ந்தனன்,
    மெல் அடி, இளையவன் வருட, வீரனே. 94

  491. இராமன் பிரிவாற்றாமையால் துயருறுதல்

  492. மயில் இயல் பிரிந்தபின், மான நோயினால்,
    அயில்விலன் ஒரு பொருள்; அவலம் எய்தலால்
    துயில்விலன் என்பது சொல்லற்பாலதோ?
    உயிர், நெடிது உயிர்ப்பிடை, ஊசலாடுவான். 95

  493. மானவன் மெய் இறை மறக்கலாமையின்
    ஆனதோ? அன்று எனின், அரக்கர் மாயமோ?-
    கானகம் முழுவதும், கண்ணின் நோக்குங்கால்
    சானகி உரு எனத் தோன்றும் தன்மையே! 96

  494. கருங்குழல், சேயரிக் கண்ணி, கற்பினோர்க்கு
    அருங் கலம், மருங்கு வந்து இருப்ப, ஆசையால்
    ஒருங்குறத் தழுவுவென்; ஒன்றும் காண்கிலென்;
    மருங்குல்போல் ஆனதோ வடிவம், மெல்லவே? 97

  495. புண்டரிகப் புது மலரில் தேன் போதி
    தொண்டை அம் சேயொளித் துவர்த்த வாய் அமுது
    உண்டனென்; ஈண்டு அவள் உழையள் அல்லளால்;
    கண் துயில் இன்றியும் கனவு உண்டாகுமோ? 98

  496. மண்ணினும், வானினும், மற்றை மூன்றினும்,
    எண்ணினும், பெரியது ஓர் இடர் வந்து எய்தினால்,
    தண் நறுங் கருங் குழல் சனகன் மா மகள்
    கண்ணினும், நெடியதோ, கொடிய கங்குலே? 99

  497. அப்புடை அலங்கு மீன் அலர்ந்ததாம் என-
    உப்புடை இந்து என்று உதித்த ஊழித் தீ,
    வெப்புடை விரி கதிர் வெதுப்ப-மெய் எலாம்
    கொப்புளம் பொடித்ததோ, கொதிக்கும் வானமே? 100

  498. இன்னன இன்னன பன்னி, ஈடு அழி
    மன்னவர் மன்னவன் மதி மயங்கினான்;
    அன்னது கண்டனன், அல்கினான் என,
    துன்னிய செங் கதிர்ச் செல்வன் தோன்றினான். 101

  499. நிலம் பொறை இலது என, நிமிர்ந்த கற்பினாள்,
    நலம் பொறை கூர்தரும் மயிலை நாடிய,
    அலம்புறு பறவையும் அழுவவாம் எனப்
    புலம்புறு விடியலில், கடிது போயினார். 102

  500. மிகைப் பாடல்கள்

  501. மாங்கனி, தாழையின் காய், வாழையின் கனிகளோடும்,
    ஆம் கனி ஆவதே என்று அருந்தி, நான் விரும்பி வைத்தேன்;
    பாங்கின் நல் அமுது செய்மின் என்று அவள் பரவி, நல்கும்
    தேம் கனி இனிதின் உண்டு, திரு உளம் மகிழ்ந்தான், வீரன். 5-1

  502. பாரிடமே இது; பரவை உற்றுறும்
    பார் இடம் அரிது எனப் பரந்த மெய்யது;
    பார், இடம் வலம் வரப் பரந்த கையது;-
    பார் இடந்து எடுத்த மா அனைய பாழியாய்! 21-1

  503. காவாய் என்பால், தன் ஐயரான் கைவிட வல்லேன்;
    வேவா நின்றே நிற்க, இவ் வெய்யோற்கு இணை ஆவார்
    நீ வா என்ன, அன்னது கண்டும், அயர்கில்லேன்;
    போவேன் யானே; எவ் உலகோ, என் புகல் அம்மா! 29-1

  504. என்று அவள் கூறலும், மைந்தனும், இன்னே
    நன்றியதாய நறும் புனல் நாடி,
    வென்றி கொள் வீரன் விடாய் அது தீர்ப்பான்
    இன்று இவண் வந்தனன் என்று உரைசெய்தான். 55-1

  505. ஆரணிய காண்டம்

    12. கவந்தன் படலம்


    இராம இலக்குவர் கவந்தன் வனத்தைக் காணுதல்

  506. ஐ-ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி, அடவி புடைபடுத்த
    வையம் திரிந்தார்; கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான்;
    எய்யும் சிலைக் கை இருவரும் சென்று, இருந்தே நீட்டி எவ் உயிரும்
    கையின் வளைந்து வயிற்று அடங்கும் கவந்தன் வனத்தைக் கண்ணுற்றார். 1

  507. எறுப்பு இனம், கடையுற, யானையே முதல்
    உறுப்புடை உயிர் எலாம் உலைந்து சாய்ந்தன;
    வெறிப்புறு நோக்கின, வெருவுகின்றன;
    பறிப்பு அரு வலையிடைப் பட்ட பான்மைய; 2

  508. மரபுளி நிறுத்திலன், புரக்கும் மாண்பிலன்;
    உரன் இலன் ஒருவன் நாட்டு உயிர்கள் போல்வன;
    வெருவுவ, சிந்துவ, குவிவ, விம்மலோடு
    இரிவன, மயங்குவ, இயல்பு நோக்கினார். 3

  509. மால் வரை உருண்டன வருவ; மா மரம்
    கால் பறிந்திடுவன; கான யாறுகள்
    மேல் உள திசையொடு வெளிகள் ஆவன;
    சூல் முதிர் மேகங்கள் சுருண்டு வீழ்வன; 4

  510. கவந்தன் கைப்பட்ட இருவரும் பலவாறு எண்ணுதல்

  511. நால் திசைப் பரவையும் இறுதி நாள் உற,
    காற்று இசைத்து எழ எழுந்து, உலகைக் கால் பரந்து
    ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றன
    போல், திசை சுற்றிய கரத்துப் புக்குளார். 5

  512. தேமொழி திறத்தினால், அரக்கர் சேனை வந்து
    ஏமுற வளைந்தது என்று, உவகை எய்தினார்;
    நேமி மால் வரை வர நெருக்குகின்றதே
    ஆம் எனல் ஆய, கைம் மதிட்குள் ஆயினார். 6

  513. இளவலை நோக்கினன் இராமன், ஏழையை
    உளைவு செய் இராவணன் உறையும் ஊரும், இவ்
    அளவையது ஆகுதல் அறிதி; ஐய! நம்
    கிளர் பெருந் துயரமும் கீண்டது ஆம் என, 7

  514. முற்றிய அரக்கர் தம் முழங்கு தானையேல்,
    எற்றிய முரசு ஒலி, ஏங்கும் சங்கு இசை,
    பெற்றிலது; ஆதலின், பிறிது ஒன்று ஆம் எனச்
    சொற்றனன் இளையவன், தொழுது முன் நின்றான். 8

  515. தெள்ளிய அமுது எழத் தேவர் வாங்கிய
    வெள் எயிற்று அரவம்தான்? வேறு ஓர் நாகம்தான்?
    தள்ள அரு வாலொடு தலையினால் வளைத்து,
    உள் உறக் கவர்வதே ஒக்கும்; ஊழியாய்! 9

  516. கவந்தனின் தோற்றம்

  517. என்று இவை விளம்பிய இளவல் வாசகம்
    நன்று என நினைந்தனன், நடந்த நாயகன்;
    ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு, ஓங்கல்தான்
    நின்றென இருந்த அக் கவந்தன் நேர் சென்றார். 10

  518. வெயில் சுடர் இரண்டினை மேரு மால் வரை
    குயிற்றியதாம் எனக் கொதிக்கும் கண்ணினன்;
    எயிற்று இடைக்குஇடை இரு காதம்; ஈண்டிய
    வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான். 11

  519. ஈண்டிய புலவரொடு அவுணர், இந்துவைத்
    தீண்டிய நெடு வரைத் தெய்வ மத்தினைப்
    பூண்டு உயர் வடம், இரு புடையும் வாங்கலின்,
    நீண்டன கிடந்தென நிமிர்ந்த கையினான். 12

  520. தொகைக் கனல் கருமகன் துருத்தித் தூம்பு என,
    புகைக் கொடி, கனலொடும் பொடிக்கும் மூக்கினான்;
    பகைத் தகை நெடுங் கடல் பருகும் பாவகன்
    சிகைக் கொழுந்து இது எனத் திருகு நாவினான். 13

  521. புரண்டு பாம்பு இடை வர வெருவி, புக்கு உறை
    அரண்தனை நாடி, ஓர் அருவி மால் வரை
    முரண் தொகு முழை நுழை, முழு வெண் திங்களை
    இரண்டு கூறிட்டென, இலங்கு எயிற்றினான். 14

  522. ஓத நீர், மண் இவை முதல ஓதிய
    பூதம் ஓர் ஐந்தினில் பொருந்திற்று அன்றியே,
    வேத நூல் வரன்முறை விதிக்கும் ஐம் பெரும்
    பாதகம் திரண்டு, உயிர் படைத்த பண்பினான். 15

  523. வெய்ய வெங் கதிர்களை விழுங்கும் வெவ் அரா,
    செய் தொழில் இல, துயில் செவியின் தொள்ளையான்;
    பொய் கிளர் வன்மையில் புரியும் புன்மையோர்
    வைகுறும் நரகையும் நகும் வயிற்றினான். 16

  524. முற்றிய உயிர் எலாம் முருங்க வாரி, தான்
    பற்றிய கரத்தினன், பணைத்த பண்ணையில்
    துற்றிய புகுதரும் தோற்றத்தால், நமன்
    கொற்ற வாய்தல் செயல் குறித்த வாயினான். 17

  525. ஓலம் ஆர் கடல் என முழங்கும் ஓதையான்;
    ஆலமே என இருண்டு அழன்ற ஆக்கையான்;
    நீல மால்; நேமியின் தலையை நீக்கிய
    காலநேமியைப் பொரும் கவந்தக் காட்சியான். 18

  526. தாக்கிய தணப்பு இல் கால் எறிய, தன்னுடை
    மேக்கு உயர் கொடு முடி இழந்த மேரு தேர்
    ஆக்கையின் இருந்தவன் தன்னை, அவ் வழி,
    நோக்கினர் இருவரும், நுணங்கு கேள்வியார். 19

  527. கவந்தனின் வாயைப் பார்த்து இராம இலக்குவர் ஐயுறுதல்

  528. நீர் புகும் நெடுங் கடல் அடங்கும், நேமி சூழ்
    பார் புகும், நெடும் பகு வாயைப் பார்த்தனர்;
    சூர் புகல் அரியது ஓர் அரக்கர் தொல் மதில்
    ஊர் புகு வாயிலோ இது? என்று, உன்னினார். 20

  529. அவ் வழி, இளையவன் அமர்ந்து நோக்கியே,
    வெவ்வியது ஒரு பெரும் பூதம், வில் வலாய்,
    வவ்விய தன் கையின் வளைத்து, வாய்ப் பெயும்;
    செய்வது என் இவண்? என, செம்மல் சொல்லுவான்: 21

  530. பழி சுமந்து வாழ்கிலேன் எனல்

  531. தோகையும் பிரிந்தனள்; எந்தை துஞ்சினன்;
    வேக வெம் பழி சுமந்து உழல வேண்டலென்;
    ஆகலின், யான், இனி, இதனுக்கு ஆமிடம்;
    ஏகுதி ஈண்டுநின்று, இளவலே! என்றான். 22

  532. ஈன்றவர் இடர்ப்பட, எம்பி துன்புற,
    சான்றவர் துயருற, பழிக்குச் சார்வுமாய்த்
    தோன்றலின், என் உயிர் துறந்தபோது அலால்,
    ஊன்றிய பெரும் படர் துடைக்க ஒண்ணுமோ? 23

  533. இல் இயல்புடைய, நீர் அளித்த, இன் சொலாம்
    வல்லி, அவ் அரக்கர்தம் மனை உளாள் எனச்
    சொல்லினென், மலை எனச் சுமந்த தூணியென்,
    வில்லினென், செல்வேனோ, மிதிலை வேந்தன்பால்? 24

  534. தளை அவிழ் கோதையைத் தாங்கல் ஆற்றலன்,
    இளை புரந்து அளித்தல்மேல் இவர்ந்த காதலன்,
    உளன் என, உரைத்தலின், உம்பரான் என
    விளைதல் நன்று; ஆதலின், விளிதல் நன்று என்றான். 25

  535. முன்னம் முடிவன் என இலக்குவன் மொழிதல்

  536. ஆண்டான் இன்ன பன்னிட, ஐயற்கு இள வீரன்,
    ஈண்டு, யான் உன்பின் ஏகியபின், இவ் இடர் வந்து
    மூண்டால், முன்னே ஆர் உயிரொடும் முடியாதே,
    மீண்டே போதற்கு ஆம் எனின், நன்று என் வினை! என்றான். 26

  537. என்றான் என்னாப் பின்னும் இசைப்பான், இடர்தன்னை
    வென்றார் அன்றே வீரர்கள் ஆவார்? விரவாரின்
    தன் தாய், தந்தை, தம்முன், எனும் தன்மையர் முன்னே
    பொன்றான் என்றால், நீங்குவது அன்றோ புகழ் அம்மா? 27

  538. மானே அன்னாள்தன்னொடு தம்முள் வரை ஆரும்
    கானே வைக, கண்துயில் கொள்ளாது அயல் காத்தற்கு
    ஆனாள்; என்னே! என்றவர் முன்னே, அவர் இன்றித்
    தானே வந்தான் என்றலின், வேறு ஓர் தவறு உண்டோ ? 28

  539. என் தாய், உன்முன் ஏவிய யாவும் இசை; இன்னல்
    பின்றாது எய்தி, பேர் இசையாளற்கு அழிவு உண்டேல்,
    பொன்றாமுன்னம் பொன்றுதி என்றாள்; உரை பொய்யா
    நின்றால் அன்றோ நிற்பது வாய்மை நிலை அம்மா? 29

  540. என்-பெற்றாளும், யானும், எனைத்து ஓர் வகையாலும்,
    நின்-பெற்றாட்கும், நிற்கும், நினைப்புப் பிழையாமல்,
    நல் பொன் தோளாய்! நல்லவர் பேண நனி நிற்கும்
    சொல் பெற்றால், மற்று ஆர் உயிர் பேணி, துறவேமால். 30

  541. ஓதுங்கால், அப் பல் பொருள் முற்றுற்று, ஒருவாத
    வேதம் சொல்லும் தேவரும் வீயும் கடை வீயாய்;
    மாதங்கம் தின்று உய்ந்து இவ் வனத்தின்தலை வாழும்
    பூதம் கொல்லப் பொன்றுதிஎன்னின், பொருள் உண்டோ ? 31

  542. கேட்டார் கொள்ளார்; கண்டவர் பேணார்; கிளர் போரில்
    தோட்டார் கோதைச் சோர் குழல்தன்னைத் துவளாமல்
    மீட்டான் என்னும் பேர் இசை கொள்ளான், செரு வெல்ல
    மாட்டான், மாண்டான் என்றலின்மேலும் வசை உண்டோ ? 32

  543. பூதத்தின் கையொடு வாயைத் துணிப்பதே கருமம் எனல்

  544. தணிக்கும் தன்மைத்து அன்று எனின், இன்று இத் தகை வாளால்,-
    கணிக்கும் தன்மைத்து அன்று, விடத்தின் கனல் பூதம்-
    பிணிக்கும் கையும், பெய் பில வாயும் பிழையாமல்
    துணிக்கும் வண்ணம் காணுதி; துன்பம் துற என்றான். 33

  545. என்னா முன்னே, செல்லும் இளங்கோ, இறையோற்கு
    முன்னே செல்லும்; முன்னவன், அன்னானினும் முந்த,
    தன் நேர் இலாத தம்பி தடுப்பான்; பிறர் இல்லை
    அன்னோ! கண்டார் உம்பரும் வெய்துற்று அழுதாரால். 34

  546. கவந்தனை எதிர்த்து இராம இலக்குவர் போர் புரிதல்

  547. இனையர் ஆகிய இருவரும், முகத்து இரு கண்போல்,
    கனையும் வார் கழல் வீரர் சென்று அணுகலும், கவந்தன்,
    வினையின் எய்திய வீரர் நீர் யாவர்கொல்? என்ன,
    நினையும் நெஞ்சினர், இமைத்திலர்; உருத்தனர், நின்றார். 35

  548. அழிந்துளார் அலர்; இகழ்ந்தனர் என்னை என்று அழன்றான்;
    பொழிந்த கோபத்தன்; புதுப் பொறி மயிர்ப்புறம் பொடிப்ப,
    விழுங்குவேன் என வீங்கலும், விண் உற, வீரர்,
    எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர், இட்டார். 36

  549. கைகள் அற்று வெங் குருதி ஆறு ஒழுகிய கவந்தன்
    மெய்யின், மேற்கோடு கிழக்கு உறுப் பெரு நதி விரவும்,
    சைய மா நெடுந் தாழ் வரைத் தனி வரைதன்னோடு
    ஐயம் நீங்கிய, பேர் எழில் உவமையன் ஆனான். 37

  550. கவந்தன் முன்னை உருப் பெற்று, விண் உற நிமிர்தல்

  551. ஆளும் நாயகன் அம் கையின் தீண்டிய அதனால்,
    மூளும் சாபத்தின் முந்திய தீவினை முடித்தான்;
    தோளும் வாங்கிய தோமுடை யாக்கையைத் துறவா,
    நீளம் நீங்கிய பறவையின், விண் உற நிமிர்ந்தான். 38

  552. விண்ணில் நின்றவன், விரிஞ்சனே முதலினர் யார்க்கும்
    கண்ணில் நின்றவன் இவன் எனக் கருத்துற உணர்ந்தான்;
    எண் இல் அன்னவன் குணங்களை, வாய் திறந்து, இசைத்தான்;
    புண்ணியம் பயக்கின்றுழி அரியது எப் பொருளே? 39

  553. இராமனைத் துதித்தல்

  554. ஈன்றவனோ எப் பொருளும்? எல்லை தீர் நல் அறத்தின்
    சான்றவனோ? தேவர் தவத்தின் தனிப் பயனோ?
    மூன்று கவடு ஆய் முளைத்து எழுந்த மூலமோ?
    தோன்றி, அரு வினையேன் சாபத் துயர் துடைத்தாய்! 40

  555. மூலமே இல்லா முதல்வனே! நீ முயலும்
    கோலமோ, யார்க்கும் தெரிவு அரிய கொள்கையவால்;
    ஆலமோ? ஆலின் அடையோ? அடைக் கிடந்த
    பாலனோ? வேலைப் பரப்போ? பகராயே! 41

  556. காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி,
    பூண்பாய்போல் நிற்றியால், யாது ஒன்றும் பூணாதாய்,
    மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால்;
    ஆண்பாலோ? பெண்பாலோ? அப்பாலோ? எப்பாலோ? 42

  557. ஆதிப் பிரமனும் நீ; ஆதிப் பரமனும் நீ!
    ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ!
    சோதிச் சுடர்ப் பிழம்பு நீ! என்று சொல்லுகின்ற
    வேதம் உரைசெய்தால், வெள்காரோ வேறு உள்ளார்? 43

  558. எண் திசையும் திண் சுவரா, ஏழ் ஏழ் நிலை வகுத்த
    அண்டப் பெருங் கோயிற்கு எல்லாம் அழகுடைய
    மண்டலங்கள் மூன்றின்மேல், என்றும் மலராத
    புண்டரிக மோட்டின் பொகுட்டே புரை; அம்மா! 44

  559. மண்பால்-அமரர் வரம்பு ஆரும் காணாத
    எண்பால் உயர்ந்த, எரி ஓங்கும் நல் வேள்வி
    உண்பாய் நீ; ஊட்டுவாய் நீ; இரண்டும் ஒக்கின்ற
    பண்பு ஆர் அறிவார்? பகராய், பரமேட்டி! 45

  560. நிற்கும் நெடு நீத்த நீரில் முளைத்தெழுந்த
    மொக்குளே போல, முரண் இற்ற அண்டங்கள்
    ஒக்க உயர்ந்து, உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற
    பக்கம் அறிதற்கு எளிதோ? பரம்பரனே! 46

  561. நின் செய்கை கண்டு நினைந்தனவோ, நீள் மறைகள்?
    உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ?
    என் செய்தேன் முன்னம்? மறம் செய்கை எய்தினார்-
    பின் செல்வது இல்லாப் பெருஞ் செல்வம் நீ தந்தாய்! 47

  562. மாயப் பிறவி மயல் நீக்கி மாசு இலாக்
    காயத்தை நல்கி, துயரின் கரை ஏற்றி,
    பேய் ஒத்தேன் பேதைப் பிணக்கு அறுத்த எம் பெருமான்!
    நாய் ஒத்தேன்; என்ன நலன் இழைத்தேன் நான்? என்றான். 48

  563. எதிரில் நின்றவனை இலக்குவன் நீ யார் என வினவல்

  564. என்று, ஆங்கு, இனிது இயம்பி, இன்று அறியக் கூறுவெனேல்,
    ஒன்றாது, தேவர் உறுதிக்கு என உன்னா,
    தன் தாயைக் கண்ணுற்ற கன்று அனைய தன்மையன் ஆய்,
    நின்றானைக் கண்டான்,-நெறி நின்றார் நேர் நின்றான். 49

  565. பாராய் இளையவனே! பட்ட இவன், வேறே ஓர்
    பேராளன் தானாய், ஒளி ஓங்கும் பெற்றியனாய்,
    நேர், ஆகாயத்தின் மிசை நிற்கின்றான்; நீ இவனை
    ஆராய்! என, அவனும், ஆர்கொலோ நீ? என்றான். 50

  566. தனுவின் வரலாறு

  567. சந்தப் பூண் அலங்கல் வீர! தனு எனும் நாமத்தேன்; ஓர்
    கந்தர்ப்பன்; சாபத்தால், இக் கடைப்படு பிறவி கண்டேன்;
    வந்துற்றீர் மலர்க்கை தீண்ட, முன்னுடை வடிவம் பெற்றேன்,
    எந்தைக்கும் எந்தை நீர்; யான் இசைப்பது கேண்மின் என்றான். 51

  568. தனு சவரியை அடைந்து சுக்கிரீவன் நட்பைப் பெறுமாறு கூறல்

  569. கணை உலாம் சிலையினீரைக் காக்குநர் இன்மையேனும்
    இணை இலாள்தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும்;
    புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது; அன்னதேபோல்,
    துணை இலாதவருக்கு இன்னா, பகைப் புலம் தொலைத்து நீக்கல். 52

  570. பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என்? பதும பீடத்து
    உழிப் பெருந்தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம்
    அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும், அறிதிர் அன்றே,
    ஒழிப்ப அருந் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை? 53

  571. ஆயது செய்கை என்பது, அறத் துறை நெறியின் எண்ணி,
    தீயவர்ச் சேர்க்கிலாது, செவ்வியோர்ச் சேர்ந்து, செய்தல்;
    தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியைத் தலைப்பட்டு, அன்னாள்
    ஏயது ஓர் நெறியின் எய்தி, இரலையின் குன்றம் ஏறி. 54

  572. கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை
    எதிர் எதிர் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின் ஈண்ட,
    வெதிர் பொரும் தோளினானை நாடுதல் விழுமிது என்றான்,
    அதிர் கழல் வீரர்தாமும், அன்னதே அமைவது ஆனார். 55

  573. மதங்கன் இருக்கை சேர்தல்

  574. ஆனபின், தொழுது வாழ்த்தி, அந்தரத்து அவனும் போனான்;
    மானவக் குமரர் தாமும் அத் திசை வழிக் கொண்டு ஏகி,
    கானமும் மலையும் நீங்கி, கங்குல் வந்து இறுக்கும் காலை,
    யானையின் இருக்கை அன்ன, மதங்கனது இருக்கை சேர்ந்தார். 56

  575. ஆரணிய காண்டம்

    13. சவரி பிறப்பு நீங்கு படலம்


    மதங்கன் தவச் சாலையின் சிறப்பு

  576. கண்ணிய தருதற்கு ஒத்த கற்பகத் தருவும் என்ன,
    உண்ணிய நல்கும் செல்வம் உறு நறுஞ் சோலை-ஞாலம்
    எண்ணிய இன்பம் அன்றி, துன்பங்கள் இல்லை ஆன,
    புண்ணியம் புரிந்தோர் வைகும்-துறக்கமே போன்றது அன்றே! 1

  577. சவரியின் விருந்தோம்பல்

  578. அன்னது ஆம் இருக்கை நண்ணி, ஆண்டுநின்ற, அளவு இல் காலம்,
    தன்னையே நினைந்து நோற்கும் சவரியைத் தலைப்பட்டு, அன்னாட்கு
    இன்னுரை அருளி, தீது இன்று இருந்தனைபோலும் என்றான் -
    முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது ஓர் மூலம் இல்லான். 2

  579. ஆண்டு, அவள் அன்பின் ஏத்தி, அழுது இழி அருவிக்கண்ணன்,
    மாண்டது என் மாயப் பாசம்; வந்தது, வரம்பு இல் காலம்
    பூண்ட மா தவத்தின் செல்வம்; போயது பிறவி என்பாள்,
    வேண்டிய கொணர்ந்து நல்க, விருந்துசெய்து இருந்த வேலை. 3

  580. ஈசனும், கமலத்தோனும், இமையவர் யாரும், எந்தை!
    வாசவன்தானும், ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி,
    ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது; இராமற்கு ஆய
    பூசனை விரும்பி, எம்பால் போதுதி என்று, போனார். 4

  581. இருந்தனென், எந்தை! நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை
    பொருந்திட, இன்றுதான் என் புண்ணியம் பூத்தது என்ன,
    அருந்தவத்து அரசிதன்னை அன்புற நோக்கி, எங்கள்
    வருந்துறு துயரம் தீர்த்தாய்; அம்மானை! வாழி என்றார். 5

  582. இரலைக் குன்றம் செல்லும் வழி கூறல்

  583. அனகனும் இளைய கோவும் அன்று அவண் உறைந்தபின்றை,
    வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் நோக்கி, வெய்ய
    துனை பரித் தேரோன் மைந்தன் இருந்த அத் துளக்கு இல் குன்றம்
    நினைவு அரிது ஆயற்கு ஒத்த நெறி எலாம் நினைந்து சொன்னாள். 6

  584. வீட்டினுக்கு அமைவது ஆன மெய்ந்நெறி வெளியிற்று ஆகக்
    காட்டுறும் அறிஞர் என்ன, அன்னவள் கழறிற்று எல்லாம்
    கேட்டனன் என்ப மன்னோ-கேள்வியால் செவிகள் முற்றும்
    தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான். 7

  585. சவரி வீடு எய்த, இராம இலக்குவர் பம்பைப் பொய்கை புகல்

  586. பின், அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே,
    தன் உடல் துறந்து, தான் அத் தனிமையின் இனிது சார்ந்தாள்;
    அன்னது கண்ட வீரர் அதிசயம் அளவின்று எய்தி,
    பொன் அடிக் கழல்கள் ஆர்ப்ப, புகன்ற மா நெறியில் போனார். 8

  587. தண் நறுங் கானும், குன்றும், நதிகளும், தவிரப் போனார்;
    மண்ணிடை வைகல்தோறும், வரம்பு இலா மாக்கள் ஆட,
    கண்ணிய வினைகள் என்னும் கட்டு அழல் கதுவலாலே,
    புண்ணியம் உருகிற்றன்ன பம்பை ஆம் பொய்கை புக்கார். 9