MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    Kamba Ramayanam Sundara kandam Part 2
    கம்பராமாயணம் சுந்தர காண்டம்
    7. கிங்கரர் வதைப் படலம்
    8. சம்புமாலி வதைப் படலம்
    9. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்
    10. அக்ககுமாரன் வதைப் படலம்
    11. பாசப் படலம்
    12. பிணி வீட்டு படலம்
    13. இலங்கை எரியூட்டு படலம்
    14. திருவடி தொழுத படலம்
    சுந்தர காண்டம்

    7. கிங்கரர் வதைப் படலம்


    அனுமனைப் பிடித்து வர இராவணன் ஆணையிடுதல்

  1. அரு வரை முழையில் முட்டும் அசனியின் இடிப்பும், ஆழி
    வெருவரு முழக்கும், ஈசன் வில் இறும் ஒலியும், என்ன,
    குரு மணி மகுட கோடி முடித் தலை குலுங்கும் வண்ணம்,
    இருபது செவியினூடும் நுழைந்தது, அவ் எழுந்த ஓசை. 1

  2. புல்லிய முறுவல் தோன்ற, பொறாமையும் சிறிது பொங்க,
    எல்லை இல் ஆற்றல் மாக்கள் எண் இறந்தாரை ஏவி,
    வல்லையின் அகலா வண்ணம், வானையும் வழியை மாற்றி,
    கொல்லலிர் குரங்கை, நொய்தின் பற்றுதிர், கொணர்திர் என்றான். 2

  3. அரக்க வீரர் போருக்குச் செல்லுதல்

  4. சூலம், வாள், முசலம், கூர் வேல், தோமரம், தண்டு, பிண்டி,
    பாலமே முதலா உள்ள படைக்கலம் பரித்த கையர்;
    ஆலமே அனைய மெய்யர்; அகலிடம் அழிவு செய்யும்
    காலம் மேல்எழுந்த மூரிக் கடல் என, கடிது செல்வார். 3

  5. நானிலம்அதனில் உண்டு போர் என நவிலின், அச் சொல்,
    தேனினும் களிப்புச் செய்யும் சிந்தையர், தெரிந்தும் என்னின்,
    கானினும் பெரியர்; ஓசை கடலினும் பெரியர்; கீர்த்தி
    வானினும் பெரியர்; மேனி மலையினும் பெரியர் மாதோ! 4

  6. திருகுறும் சினத்து, தேவர், தானவர், என்னும் தெவ்வர்
    இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார்; வசை ஆம், ஈது ஒர்
    பொரு குறும்பு ஏன்று, வென்றி புணர்வது; பூ உண் வாழ்க்கை
    ஒரு குறுங் குரங்கு! என்று எண்ணி, நெடிது நாண் உழக்கும் நெஞ்சர்; 5

  7. கட்டிய வாளர்; இட்ட கவசத்தர்; கழலர்; திக்கைத்
    தட்டிய தோளர்; மேகம் தடவிய கையர்; வானை
    எட்டிய முடியர்; தாளால் இடறிய பொருப்பர்; ஈட்டிக்
    கொட்டிய பேரி என்ன, மழை என, குமுறும் சொல்லார்; 6

  8. வானவர் எறிந்த தெய்வ அடு படை வடுக்கள், மற்றைத்
    தானவர் துரந்த ஏதித் தழும்பொடு தயங்கும் தோளர்;
    யானையும் பிடியும் வாரி இடும் பில வாயர்; ஈன்ற
    கூனல்வெண் பிறையின் தோன்றும் எயிற்றினர்; கொதிக்கும் கண்ணர்; 7

  9. சக்கரம், உலக்கை, தண்டு, தாரை, வாள், பரிசம், சங்கு,
    முற்கரம், முசுண்டி, பிண்டிபாலம், வேல், சூலம், முட்கோல்,
    பொன் கரக் குலிசம், பாசம், புகர் மழு, எழு பொன் குந்தம்,
    வில், கருங் கணை, விட்டேறு, கழுக்கடை, எழுக்கள் மின்ன. 8

  10. பொன் நின்று கஞலும் தெய்வப் பூணினர்; பொருப்புத் தோளர்;
    மின் நின்ற படையும், கண்ணும், வெயில் விரிக்கின்ற மெய்யர்;
    என்? என்றார்க்கு, என்? என்? என்றார்; எய்தியது அறிந்திலாதார்;
    முன் நின்றார் முதுகு தீய, பின் நின்றார் முடுகுகின்றார். 9

  11. வெய்துறு படையின் மின்னர்; வில்லினர்; வீசு காலர்;
    மையுறு விசும்பின் தோன்றும் மேனியர்; மடிக்கும் வாயர்;
    கை பரந்து உலகு பொங்கிக் கடையுகம் முடியும்காலை,
    பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார். 10

  12. பனி உறு செயலை சிந்தி, வேரமும் பறித்தது, அம்மா!
    தனி ஒரு குரங்கு போலாம்! நன்று நம் தருக்கு! என்கின்றார்;
    இனி ஒரு பழி மற்று உண்டோ இதனின்? என்று இரைத்துப் பொங்கி,
    முனிவுறு மனத்தின் தாவி, முந்துற முடுகுகின்றார். 11

  13. எற்றுறு முரசும், வில், நாண் ஏறவிட்டு எடுத்த ஆர்ப்பும்,
    சுற்றுறு கழலும், சங்கும், தெழி தெழித்து உரப்பும் சொல்லும்,
    உற்று உடன்று ஒன்றாய், ஓங்கி ஒலித்து எழுந்து, ஊழிப் பேர்வில்
    நல் திரைக் கடல்களோடு மழைகளை, நா அடக்க. 12

  14. தெரு இடம் இல் என்று எண்ணி, வானிடைச் செல்கின்றாரும்,
    புருவமும் சிலையும் கோட்டி, புகை உயிர்த்து உயிர்க்கின்றாரும்,
    ஒருவரின் ஒருவர் முந்தி, முறை மறுத்து உருக்கின்றாரும்,
    விரிவு இலது இலங்கை என்று, வழி பெறார் விளிக்கின்றாரும். 13

  15. வாள் உறை விதிர்க்கின்றாரும், வாயினை மடிக்கின்றாரும்,
    தோள் உறத் தட்டிக் கல்லைத் துகள்படத் துகைக்கின்றாரும்,
    தாள் பெயர்த்து இடம் பெறாது தருக்கினர் நெருக்குவாரும்,
    கோள் வளை எயிறு தின்று தீ எனக் கொதிக்கின்றாரும், 14

  16. அனைவரும், மலை என நின்றார்; அளவு அறு படைகள் பயின்றார்;
    அனைவரும், அமரின் உயர்ந்தார்; அகலிடம் நெளிய நடந்தார்;
    அனைவரும், வரனின் அமைந்தார்; அசனியின் அணிகள் அணிந்தார்;
    அனைவரும், அமரரை வென்றார்; அசுரரை உயிரை அயின்றார். 15

  17. குறுகின கவசரும், மின்போல் குரை கழல் உரகரும், வன் போர்
    முறுகின பொழுதின், உடைந்தார் முதுகிட, முறுவல் பயின்றார்;
    இறுகின நிதியின் கிழவன் இசை கெட, அளகை எறிந்தார்;
    தெறுகுநர் இன்மையின், வன் தோள், தினவுற உலகு திரிந்தார். 16

  18. வரைகளை இடறுமின் என்றால், மறி கடல் பருகுமின் என்றால்,
    இரவியை விழ விடும் என்றால், எழு மழை பிழியுமின் என்றால்,
    அரவினது அரசனை, ஒன்றோ, தரையினொடு அரையுமின் என்றால்,
    தரையினை எடும், எடும் என்றால், ஒருவர் அது அமைதல் சமைந்தார். 17

  19. தூளியின் நிமிர் படலம் போய் இமையவர் விழி துற, வெம் போர்
    மீளியின் இனம் என, வன் தாள் விரை புவி நிரை என, விண் தோய்
    ஆளியின் அணி என, அன்றேல், அலை கடல் விடம் என, அஞ்சார்,
    வாளியின் விசைகொடு திண் கார் வரை வருவன என, வந்தார். 18

  20. அனுமன் இருக்கும் பொழிலைக் கிங்கரர் சுற்றி வளைத்தல்

  21. பொறி தர விழி, உயிர் ஒன்றோ? புகை உக, அயில் ஒளி மின்போல்
    தெறி தர, உரும் அதிர்கின்றார்; திசைதொறும் விசைகொடு சென்றார்
    எறிதரு கடையும் வன் கால் இடறிட, உடுவின் இனம் போய்
    மறிதர, மழை அகல் விண்போல் வடிவு அழி பொழிலை, வளைந்தார். 19

  22. அரக்க வீரர் போருக்கு வருவது கண்டு அனுமன் உவத்தல்

  23. வயிர் ஒலி, வளை ஒலி, வன் கார் மழை ஒலி முரசு ஒலி, மண்பால்
    உயிர் உலைவுற நிமிரும் போர் உறும் ஒலி, செவியின் உணர்ந்தான்;
    வெயில் விரி கதிரவனும் போய் வெருவிட, வெளியிடை, விண் நோய்
    கயிலையின்மலை என நின்றான்; அனையவர் வரு தொழில் கண்டான். 20

  24. இத இயல் இது என, முந்தே இயைவுற இனிது தெரிந்தான்;
    பத இயல் அறிவு பயத்தால், அதின் நல பயன் உளது உண்டோ?
    சிதவு இயல் கடி பொழில் ஒன்றே சிதறிய செயல் தரு திண் போர்
    உதவு இயல் இனிதின் உவந்தான்,-எவரினும் அதிகம் உயர்ந்தான். 21

  25. வீரர்கள் படைகளை ஏவ அனுமன் ஒரு மரத்தால் அவர்களை எதிர்த்தல்

  26. இவன்! இவன்! இவன்! என நின்றார்; இது! என, முதலி எதிர்ந்தார்;-
    பவனனின் முடுகி நடந்தார், பகல் இரவு உற மிடைகின்றார்-
    புவனியும், மலையும் விசும்பும், பொரு அரு நகரும், உடன் போர்த்
    துவனியில் அதிர, விடம்போல் சுடர் விடு படைகள் துரந்தார். 22

  27. மழைகளும், மறி கடலும், போய் மதம் அற முரசம் அறைந்தார்;
    முழைகளின் இதழ்கள் திறந்தார்; முது புகை கதுவ முனிந்தார்;
    பிழை இல பட அரவின் தோள் பிடர் உற, அடி இடுகின்றார்;
    கழை தொடர் வனம் எரியுண்டாலென, எறி படைஞர் கலந்தார். 23

  28. அறவனும் அதனை அறிந்தான்; அருகினில் அழகின் அமைந்தார்
    இறவினின் உதவு நெடுந் தார் உயர் மரம் ஒரு கை இயைந்தான்;
    உற வரு துணை என அன்றோ, உதவிய அதனை, உவந்தான்;
    நிறை கடல் கடையும் நெடுந் தாள் மலை என, நடுவண் நிமிர்ந்தான். 24

  29. பருவரை புரைவன வன் தோள், பனிமலை அருவி நெடுங் கால்
    சொரிவன பல என, மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார்;
    ஒருவரை ஒருவர் தொடர்ந்தார்; உயர் தலை உடைய உருண்டார்-
    அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான். 25

  30. அனுமனை எதிர்த்து, அரக்க வீரர் பலர் இறந்துபடுதல்

  31. பறை புரை விழிகள் பறிந்தார்; படியிடை நெடிது படிந்தார்;
    பிறை புரை எயிறும் இழந்தார்; பிடரொடு தலைகள் பிளந்தார்;
    குறை உயிர் சிதற நெரிந்தார்; குடரொடு குருதி குழைந்தார்;-
    முறை முறை படைகள் எறிந்தார்-முடை உடல் மறிய முறிந்தார். 26

  32. புடையொடு விடு கனலின் காய் பொறியிடை, மயிர்கள் புகைந்தார்;
    தொடையொடு முதுகு துணிந்தார்; சுழிபடு குருதி சொரிந்தார்;
    படை இடை ஒடிய, நெடுந் தோள் பறி தர, வயிறு திறந்தார்;
    இடை இடை, மலையின் விழுந்தார்-இகல் பொர முடுகி எழுந்தார். 27

  33. புதைபட இருளின் மிடைந்தார், பொடியிடை நெடிது புரண்டார்;
    விதைபடும் உயிரர் விழுந்தார்; விளியொடு விழியும் இழந்தார்;
    கதையொடு முதிர மலைந்தார், கணை பொழி சிலையர் கலந்தார்,
    உதைபட உரனும் நெரிந்தார்; உயிரொடு குருதி உமிழ்ந்தார். 28

  34. அயல், அயல், மலையொடு அறைந்தான்; அடு பகை அளகை அடைந்தார்;
    வியல் இடம் மறைய விரிந்தார்; மிசை உலகு அடைய மிடைந்தார்;
    புயல் தொடு கடலின் விழுந்தார்; புடை புடை சிதைவொடு சென்றார்.
    உயர்வுற விசையின் எறிந்தான்; உடலொடும் உலகு துறந்தார். 29

  35. பற்றித் தாளொடு தோள் பறித்து எறிந்தனன்; பாரின்,
    இற்ற வெஞ் சிறை வெற்புஇனம் ஆம் எனக் கிடந்தார்;
    கொற்ற வாலிடைக் கொடுந் தொழில் அரக்கரை அடங்கச்
    சுற்றி வீசலின், பம்பரம் ஆம் எனச் சுழன்றார். 30

  36. வாள்கள் இற்றன; இற்றன வரி சிலை; வயிரத்
    தோள்கள் இற்றன; இற்றன சுடர் மழுச் சூலம்;
    நாள்கள் இற்றன; இற்றன நகை எயிற்று ஈட்டம்;
    தாள்கள் இற்றன; இற்றன படையுடைத் தடக் கை. 31

  37. தெறித்த வன் தலை; தெறித்தன செறி சுடர்க் கவசம்;
    தெறித்த பைங் கழல்; தெறித்தன சிலம்பொடு பொலந் தார்;
    தெறித்த பல் மணி; தெறித்தன பெரும் பொறித் திறங்கள்;
    தெறித்த குண்டலம்; தெறித்தன கண் மணி சிதறி. 32

  38. உக்க பற் குவை; உக்கன, துவக்கு எலும்பு உதிர்வுற்று;
    உக்க முற்கரம்; உக்கன, முசுண்டிகள் உடைவுற்று;
    உக்க சக்கரம்; உக்கன, உடல் திறந்து உயிர்கள்;
    உக்க கப்பணம்; உக்கன, உயர் மணி மகுடம். 33

  39. தாள்களால் பலர், தடக் கைகளால் பலர், தாக்கும்
    தோள்களால் பலர், சுடர் விழியால் பலர், தொடரும்
    கோள்களால் பலர், குத்துகளால் பலர், தம் தம்
    வாள்களால் பலர், மரங்களினால் பலர்,-மடிந்தார். 34

  40. ஈர்க்க, பட்டனர் சிலர்; சிலர் இடிப்புண்டு பட்டார்;
    பேர்க்க, பட்டனர் சிலர்; சிலர் பிடியுண்டு பட்டார்;
    ஆர்க்க, பட்டனர் சிலர்; சிலர் அடியுண்டு பட்டார்;
    பார்க்க, பட்டனர் சிலர்; சிலர் பயமுண்டு பட்டார். 35

  41. ஓடிக் கொன்றனன் சிலவரை; உடல் உடல்தோறும்
    கூடிக் கொன்றனன் சிலவரை; கொடி நெடு மரத்தால்
    சாடிக் கொன்றனன் சிலவரை; பிணம்தொறும் தடவித்
    தேடிக் கொன்றனன் சிலவரை-கறங்கு எனத் திரிவான். 36

  42. முட்டினார் பட, முட்டினான்; முறை முறை முடுகிக்
    கிட்டினார் பட, கிட்டினான்; கிரி என நெருங்கிக்
    கட்டினார் பட, கட்டினான்; கைகளால் மெய்யில்
    தட்டினார் பட, தட்டினான்-மலை எனத் தகுவான். 37

  43. உறக்கினும் கொல்லும்; உணரினும் கொல்லும்; மால் விசும்பில்
    பறக்கினும் கொல்லும்; படரினும் கொல்லும்; மின் படைக் கை,
    நிறக் கருங் கழல், அரக்கர்கள் நெறிதொறும் பொறிகள்
    பிறக்க நின்று எறி படைகளைத் தடக் கையால் பிசையும். 38

  44. சேறும் வண்டலும் மூளையும் நிணமுமாய்த் திணிய,
    நீறு சேர் நெடுந் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப,
    ஆறுபோல் வரும் குருதி, அவ் அனுமனால் அலைப்புண்டு,
    ஈறு இல் வாய்தொறும் உமிழ்வதே ஒத்தது, அவ் இலங்கை. 39

  45. அனுமன் பெரும் போர் விளைத்தல்

  46. கருது காலினும், கையினும், வாலினும் கட்டி,
    சுருதியே அன்ன மாருதி மரத்திடை துரப்பான்;
    நிருதர், எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார்;
    குருதி சாறு எனப் பாய்வது, குரை கடல் கூனின். 40

  47. எடுத்து அரக்கரை எறிதலும், அவர் உடல் எற்ற,
    கொடித் திண் மாளிகை இடிந்தன; மண்டபம் குலைந்த;
    தடக் கை யானனகள் மறிந்தன; கோபுரம் தகர்ந்த;
    பிடிக் குலங்களும் புரவியும் அவிந்தன, பெரிய. 41

  48. தம் தம் மாடங்கள் தம் உடலால் சிலர் தகர்த்தார்;
    தம் தம் மாதரைத் தம் கழலால் சிலர் சமைத்தார்;
    தம் தம் மாக்களைத் தம் படையால் சிலர் தடிந்தார்;-
    எற்றி மாருதி தடக் கைகளால் விசைத்து எறிய. 42

  49. ஆடல் மாக் களிறு அனையவன், அரக்கியர்க்கு அருளி,
    வீடு நோக்கியே செல்க என்று, சிலவரை விட்டான்;
    கூடினார்க்கு அவர் உயிர் எனச் சிலவரைக் கொடுத்தான்;
    ஊடினார்க்கு அவர் மனைதொறும் சிலவரை உய்த்தான். 43

  50. தரு எலாம் உடல்; தெற்றி எலாம் உடல்; சதுக்கத்து
    உரு எலாம் உடல்; உவரி எலாம் உடல்; உள்ளூர்க்
    கரு எலாம் உடல்; காயம் எலாம் உடல்; அரக்கர்
    தெரு எலாம் உடல்; தேயம் எலாம் உடல்-சிதறி. 44

  51. ஊன் எலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான்;-
    தான், எலாரையும், மாருதி சாடுகை தவிரான்;-
    மீன் எலாம் உயிர்; மேகம் எலாம் உயிர்; மேல் மேல்
    வான் எலாம் உயிர்; மற்றும் எலாம் உயிர்-சுற்றி. 45

  52. அரக்கர்களின் நடுவே அனுமன் விளங்கிய காட்சி

  53. ஆக இச் செரு விளைவுறும் அமைதியின், அரக்கர்
    மோகம் உற்றனர் ஆம் என, முறை முறை முனிந்தார்;
    மாகம் முற்றவும், மாதிரம் முற்றவும், வளைந்தார்,
    மேகம் ஒத்தனர்-மாருதி வெய்யவன் ஒத்தான். 46

  54. அடல் அரக்கரும், ஆர்த்தலின், அலைத்தலின், அயரப்
    புடை பெருத்து உயர் பெருமையின், கருமையின் பொலிவின்,
    மிடல் அயில் படை மின் என விலங்கலின், கலங்கும்
    கடல் நிகர்த்தனர்-மாருதி மந்தரம் கடுத்தான். 47

  55. கரதலத்தினும் காலினும் வாலினும் கதுவ,
    நிரை மணித் தலை நெரிந்து உக, சாய்ந்து உயிர் நீப்பார்,
    சுரர் நடுக்குற அமுது கொண்டு எழுந்த நாள், தொடரும்
    உரகர் ஒத்தனர்-அனுமனும் கலுழனே ஒத்தான். 48

  56. மானம் உற்ற தம் பகையினால், முனிவுற்று வளைந்த
    மீனுடைக் கடல் உலகினின், உள எலாம் மிடைந்த
    ஊன் அறக் கொன்று துகைக்கவும், ஒழிவு இலா நிருதர்
    ஆனை ஒத்தனர்-ஆள் அரி ஒத்தனன் அனுமன். 49

  57. அனுமன் விழுப் புண் பட்டு நிற்றல்

  58. எய்த, எற்றின, எறிந்தன, ஈர்த்தன, இகலின்
    பொய்த, குத்தின, பொதுத்தன, துளைத்தன, போழ்ந்த,
    கொய்த, சுற்றின, பற்றின, குடைந்தன, பொலிந்த
    ஐயன் மல் பெரும் புயத்தன, புண் அளப்பு அரிதால். 50

  59. விண்ணவர் அனுமனைப் புகழ்தல்

  60. கார்க் கருந் தடங் கடல்களும், மழை முகில் கணனும்,
    வேர்க்க, வெஞ் செரு விளைத்து எழும் வெள் எயிற்று அரக்கர்
    போர்க் குழாத்து எழு பூசலின், ஐயனைப் புகழ்வுற்று
    ஆர்க்கும் விண்ணவர் அமலையே, உயர்ந்தது, அன்று அமரில். 51

  61. தேவர் முதலியோர் பூமாரி பொழிதல்

  62. மேவும் வெஞ் சினத்து அரக்கர்கள், முறை முறை, விசையால்
    ஏவும் பல் படை, எத்தனை கோடிகள் எனினும்,
    தூவும் தேவரும், மகளிரும், முனிவரும் சொரிந்த
    பூவும், புண்களும், தெரிந்தில, மாருதி புயத்தில். 52

  63. அரக்க வீரர்கள் அழிவு

  64. பெயர்க்கும் சாரிகை கறங்கு எனத் திசைதொறும் பெயர்வின்,
    உயர்க்கும் விண்மிசை ஓங்கலின், மண்ணின் வந்து உறலின்,
    அயர்ந்து வீழ்ந்தனர், அழிந்தனர், அரக்கராய் உள்ளார்;
    வெயர்த்திலன் மிசை; உயிர்த்திலன் - நல் அற வீரன். 53

  65. எஞ்சல் இல் கணக்கு அறிந்திலம்; இராவணன் ஏவ,
    நஞ்சம் உண்டவராம் என அனுமன்மேல் நடந்தார்;
    துஞ்சினார் அல்லது யாவரும் மறத்தொடும் தொலைவுற்று,
    எஞ்சினார் இல்லை; அரக்கரில் வீரர் மற்று யாரே? 54

  66. கிங்கரர் மடிந்ததைக் காவலர் இராவணனுக்கு உணர்த்துதல்

  67. வந்த கிங்கரர் ஏ எனும் மாத்திரை மடிந்தார்;
    நந்தவானத்து நாயகர் ஓடினர், நடுங்கி,
    பிந்து காலினர், கையினர்; பெரும் பயம் பிடரின்
    உந்த, ஆயிரம் பிணக் குவைமேல் விழுந்து உளைவார். 55

  68. விரைவின் உற்றனர்; விம்மினர்; யாது ஒன்றும் விளம்பார்;
    கரதலத்தினால், பட்டதும், கட்டுரைக்கின்றார்;
    தரையில் நிற்கிலர்; திசைதொறும் நோக்கினர், சலிப்பார்;
    அரசன், மற்றவர் அலக்கணே உரைத்திட, அறிந்தான். 56

  69. இராவணன் வினாவும், காவலர் விடையும்

  70. இறந்து நீங்கினரோ? இன்று, என் ஆணையை இகழ்ந்து
    துறந்து நீங்கினரோ? அன்றி, வெஞ் சமர் தொலைந்தார்
    மறந்து நீங்கினரோ? என்கொல் வந்தது? என்று உரைத்தான் -
    நிறம் செருக்குற, வாய்தொறும் நெருப்பு உமிழ்கின்றான். 57

  71. சலம் தலைக்கொண்டனர் ஆய தன்மையார்
    அலந்திலர்; செருக்களத்து அஞ்சினார் அலர்;
    புலம் தெரி பொய்க் கரி புகலும் புன்கணார்
    குலங்களின், அவிந்தனர், குரங்கினால் என்றார். 58

  72. காவலர் உரையை நம்பாது, மீண்டும் இராவணன் வினவுதல்

  73. ஏவலின் எய்தினர் இருந்த எண் திசைத்
    தேவரை நோக்கினான், நாணும் சிந்தையான்;
    யாவது என்று அறிந்திலிர் போலுமால்? என்றான் -
    மூவகை உலகையும் விழுங்க மூள்கின்றான். 59

  74. மீட்டு அவர் உரைத்திலர்; பயத்தின் விம்முவார்;
    தோட்டு அலர் இன மலர்த் தொங்கல் மோலியான்,
    வீட்டியது அரக்கரை என்னும் வெவ் உரை,
    கேட்டதோ? கண்டதோ? கிளத்துவீர் என்றான். 60

  75. கண்களால் கண்டனம் என்றனர் காவலர்

  76. கண்டனம், ஒருபுடை நின்று, கண்களால்;
    தெண் திரைக் கடல் என வளைந்த சேனையை,
    மண்டலம் திரிந்து, ஒரு மரத்தினால், உயிர்
    உண்டது, அக் குரங்கு; இனம் ஒழிவது அன்று என்றார்; 61

  77. மிகைப் பாடல்கள்

  78. ஓசையின் இடிப்பும் கேட்டு, ஆங்கு உருத்து எழு சினத்தின் ஆகி,
    ஈசன் மால் எனினும் ஒவ்வாது, ஈது ஒரு குரங்கு போலாம்!
    கூசிடாது இலங்கை புக்கு, இக் குல மலர்ச் சோலையோடு
    மாசு அறு நகரை மாய்க்கும் வலிமை நன்று! என்ன நக்கான். 1-1

  79. என்றலும், இரு கை கூப்பி, இரு நிலம் நுதலில் தோய,
    சென்று அடி பணிந்து, மண்ணும் தேவரும் திசையும் உட்க,
    வென்றி அன்று எனினும், வல்லே விரைந்து நாம் போகி, வீரக்
    குன்று அன குரங்கைப் பற்றிக் கொணர்தும் என்று இசைத்துப் போனார். 2- 1

  80. அதுபொழுது, அவர் அது கண்டார்; அடு படை பலவும் எறிந்தார்;
    கதிகொடு சிலவர் தொடர்ந்தார்; கணை பலர் சிலைகள் பொழிந்தார்;
    குதிகொடு சிலவர் எழுந்தே குறுகினர், கதைகொடு அறைந்தார்;
    மதியொடு சிலவர் வளைந்தார்; மழு, அயில், சிலவர் எறிந்தார். 24-1

  81. அனுமனும், அவர் விடு படையால், அவர் உடல் குருதிகள் எழவே,
    சின அனல் எழ, ஒரு திணி மா மரம்அதில் உடல் சிதறிடவும்,
    தனுவொடு தலைதுகள்படவும், சர மழை பல பொடிபடவும்,
    தினவு உறு புயம் ஒடிபடவும், திசை திசை ஒரு தனி திரிவான். 24-2

  82. உரைத்த எண்பதினாயிர கோடி கிங்கரரோடு
    இரைத்து வந்த மாப் பெரும் படை அரக்கர் எண்ணிலரைத்
    தரைத்தலத்தின் இட்டு அரைத்து, ஒரு தமியன் நின்றது கண்டு,
    உருத்து அவ் எண்பதினாயிர கோடியர் உடன்றார். 39-1

  83. சினந்து மற்று அவர், தீ எழப் படைக்கலம் சிதறி,
    கனம் துவன்றியது என, கரு மலை என, கடல் போல்-
    அனந்தனும் தலை துளக்குற, அமரர்கள் அரவின்
    மனம் துளக்குற, வளைத்தனர்,-எண் திசை மருங்கும். 39-2

  84. எடுத்து எறிந்தனர் எழு மழுச் சிலர்; சிலர் நெருக்கித்
    தொடுத்து எறிந்தனர் சூலங்கள்; சுடு கதைப் படையால்
    அடித்து நின்றனர் சிலர்; சிலர் அருஞ் சிலைப் பகழி
    விடுத்து நின்றனர்-வெய்யவர் விளைந்த வெஞ் செருவே. 39-3

  85. ஒழிந்திடும் கடை உகத்தினில் உற்ற கார்இனங்கள்
    வளைந்து பொன் கிரிமேல் விழும் இடி என, மறவோர்
    பொழிந்த பல் படை யாவையும் புயத்திடைப் பொடிபட்டு
    அழுந்த, மற்றவரோடும் வந்து அடுத்தனன், அனுமன். 39-4

  86. கட்டும் என்றனர்; குரங்கு இது கடிய கைப் படையால்
    வெட்டும் என்றனர்; விழி வழி நெருப்பு உக, விறலோர்
    கிட்டி நின்று அமர் விளைத்தனர்; மாருதி கிளர் வான்
    முட்டும் மா மரம் ஒன்று கொண்டு, அவருடன் முனைந்தான். 39-5

  87. தலை ஒடிந்திட அடித்தனன், சிலர்தமை; தாளின்
    நிலை ஒடிந்திட அடித்தனன், சிலர்தமை; நெருக்கிச்
    சிலை ஒடிந்திட அடித்தனன், சிலர்தமை; வயப் போர்க்
    கலை ஒடிந்திட அடித்தனன், அரக்கர்கள் கலங்க. 40-1

  88. என்றலும் அரக்கர் வேந்தன் எரி கதிர் என்ன நோக்கி,
    கன்றிய பவழச் செவ் வாய் எயிறு புக்கு அழுந்தக் கவ்வி,
    ஒன்று உரையாடற்கு இல்லான், உடலமும் விழியும் சேப்ப,
    நின்ற வாள் அரக்கர்தம்மை நெடிதுற நோக்கும்காலை. 61-1

  89. சுந்தர காண்டம்

    8. சம்புமாலி வதைப் படலம்


    அனுமனைப் பிணித்து வருமாறு சம்புமாலியை இராவணன் ஏவுதல்

  90. கூம்பின கையன், நின்ற குன்று எனக் குவவுத் திண் தோள்,
    பாம்பு இவர் தறுகண், சம்புமாலி என்பவனைப் பாரா,
    வாம் பரித் தானையோடு வளளத்து, அதன் மறனை மாற்றி,
    தாம்பினின் பற்றி, தந்து, என் மனச் சினம் தணித்தி என்றான். 1

  91. சம்புமாலி இராவணனை வணங்கி, போருக்குப் புறப்படுதல்

  92. ஆயவன் வணங்கி, ஐய! அளப்பரும் அரக்கர் முன்னர்,
    நீ இது முடித்தி என்று நேர்ந்தனை; நினைவின் எண்ணி
    ஏயினை; என்னப்பெற்றால், என்னின் யார் உயர்ந்தார்? என்னா,
    போயினன், இலங்கை வேந்தன் போர்ச் சினம் போவது ஒப்பான். 2

  93. சம்புமாலியுடன் சென்ற சேனைகள்

  94. தன்னுடைத் தானையோடும், தயமுகன், தருக என்று ஏய
    மன்னுடைச் சேனையோடும், தாதை வந்து ஈந்த வாளின்
    மின்னுடைப் பரவையோடும், வேறுளோர் சிறப்பின் விட்ட
    பின்னுடை அனிகத்தோடும், பெயர்ந்தனன்,-பெரும் போர் பெற்றான். 3

  95. உரும் ஒத்த முழக்கின், செங் கண், வெள் எயிற்று, ஓடை நெற்றி,
    பருமித்த கிரியின் தோன்றும், வேழமும்-பதுமத்து அண்ணல்
    நிருமித்த எழிலி முற்றிற்று என்னலாம் நிலைய, நேமி,
    சொரி முத்த மாலை சூழும், துகிற்கொடி, தடந் தேர்-சுற்ற; 4

  96. காற்றினை மருங்கில் கட்டி, கால் வகுத்து, உயிரும் கூட்டி,
    கூற்றினை ஏற்றியன்ன குலப் பரி குழுவ; குன்றின்
    தூற்றினின் எழுப்பி, ஆண்டு, தொகுத்தென, கழல் பைங் கண்ண
    வேற்று இனப் புலிஏறு என்ன வியந்து எழும் பதாதி ஈட்டம். 5

  97. தோமரம், உலக்கை, கூர் வாள், சுடர் மழு, குலிசம், தோட்டி,
    தாம் அரம் தின்ற கூர் வேல், தழல் ஒளி வட்டம், சாபம்,
    காமர் தண்டு, எழுக்கள், காந்தும் கப்பணம், கால பாசம்,
    மா மரம், வலயம், வெங் கோல், முதலிய வயங்க மாதோ. 6

  98. எத்திய அயில், வேல், குந்தம், எழு, கழு முதல ஏந்தி,
    குத்திய-திளைப்ப; மீதில் குழுவின மழை மாக் கொண்டல்
    பொத்து உகு பொரு இல் நல் நீர் சொரிவன போவ போல,
    சித்திரப் பதாகை ஈட்டம் திசைதொறும் செறிவ செல்வ; 7

  99. பல்லியம் துவைப்ப, நல் மாப் பணிலங்கள் முரல, பொன் தேர்ச்
    சில்லிகள் இடிப்ப, வாசி சிரித்திட, செறி பொன் தாரும்
    வில்லும் நின்று இசைப்ப, யானை முழக்கம் விட்டு ஆர்ப்ப, விண் தோய்
    ஒல் ஒளி வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்க மன்னோ; 8

  100. மின் நகு கிரிகள் யாவும் மேருவின் விளங்கித் தோன்ற,
    தொல் நகர் பிறவும் எல்லாம் பொலிந்தன, துறக்கம் என்ன-
    அன்னவன் சேனை செல்ல, ஆர்கலி இலங்கை ஆய
    பொன் நகர் தகர்ந்து, பொங்கி ஆர்த்து எழு தூளி போர்ப்ப. 9

  101. ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம், ஆழி அம் தடந் தேர்; அத் தேர்க்கு
    ஏயின் இரட்டி யானை; யானையின் இரட்டி பாய் மா;
    போயின பதாதி, சொன்ன புரவியின் இரட்டி போலாம்-
    தீயவன் தடந் தேர் சுற்றித் தெற்றெனச் சென்ற சேனை. 10

  102. வில் மறைக் கிழவர்; நானா விஞ்சையர்; வரத்தின் மிக்கார்;
    வன் மறக் கண்ணர்; ஆற்றல் வரம்பு இலா வயிரத் தோளார்;
    தொல் மறக் குலத்தர்; தூணி தூக்கிய புறத்தர்; மார்பின்
    கல் மறைத்து ஒளிரும் செம் பொன் கவசத்தர்-கடுந் தேர் ஆட்கள். 11

  103. பொரு திசை யானை ஊரும் புனிதரைப் பொருவும் பொற்பர்;
    சுரிபடைத் தொழிலும், மற்றை அங்குசத் தொழிலும், தொக்கார்;
    நிருதியின் பிறந்த வீரர்; நெருப்பு இடை பரப்பும் கண்ணர்;
    பரிதியின் பொலியும் மெய்யர்-படு மதக் களிற்றின் பாகர். 12

  104. ஏர் கெழு கதியும், சாரி பதினெட்டும், இயல்பின் எண்ணிப்
    போர் கெழு படையும் கற்ற வித்தகப் புலவர், போரில்,
    தேர் கெழு மறவர், யானைச் சேவகர், சிரத்தில் செல்லும்
    தார் கெழு புரவி என்னும் தம் மனம் தாவப் போனார். 13

  105. அந் நெடுந் தானை சுற்ற, அமரரை அச்சம் சுற்ற,
    பொன் நெடுந் தேரில் போனான் - பொருப்பிடை நெருப்பின் பொங்கி,
    தன் நெடுங் கண்கள் காந்த, தாழ் பெருங் கவசம் மார்பில்
    மின்னிட, வெயிலும் வீச,-வில் இடும் எயிற்று வீரன். 14

  106. தோரண வாயில் மேல் ஏறி, அனுமன் ஆர்ப்பரித்தல்

  107. நந்தனவனத்துள் நின்ற நாயகன் தூதன்தானும்,
    வந்திலர் அரக்கர் என்னும் மனத்தினன், வழியை நோக்கி,
    சந்திரன் முதல வான மீன் எலாம் தழுவ நின்ற
    இந்திர தனுவின் தோன்றும் தோரணம் இவர்ந்து, நின்றான். 15

  108. கேழ் இரு மணியும் பொன்னும், விசும்பு இருள் கிழித்து நீக்கும்,
    ஊழ் இருங் கதிர்களோடும் தோரணத்து உம்பர் மேலான்,
    சூழ் இருங் கதிர்கள் எல்லாம் தோற்றிடச் சுடரும் சோதி,
    ஆழியன் நடுவண் தோன்றும் அருக்கனே அனையன் ஆனான். 16

  109. செல்லொடு மேகம் சிந்த, திரைக் கடல் சிலைப்புத் தீர,
    கல் அளைக் கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால,
    கொல் இயல் அரக்கர் நெஞ்சில் குடி புக அச்சம், வீரன்
    வில் என இடிக்க, விண்ணோர் நடுக்குற, வீரன் ஆர்த்தான். 17

  110. நின்றன திசைக்கண் வேழம் நெடுங் களிச் செருக்கு நீங்க,
    தென் திசை நமனும் உள்ளம் துணுக்கென, சிந்தி வானில்
    பொன்றல் இல் மீன்கள் எல்லாம் பூ என உதிர, பூவும்
    குன்றமும் பிளக்க, வீரன் புயத்திடைக் கொட்டி ஆர்த்தான். 18

  111. அனுமனை அணுக முடியாது அரக்க வீரர் தவித்தல்

  112. அவ் வழி, அரக்கர் எல்லாம், அலை நெடுங் கடலின் ஆர்த்தார்;
    செவ் வழிச் சேறல் ஆற்றார், பிணப் பெருங் குன்றம் தெற்றி,
    வெவ் வழி குருதி வெள்ளம் புடை மிடைந்து உயர்ந்து வீங்க,
    எவ் வழிச் சேறும் என்றார்; தமர் உடம்பு இடறி வீழ்வார். 19

  113. சம்புமாலி அணி வகுத்துவர, அனுமன் மகிழ்ந்து போருக்கு அமைந்து நிற்றல்

  114. ஆண்டு நின்று, அரக்கன், வெவ்வேறு அணி வகுத்து, அனிகம்தன்னை,
    மூண்டு இரு புடையும், முன்னும், முறை முறை முடுக ஏவி,
    தூண்டினன், தானும் திண் தேர்; தோரணத்து இருந்த தோன்றல்,
    வேண்டியது எதிர்ந்தான் என்ன, வீங்கினன், விசயத் திண் தோள். 20

  115. ஐயனும், அமைந்து நின்றான், ஆழியான் அளவின் நாமம்
    நெய் சுடர் விளக்கின் தோன்றும் நெற்றியே நெற்றியாக,
    மொய் மயிர்ச் சேனை பொங்க, முரண் அயில் உகிர்வாள் மொய்த்த
    கைகளே கைகள் ஆக, கடைக் கூழை திரு வால் ஆக. 21

  116. அரக்கர்கள் படை துகள் பட அனுமன் கடும் போர் செய்தல்

  117. வயிர்கள் வால் வளைகள் விம்ம, வரி சிலை சிலைப்ப, மாயப்
    பயிர்கள் ஆர்ப்பு எடுப்ப, மூரிப் பல்லியம் குமுற, பற்றி-
    செயிர் கொள் வாள் அரக்கர், சீற்றம் செருக்கினர்,-படைகள் சிந்தி,
    வெயில்கள்போல் ஒளிகள் வீச, வீரன் மேல் கடிது விட்டார். 22

  118. கருங் கடல் அரக்கர்தம் படைக்கலம் கரத்தால்
    பெருங் கடல் உறப் புடைத்து, இறுத்து, உக, பிசைந்தான்;
    விரிந்தன பொறிக் குலம்; நெருப்பு என வெகுண்டு, ஆண்டு
    இருந்தவன், கிடந்தது ஓர் எழுத் தெரிந்து எடுத்தான். 23

  119. இருந்தனன், எழுந்தனன், இழிந்தனன், உயர்ந்தான்,
    திரிந்தனன், புரிந்தனன், என நனி தெரியார்;
    விரிந்தவர், குவிந்தவர், விலங்கினர், கலந்தார்,
    பொருந்தினர், நெருங்கினர், களம் படப் புடைத்தான். 24

  120. எறிந்தன, எய்தன, இடி உரும் என மேல்
    செறிந்தன படைக்கலம், இடக் கையின் சிதைத்தான்,-
    முறிந்தன தெறும் கரி; முடிந்தன தடந் தேர்;
    மறிந்தன பரி நிரை-வலக் கையின் மலைந்தான். 25

  121. நாற்படைகளும் அழிந்தொழிதல்

  122. இழந்தன நெடுங் கொடி; இழந்தன இருங் கோடு;
    இழந்தன நெடுங் கரம்; இழந்தன வியன் தாள்;
    இழந்தன முழங்கு ஒலி; இழந்தன மதம் பாடு;
    இழந்தன பெருங் கதம்-இருங் கவுள் யானை. 26

  123. நெரிந்தன தடஞ் சுவர்; நெரிந்தன பெரும் பார்;
    நெரிந்தன நுகம் புடை; நெரிந்தன அதன் கால்;
    நெரிந்தன கொடிஞ்சிகள்; நெரிந்தன வியன் தார்;
    நெரிந்தன கடும் பரி; நெரிந்தன நெடுந் தேர். 27

  124. ஒடிந்தன; உருண்டன; உலந்தன; புலந்த;
    இடிந்தன; எரிந்தன; நெரிந்தன; எழுந்த;
    மடிந்தன; மறிந்தன; முறிந்தன; மலைபோல்,
    படிந்தன; முடிந்தன; கிடந்தன-பரி மா. 28

  125. வெகுண்டனர், வியந்தனர், விழுந்தனர், எழுந்தார்;
    மருண்டனர், மயங்கினர், மறிந்தனர், இறந்தார்;
    உருண்டனர், உலைந்தனர், உழைத்தனர், பிழைத்தார்;
    சுருண்டனர், புரண்டார், தொலைந்தனர்;-மலைந்தார். 29

  126. அனுமனின் போர் விநோதம்

  127. கரிகொடு கரிகளைக் களப் படப் புடைத்தான்;
    பரிகொடு பரிகளைத் தலத்திடைப் படுத்தான்;
    வரி சிலை வயவரை வயவரின் மடித்தான்;
    நிரை மணித் தேர்களைத் தேர்களின் நெரித்தான். 30

  128. மூளையும் உதிரமும் முழங்கு இருங் குழம்பு ஆய்
    மீள் இருங் குழைபட, கரி விழுந்து அழுந்த,
    தாளொடும் தலை உக, தட நெடுங் கிரிபோல்
    தோளொடும் நிருதரை, வாளொடும்-துகைத்தான். 31

  129. மல்லொடு மலை மலைத் தோளரை, வளை வாய்ப்
    பல்லொடும், நெடுங் கரப் பகட்டொடும், பருந் தாள்
    வில்லொடும், அயிலொடும், விறலொடும், விளிக்கும்
    சொல்லொடும், உயிரொடும், நிலத்தொடும்,-துகைத்தான். 32

  130. புகை நெடும் பொறி புகும் திசைதொறும் பொலிந்தான்;
    சிகை நெடுஞ் சுடர் விடும் தேர்தொறும் சென்றான்;
    தகை நெடுங் கரிதொறும், பரிதொறும், சரித்தான்;
    நகை நெடும் படைதொறும், தலைதொறும், நடந்தான். 33

  131. வென்றி வெம் புரவியின் வெரிநினும், விரவார்
    மன்றல் அம் தார் அணி மார்பினும், மணித் தேர்
    ஒன்றின்நின்று ஒன்றினும், உயர் மத மழை தாழ்
    குன்றினும், -கடையுகத்து உரும் எனக் குதித்தான். 34

  132. பிரிவு அரும் ஒரு பெருங் கோல் என, பெயரா
    இருவினை துடைத்தவர் அறிவு என, எவர்க்கும்
    வரு முலை விலைக்கு என மதித்தனர் வழங்கும்
    தெரிவையர் மனம் என, கறங்கு என,-திரிந்தான். 35

  133. அண்ணல்-அவ் அரியினுக்கு அடியவர் அவன் சீர்
    நண்ணுவர் எனும் பொருள் நவை அறத் தெரிப்பான்,
    மண்ணினும், விசும்பினும், மருங்கினும், வலித்தார்
    கண்ணினும், மனத்தினும்,-தனித் தனி கலந்தான். 36

  134. கொடித் தடந் தேரொடும் குரகதக் குழுவை
    அடித்து, ஒரு தடக் கையின் நிலத்திடை அரைத்தான்;
    இடித்து நின்று அதிர் கதத்து, எயிற்று வன் பொருப்பை,
    பிடித்து, ஒரு தடக் கையின், உயிர் உகப் பிழிந்தான். 37

  135. கறுத்து எழு நிறத்தினர், எயிற்றினர், கயிற்றார்,
    செறுத்து எரி விழிப்பவர், சிகைக் கழு வலத்தார்,
    மறுத்து எழு மறலிகள் இவர் என அதிர்ந்தார்,
    ஒறுத்து, உருத்திரன் என, தனித் தனி உதைத்தான். 38

  136. சக்கரம், தோமரம், உலக்கை, தண்டு, அயில், வாள்,
    மிக்கன தேர், பரி, குடை, கொடி, விரவி
    உக்கன; குருதிஅம் பெருந் திரை உருட்டிப்
    புக்கன கடலிடை, நெடுங் கரப் பூட்கை. 39

  137. எட்டின விசும்பினை;-எழுப் பட எழுந்த-
    முட்டின மலைகளை; முயங்கின திசையை;
    ஒட்டின ஒன்றை ஒன்று; ஊடு அடித்து உதைந்து
    தட்டுமுட்டு ஆடின, தலையொடு-தலைகள். 40

  138. சேனையின் அழிவு கண்டு, சம்புமாலி சீற்றத்தோடு போருக்கு விரைதல்

  139. கானே காவல் வேழக் கணங்கள் கத வாள் அரி கொன்ற
    வானே எய்த, தனியே நின்ற மத மால் வரை ஒப்பான்,
    தேனே புரை கண் கனலே சொரிய, சீற்றம் செருக்கினான்,
    தானே ஆனான்-சம்புமாலி, காலன் தன்மையான். 41

  140. காற்றின் கடிய கலினப் புரவி நிருதர் களத்து உக்கார்;
    ஆற்றுக் குருதி நிணத்தோடு அடுத்த அள்ளல் பெருங் கொள்ளைச்
    சேற்றில் செல்லாத் தேரின் ஆழி ஆழும்; நிலை தேரா,
    வீற்றுச் செல்லும் வெளியோ இல்லை; அளியன் விரைகின்றான். 42

  141. தனித்து நின்ற சம்புமாலியிடம் அனுமன் இரக்கமுற்று மொழிதல்

  142. ஏதி ஒன்றால்; தேரும் அஃதால்; எளியோர் உயிர் கோடல்
    நீதி அன்றால்; உடன் வந்தாரைக் காக்கும் நிலை இல்லாய்!
    சாதி; அன்றேல், பிறிது என் செய்தி? அவர் பின் தனி நின்றாய்!
    போதி என்றான் -பூத்த மரம்போல் புண்ணால் பொலிகின்றான். 43

  143. சம்புமாலி சினந்து, பற்பல அம்பு எய்ய, அனுமன் எழுவால் தடுத்தல்

  144. நன்று, நன்று, உன் கருணை! என்னா, நெருப்பு நக நக்கான்;
    பொன்றுவாரின் ஒருவன் என்றாய் போலும் எனை என்னா,
    வன் திண் சிலையின் வயிரக் காலால், வடித் திண் சுடர் வாளி,
    ஒன்று, பத்து, நூறு, நூறாயிரமும், உதைப்பித்தான். 44

  145. செய்தி, செய்தி, சிலை கைக் கொண்டால், வெறுங் கை திரிவோரை,
    நொய்தின் வெல்வது அரிதோ? என்னா, முறுவல் உக நக்கான்;
    ஐயன், அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன,
    எய்த எய்த பகழி எல்லாம், எழுவால் அகல்வித்தான். 45

  146. அனுமன் கை எழுவைச் சம்புமாலி அறுத்து வீழ்த்தல்

  147. முற்ற முனிந்தான் நிருதன்; முனியா, முன்னும் பின்னும் சென்று,
    உற்ற பகழி உறாது, முறியா உதிர்கின்றதை உன்னா,
    சுற்றும் நெடுந் தேர் ஓட்டித் தொடர்ந்தான்; தொடரும் துறை காணான்;
    வெற்றி எழுவை மழுவாய் அம்பால் அறுத்து வீழ்த்தினான். 46

  148. சம்புமாலியை அனுமன் கொல்லுதல்

  149. சலித்தான் ஐயன்; கையால், எய்யும் சரத்தை உகச் சாடி,
    ஒலித் தார் அமரர் கண்டார் ஆர்ப்ப, தேரினுள் புக்கு,
    கலித்தான் சிலையைக் கையால் வாங்கி, கழுத்தினிடை இட்டு
    வலித்தான், பகு வாய் மடித்து மலைபோல் தலை மண்ணிடை வீழ. 47

  150. குதித்து, தேரும், கோல் கொள் ஆளும், பரியும், குழம்பு ஆக
    மிதித்து, பெயர்த்தும், நெடுந் தோரணத்தை வீரன் மேற்கொண்டான்;
    கதித் துப்பு அழிந்து கழிந்தார் பெருமை கண்டு, களத்து அஞ்சி,
    உதித்துப் புலர்ந்த தோல்போல் உருவத்து அமரர் ஓடினார். 48

  151. பரிந்து புலம்பும் மகளிர் காண, கணவர் பிணம் பற்றி,
    விரிந்த குருதிப் பேராறு ஈர்த்து மனைகள்தொறும் வீச,
    இரிந்தது இலங்கை; எழுந்தது அழுகை; இன்று, இங்கு, இவனாலே
    சரிந்தது, அரக்கர் வலி என்று எண்ணி, அறமும் தளிர்த்ததால். 49

  152. சம்புமாலி இறந்த செய்தியைக் காவலர் இராவணனுக்கு அறிவித்தல்

  153. புக்கார் அமரர், பொலந் தார் அரக்கன் பொரு இல் பெருங் கோயில்
    விக்காநின்றார்; விளம்பல் ஆற்றார்; வெருவி விம்முவார்;
    நக்கான் அரக்கன்; நடுங்கல் என்றான்; ஐய! நமர் எல்லாம்
    உக்கார்; சம்புவாலி உலந்தான்; ஒன்றே குரங்கு என்றார். 50

  154. யானே குரங்கைப் பிடிப்பேன் என்று இராவணன் எழ, சேனைத் தலைவர் ஐவர் பேசுதல்

  155. என்னும் அளவில், எரிந்து வீங்கி எழுந்த வெகுளியான்,
    உன்ன, உன்ன, உதிரக் குமிழி விழியூடு உமிழ்கின்றான்,
    சொன்ன குரங்கை, யானே பிடிப்பென், கடிது தொடர்ந்து என்றான்,
    அன்னது உணர்ந்த சேனைத் தலைவர் ஐவர் அறிவித்தார். 51

  156. மிகைப் பாடல்கள்

  157. அது கண்டு அரக்கன் சினம் திருகி, ஆடற் பகழி அறுநூறு
    முதிரும் வயப் போர் மாருதிதன் புயத்தில் மூழ்க விடுவித்தான்;
    புதையுண்டு உருவிப் புறம் போக, புழுங்கி அனுமன் பொடி எழும்பக்
    குதிகொண்டு, அவன் தேர் விடும் பாகன் தலையில் சிதறக் குதித்தனனால். 45- 1

  158. சுந்தர காண்டம்

    9. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்


    படைத் தலைவர் ஐவரும் தம்மை ஏவுமாறு வேண்ட, இராவணன் இசைதல்

  159. சிலந்தி உண்பது ஓர் குரங்கின்மேல் சேறியேல், திறலோய்!
    கலந்த போரில் நின் கண்புலக் கடுங் கனல் கதுவ,
    உலந்த மால் வரை அருவி ஆறு ஒழுக்கு அற்றது ஒக்கப்
    புலர்ந்த மா மதம் பூக்கும் அன்றே, திசைப் பூட்கை? 1

  160. இலங்கு வெஞ் சினத்து அம் சிறை எறுழ் வலிக் கலுழன்
    உலங்கின்மேல் உருத்தென்ன, நீ குரங்கின்மேல் உருக்கின்,
    அலங்கல் மாலை நின் புயம் நினைந்து, அல்லும் தன் பகலும்
    குலுங்கும் வன் துயர் நீங்குமால், வெள்ளியங் குன்றம். 2

  161. உறுவது என்கொலோ? உரன் அழிவு என்பது ஒன்று உடையார்
    பெறுவது யாது ஒன்றும் காண்கிலர், கேட்கிலர், பெயர்ந்தார்;
    சிறுமை ஈது ஒப்பது யாது? நீ குரங்கின்மேல் செல்லின்,
    முறுவல் பூக்கும் அன்றே, நின்ற மூவர்க்கும் முகங்கள்? 3

  162. அன்றியும், உனக்கு ஆள் இன்மை தோன்றுமால், அரச!
    வென்றி இல்லவர் மெல்லியோர்தமைச் செல விட்டாய்;
    நன்றி இன்று ஒன்று காண்டியேல், எமைச் செல நயத்தி
    என்று, கைதொழுது இறைஞ்சினர்; அரக்கனும் இசைந்தான். 4

  163. படைத் தலைவர்கள் ஆணைப்படி படைகள் திரளுதல்

  164. உலகம் மூன்றிற்கும் முதன்மை பெற்றோர் என உயர்ந்தார்,
    திலகம் மண் உற வணங்கினர்; கோயிலின் தீர்ந்தார்;
    அலகு இல் தேர், பரி, யானையோடு, அடைந்த போர் அரக்கர்,
    தொலைவு இல் தானையைக் கதுமென வருக எனச் சொன்னார். 5

  165. ஆனைமேல் முரசு அறைக என, வள்ளுவர் அறைந்தார்;
    பேன வேலையின் புடை பரந்தது, பெருஞ்சேனை;
    சோனை மா மழை முகில் எனப் போர்ப் பணை துவைத்த;
    மீன வான் இடு வில் எனப் படைக்கலம் மிடைந்த. 6

  166. தானை மாக் கொடி, மழை பொதுத்து உயர் நெடுந் தாள,
    மானம் மாற்ற அரு மாருதி முனிய, நாள் உலந்து
    போன மாற்றலர் புகழ் எனக் கால் பொரப் புரண்ட;
    வானயாற்று வெண் திரை என வரம்பு இல பரந்த. 7

  167. விரவு பொற் கழல் விசித்தனர், வெரிந் உற்று விளங்கச்
    சரம் ஒடுக்கின புட்டிலும் சாத்தினர், சமையக்
    கருவி புக்கனர், அரக்கர்; மாப் பல்லணம் கலினப்
    புரவி இட்ட; தேர் பூட்டின; பருமித்த பூட்கை. 8

  168. ஆறு செய்தன ஆனையின் மதங்கள்; அவ் ஆற்றைச்
    சேறு செய்தன தேர்களின் சில்லி; அச் சேற்றை
    நீறு செய்தன புரவியின் குரம்; மற்று அ(ந்) நீற்றை
    வீறு செய்தன, அப் பரிக் கலின மா விலாழி. 9

  169. வழங்கு தேர்களின் இடிப்பொடு வாசியின் ஆர்ப்பும்,
    முழங்கு வெங் களிற்று அதிர்ச்சியும், மொய் கழல் ஒலியும்,
    தழங்கு பல்லியத்து அமலையும், கடையுகத்து, ஆழி
    முழங்கும் ஓதையின், மும் மடங்கு எழுந்தது முடுகி. 10

  170. ஆழித் தேர்த் தொகை ஐம்பதினாயிரம்; அஃதே
    சூழிப் பூட்கைக்குத் தொகை; அவற்று இரட்டியின் தொகைய,
    ஊழிக் காற்று அன்ன புரவி; மற்று அவற்றினுக்கு இரட்டி,
    பாழித் தோள் நெடும் படைக்கலப் பதாதியின் பகுதி. 11

  171. கூய்த் தரும்தொறும், தரும்தொறும், தானை வெங் குழுவின்
    நீத்தம், வந்து வந்து, இயங்கிடும் இடன் இன்றி நெருங்க,
    காய்த்து அமைந்த வெங் கதிர்ப் படை, ஒன்று ஒன்று கதுவி,
    தேய்த்து எழுந்தன, பொறிக் குலம், மழைக் குலம் தீய. 12

  172. அரக்க வீரரை அவர்தம் சுற்றத்தார் தடுத்து இரங்குதல்

  173. தொக்கது ஆம் படை, சுரி குழல் மடந்தையர், தொடிக் கை
    மக்கள், தாயர், மற்று யாவரும் தடுத்தனர், மறுகி;
    ஒக்க ஏகுதும், குரங்கினுக்கு உயிர் தர; ஒருவர்
    புக்கு மீண்டிலர் என்று, அழுது இரங்கினர், புலம்பி. 13

  174. பஞ்ச சேனாபதிகள் சேனையோடு செல்லுதல்

  175. கை பரந்து எழு சேனைஅம் கடலிடைக் கலந்தார்;
    செய்கைதாம் வரும் தேரிடைக் கதிர் எனச் செல்வார்-
    மெய் கலந்த மா நிகர்வரும் உவமையை வென்றார்,
    ஐவரும், பெரும் பூதம் ஓர் ஐந்தும் ஒத்து அமைந்தார். 14

  176. முந்து இயம் பல கறங்கிட, முறை முறை பொறிகள்
    சிந்தி, அம்பு உறு கொடுஞ் சிலை உரும் எனத் தெறிப்பார்;
    வந்து இயம்புறு முனிவர்க்கும், அமரர்க்கும், வலியார்;
    இந்தியம் பகை ஆயவை ஐந்தும் ஒத்து, இயைந்தார். 15

  177. வாசவன் வயக் குலிசமும், வருணன் வன் கயிறும்,
    ஏசு இல் தென்திசைக்கிழவன் தன் எரி முனை எழுவும்,
    ஈசன் வன் தனிச் சூலமும், என்று இவை ஒன்றும்
    ஊசி போழ்வது ஓர் வடுச் செயா, நெடும் புயம் உடையார். 16

  178. சூர் தடிந்தவன் மயிலிடைப் பறித்த வன் தொகை,
    பார் பயந்தவன் அன்னத்தின் இறகிடைப் பறித்த
    மூரி வெஞ் சிறகு, இடை இட்டுத் தொடுத்தன முறுக்கி,
    வீர சூடிகை நெற்றியின் அயல் இட்டு விசித்தார். 17

  179. பொன் திணிந்த தோள் இராவணன் மார்பொடும் பொருத
    அன்று இழந்த கோடு அரிந்து இடும் அழகு உறு குழையார்;
    நின்ற வன் திசை நெடுங் களி யானையின் நெற்றி
    மின் திணிந்தன ஓடையின் வீர பட்டத்தர். 18

  180. நீதி நெடுங் கிழவனை நெருக்கி, நீள் நகர்ப்
    பதியொடும் பெருந் திருப் பறித்த பண்டை நாள்,
    விதி என, அன்னவன் வெந்நிட்டு ஓடவே,
    பொதியொடும் வாரிய பொலன் கொள் பூணினார். 19

  181. இந்திரன் இசை இழந்து ஏகுவான், இகல்
    தந்தி முன் கடாவினன் முடுக, தாம் அதன்
    மந்தர வால் அடி பிடித்து, வல்லையேல்
    உந்துதி, இனி என, வலிந்த ஊற்றத்தார். 20

  182. பால் நிறுத்து அந்தணன் பணியன் ஆகி, நின்
    கோல் நினைத்திலன் என, உலகம் கூறலும்,
    நீல் நிறத்து இராவணன் முனிவு நீக்குவான்,
    காலனை, காலினில், கையில், கட்டினார். 21

  183. மலைகளை நகும் தட மார்பர்; மால் கடல்
    அலைகளை நகும் நெடுந் தோளர்; அந்தகன்
    கொலைகளை நகும் நெடுங் கொலையர்; கொல்லன் ஊது
    உலைகளை நகும் அனல் உமிழும் கண்ணினார். 22

  184. தோல் கிளர் திசைதொறும் உலகைச் சுற்றிய
    சால் கிளர் முழங்கு எரி தழங்கி ஏறினும்,
    கால் கிளர்ந்து ஓங்கினும், காலம் கையுற
    மால் கடல் கிளரினும், சரிக்கும் வன்மையார். 23

  185. அரக்கர் படையை அனுமன் நோக்குதல்

  186. இவ் வகை ஐவரும் எழுந்த தானையர்,
    மொய் கிளர் தோரணம் அதனை முற்றினார்;
    கையொடு கைஉற அணியும் கட்டினார்;
    ஐயனும், அவர்நிலை, அமைய நோக்கினான். 24

  187. அரக்கர்தம் ஆற்றலும், அளவு இல் சேனையின்
    தருக்கும், அம் மாருதி தனிமைத் தன்மையும்,
    போருக்கென நோக்கிய புரந்தராதியர்,
    இரக்கமும், அவலமும், துளக்கும், எய்தினார். 25

  188. இற்றனர் அரக்கர் இப் பகலுளே எனா,
    கற்று உணர் மாருதி களிக்கும் சிந்தையான்,
    முற்றுறச் சுலாவிய முடிவு இல் தானையைச்
    சுற்றுற நோக்கி, தன் தோளை நோக்கினான். 26

  189. அனுமனைக் கண்ட அரக்க வீரரின் ஐயப்பாடு

  190. புன் தலைக் குரங்கு இது போலுமால் அமர்
    வென்றது! விண்ணவர் புகழை வேரொடும்
    தின்ற வல் அரக்கரைத் திருகித் தின்றதால்!
    என்றனர், அயிர்த்தனர், நிருதர் எண்ணிலார். 27

  191. அனுமன் பெரிய உருக் கொள்ளுதல்

  192. ஆயிடை, அனுமனும், அமரர்கோன் நகர்
    வாயில்நின்று அவ் வழிக் கொணர்ந்து வைத்த மாச்
    செயொளித் தோரணத்து உம்பர், சேண் நெடு
    மீ உயர் விசும்பையும் கடக்க வீங்கினான். 28

  193. வீங்கிய வீரனை வியந்து நோக்கிய
    தீங்கு இயல் அரக்கரும், திருகினார் சினம்,
    வாங்கிய சிலையினர், வழங்கினார் படை;
    ஏங்கிய சங்குஇனம்; இடித்த பேரியே! 29

  194. எறிந்தனர், எய்தனர், எண் இறந்தன
    பொறிந்து எழு படைக்கலம், அரக்கர் போக்கினார்;
    செறிந்தன மயிர்ப்புறம்; தினவு தீர்வுறச்
    சொறிந்தனர் என இருந்து, ஐயன் தூங்கினான். 30

  195. எழுவை ஏந்தி அனுமன் பொருதல்

  196. உற்று, உடன்று, அரக்கரும், உருத்து உடற்றினர்;
    செற்றுற நெருக்கினர்; செருக்கும் சிந்தையர்
    மற்றையர் வரும் பரிசு, இவரை, வல் விரைந்து
    எற்றுவென் என, எழு, அனுமன் ஏந்தினான். 31

  197. ஊக்கிய படைகளும், உருத்த வீரரும்,
    தாக்கிய பரிகளும், தடுத்த தேர்களும்,
    மேக்கு உயர் கொடியுடை மேக மாலைபோல்
    தூக்கிய கரிகளும், புரள நூக்கினான். 32

  198. அனுமன் செய்த அதிசயப் போர்

  199. வார் மதக் கரிகளின் கோடு வாங்கி, மாத்
    தேர் படப் புடைக்கும்; அத் தேரின் சில்லியால்,
    வீரரை உருட்டும்; அவ் வீரர் வாளினால்,
    தாருடைப் புரவியைத் துணியத் தாக்குமால். 33

  200. இரண்டு தேர் இரண்டு கைத்தலத்தும் ஏந்தி, வேறு
    இரண்டு மால் யானை பட்டு உருள, எற்றுமால்;
    இரண்டு மால் யானை கக இரண்டின் ஏந்தி, வேறு
    இரண்டு பாலினும் வரும் பரியை எற்றுமால். 34

  201. மா இரு நெடு வரை வாங்கி, மண்ணில் இட்டு,
    ஆயிரம்-தேர் பட அரைக்குமால்; அழித்து,
    ஆயிரம் களிற்றை ஓர் மரத்தினால் அடித்து,
    ஏ எனும் மாத்திரத்து எற்றி முற்றுமால். 35

  202. உதைக்கும் வெங் கரிகளை; உழக்கும் தேர்களை;
    மிதிக்கும் வன் புரவியை; தேய்க்கும் வீரரை;
    மதிக்கும் வல் எழுவினால்; அரைக்கும் மண்ணிடை;
    குதிக்கும் வன் தலையிடை; கடிக்கும்; குத்துமால். 36

  203. விசையின் மான் தேர்களும், களிறும் விட்டு, அகல்
    திசையும் ஆகாயமும் செறிய, சிந்துமால்;
    குசை கொள் பாய் பரியொடும், கொற்ற வேலொடும்,
    பிசையுமால் அரக்கரை, பெருங் கரங்களால். 37

  204. தீ உறு பொறியுடைச் செங் கண் வெங் கைமா,
    மீ உற, தடக் கையால் வீரன் வீசுதோறு,
    ஆய் பெருங் கொடியன, கடலின் ஆழ்வன,
    பாயுடை நெடுங் கலம் படுவ போன்றவே. 38

  205. தாரொடும், உருளொடும், தடக் கையால் தனி
    வீரன் விட்டு எறிந்தன, கடலின் வீழ்வன,
    வாரியின் எழும் சுடர்க் கடவுள் வானவன்
    தேரினை நிகர்த்தன, புரவித் தேர்களே. 39

  206. மீ உற விண்ணிடை முட்டி வீழ்வன,
    ஆய் பெருந் திரைக் கடல் அழுவத்து ஆழ்வன,
    ஓய்வில புரவி, வாய் உதிரம் கால்வன,
    வாயிடை எரியுடை வடவை போன்றவை. 40

  207. வரிந்து உற வல்லிதின் சுற்றி, வாலினால்
    விரிந்து உற வீசலின், கடலின் வீழ்குநர்
    திரிந்தனர்-செறி கயிற்று அரவினால் திரி
    அருந் திறல் மந்தரம் அனையர் ஆயினார். 41

  208. வீரன் வன் தடக் கையால் எடுத்து வீசிய
    வார் மதக் கரியினின், தேரின், வாசியின்,
    மூரி வெங் கடல் புகக் கடிதின் முந்தின,
    ஊரின் வெங் குருதி ஆறு ஈர்ப்ப ஓடின. 42

  209. பிறைக் குடை எயிற்றின, பிலத்தின் வாயின,
    கறைப் புனல் பொறிகளோடு உமிழும் கண்ணின,
    உறைப் புறு படையின, உதிர்ந்த யாக்கைகள்,
    மறைத்தன, மகர தோரணத்தை, வான் உற. 43

  210. குன்று உள; மரம் உள; குலம் கொள் பேர் எழு
    ஒன்று அல, பல உள; உயிர் உண்பான் உளன்;
    அன்றினர் பலர் உளர்; ஐயன் கை உள;
    பொன்றுவது அல்லது, புறத்துப் போவரோ? 44

  211. முழு முதல், கண்ணுதல், முருகன் தாதை, கைம்
    மழு எனப் பொலிந்து ஒளிர் வயிர வான் தனி
    எழுவினின், பொலங் கழல் அரக்கர் ஈண்டிய
    குழுவினை, களம் படக் கொன்று நீக்கினான். 45

  212. தானையின் அழிவு கண்டு, ஐவரும் அனுமனைப் பொருதல்

  213. உலந்தது தானை; உவந்தனர் உம்பர்;
    அலந்தலை உற்றது, அவ் ஆழி இலங்கை;
    கலந்தது, அழும் குரலின் கடல் ஓதை;
    வலம் தரு தோளவர் ஐவரும் வந்தார். 46

  214. ஈர்த்து எழு செம்புனல் எக்கர் இழுக்க,
    தேர்த் துணை ஆழி அழுந்தினர், சென்றார்;
    ஆர்த்தனர்; ஆயிரம் ஆயிரம் அம்பால்
    தூர்த்தனர்; அஞ்சனை தோன்றலும் நின்றான். 47

  215. எய்த கடுங் கணை யாவையும், எய்தா
    நொய்து அகலும்படி, கைகளின் நூறா,
    பொய்து அகடு ஒன்று பொருந்தி, நெடுந் தேர்
    செய்த கடும் பொறி ஒன்று, சிதைத்தான். 48

  216. உற்று உறு தேர் சிதையாமுன் உயர்ந்தான்,
    முற்றின வீரனை, வானில் முனிந்தான்;
    பொன் திரள் நீள் எழு ஒன்று பொறுத்தான்,
    எற்றினன்; அஃது அவன் வில்லினில் ஏற்றான். 49

  217. ஐவருள் ஒருவன் அமரில் இறத்தல்

  218. முறிந்தது மூரி வில்; அம் முறியேகொடு,
    எறிந்த அரக்கன் ஒர் வெற்பை எடுத்தான்;
    அறிந்த மனத்தவன், அவ் எழுவே கொடு
    எறிந்த அரக்கனை இன் உயிர் உண்டான். 50

  219. சேனைத் தலைவர் நால்வருடன் மாருதி செய்த கடும் போர்

  220. ஒழிந்தவர்-நால்வரும், ஊழி உருத்த
    கொழுந்துறு தீ என, வெய்துறு கொட்பர்,
    பொழிந்தனர், வாளி; புகைந்தன கண்கள்;
    விழுந்தன சோரி, அவ் வீரன் மணித் தோள். 51

  221. ஆயிடை வீரனும், உள்ளம் அழன்றான்;
    மாய அரக்கர் வலத்தை உணர்ந்தான்;
    மீ எரி உய்ப்பது ஓர் கல் செலவிட்டான்;
    தீயவர் அச் சிலையைப் பொடிசெய்தார். 52

  222. நால்வருள் ஒருவன் மிதிபட்டு மாய்ந்தான்

  223. தொடுத்த, தொடுத்த, சரங்கள் துரந்த;
    அடுத்து, அகன் மார்பின் அழுந்தி, அகன்ற;
    மிடல் தொழிலான், விடு தேரொடு நொய்தின்
    எடுத்து, ஒருவன்தனை, விண்ணில் எறிந்தான். 53

  224. ஏய்ந்து எழு தேர் இமிழ் விண்ணினை எல்லாம்
    நீந்தியது; ஓடி நிமிர்ந்தது; வேகம்
    ஓய்ந்தது; வீழ்வதன்முன், உயர் பாரில்
    பாய்ந்தவன்மேல், உடன் மாருதி பாய்ந்தான். 54

  225. மதித்த களிற்றினில் வாள் அரிஏறு
    கதித்தது பாய்வதுபோல், கதி கொண்டு
    குதித்தனன்; மால் வரை மேனி குழம்ப
    மிதித்தனன்-வெஞ் சின வீரருள் வீரன். 55

  226. எஞ்சிய மூவரும் முனைந்து பொருதல்

  227. மூண்ட சினத்தவர் மூவர் முனிந்தார்;
    தூண்டிய தேரர், சரங்கள் துரந்தார்;
    வேண்டிய வெஞ் சமம் வேறு விளைப்பார்,
    யாண்டு இனி ஏகுதி? என்று, எதிர் சென்றார். 56

  228. இருவரைத் தேருடன் எடுத்து, மாருதி விண்ணில் வீசுதல்

  229. திரண்டு உயர் தோள் இணை அஞ்சனை சிங்கம்,
    அரண் தரு விண் உறைவார்களும் அஞ்ச,
    முரண் தரு தேர் அவை ஆண்டு ஒருமூன்றினில்
    இரண்டை இரண்டு கையின்கொடு எழுந்தான். 57

  230. தூக்கின பாய் பரி; சூதர் உலைந்தார்;
    வீங்கின தோளவர் விண்ணின் விசைத்தார்;
    ஆங்கு, அது கண்டு, அவர் போய் அகலாமுன்,
    ஓங்கினன் மாருதி, ஒல்லையின் உற்றான். 58

  231. விண்னில் உற்ற இருவரும், அனுமனுடன் மற்போர் செய்து மடிதல்

  232. கால் நிமிர் வெஞ் சிலை கையின் இறுத்தான்;
    ஆனவர் தூணியும், வாளும், அறுத்தான்;
    ஏனைய வெம் படை இல்லவர், எஞ்சார்,
    வானிடை நின்று, உயர் மல்லின் மலைந்தார். 59

  233. வெள்ளை எயிற்றர், கறுத்து உயர் மெய்யர்,
    பிள்ள விரித்த பெரும் பில வாயர்,
    கொள்ள உருத்து அடர் கோள் அரவு ஒத்தார்;
    ஒள்ளிய வீரன், அருக்கனை ஒத்தான். 60

  234. தாம்பு என வாலின் வரிந்து, உயர் தாளோடு
    ஏம்பல் இலார்இரு தோள்கள் இறுத்தான்;
    பாம்பு என நீங்கினர், பட்டனர் வீழ்ந்தார்-
    ஆம்பல் நெடும் பகைபோல் அவன் நின்றான். 61

  235. எஞ்சிய ஒருவனையும் அனுமன் ஒழித்தல்

  236. நின்றனன் ஏனையன்; நின்றது கண்டான்;
    குன்றிடை வாவுறு கோள் அரி போல,
    மின் திரி வன் தலைமீது குதித்தான்;
    பொன்றி, அவன், புவி, தேரொடு புக்கான். 62

  237. வஞ்சமும் களவும் வெஃகி, வழி அலா வழிமேல் ஓடி,
    நஞ்சினும் கொடியர் ஆகி, நவை செயற்கு உரிய நீரார்,
    வெஞ் சின அரக்கர் ஐவர்; ஒருவனே!-வெல்லப்பட்டார்
    அஞ்சு எலும் புலன்கள் ஒத்தார்; அவனும், நல் அறிவை ஒத்தான். 63

  238. நெய் தலை உற்ற வேற் கை நிருதர், அச் செருவில் நேர்ந்தார்,
    உய்தலை உற்று மீண்டார் ஒருவரும் இல்லை; உள்ளார்,
    கை தலைப் பூசல் பொங்கக் கடுகினர்; காலன் உட்கும்
    ஐவரும் உலந்த தன்மை, அனைவரும் அமையக் கண்டார். 64

  239. படைத் தலைவர் இறந்ததை காவலர் இராவணனுக்கு அறிவித்தல்

  240. இறுக்குறும், இன்னே நம்மை, குரங்கு என இரங்கி ஏங்கி,
    மறுக்குறுகின்ற நெஞ்சின் மாதரை வைது நோக்கி,
    உறுக்குறும் சொல்லான், ஊழித் தீ என உலகம் ஏழும்
    சுறுக் கொள நோக்குவான்தன் செவித் தொளை தீய, சொன்னார். 65

  241. தானையும் உலந்தது; ஐவர் தலைவரும் சமைந்தார்; தாக்கப்
    போனவர் தம்மில் மீண்டோ ம் யாம், அமர் புரிகிலாமை;
    வானையும் வென்றுளோரை வல்லையின் மடிய நூறி,
    ஏனையர் இன்மை, சோம்பி இருந்தது, அக் குரங்கும் என்றார். 66

  242. மிகைப் பாடல்கள்

  243. பண் மணிக் குல யானையின் புடைதொறும் பரந்த
    ஒண் மணிக் குலம் மழையிடை உரும் என ஒலிப்ப,
    கண் மணிக் குலம் கனல் எனக் காந்துவ; கதுப்பின்
    தண் மணிக் குலம் மழை எழும் கதிர் எனத் தழைப்ப. 12-1

  244. என்று அவர் ஏவு சரங்கள் இறுத்தே,
    பொன்றுவிர் நீர், இது போது என, அங்கு ஓர்
    குன்று இரு கைக் கொடு எறிந்து, அவர் கொற்றம்
    இன்று முடிந்தது எனத் தனி ஆர்த்தான். 56-1

  245. அப்பொழுது அங்கு அவர் ஆயிர கோடி
    வெப்பு அடை வெஞ் சரம் வீசினர்; வீசி,
    துப்புறு வெற்பு அதனைத் துகள் செய்தே,
    மெய்ப்படு மாருதிமேல் சரம் விட்டார். 56-2

  246. விட்ட சரத்தை விலக்கி, அ(வ்) வீரன்,
    வட்ட விசும்புறு மா மரம் வாங்கித்
    தொட்டு எறிதற்கு மு(ன்)னே, துகளாகப்
    பட்டிட, வெய்யவர் பாணம் விடுத்தார். 56-3

  247. சுந்தர காண்டம்

    10. அக்ககுமாரன் வதைப் படலம்


    இராவணனிடம் அக்ககுமாரன் தன்னை அனுப்பவேண்டுதல்

  248. கேட்டலும், வெகுளி வெந் தீக் கிளர்ந்து எழும் உயிர்ப்பனாகி,
    தோட்டு அலர் தெரியல் மாலை வண்டொடும் சுறுக்கொண்டு ஏற,
    ஊட்டு அரக்கு உண்ட போலும் நயனத்தான் ஒருப்பட்டானை,
    தாள்-துணை தொழுது, மைந்தன் தடுத்து, இடை தருதி என்றான். 1

  249. முக்கணான் ஊர்தி அன்றேல், மூன்று உலகு அடியின் தாயோன்
    ஒக்க ஊர் பறவை அன்றேல், அவன் துயில் உரகம் அன்றேல்,
    திக்கயம் அல்லதேல், புன் குரங்கின்மேல் சேறி போலாம்!
    இக் கடன் அடியேற்கு ஈதி; இருத்தி ஈண்டு இனிதின்; எந்தாய்! 2

  250. அண்டர்கோன் தன்னைப் பற்றித் தருக எனா, அடியேன் நிற்க,
    கொண்டனை என்முன் தன்னைப் பணி என, நெஞ்சம் கோடல்
    உண்டு; அது தீரும் அன்றே? உரன் இலாக் குரங்கு ஒன்றேனும்,
    எண் திசை வென்ற நீயே, ஏவுதி என்னை என்றான். 3

  251. கொய் தளிர் கோதும் வாழ்க்கைக் கோடரத்து உருவு கொண்டு,
    கைதவம் கண்ணி, ஈண்டு ஓர் சிறு பழி இழைக்கும் கற்பான்,
    எய்தினான், இமையா முக்கண் ஈசனே என்ற போதும்,
    நொய்தினின் வென்று, பற்றித் தருகுவென், நொடியில் நுன்பால். 4

  252. தூண்டத் தூண் அகத்துத் தோன்றும் கோளரி, சுடர் வெண் கோட்டு
    மண் தொத்த நிமிர்ந்த பன்றி ஆயினும், மலைதல் ஆற்றா;
    அண்டத்தைக் கடந்து போகி அப் புறத்து அகலின், என்பால்
    தண்டத்தை இடுதி அன்றே, நின்வயின் தந்திலேனேல்! 5

  253. அக்ககுமாரன் விடை பெற்றுப் போருக்குப் போதல்

  254. என, இவை இயம்பி, ஈதி விடை என, இறைஞ்சி நின்ற
    வனை கழல் வயிரத் திண் தோள் மைந்தனை மகிழ்ந்து நோக்கி
    துனை பரித் தேர்மேல் ஏறிச் சேறி என்று இனைய சொன்னான்;
    புனை மலர்த் தாரினானும், போர் அணி அணிந்து போனான். 6

  255. ஏறினன் என்ப மன்னோ, இந்திரன் இகலின் இட்ட,
    நூறொடு நூறு பூண்ட நொறில் வயப் புரவி நோன் தேர்;
    கூறினர் அரக்கர் ஆசி; குமுறின முரசக் கொண்மூ;
    ஊறின உரவுத் தானை, ஊழி பேர் கடலை ஒப்ப. 7

  256. பொரு கடல் மகரம் எண்ணில், எண்ணலாம் பூட்கை; பொங்கித்
    திரிவன மீன்கள் எண்ணில், எண்ணலாம் செம் பொன் திண் தேர்;
    உரு உறு மணலை எண்ணில், எண்ணலாம் உரவுத் தானை;
    வரு திரை நிரையை எண்ணில், எண்ணலாம் வாவும் வாசி. 8

  257. ஆறு-இரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர், ஆவி
    வேறு இலாத் தோழர், வென்றி அரக்கர்தம் வேந்தர் மைந்தர்,
    ஏறிய தேரர், சூழ்ந்தார்-இறுதியின் யாவும் உண்பான்
    சீறிய காலத் தீயின் செறி சுடர்ச் சிகைகள் அன்னார். 9

  258. மந்திரக் கிழவர் மைந்தர், மதி நெறி அமைச்சர் மக்கள்,
    தந்திரத் தலைவர் ஈன்ற தனயர்கள், பிறகும், தாதைக்கு
    அந்தரத்து அரம்பைமாரில் தோன்றினர் ஆதி ஆனோர்,
    எந்திரத் தேரர், சூழ்ந்தார்-ஈர்-இரண்டு இலக்கம் வீரர். 10

  259. தோமரம், உலக்கை, சூலம், சுடர் மழு, குலிசம், தோட்டி,
    ஏ மரு வரி வில், வேல், கோல், ஈட்டி, வாள், எழு, விட்டேறு,
    மா மரம், வீசு பாசம், எழு முளை, வயிரத் தண்டு,
    காமரு கணையம், குந்தம், கப்பணம், கால நேமி. 11

  260. என்று, இவை முதல ஆய எறிதரு படைகள் ஈண்டி,
    மின் திரண்டனைய ஆகி, வெயிலொடு நிலவு வீச,
    துன்று இருந் தூளி பொங்கித் துறுதலால், இறுதிசெல்லாப்
    பொன் திணி உலகம் எல்லாம், பூதலம் ஆய மாதோ! 12

  261. காகமும், கழுகும், பேயும், காலனும், கணக்கு இல் காலம்
    சேகு உற வினையின் செய்த தீமையும், தொடர்ந்து செல்ல;
    பாகு இயல் கிளவிச் செவ் வாய்ப் படை விழிப் பணைத்த வேய்த் தோள்
    தோகையர் மனமும், தொக்க தும்பியும், தொடர்ந்து சுற்ற; 13

  262. உழைக் குல நோக்கினார்கள், உலந்தவர்க்கு உரிய மாதர்,
    அழைத்து அழு குரலின், வேலை அமலையின், அரவச் சேனை
    தழைத்து எழும் ஒலியின், நானாப் பல் இயம் துவைக்கும் தா இல்
    மழைக் குரல் இடியின், சொன்ன மாற்றங்கள் ஒழிப்ப மன்னோ! 14

  263. வெயில், கரமணிகள் வீசும் விரி கதிர் விளங்க, வெய்ய
    அயில் கர அணிகள் நீல அவிர் ஒளி பருக, அஃதும்,
    எயிற்று இளம் பிறைகள் ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க, யாணர்,
    உயிர்க்கு உலவு இரவும் அன்று, பகல் அன்று என்று உணர்வு தோன்ற; 15

  264. ஓங்குஇருந் தடந் தேர் பூண்ட உளை வயப் புரவி ஒல்கித்
    தூங்கின வீழ, தோளும் கண்களும் இடத்துத் துள்ள,
    வீங்கின மேகம் எங்கும் குருதி நீர்த் துள்ளி வீழ்ப்ப,
    ஏங்கின காகம் ஆர்ப்ப, இருளில் விண் இடிப்ப மாதோ; 16

  265. வெள்ள வெஞ் சேனை சூழ, விண் உளோர் வெருவி விம்ம,
    உள்ளம் நொந்து அனுங்கி, வெய்ய கூற்றமும் உறுவது உன்ன,
    துள்ளிய சுழல் கண் பேய்கள் தோள் புடைத்து ஆர்ப்ப, தோன்றும்
    கள் அவிழ் அலங்கலானைக் காற்றின் சேய் வரவு கண்டான். 17

  266. அக்ககுமாரனைக் கண்டு அனுமன் ஐயுற்று நோக்குதல்

  267. இந்திரசித்தோ? மற்று அவ் இராவணனேயோ? என்னா,
    சிந்தையின் உவகை கொண்டு முனிவுற்ற குரக்குச் சீயம்,
    வந்தனன்; முடிந்தது அன்றோ மனக் கருத்து? என்ன வாழ்த்தி,
    சுந்தரத் தோளை நோக்கி, இராமனைத் தொழுது சொன்னான்: 18

  268. எண்ணிய இருவர் தம்முள் ஒருவனேல், யான் முன் நோற்ற
    புண்ணியம் உளதாம்; எம் கோன் தவத்தொடும் பொருந்தினானே;
    நண்ணிய நானும் நின்றேன்; காலனும், நணுகி நின்றான்;
    கண்ணிய கருமம் இன்றே முடிக்குவென், கடிதின் என்றான். 19

  269. பழி இலது உரு என்றாலும், பல் தலை அரக்கன் அல்லன்;
    விழிகள் ஆயிரமும் கொண்ட வேந்தை வென்றானும் அல்லன்;
    மொழியின், மற்று அவர்க்கு மேலான்; முரண் தொழில் முருகன் அல்லன்;
    அழிவு இல் ஒண் குமாரன் யாரோ, அஞ்சனக் குன்றம் அன்னான்? 20

  270. அனுமனை அக்ககுமாரன் எள்ளி நகைக்க, தேர்ப்பாகன், அது தகாது எனல்

  271. என்றவன், உவந்து, விண் நோய் இந்திர சாபம் என்ன
    நின்ற தோரணத்தின் உம்பர் இருந்த ஓர் நீதியானை,
    வன் தொழில் அரக்கன் நோக்கி, வாள் எயிறு இலங்க நக்கான்;
    கொன்றது இக் குரங்கு போலாம், அரக்கர்தம் குழாத்தை! என்றான். 21

  272. அன்னதாம் நகு சொல் கேட்ட சாரதி, ஐய! கேண்மோ!
    இன்னதாம் என்னல் ஆமோ உலகியல்? இகழல் அம்மா;
    மன்னனோடு எதிர்ந்த வாலி குரங்கு என்றால், மற்றும் உண்டோ ?
    சொன்னது துணிவில் கொண்டு சேறி என்று, உணரச் சொன்னான். 22

  273. அக்ககுமாரனின் வஞ்சினம்

  274. விடம் திரண்டனைய மெய்யான், அவ் உரை விளம்பக் கேளா,
    இடம் புகுந்து இனைய செய்த இதனொடு சீற்றம் எஞ்சேன்;
    தொடர்ந்து சென்று உலகம் மூன்றும் துருவினென், ஒழிவுறாமல்
    கடந்து, பின் குரங்கு என்று ஓதும் கருவையும் களைவென் என்றான். 23

  275. அரக்கர் படையை எதிர்ந்து அனுமன் பொருதல்

  276. ஆர்த்து எழுந்து, அரக்கர் சேனை, அஞ்சனைக்கு உரிய குன்றைப்
    போர்த்தது; பொழிந்தது, அம்மா! பொரு படைப் பருவ மாரி;
    வேர்த்தனர் திசை காப்பாளர்; சலித்தன விண்ணும் மண்ணும்;
    தார்த் தனி வீரன், தானும் தனிமையும், அவர்மேல் சார்ந்தான். 24

  277. எறிந்தன நிருதர் வெய்தின் எய்தன படைகள் யாவும்
    முறிந்தன; வீரன் மேனி முட்டின மூரி யானை
    மறிந்தன; மடிந்த, தேரும், வாவும் மாக் குழுவும்; ஆவி
    நெறிந்தன வரம்பு இல் யாக்கை, இலங்கை தன் நிலையின் பேர. 25

  278. காய் எரி, முளி புல் கானில் கலந்தென, காற்றின் செம்மல்,
    ஏ எனும் அளவில் கொல்லும் நிருதர்க்கு ஓர் எல்லை இல்லை;
    போயவர் உயிரும் போகித் தென் புலம் படர்தல் பொய்யாது;
    ஆயிர கோடி தூதர் உளர்கொலோ நமனுக்கு அம்மா? 26

  279. வர உற்றார், வாராநின்றார், வந்தவர், வரம்பு இல் வெம் போர்
    பொர உற்ற பொழுது, வீரன் மும் மடங்கு ஆற்றல் பொங்க
    விரவிப் போய், கதிரோன் ஊழி இறுதியின் வெய்யன் ஆனான்;
    உரவுத் தோள் அரக்கர் எல்லாம், என்பு இலா உயிர்கள் ஒத்தார். 27

  280. பிள்ளப்பட்டன நுதல் ஓடைக் கரி, பிறழ் பொன் தேர், பரி, பிழையாமல்,
    அள்ளப்பட்டு அழி குருதிப் பொரு புனல் ஆறாக, படி சேறு ஆக,
    வள்ளப்பட்டன மகரக் கடல் என மதில் சுற்றிய பதி மறலிக்கு ஓர்
    கொள்ளப்பட்டன உயிர் என்னும்படி கொன்றான்-ஐம் புலன் வென்றானே! 28

  281. தேரே பட்டன என்றார் சிலர்; சிலர், தெறு கண் செம் முக வயிரத் தோள்
    பேரே பட்டன என்றார்; சிலர் சிலர், பரியே பட்டன பெரிது என்றார்;
    காரே பட்டன நுதல் ஓடைக் கட கரியே பட்டன கடிது என்றார்;
    நேரே பட்டவர் பட, மாடே, தனி, நில்லா உயிரொடு நின்றாரே. 29

  282. ஆழிப் பொரு படை நிருதப் பெரு வலி அடலோர், ஆய்மகள் அடு பேழ் வாய்த்
    தாழிப் படு தயிர் ஒத்தார்; மாருதி, தனி மத்து என்பது ஓர் தகை ஆனான்;
    ஏழ் இப் புவனமும் மிடை வாழ் உயிர்களும், எறி வேல் இளையவர் இனம் ஆக,
    ஊழிப் பெயர்வது ஓர் புனல் ஒத்தார்; அனல் ஒத்தான்; மாருதம் ஒத்தானே. 30

  283. அக்ககுமாரனின் தேரையும் படைகளையும் அனுமன் அழித்தல்

  284. கொன்றான் உடன் வரு குழுவை; சிலர் பலர் குறைகின்றார், உடல் குலைகின்றார்;
    பின்றா நின்றனர்; உதிரப் பெரு நதி பெருகாநின்றன; அருகு ஆரும்
    நின்றார் நின்றிலர்; தனி நின்றான், ஒரு நேமித் தேரொடும், அவன் நேரே
    சென்றான்; வன் திறல் அயில் வாய் அம்புகள் தெரிகின்றான்; விழி எரிகின்றான். 31

  285. உற்றான் இந்திரசித்துக்கு இளையவன்; ஒரு நாளே பலர் உயிர் உண்ணக்
    கற்றோனும் முகம் எதிர் வைத்தான்; அது கண்டார் விண்ணவர்; கசிவுற்றார்;
    எற்றாம் மாருதி நிலை? என்பார்; இனி இமையா விழியினை இவை ஒன்றோ
    பெற்றாம்; நல்லது பெற்றாம் என்றனர்; பிறியாது எதிர் எதிர் செறிகின்றார். 32

  286. எய்தான், வாளிகள், எரி வாய் உமிழ்வன, ஈர்-ஏழ்; எதிர் அவை பார் சேரப்
    பொய்தான், மணி எழு ஒன்றால்; அன்று, அது, பொடியாய் உதிர்வுற, வடி வாளி,
    வெய்தாயின, பல விட்டான்; வீரனும், வேறு ஓர் படை இலன், மாறா வெங்
    கைதானே பொரு படை ஆக, தொடர் கால் ஆர் தேர் அதன் மேல் ஆனான். 33

  287. தேரில் சென்று, எதிர் கோல் கொள்வான் உயிர் தின்றான்; அப் பொரு செறி திண் தேர்,
    பாரில் சென்றது; பரி பட்டன; அவன் வரி வில் சிந்திய பகழிக் கோல்,
    மார்பில் சென்றன சில; பொன் தோளிடை மறைவுற்றன சில; அறவோனும்,
    நேரில் சென்று,அவன் வயிரக் குனிசிலைபற்றிக் கொண்டு,எதிர் உற நின்றான்.34

  288. ஒரு கையால் அவன் வயிரத் திண் சிலை உற்றுப் பற்றலும், உரவோனும்,
    இரு கையால் எதிர் வலியாமுன்னம், அது இற்று ஓடியது; இவர் பொன் தோளின்,
    சுரிகையால் அவன் உருவிக் குத்தலும், அதனை, சொல் கொடு வரு தூதன்,
    பொரு கையால் இடை பிதிர்வித்தான், முறி பொறி ஓடும்படி பறியாவே. 35

  289. ஆயுதம் இழந்த அக்ககுமாரன் அனுமனுடன் மற்போர் செய்து மடிதல்

  290. வாளாலே பொரல் உற்றான், இற்று அது மண் சேராமுனம், வயிரத் திண்
    தோளாலே பொர முடுகிப் புக்கு, இடை தழுவிக் கோடலும், உடல் முற்றும்,
    நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட, மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று
    மீளாவகை, புடை சுற்றிக்கொண்டது; பற்றிக் கொண்டனன் மேலானான். 36

  291. பற்றிக் கொண்டவன், வடி வாள் என ஒளிர், பல் இற்று உக, நிமிர் படர் கையால்
    எற்றி, கொண்டலின் இடை நின்று உமிழ் சுடர் இன மின் இனம் விழுவன என்ன,
    முற்றிக் குண்டலம் முதல் ஆம் மணி உக, முழை நால் அரவு இவர் குடர் நால,
    கொற்றத் திண் சுவல், வயிரக் கைகொடு குத்தி, புடை ஒரு குதிகொண்டான். 37

  292. நீத்து ஆய் ஓடின உதிரப் பெரு நதி நீராக, சிலை பாராக,
    போய்த் தாழ் செறி தசை அரி சிந்தினபடி பொங்க, பொரும் உயிர் போகாமுன்,
    மீத் தாம் நிமிர் சுடர் வயிரக் கைகொடு பிடியா, விண்ணொடு மண் காண,
    தேய்த்தான்-ஊழியின் உலகு ஏழ்தேயினும்,ஒரு தன்புகழ் இறை தேயாதான்.38

  293. எஞ்சிய படைகள் அஞ்சி ஓடுதல்

  294. புண் தாழ் குருதியின் வெள்ளத்து, உயிர் கொடு புக்கார் சிலர்; சிலர் பொதி பேயின்
    பண்டாரத்திடை இட்டார் தம் உடல்; பட்டார் சிலர்; சிலர் பயம் உந்த,
    திண்டாடித் திசை அறியா மறுகினர்; செற்றார் சிலர்; சிலர் செலவு அற்றார்;
    கண்டார் கண்டது ஓர்திசையே விசைகொடுகால்விட்டார்;படைகைவிட்டார்.39

  295. மீன் ஆய், வேலையை உற்றார், சிலர்; சிலர் பசு ஆய் வழிதொறும் மேய்வுற்றார்;
    ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் சிலர்; சிலர் நான்மறையவர் உரு ஆனார்;
    மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் முன்னே, தம் குழல் வகிர்வுற்றார்
    ஆனால் சிலர்; சிலர், ஐயா! நின் சரண் என்றார்; நின்றவர் அரி என்றார். 40

  296. தம் தாரமும், உறு கிளையும், தமை எதிர் தழுவும்தொறும், நும தமர் அல்லேம்;
    வந்தேம், வானவர் என்று, ஏகினர் சிலர்; சிலர், மானுயர் என, வாய் விட்டார்;
    மந்தாரம் கிளர் பொழில்வாய் வண்டுகள் ஆனார் சிலர்; சிலர் மருள்கொண்டார்;
    இந்து ஆர் எயிறுகள் இறுவித்தார் சிலர்; எரிபோல் குஞ்சியை இருள்வித்தார். 41

  297. அரக்கிமாரின் அவலநிலை

  298. குண்டலக் குழை முகக் குங்குமக் கொங்கையார்,
    வண்டு அலைத்து எழு குழல் கற்றை கால் வருடவே,
    விண்டு, அலத்தக விரைக் குமுத வாய் விரிதலால்,
    அண்டம் உற்றுளது, அவ் ஊர் அழுத பேர் அமலையே! 42

  299. கதிர் எழுந்தனைய செந் திரு முகக் கணவன்மார்
    எதிர் எழுந்து, அடி விழுந்து, அழுது சோர் இள நலார்
    அதி நலம் கோதை சேர் ஓதியோடு, அன்று, அவ் ஊர்
    உதிரமும் தெரிகிலாது, இடை பரந்து ஒழுகியே! 43

  300. தா இல் வெஞ் செரு நிலத்திடை, உலந்தவர்த(ம்)மேல்,
    ஓவியம் புரை நலார் விழுதொறும், சிலர் உயிர்த்து,
    ஏவு கண்களும் இமைத்திலர்களாம்; இது எலாம்
    ஆவி ஒன்று, உடல் இரண்டு, ஆயதாலேகொலாம்? 44

  301. ஓடினார், உயிர்கள் நாடு உடல்கள் போல்; உறுதியால்
    வீடினார்; வீடினார் மிடை உடல் குவைகள்வாய்,
    நாடினார், மட நலார்; நவை இலா நண்பரைக்
    கூடினார்; ஊடினார் உம்பர் வாழ் கொம்பு அனார். 45

  302. தீட்டு வாள் அனைய கண் தெரிவை, ஓர் திரு அனாள்,
    ஆட்டில்நின்று அயர்வது ஓர் அறு தலைக் குறையினைக்
    கூட்டி, நின் ஆர் உயிர்த் துணைவன், எம் கோனை, நீ,
    காட்டுவாயாதி என்று, அழுது கை கூப்பினாள். 46

  303. ஏந்தினாள் தலையை, ஓர் எழுத அருங் கொம்பு அனாள்;
    காந்தன் நின்று ஆடுவான் உயர் கவந்தத்தினை,
    வேந்த! நீ அலசினாய்; விடுதியால் நடம் எனா,
    பூந் தளிர்க் கைகளான், மெய் உறப் புல்லினாள். 47

  304. இராவணன் காலடியில் விழுந்து, மண்டோ தரி முதலியோர் அழுது புலம்புதல்

  305. கயல் மகிழ் கண் இணை கலுழி கான்று உக,
    புயல் மகிழ் புரி குழல் பொடி அளாவுற,
    அயன் மகன் மகன் மகன் அடியின் வீழ்ந்தனள்,
    மயன் மகள்; வயிறு அலைத்து அலறி மாழ்கினாள். 48

  306. தா அருந் திரு நகர்த் தையலார் முதல்
    ஏவரும், இடை விழுந்து இரங்கி ஏங்கினார்;
    காவலன் கால்மிசை விழுந்து, காவல் மாத்
    தேவரும் அழுதனர், களிக்கும் சிந்தையார். 49

  307. மிகைப் பாடல்கள்

  308. தடுவையின் மரங்களோடு சகடைகள் திமிலை தாக்க
    உடுஇனம் ஆனது எல்லாம் உதிர்ந்த, பூ உதிர்ந்தது என்ன;
    அடு புலி அனைய வீரர் அணிகல ஆர்ப்பும், ஆனை
    நெடு மணி முழக்கும், ஓங்கி, மண்ணுலகு அதிர்ந்தது அன்றே. 12-1

  309. பத்தியில் தேர்கள் செல்ல, பவளக் கால் புடைகள் சுற்ற,
    முத்தினில் கவிகை சூழ, முகில் என முரசம் ஆர்ப்ப,
    மத்த வெங் கரிகள் யாவும் மழை என இருண்டு தோன்ற,
    தத்திய பரிகள் தன்னின் சாமரை தழைப்ப,-போனான். 15-1

  310. தீய வல் அரக்கர் தம்மில் சிலர் சிலர் செம் பொற் சின்னம்
    வாயின் வைத்து ஊத, வீரர் வழி இடம் பெறாது செல்ல,
    காயும் வெங் களிறு, காலாள் கடும் பரி, கடுகிச் செல்ல,
    நாயகன் தூதன் தானும் நோக்கினன்; நகையும் கொண்டான். 16-1

  311. புலிப் போத்தின் வயவர் எல்லாம்-பொரு கரி, பரி, தேர், பொங்க,
    கலித்தார்கள் உம்பர் ஓட, கடையுகத்து எறியும் காலின்
    ஒலித்து, ஆழி உவாவுற்றென்ன உம்பர் தோரணத்தை முட்ட-
    வலித்தார் திண் சிலைகள் எல்லாம்; மண்டின சரத்தின் மாரி. 23-1

  312. எடுத்தனன் எழு ஒன்று; அங்கை எடுத்து இகல் அரக்கர் சிந்தப்
    பொடித்தனன்; இரதம், வாசி, பொரு களிறு, இதனை எல்லாம்
    முடித்தனன், நொடிப்பில்; பின்னும், மூசு போர் அரக்கர் வெள்ளம்
    அடுத்து அமர் கோல, மேன்மேல் அடு படை தூவி ஆர்த்தார். 24-1

  313. செறி நாண் உரும் ஒலி கொண்டான்; ஒருபது திசைவாய் கிழிபட அழல்கின்றான்;
    இறுவாய், இது பொழுது என்றான்; எரி கணை எழு கார் மழை பொழிவது போல,
    பொறிவாய் திசைதொறும் மின் தாரயின் நிலை பொலியச் சினமொடு பொழிகின்றான்;
    உறுமாருதி உடல் உகவெங்குருதிகள் ஒழியாது, அவனொடு மலைவுற்றான்.32- 1

  314. மலைபோல் உறு புய வலி மாருதி சினம் வந்து ஏறிட, எந்திரமும் தேர்த்
    தொலையாது அவன் விடு சர மாரிகள் பல துண்டப்படும் வகை மிண்டி, தன்
    வலி சேர் கரம்அதில் எழுவால் முழுதையும் மண்டித் துகள் பட மடிவித்தான்;
    புலிபோல் அடு சின நிருதன் கண்டு அழல் பொங்கிப் பொரு சிலை விளைவித்தான். 32-2

  315. மாய்ந்தான், மாருதி கையால், அகிலமும் உடையான் மகன் என வானோர் கண்டு,
    ஓய்ந்தார்இலர், குதி கொண்டார்; உவகையின் ஒழியா நறு மலர் சொரிகின்றார்;
    சாய்ந்தார் நிருதர்கள் உள்ளார் தமர் உடல் இடறித் திரை மிசை விழ ஓடித்
    தேய்ந்தார் சிலர்; சிலர் பிடரில் குதியடி பட ஓடினர்; சிலர் செயல் அற்றார். 33- 1

  316. இன்னன நிகழ்வுழி, இராக்கதக் குழாம்
    மன்னிய சோதியும், அரக்கன் மைந்தனும்,
    தன் நிகர் அனுமனால் இறந்த தன்மையை
    முன்னினர் சொல, அவன் முன்பு கேட்டனன். 47-1

  317. அவ் வகை கண்டவர் அமரர் யாவரும்,
    உய்வகை அரிது என ஓடி, மன்னவன்
    செல் அடிஅதன்மிசை வீழ்ந்து செப்பினார்,
    எவ் வகைப் பெரும் படை யாவும் மாய்ந்ததே. 47-2

  318. ஈது மற்று இசைவுற, இது கண்டு ஏங்கியே,
    மா துயரத்தொடு மறுகு நெஞ்சுடைத்
    தூதர் உற்றுஓடினர்; தொழுது, மன்னனுக்கு
    ஓதினர்; ஓதல் கேட்டு, உளம் துளங்கினான். 47-3

  319. நாடினார்; நாடியே, நனை வரும் கொம்பு அனார்
    வாடினார்; கணவர் தம் மார்பு உறத் தழுவியே
    வீடினார்; அவ் வயின், வெருவி விண்ணவர்கள் தாம்
    ஓடினார்; அரசன் மாட்டு அணுகி நின்று, உரை செய்வார்: 47-4

  320. மைந்தனை மடித்தது குரங்கு என்று ஓதவும்
    வந்தது போலும், நம் வாழ்வு நன்று! எனா,
    சிந்தையின் அழன்று, எரி விழித்து, சென்று, நீர்
    இந்திரன் பகைஞனைக் கொணருவீர் என்றான். 49-1

  321. என்றலும், ஏவலுக்கு உரியர் ஓடியே
    சென்று, மற்று அவன் அடி பணிந்து, தீமை வந்து
    ஒன்றிய திறங்களும் உரைத்து, நுத்தையும்
    இன்று உனைக் கூவினன் எனவும் சொல்லினார். 49-2

  322. சுந்தர காண்டம்

    11. பாசப் படலம்


    இளவல் இறந்தது கேட்டு, இந்திரசித்து சினத்துடன் போருக்கு எழுதல்

  323. அவ் வழி, அவ் உரை கேட்ட ஆண்தகை,
    வெவ் விழி எரி உக, வெகுளி வீங்கினான் -
    எவ் வழி உலகமும் குலைய, இந்திரத்
    தெவ் அழிதர உயர் விசயச் சீர்த்தியான். 1

  324. அரம் சுடர் வேல் தனது அனுசன் இற்ற சொல்
    உரம் சுட, எரி உயிர்த்து, ஒருவன் ஓங்கினான் -
    புரம் சுட வரி சிலைப் பொருப்பு வாங்கிய
    பரஞ்சுடர் ஒருவனைப் பொருவும் பான்மையான். 2

  325. ஏறினன், விசும்பினுக்கு எல்லை காட்டுவ
    ஆறு-இருநூறு பேய் பூண்ட ஆழித் தேர்;
    கூறின கூறின சொற்கள் கோத்தலால்,
    பீறின நெடுந் திசை; பிளந்தது அண்டமே. 3

  326. ஆர்த்தன, கழலும் தாரும் பேரியும், அசனி அஞ்ச;
    வேர்த்து, உயிர் குலைய, மேனி வெதும்பினன், அமரர் வேந்தன்;
    சீர்த்தது போரும் என்னா, தேவர்க்கும் தேவர் ஆய
    மூர்த்திகள்தாமும், தம்தம் யோகத்தின் முயற்சி விட்டார். 4

  327. தம்பியை உன்னும்தோறும், தாரை நீர் ததும்பும் கண்ணான்,
    வம்பு இயல் சிலையை நோக்கி, வாய் மடித்து உருத்து நக்கான்;
    கொம்பு இயல் மாய வாழ்க்கைக் குரங்கினால், குரங்கா ஆற்றல்
    எம்பியோ தேய்ந்தான்? எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது? என்றான். 5

  328. இந்திரசித்தை வந்து சூழ்ந்த படையின் பெருக்கம்

  329. வேல் திரண்டனவும், வில்லு மிடைந்தவும், வெற்பு என்றாலும்
    கூறு இரண்டு ஆக்கும் வாள் கைக் குழுவையும் குணிக்கல் ஆற்றேம்;
    சேறு இரண்டு அருகு செய்யும் செறி மதச் சிறு கண் யானை,
    ஆறு-இரண்டு அஞ்சுநூற்றின் இரட்டி; தேர்த் தொகையும் அஃதே. 6

  330. இராவணன் மாளிகை சென்று, இந்திரசித்து அவனுடன் பேசுதல்

  331. ஆய மாத் தானைதான் வந்து அண்மியது; அண்ம, ஆண்மைத்
    தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர, தேரின்
    ஏ எனும் அளவில் வந்தான்; இராவணன் இருந்த, யாணர்
    வாயில் தோய் கோயில் புக்கான்;-அருவி சோர் வயிரக் கண்ணான். 7

  332. தாள் இணை வீழ்ந்தான், தம்பிக்கு இரங்குவான்; தறுகணானும்
    தோள் இணை பற்றி ஏந்தித் தழுவினன், அழுது சோர்ந்தான்;
    வாள் இணை நெடுங் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க,
    மீளிபோல் மொய்ம்பினானும் விலக்கினன்; விளம்பலுற்றான்: 8

  333. ஒன்று நீ உறுதி ஓராய்; உற்றிருந்து உளையகிற்றி,
    வன் திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும், அன்னோ!
    சென்று நீர் பொருதிர் என்று, திறத் திறம் செலுத்தி, தேயக்
    கொன்றனை நீயே அன்றோ, அரக்கர்தம் குழுவை எல்லாம்? 9

  334. கிங்கரர், சம்புமாலி, கேடு இலா ஐவர், என்றுஇப்
    பைங் கழல் அரக்கரோடும் உடன் சென்ற பகுதிச் சேனை,
    இங்கு ஒருபேரும் மீண்டார் இல்லையேல், குரங்கு அது, எந்தாய்!
    சங்கரன், அயன், மால், என்பார்தாம் எனும் தகையது ஆமே! 10

  335. திக்கய வலியும், மேல்நாள் திரிபுரம் தீயச் செற்ற
    முக்கணன் கைலையோடும் உலகு ஒரு மூன்றும் வென்றாய்;
    அக்கனைக் கொன்று நின்ற குரங்கினை, ஆற்றல் காட்டி,
    புக்கு இனி வென்றும் என்றால், புலம்பு அன்றி, புலமைத்து ஆமோ? 11

  336. இராவணனிடம் விடைபெற்று, இந்திரசித்து போர்க்குச் செல்லுதல்

  337. ஆயினும், ஐய! நொய்தின், ஆண் தொழில் குரங்கை, யானே,
    ஏ எனும் அளவில் பற்றித் தருகுவென்; இடர் என்று ஒன்றும்
    நீ இனி உழக்கற்பாலை அல்லை; நீடு இருத்தி என்னா,
    போயினன் -அமரர் கோவைப் புகழொடு கொண்டு போந்தான். 12

  338. ஆழிஅம் தேரும், மாவும், அரக்கரும், உருக்கும் செங் கண்
    குழி வெங் கோப மாவும், துவன்றிய நிருதர் சேனை,
    ஊழி வெங் கடலின் சுற்ற, ஒரு தனி நடுவண் நின்ற
    பாழி மா மேரு ஒத்தான்-வீரத்தின் பன்மை தீர்ப்பான். 13

  339. சென்றனன் என்ப மன்னோ; திசைகளோடு உலகம் எல்லாம்
    வென்றவன் இவன் என்றாலும், வீரத்தே நின்ற வீரன்,
    அன்று அது கண்ட ஆழி அனுமனை, அமரின் ஆற்றல்
    நன்று என உவகை கொண்டான்; யாவரும் நடுக்கம் உற்றார். 14

  340. போர்க் களம் நோக்கிய இந்திரசித்தின் மன நிலை

  341. இலை குலாம் பூணினானும், இரும் பிணக் குருதி ஈரத்து,
    அலகு இல் வெம் படைகள் தெற்றி, அளவிடற்கு அரிய ஆகி,
    மலைகளும், கடலும், யாறும், கானமும் பெற்று, மற்று ஓர்
    உலகமே ஒத்தது, அம்மா! போர்ப் பெருங் களம் என்று உன்னா, 15

  342. வெப்பு அடைகில்லா நெஞ்சில், சிறியது ஓர் விம்மல் கொண்டான்;
    அப்பு அடை வேலை அன்ன பெருமையார், ஆற்றலோடும்
    ஒப்பு அடைகில்லார், எல்லாம் உலந்தனர்; குரங்கும் ஒன்றே!
    எப் படை கொண்டு வெல்வது, இராமன் வந்து எதிர்க்கின்? என்றான். 16

  343. கண் அனார், உயிரே ஒப்பார், கைப் படைக்கலத்தின் காப்பார்,
    எண்ணல் ஆம் தகைமை இல்லார், இறந்து எதிர் கிடந்தார் தம்மை
    மண்ணுளே நோக்கி நின்று, வாய் மடித்து, உருத்து, மாயாப்
    புண்ணுளே கோல் இட்டன்ன மானத்தால், புழுங்குகின்றான். 17

  344. கானிடை அத்தைக்கு உற்ற குற்றமும், கரனார் பாடும்,
    யானுடை எம்பி வீந்த இடுக்கணும், பிறவும் எல்லாம்,
    மானிடர் இருவராலும், வானரம் ஒன்றினாலும்,
    ஆனதே! உள என் வீரம் அழிகிற்றே அம்ம! என்றான். 18

  345. இறந்த தம்பியின் உடலைக் கண்டு, சோகமும் கோபமும் கொள்ளுதல்

  346. நீப்புண்ட உதிர வாரி நெடுந் திரைப் புணரி தோன்ற,
    ஈர்ப்புண்டற்கு அரிய ஆய பிணக் குவடு இடறிச் செல்வான்;
    தேய்ப்புண்ட தம்பி யாக்கை, சிவப்புண்ட கண்கள் தீயில்
    காய்ப்புண்ட செம்பின் தோன்ற, கறுப்புண்ட மனத்தன், கண்டான். 19

  347. தாருகன் குருதி அன்ன குருதியில், தனி மாச் சீயம்
    கூர் உகிர் கிளைத்த கொற்றக் கனகன் மெய்க் குழம்பின் தோன்ற,
    தேர் உக, கையின் வீரச் சிலை உக, வயிரச் செங்கண்
    நீர் உக, குருதி சிந்த, நெருப்பு உக உயிர்த்து நின்றான். 20

  348. வெவ் இலை அயில் வேல் உந்தை வெம்மையைக் கருதி, ஆவி
    வவ்வுதல் கூற்றும் ஆற்றான்; மாறு மாறு உலகின் வாழ்வார்,
    அவ் உலகத்து உளாரும், அஞ்சுவர் ஒளிக்க; ஐயா!
    எவ் உலகத்தை உற்றாய், எம்மை நீத்து, எளிதின்? எந்தாய்! 21

  349. ஆற்றலன் ஆகி, அன்பால் அறிவு அழிந்து அயரும் வேலை,
    சீற்றம் என்று ஒன்றுதானே மேல் நிமிர் செலவிற்று ஆகி,
    தோற்றிய துன்ப நோயை உள்ளுறத் துரந்தது அம்மா!-
    ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செலக் கடாயது என்ன. 22

  350. இந்திரசித்தை நோக்கிய அனுமனின் சிந்தனை

  351. ஈண்டு இவை நிகழ்வுழி, இரவி தேர் எனத்
    தூண்டுறு தேரின்மேல் தோன்றும் தோன்றலை,
    மூண்டு முப்புரம் சுட முடுகும் ஈசனின்,
    ஆண் தகை வனை கழல் அனுமன், நோக்கினான். 23

  352. வென்றேன், இதன் முன், சில வீரரை என்னும் மெய்ம்மை
    அன்றே முடுகிக் கடிது எய்த அழைத்தது அம்மா!
    ஒன்றே, இனி வெல்லுதல் தோற்றல்; அடுப்பது உள்ளது
    இன்றே சமையும்; இவன் இந்திரசித்து! என்பான். 24

  353. கட்டு ஏறு, நறுங் கமழ் கண்ணி, இக் காளை என் கைப்
    பட்டால், அதுவே அவ் இராவணன் பாடும் ஆகும்;
    கெட்டேம் என எண்ணி, இக் கேடு அருங் கற்பினாளை
    விட்டு ஏகும்; அது அன்றி, அரக்கரும் வெம்மை தீர்வார். 25

  354. ஒன்றோ இதனால் வரும் ஊதியம்? ஒண்மையானைக்
    கொன்றேன் எனின், இந்திரனும் துயர்க் கோளிம் நீங்கும்;
    இன்றே, கடி கெட்டது, அரக்கர் இலங்கை; யானே
    வென்றேன், அவ் இராவணன் தன்னையும், வேரொடு என்றான். 26

  355. அரக்கர் படையுடன் அனுமன் பொருதல்

  356. அக் காலை, அரக்கரும், யானையும், தேரும், மாவும்,
    முக் கால் உலகம் ஒரு மூன்றையும் வென்று முற்றிப்
    புக்கானின் முன் புக்கு, உயர் பூசல் பெருக்கும் வேலை.
    மிக்கானும், வெகுண்டு, ஓர் மராமரம் கொண்டு மிக்கான். 27

  357. உதையுண்டன யானை; உருண்டன யானை; ஒன்றோ?
    மிதியுண்டன யானை; விழுந்தன யானை; மேல் மேல்,
    புதையுண்டன யானை; புரண்டன யானை; போரால்
    வதையுண்டன யானை; மறிந்தன யானை, மண்மேல். 28

  358. முடிந்த தேர்க் குலம்; முறிந்தன தேர்க் குலம்; முரண் இற்று
    இடிந்த தேர்க் குலம்; இற்றன தேர்க் குலம்; அச்சு இற்று
    ஒடிந்த தேர்க் குலம்; உக்கன தேர்க் குலம்; நெக்குப்
    படிந்த தேர்க் குலம்; பறிந்தன தேர்க் குலம், படியில். 29

  359. சிரன் நெரிந்தவும், கண் மணி சிதைந்தவும், செறி தாள்
    தரன் நெரிந்தவும், முதுகு இறச் சாய்ந்தவும், தார் பூண்
    உரன் நெரிந்தவும், உதிரங்கள் உமிழ்ந்தவும், ஒளிர் பொற்
    குரன் நெரிந்தவும், கொடுங் கழுத்து ஒடிந்தவும் - குதிரை. 30

  360. பிடியுண்டார்களும், பிளத்தலுண்டார்களும், பெருந் தோள்
    ஒடியுண்டார்களும், தலை உடைந்தார்களும், உருவக்
    கடியுண்டார்களும், கழுத்து இழந்தார்களும், கரத்தால்
    அடியுண்டார்களும், அச்சமுண்டார்களும்-அரக்கர். 31

  361. வட்ட வெஞ் சிலை ஒட்டிய வாளியும், வயவர்
    விட்ட விட்ட வெம் படைகளும், வீரன்மேல் வீழ்ந்த,
    சுட்ட வல் இரும்பு அடைகலைச் சுடுகலாதது போல்,
    பட்ட பட்டன திசையொடும் பொறியொடும் பரந்த. 32

  362. சிகை எழும் சுடர் வாளிகள், இராக்கதர் சேனை,
    மிகை எழும் சினத்து அனுமன்மேல் விட்டன, வெந்து,
    புகை எழுந்தன, எரிந்தன, கரிந்தன போத,-
    நகை எழுந்தன, குளிர்ந்தன, வான் உளோர் நாட்டம். 33

  363. இந்திரசித்துக்கும் அனுமனுக்கும் பெரும் போர் நிகழ்தல்

  364. தேரும், யானையும், புரவியும், அரக்கரும், சிந்திப்
    பாரின் வீழ்தலும், தான் ஒரு தனி நின்ற பணைத் தோள்
    வீரர் வீரனும், முறுவலும் வெகுளியும் வீங்க,
    வாரும், வாரும் என்று அழைக்கின்ற அனுமன்மேல் வந்தான். 34

  365. புரந்தரன் தலை பொதிர் எறிந்திட, புயல் வானில்
    பரந்த பல் உரும்ஏற்றுஇனம் வெறித்து உயிர் பதைப்ப,
    நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன்
    சிரம் துளங்கிட, அரக்கன் வெஞ் சிலையை நாண் தெறித்தான். 35

  366. ஆண்ட நாயகன் தூதனும், அயனுடை அண்டம்
    கீண்டதாம் என, கிரி உக, நெடுநிலம் கிழிய,
    நீண்ட மாதிரம் வெடிபட, அவன் நெடுஞ் சிலையில்
    பூண்ட நாண் இற, தன் நெடுந் தோள் புடைத்து ஆர்த்தான். 36

  367. நல்லை! நல்லை! இஞ் ஞாலத்துள், நின் ஒக்க நல்லார்
    இல்லை! இல்லையால்! எறுழ் வலிக்கு யாரொடும் இகல
    வல்லை! வல்லை! இன்று ஆகும், நீ படைத்துள வாழ்நாட்கு
    எல்லை! எல்லை! என்று, இந்திரசித்துவும் இசைந்தான். 37

  368. நாளுக்கு எல்லையும், நிருதராய் உலகத்தை நலியும்
    கோளுக்கு எல்லையும், கொடுந் தொழிற்கு எல்லையும், கொடியீர்!
    வாளுக்கு எல்லையும் வந்தன; வகை கொண்டு வந்தேன்
    தோளுக்கு எல்லை ஒன்று இல்லை என்று அனுமனும் சொன்னான். 38

  369. இச் சிரத்தையைத் தொலைப்பென் என்று, இந்திரன் பகைஞன்,
    பச்சிரத்தம் வந்து ஒழுகிட, வானவர் பதைப்ப,
    வச்சிரத்தினும் வலியன, வயிர வான் கணைகள்,
    அச் சிரத்தினும் மார்பினும் அழுத்தலும்-அனுமன். 39

  370. குறிது வான் என்று குறைந்திலன், நெடுஞ் சினம் கொண்டான்,
    மறியும் வெண் திரை மா கடல் உலகு எலாம் வழங்கி,
    சிறிய தாய் சொன்ன திருமொழி சென்னியில் சூடி,
    நெறியில் நின்ற தன் நாயகன் புகழ் என, நிமிர்ந்தான். 40

  371. பாகம் அல்லது கண்டிலன்; அனுமனனப் பார்த்தான்;
    மாக வன் திசை பத்தொடும் வரம்பு இலா உலகிற்கு
    ஏக நாதனை எறுழ் வலித் தோள் பிணித்து ஈர்த்த
    மேக நாதனும், மயங்கினனாம் என வியந்தான். 41

  372. நீண்ட வீரனும், நெடுந் தடக் கைகளை நீட்டி,
    ஈண்டு வெஞ் சரம் எய்தன எய்திடாவண்ணம்,
    மீண்டு போய் விழ வீசி, ஆங்கு அவன் மிடல் தடந் தேர்
    பூண்ட பேயொடு, சாரதி தரைப்பட, புடைத்தான். 42

  373. ஊழிக் காற்று அன்ன ஒரு பரித் தேர் அவண் உதவ,
    பாழித் தோளவன், அத் தடந் தேர்மிசைப் பாய்ந்தான்;
    ஆழிப் பல் படை அனையன, அளப்ப அருஞ் சரத்தால்,
    வாழிப் போர் வலி மாருதி மேனியை மறைத்தான். 43

  374. உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறா,
    கொற்ற மாருதி, மற்றவன் தேர்மிசைக் குதித்து,
    பற்றி வன் கையால், பறித்து எழுந்து, உலகு எலாம் பல கால்
    முற்றி வென்ற போர் மூரி வெஞ் சிலையினை, முறித்தான். 44

  375. முறிந்த வில்லின் வல் ஓசை போய் முடிவதன் முன்னர்,
    மறிந்து போரிடை வழிக் கொள்வான், வயிர வாட் படையால்
    செறிந்த வான் பெரு மலைகளைச் சிறகு அறச் செயிரா
    எறிந்த இந்திரன் இட்ட, வான் சிலையினை எடுத்தான். 45

  376. நூறு நூறு போர் வாளி, ஓர் தொடை கொடு, நொய்தின்,
    மாறு இல் வெஞ் சினத்து இராவணன் மகன் சிலை வளைத்தான்;
    ஊறு, தன் நெடு மேனியில், பல பட, ஒல்கி,
    ஏறு சேவகன் தூதனும், சிறிது போது இருந்தான். 46

  377. ஆர்த்த வானவர் ஆகுலம் கொண்டு, அறிவு அழிந்தார்;
    பார்த்த மாருதி, தாரு ஒன்று அங்கையில் பற்றி,
    தூர்த்த வாளிகள் துணிபட முறை முறை சுற்றி,
    போர்த்த பொன் நெடு மணி முடித் தலையிடைப் புடைத்தான். 47

  378. பார மா மரம் முடியுடைத் தலையிடைப் படலும்,
    தாரையின் நெடுங் கற்றைகள் சொரிவன தயங்க,
    ஆர மால் வரை அருவியின் அழி கொழுங் குருதி
    சோர நின்று, உடல் துளங்கினன் - அமரரைத் தொலைத்தான். 48

  379. நின்று, போதம் வந்துறுத்தலும், நிறை பிறை எயிற்றைத்
    தின்று, தேவரும் முனிவரும் அவுணரும் திகைப்ப,
    குன்றுபோல் நெடு மாருதி ஆகமும் குலுங்க,
    ஒன்று போல்வன, ஆயிரம் பகழி கோத்து உய்த்தான். 49

  380. உய்த்த வெஞ் சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப,
    கைத்த சிந்தையன் மாருதி, நனி தவக் கனன்றான்;
    வித்தகன் சிலை விடு கணை விசையினும் கடுகி,
    அத் தடம் பெருந் தேரொடும் எடுத்து, எறிந்து, ஆர்த்தான். 50

  381. கண்ணின் மீச் சென்ற இமை இடை கலப்பதன்முன்னம்,
    எண்ணின் மீச் சென்ற எறுழ் வலித் திறலுடை இகலோன்,
    புண்ணின் மீச் சென்று பொழி புனல் பசும் புலால் பொடிப்ப,
    விண்ணின் மீச் சென்று, தேரொடும் பார்மிசை வீழ்ந்தான். 51

  382. விழுந்து பார் அடையாமுனம், மின் எனும் எயிற்றான்,
    எழுந்து, மா விசும்பு எய்தினன்; இடை, அவன் படையில்,
    செழுந் திண் மா மணித் தேர்க் குலம் யாவையும் சிதைய
    உழுந்து பேர்வதன்முன், நெடு மாருதி உதைத்தான். 52

  383. இந்திரசித்து வேறு வழியின்றி அயன் படையை விடுத்தல்

  384. ஏறு தேர் இலன்; எதிர் நிற்கும் உரன் இலன்; எரியின்,
    சீறு வெஞ் சினம் திருகினன், அந்தரம் திரிவான்,
    வேறு செய்வது ஓர் வினை பிறிது இன்மையின், விரிஞ்சன்
    மாறு இலாப் பெரும் படைக்கலம் தொடுப்பதே மதித்தான். 53

  385. பூவும், பூ நிற அயினியும், தீபமும், புகையும்,
    தா இல் பாவனையால் கொடுத்து, அருச்சனை சமைத்தான்;
    தேவு யாவையும், உலகமும், திருத்திய தெய்வக்
    கோவில் நான்முகன் படைக்கலம் தடக் கையில் கொண்டான். 54

  386. கொண்டு, கொற்ற வெஞ் சிலை நெடு நாணொடும் கூட்டி,
    சண்ட வேகத்த மாருதி தோளொடும் சாத்தி,
    மண் துளங்கிட, மாதிரம் துளங்கிட, மதி தோய்
    விண் துளங்கிட, மேருவும் துளங்கிட, விட்டான். 55

  387. அயன் படைக்கு அடங்கிச் சாய்ந்த அனுமனின் அருகில் இந்திரசித்து வருதல்

  388. தணிப்ப அரும் பெரும் படைக்கலம், தழல் உமிழ் தறுகண்
    பணிக் குலங்களுக்கு அரசினது உருவினைப் பற்றி,
    துணிக்க உற்று, உயர் கலுழனும் துணுக்குற, சுற்றிப்
    பிணித்தது, அப் பெரு மாருதி தோள்களைப் பிறங்க. 56

  389. திண்ணென் யாக்கையைத் திசைமுகன் படை சென்று திருக,
    அண்ணல் மாருதி, அன்று, தன் பின் சென்ற அறத்தின்
    கண்ணின் நீரொடும், கனக தோரணத்தொடும், கடை நாள்,
    தண்ணென் மா மதி கோளொடும் சாய்ந்தென, சாய்ந்தான். 57

  390. சாய்ந்த மாருதி, சதுமுகன் படை எனும் தன்மை
    ஆய்ந்து, மற்று இதன் ஆணையை அவமதித்து அகறல்
    ஏய்ந்தது அன்று என எண்ணினன், கண் முகிழ்த்து இருந்தான்;
    ஓய்ந்தது ஆம் இவன் வலி என, அரக்கன் வந்துற்றான். 58

  391. அரக்கர் படை ஆரவாரித்தல்

  392. உற்ற காலையின், உயிர்கொடி திசைதொறும் ஒதுங்கி
    அற்றம் நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர்-
    சுற்றும் வந்து, உடல் சுற்றிய தொளை எயிற்று அரவைப்
    பற்றி ஈர்த்தனர்; ஆர்த்தனர்; தெழித்தனர்-பலரால். 59

  393. குரக்கு நல் வலம் குறைந்தது என்று, ஆவலம் கொட்டி
    இரைக்கும் மா நகர் எறி கடல் ஒத்தது; எம் மருங்கும்
    திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது; தேவர்,
    அரக்கர் ஒத்தனர்; மந்தரம் ஒத்தனன், அனுமன். 60

  394. கறுத்த மாசுணம், கனக மா மேனியைக் கட்ட,
    அறத்துக்கு ஆங்கு ஒரு தனித் துணை என நின்ற அனுமன்,
    மறத்து, மாருதம் பொருத நாள், வாள் அரா அரசு
    புறத்துச் சுற்றிய மேரு மால் வரையையும் போன்றான். 61

  395. இலங்கை மக்களின் மகிழ்ச்சி

  396. வந்து இரைந்தனர், மைந்தரும், மகளிரும்; மழைபோல்,
    அந்தரத்தினும், விசும்பினும், திசைதொறும் ஆர்ப்பார்;
    முந்தி உற்ற பேர் உவகைக்கு ஓர் கரை இலை; மொழியின்,
    இந்திரன் பிணிப்புண்ட நாள் ஒத்தது, அவ் இலங்கை. 62

  397. மிகைப் பாடல்கள்

  398. பத்தியில் தேர்கள் செல்ல, பவளக் கால் குடைகள் சுற்ற,
    முத்தினின் சிவிகைதன்னை முகில் எனத் தேர்கள் சுற்ற,
    மத்த வெங் கரிகள் எல்லாம் மழை என இருண்டு தோன்ற,
    தத்திய பரிகள் தன்னின் சாமரை பதைப்ப,-வந்தான். 12-1

  399. சங்குகள் முழங்க, பேரி சகடைகள் இடியின் வீழ,
    வெங் குரல் திமிலையோடு கடுவையின் மரங்கள் வீங்கி,
    தொங்கலின் குழாமும் தூளி வெள்ளமும் விசும்பைத் தூர்க்க,
    திங்களின் குடைகள் பூப்ப, திசைக் களிறு இரிய, - வந்தான். 12-2

  400. தீயினில் செவ்வே வைத்த சின்னங்கள் வேறு வேறு
    வாயினில் ஊது வீரர் வழியிடம் பெறாது செல்ல,
    தாயவன் சொல் மாறாது தவம் புரிந்து அறத்தில் நின்ற
    நாயகன் தூதன் தானும், நோக்கினன்; நகையும் கொண்டான். 12-3

  401. செம் பொனின் தேரின் பாங்கர்ச் செங்குடைத் தொங்கற் காடும்,
    உம்பரின் கொம்பர் ஒத்த, ஒரு பிடி நுசுப்பின், செவ்வாய்,
    வம்பு அவிழ் குழலினார்கள் சாமரை புதைத்து வீச,
    கொம்பொடும் கோடு தாரை குடர் பறித்து ஊத வந்தான். 12-4

  402. தொங்கலின் காடு நூறாயிரம் என்பர்; தோகைப் பிச்சம்,
    பங்கம் இல் பணிலம் பத்துப் பத்து நூறு ஆகும் என்பர்;
    செங் குடை வெண்மை; நீலம், பச்சையோடு இனைய எல்லாம்
    பொங்கு ஒளி மன்னு கோடி புரந்த ஆதித்தர் சுற்ற. 12-5

  403. தீ எழு பொன்னின் சின்னம் மேவி வீழ் அரக்கர் சேர
    வாய்களில் ஊத, மண்ணும் வானமும் மறுகிச் சோர,
    ஆயது முடிவு காலம்; கிளர்ந்தனர் அரக்கர் என்று
    வாய்களின் பேசி வானோர் மண்டினர், மலைதல் நோக்கி. 12-6

  404. அரம்தெறும் அயிலின் காடும், அழல் உமிழ் குந்தக் காடும்,
    சரம் தரு சிலையின் காடும், தானவர் கடலும், இன்ன
    நிரந்தரம் சங்கு தாரை நில மகள் முதுகை ஆற்றாள்;
    புரந்தரசித்து வந்தான் என்றன, பொன்னின் சின்னம். 12-7

  405. புலித் தோலின் பலகை எல்லாம் பொரு கடல் புரவி என்னக்
    கலித்து ஓடி, உம்பரொடும் ஓடின, காலன் அஞ்ச;
    ஒலித்து ஆழி உலாவுற்றென்ன உம்பர் தோரணத்தை முட்ட,
    வலித்தார் திண் சிலைகள் எல்லாம்; மண்டின சரத்தின் மாரி. 12-8

  406. தடுவையின் மரங்களோடு சகடைகள் திமிலை தாக்க,
    உடுஇனம் ஆனது எல்லாம் உதிர்ந்தன, பூ இது என்ன;
    அடு புலி அனைய வீரர் அமரினில் ஆர்ப்பும், ஆனை
    நெடு மணிமுழக்கும், ஓதை மண்ணகம் நிறைந்தது அன்றே. 12-9

  407. எண்பனாதியிர கோடி இருஞ் சிலை
    புண் பயில் வெஞ் சரம் பூட்டினர், ஒன்றோ?
    விண் புகு தோரணம் மெல்ல மறைந்த;
    மண் புகழ் சீர்த்தியன் மாருதி வாழ்ந்தான். 12-10

  408. பாறு எழு வாட் படை பத்திரு வெள்ளம்;
    ஆறு இரு கோடியின் வேலின் அமைந்தார்;
    கூறிடு வெள்ளம் மிடைந்தது குந்தம்;-
    வீறுடை மாருதிமேல் வரு சேனை, 12-11

  409. பந்து என ஆடிய பாய் பரி எல்லாம்;
    சிந்தையின் முந்தின தேர்கள் செறிந்த;
    அந்தியின் மேனிய ஆனைகள் எல்லாம்
    வந்தன, மண்ணை அடித் துகள் மாய்ப்ப. 12-12

  410. சங்கொடு தாரைகள், சச்சரி, சின்னம்,
    எங்கும் இயம்பின; பேரி இடித்த;
    வெங் குரலின் பறை விண்ணில் நிறைந்த;
    பொங்கி அரக்கர் பொருக்கென வந்தார். 12-13

  411. பார்த்தன பார்த்தன பாய் பரி எங்கும்;
    தேர்த் திரள் தேர்த் திரளே திசை எங்கும்;
    கார்த் திரள் மேனியின் இன் கயம் எங்கும்;
    ஆர்த்தனர் மண்டும் அரக்கர்கள் எங்கும். 12-14

  412. நுகம் படு தேர் அவை நூற்று இரு கோடி;
    யுகம் பிறிது ஒன்று வந்து உற்றது என்ன,
    அகம் படு காவில் அரக்கர்கள், இன்னம்
    அகம்படி வீரர்கள் ஐ-இரு வெள்ளம். 12-15

  413. வெள்ளம் ஓர் நூறுடை விற் படை என்பார்;
    துள்ளிய வாட் படை சொல்லிட ஒண்ணா;
    பொள்ளல் தரும் கரப் பூட்கையும் அஃதே;-
    கள்ள அரக்கனைச் சுற்றினர் காப்பார். 12-16

  414. ஆய பெரும் படை செல்வது கண்டு
    மாயம் மிகும் திறல் வானர வீரன்,
    நாயகனைத் திசை நோக்கி நயத்தால்,
    மேயது ஒர் இன்பம் விளங்கிட நின்றான். 12-17

  415. ஆழியின் ஆய அரக்கர் பெரும் படை
    ஏழ் உலகும் இடம் இல் என ஈண்டிச்
    சூழும் எழுந்தனர் தோன்றினர் தம்மைக்
    கோழியின் ஒக்குறக் கூவிடுகின்றான். 12-18

  416. மாருதி கூவ மகிழ்ந்தனன் ஆகி,
    கூரிய புந்தியின் கோவன் குறிக்கொடு,
    கார் அன மேனி அரக்கர்கள் காணா,
    வாரிகளூடு மடுத்தன வாளி. 12-19

  417. தூளி மிடைந்து, உருத் தோன்றல ஆகி,
    யாளி அனானை அறிந்திலன் ஆகி,
    சூழுற நோக்கினன், சோதனை பெற்றான்;
    கோள் அமைந்து அன்னவை கூறுதலுற்றான். 12-20

  418. இந்திரன் முன்பும் இடும் திரள் சோதிச்
    சந்திர வெண்குடை தான் எதிர் கண்டான்;
    அந்தம்இல் கேள்வியன் ஆனைகள் காணா,
    சிந்தை உவந்து, சிரித்து உடன் நின்றான். 12-21

  419. சிந்தை உவந்தவன் ஆகி அரக்கன்
    முந்தி எழுந்து முனிந்தமை நோக்கி,
    வெந் திறலாய்! விரைவின் வருக! என்றான்;
    இந்திரசித்து இவன் என்பது இசைத்தான். 12-22

  420. என்று அவன் மாற்றம் இயம்புதல் கேட்டு,
    குன்றம் எனும் புய வானர வீரன்,
    நன்று இது! நன்று இது! என்ன நயந்தான்;
    சென்று அணைவுற்றது அரக்கன சேனை; 12-23

  421. ஊழி எழுந்து உலகத்தை ஒடுக்க,
    ஆழ் இயல் தானை அரக்கர் அடங்க,
    ஏழ் உலகும் இடம் இல்லை எனும்படி
    ஆழி கிளர்ந்தன என்ன அழைத்தான். 12-24

  422. சந்திரன் அருக்கனொடு தாரகை இனங்கள்
    சிந்திட எழுந்து, திசை ஈண்ட, எதிர் செவ்வே
    வந்த இவ் அரக்கர் குழு வன்மை இது என்றால்,
    இந்திரனை அன்றி உலகு ஏழும் வெலும் என்றான். 12-25

  423. உடைந்த வல்இருள் நோற்று, பல் உருக்கொடு, அக் கதிர்க் குழாங்கள்
    மிடைந்தன மிலைச்சியாங்கு, மெய் அணி பலவும் மின்ன,
    குடைந்து வெம் பகைவர் ஊன் தோய் கொற்றப் போர் வாள் வில் வீச,
    அடைந்த, கார் அரக்கர் தானை, அகலிடம் இடம் இன்று என்ன, 12-26

  424. என்றே, இவன் இப்பொழுது என் கையினால் மடிந்தால்,
    நன்றே மலர்மேல் உறை நான்முகன் ஆதி தேவர்,
    பொன்றோம் இனி என்றும்; இருந்து உயிர் போற்றுதற்கு
    நின்றே துயர் தீர நிறுத்தினன் என்ப மன்னோ. 24-1

  425. எழுந்தான்; எழுந்த பொழுது, அங்கு அரக்கரும் எண் இல் கோடி
    பொழிந்தார் படைகள்; அவை யாவையும் பொடிந்து சிந்திக்
    கழிந்து ஓடிட, தன் கை மராமரம் கொண்டு வீசி,
    செழுந் தார்ப் புயத்து அண்ணல் செறுத்து, உடன் மோதலுற்றான். 27-1

  426. செறுத்து எழுந்திடும் அரக்கர்கள் திசை திசை நெருக்கி,
    மறித்து வெஞ் சமர் மலைதலும், மாருதிக் கடவுள்
    கறுத்து வஞ்சகர் சிரத்தொடு கரம் புயம் சிதறிப்
    பொறித் தெறித்திடப் புடைத்தனன், பொரு பணை மரத்தால். 33-1

  427. புகைந்து அரக்கர்கள் விடும் கொடும் படைகளைப் பொறியின்
    தகைந்து, மற்று அவர் உடல்களைத் தலைகளைச் சிதறி,
    மிகும் திறல் கரி, பரி, மணித் தேர், இவை விளிய,
    புகுந்து அடித்தனன், மாருதி; அனைவரும் புரண்டார். 33-2

  428. எடுத்து நாண் ஒலி எழுப்பினன்; எண் திசைக் கரியும்
    படித் தலங்களும் வெடி பட, பகிரண்டம் உடைய,
    தொடுத்த வானவர் சிரதலம் துளங்கிட, சினம் கொண்டு
    அடுத்து, அம் மாருதி அயர்ந்திட, அடு சரம் துரந்தான். 45-1

  429. சுந்தர காண்டம்

    12. பிணி வீட்டு படலம்


    கட்டுப்பட்ட அனுமனைக் கண்ட அரக்கரின் நிலை

  430. எய்யுமின்; ஈருமின்; எறிமின்; போழுமின்;
    கொய்யுமின் குடரினை; கூறு கூறுகள்
    செய்யுமின்; மண்ணிடைத் தேய்மின்; தின்னுமின்;
    உய்யுமேல், இல்லை நம் உயிர் என்று ஓடுவார். 1

  431. மைத் தடங் கண்ணியர், மைந்தர், யாவரும்,
    பைத் தலை அரவு எனக் கனன்று, பைதலை
    இத்தனை பொழுதுகொண்டு இருப்பதோ? எனா,
    மொய்த்தனர்; கொலை செய்ய முயல்கின்றார், சிலர். 2

  432. நச்சு அடை படைகளால் நலியும் ஈட்டதோ,
    வச்சிர உடல்? மறி கடலின்வாய் மடுத்து,
    உச்சியின் அழுத்துமின், உருத்து; அது அன்றுஎனின்,
    கிச்சிடை இடும் எனக் கிளக்கின்றார் சிலர். 3

  433. எந்தையை எம்பியை, எம் முனோர்களைத்
    தந்தனை போக என, தடுக்கின்றார் பலர்;
    அந்தரத்து அமரர்தம் ஆணையால், இவன்
    வந்தது என்று, உயிர்கொள மறுகினார் பலர். 4

  434. ஒங்கல்அம் பெரு வலி உயிரின் அன்பரை
    நீங்கலம்; இன்றொடு நீங்கினாம்; இனி
    ஏங்கலம்; இவன் சிரத்து இருந்து அலால் திரு
    வாங்கலம் என்று அழும் மாதரார் பலர். 5

  435. கொண்டனர் எதிர் செலும் கொற்ற மா நகர்
    அண்டம் உற்றது, நெடிது ஆர்க்கும் ஆர்ப்புஅது-
    கண்டம் உற்றுள அருங் கணவர்க்கு ஏங்கிய
    குண்டல முகத்தியர் உவகை கூரவே. 6

  436. இலங்கையின் அழிவுகளை நோக்கிக்கொண்டே அனுமன் செல்லுதல்

  437. வடியுடைக் கனல் படை வயவர், மால் கரி,
    கொடியுடைத் தேர், பரி கொண்டு வீசலின்,
    இடி படச் சிதைந்த மால் வரையின், இல் எலாம்
    பொடிபடக் கிடந்தன கண்டு, போயினான். 7

  438. வழியில் அனுமனைக் கண்ட அரக்கர்களின் நிலை

  439. முயிறு அலைத்து எழு முது மரத்தின், மொய்ம்பு தோள்
    கயிறு அலைப்புண்டது கண்டும், காண்கிலாது,
    எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர்
    வயிறு அலைத்து இரியலின், மயங்கினார் பலர். 8

  440. ஆர்ப்பு உற அஞ்சினர்; அடங்கினார் பலர்;
    போர்ப்புறச் செயலினைப் புகழ்கின்றார் பலர்;
    பார்ப்புற, பார்ப்புற, பயத்தினால் பதைத்து,
    ஊர்ப் புறத்து இரியலுற்று ஓடுவார், பலர். 9

  441. காந்துறு கதழ் எயிற்று அரவின் கட்டு, ஒரு
    பூந் துணர் சேர்த்தெனப் பொலியும், வாள் முகம்;
    தேர்ந்து, உறு பொருள் பெற எண்ணி, செய்யுமின்;
    வேந்து உறல் பழுது என விளம்புவார், சிலர். 10

  442. ஒளி வரும் நாகத்துக்கு ஒல்கி, அன்று, தன்
    எளிவரவு; இன்று இதன் எண்ணம் வேறு எனா,
    களி வரு சிந்தையால் காண்டி! நங்களைச்
    சுளிகிலையாம் எனத் தொழுகின்றார், சிலர். 11

  443. அனுமனைச் சுற்றிய நாகபாசத்தைப் பற்றி இழுத்துச் செல்லும் அரக்கர்களின் தன்மை

  444. பைங் கழல் அனுமனைப் பிணித்த பாந்தளை,
    கிங்கரர், ஒருபுடைக் கிளர்ந்து பற்றினார்-
    ஐம்பதினாயிரர், அளவு இல் ஆற்றலர்.
    மொய்ம்பினின் எறுழ் வலிக் கருளன் மும்மையார். 12

  445. அனுமனின் நிலையைக் கண்டோரின் கருத்து

  446. திண் திறல் அரக்கர்தம் செருக்குச் சிந்துவான்,
    தண்டல் இல் தன் உருக் கரந்த தன்மையான்,
    மண்டு அமர் தொடங்கினன், வானரத்து உருக்
    கொண்டனன், அந்தகன்கொல்? என்றார் பலர். 13

  447. அரமியத் தலம்தொறும், அம் பொன் மாளிகைத்
    தரம் உறு நிலைதொறும், சாளரம்தொறும்,
    முரசு எறி கடைதொறும், இரைத்து மொய்த்தனர்-
    நிரை வளை மகளிரும், நிருத மைந்தரும். 14

  448. கயிலையின் ஒரு தனிக் கணிச்சி வானவன்,
    மயில் இயல் சீதைதன் கற்பின் மாட்சியால்,
    எயிலுடைத் திரு நகர் சிதைப்ப எய்தினன்,
    அயில் எயிற்று ஒரு குரங்கு ஆய் என்பார், பலர். 15

  449. அரம்பையர், விஞ்சை நாட்டு அளக வல்லியர்,
    நரம்பினும் இனிய சொல் நாக நாடியர்,
    கரும்பு இயல் சித்தியர், இயக்கர் கன்னியர்,
    வரம்பு அறு சும்மையர், தலைமயங்கினார். 16

  450. அரக்கரும் அரக்கியர் குழாமும் அல்லவர்
    கரக்கிலர், நெடு மழைக் கண்ணின் நீர்; அது,
    விரைக் குழல் சீதைதன் மெலிவு நோக்கியோ?
    இரக்கமோ? அறத்தினது எளிமை எண்ணியோ? 17

  451. அடங்கிச் செல்லும் அனுமனின் கருத்து

  452. ஆண் தொழில் அனுமனும், அவரொடு ஏகினான்;
    மீண்டிலன்; வேறலும் விரும்பலுற்றிலன்;
    ஈண்டு இதுவே தொடர்ந்துபோய் இலங்கை வேந்தனைக்
    காண்டலே நலன் எனக் கருத்தின் எண்ணினான். 18

  453. எந்தையது அருளினும், இராமன் சேவடி
    சிந்தை செய் நலத்தினும், சீதை, வானவர்,
    தந்து உள வரத்தினும், தறுகண் பாசமும்
    சிந்துவென்; அயர்வுறு சிந்தை சீரிதால்; 19

  454. வளை எயிற்று அரக்கனை உற்று, மந்திரத்து
    அளவுறு முதியரும் அறிய, ஆணையால்
    விளைவினை விளம்பினால், மிதிலை நாடியை,
    இளகினன், என்வயின் ஈதல் ஏயுமால்; 20

  455. அல்லதூஉம், அவனுடைத் துணைவர் ஆயினார்க்கு
    எல்லையும் தெரிவுறும்; எண்ணும் தேறலாம்;
    வல்லவன் நிலைமையும் மனமும் தேர்ந்து, உரை
    சொல்லும் தம் முகம் எனும் தூது சொல்லவே; 21

  456. வாலிதன் இறுதியும், மரத்துக்கு உற்றதும்,
    கூல வெஞ் சேனையின் குணிப்பு இலாமையும்,
    மேலவன் காதலன் வலியும், மெய்ம்மையான்,
    நீல் நிறத்து இராவணன் நெஞ்சில் நிற்குமால். 22

  457. ஆதலான், அரக்கனை எய்தி, ஆற்றலும்
    நீதியும் மனக் கொள நிறுவி, நின்றவும்
    பாதியின் மேல்செல நூறி, பைப்பையப்
    போதலே கருமம் என்று, அனுமன் போயினான். 23

  458. இந்திரசித்து அனுமனுடன், இராவணன் மாளிகைக்கு ஏகுதல்

  459. கடவுளர்க்கு அரசனைக் கடந்த தோன்றலும்,
    புடை வரும் பெரும் படைப் புணரி போர்த்து எழ,
    விடை பிணிப்புண்டது போலும் வீரனை,
    குடை கெழு மன்னன் இல், கொண்டு போயினான். 24

  460. தூதுவர் நற்செய்தி சொல்ல, இராவணன் அவர்களுக்குப் பரிசு அளித்தல்

  461. தூதுவர் ஓடினர்; தொழுது, தொல்லை நாள்
    மாதிரம் கடந்தவற் குறுகி, மன்ன! நின்
    காதலன் மரை மலர்க் கடவுள் வாளியால்,
    ஏதில் வானரம் பிணிப்புண்டதாம் என்றார். 25

  462. கேட்டலும்-கிளர் சுடர் கெட்ட வான் என
    ஈட்டு இருள் விழுங்கிய மார்பின், யானையின்
    கோட்டு எதிர் பொருத பேர் ஆரம் கொண்டு, எதிர்
    நீட்டினன் - உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான். 26

  463. குரங்கைக் கொல்லாது கொணர இராவணன் ஆணையிடல்

  464. எல்லை இல் உவகையால் இவர்ந்த தோளினன்,
    புல்லுற மலர்ந்த கண் குமுதப் பூவினன்,
    ஒல்லையின் ஓடி, நீர் உரைத்து, என் ஆணையால்,
    கொல்லலை தருக எனக் கூறுவீர் என்றான். 27

  465. அவ் உரை, தூதரும், ஆணையால், வரும்
    தெவ் உரை நீக்கினான் அறியச் செப்பினார்;
    இவ் உரை நிகழ்வுழி, இருந்த சீதையாம்
    வெவ் உரை நீங்கினாள் நிலை விளம்புவாம்; 28

  466. அனுமனுக்கு உற்றதைத் திரிசடை சீதைக்குக் கூறுதல்

  467. இறுத்தனன் கடி பொழில், எண்ணிலோர் பட
    ஒறுத்தனள் என்று கொண்டு உவக்கின்றாள், உயிர்
    வெறுத்தனள் சோர்வுற, வீரற்கு உற்றதை,
    கறுத்தல் இல் சிந்தையாள் கவன்று கூறினாள். 29

  468. சீதை வருந்திப் புலம்புதல்

  469. ஓவியம் புகையுண்டதுபோல், ஒளிர்
    பூவின் மெல்லியல் மேனி பொடி உற,
    பாவி வேடன் கைப் பார்ப்பு உற, பேதுறும்
    தூவி அன்னம் அன்னாள், இவை சொல்லினாள்: 30

  470. உற்று உண்டாய விசும்பை உருவினாய்,
    முற்றுண்டாய்; கலை யாவையும் முற்றுறக்
    கற்றுண்டாய்; ஒரு கள்ள அரக்கனால்
    பற்றுண்டாய்; இதுவோ அறப் பான்மையே? 31

  471. கடல் கடந்து புகுந்தனை; கண்டகர்
    உடல் கடந்தும் நின் ஊழி கடந்திலை;
    அடல் கடந்த திரள் புயத்து ஐய! நீ
    இடர்கள் தந்தனை, வந்து இடர் மேலுமே? 32

  472. ஆழி காட்டி, என் ஆர் உயிர் காட்டினாய்க்கு,
    ஊழி காட்டுவேன் என்று உரைத்தேன்; அது
    வாழி காட்டும் என்று உண்டு; உன் வரைப் புயப்
    பாழி காட்டி, அரும் பழி காட்டினாய். 33

  473. கண்டு போயினை, நீள் நெறி காட்டிட,
    மண்டு போரில் அரக்கனை மாய்த்து, எனைக்
    கொண்டு மன்னவன் போம் எனும் கொள்கையைத்
    தண்டினாய்-எனக்கு ஆர் உயிர் தந்த நீ! 34

  474. ஏய பன்னினள் இன்னன; தன் உயிர்
    தேய, கன்று பிடியுறத் தீங்கு உறும்
    தாயைப் போல, தளர்ந்து மயங்கினாள்-
    தீயைச் சுட்டது ஓர் கற்பு எனும் தீயினாள். 35

  475. இந்திரசித்து அனுமனை இராவணனது அரண்மனையுள் கொண்டு சேர்த்தல்

  476. பெருந் தகைப் பெரியோனைப் பிணித்த போர்
    முருந்தன், மற்றை உலகு ஒரு மூன்றையும்
    அருந் தவப் பயனால் அரசு ஆள்கின்றான்
    இருந்த, அப் பெருங் கோயில் சென்று எய்தினான்; 36

  477. இராவணன் அரசவையில் வீற்றிருக்கும் காட்சி

  478. தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்தென்ன,
    அலங்கல் வெண்குடைத் தண் நிழல் அவிர் ஒளி பரப்ப,
    வலம் கொள் தோளினான் மண்நின்றும் வான் உற எடுத்த,
    பொலம் கொள் மா மணி, வெள்ளியங்குன்று எனப் பொலிய, 37

  479. புள் உயர்த்தவன் திகிரியும், புரந்தரன் அயிலும்,
    தள் இல் முக்கணான் கணிச்சியும், தாக்கிய தழும்பும்,
    கள் உயிர்க்கும் மென் குழலியர் முகிழ் விரல் கதிர் வாள்
    வள் உகிர்ப் பெருங் குறிகளும், புயங்களில் வயங்க, 38

  480. துன்று செம் மயிர்ச் சுடர் நெடுங் கற்றைகள் சுற்ற,
    நின்று திக்குற நிரல்படக் கதிர்க் குழாம் நிமிர,
    ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்ப,
    தென் திசைக்கும் ஓர் வடவனல் திருத்தியது என்ன, 39

  481. மரகதக் கொழுங் கதிரொடு மாணிக்க நெடு வாள்
    நரக தேயத்துள் நடுக்குறா இருளையும் நக்க,
    சிரம் அனைத்தையும் திசைதொறும் திசைதொறும் செலுத்தி,
    உரகர்கோன் இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப, 40

  482. குவித்த பல் மணிக் குப்பைகள் கலையொடும் கொழிப்ப,
    சவிச் சுடர்க் கலன் அணிந்த பொன் தோளொடு தயங்க,
    புவித் தடம் படர் மேருவைப் பொன் முடி என்னக்
    கவித்து, மால் இருங் கருங் கடல் இருந்தது கடுப்ப, 41

  483. சிந்து ராகத்தின் செறி துகில் கச்சொடு செறிய,
    பந்தி வெண் முத்தின் அணிகலன் முழு நிலாப் பரப்ப,
    இந்து வெண்குடை நீழலில், தாரகை இனம் பூண்டு,
    அந்தி வான் உடுத்து, அல்லு வீற்றிருந்ததாம் என்ன, 42

  484. வண்மைக்கும், திரு மறைகட்கும், வானினும் பெரிய
    திண்மைக்கும், தனி உறையுளாம் முழு முகம், திசையில்
    கண் வைக்கும்தொறும், களிற்றொடு மாதிரம் காக்கும்
    எண்மர்க்கும் மற்றை இருவர்க்கும் பெரும் பயம் இயற்ற, 43

  485. ஏகநாயகன் தேவியை எதிர்ந்ததன் பின்னன,
    நாகர் வாழ் இடம் முதல் என, நான்முகன் வைகும்
    மாக மால் விசும்பு ஈறு என, நடுவண வரைப்பில்
    தோகை மாதர்கள், மைந்தரின் தோன்றினர், சுற்ற, 44

  486. வானரங்களும், வானவர் இருவரும், மனிதர்
    ஆன புன் தொழிலோர் என இகழ்கின்ற அவரும்,
    ஏனை நின்றவர் இருடியர் சிலர், ஒழிந்து யாரும்,
    தூ நவின்ற வேல் அரக்கர்தம் குழுவொடு சுற்ற, 45

  487. கூடு பாணியின் இசையொடும், முழவொடும் கூட,
    தோடு சீறு அடி விழி மனம் கையொடு தொடரும்
    ஆடல் நோக்குறின், அருந் தவ முனிவர்க்கும் அமைந்த
    வீடு மீட்குறும் மேனகைமேல், நகை விளங்க, 46

  488. பொதும்பர் வைகு தேன் புக்கு அருந்துதற்கு அகம் புலரும்
    மதம் பெய் வண்டு எனச் சனகிமேல் மனம் செல, மறுகி
    வெதும்புவார், அகம் வெந்து அழிவார், நகில் விழி நீர்
    ததும்புவார், விழித் தாரை வேல், தோள்தொறும் தாக்க, 47

  489. மாறு அளாவிய, மகரந்த நறவு உண்டு மகளிர்
    வீறு அளாவிய முகிழ் முலை மெழுகிய சாந்தின்
    சேறு அளாவிய சிறு நறுஞ் சீகரத் தென்றல்,
    ஊறு அளாவிய கடு என, உடலிடை நுழைய, 48

  490. திங்கள் வாள் நுதல் மடந்தையர் சேயரி கிடந்த
    அம் கயத் தடந் தாமரைக்கு அலரியோன் ஆகி,
    வெங் கண் வானவர் தானவர் என்று இவர் விரியாப்
    பொங்கு கைகள் ஆம் தாமரைக்கு இந்துவே போன்று, 49

  491. இராவணனைக் கண்ணுற்ற மாருதியின் மன நிலை

  492. இருந்த எண் திசைக் கிழவனை, மாருதி எதிர்ந்தான்;
    கருந் திண் நாகத்தை நோக்கிய கலுழனின் கனன்றான்;
    திருந்து தோளிடை வீக்கிய பாசத்தைச் சிந்தி,
    உருந்து நஞ்சு போல்பவன்வயின் பாய்வென் என்று உடன்றான். 50

  493. உறங்குகின்றபோது உயிருண்டல் குற்றம் என்று ஒழிந்தேன்;
    பிறங்கு பொன் மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன்;
    திறங்கள் என் பல சிந்திப்பது? இவன் தலை சிதறி,
    அறம் கொள் கொம்பினை மீட்டு, உடன் அகல்வென் என்று அமைந்தான். 51

  494. தேவர், தானவர், முதலினர், சேவகன் தேவி
    காவல் கண்டு இவண் இருந்தவர், கண்புலன் கதுவ,
    பாவகாரி தன் முடித் தலை பறித்திலென்என்றால்,
    ஏவது யான் இனிமேல் செயும் ஆள்வினை? என்றான். 52

  495. மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர் மயங்கி
    ஊடு இரிந்திட, முடித் தலை திசைதொறும் உருட்டி,
    ஆடல்கொண்டு நின்று ஆர்க்கின்றது; அது கொடிது அம்மா!
    தேடி வந்தது, ஓர் குரங்கு எனும் வாசகம் சிறிதோ? 53

  496. நீண்ட வாள் எயிற்று அரக்கனைக் கண்களின் நேரே
    காண்டல் வேண்டி, இவ் உயிர் சுமந்து, எதிர் சில கழறி,
    மீண்ட போது உண்டு வசைப்பொருள்; வென்றிலேன்எனினும்,
    மாண்ட போதினும், புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ ? 54

  497. என்று, தோளிடை இறுக்கிய பாசம் இற்று ஏக,
    குன்றின்மேல் எழு கோள் அரிஏறு என, குதியின்
    சென்று கூடுவல் என்பது சிந்தனை செய்யா-
    நின்று, காரியம் அன்று என, நீதியின் நினைந்தான். 55

  498. கொல்லலாம் வலத்தனும் அல்லன்; கொற்றமும்
    வெல்லலாம் தரத்தனும் அல்லன்; மேலை நாள்
    அல் எலாம் திரண்டன நிறத்தன் ஆற்றலை
    வெல்லலாம் இராமனால்; பிறரும் வெல்வரோ? 56

  499. என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு; ஈண்டு இவன்-
    தன்னையும் வெலற்கு அரிது எனக்கு; தாக்கினால்,
    அன்னவே காலங்கள் கழியும்; ஆதலான்,
    துன்ன அருஞ் செருத் தொழில் தொடங்கல் தூயதோ? 57

  500. ஏழ் உயர் உலகங்கள் யாவும் இன்புற,
    பாழி வன் புயங்களோடு அரக்கன் பல் தலை,
    பூழியில் புரட்டல் என் பூணிப்பு ஆம் என,
    ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டால். 58

  501. இங்கு ஒரு திங்களோ இருப்பல் யான் என,
    அம் கண் நாயகன்தனது ஆணை கூறிய
    மங்கையும் இன் உயிர் துறத்தல் வாய்மையால்-
    பொங்கு வெஞ் செருவிடைப் பொழுது போக்கினால். 59

  502. ஆதலான், அமர்த்தொழில் அழகிற்று அன்று; அருந்
    தூதன் ஆம் தன்மையே தூய்து என்று, உன்னினான்;
    வேத நாயகன் தனித் துணைவன், வென்றி சால்
    ஏதில் வாள் அரக்கனது இருக்கை, எய்தினான். 60

  503. இராவணனிடம் இந்திரசித்து அனுமனைப் பற்றிக் கூறுதல்

  504. தீட்டிய வாள் எனத் தெறு கண் தேவியர்
    ஈட்டிய குழுவிடை இருந்த வேந்தற்குக்
    காட்டினன், அனுமனை-கடலின் ஆர் அமுது
    ஊட்டிய உம்பரை உலைய ஒட்டினான். 61

  505. புவனம் எத்தனை அவை அனைத்தும் போர் கடந்-
    தவனை உற்று, அரி உருவான ஆண்தகை,
    சிவன் எனச் செங்கணான் எனச் செய் சேவகன்,
    இவன் எனக் கூறி நின்று, இரு கை கூப்பினான். 62

  506. இராவணன் அனுமனைச் சினந்து நோக்கி, நீ யார்? என வினாவுதல்

  507. நோக்கிய கண்களால் நொறில் கனல்-பொறி
    தூக்கிய அனுமன் மெய்ம் மயிர் சுறுக்கொள்,
    தாக்கிய உயிர்ப்பொடும் தவழ்ந்த வெம் புகை
    வீக்கிய, அவனுடல் விசித்த பாம்பினே. 63

  508. அன்ன ஓர் வெகுளியன், அமரர் ஆதியர்
    துன்னிய துன்னலர் துணுக்கம் சுற்றுற,
    என் இவண் வரவு? நீ யாரை? என்று, அவன்
    தன்மையை வினாயினான்-கூற்றின் தன்மையான். 64

  509. நேமியோ? குலிசியோ? நெடுங் கணிச்சியோ?
    தாமரைக் கிழவனோ? தறுகண் பல் தலைப்
    பூமி தாங்கு ஒருவனோ?-பொருது முற்றுவான்,
    நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய்! 65

  510. நின்று அசைத்து உயிர் கவர் நீலக் காலனோ?
    குன்று இசைத்து அயில் உற எறிந்த கொற்றனோ?
    தென் திசைக் கிழவனோ? திசை நின்று ஆட்சியர்
    என்று இசைக்கின்றவர் யாருள், யாவன் நீ? 66

  511. அந்தணர் வேள்வியின் ஆக்கி, ஆணையின்
    வந்துற விடுத்தது ஓர் வய வெம் பூதமோ?
    முந்து ஒரு மலருளோன், இலங்கை முற்றுறச்
    சிந்து எனத் திருத்திய தெறு கண் தெய்வமோ? 67

  512. யாரை நீ? என்னை, இங்கு எய்து காரணம்?
    ஆர் உனை விடுத்தவர்? அறிய, ஆணையால்
    சோர்விலை சொல்லுதி என்னச் சொல்லினான்-
    வேரொடும் அமரர்தம் புகழ் விழுங்கினான். 68

  513. அனுமனின் விடை

  514. சொல்லிய அனைவரும் அல்லென்; சொன்ன அப்
    புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலென்;
    அல்லி அம் கமலமே அனைய செங் கண் ஓர்
    வில்லிதன் தூதன் யான்; இலங்கை மேயினேன். 69

  515. அனையவன் யார்? என, அறிதியாதியேல்,
    முனைவரும், அமரரும், மூவர் தேவரும்,
    எனையவர் எனையவர் யாவர், யாவையும்,
    நினைவு அரும் இரு வினை முடிக்க, நின்றுளோன்; 70

  516. ஈட்டிய வலியும், மேல்நாள் இயற்றிய தவமும், யாணர்க்
    கூட்டிய படையும், தேவர் கொடுத்த நல் வரமும், கொட்பும்,
    தீட்டிய வாழ்வும், எய்தத் திருத்திய வாழ்வும் எல்லாம்,
    நீட்டிய பகழி ஒன்றால், முதலொடு நீக்க நின்றான்; 71

  517. தேவரும் பிறரும் அல்லன்; திசைக் களிறு அல்லன்; திக்கின்
    காவலர் அல்லன்; ஈசன் கைலைஅம்கிரியும் அல்லன்;
    மூவரும் அல்லன்; மற்றை முனிவரும் அல்லன்; எல்லைப்
    பூவலயத்தை ஆண்ட புரவலன் புதல்வன் போலாம்; 72

  518. போதமும், பொருந்து கேள்விப் புரை அறு பயனும், பொய் தீர்
    மா தவம் சார்ந்த தீரா வரங்களும், மற்றும், முற்றும்,
    யாது அவன் நினைந்தான், அன்ன பயத்தன; ஏது வேண்டின்,
    வேதமும் அறனும் சொல்லும் மெய் அறமூர்த்தி, வில்லோன்; 73

  519. காரணம் கேட்டிஆயின், கடை இலா மறையின்கண்ணும்,
    ஆரணம் காட்டமாட்டா அறிவினுக்கு அறிவும், அன்னான்;
    போர் அணங்கு இடங்கர் கவ்வ, பொது நின்று, முதலே என்ற
    வாரணம் காக்க வந்தான் அமரரைக் காக்க வந்தான்; 74

  520. மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய
    காலமும், கணக்கும், நீத்த காரணன்-கை வில் ஏந்தி,
    சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை
    ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும்விட்டு,-அயோத்தி வந்தான்; 75

  521. அறம் தலைநிறுத்தி, வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித்
    திறம் தெரிந்து, உலகம் பூணச் செந் நெறி செலுத்தி, தீயோர்
    இறந்து உக நூறி, தக்கோர் இடர் துடைத்து, ஏக, ஈண்டுப்
    பிறந்தனன் - தன் பொன்-பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான். 76

  522. அன்னவற்கு அடிமை செய்வேன்; நாமமும் அனுமன் என்பேன்;
    நன்னுதல் தன்னைத் தேடி நாற் பெருந் திசையும் போந்த
    மன்னரில், தென்பால் வந்த தானைக்கு மன்னன், வாலி-
    தன் மகன், அவன்தன் தூதன் வந்தனென், தனியேன் என்றான். 77

  523. அனுமனிடம் இராவணன் வாலியின் நலனை உசாவுதல்

  524. என்றலும், இலங்கை வேந்தன், எயிற்றினம் எழிலி நாப்பண்
    மின் திரிந்தென்ன நக்கு, வாலி சேய் விடுத்த தூத!
    வன் திறல் ஆய வாலி வலியன்கொல்? அரசின் வாழ்க்கை
    நன்றுகொல்? என்னலோடும், நாயகன் தூதன் நக்கான். 78

  525. வாலி மடிந்த செய்தியை அனுமன் தெரிவித்தல்

  526. அஞ்சலை, அரக்க! பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே,
    வெஞ் சின வாலி; மீளான்; வாலும் போய் விளிந்தது அன்றே;
    அஞ்சன மேனியான்தன் அடு கணை ஒன்றால் மாழ்கித்
    துஞ்சினன்; எங்கள் வேந்தன், சூரியன் தோன்றல் என்றான். 79

  527. நடந்த நிகழ்ச்சிகள் குறித்து இராவணன் கேட்டல்

  528. என்னுடை ஈட்டினான், அவ் வாலியை எறுழ் வாய் அம்பால்
    இன் உயிர் உண்டது? இப்போது யாண்டையான் இராமன் என்பான்?
    அன்னவன் தேவிதன்னை அங்கதன் நாடலுற்ற
    தன்மையை உரைசெய்க என்ன, சமீரணன் தனயன் சொல்வான்: 80

  529. நிகழ்ந்தனவற்றை அனுமன் விவரித்தல்

  530. தேவியை நாடி வந்த செங்கணாற்கு, எங்கள் கோமான்,
    ஆவி ஒன்று ஆக நட்டான்; அருந் துயர் துடைத்தி என்ன,
    ஓவியர்க்கு எழுத ஒண்ணா உருவத்தன், உருமையோடும்
    கோ இயல் செல்வம் முன்னே கொடுத்து, வாலியையும் கொன்றான்; 81

  531. ஆயவன் தன்னொடு, ஆண்டு, திங்கள் ஓர் நான்கும் வைகி,
    மேய வெஞ் சேனை சூழ வீற்று இனிது இருந்த வீரன்,
    போயினிர் நாடும் என்ன, போந்தனம், புகுந்தது ஈது என்று,
    ஏயவன் தூதன் சொன்னான். இராவணன் இதனைச் சொல்வான்: 82

  532. இராவணன் சுக்கிரீவன் முதலியோரது செய்கையை இகழ்தல்

  533. உம் குலத் தலைவன், தன்னோடு ஒப்பு இலா உயர்ச்சியோனை
    வெங் கொலை அம்பின் கொன்றார்க்கு ஆள்-தொழில் மேற்கொண்டீரேல்,
    எங்கு உலப்புறும் நும் சீர்த்தி? நும்மொடும் இயைந்தது என்றால்,
    மங்குலின் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து மாதோ! 83

  534. தம்முனைக் கொல்வித்து, அன்னாற் கொன்றவற்கு அன்பு சான்ற
    உம் இனத் தலைவன் ஏவ, யாது எமக்கு உரைக்கலுற்றது?
    எம் முனைத் தூது வந்தாய்! இகல் புரி தன்மை என்னை?
    நும்மினைக் கொல்லாம்; நெஞ்சம் அஞ்சலை; நுவல்தி என்றான். 84

  535. அனுமன் இராவணனை நோக்கி உரைத்தல்

  536. துணர்த்த தாரவன் சொல்லிய சொற்களைப்
    புணர்த்து நோக்கி, பொது நின்ற நீதியை
    உணர்த்தினால், அது உறும் என, உன்ன அருங்
    குணத்தினானும், இனையன கூறினான்: 85

  537. தூது வந்தது, சூரியன் கான்முளை
    ஏது ஒன்றிய நீதி இயைந்தன;
    சாது என்று உணர்கிற்றியேல், தக்கன,
    கோது இறந்தன, நின் வயின் கூறுவாம்: 86

  538. வறிது வீழ்த்தனை வாழ்க்கையை; மன் அறம்
    சிறிதும் நோக்கலை; தீமை திருத்தினாய்;
    இறுதி உற்றுளது; ஆயினும், இன்னும் ஓர்
    உறுதி கேட்டி; உயிர் நெடிது ஓம்புவாய்! 87

  539. போய் இற்றீர், நும் புலன் வென்று போற்றிய
    வாயில் தீர்வு அரிதாகிய மா தவம்-
    காயின் தீர்வு அருங் கேடு அருங் கற்பினாள்,
    தீயின் தூயவளைத் துயர் செய்ததால். 88

  540. இன்று வீந்தது; நாளை, சிறிது இறை
    நின்று வீந்தது; அலால், நிறை நிற்குமோ?
    ஒன்று வீந்தது, நல் உணர் உம்பரை
    வென்று வீங்கிய வீக்கம், மிகுத்ததால். 89

  541. தீமை நன்மையைத் தீர்த்தல் ஒல்லாது எனும்
    வாய்மை நீக்கினை; மா தவத்தால் வந்த
    தூய்மை, தூயவள்தன்வயின் தோன்றிய
    நோய்மையால் துடைக்கின்றனை; நோக்கலாய்! 90

  542. திறம் திறம்பிய காமச் செருக்கினால்
    மறந்து, தம்தம் மதியின் மயங்கினார்,
    இறந்து இறந்து, இழிந்து ஏறுவதே அலால்,
    அறம் திறம்பினர், ஆர் உளர் ஆயினார்? 91

  543. நாமத்து ஆழ் கடல் ஞாலத்து அவிந்தவர்,
    ஈமத்தால் மறைந்தார், இள மாதர்பால்
    காமத்தால் இறந்தார், களி வண்டு உறை
    தாமத் தாரினர், எண்ணினும் சால்வரோ? 92

  544. பொருளும், காமமும், என்று இவை போக்கி, வேறு
    இருள் உண்டாம் என எண்ணலர்; ஈதலும்,
    அருளும், காதலின் தீர்தலும், அல்லது, ஓர்
    தெருள் உண்டாம் என எண்ணலர் - சீரியோர். 93

  545. இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை
    நச்சி, நாளும் நகை உற, நாண் இலன்,
    பச்சை மேனி புலர்ந்து, பழி படூஉம்
    கொச்சை ஆண்மையும், சீர்மையில் கூடுமோ? 94

  546. ஓதநீர் உலகு ஆண்டவர், உன் துணைப்
    போத நீதியர், ஆர் உளர் போயினார்?
    வேத நீதி விதி வழி மேல்வரும்
    காதல் நீ அறத்து எல்லை கடத்தியோ? 95

  547. வெறுப்பு உண்டாய ஒருத்தியை வேண்டினால்,
    மறுப்பு உண்டாயபின், வாழ்கின்ற வாழ்வினின்,
    உறுப்பு உண்டாய் நடு ஓங்கிய நாசியை
    அறுப்புண்டால், அது அழகு எனல் ஆகுமே. 96

  548. பாரை ஞூறுவ பற் பல பொற் புயம்,
    ஈர்-ஐஞ்ஞூறு தலை உள; என்னினும்,-
    ஊரை ஞூறும் கடுங் கனல் உட்பொதி
    சீரை ஞூறு, அவை-சேமம் செலுத்துமோ? 97

  549. புரம் பிழைப்பு அருந் தீப் புகப் பொங்கியோன்,
    நரம்பு இழைத்த நின் பாடலின் நல்கிய
    வரம் பிழைக்கும்; மறை பிழையாதவன்
    சரம் பிழைக்கும் என்று எண்ணுதல் சாலுமோ? 98

  550. ஈறு இல் நாண் உக, எஞ்சல் இல் நல் திரு
    நூறி, நொய்தினை ஆகி, நுழைதியோ?-
    வேறும், இன்னும் நகை ஆம் வினைத் தொழில்
    தேறினார் பலர் காமிக்கும் செவ்வியோய்! 99

  551. பிறந்துளார், பிறவாத பெரும் பதம்
    சிறந்துளார், மற்றும் தேவர்க்கும் தேவர் ஆய்
    இறந்துளார், பிறர் யாரும், இராமனை
    மறந்துளார் உளர் ஆகிலர்; வாய்மையால். 100

  552. ஆதலால், தன் அரும் பெறல் செல்வமும்,
    ஓது பல் கிளையும், உயிரும் பெற,
    சீதையைத் தருக என்று எனச் செப்பினான்,
    சோதியான் மகன், நிற்கு எனச் சொல்லினான். 101

  553. தூதனாகிய நீ அரக்கரைக் கொன்றது ஏன் என இராவணன் வினவுதல்

  554. என்றலும், இவை சொல்லியது, எற்கு, ஒரு
    குன்றின் வாழும் குரங்குகொலாம்! இது
    நன்று! நன்று! என மா நகை செய்தனன் -
    வென்றி என்று ஒன்றுதான் அன்றி வேறு இலான். 102

  555. குரக்கு வார்த்தையும், மானிடர் கொற்றமும்,
    இருக்க; நிற்க; நீ, என்கொல், அடா! இரும்
    புரத்தினுள் தரும் தூது புகுந்தபின்
    அரக்கரைக் கொன்றது? அஃது உரையாய்! என்றான். 103

  556. அனுமன் அளித்த விடை

  557. காட்டுவார் இன்மையால், கடி காவினை
    வாட்டினேன்; என்னைக் கொல்ல வந்தார்களை
    வீட்டினேன்; பின்னும் மென்மையினால் உந்தன் -
    மாட்டு வந்தது, காணும் மதியினால். 104

  558. சினம் மிக்க இராவணன், அனுமனைக் கொல்மின் என, வீடணன் தடுத்து உரைத்தல்

  559. என்னும் மாத்திரத்து, ஈண்டு எரி நீண்டு உக,
    மின்னும் வாள் எயிற்றின், சினம் வீங்கினான்;
    கொல்மின் என்றனன்; கொல்லியர் சேர்தலும்,
    நில்மின் என்றனன், வீடணன் நீதியான். 105

  560. ஆண்டு, எழுந்து நின்று, அண்ணல் அரக்கனை,
    நீண்ட கையன் வணங்கினன்; நீதியாய்,
    மூண்ட கோபம் முறையது அன்றாம் எனா,
    வேண்டும் மெய் உரை பைய விளம்பினான்: 106

  561. அந்தணன், உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல்
    தந்தவன், அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து, தக்கோய்!
    இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ: இயம்பு தூது
    வந்தனென் என்ற பின்னும், கோறியோ, மறைகள் வல்லோய்? 107

  562. பூதலப் பரப்பின், அண்டப் பொகுட்டினுள், புறத்துள், பொய் தீர்
    வேதம் உற்று இயங்கு வைப்பின், வேறு வேறு இடத்து வேந்தர்,
    மாதரைக் கொலை செய்தார்கள் உளர் என வரினும், வந்த
    தூதரைக் கொன்றுளார்கள் யாவரே, தொல்லை நல்லோர்? 108

  563. பகைப் புலன் நணுகி, உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து, பற்றார்
    மிகைப் புலன் அடக்கி, மெய்ம்மை விளம்புதல் விரதம் பூண்ட
    தகைப் புலக் கருமத்தோரைக் கோறலின், தக்கார் யார்க்கும்
    நகைப் புலன் பிறிது ஒன்று உண்டோ ? நம் குலம் நவை இன்றாமே! 109

  564. முத் தலை எஃகன், மற்றை முராந்தகன், முனிவன், முன்னா
    அத் தலை நம்மை நோனா அமரர்க்கும், நகையிற்றாமால்;
    எத் தலை உலகும் காக்கும் வேந்த! நீ, வேற்றோர் ஏவ,
    இத் தலை எய்தினானைக் கொல்லுதல் இழுக்கம்; இன்னும், 110

  565. இளையவள்தன்னைக் கொல்லாது, இரு செவி மூக்கொடு ஈர்ந்து,
    விளைவு உரை என்று விட்டார், வீரர் ஆய், மெய்ம்மை ஓர்வார்;
    களைதியேல் ஆவி, நம்பால் இவன் வந்து கண்ணின் கண்ட
    அளவு உரையாமல் செய்தி ஆதி என்று, அமையச் சொன்னான். 111

  566. அனுமன் வாலைச் சுட்டு, பின் துரத்துமாறு இராவணன் ஆணையிடல்

  567. நல்லது உரைத்தாய், நம்பி! இவன் நவையே செய்தான் ஆனாலும்,
    கொல்லல் பழுதே - போய் அவரைக் கூறிக் கொணர்தி கடிது என்னா,
    தொல்லை வாலை மூலம் அறச் சுட்டு, நகரைச் சூழ்போக்கி,
    எல்லை கடக்க விடுமின்கள் என்றான்; நின்றார் இரைத்து எழுந்தார். 112

  568. அயன் படையை இந்திரசித்து விடுவிக்க, அரக்கர்கள் கயிறுகளால் அனுமனைப் பிணித்தல்

  569. ஆய காலத்து, அயன் படையோடு இருப்ப, ஆகாது அனல் இடுதல்;
    தூய பாசம் எனைப் பலவும் கொணர்ந்து பிணிமின் தோள் என்னா,
    மேய தெய்வப் படைக்கலத்தை மீட்டான், அமரர் போர் வென்றான்;
    ஏ எனாமுன், இடைபுக்கு, தொடை வன் கயிற்றால் பிணித்து ஈர்த்தார். 113

  570. நாட்டின், நகரில், நடு உள்ள கயிறு நவிலும் தகைமையவே-
    வீட்டின் ஊசல், நெடும் பாசம் அற்ற; தேரும், விசி துறந்த;
    மாட்டும் புரவி ஆயம் எலாம், மருவி வாங்கும் தொடை அழிந்த;
    பூட்டும் வல்லி மூட்டோ டும் புரசை இழந்த, போர் யானை! 114

  571. மண்ணில் கண்ட, வானவரை வலியின் கவர்ந்த, வரம் பெற்ற,
    எண்ணற்கு அரிய ஏனையரை இகலின் பறித்த-தமக்கு இயைந்த
    பெண்ணிற்கு இசையும் மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த-
    கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு, கட்டினார். 115

  572. அகமகிழ்வுடன் அனுமன் அவர்க்கு அடங்கி, உடன்போதல்

  573. கடவுள்-படையைக் கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே
    விடுவித்து அளித்தார், தெவ்வரே; வென்றேன் அன்றோ இவர் வென்றி;
    சுடுவிக்கின்றது, இவ் ஊரைச் சுடுக என்று உரைத்த துணிவு என்று,
    நடு உற்று அமைய உற நோக்கி, முற்றும் உவந்தான் - நவை அற்றான். 116

  574. நொய்ய பாசம் புறம் பிணிப்ப, நோன்மை இலன்போல் உடல் நுணங்கி
    வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப, வீடும் உணர்ந்தே, விரைவு இல்லா
    ஐயன், விஞ்சைதனை அறிந்தும் அறியாதான் போல், அவிஞ்சை எனும்
    பொய்யை மெய்போல் நடிக்கின்ற யோகி போன்றான்; போகின்றான். 117

  575. அனுமன் வாலில் அரக்கர் தீயிடல்

  576. வேந்தன் கோயில் வாயிலொடு விரைவில் கடந்து, வெள்ளிடையின்
    போந்து, புறம் நின்று இரைக்கின்ற பொறை தீர் மறவர் புறம் சுற்ற,
    ஏந்து நெடு வால் கிழி சுற்றி, முற்றும் தோய்த்தார், இழுது எண்ணெய்;
    காந்து கடுந் தீக் கொளுத்தினார்; ஆர்த்தார், அண்டம் கடி கலங்க. 118

  577. ஒக்க ஒக்க உடல் விசித்த உலப்பு இலாத உரப் பாசம்,
    பக்கம் பக்கம் இரு கூறு ஆய், நூறாயிரவர் பற்றினார்;
    புக்க படைஞர் புடை காப்போர் புணரிக் கணக்கர்; புறம் செல்வோர்,
    திக்கின் அளவால்; அயல் நின்று காண்போர்க்கு எல்லை தெரிவு அரிதால். 119

  578. அந்த நகரும் கடி காவும் அழிவித்து, அக்கன் முதலாயோர்
    சிந்த நூறி, சீதையொடும் பேசி, மனிதர் திறம் செப்ப
    வந்த குரங்கிற்கு உற்றதனை, வம்மின், காண வம் என்று,
    தம்தம் தெருவும், வாயில்தொறும், யாரும் அறியச் சாற்றினார். 120

  579. செய்தி கேட்டுச் சானகி வருந்தி, சுடாதே என எரியை வேண்டுதல்

  580. ஆர்த்தார், அண்டத்து அப்புறத்தும் அறிவிப்பார்போல்; அங்கோடு இங்கு
    ஈர்த்தார்; முரசம் எற்றினார்; இடித்தார்; தெழித்தார், எம் மருங்கும்
    பார்த்தார்; ஓடிச் சானகிக்கும் பகர்ந்தார்; அவளும் உயிர் பதைத்தாள்;
    வேர்த்தாள்;உலந்தாள்;விம்மினாள்;விழுந்தாள்;அழுதாள்;வெய்து உயிர்த்தாள்.121

  581. தாயே அனைய கருணையான் துணையை, ஏதும் தகைவு இல்லா
    நாயே அனைய வல் அரக்கர் நலியக் கண்டால், நல்காயோ?
    நீயே உலகுக்கு ஒரு சான்று; நிற்கே தெரியும் கற்பு; அதனில்
    தூயேன் என்னின், தொழுகின்றேன்,-எரியே!-அவனைச் சுடல்! என்றாள். 122

  582. அனல் குளிர்ந்தமை கண்டு அனுமன் மகிழ்தல்

  583. வெளுத்த மென் தகையவள் விளம்பும் ஏல்வையின்,
    ஒளித்த வெங் கனலவன் உள்ளம் உட்கினான்;
    தளிர்த்தன மயிர்ப் புறம் சிலிர்ப்ப, தண்மையால்,
    குளிர்ந்தது, அக் குரிசில் வால், என்பு கூரவே. 123

  584. மற்று இனிப் பல என்? வேலை வட அனல், புவி அளாய
    கற்றை வெங் கனலி, மற்றைக் காயத் தீ, முனிவர் காக்கும்
    முற்றுறு மும்மைச் செந் தீ, முப்புரம் முருங்கச் சுட்ட
    கொற்றவன் நெற்றிக் கண்ணின் வன்னியும், குளிர்ந்த அன்றே. 124

  585. அண்டமும் கடந்தான் அங்கை அனலியும் குளிர்ந்தது; அங்கிக்
    குண்டமும் குளிர்ந்த; மேகத்து உரும் எலாம் குளிர்ந்த; கொற்றச்
    சண்ட வெங் கதிர ஆகித் தழங்கு இருள் விழுங்கும் தா இல்
    மண்டலம் குளிர்ந்த; மீளா நரகமும் குளிர்ந்த மாதோ. 125

  586. வெற்பினால் இயன்றது அன்ன வாலினை விழுங்கி, வெந் தீ
    நிற்பினும் சுடாது நின்ற நீர்மையை நினைவில் நோக்கி,
    அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும், சனகன் பாவை
    கற்பினால் இயன்றது என்பான், பெரியது ஓர் களிப்பன் ஆனான். 126

  587. அரக்கர் காட்ட, இலங்கை நகர் முழுதும் அனுமன் காணுதல்

  588. அற்றை அவ் இரவில், தான் தன் அறிவினால் முழுதும் உன்னப்
    பெற்றிலன் எனினும், ஆண்டு, ஒன்று உள்ளது பிழை உறாமே,
    மற்று உறு பொறி முன் செல்ல, மறைந்து செல் அறிவு மான,
    சுற்றிலா அரக்கர் தாமே காட்டலின், தெரிய, கண்டான். 127

  589. அனுமன் விண்ணில் எழ, பற்றிச் சென்ற அரக்கர்கள் தோள் அற்று விழுதல்

  590. முழுவதும் தெரிய நோக்கி, முற்றும் ஊர் முடிவில் சென்றான்,
    வழு உறு காலம் ஈது என்று எண்ணினன், வலிதின் பற்றித்
    தழ்வினன், இரண்டு நூறாயிரம் புயத் தடக் கை தாம்போடு
    எழு என நால, விண்மேல் எழுந்தனன்; விழுந்த எல்லாம். 128

  591. விசும்பில் பொலிந்த அனுமனின் தோற்றம்

  592. இற்ற வாள் அரக்கர் நூறாயிரவரும், இழந்த தோளார்,
    முற்றினார் உலந்தார்; ஐயன், மொய்ம்பினோடு உடலை மூழ்கச்
    சுற்றிய கயிற்றினோடும் தோன்றுவான், அரவின் சுற்றம்
    பற்றிய கலுழன் என்ன, பொலிந்தனன் விசும்பின் ஓர்பால். 129

  593. இலங்கையை எரியூட்ட அனுமன் தன் வாலை நகர்மீது நீட்டுதல்

  594. துன்னவர் புரத்தை முற்றும் சுடு தொழில் தொல்லையோனும்,
    பன்னின பொருளும், நாண, பாதகர் இருக்கை பற்ற,
    மன்னனை வாழ்த்தி, பின்னை வயங்கு எரி மடுப்பென் என்னா,
    பொன் நகர் மீதே, தன் போர் வாலினைப் போக விட்டான். 130

  595. அப்பு உறழ் வேலைகாறும் அலங்கு பேர் இலங்கைதன்னை,
    எப் புறத்து அளவும் தீய, ஒரு கணத்து எரித்த கொட்பால்,
    துப்பு உறழ் மேனி அண்ணல், மேரு வில் குழைய, தோளால்
    முப்புரத்து எய்த கோலே ஒத்தது-அம் மூரிப் போர் வால். 131

  596. வெள்ளியின் பொன்னின், நானா விளங்கு பல் மணியின், விஞ்சை
    தெள்ளிய கடவுள்-தச்சன் கை முயன்று அரிதின் செய்த
    தள்ள அரு மனைகள்தோறும், முறை முறை தாவிச் சென்றான்;
    ஒள் எரியோடும், குன்றத்து ஊழி வீழ் உருமொடு ஒத்தான். 132

  597. இலங்கை நகரை எரியுண்ணுதல்

  598. நீல் நிற நிருதர், யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க,
    பால் வரு பசியன், அன்பால் மாருதி வாலைப் பற்றி,
    ஆலம் உண்டவன் நன்று ஊட்ட, உலகு எலாம் அழிவின் உண்ணும்
    காலமே என்ன மன்னோ, கனலியும் கடிதின் உண்டான். 133

  599. மிகைப் பாடல்கள்

  600. நீரிடைக் கண் துயில் நெடிய நேமியும்,
    தாருடைத் தனி மலர் உலகின் தாதையும்,
    ஓர் உடல்கொண்டு, தம் உருவம் மாற்றினர்,
    பாரிடைப் புகுந்தனர் பகைத்து என்பார் பலர். 16-1

  601. இனையன பற்பலர் இசைப்ப, வெந்திறல்
    அனுமனை அமர்க் களம் நின்று, வஞ்சகர்
    புனை திரு நகரிடைக் கொண்டு போதலை
    நினையினர், நெடிதுற நெருக்கி நேர்ந்துளார். 16-2

  602. நரம்பு கண்ணகத்துள் உறை நறை, நிறை பாண்டில்,
    நிரம்பு சில்லரிப் பாணியும், குறடும், நின்று இசைப்ப,
    அரம்பை மங்கையர் அமிழ்து உகுத்தாலன்ன பாடல்
    வரம்பு இல் இன்னிசை, செவிதொறும் செவிதொறும் வழங்க, 45-1

  603. ஊடினார் முகத்து உறு நறை ஒரு முகம் உண்ண,
    கூடினார் முகக் களி நறை ஒரு முகம் குடிப்ப,
    பாடினார் முகத்து ஆர் அமுது ஒரு முகம் பருக,
    ஆடினார் முகத்து அணி அமுது ஒரு முகம் அருந்த, 46-1

  604. தேவரொடு இருந்து அரசியல் ஒரு முகம் செலுத்த,
    மூவரொடு மா மந்திரம் ஒரு முகம் முயல,
    பாவகாரிதன் பாவகம் ஒரு முகம் பயில,
    பூவை சானகி உருவெளி ஒரு முகம் பொருந்த, 46-2

  605. காந்தள் மெல் விரல் சனகிதன் கற்பு எனும் கடலை
    நீந்தி ஏறுவது எங்ஙன்? என்று ஒரு முகம் நினைய,
    சாந்து அளாவிய கொங்கை நன் மகளிர் தற்சூழ்ந்தார்
    ஏந்தும் ஆடியின் ஒரு முகம் எழிலினை நோக்க, 46-3

  606. என்னக் கேட்ட அரக்கனுக்கு ஈறு இலாத்
    தன் ஒர் ஆற்றலின் மாருதி சாற்றுவான்:
    என் ஒர் நாயகன் ஏவலின், வாரிதி-
    தன்னைத் தாண்டி வந்தேன், உனைக் காணவே. 103-1

  607. தன் இறைக்கு உறுகண் வெய்யோர் தாம் இயற்றலும் கேட்டு, இன்னே,
    அன்னவர்க்கு இறுதி ஆக, அணி நகர் அழிப்பல் என்னா,
    செந் நிறச் சிகைய வெம் போர் மழு, பின்னர்ச் சேறல் ஒக்கும்-
    அல் நிறத்து அண்ணல் தூதன் அனல் கெழு கொற்ற நீள் வால். 130-1

  608. உகக் கடை, உலகம் யாவும் உணங்குற, ஒரு தன் நாட்டம்
    சிகைக் கொழுங் கனலை வீசும் செயல் முனம் பயில்வான் போல,
    மிகைத்து எழு தீயர் ஆயோர் விரி நகர் வீய; போர் வால்-
    தகைத்தல் இல் நோன்மை சாலும் தனி வீரன் - சேணில் உய்த்தான். 131- 2

  609. சுந்தர காண்டம்

    13. இலங்கை எரியூட்டு படலம்


    மாளிகைகளில் தீப் பற்ற, நகர மாந்தர் பூசலிட்டு ஓடுதல்

  610. கொடியைப் பற்றி, விதானம் கொளுத்தியே,
    நெடிய தூணைத் தழுவி, நெடுஞ் சுவர்
    முடியச் சுற்றி, முழுதும் முருக்கிற்றால்-
    கடிய மா மனைதோறும் கடுங் கனல். 1

  611. வாசல் இட்ட எரி மணி மாளிகை
    மூச முட்டி, முழுதும் முருக்கலால்,-
    ஊசலிட்டென ஓடி, உலைந்து உளை
    பூசலிட்ட - இயல் புரம் எலாம். 2

  612. வனிதையர் வருந்திய வகை

  613. மணியின் ஆய வயங்கு ஒளி மாளிகை,
    பிணியின் செஞ் சுடர்க் கற்றை பெருக்கலால்,
    திணி கொள் தீ உற்றது, உற்றில, தேர்கிலார்
    அணி வளைக் கை நல்லார், அமைந்துளார். 3

  614. வானகத்தை நெடும் புகை மாய்த்தலால்,
    போன திக்கு அறியாது புலம்பினார்-
    தேன் அகத்த மலர் பல சிந்திய
    கானகத்து மயில் அன்ன காட்சியார். 4

  615. தலை முடியில் தீப் பற்றியதும் பற்றாததும் தெரியாமை

  616. கூய், கொழும் புனல், குஞ்சியில், கூந்தலில்,
    மீச் சொரிந்தனர், வீரரும், மாதரும்;
    ஏய்த்த தன்மையினால், எரி இன்மையும்,
    தீக் கொளுந்தினவும், தெரிகின்றிலார். 5

  617. தீயும் புகையும் ஓங்கிப் பரவுதல்

  618. இல்லில் தங்கு வயங்கு எரி யாவையும்,
    சொல்லின் தீர்ந்தன போல்வன, தொல் உருப்
    புல்லிக் கொண்டன-மாயைப் புணர்ப்பு அறக்
    கல்லி, தம் இயல்பு எய்தும் கருத்தர்போல். 6

  619. ஆயது அங்கு ஓர் குறள் உரு ஆய், அடி
    தாய் அளந்து, உலகங்கள் தரக் கொள்வான்,
    மீ எழுந்த கரியவன் மேனியின்,
    போய் எழுந்து பரந்தது-வெம் புகை. 7

  620. நீலம் நின்ற நிறத்தன, கீழ் நிலை
    மாலின் வெஞ் சின யானையை மானுவ;
    மேல் விழுந்து எரி முற்றும் விழுங்கலால்
    தோல் உரிந்து கழன்றன, தோல் எலாம். 8

  621. மீது இமம் கலந்தாலன்ன வெம் புகை,
    சோதி மங்கலத் தீயொடு சுற்றலால்,
    மேதி மங்குலின் வீழ் புனல், வீழ் மட
    ஓதிமங்களின், மாதர் ஒதுங்கினார். 9

  622. பொடித்து எழுந்த பெரும் பொறி போவன
    இடிக் குலங்களின் வீழ்தலும், எங்கணும்
    வெடித்த; வேலை வெதும்பிட, மீன் குலம்
    துடித்து, வெந்து, புலர்ந்து, உயிர் சோர்ந்தவால். 10

  623. பருகு தீ மடுத்து, உள்ளுறப் பற்றலால்,
    அருகு நீடிய ஆடகத் தாரைகள்
    உருகி, வேலையின் ஊடு புக்கு உற்றன,
    திருகு பொன் நெடுந் தண்டின் திரண்டவால். 11

  624. உரையின் முந்து உலகு உண்ணும் எரிஅதால்,
    வரை நிவந்தன பல் மணி மாளிகை
    நிரையும் நீள் நெடுஞ் சோலையும் நிற்குமோ?
    தரையும் வெந்தது, பொன் எனும் தன்மையால். 12

  625. கல்லினும் வலிதாம் புகைக் கற்றையால்
    எல்லி பெற்றது, இமையவர் நாடு; இயல்
    வல்லி கோலி நிவந்தன; மா மணிச்
    சில்லியோடும் திரண்டன, தேர் எலாம். 13

  626. பேய மன்றினில் நின்று, பிறங்கு எரி,
    மாயர் உண்ட நறவு மடுத்ததால்;
    தூயர் என்றிலர் வைகு இடம் துன்னினால்,
    தீயர்; அன்றியும், தீமையும் செய்வரால். 14

  627. தழுவு இலங்கை தழங்கு எரி தாய்ச் செல,
    வழு இல் வேலை உலையின் மறுகின;
    எழு கொழுஞ் சுடர்க் கற்றை சென்று எய்தலால்,
    குழுவு தண் புனல் மேகம் கொதிக்கவே. 15

  628. பூக் கரிந்து, முறிபொறி ஆய், அடை
    நாக் கரிந்து, சினை நறுஞ் சாம்பர் ஆய்,
    மீக் கரிந்து நெடும் பணை, வேர் உறக்
    காக் கரிந்து, கருங் கரி ஆனவே. 16

  629. தளை கொளுத்திய தாவு எரி, தாமணி
    முளை கொளுத்தி, முகத்திடை மொய்த்த பேர்
    உளை கொளுத்த, உலந்து உலைவு உற்றன-
    வளை குளப்பின் மணி நிற வாசியே. 17

  630. அரக்கரும் அரக்கியரும் உற்ற அவலம்

  631. எழுந்து பொன் தலத்து ஏறலின், நீள் புகைக்
    கொழுந்து சுற்ற, உயிர்ப்பு இலர், கோளும் உற
    அழுந்து பட்டுளர் ஒத்து, அயர்ந்தார், அழல்
    விழுந்து முற்றினர்-கூற்றை விழுங்குவார். 18

  632. கோசிகத் துகில் உற்ற கொழுங் கனல்
    தூசின் உத்தரிகத்தொடு சுற்றுறா,
    வாச மைக் குழல் பற்ற மயங்கினார்-
    பாசிழைப் பரவைப் படர் அல்குலார். 19

  633. நிலவு இலங்கிய துகிலினை நெருப்பு உண, நிருதர்,
    இலவினும் சில முத்து உள எனும் நகை இளையார்,
    புலவியின் கரை கண்டவர், அமுது உகப் புணரும்
    கலவியின் சுரை கண்டிலர், மண்டினர் கடல்மேல். 20

  634. பஞ்சரத்தொடு, பசு நிறக் கிளி வெந்து பதைப்ப,
    அஞ்சனக் கண்ணின் அருவி நீர் முலை முன்றில் அலைப்ப,
    குஞ்சரத்து அன கொழுநரைத் தழுவுறும் கொதிப்பால்,
    மஞ்சிடைப் புகும் மின் என, புகையிடை மறைந்தார். 21

  635. வரையினைப் புரை மாடங்கள் எரி புக, மகளிர்,
    புரை இல் பொன் கலன் வில்லிட விசும்பிடைப் போவார்,
    கரை இல் நுண் புகைப் படலையில் கரந்தனர்; கலிங்கத்
    திரையினுள் பொலி சித்திரப் பாவையின் செயலார். 22

  636. நந்தனவனங்கள் முதலியன வெந்தொழிந்த காட்சி

  637. அகருவும் நறுஞ் சாந்தமும் முதலிய, அனேகம்
    புகர் இல் நல் மரத்து உறு வெறி, உலகு எலாம் போர்ப்ப,
    பகரும் ஊழியில் கால வெங் கடுங் கனல் பருகும்
    மகர வேலையின், வெந்தன-நந்தனவனங்கள். 23

  638. மினல் பரந்து எழு கொழுஞ் சுடர் உலகு எலாம் விழுங்கி,
    நினைவு அரும் பெருந் திசை உற விரிகின்ற நிலையால்,
    சினைப் பரந்து எரி சேர்ந்திலா நின்றவும், சில வெங்
    கனல் பரந்தவும், தெரிகில -கற்பகக் கானம். 24

  639. மூளும் வெம் புகை விழுங்கலின், சுற்றுற முழு நீர்
    மாளும் வண்ணம், மா மலை நெடுந் தலைதொறும் மயங்கிப்
    பூளை வீய்ந்தன்ன போவன, புணரியில் புனல் மீன்
    மீள, யாவையும் தெரிந்தில, முகில் கணம் விசைப்ப. 25

  640. மிக்க வெம் புகை விழுங்கலின், வெள்ளியங்கிரியும்,
    ஒக்க வெற்பினோடு; அன்னமும் காக்கையின் உருவ;
    பக்க வேலையின் படியது, பாற்கடல்; முடிவில்
    திக்கயங்களும் கயங்களும் வேற்றுமை தெரியா. 26

  641. கனலுக்குப் பயந்து கடலில் வீழ்தல்

  642. கரிந்து சிந்திடக் கடுங் கனல் தொடர்ந்து உடல் கதுவ,
    உரிந்த மெய்யினர், ஓடினர், நீரிடை ஒளிப்பார்,
    விரிந்த கூந்தலும், குஞ்சியும் மிடைதலின், தானும்
    எரிந்து வேகின்ற ஒத்தது, எறி திரைப் பரவை. 27

  643. மருங்கின்மேல் ஒரு மகவு கொண்டு, ஒரு தனி மகவை
    அருங் கையால் பற்றி, மற்றொரு மகவு பின் அரற்ற,
    நெருங்கி நீண்டிடு நெறி குழல் சுறுக் கொள நீங்கிக்
    கருங் கடல்தலை வீழ்ந்தனர், அரக்கியர், கதறி. 28

  644. ஆயுதசாலையில் படைக்கலத் திரள்கள் அழிதல்

  645. வில்லும், வேலும், வெங் குந்தமும் முதலிய விறகாய்
    எல்லுடைச் சுடர் எனப் புகர் எஃகு எலாம் உருகி,
    தொல்லை நல் நிலை தொடர்ந்த, பேர் உணர்வு அன்ன தொழிலால்
    சில்லி உண்டையின் திரண்டன படைக்கலத் திரள்கள். 29

  646. எரி பற்ற, யானைகள் ஓடுதல்

  647. செய் தொடர்க் கன வல்லியும், புரசையும், சிந்தி,
    நொய்தின், இட்ட வன் தறி பறித்து, உடல் எரி நுழைய,
    மொய் தடச் செவி நிறுத்தி, வால் முதுகினில் முறுக்கி,
    கை எடுத்து அழைத்து ஓடின - ஓடை வெங் களி மா. 30

  648. பறவைகள் கடலில் விழுந்து மாய்தல்

  649. வெருளும் வெம் புகைப் படலையின் மேற்செல வெருவி,
    இருளும் வெங் கடல் விழுந்தன, எழுந்தில, பறவை;
    மருளின் மீன் கணம் விழுங்கிட, உலந்தன-மனத்து ஓர்
    அருள் இல் வஞ்சரைத் தஞ்சம் என்று அடைந்தவர் அனைய. 31

  650. இராவணன் மனையில் தீப் பற்றுதல்

  651. நீரை வற்றிடப் பருகி, மா நெடு நிலம் தடவி,
    தாருவைச் சுட்டு, மலைகளைத் தழல்செய்து, தனி மா
    மேருவைப் பற்றி எரிகின்ற கால வெங் கனல்போல்,
    ஊரை முற்றுவித்து, இராவணன் மனை புக்கது - உயர் தீ. 32

  652. வான மாதரும், மற்றுள மகளிரும், மறுகிப்
    போன போன திக்கு அறிகிலர், அனைவரும் போனார்;
    ஏனை நின்றவர் எங்கணும் இரிந்தனர்; இலங்கைக்
    கோன் அவ் வானவர் பதி கொண்ட நாள் எனக் குலைந்தார். 33

  653. நாவியும், நறுங் கலவையும், கற்பகம் நக்க
    பூவும், ஆரமும், அகிலும், என்று இனையன புகைய,
    தேவு தேன் மழை செறி பெருங் குலம் எனத் திசையின்
    பாவைமார் நறுங் குழல்களும், பரிமளம் கமழ்ந்த. 34

  654. சூழும் வெஞ் சுடர் தொடர்ந்திட, யாவரும் தொடரா
    ஆழி வெஞ் சினத்து ஆண் தொழில் இராவணன் மனையில்-
    ஊழி வெங் கனல் உண்டிட, உலகம் என்று உயர்ந்த
    ஏழும் வெந்தென-எரிந்தன, நெடு நிலை ஏழும். 35

  655. பொன் திருத்தியது ஆதலால், இராவணன் புரை தீர்
    குன்றம் ஒத்து உயர் தட நெடு மா நிலைக் கோயில்,
    நின்று சுற்று எரி பருகிட, நெகிழ்வுற உருகி,
    தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என, தெரிந்த. 36

  656. இராவணன் முதலியோர் வெளியேற, இலங்கையை எரியுண்ணல்

  657. அனைய காலையில் அரக்கனும், அரிவையர் குழுவும்,
    புனை மணிப் பொலி புட்பக விமானத்துப் போனார்;
    நினையும் மாத்திரை யாவரும் நீங்கினர்; நினையும்
    வினை இலாமையின், வெந்தது, அவ் விலங்கல்மேல் இலங்கை. 37

  658. இலங்கை எரியுற்ற காரணத்தை இராவணன் வினவுதல்

  659. ஆழித் தேரவன் அரக்கரை அழல் எழ நோக்கி,
    ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் எரியும்
    ஊழிக் காலம் வந்து உற்றதோ? பிறிது வேறு உண்டோ ?
    பாழித் தீச் சுட வெந்தது என், நகர்? எனப் பகர்ந்தான். 38

  660. குரங்கு சுட்டது என்று அரக்கர் மொழிய, இராவணன் சினந்து சிரித்தல்

  661. கரங்கள் கூப்பினர், தம் கிளை திருவொடும் காணார்,
    இரங்குகின்ற வல் அரக்கர் ஈது இயம்பினர்: இறையோய்!
    தரங்க வேலையின் நெடிய தன் வால் இட்ட தழலால்,
    குரங்கு சுட்டது ஈது என்றலும், இராவணன் கொதித்தான். 39

  662. இன்று புன் தொழில் குரங்குதன் வலியினால், இலங்கை
    நின்று வெந்து, மா நீறு எழுகின்றது; நெருப்புத்
    தின்று தேக்கிடுகின்றது; தேவர்கள் சிரிப்பார்;
    நன்று! நன்று! போர் வலி என, இராவணன் நக்கான். 40

  663. நெருப்பையும், குரங்கையும் பற்றுமின் என்று இராவணன் ஆணையிடல்

  664. உண்ட நெருப்பைக்
    கண்டனர் பற்றிக்
    கொண்டு அணைக என்றான் -
    அண்டரை வென்றான். 41

  665. உற்று அகலா முன்,
    செற்ற குரங்கைப்
    பற்றுமின் என்றான் -
    முற்றும் முனிந்தான். 42

  666. அனுமனைப் பிடிக்க வீரர்கள் விரைதல்

  667. சார் அயல் நின்றார்,
    வீரர் விரைந்தார்;
    நேருதும் என்றார்;
    தேரினர் சென்றார். 43

  668. எல்லை இகந்தார்
    வில்லர்; வெகுண்டார்
    பல் அதிகாரத்
    தொல்லர், தொடர்ந்தார். 44

  669. நீர் கெழு வேலை நிமிர்ந்தார்;
    தார்கெழு தானை சமைந்தார்;-
    போர் கெழு மாலை புனைந்தார்
    ஓர் எழு வீரர் - உயர்ந்தார். 45

  670. விண்ணினை, வேலை விளிம்பு ஆர்
    மண்ணினை, ஓடி வளைந்தார்;
    அண்ணலை நாடி அணைந்தார்;
    கண்ணினின் வேறு அயல் கண்டார். 46

  671. அரக்கர்கள் தன்னைச் சூழ்தல் கண்டு, அனுமனும் அவர்களுடன் போரிடல்

  672. பற்றுதிர்! பற்றுதிர்! என்பார்;
    எற்றுதிர்! எற்றுதிர்! என்பார்;
    முற்றினர், முற்றும் முனிந்தார்;
    கற்று உணர் மாருதி கண்டான். 47

  673. ஏல்கொடு வஞ்சர் எதிர்ந்தார்;
    கால்கொடு கைகொடு, கார்போல்,
    வேல்கொடு கோலினர்; வெந் தீ
    வால்கொடு தானும் வளைந்தான். 48

  674. அனுமனுடன் போரிட்டு அரக்கர் பலர் மடிதல்

  675. பாதவம் ஒன்று பகுத்தான்;
    மாதிரம் வாலின் வளைத்தான்;
    மோதினன்; மோத, முனிந்தார்
    ஏதியும் நாளும் இழந்தார். 49

  676. நூறிட மாருதி, நொந்தார்
    ஊறிட, ஊன் இடு புண்ணீர்,
    சேறு இட, ஊர் அடு செந் தீ
    ஆறிட, ஓடினது ஆறாய். 50

  677. தோற்றினர் துஞ்சினர் அல்லார்
    ஏற்று இகல் வீரர், எதிர்ந்தார்;
    காற்றின் மகன், கலை கற்றான்,
    கூற்றினும் மும்மடி கொன்றான். 51

  678. மஞ்சு உறழ் மேனியர் வன் தோள்
    மொய்ம்பினர் வீரர் முடிந்தார்
    ஐம்பதினாயிரர்; அல்லார்,
    பைம் புனல் வேலை படிந்தார். 52

  679. தோய்த்தனன் வால்; அது தோயக்
    காய்ச்சின வேலைகலந்தார்,
    போய்ச் சிலர் பொன்றினர் போனார்
    ஏச்சு என, மைந்தர் எதிர்ந்தார். 53

  680. சுற்றினன் தேரினர் தோலா
    வில் தொழில் வீரம் விளைத்தார்;
    எற்றினன் மாருதி; எற்ற,
    உற்று எழுவோரும் உலந்தார். 54

  681. அனுமன் சீதையின் பாதங்களை வணங்கி, இலங்கைவிட்டு மீளுதல்

  682. விட்டு உயர் விஞ்சையர், வெந் தீ
    வட்ட முலைத் திரு வைகும்
    புள் திரள் சோலை புறத்தும்
    சுட்டிலது என்பது சொன்னார். 55

  683. வந்தவர் சொல்ல மகிழ்ந்தான்;
    வெந் திறல் வீரன் வியந்தான்;
    உய்ந்தனென் என்ன, உயர்ந்தான்,
    பைந்தொடி தாள்கள் பணிந்தான். 56

  684. பார்த்தனள், சானகி, பாரா
    வேர்த்து எரி மேனி குளிர்ந்தாள்
    வார்த்தை என்? வந்தனை என்னா,
    போர்த் தொழில் மாருதி போனான். 57

  685. தெள்ளிய மாருதி சென்றான்;
    கள்ள அரக்கர்கள் கண்டால்,
    எள்ளுவர், பற்றுவர் என்னா,
    ஒள் எரியோனும் ஒளித்தான். 58

  686. மிகைப் பாடல்கள்

  687. தெய்வ நாயகி கற்பு எனும் செந் தழல்
    பெய்து மாருதி வாலிடைப் பேணியே,
    பொய் கொள் வஞ்சகப் புல்லர் புரம் எலாம்
    வெய்தின் உண்ட தகைமை விளம்புவாம்.
    [கொடியைப் பற்றி என்ற பாட்டின் முன், இப் படலத்தின் முதற் செய்யுளாக உள்ளது.]

  688. ஊனில் ஓடும் எரியோடு உயங்குவார்,
    கானில் ஓடும் நெடும் புனல் காண் எனா,
    வானில் ஓடும் மகளிர் மயங்கினார்,
    வேனில் ஓடு அருந் தேரிடை வீழ்ந்தனர். 15-1

  689. தேன் அவாம் பொழில் தீப் பட, சிந்திய
    சோனை மா மலர்த் தும்பி, தொடர்ந்து, அயல்
    போன தீச் சுடர் புண்டரிகத் தடங்
    கானம் ஆம் என, வீழ்ந்து, கரிந்தவே. 15-2

  690. நல் கடன் இது; நம் உயிர் நாயகர்
    மற்கடம் தெற மாண்டனர்; வாழ்வு இலம்;
    இல் கடந்து இனி ஏகலம் யாம் எனா,
    வில் கடந்த நுதல் சிலர் வீடினார். 15-3

  691. கார் முழுக்க எழும் கனல் கற்றை போய்
    ஊர் முழுக்க வெதுப்ப உருகின;
    சோர் ஒழுக்கம் அறாமையின், துன்று பொன்
    வேர் விடுப்பது போன்றன, விண் எலாம். 16-1

  692. நெருக்கி மீ மிசை ஓங்கு நெருப்பு அழல்
    செருக்கும் வெண் கதிர்த் திங்களைச் சென்று உற
    உருக்க, மெய்யின் அமுதம் உகுத்தலால்,
    அரக்கரும் சிலர் ஆவி பெற்றார்அரோ. 16-2

  693. பருதி பற்றி நிமிர்ந்து எழு பைங் கனல்,
    கருகி முற்றும் எரிந்து, எழு கார் மழை,
    அருகு சுற்றும் இருந்தையதாய், அதின்
    உருகு பொன் - திரள் ஒத்தனன், ஒண் கதிர். 16-3

  694. தேர் எரிந்தன; எரிந்தன திரள் பரி எவையும்;
    தார் எரிந்தன; எரிந்தன தருக்கு உறு மதமா;
    நீர் எரிந்தன; எரிந்தன நிதிக் குவை; இலங்கை
    ஊர் எரிந்தன; எரிந்தன அரக்கர்தம் உடலம். 31-1

  695. எரிந்த மாளிகை; எரிந்தன இலங்கு ஒளிப் பூண்கள்;
    எரிந்த பூந் துகில்; எரிந்தது முரசுஇனம் முதலாய்;
    எரிந்த மா மணிப் பந்தர்கள்; எரிந்தது கடி கா;
    எரிந்த சாமரை; எரிந்தது வெண் குடைத் தொகுதி. 31-2

  696. ஆடு அரங்குகள் எரிந்தன; அரக்கியர் சிறுவ-
    ரோடு எரிந்தனர்; உலப்பில் பல் கொடிகளும் எரிந்த;
    தேடு அரும் மணிச் சிவிகையோடு அருந் திறல் அரக்கர்
    வீடு எரிந்தன; எரிந்திடாது இருந்தது என், வினவில்? 31-3

  697. இனைய காலையில் மயனும் முன் அமைத்ததற்கு இரட்டி
    புனைய, மாருதி நோக்கினன், இன்னன புகல்வான்;
    வனையும் என் உருத் துவசம் நீ பெறுக என, மகிழ்வோடு
    அனையன் நீங்கிட, அனலியும் மறுபடி உண்டான். 31-4

  698. தா இல் மேலவர்க்கு அருந் துயர் விளைத்திடின், தமக்கே
    மேவும், அத் துயர் எனும் பொருள் மெய்யுற, மேல்நாள்
    தேவர்தம் பதிக்கு இராவணன் இட்ட செந் தழல் போல்,
    ஓவிலாது எரித்து உண்டமை உரைப்பதற்கு எளிதோ? 37-1

  699. மற்று ஒரு கோடியர் வந்தார்;
    உற்று எதிர் ஓடி உடன்றார்;
    கற்று உறு மாருதி காய்ந்தே,
    சுற்றினன் வால்கொடு, தூங்க, 52-1

  700. உற்றவர் யாரும் உலந்தார்;
    மற்று அதுபோதினில் வானோர்
    வெற்றி கொள் மாருதிமீதே
    பொன் தரு மா மலர் போர்த்தார். 54-1

  701. வன் திறல் மாருதி கேண்மோ!
    நின்றிடின், நீ பழுது; இன்றே
    சென்றிடுவாய்! என, தேவர்
    ஒன்றிய வானில் உரைத்தார். 54-2

  702. விண்ணவர் ஓதிய மெய்ம்மை
    எண்ணி, இராமனை இன்றே
    கண்ணுறலே கடன் என்று, ஆங்கு
    அண்ணலும் அவ் வயின் மீண்டான். 54-3

  703. வாலிதின் ஞான வலத்தால்,
    மாலுறும் ஐம் பகை மாய்த்தே,
    மேல் கதி மேவுறும் மேலோர்
    போல், வய மாருதி போனான். 57-1

  704. சுந்தர காண்டம்

    14. திருவடி தொழுத படலம்


    வான் வழி மீளும் அனுமன், மயேந்திரத்தில் குதித்தல்

  705. நீங்குவென் விரைவின் என்னும் நினைவினன், மருங்கு நின்றது
    ஆங்கு ஒரு குடுமிக் குன்றை அருக்கனின் அணைந்த ஐயன்,
    வீங்கினன், உலகை எல்லாம் விழுங்கினன் என்ன; வீரன்
    பூங் கழல் தொழுது வாழ்த்தி, விசும்பிடைக் கடிது போனான். 1

  706. மைந்நாகம் என்ன நின்ற குன்றையும், மரபின் எய்தி,
    கைந் நாகம் அனையோன் உற்றது உணர்த்தினன், கணத்தின் காலை,
    பைந் நாகம் நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு பார்க்கும்,
    கொய்ந் நாகம் நறுந் தேன் சிந்தும், குன்றிடைக் குதியும் கொண்டான். 2

  707. வானர வீரர் அனுமனைக் கண்டு மகிழ்தல்

  708. போய் வரும் கருமம் முற்றிற்று என்பது ஓர் பொம்மல் பொங்க,
    வாய் வெரீஇ நின்ற வென்றி வானர வீரர் மன்னோ,
    பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவைப் பார்ப்புத்
    தாய் வரக் கண்டதன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா! 3

  709. அழுதனர் சிலவர்; முன் நின்று ஆர்த்தனர் சிலவர்; அண்மித்
    தொழுதனர் சிலவர்; ஆடித் துள்ளினர் சிலவர்; அள்ளி
    முழுதுற விழுங்குவார்போல் மொய்த்தனர் சிலவர்; முற்றும்
    தழுவினர் சிலவர்; கொண்டு சுமந்தனர் சிலவர், தாங்கி. 4

  710. தேனொடு கிழங்கும் காயும் நறியன அரிதின் தேடி,
    மேல் முறை வைத்தேம்; அண்ணல்! நுகர்ந்தனை, மெலிவு தீர்தி;
    மான வாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம் என்று,
    தாம் நுகர் சாகம் எல்லாம் முறை முறை சிலவர் தந்தார். 5

  711. அனுமன் உடலில் புண்கள் கண்டு, வானரர் வருந்துதல்

  712. தாள்களில், மார்பில், தோளில், தலையினில், தடக் கைதம்மில்,
    வாள்களின், வேலின், வாளி மழையினின் வகிர்ந்த புண்கள்,
    நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என, நம்பி கண்ண
    ஊழ் கொள நோக்கி நோக்கி, உயிர் உக, உளைந்து உயிர்த்தார். 6

  713. அனுமன் அங்கதன் முதலியோரை வணங்கி, சீதை கூறிய ஆசியைத் தெரிவித்தல்

  714. வாலி காதலனை முந்தை வணங்கினன்; எண்கின் வேந்தைக்
    காலுறப் பணிந்து, பின்னை, கடன்முறை, கடவோர்க்கு எல்லாம்
    ஏலுற இயற்றி, ஆங்கண் இருந்து, இவண் இருந்தோர்க்கு எல்லாம்,
    ஞால நாயகன் தன் தேவி சொல்லினள், நன்மை என்றான். 7

  715. அனுமன் நடந்த செய்திகளைக் கூறுதல்

  716. என்றலும், கரங்கள் கூப்பி எழுந்தனர், இறைஞ்சித் தாழா-
    நின்றனர், உவகை பொங்க விம்மலால் நிமிர்ந்த நெஞ்சர்,
    சென்றது முதலா, வந்தது இறுதியாச் செப்பற்பாலை,
    வன் திறல் உரவோய்! என்ன, சொல்லுவான் மருத்தின் மைந்தன்: 8

  717. ஆண் தகை தேவி உள்ளத்து அருந் தவம் அமையச் சொல்லி,
    பூண்ட பேர் அடையாளம் கைக் கொண்டதும் புகன்று, போரில்
    நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும், நெருப்புச் சிந்தி
    மீண்டதும், விளம்பான் - தான் தன் வென்றியை உரைப்ப வெள்கி. 9

  718. கூறாதவற்றையும் குறிப்பால் உணர்ந்த வானரர், அடுத்து செய்வது குறித்து அனுமனை வினவுதல்

  719. பொருதமை புண்ணே சொல்ல, வென்றமை போந்த தன்மை
    உரைசெய, ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத,
    கருதலர் பெருமை தேவி மீண்டிலாச் செயலே காட்ட,
    தெரிதர உணர்ந்தேம்; பின்னர், என் இனிச் செய்தும்? என்றார். 10

  720. அனுமன் சொற்படி, யாவரும் இராமனைக் காண விரைதல்

  721. யாவதும், இனி, வேறு எண்ணல் வேண்டுவது இறையும் இல்லை;
    சேவகன் தேவி தன்னைக் கண்டமை விரைவின் செப்பி,
    ஆவது, அவ் அண்ணல் உள்ளத்து அருந் துயர் ஆற்றலே ஆம்;
    போவது புலமை என்ன, பொருக்கென எழுந்து போனார். 11

  722. வானர வீரரின் உரைப்படி, இராமனிடத்திற்கு அனுமன் முந்திச் செல்லுதல்

  723. ஏத நாள் இறந்த; சால வருந்தினது இருந்த சேனை;
    ஆதலால் விரைவின் செல்லல் ஆவதுஅன்று; அளியம் எம்மைச்
    சாதல் தீர்த்து அளித்த வீர! தலைமகன் மெலிவு தீரப்
    போது நீ முன்னர் என்றார்; நன்று என அனுமன் போனான். 12

  724. முத் தலை எஃகினாற்கும் முடிப்ப அருங் கருமம் முற்றி,
    வித்தகத் தூதன் மீண்டது இறுதியாய் விளைந்த தன்மை,
    அத் தலை அறிந்த எல்லாம் அறைந்தனம்; ஆழியான்மாட்டு
    இத் தலை நிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்துக் கொண்டாம். 13

  725. சுக்கிரீவன் தேற்ற, இராமன் தேறுதல்

  726. கார் வரை இருந்தனன் கதிரின் காதலன்,
    சீரிய சொற்களால் தெருட்ட, செங் கணான்
    ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா,
    சோர்தொறும் சோர்தொறும், உயிர்த்துத் தோன்றினான். 14

  727. தண்டல் இல் நெடுந் திசை மூன்றும் தாயினர்,
    கண்டிலர் மடந்தையை என்னும் கட்டுரை,
    உண்டு உயிர் அகத்து என ஒறுக்கவும், உளன்,
    திண் திறல் அனுமனை நினையும் சிந்தையான். 15

  728. ஆரியன், அருந் துயர்க் கடலுள் ஆழ்பவன்,
    சீரியது அன்று நம் செய்கை; தீர்வு அரும்
    மூரி வெம் பழியொடும் முடிந்ததாம் என,
    சூரியன் புதல்வனை நோக்கிச் சொல்லுவான்: 16

  729. சுக்கிரீவனை நோக்கி, இராமன் துயருடன் பேசுதல்

  730. குறித்த நாள் இகந்தன குன்ற, தென் திசை
    வெறிக் கருங் குழலியை நாடல் மேயினார்
    மறித்து இவண் வந்திலர்; மாண்டுளார்கொலோ?
    பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை?-பெற்றியோய்! 17

  731. மாண்டனள் அவள்; இவள் மாண்ட வார்த்தையை
    மீண்டு அவர்க்கு உரைத்தலின், விளிதல் நன்று எனா,
    பூண்டது ஓர் துயர் கொடு பொன்றினார் கொலோ?
    தேண்டினர், இன்னமும் திரிகின்றார் கொலோ? 18

  732. கண்டனர் அரக்கரை, கறுவு கைம்மிக,
    மண்டு அமர் தொடங்கினார், வஞ்சர் மாயையால்
    விண்தலம்அதனில் மேயினர்கொல்? வேறு இலாத்
    தண்டல் இல் நெடுஞ் சிறைத் தளைப் பட்டார்கொலோ? 19

  733. கூறின நாள், அவர் இருக்கை கூடலம்;
    ஏறல் அஞ்சுதும் என, இன்ப துன்பங்கள்
    ஆறினர், அருந் தவம் அயர்கின்றார்கொலோ?
    வேறு அவர்க்கு உற்றது என்? விளம்புவாய்! என்றான். 20

  734. அனுமன் இராமனை அடைந்து, சீதையின் நிலையைக் குறிப்பால் உணர்த்துதல்

  735. என்புழி, அனுமனும், இரவி என்பவன்
    தென் புறத்து உளன் எனத் தெரிவது ஆயினான்;
    பொன் பொழி தடக் கை அப் பொரு இல் வீரனும்,
    அன்புறு சிந்தையன், அமைய நோக்கினான். 21

  736. எய்தினன் அனுமனும்; எய்தி, ஏந்தல்தன்
    மொய் கழல் தொழுகிலன்; முளரி நீங்கிய
    தையலை நோக்கிய தலையன், கையினன்,
    வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி, வாழ்த்தினான். 22

  737. அனுமனின் குறிப்பினால் செய்தி உணர்ந்த இராமனின் மகிழ்ச்சி

  738. திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான்;
    வண்டு உறை ஓதியும் வலியள்; மற்று இவன்
    கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்று எனக்
    கொண்டனன், குறிப்பினால் உணரும் கொள்கையான். 23

  739. ஆங்கு அவன் செய்கையே அளவை ஆம் எனா,
    ஓங்கிய உணர்வினால், விளைந்தது உன்னினான்;
    வீங்கின தோள்; மலர்க் கண்கள் விம்மின;
    நீங்கியது அருந் துயர்; காதல் நீண்டதே. 24

  740. சீதையைக் கண்டு வந்த செய்தியை அனுமன் இராமனிடம் கூறுதல்

  741. கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
    தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்;
    அண்டர் நாயக! இனி, துறத்தி, ஐயமும்
    பண்டு உள துயரும் என்று, அனுமன் பன்னுவான்: 25

  742. உன் பெருந் தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப் பெற்ற
    மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும், மிதிலை மன்னன் -
    தன் பெருந் தனயை என்னும் தகைமைக்கும், தலைமை சான்றாள்-
    என் பெருந் தெய்வம்! ஐயா! இன்னமும் கேட்டி என்பான்: 26

  743. பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு என, பொறையில் நின்றாள்,
    தன் அலது இல்லைத் தன்னை ஒப்பு என; தனக்கு வந்த
    நின் அலது இல்லை நின்னை ஒப்பு என, நினக்கு நேர்ந்தாள்;
    என் அலது இல்லை என்னை ஒப்பு என, எனக்கும் ஈந்தாள். 27

  744. உன் குலம் உன்னது ஆக்கி, உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய
    தன் குலம் தன்னது ஆக்கி, தன்னை இத் தனிமை செய்தான்
    வன் குலம் கூற்றுக்கு ஈந்து, வானவர் குலத்தை வாழ்வித்து,
    என் குலம் எனக்குத் தந்தாள்; என் இனிச் செய்வது, எம் மோய்? 28

  745. விற் பெருந் தடந் தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில்,
    நற் பெருந் தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன்;
    இற் பிறப்பு என்பது ஒன்றும், இரும் பொறை என்பது ஒன்றும்,
    கற்பு எனும் பெயரது ஒன்றும், களி நடம் புரியக் கண்டேன். 29

  746. கண்ணினும் உளை நீ; தையல் கருத்தினும் உளை நீ; வாயின்
    எண்ணினும் உளை நீ; கொங்கை இணைக் குவை தன்னின் ஓவாது
    அண்ணல் வெங் காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறாப்
    பண்ணினும் உளை நீ; நின்னைப் பிரிந்தமை பொருந்திற்று ஆமோ? 30

  747. வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒருசார், விண் தோய்,
    காலையும் மாலைதானும் இல்லது ஓர் கனகக் கற்பச்
    சோலை அங்கு அதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய
    சாலையில் இருந்தாள் - ஐய! - தவம் செய்த தவம் ஆம் தையல். 31

  748. மண்ணொடும் கொண்டு போனான் - வான் உயர் கற்பினாள்தன்
    புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான், உலகம் பூத்த
    கண் அகன் கமலத்து அண்ணல், கருத்திலாள்-தொடுத்தல் கண்ணின்,
    எண் அருங் கூறாய் மாய்தி என்றது ஓர் மொழி உண்டு என்பார். 32

  749. தீண்டிலன் என்னும் வாய்மை-திசைமுகன் செய்த முட்டை
    கீண்டிலது; அனந்தன் உச்சி கிழிந்திலது; எழுந்து வேலை
    மீண்டில; சுடர்கள் யாவும் விழுந்தில; வேதம் செய்கை
    மாண்டிலது;-என்னும் தன்மை வாய்மையால், உணர்தி மன்னோ! 33

  750. சோகத்தாள் ஆய நங்கை கற்பினால், தொழுதற்கு ஒத்த
    மாகத்தார் தேவிமாரும், வான் சிறப்பு உற்றார்; மற்றைப்
    பாகத்தாள், இப்போது ஈசன் மகுடத்தாள்; பதுமத்தாளும்,
    ஆகத்தாள் அல்லள், மாயன் ஆயிரம் மௌலி மேலாள். 34

  751. இலங்கையை முழுதும் நாடி, இராவணன் இருக்கை எய்தி,
    பொலங் குழையவரை எல்லாம் பொதுவுற நோக்கிப் போந்தேன்,
    அலங்கு தண் சோலை புக்கேன்; அவ்வழி, அணங்கு அ(ன்)னாளை,
    கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர்க் கடலில், கண்டேன். 35

  752. அரக்கியர் அளவு அற்றார்கள், அலகையின் குழுவும் அஞ்ச
    நெருக்கினர் காப்ப, நின்பால் நேயமே அச்சம் நீக்க,
    இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்திழை வடிவம் எய்தி,
    தருக்கு உயர் சிறை உற்றன்ன தகையள், அத் தமியள் அம்மா! 36

  753. தையலை வணங்கற்கு ஒத்த இடை பெறும் தன்மை நோக்கி,
    ஐய! யான் இருந்த காலை, அலங்கல் வேல் இலங்கை வேந்தன்
    எய்தினன்; இரந்து கூறி இறைஞ்சினன்; இருந்து நங்கை
    வெய்து உரை சொல்ல, சீறி, கோறல் மேற்கொண்டுவிட்டான். 37

  754. ஆயிடை, அணங்கின் கற்பும், ஐய! நின் அருளும், செய்ய
    தூய நல் அறனும், என்று, இங்கு இனையன தொடர்ந்து காப்ப,
    போயினன், அரக்கிமாரை, சொல்லுமின் பொதுவின் என்று, ஆங்கு
    ஏயினன்; அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார். 38

  755. அன்னது ஓர் பொழுதில் நங்கை ஆர் உயிர் துறப்பதாக
    உன்னினள்; கொடி ஒன்று ஏந்தி, கொம்பொடும் உறைப்பச் சுற்றி,
    தன் மணிக் கழுத்தில் சார்த்தும் அளவையில் தடுத்து, நாயேன்,
    பொன் அடி வணங்கி நின்று, நின் பெயர் புகன்ற போழ்தில், 39

  756. வஞ்சனை அரக்கர் செய்கை இது என மனக்கொண்டேயும்,
    அஞ்சன வண்ணத்தான்தன் பெயர் உரைத்து, அளியை, என்பால்
    துஞ்சுறு பொழுதில் தந்தாய் துறக்கம் என்று உவந்து சொன்னாள் -
    மஞ்சு என, வன் மென் கொங்கை வழிகின்ற மழைக் கண் நீராள். 40

  757. அறிவுறத் தெரியச் சொன்ன, பேர் அடையாளம் யாவும்,
    செறிவுற நோக்கி, நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை
    முறிவு அற எண்ணி, வண்ண மோதிரம் காட்ட, கண்டாள்;
    இறுதியின் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது, அனையது-எந்தாய்! 41

  758. ஒரு கணத்து இரண்டு கண்டேன்; ஒளி மணி ஆழி, ஆன்ற
    திரு முலைத் தடத்து வைத்தாள்; வைத்தலும், செல்வ! நின்பால்
    விரகம் என்பதனின் வந்த வெங் கொழுந் தீயினால் வெந்து
    உருகியது; உடனே ஆறி, வலித்தது, குளிர்ப்பு உள் ஊற. 42

  759. வாங்கிய ஆழிதன்னை, வஞ்சர் ஊர் வந்ததாம் என்று,
    ஆங்கு உயர் மழைக் கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி,
    ஏங்கினள் இருந்தது அல்லால், இயம்பலள்; எய்த்த மேனி
    வீங்கினள்; வியந்தது அல்லால், இமைத்திலள்; உயிர்ப்பு விண்டாள். 43

  760. அன்னவர்க்கு, அடியனேன், நிற் பிரிந்த பின் அடுத்த எல்லாம்
    சொல் முறை அறியச் சொல்லி, தோகை! நீ இருந்த சூழல்
    இன்னது என்று அறிகிலாமே, இத்துணை தாழ்த்தது என்றே,
    மன்ன! நின் வருத்தப்பாடும் உணர்த்தினென்; உயிர்ப்பு வந்தாள். 44

  761. இங்கு உள தன்மை எல்லாம் இயைபுளி இயையக் கேட்டாள்;
    அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறியச் சொன்னாள்;
    திங்கள் ஒன்று இருப்பென் இன்னே; திரு உளம் தீர்ந்த பின்னை,
    மங்குவென் உயிரோடு என்று, உன் மலரடி சென்னி வைத்தாள். 45

  762. சீதை தந்த சூடாமணியை அனுமன் இராமனிடம் சேர்த்தல்

  763. வைத்தபின், துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி,
    கைத்தலத்து இனிதின் ஈந்தாள்; தாமரைக் கண்கள் ஆர,
    வித்தக! காண்டி! என்று, கொடுத்தனன் - வேத நல் நூல்
    உய்த்துள காலம் எல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான். 46

  764. சூடாமணி பெற்ற இராமனது நிலை

  765. பை பையப் பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி,
    மெய்யுற வெதும்பி, உள்ளம் மெலிவுறு நிலையை விட்டான்;
    ஐயனுக்கு, அங்கி முன்னர், அங்கையால் பற்றும் நங்கை
    கை எனல் ஆயிற்று அன்றே - கை புக்க மணியின் காட்சி! 47

  766. பொடித்தன உரோமம்; போந்து பொழிந்தன கண்ணீர்; பொங்கித்
    துடித்தன, மார்பும் தோளும்; தோன்றின வியர்வின் துள்ளி;
    மடித்தது, மணி வாய்; ஆவி வருவது போவது ஆகித்
    தடித்தது, மேனி; என்னே, யார் உளர் தன்மை தேர்வார்? 48

  767. மேலே செய்வன குறித்து இராமன் விரைதல்

  768. ஆண்டையின், அருக்கன் மைந்தன், ஐய! கேள், அரிவை நம்பால்
    காண்டலுக்கு எளியள் ஆனாள் என்றலும், காலம் தாழ,
    ஈண்டு, இனும் இருத்தி போலாம் என்றனன்; என்றலோடும்,
    தூண் திரண்டனைய தோளான், பொருக்கென எழுந்து சொன்னான். 49

  769. சுக்கிரீவன் கட்டளைப்படி வானர சேனை புறப்படுதல்

  770. எழுக, வெம் படைகள்! என்றான்; ஏ எனும் அளவில், எங்கும்
    முழு முரசு எற்றி, கொற்ற வள்ளுவர் முடுக்க, முந்தி,
    பொழி திரை அன்ன வேலை புடை பரந்தென்னப் பொங்கி,
    வழுவல் இல் வெள்ளத் தானை, தென் திசை வளர்ந்தது அன்றே! 50

  771. வீரரும் விரைவில் போனார்; விலங்கல் மேல் இலங்கை, வெய்யோன்
    பேர்வு இலாக் காவற்பாடும், பெருமையும், அரணும், கொற்றக்
    கார் நிறத்து அரக்கர் என்போர் முதலிய, கணிப்பு இலாத,
    வார் கழல் அனுமன் சொல்ல, வழி நெடிது எளிதின் போனார். 51

  772. பன்னிரு நாளில் அனைவரும் தென் கடல் சேர்தல்

  773. அந் நெறி நெடிது செல்ல, அரிக் குலத்து அரசனோடும்,
    நல் நெறிக் குமரர் போக, நயந்து உடன் புணர்ந்த சேனை,
    இந் நெடும் பழுவக் குன்றில் பகல் எலாம் இறுத்த பின்னர்,
    பன்னிரு பகலில் சென்று, தென் திசைப் பரவை கண்டார். 52

  774. மிகைப் பாடல்கள்

  775. போயினர் களிப்பினோடும், புங்கவன் சிலையின்நின்றும்
    ஏயின பகழி என்ன எழுந்து, விண் படர்ந்து, தாவி,
    காய் கதிர்க் கடவுள், வானத்து உச்சியில் கலந்த காலை,
    ஆயின வீரரும் போய், மதுவனம் அதில் இறுத்தார். 11-1

  776. ஏத நாள் இறந்த சால என்பது ஓர் வருத்தம் நெஞ்சத்து
    ஆதலான், உணர்வு தீர்ந்து வருந்தினம், அளியம்; எம்மைச்
    சாதல் தீர்த்து அளித்த வீர! தந்தருள் உணவும் என்ன,
    போதும் நாம், வாலி சேய்பால் என்று, உடன் எழுந்து போனார். 11-2

  777. அங்கதன் தன்னை அண்மி, அனுமனும் இரு கை கூப்பி,
    கொங்கு தங்கு அலங்கல் மார்ப! நின்னுடைக் குரக்குச் சேனை,
    வெங் கதம் ஒழிந்து சால வருந்தின, வேடை ஓடி;
    இங்கு, இதற்கு அளித்தல் வேண்டும், இறால் உமிழ் பிரசம் என்றான். 11- 3

  778. நன்று என, அவனும் நேர்ந்தான்; நரலையும் நடுங்க ஆர்த்து,
    சென்று, உறு பிரசம் தூங்கும் செழு வனம் அதனினூடே,
    ஒன்றின் முன் ஒன்று, பாயும்; ஒடிக்கும்; மென் பிரசம் எல்லாம்
    தின்று தின்று உவகை கூரும்-தேன் நுகர் அளியின் மொய்த்தே. 11-4

  779. ஒருவர் வாய்க் கொள்ளும் தேனை ஒருவர் உண்டு ஒழிவர்; உண்ண
    ஒருவர் கைக் கொள்ளும் தேனை ஒருவர் கொண்டு ஓடிப் போவர்;
    ஒருவரோடு ஒருவர் ஒன்றத் தழுவுவர்; விழுவர்; ஓடி
    ஒருவர்மேல் ஒருவர் தாவி ஒல்லென உவகை கூர்வார். 11-5

  780. இன்னன நிகழும் காலை, எரி விழித்து, எழுந்து சீறி,
    அந் நெடுஞ் சோலை காக்கும் வானரர் அவரை நோக்கி,
    மன் நெடுங் கதிரோன் மைந்தன் ஆணையை மறுத்து, நீயிர்,
    என் நினைந்து என்ன செய்தீர்? நும் உயிர்க்கு இறுதி என்ன. 11-6

  781. முனியுமால் எம்மை, எம் கோன் என்று, அவர் மொழிந்து போந்து,
    கனியும் மா மதுவனத்தைக் கட்டழித்திட்டது, இன்று,
    நனி தரு கவியின் தானை, நண்ணலார் செய்கை நாண;
    இனி எம்மால் செயல் இன்று என்னா, ததிமுகற்கு இயம்பினாரே. 11-7

  782. கேட்டவன், யாவரே அம் மதுவனம் கேடு சூழ்ந்தார்?
    காட்டிர் என்று எழுந்தான்; அன்னார், வாலி சேய் முதல கற்றோர்
    ஈட்டம் வந்து இறுத்தது ஆக, அங்கதன் ஏவல் தன்னால்,
    மாட்டின, கவியின் தானை, மதுவளர் உலவை ஈட்டம். 11-8

  783. உரம் கிளர் மதுகையான் தன் ஆணையால், உறுதி கொண்டே,
    குரங்கு இனம் தம்மை எல்லாம் விலக்கினம்; கொடுமை கூறி;
    கரங்களால் எற்ற நொந்தேம்; காவலோய்! என்னலோடும்,
    தரம் கிளர் தாதை பட்டது அறிந்திலன் தனயன் போலும். 11-9

  784. என உரைத்து, அசனி என்ன எழுந்து, இரைத்து, இரண்டு கோடி
    கனை குரல் கவியின் சேனை கல் எனக் கலந்து புல்ல,
    புனை மதுச் சோலை புக்கான்; மது நுகர் புனிதச் சேனை,
    அனகனை வாழ்த்தி, ஓடி அங்கதன் அடியில் வீழ்ந்த. 11-10

  785. இந்திரன் வாலிக்கு ஈந்த இன் சுவை மதுவின் கானம்;
    அந்தரத்தவர்க்கும் நோக்கற்கு அரிய என் ஆணைதன்னைச்
    சிந்தினை; கதிரோன் மைந்தன் திறலினை அறிதி அன்றே?
    மந்தரம் அனைய தோளாய்! இற்றது உன் வாழ்க்கை இன்றே. 11-11

  786. மதுவனம் தன்னை இன்னே மாட்டுவித்தனை, நீ என்னா,
    கதுமென வாலி சேய்மேல் எறிந்தனன், கருங் கற் பாறை;
    அதுதனைப் புறங்கையாலே அகற்றி, அங்கதனும் சீறி,
    ததிமுகன் தன்னைப் பற்றிக் குத்தினன், தடக்கைதன்னால். 11-12

  787. குத்தினன் என்னலோடும், குலைந்திடும் மெய்யன் ஆகி,
    மற்று ஒரு குன்றம் தன்னை வாங்கினன், மதுவனத்தைச்
    செற்றனன்மேலே ஏவிச் சிரித்தனன், ததிமுகன் தான்;
    இற்றனன், வாலி சேய் என்று இமையவர் இயம்பும்காலை, 11-13

  788. ஏற்று ஒரு கையால் குன்றை இருந்துகள் ஆக்கி, மைந்தன்
    மாற்று ஒரு கையால் மார்பில் அடித்தலும், மாண்டான் என்ன,
    கூற்றின் வாய் உற்றான் என்ன, உம்பர் கால் குலையப் பானு
    மேல் திசை உற்றான் என்ன, விளங்கினன், மேரு ஒப்பான். 11-14

  789. வாய் வழிக் குருதி சோர, மணிக் கையால் மலங்க மோதி,
    போய் மொழி, கதிரோன் மைந்தற்கு என்று, அவன் தன்னைப் போக்கி,
    தீ எழும் வெகுளி பொங்க, மற்று அவன் சேனைதன்னை,
    காய் கனல் பொழியும் கையால் குத்துதிர், கட்டி என்றான். 11-15

  790. பிடித்தனர்; கொடிகள் தம்மால் பிணித்தனர்; பின்னும் முன்னும்
    இடித்தனர், அசனி அஞ்ச, எறுழ் வலிக் கரங்கள் ஓச்சி;
    துடித்தனர், உடலம் சோர்ந்தார்; சொல்லும் போய், நீரும் என்னா,
    விடுத்தனன், வாலி மைந்தன்; விரைவினால் போன வேலை, 11-16

  791. அலை புனல் குடையுமா போல், மதுக் குடைந்து ஆடி, தம்தம்
    தலைவர் கட்கு இனிய தேனும் கனிகளும் பிறவும் தந்தே,
    உலைவுறு வருத்தம் தீர்ந்திட்டு, உபவனத்து இருந்தார்; இப்பால்
    சிலை வளைத்து உலவும் தேரோன் தெறும் வெயில் தணிவு பார்த்தே. 11- 17

  792. சேற்று இள மரை மலர்த் திருவைத் தேர்க! எனக்
    காற்றின் மா மகன் முதல் கவியின் சேனையை,
    நாற்றிசை மருங்கினும் ஏவி, நாயகன் -
    தேற்றினன் இருந்தனன் - கதிரின் செம்மலே. 12-1

  793. நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான்,
    ஏக்குற்று ஏக்குற்று இரவி குலத்து உளான்,
    வாக்கில் தூய அனுமன் வரும் எனா,
    போக்கிப் போக்கி, உயிர்க்கும் பொருமலான். 14-1

  794. என்று உரைத்து, இடர் உழந்து இருக்கும் ஏல்வையின்,
    வன் திறல் ததிமுகன் வானரேசன் முன்,
    தன் தலை பொழிதரு குருதிதன்னொடும்,
    குன்று எனப் பணிந்தனன், இரு கை கூப்பியே. 19-1

  795. எழுந்து நின்று, ஐய! கேள், இன்று நாளையோடு
    அழிந்தது மதுவனம் அடைய என்றலும்,
    வழிந்திடு குருதியின் வதனம் நோக்கியே,
    மொழிந்திடு, அங்கு யார் அது முடித்துளோர்? என, 19-2

  796. நீலனும், குமுதனும், நெடிய குன்றமே
    போல் உயர் சாம்பனும், புணரி போர்த்தென
    மேல் எழு சேனையும், விரைவின் வந்து உறா,
    சால்புடை மதுவனம் தனை அழிப்பவே. 19-3

  797. தகைந்த அச் சேனையைத் தள்ளி, நின்னையும்,
    இகழ்ந்து உரைத்து, இயைந்தனன் வாலி செய்; மனக்கு
    உகந்தன புகன்ற அவ் உரை பொறாமையே,
    புகைந்து, ஒரு பாறையின் புணர்ப்பு நீக்கியே, 19-4

  798. இமைத்தல் முன், வாலி சேய், எழில் கொள் யாக்கையைச்
    சமைத்தி என்று எறிதர, புறங்கையால் தகைந்து,
    அமைத்தரு கனல் என அழன்று, எற் பற்றியே
    குமைத்து, உயிர் பதைப்ப, நீ கூறு போய் என்றான். 19-5

  799. இன்று நான் இட்ட பாடு இயம்ப முற்றுமோ?
    என்று உடல் நடுக்கமோடு இசைக்கும் ஏல்வையில்,
    அன்று அவன் உரைத்தல் கேட்டு, அருக்கன் மைந்தனும்
    ஒன்றிய சிந்தையில் உணர்ந்திட்டான் அரோ. 19-6

  800. ஏம்பலோடு எழுந்து நின்று, இரவி கான்முளை,
    பாம்பு அணை அமலனை வணங்கி, பைந்தொடி
    மேம்படு கற்பினள் என்னும் மெய்ம்மையைத்
    தாம் புகன்றிட்டது, இச் சலம் என்று ஓதினான். 19-7

  801. பண் தரு கிளவியாள் தன்னைப் பாங்குறக்
    கண்டனர்; அன்னது ஓர் களிப்பினால், அவர்
    வண்டு உறை மதுவனம் அழித்து மாந்தியது;
    அண்டர் நாயக! இனி அவலம் தீர்க என்றான். 19-8

  802. வந்தனர் தென் திசை வாவினார் என,
    புந்தி நொந்து, என்னைகொல் புகலற் பாலர்? என்று,
    எந்தையும் இருந்தனன்; இரவி கான்முளை,
    நொந்த அத் ததிமுகன் தன்னை நோக்கியே, 19-9

  803. யார் அவண் இறுத்தவர், இயம்புவாய்? என,
    மாருதி, வாலி சேய், மயிந்தன், சாம்பவன்,
    சோர்வு அறு பதினெழுவோர்கள் துன்னினார்,
    ஆர்கலி நாண வந்து ஆர்க்கும் சேனையார். 19-10

  804. என்று, அவன் உரைத்த போது, இரவி காதலன்,
    வன் திறல் ததிமுகன் வதனம் நோக்கியே,
    ஒன்று உனக்கு உணர்த்துவது உளது; வாலி சேய்,
    புன் தொழில் செய்கை சேர் புணர்ப்பன் அல்லனால். 19-11

  805. கொற்றவன் பணி தலைக்கொண்டு, தெண் திரை
    சுற்றிய திசை எலாம் துருவி, தோகையைப்
    பற்றிய பகைஞரைக் கடிந்து, பாங்கர் வந்து
    உற்றனர்; அவரை யாம் உரைப்பது என்னையோ? 19-12

  806. அன்றியும், வாலி சேய் அரசு அது; ஆதலின்,
    பின்றுதல் தீதுஅரோ; பிணங்கும் சிந்தையாய்!
    ஒன்றும் நீ உணரலை; உறுதி வேண்டு மேல்,
    சென்று, அவன்தனைச் சரண் சேர்தி, மீண்டு என்றான். 19-13

  807. என்ற அந் ததிமுகன் தன்னை, ஏனைய
    வன் திறல் அரசு இளங் குரிசில் மைந்தனைப்
    பின்றுதல் அவனை என் பேசற் பாற்று நீ;
    இன்று போய், அவன் அடி ஏத்துவாய் என்றான். 19-14

  808. வணங்கிய சென்னியன்; மறைத்த வாயினன்;
    உணங்கிய சிந்தையன்; ஒடுங்கும் மேனியன்;
    கணங்களோடு ஏகி, அக் கானம் நண்ணினான்-
    மணம் கிளர் தாரினான் மறித்தும் வந்துஅரோ. 19-15

  809. கண்டனன் வாலி சேய்; கறுவு கைம்மிக,
    விண்டவன், நம் எதிர் மீண்டுளான்எனின்,
    உண்டிடுகுதும் உயிர் என்ன, உன்னினான்;
    தொண்டு என, ததிமுகன், தொழுது தோன்றினான். 19-16

  810. போழ்ந்தன யான் செய்த குறை பொறுக்க! எனா,
    வீழ்ந்தனன் அடிமிசை; வீழ, வாலி சேய்,
    தாழ்ந்து, கைப் பற்றி, மெய் தழீஇக்கொண்டு, உம்மை யான்
    சூழ்ந்ததும் பொறுக்க! எனா, முகமன் சொல்லினான். 19-17

  811. யாம் முதல் குறித்த நாள் இறத்தல் எண்ணியே
    ஏமுற, துயர் துடைத்து, அளித்த ஏற்றம்போல்,
    தாமரைக் கண்ணவன் துயரம் தள்ள, நீர்
    போம் என, தொழுது, முன் அனுமன் போயினான். 19-18

  812. வன் திறல் குரிசிலும் முனிவு மாறினான்;
    வென்றி கொள் கதிரும் தன் வெம்மை ஆறினான்
    என்றுகொண்டு, யாவரும், எழுந்து போதலே
    நன்று என, ஏகினார், நவைக்கண் நீங்கினார். 19-19

  813. இப்புறத்து இராமனும், இரவி சேயினை
    ஒப்புற நோக்கி, வந்துற்ற தானையர்;
    தப்பு அறக் கண்டனம் என்பரோ? தகாது
    அப்புறத்து என்பரோ? அறைதியால்! என்றான். 19-20

  814. வனை கருங் குழலியைப் பிரிந்த மாத் துயர்
    அனகனுக்கு அவள் எதிர் அணைந்ததாம் எனும்
    மன நிலை எழுந்த பேர் உவகை மாட்சி கண்டு,
    அனுமனும் அண்ணலுக்கு அறியக் கூறுவான்: 23-1

  815. மாண் பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால் வைத்த
    சேண் பிறந்து அமைந்த காதல், கண்களின் தெவிட்டி, தீராக்
    காண் பிறந்தமையால், நீயே, கண் அகன் ஞாலம் தன்னுள்,
    ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனையாதி அன்றே? 35-1

  816. அயிர்ப்பு இலர், காண்பார்; முன்னும் அறிந்திலர் எனினும், ஐய!-
    எயில் புனை இலங்கை மூதூர் இந்திரன் யாக்கைக்கு ஏற்ற
    மயில் புரை இயலினாரும், மைந்தரும், நாளும் அங்கே
    உயிர்ப்பொடும், உயிரினோடும், ஊசல் நின்று ஆடுவாரும். 35-2

  817. ஆயிடை, கவிகளோடும், அங்கதன் முதலினாயோர்
    மேயினர், வணங்கிப் புக்கார், வீரனை, கவியின் வேந்தை;
    போயின கருமம் முற்றிப் புகுந்தது ஓர் மொம்மல்தன்னால்,
    சேயிரு மதியம் என்னத் திகழ்தரு முகத்தர் ஆனார். 47-1

  818. நீலனை நெடிது நோக்கி, நேமியான் பணிப்பான்: நம்தம்-
    பால் வரும் சேனை தன்னைப் பகைஞர் வந்து அடரா வண்ணம்,
    சால்புற முன்னர்ச் சென்று, சரி நெறி துருவிப் போதி,
    மால் தரு களிறு போலும் படைஞர் பின் மருங்கு சூழ. 49-1

  819. என்று உரைத்து எழுந்த வேலை, மாருதி இரு கை கூப்பி,
    புன் தொழில் குரங்கு எனாது என் தோளிடைப் புகுதி என்னா,
    தன் தலை படியில் தாழ்ந்தான்; அண்ணலும், சரணம் வைத்தான்;
    வன் திறல் வாலி சேயும் இளவலை வணங்கிச் சொன்னான்: 49-2

  820. நீ இனி என் தன் தோள்மேல் ஏறுதி, நிமல! என்ன,
    வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை நோக்கி,
    நாயகற்கு இளைய கோவும், நன்று என அவன்தன் தோள்மேல்
    பாய்தலும், தகைப்பு இல் தானை படர் நெறிப் பரந்தது அன்றே. 49-3

  821. கருடனில் விடையில் தோன்றும் இருவரும் கடுப்ப, காலின்
    அருள் தரு குமரன் தோள்மேல், அங்கதன் அலங்கல் தோள்மேல்,
    பொருள் தரும் வீரர் போத, பொங்கு ஒளி விசும்பில் தங்கும்
    தெருள் தரு புலவர் வாழ்த்திச் சிந்தினர், தெய்வப் பொற் பூ. 49-4

  822. வையகம் அதனில் மாக்கள் மயங்குவர், வய வெஞ் சேனை
    எய்திடின் என்பது உன்னி, இராகவன் இனிதின் ஏவ,
    பெய் கனி, கிழங்கு, தேன், என்று இனையன பெறுதற்கு ஒத்த
    செய்ய மால் வரையே ஆறாச் சென்றது, தகைப்பு இல் சேனை. 49-5