MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    Kamba Ramayanam ayothya kandam Part 1
    கம்பராமாயணம் அயோத்தியா காண்டம்

    1. மந்திரப் படலம்
    2. மந்தரை சூழ்ச்சிப் படலம்
    3. கைகேயி சூழ்ச்சிப் படலம்
    4. நகர் நீங்கு படலம்
    5. தைலம் ஆட்டு படலம்
    6. கங்கைப் படலம்

  1. கடவுள் வாழ்த்து

  2. வான்நின்று இழிந்து, வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும்,
    ஊனும் உயிரும் உணர்வும்போல், உள்ளும் புறத்தும் உளன் என்ப-
    கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்ப, கோல் துறந்து,
    கானும் கடலும் கடந்து, இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன். 0

  3. 1. மந்திரப் படலம்




  4. தயரதன் மந்திராலோசனை மண்டபம் அடைதல்

  5. மண்ணுறு முரசுஇனம் மழையின் ஆர்ப்புற,
    பண்ணுறு படர் சினப் பரும யானையான்,
    கண்ணுறு கவரியின் கற்றை சுற்றுற,
    எண்ணுறு சூழ்ச்சியின் இருக்கை எய்தினான். 1

  6. தயரதன் யாவரையும் போகச் சொல்லி தனித்திருத்தல்

  7. புக்கபின், நிருபரும், பொரு இல் சுற்றமும்,
    பக்கமும், பெயர்க என, பரிவின் நீக்கினான்;
    ஒக்க நின்று உலகு அளித்து, யோகின் எய்திய
    சக்கரத்தவன் எனத் தமியன் ஆயினான். 2

  8. தயரதன் அமைச்சர்களை வருவித்தல்

  9. சந்திரற்கு உவமை செய் தரள வெண்குடை
    அந்தரத்தளவும் நின்று அளிக்கும் ஆணையான்,
    இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த, தன்
    மந்திரக் கிழவரை, வருக என்று ஏவினான். 3

  10. வசிட்டனின் வருகை

  11. பூ வரு பொலன் கழல் பொரு இல் மன்னவன்
    காவலின் ஆணைசெய் கடவுள் ஆம் என,
    தேவரும், முனிவரும் உணரும், தேவர்கள்
    மூவரின் நால்வர் ஆம், முனி வந்து எய்தினான். 4

  12. அமைச்சர்கள் மாண்பு

  13. குலம் முதல் தொன்மையும், கலையின் குப்பையும்,
    பல முதல் கேள்வியும், பயனும், எய்தினார்;
    நலம் முதல் நலியினும் நடுவு நோக்குவார்;
    சலம் முதல் அறுத்து, அருந் தருமம் தாங்கினார். 5

  14. உற்றது கொண்டு, மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார்;
    மற்று அது வினையின் வந்தது ஆயினும், மாற்றல் ஆற்றும்
    பெற்றியர்; பிறப்பின் மேன்மைப் பெரியவர்; அரிய நூலும்
    கற்றவர்; மானம் நோக்கின், கவரிமா அனைய நீரார். 6

  15. காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரிந்து கற்ற
    நூல் உற நோக்கி, தெய்வம் நுனித்து, அறம் குணித்த மேலோர்;
    சீலமும், புகழ்க்கு வேண்டும் செய்கையும், தெரிந்துகொண்டு,
    பால்வரும் உறுதி யாவும் தலைவற்குப் பயக்கும் நீரார்; 7

  16. தம்முயிர்க்கு இறுதி எண்ணார்; தலைமகன் வெகுண்ட போதும்,
    வெம்மையைத் தாங்கி, நீதி விடாதுநின்று, உரைக்கும் வீரர்;
    செம்மையின் திறம்பல் செல்லாத் தோற்றத்தார்; தெரியும் காலம்
    மும்மையும் உணர வல்லார்; ஒருமையே மொழியும் நீரார். 8

  17. நல்லவும் தீயவும் நாடி, நாயகற்கு
    எல்லை இல் மருத்துவன் இயல்பின் எண்ணுவார்;
    ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின்,
    தொல்லை நல்வினை என உதவும் சூழ்ச்சியார். 9

  18. அமைச்சர்கள் வருகை

  19. அறுபதினாயிரர் எனினும், ஆண்தகைக்கு
    உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம்;
    பெறல் அருஞ் சூழ்ச்சியர்; திருவின் பெட்பினர்;-
    மறி திரைக் கடல் என வந்து சுற்றினார். 10

  20. அமைச்சர்கள் வசிட்டனையும் மன்னரையும் வணங்குதல்

  21. முறைமையின் எய்தினர் முந்தி, அந்தம் இல்
    அறிவனை வணங்கி, தம் அரசைக் கைதொழுது,
    இறையிடை வரன்முறை ஏறி, ஏற்ற சொல்
    துறை அறி பெருமையான் அருளும் சூடினார். 11

  22. தயரதன் தன் மனக் கருத்தை வெளியிடுதல்

  23. அன்னவர், அருள் அமைந்து இருந்த ஆண்டையில்,
    மன்னனும், அவர் முகம் மரபின் நோக்கினான்;
    உன்னிய அரும் பெறல் உறுதி ஒன்று உளது;
    என் உணர்வு அனைய நீர் இனிது கேட்டிரால்! 12

  24. வெய்யவன் குல முதல் வேந்தர், மேலவர்,
    செய்கையின் ஒரு முறை திறம்பல் இன்றியே,
    வையம் என் புயத்திடை, நுங்கள் மாட்சியால்,
    ஐ-இரண்டு ஆயிரத்து ஆறு தாங்கினேன். 13

  25. கன்னியர்க்கு அமைவரும் கற்பின், மாநிலம்
    தன்னை இத் தகைதர தருமம் கைதர,
    மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்;
    என்னுயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன். 14

  26. விரும்பிய மூப்பெனும் வீடு கண்டயான்
    இரும்பியல் அனந்தனும், இசைந்த யானையும்
    பெரும்பெயர்க் கிரிகளும் பெயர, தாங்கிய
    அரும்பொறை இனிச்சிறிது ஆற்ற ஆற்றலேன். 15

  27. நம்குலக் குரவர்கள், நவையின் நீங்கினார்
    தம் குலப் புதல்வரே தரணி தாங்கப் போய்,
    வெங் குலப் புலன் கெட, வீடு நண்ணினார்;
    எங்கு உலப்புறுவர், என்றுஎண்ணி, நோக்குகேன். 16

  28. வெள்ளநீர் உலகினில் விண்ணில் நாகரில்,
    தள்ளரும் பகையெலாம் தவிர்த்து நின்றயான்
    கள்ளரில் கரந்துறை காமம் ஆதியாம்
    உள்ளுறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ? 17

  29. பஞ்சிமென் தளிரடிப் பாவை கோல்கொள
    வெஞ்சினத்து அவுணத்தேர் பத்தும் வென்றுளேற்கு,
    எஞ்சலில் மனமெனும் இழுதை ஏறிய
    அஞ்சுதேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ? 18

  30. ஒட்டிய பகைஞர்வந்து உருத்த போரிடைப்
    பட்டவர் அல்லரேல் பரம் ஞானம்போய்த்
    தெட்டவர் அல்லரேல் செல்வம் ஈண்டு என
    விட்டவர் அல்லரேல் யாவர் வீடுளார். 19

  31. இறப்பெனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும்
    மறப்பெனும் அதனின்மேல் கேடு மற்றுண்டோ ?
    துறப்பெனும் தெப்பமே துணைசெய் யாவிடின்
    பிறப்பெனும் பெருங்கடல் பிழைக்க லாகுமோ? 20

  32. அருஞ்சிறப்பு அமைவரும் துறவும் அவ்வழித்
    தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய், வரும்
    பெருஞ் சிறை உள எனின், பிறவி என்னும் இவ்
    இருஞ் சிறை கடத்தலின் இனியது யாவதோ? 21

  33. இனியது போலும் இவ் அரசை எண்ணுமோ
    துனி வரு புலன் எனத் தொடர்ந்து தோற்கலா
    நனி வரும் பெரும்பகை நவையின் நீங்கிஅத்
    தனி அரசாட்சியில் தாழும் உள்ளமே? 22

  34. உம்மையான் உடைமையின் உலகம் யாவையும்
    செம்மையின் ஓம்பிநல் லறமும் செய்தனென்;
    இம்மையின் உதவி, நல்லிசை நடாயநீர்
    அம்மையும் உதவுதற்கு அமைய வேண்டுமால். 23

  35. இழைத்த தொல் வினையையும் கடக்க எண்ணுதல்
    தழைத்த பேர் அருளுடைத் தவத்தின் ஆகுமேல்,
    குழைத்தோர் அமுதுடைக் கோரம் நீக்கி, வேறு
    அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ? 24

  36. கச்சையம் கடக் கரிக் கழுத்தின்கண் உறப்
    பிச்சமும் கவிகையும் பெய்யும் இன்னிழல்
    நிச்சயம் அன்றுஎனின் நெடிது நாளுண்ட
    எச்சிலை நுகருவது இன்பம் ஆவதோ? 25

  37. மைந்தரை இன்மையின் வரம்பில் காலமும்
    நொந்தனென் இராமன் என் நோவை நீக்குவான்
    வந்தனன் இனியவன் வருந்தயான் பிழைத்து
    உய்ந்தனென் போவதோர் உறுதி எண்ணினேன். 26

  38. இறந்திலன் செருக்களத்து இராமன் தாதை; தான்,
    அறந்தலை நிரம்பமூப் படைந்த பின்னரும்
    துறந்திலன் என்பதோர் சொல்லுண் டானபின்
    பிறந்திலன் என்பதில் பிறிதுண் டாகுமோ? 27

  39. பெருமகன் என்வயின் பிறக்கச் சீதையாம்
    திருமகள் மணவினை தெரியக் கண்டயான்
    அருமகன் நிறைகுணத்து அவனி மாதுஎனும்
    ஒருமகள் மணமும்கண்டு உவப்ப உன்னினேன். 28

  40. நிவப்புறு நிலனெனும் நிரம்பு நங்கையும்
    சிவப்புறு மலர்மிசைச் சிறந்த செல்வியும்
    உவப்புறு கணவனை உயிரின் எய்திய
    தவப்பயன் தாழ்ப்பது தருமம் அன்றரோ. 29

  41. ஆதலால், இராமனுக்கு அரசை நல்கி இப்
    பேதைமைத் தாய்வரும் பிறப்பை நீக்குறும்
    மாதவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன்
    யாதுநும் கருத்து? என இனைய கூறினான். 30

  42. தயரதன் சொல்லைக் கேட்ட அமைச்சர்களின் நிலை

  43. திரண்ட தோளினன் இப்படிச் செப்பலும் சிந்தை
    புரண்டு மீதிடப் பொங்கிய உவகையர், ஆங்கே
    வெருண்டு, மன்னவன் பிரிவெனும் விம்முறு நிலையால்,
    இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆவென இருந்தார். 31

  44. அன்ன ராயினும் அரசனுக்கு, அதுவலது உறுதி
    பின்னர் இல்லெனக் கருதியும், பெருநில வரைப்பின்
    மன்னும் மன்னுயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை
    என்ன உன்னியும், விதியது வலியினும், இசைந்தார். 32

  45. வசிட்டன் உரை

  46. இருந்த மந்திரக் கிழவர்தம் எண்ணமும் மகன்பால்
    பரிந்த சிந்தை அம் மன்னவன் கருதிய பயனும்,
    பொருந்து மன்னுயிர்க்கு உறுதியும், பொதுவுற நோக்கித்
    தெரிந்து, நான்மறை திசைமுகன் திருமகன் செப்பும். 33

  47. நிருப! நின்குல மன்னவர் நேமிபண்டு உருட்டிப்
    பெருமை எய்தினர்; யாவரே இராமனைப் பெற்றார்?
    கருமமும் இது; கற்று உணர்ந்தோய்க்கு இனிக் கடவ
    தருமமும் இது; தக்கதே உரைத்தனை;- தகவோய்! 34

  48. புண்ணியந்தொடர் வேள்விகள் யாவையும் புரிந்த
    அண்ணலே! இனி அருந்தவம் இயற்றவும் அடுக்கும்;
    வண்ண மேகலை நிலமகள், மற்று, உனைப் பிரிந்து
    கண் இழந்திலள் எனச் செயும், நீ தந்த கழலோன். 35

  49. புறத்து, நாமொரு பொருளினிப் புகல்கின்றது எவனோ,
    அறத்தின் மூர்த்திவந்து அவதரித் தான் என்ப தல்லால்?
    பிறத்தி யாவையும் காத்தவை பின்னுறத் துடைக்கும்
    திறத்து மூவரும் திருந்திடத் திருத்தும், அத் திறலோன். 36

  50. பொன் உயிர்த்த பூ மடந்தையும் புவியெனும் திருவும்
    இன்னுயிர்த்துணை இவன் என நினைக்கின்ற இராமன்
    தன் உயிர்க்கு என்கை புல்லிது; தற்பயந்து எடுத்த
    உன்னுயிர்க்கென நல்லன், மன்னுயிர்க்கெலாம் உரவோய்! 37

  51. வாரம் என் இனிப் பகர்வது? வைகலும் அனையான்
    பேரினால்வரும் இடையூறு பெயர்கின்ற பயத்தால்,
    வீர! நின்குல மைந்தனை வேதியர் முதலோர்
    யாரும் யாம்செய்த நல்லறப் பயன் என இருப்பார். 38

  52. மண்ணினும் நல்லள்; மலர்மகள், கலைமகள், கலையூர்
    பெண்ணினும் நல்லள்; பெரும்புகழ்ச் சனகியோ நல்லள்-
    கண்ணினும் நல்லன்; கற்றவர், கற்றிலா தவரும்,
    உண்ணும் நீரினும், உயிரினும், அவனையே உவப்பார். 39

  53. மனிதர், வானவர், மற்றுளோர், அற்றம்காத்து அளிப்பார்
    இனிய மன்னுயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை;
    அனையது ஆதலின், அரச! நிற்கு உறு பொருள் அறியின்,
    புனித மாதவம் அல்லது ஒன்று இல் எனப் புகன்றான். 40

  54. வசிட்டனின் உரை கேட்டு தயரதன் மகிழ்ந்துரைத்தல்

  55. மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும், மகனைப்
    பெற்ற அன்றினும், பிஞ்ஞகன் பிடிக்கும் அப் பெருவில்
    இற்ற அன்றினும், எறிமழு வாள் அவன் இழுக்கம்
    உற்ற அன்றினும், பெரியதோர் உவகையன் ஆனான். 41

  56. அனையது ஆகிய உவகையன், கண்கள்நீர் அரும்ப,
    முனிவன் மா மலர்ப் பாதங்கள் முறைமையின் இறைஞ்சி,
    இனிய சொல்லினை; எம்பெரு மான் அருள் அன்றோ,
    தனியன் நானிலம் தாங்கியது; அவற்கு இது தகாதோ? 42

  57. எந்தை! நீ உவந்து இதம்சொல எங்குலத்து அரசர்
    அந்தம் இல் அரும் பெரும்புகழ் அவனியில் நிறுவி
    முந்து வேள்வியும் முடித்துத்தம் இருவினை முடித்தார்
    வந்தது அவ்வருள் எனக்கும் என்று உரைசெய்து மகிழ்ந்தான். 43

  58. அமைச்சர்களின் கருத்தை சுமந்திரன் கூறுதல்

  59. பழுதில் மாதவன், பின் ஒன்றும் பணித்திலன் இருந்தான்
    முழுதும் எண்ணுறும் மந்திரக் கிழவர்தம் முகத்தால்
    எழுதி நீட்டிய இங்கிதம் இறைமகற்கு ஏற்கத்
    தொழுத கையினன், சுமந்திரன் முன்னின்று சொல்லும். 44

  60. உறத்தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனத்தைத்
    துறத்தி நீ எனும் சொல்சுடும் நின்குலத் தொல்லோர்
    மறத்தல் செய்கிலாத் தருமத்தை மறப்பதும் வழக்கன்று
    அறத்தின் ஊங்குஇனிக் கொடிதுஎனல் ஆவதுஒன்று யாதோ. 45

  61. புரசை மாக்கரி நிருபர்க்கும், புரத்து உறைவோர்க்கும்,
    உரைசெய் மந்திரக் கிழவர்க்கும், முனிவர்க்கும், உள்ளம்
    முரசம் ஆர்ப்ப, நின் முதல்மணிப் புதல்வனை, முறையால்
    அரசனாக்கிப்பின் அப்புறத்து அடுத்தது புரிவாய்! 46

  62. தயரதன் இராமனை அழைத்துவரக் கூற சுமந்திரன் செல்லுதல்

  63. என்ற வாசகம், சுமந்திரன் இயம்பலும், இறைவன்,
    நன்று சொல்லினை; நம்பியை நளி முடி சூட்டி
    நின்று, நின்றது செய்வது; விரைவினில் நீயே
    சென்று, கொண்டுஅணை, திருமகள் கொழுநனை என்றான். 47

  64. சுமந்திரன் இராமனைத் திருமனையில் கண்டு செய்தி தெரிவித்தல்

  65. அலங்கல் மன்னனை, அடிதொழுது அவன்மனம் அனையான்,
    விலங்கல் மாளிகை வீதியின் விரைவொடு சென்றான்,
    தலங்கள் யாவையும் பெற்றனன் ஆம் எனத் தளிர்ப்பான்
    பொலங்கொள் தேரொடும் இராகவன் திருமனை புக்கான். 48

  66. பெண்ணின் இன்னமுது அன்னவள் தன்னொடும், பிரியா
    வண்ண வெஞ்சிலைக் குரிசிலும் மருங்கினி திருப்ப
    அண்ணல் ஆண்டிருந் தான்; அழகு அருநறவு எனத்தன்
    கண்ணும் உள்ளமும் வண்டெனக் களிப்புறக் கண்டான். 49

  67. தந்தையின் கட்டளை கேட்டு இராமன் தேர் ஏறுதல்

  68. கண்டு, கைதொழுது, ஐய, இக் கடலிடைக் கிழவோன்,
    உண்டு ஒர் காரியம்; வருக! என, உரைத்தனன் எனலும்,
    புண்டரீகக் கண் புரவலன் பொருக்கென எழுந்து, ஓர்
    கொண்டல்போல் அவன், கொடி நெடுந் தேர்மிசைக் கொண்டான். 50

  69. இராமன் தேர்மீது செல்லுதல்

  70. முறையின் மொய்ம்முகில் எனமுரசு ஆர்த்திட, மடவார்
    இறைகழன்று சங்கார்ந்திட, இமையவர், எங்கள்
    குறைமுடிந்தது என்று ஆர்த்திடக் குஞ்சியைச் சூழ்ந்த
    நறை அலங்கல்வண்டு ஆர்த்திடத் தேர்மிசை நடந்தான். 51

  71. இராமன் தேரில் செல்வதைக் கண்ட பெண்களின் நிலை

  72. பணை நிரந்தன; பாட்டு ஒலி நிரந்தன; அனங்கன்
    கணை நிரந்தன; நாண் ஒலி கறங்கின; நிறைப்பேர்
    அணை நிரந்தன, அறிவு எனும் பெரும் புனல்; அனையார்,
    பிணை நிரந்தெனப் பரந்தனர்; நாணமும் பிரிந்தார். 52

  73. நீள் எழுத் தொடர் வாயிலில், குழையொடு நிகிழ்ந்த
    ஆளகத்தினோடு அரமியத் தலத்தினும் அலர்ந்த;
    வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க,
    சாளரத்தினும் பூத்தன, தாமரை மலர்கள். 53

  74. மண்டலம் தரு மதி கெழு, மழை முகில் அனைய,
    அண்டர் நாயகன் வரை புரை அகலத்துள் அலங்கல்,
    தொண்டை வாய்ச்சியர் நிறையொடும், நாணொடும், தொடர்ந்த
    கெண்டையும் உள; கிளை பயில் வண்டொடும் கிடந்த. 54

  75. சரிந்த பூவுள, மழையொடு கலை உறத் தாழ்வ;
    பரிந்த பூவுள, பனிக் கடை முத்துஇனம் படைப்ப;
    எரிந்த பூவுள, இள முலை இழை இடை நுழைய;
    விரிந்த பூவுள, மீனுடை வானின்றும் வீழ்வ. 55

  76. வள் உறை கழித்து ஒளிர்வன வாள் நிமிர் மதியம்
    தள்ளுறச் சுமந்து, எழுதரும் தமனியக் கொம்பில்,-
    புள்ளி நுண் பனி பொடிப்பன, பொன்னிடைப் பொதிந்த,
    எள்ளுடைப் பொரி விரவின, -உள சில இளநீர். 56

  77. இராமன் தம்பியோடு தயரதன் இருந்த இடத்தை அடைதல்

  78. ஆயது, அவ்வழி நிகழ்தர, ஆடவர் எல்லாம்
    தாயை முன்னிய கன்று என நின்று உயிர் தளிர்ப்ப,
    தூய தம்பியும், தானும், அச் சுமந்திரன் தேர்மேல்
    போய், அகம் குளிர் புரவலன் இருந்துழிப் புக்கான். 57

  79. தயரதன் இராமனைத் தழுவுதல்

  80. மாதவன் தனை வரன்முறை வணங்கி, வாள் உழவன்
    பாத பங்கயம் பணிந்தனன்; பணிதலும், அனையான்,
    காதல் பொங்கிட, கண் பனி உகுத்திட, கனி வாய்ச்
    சீதை கொண்கனைத் திரு உறை மார்பகம் சேர்த்தான். 58

  81. நலம் கொள் மைந்தனைத் தழுவினன் என்பது என்? நளிநீர்
    நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்,
    விலங்கல் அன்ன திண் தோளையும், மெய்த் திரு இருக்கும்
    அலங்கல் மார்பையும், தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான். 59

  82. தயரதன் இராமனிடம் தன் உளக் கருத்தைக் கூறுதல்

  83. ஆண்டு, தன் மருங்கு இரீஇ, உவந்து, அன்புற நோக்கி,
    பூண்ட போர் மழு உடையவன் பெரும் புகழ் குறுக
    நீந்த தோள் ஐய! நிற் பயந்தெடுத்த யான், நின்னை
    வேண்டி, எய்திட விழைவது ஒன்று உளது என, விளம்பும். 60

  84. ஐய! சாலவும் அலசினென்; அரும்பெரு மூப்பும்
    மெய்யது ஆயது; வியல் இடப் பெரும் பரம் விசித்த
    தொய்யல் மா நிலச் சுமை உறு சிறை துறந்து, இனி யான்
    உய்யல் ஆவது ஓர் நெறி புக, உதவிட வேண்டும். 61

  85. உரிமை மைந்தரைப் பெறுகின்றது, உறுதுயர் நீங்கி,
    இருமையும் பெறற்கு என்பது பெரியவர் இயற்கை;
    தருமம் அன்ன நின் -தந்த யான், தளர்வது தகவோ?
    கருமம் என்வயின் செய்யின், என் கட்டுரை கோடி. 62

  86. மைந்த! நம் குல மரபினில் மணி முடி வேந்தர்,
    தம் தம் மக்களே கடன்முறை நெடு நிலம் தாங்க,
    ஐந்தொடு ஆகிய முப் பகை மருங்கு அற அகற்றி,
    உய்ந்து போயினர்; ஊழி நின்று எண்ணினும் உலவார். 63

  87. முன்னை ஊழ்வினைப் பயத்தினும், முற்றிய வேள்விப்
    பின்னை எய்திய நலத்தினும், அரிதினின் பெற்றேன்;
    இன்னம், யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால்,
    நின்னை ஈன்றுள பயத்தினின் நிரம்புவது யாதோ? 64

  88. ஒருத்தலைப் பரத்து ஒருத்தலைப் பங்குவின் ஊர்தி
    எருத்தின், ஈங்கு நின்று, இயல்வரக் குழைந்து, இடர் உழக்கும்
    வருத்தம் நீங்கி, அவ் வரம்பு அறு திருவினை மருவும்
    அருந்தி உண்டு, எனக்கு; ஐய! ஈது அருளிடவேண்டும். 65

  89. ஆளும் நன்னெறிக்கு அமைவரும் அமைதி இன்று ஆக
    நாளும் நம்குல நாயகன் நறைவிரி கமலத்
    தாளின் நல்கிய கங்கையைத் தந்துதந் தையரை
    மீள்வில் இலா உலகு ஏற்றினான் ஒருமகன் மேனாள். 66

  90. மன்னர் வானவர் அல்லர்; மேல் வானவர்க்கு அரசாம்
    பொன்னின் வார்கழல் புரந்தரன் போலியர் அல்லர்;
    பின்னும், மாதவம் தொடங்கிநோன்பு இழைத்தவர் பிறரார்
    சொல்ம றாமகன் பெற்றவர் அருந்துயர் துறந்தார். 67

  91. அனையது ஆதலின், அருந்துயர் பெரும்பரம் அரசன்
    வினையின் என்வயின் வைத்தனன் எனக்கொளல் வேண்டா
    புனையும் மாமுடி புனைந்திந்த நல்லறம் புரக்க
    நினையல் வேண்டும் யான் நின்வயிற் பெறுவதுஈது என்றான். 68

  92. தயரதன் கட்டளையை ஏற்று இராமன் முடிசூடிக் கொள்ள இசைதல்

  93. தாதை அப் பரிசு உரைசெய, தாமரைக் கண்ணன்
    காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்; கடன் இது என்று உணர்ந்தும்,
    யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ,
    நீதி எற்கு? என நினைந்தும், அப் பணி தலைநின்றான். 69

  94. இராமன் உடன்பட்டதை அறிந்து தயரதன் மகிழ்ந்து, தன் அரண்மனை போதல்

  95. குருசில் சிந்தையை மனக்கொண்ட கொற்ற வெண்குடையான்,
    தருதி இவ் வரம் எனச் சொலி, உயிர் உறத் தழுவி,
    சுருதி அன்ன தன் மந்திரச் சுற்றமும் சுற்ற,
    பொரு இல் மேருவும் பொரு அருங் கோயில் போய்ப் புக்கான். 70

  96. இராமன் தன் அரண்மனை அடைதல்

  97. நிவந்த அந்தணர் நெடுந்தகை மன்னவர் நகரத்து
    உவந்த மைந்தர்கள், மடந்தையர், உழைஉழை தொடரச்
    சுமந்திரன் தடந் தேர்மிசை, சுந்தரத் திரள் தோள்
    அமைந்த மைந்தனும், தன் நெடுங் கோயில் சென்று அடைந்தான். 71

  98. தயரதன் மன்னர்களுக்கு செய்தி தெரிவிக்குமாறு ஓலை போக்குதல்

  99. வென்றி வேந்தரை வருக என உவணம் வீற்றிருந்த
    பொன் திணிந்த தோட்டு அரும் பெறல் இலச்சினை போக்கி,
    நன்று சித்திர நளிர் முடி கவித்தற்கு, நல்லோய்!
    சென்று, வேண்டுவ வரன்முறை அமைக்க எனச் செப்ப, 72

  100. வந்திருந்த மன்னர்களிடம் இராமனுக்கு முடிபுனைவிக்கக் இருப்பதை தயரதன் தெரிவித்தல்

  101. உரிய மாதவன் ஒள்ளிதென்று உவந்தனன், விரைந்தோர்
    பொருவில் தேர்மிசை அந்தணர் குழாத்தொடும் போக-
    நிருபர்! கேண்மின்கள் இராமற்கு நெறிமுறை மையினால்
    திருவும் பூமியும் சிந்தையில் சிறந்தன என்றான். 73

  102. தயரதன் கூறியதைக் கேட்ட மன்னர்கள் மகிழ்து தம் கருத்தை தெரிவித்தல்

  103. இறைவன் சொல்லெனும் இன் நறவு அருந்தினர் யாரும்,
    முறையில் நின்றிலர்; முந்துறு களியிடை மூழ்கி,
    நிறையும் நெஞ்சிடை உவகை போய் மயிர் வழி நிமிர,
    உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார். 74

  104. ஒத்த சிந்தையர் உவகையின்; ஒருவரின் ஒருவர்
    தத்தமக்கு உற்ற அரசெனத் தழைக்கின்ற மனத்தர்;
    முத்த வெண்குடை மன்னனை முறை முறை தொழுதார்;
    அத்த! நன்று என, அன்பினோடு அறிவிப்பது ஆனார். 75

  105. மூவெழு முறைமை எம் குலங்கள் முற்றுறப்
    பூவெழு மழுவினால் பொருது போக்கிய
    சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு
    ஆவ இவ்வுலகம்; இஃது அறன் என்றார் அரோ. 76

  106. மன்னர்களின் கருத்தை மீண்டும் அறிய தயரதன் வினவுதல்

  107. வேறிலா மன்னரும் விரும்பி, இன்னது
    கூறினார்; அது மனம் கொண்ட கொற்றவன்,
    ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான்,
    மாறும் ஓர் அளவை சால் வாய்மை கூறினான். 77

  108. மகன்வயின் அன்பினால் மயங்கி, யான் இது
    புகல, நீர் புகன்ற இப் பொம்மல் வாசகம்,
    உகவையின் மொழிந்ததோ? உள்ளம் நோக்கியோ?
    தகவு என நினைந்தது எத் தன்மையால்? என்றான். 78

  109. இராமனுக்கு முடிசூட்ட இயைந்ததற்கான காரணத்தை மன்னர்கள் இயம்புதல்

  110. இவ்வகை உரைசெய இருந்த வேந்துஅவை,
    செவ்வியோய்! நின் திருமகற்குத் தேயத்தோர்
    அவ்வவர்க்கு, அவ்வவர் ஆற்ற ஆற்றும்
    எவ்வம் இல் அன்பினை, இனிது கேள் எனா, 79

  111. தானமும், தருமமும், தகவும், தன்மைசேர்
    ஞானமும், நல்லவர்ப் பேணும் நன்மையும்,
    மானவ! எவையும் நின் மகற்கு வைகலும்
    ஈனமில் செல்வம் வந்து இயைக என்னவே. 80

  112. ஊருணி நிறையவும், உதவும் மாடுயர்
    பார்கெழு பயன்மரம் பழுத்தற்று ஆகவும்
    கார் மழை பொழியவும் கழனி பாய்நதி
    வார்புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார்? 81

  113. பனை அவாம் நெடுங்கரப் பரும யானையாய்!
    நினையவாம் தன்மையை நிமிர்ந்த மன்னுயிர்க்கு,
    எனையவாறு அன்பினன் இராமன், ஈண்டு அவற்கு
    அனையவாறு அன்பின அவையும் என்றனர். 82

  114. மன்னர்கள் கூறியதைக் கேட்டு தயரதன் மகிழ்ந்துரைத்தல்

  115. மொழிந்தது கேட்டலும், மொய்த்து நெஞ்சினைப்
    பொழிந்த பேர் உவகையன், பொங்கு காதலன்,
    கழிந்தது ஓர் இடரினன் எனக் களிக்கும் சிந்தையன்,
    வழிந்த கண்ணீரினன், மன்னன் கூறுவான்: 83

  116. தயரதன் இராமனை மன்னர்க்கு அடைக்கலம் எனல்

  117. செம்மையின், தருமத்தின், செயலின், தீங்கின்பால்
    வெம்மையின் ஒழுக்கத்தின், மேன்மை மேவினீர்,
    என்மகன் என்பதுஎன்? நெறியின், ஈங்கு, இவன்
    நும் மகன்; கையடை; நோக்கும் ஈங்கு என்றான். 84

  118. தயரதன் முடிசூட்டு விழாவிற்கு நல்ல நாள் பார்த்தல்

  119. அரசவை விடுத்தபின், ஆணை மன்னவன்,
    புரை தபு நாளொடு பொழுது நோக்குவான்
    உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு, ஒரு
    வரை பொரு மண்டபம் மருங்கு போயினான். 85

  120. மிகைப் பாடல்கள்

  121. மன்னனே! அவனியை மகனுக்கு ஈந்துநீ
    பன்னரும் தவம்புரி பருவம் ஈது எனக்
    கன்ன மூலத்தினில் கழற வந்தென
    மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர் 85-2

  122. தீங்கு இழை இராவணன் செய்த தீமைதான்
    ஆங்கொரு நரையது ஆய் அணுகிற் றாம் எனப்
    பாங்கில்வந்து இடுநரை படிமக் கண்ணாடி
    ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்.
    [இவ் இரு பாடல்களும் முதல் பாடலின்
    முன் படலத்தின் துவக்கத்தில் உள்ளன] 85-3


  123. எய்திய முனிவரன் இணைகொள் தாமரை
    செய்ய பூங் கழலவன் சென்னி சேர்ந்த பின்,
    வையகத்து அரசரும் மதி வல்லாளரும்
    வெய்தினில் வருக என மேயினான் அரோ. 4-1

  124. ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைவினன் ஆகி,
    நாளும் நல் தவம் புரிந்து, நல் நளிர் மதிச் சடையோன்
    தாளில் பூசையின் கங்கையைத் தந்து, தந்தையரை
    மீள்வு இல் இன் உலகு ஏற்றினன் ஒரு மகன், மேல்நாள். 66-1

  125. நறைக் குழற் சீதையும், ஞால நங்கையும்,
    மறுத்தும், இங்கு ஒருவற்கு மணத்தின்பாலரோ-
    கறுத்த மா மிடறுடைக் கடவுள் கால வில்
    இறுத்தவற்கு அன்றி? என்று இரட்டர் கூறினார். 76-1

  126. ஏத்த வந்து உலகு எலாம் ஈன்ற வேந்தனைப்
    பூத்தவன் அல்லனேல், புனித வேள்வியைக்
    காத்தவன் உலகினைக் காத்தல் நன்று என,
    வேத்தவை வியப்புற, விதர்ப்பர் கூறினார். 76-2

  127. பெருமையால் உலகினைப் பின்னும் முன்னும் நின்று
    உரிமையோடு ஓம்புதற்கு உரிமை பூண்ட அத்
    தருமமே தாங்கலில் தக்கது; ஈண்டு ஒரு
    கருமம் வேறு இலது எனக் கலிங்கர் கூறினார். 76-3

  128. கேடு அகல் படியினைக் கெடுத்து, கேடு இலாத்
    தாடைகை வலிக்கு ஒரு சரம் அன்று ஏவிய
    ஆடக வில்லிக்கே ஆக, பார்! எனாத்
    தோடு அவிழ் மலர் முடித் துருக்கர் சொல்லினர். 76-4

  129. கற்ற நான்மறையவர் கண்ணை, மன்னுயிர்
    பெற்ற தாய் என அருள் பிறக்கும் வாரியை,
    உற்றதேல் உலகினில் உறுதி யாது? என,
    கொற்றவேல் கனை கழல் குருக்கள் கூறினார். 76-5

  130. வாய் நனி புரந்த மா மனுவின் நூல் முறைத்
    தாய் நனி புரந்தனை, தரும வேலினாய்!
    நீ நனி புரத்தலின் நெடிது காலம் நின்
    சேய் நனி புரக்க! எனத் தெலுங்கர் கூறினார். 76-6

  131. வையமும் வானமும் மதியும் ஞாயிறும்
    எய்திய எய்துப; திகழும் யாண்டு எலாம்,
    நெய் தவழ் வேலினாய்! நிற்கும் வாசகம்;
    செய் தவம் பெரிது! எனச் சேரர் கூறினார். 76-7

  132. பேர் இசை பெற்றனை; பெறாதது என், இனி?
    சீரியது எண்ணினை; செப்புகின்றது என்?
    ஆரிய! நம் குடிக்கு அதிப! நீயும் ஒர்
    சூரியன் ஆம் எனச் சோழர் சொல்லினார். 76-8

  133. ஒன்றிய உவகையர்; ஒருங்கு சிந்தையர்
    தென் தமிழ் சேண் உற வளர்த்த தென்னரும்,
    என்றும் நின் புகழொடு தருமம் ஏமுற,
    நின்றது நிலை என நினைந்து கூறினார். 76-9

  134. வாள் தொழில் உழவ! நீ உலகை வைகலும்
    ஊட்டினை அருள் அமுது; உரிமை மைந்தனைப்
    பூட்டினை ஆதலின், பொரு இல் நல் நெறி
    காட்டினை; நன்று எனக் கங்கர் கூறினர். 76-10

  135. தொழு கழல் வேந்த! நின் தொல் குலத்துளோர்
    முழு முதல் இழித்தகை முறைமை ஆக்கி, ஈண்டு
    எழு முகில் வண்ணனுக்கு அளித்த இச் செல்வம்
    விழுமிது, பெரிது! என மிலேச்சர் கூறினார். 76-11

  136. கொங்கு அலர் நறு விரைக் கோதை மோலியாய்!
    சங்க நீர் உலகத்துள், தவத்தின் தன்மையால்,
    அங்கணன் அரசு செய்தருளும் ஆயிடின் -
    சிங்களர்-இங்கு இதில் சிறந்தது இல் என்றார். 76-12

  137. ஆதியும் மனுவும் நின் அரிய மைந்தற்குப்
    பாதியும் ஆகிலன்; பரிந்து வாழ்த்தும் நல்
    வேதியர் தவப் பயன் விளைந்ததாம் என,
    சேதியர் சிந்தனை தெரியச் செப்பினார். 76-13

  138. அளம் படு குரை கடல் அகழி ஏழுடை
    வளம் படு நெடு நில மன்னர் மன்னனே!
    உளம் படிந்து உயிர் எலாம் உவப்பது ஓர் பொருள்
    விளம்பினை பெரிது! என விராடர் கூறினார். 76-14

  139. அயோத்தியா காண்டம்

  140. 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்




  141. இராமன் முடிசூடப்படுவதை கோசலையிடம் அறிவிக்க
    மங்கையர் நால்வர் மகிழ்வுடன் செல்லுதல்

  142. ஆண்ட அந்நிலை ஆக - அறிந்தவர்
    பூண்ட காதலர், பூட்டு அவிழ் கொங்கையர்,
    நீண்ட கூந்தலர், நீள் கலை தாங்கலர்,
    ஈண்ட ஓடினர், இட்டு இடை உற்றிலர். 1

  143. ஆடுகின்றனர்; பண் அடைவு இன்றியே
    பாடுகின்றனர்; பார்த்தவர்க்கே கரம்
    சூடுகின்றனர்; சொல்லுவது ஓர்கிலர்;
    மாடு சென்றனர்; - மங்கையர் நால்வரே. 2

  144. மங்கையரிடம் மகிழ்வுக்கான காரணத்தை கோசலை வினாவுதல்

  145. கண்ட மாதரைக் காதலின் நோக்கினாள்,
    கொண்டல் வண்ணனை நல்கிய கோசலை;
    உண்டு பேருவ கைப்பொருள் அன்னது
    தொண்டை வாயினிர்! சொல்லுமின் ஈண்டு! என்றாள். 3

  146. மங்கையர் கோசலைக்கு செய்தி அறிவித்தல்

  147. மன் நெடுங் கழல் வந்து வணங்கிட,
    பல் நெடும் பகல் பார் அளிப்பாய்! என,
    நின் நெடும் புதல்வன் தனை, நேமியான்,
    தொல் நெடும் முடி சூட்டுகின்றான் என்றார். 4

  148. கோசலையின் மன நிலை

  149. சிறக்கும், செல்வம் மகற்கு என, சிந்தையில்
    பிறக்கும் பேர் உவகைக் கடல் பெட்பு அற,
    வறக்கும் மா வடவைக் கனல் ஆனதால் -
    துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே. 5

  150. செய்தி சொன்னவர்க்கு பரிசு வழங்கி கோசலை சுமித்திரையுடன் கோயிலுக்குப் போதல்

  151. அன்னவளாயும், அரும்பெறல் ஆரமும்,
    நல் நிதிக்குவையும், நனி நல்கித்தன்
    துன்னு காதல் சுமித்திரை யோடும் போய்,
    மின்னு நேமியன் மேவு இடம் மேவினாள். 6

  152. கோசலை திருமாலின் திருவடிகளை வணங்குதல்

  153. மேவி, மென் மலராள், நிலமாது எனும்
    தேவிமாரொடும் தேவர்கள் யாவர்க்கும்
    ஆவியும், அறிவும், முதல் ஆயவன்
    வாவி மா மலர்ப் பாதம் வணங்கினாள். 7

  154. கோசலை திருமாலை வணங்கி இராமனுக்கு அருள் புரிய வேண்டுதல்

  155. என்வயின் தரும் மைந்தற்கு, இனி, அருள்
    உன்வயத்தது என்றாள் - உலகு யாவையும்
    மன்வயிற்றின் அடக்கிய மாயனைத்
    தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள். 8

  156. கோசலை கோதானம் புரிதல்

  157. என்று இறைஞ்சி, அவ் இந்திரை கேள்வனுக்கு
    ஒன்றும் நான்மறை ஓதிய பூசனை
    நன்று இழைத்து, அவண், நல்ல தவர்க்கு எலாம்
    கன்றுடைப் பசுவின் கடல் நல்கினாள். 9

  158. தயரதன் வசிட்டனை வரவழைத்தல்

  159. பொருந்து நாள் நாளை, நின் புதல்வற்கு என்றனர்,
    திருந்தினார்; அன்ன சொல் கேட்ட செய் கழல்
    பெருந் திண் மால் யானையான், பிழைப்பு இல் செய் தவம்
    வருந்தினான் வருக என, வசிட்டன் எய்தினான். 10

  160. இராமனுக்கு உறுதிமொழிகளை கூறும்படி வசிட்டனை தயரதன் வேண்டுதல்

  161. நல்லியல் மங்கல நாளும் நாளை; அவ்
    வில்லியல் தோள் அவற்கு ஈண்டு வேண்டுவ
    ஒல்லையின் இயற்றி, நல் உறுதி வாய்மையும்
    சொல்லுதி பெரிது எனத் தொழுது சொல்லினான். 11

  162. தம் மனைக்கு வந்த வசிட்டனை இராமன் வரவேற்றல்

  163. முனிவனும், உவகையும் தானும் முந்துவான்,
    மனுகுல நாயகன் வாயில் முன்னினான்;
    அனையவன் வரவு கேட்டு, அலங்கல் வீரனும்,
    இனிது எதிர்கொண்டு, தன் இருக்கை எய்தினான். 12

  164. இராமனிடம் நாளை உனக்கு முடிசூட்டு விழா என வசிட்டன் கூறுதல்

  165. ஒல்கல் இல் தவத்து உத்தமன், ஓது நூல்
    மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான்;
    புல்கு காதல் புரவலன், போர் வலாய்!
    நல்கும் நானிலம் நாளை நினக்கு என்றான். 13

  166. இராமனுக்கு வசிட்டன் கூறிய அறிவுரை

  167. என்று, பின்னும் இராமனை, நோக்கி, நான்
    ஒன்று கூறுவ துண்டு, உறுதிப் பொருள்;
    நன்று கேட்டுக் கடைப்பிடி நன்கு என
    துன்று தார் அவற்கு சொல்லுதல் மேயினான். 14

  168. கரிய மாலினும், கண்ணுத லானினும்,
    உரிய தாமரை மேல் உறைவானினும்,
    விரியும் பூதம் ஒர் ஐந்தினும், மெய்யினும்,
    பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால். 15

  169. அந்தணாளர் முனியவும், ஆங்கு அவர்
    சிந்தையால் அருள் செய்யவும், தேவருள்
    நொந்து உளாரையும், நொய்து உயர்ந்தாரையும்,
    மைந்த! எண்ண, வரம்பும் உண்டாம்கொலோ? 16

  170. அனையர் ஆதலின், ஐய! இவ் வெய்ய தீ-
    வினையின் நீங்கிய மேலவர் தாளிணை
    புனையும் சென்னியை ஆய்ப்புகழ்ந்து ஏத்துதி;
    இனிய கூறிநின்று ஏயின செய்தியால். 17

  171. ஆவதற்கும், அழிவதற்கும், அவர்
    ஏவ, நிற்கும் விதியும் என்றால், இனி
    ஆவது எப்பொருள், இம்மையும் அம்மையும்
    தேவரைப் பரவும் துணை சீர்த்தே? 18

  172. உருளும் நேமியும், ஒண் கவர் எஃகமும்,
    மருள் இல் வாணியும், வல்லவர் மூவர்க்கும்;
    தெருளும் நல் அறமும், மனச் செம்மையும்,
    அருளும் நீத்தபின் ஆவது உண்டாகுமோ? 19

  173. சூது முந்துறச் சொல்லிய மாத்துயர்,
    நீதி மைந்த! நினைக்கிலை; ஆயினும்,
    ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு
    ஓதும் மூலம் அவையென ஓர்தியே? 20

  174. யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
    போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
    தார் ஒடுங்குல் செல்லாது; அது தந்தபின்,
    வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ? 21

  175. கோளும் ஐம்பொறியும் குறைய, பொருள்
    நாளும் கண்டு, நடுக்குறு நோன்மையின்
    ஆளும் அவ் அரசே அரசு; அன்னது,
    வாளின் மேல் வரு மா தவம், மைந்தனே! 22

  176. உமைக்கு நாதற்கும், ஓங்கு புள் ஊர்திக்கும்,
    இமைப்பு இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும்,
    சமைத்த தோள் வலி தாங்கினர் ஆயினும்,
    அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே. 23

  177. என்பு தோலுடையார்க்கும் இலார்க்கும், தம்
    வன்பகைப்புலன் மாசு அற மாய்ப்பது என்?
    முன்பு நின்றுயர் மூன்று உலகத்தினும்
    அன்பின் அல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ? 24

  178. வையம் மன்னுயிர் ஆக அம் மன்னுயிர்
    உய்யத் தாங்கும் உடலன்ன மன்னனுக்கு,
    ஐயம் இன்றி, அறங்கடவாது, அருள்
    மெய்யில் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ? 25

  179. இனிய சொல்லினன்; ஈகையன்; எண்ணினன்;
    வினையன்; தூயன்; விழுமியன்; வென்றியன்;
    நினையும் நீதி நெறிகட வான் எனில்
    அனைய மன்னற்கு அழிவும் உண்டாங்கொலோ? 26

  180. சீலம் அல்லன நீக்கி, செம்பொன் துலைத்
    தாலம் அன்ன தனி நிலை தாங்கிய
    ஞால மன்னற்கு, நல்லவர் நோக்கிய
    காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ? 27

  181. ஓர்வு இல் நல் வினை ஊற்றத்தினார் உரை,
    பேர்வு இல் தொல் விதி பெற்றுளது என்றரோ,
    தீர்வு இல் அன்பு செலுத்தலில், செவ்வியோர்
    ஆர்வம் மன்னவர்க்கு ஆயுதம் ஆவதே. 28

  182. தூம கேது புவிக்கெனத் தோன்றிய
    வாம மேகலை மங்கைய ரால்வரும்
    காமம் இல்லை எனில், கடுங் கேடெனும்
    நாமம் இல்லை; நரகமும் இல்லையே. 29

  183. இராமனை வசிட்டன் திருமால் கோவிலுக்கு அழைத்துச் செல்லுதல்

  184. ஏனை நீதி இனையவும் வையகப்
    போன கற்கு விளம்பி, புலன்கொளீஇ
    ஆன வன்னொடும் ஆயிரம் மௌலியான்
    தானம் நண்ணினன், தத்துவம் நண்ணினான். 30

  185. வசிட்ட முனிவன் இராமனுக்கு உரிய சடங்குகளை இயற்றுதல்

  186. நண்ணி, நாகணை வள்ளலை நான்மறைப்
    புண்ணி யப்புயல் ஆட்டிப், புலமையோர்
    எண்ணும் நல்வினை முற்றுவித்து, ஏற்றினான்,
    வெண் நிறத்த தருப்பை விரித்து அரோ. 31

  187. நகரை அழகு செய்ய தயரதன் ஆணையிடல்

  188. ஏற்றிட, ஆண்தகை இனிது இருந்துழி,
    நூல் தட மார்பனும் நொய்தின் எய்தப் போய்,
    ஆற்றல்சால், அரசனுக்கு அறிவித்தான்; அவன்
    சாற்றுக, நகர் அணி சமைக்க என்றனன். 32

  189. வள்ளுவன் பறை அறிவித்து செய்தி தெரிவித்தல்

  190. ஏவினன் வள்ளுவர், இராமன், நாளையே
    பூமகள் கொழுநனாய், புனையும் மௌலி; இக்
    கோ நகர் அணிக! என, கொட்டும் பேரி அத்
    தேவரும் களி கொள, திரிந்து சாற்றினார். 33

  191. வள்ளுவன் சொல் கேட்ட மக்களின் மகிழ்ச்சி

  192. கவி அமை கீர்த்தி அக் காளை நாளையே
    புவி அமை மணிமுடி புனையும் என்ற சொல்,
    செவி அமை நுகர்ச்சியது எனினும், தேவர்தம்
    அவி அமுது ஆனது; அந் நகர் உளார்க்கெலாம். 34

  193. அயோத்தி மக்கள் மகிழ்ந்து நகரை அலங்கரித்தல்

  194. ஆர்த்தனர்; களித்தனர்; ஆடிப் பாடினர்;
    வேர்த்தனர்; தடித்தனர்; சிலிர்த்து மெய்ம் மயிர்
    போர்த்தனர்; மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்;
    தூர்த்தனர் நீள் நிதி, சொல்லினார்க்கு எலாம். 35

  195. திணி சுடர் இரவியைத் திருத்துமாறுபோல்,
    பணியிடைப் பள்ளியான் பரந்த மார்பிடை
    மணியினை வேகடம் வகுக்குமாறு போல்,
    அணி நகர் அணிந்தனர் - அருத்தி மாக்களே. 36

  196. வெள்ளிய, கரியன, செய்ய, வேறுள
    கொள்ளைவான் கொடிநிரைக் குழாங்கள் தோன்றுவ-
    கள் அவிழ் கோதையான் செல்வம் காணிய
    புள் எலாம் திருநகர் புகுந்த போன்றவே. 37

  197. மங்கையர் குறங்கென வகுத்த வாழைகள்;-
    அங்கவர் கழுத்தெனக் கமுகம் ஆர்ந்தன;
    தங்குஒளி முறுவலின் தாமம் நான்றன;
    கொங்கையின் நிரைத்தன, கனக கும்பமே. 38

  198. முதிர் ஒளி உயிர்த்தன, முடுகிக் காலையில்
    கதிரவன் வேறு ஒரு கவின் கொண்டான் என-
    மதி தொட நிவந்து உயர் மகர தோரணம்
    புதியன அலர்ந்தன புதவ ராசியே. 39

  199. துனி அறு செம்மணித் தூணம் நீல் நிறம்
    வனிதை - ஓர் - கூறினன் வடிவு காட்டின;
    புனை துகில் உறைதொறும் பொலிந்து தோன்றின,
    பனி பொதி கதிர் எனப் பவளத் தூண்களே. 40

  200. முத்தினின் முழு நிலவு எறிப்ப, மொய்ம் மணிப்
    பத்தியின் இள வெயில் பரப்ப, நீலத்தின்
    தொத்து இனம் இருள் வரத் தூண்ட, சோதிட
    வித்தகர் விரித்த நாள் ஒத்த, வீதியே. 41

  201. ஆடல் மான் தேர்க்குழாம் அவனி காணிய
    வீடெனும் உலகின் வீழ் விமானம் போன்றன;
    ஓடைமாக் கடகளிறு உதய மால் வரை
    தேடருங் கதிரொடும் திரிவ போன்றவே. 42

  202. வளங்கெழு திருநகர் வைகும் வைகலும்
    பளிங்குடை நெடுஞ்சுவர் அடுத்த பத்தியில்
    கிளர்ந்துஎரி சுடர்மணி இருளைக் கீறலால்-
    வளர்ந்தில, பிறந்தில, செக்கர் வானமே. 43

  203. பூமழை, புனல்மழை, புது மென் சுண்ணத்தின்
    தூமழை, தரளத்தின் தோம் இல் வெண் மழை,
    தாம் இழை நெரிதலின் தகர்ந்த பொன் மழை,
    மா மழை நிகர்த்தன - மாட வீதியே. 44

  204. காரொடு தொடர் மதக் களிறு சென்றன,
    வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என;
    தாரொடு நடந்தன பிடிகள், தாழ் கலைத்
    தேரொடு நடக்கும் அத் தெரிவைமாரினே. 45

  205. ஏய்ந்து எழு செல்வமும், அழகும், இன்பமும்,
    தேய்ந்தில; அனையது தெரிந்திலாமையால்,
    ஆய்ந்தனர் பெருகவும் - அமரர், இம்பரில்
    போந்தவர், போந்திலம் என்னும் புந்தியால். 46

  206. அயோத்தி அலங்கரிக்கப்படுவதை கூனி காணுதல்

  207. அந் நகர் அணிவுறும் அமலை, வானவர்
    பொன்னகர் இயல்பு எனப் பொலியும் ஏல்வையில்,
    இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்,
    துன்ன அருங் கொடு மனக் கூனி தோன்றினாள். 47

  208. கூனி கோபம் கொண்டு கைகேயின் அரண்மனை அடைதல்

  209. தோன்றிய கூனியும், துடிக்கும் நெஞ்சினாள்;
    ஊன்றிய வெகுளியாள்; உளைக்கும் உள்ளத்தாள்;
    கான்று எரி நயனத்தாள்; கதிக்கும் சொல்லினாள்;
    மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள். 48

  210. தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில்மேல்
    மண்டினாள்-வெகுளியின் மடித்த வாயினாள்,
    பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ்
    உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள். 49

  211. நாற் கடல் படு மணி நளினம் பூத்தது ஓர்
    பாற்கடல் படு திரைப் பவள வல்லியே-
    போல், கடைக் கண் அளி பொழிய, பொங்கு அணை-
    மேல் கிடந்தாள் தனை, விரைவின் எய்தினாள். 50

  212. கைகேயியை கூனி எழுப்புதல்

  213. எய்தி, அக் கேகயன் மடந்தை, ஏடு அவிழ்
    நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால்
    செய்த பேர் உவமைசால் செம் பொன், சீறடி
    கைகளின் தீண்டினள் - காலக் கோள் அனாள். 51

  214. கூனியின் உரை

  215. தீண்டலும் உணர்ந்த அத் தெய்வக் கற்பினாள்,
    நீண்ட கண் அனந்தரும் நீங்குகிற்றிலள்;
    மூண்டு எழு பெரும் பழி முடிக்கும் வெவ் வினை
    தூண்டிட, கட்டுரை சொல்லல் மேயினாள்; 52

  216. அணங்கு, வாள் விட அரா அணுகும் எல்லையும்
    குணங்கெடாது ஒளிவிரி குளிர்வெண் திங்கள்போல்,
    பிணங்குவான் பேரிடர் பிணிக்க நண்ணவும்
    உணங்குவாய் அல்லை; நீ உறங்கு வாய் என்றாள். 53

  217. கைகேயின் மறுமொழி

  218. வெவ்விடம் அனையவள், விளம்ப வேற்கணாள்,
    தெவ்வடு சிலைக்கை என் சிறுவர் செவ்வியர்;
    அவ்வவர் துறைதொறும் அறம் திறம்பவர்;
    எவ்விடம் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு? எனா, 54

  219. பராவரும் புதல்வரைப் பயக்க, யாவரும்
    உராவருந் துயரைவிட்டு, உறுதி காண்பரால்;
    விராவரும் புவிக்கெலாம் வேத மேயன
    இராமனைப் பயத்த எற்கு இடர் உண்டோ ? என்றாள். 55

  220. கோசலை வாழ்ந்தனள் என கூனி கூறலும், கைகேயின் வினாவும்

  221. ஆழ்ந்த பேரன்பினாள் அனைய கூறலும்,
    சூழ்ந்த தீ வினைநிகர் கூனி சொல்லுவாள்,
    வீழ்ந்தது நின்னிலம்; திருவும் வீழ்ந்தது;
    வாழ்ந்தனள் கோசலை, மதியினால் என்றாள். 56

  222. அன்னவள் அவ் உரை உரைப்ப, ஆயிழை
    மன்னவர் மன்னனேல், கணவன், மைந்தனேல்
    பன்ன அரும் பெரும் புகழ்ப் பரதன்; பார்தனில்
    என் இதன்மேல் அவட்கு எய்தும் வாழ்வு? என்றாள். 57

  223. மந்தரை இராமன் முடிசூடுவதால் கோசலைக்கு வரும் வாழ்வை எடுத்து இயம்புதல்

  224. ஆடவர் நகையுற, ஆண்மை மாசு உற,
    தாடகை எனும் பெயர்த் தையலாள் பட,
    கோடிய வரி சிலை இராமன் கோமுடி,
    சூடுவன் நாளை; வாழ்வு இது எனச் சொல்லினாள். 58

  225. இராமன் முடிசூடப்போவதை அறிந்த கைகேயி மனம் மகிழ்தல்

  226. மாற்றம் அஃது உரைசெய, மங்கை உள்ளமும்
    ஆற்றல் சால் கோசலை அறிவும் ஒத்தவால்;
    வேற்றுமை உற்றிலள், வீரன் தாதை புக்கு
    ஏற்று அவள் இருதயத்து இருக்கவே கொலாம்? 59

  227. கைகேயி மந்தரைக்கு மணிமாலை பரிசளித்தல்

  228. ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ,
    தேய்வு இலா முக மதி விளங்கித் தேசுற,
    தூயவள் உவகை போய் மிக, சுடர்க்கு எலாம்
    நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள். 60

  229. கோபம்கொண்ட மந்தரை மாலையை எறிந்து கூறுதல்

  230. தெழித்தனள்; உரப்பினள்; சிறுகண் தீயுக
    விழித்தனள்; வைதனள்; வெய்து உயிர்த்தனள்;
    அழித்தனள்; அழுதனள்; அம்பொன் மாலையால்
    குழித்தனள் நிலத்தை-அக் கொடிய கூனியே. 61

  231. வேதனைக் கூனி, பின் வெகுண்டு நோக்கியே,
    பேதை நீ பித்தி; நிற் - பிறந்த சேயொடும்
    நீ துயர் படுக; நான் நெடிது உன் மாற்றவள்
    தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன் என்றாள். 62

  232. சிவந்த வாய்ச் சீதையும் கரிய செம்மலும்
    நிவந்த ஆசனத்து இனிது இருப்ப, நின் மகன்,
    அவந்தனாய், வெறு நிலத்து இருக்கல் ஆன போது,
    உவந்தவாறு என்? இதற்கு உறுதி யாது? என்றான். 63

  233. மறந்திலள் கோசலை, உறுதி மைந்தனும்,
    சிறந்த நல் திருவினில் திருவும் எய்தினான்,
    இறந்திலன் இருந்தனன்; என் செய்து ஆற்றுவான்?
    பிறந்திலன் பரதன், நீ பெற்றதால் என்றாள். 64

  234. சரதம் இப் புவியெலாம், தம்பியோடும் இவ்
    வரதனே காக்குமேல், வரம்பில் காலமும்
    பரதனும் இளவலும், பதியின் நீங்கிப்போய்,
    விரதமாம் தவம்செய விடுதல் நன்றுஎன்றாள். 65

  235. பண்ணுறு கடகரிப் பரதன், பார்மகள்
    கண்ணுறு கவினராய் இனிது காத்த அம்
    மண்ணுறு முரசுடை மன்னர் மாலையில்
    எண்ணுறப் பிறந்திலன்; இறத்தல் நன்று என்றாள். 66

  236. பாக்கியம் புரிந்திலாப் பரதன் தன்னைப்பண்டு
    ஆக்கிய பொலங்கழல் அரசன், ஆணையால்
    தேக்குயர் கல்லதர், கடிது சேணிடைப்
    போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால். 67

  237. மந்தரை, பின்னரும் வகைந்து கூறுவாள்;
    அந்தரம் தீர்ந்து உலகு அளிக்கும் நீரினால்
    தந்தையும் கொடியன்; நல் தாயும் தீயளால்;
    எந்தையே! பரதனே! என்செய் வாய்? என்றாள். 68

  238. அரசரில் பிறந்து, பின் அரசரில் வளர்ந்து,
    அரசரில் புகுந்து, பேர் அரசி யான நீ
    கரைசெயற் கருந்துயர்க் கடலில் வீழ்கின்றாய்;
    உரைசெயக் கேட்கிலை; உணர்தியோ? என்றாள். 69

  239. கல்வியும், இளமையும், கணக்கில் ஆற்றலும்,
    வில்வினை உரிமையும், அழகும், வீரமும்,
    எல்லையில் குணங்களும், பரதற்கு எய்திய;
    புல்லிடை உகுத்த அமுது ஏயும் போல் என்றாள். 70

  240. மந்தரையின் கோப உரையால் கைகேயி சினந்து உரைத்தல்

  241. வாய் கயப்புற மாந்தரை வழங்கிய வெஞ் சொல்,
    காய் தனல்தலை நெய் சொரிந்தென, கதம் கனற்ற,
    கேகயர்க்கு இறை திருமகள், கிளர் இள வரிகள்
    தோய், கயல் கண்கள் சிவப்புற நோக்கினள், சொல்லும்; 71

  242. வெயில் முறைக் குலக் கதிரவன் முதலிய மேலோர்,
    உயிர் முதல் பொருள் திறம்பினும், உரை திறம்பாதோர்;
    மயில் முறைக் குலத்து உரிமையை, மனு முதல் மரபை;
    செயிர் உற, புலைச் சிந்தையால், என் சொனாய்? - தீயோய்! 72

  243. எனக்கு நல்லையும் அல்லை நீ; என் மகன் பரதன் -
    தனக்கு நல்லையும் அல்லை; அத் தருமமே நோக்கின்,
    உனக்கு நல்லையும் அல்லை; வந்து ஊழ்வினை தூண்ட,
    மனக்கு நல்லன சொல்லினை - மதி இலா மனத்தோய்! 73

  244. பிறந்து இறந்துபோய்ப் பெறுவதும், இழப்பதும், புகழே;
    நிறம் திறம்பினும், நியாயமே திறம்பினும், நெறியின்
    திறம் திறம்பினும், செய்தவம் திறம்பினும், செயிர்தீர்
    மறம் திறம்பினும், வரன்முறை திறம்புதல் வழக்கோ? 74

  245. போதி, என் எதிர்நின்று; நின் புன் பொறி நாவைச்
    சேதியாது இது பொறுத்தனன்; புறம் சிலர் அறியின்,
    நீதி அல்லவும், நெறி முறை அல்லவும், நினைந்தாய்
    ஆதி; ஆதலின், அறிவு இலி! அடங்குதி என்றாள். 75

  246. மந்தரை மீண்டும் பேசுதல்

  247. அஞ்சி மந்தரை அகன்றிலள், அம் மொழி கேட்டும்,
    நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது நலிந்தென்ன,
    தஞ்சமே! உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன்;
    வஞ்சி போலி! என்று, அடிமிசை வீழ்ந்து, உரைவழங்கும். 76

  248. மூத்தவற்கு உரித்து அரசு எனும் முறைமையின் உலகம்
    காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்வண்ணன்?
    ஏத்து நீள் முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால்,
    மீத் தரும் செல்வம் பரதனை விலக்குமாறு எவனோ? 77

  249. அறன் நிரம்பிய அருளுடை அருந்தவர்க்கேனும்,
    பெறல் அருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம்;
    மறம் நினைந்து உமை வலிகிலராயினும், மனத்தால்
    இறலுறும்படி இயற்றுவர், இடையறா இன்னல். 78

  250. புரியும் தன்மகன் அரசு எனில், பூதலம் எல்லாம்
    எரியும் சிந்தனைக் கோசலைக்கு உடைமையாம்; என்றால்,
    பரியும் நின்குலப் புதல்வற்கும், நினக்கும் இப் பார்மேல்
    உரியது என், அவள் உதவிய ஒரு பொருள் அல்லால்! 79

  251. தூண்டும் இன்னலும், வறுமையும், தொடர்தரத் துயரால்
    ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு, இரு நிதி, அவளை
    வேண்டி ஈதியோ? வெள்குதியோ? விம்மல் நோயால்
    மாண்டு போதியோ? மறுத்தியோ? எங்ஙனம் வாழ்தி? 80

  252. சிந்தை என் செயத் திகைத்தனை, இனி, சில நாளில்,
    தம்தம் இன்மையும், எளிமையும், நிற்கொண்டு தவிர்க்க,
    உந்தை, உன் ஐ, உன் கிளைஞர், மற்ற உன் குலத்து உள்ளோர்,
    வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ? மதியாய்! 81

  253. காதல் உன் பெருங் கணவனை அஞ்சி, அக் கனி வாய்ச்
    சீதை தந்தை, உன் தாதையைத் தெறுகிலன்; இராமன்
    மாதுலன் அவன்; நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ ?
    பேதை! உன் துணை யார் உளர் பழிபடப் பிறந்தார்? 82

  254. மற்றும் நுந்தைக்கு வான்பகை பெரிதுள மறத்தார்
    செற்ற போது, இவர் சென்று உதவார் எனில், செருவில்
    கொற்றம் என்பது ஒன்று, எவ்வழி உண்டு? அது கூறாய்?
    சுற்றமும் கெடச் சுடு துயர்க் கடல் விழத் துணிந்தாய்! 83

  255. கெடுத்து ஒழிந்தனை உனக்கரும் புதல்வனைக் கிளர்நீர்
    உடுத்த பாரக முடையவன், ஒருமகற்கு எனவே
    கொடுத்த பேரரசு அவன்குலக் கோமைந்தர் தமக்கும்,
    அடுத்த தம்பிக்குமாம்; பிறர்க்கும் ஆகுமோ? என்றாள். 84

  256. கைகேயி உள்ளம் திரிதல்

  257. தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி
    தூய சிந்தையும் திரிந்தது - சூழ்ச்சியின் இமையோர்
    மாயையும், அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும்,
    ஆய அந்தணர் இயற்றிய அருந் தவத்தாலும். 85

  258. அரக்கர் பாவமும், அல்லவர் இயற்றிய அறமும்,
    துரக்க, நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்;
    இரக்கம் இன்மை அன்றோ, இன்று இவ் உலகங்கள் இராமன்
    பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின் றதுவே.? 86

  259. உள்ளம் திரிந்த கைகேயி பரதன் முடிசூட உபாயம் கேட்டல்

  260. அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம்,
    வினை நிரம்பிய கூனியை, விரும்பினள், நோக்கி,
    எனை உவந்தனை; இனியை என் மகனுக்கும்; அனையான்
    புனையும் நீள் முடி பெறும்படி புகலுதி என்றாள். 87

  261. மந்தரை உரைத்த உபாயம்

  262. மாழை ஒண் கணி உரைசெய, கேட்ட மந்தரை, என்
    தோழி வல்லள்; என் துணை வல்லள் என்று, அடி தொழுதாள்;
    தாழும் மன் நிலை; என் உரை தலைநிற்பின், உலகம்
    ஏழும் ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென் என்றாள். 88

  263. நாடி ஒன்று உனக்கு உரைசெய்வென்; நளிர் மணி நகையாய்!
    தோடு இவர்ந்த தார்ச் சம்பரன் தொலைவுற்ற வேலை,
    ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும்
    கோடி என்றனள், உள்ளமும் கோடிய கொடியாள். 89

  264. இரு வரத்தினில், ஒன்றினால் அரசு கொண்டு, இராமன்
    பெரு வனத்திடை ஏழ் - இரு பருவங்கள் பெயர்ந்து
    திரிதரச் செய்தி, ஒன்றினால்; செழு நிலம் எல்லாம்
    ஒருவழிப்படும் உன் மகற்கு; உபாயம் ஈது என்றாள். 90

  265. கூனியைக் கைகேயி புகழ்ந்துரைத்தல்

  266. உரைத்த கூனியை உவந்தனள், உயிர் உறத் தழுவி,
    நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி,
    இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய்;
    தரைக்கு நாயகன் தாய் இனி நீ எனத் தணியா. 91

  267. கைகேயின் உறுதிமொழி

  268. நன்று சொல்லினை; நம்பியை நளிர்முடி சூட்டல்;
    துன்று கானத்தில் இராமனைத் துரத்தல்; இவ் இரண்டும்
    அன்றது ஆம்எனில், அரசன்முன் ஆர் உயிர் துறந்து
    பொன்றி நீங்குதல் புரிவென்யான்; போதிநீ என்றாள். 92

  269. மிகைப் பாடல்கள்

  270. பொன்னும் மா மணியும், புனை சாந்தமும்,
    கன்னி மாரொடு காசினி ஈட்டமும்,
    இன்ன யாவையும் ஈந்தனள் அந்தணர்க்கு;
    அன்ன முந்தளிர் ஆடையும் நல்கினாள் 9-1

  271. நல்கி, நாயகன் நாள்மலர்ப் பாதத்தைப்
    புல்லிப் போற்றி, வணங்கி, புரையிலா
    மல்லல் மாளிகைக் கோயில் வலங்கொளா
    தொல்லை நோன்புகள் யாவும் தொடங்கினாள் 9-2

  272. கடி கமழ் தாரினான், கணித மாக்களை
    முடிவு உற நோக்கி, ஓர் முகமன் கூறிப்பின்
    வடி மழுவாளவற் கடந்த மைந்தற்கு
    முடிபுனை முதன்மை நாள் மொழிமின் என்றனன். 9-3

  273. அயோத்தியா காண்டம்

    3. கைகேயி சூழ்ச்சிப் படலம்



  274. கூனி சென்றபின் கைகேயி தன் கோலம் அழித்தல்

  275. கூனி போன பின், குலமலர்க் குப்பை நின்று இழிந்தாள்;
    சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை,
    வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள்போல்,
    தேன் அவாவுறு வண்டினம் அலமர, சிதைத்தாள். 1

  276. விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்னக்
    கிளைகொள் மேகலை சிந்தினள்; கிண்கிணி யோடும்
    வளை துறந்தனள்; மதியினில் மறுத்துடைப் பாள் போல்
    அளக வாள் நுதல் அரும்பெறல் திலதமும் அழித்தாள். 2

  277. தாவில் மாமணிக்கலம் மற்றும் தனித்தனிச் சிதறி,
    நாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பிக்
    காவி உண்டகண் அஞ்சனம் கன்றிடக் கலுழாப்
    பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவி மிசைப் புரண்டாள். 3

  278. நவ்வி வீழ்ந்தென, நாடக மயில் துயின்றென்ன,
    கவ்வை கூர்தரச் சனகி ஆம் கடி கமழ் கமலத்து
    அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை
    தவ்வை ஆம் என, கிடந்தனள், கேகயன் தனையை. 4

  279. கைகேயின் மாளிகைக்கு தயரதன் வருதல்

  280. நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை,
    யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில்,
    வாழிய என்று அயில் மன்னர் துன்ன, வந்தான் -
    ஆழி நெடுங் கை மடங்கல் ஆளி அன்னான். 5

  281. தயரதன் கைகேயியை நெருங்குதல்

  282. வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப, வந்து ஆங்கு,
    ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகி,
    பாயல் துறந்த படைத் தடங்கண் மென் தோள்,
    ஆயிழைதன்னை அடைந்த ஆழி மன்னன். 6

  283. தயரதன் கைகேயியை எடுத்தலும் அவள் மன்னன் கையை தள்ளி மண்ணில் வீழ்தலும்

  284. அடைந்து, அவண் நோக்கி, அரந்தை என்கொல் வந்து
    தொடர்ந்து? எனத் துயர்கொண்டு சோரும் நெஞ்சன்,
    மடந்தையை, மானை எடுக்கும் ஆனையே போல்,
    தடங்கைகள் கொண்டு தழீஇ, எடுக்கலுற்றான். 7

  285. நின்று தொடர்ந்த நெடுங் கைதம்மை நீக்கி,
    மின் துவள்கின்றது போல, மண்ணில் வீழ்ந்தாள்;
    ஒன்றும் இயம்பலள்; நீடு உயிர்க்கலுற்றாள்-
    மன்றல் அருந் தொடை மன்னன் ஆவி அன்னாள். 8

  286. கைகேயின் நிலைகண்ட தயரதன் நிகழ்ந்தது கூற வேண்டுதல்

  287. அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி,
    என்னை நிகழ்ந்தது? இஞ்ஞாலம் ஏழில் வாழ்வார்,
    உன்னை இகழ்ந்தவர் மாள்வர்; உற்றது எல்லாம்
    சொன்னபின் என்செயல் காண்டி; சொல்லிடு என்றான். 9

  288. கைகேயி தயரதனிடம் தன் வரத்தை வேண்டுதல்

  289. வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை,
    கொண்ட நெடுங் கணின் ஆலி கொங்கை கோப்ப,
    உண்டு கொலாம் அருள் என்கண்? உன்கண் ஒக்கின்,
    பண்டைய இன்று பரிந்து அளித்தி என்றாள். 10

  290. தயரதன் வரத்தை தர வாக்குறுதி அளித்தல்

  291. கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன்,
    வெள்ள நெடுஞ்சுடர் மின்னின் மின்ன நக்கான்;
    உள்ளம் உவந்தது செய்வன்; ஒன்றும் உலோபேன்;
    வள்ளல் இராமன் உன்மைந்தன் ஆணை என்றான். 11

  292. கைகேயி முன்னர் கொடுத்த வரங்களை தருமாறு வேண்டல்

  293. ஆன்றவன் அவ்வுரை கூற, அன்னம் அன்னாள்,
    தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல்,
    சான்று இமையோர் குலம் ஆக, மன்ன! நீ அன்று
    ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி என்றாள். 12

  294. விரும்பியதை கேட்க தயரதன் கூறுதல்

  295. வரம் கொள இத்துணை மன்னும் அல்லல் எய்தி
    இரங்கிட வேண்டுவது இல்லை; ஈவென்; என்பால்
    பரம் கெட இப்பொழுதே, பகர்ந்திடு என்றான் -
    உரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான். 13

  296. கைகேயின் இருவரங்கள்

  297. ஏய வரங்கள் இரண்டின், ஒன்றினால், என்
    சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
    போய் வனம் ஆள்வது எனப் புகன்று, நின்றாள் -
    தீயவை யாவையினும் சிறந்த தீயாள். 14

  298. தயரதனின் துயரம்

  299. நாகம் எனும்கொடியாள், தன் நாவின் வந்த
    சோக விடம் தொடர, துணுக்கம் எய்தா,
    ஆகம் அடங்கலும், வெந்து அழிந்து, அராவின்
    வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான். 15

  300. பூதலம் உற்று, அதனில் புரண்ட மன்னன்
    மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்?
    வேதனை முற்றிட, வெந்து வெந்து, கொல்லன்
    ஊது உலையில் கனல் என்ன, வெய்து உயிர்த்தான். 16

  301. உலர்ந்தது நா; உயிர் ஓடலுற்றது; உள்ளம்
    புலர்ந்தது; கண்கள் பொடித்த, பொங்கு சோரி;
    சலம் தலைமிக்கது; தக்கது என்கொல்? என்று என்று
    அலந்து அலையுற்ற, அரும் புலன்கள் ஐந்தும். 17

  302. மேவி நிலத்தில் இருக்கும்; நிற்கும்; வீழும்;
    ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்;
    பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்;-
    ஆவி பதைப்ப, அலக்கண் எய்துகின்றான். 18

  303. பெண் என உட்கும்; பெரும் பழிக்கு நாணும்;
    உள் நிறை வெப்பொடு உயிர்த்து, உயிர்த்து, உலாவும்;
    கண்ணினில் நோக்கும் அயர்க்கும்; வன் கைவேல் வெம்
    புண் நுழைகிற்க உழைக்கும் ஆனை போல்வான். 19

  304. தேவரின் நடுக்கமும், கைகேயின் கலங்கா உள்ளமும்

  305. கம்ப நெடுங் களி யானை அன்ன மன்னன்
    வெம்பி விழுந்து எழும் விம்மல் கண்டு, வெய்துற்று,
    உம்பர் நடுங்கினர்; ஊழி பேர்வது ஒத்தது;
    அம்பு அன கண்ணவள் உள்ளம் அன்னதேயால். 20

  306. அஞ்சலள்; ஐயனது அல்லல் கண்டும்; உள்ளம்
    நஞ்சிலள்; நாண் இலள் என்ன, நாணம் ஆமால்;
    வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே
    தஞ்சு என மாதரை உள்ளலார்கள், தக்கோர். 21

  307. கைகேயின் மனமாற்றத்திற்கான காரணத்தை தயரதன் வினவுதல்

  308. இந் நிலை நின்றவள் தன்னை எய்த நோக்கி,
    நெய்ந் நிலை வேலவன், நீ திசைத்தது உண்டோ ?
    பொய்ந் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ ?
    உன் நிலை சொல்; எனது ஆணை உண்மை! என்றான். 22

  309. கைகேயின் தீஞ்சொற்கள்

  310. திசைத்ததும் இல்லை; எனக்கு வந்து தீயோர்
    இசைத்ததும் இல்லை; முன் ஈந்த இவ் வரங்கள்,
    குசைப் பரியோய்! தரின், இன்று கொள்வேன்; அன்றேல்,
    வசைத் திறன் நின் வயின் நிற்க, மாள்வென் என்றாள். 23

  311. கைகேயின் கடுமொழி கேட்ட தயரதனின் பெருந்துயரம்

  312. இந்த நெடுஞ்சொல் அவ் ஏழை கூறு முன்னே,
    வெந்த கொடும்புணில் வேல் நுழைந்தது ஒப்பச்
    சிந்தை திரிந்து, திகைத்து, அயர்ந்து, வீழ்ந்தான்
    மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன். 24

  313. ஆ கொடியாய்! எனும்; ஆவி காலும்; அந்தோ!
    ஓ கொடிதே அறம்! என்னும்; உண்மை ஒன்றும்
    சாக! எனா எழும்; மெய் தளாடி வீழும்-
    மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான். 25

  314. நாரியர் இல்லை இஞ் ஞாலம் எங்கும் என்னக்
    கூரிய வாள்கொடு கொன்று, நீக்கி, யானும்
    பூரியர் எண்ணிடை வீழ்வன்; என்று, பொங்கும்
    வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான். 26

  315. கையொடு கைகள் புடைக்கும்; வாய் கடிக்கும்;
    மெய்யுரை குற்றம் எனப் புழுங்கி விம்மும்;
    நெய்யெரி உற்றென நெஞ்சு அழிந்து சோரும்;
    வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன். 27

  316. இரந்தாவது கைகேயின் மனத்தை மாற்ற தயரதன் எண்ணி எழுதல்

  317. ஒறுப்பினும் அந்தரம், உண்மை ஒன்றும் ஓவா
    மறுப்பினும் அந்தரம் என்று, வாய்மை மன்னன்,
    பொறுப்பினும் இந் நிலை போகிலாளை வாளால்
    இறுப்பினும் ஆவது இரப்பது என்று எழுந்தான். 28

  318. தயரதன் கைகேயின் காலில் விழுந்து இரத்தல்

  319. கோல் மேல் கொண்டும் குற்றம் அகற்றக் குறிக்கொண்டார்
    போல், மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை மன்னா,
    கால்மேல் வீழ்ந்தான், கந்து கொல்யானைக் கழல் மன்னர்
    மேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான். 29

  320. கொள்ளான் நின் சேய் இவ் அரசு; அன்னான் கொண்டாலும்
    நள்ளாது இந்த நானிலம்; ஞாலம் தனில் என்றும்
    உள்ளார் எல்லாம் ஓத உவக்கும் புகழ் கொள்ளாய்;
    எள்ளா நிற்கும் வன் பழி கொண்டு என் பயன்? என்றான். 30

  321. வானோர் கொள்ளார்; மன்னவ உய்யார்; இனி, மற்று என்
    ஏனோர் செய்கை? யாரொடு நீ இவ் அரசு ஆள்வாய்?
    யானே சொல்ல, கொள்ள இசைந்தான்; முறையாலே
    தானே நல்கும் உன் மகனுக்கும் தரை என்றான். 31

  322. கண்ணே வேண்டும் என்னினும், ஈயக் கடவேன்; என்
    உள் நேர் ஆவி வேண்டினும், இன்றே உனதன்றோ?
    பெண்ணே! வண்மைக் கேகயன் மானே!- பெறுவாயேல்,
    மண்ணே! கொள் நீ; மற்றையது ஒன்றும் மற என்றான். 32

  323. வாய் தந்தேன் என்றேன்; இனி, யானோ அது மாற்றேன்;
    நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே;
    தாய் தந்தென்ன, தன்னை இரந்தால், தழல் வெங் கண்
    பேய் தந்தீயும்; நீ இது தந்தால் பிழை ஆமோ? 33

  324. தயரதனின் வேண்டுகோளை கைகேயி மறுத்தல்

  325. இன்னே இன்னே பன்னி இரந்தான் இகல் வேந்தன்;
    தன் நேர் இல்லாத் தீயவள் உள்ளம் தடுமாறாள்,
    முன்னே தந்தாய் இவ் வரம்; நல்காய்; முனிவாயேல்,
    என்னே? மன்னா! யாருளர் வாய்மைக்கு இனி? என்றாள். 34

  326. கைகேயின் உரைகேட்ட தயரதன் மூர்ச்சித்து பின் தெளிந்து பேசுதல்

  327. அச் சொல் கேளா, ஆவி புழுங்கா, அயர்கின்றான்,
    பொய்ச் சொல் பேணா வாய்மொழி மன்னன், பொறை கூர,
    நச்சுத் தீயே பெண் உரு அன்றோ? என, நாணா,
    மூச்சு அற்றார்போல் பின்னும் இரந்தே மொழிகின்றான்; 35

  328. நின் மகன் ஆள்வான்; நீ, இனிது ஆள்வாய்; நிலம் எல்லாம்
    உன் வயம் ஆமே; ஆளுதி; தந்தேன்; உரை குன்றேன்;
    என் மகன், என் கண், என் உயிர், எல்லா உயிர்கட்கும்
    நன் மகன், இந்த நாடு இறவாமை நய என்றான். 36

  329. மெய்யே என் தன் வேர் அற நூறும் வினை நோக்கி
    நையா நின்றேன், நாவும் உலர்ந்தேன்; நளினம்போல்
    கையான், இன்று, என் கண் எதிர்நின்றும் கழிவானேல்,
    உய்யேன்; நங்காய்! உன் அபயம் என் உயிர் என்றான். 37

  330. தந்த வரத்தை தவிர்க்க கூறுதல் அறமா என கைகேயி கூறுதல்

  331. இரந்தான் சொல்லும் இன் உரை கொள்ளாள், முனிவு எஞ்சாள்,
    மரம்தான் என்னும் நெஞ்சினள், நாணாள், வகை பாராள்,
    சரம் தாழ் வில்லாய்! தந்த வரத்தைத் தவிர்க என்றல்
    உரந்தான் அல்லால், நல்லறம் ஆமோ? உரை என்றாள். 38

  332. சோகத்தால் தயரதன் மண்ணில் விழுந்து புலம்புதல்

  333. கொடியாள் இன்ன கூறினள்; கூறக் குலவேந்தன்,
    முடிசூடாமல் காத்தலும், மொய்கான் இடை, மெய்யே
    நெடியான் நீங்க, நீங்கும் என் ஆவி இனி என்னா,
    இடியேறு உண்ட மால் வரை போல், மண்ணிடை வீழ்ந்தான். 39

  334. வீழ்ந்தான்; வீழா, வெந் துயரத்தின் கடல் வெள்ளத்து
    ஆழ்ந்தான்; ஆழா, அக் கடலுக்கு ஓர் கரை காணான்;
    சூழ்ந்தாள் துன்பம் சொற் கொடியாள், சொல்கொடு நெஞ்சம்
    போழ்ந்தாள், உள்ளப் புன்மையை நோக்கிப் புலர்கின்றான். 40

  335. தயரதன் கைகேயியை பழித்துக் கூறுதல்

  336. ஒன்றா நின்ற ஆர் உயிரோடும், உயர் கேள்வர்
    பொன்றா முன்னம் பொன்றினர் என்னும் புகழ் அல்லால்,
    இன்று ஓர்காறும், எல் வளையார், தம் இறையோரைக்
    கொன்றார் இல்லை; கொல்லுதியோ நீ? - கொடியோளே! 41

  337. ஏவம் பாராய்; இல் முறை நோக்காய்; அறம் எண்னாய்;
    ஆ என் பாயோ அல்லை; மனத்தால் அருள் கொன்றாய்;
    நா அம்பால், என் ஆர் உயிர் உண்டாய்; இனி, ஞாலம்
    பாவம் பாராது, இன் உயிர் கொள்ளப் படுகின்றாய்! 42

  338. ஏண்பால் ஓவா நாண், மடம், அச்சம் இவையே தம்
    பூண்பால் ஆகக் காண்பவர் நல்லார்; புகழ் பேணி
    நாண்பால் ஓரா நங்கையர் தம்பால் நணுகாரே;
    ஆண்பாலாரே; பெண்பால் ஆரோடு அடைவு அம்மா? 43

  339. மண் ஆள்கின்றார் ஆகி, வலத்தால் மதியால் வைத்து
    எண்ணா நின்றார் யாரையும், எல்லா இகலாலும்,
    விண்ணோர்காறும், வென்ற எனக்கு, என் மனை வாழும்
    பெண்ணால் வந்தது, அந்தரம் என்னப் பெறுவேனோ? 44

  340. என்று, என்று, உன்னும்; பன்னி இரக்கும்; இடர் தோயும்;
    ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும்; உயிர் உண்டோ ?
    இன்று! இன்று! என்னும் வண்ணம் மயங்கும்; இடையும்-பொன்
    குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது என்னக் குவி தோளான். 45

  341. கைகேயி தயரதனிடம் உரை மறுத்தால் உயிர் விடுவேன் எனக் கூறுதல்

  342. ஆழிப் பொன் தேர் மன்னவன் இவ்வாறு அயர்வு எய்தி,
    பூழிப் பொன் - தோள் முற்றும் அடங்கப் புரள் போழ்தில்,
    ஊழின் பெற்றாய் என்று உரை; இன்றேல், உயிர் மாய்வென்;
    பாழிப் பொன் - தார் மன்னவ! என்றாள், பசை அற்றாள். 46

  343. அரிந்தான், முன் ஓர் மன்னவன் அன்றே அரு மேனி,
    வரிந்து ஆர் வில்லாய்! வாய்மை வளர்ப்பான்! வரம் நல்கி,
    பரிந்தால், என் ஆம்? என்றனள் - பாயும் கனலேபோல்,
    எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி அன்னாள். 47

  344. தயரதன் கைகேயிக்கு வரம் அளித்தல்

  345. வீய்ந்தாளே இவ் வெய்யவள் என்னா, மிடல் வேந்தன்
    ஈந்தேன்! ஈந்தேன்! இவ் வரம்; என் சேய் வனம் ஆள,
    மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென்; வசை வெள்ளம்
    நீந்தாய், நீந்தாய், நின் மகனோடும் நெடிது! என்றான். 48

  346. வரம்தந்த தயரதன் துயருற, கைகேயி உறங்குதல்

  347. கூறா முன்னம், கூறுபடுக்கும் கொலை வாளின்
    ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்து இடை மூழ்கத்
    தேறான் ஆகிச் செய்கை மறந்தான்; செயல் முற்றி
    ஊறா நின்ற சிந்தையினாளும் துயில்வுற்றாள். 49

  348. கொடிய இரவு கழிதல்

  349. சேண் உலாவிய நாளெலாம் உயிர் ஒன்று போல்வன செய்து, பின்
    ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த, ஒன்றும் இரங்கிலா
    வாள் நிலாநகை மாதராள் செயல் கண்டு, மைந்தர்முன் நிற்கவும்
    நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே. 50

  350. கோழி கூவுதல்

  351. எண் தரும் கடை சென்ற யாமம் இயம்பு கின்றன ஏழையால் வண்டு தங்கிய தொங்கள் மார்பன் மயங்கி விம்மிய வாறெல்லாம்
    கண்டு, நெஞ்சு கலங்கி, அம் சிறை ஆன காமர் துணைக்கரம்
    கொண்டு தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே. 51

  352. பல் வகைப் பறவைகளின் ஒலிகள்

  353. தோய் கயத்தும், மரத்தும், மென் சிறை துள்ளி, மீது எழு புள் எலாம்
    தேய்கை ஒத்த மருங்குல் மாதர் சிலம்பின் நின்று சிலம்புவ-
    கேகயத்து அரசன் பயந்த விடத்தை, இன்னது ஒர் கேடு சூழ்
    மா கயத்தியை, உள் கொதித்து, மனத்து வைவன போன்றவே. 52

  354. யானைகள் துயில் நீங்கி எழுதல்

  355. சேமம் என்பன பற்றி, அன்பு திருந்த இன் துயில் செய்தபின்,
    வாமம் மேகலை மங்கையோடு வனத்துள், யாரும் மறக்கிலா
    நாமம் நம்பி, நடக்கும் என்று நடுங்குகின்ற மனத்தவாய்
    யாமும் இம்மண் இறத்தும் என்பன போல் எழுந்தன - யானையே. 53

  356. வானத்து நட்சத்திரங்கள் மறைதல்

  357. சிரித்த பங்கயம் ஒத்த செங் கண் இராமனை, திருமாலை, அக்
    கரிக் கரம் பொரு கைத் தலத்து, உயர் காப்பு நாண் அணிதற்கு முன்
    வரித்த தண் கதிர் முத்தது ஆகி, இம்மண் அனைத்தும் நிழற்ற, மேல்
    விரித்த பந்தர் பிரித்தது ஆம் என, மீன் ஒளித்தது - வானமே. 54

  358. காலையில் மணமுரசு ஒலிக்க மகளிர் எழுதல்

  359. நாமம் வில் கை இராமனைத் தொழு நாள் அடைந்த உமக்கெலாம்
    காமன் விற்குடை கங்குல் மாலை கழிந்தது என்பது கற்பியா,
    தாம் ஒலித்தன பேரி; அவ்வொலி சாரல் மாரி தழங்கலால்,
    மாமயிற்குலம் என்ன, முன்னம் மலர்ந்தெழுந்தனர், மாதரே. 55

  360. மந்தமாருதம் வீசுதல்

  361. இன மலர்க்குலம் வாய் விரித்து, இள வாச மாருதம் வீச, முன்
    புனை துகிற்கலை சோர, நெஞ்சு புழுங்கினார் சில பூவைமார்;
    மனம் அனுக்கம் விட, தனித்தனி, வள்ளலைப் புணர் கள்ள வன்
    கனவினுக்கு இடையூறு அடுக்க, மயங்கினார் சில கன்னிமார். 56

  362. குமுதமலர்கள் குவிதல்

  363. சாய் அடங்க, நலம் கலந்து தயங்கு தன் குல நன்மையும்
    போய் அடங்க, நெடுங் கொடும் பழிகொண்டு, அரும் புகழ் சிந்தும் அத்
    தீ அடங்கிய சிந்தையாள் செயல் கண்டு, சீரிய நங்கைமார்
    வாய் அடங்கின என்ன வந்து குவிந்த - வண் குமுதங்களே. 57

  364. பண்கனிந்து எழும் பாடல்

  365. மொய் அராகம் நிரம்ப, ஆசை முருங்கு தீயின் முழங்க, மேல்
    வை அராவிய மாரன் வாளியும், வான் நிலா நெடு வாடையும்,
    மெய் அராவிட, ஆவி சோர வெதும்பு மாதர்தம் மென் செவி,
    பை அரா நுழைகின்ற போன்றன - பண் கனிந்து எழு பாடலே. 58

  366. ஆடவர் பள்ளி எழுதல்

  367. ஆழி யான்முடி சூடு நாளிடை ஆன பாவி இது ஓர் இரா
    ஊழி யாயின ஆறு எனா உயர் போதின் மேல் உறை பேதையும்,
    ஏழு லோகமும், எண் தவம் செய்த கண்ணும், எங்கள் மனங்களும்,
    வாழு நாள் இது என எழுந்தனர் - மஞ்சு தோய்புய மஞ்சரே. 59

  368. மகளிர் பள்ளி எழுதல்

  369. ஐயுறுஞ் சுடர் மேனி யான் எழில் காண மூளும் அவாவினால்,
    கொய்யு றும் குல மா மலர்க் குவை நின்று எழுந்தனர் - கூர்மை கூர்
    நெய் உறும் சுடர் வேல் நெடுங்கண் முகிழ்த்து, நெஞ்சில் நினைப்பொடும்
    பொய் உறங்கும் மடந்தைமார் - குழல் வண்டு பொம்மென விம்மவே. 60

  370. ஊடிய மகளிர் கூடல் புரியாது பிரிதல்

  371. ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி, அனந்தரால்
    ஏடுஅ கம்பொதி தார் பொருந்திட, யாமம் பேரி இசைத்தலால்,
    சேட கம்புனை கோதை மங்கையர் சிந்தையிற் செறி திண்மையால்,
    ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் நையும் மைந்தர்கள் உய்யவே. 61

  372. பல் வகை ஒலிகள்

  373. தழை ஒலித்தன; வண்டு ஒலித்தன; தார் ஒலித்தன; பேரி ஆம்
    முழவு ஒலித்தன; தேர் ஒலித்தன; முத்து ஒலித்து எழும் அல்குலார்
    இழை ஒலித்தன; புள் ஒலித்தன; யாழ் ஒலித்தன; - எங்கணும் -
    மழை ஒலித்தனபோல் கலித்த, மனத்தின் முந்துறு வாசியே. 62

  374. தீபங்கள் ஒலி மழுங்குதல்

  375. வையம் ஏழும் ஓர் ஏழும் ஆருயிரோடு கூட வழங்கும் அம்
    மெய்யன் வீரருள் வீரன், மாமகன் மேல் விளைந்தது ஓர்காதலால்
    நைய நைய, நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி நடுங்குவான்
    தெய்வ மேனி படைத்த சேயொளி போல் மழுங்கின - தீபமே. 63

  376. பல் வகை பாடற் கருவிகளின் இசையொலி

  377. வங்கியம் பல தேன் விளம்பின; வாணி முந்தின பாணியின்;
    பங்கி அம்பரம் எங்கும் விம்மின; பம்பை பம்பின; பல்வகைப்
    பொங்கு இயம்பலவும் கறங்கின; நூபுரங்கள் புலம்ப, வெண்
    சங்கு இயம்பின; கொம்பு அலம்பின, சாம கீதம் நிரந்தவே. 64

  378. சூரியோதயம்

  379. தூபம் முற்றிய கார் இருட் பகை துள்ளி ஓடிட, உள் எழும்
    தீபம் முற்றவும் நீத்து அகன்றென சேயது ஆர் உயிர் தேய, வெம்
    பாபம் முற்றிய பேதை செய்த பகைத் திறத்தினில், வெய்யவன்
    கோபம் முற்றி மிகச் சிவந்தனன் ஒத்தனன், குண குன்றிலே. 65

  380. தாமரை மலர்கள் மலர்தல்

  381. மூவர் ஆய், முதல் ஆகி, மூலம் அது ஆகி, ஞாலமும் ஆகிய
    தேவ தேவர் பிடித்த போர்வில் ஒடித்த சேவகர், சேண்நிலம்
    காவல் மாமுடி சூடு பேர் எழில் காண லாமெனும் ஆசைகூர்
    பாவை மார்முகம் என்ன முன்னம் மலர்ந்த பங்கய ராசியே. 66

  382. முடிசூட்டு விழாவைக் கொண்டாடும் அயோத்தி நகர மக்களின் நிலை

  383. இன்ன வேலையின், ஏழு வேலையும் ஒத்த போல இரைந்து எழுந்து,
    அன்ன மா நகர், மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம் எனா,
    துன்னு காதல் துரப்ப வந்தவை சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு
    உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்றபெற்றி உணர்த்துவாம். 67

  384. முடிசூட்டு விழாவிற்கு மங்கையர் அலங்கரித்துக் கொள்ளல்

  385. குஞ்சரம் அனையார் சிந்தை கொள் இளையார்,
    பஞ்சினை அணிவார்; பால் வளை தெரிவார்;
    அஞ்சனம் என, வாள் அம்புகள் இடையே,
    நஞ்சினை இடுவார்; நாள் மலர் புனைவார். 68

  386. நகரத்து குமாரர்களின் மகிழ்ச்சி

  387. பொங்கிய உவகை வெள்ளம் பொழிதர, கமலம் பூத்த
    சங்கை இல் முகத்தார், - நம்பி தம்பியர் அனையர் ஆனார் -
    செங் கயல் நறவம் மாந்திக் களிப்பன சிவக்கும் கண்ணார்
    குங்குமச் சுவடு நீங்காக் குவவுத் தோள் குமரர் எல்லாம். 69

  388. நகரத்தவர் அனைவரின் மன நிலை

  389. மாதர்கள், கற்பின் மிக்கார், கோசலை மனத்தை ஒத்தார்;
    வேதியர் வசிட்டன் ஒத்தார்; வேறு உள மகளிர் எல்லாம்
    சீதையை ஒத்தார்; அன்னாள் திருவினை ஒத்தாள்; அவ் ஊர்ச்
    சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார். 70

  390. முடிசூட்டு விழாவிற்கு அரசர்கள் வருதல்

  391. இமிழ் திரைப் பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர,
    உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட, வந்தது அன்றே-
    குமிழ் முலைச் சீதை கொண்கண் கோமுடி புனைதல் காண்பான்,
    அமிழ்து உணக் குழுமுகின்ற அமரரின், அரச வெள்ளம். 71

  392. வீதிகளில் மக்கள் வெள்ளமென திரண்டிருத்தல்

  393. பாகு இயல் பவளச் செவ் வாய், பணை முலை, பரவை அல்குல்,
    தோகையர் குழாமும், மைந்தர் சும்மையும் துவன்றி, எங்கும்,
    ஏகுமின், ஏகும் என்று என்று, இடை இடை நிற்றல் அல்லால்,
    போகில; மீளகில்லா - பொன் நகர் வீதி எல்லாம். 72

  394. பெருந்திரளான மக்கள்

  395. வேந்தரே பெரிது என்பாரும், வேதியர் பெரிது என்பாரும்,
    மாந்தரே பெரிது என்பாரும், மகளிரே பெரிது என்பாரும்,
    போந்ததே பெரிது என்பாரும், புகுவதே பெரிது என்பாரும்,
    தேர்ந்ததே தேரின் அல்லால், யாவரே தெரியக் கண்டார்? 73

  396. மகளிர் கூட்டம்

  397. குவளையின் எழிலும், வேலின் கொடுமையும், குழைத்துக் கூட்டி,
    திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினைத் தெரியத் தீட்டி,
    தவள ஒண் மதியுள் வைத்த தன்மை சால் தடங் கண் நல்லார்,
    துவளும் நுண் இடையார், ஆடும் தோகை அம் குழாத்தின் தொக்கார். 74

  398. முடி சூட்டு விழாவிற்கு வராதவர்

  399. நலம் கிளர் பூமி என்னும் நங்கையை நறுந் துழாயின்
    அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார் -
    இலங்கையின் நிருதரே; இவ் ஏழ் உலகத்து வாழும்
    விலங்கலும், ஆசை நின்ற விடா மத விலங்கலேயால். 75

  400. மன்னர்கள் திருமுடி சூட்டும் மண்டபம் புகுதல்

  401. சந்திரர் கோடி என்னத் தரள வெண் கவிகை ஓங்க,
    அந்தரத்து அன்னம் எல்லாம் ஆர்ந்தெனக் கவரி துன்ன,
    இந்திரற்கு உவமை சாலும் இருநிலக் கிழவர் எல்லாம்
    வந்தனர்; மௌலி சூட்டும் மண்டபம் மரபின் புக்கார். 76

  402. அந்தணர்கள் வருகை

  403. முன் பயந்து எடுத்த காதல் புதல்வனை முறையினோடும்
    இற் பயன் சிறப்பிப்பாரின், ஈண்டிய உவகை தூண்ட,
    அற்புதன் திருவைச் சேரும் அரு மணம் காணப் புக்கார் -
    நல் பயன் தவத்தின் உய்க்கும் நான்மறைக் கிழவர் எல்லாம். 77

  404. பல் வகை நிகழ்ச்சிகள்

  405. விண்ணவர் விசும்பு தூர்த்தார்; விரிதிரை உடுத்த கோல
    மண்ணவர் திசைகள் தூர்த்தார்; மங்கலம் இசைக்கும் சங்கம்
    கண் அகல் முரசின் அதை கண்டவர் செவிகள் தூர்த்த;
    எண் அருங் கனக மாரி எழுதிரைக் கடலுந் தூர்த்த. 78

  406. ஒளிவெள்ளம்

  407. விளக்கு ஒளி மறைத்த, மன்னர் மின் ஒளி; மகுட கோடி
    துளக்கு ஒளி, விசும்பின் ஊரும் சுடரையும் மறைத்த; சூழ்ந்த
    அளக்கர் வாய் முத்த மூரல் முறுவலார் அணியின் சோதி,
    வளைக்கலாம் என்று, அவ் வானோர் கண்ணையும் மறைத்த அன்றே. 79

  408. வசிட்ட முனிவன் வேதியரோடு வருதல்

  409. ஆயது ஓர் அமைதியின்கண், ஐயனை மகுடம் சூட்டற்கு
    ஏயும்மங் கலங்களான யாவையும் இயையக் கொண்டு,
    தூயநான் மறைகள் வேத பாரகர் சொல்லத் தொல்லை
    வாயில்கள் நெருக்கம் நீங்க, மாதவக் கிழவன் வந்தான். 80

  410. வசிட்ட முனிவனின் செயல்

  411. கங்கையே முதலவாகக் கன்னி ஈறான தீர்த்தம்
    மங்கலப் புனலும், நாலு வாரியின் நீரும், பூரித்து
    அங்கியின் வினையிற்கு ஏற்ற யாவையும் அமைத்து, வீரச்
    சிங்க ஆசனமும் வைத்துச் செய்வன பிறவும் செய்தான். 81

  412. வசிட்டனின் கட்டளைப்படி தயரதனை அழைத்துவரச் சுமந்திரன் செல்லுதல்

  413. கணித நூல் உணர்ந்த மாந்தர், காலம் வந்து அடுத்தது என்ன,
    பிணி அற நோற்று நின்ற பெரியவன், விரைவின் ஏகி
    மணி முடி வேந்தன் தன்னை வல்லையின் கொணர்தி என்ன,
    பணி தலைநின்ற காதல் சுமந்திரன் பரிவின் சென்றான். 82

  414. கைகேயி சுமந்திரனிடம் இராமனை அழைத்து வருமாறு கூறுதல்

  415. விண் தொட நிவந்த கோயில், வேந்தர் தம் வேந்தன் தன்னைக்
    கண்டிலன்; வினவக் கேட்டான்; கைகயள் கோயில் நண்ணி,
    தொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல, மற்று அவரும் சொல்ல,
    பெண்டிரில் கூற்றம் அன்னாள், பிள்ளையைக் கொணர்க என்றாள். 83

  416. கைகேயி கட்டளைப்படி சுமந்திரன் இராமனை அழைத்துவரச் செல்லுதல்

  417. என்றனள் என்னக் கேட்டான்; எழுந்தபேர் உவகை பொங்கப்
    பொன் திணி மாட வீதி பொருக்கென நீங்கிப் புக்கான்,
    தன் திரு உள்ளத் துள்ளே தன்னையே நினையும் மற்று அக்
    குன்று இவர் தோளினானைத் தொழுது, வாய் புதைத்து, கூறும்: 84

  418. சுமந்திரன் இராமனை திருமுடி சூட்ட விரைவில் வருமாறு அழைத்தல்

  419. கொற்றவர், முனிவர், மற்றும் குவலயத்து உள்ளார், உன்னைப்
    பெற்றவன் தன்னைப் போலப் பெரும்பரிவு இயற்றி நின்றார்;
    சிற்றவை தானும், ஆங்கே கொணர்க! எனச் செப்பினாள் அப்
    பொன் தட மகுடம் சூடப் போகுதி விரைவின் என்றான். 85

  420. இராமன் தேரேறி செல்லுதல்

  421. ஐயனும், அச்சொல் கேளா, ஆயிரம் மௌலி யானைக்
    கைதொழுது, அரச வெள்ளம் கடலெனத் தொடர்ந்து சுற்றத்
    தெய்வ கீதங்கள் பாடத் தேவரும் மகிழ்ந்து வாழ்த்தத்
    தையலார் இரைத்து நோக்கத் தாரணி தேரில் சென்றான். 86

  422. தேரில் செல்லும் இராமனைக் கண்ட மகளிர் செயல்கள்

  423. திரு மணி மகுடம் சூடச் சேவகன் செல்கின்றான் என்று,
    ஒருவரின் ஒருவர் முந்த, காதலோடு உவகை உந்த,
    இரு கையும் இரைத்து மொய்த்தார்; இன் உயிர் யார்க்கும் ஒன்றாய்ப்
    பொரு அரு தேரில் செல்ல, புறத்திடைக் கண்டார் போல்வார். 87

  424. துண்ணெனும், சொல்லாள் சொல்லச் சுடர்முடி துறந்து, தூய
    மண்ணெனும் திருவை நீங்கி, வழிக்கொளா முன்னம், வள்ளல்
    பண்ணெனும் சொல்லினார் தம் தோளெனும் பணைத்த வேயும்,
    கண்ணெனும் கால வேலும் மிடைநெடுங் கானம் புக்கான். 88

  425. சுண்ணமும் மலரும் சாந்தும் கனகமும் தூவ வந்து,
    வண்ண மேகலையும் நாணும் வளைகளும் தூவுவாரும்;
    புண் உற அனங்கன் வாளி புழைத்த தம் புணர் மென் கொங்கை
    கண் உறப் பொழிந்த காம வெம் புனல் கழுவுவாரும்; 89

  426. அங்கணன் அவனி காத்தற்கு ஆம் இவன் என்னல் ஆமோ?
    நம் கண் அன்பு இலன் என்று, உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார்,
    செங்கணும், கரிய கோல மேனியும், தேரும் ஆகி,
    எங்கணும் தோன்றுகின்றான்; எனைவரோ இராமன்? என்பார். 90

  427. இராமனைக் கண்ட முனிவர் முதலியோர் நினைப்பும் பேச்சும்

  428. இனையராய் மகளிர் எல்லாம் இரைத்தனர், நிரைத்து மொய்த்தார்;
    முனைவரும், நகர மூதூர் முதிஞரும் இளைஞர் தாமும்,
    அனையவன் மேனி கண்டார், அன்பினுக்கு எல்லை காணார்,
    நினைவன மனத்தால், வாயால் நிகழ்ந்தது, நிகழ்த்தலுற்றாம்: 91

  429. உய்த்தது இவ்வுலகம் என்பார்; ஊழி காண் கிற்பாய் என்பார்;
    மைந்த! நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும் என்பார்;
    ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக என்பார்;
    பைந் துழாய்த் தெரியலாய்க்கே நல்வினை பயக்க என்பார். 92

  430. உயர் அருள் ஒண்கண் ஒக்கும் தாமரை, நிறத்தை ஒக்கும்
    புயல்மொழி மேகம், என்ன புண்ணியம் செய்த! என்பார்;
    செயலருந் தவங்கள் செய்திச் செம்மலைத் தந்த செல்வத்
    தயரதற்கு என்ன கைம்மாறு உடையம் யாம் தக்கது? என்பார். 93

  431. வாரணம் அரற்ற வந்து, கராவுயிர் மாற்றும் நேமி
    நாரணன் ஒக்கும், இந்த நம்பிதன் கருணை என்பார்;
    ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கிக்
    காரணம் இன்றியேயும், கண்கள் நீர் கலுழ நிற்பார். 94

  432. நீலமா முகில் அனான் தன் நிறைவினோடு அறிவு நிற்க,
    சீலம் ஆர்க்கு உண்டு? கெட்டேன்! தேவரின் அடங்கு வானோ?
    காலமா கணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற
    மூலமாய், முடிவிலாத மூர்த்தி இம் முன்பன் என்பார். 95

  433. ஆர்கலி அகழ்ந்தோர் கங்கை அவனியில் கொணர்ந்தோர் முந்தைப்
    போர்கெழு புலவர்க்கு ஆகி அசுரரைப் பொருது வென்றோர்,
    பேர்கெழு சிறப்பின் வந்த பெரும்புகழ் நிற்பது, ஐயன்
    தார்கெழு திரள்தோள் தந்த புகழினைத் தழுவி என்பார். 96

  434. மக்களின் ஈகைச் செயல்கள்

  435. சந்தம் இவை; தா இல் மணி ஆரம் இவை; யாவும்
    சிந்துரமும் இங்கு இவை; செறிந்த மத வேழப்
    பந்திகள், வயப் பரி, பசும் பொனின் வெறுக்கை,
    மைந்த! வறியோர் கொள வழங்கு என நிரைப்பார். 97

  436. மின்பொருவு தேரின்மிசை வீரன் வரு போழ்தில்,
    தன்பொருவில் கன்றுதனி தாவிவரல் கண்டாங்கு
    அன்பு உருகு சிந்தையொடும் ஆஉருகு மாபோல்,
    என்பு உருக, நெஞ்சு உருகி, யார் உருககில்லார்? 98

  437. சத்திரம் நிழற்ற, நிமிர் தானையொடு நானா
    அத்திரம் நிழற்ற, அருளோடு அவனி ஆள்வார்,
    புத்திரர் இனிப் பெறுதல் புல்லிது என, நல்லோர்,
    சித்திரம் எனத் தனி திகைத்து, உருகி, நிற்பார். 99

  438. கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன்,
    தேர்மிசை, நம் வாயில் கடிது ஏகுதல் செய்வானோ?
    கூர் கனக ராசியோடு கோடிமணி யாலும்
    தூர்மின், நெடு வீதியினை என்றுசொரி வாரும். 100

  439. தாய் கையில் வளர்ந்திலன்; வளர்த்தது, தவத்தால்
    கேகயன் மடந்தை; கிளர் ஞாலம் இவன் ஆள,
    ஈகையில் உவந்த அவ் இயற்கை இது என்றால்,
    தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது? என்பார். 101

  440. பாவமும் அருந் துயரும் வேர் பறியும் என்பார்;
    பூ வலயம் இன்றுதனி அன்று; பொது என்பார்;
    தேவர்பகை உள்ளன இவ் வள்ளல்தெறும் என்பார்;
    ஏவல்செயும் மன்னர்தவம் யாவதுகொல்? என்பார். 102

  441. இராமன் தயரதன் அரண்மனை அடைதலும், அங்கு அவனைக் காணாமையும்

  442. ஆண்டு, இனையர் ஆயினைய, கூற அடல் வீரன்,
    தூண்டு புரவிப் பொருவில் சுந்தர மணித்தேர்,
    நீண்ட கொடி மாடநிரை வீதிநிறையப்போய்ப்,
    பூண்டபுகழ் மன்னன் உறை கோயில்புகலோடும் 103

  443. ஆங்குவந்து அடைந்த அண்ணல், ஆசையின் கவரி வீசப்
    பூங்குழல் மகளிர் உள்ளம் புதுக்களி ஆட, நோக்கி
    வீங்கிருங் காதல் காட்டி, விரிமுகம் கமல பீடத்து
    ஓங்கிய மகுடம் சூடி, உவகைவீற்றிருப்பக் காணான். 104

  444. இராமன் கைகேயின் அரண்மனை புகுதல்

  445. வேத்தவை, முனிவரோடு விருப்பொடு களிக்கும் மெய்ம்மை
    ஏத்தவை இசைக்கும்; செம்பொன் மண்டபம் இனிதின் எய்தான்
    ஒத்தவை உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளம்
    பூத்தவை வடிவை ஒப்பான், சிற்றவை கோயில் புக்கான். 105

  446. இராமன் கைகேயின் அரண்மனை சென்றதை புரவலர் போன்றோர் பாராட்டுதல்

  447. புக்கவன் தன்னை நோக்கி, புரவலர், முனிவர், யாரும்,
    தக்கதே நினைந்தான்; தாதை தாமரைச் சரணம் சூடி,
    திக்கினை நிமிர்த்த கோலச் செங்கதிர்ச் செல்வன் ஏய்ந்த
    மிக்கு உயர் மகுடம் சூட்டச் சூடுதல் விழுமிது என்றார். 106

  448. இராமன் கைகேயியை சந்தித்தால்

  449. ஆயன நிகழும் வேலை, அண்ணலும் அயர்ந்து தேறாத்
    தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி,
    நாயகன் உரையான் வாயால்; நான் இது பகர்வென் என்னா,
    தாயென நினைவான் முன்னே கூற்றெனத் தமியள் வந்தாள் 107

  450. கைகேயியை வணங்கி இராமன் பணிவுடன் நிற்றல்

  451. வந்தவள் தன்னைச் சென்னி மண்ணுற வணங்கி வாசச்
    சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையின் புதைத்து, மற்றைச்
    சுந்தரத் தடக் கை தானை மடக்குறத் துவண்டு நின்றான் -
    அந்தி வந்து அடைந்த தாயைக் கண்ட ஆன் கன்றின் அன்னான். 108

  452. கைகேயின் வஞ்சக உரை

  453. நின்றவன் தன்னை நோக்கி, இரும்பினால் இயன்ற நெஞ்சில்
    கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றிக் கொடுமை பூண்டாள்,
    இன்று எனக்கு உணர்த்தலாவது ஏயதே என்னில் ஆகும்;
    ஒன்று உனக்கு உந்தை, மைந்த! உரைப்பதோர் உரையுண்டு என்றாள். 109

  454. மன்னவன் ஆணையை கூற இராமன் பணிந்துரைத்தல்

  455. எந்தையே ஏவ, நீரே உரைசெய இயைவது உண்டேல்,
    உய்ந்தனன் அடியேன்; என்னின் பிறந்தவர் உளரோ? வாழி!
    வந்ததென் தவத்தின் ஆய வருபயன்; மற்றொன்று உண்டோ ?
    தந்தையும், தாயும், நீரே; தலைநின்றேன்; பணிமின் என்றான். 110

  456. கைகேயி தெரிவித்த மன்னனின் ஆணை

  457. ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
    தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் மேற்கொண்டு,
    பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி,
    ஏழ்-இரண்டு ஆண்டின் வா என்று, இயம்பினன் அரசன் என்றாள். 111

  458. கைகேயின் உரை கேட்ட இராமனது தோற்றப் பொலிவு

  459. இப்பொழுது, எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும்
    செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;
    ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட
    அப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா! 112

  460. தெருளுடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி,
    இருளுடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான்,
    உருளுடைச் சகடம் பூண், உடையவன் உய்த்த காரேறு
    அருளுடை ஒருவன் நீக்க, அப்பிணி அவிழ்ந்தது ஒத்தான். 113

  461. காட்டிற்கு செல்ல இராமன் கைகேயியினிடம் விடை கொள்ளுதல்

  462. மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என்
    பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
    என் இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன்;
    மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன். 114

  463. கோசலையின் மாளிகைக்குள் இராமன் புகுதல்

  464. என்று கொண்டு இனைய கூறி, அடி இணை இறைஞ்சி, மீட்டும்,
    தன் துணைத் தாதை பாதம் அத் திசை நோக்கித் தாழ்ந்து,
    பொன் திணி போதினாளும், பூமியும், புலம்பி நைய,
    குன்றினும் உயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான். 115

  465. மிகைப் பாடல்கள்

  466. வந்து மன் நகரில் தம்தம் வகைப்படும் உருவம் மாற்றி,
    சுந்தரத் தடந்தோள் மாந்தர் தொல் உருச் சுமந்து தோன்றாது,
    அந்தரத்து அமரர், சித்தர், அரம்பையர், ஆதி ஆக
    இந்திரை கொழுநற் போற்றி இரைத்துமே எய்தி நின்றார். 75-1

  467. அயோத்தியா காண்டம்

    4. நகர் நீங்கு படலம்


    இராமன் கோசலை உரையாடல்

  468. குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்றவெண் குடையும் இன்றி
    இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக
    மழைக்குன்றம் அனையாள் மௌலி கவித்தனன் வருமென்று என்று
    தழைக்கின்ற உள்ளத் தன்னாள் முன் ஒரு தமியன் சென்றான். 1

  469. புனைந்திலன் மௌலி; குஞ்சி மஞ்சனப் புனித நீரால்
    நனைந்திலன்; என்கொல்? என்னும் ஐயத்தால் நளினம் பாதம்
    வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி
    நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு? என்றாள். 2

  470. மங்கை அம்மொழி கூறலும், மானவன்
    செங்கை கூப்பி , நின் காதல் திரு மகன்,
    பங்கம் இல் குணத்து எம்பி, பரதனே,
    துங்க மா முடி சூடுகின்றான் என்றான். 3

  471. முறைமை அன்று என்பது ஒன்று உண்டு; மும்மையின்
    நிறை குணத்தவன்; நின்னினும் நல்லனால்;
    குறைவு இலன் எனக் கூறினாள் - நால்வர்க்கும்
    மறு இல் அன்பினில், வேற்றுமை மாற்றினாள். 4

  472. என்று, பின்னரும், மன்னன் ஏவியது
    அன்று எனாமை, மகனே! உனக்கு அறன்
    நன்று, நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து
    ஒன்றி வாழுதி, ஊழி பல என்றாள். 5

  473. தாய் உரைத்த சொல் கேட்டுத் தழைக்கின்ற
    தூய சிந்தை அத் தோம் இல் குணத்தினான்,
    நாயகன், எனை நல் நெறி உய்ப்பதற்கு
    ஏயது உண்டு, ஓர் பணி என்று இயம்பினான். 6

  474. ஈண்டு உரைத்த பணி என்னை? என்றவட்கு,
    ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ், அகல் கானிடை
    மாண்ட மாதவத் தோருடன் வைகிப்பின்,
    மீண்டு நீ வரல் வேண்டும் என்றான் என்றான். 7

  475. இராமன் காட்டிற்கு செல்லவேண்டும் எனக் கேட்ட கோசலையின் துயரம்

  476. ஆங்கு, அவ் வாசகம் என்னும் அனல், குழை
    தூங்கு தன் செவியில் தொடராமுனம்,
    ஏங்கினாள்; இளைத்தாள்; திகைத்தாள்; மனம்
    வீங்கினாள்; விம்மினாள்; விழுந்தாள் அரோ. 8

  477. வஞ்சமோ, மகனே! உனை, மா நிலம்
    தஞ்சம் ஆக நீ தாங்கு என்ற வாசகம்?
    நஞ்சமோ! இனி, நான் உயிர் வாழ்வெனோ?
    அஞ்சும்; அஞ்சும்; என் ஆர் உயிர் அஞ்சுமால்! 9

  478. கையைக் கையின் நெரிக்கும்; தன் காதலன்
    வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினைப்
    பெய் வளைத் தளிரால் பிசையும்; புகை
    வெய்து உயிர்க்கும்; விழுங்கும், புழுங்குமால். 10

  479. நன்று மன்னன் கருணை எனா நகும்;
    நின்ற மைந்தனை நோக்கி, நெடுஞ் சுரத்து
    என்று போவது? எனா எழும்; இன் உயிர்
    பொன்றும் போது உற்றது உற்றனன் போலுமே. 11

  480. அன்பு இழைத்த மனத்து அரசற்கு, நீ
    என் பிழைத்தனை? என்று, நின்று ஏங்குமால்-
    முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர்,
    பொன் பிழைக்கப் புலம்பினர் போலவே. 12

  481. அறம் எனக்கு இலையோ? என்னும்; ஆவிநைந்து
    இற அடுத்தது என், தெய்வதங் காள்? என்னும்
    பிற உரைப்பது என்? கன்று பிரிந்துழிக்
    கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள். 13

  482. துயருற்ற கோசலையை இராமன் தேற்றி ஆறுதல் கூறுதல்

  483. இத் திறத்தின் இடர் உறு வாள்தனைக்
    கைத்தலத்தின் எடுத்து, அருங் கற்பினோய்!
    பொய்த் திறத்தினன் ஆக்குதியோ? புகல் -
    மெய்த்திறத்து நம் வேந்தனை, நீ என்றான். 14

  484. பொற்பு உறுத்தன, மெய்ம்மை பொதிந்தன!
    சொற்பு உறுத்தற்கு உரியன, சொல்லினான்-
    கற்பு உறுத்திய கற்புடை யாள் தனை
    வற்புறுத்தி, மனங்கொளத் தேற்றுவான். 15

  485. சிறந்த தம்பி திருவுற எந்தையை
    மறந்தும் பொய்யிலன் ஆக்கி, வனத்திடை
    உறைந்து தீரும் உறுதி பெற்றேன்; இதின்,
    பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ? 16

  486. விண்ணும் மண்ணும், இவ் வேலையும், மற்றும் வேறு
    எண்ணும் பூதம் எலாம் அழிந்து ஏகினும்,
    அண்ணல் ஏவல் மறுக்க, அடியனேற்கு
    ஒண்ணுமோ? இதற்கு உள் அழியேல் என்றான். 17

  487. தன்னையும் உடன் காட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கோசலை வேண்டுதல்

  488. ஆகின், ஐய! அரசன் தன் ஆணையால்
    ஏகல் என்பது யானும் உரைக்கிலென்;
    சாகலா உயிர் தாங்க வல்லேனையும்,
    போகின், நின்னொடும் கொண்டனை போகு என்றாள். 18

  489. கோசலையின் வேண்டுதலை இராமன் மறுத்து உரைத்தல்

  490. என்னை நீங்கி இடர்க் கடல் வைகுறும்
    மன்னர் மன்னனை வற்புறுத்தாது, உடன்
    துன்னும் கானம் தொடரத் துணிவதோ?
    அன்னையே! அறம் பார்க்கிலை ஆம் என்றான். 19

  491. வரிவில் எம்பி இம் மண் அரசு ஆய், அவற்கு
    உரிமை மா நிலம் உற்றபின், கொற்றவன்
    திருவின் நீங்கித் தவம் செயும் நாள், உடன்,
    அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே! 20

  492. சித்தம் நீ திகைக்கின்றது என்? தேவரும்
    ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே?
    எத்தனைக்கு உள ஆண்டுகள்? ஈண்டு, அவை
    பத்தும் நாலும் பகல் அலவோ? என்றான். 21

  493. முன்னர் கோசிகன் என்னும் முனிவரன்
    தன் அருள் தலை தாங்கிய விஞ்சையும்
    பின்னர் எய்திய பேறும் பிழைத்தவோ?
    இன்னம் நன்று அவர் ஏயின செய்தலே. 22

  494. மாதவர்க்கு வழிபாடு இழைத்து, அரும்
    போதம் முற்றி, பொரு அரு விஞ்சைகள்
    ஏதம் அற்றன தாங்கி, இமையவர்
    காதல் பெற்று, இந் நகர் வரக் காண்டியால். 23

  495. மகர வேலைமண் தொட்ட, வண்டு ஆடுதார்ச்
    சகரர்; தாதை பணிதலை நின்று, தம்
    புகரில்யாக் கையின் இன்னுயிர் போக்கிய
    நிகரில் மாப்புகழ் நின்றது அன்றோ? எனா. 24

  496. மான் மறிக் கரத்தான் மழு ஏந்துவான்,
    தான் மறுத்திலன் தாதைசொல்; தாயையே,
    ஊன் அறக்குறைத்தான்; உரவோன் அருள்
    யான் மறுப்பது என்று எண்ணுவதோ? என்றான். 25

  497. இராமன் காடு செல்வதை தடுக்க எண்ணி கோசலை தயரதனிடம் செல்லுதல்

  498. இத் திறத்த எனைப் பல வாசகம்
    உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா,
    எத் திறத்தும் இறக்கும் இந் நாடு எனா,
    மெய்த் திறத்து விளங்கிழை உன்னுவாள். 26

  499. அவனி காவல் பரதனது ஆகுக;
    இவன் இஞ் ஞாலம் இறந்து, இருங் கானிடைத்
    தவன் நிலாவகைக் காப்பென், தகைவினால்,
    புவனி நாதன் தொழுது என்று போயினாள். 27

  500. இராமன் சுமித்திரையின் மாளிகைக்குச் செல்லுதல்

  501. போகின்றாளைத் தொழுது, புரவலன்
    ஆகம் மற்று அவள் தன்னையும் ஆற்றி, இச்
    சோகம் தீர்ப்பவள் என்று, சுமித்திரை
    மேகம் தோய் தனிக் கோயிலை மேயினான். 28

  502. கைகேயின் மாளிகையில் தயரதன் நிலை கண்டு கோசலை மயங்கி விழுதல்

  503. நடந்த கோசலை, கேகய நாட்டு இறை
    மடந்தை கோயிலை எய்தினள்; மன்னவன்
    கிடந்த பார்மிசை வீழ்ந்தனள் - கெட்டு உயிர்
    உடைந்த போழ்தின் உடல் விழுந்தென்னவே. 29

  504. கோசலையின் புலம்பல்

  505. பிறியார் பிரிவு ஏது? என்னும்; பெரியோய் தகவோ! என்னும்;
    நெறியோ, அடியேன் நிலை? நீ நினையா நினைவு ஏது? என்னும்;
    வறியோர் தனமே! என்னும்; தமியேன் வலியே! என்னும்;
    அறிவோ; வினையோ? என்னும்; அரசே! அரசே! என்னும். 30

  506. இருள் அற்றிட உற்று ஒளிரும் இரவிக்கு எதிரும் திகிரி
    உருளைத் தனி உய்த்து, ஒரு கோல் நடையின் கடை காண் உலகம்
    பொருள் அற்றிட முற்றுறும் அப் பகலில் புகுதற்கு என்றோ,
    அருளக் கருதிற்று இதுவோ? அரசர்க்கு அரசே! என்னும். 31

  507. திரை ஆர் கடல் சூழ் உலகின் தவமே! திருவின் திருவே!
    நிரை ஆர் கலையின் கடலே! நெறி ஆர் மறையின் நிலையே!
    கரையா அயர்வேன்; எனை, நீ, கருணாலயனே! என்? என்று
    உரையா இதுதான் அழகோ? உலகு ஏழ் உடையாய்! என்னும். 32

  508. மின் நின்றனைய மேனி, வெறிதாய் விட நின்றது போல்
    உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான்;
    என் என்று உரையான்; என்னே? இதுதான் யாது என்று அறியேன்;
    மன்னன் தகைமை காண வாராய்; மகனே! என்னும். 33

  509. கோசலை புலம்பலை பிறர் சொல்லக் கேட்ட வசிட்டனின் வருகை

  510. இவ்வாறு அழுவாள் இரியல் குரல் சென்று இசையாமுன்னம்,
    ஒவ்வாது, ஒவ்வாது என்னா, ஒளிவாள் நிருபர், முனிவர்,
    அவ் ஆறு அறிவாய் என்ன, வந்தான் முனிவன்; அவனும்,
    வெவ் வாள் அரசன் நிலை கண்டு. என் ஆம் விளைவு? என்று உன்னா. 34

  511. நிலைமையைக் கண்ட வசிட்டனின் மனக் கருத்து

  512. இறந்தான் அல்லன் அரசன்; இறவாது ஒழிவான் அல்லன்;
    மறந்தான் உணர்வு என்று உன்னா, வன் கேகயர்கோன் மங்கை
    துறந்தாள் துயரம் தன்னை; துறவாது ஒழிவாள் இவளே;
    பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கு எளிதோ?. 35

  513. வசிட்டனிடம் கைகேயி நிகழ்ந்தவற்றை கூறுதல்

  514. என்னா உன்னா, முனிவன், இடரால் அழிவாள் துயரம்
    சொன்னாள் ஆகாள் என்முன் தொழுகே கயர்கோன் மகளை,
    அன்னாய்! உரையாய்; அரசன் அயர்வான் நிலை என்? என்ன,
    தன்னால் நிகழ்ந்த தன்மை தானே தெரியச் சொன்னாள். 36

  515. வசிட்டன் தயரதனை தெளிவித்தல்

  516. சொற்றாள், சொல்லாமுன்னம், சுடர்வாள் அரசர்க்கு அரசை,
    பொன் - தாமரை போல் கையால், பொடி சூழ் படிநின்று எழுவி,
    கற்றாய், அயரேல்; அவளே தரும், நின் காதற்கு அரசை;
    எற்றே செயல் இன்று ஒழி நீ என்று என்று இரவா நின்றான். 37

  517. தயரதன் உணர்வு பெறுதல்

  518. சீதப் பனி நீர் அளவி, திண் கால் உக்கம் மென் கால்
    போதத்து அளவே தவழ்வித்து, இன்சொல் புகலாநின்றான்;
    ஓதக் கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒருவாறு அவிய,
    காதல் புதல்வன் பெயரே புகல்வான் உயிரும் கண்டான். 38

  519. வசிட்டனின் தேறுதல் வார்த்தைகள்

  520. காணா, ஐயா! இனி, நீ ஒழிவாய் கழி பேர் அவலம்;
    ஆண் நாயகனே, இனி, நாடு ஆள்வான்; இடையூறு உளதோ?
    மாணா உரையாள், தானே தரும்; மா மழையே அனையான்
    பூணாது ஒழிவான் எனின், யாம் உளமோ? பொன்றேல் என்றான். 39

  521. வசிட்டனிடம் தயரதன் வேண்டுகோள்

  522. என்ற அம் முனிவன் தன்னை, நினையா வினையேன், இனி, யான்
    பொன்றும் அளவில் அவனைப் புனை மா மகுடம் புனைவித்து,
    ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து, என் உரையும்,
    குன்றும் பழி பூணாமல், காவாய்; கோவே! என்றான். 40

  523. வசிட்டனின் அறிவுரையும் கைகேயின் மறுப்பும்

  524. முனியும், முனியும் செய்கைக் கொடியாள் முகமே முன்னி,
    இனி, உன் புதல்வற்கு அரசும், ஏனையோர்க்கு இன் உயிரும்
    மனுவின் வழிநின் கணவற்கு உயிரும் உதவி, வசைதீர்
    புனிதம் மருவும் புகழே புனைவாய்; பொன்னே! என்றான். 41

  525. மொய்ம் மாண் வினை வேர் அற வென்று உயர்வான் மொழியாமுன்னம்
    விம்மா அழுவாள், அரசன் மெய்யின் திரிவான் என்னில்,
    இம் மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன்; என்சொல்
    பொய்ம் மாணாமற்கு, இன்றே, பொன்றாது ஒழியேன் என்றாள். 42

  526. வசிட்டன் கைகேயியை கடிந்துரைத்தல்

  527. கொழுநன் துஞ்சும் எனவும், கொள்ளாது உலகம் எனவும்,
    பழி நின்று உயரும் எனவும், பாவம் உளது ஆம் எனவும்,
    ஒழிகின்றிலை; அன்றியும், ஒன்று உணர்கின்றிலை; யான் இனிமேல்
    மொழிகின்றன என்? என்னா, முனியும், முறை அன்று என்பான். 43

  528. கண்ணோடாதே, கணவன் உயிர் ஓடு இடர் காணாதே,
    புண்ணூடு ஓடும் கனலோ? விடமோ? என்னப் புகல்வாய்;
    பெண்ணோ? தீயோ? மாயாப் பேயோ? கொடியாய்! நீ; இம்
    மண்ணோடு உன்னோடு என் ஆம்? வசையோ வலிதே! என்றான். 44

  529. வாயால், மன்னன், மகனை, வனம் ஏகு என்னா முன்னம்,
    நீயோ சொன்னாய்; அவனோ, நிமிர் கானிடை வெந் நெறியில்
    போயோ புகலோ தவிரான்; புகழோடு உயிரைச் சுடு வெந்
    தீயோய்! நின்போல் தீயார் உளரோ? செயல் என்? என்றான். 45

  530. தயரதன் வருத்தத்துடன் கைகேயியை பழித்துக் கூறுதல்

  531. தா இல் முனிவன் புகல, தளராநின்ற மன்னன்,
    நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி,
    பாவி! நீயே, வெங் கான் படர்வாய் என்று, என் உயிரை
    ஏவினாயோ? அவனும் ஏகினானோ? என்றான். 46

  532. கண்டேன் நெஞ்சம்; கனிவாய்க் கனிவாய் விடம், நான் நெடுநாள்
    உண்டேன்; அதனால், நீ என் உயிரை முதலோடு உண்டாய்;
    பண்டே, எரிமுன், உன்னை, பாவி! தேவி ஆகக்
    கொண்டேன் அல்லேன்; வேறு ஓர் கூற்றம் தேடிக் கொண்டேன். 47

  533. விழிக்கும் கண்வேறு இல்லா, வெங்கான், என் கான்முளையைச்
    சுழிக்கும் வினையால் ஏகச் சூழ்வாய்; என்னைப் போழ்வாய்;
    பழிக்கும் நாணாய்; மாணாப் பாவி! இனி, என் பல? உன்
    கழுத்தின் நாண், உன் மகற்குக் காப்பின் நாண் ஆம் என்றான். 48

  534. கைகேயி, பரதன் இருவரையும் தயரதன் துறத்தல்

  535. இன்னே பலவும் பகர்வான்; இரங்கா தாளை நோக்கி,
    சொன்னேன் இன்றே; இவள் என் தாரம் அல்லள்; துறந்தேன்;
    மன்னே ஆவான் வரும் அப் பரதன் தனையும் மகனென்று
    உன்னேன்; முனிவா! அவனும் ஆகான் உரிமைக்கு என்றான். 49

  536. தயரதன் நிலை கண்ட கோசலையின் துயர்நிலை

  537. என்னைக் கண்டும் ஏகாவண்ணம் இடையூறு உடையான்
    உன்னைக் கண்டும் இலனோ? என்றான், உயர் கோசலையை;
    பின்னைக் கண்தான் அனையான் பிரியக் கண்ட துயரம்,
    தன்னைக் கண்டே தவிர்வாள்; தளர்வான் நிலையில் தளர்வாள். 50

  538. மாற்றாள் செயல் ஆம் என்றும், கணவன் வரம் ஈந்து உள்ளம்
    ஆற்றாது அயர்ந்தான் என்றும், அறிந்தாள்; அவளும், அவனைத்
    தேற்றா நின்றாள்; மகனைத் திரிவான் என்றாள்; அரசன்
    தோற்றான் மெய் என்று, உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள். 51

  539. தயரதனை கோசலை தேற்றுதல்

  540. தள்ளா நிலைசால் மெய்ம்மை தழுவா வழுவா வகைநின்று
    எள்ளா நிலை கூர் பெருமைக்கு இழிவாம் என்றால், உரவோய்!
    விள்ளா நிலைசேர் அன்பால் மகன்மேல் மெலியின், உலகம்
    கொள்ளா தன்றோ? என்றான், கணவன் குறையக் குறைவாள். 52

  541. கோசலையின் பெருந்துயர்

  542. போவாது ஒழியான் என்றாள், புதல்வன் தன்னைக் கணவன்
    சாவாது ஒழியான் என்று என்று, உள்ளம் தள்ளுற்று அயர்வாள்;
    காவாய் என்னாள் மகனைக் கணவன் புகழுக்கு அழிவாள்;
    ஆ! ஆ! உயர்கோ சலையாம் அன்னம் என்னுற் றனளே! 53

  543. இராமன் காட்டிற்கு செல்வது நினைத்து தயரதன் புலம்புதல்

  544. உணர்வான், அனையாள் உரையால், உயர்ந்தான் உரைசால் குமரன்
    புணரான் நிலமே, வனமே போவானே ஆம் என்னா; -
    இணரார் தருதார் அரசன் இடரால் அயர்வான்; வினையேன்
    துணைவா! துணைவா என்றான்; தோன்றால், தோன்றாய்! என்றான். 54

  545. கண்ணும் நீராய், உயிரும் ஒழுக, கழியாநின்றேன்;
    எண்ணும் நீர் நான்மறையோர், எரிமுன் நின்மேல் சொரிய,
    மண்ணும் நீராய் வந்த புனலை, மகனே! வினையேற்கு
    உண்ணும் நீராய் உதவி, உயர் கான் அடைவாய்! என்றான். 55

  546. படைமாண் அரசைப் பல கால் பழுவாய் மழுவால் எறிவான்,
    மிடை மா வலி தான் அனையான், வில்லால் அடுமா வல்லாய்!
    உடைமா மகுடம் புனை என்று உரையா, உடனே கொடியேன்
    சடை மா மகுடம் புனையத் தந்தேன்; அந்தோ! என்றான். 56

  547. கறுத்தாய் உருவம்; மனமும் கண்ணும் கையும் செய்யாய்;
    பொறுத்தாய் பொறையே; இறைவன் புரம்மூன்று எரித்த போர்வில்
    இறுத்தாய், தமியேன் என்னாது, என்னை இம்மூப்பு இடையே
    வெறுத்தாய்; இனி நான் வாழ்நாள் வேண்டேன்! வேண்டேன்! என்றான். 57

  548. பொன்னின் முன்னம் ஒளிரும் பொன்னே! புகழின் புகழே!
    மின்னின் மின்னும் வரிவில் குமரா! மெய்யின் மெய்யே!
    என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு, எளியேன் அல்லேன்;
    உன்னின் முன்னம் புகுவேன், உயர்வானகம்யான் என்றான். 58

  549. நெகுதற்கு ஒத்த நெஞ்சும் நேயத்தாலே ஆவி
    உகுதற்கு ஒத்த உடலும், உடையேன்; உன்போல் அல்லேன்;
    தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையைப் பற்றிப்
    புகுதக் கண்ட கண்ணால், போகக் காணேன் என்றான். 59

  550. எற்றே பகர்வேன், இனி, யான்? என்னே! உன்னின் பிரிய
    வற்றே உலகம் எனினும், வானே வருந்தாது எனினும்,
    பொன்-தேர் அரசே! தமியேன் புகழே! உயிரே உன்னைப்
    பெற்றேன்; அருமை அறிவேன்; பிழையேன்! பிழையேன்! என்றான். 60

  551. அள்ளற் பள்ளம் புனல்சூழ் அகல்மா நிலமும், அரசும்,
    கொள்ளக் குறையா நிதியின் குவையும், முதலாம் எவையும்
    கள்ளக் கைகேசிக்கே உதவி, புகழ் கைக்கொண்ட
    வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும்! மாய்க்கும்! என்றான். 61

  552. ஒலியார் கடல்சூழ் உலகத்து, உயர்வான் இடை, நா கரினும்
    பொலியா நின்றார் உன்னைப் போல்வார் உளரோ? பொன்னே!
    வலியார் உடையார்? என்றான்; மழுவாள் உடையான் வரவும்,
    சலியா நிலையாய் என்றால், தடுப்பார் உளரோ? என்றான். 62

  553. கேட்டே இருந்தேன் எனினும், கிளர் வான் இன்றே அடைய
    மாட்டேன் ஆகில் அன்றோ, வன்கண் என்கண்? மைந்தா!
    காட்டே உறைவாய் நீ! இக் கைகேசியையும் கண்டு, இந்
    நாட்டே உறைவேன் என்றால், நன்று என் நன்மை! என்றான். 63

  554. மெய் ஆர் தவமே செய்து, உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற
    செய்யாள் என்னும் பொன்னும், நிலமாது என்னும் திருவும்,
    உய்யார்! உய்யார்! கெடுவேன்; உன்னைப் பிரியின், வினையேன்,
    ஐயா! கைகேசியை நேராகேனோ நான்? என்றான். 64

  555. பூணார் அணியும், முடியும், பொன்னா சனமும், குடையும்,
    சேணார் மார்பும், திருவும், தெரியக் காணக் கடவேன்,
    மாணா மரவற் கலையும், மானின் தோலும் அவைநான்
    காணாது ஒழிந்தேன் என்றால், நன்று ஆய்த்து அன்றோ கருமம்? 65

  556. புலம்பும் தயரதனை வசிட்டன் தேற்றுதல்

  557. ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா உரை தந்து, அரசன், உயிரும்
    சென்றான் இன்றோடு என்னும் தன்மை எய்தித் தேய்த்தான்,
    மென் தோல் மார்பின் முனிவன், வேந்தே! அயரேல்; அவனை,
    இன்று ஏகாத வண்ணம் தகைவென் உலகோடு என்னா. 66

  558. வசிட்டன் மொழி கேட்டு தயரதன் சிறிது தெளிதல்

  559. முனிவன் சொல்லும் அளவில், முடியும்கொல்? என்று, அரசன்
    தனி நின்று உழல் தன் உயிரைச் சிறிதே தகைவான்; இந்தப்
    புனிதன் போனால், இவனால் போகாது ஒழிவான் என்னா,
    மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான். 67

  560. தயரதன் நிலை கண்டு கோசலை வருந்துதல்

  561. மறந்தான் நினைவும் உயிரும், மன்னன் என்னா மறுகா,
    இறந்தான் கொல்லோ அரசன்? என்னை இடருற்று அழிவாள்,
    துறந்தான் மகன் முன் எனையும்; துறந்தாய் நீயும்; துணைவா!
    அறம் தான் இதுவோ? ஐயா! அரசர்க்கு அரசே! என்றாள். 68

  562. தயரதனை கோசலை தேற்றுதல்

  563. மெய்யின் மெய்யே! உலகின் வேந்தர்க்கு எல்லாம் வேந்தே!
    உய்யும் வகைநின் உயிரை ஒம்பாது இங்ஙன் தேம்பின்,
    வையம் முழுதும் துயரால் மறுகும்; முனிவன் உடன்நம்
    ஐயன் வரினும் வருமால்; அயரேல்; அரசே! என்றாள். 69

  564. இராமன் வருவானா எனத் தயரதன் கோசலையிடம் கேட்டு வருந்துதல்

  565. என்று என்று, அரசன் மெய்யும், இரு தாள் இணையும், முகனும்,
    தன் தன் செய்ய கையால் தைவந்திடு கோசலையை,
    ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன், மெள்ள,
    வன் திண் சிலை நம் குரிசில் வருமே? வருமே? என்றான். 70

  566. தயரதன் கைகேயின் கொடுமையைக் கூறி வருந்துதல்

  567. வன் மாயக் கைகேசி வரத்தால், என்றன் உயிரை
    முன்மாய் விப்பத் துணிந்தாளேனும் கூனி மொழியால்,
    தன்மா மகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி
    என்மா மகனைக் கான் ஏகு என்றாள்; என்றாள்; என்றான். 71

  568. தயரதன் தான் சாபம் பெற்ற வரலாற்றை கோசலையிடம் கூறுதல்

  569. பொன் ஆர் வலயத் தோளான், கானோ புகுதல் தவிரான்;
    என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது; இது, கோசலை கேள்;
    முன் நாள், ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது என்று,
    அந் நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான். 72

  570. வெய்ய கானத் திடையே, வேட்டை வேட்கை மிகவே,
    ஐய, சென்று கரியோடு அரிகள் துருவித் திரிவேன்,
    கையும் சிலையும் கணையும் கொடு, கார் மிருகம் வரும் ஓர்
    செய்ய நதியின் கரைவாய்ச் சென்றே மறைய நின்றேன். 73

  571. ஒரு மா முனிவன் மனையோடு, ஒளியொன்று இலவாய் நயனம்
    திருமா மகனே துணையாய்த் தவமே புரிபோழ் தினின்வாய்,
    அருமா மகனே, புனல் கொண்டு அகல்வான் வருமாறு, அறியேன்,
    பொரு மா கணை விட்டிடலும், புவிமீது அலறிப் புரள. 74

  572. புக்குப் பெருநீர் நுகரும் பொரு போதகம் என்று, ஒலிமேல்
    கைக்கண் கணை சென்றது அலால், கண்ணின் தெரியக் காணேன்,
    அக் கைக் கரியின் குரலே அன்று ஈது என்ன வெருவா,
    மக்கள்-குரல் என்று அயர்வென், மனம் நொந்து, அவண் வந்தனெனால். 75

  573. கையும் கடனும் நெகிழக் கணையோடு உருள்வோன் காணா,
    மெய்யும் தனுவும் மனனும் வெறிது ஏகிடமேல் வீழா,
    ஐய! நீதான் யாவன்? அந்தோ! அருள்க என்று அயரப்
    பொய்யொன்று அறியா மைந்தன், கேள் நீ என்னப் புகல்வான். 76

  574. இருகண்களும் இன்றிய தாய் தந்தைக்கும், ஈங்கு, அவர்கள்
    பருகும் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன்; பழுது ஆயினதால்;-
    இரு குன்று அனைய புயத்தாய்!- இபம் என்று, உணராது எய்தாய்;
    உருகும் துயரம் தவிர், நீ; ஊழின் செயல் ஈது! என்றே. 77

  575. உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு, ஒரு நீ,
    தண்ணீர் கொடு போய் அளித்து, என் சாவும் உரைத்து, உம் புதல்வன்
    விண்மீது அடைவான் தொழுதான் எனவும், அவர்பால் விளம்பு என்று,
    எண் நீர்மையினான் விண்ணோர் எதிர்கொண்டிட, ஏகினனால். 78

  576. மைந்தன் வரவே நோக்கும்; வளர்மா தவர்பால், மகவோடு
    அந்தண் புனல்கொண்டு அணுக, ஐயா, இதுபோது அளவு ஆய்
    வந்திங்கு அணுகாது என்னோ வந்தது? என்றே நொந்தோம்;
    சந்தம் கமழும் தோளாய் தழுவிக் கொளவா எனவே. 79

  577. ஐயா! யான் ஓர் அரசன்; அயோத்தி நகரத்து உள்ளேன்;
    மை ஆர் களபம் துருவி, மறைந்தே வதிந்தேன், இருள்வாய்;
    பொய்யா வாய்மைப் புதல்வன் புனல் மொண்டிடும் ஓதையின் மேல்,
    கை ஆர் கணை சென்றது அலால், கண்ணின் தெரியக் காணேன். 80

  578. வீட்டுண்டு அலறும் குரலால், வேழக் குரல் அன்று எனவே
    ஓட்டந்து எதிரா, நீ யார்? என, உற்ற எலாம் உரையா,
    வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய், நின்றான் வணங்கா, வானோர்
    ஈட்டம் எதிர் வந்திடவே, இறந்து ஏகினன் விண்ணிடையே. 81

  579. அறுத்தாய் கணையால் எனவே, அடியேன் தன்னை, ஐயா!
    கறுத்தே அருளாய், யானோ கண்ணின் கண்டேன் அல்லேன்,
    மறுத்தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால்;
    பொறுத்தே அருள்வாய்! என்னா, இரு தாள் சென்னி புனைந்தேன். 82

  580. வீழ்ந்தார்; அயர்ந்தார்; புரண்டார்; விழி போயிற்று, இன்று என்றார்;
    ஆழ்ந்தார் துன்பக் கடலுள்; ஐயா! ஐயா! என்றார்;
    போழ்ந்தாய் நெஞ்சை என்றார்; பொன்நாடு அதனில் போய், நீ
    வாழ்ந்தே இருப்பத் தரியேம்; வந்தேம்! வந்தேம்! இனியே. 83

  581. என்று என்று அயரும் தவரை, இருதாள் வணங்கி, யானே
    இன்று உம் புதல்வன்; இனி நீர் ஏவும் பணிசெய்திடுவேன்;
    ஒன்றும் தளர்வுற்று அயரீர்; ஒழிமின் இடர் என்று இடலும்,
    வண் திண் சீலையாய்! கேண்மோ எனவே, ஒரு சொல் வகுத்தான். 84

  582. கண்ணுள் மணிபோல் மகவை இழந்தும் உயிர் காதலியா,
    உண்ண எண்ணி இருந்தால், உலகோர் என் என்று உரையார்?
    விண்ணின் தலை சேருதும்; யாம் எம் போல் விடலை பிரியப்
    பண்ணும் பரிமா உடையாய்! அடைவாய், படர்வாள் என்னா. 85

  583. தாவாது ஒளிரும் குடையாய்! தவறு இங்கு இது, நின் சரணம்,
    காவாய் என்றாய்; அதனால் கடிய சாபம் கருதேம்;
    ஏவா மகவைப் பிரிந்து, இன்று எம்போல் இடருற்றனை நீ
    போவாய், அகல்வான் என்னா, பொன் நாட்டிடைப் போயினரால். 86

  584. சிந்தை தளர்வுற்று, அயர்தல் சிறிதும் இலெனாய், இன் சொல்
    மைந்தன் உளன் என்றதனால், மகிழ்வோடு இவண் வந்தனெனால்;
    அந்த முனி சொற்றமையின், அண்ணல் வனம் ஏகுதலும்,
    எம் தம் உயிர் வீகுதலும், இறையும் தவறா என்றான். 87

  585. வசிட்டன் அரசவை சேர்தல்

  586. உரை செய் பெருமை உயர் தவத்தோர் ஓங்கல்,
    புரைசை மத களிற்றான் பொற் கோயில் முன்னர்,
    முரைசம் முழங்க, முடி சூட்ட மொய்த்து, ஆண்டு
    அரைசர் இனிது இருந்த நல் அவையின் ஆயினான். 88

  587. செய்தியை தெரிவிக்குமாறு அரசர்கள் வசிட்டனை வேண்டுதல்

  588. வந்த முனியை முகம் நோக்கி வாள்வேந்தர்,
    எந்தை! புகுந்த இடையூறு உண்டாயதோ?
    அந்தமில் சோகத்து அழுத குரல் தான் என்ன?
    சிந்தை தெளிந்தோய்! தெரி எமக்கு ஈது என்று உரைத்தார். 89

  589. முடிசூட்டு விழா தடைபட்டதை வசிட்டன் உரைத்தல்

  590. கொண்டாள் வரம் இரண்டு, கேகயர்கோன் கொம்பு; அவட்கு
    தண்டாத செங்கோல் தயரதனும் தானளித்தான்;
    ஒண்தார் முகிலை வனம்போகு என்று ஒருப்படுத்தாள்;
    எண்தானும் வேறில்லை; ஈது அடுத்தவாறு என்றான். 90

  591. வேந்தன் பணியினால், கைகேசி மெய்ப் புதல்வன்,
    பாந்தள்மிசைக் கிடந்த பார் அளிப்பான் ஆயினான்;
    ஏந்து தடந் தோள் இராமன், திரு மடந்தை
    காந்தன், ஒரு முறை போய்க் காடு உறைவான் ஆயினான். 91

  592. இராமன் காடு செல்வது பற்றி கேட்டோ ரின் துன்ப நிலை

  593. வாரார் முலையாரும், மற்றுள்ள மாந்தர்களும்,
    ஆறாத காதல் அரசர்களும், அந்தணரும்,
    பேராத வாய்மைப் பெரியோன் உரைசெவியில்
    சாராத முன்னம், தயரதனைப் போல் வீழ்ந்தார். 92

  594. புண் உற்ற தீயின் புகை உற்று உயிர் பதைப்ப,
    மண் உற்று அயர்ந்து மறுகிற்று, உடம்பு எல்லாம்,
    கண் உற்ற வாரி கடல் உற்றது; அந் நிலையே,
    விண் உற்றது, எம் மருங்கும் விட்டு அழுத பேர் ஓசை. 93

  595. மாதர் அருங் கலமும் மங்கலமும் சிந்தித் தம்
    கோதை புடைபெயர, கூற்று அனைய கண் சிவப்ப,
    பாத மலர் சிவப்ப, தாம் பதைத்துப் பார் சேர்ந்தார் -
    ஊதை எறிய ஒசி பூங் கொடி ஒப்பார். 94

  596. ஆ! ஆ! அரசன் அருள் இலனே ஆம் என்பார்;
    காவா, அறத்தை இனிக் கைவிடுவோம் யாம் என்பார்;
    தாவாத மன்னர் தலைத்தலை வீழ்ந்து ஏங்கினார்;
    மா வாதம் சாய்த்த மராமரம் போல்கின்றார். 95

  597. கிள்ளையொடு பூவை அழுத; கிளர்மாடத்து
    உள்ளுறையும் பூசை அழுத; உருவறியாப்
    பிள்ளை அழுத; பெரியோரை என்சொல்ல?-
    வள்ளல் வனம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால். 96

  598. சேதாம்பல் போது அனைய செங் கனி வாய் வெண் தளவப்
    போது ஆம் பல் தோன்ற, புணர் முலைமேல் பூந் தரளம்
    மா தாம்பு அற்றென்ன மழைக் கண்ணீர் ஆலி உக,
    நா தாம் பற்றா மழலை நங்கைமார் ஏங்கினார். 97

  599. ஆவும் அழுத; அதன் கன்று அழுத; அன்று அலர்ந்த
    பூவும் அழுத; புனல் புள் அழுத; கள் ஒழுகும்
    காவும் அழுத; களிறு அழுத; கால் வயப் போர்
    மாவும் அழுத;-அம் மன்னவனை மானவே. 98

  600. ஞானீயும் உய்கலான் என்னாதே, நாயகனைக்
    கானீயும் என்றுரைத்த கைகேசியுங், கொடிய
    கூனீயும் அல்லால், கொடியார் பிறருளரோ?
    மேனீயும் இன்றி வெறுநீரே ஆயினார். 99

  601. ஊர் மக்களின் துயரம்

  602. தேறாது அறிவு அழிந்தார் எங்கு உலப்பார்? தேர் ஓட
    நீறு ஆகி, சுண்ணம் நிறைந்த தெரு எல்லாம்,
    ஆறு ஆகி ஓடின கண்ணீர்; அரு நெஞ்சம்
    கூறு ஆகி ஓடாத இத்துணையே குற்றமே. 100

  603. நகரத்தவரின் வருத்தம்

  604. மண் செய்த பாவம் உளது என்பார்; மா மலர்மேல்
    பெண் செய்த பாவம் அதனின் பெரிது என்பார்;
    புண் செய்த நெஞ்சை, விதி என்பார்; பூதலத்தோர்
    கண் செய்த பாவம் கடலின் பெரிது என்பார். 101

  605. ஆளான் பரதன் அரசு என்பார்; ஐயன், இனி
    மீளான்; நமக்கு விதிகொடிதே காண் என்பார்;
    கோள் ஆகி வந்தவா, கொற்ற முடிதான் என்பார்;
    மாளாத நம்மின் மனம் வலியார் ஆர்? என்பார். 102

  606. ஆதி அரசன் அருங்கே கயன்மகள்மேல்
    காதல் முதிர, கருத்து அழிந்தான் ஆம் என்பார்;
    சீதை மணவாளன் தன்னோடும் தீக் கானம்
    போதும்; அது அன்றேல், புகுதும் எரி என்பார். 103

  607. கையால் நிலம் தடவி, கண்ணீர் மெழுகுவார்
    உய்யாள் போல் கோசலை என்று, ஓவாது வெய்து உயிர்ப்பார்;
    ஐயா! இளங் கோவே! ஆற்றுதியோ நீ என்பார்;
    நெய் ஆர் அழல் உற்றது உற்றார், அந் நீள் நகரார். 104

  608. தள்ளூறு வேறு இல்லை; தன் மகற்குப் பார் கொள்வான்,
    எள்ளூறு தீக் கருமம் நேர்ந்தாள் இவள் என்னா,
    கள் ஊறு செவ் வாய்க் கணிகையரும், கைகேசி,
    உள் ஊறு காதல் இலள்போல் என்று, உள் அழிந்தார். 105

  609. நின்று தவம் இயற்றித் தான் தீர நேர்ந்ததோ?
    அன்றி, உலகத்துள் ஆருயிராய் வாழ்வாரைக்
    கொன்று களையக் குறித்த பொருள் அதுவோ?
    நன்று! வரம் கொடுத்த நாயகற்கு, நன்று! என்பார். 106

  610. பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து, பிறந்து உலகம்
    முற்றுடைய கோவைப் பிரியாது மொய்த்து ஈண்டி,
    உற்று உறைதும்; யாரும் உறையவே, சில் நாளில்
    புற்றுடைய காடெல்லாம் நாடாகிப் போம் என்பார். 107

  611. என்னே நிருபன் இயற்கை இருந்தவா!
    தன் நேர் இலாத தலைமகற்குத் தாரணியை
    முன்னே கொடுத்து, முறை திறம்பத் தம்பிக்குப்
    பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய்? என்பார். 108

  612. கோதை வரி வில் குமரன் கொடுத்த நில
    மாதை ஒருவர் புணர்வராம்? வஞ்சித்த
    பேதை சிறுவனைப் பின் பார்த்து நிற்குமே,
    சீதை பிரியினும் தீராத் திரு? என்பார். 109

  613. உந்தாது, நெய் வார்த்து உதவாது, கால் எறிய
    நந்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார்,
    செந்தாமரைத் தடங் கண் செவ்வி அருள் நோக்கம்
    அந்தோ! பிரிதுமோ? ஆ! விதியே! ஓ! என்பார். 110

  614. இலக்குவனின் கோபம்

  615. கேட்டான் இளையோன்; கிளர் ஞாலம் வரத்தினாலே
    மீட்டாள்; அளித்தாள் வனம் தம் முனை, வெம்மை முற்றித்
    தீட்டாத வேல் கண் சிறுதாய் என யாவராலும்
    மூட்டாத காலக் கடைத்தீயென மூண்டு எழுந்தான். 111

  616. கண்ணின் கடைத் தீயுக, நெற்றியில் கற்றை நாற,
    விண்ணிற் சுடரும் சுடர் தோன்ற, மெய்ந்நீர் விரிப்ப,
    உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க, நின்ற
    அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான். 112

  617. சினங்கொண்ட இலக்குவன் கைகேயியை இகழ்ந்துரைத்தல்

  618. சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊனை, நாயின்
    வெங் கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே!
    நங்கைக்கு அறிவின் திறம்! நன்று, இது! நன்று, இது! என்னா,
    கங்கைக்கு இறைவன் கடகக் கை புடைத்து நக்கான். 113

  619. இலக்குவன் போர்க் கோலம் மேற்கொளல்

  620. சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடை தோன்ற ஆர்த்து,
    வில் தாங்கி, வாளிப் பெரும் புட்டில் புறத்து வீக்கி,
    பற்று ஆர்ந்த செம் பொன் கவசம், பனி மேரு ஆங்கு ஓர்
    புற்று ஆம் என ஓங்கிய தோளொடு, மார்பு போர்க்க. 114

  621. அடியில் சுடர்பொன்கழல் ஆர்கலி நாண ஆர்ப்பப்
    பொடியில் தடவும் சிலைநாண் பெரும்பூசல் ஓசை,
    இடியின் தொடரக் கடலேழும் மடுத்து, ஞாலம்
    முடிவில் குமிறும் மழை மும்மையின் மேல் முழங்க. 115

  622. வானும் நிலனும் முதல் ஈறு இல் வரம்பு இல் பூதம்
    மேல் நின்று கீழ்காறும் விரிந்தன வீழ்வபோல,
    தானும், தன தம்முனும் அல்லது, மும்மை ஞாலத்து
    ஊனும் உயிரும் உடையார்கள் உளைந்து ஒதுங்க. 116

  623. இலக்குவனின் ஆவேச உரை

  624. புவிப்பாவை பரம் கெடப் போரில் வந்தோரை எல்லாம்
    அவிப்பானும், அவித்தவர் ஆக்கையை அண்ட முற்றக்
    குவிப்பானும், இன்றே என கோவினைக் கொற்ற மௌலி
    கவிப்பானும், நின்றேன் இதுகாக்குநர் காமின் என்றான். 117

  625. விண் நாட்டவர், மண்ணவர், விஞ்சையர், நாகர், மற்றும்
    எண் நாட்டவர், யாவரும் நிற்க; ஓர் மூவர் ஆகி,
    மண் நாட்டுநர், காட்டுநர், வீட்டுநர் வந்தபோதும்,
    பெண் நாட்டம் ஒட்டேன், இனிப் பேர் உலகத்துள் என்னா. 118

  626. அயோத்தி மாநகரில் இலக்குவன் கோபத்தோடு அலைதல்

  627. காலைக் கதிரோன் நடு உற்றது ஓர் வெம்மை காட்டி,
    ஞாலத்தவர் கோ மகன், அந் நகரத்து நாப்பண்,
    மாலைச் சிகரத் தனி மந்தர மேரு முந்தை
    வேலைத் திரிகின்றதுபோல், திரிகின்ற வேலை,- 119

  628. இலக்குவனின் நாணொலி கேட்டு இராமன் தேடி வருதல்

  629. வேற்றுக் கொடியாள் விளைவித்த வினைக்கு விம்மித்
    தேற்றத் தெளியாது அயர்சிற்றவை பால் இருந்தான்,
    ஆற்றல் துணைத்தம்பிதன் வில்-புயல் அண்ட கோளம்
    கீற்றுஒத்து உடைய, படும் நாண் உரும் ஏறு கேளா. 120

  630. வீறாக்கிய பொற்கலன் வில்லிட, ஆரம், மின்ன,
    மாறாத் தனிச்சொல் துளிமாரி வழங்கி வந்தான்;
    கால்தாக்க நிமிர்ந்து, புகைந்து, கனன்று, பொங்கும்
    ஆறாக் கனல் ஆற்றும் ஓர் அஞ்சனம் மேகம் என்ன; 121

  631. இலக்குவனிடம் போர்க்கோலம் பூண்டதற்கான காரணத்தை இராமன் வினவுதல்

  632. மின்னொத்த சீற்றக் கனல்விட்டு விளங்க நின்ற,
    பொன்னொத்த மேனிப் புயலொத்த தடக்கை யானை,
    என்னத்த! என், நீ இறையோரை முனிந்திலாதாய்,
    சன்னத்தன் ஆகித் தனுஏந்துதற்கு ஏது? என்றான். 122

  633. இலக்குவனின் பதில் உரை

  634. மெய்யைச் சிதைவித்து, நின் மேல் முறை நீத்த நெஞ்சம்
    மையில் கரியாள் எதிர், நின்னை அம் மௌலி சூட்டல்
    செய்யக் கருதித் தடைசெய்குநர் தேவர் ஏனும்;
    துய்யைச் சுடுவெங்கனலின் சுடுவான் துணிந்தேன்; 123

  635. வலக்கார் முகம் என் கையது ஆக, அவ்வானுளோரும்
    விலக்கார்; அவர்வந்து விலக்கினும் என்கை வாளிக்கு
    இலக்கா எரிவித்து உலகுஏழினொடு ஏழும், மன்னர்
    குலக்கா வலும், இன்று உனக்கு யான் தரக் கோடி என்றான். 124

  636. இலக்குவனிடம் கோபம் வரக் காரணத்தை இராமன் கேட்டல்

  637. இளையான் இதுகூற, இராமன், இயைந்த நீதி
    வளையாவரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே?
    உளையா அறம் வற்றிட, ஊழ் வழுவுற்ற சீற்றம்,
    விளையாத நிலத்து, உனக்கு எங்ஙன் விளைந்தது? என்றான். 125

  638. இப்போது சினம் கொள்ளாது எப்போது சினம் கொள்வது என இலக்குவன் கூறல்

  639. நீண்டான் அது உரைத்தலும், நித்திலம் தோன்ற நக்கு,
    சேண்தான் தொடர் மாநிலம் நின்னது என்று, உந்தை செப்பப்
    பூண்டாய்; பகையால் இழந்தே, வனம் போதி என்றால்,
    யாண்டோ , அடியேற்கு இனிச்சீற்றம் அடுப்பது? என்றான். 126

  640. நின்கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க,
    புன்கண் பொறி யாக்கை பொறுத்து, உயிர் போற்றுகேனோ-
    என் கட்புலமுன் உனக்கு ஈந்துவைத்து, இல்லை என்ற
    வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்கொல்? என்றான். 127

  641. இராமன் சினம் கூடாது என்பதற்கு ஏற்ற காரணம் இயம்புதல்

  642. பின், குற்றம் மன்னும் பயக்கும் அரசு என்றல், பேணேன்;
    முன், கொற்ற மன்னன், முடி கொள்க எனக் கொள்ள மூண்டது
    என் குற்றம் அன்றோ? இகல் மன்னவன் குற்றம் யாதோ?-
    மின்குற்று ஒளிரும் வெயில் தீக்கொடு அமைந்த வேலோய்! 128

  643. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
    பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
    மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
    விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது? என்றான். 129

  644. இலக்குவன் சினந்து பதில் கூறுதல்

  645. உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க,
    கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென்? கோள் இழைத்தாள்
    மதிக்கும் மதி ஆய், முதல் வானவர்க்கும் வலீஇது ஆம்,
    விதிக்கும் விதி ஆகும், என் வில் - தொழில் காண்டி என்றான். 130

  646. இராமன் இலக்குவனின் கோபம் தணித்தல்

  647. ஆய்தந்து, அவன் அவ் உரை கூறலும், ஐய! நின் தன்
    வாய் தந்தன கூறுதியோ, மறை தந்த நாவால்?
    நீ தந்தது, அன்றே, நெறியோர்கண் நிலாதது? ஈன்ற
    தாய் தந்தை என்றால், அவர்மேல் சலிக்கின்றது என்னோ? 131

  648. இலக்குவனின் பிடிவாதம்

  649. நல் தாதையும் நீ; தனி நாயகன் நீ; வயிற்றில்
    பெற்றாயும் நீயே; பிறரில்லை; பிறர்க்கு நல்கக்
    கற்றாய்! இது காணுதி இன்று எனக் கைம் மறித்தான்;
    முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான். 132

  650. இராமன் மீண்டும் இலக்குவனுக்கு அறிவுரை கூறுதல்

  651. வரதன் பகர்வான்: வரம் பெற்றவள்தான் இவ் வையம்
    சரதம் உடையான்; அவள், என் தனித் தாதை, செப்பப்
    பரதன் பெறுவான்; இனி, யான் படைக்கின்ற செல்வம்
    விரதம்; இதின் நல்லது வேறு இனி யாவது? என்றான். 133

  652. ஆன்றான் பகர்வான் பினும்; ஐய! இவ் வைய மையல்
    தோன்றா நெறி வாழ் துணைத் தம்முனைப் போர் தொலைத்தோ?
    சான்றோர் புகழும் தனித் தாதையை வாகை கொண்டோ ?
    ஈன்றாளை வென்றோ, இனி, இக் கதம் தீர்வது? என்றான். 134

  653. இராமன் அறிவுரை கேட்டு இலக்குவன் சினம் அடங்கல்

  654. செல்லும் சொல் வல்லானெதிர், தம்பியும் தெவ்வர் சொல்லும்
    சொல்லும் சுமந்தேன்; இருதோளெனச் சோம்பி ஓங்கும்
    கல்லும் சுமந்தேன்; கணைப்புட்டிலும் கட்டு அமைந்த
    வில்லும், சுமக்கப் பிறந்தேன்; வெகுண்டு என்னை? என்றான். 135

  655. இராமனின் சமாதான உரை

  656. நன் சொற்கள் தந்து ஆண்டு, எனை நாளும் வளர்ந்த தாதை
    தன் சொல் கடந்து, எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்;
    என் சொல் கடந்தால், உனக்கு யாது உளது ஈனம்? என்றான் -
    தென்சொல் கடந்தான், வடசொல்-கலைக்கு எல்லை தேர்ந்தான். 136

  657. இராமன் உரையால் இலக்குவன் சீற்றம் தணிதல்

  658. சீற்றம் துறந்தான்; எதிர்நின்று தெரிந்து செப்பும்
    மாற்றம் துறந்தான்; மறை நான்கு என வாங்கல் செல்லா
    நால் தெண் திரை வேலையின், நம்பி தன் ஆணையாலே,
    ஏற்றம் தொடங்காக் கடலின், தணிவு எய்தி நின்றான். 137

  659. இராம இலக்குவனர் சுமித்திரை அரண்மனை அடைதல்

  660. அன்னான் தனை, ஐயனும் ஆதியொடு அந்தம் என்று
    தன்னாலும் அளப்பருந் தானும், தன் பாங்கர் நின்ற
    பொன் மான் உரியானும் தழீஇ எனப் புல்லி, பின்னை,
    சொல் மாண்புடை அன்னை சுமித்திரை கோயில் புக்கான். 138

  661. வனம் செல்லும் தன் மக்களைக் கண்ட சுமித்திரையின் வருத்தம்

  662. கண்டாள், மகனும் மகனும் தன கண்கள் போல்வார்,
    தண்டாவனம் செல்வதற்கே சமைந்தார்கள் தம்மை;
    புண்தாங்கு நெஞ்சத்தனளாய்ப் படிமேல் புரண்டாள்;
    உண்டாய துன்பக் கடற்கு எல்லை உணர்ந்திலாதாள். 139

  663. இராமன் சுமித்திரையின் துயரை போக்குதல்

  664. சோர்வாளை, ஓடித் தொழுது ஏந்தினன்; துன்பம் என்னும்
    ஈர் வாளை வாங்கி, மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான்;
    போர் வாள் அரசர்க்கு இறை பொய்த்தனன் ஆக்ககில்லேன்;
    கார்வான்நெடுங் கான் இறை கண்டு, இவன் மீள்வென் என்றான். 140

  665. கான் புக்கிடினும், கடல் புக்கிடினும், கலிப்பேர்
    வான் புக்கிடினும், எனக்கு அன்னவை மாண் அயோத்தி
    யான் புக்கது ஒக்கும்; எனை யார் நலிகிற்கும் ஈட்டார்?
    ஊன் புக்கு, உயிர் புக்கு, உணர் புக்கு, உலையற்க! என்றான். 141

  666. கைகேயி தோழியர் மூலம் மரவுரி அனுப்புதல்

  667. தாய், ஆற்றுகில்லாள்தனை ஆற்றுகின்றார்கள் தம்பால்
    தீ ஆற்று கிலார், தனி சிந்தையின் நின்று செற்ற,
    நோய் ஆற்று கில்லா உயிர் போல நுடங்கு இடையார்
    மாயாப் பழியாள்தர, வற்கலை ஏந்தி வந்தார். 142

  668. கார்வானம் ஒப்பான் தனைக்காண் தொறும்காண் தொறும்போய்
    நீராய் உகக் கண்ணினும் நெஞ் சழிகின்ற நீரார்,
    பேரா இடர்ப்பட்டு அயலார் உறுபீழை கண்டும்
    தீரா மனத் தாள்தர, வந்தன சீரம் என்றார். 143

  669. மரவுரியைக் காட்டுமாறு இலக்குவன் கூறுதல்

  670. வாள் நித்தில வெண் நகையார் தர, வள்ளல் தம்பி,
    யாணர்த் திருநாடு இழப்பித்தவர் ஈந்த எல்லாம்
    பூணப் பிறந்தானும் நின்றான்; அவை போர் விலோடும்
    காணப் பிறந்தேனும் நின்றேன்; அவை காட்டும் என்றான். 144

  671. இலக்குவன் வனம் செல்ல தாயிடம் விடைபெறுதல்

  672. அன்னான், அவர் தந்தன, ஆதரத்தோடும் ஏந்தி,
    இன்னா இடர் தீர்ந்து, உடன் ஏகு என, எம்பிராட்டி
    சொன்னால், அதுவே துணை ஆம் என, தூய நங்கை
    பொன் ஆர் அடிமேல் பணிந்தான்; அவளும் புகன்றாள்: 145

  673. இலக்குவனுக்கு சுமித்திரையின் அறிவுரை

  674. ஆகாதது அன்றால் உனக்கு; அவ் வனம் இவ் அயோத்தி;
    மா காதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும்
    போகா உயிர்த் தாயர் நம் பூங் குழல் சீதை-என்றே
    ஏகாய்; இனி, இவ் வயின் நிற்றலும் ஏதம் என்றாள். 146

  675. பின்னும் பகர்வாள், மகனே! இவன் பின் செல்; தம்பி
    என்னும் படி அன்று அடியாரினில் ஏவல் செய்தி;
    மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா; அது அன்றேல்
    முன்னம் முடி என்றனள், வார் விழி சோர நின்றாள். 147

  676. இராம இலக்குவனர் சுமித்திரையிடம் விடைபெற்று மரவுரி தரித்து செல்லுதல்

  677. இருவரும் தொழுதனர்; இரண்டு கன்று ஒரீஇ
    வெருவரும் ஆவினின் தாயும் விம்மினாள்;
    பொரு அருங் குமரரும் போயினார் - புறம்
    திரு அரைத் துகில் ஒரீஇ, சீரை சாத்தியே. 148

  678. மரவுரி தரித்த இலக்குவனை பெற்றோருடம் இருக்க இராமன் கூறுதல்

  679. தான் புனை சீரையைத் தம்பி சாத்திட,
    தேன் புனை தெரியலான் செய்கை நோக்கினான்;
    வான் புனை இசையினாய்! மறுக்கிலாது, நீ
    யான் புகல் இனையது ஓர் உறுதி கேள் எனா. 149

  680. அன்னையர் அனைவரும், ஆழி வேந்தனும்
    முன்னையர் அல்லர்; வெந் துயரின் மூழ்கினார்;
    என்னையும் பிரிந்தனர்; இடர் உறாவகை,
    உன்னை நீ என்பொருட்டு உதவுவாய் என்றான். 150

  681. இலக்குவனின் மறுமொழி

  682. ஆண்தகை அம்மொழி பகர, அன்பனும்,
    தூண் தகு திரள் புயம் துளங்க, துண்ணெனா,
    மீண்டது ஓர் உயிர் இடை விம்ம விம்முவான்,
    ஈண்டு, உனக்கு அடியனேன் பிழைத்தது யாது? என்றான். 151

  683. நீர் உளஎனின் உள, மீனும் நீலமும்;
    பார் உளஎனின் உள, யாவும்; பார்ப்புறின்,
    நார் உள தனு உளாய்! நானும் சீதையும்
    ஆர் உளர் எனின் உளம்? அருளுவாய்! என்றான். 152

  684. பைந்தொடி ஒருத்தி சொல் கொண்டு, பார்மகள்
    நைந்து உயிர் நடுங்கவும், நடத்தி கான் எனா,
    உய்ந்தனன் இருந்தனன் உண்மை காவலன்
    மைந்தன் என்று, இனைய சொல் வழங்கினாய்? எனா. 153

  685. மாறு இனி என்னை? நீ வனம் கொள்வாய் என
    ஏறின வெகுளியை, யாதும் முற்றுற
    ஆறினை, தவிர்க என, ஐய! ஆணையின்
    கூறிய மொழியினும் கொடியது ஆம் என்றான். 154

  686. செய்துடைச் செல்வமோ, யாதும் தீர்ந்து, எமை,
    கை துடைத்து ஏகவும் கடவையோ?-ஐயா!
    நெய் துடைத்து, அடையலர் நேய மாதர் கண்
    மை துடைத்து, உறை புகும் வயம் கொள் வேலினாய்! 155

  687. இராமன் உள்ளம் நெகிழ்தல்

  688. உரைத்தபின், இராமன் ஒன்று உரைக்க நேர்ந்திலன்;
    வரைத் தடந் தோளினான் வதனம் நோக்கினான்;
    விரைத் தடந் தாமரைக் கண்ணை மிக்க நீர்
    நிரைத்து இடை இடை விழ, நெடிது நிற்கின்றான். 156

  689. வசிட்ட முனிவனின் வருகை

  690. அவ்வயின், அரசவை நின்றும், அன்பினன்
    எவ்வம் இல் இருந்தவ முனிவன் எய்தினான்;
    செவ்விய குமரரும் சென்னி தாழ்ந்தனர்;
    கவ்வையம் பெருங்கடல் முனியும் கால்வைத்தான். 157

  691. வசிட்ட முனிவன் வருத்தம்

  692. அன்னவர் முகத்தினோடு அகத்தை நோக்கினான்;
    பொன் அரைச் சீரையின் பொலிவு நோக்கினான்;
    என் இனி உணர்த்துவது? எடுத்த துன்பத்தால்,
    தன்னையும் உணர்ந்திலன், உணரும் தன்மையான். 158

  693. இராமன் வனவாசம் குறித்து வசிட்ட முனிவன் சிந்தனை

  694. வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள்,
    தாழ் வினை அது வர, சீரை சாத்தினான்;
    சூழ் வினை நான்முகத்து ஒருவன் சூழினும்,
    ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற்பாலதோ! 159

  695. வெவ்வினை யவள்தர விளைந்த தேயும் அன்று;
    இவ்வினை இவன்வயின் எய்தற் பாற்றும் அன்று;
    எவ்வினை நிகழ்ந்ததோ? ஏவர் எண்ணமோ?
    செவ்விதின் ஒருமுறை தெரியும் பின் என்றான். 160

  696. இராமன் காட்டிற்கு செல்வதை வசிட்டன் தடுத்தல்

  697. வில் தடந் தாமரைச் செங் கண் வீரனை
    உற்று அடைந்து, ஐய! நீ ஒருவி, ஓங்கிய
    கல் தடம் காணுதி என்னின், கண் அகல்
    மல் தடந் தானையான் வாழ்கிலான் என்றான். 161

  698. வசிட்ட முனிவனுக்கு இராமனின் மறுமொழி

  699. அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல்
    என்னது கடன்; அவன் இடரை நீக்குதல்
    நின்னது கடன்; இது நெறியும் என்றனன் -
    பன்னகப் பாயலின் பள்ளி நீங்கினான். 162

  700. கானகம் செல்ல கூறுதல் மன்னன் பணி அன்று என வசிட்டன் கூறுதல்

  701. வெவ் வரம்பை இல் சுரம் விரவு என்றான் அலன்;
    தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு,
    அவ் அரம் பொருத வேல் அரசன், ஆய்கிலாது,
    இவ் வரம் தருவென் என்று ஏன்றது உண்டு என்றான். 163

  702. இராமனின் விளக்க உரை

  703. ஏன்றனன் எந்தை இவ் வரங்கள்; ஏவினாள்
    ஈன்றவள்; யான் அது சென்னி ஏந்தினேன்;
    சான்று என நின்ற நீ தடுத்தியோ? என்றான் -
    தோன்றிய நல்லறம் நிறுத்தத் தோன்றினான். 164

  704. வசிட்டனை வணங்கி இராமன் மன்னன் மாளிகை வாயில் அடைதல்

  705. என்றபின், முனிவன் ஒன்று இயம்ப நேர்ந்திலன்;
    நின்றனன், நெடுங் கணீர் நிலத்து நீர்த்து உக;
    குன்றன தோளவன் தொழுது, கொற்றவன்
    பொன் திணி நெடு மதில் வாயில் போயினான். 165

  706. மக்களின் துயரம்

  707. சுற்றிய சீரையன், தொடரும் தம்பியன்,
    முற்றிய உவகையன், முளரிப் போதினும்
    குற்றம் இல் முகத்தினன், கொள்கை கண்டவர்
    உற்றதை ஒருவகை உணர்த்துவாம் அரோ. 166

  708. ஐயனைக் காண்டலும், அணங்கு அனார்கள் தாம்,
    மொய் இளந் தளிர்களால் முளரி மேல் விழும்
    மையலின் மதுகரம் கடியும் ஆறு எனக்
    கைகளின் மதர்நெடுங் கண்கள் எற்றினார். 167

  709. தம்மையும் உணர்ந்திலர் தணப்பில் அன்பினால்
    அம்மையின் இருவினை அகற்றவோ அன்றேல்,
    விம்மிய பேருயிர் மீண்டி லாமைகொல்?
    செம்மல் தன் தாதையிற் சிலவர் முந்தினார். 168

  710. விழுந்தனர் சிலர்; சிலர் விம்மி விம்மிமேல்
    எழுந்தனர்; சிலர்முகத்து இழிகண் ணீரிடை
    அழுந்தினர்; சிலர்பதைத்து, அளக வல்லியின்
    கொழுந்து எரி உற்றுஎனத் துயரம் கூர்கின்றார். 169

  711. கரும்பு அன மொழியினர், கண் பனிக்கிலர்,-
    வரம்பு அறு துயரினால் மயங்கியேகொலாம்,
    இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர்!-
    பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார். 170

  712. நெக்கன உடல்; உயிர் நிலையில் நின்றில;
    இக் கணம்! இக் கணம்! என்னும் தன்மையும்
    புக்கன; புறத்தன; புண்ணின் கண் மலர்
    உக்கன, நீர் வறந்து, உதிர வாரியே! 171

  713. இரு கையின் கரி நிகர் எண் இறந்தவர்,
    பெருகு ஐயில் பெயர்த்தனர், தலையைப் பேணலர்,
    ஒரு கையில் கொண்டனர், உருட்டுகின்றனர்;
    சுரிகையின் கண் மலர் சூன்று நீக்கினார். 172

  714. சிந்தின அணிமணி சிதறி வீழ்ந்தன;
    பைந்துணர் மாலையின் பரிந்த, மேகலை;
    நந்தினர், நகையொளி விளக்கம்; நங்கைமார்
    சுந்தர வதனமும், மதிக்குத் தோற்றவே. 173

  715. தயரதனின் அரசியர் அடைந்த துயரம்

  716. அறுபதினாயிரர் அரசன் தேவியர்,
    மறு அறு கற்பினர், மழைக் கண்ணீரினர்,
    சிறுவனைத் தொடர்ந்தனர்; திறந்த வாயினர்;
    எறி திரைக் கடல் என இரங்கி ஏங்கினார். 174

  717. கன்னி நல் மயில்களும், குயில் கணங்களும்,
    அன்னமும், சிறை இழந்து அவனி சேர்ந்தன
    என்ன, வீழ்ந்து உழந்தனர் - இராமன் அல்லது,
    மன் உயிர்ப் புதல்வரை மற்றும் பெற்றிலார். 175

  718. கிளையினும், நரம்பினும், நிரம்பும் கேழன,
    அளவு இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால்,
    தொளைபடு குழலினோடு, யாழ்க்குத் தோற்றன
    இனையவர் அமுதினும் இனிய சொற்களே. 176

  719. புகல் இடம், கொடுவனம் போலும் என்று, தம்
    மகன்வயின் இரங்குறும் மகளிர் வாய்களால்,
    அகல்மதில் நெடுமனை, அரத்த ஆம்பல்கள்
    பகலிடை மலர்ந்ததொர் பழனம் போன்றதே. 177

  720. திடர் உடைக் குங்குமச் சேறும், சாந்தமும்,
    இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன;
    மிடை முலைக் குவடுஒரீஇ, மேகலைத்தடம்
    கடலிடைப் புகுந்த, கண் கலுழி ஆறு அரோ. 178

  721. தண்டலைக் கோசலத் தலைவன் மாதரைக்
    கண்டனன் இரவியும், கமல வாள் முகம் -
    விண் தலத்து உறையும் நல் வேந்தற்கு ஆயினும்,
    உண்டு இடர் உற்ற போது என் உறாதன? 179

  722. தாயரும், கிளைஞரும் சார்ந்துளார்களும்,
    சேயரும், அணியரும், சிறந்த மாதரும்,
    காய் எரி உற்றனர் அனைய கவ்வையர்;
    வாயிலும் முன்றிலும் மறைய மொய்த்தனர். 180

  723. இராமன் தன் மாளிகைக்குச் செல்லுதல்

  724. இரைத்தனர், இரைத்து எழுந்து ஏங்கி எங்கணும்,
    திரைப்பெருங் கடலெனத் தொடர்ந்து பின்செல,
    உரைப்பதை உணர்கிலன் ஒழிப்பது ஓர்கிலன்,
    வரைப்புயத்து அண்ணல்தன் மனையை நோக்கினான். 181

  725. இராமன் வீதியில் சென்ற காட்சி

  726. நல் நெடு நளிர் முடி சூட, நல் மணிப்
    பொன் நெடுந் தேரொடும் பவனி போனவன்,
    துன் நெடுஞ் சீரையும் சுற்றி, மீண்டும், அப்
    பொன் நெடுந் தெருவிடைப் போதல் மேயினான். 182

  727. வீதியில் இராமனைக் கண்டோ ர் அடைந்த வருத்தம்

  728. அந்தணர், அருந்தவர், அவனி காவலர்,
    நந்தல் இல் நகருளார், நாட்டுளார்கள், தம்
    சிந்தை என் புகல்வது? தேவர் உள்ளமும்
    வெந்தனர், மேல் வரும் உறுதி வேண்டலர். 183

  729. அஞ்சன மேனி இவ் அழகற்கு எய்திய
    வஞ்சனை கண்டபின், வகிர்ந்து நீங்கலா
    நெஞ்சினும் வலிது உயிர்; நினைப்பது என் சில?
    நஞ்சினும் வலிய, நம் நலம் என்றார் - சிலர். 184

  730. மண்கொடு வரும் என, வழி இருந்த, யாம்,
    எண்கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ?
    பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில்,
    கண்கொடு பிறத்தலும் கடை என்றார் - சிலர். 185

  731. முழுவதே பிறந்து உலகு உடைய மொய்ம்பினோன்,
    உழுவை சேர் கானகத்து உறைவென் யான் என
    எழுவதே? எழுதல்கண்டு இருப்பதே? இருந்து
    அழுவதே? அழகிது இவ் அன்பு! என்றார் சிலர். 186

  732. வலம் கடிந்து, ஏழையர் ஆய மன்னரை
    நலம் கடிந்து, அறம் கெட, நயக்கலீர்கள்; நும்
    குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை,
    நிலம் கடிந்தாளொடு நிகர் என்றார் - சிலர். 187

  733. திரு அரை சுற்றிய சீரை ஆடையன்,
    பொருவருந் துயரினன், தொடர்ந்து போகின்றான்
    இருவரைப் பயந்தவள் ஈன்ற கான்முளை
    ஒருவனோ, இவற்கு இவ்வூர் உறவு? என்றார்-சிலர். 188

  734. முழுக்கலின் வலியநம் மூரி நெஞ்சினை,
    மழுக்களின் பிளத்தும் என்று ஓடு வார்; வழி
    ஒழுக்கிய கண்ணின் நீர்க் கலுழி ஊற்றிடை
    இழுக்கலில் வழுக்கிவீழ்ந்து, இடர் உற்றார்-சிலர். 189

  735. பொன்னணி, மணியணி, மெய்யின் போக்கினர்,
    மின்னென, மின்னென விளங்கும் மெய் விலைப்
    பன்னிறத் துகிலினைப் பறித்து நீக்கினர்,
    சின்னநுண் துகிலினைப் புனைகின்றார்-சிலர். 190

  736. நிறைமக உடையவர், நெறி செல் ஐம்பொறி
    குறை மகக் குறையினும், கொடுப்பராம் உயிர்
    முறை மகன் வனம் புக, மொழியைக் காக்கின்ற
    இறைமகன் திருமனம் இரும்பு என்றார்-சிலர். 191

  737. வாங்கிய மருங்குலை வருத்தும் கொங்கையர்,
    பூங்கொடி ஒதுங்குவபோல், ஒதுங்கினர்;
    ஏங்கிய குரலினர்; இணைந்த காந்தளின்
    தாங்கிய செங் கை தம் தலையின்மேல் உளார். 192

  738. தலைக் குவட்டு அயல் மதி தவழும் மாளிகை
    நிலைக் குவட்டு இடை இடை நின்ற நங்கைமார்,
    முலைக் குவட்டு இழி கணீர் ஆலி மொய்த்து உக,
    மலைக் குவட்டு அகவுறு மயிலின் மாழ்கினார். 193

  739. மஞ்சு என அகிற் புகை வழங்கும் மாளிகை
    எஞ்சல் இல் சாளரத்து, இரங்கும் இன் சொலார்
    அஞ்சனக் கண்ணின் நீர் அருவி சோர்தர,
    பஞ்சரத்து இருந்து அழும் கிளியின் பன்னினார். 194

  740. நல் நெடுங் கண்களின் நான்ற நீர்த் துளி-
    தன் நெடுந் தாரைகள் தளத்தின் வீழ்தலால்,
    மன் நெடுங் குமரன்மாட்டு அழுங்கி, மாடமும்
    பொன் நெடுங் கண் குழித்து, அழுவ போன்றவே. 195

  741. மக்களை மறந்தனர் மாதர்; தாயரைப்
    புக்கிடம் அறிந்திலர் புதல்வர்; பூசலிட்டு
    உக்கனர்; உயங்கினர்; உருகிச் சோர்ந்தனர்;
    துக்கநின்று அறிவினைச் சூறை ஆடவே. 196

  742. காமரங் கனிந்தெனக் கனிந்த மென்மொழி
    மாமடந் தையர் எலாம் மறுகு சேர்தலால்,
    தேமரு நறுங்குழல் திருவின் நீங்கிய
    தாமரை ஒத்தன-தவள மாடமே. 197

  743. மழைக்குலம் புரைகுழல் விரிந்து மண்ணுறக்
    குழைக்குலம் முகத்தியர் குழாங்கொண்டு ஏகினர்
    இழைக்குலம் சிதறிட, ஏவுண்டு ஓய்வுறும்
    உழைக்குலம் உழைப்பன ஒத்து, ஓர் பால் எல்லாம். 198

  744. அயோத்தி நகரில் பொழிவு அழிதல்

  745. கொடி அடங்கின மனைக் குன்றம்; கோ முரசு
    இடி அடங்கின; முழக்கு இழந்த பல் இயம்;
    படி அடங்கலும், நிமிர் பசுங் கண் மாரியால்,
    பொடி அடங்கின, மதிற் புறத்து வீதியே. 199

  746. அட்டிலும் இழந்தன புகை; அகிற் புகை
    நெட்டிலும் இழந்தன; நிறைந்த பால், கிளி
    வட்டிலும் இழந்தன; மகளிர்-கால் மணித்
    தொட்டிலும் இழந்தன, மகவும்-சோரவே. 200

  747. ஒளி துறந்தன முகம், உயிர் துறந்தென;
    துளி துறந்தன, முகில் தொகையும்; தூய நீர்த்
    தளி துறந்தன பரி; தான யானையும்
    களி துறந்தன, மலர்க் கள் உண் வண்டினே. 201

  748. நிழல் பிரிந்தன குடை; நெடுங் கண் ஏழையர்
    குழல் பிரிந்தன மலர்; குமரர் தாள் இணை
    கழல் பிரிந்தன; சினக் காமன் வாளியும்
    அழல் பிரிந்தன; துணை பிரிந்த, அன்றிலே. 202

  749. தாரொலி நீத்தன, புரவி; தண்ணுமை
    வாரொலி நீத்தன; மழையின் விம்முறும்
    தேரொலி நீத்தன, தெருவுந் தெண்திரை
    நீரொலி நீத்தன நீத்தம் போலுமே. 203

  750. முழவு எழும் ஒலி இல; முறையின் யாழ் நரம்பு
    எழ எழும் ஒலி இல; இமைப்பு இல் கண்ணினர்
    விழவு எழும் ஒலி இல; வேறும் ஒன்று இல,
    அழ எழும் ஒலி அலது - அரச வீதியே. 204

  751. தெள் ஒலிச் சிலம்புகள் சிலம்பு பொன் மனை
    நள் ஒலித்தில; நளிர் கலையும் அன்னவே;
    புள் ஒலித்தில, புனல்; பொழிலும் அன்னவே;
    கள் ஒலித்தில, மலர்; களிறும் அன்னவே. 205

  752. செய்ம் மறந்தன புனல்; சிவந்த வாய்ச்சியர்
    கைம் மறந்தன, பசுங் குழவி; காந்து எரி
    நெய்ம் மறந்தன; நெறி அறிஞர் யாவரும்
    மெய்ம் மறந்தனர்; ஒலி மறந்த, வேதமே. 206

  753. ஆடினர் அழுதனர்; அமுத ஏழ் இசை
    பாடினர் அழுதனர்; பரிந்த கோதையர்,
    ஊடினர் அழுதனர்; உயிரின் அன்பரைக்
    கூடினர் அழுதனர் - குழாம் குழாம்கொடே. 207

  754. நீட்டில, களிறு கை நீரின்; வாய் புதல்
    பூட்டில, புரவிகள்; புள்ளும், பார்ப்பினுக்கு
    ஈட்டில இரை; புனிற்று ஈன்ற கன்றையும்
    ஊட்டில, கறவை; நைந்து உருகிச் சோர்ந்தவே. 208

  755. மாந்தர்தம் மொய்ம்பினின் மகளிர் கொங்கையாம்
    ஏந்துஇள நீர்களும் வறுமை எய்தின;
    சாந்தம் அம் மகிழ்நர் தம் முடியில் தையலார்
    கூந்தலின், வறுமைய மலரின் கூலமே. 209

  756. ஓடை நல்லணி முனிந்தன, உயர்களிறு உச்சிச்
    சூடை நல்லணி முனிந்தன, தொடர்மனை; கொடியின்
    ஆடை நல்லணி முனிந்தன, அம்பொன் செய் இஞ்சி;
    பேடை நல்லணி முனிந்தன, மென்னடைப் புறவம். 210

  757. திக்கு நோக்கிய தீவினைப் பயன் எனச் சிந்தை
    நெக்கு நோக்குவோர், நல்வினைப் பயன் என நேர்வோர்,
    பக்கம் நோக்கல் என்? பருவரல் இன்பம் என்று இரண்டும்
    ஒக்க நோக்கிய யோகரும், அருந் துயர் உழந்தார். 211

  758. ஓவுஇல் நல் உயிர் உயிர்ப்பினோடு உடல் பதைத்து உலைய,
    மேவு தொல் அழகு எழில் கெட, விம்மல் நோய் விம்ம,
    தாவு இல் ஐம்பொறி மறுகுற, தயரதன் என்ன
    ஆவி நீக்கின்றது ஒத்தது - அவ் அயோத்தி மா நகரம். 212

  759. இராமன் சீதை இருக்குமிடம் சேர்தல்

  760. உயங்கி அந் நகர் உலைவுற, ஒருங்கு, உழைச்சுற்றம்
    மயங்கி ஏங்கினர்; வயின்வயின் வரம்பு இலர் தொடர,
    இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர் என நின்ற இராமன்
    தயங்கு பூண் முலைச் சானகி இருந்துழிச் சார்ந்தான். 213

  761. இராமனின் கோலம் கண்டு சீதை திடுக்கிடுதல்

  762. அழுது, தாயரோடு அருந்தவர், அந்தணர், அரசர்,
    புழுதி ஆடிய மெய்யினர், புடை வந்து பொரும,
    பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா,
    எழுது பாவை அன்னாள், மனத் துணுக்கமொடு எழுந்தாள். 214

  763. மாமியார் இருவரும் சீதையைத் தழுவி நிற்க, சீதை இராமனை காரணம் வினாவுதல்

  764. எழுந்த நங்கையை, மாமியர் தழுவினர்; ஏங்கிப்
    பொழிந்த உண் கண் நீர்ப் புதுப் புனல் ஆட்டினர்; புலம்ப,
    அழிந்த சிந்தையள் அன்னம், ஈது இன்னது என்று அறியாள்;
    வழிந்த நீர் நெடுங் கண்ணினள், வள்ளலை நோக்கி. 215

  765. பொன்னை உற்ற பொலங் கழலோய்! புகழ்-
    மன்னை உற்றது உண்டோ , மற்று இவ் வன் துயர்
    என்னை உற்றது? இயம்பு என்று இயம்பினாள்-
    மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள். 216

  766. இராமன் நடந்தது இயம்புதல்

  767. பொரு இல் எம்பி புவிபுரப் பான்; புகழ்
    இருவர் ஆணையும் ஏந்தினென்; இன்று போய்க்
    கருவி மாமழைக் கல்-கடம் கண்டு, நான்
    வருவென் ஈண்டு; வருந்தலை நீ என்றான். 217

  768. இராமன் சொல் கேட்ட சீதையின் துயர்

  769. நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்,
    மேய மண் இழந்தான் என்றும், விம்மலன்;
    நீ வருந்தலை; நீங்குவென் யான் என்ற
    தீய வெஞ் சொல் செவி சுடத் தேம்புவாள். 218

  770. துறந்து போம் எனச் சொற்ற சொல் தேறுமோ-
    உறைந்த பாற்கடற் சேக்கை உடன் ஒரீஇ,
    அறம் திறம்பும் என்று ஐயன் அயோத்தியில்
    பிறந்த பின்பும், பிரியலள் ஆயினாள்? 219

  771. அன்ன தன்மையள், ஐயனும், அன்னையும்,
    சொன்ன செய்யத் துணிந்தது தூயதே;
    என்னை, என்னை, இருத்தி என்றான்? எனா,
    உன்ன, உன்ன, உயிர் உமிழா நின்றாள். 220

  772. இராமன் தன் கூற்றுக்கான காரணத்தை இயம்புதல்

  773. வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து,
    அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர்க்
    கல் அரக்கும் கடுமைய அல்ல-நின்
    சில் அரக்குண்ட சேவடிப் போது என்றான். 221

  774. சீதை தன் மன உறுதியை இராமனுக்கு உரைத்தல்

  775. பரிவு இகந்த மனத்தொடு பற்றிலாது
    ஒருவு கின்றனை; ஊழி அருக்கனும்
    எரியும் என்பது யாண்டையது? ஈண்டுநின்
    பிரிவினும் சுடுமோ, பெருங் காடு? என்றாள். 222

  776. சீதையின் மன உறுதியை அறிந்து இராமன் சிந்தனை வயப்படுதல்

  777. அண்ணல், அன்னசொல் கேட்டனன்; அன்றியும்,
    உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்;
    கண்ணில் நீர்க்கடல் கைவிட நேர்கிலன்,
    எண்ணு கின்றனன், என்செயல் பாற்று? எனா. 223

  778. சீதை மரவுரி தரித்து இராமன் அருகில் வந்து நிற்றல்

  779. அனைய வேலை, அகல்மனை எய்தினள்;
    புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்;
    நினையும் வள்ளல் பின் வந்து, அயல் நின்றனள்,
    பனையின் நீள்கரம் பற்றிய கையினாள். 224

  780. சீதையைக் கண்டோர் கொண்ட துயரம்

  781. ஏழை தன் செயல் கண்டவர் யாவரும்,
    வீழும் மண்ணிடை வீழ்ந்தனர்; வீந்திலர்;
    வாழும் நாள் உள என்றபின் மாள்வரோ?-
    ஊழி பேரினும் உய்குநர் உய்வரே! 225

  782. தாயர், தவ்வையர், தன் துணைச் சேடியர்,
    ஆய மன்னிய அன்பினர், என்றிவர்
    தீயில் மூழ்கினர் ஒத்தனர்; செங்கணான்
    தூய தையலை நோக்கினன், சொல்லுவான். 226

  783. இராமன் சீதை உரையாடல்

  784. முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும்,
    வெல்லும் வெண்ணகை யாய்! விளைவு உன்னுவாய்
    அல்லை; போத அமைந்தனை ஆதலின்
    எல்லை அற்ற இடர்தரு வாய் என்றான். 227

  785. கொற்றவன் அது கூறலும், கோகிலம்
    செற்றது அன்ன குதலையள் சீறுவாள்,
    உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே?
    என் துறந்த பின், இன்பம் கொலாம்? என்றாள். 228

  786. சீதையை அழைத்துக் கொண்டு இராமன் புறப்படுதல்

  787. பிறிது ஓர் மாற்றம் பெருந்தகை பேசலன்;
    மறுகி வீழ்ந்து அழ மைந்தரும் மாதரும்
    செறுவின் வீழ்ந்த நெடுந் தெருச் சென்றனன் -
    நெறி பெறாமை அரிதினின் நீங்குவான். 229

  788. இராமன், சீதை மற்றும் இலக்குவனுடன் செல்லுதல்

  789. சீரை சுற்றித் திருமகள் பின்செல,
    மூரி விற்கை இளையவன் முன்செல,
    காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ்
    ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ? 230

  790. மக்கள் யாவரும் இராமனைத் தொடர்ந்து செல்லுதல்

  791. ஆரும் பின்னர் அழுது அவலித்திலர்;
    சோரும் சிந்தையர், யாவரும் சூழ்ந்தனர்;
    வீரன் முன் வனம் மேவுதும் யாம் எனா,
    போரென்று ஒல்லொலி கைம்மிகப் போயினார். 231

  792. இராமன் தாயரை வணங்கி மன்னன் தயரதனுக்கு ஆறுதல் கூறுமாறு கூறுதல்

  793. தாதை வாயில் குறுகினன் சார்தலும்,
    கோதை வில்லவன் தாயரைக் கும்பிடா,
    ஆதி மன்னனை ஆற்றுமின் நீர் என்றான்;
    மாதராரும் விழுந்து மயங்கினார். 232

  794. தாய்மார்கள் மூவரையும் வாழ்த்துதல்

  795. ஏத்தினார், தம் மகனை, மருகியை;
    வாழ்த்தினார், இளையோனை; வழுத்தினார்,
    காத்து நல்குமின், தெய்வதங்காள்! என்றார்-
    நாத் தழும்ப அரற்றி நடுங்குவார். 233

  796. வசிட்டனை வணங்கி பின் மூவரும் தேர் ஏறிச் செல்லுதல்

  797. அன்ன தாயர் அரிதின் பிரிந்தபின்,
    முன்னர் நின்ற முனிவனைக் கைதொழா,
    தன்னது ஆர் உயிர்த் தம்பியும், தாமரைப்
    பொன்னும், தானும், ஒர் தேர்மிசைப் போயினான். 234

  798. மிகைப் பாடல்கள்

  799. விழுந்து பார்மிசை, வெய்து உயிர்த்து, ஆவி சோர்ந்து,
    எழுந்து, என் நாயகனே! துயர் ஏது எனாத்
    தெளிந்திலேன்; இது செப்புதி நீ எனா,
    அழுந்தினாள்; பின்னர் அரற்றத் தொடங்கினாள். 29-1

  800. அன்னாள் இன்ன பன்னி அழியத் துயரால், மன்னர்
    மன்னானவனும் இடரின் மயங்கி, மைந்தா! மைந்தா!
    முன்னே வனம் ஏகிடல் நீ முறையோ? முதல்வா! முறையோ?
    என்னே, யான் செய் குறைதான்? என்றே இரங்கி மொழிவான்: 53-1

  801. உணர்வு ஏதும் இலாள் உரையால் உரைசால் குமரன் நெடு நாள்
    புணரான் நிலம்; மா வனமே போவானேயாம்; என்னில்,
    இணரே பொலி தார் நிருபா; இடரால் அயர்வாய்; இதுவும்
    துணையோ?- துணைவா! என்றாள்; துயரேல்! துயரேல்! என்றான். 53-2

  802. சேலா கியமா முதல்வன் திரு உந்தியின் நீள் மலரின்-
    மேலா கியநான் முகனால், வேதங் களின் மா முறையின்-
    பாலா கியயோனிகளின் பலவாம் வருணம் தருவான்,
    நாலா கியதாம் வருணன் தனின், முன் எமை நல்கினனால். 76-1

  803. அந்நான் மறையோன் வழியில் அருள் காசிபன் நல் மைந்தன்
    மின்னார் புரிநூல் மார்பன் விருத்தே சனன்மெய்ப் புதல்வன்,
    நன்னான் மறைநூல் தெரியும் நாவான் சலபோ சன் எனச்
    சொன்னான் முனிவன் தரு சுரோசனன் யான் என்றான். 76-2

  804. தாவாத அருந்தவர் சொல் தவறாததனால், தமியேன்
    சாவாதவரும் உளரோ? தண்டா மகவு உண்டு என்றே
    ஓவாதார் முன் நின்றே; ஒரு சொல் உடையாது அவரும்,
    பூவார் அனலுள் பொன்றி, பொன் - நாடு அதனில் புக்கார். 86-1

  805. இம்மா மொழிதந்து அரசன் இடருற்றிடும் போழ்தினில், அச்
    செம்மா மயில் கோசலையும் திகையா உணர்வு ஓவினளாய்,
    மெய்ம்மாண் நெறியும், விதியின் விளைவும், தளர்வின்றி உணரும்
    அம்மா தவனும் விரைவோடு அவலம் தருநெஞ் சினனாய். 87-1

  806. என்று என்று சீற்றத்து இளையோன் இது இயம்பிடாமுன்,
    கன்று ஒன்றும் ஆவின் பல யோனியும் காத்த நேமி
    வன் திண் சிலைக் கைம் மனு என்னும் வயங்கு சீர்த்திக்
    குன்று ஒன்று தோளான் மருமான் இவை கூறலுற்றான்: 127-1

  807. ஆய் தந்த மென் சீரை அணிந்து அடி தாழ்ந்து நின்ற
    சேய் உந்து நிலை நோக்கினன், சேய் அரிக் கண்கள் தேம்ப,
    வேய் தந்த மென் தோளி தன் மென் முலை பால் உகுப்ப-
    தாய், நிந்தை இன்றிப் பல ஊழி தழைத்தி! என்றாள். 147-1

  808. வானமே அனையதோர் கருணை மாண்பு அலால்
    ஊனம் வேறு இலானுடன், உலகம் யாவையும்,
    கானமே புகும் எனில் காதல் மைந்தனும்
    தானுமே ஆளும்கொல் தரை? என்றார் சிலர். 191-1

  809. போயினான் நகர் நீங்கி-பொலிதரு
    தூய பேர் ஒளி ஆகி, துலங்கு அருள்
    ஆய மூவரும் ஆகி, உயிர்த் தொகைக்கு
    ஆயும் ஆகி, அளித்தருள் ஆதியான். 234-1


  810. அயோத்தியா காண்டம்

  811. 5. தைலம் ஆட்டுப் படலம்




  812. நகரத்தார் தொடர இராமன் தேரில் செல்லுதல்

  813. ஏவிய குரிசில் பின் யாவர் ஏகிலார்?
    மா இயல் தானை அம் மன்னை நீங்கலாத்
    தேவியர் ஒழிந்தனர்; தெய்வ மா நகர்
    ஓவியம் ஒழிந்தன, உயிர் இலாமையால். 1

  814. இராமனின் தேர் சென்ற காட்சி

  815. கைகள் நீர் பரந்து, கால் தொடர, கண் உகும்
    வெய்யநீர் வெள்ளத்து மெள்ளச் சேறலால்,
    உய்ய, ஏழ் உலகும் ஒன்று ஆன நீர் உழல்
    தெய்வமீன் ஒத்தது-அச் செம்பொன் தேர் அரோ! 2

  816. சூரியன் மறையும் காட்சி

  817. மீன் பொலிதர, வெயில் ஒதுங்க, மேதியோடு
    ஆன் புக, கதிரவன் அத்தம் புக்கனன் -
    கான் புகக் காண்கிலேன் என்று கல்லதர்
    தான்புக முடுகினன் என்னும் தன்மையான். 3

  818. தாமரை மலர்கள் குவிதல்

  819. பகுத்தவான் மதிகொடு பதுமத்து அண்ணலே
    வகுத்தவாள் நுதலியர் வதன ராசிபோல்,
    உகுத்தகண் ணீரினின் ஒளியும் நீங்கின,
    முகிழ்த்து, அழகு இழந்தன, முளரி ஈட்டமே. 4

  820. இருள் பரவுதல்

  821. அந்தியில் வெயில் ஒளி அழிய, வானகம்,
    நந்தலில் கேகயன் பயந்த நங்கைதன்,
    மந்தரை உரையெனும் கடுவின் மட்கிய
    சிந்தையின் இருண்டது, செம்மை நீங்கியே. 5

  822. வானில் விண்மீன்களின் ஒளி

  823. பரந்து மீன் அரும்பிய பசலை வானகம்,
    அரந்தை இல் முனிவரன் அறைந்த சாபத்தால்,
    நிரந்தரம் இமைப்பு இலா நெடுங் கண் ஈண்டிய
    புரந்தரன் உரு எனப் பொலிந்தது எங்குமே. 6

  824. இராமன் ஒரு சோலையை அடைந்து முனிவருடன் தங்குதல்

  825. திரு நகர்க்கு யோசனை இரண்டு சென்று, ஒரு
    விரை செறி சோலையை விரைவின் எய்தினான்;
    இரதம் நின்று இழிந்து, பின், இராமன், இன்புறும்
    உரை செறி முனிவரோடு உறையும் காலையே. 7

  826. நகர மக்களும் சோலையின் அருகே தங்குதல்

  827. வட்டம் ஓர் ஓசனை வளைவிற்றாய், நடு
    எள்தனை இடவும் ஓர் இடமிலா வகை,
    புள்தகு சோலையின் புறத்துப் போர்த்தென
    விட்டது-குரிசிலை விடாத சேனையே. 8

  828. உடன்வந்தவர்கள் ஊண் உறக்கமின்றி துயருடன் தங்குதல்

  829. குயின்றன குலமணி நதியின் கூலத்தில்,
    பயின்று உயர் வாலுகப் பரப்பில், பைம்புலில்,
    வயின் தொறும் வயின் தொறும் வைகினர்; ஒன்றும்
    அயின்றிலர்; துயின்றிலர்; அழுது விம்மினார். 9

  830. இராமனுடன் வந்தவர் உறங்குதல்

  831. வாவி விரி தாமரையின் மா மலரின் வாசக்
    காவி விரி நாள் மலர் முகிழ்த்தனைய கண்ணார்,
    ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக,
    நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார். 10

  832. பெரும் பகல் வருந்தினர், பிறங்கு முலை தெங்கின்
    குரும்பைகள் பொரும் செவிலி மங்கையர் குறங்கில்,
    அரும்பு அனைய கொங்கை, அயில் அம்பு அனைய உண் கண்,
    கரும்பு அனைய செஞ்சொல் நவில், கன்னியர் துயின்றார். 11

  833. பூவகம் நிறைந்த புளினத் திரள்கள் தோறும்
    மா வகிரின் உண்கணர் மடப்பிடியின் வைகச்
    சேவகம் அமைந்த சிறு கண்கரிகள் என்னத்
    தூ அகல் இல் குந்தம் மறம் மைந்தர்கள் துயின்றார். 12

  834. மாகமணி வேதிகையில், மாதவிசெய் பந்தர்,
    கேகய நெடுங்குலம் எனச்சிலர் கிடந்தார்;
    பூகவனம் ஊடு, படு கர்ப்புளின முன்றில்,
    தோகை இள அன்ன நிரையின் சிலர் துயின்றார். 13

  835. சம்பக நறும்பொழில்களில், தருண வஞ்சிக்
    கொம்பு அழுது ஒசிந்தன எனச்சிலர் குழைந்தார்;
    வம்பளவு கொங்கையொடு, வாலுலகம் வளர்க்கும்
    அம்பவள வல்லிகள் எனச் சிலர் அசைந்தார். 14

  836. தகவுமிகு தவமும் இவை தழுவ, உயர் கொழுநர்
    முகமும் அவர் அருளும் நுகர் கிலர்கள், துயர் முடுக,
    அகவும் இள மயில்கள், உயிர் அலசியன அனையார்,
    மகவுமுலை வருட, இள மகளிர்கள் துயின்றார். 15

  837. குங்கும மலைக் குளிர் பனிக் குழுமி என்னத்
    துங்க முலையில் துகள் உற சிலர் துயின்றார்;
    அங்கை அணையில், பொலிவு அழுங்க, முகம் எல்லாம்
    பங்கயம் முகிழ்த்தன எனச் சிலர் படிந்தார். 16

  838. இராமன் சுமந்திரனை அழைத்து தேருடன் ஊர் திரும்பக் கூறுதல்

  839. ஏனையரும் இன்னணம் உறங்கினர்; உறங்கா
    மானவனும் மந்திரி சுமந்திரனை, வா வென்று,
    ஊனம் இல் பெருங்குணம் ஒருங்கு உடைய உன்னால்
    மேல் நிகழ்வது உண்டு அவ் உரை கேள் என விளம்பும். 17

  840. பூண்ட பேரன்பினாரைப் போக்குவது அரிது; போக்காது,
    ஈண்டு நின்று ஏகல் பொல்லாது; எந்தை! நீ இரதம் இன்னே
    தூண்டினை மீள நோக்கிச் சுவட்டையோர்ந்து, என்னை அங்கே
    மீண்டனன் என்ன மீள்வர்; இது நின்னை வேண்டிற்று என்றான். 18

  841. வெறுந்தேருடன் திரும்பிச் சென்று தயரதனுக்கு என்ன பதில் சொல்லுவது என சுமந்திரன் வருந்துதல்

  842. செவ்விய குரிசில் கூற, தேர் வலான் செப்புவான், அவ்
    வெவ்விய தாயின், தீய விதியினின் மேலன் போலாம்;
    இவ் வயின் நின்னை நீக்கி, இன் உயிர் தீர்ந்து இன்று ஏகி,
    அவ் வயின் அனைய காண்டற்கு அமைதலால் அளியன் என்றான். 19

  843. தேவியும் இளவலும் தொடரச் செல்வனைப்
    பூவியல் கானகம் புக உய்த்தேன் என்கோ?
    கோவினை உடன்கொடு குறுகினேன் என்கோ?
    யாவது கூறுகேன், இரும்பின் நெஞ்சினேன்? 20

  844. தாருடை மலரினும் ஒதுங்கத் தக்கிலா
    வார் உடை முலையொடும், மதுகை மைந்தரைப்
    பாரிடைச் செலுத்தினேன், பழைய நண்பினேன்,
    தேரிடை வந்தனன், தீது இலேன் என்கோ? 21

  845. வன்புலம் கல்மன மதியில் வஞ்சனேன்,
    என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்பால்,
    உன்புலக்கு உரியசொல் உணர்த்தச் செல்கெனோ?
    தென்புலக் கோமகன் தூதின் செல்கெனோ? 22

  846. நால்திசை மாந்தரும், நகர மாக்களும்,
    தேற்றினர் கொணர்வார் என் சிறுவன் தன்னை என்று
    ஆற்றின அரசனை, ஐய! வெய்யஎன்
    கூற்று உறழ் சொல்லினால், கொலைசெய் வேன்கொலோ? 23

  847. அங்கிமேல் வேள்வி செய்து அரிதின் பெற்ற நின்
    சிங்க ஏறு அகன்றது என்று உணர்த்தச் செல்கெனோ?
    எங்கள் கோமகற்கு, இனி, என்னின், கேகயன்
    நங்கையே கடைமுறை நல்லள் போலுமால்! 24

  848. சுமந்திரன் இராமனின் பாதங்களில் விழுந்து துயருடன் கூறுதல்

  849. முடிவுற இன்னை மொழிந்த பின்னரும்,
    அடி உறத் தழுவினன், அழுங்கு பேர் அரா
    இடி உறத் துவளுவது என்னும் இன்னலன்;
    படி உறப் புரண்டனன்; பலவும் பன்னினான். 25

  850. துயருற்ற சுமந்திரனை இராமன் எடுத்து அணைத்து ஆறுதல் கூறுதல்

  851. தடக்கையால் எடுத்து, அவன் தழுவிக், கண்ணநீர்
    துடைத்து, வேறு இருத்தி மற்றினைய சொல்லினான்;
    அடக்கும் ஐம் பொறியொடு கரணத்து அப்புறம்
    கடக்கும்வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான். 26

  852. பிறத்தல் ஒன்று உற்றபின் பெறுவ யாவையும்
    திறத்துளி உணர்வது ஓர் செம்மை உள்ளத்தாய்!
    புறத்துறு பெரும் பழி பொது இன்று எய்தலும்,
    அறத்தினை மறத்தியோ, அவலம் உண்டு எனா? 27

  853. முன்பு நின்று இசை நிறீஇ, முடிவு முற்றிய
    பின்பும் நின்று, உறுதியைப் பயக்கும் பேரறம்,
    இன்பம் வந்து உறும் எனின் இனிது; ஆயிடைத்
    துன்பம் வந்து உறும் எனின், துறங்கல் ஆகுமோ? 28

  854. நிறப் பெரும் படைக்கலம் நிறத்தின் நேர் உற,
    மறப்பயன் வினைக்குறும் வன்மை அன்று அரோ;
    இறப்பினும், திருவெலாம் இழப்ப எய்தினும்,
    துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே. 29

  855. கான்புறம் சேறலில் அருமை காண்டலால்,
    வான்பிறங் கியபுகழ் மன்னர் தொல்குலம்,
    யான்பிறந்து, அறத்தினின்று இழுக்கிற்று என்னவோ?-
    ஊன் திறந்து உயிர்குடித்து உழலும் வேலினாய்! 30

  856. வினைக்கு அரு மெய்ம்மையன் வனத்துள் விட்டனன்,
    மனக்கு அரும் புதல்வனை என்றல் மன்னவன்
    தனக்கு அரும் தவம்; அது தலைக்கொண்டு ஏகுதல்
    எனக்கு அருந் தவம்; இதற்கு இரங்கல் எந்தை! நீ. 31

  857. தன் தந்தை முதலியோரிடம் சொல்ல வேண்டி இராமன் சிலவற்றை சுமந்திரனிடம் சொல்லுதல்

  858. முந்தினை முனிவனைக் குறுகி, முற்றும் என்
    வந்தனை முதலிய மாற்றம் கூறினை,
    எந்தையை அவனொடும் எய்தி, ஈண்டு, என
    சிந்தனை உணர்த்துதி என்று, செப்புவான். 32

  859. முனிவனை, எம்பியை, முறையில் நின்று, அரும்
    புனித வேதியர்க்கும், மேல் உறை புத்தேளிர்க்கும்,
    இனியன இழைத்தி என்று இயம்பி, எற் பிரி
    தனிமையும் தீர்த்தி என்று உரைத்தி, தன்மையால். 33

  860. வெவ்வியது, அன்னையால் விளைந்தது, ஈண்டு ஒரு
    கவ்வை என்று இறையும் தன் கருத்தின் நோக்கலன்,
    எவ் அருள் என்வயின் வைத்தது, இன் சொலால்,
    அவ் அருள் அவன் வயின் அருளுக! என்றியால். 34

  861. வேண்டினென் இவ் வரம் என்று, மேலவன்
    ஈண்டு அருள் எம்பிபால் நிறுவி, ஏகினை,
    பூண்ட மா தவனொடும் கோயில் புக்கு, இனிது
    ஆண் தகை வேந்தனை அவலம் ஆற்றி, பின், 35

  862. ஏழ்-இரண்டு ஆண்டும் நீத்து, ஈண்ட வந்து உனைத்
    தாழ்குவென் திருவடி; தப்பிலேன் எனச்
    சூழி வெங் களிற்று இறை தனக்குச் சோர்வு இலா
    வாழி மா தவன் சொலால் மனம் தெருட்டுவாய். 36

  863. முறைமையால் எற்பயந்து எடுத்த மூவர்க்கும்
    குறைவிலா என்நெடு வணக்கம் கூறிப்பின்
    இறைமகன் துயர்துடைத்து இருத்தி, மாடு என்றான்
    மறைகளை மறைந்துபோய் வனத்துள் வைகுவான். 37

  864. இராமனை வணங்கி சுமந்திரன் சீதையை நோக்குதல்

  865. ஆள்வினை, ஆணையின் திறம்பல் அன்று எனா,
    தாள்முதல் வணங்கிய தனித் திண் தேர் வலான்,
    ஊழ்வினை வரும் துயர் நிலை என்று உன்னுவான்,
    வாழ்வினை நோக்கியை வணங்கி நோக்கினான். 38

  866. சீதை சுமந்திரனிடம் செய்தி கூறல்

  867. அன்னவள் கூறுவாள், அரசர்க்கு, அத்தையர்க்கு,
    என்னுடை வணக்கம், முன் இயம்பி, யானுடைப்
    பொன் நிறப் பூவையும், கிளியும், போற்றுக என்று
    உன்னும் என் தங்கையர்க்கு உணர்த்துவாய் என்றாள். 39

  868. இராமன் தேற்றவும், சுமந்திரன் பொருமி விம்முதலும்

  869. தேர் வலான், அவ் உரை கேட்டு, தீங்கு உறின்
    யார் வலார்? உயிர் துறப்பு எளிது அன்றே? எனாப்
    போர் வலான் தடுக்கவும், பொருமி விம்மினான் -
    சோர்வு இலாள் அறிகிலாத் துயர்க்குச் சோர்கின்றான். 40

  870. இராமனிடம் விடைபெற்று சுமந்திரன், இலக்குவனை வினாவுதல்

  871. ஆறினன் போல் சிறிது அவலம், அவ் வழி,
    வேறு இலா அன்பினான், விடை தீந்தீக எனா
    ஏறு சேவகன் - தொழுது, இளைய மைந்தனை,
    கூறுவது யாது? என, இனைய கூறினான். 41

  872. இலக்குவன் சொன்ன கோபச் செய்தி

  873. உரைசெய்து எம் கோமகற்கு உறுதி ஆக்கிய
    தரைகெழு செல்வத்தைத் தவிர, மற்று ஒரு
    விரை செறி குழலிமாட்டு அளித்த மெய்யனை
    அரைசன் என்று இன்னம் ஒன்று அறையற் பாலதோ? 42

  874. கானகம் பற்றி நல் புதல்வன் காய் உண,
    போனகம் பற்றிய பொய் இல் மன்னற்கு, இங்கு
    ஊனகம் பற்றிய உயிர்கொடு, இன்னும் போய்
    வானகம் பற்றிலா வலிமை கூறு என்றான். 43

  875. இலக்குவன் பரதனுக்கு சொல்லிய கோபச் செய்தி

  876. மின்னுடன் பிறந்தவாள் பரத வேந்தற்கு, என்
    மன்னுடன் பிறந்திலென்; மண்கொண்டு ஆள்கின்றான்,
    தன்னுடன் பிறந்திலென்; தம்பி முன்னலென்;
    என்னுடன் பிறந்தயான் வலியன் என்றியால். 44

  877. இராமன் இலக்குவனை அடக்க, சுமந்திரன் அயோத்தி நோக்கி புறப்படுதல்

  878. ஆரியன் இளவலை நோக்கி, ஐய! நீ
    சீரிய அல்லன செப்பல் என்றபின்,
    பாரிடை வணங்கினன், பதைக்கு நெஞ்சினன்;
    தேரிடை வித்தகன் சேறல் மேயினான். 45

  879. கூட்டினன் தேர்ப்பொறி; கூட்டிக் கோள்முறை
    பூட்டினன் புரவி; அப் புரவி போம் நெறி
    காட்டினன்; காட்டித்தன் கல்வி மாட்சியால்
    ஓட்டினன்; ஒருவரும் உணர்வுறாமலே. 46

  880. இராமன், சீதை இலக்குவனுடன் இரவில் செல்லுதல்

  881. தையல் தன் கற்பும், தன் தகவும், தம்பியும்,
    மையறு கருணையும், உணர்வும், வாய்மையும்,
    செய்யதன் வில்லுமே, சேமமாகக் கொண்டு
    ஐயனும் போயினான், அல்லின் நாப்பணே. 47

  882. நிலவின் தோற்றம்

  883. பொய் வினைக்கு உதவும் வாழ்க்கை அரக்கரைப் பொருந்தி, அன்னார்
    செய் வினைக்கு உதவும் நட்பால் செல்பவர்த் தடுப்பது ஏய்க்கும்,
    மை விளக்கியதே அன்ன வயங்கு, இருள் துரக்க, வானம்
    கைவிளக்கு எடுத்தது என்ன, வந்தது - கடவுள் திங்கள். 48

  884. மருமத்துத் தன்னை ஊன்றும் மறக் கொடும் பாவம் தீர்க்கும்
    உரும் ஒத்த சிலையினோரை ஒருப்படுத்து உதவி நின்ற
    கருமத்தின் விளைவை எண்ணிக் களிப்பொடு காண வந்த
    தருமத்தின் வதனம் என்னப் பொலிந்தது - தனி வெண் திங்கள். 49

  885. மலர்கள் குவிந்திருத்தல்

  886. காம்பு உயர் கானம் செல்லும் கரியவன் வறுமை நோக்கி,
    தேம்பின குவிந்த போலும் செங்கழு நீரும்; சேரைப்
    பாம்பின தலைய ஆகிப் பரிந்தன, குவிந்து சாய்ந்த,
    ஆம்பலும்; என்றபோது, நின்ற போது அலர்வது உண்டோ ? 50

  887. நிலவொளியில் மூவரும் செல்லுதல்

  888. அஞ்சனக் குன்றம் அன்ன அழகனும், அழகன் தன்னை
    எஞ்சலில் பொன் போர்த்தன்ன இளவலும், இந்து என்பான்
    வெஞ்சிலைப் புருவத் தாள்தன் மெல்லடிக்கு ஏற்ப, வெண் நூல்
    பஞ்சிடைப் படுத்தாலன்ன வெண்ணிலாப் பரப்பப் போனார். 51

  889. சீதை தரையில் நடந்து செல்லுதல்

  890. சிறுநிலை மருங்குல் கொங்கை ஏந்திய செல்வம் என்னும்
    நெறியிருங் கூந்தல் நங்கை சீறடி, நீர்க்கொப் பூழின்
    நறியன, தொடர்ந்து சென்று நடந்தனள், நவையின் நீங்கும்
    உறுவலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டென நுவல்வது உண்டோ ? 52

  891. மூவரும் தென் திசையில் மூன்று யோசனை தூரம் செல்லுதல்

  892. பரிதி வானவனும், கீழ்பால் பரு வரை பற்றாமுன்னம்,
    திருவின் நாயகனும், தென்பால் யோசனை இரண்டு போனான்;
    அருவி பாய் கண்ணும், புண்ணாய் அழிகின்ற மனமும், தானும்,
    துரித மான் தேரில் போனான் செய்தது சொல்லலுற்றாம். 53

  893. சுமந்திரன் வசிட்டனை கண்டு செய்தி தெரிவித்தல்

  894. கடிகை ஓர் இரண்டு மூன்றில் கடி மதில் அயோத்தி கண்டான்;
    அடி இணை தொழுதான், ஆதி முனிவனை; அவனும், உற்ற
    படி எலாம் கேட்டு, நெஞ்சில் பருவரல் உழந்தான், முன்னே
    முடிவு எலாம் உணர்ந்தான், அந்தோ! முடிந்தனன், மன்னன் என்றான். 54

  895. வசிட்டனும் சுமந்திரனும் தயரதனின் அரண்மனை புகுதல்

  896. நின்று உயர் பழியை அஞ்சி நேர்ந்திலன் தடுக்க, வள்ளல்;
    ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான், தருமத்திற்கு உறுதி பார்ப்பான்;
    வென்றவர் உளரோ மேலை விதியினை? என்று விம்மிப்
    பொன் திணி மன்னன் கோயில் சுமந்திரனோடும் போனான். 55

  897. தேர் கொண்டு வள்ளல் வந்தான் என்று தம் சிந்தை உந்த,
    ஊர் கொண்ட திங்கள் என்ன மன்னனை உழையர் சுற்றிக்
    கார் கொண்ட மேனியானைக் கண்டிலர்; கண்ணில், வற்றா
    நீர் கொண்ட நெடுந் தேர்ப் பாகன் நிலை கண்டே, திருவின் தீர்ந்தார். 56

  898. இரதம் வந்தது அறிந்த தயரதன் கண்விழித்து இராமன் வந்தானா என வினவுதல்

  899. இரதம் வந்து உற்றது என்று, ஆங்கு யாவரும் இயம்பலோடும்,
    வரதன் வந்துற்றான் என்ன, மன்னனும் மயக்கம் தீர்ந்தான்;
    புரை தபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி,
    விரத மா தவனைக் கண்டான், வீரன் வந்தனனோ? என்றான். 57

  900. வசிட்டன் பதில் உரையாது அவ்விடம் விட்டு அகலுதல்

  901. இல்லை என்று உரைக்கலாற்றான் ஏங்கினன், முனிவன் நின்றான்;
    வல்லவன் முகமே, நம்பி வந்திலன் என்னும் மாற்றம்
    சொல்லலும், அரசன் சோர்ந்தான்; துயர் உறு முனிவன், நான் இவ்
    அல்லல் காண்கில்லேன் என்னா, ஆங்கு நின்று அகலப் போனான். 58

  902. இராமன் காடு சென்றதை சுமந்திரன் மூலம் அறிந்த தயரதன் உயிர் நீத்தல்

  903. நாயகன், பின்னும், தன் தேர்ப் பாகனை நோக்கி, நம்பி
    சேயனோ? அணியனோ? என்று உரைத்தலும், தேர் வலானும்,
    வேய் உயர் கானம், தானும், தம்பியும், மிதிலைப் பொன்னும்,
    போயினன் என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான். 59

  904. தயரதனை வானோர் மீளா உலகில் சேர்த்தல்

  905. இந்திரன் முதல்வராய கடவுளர் யாரும் ஈண்டி,
    சந்திரன் அனையது ஆங்கு ஓர் மானத்தின் தலையில் தாங்கி,
    வந்தனன், எந்தை தந்தை! என மனம் களித்து, வள்ளல்
    உந்தியான் உலகின் உம்பர் மீள்கிலா உலகத்து உய்த்தார். 60

  906. தயரதன் மாண்ட செய்தி கேட்டு கோசலை புலம்பல்

  907. உயிர்ப்பிலன், துடிப்பும் இல்லன் என்றுணர்ந்து, உருவம் தீண்டி
    அயிர்த்தனள் நோக்கி, மன்னற்கு ஆருயிர் இன்மை தேறி,
    மயிற்குலம் அனைய நங்கை கோசலை மறுகி வீழ்ந்தாள்,
    வெயிற்சுடு கோடை தன்னில் என்பிலா உயிரின் வேவாள். 61

  908. இருந்த அந்தணனோடு எல்லாம் ஈன்றவன் தன்னை ஈனப்
    பெருந் தவம் செய்த நங்கை, கணவனில் பிரிந்து, தெய்வ
    மருந்து இழந்தவரின் விம்மி, மணி பிரி அரவின் மாழ்கி,
    அருந் துணை இழந்த அன்றிற் பெடை என, அரற்றலுற்றாள்: 62

  909. தானே! தானே! தஞ்சம் இலாதான், தகைவு இல்லான்,
    போனான்! போனான்! எங்களை நீத்து, இப்பொழுது என்னா,
    வான் நீர் சுண்டி மண் அற வற்றி, மறுகுற்ற
    மீனே என்ன, மெய் தடுமாறி விழுகின்றாள். 63

  910. ஒன்றோ நல்நாட்டு உய்க்குவர்; இந்நாட்டு உயிர்காப்பார்
    அன்றே? மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே?
    இன்றே வந்து, ஈண்டு அஞ்சல் எனாதுஎம், மகன் என்பான்,
    கொன்றான் அன்றே தந்தையை? என்றாள் குலைகின்றாள். 64

  911. நோயும் இன்றி, நோன்கதிர் வாள், வேல், இவை இன்றி
    மாயும் தன்மை மக்களினாலோ; மறமன்னன்
    காயும் புள்ளிக் கர்க்கடம், நாகம், கனிவாழை,
    வேயும் போன்றான் என்று மயங்கா விழுகின்றாள். 65

  912. வடித்தாழ் கூந்தலில் கேகயன் மாதே! மதியாலே
    பிடித்தாய் வையம்; பெற்றனை பேரா வரம்; இன்னே
    முடித்தாய் அன்றே மந்திரம்? என்றாள் முகில்வாய் மின்
    துடித்தால் என்ன, மன்னவன் மார்பில் துவள்கின்றாள். 66

  913. அருந்தேரானைச் சம்பரனைப் பண்டு அமர் வென்றாய்;
    இருந்தார் வானோர் உன்னருளாலே இனிது; அன்னார்
    விருந்தா கின்றாய் என்றனள், வேழத்து அரசு ஒன்றைப்
    பிரிந்து ஆர் அன்பில் தாழ்பிடி என்னப் பிணியுற்றாள். 67

  914. வேள்விச் செல்வம் துய்த்திகொல்? மெய்ம்மைத் துணை இன்மை
    சூழ்வின் செல்வம் துய்த்திகொல்? தோலா மனு நூலின்
    வாழ்வின் செல்வம் துய்த்திகொல் மன்? என்றனள் - வானோர்
    கேள்விச் செல்வம் துய்க்க வயிற்று ஓர் கிளை தந்தான். 68

  915. அறுபதினாயிரம் தேவிமார்களும் திரண்டு வந்து புலம்புதல்

  916. ஆழி வேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற,
    தோழி அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர் சோர,
    ஊழி திரிவது எனக் கோயில் உலையும் வேலை, மற்று ஒழிந்த
    மாழை உண்கண் தேவியரும், மயிலின் குழாத்தின் வந்து இரைந்தார். 69

  917. தேவிமார்கள் அனைவரும் தயரதனுடன் உயிர் துறக்க எண்ணுதல்

  918. துஞ்சினானை, தம் உயிரின் துணையைக் கண்டார்; துணுக்கத்தால்
    நஞ்சு நுகர்ந்தார் என உடலம் நடுங்காநின்றார்; என்றாலும்,
    அஞ்சி அழுங்கி விழுந்திலரால்; - அன்பின் தறுகண் பிறிது உண்டோ?-
    வஞ்சம் இல்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார். 70

  919. அளம் கொள் அளக்கர் இரும் பரப்பில், அண்டர் உலகில், அப்புறத்தில்
    விளங்கும் மாதர், கற்பினார், இவரின் யாரோ! என, நின்றார்;
    களங்கம் நீத்த மதி முகத்தார்; கான வெள்ளம் கால் கோப்ப,
    துளங்கல் இல்லாத் தனிக்குன்றில் தொக்க மயிலின் சூழ்ந்து இருந்தார். 71

  920. கைத்த சொல்லால் உயிர் இழந்தும், புதல்வற் பிரிந்தும், கடை ஓட
    மெய்த்த வேந்தன் திரு உடம்பைப் பிரியார் பற்றி விட்டிலரால்;
    பித்த மயக்கு ஆம் சுறவு எறியும் பிறவிப் பெரிய கடல் கடக்க,
    உய்த்து மீண்ட நாவாயில், தாமும் போவார் ஒக்கின்றார். 72

  921. சுமந்திரனால் செய்தி அறிந்த வசிட்டன் வருந்துதல்

  922. மாதரார்கள் அறுபதினாயிரரும் உள்ளம் வலித்து இருப்ப,
    கோது இல் குணத்துக் கோசலையும் இளைய மாதும் குழைந்து ஏங்க,
    சோதி மணித் தேர்ச் சுமந்திரன் சென்று, அரசன் தன்மை சொல, வந்த
    வேத முனிவன், விதி செய்த வினையை நோக்கி விம்முவான். 73

  923. வந்த முனிவன், வரம் கொடுத்து மகனை நீத்த வன் கண்மை
    எந்தை தீர்த்தான் என உள்ளத்து எண்ணி எண்ணி இரங்குவான்,
    உந்து கடலில் பெருங் கலம் ஒன்று உடையா நிற்கத் தனி நாய்கன்
    நைந்து நீங்கச் செயல் ஓரா மீகாமனைப் போல், நலிவுற்றான். 74

  924. தயரதனின் உடலை தையலத்திலிடுதல்

  925. செய்யக் கடவ செயற்குரிய சிறுவர், ஈண்டை யார் அல்லர்;
    எய்தக் கடவ பொருள் எய்தாது இகவாது என்ன, இயல்பு எண்ணா,
    மையற் கொடியான் மகன், ஈண்டு வந்தால் முடித்தும் மற்று என்னத்
    தையற் கடலில் கிடந்தாளைத் தயிலக் கடலின் தலை உய்த்தான். 75

  926. பரதனை அழைத்து வர வசிட்டன் ஓலை அனுப்புதல்

  927. தேவிமாரை, இவற்கு உரிமை செய்யும் நாளில், செந் தீயின்
    ஆவி நீத்திர் என நீக்கி, அரிவைமார்கள் இருவரையும்,
    தா இல் கோயில் தலை இருத்தி, தண் தார்ப் பரதற் கொண்டு அணைக என்று
    ஏவினான், மன்னவன் ஆணை எழுது முடங்கல் கொடுத்து, அவரை. 76

  928. போனார் அவரும், கேகயர்கோன் பொன் மா நகரம் புக எய்த;
    ஆனா அறிவின் அருந் தவனும், அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான்;
    சேனாபதியின் சுமந்திரனை செயற்பாற்கு உரிய செய்க என்றான்;
    மேல் நாம் சொன்ன மாந்தர்க்கு விளைந்தது இனி நாம் விளம்புவாம்: 77

  929. சூரியன் உதித்தல்

  930. மீன் நீர் வேலை முரசு இயம்ப, விண்ணோர் ஏத்த, மண் இறைஞ்ச,
    தூ நீர் ஒளி வாள் புடை இலங்க, சுடர்த் தேர் ஏறித் தோன்றினான் -
    வானே புக்கான் அரும் புதல்வன்; மக்கள் அகன்றார்; வரும் அளவும்
    யானே காப்பென், இவ் உலகை என்பான் போல, எறி கதிரோன். 78

  931. காட்டில் விழித்தெழுந்த மக்கள் இராமனைக் காணாது வருந்துதல்

  932. வருந்தா வண்ணம் வருந்தினார்; மறந்தார், தம்மை வள்ளலும் ஆங்கு
    இருந்தான் என்றே இருந்தார்கள் எல்லாம் எழுந்தார்; அருள் இருக்கும்
    பெருந்தாமரைகண் கருமுகிலைப் பெயர்ந்தார், காணார்; பேதுற்றார்;
    பொருந்தா நயனம் பொருந்தி நமைப் பொன்றச் சூழ்ந்த எனப் புரண்டார். 79

  933. இராமனைக் காணாத நகரமாந்தர் செய்தவை

  934. எட்டுத் திசையும் ஓடுவான் எழுவார்; விழுவார் இடர்க் கடலுள்;
    விட்டு நீத்தான் நமை என்பார்; வெய்ய, ஐயன் வினை என்பார்;
    ஒட்டிப் படர்ந்த தண்டகம், இவ் உலகத்து உளது அன்றோ? உணர்வைச்
    சுட்டுச் சோர்தல் பழுது அன்றோ? தொடர்தும் தேரின் சுவடு என்பார். 80

  935. தேர்ச்சுவடு அயோத்தி நோக்கி செல்வது கண்டு மக்கள் ஆரவாரித்தல்

  936. தேரின் சுவடு நோக்குவார்; திரு மா நகரின் மிசைத் திரிய
    ஊரும் திகிரிக் குறி ஒற்றி உணர்ந்தார்; எல்லாம் உயிர் வந்தார்;
    ஆரும் அஞ்சல்; ஐயன் போய் அயோத்தி அடைந்தான் என, அசனிக்
    காரும், கடலும், ஒருவழிக் கொண்டு ஆர்த்த என்னக் கடிது ஆர்த்தார். 81

  937. மகிழ்ச்சி அடைந்த மக்களின் தன்மை

  938. மானம் அரவின் வாய்த் தீய வளைவான் தொளைவாள் எயிற்றின்வழி
    ஆன கடுவுக்கு, அருமருந்தா அருந்தும் அமுதம் பெற்றுய்ந்து,
    போன பொழுதில் புகுந்த உயிர் பொறுத்தார் ஒத்தார், பொருவரிய
    வேனில் மதனை மதன் அழித்தான் மீண்டான் என்ன ஆண்டையோர். 82

  939. தேர்ச்சுவட்டினை தொடர்ந்து மக்கள் அயோத்தி அடைதல்

  940. ஆறு செல்லச் செல்ல, தேர் ஆழி கண்டார், அயற்பால
    வேறு சென்ற நெறி காணார்; விம்மாநின்ற உவகையராய்,
    மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும்
    ஏறி ஒடுங்கும் எறிகடல்போல், எயில் மா நகரம் எய்தினார். 83

  941. மக்கள் இராமன் கானகம் சென்றதையும், மன்னன் இறந்ததையும் அறிந்து பெருந்துயருறுதல்

  942. புக்கார், அரசன் பொன்னுலகம் போனான் என்னும் பொருள் கேட்டார்;
    உக்கார், நெஞ்சம்; உயிர் உகுத்தார்; உற்றது எம்மால் உரைப்ப அரிதால்;
    தக்கான் போனான் வனம் என்னும் தகையும் உணர்ந்தார்; - மிகை ஆவி
    அக் காலத்தே அகலுமோ, அவதி என்று ஒன்று உளதானால்? 84

  943. மக்களின் வருத்தத்தை வசிட்டன் ஆற்றுதல்

  944. மன்னற்கு அல்லார்; வனம்போன மைந்தற்கு அல்லார்; வாங்க அரிய
    இன்னல் சிறையின் இடைப்பட்டார், இருந்தார்; நின்ற அருந்தவனும்,
    உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது யான்? என்று,
    பன்னற்கு அரிய பல நெறியும் பகர்ந்து, பதைப்பை நீக்கினான். 85

  945. வெள்ளத்திடை வாழ் வட அனலை அஞ்சி வேலை கடவாத
    பள்ளக் கடலின், முனி பணியால், பையுள் நகரம் வைகிட, மேல்
    வள்ளல் தாதை பணி என்னும் வானோர் தவத்தால், வயங்கு இருளின்
    நள்ளில் போன வரி சிலைக் கை நம்பி செய்கை நடத்துவாம். 86

  946. மிகைப் பாடல்கள்

  947. தொடுத்த கல் இடைச் சிலர் துவண்டனர் துயின்றார்;
    அடுத்த அடையிற் சிலர் அழிந்தனர் அயர்ந்தார்;
    உடுத்த துகில் சுற்று ஒரு தலைச் சிலர் உறைந்தார்;
    படுத்த தளிரில் சிலர் பசைந்தனர் அசந்தார். 16-1

  948. ஒரு திறத்து உயிர் எலாம் புரந்து, மற்று அவண்
    இரு திறத்து உள வினை இயற்றும் எம்பிரான்
    தரு திறத்து ஏவலைத் தாங்கி, தாழ்வு இலாப்
    பொரு திறல் சுமந்திரன் போய பின்னரே. 46-1

  949. துந்துமி முழங்க, தேவர் தூய் மலர் பொழிந்து வாழ்த்த,
    சந்திர வதனத்து ஏயும் அரம்பையர் தழுவ, தங்கள்
    முந்து தொல் குலத்துளோரும் முக்கணான் கணமும் சூழ,
    அந்தரத்து அரசன் சென்றான், ஆன தேர்ப் பாகன் சொல்லால். 59-1

  950. அயோத்தியா காண்டம்

  951. 6. கங்கைப் படலம்




  952. இராமன் சீதை இலக்குவனோடு காட்டில் செல்லல்

  953. வெய்யோன் ஒளி தன்மேனியில் விரிசோதியின் மறையப்
    பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும், போனான்-
    மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ,
    ஐயோ, இவன் வடிவு! என்பதோர் அழியா அழகு உடையான். 1

  954. சீதையுடன் செல்லும் இராமன் மருத நிலத்தில் திரியும் அன்னம் முதலியவற்றைக் காணுதல்

  955. அளி அன்னது ஓர் அறல் துன்னிய குழலாள், கடல் அமிழ்தின்
    தெளிவு அன்னது ஓர் மொழியாள், நிறை தவம் அன்னது ஓர் செயலாள்,
    வெளி அன்னது ஓர் இடையாளொடும் விடை அன்னது ஓர் நடையான்
    களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான். 2

  956. அஞ்சு அம்பையும் ஐயன் தனது அலகு அம்பையும் அளவா,
    நஞ்சங்களை வெல ஆகிய நயனங்களை உடையான்,
    துஞ்சும்களி வரி வண்டுகள் குழலின் படி சுழலும்
    கஞ்சங்களை மஞ்சன் கழல் நகுகின்றது கண்டாள். 3

  957. மா கந்தமும், மகரந்தமும், அளகம்தரும் மதியின்
    பாகம் தரும் நுதலாளொடு, பவளந்தரும் இதழான்,
    மேகந்தனி வருகின்றது மின்னோடு என, மிளிர்பூண்,
    நாகம் நனி வருகின்றது பிடியோடு என, நடவா, 4

  958. தொளைகட்டிய கிளைமுட்டிய சுருதிச் சுவை அமுதின்,
    கிளைகட்டிய கருவிக்கிளர், இசையின், பசை நறவின்,
    விளைகட்டியின், மதுரித்துஎழு கிளவிக் கிளி விழிபோல்,
    களைகட்டவர் தளைவிட்டெறி குவளைத்தொகை கண்டான். 5

  959. மூவரும் மருத நிலக் காட்சிகளை கண்ட வண்ணம் கோசல நாட்டைக் கடத்தல்

  960. அருப்பேந்திய கலசத்துணை, அமுதேந்திய மதமா
    மருப்பேந்திய எனலாம் முலை, மழையேந்திய குழலாள்,
    கருப்பு ஏந்திரம் முதலாயின கண்டாள், இடர் காணாள்,
    பொருப்பேந்திய தோளானொடு விளையாடினள், போனாள். 6

  961. பல் நந்து உகு தரளம் தொகு படர் பந்திகள் படு நீர்
    அன்னந்துயில் வதி தண்டலை, அயல்நந்து உளை புளினம்,
    சின்னம் தரும் மலர்சிந்திய செறிநந்தன வனம் நல்
    பொன் நந்திய நதி, கண்டு உளம் மகிழ்தந்தனர் போனார். 7

  962. கால்பாய்வன முதுமேதிகள் கதிர்மேய்வன, கடைவாய்ப்
    பால்பாய்வன; நறைபாய்வன மலர்வாய் அளி படரச்
    சேல்பாய்வன; கயல்பாய்வன; செங்கால்மட அன்னம்
    போல், பாய்புனல் மடவார்படி நெடு நாடு அவை போனார். 8

  963. மூவரும் கங்கையை அடைதல்

  964. பரிதி பற்றிய பல்கலன் முற்றினர்,
    மருத வைப்பின் வளங்கெழு நாடு ஒரீஇ,
    சுருதி கற்று உயர் தோம் இலர் சுற்றுறும்
    விரிதி ரைப்புனல் கங்கையை மேவினார். 9

  965. கங்கைக் கரையில் தங்கியிருக்கும் முனிவர்கள் இராமனைக் காண வருதல்

  966. கங்கை என்னும் கடவுள் திருநதி
    தங்கி வைகும் தபோதனர் யாவரும்,
    எங்கள் செல்கதி வந்தது என்று ஏமுறா,
    அங்கண் நாயகன் காண, வந்து அண்மினார். 10

  967. வந்த முனிவர்களை இராமன் தரிசித்து மகிழ்தல்

  968. பெண்ணின் நோக்கும் சுவையில், பிறர்பிறர்க்கு
    எண்ணி நோக்கி இயம்ப அரும் இன்பத்தை,
    பண்ணின் நோக்கும் பராஅமு தைப்பசுங்
    கண்ணின் நோக்கினர், உள்ளங் களிக்கின்றார். 11

  969. முனிவர்கள் இராமனை புகழ்ந்து பாடி ஆடுதல்

  970. எதிர்கொடு ஏத்தினர்; இன்னிசை பாடினர்;
    வெதிர்கொள் கோலினர், ஆடினர்; வீரனைக்
    கதிர்கொள் தாமரைக் கண்ணனைக் கண்ணினால்,
    மதுர வாரி அமுதென, மாந்துவார். 12

  971. முனிவர்கள் இராமனைத் தம் இருப்பிடம் அழைத்துச் செல்லுதல்

  972. மனையின் நீங்கிய மக்களை வைகலும்
    நினையும் நெஞ்சினர் கண்டிலர் நேடுவார்,
    அனையர் வந்துற, ஆண்டு எதிர்ந்தார்கள்போல்,
    இனிய மாதவப் பள்ளிகொண்டு எய்தினார். 13

  973. இராமன் வழி வந்த வருத்தத்தை முனிவர்கள் போக்குதல்

  974. பொழியும் கண்ணீர் புதுப்புனல் ஆட்டினர்;
    மொழியும் இன்சொலின், மொய்ம்மலர் சூட்டினர்;
    அழிவில் அன்பெனும் ஆரமிழ்து ஊட்டினர்;
    வழியில் வந்த வருத்தத்தை வீட்டினர். 14

  975. இராமனை நீராடி அமுது உண்ண முனிவர்கள் வேண்டல்

  976. காயும், கானிற் கிழங்கும், கனிகளும்,
    தூய தேடிக் கொணர்ந்தனர்; தோன்றல்! நீ
    ஆய கங்கை அரும்புனல் ஆடினை,
    தீயை ஒம்பினை, செய்யமுது என்றனர். 15

  977. இராமனும் சீதையும் கங்கையில் நீராடுதல்

  978. மங்கையர்க்கு விளக்கன்ன மானையும்,
    செங்கை பற்றினன், தேவரும் துன்பு அற,
    பங்கயத்து அயன், பண்டு, தன் பாதத்தின்
    அம் கையின் தரும் கங்கையின் ஆடினான். 16

  979. இராமனை கங்கை புகழ்தல்

  980. கன்னி நீக்க அரும் கங்கையும் கைதொழாப்
    பன்னி நீக்க அரும் பாதகம், பாருளோர்,
    என்னின் நீக்குவர்; யானும், இன்று என் தந்த
    உன்னின் நீக்கினென்; உய்ந்தனென் யான் என்றாள். 17

  981. கங்கையில் மூழ்கும் இராமனின் தோற்றம்

  982. வெம் கண் நாகக் கரத்தினன், வெண்ணிறக்
    கங்கை வார்சடைக் கற்றையன், கற்புடை
    மங்கை காணநின்றாடுகின்றான், வகிர்த்
    திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான். 18

  983. தள்ளும் நீர்ப்பெருங் கங்கைத் தரங்கத்தால்,
    வள்ளி நுண்ணிடை மாமல ராளொடும்,
    வெள்ளி வெண் நிறப் பாற்கடல், மேலைநாள்
    பள்ளி நீங்கிய பான்மையின், தோன்றினான். 19

  984. சீதை கங்கையில் நீராடுதல்

  985. வஞ்சி நாண இடைக்கு, மடநடைக்கு
    அஞ்சி அன்னம் ஒதுங்க, அடியன்ன
    கஞ்சம் நீரில் ஒளிப்பக் கயலுகப்
    பஞ்சி மெல்லடிப் பாவையும் ஆடினாள். 20

  986. சீதை நீராடியதால் கங்கை நறுமணம் பெறுதல்

  987. தேவ தேவன் செறிசடைக் கற்றையுள்
    கோவை மாலை எருக்கொடு கொன்றையின்
    பூவு நாறலள்; பூங்குழல் கூந்தலின்
    நாவி நாள்மலர் கங்கையும் நாறினாள். 21

  988. கங்கையின் அலைகள் சீதை மீது மோதுதல்

  989. நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால்
    நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி,
    உரைத்த சீதை தனிமையை உன்னுவாள்,
    திரைக்கை நீட்டிச் செவிலியின் ஆட்டினாள். 22

  990. சீதையின் கூந்தல் கங்கை வெள்ளத்தில் தோன்றும் காட்சி

  991. மங்கை வார்குழல் கற்றை மழைக்குலம்,
    தங்கு நீரிடைத் தாழ்ந்து குழைப்பன,
    கங்கை யாற்றுடன் ஓடும் கரியவள்
    பொங்கு நீர்ச்சுழி போவன போன்றதே. 23

  992. சீதை புனித கங்கையில் மூழ்கி எழுதல்

  993. சுழிபட்டு ஓங்கிய தூங்குஒலி ஆற்றுத்தன்
    விழியில் சேலுகள் வானிற வெள்ளத்து,
    முழுகித் தோன்றுகின்றாள், முதற் பாற்கடல்
    அழுவத்து அன்று எழுவாள் எனல் ஆயினாள். 24

  994. இராமன் நீராடியதால் கங்கையின் மகிமை மிகுதல்

  995. செய்ய தாமரைத் தாள்பண்டு தீண்டலால்,
    வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள்
    ஐயன் மேனி எலாம் அளைந்தாள், இனி,
    வையம் மா நரகத்திடை வைகுமோ? 25

  996. இராமன் கடன் முடித்து முனிவரின் நல்விருந்து உண்ணுதல்

  997. துறை நறும்புனல் ஆடிச் சுருதியோர்
    உறையுள் எய்தி, உணர்வு உடையோர் உணர்
    இறைவன் கைதொழுது, ஏந்துஎரி ஓம்பிப்பின்
    அறிஞர் காதற்கு அமைவிருந்து ஆயினான். 26

  998. முனிவர் கொடுத்த விருந்தால் இராமன் மகிழ்தல்

  999. வருந்தித் தான் தர வந்த அமுதையும்,
    அருந்தும் நீர் என்று அமரரை, ஊட்டினான்,
    விருந்து மெல்லடகு உண்டு விளங்கினான்-
    திருந்தினார் வயிற் செய்தன தேயுமோ? 27

  1000. மிகைப் பாடல்கள்

  1001. அன்ன காரணத்து ஐயனும், ஆங்கு அவர்
    உன்னு பூசனை யாவும் உவந்தபின்,
    மின்னு செஞ் சடை மெய்த் தவர் வேண்டிட,
    பன்ன சாலையின் பாடு இருந்தான் அரோ. 27-1