MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    Kamba Ramayanam kitkintha kandam Part 1
    கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம்

    1. பம்பை வாவிப் படலம்
    2. அனுமப் படலம்
    3. நட்புக் கோட் படலம்
    4. மராமரப் படலம்
    5. துந்துபிப் படலம்
    6. கலன் காண் படலம்
    7. வாலி வதைப் படலம்
    8. தாரை புலம்புறு படலம்
    9. அரசியற் படலம்
    10. கார்காலப் படலம்
    11. கிட்கிந்தைப் படலம்

  1. கடவுள் வாழ்த்து

  2. மூன்று உரு எனக் குணம் மும்மை ஆம் முதல்,
    தோன்று உரு எவையும், அம் முதலைச் சொல்லுதற்கு
    ஏன்று உரு அமைந்தவும், இடையில் நின்றவும்,
    சான்று உரு உணர்வினுக்கு உணர்வும், ஆயினான். 0

  3. 1. பம்பை வாவிப் படலம்


    பம்பைப் பொய்கையின் தோற்றம்

  4. தேன் படி மலரது; செங் கண், வெங் கைம்மா-
    தான் படிகின்றது; தெளிவு சான்றது;
    மீன் படி மேகமும் படிந்து, வீங்கு நீர்,
    வான் படிந்து, உலகிடைக் கிடந்த மாண்பது; 1

  5. ஈர்ந்த நுண் பளிங்கு எனத் தெளிந்த ஈர்ம் புனல்
    பேர்ந்து, ஒளிர் நவ மணி படர்ந்த பித்திகை
    சேர்ந்துழிச் சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலால்,
    ஓர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது; 2

  6. குவால் மணித் தடம்தொறும் பவளக் கொம்பு இவர்
    கவான் அரசுஅன்னமும், பெடையும் காண்டலின்,
    தவா நெடு வானகம் தயங்கு மீனொடும்,
    உவா மதி, உலப்பு இல உதித்தது ஒப்பது; 3

  7. ஓத நீர் உலகமும், உயிர்கள் யாவையும்,
    வேதபாரகரையும், விதிக்க வேட்ட நாள்,
    சீதம் வீங்கு உவரியைச் செகுக்குமாறு ஒரு
    காதி காதலன் தரு கடலின் அன்னது; 4

  8. எல் படர் நாகர்தம் இருக்கை ஈது எனக்-
    கிற்பது ஓர் காட்சியதுஎனினும், கீழ் உற,
    கற்பகம் அனைய அக் கவிஞர் நாட்டிய
    சொற் பொருள் ஆம் எனத் தோன்றல் சான்றது; 5

  9. களம் நவில் அன்னமே முதல, கண் அகன்
    தள மலர்ப் புள் ஒலி தழங்க, இன்னது ஓர்
    கிளவி என்று அறிவு அருங் கிளர்ச்சித்து; ஆதலின்,
    வள நகர்க் கூலமே போலும் மாண்பது. 6

  10. அரி மலர்ப் பங்கயத்து அன்னம், எங்கணும்,
    புரிகுழல் புக்க இடம் புகல்கிலாத யாம்,
    திருமுகம் நோக்கலம்; இறந்து தீர்தும் என்று,
    எரியினில் புகுவன எனத் தோன்றும் ஈட்டது; 7

  11. காசு அடை விளக்கிய காட்சித்து ஆயினும்,
    மாசு அடை பேதைமை இடை மயக்கலால்,
    ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம் என,
    பாசடை வயிந்தொறும் பரந்த பண்பது; 8

  12. களிப் படா மனத்தவன் காணின், கற்பு எனும்
    கிளிப் படா மொழியவள் விழியின் கேள் என
    துளிப் படா நயனங்கள் துளிப்பச் சோரும் என்று,
    ஒளிப் படாது, ஆயிடை ஒளிக்கும் மீனது; 9

  13. கழை படு முத்தமும், கலுழிக் கார் மத
    மழை படு தரளமும், மணியும், வாரி, நேர்
    இழை படர்ந்தனைய நீர் அருவி எய்தலால்,
    குழை படு முகத்தியர் கோலம் ஒப்பது; 10

  14. பொங்கு வெங் கட கரி, பொதுவின் ஆடலின், -
    கங்குலின், எதிர் பொரு கலவிப் பூசலில்
    அங்கம் நொந்து அலசிய, விலையின் ஆய் வளை
    மங்கையர் வடிவு என, - வருந்தும் மெய்யது; 11

  15. விண் தொடர் நெடு வரைத் தேனும், வேழத்தின்
    வண்டு உளர் நறு மத மழையும் மண்டலால்,
    உண்டவர் பெருங் களி உறலின், ஓதியர்
    தொண்டை அம் கனி இதழ்த் தோன்றல் சான்றது; 12

  16. ஆரியம் முதலிய பதினெண் பாடையில்
    பூரியர் ஒரு வழிப் புகுந்தது ஆம் என,
    ஓர்கில கிளவிகள் ஒன்றொடு ஒப்பு இல,
    சோர்வு இல, விளம்பு புள் துவன்றுகின்றது; 13

  17. தான் உயிர் உறத் தனி தழுவும் பேடையை,
    ஊன் உயிர் பிரிந்தென, பிரிந்த ஓதிமம்,
    வான் அரமகளிர்தம் வயங்கு நூபுரத்
    தேன் உகு மழலையைச் செவியின் ஓர்ப்பது; 14

  18. ஈறு இடல் அரிய மால் வரை நின்று ஈர்த்து இழி
    ஆறு இடு விரை அகில் ஆரம் ஆதிய
    ஊறிட, ஒள் நகர் உரைத்த ஒண் தளச்
    சேறு இடு பரணியின் திகழும் தேசது. 15

  19. பொய்கை நிகழ்ச்சிகள்

  20. நவ்வி நோக்கியர் இதழ் நிகர் குமுதத்து நறுந்தேன்
    வவ்வு மாந்தரின் களி மயக்கு உறுவன, மகரம்;
    எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்ன,
    கவ்வு மீனொடு முழுகுவ, எழுவன, கரண்டம். 16

  21. கவள யானை அன்னாற்கு, அந்தக் கடி நறுங் கமலத்-
    தவளை ஈகிலம்; ஆவது செய்தும் என்று அருளால்,
    திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ; செங் கண்
    குவளை காட்டுவ; துவர் இதழ் காட்டுவ குமுதம். 17

  22. பெய் கலன்களின் இலங்கு ஒளி மருங்கொடு பிறழ,
    வைகலும் புனல் குடைபவர் வான் அரமகளிர்;
    செய்கை அன்னங்கள் ஏந்திய சேடியர் என்னப்
    பொய்கை அன்னங்கள் ஏந்திய பூங் கொம்பர் பொலிவ. 18

  23. ஏலும் நீள் நிழல், இடை இடை எறித்தலின், படிகம்
    போலும் வார் புனல் புகுந்துளவாம் எனப் பொங்கி,
    ஆலும் மீன் கணம் அஞ்சின அலம்வர, வஞ்சிக்
    கூல மா மரத்து, இருஞ் சிறை புலர்த்துவ - குரண்டம் 19

  24. அங்கு ஒர் பாகத்தில், அஞ்சனமணி நிழல் அடைய,
    பங்கு பெற்று ஒளிர் பதுமராகத்து ஒளி பாய,
    கங்குலும் பகலும் மெனப் பொலிவன கமலம்;
    மங்கைமார் தட முலை எனப் பொலிவன, வாளம். 20

  25. வலி நடத்திய வாள் என வாளைகள் பாய,
    ஒலி நடத்திய திரை தொறும் உகள்வன, நீர் நாய்
    கலிநடக் கழைக் கண்ணுளர் என நடம் கவின,
    பொலிவு உடைத்து என, தேரைகள் புகழ்வன போலும். 21

  26. காட்சிகளைக் கண்ட இராமன் சீதையின் நினைவால் புலம்புதல்

  27. அன்னது ஆகிய அகன் புனல் பொய்கையை அணுகி,
    கன்னி அன்னமும் கமலமும் முதலிய கண்டான்;
    தன்னின் நீங்கிய தளிரியற்கு உருகினன் தளர்வான்,
    உன்னும் நல் உணர்வு ஒடுங்கிட, புலம்பிடலுற்றான்: 22

  28. வரி ஆர் மணிக் கால் வாளமே! மட அன்னங்காள்! எனை, நீங்கத்
    தரியாள் நடந்தாள்; இல்லளேல் தளர்ந்த போதும் தகவேயோ?
    எரியாநின்ற ஆர் உயிருக்கு இரங்கினால், ஈது இசை அன்றோ?
    பிரியாது இருந்தேற்கு ஒரு மாற்றம் பேசின், பூசல் பெரிது ஆமோ? 23

  29. வண்ண நறுந் தாமரை மலரும், வாசக் குவளை நாள்மலரும்,
    புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும் மருந்தின், தரும் பொய்காய்!
    கண்ணும் முகமும் காட்டுவாய்; வடிவும் ஒருகால் காட்டாயோ?
    ஒண்ணும் என்னின், அஃது உதவாது, உலோவினாரும் உயர்ந்தாரோ? 24

  30. விரிந்த குவளை, சேதாம்பல், விரை மென் கமலம், கொடி வள்ளை,
    தரங்கம், கெண்டை, வரால், ஆமை, என்று இத்தகையதமை நோக்கி,
    மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நிற் கண்டேன்; வல் அரக்கன்,
    அருந்தி அகல்வான் சிந்தினவோ? ஆவி! உரைத்தி ஆம் அன்றே! 25

  31. ஓடாநின்ற களி மயிலே! சாயற்கு ஒதுங்கி, உள் அழிந்து,
    கூடாதாரின் திரிகின்ற நீயும், ஆகம் குளிர்ந்தாயோ?
    தேடாநின்ற என் உயிரைத் தெரியக் கண்டாய்; சிந்தை உவந்து
    ஆடா நின்றாய்; ஆயிரம் கண் உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ ? 26

  32. அடையீர் எனினும் ஒரு மாற்றம் அறிந்தது உரையீர்; - அன்னத்தின்
    பெடையீர்! - ஒன்றும் பேசீரோ? பிழையாதேற்குப் பிழைத்தீரோ?
    நடை நீர் அழியச் செய்தாரே நடு இலாதார்; நனி அவரோடு
    உடையீர் பகைதான்; உமை நோக்கி உவக்கின்றேனை முனிவீரோ? 27

  33. பொன் பால் பொருவும் விரை அல்லி புல்லிப் பொலிந்த பொலந் தாது
    தன்பால் தழுவும் குழல் வண்டு, தமிழ்ப் பாட்டு இசைக்கும் தாமரையே!
    என்பால் இல்லை; அப் பாலோ இருப்பார் அல்லர்; விருப்புடைய
    உன்பால் இல்லை என்றக்கால், ஒளிப்பாரோடும் உறவு உண்டோ ? 28

  34. ஒரு வாசகத்தை வாய் திறந்து இங்கு உதவாய், பொய்கைக் குவிந்து ஒடுங்கும்
    திரு வாய் அனைய சேதாம்பற்கு அயலே கிடந்த செங் கிடையே!
    வெருவாது எதிர் நின்று அமுது உயிர்க்கும் வீழிச் செவ்விக் கொழுங் கனி வாய்
    தருவாய்; அவ் வாய் இன் அமுதும், தண்ணென் மொழியும் தாராயோ? 29

  35. அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு, அடைவு உண்டு அன்றோ?-கொடி வள்ளாய்!
    மலர்க் கொம்பு அனைய மடச் சீதை காதே; மற்று ஒன்று அல்லையால்;
    பொலக் குண்டலமும், கொடுங் குழையும், புனை தாழ் முத்தின் பொன் - தோடும்,
    விலக்கி வந்தாய்; காட்டாயோ? இன்னும் பூசல் விரும்புதியோ? 30

  36. பஞ்சு பூத்த விரல், பதுமம் பவளம் பூத்த அடியாள், என்
    நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம் பூத்தாள், நிறம் பூத்த
    மஞ்சு பூத்த மழை அனைய குழலாள், கண்போல் மணிக் குவளாய்!
    நஞ்சு பூத்ததாம் அன்ன நகையால் என்னை நலிவாயோ? 31

  37. என்று அயா உயிர்க்கின்றவன், ஏடு அவிழ்
    கொன்றை ஆவிப் புறத்து இவை கூறி, யான்
    பொன்ற, யாதும் புகல்கிலை போலுமால்,
    வன் தயாவிலி! என்ன வருந்தினான்; 32

  38. வார் அளித் தழை மாப் பிடி வாயிடை,
    கார் அளிக் கலுழிக் கருங் கைம் மலை
    நீர் அளிப்பது நோக்கினன், நின்றனன் -
    பேர் அளிக்குப் பிறந்த இல் ஆயினான். 33

  39. இராமன் நீராடிக் கடன் முடித்து, சோலையில் தங்குதல்

  40. ஆண்டு, அவ் வள்ளலை, அன்பு எனும் ஆர் அணி
    பூண்ட தம்பி, பொழுது கழிந்ததால்;
    ஈண்டு இரும் புனல் தோய்ந்து, உன் இசை என
    நீண்டவன் கழல் தாழ், நெடியோய்! என்றான். 34

  41. அரைசும், அவ் வழி நின்று அரிது எய்தி, அத்
    திரை செய் தீர்த்தம், முன் செய் தவம் உண்மையால்,
    வரை செய் மா மத வாரணம் நாணுற,
    விரை செய் பூம் புனல் ஆடலை மேயினான். 35

  42. நீத்த நீரில் நெடியவன் மூழ்கலும்,
    தீத்த காமத் தெறு கதிர்த் தீயினால்,
    காய்த்து இரும்பை, கருமகக் கம்மியன்,
    தோய்த்த தண் புனல் ஒத்தது, அத் தோயமே. 36

  43. ஆடினான், அன்னம் ஆய் அரு மறைகள் பாடினான்,
    நீடு நீர்; முன்னை நூல் நெறி முறையின், நேமி தாள்
    சூடினான்; முனிவர்தம் தொகுதி சேர் சோலைவாய்,
    மாடுதான் வைகினான்; எரி கதிரும் வைகினான். 37

  44. நிலவின் தோற்றமும், இரவில் யாவும் துயிலுதலும்

  45. அந்தியாள் வந்து தான் அணுகவே, அவ் வயின்
    சந்த வார் கொங்கையாள் தனிமைதான் நாயகன்
    சிந்தியா, நொந்து தேய் பொழுது, தெறு சீத நீர்
    இந்து வான் உந்துவான், எரி கதிரினான் என. 38

  46. பூ ஒடுங்கின; விரவு புள் ஒடுங்கின, பொழில்கள்;
    மா ஒடுங்கின; மரனும் இலை ஒடுங்கின; கிளிகள்
    நா ஒடுங்கின; மயில்கள் நடம் ஒடுங்கின; குயில்கள்
    கூ ஒடுங்கின; பிளிறு குரல் ஒடுங்கின, களிறு. 39

  47. கண் உறங்காமல் இராமன் இரவைக் கழித்தல்

  48. மண் துயின்றன; நிலைய மலை துயின்றன; மறு இல்
    பண் துயின்றன; விரவு பணி துயின்றன; பகரும்
    விண் துயின்றன; கழுதும் விழி துயின்றன; பழுது இல்
    கண் துயின்றில, நெடிய கடல் துயின்றன களிறு. 40

  49. இராமன் மேலும் சீதையைத் தேடி நடத்தல்

  50. பொங்கி முற்றிய உணர்வு புணர்தலும், புகையினொடு
    பங்கம் உற்றனைய வினை பரிவுறும்படி, முடிவு இல்
    கங்குல் இற்றது; கமலம் முகம் எடுத்தது; - கடலின்
    வெங் கதிர்க் கடவுள் எழ, விமலன் வெந் துயரின் எழ. 41

  51. காலையே கடிது நெடிது ஏகினார் - கடல் கவினு
    சோலை ஏய் மலை தழுவு கான நீள் நெறி தொலைய,
    ஆலை ஏய் துழனி அகநாடர், ஆர்கலி அமுது
    போலவே உரைசெய் புன மானை நாடுதல் புரிஞர். 42

  52. கிட்கிந்தா காண்டம்

    2. அனுமப் படலம்



  53. இராம இலக்குவரைக் கண்ட சுக்கிரீவன் அஞ்சி ஓடி ஒளிதல்

  54. எய்தினார், சவரி, நெடிது, ஏய மால் வரை எளிதின்;
    நொய்தின் ஏறினர், அதனின்; நோன்மை சால் கவி அரசு,
    செய்வது ஓர்கிலன்; அனையர் தெவ்வர் ஆம் என வெருவி,
    உய்தும் நாம் என, விரைவின் ஓடினான், மலை முழையின். 1

  55. காலின் மா மதலை! இவர் காண்மினோ; கறுவு உடைய
    வாலி ஏவலின் வரவினார்கள் தாம்; வரி சிலையர்;
    நீல மால் வரை அனையர்; நீதியா நினைதி என,
    மூலம் ஓர்கிலர் மறுகி ஓடினார், முழை அதனின். 2

  56. அனுமன் மறைந்து நின்று சிந்தித்தல்

  57. அவ் இடத்து, அவர் மறுகி, அஞ்சி, நெஞ்சு அழி அமைதி,
    வெவ் விடத்தினை மறுகு தேவர், தானவர், வெருவல்
    தவ்விட, தனி அருளு தாழ் சடைக் கடவுள் என,
    இவ் இடத்து இனிது இருமின்; அஞ்சல் என்று இடை உதவி, 3

  58. அஞ்சனைக்கு ஒரு சிறுவன், அஞ்சனக் கிரி அனைய
    மஞ்சனைக் குறுகி, ஒரு மாணவப் படிவமொடு,
    வெஞ் சமத் தொழிலர், தவ மெய்யர், கைச் சிலையர் என,
    நெஞ்சு அயிர்த்து, அயல் மறைய நின்று, கற்பினின் நினையும்: 4

  59. தேவருக்கு ஒரு தலைவர் ஆம் முதல் தேவர் எனின்,
    மூவர்; மற்று, இவர் இருவர்; மூரி வில் கரர்; இவரை
    யாவர் ஒப்பவர், உலகில்? யாது, இவர்க்கு அரிய பொருள்?
    கேவலத்து இவர் நிலைமை தேர்வது எக் கிழமை கொடு? 5

  60. சிந்தையில் சிறிது துயர் சேர்வுற, தெருமரலின்
    நொந்து அயர்த்தவர் அனையர்; நோ உறச் சிறியர் அலர்;
    அந்தரத்து அமரர் அலர்; மானிடப் படிவர்; மயர்
    சிந்தனைக்கு உரிய பொருள் தேடுதற்கு உறு நிலையர்; 6

  61. தருமமும், தகவும், இவர்; தனம் எனும் தகையர், இவர்;
    கருமமும் பிறிது ஒர் பொருள் கருதி அன்று; அது கருதின்,
    அரு மருந்து அனையது, இடை அழிவு வந்துளது; அதனை,
    இரு மருங்கினும், நெடிது துருவுகின்றனர், இவர்கள். 7

  62. கதம் எனும் பொருண்மை இலர்; கருணையின் கடல் அனையர்;
    இதம் எனும் பொருள் அலது, ஓர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள்;
    சதமன் அஞ்சுறு நிலையர்; தருமன் அஞ்சுறு சரிதர்;
    மதனன் அஞ்சுறு வடிவர்; மறலி அஞ்சுறு விறலர். 8

  63. இராம இலக்குவர்பால் அன்பு மிக, இவர்களே தருமம் என்று அனுமன் துணிதல்

  64. என்பன பலவும் எண்ணி, இருவரை எய்த நோக்கி,
    அன்பினன், உருகுகின்ற உள்ளத்தன், ஆர்வத்தோரை
    முன் பிரிந்து, வினையர்தம்மை முன்னினான் என்ன நின்றான் -
    தன் பெருங் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான். 9

  65. தன் கன்று கண்ட அன்ன தன்மைய, தறுகண் பேழ் வாய்
    மின் கன்றும் எயிற்றுக் கோள் மா, வேங்கை, என்று இனையவேயும்,
    பின் சென்று, காதல் கூரப் பேழ்கணித்து இரங்குகின்ற;
    என் கன்றுகின்றது, எண்ணிப் பற்பல இவரை? அம்மா! 10

  66. மயில் முதல் பறவை எல்லாம், மணி நிறத்து இவர்கள் மேனி
    வெயில் உறற்கு இரங்கி, மீதா, விரி சிறைப் பந்தர் வீசி,
    எயில் வகுத்து எய்துகின்ற; இன முகில் கணங்கள், எங்கும்
    பயில்வுற, திவலை சிந்தி, பயப் பயத் தழுவும், பாங்கர். 11

  67. காய் எரி கனலும் கற்கள், கள்ளுடை மலர்களேபோல்,
    தூய செங் கமல பாதம் தோய்தொறும், குழைந்து தோன்றும்;
    போயின திசைகள்தோறும், மரனொடு புல்லும் எல்லாம்
    சாய்வுறும், தொழுவபோல்; இங்கு, இவர்களோ தருமம் ஆவார்? 12

  68. துன்பினைத் துடைத்து, மாயத் தொல் வினைதன்னை நீக்கி,
    தென் புலத்து அன்றி, மீளா நெறி உய்க்கும் தேவரோதாம்?
    என்பு எனக்கு உருகுகின்றது; இவர்கின்றது அளவு இல் காதல்;
    அன்பினுக்கு அவதி இல்லை; அடைவு என்கொல்? அறிதல் தேற்றேன். 13

  69. அனுமன் எதிர் சென்று வரவேற்க, நீ யார்? என இராமன் வினாவுதல்

  70. இவ் வகை எண்ணி, ஆண்டு, அவ் இருவரும் எய்தலோடும்,
    செவ் வழி உள்ளத்தானும், தெரிவுற எதிர்சென்று எய்தி,
    கவ்வை இன்றாக, நுங்கள் வரவு! என, கருணையோனும்,
    எவ் வழி நீங்கியோய்! நீ யார்? என, விளம்பலுற்றான்: 14

  71. அனுமனின் விடை

  72. மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்
    நஞ்சு எனத் தகைய ஆகி, நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்
    கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
    அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்; 15

  73. இம் மலை இருந்து வாழும் எரி கதிர்ப் பரிதிச் செல்வன்
    செம்மலுக்கு ஏவல் செய்வேன்; தேவ! நும் வரவு நோக்கி
    விம்மல் உற்று அனையான் ஏவ, வினவிய வந்தேன் என்றான்-
    எம் மலைக் குலமும் தாழ, இசை சுமந்து, எழுந்த தோளான். 16

  74. இராமன் அனுமனைப் பாராட்டி, இலக்குவனுக்கு உரைத்தல்

  75. மாற்றம் அஃது உரைத்தலோடும், வரி சிலைக் குரிசில் மைந்தன்
    தேற்றம் உற்று, இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி,
    ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும், அறிவும், என்னும்
    வேற்றுமை இவனோடு இல்லையாம் என, விளம்பலுற்றான்: 17

  76. இல்லாத உலகத்து எங்கும், இங்கு இவன் இசைகள் கூரக்
    கல்லாத கலையும், வேதக் கடலுமே என்னும் காட்சி
    சொல்லாலே தோன்றிற்று அன்றே? யார் கொல் இச் சொல்லின் செல்வன்?-
    வில் ஆர் தோள் இளைய வீர! - விரிஞ்சனோ? விடைவலானோ? 18

  77. மாணி ஆம் படிவம் அன்று, மற்று இவன் வடிவம்; மைந்த!
    ஆணி இவ் உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற
    சேண் உயர் பெருமைதன்னைச் சிக்கு அறத் தெளிந்தேன்; பின்னர்க்
    காணுதி மெய்ம்மை என்று, தம்பிக்குக் கழறி, கண்ணன், 19

  78. சுக்கிரீவனைக் காட்டுமாறு இராமன் வேண்டுதல்

  79. எவ் வழி இருந்தான், சொன்ன கவிக் குலத்து அரசன்? யாங்கள்,
    அவ் வழி அவனைக் காணும் அருத்தியால் அணுக வந்தேம்;
    இவ் வழி நின்னை உற்ற எமக்கு, நீ இன்று சொன்ன
    செவ் வழி உள்ளத்தானைக் காட்டுதி, தெரிய என்றான். 20

  80. அனுமன் கூறிய முகமன் உரை

  81. மாதிரப் பொருப்போடு ஓங்கு வரம்பு இலா உலகில், மற்றுப்
    பூதரப் புயத்து வீரர் நும் ஒக்கும் புனிதர் யாரே?
    ஆதரித்து அவனைக் காண்டற்கு அணுகினிர் என்னின், அன்னான்,
    தீது அவித்து அமையச் செய்த, செய் தவச் செல்வம் நன்றே! 21

  82. இரவிதன் புதல்வன் தன்னை, இந்திரன் புதல்வன் என்னும்
    பரிவுஇலன் சீற, போந்து, பருவரற்கு ஒருவன் ஆகி,
    அருவிஅம் குன்றில், என்னோடு இருந்தனன்; அவன்பால் செல்வம்
    வருவது ஓர் அமைவின் வந்தீர்; வரையினும் வளர்ந்த தோளீர்! 22

  83. ஒடுங்கல் இல் உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி
    தொடங்கினர், மற்றும், முற்றத் தொல் அறம் துணிவர் அன்றே;
    கொடுங் குலப் பகைஞன் ஆகிக் கொல்லிய வந்த கூற்றை
    நடுங்கினர்க்கு, அபயம் நல்கும் அதனினும், நல்லது உண்டோ ? 23

  84. எம்மையே காத்திர் என்றற்கு எளிது அரோ? இமைப்பு இலாதோர் -
    தம்மையே முதல் இட்டு, ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல்
    மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர்; முருகற் செவ்வி
    உம்மையே புகல் புக்கேமுக்கு, இதின் வரும் உறுதி உண்டோ ? 24

  85. அனுமனுக்கு தங்கள் நிலைமையை இலக்குவன் எடுத்துரைத்தல்

  86. யார் என விளம்புகேன் நான், எம் குலத் தலைவற்கு, உம்மை?
    வீர! நீர் பணித்திர்! என்றான், மெய்ம்மையின் வேலி போல்வான்;
    வார் கழல் இளைய வீரன், மரபுளி, வாய்மை யாதும்
    சோர்வு இலன், நிலைமை எல்லாம் தெரிவுறச் சொல்லலுற்றான்: 25

  87. சூரியன் மரபில் தோன்றி, சுடர் நெடு நேமி ஆண்ட
    ஆரியன்; அமரர்க்காக அசுரரை ஆவி உண்ட
    வீரியன்; வேள்வி செய்து விண் உலகோடும் ஆண்ட,
    கார் இயல் கருணை அன்ன கண் அகன் கவிகை மன்னன்; 26

  88. புயல் தரு மதத் திண் கோட்டுப் புகர் மலைக்கு இறையை ஊர்ந்து,
    மயல் தரும் அவுணர் யாரும் மடிதர, வரி வில் கொண்ட,
    இயல் தரும் புலமைச் செங்கோல் மனு முதல் எவரும் ஒவ்வாத்
    தயரதன்; கனக மாடத் தட மதில் அயோத்தி வேந்தன்; 27

  89. அன்னவன் சிறுவனால், இவ் ஆண்தகை; அன்னை ஏவ,
    தன்னுடை உரிமைச் செல்வம் தம்பிக்குத் தகவின் நல்கி,
    நல் நெடுங் கானம் சேர்ந்தான்; நாமமும் இராமன் என்பான்;
    இந் நெடுஞ் சிலைவலானுக்கு ஏவல் செய் அடியென் யானே. 28

  90. இலக்குவன் உரை கேட்ட அனுமன் இராமனது திருவடிகளை வணங்குதல்

  91. என்று, அவன் தோற்றம் ஆதி இராவணன் இழைத்த மாயப்
    புன் தொழில் இறுதி ஆக, புகுந்து உள பொருள்கள் எல்லாம்,
    ஒன்றும் ஆண்டு ஒழிவுறாமல், உணர்த்தினன்; உணர்த்தக் கேட்டு,
    நின்ற அக் காலின் மைந்தன், நெடிது உவந்து, அடியில் தாழ்ந்தான். 29

  92. இவ்வாறு வணங்குவது முறையோ? என்ற இராமனுக்கு அனுமனின் மறுமொழி

  93. தாழ்தலும், தகாத செய்தது என்னை, நீ? தருமம் அன்றால்;
    கேள்வி நூல் மறை வலாள! என்றனன்; என்னக் கேட்ட
    பாழிஅம் தடந் தோள் வென்றி மாருதி, பதுமச் செங் கண்
    ஆழியாய்! அடியனேனும் அரிக் குலத்து ஒருவன் என்றான். 30

  94. அனுமன் தனது பெரிய வானர உருவத்துடன் நிற்றல்

  95. மின் உருக் கொண்ட வில்லோர் வியப்புற, வேத நல் நூல்
    பின் உருக் கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழ,
    பொன் உருக் கொண்ட மேரு, புயத்திற்கும் உவமை போதாத்
    தன் உருக் கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான். 31

  96. கண்டிலன், உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட
    புண்டரீகக் கண் ஆழிப் புரவலன், பொலன் கொள் சோதிக்
    குண்டல வதனம் என்றால், கூறலாம் தகைமைத்து ஒன்றோ,
    பண்டை நூல் கதிரோன் சொல்ல, படித்தவன் படிவம்? அம்மா! 32

  97. இராமன் அனுமனைக் குறித்து இலக்குவனிடம் வியந்து பேசுதல்

  98. தாள் படாக் கமலம் அன்ன தடங் கணான், தம்பிக்கு, அம்மா!
    கீழ்ப் படாநின்ற நீக்கி, கிளர் படாது ஆகி, என்றும்
    நாட் படா மறைகளாலும், நவை படா ஞானத்தாலும்,
    கோட்படாப் பதமே, ஐய! குரக்கு உருக்கொண்டது என்றான். 33

  99. நல்லன நிமித்தம் பெற்றேம்; நம்பியைப் பெற்றேம்; நம்பால்
    இல்லையே, துன்பம் ஆனது; இன்பமும் எய்திற்று; இன்னும்,
    வில்லினாய்! இவனைப் போலாம் கவிக் குலக் குரிசில் வீரன்
    சொல்லினால் ஏவல் செய்வான்; அவன் நிலை சொல்லற்பாற்றோ? 34

  100. சுக்கிரீவனை அழைத்துவர, அனுமன் செல்லுதல்

  101. என்று, அகம் உவந்து, கோல முகம் மலர்ந்து, இனிதின் நின்ற
    குன்று உறழ் தோளினாரை நோக்கி, அக் குரக்குச் சீயம்,
    சென்று, அவன் தன்னை, இன்னே கொணர்கின்றேன், சிறிது போழ்தில்;
    வென்றியிர்! இருந்தீர் என்று, விடைபெற்று, விரைவில் போனான். 35

  102. மிகைப் பாடல்கள்

  103. அன்ன ஆம் என வெருவி, அங்கண் நில்லாது, அருகு
    துன்னு வானரர்களொடு தோம் இலா மேரு நிகர்
    என்னும் மாமலை முழையில் எய்தினார்; எய்தியபின்,
    நல் நலம் தெரி மனதின் நாடி மாருதி மொழியும். 2-1

  104. தாரன், நீலனை, மருவு தாம மாருதியை, முதல்
    வீரரோடு, இரவிசுதன், மேரு மால் வரையை நிகர்
    பார மா மலையின் ஒரு பாகம் ஓடுதல் புரிய,
    ஆர மார்பரும், அதனின் ஆகுமாறு உறல் கருதி, 2-2

  105. மானை நாடுதல் புரிஞர் - வாலி ஏவலின் வருதல்
    ஆனவாறு என மறுகி, ஆவி சோர் நிலையர், தொடர்
    ஏனை வானரர் சிலரும் ஏக, மா முழையில், முழு
    ஞான நாதரை, அறிவின் நாடி, மாருதி மொழியும்: 2-3

  106. உலகு தங்கிய பல தொல் உயிர்கள் உயர்ந்திடு பரிசில்
    இலகும் இங்கிதம் உடையர்; இசையின் இன்புறு சுருதி
    அலகு இல் விஞ்சைகள் உடையர்; அகிலமும் தொழு கழலர்;
    விலகு திண் கொடு வினைகள் வெகுளிகொண்டு அடு விறலர். 8-1

  107. சிவனும் அம்புய மலரில் அயனும் இந்திரை கொழுநன்
    அவனும் வந்திட உதவும் அரி எனும் பிரமம் அது
    துவளும் அஞ்சன உருவு தொடரு செங் கமல மலர்
    உவமை கொண்டு இதில் ஒருவன் உலகில் வந்ததுகொல் என. 8-2

  108. மற்றும், இவ் உலகத்து உள்ள முனிவர், வானவர்கள், ஆர், இச்
    சொல் திறம் உடையார்? மற்று எச் சுருதியின் தொகுதி யாவும்
    முற்று அறிதரும் இம் மாணி மொழிக்கு எதிர், முதல்வர் ஆய
    பெற்றியர் மூவர்க்கேயும், பேர் ஆற்றல் அரிது மன்னோ. 19-1

  109. இருக்கன் மா மைந்தரான வாலியும், இளவல்தானும்,
    செருக்குனோடு இருக்கும்காலை, செறுநரின் சீறி வாலி
    நெருக்குற, வெருவி, இந்த நெடுங் குவட்டு இருத்தான் தண்பால் -
    மருக் குலாம் தாரீர்! - வந்தது அவன் செய் மா தவத்தின் அன்றோ? 21-1

  110. கிட்கிந்தா காண்டம்

    3. நட்புக் கோட் படலம்



  111. அனுமன் சுக்கிரீவனிடம் சென்று, இராமனின் சிறப்புக்களைக் கூறுதல்

  112. போன, மந்தர மணிப் புய நெடும் புகழினான்,-
    ஆன தன் பொரு சினத்து அரசன்மாடு அணுகினான்-
    யானும், என் குலமும், இவ் உலகும், உய்ந்தனம் எனா,
    மானவன் குணம் எலாம் நினையும் மா மதியினான். 1

  113. மேலவன், திருமகற்கு உரைசெய்தான், விரை செய் தார்
    வாலி என்ற அளவு இலா வலியினான் உயிர் தெறக்
    காலன் வந்தனன்; இடர்க் கடல் கடந்தனம் எனா,
    ஆலம் உண்டவனின் நின்று, அரு நடம் புரிகுவான். 2

  114. மண் உளார், விண் உளார், மாறு உளார், வேறு உளார்,
    எண் உளார், இயல் உளார், இசை உளார், திசை உளார்,
    கண் உளார் ஆயினும்; பகை உளார், கழி நெடும்
    புண் உளார், ஆர் உயிர்க்கு அமுதமேபோல் உளார். 3

  115. சூழி மால் யானையார் தொழு கழல் தயரதன்,
    பாழியால் உலகு எலாம் ஒரு வழிப் படர வாழ்
    ஆழியான், மைந்தர்; பேர் அறிவினார்; அழகினார்;
    ஊழியார்; எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார். 4

  116. நீதியார்; கருணையின் நெறியினார்; நெறிவயின்
    பேதியா நிலைமையார்; எவரினும் பெருமையார்;
    போதியாது அளவு இலா உணர்வினார்; புகழினார்;
    காதி சேய் தரு நெடுங் கடவுள் வெம் படையினார். 5

  117. வேல் இகல் சினவு தாடகை விளிந்து உருள, வில்
    கோலி, அக் கொடுமையாள் புதல்வனைக் கொன்று, தன்
    கால் இயல் பொடியினால், நெடிய கற் படிவம் ஆம்
    ஆலிகைக்கு, அரிய பேர் உரு அளித்தருளினான். 6

  118. நல் உறுப்பு அமையும் நம்பியரில் முன்னவன் - நயந்து,
    எல் உறுப்பு அரிய பேர் எழு சுடர்க் கடவுள்தன்
    பல் இறுத்தவன் வலிக்கு அமை தியம்பகம் எனும்
    வில் இறுத்தருளினான் - மிதிலை புக்க அனைய நாள். 7

  119. உளை வயப் புரவியான் உதவ உற்று, ஒரு சொலால்,
    அளவு இல் கற்பு உடைய சிற்றவை பணித்தருளலால்,
    வளையுடைப் புணரி சூழ் மகிதலத் திரு எலாம்
    இளையவற்கு உதவி, இத் தலை எழுந்தருளினான். 8

  120. தெவ் இரா வகை, நெடுஞ் சிகை விரா மழுவினான்
    அவ் இராமனையும், மா வலி தொலைத் தருளினான்,
    இவ் இராகவன்; வெகுண்டு எழும் இரா அனையன் ஆம்
    அவ் விராதனை இராவகை துடைத்தருளினான். 9

  121. கரன் முதல் கருணை அற்றவர், கடற்படை யொடும்
    சிரம் உகச் சிலை குனித்து உதவுவான்; திசை உளார்
    பரமுகப் பகை துமித்தருளுவான்; பரமர் ஆம்
    அரன் முதல் தலைவருக்கு அதிசயத் திறலினான்; 10

  122. ஆய மால் நாகர் தாழ் ஆழியானே அலால்,
    காயமான் ஆயினான் ஆவனே? காவலா!
    நீ அம் மான் நேர்தியால்; நேர் இல் மாரீசன் ஆம்
    மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான். 11

  123. உக்க அந்தமும், உடல் பொறை துறந்து உயர் பதம்
    புக்க அந்தமும், நமக்கு உரை செயும் புரையவோ -
    திக்கு அவம் தர, நெடுந் திரள் கரம், சினவு தோள்,
    அக் கவந்தனும், நினைந்து அமரர் தாழ் சவரிபோல்? 12

  124. முனைவரும் பிறரும், மேல், முடிவு அரும் பகல் எலாம்,
    இனையர் வந்து உறுவர் என்று, இயல் தவம் புரிகுவார்;
    வினை எனும் சிறை துறந்து உயர் பதம் விரவினார்
    எனையர் என்று உரைசெய்கேன்? - இரவிதன் சிறுவனே! 13

  125. மாயையால், மதி இலா நிருதர்கோன், மனைவியைத்
    தீய கான் நெறியின் உய்த்தனன்; அவள் - தேடுவார்,
    நீ, ஐயா, தவம் இழைத்துடைமையால், நெடு மனம்
    தூயையா உடையையால், உறவினைத் துணிகுவார். 14

  126. தந்திருந்தனர் அருள்; தகை நெடும் பகைஞன் ஆம்
    இந்திரன் சிறுவனுக்கு இறுதி, இன்று இசை தரும்;
    புந்தியின் பெருமையாய்! போதரு என்று உரை செய்தான் -
    மந்திரம் கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான். 15

  127. சுக்கிரீவன் இராமனை வந்து காணுதல்

  128. அன்ன ஆம் உரை எலாம் அறிவினால் உணர்குவான்,
    உன்னையே உடைய எற்கு அரியது எப் பொருள் அரோ?
    பொன்னையே பொருவுவாய்! போது என, போதுவான்,
    தன்னையே அனையவன் சரணம் வந்து அணுகினான். 16

  129. கண்டனன் என்ப மன்னோ - கதிரவன் சிறுவன், காமர்
    குண்டலம் துறந்த கோல வதனமும், குளிர்க்கும் கண்ணும்,
    புண்டரிகங்கள் பூத்துப் புயல் தழீஇப் பொலிந்த திங்கள்
    மண்டலம் உதயம் செய்த மரகதக் கிரி அனானை. 17

  130. சுக்கிரீவனின் சிந்தனை

  131. நோக்கினான்; நெடிது நின்றான்; நொடிவு அருங் கமலத்து அண்ணல்
    ஆக்கிய உலகம் எல்லாம், அன்று தொட்டு இன்று காறும்
    பாக்கியம் புரிந்த எல்லாம் குவிந்து, இரு படிவம் ஆகி,
    மேக்கு உயர் தடந் தோள் பெற்று, வீரர் ஆய் விளைந்த என்பான். 18

  132. தேறினன் - அமரர்க்கு எல்லாம் தேவர் ஆம் தேவர் அன்றே,
    மாறி, இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னோ;
    ஆறு கொள் சடிலத்தானும், அயனும், என்று இவர்கள் ஆதி
    வேறு உள குழுவை எல்லாம், மானுடம் வென்றது அன்றே! 19

  133. சுக்கிரீவனை இராமன் வரவேற்றல்

  134. என நினைந்து, இனைய எண்ணி, இவர்கின்ற காதல் ஓதக்
    கனை கடல் கரைநின்று ஏறா, கண் இணை களிப்ப நோக்கி,
    அனகனைக் குறுகினான்; அவ் அண்ணலும், அருத்தி கூர,
    புனை மலர்த் தடக் கை நீட்டி, போந்து இனிது இருத்தி என்றான். 20

  135. இருவரும் ஒருங்கு இருந்த காட்சி

  136. தவா வலி அரக்கர் என்னும் தகா இருள் பகையைத் தள்ளி,
    குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற காலத்தின் கூட்டம் ஒத்தார்;
    அவா முதல் அறுத்த சிந்தை அனகனும், அரியின் வேந்தும்,
    உவா உற வந்து கூடும், உடுபதி, இரவி, ஒத்தார். 21

  137. கூட்டம் உற்று இருந்த வீரர், குறித்தது ஓர் பொருட்கு, முன்நாள்
    ஈட்டிய தவமும், பின்னர் முயற்சியும் இயைந்தது ஒத்தார்;
    மீட்டும், வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்க,
    கேட்டு உணர் கல்வியோடு ஞானமும் கிடைத்தது ஒத்தார். 22

  138. சுக்கிரீவன் - இராமன் உரையாடல்

  139. ஆயது ஓர் அவதியின்கண், அருக்கன்சேய், அரசை நோக்கி,
    தீவினை தீய நோற்றார் என்னின் யார்? செல்வ! நின்னை,
    நாயகம் உலகுக்கு எல்லாம் என்னல் ஆம் நலம் மிக்கோயை,
    மேயினென்; விதியே நல்கின், மேவல் ஆகாது என்? என்றான். 23

  140. மை அறு தவத்தின் வந்த சவரி, இம் மலையில் நீ வந்து
    எய்தினை இருந்த தன்மை, இயம்பினள்; யாங்கள் உற்ற
    கை அறு துயரம், நின்னால் கடப்பது கருதி வந்தேம்;
    ஐய! நின் - தீரும் என்ன, அரிக் குலத்து அரசன் சொல்வான்: 24

  141. முரணுடைத் தடக் கை ஓச்சி, முன்னவன், பின் வந்தேனை,
    இருள்நிலைப் புறத்தின்காறும், உலகு எங்கும், தொடர, இக் குன்று
    அரண் உடைத்து ஆகி உய்ந்தேன்; ஆர் உயிர் துறக்கலாற்றேன்;
    சரண் உனைப் புகுந்தேன்; என்னைத் தாங்குதல் தருமம் என்றான். 25

  142. என்ற அக் குரக்கு வேந்தை, இராமனும் இரங்கி நோக்கி,
    உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள, முன் நாள்
    சென்றன போக, மேல் வந்து உறுவன தீர்ப்பல்; அன்ன
    நின்றன, எனக்கும் நிற்கும் நேர் என மொழியும் நேரா, 26

  143. மற்று, இனி உரைப்பது என்னே? வானிடை, மண்ணில், நின்னைச்
    செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும், உன்னோடு
    உற்றவர் எனக்கும் உற்றார்; உன் கிளை எனது; என் காதல்
    சுற்றம், உன் சுற்றம்; நீ என் இன் உயிர்த் துணைவன் என்றான். 27

  144. இராமன் நட்புக் கொண்டமை கேட்டு, குரக்குச் சேனை மகிழ்தல்

  145. ஆர்த்தது குரக்குச் சேனை; அஞ்சனை சிறுவன் மேனி,
    போர்த்தன, பொடித்து உரோமப் புளகங்கள்; பூவின் மாரி
    தூர்த்தனர், விண்ணோர், மேகம் சொரிந்தென, அனகன் சொன்ன
    வார்த்தை, எக் குலத்துளோர்க்கும், மறையினும் மெய் என்று உன்னா, 28

  146. சுக்கிரீவனது இருக்கைக்கு அனுமன் இராமனை அழைத்தல்

  147. ஆண்டு எழுந்து, அடியில் தாழ்ந்த அஞ்சனை சிங்கம், வாழி!
    தூண் திரள் தடந் தோள் மைந்த! தோழனும் நீயும் வாழி!
    ஈண்டு, நும் கோயில் எய்தி, இனிதின் நும் இருக்கை காண
    வேண்டும்; நும் அருள் என்? என்றான்; வீரனும், விழுமிது என்றான். 29

  148. அனைவரும் புதுமலர்ச் சோலை சென்று சேர்தல்

  149. ஏகினர் - இரவி சேயும், இருவரும், அரிகள் ஏறும்,
    ஊக வெஞ் சேனை சூழ, அறம் தொடர்ந்து உவந்து வாழ்த்த-
    நாகமும், நரந்தக் காவும், நளின வாவிகளும் நண்ணி,
    போக பூமியையும் ஏசும் புது மலர்ச் சோலை புக்கார். 30

  150. ஆரமும் அகிலும் துன்றி, அவிர் பளிக்கு அறை அளாவி,
    நாரம் நின்றன போல் தோன்றி, நவ மணித் தடங்கள் நீடும்
    பாரமும், மருங்கும், தெய்வத் தருவும், நீர்ப் பண்ணை ஆடும்
    சூர் அரமகளிர் ஊசல் துவன்றிய சும்மைத்து அன்றே. 31

  151. அயர்வு இல் கேள்வி சால் அறிஞர் - வேலை முன்,
    பயில்வு இல் கல்வியார் பொலிவு இல் பான்மை போல்,
    குயிலும் மா மணிக் குழுவு சோதியால்,
    வெயிலும், வெள்ளி வெண் மதியும், மேம்படா. 32

  152. இராமன் சுக்கிரீவனோடு விருந்துண்ணல்

  153. ஏய அன்னது ஆம் இனிய சோலைவாய்,
    மேய மைந்தரும், கவியின் வேந்தனும்,
    தூய பூ அணைப் பொலிந்து தோன்றினார்,
    ஆய அன்பினோடு அளவளாவுவார். 33

  154. கனியும், கந்தமும், காயும், தூயன
    இனிய யாவையும் கொணர, யாரினும்
    புனிதன் மஞ்சனத் தொழில் புரிந்து, பின்
    இனிது இருந்து, நல் விருந்தும் ஆயினான். 34

  155. நீயும் மனைவியைப் பிரிந்துள்ளாயோ? என இராமன் சுக்கிரீவனை வினாவுதல்

  156. விருந்தும் ஆகி, அம் மெய்ம்மை அன்பினோடு
    இருந்து, நோக்கி, நொந்து, இறைவன், சிந்தியா,
    பொருந்து நன் மனைக்கு உரிய பூவையைப்
    பிரிந்துளாய்கொலோ நீயும் பின்? என்றான். 35

  157. மாருதி சுக்கிரீவனது நிலையை எடுத்துரைத்தல்

  158. என்ற வேலையில் எழுந்து, மாருதி,
    குன்று போல நின்று, இரு கை கூப்பினான்-
    நின்ற நீதியாய்! நெடிது கேட்டியால்!
    ஒன்று, யான் உனக்கு உரைப்பது உண்டு எனா: 36

  159. வாலியின் சிறப்பு

  160. நாலு வேதம் ஆம் நவை இல் ஆர்கலி
    வேலி அன்னவன், மலையின் மேல் உளான்,
    சூலிதன் அருள் துறையின் முற்றினான்,
    வாலி என்று உளான், வரம்பு இல் ஆற்றலான்; 37

  161. கழறு தேவரோடு, அவுணர் கண்ணின் நின்று,
    உழலும் மந்தரத்து உருவு தேய, முன்,
    அழலும் கோள் அரா அகடு தீ விட,
    சுழலும் வேலையைக் கடையும் தோளினான்; 38

  162. நிலனும், நீரும், மாய் நெருப்பும், காற்றும், என்று
    உலைவுஇல் பூதம் நான்கு உடைய ஆற்றலான்;
    அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா
    மலையின் நின்றும் இம் மலையின் வாவுவான்; 39

  163. கிட்டுவார் பொரக் கிடைக்கின், அன்னவர்
    பட்ட நல் வலம் பாகம் எய்துவான்;
    எட்டு மாதிரத்து இறுதி, நாளும் உற்று,
    அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்; 40

  164. கால் செலாது அவன் முன்னர்; கந்த வேள்
    வேல் செலாது அவன் மார்பில்; வென்றியான்
    வால் செலாத வாய் அலது, இராவணன்
    கோல் செலாது; அவன் குடை செலாது அரோ. 41

  165. மேருவே முதல் கிரிகள் வேரொடும்
    பேருமே, அவன் பேருமேல்; நெடுங்
    காரும், வானமும், கதிரும், நாகமும்,
    தூருமே, அவன் பெரிய தோள்களால். 42

  166. பார் இடந்த வெம் பன்றி, பண்டை நாள்
    நீர் கடைந்த பேர் ஆமை, நேர் உளான்;
    மார்பு இடந்த மா எனினும், மற்றவன்
    தார் கிடந்த தோள் தகைய வல்லதோ! 43

  167. படர்ந்த நீள் நெடுந் தலை பரப்பி, மீது,
    அடர்ந்து பாரம் வந்து உற, அனந்தனும்
    கிடந்து தாங்கும் இக் கிரியை மேயினான்,
    நடந்து தாங்கும், இப் புவனம், நாள் எலாம். 44

  168. கடல் உளைப்பதும், கால் சலிப்பதும்,
    மிடல் அருக்கர் தேர்மீது செல்வதும்,
    தொடர மற்றவன் சுளியும் என்று அலால்,-
    அடலின் வெற்றியாய்! - அயலின் ஆவவோ? 45

  169. வெள்ளம் ஏழு பத்து உள்ள, மேருவைத்
    தள்ளல் ஆன தோள் அரியின் தானையான்;
    உள்ளம் ஒன்றி எவ் உயிரும் வாழுமால்,-
    வள்ளலே! - அவன் வலியின் வன்மையால், 46

  170. மழை இடிப்பு உறா; வய வெஞ் சீய மா
    முழை இடிப்பு உறா; முரண் வெங் காலும் மென்
    தழை துடிப்புறச் சார்வு உறாது; - அவன்
    விழைவிடத்தின்மேல், விளிவை அஞ்சலால். 47

  171. மெய்க்கொள் வாலினால், மிடல் இராவணன்
    தொக்க தோள் உறத் தொடர்ப்படுத்த நாள்,
    புக்கிலாதவும், பொழி அரத்த நீர்
    உக்கிலாத வேறு உலகம் யாவதோ? 48

  172. இந்திரன் தனிப் புதல்வன், இன் அளிச்
    சந்திரன் தழைத்தனைய தன்மையான்,
    அந்தகன் தனக்கு அரிய ஆணையான்,
    முந்தி வந்தனன், இவனின் - மொய்ம்பினோய்! 49

  173. சுக்கிரீவனோடு வாலி பகைமை கொண்ட காரணத்தை உரைத்தல்

  174. அன்னவன் எமக்கு அரசன் ஆகவே,
    இன்னவன் இளம் பதம் இயற்றும் நாள்,
    முன்னவன் குலப் பகைஞன், - முட்டினான்-
    மின் எயிற்று வாள் அவுணன், வெம்மையான். 50

  175. முட்டி நின்று, அவன் முரண் உரத்தின் நேர்
    ஒட்ட, அஞ்சி, நெஞ்சு உலைய ஓடினான்;
    வட்ட மண்டலத்து அரிது வாழ்வு எனா,
    எட்ட அரும் பெரும் பிலனுள் எய்தினான். 51

  176. எய்து காலை, அப் பிலனுள் எய்தி, யான்
    நொய்தின் அங்கு அவற் கொணர்வென்; - நோன்மையாய்!-
    செய்தி, காவல், நீ, சிறிது போழ்து எனா,
    வெய்தின் எய்தினான், வெகுளி மேயினான். 52

  177. ஏகி, வாலியும் இருது ஏழொடு ஏழ்
    வேக வெம் பிலம் தடவி, வெம்மையான்
    மோக வென்றிமேல் முயல்வின் வைகிட,
    சோகம் எய்தினன், துணை துளங்கினான். 53

  178. அழுது அழுங்குறும் இவனை, அன்பினின்
    தொழுது இரந்து, நின் தொழில் இது; ஆதலால்,
    எழுது வென்றியாய்! அரசு கொள்க! என,
    பழுது இது என்றனன், பரியும் நெஞ்சினான். 54

  179. என்று, தானும், அவ் வழி இரும் பிலம்
    சென்று, முன்னவன் - தேடுவேன்; அவற்
    கொன்றுளான் தனைக் கொல ஒணாது எனின்,
    பொன்றுவேன் எனா, புகுதல் மேயினான். 55

  180. தடுத்து, வல்லவர் தணிவு செய்து, நோய்
    கெடுத்து, மேலையோர் கிளத்து நீதியால்
    அடுத்த காவலும், அரிகள் ஆணையால்
    கொடுத்தது உண்டு; இவன் கொண்டனன் கொலாம்? 56

  181. அன்ன நாளில், மாயாவி, அப் பிலத்து,
    இன்ன வாயினூடு எய்தும் என்ன, யாம்,
    பொன்னின் மால் வரைப் பொருப்பு ஒழித்து, வேறு
    உன்னு குன்று எலாம் உடன் அடுக்கினேம். 57

  182. சேமம் அவ் வழிச் செய்து, செங் கதிர்க்
    கோமகன் தனைக் கொண்டுவந்து, யாம்
    மேவு குன்றின்மேல் வைகும் வேலைவாய்,
    ஆவி உண்டனன் அவனை, அன்னவன். 58

  183. ஒளித்தவன் உயிர்க் கள்ளை உண்டு, உளம்
    களித்த வாலியும், கடிதின் எய்தினான்;
    விளித்து நின்று, வேறு உரை பெறான்; இருந்து
    அளித்தவாறு நன்று, இளவலார்! எனா, 59

  184. வால் விசைத்து, வான் வளி நிமிர்ந்தெனக்
    கால் விசைத்து, அவன் கடிதின் எற்றலும்,
    நீல் நிறத்து விண் நெடு முகட்டவும்,
    வேலை புக்கவும், பெரிய வெற்பு எலாம். 60

  185. ஏறினான் அவன்; எவரும் அஞ்சுறச்
    சீறினான்; நெடுஞ் சிகரம் எய்தினான்;
    வேறு இல், ஆதவன் புதல்வன், மெய்ம்மை ஆம்
    ஆறினானும், வந்து அடி வணங்கினான். 61

  186. வணங்கி, அண்ணல்! நின் வரவு இலாமையால்,
    உணங்கி, உன் வழிப் படர உன்னுவேற்கு,
    இணங்கர் இன்மையால், இறைவ! நும்முடைக்
    கணங்கள், காவல், உன் கடன்மை என்றனர். 62

  187. ஆணை அஞ்சி, இவ் அரசை எய்தி வாழ்
    நாண் இலாத என் நவையை, நல்குவாய்;
    பூண் நிலாவு தோளினை! பொறாய்! என,
    கோணினான், நெடுங் கொடுமை கூறினான். 63

  188. அடல் கடந்த தோள் அவனை அஞ்சி, வெங்
    குடல் கலங்கி, எம் குலம் ஒடுங்க, முன்
    கடல் கடைந்த அக் கரதலங்களால்,
    உடல் கடைந்தனன், இவன் உலைந்தனன். 64

  189. இவன், உலைந்து உலைந்து, எழு கடல் புறத்து
    அவனியும் கடந்து, எயில் அடைந்தனன்;
    கவனம் ஒன்று இலான், கால் கடாயென,
    அவனி வேலை ஏழ், அரியின் வாவினான். 65

  190. நக்கரக் கடல் புறத்து நண்ணும் நாள்,
    செக்கர் மெய்த் தனிச் சோதி சேர்கலாச்
    சக்கரப் பொருப்பின் தலைக்கும் அப்
    பக்கம் உற்று, அவன் கடிது பற்றினான். 66

  191. பற்றி, அஞ்சலன் பழியின், வெஞ்சினம்
    முற்றி நின்ற, தன் முரண் வலிக் கையால்,
    எற்றுவான் எடுத்து எழுதலும், பிழைத்து,
    அற்றம் ஒன்று பெற்று, இவன், அகன்றனன். 67

  192. வாலிக்குப் பயந்து, சுக்கிரீவன் மலையில் வாழ்தலைக் கூறல்

  193. எந்தை! மற்று அவன் எயிறு அதுக்குமேல்,
    அந்தகற்கும் ஓர் அரணம் இல்லையால்;
    இந்த வெற்பின் வந்து இவன் இருந்தனன் -
    முந்தை உற்றது ஓர் சாபம் உண்மையால். 68

  194. உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம்
    அரு மருந்தையும், அவன் விரும்பினான்;
    இருமையும் துறந்து, இவன் இருந்தனன்;
    கருமம் இங்கு இது; எம் கடவுள்! என்றனன். 69

  195. அனுமன் உரை கேட்ட இராமன் சினந்து, வாலியைக் கொல்வதாகச் சூளுரைத்தல்

  196. பொய் இலாதவன் வரன்முறை இம் மொழி புகல,
    ஐயன், ஆயிரம் பெயருடை அமரர்க்கும் அமரன்,
    வையம் நுங்கிய வாய் இதழ் துடித்தது; மலர்க் கண் -
    செய்ய தாமரை, ஆம்பல் அம் போது எனச் சிவந்த. 70

  197. ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன,
    ஆரம் வீங்கு தோள் தம்பிக்குத் தன் அரசு உரிமைப்
    பாரம் ஈந்தவன், பரிவு இலன், ஒருவன் தன் இளையோன்
    தாரம் வௌவினன் என்ற சொல் தரிக்குமாறு உளதோ? 71

  198. உலகம் எழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி
    விலகும் என்னினும், வில்லிடை வாளியின் வீட்டி,
    தலைமையோடு, நின் தாரமும், உனக்கு இன்று தருவென்;
    புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான். 72

  199. எழுந்து, பேர் உவகைக் கடற் பெருந் திரை இரைப்ப,
    அழுந்து துன்பினுக்கு அக் கரை கண்டனன் அனையான்,
    விழுந்ததே இனி வாலி தன் வலி! என, விரும்பா,
    மொழிந்த வீரற்கு, யாம் எண்ணுவது உண்டு என மொழிந்தான். 73

  200. அமைச்சர்களோடு சுக்கிரீவன் ஆலோசிக்க, அனுமன் பேசுதல்

  201. அனைய ஆண்டு உரைத்து, அனுமனே முதலிய அமைச்சர்,
    நினைவும், கல்வியும், நீதியும், சூழ்ச்சியும் நிறைந்தார்
    எனையர், அன்னவரோடும் வேறு இருந்தனன், இரவி
    தனையன்; அவ் வழி, சமீரணன் மகன் உரைதருவான்: 74

  202. உன்னினேன், உன் தன் உள்ளத்தின் உள்ளதை, உரவோய்!
    அன்ன வாலியைக் காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல்
    இன்ன வீரர்பால் இல்லை என்று அயிர்த்தனை; இனி, யான்
    சொன்ன கேட்டு, அவை கடைப்பிடிப்பாய் எனச் சொன்னான். 75

  203. சங்கு சக்கரக் குறி உள, தடக் கையில், தாளில்;
    எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை;
    செங் கண் விற் கரத்து இராமன், அத் திரு நெடு மாலே;
    இங்கு உதித்தனன், ஈண்டு அறம் நிறுத்துதற்கு; இன்னும், 76

  204. செறுக்கும் வன் திறல் திரிபுரம் தீ எழச் சினவிக்
    கறுக்கும், வெஞ் சினக் காலன் தன் காலமும் காலால்
    அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர் ஆடகத் தனி வில்
    இறுக்கும் தன்மை, அம் மாயவற்கு அன்றியும் எளிதோ? 77

  205. என்னை ஈன்றவன், இவ் உலகு யாவையும் ஈன்றான்-
    தன்னை ஈன்றவற்கு அடிமை செய்; தவம் உனக்கு அஃதே;
    உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான்;
    இன்ன தோன்றலே அவன்; இதற்கு ஏது உண்டு; - இறையோய்! 78

  206. துன்பு தோன்றிய பொழுது, உடன் தோன்றுவன்; எவர்க்கும்
    முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என்? என்று இயம்ப,
    அன்பு சான்று என உரைத்தனன்; ஐய! என் ஆக்கை,
    என்பு தோன்றல உருகினஎனின், பிறிது எவனோ? 79

  207. இராமனின் ஆற்றல் அறிதற்கு அனுமன் உரைத்த உபாயம்

  208. பிறிதும், அன்னவன் பெரு வலி ஆற்றலை, பெரியோய்!
    அறிதிஎன்னின், உண்டு உபாயமும்; அஃது அரு மரங்கள்
    நெறியில் நின்றன ஏழில், ஒன்று உருவ, இந் நெடியோன்
    பொறி கொள் வெஞ் சரம் போவது காண்! எனப் புகன்றான். 80

  209. அனுமன் சொல்லுக்கு இணங்கிய சுக்கிரீவன், இராமனிடம் தன் எண்ணத்தை உரைத்தல்

  210. நன்று நன்று எனா, நல் நெடுங் குன்றமும் நாணும்
    தன் துணைத் தனி மாருதி தோளிணை தழுவி,
    சென்று, செம்மலைக் குறுகி, யான் செப்புவது உளதால்,
    ஒன்று உனக்கு என, இராமனும், உரைத்தி அஃது என்றான். 81

  211. மிகைப் பாடல்கள்

  212. பிரிவு இல் கான் அது தனில், பெரிய சூர்ப்பணகைதன்
    கரிய மா நகிலொடும், காதொடும், நாசியை
    அரியினார்; அவள் சொல, திரிசிரா அவனொடும்,
    கரனொடும், அவுணரும், காலன் வாய் ஆயினார். 10-1

  213. கடுத்து எழு தமத்தைச் சீறும் கதிர்ச் சுடர்க் கடவுள் ஆய்ந்து
    வடித்த நூல் முழுதும் தான் ஓர் வைகலின், வரம்பு தோன்றப்
    படித்தவன் வணங்கி, வாழ்த்தி, பரு மணிக் கனகத் தோள்மேல்
    எடுத்தனன், இரண்டுபாலும் இருவரை; ஏகலுற்றான். 29-1

  214. என்று கால்மகன் இயம்ப, ஈசனும்,
    நன்று நன்று எனா, நனி தொடர்ந்து பின்
    சென்ற வாலிமுன் சென்ற செம்மல்தான்
    அன்று வாவுதற்கு அறிந்தனன்கொலாம்? 65-1

  215. இனையவா வியந்து இளவல்தன்னொடும்,
    வனையும் வார் கழல் கருணை வள்ளல், பின்பு,
    இனைய வீரர் செய்தமை இயம்பு என,
    புனையும் வாகையான் புகறல் மேயினான்: 65-2

  216. திறத்து மா மறை அயனொடு ஐம்முகன், பிறர், தேடிப்
    புறத்து அகத்து உணர் அரிய தன் பொலன் அடிக் கமலம்
    உறச் சிவப்ப இத் தரை மிசை உறல், அறம் ஆக்கல்,
    மறத்தை வீட்டுதல், அன்றியே, பிறிது மற்று உண்டோ ? 70-1

  217. நீலகண்டனும், நேமியும், குலிசனும், மலரின் -
    மேல் உளானும், வந்து, அவன் உயிர்க்கு உதவினும், வீட்டி
    ஆலும் உன் அரசு உரிமையோடு அளிக்குவென்; அனலோன்
    சாலும், இன்று எனது உரைக்கு அருஞ் சான்று எனச் சமைந்தான். 71-1

  218. மண்ணுள் ஓர் அரா முதுகிடை முளைத்த மா மரங்கள்
    எண்ணில் ஏழ் உள; அவற்றில் ஒன்று உருவ எய்திடுவோன்,
    விண்ணுள் வாலிதன் ஆர் உயிர் விடுக்கும் என்று உலகின் -
    கண் உளோர்கள் தாம் கழறிடும் கட்டுரை உளதால். 80-1

  219. கிட்கிந்தா காண்டம்

    4. மராமரப் படலம்



  220. சுக்கிரீவன் இராமனை ஏழு மராமரங்களுள் ஒன்றை ஓர் அம்பினால் எய்ய வேண்டுதல்

  221. ஏக வேண்டும் இந் நெறி என, இனிது கொண்டு ஏகி,
    மாகம் நீண்டன குறுகிட நிமிர்ந்தன மரங்கள்
    ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று உருவ, நின் அம்பு
    போகவே, என் தன் மனத்து இடர் போம் எனப் புகன்றான். 1

  222. இராமன் வில்லை நாணேற்றி, மராமரங்களின் அருகே செல்லுதல்

  223. மறு இலான் அது கூறலும், வானவர்க்கு இறைவன்,
    முறுவல் செய்து, அவன் முன்னிய முயற்சியை உன்னி,
    எறுழ் வலித் தடந் தோள்களால் சிலையை நாண் ஏற்றி,
    அறிவினால் அளப்ப அரியவற்று அருகு சென்று, அணைந்தான். 2

  224. மராமரங்கள் நின்ற காட்சி

  225. ஊழி பேரினும் பேர்வில; உலகங்கள் உலைந்து
    தாழும் காலத்தும், தாழ்வில; தயங்கு பேர் இருள் சூழ்
    ஆழி மா நிலம் தாங்கிய அருங் குலக் கிரிகள்
    ஏழும், ஆண்டுச் சென்று ஒரு வழி நின்றென, இயைந்த; 3

  226. கலை கொண்டு ஓங்கிய மதியமும், கதிரவன் தானும்,
    தலைகண்டு ஓடுதற்கு அருந் தவம் தொடங்குறும் சாரல்
    மலை கண்டோ ம் என்பது அல்லது, மலர்மிசை அயற்கும்,
    இலை கண்டோ ம் என, தெரிப்ப அருந் தரத்தன ஏழும்; 4

  227. ஒக்க நாள் எலாம் உழல்வன, உலைவு இல ஆக,
    மிக்கது ஓர் பொருள் உளது என வேறு கண்டிலமால் -
    திக்கும், வானமும், செறிந்த அத் தரு நிழல் சீதம்
    புக்கு நீங்கலின், தளர்வு இல், இரவி தேர்ப் புரவி; 5

  228. நீடு நாள்களும், கோள்களும், என்ன, மேல் நிமிர்ந்து
    மாடு தோற்றுவ மலர் எனப் பொலிகின்ற வளத்த;
    ஓடு மாச் சுடர் வெண் மதிக்கு, உட்கறுப்பு, உயர்ந்த
    கோடு தேய்த்தலின், களங்கம் உற்ற ஆம் அன்ன குறிய; 6

  229. தீது அறும் பெருஞ் சாகைகள் தழைக்கின்ற செயலால்
    வேதம் என்னவும் தகுவன; விசும்பினும் உயர்ந்த
    ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின், அங்கு அவன் ஊர்
    ஓதிமம், தனிப் பெடையொடும் புடை இருந்து உறைவ. 7

  230. நாற்றம் மல்கு போது, அடை, கனி, காய், முதல் நானா
    வீற்று, மண்தலத்து யாவையும் வீழ்கில, யாண்டும்
    காற்று அலம்பினும்; கலி நெடு வானிடைக் கலந்த
    ஆற்றின் வீழ்ந்து போய், அலை கடல் பாய்தரும் இயல்ப; 8

  231. அடியினால் உலகு அளந்தவன் அண்டத்துக்கு அப்பால்
    முடியின்மேல் சென்ற முடியன ஆதலின், முடியா
    நெடிய மால் எனும் நிலையன; நீரிடைக் கிடந்த
    படியின்மேல் நின்ற மேரு மால் வரையினும், பரிய; 9

  232. வள்ளல் இந்திரன் மைந்தற்கும், தம்பிக்கும் வயிர்த்த
    உள்ளமே என, ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய;
    தெள்ளு நீரிடைக் கிடந்த பார் சுமக்கின்ற சேடன்
    வெள்ளி வெண் படம் குடைந்து கீழ் போகிய வேர; 10

  233. சென்று திக்கினை அளந்தன, பணைகளின்; தேவர்,
    என்றும் நிற்கும் என்று இசைப்பன; இரு சுடர் திரியும்
    குன்றினுக்கு உயர்ந்து அகன்றன; ஒன்றினும் குறுகா;
    ஒன்றினுக்கு ஒன்றின் இடை, நெடிது யோசனை உடைய. 11

  234. இராமன் அம்பு எய்தல்

  235. ஆய மா மரம் அனைத்தையும் நோக்கி நின்று, அமலன்,
    தூய வார் கணை துரப்பது ஓர் ஆதரம் தோன்ற,
    சேய வானமும், திசைகளும், செவிடு உற, தேவர்க்கு
    ஏய்வு இலாதது ஓர் பயம் வர, சிலையின் நாண் எறிந்தான். 12

  236. ஒக்க நின்றது, எவ் உலகமும் அங்கு அங்கே ஓசை;
    பக்கம் நின்றவர்க்கு உற்றது பகர்வது எப்படியோ?
    திக்கயங்களும் மயங்கின; திசைகளும் திகைத்த;
    புக்கு, அயன் பதி சலிப்புற ஒலித்தது, அப் பொரு வில். 13

  237. அரிந்தமன் சிலை நாண் நெடிது ஆர்த்தலும், அமரர்
    இரிந்து நீங்கினர், கற்பத்தின் இறுதி என்று அயிர்த்தார்;
    பரிந்த தம்பியே பாங்கு நின்றான்; மற்றைப் பல்லோர்
    புரிந்த தன்மையை உரைசெயின், பழி, அவர்ப் புணரும். 14

  238. எய்தல் காண்டும்கொல், இன்னம்? என்று, அரிதின் வந்து எய்தி,
    பொய் இல் மாருதி முதலினோர் புகழ்வுறும் பொழுதில்,
    மொய் கொள் வார் சிலை நாணினை முறை உற வாங்கி,
    வெய்ய வாளியை, ஆளுடை வில்லியும், விட்டான். 15

  239. ஏழு மா மரம் உருவி, கீழ் உலகம் என்று இசைக்கும்
    ஏழும் ஊடு புக்கு உருவி, பின் உடன் அடுத்து இயன்ற
    ஏழ் இலாமையால் மீண்டது, அவ் இராகவன் பகழி;
    ஏழு கண்டபின், உருவுமால்; ஒழிவது அன்று, இன்னும். 16

  240. அம்பு எய்தமையால் உலகில் உண்டான அச்சம்

  241. ஏழு வேலையும், உலகம் மேல் உயர்ந்தன ஏழும்,
    ஏழு குன்றமும், இருடிகள் எழுவரும், புரவி
    ஏழும், மங்கையர் எழுவரும், நடுங்கினர் என்ப -
    ஏழு பெற்றதோ இக் கணைக்கு இலக்கம்? என்று எண்ணி. 17

  242. அன்னது ஆயினும், அறத்தினுக்கு ஆர் உயிர்த் துணைவன்
    என்னும் தன்மையை நோக்கினர் யாவரும், எவையும்;
    பொன்னின் வார் கழல் புது நறுந் தாமரை பூண்டு,
    சென்னிமேல் கொளூஉ அருக்கன் சேய், இவை இவை செப்பும்: 18

  243. சுக்கிரீவன் இராமனைப் புகழ்ந்துரைத்தல்

  244. வையம் நீ! வானும் நீ! மற்றும் நீ! மலரின்மேல்
    ஐயன் நீ! ஆழிமேல் ஆழி வாழ் கையன் நீ!
    செய்ய தீ அனைய அத் தேவும் நீ! நாயினேன்,
    உய்ய வந்து உதவினாய், உலகம் முந்து உதவினாய்! 19

  245. என் எனக்கு அரியது, எப் பொருளும் எற்கு எளிது அலால்?
    உன்னை இத் தலை விடுத்து உதவினார், விதியினார்;
    அன்னை ஒப்புடைய உன் அடியருக்கு அடியென் யான்;
    மன்னவர்க்கு அரச! என்று உரைசெய்தான் - வசை இலான். 20

  246. வானர வீரர்களின் மகிழ்ச்சி

  247. ஆடினார்; பாடினார்; அங்கும் இங்கும் களித்து
    ஓடினார்; உவகை இன் நறவை உண்டு உணர்கிலார்;-
    நேடினாம் வாலி காலனை எனா, நெடிது நாள்
    வாடினார் தோள் எலாம் வளர, மற்று அவர் எலாம். 21

  248. கிட்கிந்தா காண்டம்

    5. துந்துபிப் படலம்



  249. துந்துபியின் உடலைப் பார்த்து, இராமன் வினாவுதல்

  250. அண்டமும், அகிலமும் அடைய, அன்று அனலிடைப்
    பண்டு வெந்தன நெடும் பசை வறந்திடினும், வான்
    மண்டலம் தொடுவது, அம் மலையின்மேல் மலை எனக்
    கண்டனன், துந்துபி, கடல் அனான், உடல் அரோ! 1

  251. தென் புலக் கிழவன் ஊர் மயிடமோ? திசையின் வாழ்
    வன்பு உலக் கரி மடிந்தது கொலோ? மகரமீன்
    என்பு உலப்புற உலர்ந்தது கொலோ? இது எனா,
    அன்பு உலப்பு அரிய நீ, உரைசெய்வாய் என, அவன், 2

  252. துந்துபியின் வரலாற்றைச் சுக்கிரீவன் உரைத்தல்

  253. துந்துபிப் பெயருடைச் சுடு சினத்து அவுணன், மீது
    இந்துவைத் தொட நிமிர்ந்து எழு மருப்பு இணையினான்,
    மந்தரக் கிரி எனப் பெரியவன், மகர நீர்
    சிந்திட, கரு நிறத்து அரியினைத் தேடுவான். 3

  254. அங்கு வந்து அரி எதிர்ந்து, அமைதி என்? என்றலும்,
    பொங்கு வெஞ் செருவினில் பொருதி என்று உரைசெய,
    கங்கையின் கணவன், அக் கறை மிடற்று இறைவனே
    உங்கள் வெங் கத வலிக்கு ஒருவன் என்று உரைசெய்தான். 4

  255. கடிது சென்று, அவனும், அக் கடவுள்தன் கயிலையை,
    கொடிய கொம்பினின் மடுத்து எழுதலும், குறுகி, முன்
    நொடிதி; நின் குறை என்? என்றலும், நுவன்றனன் அரோ
    முடிவு இல் வெஞ் செரு, எனக்கு அருள் செய்வான் முயல்க! எனா, 5

  256. மூலமே, வீரமே மூடினாயோடு, போர்
    ஏலுமே? தேவர்பால் ஏகு எனா, ஏவினான் -
    சால நாள் போர் செய்வாய் ஆதியேல், சாரல்; போர்
    வாலிபால் ஏகு எனா - வான் உளோர் வான் உளான். 6

  257. அன்னவன் விட, உவந்து, அவனும் வந்து, அரிகள் தம்
    மன்னவன்! வருக! போர் செய்க! எனா, மலையினைச்
    சின்னபின்னம் படுத்திடுதலும், சினவி, என்
    முன்னவன், முன்னர் வந்து அனையவன் முனைதலும், 7

  258. இருவரும் திரிவுறும் பொழுதின் இன்னவர்கள் என்று
    ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள்; எவ் உலகினும்,
    வெருவரும் தகைவுஇலர், விழுவர், நின்று எழுவரால்;
    மருவ அருந் தகையர், தானவர்கள் வானவர்கள்தாம். 8

  259. தீ எழுந்தது, விசும்புற; நெடுந் திசை எலாம்
    போய் எழுந்தது, முழக்கு; உடன் எழுந்தது, புகை;
    தோய நன் புணரியும், தொடர் தடங் கிரிகளும்,
    சாய் அழிந்தன; - அடித்தலம் எடுத்திடுதலால். 9

  260. அற்றது ஆகிய செருப் புரிவுறும் அளவினில்,
    கொற்ற வாலியும், அவன், குலவு தோள் வலியொடும்
    பற்றி, ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து,
    எற்றினான்; அவனும், வான் இடியின் நின்று உரறினான். 10

  261. தலையின்மேல் அடி பட, கடிது சாய் நெடிய தாள்
    உலைய, வாய் முழை திறந்து உதிர ஆறு ஒழுக, மா
    மலையின்மேல் உரும் இடித்தென்ன, வான் மண்ணொடும்
    குலைய, மா திசைகளும் செவிடுற, - குத்தினான். 11

  262. கவரி இங்கு இது என, கரதலம்கொடு திரித்து
    இவர்தலும், குருதி பட்டு இசைதொறும் திசைதொறும்,
    துவர் அணிந்தன என, பொசி துதைந்தன - துணைப்
    பவர் நெடும் பணை மதம் பயிலும் வன் கரிகளே. 12

  263. புயல் கடந்து, இரவிதன் புகல் கடந்து, அயல் உளோர்
    இயலும் மண்டிலம் இகந்து, எனையவும் தவிர, மேல்
    வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய, அன்று
    உயிரும் விண் படர, இவ் உடலும் இப் பரிசு அரோ! 13

  264. முட்டி, வான் முகடு சென்று அளவி, இம் முடை உடற்
    கட்டி, மால் வரையை வந்து உறுதலும், கருணையான்
    இட்ட சாபமும், எனக்கு உதவும் என்று இயல்பினின்,
    பட்டவா முழுவதும், பரிவினால் உரைசெய்தான். 14

  265. இலக்குவன் துந்துபியின் உடலை உந்துதல்

  266. கேட்டனன், அமலனும், கிளந்தவாறு எலாம்,
    வாள் தொழில் இளவலை, இதனை, மைந்த! நீ
    ஓட்டு என, அவன் கழல் விரலின் உந்தினான்;
    மீட்டு, அது விரிஞ்சன் நாடு உற்று மீண்டதே! 15

  267. மிகைப் பாடல்கள்

  268. புயலும், வானகமும், அப் புணரியும், புணரிசூழ்
    அயலும், வீழ் தூளியால் அறிவு அருந் தகையவாம்
    மயனின் மா மகனும் வாலியும் மறத்து உடலினார்,
    இயலும் மா மதியம் ஈர்-ஆறும் வந்து எய்தவே. 9-1

  269. கிட்கிந்தா காண்டம்

    6. கலன் காண் படலம்



  270. சோலையில் இருந்த இராமனிடம் சுக்கிரீவன் சில செய்திகள் தெரிவித்தல்

  271. ஆயிடை, அரிக்குலம் அசனி அஞ்சிட
    வாய் திறந்து ஆர்த்தது; வள்ளல், ஓங்கிய
    தூய நல் சோலையில் இருந்த சூழல்வாய்,
    நாயக! உணர்த்துவது உண்டு நான் எனா, 1

  272. இவ் வழி, யாம் இயைந்து இருந்தது ஓர் இடை,
    வெவ் வழி இராவணன் கொணர, மேலை நாள்,
    செவ் வழி நோக்கி, நின் தேவியே கொலாம்,
    கவ்வையின் அரற்றினள், கழிந்த சேண் உளாள்? 2

  273. உழையரின் உணர்த்துவது உளது என்று உன்னியோ?
    குழை பொரு கண்ணினாள் குறித்தது ஓர்ந்திலம்;
    மழை பொரு கண் இணை வாரியோடு தன்
    இழை பொதிந்து இட்டனள்; யாங்கள் ஏற்றனம். 3

  274. சீதையின் அணிகல முடிப்பைக் சுக்கிரீவன் காட்டுதல்

  275. வைத்தனம் இவ் வழி; - வள்ளல்! - நின் வயின்
    உய்த்தனம் தந்தபோது உணர்தியால் எனா,
    கைத்தலத்து அன்னவை கொணர்ந்து காட்டினான்; -
    நெய்த்தலைப் பால் கலந்தனைய நேயத்தான். 4

  276. அணிகலன்களைக் கண்ட இராமனின் நிலை

  277. தெரிவுற நோக்கினன், தெரிவை மெய் அணி;
    எரி கனல் எய்திய மெழுகின் யாக்கைபோல்
    உருகினன் என்கிலம்; உயிருக்கு ஊற்றம் ஆய்ப்
    பருகினன் என்கிலம்; பகர்வது என்கொல் யாம்? 5

  278. நல்குவது என் இனி? நங்கை கொங்கையைப்
    புல்கிய பூணும், அக் கொங்கை போன்றன;
    அல்குலின் அணிகளும், அல்குல் ஆயின;
    பல் கலன் பிறவும், அப் படிவம் ஆனவே. 6

  279. விட்ட பேர் உணர்வினை விளித்த என்கெனோ?
    அட்டன உயிரை அவ் அணிகள் என்கெனோ?
    கொட்டின சாந்து எனக் குளிர்ந்த என்கெனோ?
    சுட்டன என்கெனோ? யாது சொல்லுகேன்? 7

  280. மோந்திட, நறு மலர் ஆன; மொய்ம்பினில்
    ஏந்திட, உத்தரியத்தை ஏய்ந்தன;
    சாந்தமும் ஆய், ஒளி தழுவ, போர்த்தலால்,
    பூந் துகில் ஆய, அப் பூவை பூண்களே. 8

  281. ஈர்த்தன, செங் கண் நீர் வெள்ளம், யாவையும்;
    போர்த்தன, மயிர்ப் புறம் புளகம்; பொங்கு தோள்,
    வேர்த்தன என்கெனோ? வெதும்பினான் என்கோ?
    தீர்த்தனை, அவ் வழி, யாது செப்புகேன்? 9

  282. சுக்கிரீவன் தேறுதல் மொழி பல கூறி இராமனை தேற்றுதல்

  283. விடம் பரந்தனையது ஓர் வெம்மை மீக்கொள,
    நெடும் பொழுது, உணர்வினோடு உயிர்ப்பு நீங்கிய
    தடம் பெருங் கண்ணனைத் தாங்கினான், தனது
    உடம்பினில் செறி மயிர் சுறுக்கென்று ஏறவே. 10

  284. தாங்கினன் இருத்தி, அத் துயரம் தாங்கலாது
    ஏங்கிய நெஞ்சினன், இரங்கி விம்முவான்-
    வீங்கிய தோளினாய்! வினையினேன் உயிர்
    வாங்கினென், இவ் அணி வருவித்தே எனா. 11

  285. அயனுடை அண்டத்தின் அப் புறத்தையும்
    மயர்வு அற நாடி என் வலியும் காட்டி, உன்
    உயர் புகழ்த் தேவியை உதவற்பாலெனால்;
    துயர் உழந்து அயர்தியோ, சுருதி நூல் வலாய்? 12

  286. திருமகள் அனைய அத் தெய்வக் கற்பினாள்
    வெருவரச் செய்துள வெய்யவன் புயம்
    இருபதும், ஈர் - ஐந்து தலையும், நிற்க; உன்
    ஒரு கணைக்கு ஆற்றுமோ, உலகம் ஏழுமே? 13

  287. ஈண்டு நீ இருந்தருள்; ஏழொடு ஏழ் எனாப்
    பூண்ட பேர் உலகங்கள் வலியின் புக்கு, இடை
    தேண்டி, அவ் அரக்கனைத் திருகி, தேவியைக்
    காண்டி; யான் இவ் வழிக் கொணரும் கைப்பணி. 14

  288. ஏவல் செய் துணைவரேம், யாங்கள்; ஈங்கு, இவன்,
    தா அரும் பெரு வலித் தம்பி; நம்பி! நின்
    சேவகம் இது எனின், சிறுக நோக்கல் என்?
    மூவகை உலகும் நின் மொழியின் முந்துமோ? 15

  289. பெருமையோர் ஆயினும், பெருமை பேசலார்;
    கருமமே அல்லது பிறிது என் கண்டது?
    தருமம், நீ அல்லது தனித்து வேறு உண்டோ?
    அருமை ஏது உனக்கு? நின்று அவலம் கூர்தியோ? 16

  290. முளரிமேல் வைகுவான், முருகன் - தந்த அத்
    தளிரியல் பாகத்தான், தடக் கை ஆழியான்,
    அளவி ஒன்று ஆவரே அன்றி, - ஐயம் இல்
    கிளவியாய்! - தனித் தனிக் கிடைப்பரோ துணை? 17

  291. என்னுடைச் சிறு குறை முடித்தல் ஈண்டு ஒரீஇப்
    பின்னுடைத்து ஆயினும் ஆக! பேதுறும்
    மின் இடைச் சனகியை மீட்டு, மீள்துமால்-
    பொன்னுடைச் சிலையினாய்! - விரைந்து போய் என்றான். 18

  292. சுக்கிரீவன் உரையால் தெளிந்த இராமன் மறுமொழி பகர்தல்

  293. எரி கதிர்க் காதலன் இனைய கூறலும்,
    அருவி அம் கண் திறந்து, அன்பின் நோக்கினான்;
    திரு உறை மார்பனும், தெளிவு தோன்றிட,
    ஒருவகை உணர்வு வந்து, உரைப்பதுஆயினான்: 19

  294. விலங்கு எழில் தோளினாய், வினையினேனும், இவ்
    இலங்கு வில் கரத்திலும், இருக்கவே, அவள்
    கலன் கழித்தனள்; இது, கற்பு மேவிய
    பொலன் குழைத் தெரிவையர் புரிந்துளோர்கள் யார்? 20

  295. வாள் நெடுங் கண்ணி என் வரவு நோக்க, யான்,
    தாள் நெடுங் கிரியொடும், தடங்கள் தம்மொடும்,
    பூணொடும், புலம்பினென் பொழுது போக்கி, இந்
    நாண் நெடுஞ் சிலை சுமந்து, உழல்வென்; நாண் இலேன். 21

  296. ஆறுடன் செல்பவர், அம் சொல் மாதரை
    வேறு உளார் வலி செயின், விலக்கி, வெஞ் சமத்து
    ஊறுற, தம் உயிர் உகுப்பர்; என்னையே
    தேறினள் துயரம், நான் தீர்க்ககிற்றிலேன். 22

  297. கருங் கடல் தொட்டனர்; கங்கை தந்தனர்;
    பொரும் புலி மானொடு புனலும் ஊட்டினர்;
    பெருந் தகை என் குலத்து அரசர்: பின், ஒரு
    திருந்திழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன். 23

  298. இந்திரற்கு உரியது ஓர் இடுக்கண் தீர்த்து, இகல்
    அந்தகற்கு அரிய போர் அவுணன் - தேய்த்தனன்,
    எந்தை; மற்று, அவனின் வந்து உதித்த யான், உளேன்,
    வெந் துயர்க் கொடும் பழி வில்லின் தாங்கினேன். 24

  299. விரும்பு எழில் எந்தையார் மெய்ம்மை வீயுமேல்,
    வரும் பழி என்று, யான் மகுடம் சூடலேன்;
    கரும்பு அழி சொல்லியைப் பகைஞன் கைக்கொள,
    பெரும் பழி சூடினேன்; பிழைத்தது என் அரோ? 25

  300. இராமன் துயரால் மீண்டும் சோர, சுக்கிரீவன் ஆற்றுவித்தல்

  301. என்ன நொந்து, இன்னன பன்னி, ஏங்கியே,
    துன்ன அருந் துயரத்துச் சோர்கின்றான் தனை,
    பன்ன அருங் கதிரவன் புதல்வன், பையுள் பார்த்து,
    அன்ன வெந் துயர் எனும் அளக்கர் நீக்கினான். 26

  302. நின் குறை முடித்தலே முதற் பணி என இராமன் கூறுதல்

  303. ஐய, நீ ஆற்றலின் ஆற்றினேன் அலது,
    உய்வெனே? எனக்கு இதின் உறுதி வேறு உண்டோ ?
    வையகத்து, இப் பழி தீர மாய்வது
    செய்வென்; நின் குறை முடித்து அன்றிச் செய்கலேன். 27

  304. அப்பொழுது அனுமன் இராமனை நோக்கிப் பேசுதல்

  305. என்றனன் இராகவன்; இனைய காலையில்,
    வன் திறல் மாருதி வணங்கினான்; நெடுங்
    குன்று இவர் தோளினாய்! கூற வேண்டுவது
    ஒன்று உளது; அதனை நீ உணர்ந்து கேள்! எனா, 28

  306. கொடுந் தொழில் வாலியைக் கொன்று, கோமகன்
    கடுங் கதிரோன் மகன் ஆக்கி, கை வளர்
    நெடும் படை கூட்டினால் அன்றி, நேட அரிது,
    அடும் படை அரக்கர்தம் இருக்கை - ஆணையாய்! 29

  307. வானதோ? மண்ணதோ? மற்று வெற்பதோ?
    ஏனை மா நாகர்தம் இருக்கைப் பாலதோ?-
    தேன் உலாம் தெரியலாய்! - தெளிவது அன்று, நாம்
    ஊன் உடை மானிடம் ஆனது உண்மையால்! 30

  308. எவ் உலகங்களும் இமைப்பின் எய்துவர்,
    வவ்வுவர், அவ் வழி மகிழ்ந்த யாவையும்;
    வெவ் வினை வந்தென வருவர், மீள்வரால்;
    அவ் அவர் உறைவிடம் அறியற்பாலதோ? 31

  309. ஒரு முறையே பரந்து உலகம் யாவையும்,
    திரு உறை வேறு இடம் தேரவேண்டுமால்;
    வரன்முறை நாடிட, வரம்பு இன்றால் உலகு;
    அருமை உண்டு; அளப்ப அரும் ஆண்டும் வேண்டுமால். 32

  310. ஏழு - பத்து ஆகிய வெள்ளத்து எம் படை,
    ஊழியில் கடல் என உலகம் போர்க்குமால்;
    ஆழியைக் குடிப்பினும், அயன் செய் அண்டத்தைக்
    கீழ் மடுத்து எடுப்பினும், கிடைத்த செய்யுமால். 33

  311. அனைவரும் வாலி இருக்கும் இடத்திற்குச் செல்லுதல்

  312. ஆதலால், அன்னதே அமைவது ஆம் என,
    நீதியாய்! நினைந்தனென் என, நிகழ்த்தினான்;
    சாது ஆம் என்ற, அத் தனுவின் செவனும்,
    போதும் நாம் வாலிபால் என்ன, போயினார். 34

  313. கிட்கிந்தா காண்டம்

    7. வாலி வதைப் படலம்



  314. இராமன் முதலிய யாவரும் சென்ற மலைவழி

  315. வெங் கண் ஆளிஏறும், மீளி மாவும், வேக நாகமும்,
    சிங்க ஏறு இரண்டொடும் திரண்ட அன்ன செய்கையார்,
    தங்கு சாலம், மூலம் ஆர் தமாலம், ஏலம், மாலைபோல்
    பொங்கு நாகமும், துவன்று, சாரலூடு போயினார். 1

  316. உழை உலாம் நெடுங் கண் மாதர் ஊசல்; ஊசல் அல்லவேல்,
    தழை உலாவு சந்து அலர்ந்த சாரல்; சாரல் அல்லவேல்,
    மழை உலாவு முன்றில்; அல்ல, மன்றல் நாறு சண்பகக்
    குழை உலாவு சோலை; சோலை அல்ல, பொன் செய் குன்றமே. 2

  317. அறங்கள் நாறும் மேனியார், அரிக் கணங்களோடும், அங்கு
    இறங்கு போதும், ஏறு போதும், ஈறு இலாத ஓதையால்,
    கறங்கு வார் கழல் கலன் கலிப்ப, முந்து கண் முகிழ்த்து
    உறங்கு மேகம், நன்கு உணர்ந்து, மாசு மீது உலாவுமே. 3

  318. நீடு நாகமூடு மேகம் ஓட, நீரும் ஓட, நேர்
    ஆடு நாகம் ஓட, மானை யானை ஓட, ஆளி போம் -
    மாடு நாகம் நீடு சாரல், வாளை ஓடும் வாவியூடு
    ஓடு நாகம் ஓட, வேங்கை ஓடும், யூகம் ஓடவே. 4

  319. மருண்ட மா மலைத் தடங்கள் செல்லல் ஆவ அல்ல - மால்
    தெருண்டிலாத மத்த யானை சீறி நின்று சிந்தலால்,
    இருண்ட காழ் அகில், தடத்தொடு இற்று வீழ்ந்த சந்து வந்து
    உருண்டபோது, அழிந்த தேன் ஒழுக்கு பேர் இழுக்கினே! 5

  320. மினல் மணிக் குலம் துவன்றி, வில் அலர்த்து, விண் குலாய்,
    அனல் பரப்பல் ஒப்ப, மீது இமைப்ப, வந்து அவிப்பபோல்
    புனல் பரப்பல் ஒப்பு இருந்த பொன் பரப்பும் என்பரால் -
    இனைய வில் தடக் கை வீரர் ஏகுகின்ற குன்றமே. 6

  321. மருவி ஆடும் வாவிதோறும் வான யாறு பாயும், வந்து;
    இருவி ஆர் தடங்கள் தோறும் ஏறு பாயுமாறுபோல்,
    அருவி பாயும்; முன்றில், ஒன்றி யானை பாயும்; ஏனலில்,
    குருவி பாயும்; ஓடி, மந்தி கோடு பாயும் - மாடு எலாம். 7

  322. தேன் இழுக்கு சாரல் வாரி செல்லின், மீது செல்லும் நாள் -
    மீன் இழுக்கும்; அன்றி, வான வில் இழுக்கும்; வெண் மதிக்
    கூன் இழுக்கும்; மற்று உலாவு கோள் இழுக்கும்; என்பரால் -
    வான் இழுக்கும் ஏல வாச மன்றல் நாறு குன்றமே. 8

  323. வாலியின் இருப்பிடம் சார்ந்து, ஒருவர்க்கொருவர் ஆலோசித்தல்

  324. அன்னது ஆய குன்றின் ஆறு, சென்ற வீரர், ஐந்தொடு ஐந்து
    என்னல் ஆய யோசனைக்கும் உம்பர் ஏறி, இம்பரில்
    பொன்னின் நாடு இழிந்தது அன்ன, வாலி வாழ் பொருப்பு இடம்
    துன்னினார்கள்; செய்வது என்னை? என்று நின்று சொல்லுவார்: 9

  325. இராமன் தன் கருத்தை வெளியிடுதல்

  326. அவ் இடத்து, இராமன், நீ அழைத்து, வாலி ஆனது ஓர்
    வெவ் விடத்தின் வந்து போர் விளைக்கும் ஏல்வை, வேறு நின்று,
    எவ்விடத் துணிந்து அமைந்தது; என் கருத்து இது என்றனன்;
    தெவ் அடக்கும் வென்றியானும், நன்று இது என்று சிந்தியா, 10

  327. சுக்கிரீவன் ஆரவாரித்து, வாலியைப் போருக்கு அழைத்தல்

  328. வார்த்தை அன்னது ஆக, வான் இயங்கு தேரினான் மகன்,
    நீர்த் தரங்க வேலை அஞ்ச, நீல மேகம் நாணவே,
    வேர்த்து மண் உளோர் இரிந்து, விண் உளோர்கள் விம்ம, மேல்
    ஆர்த்த ஓசை, ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே. 11

  329. இடித்து, உரப்பி, வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென் என்று,
    அடித்தலங்கள் கொட்டி, வாய் மடித்து, அடுத்து அலங்கு தோள்
    புடைத்து நின்று, உளைத்த பூசல் புக்கது என்ப - மிக்கு இடம்
    துடிப்ப, அங்கு, உறங்கு வாலி திண் செவித் துளைக்கணே. 12

  330. முழக்கம் கேட்டு, வாலி போருக்கு எழுதல்

  331. மால் பெருங் கட கரி முழக்கம் வாள் அரி
    ஏற்பது செவித்தலத்து என்ன, ஓங்கிய
    ஆர்ப்பு ஒலி கேட்டனன் - அமளிமேல் ஒரு
    பாற்கடல் கிடந்ததே அனைய பான்மையான். 13

  332. உருத்தனன் பொர எதிர்ந்து இளவல் உற்றமை,
    வரைத் தடந் தோளினான், மனத்தின் எண்ணினான்;
    சிரித்தனன்; அவ் ஒலி, திசையின் அப் புறத்து
    இரித்தது, அவ் உலகம் ஓர் எழொடு ஏழையும். 14

  333. எழுந்தனன், வல் விரைந்து, இறுதி ஊழியில்
    கொழுந் திரைக் கடல் கிளர்ந்தனைய கொள்கையான்;
    அழுந்தியது, அக் கிரி; அருகில் மால் வரை
    விழுந்தன, தோள் புடை விசித்த காற்றினே. 15

  334. போய்ப் பொடித்தன மயிர்ப் புறத்த, வெம் பொறி;
    காய்ப்பொடு உற்று எழு வட கனலும் கண் கெட,
    தீப் பொடித்தன, விழி; தேவர் நாட்டினும்
    மீப் பொடித்தன புகை, உயிர்ப்பு வீங்கவே. 16

  335. கைக் கொடு கைத்தலம் புடைப்ப, காவலின்
    திக் கயங்களும் மதச் செருக்குச் சிந்தின;
    உக்கன உரும் இனம்; உலைந்த உம்பரும்;
    நெக்கன, நெரிந்தன, நின்ற குன்றமே. 17

  336. வந்தனென்! வந்தனென்! என்ற வாசகம்
    இந்திரி முதல் திசை எட்டும் கேட்டன;
    சந்திரன் முதலிய தாரகைக் குழாம்
    சிந்தின, மணி முடிச் சிகரம் தீண்டவே. 18

  337. வீசின காற்றின் வேர் பறிந்து, வெற்பு இனம்
    ஆசையை உற்றன; அண்டப் பித்திகை
    பூசின, வெண் மயிர் பொடித்த வெம் பொறி;
    கூசினன் அந்தகன்; குலைந்தது உம்பரே. 19

  338. கடித்த வாய் எயிறு உகு கனல்கள் கார் விசும்பு
    இடித்த வாய் உகும் உரும் இனத்தின் சிந்தின;
    தடித்து வீழ்வன எனத் தகர்ந்து சிந்தின,
    வடித்த தோள் வலயத்தின் வயங்கு காசு அரோ. 20

  339. ஞாலமும், நால் திசைப் புனலும், நாகரும்,
    மூலமும், முற்றிட முடிவில் தீக்கும் அக்
    காலமும் ஒத்தனன்; கடலில் தான் கடை
    ஆலமும் ஒத்தனன், எவரும் அஞ்சவே. 21

  340. மனைவி தாரை தடுக்க, வாலி மறுத்துக் கூறுதல்

  341. ஆயிடை, தாரை என்று அமிழ்தின் தோன்றிய
    வேயிடைத் தோளினாள், இடை விலக்கினாள்;
    வாயிடைப் புகை வர, வாலி கண் வரும்
    தீயிடை, தன் நெடுங் கூந்தல் தீகின்றாள். 22

  342. விலக்கலை; விடு; விடு; விளிந்துளான் உரம்
    கலக்கி, அக் கடல் கடைந்து அமுது கண்டென,
    உலக்க இன் உயிர் குடித்து, ஒல்லை மீள்குவல்,
    மலைக் குல மயில்! என, மடந்தை கூறுவாள்: 23

  343. கொற்றவ! நின் பெருங் குவவுத் தோள் வலிக்கு
    இற்றனன், முன்னை நாள், ஈடு உண்டு ஏகினான்;
    பெற்றிலன் பெருந் திறல்; பெயர்த்தும் போர் செயற்கு
    உற்றது, நெடுந் துணை உடைமையால் என்றாள். 24

  344. மூன்று என முற்றிய முடிவு இல் பேர் உலகு
    ஏன்று, உடன் உற்றன, எனக்கு நேர் எனத்
    தோன்றினும், தோற்று, அவை தொலையும் என்றலின்
    சான்று உள; அன்னவை - தையல்! - கேட்டியால்: 25

  345. மந்தர நெடு வரை மத்து, வாசுகி
    அந்தம் இல் கடை கயிறு, அடை கல் ஆழியான்,
    சந்திரன் தூண், எதிர் தருக்கின் வாங்குநர்,
    இந்திரன் முதலிய அமரர், ஏனையோர்; 26

  346. பெயர்வுற வலிக்கவும், மிடுக்கு இல் பெற்றியார்
    அயர்வுறல் உற்றதை நோக்கி, யான், அது
    தயிர் எனக் கடைந்து, அவர்க்கு அமுதம் தந்தது,
    மயில் இயல் குயில்மொழி! மறக்கல் ஆவதோ? 27

  347. ஆற்றல் இல் அமரரும், அவுணர் யாவரும்,
    தோற்றனர்; எனையவர் சொல்லற்பாலரோ?
    கூற்றும், என் பெயர் சொலக் குலையும்; ஆர் இனி
    மாற்றலர்க்கு ஆகி வந்து, எதிரும் மாண்பினார்? 28

  348. பேதையர் எதிர்குவர் எனினும், பெற்றுடை
    ஊதிய வரங்களும், உரமும், உள்ளதில்
    பாதியும், என்னதால்; பகைப்பது எங்ஙனம்?
    நீ, துயர் ஒழிக! என, நின்று கூறினான். 29

  349. சுக்கிரீவனுக்கு இராமன் துணை வந்துள்ளான் என்று தாரை சொல்ல,
    வாலி இராமனது நற்பண்புகளை கூறி, மறுத்துரைத்தல்

  350. அன்னது கேட்டவள், அரச! ஆயவற்கு
    இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன்,
    உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான் என,
    துன்னிய அன்பினர் சொல்லினார் என்றாள். 30

  351. உழைத்த வல் இரு வினைக்கு ஊறு காண்கிலாது
    அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம்
    இழைத்தவற்கு, இயல்பு அல இயம்பி என் செய்தாய்?
    பிழைத்தனை; பாவி! உன் பெண்மையால் என்றான். 31

  352. இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது
    பெருமையோ? இங்கு இதில் பெறுவது என்கொலோ?
    அருமையின் நின்று, உயிர் அளிக்கும் ஆறுடைத்
    தருமமே தவிர்க்குமோ தன்னைத் தான் அரோ? 32

  353. ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி, ஈன்றவள்
    மாற்றவள் ஏவ, மற்று, அவள்தன் மைந்தனுக்கு
    ஆற்ற அரும் உவகையால் அளித்த ஐயனைப்
    போற்றலை; இன்னன புகறல்பாலையோ? 33

  354. நின்ற பேர் உலகு எலாம் நெருக்கி நேரினும்,
    வென்றி வெஞ் சிலை அலால், பிறிது வேண்டுமோ?
    தன் துணை ஒருவரும், தன்னில் வேறு இலான்,
    புன் தொழில் குரங்கொடு புணரும் நட்பனோ? 34

  355. தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர்
    இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்,
    எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரினில்
    அம்பு இடை தொடுக்குமோ, அருளின் ஆழியான்? 35

  356. இருத்தி, நீ, இறை, இவண்; இமைப்பு இல் காலையில்,
    உருத்தவன் உயிர் குடித்து, உடன் வந்தாரையும்
    கருத்து அழித்து, எய்துவென்; கலங்கல் என்றனன்;
    விரைக் குழல், பின், உரை விளம்ப அஞ்சினாள். 36

  357. போரை விரும்பி வாலி குன்றின் புறத்து வருதல்

  358. ஒல்லை, செரு வேட்டு, உயர் வன் புய ஓங்கல் உம்பர்
    எல்லைக்கும் அப்பால் இவர்கின்ற இரண்டினோடும்,
    மல்லல் கிரியின் தலை வந்தனன், வாலி - கீழ்பால்,
    தொல்லைக் கிரியின் தலை தோற்றிய ஞாயிறு என்ன. 37

  359. நின்றான், எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்ச,
    தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி,
    குன்றூடு வந்து உற்றனன் - கோள் அவுணன் குறித்த
    வன் தூணிடைத் தோன்றிட மா நரசிங்கம் என்ன. 38

  360. ஆர்க்கின்ற பின்னோன் தனை நோக்கினன்; தானும் ஆர்த்தான்;
    வேர்க்கின்ற வானத்து உரும் ஏறு வெறித்து வீழப்
    போர்க்கின்றது, எல்லா உலகும் பொதிர்வுற்ற பூசல் -
    கார்க் குன்றம் அன்னான் நிலம் தாவிய கால் இது என்ன. 39

  361. இருவரையும் கண்ட இராமன் வியந்து இளவலுக்குக் கூறுதல்

  362. அவ் வேலை, இராமனும், அன்புடைத் தம்பிக்கு, ஐய!
    செவ்வே செல நோக்குதி; தானவர் தேவர் நிற்க,
    எவ் வேலை, எம் மேகம், எக் காலொடு எக் கால வெந் தீ,
    வெவ் வேறு உலகத்து இவர் மேனியை மானும்? என்றான். 40

  363. சுக்கிரீவன் குறித்து இலக்குவன் ஐயுற்றுக் கூறுதல்

  364. வள்ளற்கு, இளையான் பகர்வான், இவன், தம்முன் வாழ்நாள்
    கொள்ள, கொடுங் கூற்றுவனைக் கொணர்ந்தான்; குரங்கின்
    எள்ளற்குறு போர் செய எண்ணினன் என்னும் இன்னல்
    உள்ளத்து ஊன்ற, உணர்வு உற்றிலென் ஒன்றும் என்றான். 41

  365. ஆற்றாது, பின்னும் பகர்வான், அறத்தாறு அழுங்கத்
    தேற்றாது செய்வார்களைத் தேறுதல் செவ்வியது அன்றால்;
    மாற்றான் எனத் தம்முனைக் கொல்லிய வந்து நின்றான்,
    வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம் என்? வீர! என்றான். 42

  366. இளவலுக்கு இராமன் ஏற்ற மறுமொழி பகர்தல்

  367. அத்தா! இது கேள் என, ஆரியன் கூறுவான், இப்
    பித்து ஆய விலங்கின் ஒழுக்கினைப் பேசல் ஆமோ?
    எத் தாயர் வயிற்றினும், பின் பிறந்தார்கள் எல்லாம்
    ஒத்தால், பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ ? 43

  368. வில் தாங்கு வெற்பு அன்ன விலங்கு எழில் தோள! மெய்ம்மை
    உற்றார் சிலர்; அல்லவரே பலர் என்பது உண்மை.
    பெற்றாருழைப் பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால்,
    அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர், ஆர்கொல்? என்றான். 44

  369. வாலி-சுக்கிரீவன் போர்

  370. வீரத் திறலோர், இவை இன்ன விளம்பும் வேலை,
    தேரில் திரிவான் மகன், இந்திரன் செம்மல், என்று இப்
    பாரில் திரியும் பனி மால் வரை அன்ன பண்பார்,
    மூரித் திசை யானை இரண்டு என, முட்டினாரே. 45

  371. குன்றோடு குன்று ஒத்தனர்; கோள் அரிக் கொற்ற வல் ஏறு
    ஒன்றோடு சென்று, ஒன்று எதிர் உற்றனவேயும் ஒத்தார்;
    நின்றார்; திரிந்தார் நெடுஞ் சாரி; நிலம் திரிந்த,
    வன் தோள் குயவன் திரி மட்கலத்து ஆழி என்ன. 46

  372. தோளோடு தோள் தேய்த்தலின் தொல் நிலம் தாங்கல் ஆற்றாத்
    தாளோடு தாள் தேய்த்தலின், தந்த தழல் பிறங்கல்,
    வாளோடு மின் ஓடுவபோல், நெடு வானின் ஓடும் -
    கோளோடு கோள் உற்றென ஒத்து அடர்ந்தார், கொதித்தார். 47

  373. தம் தோள் வலி மிக்கவர், தாம் ஒரு தாய் வயிற்றின்
    வந்தோர், மட மங்கை பொருட்டு மலைக்கலுற்றார்;
    சிந்து ஓடு அரி ஒண் கண் திலோத்தமை காதல் செற்ற
    சுந்தோபசுந்தப் பெயர்த் தொல்லையினோரும் ஒத்தார். 48

  374. கடல் ஒன்றினொடு ஒன்று மலைக்கவும், காவல் மேருத்
    திடல் ஒன்றினொடு ஒன்று அமர் செய்யவும், சீற்றம் என்பது
    உடல் கொண்டு இரண்டு ஆகி உடற்றவும், கண்டிலாதேம்,
    மிடல், இங்கு இவர் வெந் தொழிற்கு ஒப்புரை வேறு காணேம். 49

  375. ஊகங்களின் நாயகர் வெங் கண் உமிழ்ந்த தீயால்,
    மேகங்கள் எரிந்தன; வெற்பும் எரிந்த; திக்கின்
    நாகங்கள் நடுங்கின; நானிலமும் குலைந்த;
    மாகங்களை நண்ணிய விண்ணவர் போய் மறைந்தார். 50

  376. விண் மேலினரோ? நெடு வெற்பின் முகட்டினாரோ?
    மண் மேலினரோ? புற மாதிர வீதியாரோ?
    கண் மேலினரோ? என, யாவரும் காண் நின்றார்,
    புண்மேல் இரத்தம் பொடிப்ப, கடிப்பார், புடைப்பார். 51

  377. ஏழ் ஒத்து, உடன் ஆம் திசை எட்டொடு இரண்டும் முட்டும்,
    ஆழிக் கிளர் ஆர் கலிக்கு ஐம் மடங்கு ஆர்ப்பின் ஓசை;
    பாழித் தடந் தோளினும் மார்பினும் கைகள் பாய,
    ஊழிக் கிளர் கார் இடி ஒத்தது, குத்தும் ஓதை. 52

  378. வெவ் வாய் எயிற்றால் மிடல் வீரர் கடிப்ப, மீச் சென்று,
    அவ் வாய் எழு சோரி அது, ஆசைகள் தோறும் வீச,
    எவ் வாயும் எழுந்த கொழுஞ் சுடர் மீன்கள் யாவும்,
    செவ் வாயை நிகர்த்தன; செக்கரை ஒத்த, மேகம். 53

  379. வெந்த வல் இரும்பிடை நெடுங் கூடங்கள் வீழ்ப்ப,
    சிந்தி எங்கணும் சிதறுவபோல், பொறி தெறிப்ப,
    இந்திரன் மகன் புயங்களும், இரவி சேய் உரனும்,
    சந்த வல் நெடுந் தடக் கைகள் தாக்கலின் தகர்வ. 54

  380. உரத்தினால் மடுத்து உந்துவர்; பாதம் இட்டு உதைப்பர்;
    கரத்தினால் விசைத்து எற்றுவர்; கடிப்பர்; நின்று இடிப்பர்;
    மரத்தினால் அடித்து உரப்புவர்; பொருப்பு இனம் வாங்கிச்
    சிரத்தின் மேல் எறிந்து ஒறுக்குவர்; தெழிப்பர்; தீ விழிப்பர். 55

  381. எடுப்பர் பற்றி; உற்று ஒருவரை ஒருவர் விட்டு எறிவர்;
    கொடுப்பர், வந்து, உரம்; குத்துவர் கைத்தலம் குளிப்ப;
    கடுப்பினில் பெருங் கறங்கு எனச் சாரிகை பிறங்கத்
    தடுப்பர்; பின்றுவர்; ஒன்றுவர்; தழுவுவர்; விழுவர். 56

  382. வாலினால் உரம் வரிந்தனர், நெரிந்து உக வலிப்பர்;
    காலினால் நெடுங் கால் பிணித்து உடற்றுவர்; கழல்வர்;
    வேலினால் அற எறிந்தென, விறல் வலி உகிரால்,
    தோலினால் உடன் நெடு வரை முழை எனத் தொளைப்பர். 57

  383. மண்ணகத்தன மலைகளும், மரங்களும், மற்றும்
    கண்ணகத்தினில் தோன்றிய யாவையும், கையால்,
    எண் நகப் பறித்து எறிதலின், எற்றலின், இற்ற,
    விண்ணகத்தினை மறைத்தன; மறி கடல் வீழ்ந்த. 58

  384. வெருவிச் சாய்ந்தனர், விண்ணவர்; வேறு என்னை விளம்பல்?
    ஒருவர்க்கு ஆண்டு அமர், ஒருவரும் தோற்றிலர்; உடன்று
    செருவில் தேய்த்தலின், செங் கனல் வெண் மயிர்ச் செல்ல,
    முரி புல் கானிடை எரி பரந்தன என முனைவார். 59

  385. அன்ன தன்மையர், ஆற்றலின் அமர் புரி பொழுதின்,
    வல் நெடுந் தடந் திரள் புயத்து அடு திறல் வாலி,
    சொன்ன தம்பியை, தும்பியை அரி தொலைத்தென்ன,
    கொல் நகங்களின், கரங்களின், குலைந்து, உக மலைந்தான். 60

  386. வருத்தத்துடன் சுக்கிரீவன் இராமனை அடைய, அவன், கொடிப் பூ அணிந்து செல்க எனக் கூறல்

  387. மலைந்தபோது இனைந்து, இரவி சேய், ஐயன்மாடு அணுகி,
    உலைந்த சிந்தையோடு உணங்கினன், வணங்கிட, உள்ளம்
    குலைந்திடேல்; உமை வேற்றுமை தெரிந்திலம்; கொடிப் பூ
    மிலைந்து செல்க என விடுத்தனன்; எதிர்த்தனன் மீட்டும். 61

  388. தயங்கு தாரகை நிரை தொடுத்து அணிந்தென, போல
    வயங்கு சென்னியன், வயப் புலி வான வல் ஏற்றொடு
    உயங்கும் ஆர்ப்பினன், ஒல்லை வந்து, அடு திறல் வாலி
    பயம் கொளப் புடைத்து, எற்றினன்; குத்தினன், பலகால். 62

  389. அயிர்த்த சிந்தையன், அந்தகன் குலைகுலைந்து அஞ்ச,
    செயிர்த்து நோக்கினன்; சினத்தொடு சிறு நகை செய்யா,
    வயிர்த்த கையினும், காலினும், கதிர்மகன் மயங்க,
    உயிர்த் தலம்தொறும், புடைத்தனன், அடித்தனன், உதைத்தான். 63

  390. கக்கினான் உயிர், உயிர்ப்பொடும்; செவிகளின், கண்ணின்,
    உக்கது, ஆங்கு, எரிப் படலையோடு உதிரத்தின் ஓதம்;
    திக்கு நோக்கினன், செங் கதிரோன் மகன்; செருக்கிப்
    புக்கு, மீக் கொடு நெருக்கினன், இந்திரன் புதல்வன். 64

  391. சுக்கிரீவனைப் வாலி மேலே தூக்கலும், வாலி மேல் இராமன் அம்பு எய்தலும்

  392. எடுத்துப் பாரிடை எற்றுவென், பற்றி என்ரு, இளவல்
    கடித்தலத்தினும், கழுத்தினும், தன் இரு கரங்கள்
    மடுத்து, மீக் கொண்ட வாலிமேல், கோல் ஒன்று வாங்கி,
    தொடுத்து, நாணொடு தோள் உறுத்து, இராகவன் துரந்தான். 65

  393. கார் உண் சுவைக் கதலியின் கனியினைக் கழியச்
    சேரும் ஊசியின் சென்றது - நின்றது என், செப்ப?-
    நீரும், நீர் தரு நெருப்பும், வன் காற்றும், கீழ் நிவந்த
    பாரும், சார் வலி படைத்தவன் உரத்தை அப் பகழி. 66

  394. வாலி மண்ணில் சாய்தல்

  395. அலங்கு தோள் வலி அழிந்த அத் தம்பியை அருளான்,
    வலம் கொள் பாரிடை எற்றுவான் உற்ற போர் வாலி,
    கலங்கி, வல் விசைக் கால் கிளர்ந்து எறிவுற, கடைக்கால்
    விலங்கல் மேருவும் வேர் பறிந்தாலென, வீழ்ந்தான். 67

  396. சுக்கிரீவனை விடுத்து, அம்பினை வாலி இறுகப் பற்றுதல்

  397. சையம் வேரொடும் உரும் உறச் சாய்ந்தென, சாய்ந்து,
    வையம் மீதிடைக் கிடந்த போர் அடு திறல் வாலி,
    வெய்யவன் தரு மதலையை மிடல் கொடு கவரும்
    கை நெகிழ்ந்தனன்; நெகிழ்ந்திலன், கடுங் கணை கவர்தல். 68

  398. வாலி அம்பினை வெளியில் எடுக்க முயல்தல்

  399. எழுந்து, வான் முகடு இடித்து அகப்படுப்பல் என்று, இவரும்;
    உழுந்து பேரு முன், திசை திரிந்து ஒறுப்பல் என்று, உதைக்கும்;
    விழுந்து, பாரினை வேரொடும் பறிப்பல் என்று, உறுக்கும்;
    அழுந்தும் இச் சரம் எய்தவன் ஆர்கொல்? என்று, அயிர்க்கும். 69

  400. எற்றும் கையினை நிலத்தொடும்; எரிப் பொறி பறப்ப,
    சுற்றும் நோக்குறும்; சுடு சரம்தனைத் துணைக் கரத்தால்
    பற்றி, வாலினும் காலினும் வலி உற, பறிப்பான்
    உற்று, உறாமையின் உலைவுறும்; மலை என உருளும். 70

  401. தேவரோ? என அயிர்க்கும்; அத் தேவர், இச் செயலுக்கு
    ஆவரோ? அவர்க்கு ஆற்றல் உண்டோ ? எனும்; அயலோர்
    யாவரோ? என நகைசெயும்; ஒருவனே, இறைவர்
    மூவரோடும் ஒப்பான், செயல் ஆம் என மொழியும். 71

  402. நேமிதான் கொலோ? நீலகண்டன் நெடுஞ் சூலம்,
    ஆம் இது, ஆம் கொலோ? அன்று எனின், குன்று உருவு அயிலும்,
    நாம இந்திரன் வச்சிரப் படையும், என் நடுவண்
    போம் எனும் துணை போதுமோ? யாது? எனப் புழுங்கும். 72

  403. வில்லினால் துரப்ப அரிது, இவ் வெஞ் சரம் என வியக்கும்;
    சொல்லினால் நெடு முனிவரோ தூண்டினார் என்னும்;
    பல்லினால் பறிப்புறும்; பல காலும் தன் உரத்தைக்
    கல்லி ஆர்ப்பொடும் பறிக்கும் அப் பகழியைக் கண்டான். 73

  404. சரம் எனும்படி தெரிந்தது; பல படச் சலித்து என்?
    உரம் எனும் பதம், உயிரொடும் உருவிய ஒன்றை,
    கரம் இரண்டினும், வாலினும், காலினும், கழற்றி,
    பரமன் அன்னவன் பெயர் அறிகுவென் என, பறிப்பான். 74

  405. வாலி மார்பினின்று அம்பைப் பறிக்க, இரத்த வெள்ளம் பெருகுதல்

  406. ஓங்கு அரும் பெருந் திறலினும், காலினும், உரத்தின்,
    வாங்கினான், மற்று அவ் வாளியை, ஆளிபோல் வாலி
    ஆங்கு நோக்கினர், அமரரும் அவுணரும் பிறரும்,
    வீங்கினார்கள் தோள்; - வீரரை யார் வியவாதார்? 75

  407. மோடு தெண் திரை முரிதரு கடல் என முழங்கி,
    ஈடு பேர் உலகு இறந்துளது ஆம் எனற்கு எளிதோ?
    காடு, மா நெடு விலங்கல்கள், கடந்தது; அக் கடலின் -
    ஊடு போதல் உற்றதனை ஒத்து உயர்ந்துளது உதிரம். 76

  408. உடன்பிறந்த பாசத்தால் சுக்கிரீவனும் வருந்தித் தரை மீது விழுதல்

  409. வாசத் தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி
    ஓசைச் சோரியை நோக்கினன்; உடன்பிறப்பு என்னும்
    பாசத்தால் பிணிப்புண்ட அத் தம்பியும், பசுங் கண்
    நேசத் தாரைகள் சொரிதர, நெடு நிலம் சேர்ந்தான். 77

  410. அம்பில் இராம நாமம் பொறித்திருத்தலை வாலி பார்த்தல்

  411. பறித்த வாளியை, பரு வலித் தடக் கையால் பற்றி,
    இறுப்பென் என்று கொண்டு எழுந்தனன், மேருவை இறுப்போன்;
    முறிப்பென் என்னினும், முறிவது அன்று ஆம் என மொழியா,
    பொறித்த நாமத்தை அறிகுவான் நோக்கினன், புகழோன். 78

  412. மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
    தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
    இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, இராமன் என்னும்
    செம்மை சேர் நாமம் தன்னை, கண்களின் தெரியக் கண்டான். 79

  413. அம்பு எய்தவன் இராமன் தான் என அறிந்து வாலி இகழ்ந்துரைத்தல்

  414. இல்லறம் துறந்த தம்பி, எம்மனோர்க்காகத் தங்கள்
    வில் அறம் துறந்த வீரன் தோன்றலால், வேத நல் நூல்
    சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும், தொல்லை
    நல் அறம் துறந்தது என்னா, நகை வர நாண் உட்கொண்டான். 80

  415. வெள்கிடும் மகுடம் சாய்க்கும்; வெடிபடச் சிரிக்கும்; மீட்டும்
    உள்கிடும்; இதுவும்தான் ஓர் ஓங்கு அறமோ? என்று உன்னும்,
    முள்கிடும் குழியில் புக்க மூரி வெங் களி நல் யானை
    தொள்கொடும் கிடந்தது என்ன, துயர் உழந்து அழிந்து சோர்வான். 81

  416. எதிரில் தோன்றிய இராமனை வாலி இகழ்ந்து பேசுதல்

  417. இறை திறம்பினனால்; என்னே, இழிந்துளோர் இயற்கை! என்னின்,
    முறை திறம்பினனால் என்று மொழிகின்ற முகத்தான் முன்னர்,
    மறை திறம்பாத வாய்மை மன்னர்க்கு மனுவில் சொல்லும்
    துறை திறம்பாமல் காக்கத் தோன்றினான், வந்து தோன்ற, 82

  418. கண்ணுற்றான் வாலி, நீலக் கார் முகில் கமலம் பூத்து,
    மண் உற்று, வரி வில் ஏந்தி, வருவதே போலும் மாலை;
    புண் உற்றது அனைய சோரி பொறியோடும் பொடிப்ப, நோக்கி,
    எண்ணுற்றாய்! என் செய்தாய்? என்று, ஏசுவான் இயம்பலுற்றான்: 83

  419. வாய்மையும், மரபும், காத்து, மன் உயிர் துறந்த வள்ளல்
    தூயவன், மைந்தனே! நீ, பரதன்முன் தோன்றினாயே!
    தீமைதான், பிறரைக் காத்து, தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ?
    தாய்மையும் அன்றி, நட்பும், தருமமும், தழுவி நின்றாய்! 84

  420. குலம் இது; கல்வி ஈது; கொற்றம் ஈது; உற்று நின்ற
    நலம் இது; புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ?
    வலம் இது; இவ் உலகம் தாங்கும் வண்மை ஈது; என்றால் - திண்மை
    அலமரச் செய்யலாமோ, அறிந்திருந்து அயர்ந்துளார் போல்? 85

  421. கோ இயல் தருமம், உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் -
    ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! - உடைமை அன்றோ?
    ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த
    தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை! 86

  422. அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல், அதற்கு வேறு ஓர்
    குரக்கு இனத்து அரசைக் கொல்ல, மனு நெறி கூறிற்று உண்டோ?
    இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால் எப் பிழை கண்டாய்? அப்பா!
    பரக்கழி இது நீ பூண்டால், புகழை யார் பரிக்கற்பாலார்? 87

  423. ஒலி கடல் உலகம் தன்னில் ஊர் தரு குரங்கின் மாடே,
    கலியது காலம் வந்து கலந்ததோ? - கருணை வள்ளால்!-
    மெலியவர் பாலதேயோ, ஒழுக்கமும் விழுப்பம் தானும்?
    வலியவர் மெலிவு செய்தால், புகழ் அன்றி, வசையும் உண்டோ ? 88

  424. கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ! பெற்ற தாதை
    பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்குக் கொடுத்துப் போந்து,
    நாட்டு ஒரு கருமம் செய்தாய்; எம்பிக்கு, இவ் அரசை நல்கி,
    காட்டு ஒரு கருமம் செய்தாய்; கருமம் தான் இதன்மேல் உண்டோ ? 89

  425. அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது ஆண்மைத்
    துறை எனல் ஆயிற்று அன்றே? தொன்மையின் நல் நூற்கு எல்லாம்
    இறைவ! நீ, என்னைச் செய்தது ஈது எனில், இலங்கை வேந்தன்
    முறை அல செய்தான் என்று, முனிதியோ? - முனிவு இலாதாய்! 90

  426. இருவர் போர் எதிரும் காலை, இருவரும் நல் உற்றாரே;
    ஒருவர் மேல் கருணை தூண்டி, ஒருவர்மேல், ஒளித்து நின்று,
    வரி சிலை குழைய வாங்கி, வாய் அம்பு மருமத்து எய்தல்
    தருமமோ? பிறிது ஒன்று ஆமோ? தக்கிலது என்னும் பக்கம். 91

  427. வீரம் அன்று; விதி அன்று; மெய்ம்மையின்
    வாரம் அன்று; நின் மண்ணினுக்கு என் உடல்
    பாரம் அன்று; பகை அன்று; பண்பு அழிந்து
    ஈரம் இன்றி, இது என் செய்தவாறு அரோ? 92

  428. இருமை நோக்கி நின்று, யாவர்க்கும் ஒக்கின்ற
    அருமை ஆற்றல் அன்றோ, அறம் காக்கின்ற
    பெருமை என்பது? இது என்? பிழை பேணல் விட்டு,
    ஒருமை நோக்கி ஒருவற்கு உதவலோ? 93

  429. செயலைச் செற்ற பகை தெறுவான் தெரிந்து,
    அயலைப் பற்றித் துணை அமைந்தாய் எனின்,
    புயலைப் பற்றும் அப் பொங்கு அரி போக்கி, ஓர்
    முயலைப் பற்றுவது என்ன முயற்சியோ? 94

  430. கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
    ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என,
    சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு,
    ஆரியன் பிறந்து ஆக்கினையாம் அரோ! 95

  431. மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ வந்து
    உற்ற என்னை, ஒளித்து, உயிர் உண்ட நீ,
    இற்றையில், பிறர்க்கு, இகல் ஏறு என,
    நிற்றிபோலும், கிடந்த நிலத்து அரோ! 96

  432. நூல் இயற்கையும், நும் குலத்து உந்தையர்
    போல் இயற்கையும், சீலமும், போற்றலை;
    வாலியைப் படுத்தாய் அலை; மன் அற
    வேலியைப் படுத்தாய் - விறல் வீரனே! 97

  433. தாரம் மற்று ஒருவன் கொள, தன் கையில்
    பார வெஞ் சிலை வீரம் பழுதுற,
    நேரும் அன்று, மறைந்து, நிராயுதன்
    மார்பின் எய்யவோ, வில் இகல் வல்லதே? 98

  434. என்று, தானும் எயிறு பொடிபடத்
    தின்று, காந்தி விழிவழித் தீ உக,
    அன்று அவ் வாலி, அனையன விளம்பினான்.
    நின்ற வீரன், இனைய நிகழ்த்தினான்: 99

  435. இராமன் தன் செய்கை முறை என மொழிதல்

  436. பிலம் புக்காய் நெடு நாள் பெயராய் எனப்
    புலம்புற்று, உன் வழிப் போதலுற்றான் தனை,
    குலம் புக்கு ஆன்ற முதியர், குறிக் கொள் நீ -
    அலம் பொன் தாரவனே! - அரசு என்றலும், 100

  437. வானம் ஆள என் தம்முனை வைத்தவன்
    தானும் மாள, கிளையும் இறத் தடிந்து,
    யானும் மாள்வென்; இருந்து அரசு ஆள்கிலென்;
    ஊனம் ஆன உரை பகர்ந்தீர் என, 101

  438. பற்றி, ஆன்ற படைத் தலை வீரரும்,
    முற்று உணர்ந்த முதியரும், முன்பரும்,
    எற்றும் நும் அரசு எய்துவையாம் என,
    கொற்ற நன் முடி கொண்டது, இக் கோது இலான். 102

  439. வந்த உன்னை வணங்கி மகிழ்ந்தனன்;
    எந்தை! என்கண், இனத்தவர் ஆற்றலின்,
    தந்தது உன் அரசு என்று, தருக்கு இலான்
    முந்தை உற்றது சொல்ல, முனிந்து நீ, 103

  440. கொல்லல் உற்றனை, உம்பியை; கோது அவற்கு
    இல்லை என்பது உணர்ந்தும், இரங்கலை;
    அல்லல் செய்யல்; உனக்கு அபயம்; பிழை
    புல்லல் என்னவும், புல்லலை, பொங்கினாய். 104

  441. ஊற்றம் உற்று உடையான், உனக்கு ஆர் அமர்
    தோற்றும் என்று, தொழுது உயர் கையனை,
    கூற்றம் உண்ணக் கொடுப்பென் என்று எண்ணினாய்;
    நால் திசைக்கும் புறத்தையும் நண்ணினான். 105

  442. அன்ன தன்மை அறிந்து, அருளலை;
    பின்னவன் இவன் என்பதும் பேணலை;
    வன்னிதான் இடு சாப வரம்புடைப்
    பொன் மலைக்கு அவன் நண்ணலின், போகலை; 106

  443. ஈரம் ஆவதும், இற் பிறப்பு ஆவதும்,
    வீரம் ஆவதும், கல்வியின் மெய்ந் நெறி,
    வாரம் ஆவதும், மற்று ஒருவன் புணர்
    தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கு அதோ? 107

  444. மறம் திறம்பல், வலியம் எனா, மனம்
    புறம் திறம்ப எளியவர்ப் பொங்குதல்;
    அறம் திறம்பல், அருங் கடி மங்கையர்
    திறம் திறம்பல்; - தெளிவு உடையோர்க்கு எலாம். 108

  445. தருமம் இன்னது எனும் தகைத் தன்மையும்,
    இருமையும் தெரிந்து, எண்ணலை; எண்ணினால்,
    அருமை உம்பிதன் ஆர் உயிர்த் தேவியை,
    பெருமை நீங்கினை, எய்தப் பெறுதியோ? 109

  446. ஆதலானும், அவன் எனக்கு ஆர் உயிர்க்
    காதலான் எனலானும், நிற் கட்டனென்;
    ஏதிலாரும், எளியர் என்றால், அவர்,
    தீது தீர்ப்பது என் சிந்தைக் கருத்து அரோ. 110

  447. வாலியின் மறுமொழி

  448. பிழைத்த தன்மை இது எனப் பேர் எழில்
    தழைத்த வீரன் உரைசெய, தக்கிலாது
    இழைத்த வாலி, இயல்பு அல, இத் துணை
    விழைத் திறம், தொழில் என்ன விளம்புவான்: 111

  449. ஐய! நுங்கள் அருங் குலக் கற்பின், அப்
    பொய் இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சிபோல்
    செய்திலன், எமைத் தே மலர் மேலவன்;
    எய்தின் எய்தியது ஆக, இயற்றினான். 112

  450. மணமும் இல்லை, மறை நெறி வந்தன;
    குணமும் இல்லை, குல முதற்கு ஒத்தன;-
    உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கு அலால்-
    நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய்! 113

  451. பெற்றி மற்று இது; பெற்றது ஓர் பெற்றியின்
    குற்றம் உற்றிலன்; நீ, அது கோடியால்-
    வெற்றி உற்றது ஒர் வெற்றியினாய்! எனச்
    சொற்ற சொல் துறைக்கு உற்றது, சொல்லுவான்: 114

  452. வாலியின் கூற்றை இராமன் மறுத்தல்

  453. நலம் கொள் தேவரின் தோன்றி, நவை அறக்
    கலங்கலா அற நல் நெறி காண்டலின்,
    விலங்கு அலாமை விளங்கியது; ஆதலால்,
    அலங்கலார்க்கு, ஈது அடுப்பது அன்று ஆம் அரோ. 115

  454. பொறியின் யாக்கையதோ? புலன் நோக்கிய
    அறிவின் மேலது அன்றோ, அறத்தாறுதான்?
    நெறியும் நீர்மையும் நேரிது உணர்ந்த நீ
    பெறுதியோ, பிழை உற்றுறு பெற்றிதான்? 116

  455. மாடு பற்றி இடங்கர் வலித்திட,
    கோடு பற்றிய கொற்றவற் கூயது ஓர்
    பாடு பெற்ற உணர்வின் பயத்தினால்,
    வீடு பெற்ற விலங்கும் விலங்கு அதோ? 117

  456. சிந்தை, நல் அறத்தின் வழிச் சேறலால்,
    பைந் தொடித் திருவின் பரிவு ஆற்றுவான்,
    வெந் தொழில் துறை வீடு பெற்று எய்திய
    எந்தையும், எருவைக்கு அரசு அல்லனோ? 118

  457. நன்று, தீது, என்று இயல் தெரி நல் அறிவு
    இன்றி வாழ்வது அன்றோ, விலங்கின் இயல்?
    நின்ற நல் நெறி, நீ அறியா நெறி
    ஒன்றும் இன்மை, உன் வாய்மை உணர்த்துமால். 119

  458. தக்க இன்ன, தகாதன இன்ன, என்று
    ஒக்க உன்னலர் ஆயின், உயர்ந்துள
    மக்களும், விலங்கே; மனுவின் நெறி
    புக்கவேல், அவ் விலங்கும் புத்தேளிரே. 120

  459. காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான்-
    பாலின் ஆற்றிய பத்தி பயத்தலால்,
    மாலினால் தரு வன் பெரும் பூதங்கள்
    நாலின் ஆற்றலும் ஆற்றுழி நண்ணினாய். 121

  460. மேவ அருந் தருமத் துறை மேவினார்,
    ஏவரும், பவத்தால் இழிந்தோர்களும்;
    தா அருந் தவரும், பல தன்மை சால்
    தேவரும், உளர், தீமை திருத்தினார். 122

  461. இனையது ஆதலின், எக் குலத்து யாவர்க்கும்,
    வினையினால் வரும், மேன்மையும் கீழ்மையும்;
    அனைய தன்மை அறிந்தும், அழித்தனை,
    மனையின் மாட்சி என்றான், மனு நீதியான். 123

  462. மறைந்து நின்று எய்வது முறையோ? என வாலி வினவ, இலக்குவன் விடை பகர்தல்

  463. அவ் உரை அமையக் கேட்ட அரி குலத்து அரசும், மாண்ட
    செவ்வியோய்! அனையது ஆக! செருக் களத்து உருத்து எய்யாதே,
    வெவ்விய புளிஞர் என்ன, விலங்கியே மறைந்து, வில்லால்
    எவ்வியது என்னை? என்றான்; இலக்குவன் இயம்பலுற்றான்: 124

  464. முன்பு, நின் தம்பி வந்து சரண் புக, முறை இலோயைத்
    தென் புலத்து உய்ப்பென் என்று செப்பினன்; செருவில், நீயும்,
    அன்பினை உயிருக்கு ஆகி, அடைக்கலம் யானும் என்றி
    என்பது கருதி, அண்ணல், மறைந்து நின்று எய்தது என்றான். 125

  465. இலக்குவன் உரைகேட்ட வாலியின் மன மாற்றம்

  466. கவி குலத்து அரசு, அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான்;
    அவியுறு மனத்தன் ஆகி, அறத் திறன் அழியச் செய்யான்
    புவியிடை அண்ணல் என்பது எண்ணினில் பொருந்த, முன்னே
    செவியுறு கேள்விச் செல்வன் சென்னியின் இறைஞ்சி, சொன்னான்: 126

  467. தாய் என உயிர்க்கு நல்கி, தருமமும், தகவும், சால்பும்,
    நீ என நின்ற நம்பி! நெறியினின் நோக்கும் நேர்மை
    நாய் என நின்ற எம்பால், நவை அற உணரலாமே?
    தீயன பொறுத்தி என்றான் - சிறியன சிந்தியாதான். 127

  468. இரந்தனன் பின்னும், எந்தை! யாவதும் எண்ணல் தேற்றாக்
    குரங்கு எனக் கருதி, நாயேன் கூறிய மனத்துக் கொள்ளேல்;
    அரந்தை வெம் பிறவி நோய்க்கும் அரு மருந்து அனைய ஐயா!
    வரம் தரும் வள்ளால்! ஒன்று கேள்! என மறித்தும் சொல்வான்: 128

  469. இராமனைத் துதித்து, வாலி ஓர் வரம் வேண்டுதல்

  470. ஏவு கூர் வாளியால் எய்து, நாய் அடியனேன்
    ஆவி போம் வேலைவாய், அறிவு தந்து அருளினாய்;
    மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ!
    பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ! 129

  471. புரம் எலாம் எரி செய்தோன் முதலினோர் பொரு இலா
    வரம் எலாம் உருவி, என் வசை இலா வலிமை சால்
    உரம் எலாம் உருவி, என் உயிர் எலாம் நுகரும் நின்
    சரம் அலால், பிறிது வேறு உளது அரோ, தருமமே? 130

  472. யாவரும் எவையும் ஆய், இருதுவும் பயனும் ஆய்,
    பூவும் நல் வெறியும் ஒத்து; ஒருவ அரும் பொதுமையாய்
    ஆவ நீ ஆவது என்று அறிவினார் அருளினார்;
    தா அரும் பதம் எனக்கு அருமையோ? தனிமையோய்! 131

  473. உண்டு எனும் தருமமே உருவமா உடைய நிற்
    கண்டு கொண்டேன்; இனிக் காண என் கடவெனோ?
    பண்டொடு இன்று அளவுமே என் பெரும் பழவினைத்
    தண்டமே; அடியனேற்கு உறு பதம் தருவதே. 132

  474. மற்று இனி உதவி உண்டோ ? - வானினும் உயர்ந்த மானக்
    கொற்றவ! - நின்னை, என்னைக் கொல்லிய கொணர்ந்து, தொல்லைச்
    சிற்றினக் குரங்கினோடும் தெரிவு உறச் செய்த செய்கை,
    வெற்று அரசு எய்தி, எம்பி, வீட்டு அரசு எனக்கு விட்டான். 133

  475. ஓவிய உருவ! நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்;
    பூ இயல் நறவம் மாந்தி, புந்தி வேறு உற்ற போழ்தில்,
    தீவினை இயற்றமேனும், எம்பிமேல் சீறி, என்மேல்
    ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான். 134

  476. இன்னம் ஒன்று இரப்பது உண்டால்; எம்பியை, உம்பிமார்கள்
    தன் முனைக் கொல்வித்தான் என்று இகழ்வரேல், தடுத்தி, தக்கோய்!
    முன்முனே மொழிந்தாய் அன்றே, இவன் குறை முடிப்பது? ஐயா!
    பின் இவன் வினையின் செய்கை அதனையும் பிழைக்கல் ஆமோ? 135

  477. அனுமனின் ஆற்றலைக் குறித்து வாலி இராமனுக்குக் கூறுதல்

  478. மற்று இலேன் எனினும், மாய அரக்கனை வாலின் பற்றி,
    கொற்றவ! நின்கண் தந்து, குரக்கு இயல் தொழிலும் காட்டப்
    பெற்றிலென்; கடந்த சொல்லின், பயன் இலை; பிறிது ஒன்றேனும்,
    உற்றது செய்க! என்றாலும், உரியன் இவ் அனுமன் என்றான். 136

  479. அனுமன் என்பவனை - ஆழி ஐய! - நின் செய்ய செங் கைத்
    தனு என நினைதி; மற்று, என் தம்பி நின் தம்பி ஆக
    நினைதி; ஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலை; நீ, ஈண்டு, அவ்
    வனிதையை நாடிக் கோடி - வானினும் உயர்ந்த தோளாய்! 137

  480. சுக்கிரீவனுக்கு வாலி உரைத்த உறுதி மொழிகள்

  481. என்று, அவற்கு இயம்பி, பின்னர், இருந்தனன் இளவல்தன்னை
    வன் துணைத் தடக் கை நீட்டி வாங்கினன் தழுவி, மைந்த!
    ஒன்று உனக்கு உரைப்பது உண்டால்; உறுதி அஃது உணர்ந்து கோடி;
    குன்றினும் உயர்ந்த தோளாய்! வருந்தலை! என்று கூறும்: 138

  482. மறைகளும், முனிவர் யாரும், மலர்மிசை அயனும், மற்றைத்
    துறைகளின் முடிவும், சொல்லும் துணி பொருள், திணி வில் தூக்கி,
    அறை கழல் இராமன் ஆகி, அற நெறி நிறுத்த வந்தது;
    இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி; எண்ணம் மிக்கோய்! 139

  483. நிற்கின்ற செல்வம் வேண்டி நெறி நின்ற பொருள்கள் எல்லாம்
    கற்கின்றது, இவன் தன் நாமம்; கருதுவது இவனைக் கண்டாய்;
    பொன் குன்றம் அனைய தோளாய்! பொது நின்ற தலைமை நோக்கின்,
    எற் கொன்ற வலியே சாலும்; இதற்கு ஒன்றும் ஏது வேண்டா. 140

  484. கைதவம் இயற்றி, யாண்டும் கழிப்ப அருங் கணக்கு இல் தீமை
    வைகலும் புரிந்துளாரும், வான் உயர் நிலையை, வள்ளல்
    எய்தவர் பெறுவர் என்றால், இணை அடி இறைஞ்சி, ஏவல்
    செய்தவர் பெறுவது, ஐயா! செப்பல் ஆம் சீர்மைத்து ஆமோ? 141

  485. அருமை என், விதியினாரே உதவுவான் அமைந்தகாலை?
    இருமையும் எய்தினாய்; மற்று இனிச் செயற்பாலது எண்ணின்,
    திரு மறு மார்பன் ஏவல் சென்னியில் சேர்த்தி, சிந்தை
    ஒருமையின் நிறுவி, மும்மை உலகினும் உயர்தி அன்றே. 142

  486. மத இயல் குரக்குச் செய்கை மயர்வொடு மாற்றி, வள்ளல்
    உதவியை உன்னி, ஆவி உற்றிடத்து உதவுகிற்றி;
    பதவியை எவர்க்கும் நல்கும் பண்ணவன் பணித்த யாவும்
    சிதைவு இல செய்து, நொய்தின் தீர்வு அரும் பிறவி தீர்தி. 143

  487. அரசியல் - பாரம் பூரித்து அயர்ந்தனை இகழாது, ஐயன்
    மரை மலர்ப் பாதம் நீங்கா வாழுதி; மன்னர் என்பார்
    எரி எனற்கு உரியார் என்றே எண்ணுதி; எண்ணம் யாவும்
    புரிதி; சிற்றடிமை குற்றம் பொறுப்பர் என்று எண்ணவேண்டா. 144

  488. சுக்கிரீவனை இராமனிடம் அடைக்கலமாக்கி, வாலி வணங்குதல்

  489. என்ன, இத் தகைய ஆய உறுதிகள் யாவும், ஏங்கும்
    பின்னவற்கு இயம்பி, நின்ற பேர் எழிலானை நோக்கி,
    மன்னவர்க்கு அரசன் மைந்த! மற்று இவன் சுற்றத்தோடும்
    உன் அடைக்கலம் என்று உய்த்தே, உயர் கரம் உச்சி வைத்தான். 145

  490. அங்கதன் வருகை

  491. வைத்தபின், உரிமைத் தம்பி மா முகம் நோக்கி, வல்லை
    உய்த்தனை கொணர்தி, உன் தன் ஓங்கு அரு மகனை என்ன,
    அத் தலை அவனை ஏவி அழைத்தலின், அணைந்தான் என்ப,
    கைத்தலத்து உவரி நீரைக் கலக்கினான் பயந்த காளை. 146

  492. அங்கதன் தந்தையைக் கண்டு புலம்புதல்

  493. சுடருடை மதியம் என்னத் தோன்றினன்; தோன்றி, யாண்டும்
    இடருடை உள்ளத்தோரை எண்ணினும் உணர்ந்திலா தான்,
    மடலுடை நறு மென் சேக்கை மலை அன்றி, உதிர வாரிக்
    கடலிடைக் கிடந்த காதல் தாதையை, கண்ணின் கண்டான். 147

  494. கண்ட கண் கனலும் நீரும் குருதியும் கால, மாலை,
    குண்டலம் அலம்புகின்ற குவவுத் தோள் குரிசில், திங்கள்
    மண்டலம் உலகில் வந்து கிடந்தது; அம் மதியின் மீதா
    விண் தலம் தன்னின் நின்று ஓர் மீன் விழுந்தென்ன, வீழ்ந்தான். 148

  495. எந்தையே! எந்தையே! இவ் எழு திரை வளாகத்து, யார்க்கும்,
    சிந்தையால், செய்கையால், ஓர் தீவினை செய்திலாதாய்!
    நொந்தனை! அதுதான் நிற்க, நின் முகம் நோக்கிக் கூற்றம்
    வந்ததே அன்றோ, அஞ்சாது? ஆர் அதன் வலியைத் தீர்ப்பார்? 149

  496. தறை அடித்ததுபோல் தீராத் தகைய, இத் திசைகள் தாங்கும்
    கறையடிக்கு அழிவு செய்த கண்டகன் நெஞ்சம், உந்தன்
    நிறை அடிக் கோல வாலின் நிலைமையை நினையும் தோறும்,
    பறை அடிக்கின்ற அந்தப் பயம் அறப் பறந்தது அன்றே? 150

  497. குல வரை, நேமிக் குன்றம், என்று வான் உயர்ந்த கோட்டின்
    தலைகளும், நின் பொன் - தாளின் தழும்பு, இனி, தவிர்ந்த அன்றே?
    மலை கொளும் அரவும், மற்றும், மதியமும், பலவும் தாங்கி,
    அலை கடல் கடைய வேண்டின், ஆர் இனிக் கடைவர்? - ஐயா! 151

  498. பஞ்சின் மெல் அடியாள் பங்கன் பாதுகம் அலாது, யாதும்
    அஞ்சலித்து அறியாச் செங் கை ஆணையாய்! அமரர் யாரும்
    எஞ்சலர் இருந்தார் உன்னால்; இன் அமுது ஈந்த நீயோ,
    துஞ்சினை; வள்ளியோர்கள், நின்னின் யார் சொல்லற்பாலார்? 152

  499. அங்கதனைத் தழுவி, வாலி தேற்றுதல்

  500. ஆயன பலவும் பன்னி, அழுங்கினன் புழுங்கி, நோக்கி,
    தீ உறு மெழுகின் சிந்தை உருகினன் செங் கண் வாலி,
    நீ இனி அயர்வாய் அல்லை என்று தன் நெஞ்சில் புல்லி,
    நாயகன், இராமன், செய்த நல்வினைப் பயன் இது என்றான். 153

  501. தோன்றலும், இறத்தல்தானும், துகள் அறத் துணிந்து நோக்கின்,
    மூன்று உலகத்தினோர்க்கும், மூலத்தே முடிந்த அன்றே?
    யான் தவம் உடைமையால், இவ் இறுதி வந்து இசைந்தது; யார்க்கும்
    சான்று என நின்ற வீரன் தான் வந்து, வீடு தந்தான். 154

  502. பாலமை தவிர் நீ; என் சொல் பற்றுதிஆயின், தன்னின்
    மேல் ஒரு பொருளும் இல்லா மெய்ப்பொருள், வில்லும் தாங்கி,
    கால் தரை தோய நின்று, கட்புலக்கு உற்றது அம்மா!
    மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து என, வணங்கு, மைந்த! 155

  503. என் உயிர்க்கு இறுதி செய்தான் என்பதை இறையும் எண்ணாது,
    உன் உயிர்க்கு உறுதி செய்தி; இவற்கு அமர் உற்றது உண்டேல்,
    பொன் உயிர்த்து ஒளிரும் பூணாய்! பொது நின்று, தருமம் நோக்கி,
    மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி. 156

  504. வாலி அங்கதனை இராமனிடம் ஒப்புவித்தல்

  505. என்றனன், இனைய ஆய உறுதிகள் யாவும் சொல்லி,
    தன் துணைத் தடக் கை ஆரத் தனையனைத் தழுவி, சாலக்
    குன்றினும் உயர்ந்த திண் தோள் குரக்குஇனத்து அரசன், கொற்றப்
    பொன் திணி வயிரப் பைம் பூண் புரவலன் தன்னை நோக்கி, 157

  506. நெய் அடை நெடு வேல் தானை நீல் நிற நிருதர் என்னும்
    துய் அடை கனலி அன்ன தோளினன், தொழிலும் தூயன்;
    பொய் அடை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவ! மற்று உன்
    கையடை ஆகும் என்ன, இராமற்குக் காட்டும் காலை, 158

  507. இராமன் அங்கதனுக்கு உடைவாள் அளித்தலும், வாலி விண் ஏகுதலும்

  508. தன் அடி தாழ்தலோடும், தாமரைத் தடங் கணானும்,
    பொன் உடைவாளை நீட்டி, நீ இது பொறுத்தி என்றான்;
    என்னலும், உலகம் ஏழும் ஏத்தின; இறந்து, வாலி,
    அந் நிலை துறந்து, வானுக்கு அப் புறத்து உலகன் ஆனான். 159

  509. வாலியின் கை நெகிழ, இராம பாணம் கடலுள் தோய்ந்து, இராமனிடம் மீள்தல்

  510. கை அவண் நெகிழ்தலோடும், கடுங் கணை, கால வாலி
    வெய்ய மார்பு அகத்துள் தங்காது உருவி, மேக்கு உயர மீப் போய்,
    துய்ய நீர்க் கடலுள் தோய்ந்து, தூய் மலர் அமரர் சூட்ட,
    ஐயன் வெந் விடாத கொற்றத்து ஆவம் வந்து அடைந்தது அன்றே. 160

  511. மிகைப் பாடல்கள்

  512. பேர்வுற வலிக்கவும் மிடுக்கு இல் பெற்றியார்
    நோவுற உலந்தனர்; அதனை நோக்கி, யான்
    ஆர்கலிதனைக் கடைந்து, அமுது கொண்டனென்;
    போர் வலி அழிந்து போய், புறம் தந்து ஓடலென். 27-1

  513. ஆற்றலன் வாலிக்கு ஆகி, அருங் கதிர்ப் புதல்வன் மீண்டும்
    ஏற்றிய சிலை இராமன் இணை அடி இறைஞ்சி வீழ்ந்து,
    தோற்றுமுன், ஆவிகொண்டு, இத் தொல் உறை இருந்தேன்; உன்றன்
    மாற்றமேவலி ஆய்ச் சென்றேன்; உடல் வலி மாய்ந்தது என்றான். 61-1

  514. என்றலும், இராமன், நீங்கள் இருவரும் எதிர்ந்த போரில்,
    ஒன்றிடும் உடலினாலே உருத் தெரிவு அரியது ஆகி,
    கொன்றிடு பாணம் ஏவக் குறித்திலேன்; குறியால் செய்த
    மன்றலர் மாலை சூட்டி ஏவுதும், மறித்தும் என்றான். 61-2

  515. இராமன் அஃது உரைப்பக் கேட்டே, இரவி சேய் ஏழது ஆகும்
    தராதலத்து அதிர ஆர்த்து, தம் முனோன் முன்னர்ச் செல்ல,
    பராபரம் ஆய மேருப் பருப்பதம் தோற்றிற்று என்ன
    கராதலம் மடித்து வாலி கனல்-துகள் சிவந்து காட்ட, 61-3

  516. சிவந்த கண்ணுடை வாலியும், செங் கதிர்ச் சேயும்,
    வெவந்த போது, அவர் இருவரும் நோக்கின்ற வேலை,
    கவந்த தம்பியைக் கையினால் எடுத்து, அவன் உயிரை
    அவந்த மற்றவன் ஆர் உயிர் அந்தகற்கு அளிப்போன். 62-1

  517. வெற்றி வீரனது அடு கணை, அவன் மிடல் உரத்தூடு
    உற்றது; அப் புறத்து உறாத முன், உறு வலிக் கரத்தால்
    பற்றி, வாலினும் காலினும் பிணித்து, அகப்படுத்தான்;
    கொற்ற வெங் கொடு மறலியும், சிரதலம் குலைந்தான். 66-1

  518. ஒன்றாக நின்னோடு உறும் செற்றம் இல்லை;
    உலகுக்கு நான் செய்தது ஓர் குற்றம் இல்லை;
    வென்று ஆள்வதே என்னில், வேறு ஒன்றும் இல்லை;
    வீணே பிடித்து, என் தன் மேல் அம்பு விட்டாய்;
    தன் தாதை மாதா உடன் கூடி உண்ணத்
    தண்ணீர் சுமக்கும் தவத்தோனை எய்தான்,
    நின் தாதை; அன்றேயும், நீயும் பிடித்தாய்;
    நெறி பட்டவாறு இன்று நேர்பட்டது ஆமே! 89-1

  519. மா வலச் சூலியார் வாழ்த்துநர்க்கு உயர் வரம்
    ஓவல் அற்று உதவல், நின் ஒரு தனிப் பெயர் இயம்பு
    ஆவலிப்பு உடைமையால் ஆகும்; அப் பொருளை ஆம்
    தேவ! நிற் கண்ட எற்கு அரிது எனோ, தேரினே? 128-1

  520. இடைக்கலம் அல்லன்; ஏவியது ஓர் பணி
    கிடைத்த போது, அது செய்யும் இக் கேண்மையன்;
    படைக்கலக் கைப் பழம் பேர் அருளே! நினது
    அடைக்கலம்-அடியேன் பெற்ற ஐயனே. 158-1

  521. கிட்கிந்தா காண்டம்

    8. தாரை புலம்புறு படலம்



  522. தாரை செய்தி கேட்டு வந்து, வாலிமேல் வீழ்ந்து அழுதலும்

  523. வாலியும் ஏக, யார்க்கும் வரம்பு இலா உலகில் இன்பம்
    பாலியா, முன்னர் நின்ற பரிதி சேய் செங் கை பற்றி,
    ஆல் இலைப் பள்ளியானும், அங்கதனோடும், போனான்;
    வேல் விழித் தாரை கேட்டாள்; வந்து, அவன் மேனி வீழ்ந்தாள். 1

  524. குங்குமம் கொட்டி என்ன, குவி முலைக் குவட்டுக்கு ஒத்த
    பொங்கு வெங் குருதி போர்ப்ப, புரி குழல் சிவப்ப, பொன் - தோள்
    அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் - அகன்ற செக்கர்,
    வெங் கதிர் விசும்பில் தோன்றும் மின் எனத் திகழும் மெய்யாள். 2

  525. வேய்ங் குழல், விளரி நல் யாழ், வீணை, என்று இனைய நாண,
    ஏங்கினள்; இரங்கி விம்மி உருகினள்; இரு கை கூப்பித்
    தாங்கினள் தலையில்; சோர்ந்து, சரிந்து தாழ் குழல்கள் தள்ளி,
    ஓங்கிய குரலால் பன்னி, இனையன உரைக்கலுற்றாள்: 3

  526. தாரையின் புலம்பல்

  527. வரை சேர் தோளிடை நாளும் வைகுவேன்,
    கரை சேரா இடர் வேலை கண்டிலேன்;
    உரை சேர் ஆர் உயிரே! என் உள்ளமே!
    அரைசே! யான் இது காண அஞ்சினேன். 4

  528. துயராலே தொலையாத என்னையும்,
    பயிராயோ? பகையாத பண்பினாய்!
    செயிர் தீராய், விதி ஆன தெய்வமே!
    உயிர் போனால், உடலாரும் உய்வரோ? 5

  529. நறிது ஆம் நல் அமிழ்து உண்ண நல்கலின்,
    பிறியா இன் உயிர் பெற்ற பெற்றி, தாம்
    அறியாரோ நமனார்? அது அன்று எனின்,
    சிறியாரோ, உபகாரம் சிந்தியார்? 6

  530. அணங்கு ஆர் பாகனை ஆசைதோறும் உற்று,
    உணங்கா நாள் மலர் தூய், உள் அன்பினால்
    இணங்கா, காலம் இரண்டொடு ஒன்றினும்
    வணங்காது, இத் துணை வைக வல்லையோ? 7

  531. வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய்!
    தரை மேலாய்! உறு தன்மை ஈது? எனக்
    கரையாதேன் இடு பூசல் கண்டும், ஒன்று
    உரையாய், என்வயின் ஊனம் யாவதோ? 8

  532. நையா நின்றனென், நான் இருந்து இங்ஙன்;
    மெய் வானோர் திரு நாடு மேவினாய்;
    ஐயா! நீ எனது ஆவி என்பதும்,
    பொய்யோ? பொய் உரையாத புண்ணியா! 9

  533. செரு ஆர் தோள! நின் சிந்தை உளேன் என்னின்,
    மருவார் வெஞ் சரம் எனையும் வவ்வுமால்;
    ஒருவேனுள் உளை ஆகின், உய்தியால்;
    இருவேமுள் இருவேம் இருந்திலேம். 10

  534. எந்தாய்! நீ அமிழ்து ஈய, யாம் எலாம்
    உய்ந்தேம் என்று, உபகாரம் உன்னுவார்,
    நந்தா நாள்மலர் சிந்தி, நண்பொடும்
    வந்தாரோ எதிர், வான் உளோர் எலாம்? 11

  535. ஓயா வாளி ஒளித்து நின்று எய்வான்
    ஏயா வந்த இராமன் என்று உளான்,
    வாயால் ஏயினன் என்னின், வாழ்வு எலாம்
    ஈயாயோ? அமிழ்தேயும் ஈகுவாய்! 12

  536. சொற்றேன், முந்துற; அன்ன சொல் கொளாய்;
    அற்றான், அன்னது செய்கலான் எனா,
    உற்றாய், உம்பியை; ஊழி காணும் நீ,
    இற்றாய்; நான் உனை என்று காண்கெனோ? 13

  537. நீறு ஆம், மேருவும், நீ நெருக்கினால்;
    மாறு ஓர் வாளி, உன் மார்பை ஈர்வதோ?
    தேறேன் யான் இது; தேவர் மாயமோ?
    வேறு ஓர் வாலி கொலாம், விளிந்துளான்? 14

  538. தகை நேர் வண் புகழ் நின்று, தம்பியார்,
    பகை நேர்வார் உளர் ஆன பண்பினால்,
    உக நேர் சிந்தி உலந்து அழிந்தனன்;
    மகனே! கண்டிலையோ, நம் வாழ்வு எலாம்? 15

  539. அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார்,
    ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார்;
    தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம்,
    கருமம் கட்டளை என்றல் கட்டதோ? 16

  540. அனுமன் வாலிக்கு இறுதிக் கடன் செய்து, இராமனிடம் சென்று நிகழ்ந்தன கூறல்

  541. என்றாள், இன்னன பன்னி, இன்னலோடு
    ஒன்று ஆனாள்; உணர்வு ஏதும் உற்றிலாள்;
    நின்றாள்; அந் நிலை நோக்கி, நீதி சால்,
    வன் தாள் மால் வரை அன்ன, மாருதி, 17

  542. மடவாரால், அ(ம்) மடந்தை முன்னர் வாழ்
    இடம் மேவும்படி ஏவி, வாலிபால்
    கடன் யாவும் கடைகண்டு, கண்ணனோடு
    உடன் ஆய், உற்றது எலாம் உணர்த்தலும், 18

  543. சூரியன் மறைவும், இராமன் இராப்பொழுதைக் கழித்த வகையும்

  544. அகம் வேர் அற்று உக வீசு அருக்கனார்,
    புகழ் மேலைக் கிரி புக்க போழ்தினில்,
    நகமே ஒத்த குரக்கு நாயகன்
    முகமே ஒத்தது, மூரி மண்டிலம். 19

  545. மறைந்தான் மாலை அருக்கன்; வள்ளியோன்
    உறைந்தான், மங்கை திறத்தை உன்னுவான்;
    குறைந்தான், நெஞ்சு குழைந்து அழுங்குவான்,
    நிறைந்து ஆர் கங்குலின் வேலை நீந்தினான். 20

  546. கிட்கிந்தா காண்டம்

    9. அரசியற் படலம்



  547. இராமன் சுக்கிரீவனுக்கு முடி சூட்டுமாறு இளவலைப் பணித்தல்

  548. புதல்வன் பொன் மகுடம் பொறுத்தலால்,
    முதல்வன், பேர் உவகைக்கு முந்துவான்,
    உதவும் பூமகள் சேர, ஒண் மலர்க்
    கதவம் செய்ய கரத்தின் நீக்கினான். 1

  549. அது காலத்தில், அருட்கு நாயகன்,
    மதி சால் தம்பியை வல்லை ஏவினான்-
    கதிரோன் மைந்தனை, ஐய! கைகளால்,
    விதியால் மௌலி மிலைச்சுவாய் எனா, 2

  550. முடிசூட்டுதற்கு வேண்டுவன கொணர அனுமனை ஏவ, அவன் அவ்விதம் செய்தல்

  551. அப்போதே, அருள் நின்ற அண்ணலும்,
    மெய்ப் போர் மாருதிதன்னை, வீர! நீ,
    இப்போதே கொணர்க, இன்ன செய் வினைக்கு
    ஒப்பு ஆம் யாவையும் என்று உணர்த்தலும், 3

  552. மண்ணும் நீர் முதல் மங்கலங்களும்,
    எண்ணும் பொன் முடி முதல யாவையும்,
    நண்ணும் வேலையில், நம்பி தம்பியும்,
    திண்ணம் செய்வன செய்து, செம்மலை, 4

  553. சுக்கிரீவனுக்கு முடி சூட்டுதல்

  554. மறையோர் ஆசி வழங்க, வானுளோர்
    நறை தோய் நாள்மலர் தூவ, நல் நெறிக்கு
    இறையோன் தன் இளையோன், அவ் ஏந்தலை,
    துறையோர் நூல் முறை மௌலி சூட்டினான். 5

  555. தன்னை வணங்கிய சுக்கிரீவனுக்கு இராமனின் அறிவுரை

  556. பொன் மா மௌலி புனைந்து, பொய் இலான்,
    தன் மானக் கழல் தாழும் வேலையில்,
    நன் மார்பில் தழுவுற்று, நாயகன்,
    சொன்னான், முற்றிய சொல்லின் எல்லையான்; 6

  557. ஈன்டுநின்று ஏகி, நீ நின் இயல்பு அமை இருக்கை எய்தி,
    வேண்டுவ மரபின் எண்ணி, விதி முறை இயற்றி, வீர!
    பூண்ட பேர் அரசுக்கு ஏற்ற யாவையும் புரிந்து, போரில்
    மாண்டவன் மைந்தனோடும் வாழ்தி, நல் திருவின் வைகி. 7

  558. வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும்,
    தீமை தீர் ஒழுக்கின் வந்த திறத் தொழில் மறவரோடும்,
    தூய்மை சால் புணர்ச்சி பேணி, துகள் அறு தொழிலை ஆகி,
    சேய்மையோடு அணிமை இன்றி, தேவரின் தெரிய நிற்றி. 8

  559. புகை உடைத்து என்னின், உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும்
    மிகை உடைத்து உலகம்; நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே;
    பகையுடைச் சிந்தையார்க்கும், பயன் உறு பண்பின் தீரா
    நகையுடை முகத்தை ஆகி, இன் உரை நல்கு, நாவால். 9

  560. தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர் அறு செல்வம் அஃது உன்
    காவலுக்கு உரியது என்றால், அன்னது கருதிக் காண்டி;
    ஏ வரும் இனிய நண்பர், அயலவர், விரவார், என்று இம்
    மூவகை இயலோர் ஆவர், முனைவர்க்கும் உலக முன்னே. 10

  561. செய்வன செய்தல், யாண்டும் தீயன சிந்தியாமை,
    வைவன வந்தபோதும் வசை இல இனிய கூறல்,
    மெய்யன வழங்கல், யாவும் மேவின வெஃகல் இன்மை,
    உய்வன ஆக்கித் தம்மோடு உயர்வன; உவந்து செய்வாய். 11

  562. சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல்; மற்று, இந்
    நெறி இகழ்ந்து, யான் ஓர் தீமை இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,
    குறியது ஆம் மேனி ஆய கூனியால், குவவுத் தோளாய்!
    வெறியன எய்தி, நொய்தின் வெந் துயர்க் கடலின் வீழ்ந்தேன். 12

  563. மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல்,
    சங்கை இன்று உணர்தி; வாலி செய்கையால் சாலும்; இன்னும்,
    அங்கு அவர் திறத்தினானே, அல்லலும் பழியும் ஆதல்
    எங்களின் காண்டி அன்றே; இதற்கு வேறு உவமை உண்டோ ? 13

  564. நாயகன் அல்லன்; நம்மை நனி பயந்து எடுத்து நல்கும்
    தாய் என, இனிது பேணி, தாங்குதி தாங்குவாரை;
    ஆயது தன்மையேனும், அறவரம்பு இகவா வண்ணம்,
    தீயன வந்தபோது, சுடுதியால் தீமையோரை. 14

  565. இறத்தலும் பிறத்தல்தானும் என்பன இரண்டும், யாண்டும்,
    திறத்துளி நோக்கின், செய்த வினை தரத் தெரிந்த அன்றே?
    புறத்து இனி உரைப்பது என்னே? பூவின்மேல் புனிதற்கேனும்,
    அறத்தினது இறுதி, வாழ்நாட்கு இறுதி; அஃது உறுதி, அன்ப! 15

  566. ஆக்கமும், கேடும், தாம் செய் அறத்தொடு பாவம் ஆய
    போக்கி, வேறு உண்மை தேறார், பொரு அரும் புலமை நூலோர்;
    தாக்கின ஒன்றோடு ஒன்று தருக்குறும் செருவில், தக்கோய்!
    பாக்கியம் அன்றி, என்றும், பாவத்தைப் பற்றலாமோ? 16

  567. சுக்கிரீவனிடம் மாரிக் காலம் சென்ற பின், சேனையோடும் வருமாறு இராமன் கூறல்

  568. இன்னது தகைமை என்ப, இயல்புளி மரபின் எண்ணி,
    மன் அரசு இயற்றி, என்கண் மருவுழி மாரிக் காலம்
    பின்னுறு முறையின், உன் தன் பெருங் கடற் சேனையோடும்
    துன்னுதி; போதி என்றான், சுந்தரன். அவனும் சொல்வான்: 17

  569. சுக்கிரீவன் இராமனைக் கிட்கிந்தையில் வந்து வசிக்க வேண்டுதலும், இராமன் மறுத்துரைத்தலும்

  570. குரங்கு உறை இருக்கை என்னும் குற்றமே குற்றம் அல்லால்,
    அரங்கு எழு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆகும் அன்றே,
    மரம் கிளர் அருவிக் குன்றம்; வள்ளல்! நீ, மனத்தின் எம்மை
    இரங்கிய பணி யாம் செய்ய, இருத்தியால், சில் நாள், எம்பால். 18

  571. அரிந்தம! நின்னை அண்மி, அருளுக்கும் உரியேம் ஆகி,
    பிரிந்து, வேறு எய்தும் செல்வம் வெறுமையின் பிறிது அன்றாமால்;
    கருந் தடங் கண்ணினாளை நாடல் ஆம் காலம்காறும்
    இருந்து, அருள் தருதி, எம்மோடு என்று, அடி இணையின் வீழ்ந்தான். 19

  572. ஏந்தலும், இதனைக் கேளா, இன் இள முறுவல் நாற,
    வேந்து அமை இருக்கை, எம்போல் விரதியர் விழைதற்கு ஒவ்வா;
    போந்து அவண் இருப்பின், எம்மைப் போற்றவே பொழுது போமால்;
    தேர்ந்து, இனிது இயற்றும் உன் தன் அரசியல் தருமம் தீர்தி. 20

  573. ஏழ் - இரண்டு ஆண்டு, யான் போந்து எரி வனத்து இருக்க ஏன்றேன்;
    வாழியாய்! அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன்;
    பாழி அம் தடந் தோள் வீர! பார்த்திலைபோலும் அன்றே!
    யாழ் இசை மொழியோடு அன்றி, யான் உறும் இன்பம் என்னோ? 21

  574. தேவி வேறு அரக்கன் வைத்த சேமத்துள் இருப்ப, தான் தன்
    ஆவிபோல் துணைவரோடும் அளவிடற்கு அரிய இன்பம்
    மேவினான், இராமன் என்றால், ஐய! இவ் வெய்ய மாற்றம்,
    மூவகை உலகம் முற்றும் காலத்தும், முற்ற வற்றோ? 22

  575. இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை இழந்தும், போரின்
    வில் அறம் துறந்தும், வாழ்வேற்கு, இன்னன, மேன்மை இல்லாச்
    சில் அறம்; புரிந்து நின்ற தீமைகள் தீருமாறு,
    நல் அறம் தொடர்ந்த நோன்பின், நவை அற நோற்பல் நாளும். 23

  576. நான்கு திங்கள் சென்றபின் சேனையுடன் வருக என இராமன் கூறுதல்

  577. அரசியற்கு உரிய யாவும் ஆற்றுழி ஆற்றி, ஆன்ற
    கரை செயற்கு அரிய சேனைக் கடலொடும், திங்கள் நான்கின்
    விரசுக, என்பால்; நின்னை வேண்டினென், வீர! என்றான் -
    உரை செயற்கு எளிதும் ஆகி, அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான். 24

  578. சுக்கிரீவன் இராமனை வணங்கிச் செல்லுதல்

  579. மறித்து ஒரு மாற்றம் கூறான், வான் உயர் தோற்றத்து அன்னான்
    குறிப்பு அறிந்து ஒழுகல் மாதோ, கோது இலர் ஆதல் என்னா;
    நெறிப் பட, கண்கள் பொங்கி நீர் வர, நெடிது தாழ்ந்து,
    பொறிப்ப அருந் துன்பம் முன்னா, கவி குலத்து அரசன் போனான். 25

  580. தன்னை வணங்கிய அங்கதனுக்கு இராமனின் அறிவுரை

  581. வாலி காதலனும் ஆண்டு, மலர் அடி வணங்கினானை,
    நீல மா மேகம் அன்ன நெடியவன், அருளின் நோக்கி,
    சீலம் நீ உடையை ஆதல், இவன் சிறு தாதை என்னா,
    மூலமே தந்த நுந்தை ஆம் என, முறையின் நிற்றி. 26

  582. என்ன, மற்று இனைய கூறி, ஏகு அவன்-தொடர என்றான்;
    பொன் அடி வணங்கி, மற்று அப் புகழுடைக் குரிசில் போனான்;
    பின்னர், மாருதியை நோக்கி, பேர் எழில் வீர! நீயும்,
    அன்னவன் அரசுக்கு ஏற்றது ஆற்றுதி, அறிவின் என்றான். 27

  583. நான் இங்கிருந்து அடிமை செய்வேன் என அனுமன் கூறல்

  584. பொய்த்தல் இல் உள்ளத்து அன்பு பொழிகின்ற புணர்ச்சியாலும்,
    இத் தலை இருந்து, நாயேன், ஏயின எனக்குத் தக்க
    கைத் தொழில் செய்வேன் என்று, கழல் இணை வணங்கும் காலை,
    மெய்த் தலை நின்ற வீரன், இவ் உரை விளம்பி விட்டான்: 28

  585. அனுமனைக் கிட்கிந்தைக்குச் செல்லுமாறு, இராமன் உரைத்தல்

  586. நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற
    வரம்பு இலாததனை, மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால்,
    அரும்புவ, நலனும் தீங்கும்; ஆதலின், ஐய! நின்போல்
    பெரும் பொறை அறிவினோரால், நிலையினைப் பெறுவது அம்மா! 29

  587. ஆன்றவற்கு உரியது ஆய அரசினை நிறுவி, அப்பால்,
    ஏன்று எனக்கு உரியது ஆன கருமமும் இயற்றற்கு ஒத்த
    சான்றவர், நின்னின் இல்லை; ஆதலால், தருமம்தானே
    போன்ற நீ, யானே வேண்ட, அத் தலை போதி என்றான். 30

  588. அனுமன் கிட்கிந்தை செல்ல, இராம இலக்குவர் வேறு ஓர் மலைக்குச் செல்லுதல்

  589. ஆழியான் அனைய கூற, ஆணை ஈது ஆயின், அஃதே,
    வாழியாய்! புரிவென் என்று வணங்கி, மாருதியும் போனான்;
    சூழி மால் யானை அன்ன தம்பியும், தானும் தொல்லை
    ஊழி நாயகனும், வேறு ஓர் உயர் தடங் குன்றம் உற்றார். 31

  590. சுக்கிரீவன் அரசு செய்து, இனிது இருத்தல்

  591. ஆரியன் அருளின் போய்த் தன் அகல் மலை அகத்தன் ஆன
    சூரியன் மகனும், மானத் துணைவரும், கிளையும், சுற்ற,
    தாரையை வணங்கி, அன்னாள் தாய் என, தந்தை முந்தைச்
    சீரியன் சொல்லே என்ன, செவ்விதின் அரசு செய்தான். 32

  592. வள அரசு எய்தி, மற்றை வானர வீரர் யாரும்
    கிளைஞரின் உதவ, ஆணை கிளர் திசை அளப்ப, கேளோடு,
    அளவு இலா ஆற்றல் ஆண்மை அங்கதன், அறம் கொள் செல்வத்து
    இளவரசு இயற்ற, ஏவி, இனிதினின் இருந்தான், இப்பால். 33

  593. மிகைப் பாடல்கள்

  594. வள்ளலும், அவண் நின்று ஏகி, மதங்கனது இருக்கை ஆன
    வெள்ள வான் குடுமிக் குன்றத்து ஒரு சிறை மேவி, மெய்ம்மை
    அள்ளுறு காதல் தம்பி, அன்பினால் அமைக்கப்பட்ட
    எள்ளல் இல் சாலை எய்தி, இனிதினின் இருந்த காலை, 33-1


  595. கிட்கிந்தா காண்டம்

    10. கார்காலப் படலம்


    சூரியன் தென் திசையில் ஒதுங்கிய காட்சி

  596. மா இயல் வட திசை நின்று, வானவன்,
    ஓவியமே என ஒளிக் கவின் குலாம்
    தேவியை நாடிய, முந்தி, தென் திசைக்கு
    ஏவிய தூது என, இரவி ஏகினான். 1

  597. மழை வானின் தோற்றம்

  598. பை அணைப் பல் தலைப் பாந்தள் ஏந்திய
    மொய் நிலத் தகளியில், முழங்கு நீர் நெயின்,
    வெய்யவன் விளக்கமா, மேருப் பொன் திரி,
    மை எடுத்து ஒத்தது - மழைத்த வானமே. 2

  599. நண்ணுதல் அருங் கடல் நஞ்சம் நுங்கிய
    கண்ணுதல் கண்டத்தின் காட்சி ஆம் என
    விண்ணகம் இருண்டது; வெயிலின் வெங் கதிர்
    தண்ணிய மெலிந்தன; தழைத்த, மேகமே. 3

  600. நஞ்சினின், நளிர் நெடுங் கடலின், நங்கையர்
    அஞ்சன நயனத்தின், அவிழ்ந்த கூந்தலின்,
    வஞ்சனை அரக்கர்தம் வடிவின், செய்கையின்,
    நெஞ்சினின், இருண்டது - நீல வானமே. 4

  601. மின்னலும் இடியும்

  602. நாட்களில், நளிர் கடல் நாரம் நா உற
    வேட்கையின் பருகிய மேகம், மின்னுவ,
    வாட் கைகள் மயங்கிய செருவின், வார் மதப்
    பூட்கைகள் நிறத்த புண் திறப்ப போன்றவே. 5

  603. நீல் நிறப் பெருங் கரி நிரைத்த நீர்த்து என,
    சூல் நிற முகிற் குலம், துவன்றி, சூழ் திரை
    மால் நிற நெடுங் கடல் வாரி, மூரி வான்
    மேல் நிரைத்துளது என, முழக்கம் மிக்கதே. 6

  604. அரிப் பெரும் பெயரவன் முதலினோர் அணி,
    விரிப்பவும் ஒத்தன; வெற்பு மீது, தீ
    எரிப்பவும் ஒத்தன; ஏசு இல் ஆசைகள்
    சிரிப்பவும் ஒத்தன; - தெரிந்த மின் எலாம். 7

  605. மாதிரக் கருமகன், மாரிக் கார் மழை -
    யாதினும் இருண்ட விண் - இருந்தைக் குப்பையின்,
    கூதிர் வெங் கால் நெடுந் துருத்திக் கோள் அமைத்து,
    ஊது வெங் கனல் உமிழ் உலையும், ஒத்ததே. 8

  606. சூடின மணி முடித் துகள் இல் விஞ்சையர்
    கூடு உறை நீக்கிய குருதி வாட்களும்,
    ஆடவர் பெயர் தொறும் ஆசை யானையின்
    ஓடைகள் ஒளி பிறழ்வனவும், ஒத்ததே. 9

  607. பிரிந்து உறை மகளிரும், பிலத்த பாந்தளும்,
    எரிந்து உயிர் நடுங்கிட, இரவியின் கதிர்
    அரிந்தன ஆம் என, அசனி நா என,
    விரிந்தன திசைதொறும் - மிசையின் மின் எலாம். 10

  608. ஊதைக் காற்று வீசுதல்

  609. தலைமையும் - கீழ்மையும் தவிர்தல் இன்றியே,
    மலையினும் மரத்தினும் மற்றும் முற்றினும்,
    விலை நினைந்து உள வழி விலங்கும் வேசையர்
    உலைவுறும் மனம் என, உலாய ஊதையே. 11

  610. அழுங்குறு மகளிர், தம் அன்பர்த் தீர்ந்தவர்,
    புழுங்குறு புணர் முலை கொதிப்பப் புக்கு உலாய்,
    கொழுங் குறைத் தசை என ஈர்ந்து கொண்டு, அது
    விழுங்குறு பேய் என, வாடை வீங்கிற்றே. 12

  611. பருவ மழை பொழிதல்

  612. ஆர்த்து எழு துகள் விசும்பு அடைத்தலானும், மின்
    கூர்த்து எழு வாள் எனப் பிறழும் கொட்பினும்,
    தார்ப் பெரும் பணையின் விண் தழங்கு காரினும்,
    போர்ப் பெருங் களம் எனப் பொலிந்தது - உம்பரே. 13

  613. இன் நகைச் சனகியைப் பிரிந்த ஏந்தல்மேல்,
    மன்மதன் மலர்க் கணை வழங்கினான் என,
    பொன் நெடுங் குன்றின்மேல் பொழிந்த, தாரைகள் -
    மின்னொடும் துவன்றின மேக ராசியே. 14

  614. கல்லிடைப் படும் துளித் திவலை, கார் இடு
    வில்லிடைச் சரம் என, விசையின் வீழ்ந்தன;
    செல்லிடைப் பிறந்த செங் கனல்கள் சிந்தின,
    அல்லிடை, மணி சிறந்து, அழல் இயற்றல்போல். 15

  615. மள்ளர்கள் மறு படை, மான யானைமேல்
    வெள்ளி வேல் எறிவன போன்ற; மேகங்கள்;
    தள்ள அரும் துளி பட, தகர்ந்து சாய் கிரி,
    புள்ளி வெங் கட கரி புரள்வ போன்றவே. 16

  616. வான் இடு தனு, நெடுங் கருப்பு வில்; மழை,
    மீன் நெடுங் கொடியவன்; பகழி, வீழ் துளி;
    தான் நெடுஞ் சார் துணை பிரிந்த தன்மையர்
    ஊனுடை உடம்பு எலாம் உக்கது ஒத்ததே. 17

  617. தீர்த்தனும் கவிகளும் செறிந்து, நம் பகை
    பேர்த்தனர் இனி எனப் பேசி, வானவர்
    ஆர்த்தென, ஆர்த்தன மேகம்; ஆய் மலர்
    தூர்த்தன ஒத்தன, துள்ளி வெள்ளமே. 18

  618. வண்ண வில் கரதலத்து அரக்கன், வாளினன்,
    விண்ணிடைக் கடிது கொண்டு ஏகும் வேலையில்,
    பெண்ணினுக்கு அருங் கலம் அனைய பெய்வளை
    கண் என, பொழிந்தது-கால மாரியே. 19

  619. பரஞ்சுடர்ப் பண்ணவன், பண்டு, விண் தொடர்
    புரம் சுட விடு சரம் புரையும் மின் இனம்,
    அரம் சுடப் பொறி நிமிர் அயிலின், ஆடவர்
    உரம் சுட உளைந்தனர், பிரிந்துளோர் எலாம். 20

  620. பொருள் தரப் போயினர்ப் பிரிந்த பொய் உடற்கு,
    உருள்தரு தேர்மிசை உயிர்கொண்டு உய்த்தலான்,
    மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெட,
    கருடனைப் பொருவின்-கால மாரியே. 21

  621. முழங்கின முறை முறை மூரி மேகம், நீர்
    வழங்கின, மிடைவன, - மான யானைகள்,
    தழங்கின, பொழி மதத் திவலை தாழ்தரப்
    புழுங்கின, எதிர் எதிர் பொருவ போன்றவே. 22

  622. விசைகொடு மாருதம் மறித்து வீசலால்,
    அசைவுறு சிறு துளி அப்பு மாரியின்,
    இசைவுற எய்வன இயைவவாய், இருந்
    திசையொடு திசை செருச் செய்தல் ஒத்தவே. 23

  623. மரம் செடி கொடிகள் பொலிவுடன் பூத்தல்

  624. விழைவுறு பொருள் தரப் பிரிந்த வேந்தர் வந்து
    உழை உற, உயிர் உற உயிர்க்கும் மாதரின்,
    மழை உற, மா முகம் மலர்ந்து தோன்றின,
    குழை உறப் பொலிந்தன-உலவைக் கொம்பு எலாம். 24

  625. பாடலம் வறுமை கூர, பகலவன் பசுமை கூர,
    கோடல்கள் பெருமை கூர, குவலயம் சிறுமை கூர,
    ஆடின மயில்கள்; பேசாது அடங்கின குயில்கள் - அன்பர்
    கேடுறத் தளர்ந்தார் போன்றும், திரு உறக் கிளர்ந்தார் போன்றும். 25

  626. நால் நிறச் சுரும்பும், வண்டும், நவ மணி அணியின் சார,
    தேன் உக மலர்ந்து சாய்ந்த சேயிதழ்க் காந்தட் செம் பூ,
    வேனிலை வென்றது அம்மா, கார்! என வியந்து நோக்கி,
    மா நிலக் கிழத்தி கைகள் மறித்தன போன்ற மன்னோ. 26

  627. வாள் எயிற்று அரவம் போல வான் தலை தோன்ற வார்ந்த
    தாளுடைக் கோடல் தம்மைத் தழீஇயின, காதல் தங்க
    மீளல; அவையும் அன்ன விழைவன, உணர்வு வீந்த
    கோள் அரவு என்னப் பின்னி, அவற்றொடும் குழைந்து சாய்ந்த. 27

  628. இந்திர கோபங்கள் எங்கும் இயங்குதல்

  629. எள் இட இடமும் இன்றி எழுந்தன இலங்கு கோபம்,
    தள்ளுற, தலைவர் தம்மைப் பிரிந்து, அவர் தழீஇய தூமக்
    கள்ளுடை ஓதியார் தம் கலவியில், பலகால் கான்ற
    வெள்ளடைத் தம்பல் குப்பை சிதர்ந்தென, விரிந்த மாதோ. 28

  630. மலை அருவியில் மலர்கள் அடித்து வருதல்

  631. தீம் கனி நாவல் ஓங்கும் சேண் உயர் குன்ரின், செம் பொன்
    வாங்கின கொண்டு, பாரில் மண்டும் மால் யாறு மான,
    வேங்கையின் மலரும், கொன்றை விரிந்தன வீயும், ஈர்த்து,
    தாங்கின கலுழி, சென்று தலை மயக்குறுவ தம்மில். 29

  632. செங்காந்தள் மலரில் கொன்றைப் பூவும் இந்திரகோபமும்

  633. நல் நெடுங் காந்தள் போதில், நறை விரி கடுக்கை மென் பூ,
    துன்னிய கோபத்தோடும் தோன்றிய தோற்றம் - தும்பி
    இன் இசை முரல்வ நோக்கி, இரு நில மகள் கை ஏந்தி,
    பொன்னொடும் காசை நீட்டிக் கொடுப்பதே போன்றது அன்றே! 30

  634. நாடக அரங்கு

  635. கிளைத் துணை மழலை வண்டு கின்னரம் நிகர்த்த; மின்னும்
    துளிக் குரல் மேகம் வள் வார்த் தூரியம் துவைப்ப போன்ற;
    வளைக் கையர் போன்ற, மஞ்ஞை; தோன்றிகள், அரங்கின்மாடே
    விளக்குஇனம் ஒத்த; காண்போர் விழி ஒத்த, விளையின் மென் பூ. 31

  636. பேடையும் ஞிமிறும் பாயப் பெயர்வுழிப் பிறக்கும் ஓசை
    ஊடுறத் தாக்கும்தோறும் ஒல் ஒலி பிறப்ப, நல்லார்
    ஆடு இயல் பாணிக்கு ஒக்கும்; ஆரிய அமிழ்தப் பாடல்
    கோடியர் தாளம் கொட்டல், மலர்ந்த கூதாளம் ஒத்த. 32

  637. காட்டாற்றின் ஒழுக்கும், கொன்றையின் பொற்பூவும்

  638. வழை துறு கான யாறு, மா நிலக் கிழத்தி, மக்கட்கு
    உழை துறு மலை மாக் கொங்கை கரந்த பால் ஒழுக்கை ஒத்த;
    விழைவுறு வேட்கையொடும் வேண்டினர்க்கு உதவ வேண்டி,
    குழைதொறும் கனகம் தூங்கும் கற்பகம் நிகர்த்த, கொன்றை. 33

  639. மான்கள்

  640. பூ இயல் புறவம் எங்கும் பொறி வரி வண்டு போர்ப்ப,
    தீவிய களிய ஆகிச் செருக்கின; காமச் செவ்வி,
    ஓவிய மரன்கள்தோறும் உரைத்து, அற உரிஞ்சி, ஒண் கேழ்
    நாவிய செவ்வி நாற, கலையொடும் புலந்த நவ்வி. 34

  641. குவளை குவிதலும், முல்லை அரும்புதலும்

  642. தேரில் நல் நெடுந் திசை செலச் செருக்கு அழிந்து ஒடுங்கும்
    கூர் அயில் தரும் கண் எனக் குவிந்தன குவளை;
    மாரன் அன்னவர் வரவு கண்டு உவக்கின்ற மகளிர்
    மூரல் மென் குறு முறுவல் ஒத்து அரும்பின, முல்லை. 35

  643. அருவியிலிருந்து வரும் இசையும், தாமரை மலர்தலும்

  644. களிக்கும் மஞ்ஞையை, கண்ணுளர் இனம் எனக் கண்ணுற்று,
    அளிக்கும் மன்னரின், பொன் மழை வழங்கின அருவி;
    வெளிக்கண் வந்த கார் விருந்து என, விருந்து கண்டு உள்ளம்
    களிக்கும் மங்கையர் முகம் என, பொலிந்தன, கமலம். 36

  645. தேனீ

  646. சரத நாள் மலர் யாவையும் குடைந்தன, தடவிச்
    சுரத நூல் தெரி விடர் என, தேன் கொண்டு தொகுப்ப,
    பரத நூல் முறை நாடகம் பயன் உறப் பகுப்பான்,
    இரதம் ஈட்டுறும் கவிஞரைப் பொருவின - தேனீ. 37

  647. களித்த மான்கள்

  648. நோக்கினால் நமை நோக்கு அழி கண்ட நுண் மருங்குல்
    தாக்கு அணங்கு அருஞ் சீதைக்கு, தாங்க அருந் துன்பம்
    ஆக்கினான் நமது உருவின் என்று, அரும் பெறல் உவகை
    வாக்கினால் உரையாம் என, களித்தன - மான்கள். 38

  649. அன்னம், கொக்கு, முதலிய பறவை இனங்கள்

  650. நீடு நெஞ்சு உறு நேயத்தால் நெடிது உறப் பிரிந்து
    வாடுகின்றன, மருளுறு காதலின் மயங்கி,
    கூடு நல் நதித் தடம்தொறும் குடைந்தன, படிவுற்று
    ஆடுகின்றன - கொழுநரைப் பொருவின - அன்னம். 39

  651. கார் எனும் பெயர்க் கரியவன் மார்பினின் கதிர் முத்து-
    ஆரம் என்னவும் பொலிந்தன-அளப்ப அரும் அளக்கர்
    நீர் முகந்த மா மேகத்தின் அருகு உற நிரைத்து,
    கூரும் வெண் நிறத் திரை எனப் பறப்பன குரண்டம். 40

  652. மருவி நீங்கல் செல்லா நெடு மாலைய, வானில்
    பருவ மேகத்தின் அருகு உறக் குருகு இனம் பறப்ப,
    திருவின் நாயகன் இவன் எனத் தே மறை தெரிக்கும்
    ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த. 41

  653. தழைத்த பசும் புல்லும், மயிலின் அகவலும்

  654. உற வெதுப்புறும் கொடுந் தொழில் வேனிலான் ஒழிய,
    திறம் நினைப்ப அருங் கார் எனும் செவ்வியோன் சேர,
    நிற மனத்து உறு குளிர்ப்பினின், நெடு நில மடந்தை,
    புற மயிர்த்தலம் பொடித்தன போன்றன - பசும் புல். 42

  655. தேன் அவாம் மலர்த் திசைமுகன் முதலினர் தெளிந்தோர்,
    ஞான நாயகன் நவை உற, நோக்கினர் நல்க,
    கானம் யாவையும் பரப்பிய கண் என, சனகன்
    மானை நாடி நின்று அழைப்பன போன்றன - மஞ்ஞை. 43

  656. செந்தாமரை மலர்களும், கொடிகளும்

  657. செஞ் செ(வ்) வேலவர், செறி சிலைக் குரிசிலர், இருண்ட
    குஞ்சி சேயொளி கதுவுறப் புது நிறம் கொடுக்கும்
    பஞ்சி போர்த்த மெல் அடி எனப் பொலிந்தன, பதுமம்;
    வஞ்சி போலியர் மருங்கு என நுடங்கின, வல்லி. 44

  658. குயில்கள் வாயடங்கின

  659. நீயின், அன்னவள் குதலையிர் ஆதலின், நேடி,
    போய தையலைத் தருதிர் என்று, இராகவன் புகல,
    தேயம் எங்கணும் திரிந்தன போந்து, இடைத் தேடிக்
    கூய ஆய், குரல் குறைந்தபோல் குறைந்தன - குயில்கள். 45

  660. பசுக்கள் புல் மேய்தலும், காளான் தோன்றுதலும்

  661. பொழிந்த மா நிலம் புல் தர, குமட்டிய புனிற்றா
    எழுந்த ஆம்பிகள் இடறின, செறி தயிர்
    மொழிந்த தேனுடை முகிழ் முலை ஆய்ச்சியர் முழவில்
    பிழிந்த பால் வழி நுரையினைப் பொருவின- பிடவம். 46

  662. வேங்கை நாறின, கொடிச்சியர் வடிக் குழல்; விரை வண்டு
    ஏங்க, நாகமும் நாறின, நுளைச்சியர் ஐம்பால்;
    ஓங்கு நாள் முல்லை நாறின, ஆய்ச்சியர் ஓதி; -
    ஞாங்கர், உற்பலம் உழத்தியர் பித்திகை நாற. 47

  663. கார் காலத்தைக் கண்ட இராமனின் மன நிலை

  664. தேரைக் கொண்ட பேர் அல்குலாள் திருமுகம் காணான்;
    ஆரைக் கண்டு உயிர் ஆற்றுவான்? உணர்வு அழிந்தான்;
    மாரற்கு எண் இல் பல் ஆயிரம் மலர்க் கணை வகுத்த
    காரைக் கண்டனன்; வெந் துயர்க்கு ஒரு கரை காணான். 48

  665. அளவு இல் கார் எனும் அப் பெரும் பருவம் வந்து அணைந்தால்,
    தளர்வர் என்பது தவம் புரிவோர்கட்கும் தகுமால்;
    கிளவி தேனினும் அமிழ்தினும் குழைத்தவள் கிளைத்தோள்
    வளவி உண்டவன், வருந்தும் என்றால், அது வருத்தோ? 49

  666. காவியும், கருங் குவளையும், நெய்தலும், காயாம்-
    பூவையும் பொருவான் அவன், புலம்பினன் தளர்வான்,
    ஆவியும் சிறிது உண்டு கொலாம் என, அயர்ந்தான்,
    தூவி அன்னம் அன்னாள் திறத்து, இவை இவை சொல்லும். 50

  667. சீதையின் பிரிவால் வருந்திய இராமன், மேகத்தை நோக்கி இரங்கிக் கூறுதல்

  668. வார் ஏர் முலையாளை மறைக்குநர் வாழ்
    ஊரே அறியேன்; உயிரோடு உழல்வேன்;
    நீரே உடையாய், அருள் நின் இலையோ?
    காரே! எனது ஆவி கலக்குதியோ? 51

  669. வெப்பு ஆர் நெடு மின்னின் எயிற்றை; வெகுண்டு,
    எப் பாலும், விசும்பின் இருண்டு எழுவாய்;
    அப் பாதக வஞ்ச அரக்கரையே
    ஒப்பாய்; உயிர் கொண்டு அலது ஓவலையோ? 52

  670. அயில் ஏய் விழியார், விளை ஆர் அமுதின்
    குயில் ஏய் மொழியார்க் கொணராய்; கொடியாய்!
    துயிலேன் ஒருவேன் உயிர் சோர்வு உணர்வாய்;
    மயிலே! எனை நீ வலி ஆடுதியோ? 53

  671. மழை வாடையோடு ஆடி, வலிந்து, உயிர்மேல்
    நுழைவாய்; மலர்வாய் நொடியாய் - கொடியே! -
    இழைவாள் நுதலாள் இடைபோல் இடையே
    குழைவாய்; எனது ஆவி குழைக்குதியோ? 54

  672. விழையேன் விழைவானவை; மெய்ம்மையின் நின்று
    இழையேன், உணர்வு என்வயின் இன்மையினால்;
    பிழையேன்; உயிரோடு பிரிந்தனரால்;
    உழையே! அவர் எவ் உழையார்? உரையாய்! 55

  673. பயில் பாடக மெல் அடி பஞ்சு அனையார்
    செயிர் ஏதும் இலாரொடு தீருதியோ?
    அயிராது உடனே அகல்வாய் அலையோ?
    உயிரே! கெடுவாய்! உறவு ஓர்கிலையோ? 56

  674. ஒன்றைப் பகராய், குழலுக்கு உடைவாய்;
    வன் தைப்புறு நீள் வயிரத்தினையோ! -
    கொன்றைக் கொடியாய்! - கொணர்கின்றிலையோ!
    என்றைக்கு உறவு ஆக இருந்தனையே? 57

  675. குரா அரும்பு அனைய கூர் வாள் எயிற்று வெங் குருளை நாகம்
    விராவு வெங் கடுவின் கொல்லும் மேல் இணர் முல்லை, வெய்தின்
    உராவ அருந் துயரம் மூட்டி, ஓய்வு அற மலைவது ஒன்றோ?
    இராவண கோபம் நிற்க, இந்திரகோபம் என்னோ? 58

  676. ஓடை வாள் நுதலினாளை ஒளிக்கலாம் உபாயம் உன்னி,
    நாடி, மாரீசனார் ஓர் ஆடக நவ்வி ஆனார்;
    வாடை ஆய், கூற்றினாரும், உருவினை மாற்றி வந்தார்;
    கேடு சூழ்வார்க்கு வேண்டும் உருக் கொளக் கிடைத்த அன்றே? 59

  677. அரு வினை அரக்கர் என்ன, அந்தரம் அதனில் யாரும்
    வெருவர, முழங்குகின்ற மேகமே! மின்னுகின்றாய்;
    தருவல் என்று இரங்கினாயோ? தாமரை மறந்த தையல்
    உருவினைக் காட்டிக் காட்டி, ஒளிக்கின்றாய், ஒளிக்கின்றாயால்! 60

  678. உள் நிறைந்து உயிர்க்கும் வெம்மை உயிர் சுட, உலைவேன் உள்ளம்
    புண் உற, வாளி தூர்த்தல் பழுது, இனி; போதி; - மார! -
    எண் உறு கல்வி உள்ளத்து இளையவன், இன்னே, உன்னைக்
    கண்ணுறும் ஆயின், பின்னை, யார், அவன் சீற்றம் காப்பார்? 61

  679. வில்லும், வெங் கணையும், வீரர், வெஞ் சமத்து அஞ்சினார்மேல்
    புல்லுவ அல்ல, ஆற்றல்; - போற்றலர்க் குறித்தல் போலாம்;-
    அல்லும் நன் பகலும் நீங்கா அனங்க! - நீ அருளின் தீர்ந்தாய்;
    செல்லும் என்று, எளிவந்தோர்மேல் செலுத்தலும் சீர்மைத்து ஆமோ? 62

  680. இராமனை இலக்குவன் தேற்றுதல்

  681. என்ன இத் தகைய பன்னி, ஈடு அழிந்து, இரங்குகின்ற
    தன்னை ஒப்பானை நோக்கி, தகை அழிந்து அயர்ந்த தம்பி,
    நின்னை எத் தகையை ஆக நினைந்தனை?-நெடியோய்! என்ன,
    சென்னியில் சுமந்த கையன் தேற்றுவான், செப்பலுற்றான்: 63

  682. காலம் நீளிது, காரும் மாரியும் வந்தது என்ற கவற்சியோ?
    நீல மேனி அரக்கர் வீரம் நினைந்து அழுங்கிய நீர்மையோ?
    வாலி சேனை மடந்தை வைகு இடம் நாட வாரல் இலாமையோ?
    சாலும் நூல் உணர் கேள்வி வீர! - தளர்ந்தது என்னை? - தவத்தினோய்! 64

  683. மறை துளங்கினும், மதி துளங்கினும், வானும் ஆழ் கடல் வையமும்,
    நிறை துளங்கினும், நிலை துளங்குறு நிலைமை நின்வயின் நிற்குமோ?
    பிறை துளங்குவ அனைய பேர் எயிறு உடைய பேதையர் பெருமை, நின்
    இறை துளங்குறு புருவ வெஞ் சிலை இடை துளங்குற, இசையுமோ? 65

  684. அனுமன் என்பவன் அளவு அறிந்தனம்; அறிஞ! அங்கதன் ஆதியோர்
    எனையர் என்பது ஒர் இறுதிகண்டிலம்; எழுபது என்று எனும் இயல்பினார்
    வினையின் வெந் துயர் விரவு திங்களும், விரைவு சென்றன, எளிதின்; நின்
    தனு எனும் திரு நுதலி வந்தனள்; சரதம்; வன் துயர் தவிர்தியே! 66

  685. மறை அறிந்தவர் வரவு கண்டு, உமை வலியும் வஞ்சகர் வழியொடும்
    குறைய வென்று, இடர் களைவென் என்றனை; குறை முடிந்தது விதியினால்;
    இறைவ! அங்கு அவர் இறுதிகண்டு,இனிது இசை புனைந்து,இமையவர்கள்தாம்,
    உறையும் உம்பரும் உதவி நின்றருள்; உணர்வு அழிந்திடல் உறுதியோ! 67

  686. காது கொற்றம் நினக்கு அலாது பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ?
    வேதனைக்கு இடம் ஆதல் வீரதை அன்று; மேதமை ஆம் அரோ;
    போது பிற்படல் உண்டு; இது ஓர் பொருள் அன்று; நின்று புணர்த்தியேல்,
    யாது உனக்கு இயலாதது? எந்தை! வருந்தல் என்ன இயம்பினான். 68

  687. தம்பி சொல்லால் இராமன் துயர் நீங்குதலும், மழை பொழிதலும்

  688. சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து, உயிர் சோர்வு ஒடுங்கிய தொல்லையோன்;
    இற்ற இன்னல் இயக்கம் எய்திட, வைகல் பற்பல ஏக, மேல்
    உற்று நின்ற வினைக் கொடும் பிணி, ஒன்றின்மேல் உடன் ஒன்று உராய்,
    மற்றும் வெம் பிணி பற்றினாலென, வந்து எதிர்ந்தது மாரியே. 69

  689. நிறைந்தன நெடுங் குளம்; நெருங்கின தரங்கம்;
    குறைந்தன கருங் குயில்; குளிர்ந்த உயர் குன்றம்;
    மறைந்தன தடந் திசை; வருந்தினர் பிரிந்தார்;
    உறைந்தன, மகன்றிலுடன் அன்றில் உயிர் ஒன்றி. 70

  690. பாசிழை அரம்பையர், பழிப்பு இல் அகல் அல்குல்
    தூசு, தொடர் ஊசல், நனி வெம்மை தொடர்வுற்றே
    வீசியது, வாடை - எரி வெந்த விரி புண் வீழ்
    ஆசு இல் அயில் வாளி என, ஆசைபுரிவார் மேல். 71

  691. வேலை நிறைவுற்றன; வெயில் கதிர் வெதுப்பும்
    சீலம் அழிவுற்ற; புனல் உற்று உருவு செப்பின்
    காலம் அறிவுற்று உணர்தல், கன்னல் அளவு அல்லால்,
    மாலை பகல் உற்றது என, ஓர்வு அரிது மாதோ! 72

  692. நெல் கிழிய நெற் பொதி நிரம்பின, நிரம்பாச்
    சொற்கு இழிய நல் கிளிகள்; தோகையவர், தூ மென்
    பற்கு இழி மணிப் படர் திரைப் பரதர் முன்றில்,
    பொற் கிழி விரித்தன, சினைப் பொதுளு புன்னை. 73

  693. நிறம் கருகு கங்குல், பகல், நின்ற நிலை நீவா -
    அறம் கருது சிந்தை முனி அந்தணரின், ஆலிப்
    பிறங்கு அரு நெடுந் துளி படப் பெயர்வு இல் குன்றில்,
    உறங்கல, பிறங்கல் அயல் நின்ற, உயர் வேழம். 74

  694. சந்தின் அடையின் படலை வேதிகை தடம்தோறு,
    அந்தி இடு அகில் புகை நுழைந்த, குளிர் அன்னம்;
    மந்தி துயில் உற்ற, முழை; வன் கடுவன், அங்கத்து
    இந்தியம் அவித்த தனி யோகியின் இருந்த. 75

  695. ஆசு இல் சுனை வால் அருவி, ஆய் இழையர் ஐம்பால்
    வாச மணம் நாறல் இல ஆன; மணி வன் கால்
    ஊசல் வறிது ஆன; இதண் ஒண் மணிகள் விண்மேல்
    வீசல் இல வான;- நெடு மாரி துளி வீச. 76

  696. கருந் தகைய, தண் சினைய, கைதை மடல், காதல்
    தரும் தகைய போது கிளையில் புடை தயங்க,
    பெருந் தகைய பொற் சிறை ஒடுக்கி, உடல் பேராது,
    இருந்த, குருகின் பெடை- பிரிந்தவர்கள் என்ன. 77

  697. பதங்கள் முகில் ஒத்த, இசை பல் ஞிமிறு பன்ன,
    விதங்களின் நடித்திடு விகற்ப வழி மேவும்
    மதங்கியரை ஒத்த, மயில்; வைகு மர மூலத்து
    ஒதுங்கின, உழைக் குலம்; - மழைக் குலம் முழக்க. 78

  698. விளக்கு ஒளி அகில் புகை விழுங்கு அமளி, மென் கொம்பு
    இளைக்கும் இடை மங்கையரும், மைந்தர்களும், ஏற;
    தளத் தகு மலர்த் தவிசு இகந்து, நகு சந்தின்
    துளைத் துயில் உவந்து, துயில்வுற்ற, குளிர் தும்பி. 79

  699. தாமரை மலர்த் தவிசு இகந்து, தகை அன்னம்,
    மாமரம் நிரைத் தொகு பொதும்பருழை வைக;
    தே மரம் அடுக்கு இதனிடைச் செறி குரம்பை,
    தூ மருவு எயிற்றியரொடு அன்பர் துயில்வுற்றார். 80

  700. வள்ளி புடை சுற்றி உயர் சிற்றலை மரம்தோறு,
    எள்ள அரு மறிக் குருளொடு அண்டர்கள் இருந்தார்;
    கள்ளரின் ஒளித்து உழல் நெடுங் கழுது ஒடுங்கி,
    முள் எயிறு தின்று, பசி மூழ்கிட இருந்த. 81

  701. சரம் பயில் நெடுந் துளி நிரந்த புயல் சார,
    உரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா,
    வரம்பு அகல் நறும் பிரசம் வைகல் பல வைகும்
    முரம்பினில் நிரம்பன; -முழைஞ்சிடை நுழைந்த. 82

  702. இராமனின் விரகதாபம்

  703. இத் தகைய மாரியிடை, துன்னி இருள் எய்த,
    மைத் தகு மணிக் குறு நகைச் சனகன் மான்மேல்
    உய்த்த உணர்வத்தினன், நெருப்பிடை உயிர்ப்பான்,
    வித்தகன், இலக்குவனை முன்னினன், விளம்பும்: 83

  704. மழைக் கரு மின் எயிற்று அரக்கன் வஞ்சனை
    இழைப்ப, அருங்கொங்கையும் எதிர்வுற்று, இன்னலின்
    உழைத்தனள், உலைந்து உயிர் உலக்கும்; ஒன்றினும்
    பிழைப்ப அரிது, எனக்கும்; இது என்ன பெற்றியோ? 84

  705. தூ நிறச் சுடு சரம், தூணி தூங்கிட,
    வான் உறப் பிறங்கிய வைரத் தோளொடும்,
    யான் உறக் கடவதே இதுவும்? இந் நிலை
    வேல் நிறத்து உற்றது ஒத்துழியும், வீகிலேன். 85

  706. தெரி கணை மலரொடும் திறந்த நெஞ்சொடும்,
    அரிய வன் துயரொடும், யானும் வைகுவேன்;
    எரியும் மின்மினி மணி விளக்கின், இன் துணைக்
    குரி இனம், பெடையோடும் துயில்வ, கூட்டினுள். 86

  707. வானகம் மின்னினும், மழை முழங்கினும்,
    யான் அகம் மெலிகுவென், எயிற்று அரா என;
    கானகம் புகுந்து யான் முடித்த காரியம்,
    மேல் நகும், கீழ் நகும்; இனி என் வேண்டுமோ? 87

  708. மறந்திருந்து உய்கிலேன்; மாரி ஈதுஎனின்,
    இறந்து விண் சேர்வது சரதம்; இப் பழி,
    பிறந்து பின் தீர்வலோ? பின்னர், அன்னது
    துறந்து சென்று உறுவலோ? துயரின் வைகுவேன்! 88

  709. ஈண்டு நின்று, அரக்கர்தம் இருக்கை யாம் இனிக்
    காண்டலின், பற்பல காலம் காண்டுமால்;
    வேண்டுவது அன்று இது; வீர! நோய் தெற
    மாண்டனன் என்றது மாட்சிப்பாலது ஆம். 89

  710. செப்பு உருக்கு அனைய இம் மாரிச் சீகரம்
    வெப்புறப் புரம் சுட, வெந்து வீவதோ-
    அப்பு உருக் கொண்ட வாள் நெடுங் கண் ஆயிழை
    துப்பு உருக் குமுத வாய் அமுதம் துய்த்த யான்? 90

  711. நெய் அடை, தீ எதிர் நிறுவி, நிற்கு இவள்
    கையடை என்ற அச் சனகன் கட்டுரை
    பொய் அடை ஆக்கிய பொறி இலேனொடு,
    மெய் அடையாது; இனி, விளிதல் நன்று அரோ. 91

  712. தேற்றுவாய், நீ உளையாக, தேறி நின்று
    ஆற்றுவேன், நான் உளனாக, ஆய்வளை
    தோற்றுவாள் அல்லள்; இத் துன்பம் ஆர் இனி
    மாற்றுவார்? துயர்க்கு ஒரு வரம்பு உண்டாகுமோ? 92

  713. விட்ட போர் வாளிகள் விரிஞ்சன் விண்ணையும்
    சுட்டபோது, இமையவர் முதல் தொல்லையோர்
    பட்டபோது, உலகமும் உயிரும் பற்று அறக்
    கட்டபோது, அல்லது, மயிலைக் காண்டுமோ? 93

  714. தருமம் என்ற ஒரு பொருள்தன்னை அஞ்சி, யான்
    தெருமருகின்றது; செறுநர் தேவரோடு
    ஒருமையின் வந்தனரேனும் உய்கலார்; -
    உரும் என ஒலிபடும் உர விலோய்! என்றான். 94

  715. இலக்குவன் இராமனைத் தேற்றுதல்

  716. இளவலும் உரைசெய்வான், எண்ணும் நாள் இனும்
    உள அல; கூதிரும், இறுதி உற்றதால்;
    களவு செய்தவன் உறை காணும் காலம் வந்து
    அளவியது; அயர்வது என்? - ஆணை ஆழியாய்! 95

  717. திரைசெய் அத் திண் கடல், அமிழ்தம் செங் கணான்
    உரைசெயத் தரினும், அத் தொழில் உவந்திலன்;
    வரை முதல் கலப்பைகள் மாடு நாட்டி, தன்
    குரை மலர்த் தடக் கையால் கடைந்து கொண்டனன். 96

  718. மனத்தினின் உலகு எலாம் வகுத்து, வாய்ப் பெயும்
    நினைப்பினன் ஆயினும், நேமியோன் நெடும்
    எனைப் பல படைக்கலம் ஏந்தி, யாரையும்,
    வினைப் பெருஞ் சூழ்ச்சியின் பொருது வெல்லுமால். 97

  719. கண்ணுடை நுதலினன், கணிச்சி வானவன்,
    விண்ணிடைப் புரம் சுட, வெகுண்ட மேலைநாள்,
    எண்ணிய சூழ்ச்சியும், ஈட்டிக் கொண்டவும், -
    அண்ணலே! - ஒருவரால் அறியற்பாலதோ? 98

  720. ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கி, பின்
    ஏகுறு நாளிடை எய்தி, எண்ணுவ
    சேகு அறப் பல் முறை தெருட்டி, செய்த பின்,
    வாகை என்று ஒரு பொருள் வழுவற்பாலதோ? 99

  721. அறத் துறை திறம்பினர், அரக்கர்; ஆற்றலர்
    மறத் துறை நமக்கு என வலிக்கும் வன்மையோர் -
    திறத்து உறை நல் நெறி திறம்பல் உண்டுஎனின்,
    புறத்து, இனி யார் திறம் புகழும் வாகையும்? 100

  722. பைந்தொடிக்கு இடர் களை பருவம் பையவே
    வந்து அடுத்துளது; இனி, வருத்தம் நீங்குவாய்;
    அந்தணர்க்கு ஆகும் நாம்; அரக்கர்க்கு ஆகுமோ? -
    சுந்தரத் தனு வலாய்! - சொல்லு, நீ என்றான். 101

  723. மழைக் காலம் மாறுதல்

  724. உறுதி அஃதே என உணர்ந்த ஊழியான்,
    இறுதி உண்டே கொல் இம் மாரிக்கு? என்பது ஓர்
    தெறு துயர் உழந்தனன் தேய, தேய்வு சென்று
    அறுதியை அடைந்தது, அப் பருவம், ஆண்டு போய். 102

  725. மழையின் பின் தோன்றிய கூதிர் காலத்து நிகழ்ச்சிகள்

  726. மள்கல் இல் பெருங் கொடை மருவி, மண் உளோர்
    உள்கிய பொருள் எலாம் உதவி, அற்ற போது
    எள்கல் இல் இரவலர்க்கு ஈவது இன்மையால்,
    வெள்கிய மாந்தரின், வெளுத்த - மேகமே. 103

  727. தீவினை, நல்வினை, என்னத் தேற்றிய
    பேய் வினைப் பொருள்தனை அறிந்து பெற்றது ஓர்
    ஆய் வினை மெய்யுணர்வு அணுக, ஆசு அறும்
    மாயையின் மாய்ந்தது - மாரிப் பேர் இருள். 104

  728. மூள் அமர் தொலைவுற, முரசு அவிந்தபோல்,
    கோள் அமை கண முகில் குமுறல் ஓவின;
    நீள் அடு கணை எனத் துளியும் நீங்கின;
    வாள் உறை உற்றென மறைந்த, மின் எலாம். 105

  729. தடுத்த தாள் நெடுந் தடங் கிரிகள் தாழ்வரை
    அடுத்த நீர் ஒழிந்தன; அருவி தூங்கின;
    எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்தி நின்று,
    உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே. 106

  730. மேகம் மா மலைகளின் புறத்து வீதலால்,
    மாக யாறு யாவையும் வாரி அற்றன;
    ஆகையால், தகவு இழந்து, அழிவு இல் நன் பொருள்
    போக, ஆறு ஒழுகலான் செல்வம் போன்றவே. 107

  731. கடம் திறந்து எழு களிறு அனைய கார் முகில்
    இடம் துறந்து ஏகலின், பொலிந்தது இந்துவும் -
    நடம் திறன் நவில்வுறு நங்கைமார் முகம்,
    படம் திறந்து உருவலின், பொலியும் பான்மைபோல். 108

  732. பாசிழை மடந்தையர் பகட்டு வெம் முலை
    பூசிய சந்தனம், புழுகு, குங்குமம்,
    மூசின முயங்கு சேறு உலர, மொண்டு உற
    வீசின, நறும் பொடி விண்டு, வாடையே. 109

  733. மன்னவன் தலைமகன் வருத்தம் மாற்றுவான்,
    அந் நெறிப் பருவம் வந்து நணுகிற்று ஆதலால்,
    பொன்னினை நாடிய போதும் என்பபோல்,
    அன்னமும், திசை திசை அகன்ற, விண்ணின்வாய். 110

  734. தம் சிறை ஒடுக்கின, தழுவும் இன்னல,
    நெஞ்சு உறு மம்மரும், நினைப்பும் நீண்டன, -
    மஞ்சு உறு நெடு மழை பிரிதலால், மயில் -
    அஞ்சின, மிதிலை நாட்டு அன்னம் என்னவே. 111

  735. வஞ்சனை, தீவினை, மறந்த மா தவர்
    நெஞ்சு எனத் தெளிந்த நீர் நிரந்து தோன்றுவ;
    பஞ்சு என, சிவக்கும் மென் பாதப் பேதையர்
    அஞ்சனக் கண் எனப் பிறழ்ந்த, ஆடல் மீன். 112

  736. ஊடிய மடந்தையர் வதனம் ஒத்தன,
    தாள்தொறு மலர்ந்தன, முதிர்ந்த தாமரை;
    கூடினர் துவர் இதழ்க் கோலம் கொண்டன,
    சேடு உறு நறு முகை விரிந்த செங்கிடை. 113

  737. கல்வியின் திகழ் கணக்காயர் கம்பலைப்
    பல் விதச் சிறார் எனப் பகர்வ பல் அரி,
    செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா
    நல் அறிவாளரின், அவிந்த, நா எலாம். 114

  738. செறி புனல் பூந் துகில் திரைக் கையால் திரைத்து,
    உறு துணைக் கால் மடுத்து ஓடி, ஓத நீர்
    எறுழ் வலிக் கணவனை எய்தி, யாறு எலாம்,
    முறுவலிக்கின்றன போன்ற, முத்து எலாம். 115

  739. சொல் நிறை கேள்வியின் தொடர்ந்த மாந்தரின்,
    இல், நிறப் பசலை உற்று இருந்த மாதரின்,
    தன் நிறம் பயப் பய நீங்கி, தள்ள அரும்
    பொன் நிறம் பொருந்தின, பூகத் தாறு எலாம். 116

  740. பயின்று உடல் குளிர்ப்பவும் பாணி நீத்து, அவண்
    இயன்றன இள வெயில் ஏய்ந்த மெய்யின,
    வயின் தொறும், வயின் தொறும், மடித்த வாயின,
    துயின்றன, இடங்கர் மா, தடங்கள்தோறுமே. 117

  741. கொஞ்சுறு கிளி நெடுங் குதலை கூடின,
    அஞ்சிறை அறுபத அளக ஓதிய,
    எஞ்சல் இல் குழையன, இடை நுடங்குவ -
    வஞ்சிகள் பொலிந்தன, மகளிர் மானவே. 118

  742. அளித்தன முத்துஇனம் தோற்ப, மான் அனார்
    வெளித்து எதிர் விழிக்கவும் வெள்கி, மேன்மையால்
    ஒளித்தன ஆம் என, ஒடுங்கு கண்ணன,
    குளித்தன, மண்ணிடை - கூனல் தந்து எலாம். 119

  743. மழை படப் பொதுளிய மருதத் தாமரை
    தழை படப் பேர் இலைப் புரையில் தங்குவ,
    விழைபடு பெடையொடும், மெள்ள, நள்ளிகள்,
    புழை அடைத்து ஒடுங்கின, வச்சை, மாக்கள்போல். 120

  744. மிகைப் பாடல்கள்

  745. எண் வகை நாகங்கள், திசைகள் எட்டையும்
    நண்ணின நா வளைத்தனைய மின் நக;
    கண்ணுதல் மிடறு எனக் கருகி, கார் விசும்பு
    உள் நிறை உயிர்ப்பு என, ஊதை ஓடின. 9-1

  746. கிட்கிந்தா காண்டம்

    11. கிட்கிந்தைப் படலம்


    சுக்கிரீவன் வராததால் சினந்த இராமன் இலக்குவனைக் கிட்கிந்தைக்கு அனுப்புதல்

  747. அன்ன காலம் அகலும் அளவினில்,
    முன்னை வீரன், இளவலை, மொய்ம்பினோய்!
    சொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கிய
    மன்னன் வந்திலன்; என் செய்தவாறு அரோ? 1

  748. பெறல் அருந் திருப் பெற்று, உதவிப் பெருந்
    திறம் நினைந்திலன்; சீர்மையின் தீர்ந்தனன்;
    அறம் மறந்தனன்; அன்பு கிடக்க, நம்
    மறம் அறிந்திலன்; வாழ்வின் மயங்கினான். 2

  749. நன்றி கொன்று, அரு நட்பினை நார் அறுத்து,
    ஒன்றும் மெய்ம்மை சிதைத்து, உரை பொய்த்துளார்க்
    கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ?
    சென்று, மற்று அவன் சிந்தையைத் தேர்குவாய். 3

  750. வெம்பு கண்டகர் விண் புக வேர் அறுத்து,
    இம்பர் நல் அறம் செய்ய எடுத்த விற்
    கொம்பும் உண்டு; அருங் கூற்றமும் உண்டு; உங்கள்
    அம்பும் உண்டு என்று சொல்லு, நம் ஆணையே. 4

  751. நஞ்சம் அன்னவரை நலிந்தால், அது
    வஞ்சம் அன்று; மனு வழக்கு ஆதலால்:
    அஞ்சில், ஐம்பதில், ஒன்று அறியாதவன்
    நெஞ்சில் நின்று நிலாவ, நிறுத்துவாய். 5

  752. ஊரும், ஆளும், அரசும், உம் சுற்றமும்,
    நீரும், ஆளுதிரே எனின், நேர்ந்த நாள்
    வாரும்; வாரலிர், ஆம் எனின், வானரப்
    பேரும் மாளும் எனும் பொருள் பேசுவாய். 6

  753. இன்னும் நாடுதும், இங்கு இவர்க்கும் வலி
    துன்னினாரை எனத் துணிந்தார் எனின்,
    உன்னை வெல்ல, உலகு ஒரு மூன்றினும்,
    நின் அலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய். 7

  754. நீதி ஆதி நிகழ்த்தினை, நின்று, அது,
    வேதியாத பொழுது, வெகுண்டு, அவண்
    சாதியாது, அவர் சொல் தரத் தக்கனை;
    போதி ஆதி என்றான் - புகழ்ப் பூணினான். 8

  755. இராமனின் ஆணைப்படி இலக்குவன் கிட்கிந்தை சேர்தல்

  756. ஆணை சூடி, அடி தொழுது, ஆண்டு, இறை
    பாணியாது, படர் வெரிந் பாழ்படாத்
    தூணி பூட்டி, தொடு சிலை தொட்டு, அருஞ்
    சேணின் நீங்கினன் - சிந்தையின் நீங்கலான். 9

  757. மாறு நின்ற மரனும், மலைகளும்,
    நீறு சென்று நெடு நெறி நீங்கிட,
    வேறு சென்றனன் - மேன்மையின் ஓங்கிடும்
    ஆறு சென்றிலன் ஆணையின் ஏகுவான். 10

  758. விண் உறத் தொடர் மேருவின் சீர் வரை
    மண் உறப் புக்கு அழுந்தின, மாதிரம்;
    கண் உறத் தெரிவுற்றது, கட்செவி -
    ஒண் நிறக் கழல் சேவடி ஊன்றலால். 11

  759. வெம்பு கானிடைப் போகின்ற வேகத்தால்,
    உம்பர் தோயும் மராமரத்து ஊடு செல்
    அம்பின் போன்றனன், அன்று - அடல் வாலிதன்
    தம்பிமேல் செலும் மானவன் தம்பியே. 12

  760. மாடு வென்றி ஒர் மாதிர யானையின்
    சேடு சென்று செடில், ஒரு திக்கின் மா
    நாடுகின்றதும், நண்ணிய கால் பிடித்து
    ஓடுகின்றதும், ஒத்துளன் ஆயினான். 13

  761. உருக் கொள் ஒண் கிரி ஒன்றின்நின்று ஒன்றினைப்
    பொருக்க எய்தினன், பொன் ஒளிர் மேனியான் -
    அருக்கன் மா உதயத்தின் நின்று அத்தம் ஆம்
    பருப்பதத்தினை எய்திய பண்புபோல். 14

  762. தன் துணைத் தமையன் தனி வாளியின்
    சென்று, சேண் உயர் கிட்கிந்தை சேர்ந்தவன்,
    குன்றின்நின்று ஒரு குன்றினில் குப்புறும்
    பொன் துளங்கு உளைச் சீயமும் போன்றனன். 15

  763. இலக்குவன் வருகையை கண்ட வானரர் அங்கதனுக்குச் செய்தி தெரிவித்தல்

  764. கண்ட வானரம் காலனைக் கண்ட போல்
    மண்டி ஓடின; வாலி மகற்கு, அமர்
    கொண்ட சீற்றத்து இளையோன் குறுகினான்,
    சண்ட வேகத்தினால் என்று, சாற்றலும், 16

  765. இலக்குவனது குறிப்பு உணர்ந்து, அங்கதன் சுக்கிரீவனை காணப் போதல்

  766. அன்ன தோன்றலும், ஆண் தொழிலான் வரவு
    இன்னது என்று அறிவான், மருங்கு எய்தினான்;
    மன்னன் மைந்தன் மனக் கருத்து உட் கொளா,
    பொன்னின் வார் கழல் தாதை இல் போயினான். 17

  767. சுக்கிரீவன் இருந்த நிலை

  768. நளன் இயற்றிய நாயகக் கோயிலுள்,
    தள மலர்த் தகைப் பள்ளியில், தாழ் குழல்
    இள முலைச்சியர் ஏந்து அடி தைவர,
    விளை துயிற்கு விருந்து விரும்புவான்; 18

  769. சிந்துவாரத், தரு நறை, தேக்கு, அகில்,
    சந்தம், மா மயிற் சாயலர் தாழ் குழல்
    கந்த மா மலர்க் காடுகள், தாவிய
    மந்த மாருதம் வந்து உற, வைகுவான்; 19

  770. தித்தியாநின்ற செங் கிடை வாய்ச்சியர்
    முத்த வாள் நகை முள் எயிற்று ஊறு தேன்,
    பித்தும், மாலும், பிறவும், பெருக்கலால்,
    மத்த வாரணம் என்ன மயங்கினான்; 20

  771. மகுட குண்டலம் ஏய் முகமண்டலத்து
    உகு நெடுஞ் சுடர்க் கற்றை உலாவலால்,
    பகலவன் சுடர் பாய் பனி மால் வரை
    தக மலர்ந்து, பொலிந்து தயங்குவான்; 21

  772. அங்கதன் சுக்கிரீவனை துயில் எழுப்புதல்

  773. கிடந்தனன் - கிடந்தானைக் கிடைத்து இரு
    தடங் கை கூப்பினன், தாரை முன் நாள் தந்த
    மடங்கல் வீரன், நல் மாற்றம் விளம்புவான்
    தொடங்கினான், அவனைத் துயில் நீக்குவான். 22

  774. எந்தை! கேள்; அவ் இராமற்கு இளையவன்,
    சிந்தையுள் நெடுஞ் சீற்றம் திரு முகம்
    தந்து அளிப்ப, தடுப்ப அரும் வேகத்தான்
    வந்தனன்; உன் மனக் கருத்து யாது? என்றான். 23

  775. இனைய மாற்றம் இசைத்தனன் என்பது ஓர்
    நினைவு இலான், நெடுஞ் செல்வம் நெருக்கவும்,
    நனை நறுந் துளி நஞ்சு மயக்கவும்,
    தனை உணர்ந்திலன், மெல் அணைத் தங்கினான். 24

  776. அங்கதன் அனுமனிடம் செல்லுதல்

  777. ஆதலால், அவ் அரசு இளங் கோள் அரி, -
    யாதும் முன் நின்று இயற்றுவது இன்மையால்,
    கோது இல் சிந்தை அனுமனைக் கூவுவான்
    போதல் மேயினன் - போதகமே அனான். 25

  778. அனுமனும் அங்கதனும் தாரையின் மாளிகை சேர்தல்

  779. மந்திரத் தனி மாருதிதன்னொடும்,
    வெந் திறல் படை வீரர் விராய் வர,
    அந்தரத்தின் வந்து, அன்னைதன் கோயிலை,
    இந்திரற்கு மகன் மகன் எய்தினான். 26

  780. தாரையின் உரை

  781. எய்தி, மேல் செயத்தக்கது என்? என்றலும்,
    செய்திர், செய்தற்கு அரு நெடுந் தீயன;
    நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர்;
    உய்திர் போலும், உதவி கொன்றீர்? எனா, 27

  782. மீட்டும் ஒன்று விளம்புகின்றாள், படை
    கூட்டும் என்று, உமைக் கொற்றவன், கூறிய
    நாள் திறம்பின், உம் நாள் திறம்பும் எனக்
    கேட்டிலீர்; இனிக் காண்டிர்; கிடைத்திரால். 28

  783. வாலி ஆர் உயிர் காலனும் வாங்க, விற்
    கோலி, வாலிய செல்வம் கொடுத்தவர்
    போலுமால், உம் புறத்து இருப்பார்! இது
    சாலுமால், உங்கள் தன்மையினோர்க்கு எலாம். 29

  784. தேவி நீங்க, அத் தேவரின் சீரியோன்
    ஆவி நீங்கினன்போல் அயர்வான்; அது
    பாவியாது, பருகுதிர் போலும், நும்
    காவி நாள் மலர்க் கண்ணியர் காதல் நீர். 30

  785. திறம்பினீர் மெய்; சிதைத்தீர் உதவியை;
    நிறம் பொலீர்; உங்கள் தீவினை நேர்ந்ததால்,
    மறம் செய்வான் உறின், மாளுதிர்; மற்று இனிப்
    புறஞ்செய்து ஆவது என்? என்கின்ற போதின்வாய், 31

  786. குரங்குகள் நகரவாயிலைத் அடைத்து கல்லடுக்கி போருக்குச் சித்தமாதல்

  787. கோள் உறுத்தற்கு அரிய குரக்கினம்,
    நீள் எழுத் தொடரும் நெடு வாயிலைத்
    தாள் உறுத்தி, தட வரை தந்தன
    மூளுறுத்தி அடுக்கின, மொய்ம்பினால். 32

  788. சிக்குறக் கடை சேமித்த செய்கைய,
    தொக்குறுத்த மரத்த, துவன்றின;
    புக்கு உறுக்கிப் புடைத்தும் என, புறம்
    மிக்கு இறுத்தன; வெற்பும் இறுத்தன. 33

  789. இலக்குவன் சினத்துடன் கதவை உதைத்தல்

  790. காக்கவோ கருத்து? என்று, கதத்தினால்
    பூக்க மூரல், புரவலர் புங்கவன்,
    தாக்கணங்கு உறை தாமரைத் தாளினால்,
    நூக்கினான் அக் கதவினை, நொய்தினின். 34

  791. காவல் மா மதிலும், கதவும், கடி
    மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும்,
    தேவு சேவடி தீண்டலும், தீண்ட அரும்
    பாவம் ஆம் என, பற்று அழிந்து இற்றவால். 35

  792. குரங்குகள் அஞ்சி, நாள் திசையிலும் ஓடுதல்

  793. நொய்தின் நோன் கதவும், முது வாயிலும்,
    செய்த கல் மதிலும், திசை, யோசனை
    ஐ - இரண்டின் அளவு அடி அற்று உக,
    வெய்தின் நின்ற குரங்கும், வெருக் கொளா, 36

  794. பரிய மா மதிலும், படர் வாயிலும்,
    சரிய வீழ்ந்த; தடித்தின் முடித் தலை
    நெரிய, நெஞ்சு பிளக்க, நெடுந் திசை
    இரியலுற்றன; இற்றில இன் உயிர். 37

  795. பகரவேயும் அரிது; பரிந்து எழும்
    புகர் இல் வானரம் அஞ்சிய பூசலால்,
    சிகர மால் வரை சென்று திரிந்துழி
    மகர வேலையை ஒத்தது, மா நகர். 38

  796. வானரங்கள் வெருவி, மலை ஒரீஇ,
    கான் ஒருங்கு படர, அக் கார் வரை,
    மீ நெருங்கிய வானகம், மீன் எலாம்
    போன பின், பொலிவு அற்றது போன்றதே. 39

  797. தாரையிடம் வழி கேட்டல்

  798. அன்ன காலையில், ஆண் தகை ஆளியும்,
    பொன்னின் நல் நகர் வீதியில் புக்கனன்;
    சொன்ன தாரையைச் சுற்றினர், நின்றவர்,
    என்ன செய்குவது? எய்தினன்! என்றனர். 40

  799. அனுமன் உரைத்த உபாயம்

  800. அனையன் உள்ளமும் - ஆய்வளையாய்! - அலர்
    மனையின் வாயில் வழியினை மாற்றினால்,
    நினையும் வீரன் அந் நீள் நெறி நோக்கலன்;
    வினையம் ஈது என்று அனுமன் விளம்பினான். 41

  801. தாரை இலக்குவனை வழி மறித்தல்

  802. நீர் எலாம், அயல் நீங்குமின்; நேர்ந்து, யான்,
    வீரன் உள்ளம் வினவுவல் என்றலும்,
    பேர நின்றனர், யாவரும்; பேர்கலாத்
    தாரை சென்றனள், தாழ் குழலாரொடும். 42

  803. உரைசெய் வானர வீரர் உவந்து உறை
    அரசர் வீதி கடந்து, அகன் கோயிலைப்
    புரசை யானை அன்னான் புகலோடும், அவ்
    விரை செய் வார் குழல் தாரை விலக்கினாள். 43

  804. விலங்கி, மெல் இயல், வெண் நகை, வெள் வளை,
    இலங்கு நுண் இடை, ஏந்து இள மென் முலை,
    குலம் கொள் தோகை மகளிர் குழாத்தினால்,
    வலம் கொள் வீதி நெடு வழி மாற்றினாள். 44

  805. மகளிர் சூழ தாரை வந்த வகை

  806. வில்லும், வாளும், அணிதொறும் மின்னிட,
    மெல் அரிக் குரல் மேகலை ஆர்த்து எழ,
    பல் வகைப் பருவக் கொடி பம்பிட,
    வல்லி ஆயம் வலத்தினில் வந்ததே. 45

  807. இலக்குவன் அம் மாதரைப் பார்க்க அஞ்சி நிற்றல்

  808. ஆர்க்கும் நூபுரங்கள் பேரி, அல்குல் ஆம் தடந் தேர் சுற்ற,
    வேற் கண் வில் புருவம் போர்ப்ப மெல்லியர் வளைந்தபோது,
    பேர்க்க அருஞ் சீற்றம் பேர, முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால்,
    பார்க்கவும் அஞ்சினான், அப் பனையினும் உயர்ந்த தோளன். 46

  809. தாரை இலக்குவனை நோக்கிப் பேசுதல்

  810. தாமரை வதனம் சாய்த்து, தனு நெடுந் தரையில் ஊன்றி,
    மாமியர் குழுவின் வந்தான் ஆம் என, மைந்தன் நிற்ப,
    பூமியில் அணங்கு அனார்தம் பொதுவிடைப் புகுந்து, பொன் - தோள்
    தூ மன நெடுங் கண் தாரை, நடுங்குவாள், இனைய சொன்னாள்: 47

  811. அந்தம் இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி,
    இந்திரன் முதலினோரால் எய்தல் ஆம் இயல்பிற்று அன்றே?
    மைந்த! நின் பாதம் கொண்டு எம் மனை வரப் பெற்று, வாழ்ந்தேம்;
    உய்ந்தனம்; வினையும் தீர்ந்தேம்; உறுதி வேறு இதனின் உண்டோ ? 48

  812. வெய்தின் நீ வருதல் நோக்கி, வெருவுறும் சேனை, வீர!
    செய்திதான் உணர்கிலாது; திருவுளம் தெரித்தி என்றாள்;
    ஐய! நீ ஆழி வேந்தன் அடி இணை பிரிகலாதாய்;
    எய்தியது என்னை? என்றாள், இசையினும் இனிய சொல்லாள். 49

  813. இலக்குவன் தன் தாயரை நினைந்து நைதலும்

  814. ஆர் கொலோ உரை செய்தார்? என்று அருள் வர, சீற்றம் அஃக,
    பார் குலாம் முழு வெண் திங்கள், பகல் வந்த படிவம் போலும்
    ஏர் குலாம் முகத்தினாளை, இறை முகம் எடுத்து நோக்கி,
    தார் குலாம் அலங்கல் மார்பன், தாயரை நினைந்து நைந்தான். 50

  815. மங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து, வாசக்
    கொங்கு அலர் கோதை மாற்றி, குங்குமம் சாந்தம் கொட்டாப்
    பொங்கு வெம் முலைகள், பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
    நங்கையைக் கண்ட வள்ளல், நயனங்கள் பனிப்ப நைந்தான். 51

  816. தாரைக்கு இலக்குவன் உரைத்த மாற்றம்

  817. இனையர் ஆம், என்னை ஈன்ற இருவரும் என்ன வந்த
    நினைவினால் அயர்ப்புச் சென்ற நெஞ்சினன், நெடிது நின்றான்;
    வினவினாட்கு எதிர் ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும் என்று, அப்
    புனை குழலாட்கு வந்த காரியம் புகல்வது ஆனான்; 52

  818. சேனையும் யானும் தேடித் தேவியைத் தருவென் என்று,
    மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன், அருக்கன் மைந்தன்;
    ஆனவன் அமைதி வல்லை அறி என, அருளின் வந்தேன்;
    மேல் நிலை அனையான் செய்கை விளைந்தவா விளம்புக! என்றான். 53

  819. தாரையின் மறுமொழி

  820. சீறுவாய் அல்லை - ஐய! - சிறியவர் தீமை செய்தால்,
    ஆறுவாய்; நீ அலால், மற்று ஆர் உளர்? அயர்ந்தான் அல்லன்;
    வேறு வேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து, அவ் வேலை
    ஊறுமா நோக்கித் தாழ்த்தான்; உதவி மாறு உதவி உண்டோ ? 54

  821. ஆயிர கோடி தூதர், அரிக் கணம் அழைக்க, ஆணை
    போயினர்; புகுதும் நாளும் புகுந்தது; புகல் புக்கோர்க்குத்
    தாயினும் நல்ல நீரே தணிதிரால்; தருமம் அஃதலால்;
    தீயன செய்யார் ஆயின், யாவரே செறுநர் ஆவார்? 55

  822. அடைந்தவர்க்கு அபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம்
    தொடர்ந்து, நும் பணியின் தீர்ந்தால், அதுவும் நும் தொழிலே அன்றோ?
    மடந்தைதன் பொருட்டால் வந்த வாள் அமர்க் களத்து மாண்டு
    கிடந்திலர் என்னின், பின்னை, நிற்குமோ கேண்மை அம்மா? 56

  823. செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த பேர் உதவி தீரா;
    வெம்மை சேர் பகையும் மாற்றி, அரசு வீற்றிருக்கவிட்டீர்;
    உம்மையே இகழ்வர் என்னின், எளிமையாய் ஒழிவது ஒன்றோ?
    இம்மையே வறுமை எய்தி, இருமையும் இழப்பர் அன்றே? 57

  824. ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று ஆயின்,
    வேண்டுமோ, துணையும் நும்பால்? வில்லுனும் மிக்கது உண்டோ ?
    தேண்டுவார்த் தேடுகின்றீர், தேவியை; அதனைச் செவ்வே
    பூண்டு நின்று உய்த்தற்பாலார், நும் கழல் புகுந்துளோரும். 58

  825. சினம் தணிந்த இலக்குவன் அருகில் அனுமன் வருதல்

  826. என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு,
    நன்று உணர் கேள்வியாளன், அருள்வர, நாண் உட்கொண்டான்,
    நின்றனன்; நிற்றலோடும், நீத்தனன் முனிவு என்று உன்னி,
    வன் துணை வயிரத் திண் தோள் மாருதி மருங்கின் வந்தான். 59

  827. நீயும் மறந்தனையோ? என்று இலக்குவன் வினவ, அனுமன் மறுமொழி உரைத்தல்

  828. வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி,
    அந்தம் இல் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே,
    முந்திய செய்கை? என்றான், முனிவினும் முளைக்கும் அன்பான்,
    எந்தை கேட்டு அருளுக! என்ன இயம்பினன், இயம்ப வல்லான்; 60

  829. சிதைவு அகல் காதல் தாயை, தந்தையை, குருவை, தெய்வப்
    பதவி அந்தணரை, ஆவை, பாலரை, பாவைமாரை,
    வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல் ஆம் ஆற்றல்; மாயா
    உதவி கொன்றார்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ ? 61

  830. ஐய! நும்மோடும், எங்கள் அரிக் குலத்து அரசனோடும்,
    மெய் உறு கேண்மை ஆக்கி, மேலை நாள் விளைவது ஆன
    செய்கை, என் செய்கை அன்றோ? அன்னது சிதையும் ஆயின்,
    உய் வகை எவர்க்கும் உண்டோ ? உணர்வு மாசுண்டது அன்றோ? 62

  831. தேவரும், தவமும், செய்யும் நல் அறத் திறமும், மற்றும்
    யாவையும், நீரே என்பது, என்வயின் கிடந்தது; எந்தாய்!
    ஆவது நிற்க, சேரும் அரண் உண்டோ ? அருள் உண்டு அன்றே -
    மூவகை உலகும் காக்கும் மொய்ம்பினீர்! - முனிவு உண்டானால்? 63

  832. மறந்திலன், கவியின் வேந்தன்; வயப் படை வருவிப்பாரைத்
    திறம் திறம் ஏவி, அன்னார் சேர்வது பார்த்துத் தாழ்த்தான்;
    அறம் துணை நுமக்கு உற்றான் தன் வாய்மையை அழிக்கும் ஆயின்,
    பிறந்திலன் அன்றே? ஒன்றோ? நரகமும் பிழைப்பது அன்றால். 64

  833. உதவாமல் ஒருவன் செய்த உதவிக்குக் கைம்மாறாக,
    மத யானை அனைய மைந்த! மற்றும் உண்டாக வற்றோ -
    சிதையாத செருவில் அன்னான் முன் சென்று, செறுநர் மார்பில்
    உதையானேல், உதையுண்டு ஆவி உலவானேல், உலகில் மன்னோ? 65

  834. ஈண்டு, இனி, நிற்றல் என்பது இனியது ஓர் இயல்பிற்று அன்றால்;
    வேண்டலர் அறிவரேனும், கேண்மை தீர் வினையிற்று ஆமால்;
    ஆண் தகை ஆளி மொய்ம்பின் ஐய! நீர் அளித்த செல்வம்
    காண்டியால், உன்முன் வந்த கவிக் குலக் கோனொடு என்றான். 66

  835. மாருதியின் உரை கேட்ட இலக்குவன் சீற்றம் தணிதல்

  836. மாருதி மாற்றம் கேட்ட, மலை புரை வயிரத் தோளான்,
    தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான், சிந்தை செய்தான் -
    ஆரியன் அருளின் தீர்ந்தான் அல்லன்; வந்து அடுத்த செல்வம்
    பேர்வு அரிதாகச் செய்த சிறுமையான் என்னும் பெற்றி. 67

  837. அனையது கருதி, பின்னர், அரிக் குலத்தவனை நோக்கி,
    நினை; ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது, நின்பால்;
    இனையன உணர்தற்கு ஏற்ற; எண்ணிய நீதி என்னா,
    வனை கழல் வயிரத் திண் தோள் மன் இளங் குமரன் சொல்வான்: 68

  838. தேவியைக் குறித்துச் செற்ற சீற்றமும், மானத் தீயும்,
    ஆவியைக் குறித்து நின்றது, ஐயனை; அதனைக் கண்டேன்;
    கோ இயல் தருமம் நீங்க, கொடுமையோடு உறவு கூடி,
    பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன்; பழியும் பாரேன். 69

  839. ஆயினும், என்னை யானே ஆற்றி நின்று, ஆவி உற்று,
    நாயகன் தனையும் தேற்ற நாள் பல கழிந்த; அன்றேல்,
    தீயும், இவ் உலகம் மூன்றும்; தேவரும் வீவர்; ஒன்றோ?
    வீயும், நல் அறமும்; போகா விதியை யார் விலக்கற்பாலார்? 70

  840. உன்னைக் கண்டு, உம் கோன் தன்னை உற்ற இடத்து உதவும் பெற்றி,
    என்னைக் கண்டனன் போல் கண்டு, இங்கு இத் துணை நெடிது வைகி,
    தன்னை கொண்டு இருந்தே தாழ்த்தான்; அன்று எனின், தனு ஒன்றாலே
    மின்னைக் கண்டனையாள் தன்னை நாடுதல் விலக்கற்பாற்றோ? 71

  841. ஒன்றுமோ, வானம்? அன்றி உலகமும் பதினால் உள்ள
    வென்றி மா கடலும் ஏழ் ஏழ் மலை உள்ள என்னவேயாய்
    நின்றது ஓர் அண்டத்துள்ளே எனின், அது நெடியது ஒன்றோ?
    அன்று நீர் சொன்ன மாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால். 72

  842. தாழ்வித்தீர் அல்லீர்; பல் நாள் தருக்கிய அரக்கர் தம்மை
    வாழ்வித்தீர்; இமையோர்க்கு இன்னல் வருவித்தீர்; மரபின் தீராக்
    கேள்வித் தீயாளர் துன்பம் கிளர்வித்தீர்; பாவம் தன்னை
    மூள்வித்தீர்; முனியாதானை முனிவித்தீர், முடிவின் என்றான். 73

  843. அனுமன் இலக்குவனுக்கு ஆறுதல் கூறி, சுக்கிரீவன் இருப்பிடத்திற்கு வருமாறு அழைத்தல்

  844. தோன்றல் அஃது உரைத்தலோடும், மாருதி தொழுது, தொல்லை
    ஆன்ற நூல் அறிஞ! போன பொருள் மனத்து அடைப்பாய் அல்லை;
    ஏன்றது முடியேம் என்னின், இறத்தும்; இத் திறத்துக்கு எல்லாம்
    சான்று இனி அறனே; போந்து, உன் தம்முனைச் சார்தி என்றான். 74

  845. இலக்குவனும் அனுமனும் செல்லுதல்

  846. முன்னும், நீ சொல்லிற்று அன்றோ முயன்றது; முயற்றுங்காறும்,
    இன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம் என்று கூறி,
    அன்னது ஓர் அமைதியான் தன் அருள் சிறிது அறிவான் நோக்கி,
    பொன்னின் வார் சிலையினானும், மாருதியோடும் போனான். 75

  847. மகளிரோடு தாரை செல்லுதல்

  848. அயில் விழி, குமுதச் செவ் வாய், சிலை நுதல், அன்னப் போக்கின்,
    மயில் இயல், கொடித் தேர் அல்குல், மணி நகை, திணி வேய் மென் தோள்,
    குயில் மொழி, கலசக் கொங்கை, மின் இடை, குமிழ் ஏர் மூக்கின்,
    புயல் இயல் கூந்தல், மாதர் குழாத்தொடும் தாரை போனாள். 76

  849. அங்கதன் இலக்குவனை வணங்கி சுக்கிரீவனுக்குச் செய்தி சொல்லச் செல்லுதல்

  850. வல்ல மந்திரியரோடும், வாலி காதலனும், மைந்தன்
    அல்லி அம் கமலம் அன்ன அடி பணிந்து, அச்சம் தீர்ந்தான்;
    வில்லியும் அவனை நோக்கி, விரைவின் என் வரவு, வீர!
    சொல்லுதி நுந்தைக்கு என்றான்; நன்று என, தொழுது போனான். 77

  851. இலக்குவனின் சினத்துக்கான காரணத்தை சுக்கீரிவன் வினாவுதல்

  852. போனபின், தாதை கோயில் புக்கு, அவன் பொலம் கொள் பாதம்
    தான் உறப் பற்றி, முற்றும் தைவந்து, தடக் கை வீர!
    மானவற்கு இளையோன் வந்து, உன் வாசலின் புறத்தான்; சீற்றம்
    மீன் உயர் வேலை மேலும் பெரிது; இது விளைந்தது என்றான். 78

  853. அறிவுற்று, மகளிர் வெள்ளம் அலமரும் அமலை நோக்கிப்
    பிறிவு உற்ற மயக்கத்தால், முந்து உற்றது ஓர் பெற்றி ஓரான்,
    செறி பொன் - தார் அலங்கல் வீர! செய்திலம் குற்றம்; நம்மைக்
    கறுவுற்ற பொருளுக்கு என்னோ காரணம் கண்டது? என்றான். 79

  854. நிகழ்ந்தவற்றை அங்கதன் எடுத்துரைத்தல்

  855. இயைந்த நாள் எல்லை, நீ சென்று எய்தலை; செல்வம் எய்தி
    வியந்தனை; உதவி கொன்றாய்; மெய் இலை என்ன வீங்கி,
    உயர்ந்தது சீற்றம்; மற்று, அது உற்றது செய்யத் தீர்ந்து,
    நயம் தெரி அனுமன் வேண்ட, நல்கினன், நம்மை இன்னும். 80

  856. வருகின்ற வேகம் நோக்கி, வானர வீரர், வானைப்
    பொருகின்ற நகர வாயில் பொற் கதவு அடைத்து, கற் குன்று
    அருகு ஒன்றும் இல்லா வண்ணம் வாங்கினர் அடுக்கி, மற்றும்
    தெரிகின்ற சினத் தீப் பொங்க, செருச் செய்வான் செருக்கி நின்றார். 81

  857. ஆண்தகை, அதனை நோக்கி, அம் மலர்க் கமலத் தாளால்
    தீண்டினன்; தீண்டாமுன்னம், தெற்கொடு வடக்குச் செல்ல
    நீண்ட கல் மதிலும், கொற்ற வாயிலும், நிரைத்த குன்றும்,
    கீண்டன தகர்ந்து, பின்னைப் பொடியொடும் கெழீஇய அன்றே. 82

  858. அந் நிலை கண்ட, திண் தோள் அரிக் குலத்து அனிகம், அம்மா!
    எந் நிலை உற்றது என்கேன்? யாண்டுப் புக்கு ஒளித்தது என்கேன்?
    இந் நிலை கண்ட அன்னை, ஏந்து இழை ஆயத்தொடு,
    மின் நிலை வில்லினானை வழி எதிர் விலக்கி நின்றாள். 83

  859. மங்கையர் மேனி நோக்கான், மைந்தனும், மனத்து வந்து
    பொங்கிய சீற்றம் பற்றிப் புகுந்திலன்; பொருமி நின்றான்;
    நங்கையும், இனிது கூறி, நாயக! நடந்தது என்னோ,
    எங்கள்பால்? என்னச் சொன்னாள்; அண்ணலும் இனைய சொன்னான். 84

  860. அது பெரிது அறிந்த அன்னை, அன்னவன் சீற்றம் மாற்றி,
    விதி முறை மறந்தான் அல்லன்; வெஞ் சினச் சேனை வெள்ளம்
    கதுமெனக் கொணரும் தூது கல் அதர் செல்ல ஏவி,
    எதிர் முறை இருந்தான் என்றாள்; இது இங்குப் புகுந்தது என்றான். 85

  861. இலக்குவன் வரவை முன்னமே ஏன் தெரிவிக்கவில்லை என சுக்கிரீவன் வினவுதல்

  862. சொற்றலும், அருக்கன் தோன்றல் சொல்லுவான், மண்ணில் விண்ணில்
    நிற்க உரியார்கள் யாவர், அனையவர் சினத்தின் நேர்ந்தால்?
    விற்கு உரியார், இத் தன்மை வெகுளியின் விரைவின் எய்த,
    எற்கு உரையாது, நீர் ஈது இயற்றியது என்கொல்? என்றான். 86

  863. அங்கதன் மறுமொழி கூறல்

  864. உணர்த்தினேன் முன்னர்; நீ அஃது உணர்ந்திலை; உணர்வின் தீர்ந்தாய்;
    புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி, மாருதிக்கு உரைப்பான் போனேன்;
    இணர்த் தொகை ஈன்ற பொன் - தார் எறுழ் வலித் தடந் தோள் எந்தாய்!
    கணத்திடை, அவனை, நீயும் காணுதல் கருமம் என்றான். 87

  865. மதுவினால் மயங்கிய தன்செயலுக்கு சுக்கிரீவன் இரங்குதல்

  866. உறவுண்ட சிந்தையானும் உரை செய்வான்; ஒருவற்கு இன்னம்
    பெறல் உண்டே, அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி? உற்றது
    இறல் உண்டே? என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம்,
    நறவு உண்டு மறந்தேன்; காண நாணுவல், மைந்த! என்றான். 88

  867. ஏயின இது அலால், மற்று, ஏழைமைப் பாலது என்னோ?
    தாய் இவள், மனைவி என்னும் தெளிவு இன்றேல், தருமம் என் ஆம்?
    தீவினை ஐந்தின் ஒன்று ஆம்; அன்றியும், திருக்கு நீங்கா
    மாயையின் மயங்குகின்றோம்; மயக்கின் மேல் மயக்கும் வைத்தாம்! 89

  868. தெளிந்து தீவினையைச் செற்றார் பிறவியைத் தீர்வர் என்ன,
    விளிந்திலா உணர்வினோரும், வேதமும், விளம்பவேயும்,
    நெளிந்து உறை புழுவை நீக்கி, நறவு உண்டு நிறைகின்றேனால் -
    அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின், 90

  869. தன்னைத் தான் உணரத் தீரும், தகை அறு பிறவி என்பது
    என்னத் தான் மறையும் மற்றத் துறைகளும் இசைத்த எல்லாம்,
    முன்னை, தான் தன்னை ஓரா முழுப் பிணி அழுக்கின் மேலே,
    பின்னைத் தான் பெறுவது, அம்மா! நறவு உண்டு திகைக்கும் பித்தோ? 91

  870. அளித்தவர், அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர், அறிவில் மூழ்கிக்
    குளித்தவர், இன்ப துன்பம் குறைத்தவர், அன்றி, வேரி
    ஒளித்தவர் உண்டு, மீண்டு, இவ் உலகு எலாம் உணர ஓடிக்
    களித்தவர் எய்தி நின்ற கதி ஒன்று கண்டது உண்டோ ? 92

  871. செற்றதும் பகைஞர், நட்டார் செய்த பேர் உதவிதானும்,
    கற்றதும், கண்கூடாகக் கண்டதும், கலைவலாளர்
    கொற்றதும், மானம் வந்து தொடர்ந்ததும், படர்ந்த துன்பம்
    உற்றதும், உணராத வயின், இறுதி வேறு இதனின் உண்டோ ? 93

  872. வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபு இல் கொட்பும்,
    தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும், களிப்பும், தாக்கும்;
    கஞ்ச மெல் அணங்கும் தீரும், கள்ளினால்; அருந்தினாரை
    நஞ்சமும் கொல்வது அல்லால், நரகினை நல்காது அன்றே! 94

  873. கேட்டனென், நறவால் கேடு வரும் என; கிடைத்த அச் சொல்
    காட்டியது; அனுமன் நீதிக் கல்வியால் கடந்தது அல்லால்,
    மீட்டு இனி உரைப்பது என்னை? விரைவின், வந்து அடைந்த வீரன்
    மூட்டிய வெகுளியால் யாம் முடிவதற்கு ஐயம் உண்டோ ? 95

  874. ஐய! நான் அஞ்சினேன், இந் நறவினின் அரிய கேடு;
    கையினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால்;
    வெய்யது ஆம் மதுவை இன்னம் விரும்பினேன் என்னின், வீரன்
    செய்ய தாமரைகள் அன்ன சேவடி சிதைக்க என்றான். 96

  875. இலக்குவனை எதிர்கொள்ள சுக்கிரீவன் சுற்றத்தோடு தலைவாயிலில் நிற்றல்

  876. என்று கொண்டு, இயம்பி, அண்ணற்கு எதிர்கொளற்கு இயைந்த எல்லாம்
    நன்று கொண்டு, இன்னும் நீயே நணுகு! என, அவனை ஏவி,
    தன் துணைத் தேவிமாரும், தமரொடும் தழுவ, தானும்
    நின்றனன், நெடிய வாயில் கடைத்தலை, நிறைந்த சீரான். 97

  877. இலக்குவனை வரவேற்ற வானரர் நிலை

  878. உரைத்த செஞ் சாந்தும், பூவும், சுண்ணமும், புகையும், ஊழின்,
    நிரைத்த பொற் குடமும், தீப மாலையும், நிகர் இல் முத்தும்,
    குரைத்து எழு விதானத்தோடு தொங்கலும், கொடியும், சங்கும்,
    இரைத்து இமிழ் முரசும், முற்றும் இயங்கின, வீதி எல்லாம். 98

  879. தூய திண் பளிங்கின் செய்த சுவர்களின் தலத்தில், சுற்றில்,
    நாயக மணியின் செய்த நனி நெடுந் தூணின் நாப்பண்,
    சாயை புக்கு உறலால், கண்டோ ர் அயர்வுற, கை விலோடும்
    ஆயிரம் மைந்தர் வந்தார் உளர் எனப் பொலிந்தது அவ் ஊர். 99

  880. அங்கதனைக் கண்ட இலக்குவன் வினாவும், அங்கதன் மறுமொழியும்

  881. அங்கதன், பெயர்த்தும் வந்து, ஆண்டு அடி இணை தொழுதான், ஐய!
    எங்கு இருந்தான் நும் கோமான்? என்றலும், எதிர்கோள் எண்ணி,
    மங்குல் தோய் கோயில் கொற்றக் கடைத்தலை மருங்கு நின்றான் -
    சிங்க ஏறு அனைய வீர! - செய் தவச் செல்வன் என்றான். 100

  882. சுக்கிரீவன் இலக்குவன் முன் வரவேற்க வந்த வகை

  883. சுண்ணமும் தூசும் வீசி, சூடகத் தொடிக் கைம் மாதர்,
    கண் அகன் கவரிக் கற்றைக் கால் உற, கலை வெண் திங்கள்
    விண் உற வளர்ந்தது என்ன வெண் குடை விளங்க, வீர
    வண்ண வில் கரத்தான் முன்னர், கவிக் குலத்து அரசன் வந்தான். 101

  884. அருக்கியம் முதல் ஆன அருச்சனைக்கு அமைந்த யாவும்
    முருக்கு இதழ் மகளிர் ஏந்த, முரசு இனம் முகிலின் ஆர்ப்ப,
    இருக்கு இனம் முனிவர் ஓத, இசை திசை அளப்ப, யாணர்த்
    திருக் கிளர் செல்வம் நோக்கி, தேவரும் மருளச் சென்றான். 102

  885. வெம் முலை மகளிர் வெள்ளம் மீன் என விளங்க, விண்ணில்
    சும்மை வான் மதியம் குன்றில் தோன்றியது எனவும் தோன்றி,
    செம்மலை எதிர்கோள் எண்ணி, திருவொடு மலர்ந்த செல்வன்,
    அம் மலை உதயம் செய்த தாதையும் அனையன் ஆனான். 103

  886. சுக்கிரீவனைக் கண்டவுடன் எழுந்த சீற்றத்தைத் இலக்குவன் ஆற்றுதல்

  887. தோற்றிய அரிக் குலத்து அரசை, தோன்றலும்,
    ஏற்று எதிர் நோக்கினன்; எழுந்தது, அவ் வழிச்
    சீற்றம்; அங்கு, அதுதனை, தெளிந்த சிந்தையால்
    ஆற்றினன், தருமத்தின் அமைதி உன்னுவான். 104

  888. அனைவரும் மாளிகையை அடைதல்

  889. எழுவினும், மலையினும், எழுந்த தோள்களால்,
    தழுவினர், இருவரும்; தழுவி, தையலார்
    குழுவொடும், வீரர்தம் குழாத்தினோடும் புக்கு,
    ஒழிவு இலாப் பொற் குழாத்து உறையுள் எய்தினார். 105

  890. அரியணையில் அமர உடன்படாது இலக்குவன் கல் தரையில் இருத்தல்

  891. அரியணை அமைந்தது காட்டி, ஐய! ஈண்டு
    இரு எனக் கவிக் குலத்து அரசன் ஏவலும்,
    திருமகள் தலைமகன் புல்லில் சேர, எற்கு
    உரியதோ இஃது? என மனத்தின் உன்னுவான். 106

  892. கல் அணை மனத்தினையுடைக் கைகேசியால்,
    எல் அணை மணி முடி துறந்த எம்பிரான்
    புல் அணை வைக, யான் பொன் செய் பூந் தொடர்
    மெல் அணை வைகவும் வேண்டுமோ? என்றான். 107

  893. என்று அவன் உரைத்தலும், இரவி காதலன்
    நின்றனன்; விம்மினன், மலர்க்கண் நீர் உக;
    குன்று என உயர்ந்த அக் கோயில் குட்டிம
    வன் தலத்து இருந்தனன், மனுவின் கோ மகன். 108

  894. கண்டவர் அனைவரும் உற்ற வருத்தம்

  895. மைந்தரும், முதியரும், மகளிர் வெள்ளமும்,
    அந்தம் இல் நோக்கினர், அழுத கண்ணினர்,
    இந்தியம் அவித்தவர் என இருந்தனர்;
    நொந்தனர்; தளர்ந்தனர்; நுவல்வது ஓர்கிலார். 109

  896. நீராடி அமுது உண்ணச் சுக்கிரீவன் வேண்டலும், இலக்குவன் மறுத்து உரைத்தலும்

  897. மஞ்சன விதி முறை மரபின் ஆடியே,
    எஞ்சல் இல் இன் அமுது அருந்தின், யாம் எலாம்
    உய்ஞ்சனம் இனி என அரசு உரைத்தலும்,
    அஞ்சன வண்ணனுக்கு அனுசன் கூறுவான்: 110

  898. வருத்தமும் பழியுமே வயிறு மீக் கொள,
    இருத்தும் என்றால், எமக்கு இனியது யாவதோ?
    அருத்தி உண்டு ஆயினும், அவலம்தான் தழீஇ,
    கருத்து வேறு உற்றபின், அமிர்தும் கைக்குமால். 111

  899. மூட்டிய பழி எனும் முருங்கு தீ அவித்து,
    ஆட்டினை கங்கை நீர் - அரசன் தேவியைக்
    காட்டினை எனின் - எமைக் கடலின் ஆர் அமிர்து
    ஊட்டினையால்; பிறிது உயவும் இல்லையால். 112

  900. பச்சிலை, கிழங்கு, காய், பரமன் நுங்கிய
    மிச்சிலே நுகர்வது; வேறுதான் ஒன்றும்
    நச்சிலேன்; நச்சினேன் ஆயின், நாய் உண்ட
    எச்சிலே அது; இதற்கு ஐயம் இல்லையால். 113

  901. அன்றியும் ஒன்று உளது; ஐய! யான் இனிச்
    சென்றனென் கொணர்ந்து அடை திருத்தினால், அது
    நுன் துணைக் கோ மகன் நுகர்வது; ஆதலான்,
    இன்று, இறை தாழ்த்தலும் இனிது அன்றாம் என்றான். 114

  902. இலக்குவன் உரை கேட்ட சுக்கிரீவனின் வருத்தம்

  903. வானர வேந்தனும், இனிதின் வைகுதல்,
    மானவர் தலைமகன் இடரின் வைகவே,
    ஆனது குரக்குஇனத்து எமர்கட்கு ஆம்! எனா,
    மேல் நிலை அழிந்து, உயிர் விம்மினான் அரோ. 115

  904. சேனை உடன் வருக! என அனுமனை ஏவி, சுக்கிரீவன் இராமனிடத்திற்குச் செல்லுதல்

  905. எழுந்தனன் பொருக்கென, இரவி கான்முளை;
    விழுந்த கண்ணீரினன், வெறுத்த வாழ்வினன்,
    அழிந்து அயர் சிந்தையன், அனுமற்கு, ஆண்டு, ஒன்று
    மொழிந்தனன், அவனுழைப் போதல் முன்னுவான். 116

  906. போயின தூதரின் புகுதும் சேனையை,
    நீ உடன் கொணருதி, நெறி வலோய்! என,
    ஏயினன், அனுமனை, இருத்தி ஈண்டு எனா,
    நாயகன் இருந்துழிக் கடிது நண்ணுவான். 117

  907. சுக்கிரீவன் இலக்குவனைத் தழுவி, பரிவாரங்களுடன் செல்லுதல்

  908. அங்கதன் உடன் செல, அரிகள் முன் செல,
    மங்கையர் உள்ளமும் வழியும் பின் செல,
    சங்கை இல் இலக்குவன் - தழுவி, தம்முனின்,
    செங் கதிரோன் மகன், கடிது சென்றனன். 118

  909. ஒன்பதினாயிர கோடி யூகம், தன்
    முன் செல, பின் செல, மருங்கு மொய்ப்புற,
    மன் பெருங் கிளைஞரும் மருங்கு சுற்றுற,
    மின் பொரு பூணினான் செல்லும் வேலையில். 119

  910. கொடி வனம் மிடைந்தன; குமுறு பேரியின்
    இடி வனம் மிடைந்தன; பணிலம் ஏங்கின;
    தடி வனம் மிடைந்தன, தயங்கு பூண் ஒளி;
    பொடி வனம் எழுந்தன; வானம் போர்த்தவே. 120

  911. பொன்னினின், முத்தினின், புனை மென் தூசினின்,
    மின்னின மணியினின், பளிங்கின், வெள்ளியின்,
    பின்னின, விசும்பினும் பெரிய; பெட்புறத்
    துன்னின, சிவிகை; வெண் கவிகை சுற்றின. 121

  912. வீரனுக்கு இளையவன் விளங்கு சேவடி
    பாரினில் சேறலின், பரிதி மைந்தனும்,
    தாரினின் பொலங் கழல் தழங்க, தாரணித்
    தேரினில் சென்றனன், சிவிகை பின் செல. 122

  913. எய்தினன், மானவன் இருந்த மால் வரை,
    நொய்தினின் - சேனை பின்பு ஒழிய, நோன் கழல்
    ஐய வில் குமரனும், தானும், அங்கதன்
    கை தொடர்ந்து அயல் செல, காதல் முன் செல, 123

  914. சுக்கிரீவன் இராமன் சேவடி பணிதல்

  915. கண்ணிய கணிப்ப அருஞ் செல்வக் காதல் விட்டு,
    அண்ணலை அடி தொழ அணையும் அன்பினால்,
    நண்ணிய கவிக் குலத்து அரசன், நாள் தொறும்
    புண்ணியன் - தொழு கழல் பரதன் போன்றனன். 124

  916. பிறிவு அருந் தம்பியும் பிரிய, பேர் உலகு
    இறுதியில் தான் என இருந்த ஏந்தலை,
    அறை மணித் தாரினோடு, ஆரம் பார் தொட,
    செறி மலர்ச் சேவடி முடியின் தீண்டினான். 125

  917. இராமன் சுக்கிரீவனைத் தழுவி, நலன் உசாவுதல்

  918. தீண்டலும், மார்பிடைத் திருவும் நோவுற,
    நீண்ட பொன் தடக் கையால் நெடிது புல்லினான்;
    மூண்டு எழு வெகுளி போய் ஒளிப்ப, முன்புபோல்
    ஈண்டிய கருணை தந்து, இருக்கை ஏவியே, 126

  919. அயல் இனிது இருத்தி, நின் அரசும் ஆணையும்
    இயல்பினின் இயைந்தவே? இனிதின் வைகுமே,
    புயல் பொரு தடக் கை நீ புரக்கும் பல் உயிர்?
    வெயில் இலதே, குடை? என வினாயினான். 127

  920. சுக்கிரீவன் தன் பிழைக்கு இரங்குதல்

  921. பொருளுடை அவ் உரை கேட்ட போழ்து, வான்
    உருளுடைத் தேரினோன் புதல்வன், ஊழியாய்!
    இருளுடை உலகினுக்கு இரவி அன்ன நின்
    அருளுடையேற்கு அவை அரியவோ? என்றான். 128

  922. பின்னரும் விளம்புவான், பெருமையோய்! நினது
    இன் அருள் உதவிய செல்வம் எய்தினேன்;
    மன்னவ! நின் பணி மறுத்து வைகி, என்
    புல் நிலைக் குரக்கு இயல் புதுக்கினேன் என்றான். 129

  923. பெருந் திசை அனைத்தையும் பிசைந்து தேடினென்
    தரும் தகை அமைந்தும், அத் தன்மை செய்திலேன்;
    திருந்திழை திறத்தினால், தெளிந்த சிந்தை நீ,
    வருந்தினை இருப்ப, யான் வாழ்வின் வைகினேன். 130

  924. இனையன யானுடை இயல்பும், எண்ணமும்,
    நினைவும், என்றால், இனி, நின்று யான் செயும்
    வினையும், நல் ஆண்மையும், விளம்ப வேண்டுமோ? -
    வனை கழல், வரி சிலை, வள்ளியோய்! என்றான். 131

  925. இராமன் உபசார வார்த்தை கூறி சுக்கிரீவனை தேற்றுதல்

  926. திரு உறை மார்பனும், தீர்ந்ததோ வந்து
    ஒருவ அருங் காலம்? உன் உரிமையோர் உரை -
    தரு வினைத்து ஆகையின், தாழ்விற்று ஆகுமோ?
    பரதன் நீ! இனையன, பகரற்பாலையோ? 132

  927. இராமன் அனுமன் பற்றி வினவ, சுக்கிரீவன் அவன் படையுடன் வருவான் எனல்

  928. ஆரியன், பின்னரும் அமைந்து, நன்கு உணர்
    மாருதி எவ் வழி மருவினான்? என,
    சூரியன் கான் முளை, தோன்றுமால், அவன்
    நீர் அரும் பரவையின் நெடிது சேனையான். 133

  929. கோடி ஓர் ஆயிரம் குறித்த கோது இல் தூது
    ஓடின; நெடும் படை கொணர்தல் உற்றதால்;
    நாள் தரக் குறித்ததும், இன்று; நாளை, அவ்
    ஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால். 134

  930. ஒன்பதினாயிர கோடி உற்றது
    நின் பெருஞ் சேனை; அந் நெடிய சேனைக்கு
    நன்கு உறும் அவதி நாள் நாளை; நண்ணிய
    பின், செயத்தக்கது பேசற்பாற்று என்றான். 135

  931. படைகள் வந்ததும் வருமாறு இராமன் சொல்ல சுக்கிரீவன் தொழுது செல்லுதல்

  932. விரும்பிய இராமனும், வீர! நிற்கு அது ஓர்
    அரும் பொருள் ஆகுமோ? அமைதி நன்று எனா,
    பெரும் பகல் இறந்தது; பெயர்தி; நின் படை
    பொருந்துழி வா என, தொழுது போயினான். 136

  933. அங்கதனையும் சுக்கிரீவனுடன் அனுப்பி, இராமன் இலக்குவனுடன் வைகுதல்

  934. அங்கதற்கு இனியன அருளி, ஐய! போய்த்
    தங்குதி உந்தையோடு என்று, தாமரைச்
    செங் கணான், தம்பியும், தானும், சிந்தையின்
    மங்கையும், அவ் வழி, அன்று வைகினான். 137

  935. மிகைப் பாடல்கள்

  936. தெள்ளியோர் உதவ, பெருஞ் செல்வம் ஆம்
    கள்ளினால், அதிகம் களித்தான்; கதிர்ப்
    புள்ளி மா நெடும் பொன் வரை புக்கது ஒர்
    வெள்ளி மால் வரை என்ன விளங்குவான். 18-1

  937. சென்று மாருதி தன்னிடம் சேர்ந்து, அவண்
    நின்ற தன்மைகள் யாவும் நிகழ்த்தலும்,
    வென்றி வீரன் வியப்பொடு மேல்வினை
    ஒன்றுவான் அவன் தன்னை உசாவினான். 25-1

  938. நீளும் மால் வரையின் நெறிதான் கடந்து,
    ஊழி காலத்து ஒரு முதல் ஆகிய
    ஆழிநாதனுக்கு அன்புடைத் தம்பியாம்
    மீளிதான் வரும் வேகத்துக்கு அஞ்சியே. 32-1

  939. மேவினான் கடை சேமித்த மென்மை கண்டு
    ஓவு இலா மனத்து உன்னினன்-எங்கள் பால்
    பாவியார்கள் தம் பற்று இதுவோ எனாத்
    தேவரானும் சினத்தொடு நோக்கியே. 34-1

  940. அன்னை போன பின், அங்கதக் காளையை,
    தன்னை நேர் இல் அச் சமீரணன் காதலன்,
    இன்னம் நீ சென்று, இருந் துயில் நீக்கு என,
    மன்னன் வைகு இடத்து ஏகினன், மாசு இலான். 41-1

  941. சேய் உயர் கீர்த்தியான், கதிரின் செம்மல்பால்
    போயதும், அவ் வயின் புகுந்த யாவையும்,
    ஓய்வுறாது உணர்த்து என, உணர்த்தினான் அரோ,
    வாய்மையா - உணர்வுறு வலி கொள் மொய்ம்பினோன். 137-1