MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    திருமந்திரம்

    ஏழாம் தந்திரம்

    1. ஆறு ஆதாரம்

    1704
    நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
    கோவிமேல் நின்ற குறிகள் பதினாறும்
    மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும்
    காலங்கண் டான்அடி காணலும் ஆமே. 1

    1705
    ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்
    மேதாதி நாதாந்த மீதாம் பாராசக்தி
    போதா லயத்துஅ விகாரந்தனிற்போத
    மேதாதி ஆதார மீதான உண்மையே. 2

    1706
    மேல்என்றும் கீழ்என்று இரண்டற் காணுங்கால்
    தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும்
    பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரம்
    கார்ஒன்று கற்பகம் ஆகிநின்றானே. 3

    1707
    ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
    மேதாதி ஈரெண் காலந்தத்து விண்ணொளி
    போதா லயத்துப் புலன்கர ணம் புத்தி
    சாதா ரணங்கெட்டான் தான்சக மார்க்கமே. 4

    1708
    மேதாதி யாலே விடாதுஓம் எனத்தூண்டி
    ஆதார சோதனை அத்துவ சோதனை
    தாதுஆர மாசுவே தானெழச் சாதித்தால்
    ஆதாரஞ் செய்போக மாவது காயமே. 5

    1709
    ஆறந்த மும்கூடி யாரும் உடம்பினில்
    கூறிய ஆதார மற்றும் குறிக்கொண்மின்
    ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே
    ஊறிய ஆதாரத்து ஓரெழுத்து ஆமே. 6

    1710
    ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல்
    போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்
    ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
    ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே. 7

    1711
    ஆயு மலரின் அணிமலர் மேலது
    ஆய இதழும் பதினாறும் அங்குள
    தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
    மேய அறிவாய் விளைந்தது தானே. 8

    2. அண்டலிங்கம் (உலக சிவம்)

    1712
    இலிங்கம தாவது யாரும் அறியார்
    இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
    இலிங்கம் தாவது எண்ணெண் கலையும்
    இலிங்கம தாக எடுத்தது உலகே. 1

    1713
    உலகில் எடுத்தது சத்தி முதலா
    உலகில் எடுத்தது சத்தி வடிவாய்
    உலகில் எடுத்தது சத்தி குணமாய்
    உலகில் எடுத்த சதாசிவன் தானே. 2

    1714
    போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
    ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பாலாம்
    ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம்
    ஆகம அத்துவா ஆறும் சிவமே. 3

    1715
    ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் ஈசனை
    வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்று
    ஆர்த்தினர் அண்டங் கடந்து அப் புறநின்று
    காத்தனன் என்னும் கருத்தறி யாரே. 4

    1716
    ஒண்சுட ரோன் அயன் மால்பிர சாபதி
    ஒண்சுட ரான இரவியோடு இந்திரன்
    கண்சுட ராகிக் கலந்தெங்கும் தேவர்கள்
    தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே. 5

    1717
    தாபரத் துள்நின்று அருளவல் லான்சிவன்
    மாபரத் துண்மை வழிபடு வாரில்லை
    மாபரத் துண்மை வழிபடு வாளர்க்கும்
    பூவகத்து உள்நின்ற பொற்கொடி யாகுமே. 6

    1718
    தூவிய விமானமும் தூலமது ஆகுமால்
    ஆய சதாசிவம் ஆகுநற் சூக்குமம்
    ஆய பலிபீடம் பத்திர லிங்கமாம்
    ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே. 7

    1719
    முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
    கொத்தும்அக்கொம்பு சிலைநீறு கோமளம்
    அத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம்
    உய்த்த்தின் சாதனம் பூமண லிங்கமே. 8

    1720
    துன்றும் தயிர்நெய் பால்துய்ய மெழுகுடன்
    கன்றிய செம்பு கனல்இர தம்சலம்
    வன்திறல் செங்கல் வடிவுடை வில்வம்பொன்
    தென்தியங்கு ஒன்றை தெளிசிவ லிங்கமே. 9

    1721
    மறையவர் அர்ச்சனை வண்படி கந்தான்
    இறையவர் அர்ச்சனை யேயபொன் னாகும்
    குறைவிலா வசியர்க்குக் கோமள மாகும்
    துறையடைச் சூத்திரர் தொல்வாண லிங்கமே. 10

    1722
    அது வுணர்ந் தோன்ஒரு தன்மையை நாடி
    எதுஉண ராவகை நின்றனன் ஈசன்
    புதுஉணர் வான புவனங்கள் எட்டும்
    இது உணர்ந்து என்னுடல் கோயில்கொண்டானே. 11

    1723
    அகலிட மாய்அறி யாமல் அடங்கும்
    உகலிட மாய்நின்ற ஊனதன் உள்ளே
    பகலிட மாம்முனம் பாவ வினாசன்
    புகலிட மாய்நின்ற புண்ணியன் தானே. 12

    1724
    போது புனைசூழல் பூமிய தாவது
    மாது புனைமுடி வானக மாவது
    நீதியுள் ஈசன் உடல்விசும் பாய்நிற்கும்
    ஆதியுற நின்றது அப்பரி சாமே. 13

    1725
    தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்
    திரைபொரு நீரது மஞ்சன சாலை
    வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை
    கரையற்ற நந்திக் கலையும்திக்காமே. 14

    3. பிண்டலிங்கம் (உடற் சிவம்)

    1726
    மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
    மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
    மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
    மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே. 1

    1727
    உலந்திலர் பின்னும் உளரென நிற்பர்
    நிலந்திரு நீர்தெளி யூனவை செய்யப்
    புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக
    வலந்தரு தேவரை வந்திசெய் யீரே. 2

    1728
    கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
    வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்
    தாயில்கொண் டாற்போல் தலைவன்என் உட்புக
    வாயில்கொண் டு ஈசனும் ஆளவந் தானே. 3

    1729
    கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை
    வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள
    பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு
    வாயில்கொண் டான் எங்கள் மாநந்தி தானே. 4

    4. சதாசிவ லிங்கம் (உலக முதற் சிவம்)

    1730
    கூடிய பாதம் இரண்டும் படிமிசை
    பாடிய கையிரண்டு எட்டுப் பரந்தெழும்
    தேடு முகம்ஐந்து செங்கையின் மூவைந்து
    நாடும் சதாசிவம் நல்லொளி முத்தே. 1

    1731
    வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன்
    மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
    ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்
    சாதா ரணமாம் சதாசிவந் தானே. 2

    1732
    ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை
    ஆகின்ற சத்தியின் உள்ளே கதிரெழ
    ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின்
    ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே. 3

    1733
    அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
    அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்
    அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு
    அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே. 4

    1734
    சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துள
    சமயத்து எழுந்த இராசி ஈராறுள
    சமயத்து எழுந்த சரீரம்ஆ றெட்டுள
    சமயத்து எழுந்த சதாசிவந் தானே. 5

    1735
    நடுவு கிழக்குத் தெற்குஉத் தரமேற்கு
    நடுவு படிகநற் குங்குமவன்னம்
    அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால்
    அடியேற்கு அருளிய முகம்இவை அஞ்சே. 6

    1736
    அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள
    அஞ்சினொ டுஅஞ்சு கரதலம் தானுள
    அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென்
    நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே. 7

    1737
    சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
    சத்தி சிவமிக்க தாபர சங்கமம்
    சத்தி உருவம் அருவம் சதாசிவம்
    சத்தி சிவதத்துவ முப்பத் தாறே. 8

    1738
    தத்துவ மாவது அருவம் சராசரம்
    தத்துவ மாவது உருவம் சுகோதயம்
    தத்துவம் எல்லாம் சகலமு மாய்நிற்கும்
    தத்துவம் ஆகும் சதாசிவம் தானே. 9

    1739
    கூறுமின் ஊறு சதாசிவன் எம்இறை
    வேறோர் உரைசெய்து மிகைப்பொரு ளாய்நிற்கும்
    ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடு
    மாறுசெய் வான் என் மனம்புகுந் தானே. 10

    1740
    இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
    சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்
    அருளார்ந்த சிந்தையெம் ஆதிப் பிரானைத்
    தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திருந் தேனே. 11

    1741
    சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் காற்றிடில்
    உத்தமம் வாமம் உரையத்து இருந்திடும்
    தத்துவம் பூருவம் தற்புரு டன்சிரம்
    அத்தரு கோரம் மருடத்துஈ சானனே. 12

    1742
    நாணுநல் ஈசானன் நடுவுச்சி தானாகும்
    தாணுவின் தன்முகம் தற்புருட மாகும்
    காணும் அகோரம் இருதயம் குய்யமாம்
    மாணுற வாமம்ஆம் சத்திநற் பாதமே. 13

    1743
    நெஞ்சு சிரம்சிகை நீள்கவ சம்கண்ணாம்
    வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம்
    செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும்
    செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே. 14

    1744
    எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்
    விண்ணிற் பரைசிரம் மிக்க சிகையாதி
    வண்ணங் கவசம் வனப்புடை இச்சையாம்
    பண்ணுங் கிரியை பரநேந் திரத்திலே. 15

    1745
    சத்திநாற் கோணம் சலமுற்று நின்றிடும்
    சத்திஅறு கோண சயனத்தை உற்றிடும்
    சத்தி வட்டம் சலமுற்று இருந்திடும்
    சத்தி உருவாம் சதாசிவன் தானே. 16

    1746
    மான் நந்தி எத்தனை காலம் அழைக்கினும்
    தான் நந்தி அஞ்கின் தனிச்சுடை ராய்நிற்கும்
    கால் நந்தி உந்தி கடந்து கமலத்தில்
    மேல் நந்தி ஒன்பதின் மேவிநின் றானே. 17

    1747
    ஒன்றிய வாறும் உடலின் உடன்கிடந்து
    என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது
    தென்தலைக்கு ஏறத் திருந்து சிவனடி
    நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே. 18

    1748
    உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக்
    கொணர்ந்தேன் குவலயம் கோயிலென் நெஞ்சம்
    புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே
    பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே. 19

    1749
    ஆங்கவை Yமூன்றினும் ஆரழல் வீசிடத்
    தாங்கிடும் ஈரேழு தான்நடு வானதில்
    ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆமென
    ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே. 20

    1750
    தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்
    தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்
    தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாய்
    தன்மேனி தானாகும் தற்பரம் தானே. 21

    1751
    ஆரும் அறியார் அகாரம் அவனென்று
    பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
    தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
    மாறி எழுந்திடும் ஓசையதாமே. 22

    1752
    இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
    இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
    இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம்
    இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே. 23

    5. ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவம் )

    1753
    அகார முதலா அனைத்துமாய் நிற்கும்
    உகார முதலா உயிர்ப்பெய்து நிற்கும்
    அகார உகாரம் இரண்டும் அறியில்
    அகார உகாரம் இலிங்கம் தாமே. 1

    1754
    ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும்
    மேதாதி நாதமும் மீதே விரிந்தன
    ஆதார விந்து ஆதிபீட நாமே
    போதாஇ லிங்கப் புணர்ச்சிய தாமே. 2

    1755
    சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
    சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
    சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்
    சத்தி சிவமாகும் தாபரம் தானே. 3

    1756
    தானேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
    வானேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம்
    பூரேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்
    தானேர் எழுகின்ற அகாரமது ஆமே. 4

    1757
    விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்
    விந்துவ தேபீட நாதம் இலிங்கமாம்
    அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
    வந்து கருஐந்தம் செய்யும் அவைஐந்தே. 5

    1758
    சத்திநற் பீடம் தகுநல்ல ஆன்மா
    சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும்
    சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம்
    சத்திநல் ஆன்மாச் சதாசிவம் தானே. 6

    1759
    மனம்புகுந்து என்னுயிர் மன்னிய வாழ்க்கை
    மனம்புகுந்து இன்பம் பொழிகின்ற போது
    நலம்புகுந்து என்னொடு நாதனை நாடும்
    இனம்புகுந்து ஆதியும் மேற்கொண்டவாறே. 7

    1760
    பராபரன் எந்தை பனிமதி சூடி
    தராபரன் தன்னடி யார்மனக் கோயில்
    சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னும்
    அராபரன் மன்னி மனத்துஉறைந் தானே. 8

    1761
    பிரான்அல்ல நாம்எனில் பேதை உலகம்
    குரால்என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன்
    அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும்
    பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே. 9

    1762
    அன்று நின் றான்கிடந் தான்அவன் என்று
    சென்றுநின்று எண்டிசை ஏத்துவர் தேவர்கள்
    என்றுநின்று ஏத்துவன் எம்பெரு மான்தன்னை
    ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந் தானே. 10

    6. ஞான லிங்கம் (உணர்வுச் சிவம் )

    1763
    உருவும் அருவும் உருவோடு அருவும்
    மருவு பரசிவன் மன்பல் உயிர்க்கும்
    குருவு மெனநிற்கும் கொள்கையன் ஆகும்
    தருவென நல்கும் சதாசிவன் தானே. 1

    1764
    நாலான கீழது உருவம் நடுநிற்க
    மேலான நான்கும் அருவம் மிகுநாப்பண்
    நாலான ஒன்றும் அருவுரு நண்ணலால்
    பாலாம் இவையாம் பரசிவன் தானே. 2

    1765
    தேவர் பிரானைத் திசைமுக நாதனை
    நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை
    ஏவர் பிரான்என்று இறைஞ்சுவர் அவ்வழி
    யாவர் பிரானடி அண்ணலும் ஆமே. 3

    1766
    வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற
    ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற
    காண்டகை யானொடும் கன்னி உணரினும்
    மூண்டகை மாறினும் ஒன்றது வாமே. 4

    1767
    ஆதி பரந்தெய்வம் அண்டத்து நல்தெய்வம்
    சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
    நீதியுள் மாதெய்வம் நின்மலர் எம்இறை
    பாதியுள் மன்னும் பராசத்தி யாமே. 5

    1768
    சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே
    சுத்த சிவபதம் தோயாத தூவொளி
    அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம்
    ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே. 6

    1769
    கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும்
    எழுந்திடம் காணில் இருக்கலும் ஆகும்
    பரந்திடம் காணில் பார்ப்பதி மேலே
    திரண்டெழக் கண்டவன் சிந்தையு ளானே. 7

    1770
    எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்
    முந்த உரைத்து முறைசொல்லின் ஞானமாம்
    சந்தித்து இருந்த இடம்பெருங் கண்ணியை
    உந்தியின் மேல்வைத்து உகந்து இருந்தானே. 8

    1771
    சத்தி சிவன்விளை யாட்டாம் உயிராகி
    ஒத்த இருமாயா கூட்டத்து இடையூட்டிச்
    சுத்தம தாகும் துரியம் பிறிவித்துச்
    சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே. 9

    1772
    சத்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணி
    சத்தி சிவமுமாம் சிவன்சத் தியுமாகும்
    சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லை
    சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே. 10

    7. சிவலிங்கம் ( சிவகுரு )

    1773
    குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
    பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்
    நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
    வரைத்து வலம்செயு மாறுஅறி யேனே. 1

    1774
    வரைத்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு
    நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
    உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப்
    புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே. 2

    1775
    ஒன்றெனக் கண்டோ ம் ஈசன் ஒருவனை
    நன்றென்று அடியிணை நான்அவனைத்தொழ
    வென்றுஐம் புலமும் மிகக்கிடந்து இன்புற
    அன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே. 3

    1776
    மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன்
    பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
    நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்
    பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே. 4

    1777
    மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று
    ஆவி எழும்அள வன்றே உடலுற
    மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
    பாவித்து அடக்கிற் பரகதி தானே. 5

    8. சம்பிரதாயம் ( பண்டை முறை )

    1778
    உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு
    படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து
    நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கி
    கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே. 1

    1779
    உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான
    வியவார் பரமும்பின் மேவும் பிராணன்
    செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே
    உயலார் குருபரன் உய்யக் கொண்டானே. 2

    1780
    பச்சிம திக்கலே வைத்தஆ சாரியன்
    நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள்
    உச்சிக்கும் கீழது உள்நாக்கு மேலது
    வைச்ச பதமிது வாய்திற வாதே. 3

    1781
    பிட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவோனை
    ஒட்டடித்து உள்ளமர் மாசெலாம் வாங்கித்
    தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்
    வட்டமது ஒத்தது வாணிபம் வாய்த்ததே. 4

    1782
    தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன்
    இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
    பிரிக்கின்ற விந்து பிணக்கறுத்து எல்லாம்
    கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்டேனே. 5

    1783
    கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு
    நாடி அடிவைத்து அருள்ஞான சத்தியால்
    பாடல் உடலினில் பற்றற நீக்கியே
    கூடிய தானவ னாம்குளிக் கொண்டே. 6

    1784
    கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ளக்
    கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக்
    கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால்
    கொண்டான் எனஒன்றும் கூறகி லானே. 7

    1785
    குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி
    நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்
    பறிக்கின்ற காயத்தைப் பற்றியநேர்மை
    பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே. 8

    1786
    உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்
    உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை
    உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம்
    உணர்வுடை யார்கண் உணர்ந்துகண் டாரே. 9

    1787
    காயப் பரப்பில் அலைந்து துரியத்துச்
    சால விரிந்து குவிந்து சகலத்தில்
    ஆயஅவ் ஆறாறு அடைந்து திரிந்தோர்க்குத்
    தூய அருள்தந்த நந்திக்கு என் சொல்வதே. 10

    1788
    நானென நீயென வேறில்லை நண்ணுதல்
    ஊனென ஊனுயிர் என்ன உடனின்று
    வானென வானவர் நின்று மனிதர்கள்
    தேனென இன்பம் திளைக்கின்ற வாறே. 11

    1789
    அவனும் அவனும் அவனை அறியார்
    அவனை அறியில் அறிவானும் இல்லை
    அவனும் அவனும் அவனை அறியில்
    அவனும் அவனும் அவனிவன் ஆமே. 12

    1790
    நானிது தானென நின்றவன் நாடோ றும்
    ஊனிது தானுயிர் போலுணர் வானுளன்
    வானிரு மாமுகில் போற்பொழி வானுளன்
    நானிது அம்பர நாதனும் ஆமே. 13

    1791
    பெருந்தன்மை தானென யானென வேறாய்
    இருந்ததும் இல்லைஅது ஈசன் அறியும்
    பொருந்தும் உடல்உயிர் போல்உமை மெய்யே
    திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே. 14

    9. திருவருள் வைப்பு

    1792
    இருபத மாவது இரவும் பகலும்
    உருவது ஆவது உயிரும் உடலும்
    அருளது ஆவது அறமும் தவமும்
    பொருவது உள்நின்ற போகமது ஆமே. 1

    1793
    காண்டற்கு அரியன் கருத்திலன் நந்தியும்
    தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும்
    வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம்
    ஈண்டிக் கிடந்தங்கு இருளறும் ஆமே. 2

    1794
    குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
    வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்
    செறிப்புறு சிந்தையைக் சிக்கென நாடில்
    அறிப்புறு காட்சி அமரரும் ஆமே. 3

    1795
    தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்
    பேர்ந்தறி வான் எங்கள் பிஞ்ஞகன் எம்இறை
    ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாமெனச்
    சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே. 4

    1796
    தானே அறியும் வினைகள் அழிந்தபின்
    நானே அறிகிலன் நந்தி அறியுங்கொல்
    ஊனே உருகி உணர்வை உணர்ந்தபின்
    தேனே யனையன் நம் தேவர் பிரானே. 5

    1797
    நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை
    வான்அறிந் தார் அறி யாது மயங்கினர்
    ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
    தான்அறி யான்பின்னை யார்அறி வாரே? 6

    1798
    அருள்எங்கு மான அளவை அறியார்
    அருளை நுகர்அமு தானதும் தேரார்
    அருள்ஐங் கருமத்து அதிசூக்கம் உன்னார்
    அருள்எங்கும் கண்ணானது ஆர்அறி வாரே. 7

    1799
    அறிவில் அணுக அறிவது நல்கிப்
    பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட்டு
    அறிவது ஆக்கி அடியருள் நல்கும்
    செறிவொடு நின்றார் சிவம்ஆயி னாரே. 8

    1800
    அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு
    அருளில் அழிந்துஇளைப் பாறி மறைந்திட்டு
    அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி
    அருளால் என்நந்தி அகம்புகுந் தானே. 9

    1801
    அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி
    அருளால் அடிபுணைந்து ஆர்வமும் தந்திட்டு
    அருளானஆனந்தந்து ஆரமுது ஊட்டி
    அருளால் என்நந்தி அதும்புகுந் தானே. 10

    1802
    பாசத்தில் இட்டது அருள்அந்தப் பாசத்தின்
    நேசத்தை விட்டது அருள்அந்தநேசத்தில்
    கூசற்ற முத்தி அருள்அந்தக் கூட்டத்தின்
    நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே. 11

    1803
    பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
    மறவா அருள் தந்த மாதவன் நந்தி
    அறவாழி அந்தணன் ஆதிப்பராபரன்
    உறவாகி வந்துஎன் உளம்புகுந் தானே. 12

    1804
    அகம்புகுந் தான்அடி யேற்குஅரு ளாலே
    அகம்புகுந் தும்தெரி யான்அருள் இல்லோர்க்கு
    அகம்புகுந்து ஆனந்த மாக்கிச் சிவமாய்
    அகம்புகுந் தான்நந்தி ஆனந்தி யாமே. 13

    1805
    ஆயும் அறிவோடு அறியாத மாமாயை
    ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும்
    ஆய பலஇந் திரியம் அவற்றுடன்
    ஆய அருள்ஐந்து மாம் அருட் செய்கையே. 14

    1806
    அருளே சகலமும் ஆய பவுதிகம்
    அருளே சராசர மாய அமலமே
    இருளே வெளியே யெனும்எங்கும் ஈசன்
    அருளே சகளத்தின் அன்றிஇன் றாமே. 15

    1807
    சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து
    தவமான ஐம்முகன் ஈசன் அரனும்
    பவமுறும் மாலும் பதுமத்தோன் ஈறா
    நவம்அவை யாகி நடிப்பவன் தானே. 16

    1808
    அருட்கண்இ லாதார்க்கு அரும்பொருள் தோன்றா
    அருட்கண்உ ளோர்க்குஎதிர் தோன்றும் அரனே
    இருட்கண்ணி னோர்க்குஅங்கு இரவியும் தோன்றாத்
    தெருட்கண்ணி னோர்க்குஎங்கும் சீரொளி யாமே. 17

    1809
    தானே படைத்திடும் தானே அளித்திடும்
    தானே துடைத்திடும் தானே மறைத்திடும்
    தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும்
    தானே வியாபித் தலைவனும் ஆமே. 18

    1810
    தலையான நான்கும் தனதுஅரு வாகும்
    அலையா அருவுரு வாகும் சதாசிவம்
    நிலையான கீழ்நான்கு நீடுரு வாகும்
    துலையா இறைமுற்று மாய் அல்லது ஒன்றே. 19

    1811
    ஒன்றது வாலே உலப்பிலி தானாகி
    நின்றது தான்போல் உயிர்க்குயி ராய்நிலை
    துன்றி அவைஅல்ல வாகும் துணையென்ன
    நின்றது தான்விளை யாட்டென்னுள் நேயமே. 20

    1812
    நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு
    ஆயக் குடிலைகள் நாதம் அடைந்திட்டுப்
    போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு
    வீயத் தகாவிந்து வாக விளையுமே. 21

    1813
    விளையும் பரவிந்து தானே வியாபி
    விளையும் தனிமாயை மிக்கமா மாயை
    கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம்
    அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே. 22

    10. அருள் ஒளி

    1814
    அருளில் தலைநின்று அறிந்துஅழுந் தாதார்
    அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்
    அருளின் பெருமை அறியார் செறியார்
    அருளில் பிறந்திட்டு அறிந்துஅறி வாரே. 1

    1815
    வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
    ஆரா அமுதளித்து ஆனந்தி பேர்நந்தி
    பேரா யிரமுடைப் பெம்மான்பேர் ஒன்றினில்
    ஆரா அருட்கடல் ஆடுகென் றானே. 2

    1816
    ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
    தேடியும் கண்டேன் சிவன்பெரும் தன்மையைக்
    கூடிய வாறே குறியாக் குறிதந்தென்
    ஊடுநின் றான்அவன் தன்னருள் உற்றே. 3

    1817
    உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும்
    பற்றிய மாயாப் படலம் எனப் பண்ணி
    அத்தனை நீயென்று அடிவைத்தேன் பேர்நந்தி
    கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே. 4

    1818
    விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
    விளக்கினை முன்னே வேதனை மாறும்
    விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
    விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே. 5

    1819
    ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா
    ஒளியு ளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும்
    ஒளியுருள் கண்டகண் போலவே றாயுள
    ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே. 6

    1820
    புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி
    நிறமே புகுந்தென்னை நின்மலன் ஆக்கி
    அறமே புகுந்தெனக்கு ஆரமுது ஈந்த
    திறம்ஏதென்று எண்ணித் திகைத்திருந் தேனே. 7

    1821
    அருளது என்ற அகலிடம் ஒன்றும்
    பொருளது என்ற புகலிடம் ஒன்றும்
    மருளது நீங்க மனம்புகுந் தானைத்
    தெருளுறும் பின்னைச் சிவகதி தாமே. 8

    1822
    கூறுமின் நீர்முன் பிறந்திங்கு இறந்தமை
    வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும்
    பாறணி யும்உடல் வீழலிட்டு ஆருயிர்
    தேறுஅணிவோம்இது செப்பவல் லீரே. 9

    11. சிவபூசை

    1823
    உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
    வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
    தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
    கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே. 1

    1824
    வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
    காட்டவும் நாம்இலம் காலையும் மாலையும்
    ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்
    பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே. 2

    1825
    பான்மொழி பாகன் பராபரன் தானாகும்
    ஆன சதாசிவன் தன்னைஆ வாகித்து
    மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு
    சீன்முகம் செய்யச் சிவனவன் ஆகுமே. 3

    1826
    நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
    கனைகழல் ஈசனைக் காண அரிதாம்
    கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்
    புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. 4

    1827
    மஞ்சன மாலை நிலாவிய வானவர்
    நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
    அஞ்சமு தாம்உப சாரம்எட்டு எட்டோ டும்
    அஞ்சலி யோடும் கலந்துஅர்ச்சித் தார்களே. 5

    1828
    புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
    அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும்
    எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை
    நண்ணறி யாமல் நழுவுகின் றாரே. 6

    1829
    அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள்
    ஒத்தமெய்ஞ் ஞானத்து உயர்ந்தார் பதத்தைச்
    சுத்தம தாக விளக்கித் தெளிக்கவே
    முத்தியாம் என்று நம்மூலன் மொழிந்ததே. 7

    1830
    மறப்புற்று இவ்வழி மன்னிநின் றாலும்
    சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி
    மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம்
    அறப்பெற வேண்டும் அமரர் பிரானே. 8

    1831
    ஆரா தனையும் அமரர் குழாங்களும்
    தீராக் கடலும் நிலத்துஉம தாய்நிற்கும்
    பேரா யிரமும் பிரான்திரு நாமமும்
    ஆரா வழியெங்கள் ஆதிப் பிரானே. 9

    1832
    ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணம்தொழத்
    தான்அந்த மில்லாத் தலைவன் அருளது
    தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்ததோர்
    பார்ஐங் குணமும் படைத்துநின் றானே. 10

    1833
    உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி
    மழைக்கொண்ட மாமுகில் மேற்சென்று வானோர்
    தழைக்கொண்ட பாசம் தயங்கிநின்று ஏத்தப்
    பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே. 11

    1834
    வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு
    உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு
    கள்ளக் கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார்
    அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே. 12

    1835
    கழிப்படுந் தண்கடற் கௌவை யுடைத்து
    வழிப்படு வார்மலர் மொட்டுஅறி யார்கள்
    பழிப்படு வார்பல ரும்பழி வீழ
    வெளிப்படு வோர்உச்சி மேவிநின் றானே. 13

    1836
    பயனறிவு ஒன்றுண்டு பன்மலர் தூவிப்
    பயனறி வார்க்குஅரன் தானே பயிலும்
    நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர
    வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே. 14

    1837
    ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்று
    ஆர்த்தெமது ஈசன் அருட்சே வடியென்றன்
    மூர்த்தியை மூவா முதலுறு வாய்நின்ற
    தீர்த்தனை யாரும் துதித்துஉண ராரே. 15

    1838
    தேவர்க ளோடுஇசை வந்துமண் ணோடுறும்
    பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனை
    மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள்
    நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே. 16

    1839
    உழைக்கவல் லோர்நடு நீர்மலர் ஏந்திப்
    பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி
    இழைக்கொண்ட பாதத்து இனமலர் தூவி
    மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே. 17

    1840
    வென்று விரைந்து விரைப்பணி என்றனர்
    நின்று பொருந்த இறைபணி நேர்படத்
    துன்று சலமலர் தூவித் தொழுதிடில்
    கொண்டிடும் நித்தலும் கூறியஅன்றே. 18

    1841
    சாத்தியும் வைத்தும் சயம்புஎன்று ஏத்தியும்
    ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
    ஆத்தி மலக்கிட்டு அகத்துஇழுக்கு அற்றக்கான்
    மாத்திக்கே செல்லும் வழியது வாமே. 19

    1842
    ஆவிக் கமலத்தில் அப்புறத்து இன்புற
    மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
    கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்
    தாவிக்கு மந்திரம் தாமறி யாரே. 20

    1843
    காண்ஆகத் துள்ளேஅழுந்திய மாணிக்கம்
    காணும் அளவும் கருத்தறி வாரில்லை
    பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு
    மாணிக்க மாலை மனம்புகுந் தானே. 21

    1844
    பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
    இருந்தன்மை யாலும் என் நெஞ்சுஇடங் கொள்ள
    வருந்தன்மை யாளனை வானவர் தேவர்
    தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே. 22

    1845
    சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்
    அமையும் விசேடமும் ஆனமந் திரசுத்தி
    சமையநிர் வாணம் கலாசுத்தி யாகும்
    அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே. 23

    1846
    ஊழிதோ றூழி உணர்ந்தவர்க்கு அல்லது
    ஊழில் உயிரை உணரவும் தான்ஒட்டா
    ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்
    ஊழி கடந்தும் ஓர்உச்சியு ளானே. 24

    12. குருபூசை

    1847
    ஆகின்ற நந்தி அடித்தா மரைபற்றிப்
    போகின்றுபதேசம் பூசிக்கும் பூசையும்
    ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின்மேல்
    போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே. 1

    1848
    கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
    வானுற மாமலர் இட்டு வணங்கினும்
    ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது
    தேனமர் புங்குழல் சேரஒண் ணாதே. 2

    1849
    மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
    ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை
    ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்
    சேவடி சேரல் செயலறல் தானே. 3

    1850
    உச்சியும் காலையும் மாலையும் ஈசனை
    நச்சுமின் நச்சி நமவென்று நாமத்தை
    விச்சிமின் விச்சு விரிசுடர் மூன்றினும்
    நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே. 4

    1851
    புண்ணிய மண்டலம் பூசைநா றாகுமாம்
    பண்ணிய மேனியும் பத்துநூ றாகுமாம்
    எண்ணிலிக்கு ஐயம் இடில்கோடி யாகுமால்
    பண்ணிடில் ஞானிஊண் பார்க்கில் விசேடமே. 5

    1852
    இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை
    வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்
    இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடை
    வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே. 6

    1853
    இந்துவும் பானுவும் என்றெழு கின்றதோர்
    விந்துவும் நாதமும் ஆகிமீ தானத்தே
    சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
    நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே. 7

    1854
    மனபவ னங்களை மூலத்தான் மாற்றி
    அனித உடல்பூத மாக்கி அகற்றிப்
    புனிதன் அருள்தனில் புக்கிருந்து இன்பத்
    தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே. 8

    1855
    பகலும் இரவும் பயில்கின்ற பூசை
    இயல்புடை ஈசர்க்கு இணைமல ராகப்
    பகலும் இரவும் பயிலாத பூசை
    சகலமும் தான்கொள்வன் தாழ்சடை யோனே. 9

    1856
    இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
    பராக்குஅற ஆனந்தத் தேறல் பருகி
    இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
    இராப்பகல் மாயை இரண்டுஇடத் தேனே. 10

    13. மகேசுவர பூசை

    1857
    படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்
    நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
    நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
    படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே. 1

    1858
    தண்டுஅறு சிந்தை தபோதனார் தாம்மகிழ்ந்து
    உண்டது மூன்று புவனமும் உண்டது
    கொண்டது மூன்று புவனமும் கொண்டதுஎன்று
    எண்திசை நந்தி எடுத்துரைத் தானே. 2

    1859
    மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை
    ஆத்தனுக்கு ஈந்த அரும்பொரு ளானது
    மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்
    தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே. 3

    1860
    அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்
    சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில்என்
    பகரு ஞானி பகல்ஊண் பலத்துக்கு
    நிகரில்லை என்பது நிச்சயம் தானே. 4

    1861
    ஆறிடும் வேள்வி அருமறை நூலவர்
    கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில்
    நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலை
    பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே. 5

    1862
    ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று
    நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்
    ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று
    வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே. 6

    1863
    சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
    பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை
    நான்நொந்து நொந்து வருமளவுஞ் சொல்லப்
    பேர்நந்தி என்னும் பிதற்குஒழி யேனே. 7

    1864
    அழிதகவு இல்லா அரன்அடி யாரைத்
    தொழுகை ஞாலத்துத் தூfங்கிருள் நீங்கும்
    பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
    தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே. 8

    1865
    பகவற்குஏதா கிலும் பண்பில ராகிப்
    புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
    முகமத்தோடு ஒத்துநின்று ஊழிதோ றூழி
    அகமத்த ராகிநின்று ஆய்ந்தொழிந் தா ரே 9

    1866
    வித்தக மாகிய வேடத்தர் உண்டஊன்
    அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
    சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின்
    முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே. 10

    1867
    தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
    ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும்
    ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும்
    போழ்வினை தீர்க்கும் அப் பொன்னுலகு ஆமே. 11

    14. அடியார் பெருமை

    1868
    திகைக்குரி யானொரு தேவனை நாடும்
    வகைக்குரி யானொரு வாது இருக்கில்
    பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்
    அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே. 1

    1869
    அவ்வுல கத்தே பிறந்துஅவ் உடலோணடும்
    அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
    அவ்வுல கத்தே அரனடி கூடுவர்
    அவ்வுல கத்தே அருள்பெறு வாரே. 2

    1870
    கொண்ட குறியும் குலவரை உச்சியும்
    அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்
    எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்தினுள்
    உண்டெனில் நாம்இனி உய்ந்தொழிந் தோமே. 3

    1871
    அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
    கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்
    பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும்
    கண்டசிவனும்என் கண்ணன்றி இல்லையே. 4

    1872
    பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள்
    உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக்
    கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிரும்
    அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. 5

    1873
    இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
    மயங்கா வழிசெல்வர் வானுலகு ஆள்வர்
    புயங்களும் எண்டிசை போதுபா தாள
    மயங்காப் பகிரண்ட மாமுடி தானே. 6

    1874
    அகம்படி கின்றநம் ஐயனை ஒரும்
    அகம்படி கண்டவர் அல்லலில் சேரார்
    அகம்படி உட்புக்கு அறிகின்ற நெஞ்சம்
    அகம்படி கண்டுஆம் அழிக்கலும் எட்டே. 7

    1875
    கழிவும் முதலும் காதல் துணையும்
    அழிவும் தாய்நின்ற ஆதிப் பிரானைப்
    பழியும் புகழும் படுபொருள் முற்றும்
    ஒழியும்என் ஆவி உழவுகொண் டானே 8

    1876
    என்தாயோடு என்அப்பன் ஏழ்ஏழ் பிறவியும்
    அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
    ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான்
    நின்றான் முகில்வண்ணன் நேர்எழுத் தாமே. 9

    1877
    துணிந்தார் அகம்படி துன்னி உறையும்
    பணிந்தார் அகம்படி பால்பட்டு ஒழுகும்
    அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
    கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே. 10

    1878
    தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி
    மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்
    புலைமிசை நீங்கிய பொன்னுலகு ஆளும்
    பலமிசை செய்யும் படர்சடை யோனே. 11

    1879
    அறியாப் பருவத்து அரன்அடி யாரைக்
    குறியால் அறிந்தின்பம் கொண்டது அடிமை
    குறியார் சடைமுடி கட்டி நடப்பார்
    மறியார் புனல்மூழ்க மாதவம் ஆமே. 12

    1880
    அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
    சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
    அவன்பால் அணுகியே நாடும் அடியார்
    இவன்பால் பெருமை இலயமது ஆமே. 13

    1881
    முன்னிருந் தார்முழுது எண்கணத் தேவர்கள்
    எண்ணிறந்து அன்பால் வருவர் இருநிலத்து
    எண்இரு நாலு திசைஅந் தரம் ஒக்கப்
    பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே. 14

    1882
    சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம்
    அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும்
    நவயோகம் கைகூடும் நல்லியல் காணும்
    பவயோகம் இன்றிப் பரலோகம் ஆமே. 15

    1883
    மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன்
    மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன்
    மேலுணர் வார்மிகு ஞாலத்து அமரர்கள்
    மேலுணுர் வார்சிவன் மெய்யடி யார்களே. 16

    15. போசன விதி

    1884
    எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு
    கட்ட அடிசில் அழுதென்று எதிர்கொள்வர்
    ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்
    விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே. 1

    1885
    அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர்
    உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்குப்
    பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து
    இச்சைவிட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே. 2

    16. பிட்சா விதி

    1886
    விச்சுக் கலம் உண்டு வேலிச்செய் ஒன்றுண்டு
    உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது
    அச்சம்கெட்டு அச்செயல் அறுத்துண்ண மாட்டாதார்
    இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே. 1

    1887
    பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில்
    பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப்
    பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப்
    பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே. 2

    1888
    பரந்துலகு ஏழும் படைத்த பிரானை
    இரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும்
    நிரந்தக மாக நினையும் அடியார்
    இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே. 3

    1889
    வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்
    தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்
    பொரஇருந் தான்புக லேபுக லாக
    வரஇருந் தால்அறி யான்என்ப தாமே. 4

    1890
    அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்
    தங்கார் சிவனடி யார்சரீரத்திடைப்
    பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்
    தங்கார் சிவனைத் தலைப்படு வாரே. 5

    1891
    மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும்
    கையதும் நீண்டார் கடைத்தலைக் கேசெல்வர்
    ஐயம் புகாமல் இருந்த தவசியார்
    வையகம் எல்லாம் வரஇருந்தாரே. 6

    17. முத்திரை பேதம்

    நாலேழு மாறவே நண்ணிய முத்திரை
    பாலான மோன மொழியில் பதிவித்து
    மேலான நந்தி திருவடி மீதுய்யக்
    கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே. 1

    1893
    துரியங்கள் மூன்று சொருகுஇட னாகி
    அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
    மருவிய சாம்பவி கேசரி உண்மை
    பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே. 2

    1894
    சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம்
    ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரை
    ஓம்பயில் ஒங்கிய உண்மைய கேசரி
    நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரையே. 3

    1895
    தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்
    ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால்
    ஏனைச் சிவமாம் சொரூபம் மறைந்திட்ட
    மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே. 4

    1896
    வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம்
    வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
    வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரே
    ஆக்கும் அச் சுத்த்ததை யார்அறி வார்களே. 5

    1897
    யோகத்தின் முத்திரை ஓர்அட்ட சித்தியாம்
    ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்
    ஆகத் தகும்வேத கேசரி சாம்பவி
    யோகத்துக் கேசரி யோகமுத் திரையே. 6

    1898
    யோகிஎண் சித்தி அருளொலி வாதனை
    போகி தன் புத்தி புருடார்த்த நன்னெறி
    ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை
    ஏகமும் கண்டொன்றில் எய்திநின் றானே. 7

    1899
    துவாதச மார்க்கமென் கோடச மார்க்கமாம்
    அவாஅறும் ஈர்ஐ வகைஅங்கம் ஆறும்
    தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை
    நவாஅக மோடுஉன்னல் நற்சுத்த சைவமே. 8

    1900
    மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை
    ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை
    தேனிக்கும் முத்திரை சித்தாந்த முத்திரை
    கானிக்கும் முத்திரை கண்ட சமயமே. 9

    1901
    தூநெறி கண்ட சுவடு நடுவுஎழும்
    பூநெறி கண்டுஅது பொன்னக மாய்நிற்கும்
    மேல்நெறி கண்டது வெண்மதி மேதினி
    நீல்நெறி கண்டுள நின்மலன் ஆமே. 10

    18. பூரணக் குகை நெறிச் சமாதி

    1902
    வளர்பிறை யில்தேவர் தம்பாலின் முன்னி
    உளரொளி பானுவின் உள்ளே ஒடுங்கித்
    தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்
    உளதுறும் யோகி உடல்விட்டால் தானே. 1

    1903
    தான்இவை ஒக்கும் சமாதிaக கூடாது
    போன வியோகி புகலிடம் போந்துபின்
    ஆனவை தீர நிரந்தர மாயோகம்
    ஆனவை சேர்வார் அருளின் சார் வாகியே. 2

    1904
    தான்இவ் வகையே புவியோர் நெறிதங்கி
    ஆன சிவயோகத்து ஆமாறுஆம் அவ்விந்து
    தானதில் அந்தச் சிவயோகி ஆகுமுன்
    ஊனத்தோர் சித்திவந்து ஓர்காயம் ஆகுமே. 3

    1905
    சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்
    தவலோகம் சேர்ந்துபின் தான்வந்து கூடிச்
    சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பர்
    புவலோகம் போற்றும்நற் புண்ணியத்தோரே. 4

    1906
    ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால்
    தானற மோனச் சமாதியுள் தங்கியே
    தானவன் ஆகும் பரகாயம் சாராதே
    ஊனமில் முத்தராய் மீளார் உணர்வுற்றே. 5

    1907
    செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில்
    செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்
    செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
    செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே. 6

    1908
    உன்னக் கருவிட்டு உரவோன் அரன்அருள்
    பன்னப் பரமே அருட்குலம் பாலிப்பன்
    என்னப் புதல்வர்க்கும் வேண்டி யிடுஞானி
    தன்இச்சைக்கு ஈசன் உருச்செய்யும் தானே. 7

    1909
    எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்
    தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம்
    அங்காங்கு எனநின்று சகமுண்ட வான்தோய்தல்
    இங்கே இறந்துஎங்கு மாய்நிற்கும் ஈசனே. 8

    19. சமாதிக் கிரியை

    1910
    அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
    வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்
    நொந்து நாய்நரி நுகரின் நுண்செரு
    வந்துநாய் நரிக்கு உணவாகும் வையகமே. 1

    1911
    எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில்
    அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும்
    மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
    எண்ணரு மன்னர் இழப்பார் அரசே. 2

    1912
    புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது
    நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்
    மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்
    மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல்மண்டியே. 3

    1913
    அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
    அந்த உடல்தான் குகைசெய்து இருந்திடில்
    சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும்
    அந்தமில் இன்ப அருள்பெறு வாரே. 4

    1914
    நவமிகு சாணாலே நல்லாழம் செய்து
    குவைமிகு சூழஐஞ் சாணாகக் கோட்டித்
    தவமிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
    பவமறு நற்குகை பத்மா சனமே. 5

    1915
    தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை
    நன்மலர்ச் சோலை நகரின்நற் பூமி
    உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
    இந்நிலம் தான்குகைக்கு எய்தும் இடங்களே. 6

    1916
    நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
    நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப்
    பொற்பமா ஓசமும் மூன்றுக்கு மூன்றுஅணி
    நிற்பவர் தாம் செய்யும் நேர்மைய தாமே. 7

    1917
    பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து
    விஞ்சப் படுத்துஅதன் மேல்ஆ சனம்இட்டு
    முஞ்சிப் படுத்துவெண் ணீறு இட்ட தன்மேலே
    பொன்செய் நற்சுண்ணம் பொதியலும் ஆமே. 8

    1918
    நள்குகை நால்வட்டம் படுத்துஅதன் மேல்சாரக்
    கள்ளவிழ தாமம் களபம்கத் தூரியும்
    தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து
    ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே. 9

    1919
    ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்
    மீதினில் இட்டுஆ சனத்தினின் மேல் வைத்துப்
    போதறு கண்ணமும் நறும் பொலிவித்து
    மீதில் இருத்தி விரித்திடு வீரே. 10

    1920
    விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
    பொரித்த கறிபோ னகம் இள நீரும்
    குருத்தலம் வைத்துஓர் குழைமுகம் பார்வை
    தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே. 11

    1921
    மீது சொரிந்திடும் வெண்ணீறும் கண்ணமும்
    போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
    பாத உதகத்தான் மஞ்சனம் செய்துபார்
    மீதுமூன் றுக்குமூன்று அணிநிலம் செய்யுமே. 12

    1922
    ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
    போதும் இரண்டினில் ஒன்றைத் தாபித்து
    மேதரு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
    காதலில் சோடசம் காண்உப சாரமே. 13

    20. விந்துற்பனம்

    1923
    உதயத்தில் விந்துவில் ஓங்குகுண் டலியும்
    உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்
    விதியில் பிரமாதி கள்மிகு சத்தி
    கதியில் கரணம் கலைவை கரியே. 1

    1924
    செய்திடும் விந்துபே தத்திறன் ஐ ஐந்தும்
    செய்திடும் நாதபேதத்திற னால் ஆறும்
    செய்திடும் மற்றவை ஈர்இரண்டில்திறம்
    செய்திடும் ஆறுஆறு சேர்தத் துவங்களே. 2

    1925
    வந்திடு பேத மெலாம்பர விந்துமேல்
    தந்திடு மாமாயை வாகேசி தற்பரை
    உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி
    விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே. 3

    1926
    விளங்கு நிவர்த்தாதி மேலக ராதி
    வளங்கொள் உகாரம் மகாரத் துள்விந்து
    களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி
    உளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே. 4

    1927
    அந்தமும் ஆதியும் ஆகிப் பராபரன்
    வந்த வியாபி எனலாய அந்நெறி
    கந்தம தாகிய காரண காரியம்
    தந்துஐங் கருமமும் தான்செய்யும் வீயமே. 5

    1928
    வீயம தாகிய விந்துவின் சத்தியால்
    ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக்
    காயஐம் பூதமும் காரிய மாயையில்
    ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே. 6

    1929
    புறம்அகம் எங்கும் புகுந்துஒளிர் விந்து
    நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை
    உறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள்
    திறனொடு வீடுஅளிக் கும்செயல் கொண்டே. 7

    1930
    கொண்டஇவ் விந்து பரமம்போல் கோதற
    நின்ற படம்கட மாய்நிலை நிற்றலின்
    கண்டக லாதியின் காரண காரியத்து
    அண்டம் அனைத்துமாய் மாமாயை ஆகுமே. 8

    1931
    அதுவித்தி லேநின்று அங்கு அண்ணிக்கும் நந்தி
    இதுவித்தி லேஉள வாற்றை உணரார்
    மதுவித்தி லேமலர் அன்னம தாகிப்
    பொதுவித்திலே நின்ற புண்ணியன் தானே. 9

    1932
    வித்தினில் அன்றி முளையில்லை அம்முளை
    வித்தினில் அன்றி வெளிப்படு மாறில்லை
    வித்தும் முளையும் உடனன்றி வேறில்லை
    அத்தன்மை யாரும் அரன்நெறி காணுமே. 10

    1933
    அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம்
    பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத்
    திருந்தும் உடன்மன மாம் கூறு சேர்ந்திட்டு
    இருந்தன முன்னாள் இரதமது ஆகுமே. 11

    1934
    இரதம் முதலான ஏழ்தாது மூன்றில்
    உரிய தினத்தில் ஒருபுல் பனிபோல்
    அரிய துளிவிந்து வாகும்ஏழ் மூன்றின்
    மருவிய விந்து வளரும்கா யத்திலே. 12

    1935
    காயத்தி லேமூன்று நாளில் கலந்திட்டுக்
    காயத்துள் தன்மனம் ஆகும் கலாவிந்து
    நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
    மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே. 13

    1936
    அழிகின்ற விந்து அளவை அறியார்
    கழிகின்ற தன்னையுட் காக்கலும் தேரார்

    அழிகின்ற காயத்து அழிந்துஅயர் உற்றோர்
    அழிகின்ற தன்மை அறிந்தொழி யாரே. 14

    21. விந்து ஜயம் - போக சரவோட்டம்

    1937
    பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்
    ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்
    பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
    சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே. 1

    1938
    தானே அருளால் சிவயோகம் தங்காது
    தானேஅக் காமாதி தங்குவோ னும் உட்கும்
    தானே அதிகாரம் தங்கில் சடங்கெடும்
    ஊனே அவற்றுள் உயிர்ஒம்பா மாயுமே. 2

    1939
    மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில்
    ஓயா இருபக்கத்து உள்வளர் பக்கத்துள்
    ஏயாஎண் நாள்இன்ப மேல்பனி மூன்றிரண்டு
    ஆயா அபரத்துள் ஆதிநாள் ஆறாமே. 3

    1940
    ஆறுஐந்து பன்னொன்றும் அன்றிச் சகமார்க்கம்
    வேறுஅன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம்தோடு
    ஏறும் இருபத் தொருநாள் இடைத்தோங்கும்
    ஆறின் மிகுந்தோங்கும் அக்காலம் செய்யவே. 4

    1941
    செய்யும் அளவில் திருநான் முகூர்த்தமே
    எய்யும் கலைகாலம் இந்து பருதிகால்
    நையுமிடத்து ஓடி நன்கா நூல்நெறி
    செய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே. 5

    1942
    விடுங்காண் முனைந்துஇந் திரியங்க ளைப் போல்
    நடுங்காது இருப்பானும் ஐஐந்தும் நண்ணப்
    படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக்
    கடுங்காற் கரணம் கருத்துறக் கொண்டே. 6

    1943
    கொண்ட குணனே நலமேநற் கோமளம்
    பண்டை உருவே பகர்வாய் பவளமே
    மிண்டு தனமே மிடைய விடும் போதில்
    கண்ட கரணம் உட் செல்லக்கண் டேவிடே. 7

    1944
    விட்டபின் கர்ப்பஉற் பத்தி விதியிலே
    தொட்டுறுங் காலங்கள் தோன்றக் கருதிய
    கட்டிய வாழ்நாள் சாம்நாள் குணம் கீழ்மைசீர்ப்
    பட்ட நெறியிதுஎன்று எண்ணியும் பார்க்கவே. 8

    1945
    பார்த்திட்டு வையத்துப் பரப்பற்று உருப்பெற்று
    வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
    சேர்த்துற்று இருதிங்கள் சேராது அகலினும்
    மூப்புற்றே பின்னாளில் ஆம்எல்லாம் உள்ளவே. 9

    1946
    வித்திடு வோர்க்கு அன்றி மேலோர் விளைவில்லை
    வித்திடு வோர்க்கு அன்றி மிக்கோர் அறிவில்லை
    வித்தினில் வித்தை விதற உணர்வரேல்
    மத்தில் இருந்ததோர் மாங்கனி யாமே. 10

    1947
    கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
    கருத்துளன் ஈசன் கருஉயிரோடும்
    கருத்தது வித்தாய்க் காரண காரியம்
    கருத்தறு மாறுஇவை கற்பனை தானே. 11

    1948
    ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும்
    அழியாப் பிராணன் அதிபலஞ் சத்தி
    ஒழியாத புத்தி தபஞ்செப மோனம்
    அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே. 12

    1949
    வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்
    துற்ற சுழியனல் சொருகிக் சுடருற்று
    முற்று மதியத்து அமுதை முறைமுறை
    செற்றுண் பவரே சிவயோகி யாரே. 13

    1950
    யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
    யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்
    மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும்
    ஆகிய விந்து அழியாத அண்ணலே. 14

    1951
    அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும்
    மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
    கண்ணும் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்து
    உண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே. 15

    1952
    அறியாது அழிகின்ற ஆதலால் நாளும்
    பொறியால் அழிந்து புலம்புகின் றார்கள்
    அறிவாய் நனவில் அதீதம் புரியச்
    செறிவாய் இருந்து சேரவே வாயுமே. 16

    1953
    மாதரை மாய வரும் கூற்றம் என்றுன்னக்
    காதலது ஆகிய காமம் கழிந்திடும்
    சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும்
    சோதியின் உள்ளே துரிசறும் காலமே. 17

    1954
    காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன்
    காலம் கடந்தழிந் தான்விந்து செற்றவன்
    காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை
    காலின்கண் வந்த கலப்பறி யாரே. 18

    1955
    கலக்கு நாள் முன்னாள் தன்னிடைக் காதல்
    நலத்தக வேண்டில் அந் நாரி யுதரக்
    கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை
    விலக்கு வனசெய்து மேலணை வீரே. 19

    1956
    மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும்
    கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
    பாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால்
    மாலா னதுமான மாளும் அவ்விந்துவே. 20

    1957
    விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்
    அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
    நந்திய நாசமும் நாதத்தால் பேதமும்
    தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே. 21

    1958
    விந்துஎன் வீசத்தை மேவிய மூலத்து
    நந்திய அங்கிய னாலே நயந்தெரிந்து
    அந்தமில் பானுஅதிகண்ட மேலேற்றிச்
    சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே. 22

    1959
    அமுதச் சசிவிந்து வாம்விந்து மாள
    அமுதப் புனலோடி அங்கியின் மான
    அமுதச் சிவயோகம் ஆதலால் சித்தி
    அமுதப் பலாவனம் ஆங்குறும் யோகிக்கே. 23

    1960
    யோகம் அவ் விந்து ஒழியா வகையுணர்ந்து
    ஆகம்இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப்
    போகம் சிவபோகம் போகிநற் போகமா
    மோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே. 24

    1961
    மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து
    காதலி னால்விடார் யோகம் கலந்தவர்
    மாதர் உயிராசை கைக்கொண்ட வாடுவர்
    காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே. 25

    1962
    சாற்றிய விந்து சயமாகும் சத்தியால்
    ஏற்றிய மூலத் தழலை எழமூட்டி
    நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோடு
    ஆற்றி அமுதம்அருந்தவித் தாமே. 26

    1963
    விந்துவும் நாதமும் மேலக் கனல்மூல
    வந்த அனல் மயிர்க் கால்தோறும் மன்னிடச்
    சிந்தனை மாறச் சிவம்அக மாகவே
    விந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே. 27

    1964
    வித்துக்குற் றுண்பான் விளைவுஅறி யாதவன்
    வித்துக்குற் றுண்ணாமல் வித்துச் சுட்டு உண்பான்
    வித்துகுற் றுண்பானில் வேறலன் ஈற்றவன்
    வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித்தான் அன்றே. 28

    1965
    அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு
    மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு
    மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட
    வன்னத் திருவிந்து மாயும் கா யத்திலே. 29

    1966
    அன்னம் பிராணன்என் றார்க்கும் இருவிந்து
    தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்
    சொன்ன மாம்உருத் தோன்றும்எண் சித்தியாம்
    அன்னவர் எல்லாம் அழிவற நின்றதே. 30

    1967
    நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
    ஒன்றும் மகாரம் ஒருமூன்றோடு ஒன்றவை
    சென்று பராசக்தி விந்து சயந்தன்னை
    ஒன்ற உரைக்க உபதேசம் தானே. 31

    1968
    தானே உபதேசம் தானல்லாது ஒன்றில்லை
    வானே உயர்விந்து வந்த பதினான்கு
    மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும்
    தானே சிவகதி தன்மையும் ஆமே. 32

    1969
    விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
    வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்
    அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும்
    விந்து அடங்க விளையும் சிவோகமே. 33

    1970
    வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி
    நிறுக்கின்ற வாறும் அந் நீள்வரை ஒட்டிப்
    பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை
    அறுக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை
    அறுக்கின்ற நாள்வரும் அத்திப் பழமே. 34

    1971
    விந்துவும் நாதமும் மேவியுடன் கூடிப்
    சந்திர னோடே தலைப்படு மாயிடில்
    சுந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்
    அங்குஉதி மந்திரம் ஆகுதி யாகுமே. 35

    1972
    மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன
    இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி
    மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
    கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே. 36

    1973
    சத்தமும் சத்த மனமும் மனக்கருத்து
    ஒத்துஅறி கின்ற இடமும் அறிகிலர்
    மெய்த்து அறிகின்ற இடம்அறி வாளர்க்கு
    அத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே. 37

    1974
    உரம்அடி மேதினி உந்தியில் அப்பாம்
    விரவிய தன்முலை மேவிய கீழ்அங்கி
    கருமலை மீமிசை கைக்கீழிற் காலாம்
    விரவிய சுந்தரம் மேல்வெளி யாமே. 38

    22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்

    1975
    செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்
    மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்
    எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி
    தஞ்சுட ராக வணங்கும் தவமே. 1

    1976
    பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம்
    புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன்
    இகலற ஏழுல கும்உற வோங்கும்
    பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே. 2

    1977
    ஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும்
    சோதியின் உள்ளே சுடரொளி யாய்நிற்கும்
    வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
    ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே. 3

    1978
    தானே உலகுக்குத் தத்துவனாய் நிற்கும்
    தானே உலகுக்குத் தையலு மாய்நிற்கும்
    தானே உலகுக்குச் சம்புவு மாய்நிற்கும்
    தானே உலகுக்குத் தண்சுட ராகுமே. 4

    1979
    வவையமுக் கோணம் வட்டம் அறுகோணம்
    துலையிரு வட்டம் துய்ய விதம்எட்டில்
    அலையுற்ற வட்டத்தில் ஈர்எட்டு இதழாம்
    மலைவுற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே. 5

    1980
    ஆதித்தன் உள்ளி லானமுக் கோணத்தில்
    சோதித்து இலங்கும்நற் சூரியன் நாலாம்
    கேத முறுங்கேணி சூரியன் எட்டில்
    சோதிதன் நீட்டில் சோடசம் தானே. 6

    1981
    ஆதித்த னோடே அவனி இருண்டது
    பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது
    சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற
    வேதப் பொருளை விளங்குகி லீரே. 7

    1982
    பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி
    யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள்
    நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
    ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே. 8

    1983
    மண்ணை இடந்துஅதின் கீழொடும்
    விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும்
    கண்ணை இடந்து களிதந்த ஆனந்தம்
    எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே. 9

    1984
    பாரை இடந்து பகலோன் வரும்வழி
    யாரும் அறியார் அருங்கடை நூலவர்
    தீரன் இருந்த திருமலை சூழ்என்பர்
    ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே. 10

    23. பிண்டாதித்தன்

    1985
    நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
    கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன்
    கொன்று மலங்கன் குழல்வழி ஓடிட
    வென்று விளங்கும் விரிசுடர் காணுமே. 1

    1986
    ஆதித்தன் ஓடி அடங்கும் இடங்கண்டு
    சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர்
    பேதித்து உலகம் பிதற்றும் பிதற்றெல்லாம் ஆதித்த
    னோடே அடங்குகின் றாரே. 2

    1987
    உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து
    சொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை
    சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு
    உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே. 3

    24. மன ஆதித்தன்

    1988
    எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும்
    எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப
    விரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவி
    ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே. 1

    1989
    சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
    முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை
    அந்த இரண்டும் உபய நிலத்தில்
    சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே. 2

    1990
    ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதி
    ஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர்
    ஆகும் அருக்கன் அனல்மதி யோடுஒன்ற
    ஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே. 3

    1991
    ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி
    ஓர் அண்டத் தார்க்கும் உணரா உணர்வது
    பேர்அண்டத்து ஊடே பிறங்கொளி யாய்நின்று
    ஆர் அண்டத் தக்கார் அறியத்தக் காரே. 4

    1992
    ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும்
    ஒன்பதும் ஈசன் இயல்அறி வார்இல்லை
    முன்புஅதின் மேவி முதல்வன் அருளிலார்
    இன்பம் இலார்இருள் சூழநின் றாரே. 5

    25. ஞானாதித்தன்

    1993
    விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்து
    அந்த அபரம் பரநாத மாகியே
    வந்தன தம்மில் பரங்கலை யாதிவைத்து
    உந்தும் அருணோ தயமென்ன உள்ளத்தே. 1

    1994
    உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்
    தெள்ளும் பரநாதத் தின்செயல் என்பதால்
    வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்கு
    உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே. 2

    1995
    தேவர் பிரான்திசை பத்துஉத யஞ்செய்யும்
    மூவர் பிரான்என முன்னொரு காலத்து
    நால்வர் பிரான்நடு வாயுரை யாநிற்கும்
    மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே. 3

    1996
    பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை
    மையிருள் நீக்கும் மதிஅங்கி ஞாயிறு
    செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்
    கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே. 4

    1997
    தனிச்சுடர் ஏற்றித் தயங்கிருள் நீங்க
    அனித்திடும் மேலை அருங்கனி ஊறல்
    கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன்
    நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே. 5

    1998
    நேரறி வாக நிரம்பிய பேரொளி
    போரறி யாது புவனங்கள் போய்வரும்
    தேரறி யாத திசையொளி யாயிடும்
    ஆரறி வாரிது நாயக மாமே. 6

    1999
    மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்
    கண்டிதத் துள்ளே கதிரொளி ஆயிடும்
    சென்றிடத்து எட்டுத் திசையெங்கும் போய்வரும்
    நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே. 7

    2000
    நாபிக்கண் நாசிநயன நடுவினும்
    தூபியோடு ஐந்தும் சுடர்விடு சோதியைத்
    தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
    மூவரு மாக உணர்ந்திருந் தாரே. 8

    26. சிவாதித்தன்

    2001
    அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும்
    சென்றிடு ஞானச் சிவப்பர காசத்தால்
    ஒன்றும் இருசட ராம்அரு ணோதயம்
    துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே. 1

    2002
    கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்
    அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
    விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து
    அடங்கிட நின்றதும் அப்பரி சாமே. 2

    2003
    தானே விரிசுடர் மூன்றும்ஒன்றாய் நிற்கும்
    தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்
    தானே உடலுயிர் வேறன்றி நின்றுளன்
    தானே வெளியொளி தானிருட் டாமே. 3

    2004
    தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும்
    வையம் புனல்அனல் மாருதம் வானகம்
    சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்
    ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே. 4

    27. பசு இலக்கணம்

    2005
    உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்
    பன்னு மறைகள் பயிலும் பரமனை
    என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
    அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே. 1

    2006
    அன்னம் இரண்டுள ஆற்றம் கரையினில்
    துன்னி இரண்டும் துணைப்பிரி யாதுஅன்னம்
    தன்னிலை அன்னம் தனியொன்றது என்றக்கால்
    பின்ன மடஅன்னம் பேறணு காதே. 2

    28. புருடன்

    2007
    வைகரி யாதியும் மாயா மலாதியும்
    பொய்கரி யான புருடாதி பேதமும்
    மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச்
    செய்கரி ஈசன் அனாதியே செய்ததே. 1

    2008
    அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
    அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
    அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
    அணுவில் அணுவை அணுகலும் ஆமே. 2

    2009
    படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்
    சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்ய
    இடர்கொண்ட பாச இருளற ஒட்டி
    நடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே. 3

    2010
    அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
    கணுஅற நின்ற கலப்பது உணரார்
    இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
    தணிவற நின்றான் சராசரம் தானே. 4

    29. சீவன்

    2011
    மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
    கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
    மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
    ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே. 1

    2012
    ஏனோர் பெருமையின் ஆயினும் எம்மிறை
    ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன்
    வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
    தானே அறியும் தவத்தின் அளவே. 2

    2013
    உண்டு தெளிவன் உரைக்க வியோகமே
    கொண்டு பயிலும் குணமில்லை யாயினும்
    பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக்
    கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே. 3

    2014
    மாயா உபாதி வசத்ததாகும் சேதனத்து
    ஆய குருஅரு ளாலே அதில்தூண்ட
    ஓயும் உபாதியோடு ஒன்றின் ஒன் றாது உயிர்
    ஆய துரியம் புகுந்தறி வாகவே. 4

    30. பசு

    2015
    கற்ற பசுக்கள் கதறித் திரியினும்
    கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
    முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போலும்
    மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே. 1

    2016
    கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென்
    எல்லைக் கடப்பித்து இறைவன் அடிகூட்டி
    வல்லசெய்து ஆற்ற மதித்தபின் அல்லது
    கொல்லை செய் நெஞ்சம் குறிப்பறி யாதே. 2

    31. போதன் (அறிஞன்)

    2017
    சீவன் எனச்சிவன் என்னவே றில்லை
    சீவ னார்சிவ னாரை அறிகிலர்
    சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
    சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே. 1

    2018
    குணவிளக் காகிய கூத்தப் பிரானும்
    மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்
    பணவிளக் காகிய பல்தலை நாகம்
    கணவிளக் காகிய கண்காணி யாகுமே. 2

    2019
    அறிவாய் அறியாமை நீங்கி யவனே
    பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன்
    அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன்
    செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே. 3

    2020
    ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு
    ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி
    ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின்
    ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின் றானே. 4

    2021
    சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார்
    அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார்
    தவமான செய்து தலைப்பறி கின்றார்
    நவமான தத்துவம் நாடாகி லாரே. 5

    2022
    நாடோ றும் ஈசன் நடத்தும் தொழில்உள்ளார்
    நாடோ றும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்
    நாடோ றும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்
    நாடோ றும் நாடார்கள் நாள்வினை யாளரே. 6

    32. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை

    2023
    ஆக மதத்தன ஐந்து களிறுள
    ஆக மதத்தறி யோடுஅணை கின்றில
    பாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின்
    யோகு திருந்துதல் ஒன்றிஅறி யோமே. 1

    2024
    கருத்தின்நன் னூல்கற்று கால்கொத்திப் பாகன்
    திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா
    எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே
    வருத்தினும் அம்மா வழிநட வாதே. 2

    2025
    புலம் ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும்
    நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து
    குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
    உலம்வந்து போம்வழி ஒன்பது தானே. 3

    2026
    அஞ்சுள சிங்கம் அடவியல் வாழ்வன
    அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுஅக மேபுகும்
    அஞ்சின் உகிரும் எயிரும் அறுத்திட்டால்
    எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே. 4

    2027
    ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள்
    ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர்
    ஐவரும் ஐந்த சினத்தொட நின்றிடில்
    ஐவர்க்கு சிறைஇறுத்து ஆற்றகி லோமே. 5

    2028
    சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும்
    சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள
    வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும்
    கொல்லநின் றோடும் குதிரைஒத் தேனே. 6

    2029
    எண்ணிலி இல்லி அடைத்துஅவ் இருட்டறை
    எண்ணிலி இல்லியோடு ஏகில் பிழைதரும்
    எண்ணிலி இல்லியோடு ஏகாமை காக்குமேல்
    எண்ணிலி இல்லதோடு இன்பமது ஆமே. 7

    2030
    விதியின் பெருவலி வேலைசூழ் வையம்
    துதியின் பெருவலி தொல்வான் உலகம்
    மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
    நிதியின் பெருவலி நீர்வலி தானே. 8

    33. ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை

    2031
    குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்
    வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
    பட்டன மீன்பல பரவன் வகைகொணர்ந்து
    இட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே. 1

    2032
    கிடக்கும் உடலின் கிளர்இந் திரியம்
    அடக்க லுறும் அவன்தானே அமரன்
    விடக்கிண்டு இன்புற மேவுறு சிந்தை
    நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே. 2

    2033
    அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்
    அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
    அஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டு
    அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே. 3

    2034
    முழக்கி எழுவன மும்மத வேழம்
    அடக்க அறிவென்றும் கோட்டையை வைத்தேன்
    பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
    கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே. 4

    2035
    ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது
    ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது
    ஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது
    ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே. 5

    2036
    பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்
    விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம்
    பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் சுருக்கம்
    அருத்தமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே. 6

    2037
    இளைக்கின்ற வாறுஅறிந்து இன்னுயிர் வைத்த
    கிளைக்குஒன்றும் ஈசனைக் கேடில் புகழோன்
    தளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கத்
    துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே. 7

    2038
    பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி
    சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டு
    வாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில்
    வேய்ந்துகொள் மேலை விதியது தானே. 8

    2039
    நடக்கின்ற நந்தியை நாடோ றும் உன்னில்
    படர்க்கின்ற சிந்தையப் பைய ஒடுக்கிக்
    குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
    வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே. 9

    2040
    சென்றன நாழிகை நாள்கள் சிலபல
    நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்துஒத்து
    வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
    குன்று விழவதில் தாங்கலும் ஆமே. 10

    2041
    போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்
    போற்றிசெய் மீட்டே புலன்ஐந்தும் புத்தியால்
    நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை
    ஊற்றுக உள்ளத்து ஒருங்கலும் ஆமே. 11

    2042
    தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே
    அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
    சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்
    வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே. 12

    2043
    கைவிட லாவது ஒன்று இல்லை கருத்தினுள்
    எய்தி அவனை இசையினால் ஏத்துமின்
    ஐவருடைய அவாவினில் தோன்றிய
    பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே. 13

    34. அசற்குரு நெறி

    2044
    உணர்வுஒன்று இலாமூடன் உண்மைஒ ராதோன்
    கணுவின்றி வேதா கமநெறி காணான்
    பணிஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன்
    அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே. 1

    2045
    மந்திர தந்திர மாயோக ஞானமும்
    பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்
    சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டு
    அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே. 2

    2046
    ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன்
    காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
    ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்
    கோமான் அலன்அசத் தாகும் குரவனே. 3

    2047
    கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால்
    தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும்
    நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றே
    முற்பால நந்தி மொழிந்துவைத் தானே. 4

    2048
    குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்
    முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்
    குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே
    குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே. 5

    35. சற்குரு நெறி

    2049
    தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
    தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
    தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
    தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே. 1

    2050
    தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்
    தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்
    தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்
    தவிரவைத் தான் பிற வித்துயர் தானே. 2

    2051
    கறுத்த இரும்பே கனகமது ஆனால்
    மறித்துஇரும் பாகா வகையது போலக்
    குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
    மறித்துப் பிறவியல் வந்தணு கானே. 3

    2052
    பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
    நேசத்து நாடி மலமற நீக்குவோர்
    ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப்
    பூசற்கு இரங்குவோர் போதக் குருவன்றே. 4

    2053
    நேயத்தே நிற்கும் நிமலன் மலமற்ற
    நேயத்தை நல்கவல் லோன்நித்தன் சுத்தனே
    ஆயத்த வர்தத் துவம் உணர்ந் தாங்குஅற்ற
    நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே. 5

    2054
    பரிசன வேதி பரிசித்தது எல்லாம்
    வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்
    குருபரி சித்த குவலயம் எல்லாம்
    திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே. 6

    2055
    தானே எனநின்ற சற்குரு சந்நிதி
    தானே எனநின்ற தன்மை வெளிப்படில்
    தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெற
    ஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே. 7

    2056
    வரும்வழி போம்வழி மாயா வழியைக்
    கருவழி கண்டவர் காணா வழியைக்
    பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்
    குருவழியே சென்று கூடலும் ஆமே. 8

    2057
    குருஎன் பவனே வேதாக மங்கூறும்
    பரஇன்ப னாகிச் சிவயோகம் பாவித்து
    ஒருசிந்தை யின்றி உயிர்பாசம் நீக்கி
    வருநல் குரவன்பால் வைக்கலும் ஆமே. 9

    2058
    சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச்
    சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச்
    சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல்
    அத்தன் அருட்குரு வாம்அவன் கூறிலே. 10

    2059
    ஊற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினை
    பற்றறு நாதன் அடியில் பணிதலால்
    சுற்றிய பேதம் துரியம் மூன் றால்வாட்டித்
    தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே. 11

    2060
    எல்லாம் இறைவன் இறைவி யுடன்இன்பம்
    வலலார் புலனும் வருங்கால் உயிர்தோன்றிச்
    சொல்லா மலம்ஐந்து அடங்கிட்டு ஓங்கியே
    செலலாச் சிவகதி சேர்தல்விளை யாட்டே. 12

    2061
    ஈனப் பிறவியில் இட்டது மீட்டுட்டித்
    தானத்துள் இட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்
    ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
    மோனத்துள் வைத்தலும் முத்தன்தன் செய்கையே. 13

    2062
    அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம்
    சித்தொடு அசித்துஅறத் தெளிவித்த சீவனைச்
    சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச்
    சத்துடன் ஐங்கரு மத்திடும் தன்மையே. 14

    2063
    ஈசத்து வங்கடந்து இல்லையென்று அப்புறம்
    பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை
    நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை
    தேசத்தை எல்லாம் தெளியவைத் தானே. 15

    2064
    மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம்
    ஆணிப்பொன் நின்றங்கு அமுதம் விளைந்தது
    பேணிக்கொண்டு உண்டார் பிறப்பற்று இருந்த
    ஊனுக்கு இருந்தார் உணராத மாக்களே. 16

    2065
    அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க
    இசைத்திடு பாசப்பற்று ஈங்குஅறு மாறே
    அசைத்துஇரு மாயை அனுத்தானும் ஆங்கே
    இசைத்தானும் ஒன்றறி விப்போன் இறையே. 17

    2066
    ஏறு நெறியே மலத்தை எரித்தலால்
    ஈறில் உரையால் இருளை அறுத்தலான்
    மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுக
    கூறு பரனே குருவாம் இயம்பிலே. 18

    36. கூடா ஒழுக்கம்

    2067
    கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்
    கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
    கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
    கண்காணி கண்டார் களஒழிந் தாரே. 1

    2068
    செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
    பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
    மெய்தான் உரைக்கில்விண் ணோர் தொழச் செய்வான்
    மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே. 2

    2069
    பத்துவிற் றுண்டு பகலைக் கழிவிடும்
    மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது
    வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்
    பித்தர்கட்கு என்றும் பிறப்பில்லை தானே. 3

    2070
    வடக்கு வடக்கென்பர் வைத்ததுஒன்று இல்லை
    நடக்க உறுவரே ஞானமி ல்லாதார்
    வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
    அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே. 4

    2071
    காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
    காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
    தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவர்கள்
    காயத்துள் நின்ற கருத்தறி யாரே. 5

    2072
    கண்காணி யாகவே கையகத் தேயெழும்
    கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்
    கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்
    கண்காணி யாகிய காதலன் தானே. 6

    2073
    கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை
    மன்னிய மாதவம் செய்வோர் ஒருசிறை
    தன்னியல்பு உன்னி உணர்ந்தோர் ஒருசிறை
    என்னிது ஈசன் இயல்புஅறி யாரே. 7

    2074
    காணாத கண்ணில் படலமே கண்ணொளி
    காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி
    காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
    காணாது கண்டார் களவொழிந் தாரே. 8

    2075
    பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
    உய்த்தொன்று மாபோல் விழியும் தன் கண்ணொளி
    அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்
    சித்தம் தெளிந்தோன் செயல் ஒழிந்தேனே. 9

    2076
    பிரான்பல மாகப் பெயர்ந்தன எட்டும்
    பராமயம் என்றெண்ணிப் பள்ளி யுணரார்
    சுராமயம் முன்னிய சூழ்வினை யாளர்
    நிராமய மாக நினைப் பொழிந் தாரே. 10

    2077
    ஒன்றுஇரண் டாகிநின்று ஒன்றிஒன் றாயினோர்க்கு
    ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
    ஒன்றுஇரண்டு என்றே உரைதரு வோர்க்கெலாம்
    ஒன்றுஇரண் டாய் நிற்கும் ஒன்றோடுஒன் றானதே. 11

    2078
    உயிரது நின்றால் உணர்வுஎங்கு நிற்கும்
    அயர்அறி வில்லையால் ஆருடல் வீழும்
    உயிரும் உணலும் ஒருங்கிக் கிடக்கும்
    பயிரும் கிடந்துள்ளப் பாங்கு அறி யாரே. 12

    2079
    உயிரது வேறாய் உணர்வுஎங்கும் ஆகும்
    உயிரை அறியில் உணர்வுஅறி வாகும்
    உயிர்அன்று உடலை விழுங்கும் உணர்வை
    அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே. 13

    2080
    உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்
    நிலவாணி ஐந்தினுள் தேருற நிற்கும்
    சிலவாணி யாகிய தேவர் பிரானைத்
    தலைவாணி செய்வது தன்னை அறிவதே. 14

    2081
    தான்அந்த மாம்என நின்ற தனிச்சுடர்
    ஊன்அந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்
    தேன்அந்த மாய்நின்று சிற்றின்பம் நீஒழி
    கோன்அந்தம் இல்லாக் குணத்தரு ளாமே. 15

    2082
    உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்
    கல்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை
    நல்முதல் ஏறிய நாமம் அறநின்றால்
    தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே. 16

    2083
    இந்தியம் அந்தக் கரணம் இவைஉயிர்
    வந்தன சூக்க உடலன்று மானது
    தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும்
    முந்துளம் மன்னும் ஆறாறு முடிவிலே. 17

    37. கேடு கண்டு இரங்கல்

    2084
    வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்
    அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்
    உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
    முற்றொளி தீயின் முனிகின்ற வாறே. 1

    2085
    போது சடக்கெனப் போகின் றதுகண்டும்
    வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது
    நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து
    ஆதியை அன்பில் அறியகில் லார்களே. 2

    2086
    கடன்கொண்டு நெற்குத்துக் கையரை
    உடம்பினை ஓம்பி உயிராத் திரிவார்
    தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி
    இடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே. 3

    2087
    விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
    புரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்ன
    பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்
    உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே. 4

    2088
    நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும்
    என்றுஎம் ஈசன் அடியவர்க் கேநல்கும்
    அன்றி உலகம் அதுஇது தேவுஎன்று
    குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே. 5

    2089
    இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து
    இன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்து
    துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று
    துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே. 6

    2090
    பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
    பெறுதற்கு அரிய பிரானடி பேணார்
    பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
    பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. 7

    2091
    ஆர்வ மனமும் அளவில் இளமையும்
    ஈரமும் நல்லஎன்று இன்புறு காலத்துத்
    தீர வருவதோர் காமத் தொழில்நின்று
    மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே. 8

    2092
    இப்பரி சேஇள ஞாயிறு போலுரு
    அப்பரிசு அங்கியின் உள்ளுறை அம்மானை
    இப்பரி சேகம லத்துறை ஈசனை
    மெய்ப்பரி சேவினை வாதுஇருந் தோமே. 9

    2093
    கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
    நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்
    பாடகில் லார்அவன் செய்த பரிசறிந்து
    ஆடவல் லார்அவர் பேறெது வாமே. 10

    2094
    நெஞ்சு நிறைந்தங்கு இருந்த நெடுஞ்சுடர்
    நம்செம் பிரான்என்று நாதனை நாடொறும்
    துஞ்சும் அளவும் தொழுமின் தொழாவிடில்
    அஞ்சுஅற்று விட்டதோர் ஆனையும் ஆமே. 11

    2095
    மிருக மனிதர் மிக்கோர் பறவை
    ஒருவர்செய்து அன்புவைத்து உன்னாதது இல்லை
    பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர்
    திருமருவு மாதவம் சேர்ந்துஉணர்ந் தோரே. 12

    2096
    நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச்
    சோதியி லாரும் தொடர்ந்துஅறி வாரில்லை
    ஆதி பயனென்று அமரர் பிரான்என்ற
    நாதியே வைத்தது நாடுகின் றேனே. 13

    2097
    இருந்தேன் மலர்அளைந்து இன்புற வண்டு
    பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
    வருந்தேன் நுகராது வாய்புகு தேனை
    அருந்தேனை யாரும் அறியகி லாரே. 14

    2098
    கருத்தறி யாது கழிந்தன காலம்
    அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்
    ஒருத்தன்உள் ளான் உல கத்துயிர்க்கு எல்லாம்
    வருத்திநில் லாது வழுக்கின் றாரே. 15

    2099
    குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்
    விதித்தென நாள்களும் வீழ்ந்து கழிந்த
    விதிர்திருந்து என்செய்தீர் ஆறுதிர் ஆகில்
    கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே. 16

    2100
    கரைஅருகு ஆறாக் கழனி வளைந்த
    திரைஅரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்
    வரைஅருகு ஊறிய மாதவ நோக்கின்
    நரைஉரு வாச்செல்லும் நாள்கில வாமே. 17

    2101
    வரவுஅறி வானை மயங்கிருள் ஞாலத்து
    இரவுஅறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை
    அரவுஅறி வார்முன் ஒருதெய்வம் என்று
    விரவுஅறி யாமலே மேல்வைத்த வாறே. 18

    38. இதோபதேசம்

    2102
    மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி
    இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
    பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான்
    சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே. 1

    2103
    செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையை
    வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
    இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை
    நல்ல அரநெறி நாடுமின் நீரே. 2

    2014
    ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
    நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
    சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
    நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே. 3

    2105
    போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை
    நாற்றிசைக் கும்நடு வாய்கின்ற நம்பனைக்
    காற்றிசைக் கும் கமழ்ஆக்கையைக் கைக்கொண்டு
    கூற்றுதைத் தான்தன்மைக் கூறிநின்று உய்ம்மினே. 4

    2106
    இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
    புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின்
    எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்று
    அக்காலம் உன்ன அருள்பெற லாமே. 5

    2107
    போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
    ஆகின்ற போதும் அரன்அறிவான்உளன்
    சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
    ஆகின்ற அப்பொருள் அக்கரை ஆகுமே. 6

    2108
    பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்
    இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
    சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
    பிறப்பொன்றும் இலாமையும் பேருல காமே. 7

    2109
    கூடியும் நின்றும் தொழுதுஎம் இறைவனைப்
    பாடியுளே நின்று பாதம் பணிமின்கள்
    ஆடியு ளேநின்று அறிவுசெய் வார்கட்கு
    நீடிய ஈற்றுப் பசுவது ஆமே. 8

    2110
    விடுகின்ற சிவனார் மேல்எழும் போது
    நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம்
    கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
    இடுகின்றான் உம்மை இமையவ ரோடே. 9

    2111
    ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று
    நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்
    ஆறணி செஞ்சுடை அண்ணல் திருவடி
    வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே. 10

    2112
    இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை
    அன்புறு விர்தவம் செய்யும்மெய்ஞ் ஞானத்து
    பண்புறு வீர்பிற வித்தொழி லேநின்று
    துன்புறு பாசத்து உழைத்துஒழிந் தீரே. 11

    2113
    மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
    மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
    மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
    மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே. 12

    2114
    சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல்வண்ணன்
    பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும்
    கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல்காட்டிடும்
    சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே. 13

    2115
    முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
    எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
    நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
    அத்தகு சோதி அதுவிரும் பாரே. 14

    2116
    நியமத்த னாகிய நின்மலன் வைத்த
    உகம்எத் தனையென்று ஒருவரும் தேறார்
    பவமத்தி லேவந்து பாய்கின்றது அல்லால்
    சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே. 15

    2117
    இங்கித்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும்
    துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை
    விஞ்சத்து உறையும் விகிர்தா எனநின்னை
    நஞ்சுஅற் றவர்க்குஅன்றி நாடஒண் ணாதே. 16

    2118
    பஞ்சமும் ஆம்புவி சற்குறுபால்முன்னி
    வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்தம்மை
    அஞ்சுவன் நாதன் அருநர கத்துஇடும்
    செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே. 17

    2119
    சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
    அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை
    அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
    குருவை வழிபடின் கூடலும் ஆமே. 18

    2120
    நரரும் சுரரும் பசுபாசம்நண்ணிக்
    கருமங்க ளாலே கழிதலில் கண்டு
    குருஎன் பவன்ஞானி கோதிலன் ஆனால்
    பரம்என்றல் அன்றிப் பகர்ஒன்றும் இன்றே. 19

    2121
    ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற
    மேற்கொண்டவர்வினை போயற நாடொறும்
    நீர்க்கின்ற செஞ்சுடை நீளன் உருவத்தின்
    மேற்கொண்ட வாறுஅல்லை வீவித்து ளானே. 20

    ஏழாம் தந்திரம் முற்றிற்று