MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    திருமந்திரம்

    எட்டாம் தந்திரம் (சுப்பிராமேம்) (2122-2648)

    1. உடலிற் பஞ்சபேதம்

    2122
    காயப்பை ஒன்று சரக்குப் பலவுள
    மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
    காயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால்
    மாயப்பை மண்ணா மயங்கிய வாறே. 1

    2123
    அத்தன் அமைத்த உடல்இரு கூறினில்
    சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
    சத்த பரிச ரூப ரசகந்தம்
    புத்திமான் ஆங்காரம் புரியட்ட காயமே. 2

    2124
    எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும்
    கட்டிய மூன்று கரணமும் ஆயிடும்
    ஒட்டிய பாசம் உணர்வுஅது வாகவே
    கட்டி அவிழ்ந்திடும் கண்ணுதல் காணுமே. 3

    2125
    இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதை
    மருவிய அத்தி வழும்பொடு மச்சை
    பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
    உருவ மலால்உடல் ஒன்றென லாமே. 4

    2126
    ஆரே அறிவார் அடியின் பெருமையை
    யாரே அறிவார் அங்கவர் நின்றது
    யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை
    யாரே அறிவார் அடிக்காவல் ஆனதே. 5

    2127
    எண்சாண் அளவால் எடுத்த உடம்புக்குள்
    கண்கால் உடலில் சுரக்கின்ற கைகளில்
    புண்கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்கின்ற
    நண்பால் உடம்பு தன் னால் உடம் பாமே. 6

    2128
    உடம்புக்கும் நாலுக்கும் உயிராகிய சீவன்
    ஒடுங்கும் பரனோடு ஒழியாகப் பிரமம்
    கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி
    அடங்கியே அற்றது ஆரறி வாறே. 7

    2129
    ஆறுஅந்த மாகி நடுவுடன் கூடினால்
    தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும்
    கூறுங் கலைகள் பதினெட்டும் கூடியே
    ஊறும் உடம்பை உயிருடம்பு எண்ணுமே. 8

    2130
    மெய்யினில் தூல மிகுந்த முகத்தையும்
    பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
    கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
    ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே. 9

    2131
    காயும் கடும்பரி கால்வைத்து வாங்கல் போல்
    சேய இடம்அண்மை செல்லவும் வல்லது
    காயத் துகிர் போர்வை ஒன்றுவிட்டு ஆங்குஒன்றிட்டு
    ஏயும் அவரென்ன ஏய்ந்திடும் காயமே. 10

    2132
    நாகம் உடல்உரி போலும்நல் அண்டச
    மாக நனாவில் கானாமறந் தல்லது
    போகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்று
    ஏகும் இடம்சென்று இருபயன் உண்ணுமே. 11

    2133
    உண்டு நரக சுவர்கத்தில் உள்ளன
    கண்டு விடும்சூக்கம் காரண மாச்செலப்
    பண்டு தொடரப் பரகாய யோகிபோல்
    பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே. 12

    2134
    தான்அவ னாகிய தற்பரம் தாங்கினோன்
    ஆனவை மாற்றிப் பரமத்து அடைந்திடும்
    ஏனை உயிர்வினைக்கு எய்தும் இடம்சென்றும்
    வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே. 13

    2135
    ஞானிக்குக் காயம் சிவமாகும் நாட்டிடில்
    ஞானிக்குக் காயம் உடம்பே அதுவாகும்
    மேனிக்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும்
    மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே. 14

    2136
    விஞ்ஞானத் தோர்க்குஆ ணவமே மிகுதனு
    எஞ்ஞானத் தோர்க்குத் தனுமாயை தான்என்ப
    அஞ்ஞானத் தோர்க்குக் கன்மம் தனுவாகும்
    மெஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே. 15

    2137
    மலமென்று உடம்பை மதியாத ஊமர்
    தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
    நலமென்று இதனையே நாடி இருக்கில்
    பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் அண்டத்தே. 16

    2138
    நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்
    மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே
    அல்ல செவிசத்த மாதி மனத்தையும்
    மெல்ல தரித்தார் முகத்தார் பசித்தே. 17

    2, உடல்விடல்
    2139
    பண்ணாக்கும் காமம் பயிலும் வசனமும்
    விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும்
    புண்ணாம் உடலில் பொருந்தும் மனத்தையும்
    அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே. 1

    2140
    அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவிகள்
    கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்
    மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி
    ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே. 2

    2141
    இலையாம் இடையில் எழுகின்ற காமம்
    முலைவாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத்
    தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்
    சிலையாய சித்தம் சிவமுன் இடைக்கே. 3

    3. அவத்தை பேதம் - கீழால் அவத்தை
    2142
    ஐஐந்து மத்திமை யானது சாக்கிரம்
    கைகண்ட பன்னான்கில் கண்டம் கனாஎன்பர்
    பொய்கண் டிலாத புருடன்இத யம் சுழுனை
    மெய்கண் டவன் உந்தி ஆகும் துரியமே. 1

    2143
    முப்பதோடு ஆறின் முதல்நனா ஐந்தாகச்
    செப்புஅதில் நான்காய்த் திகழ்ந்திரண்டு ஒன்றாகி
    அப்பதி யாகும் நியதி முதலாகச்
    செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் ளீரே. 2

    2144
    இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை
    மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும் அந்தக்
    கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்
    பந்தஅச் சாக்கரப் பாலது ஆகுமே. 3

    2145
    பாரது பொன்மை பசுமை உடையது
    நீரது வெண்மை செம்மை நெருப்பது
    காரது மாருதம் கறுப்பை உடையது
    வானகம் தூமம் மறைந்துநின் றாரே. 4

    2146
    பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்
    ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை
    ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமொடு
    ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே. 5

    2147
    இடவகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை
    படுபர சேனையும் பாய்பரி ஐந்தும்
    உடையவன் மத்திமை உள்ளுறும் நால்வர்
    அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே. 6

    2148
    உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
    உடம்பிடை நின்ற உயிரை அறியார்
    உடம்பொடு உயிரிடை நட்புஅறி யாதார்
    மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே. 7

    2149
    இருக்கின்ற வாறுஒன்று அறிகிலர் ஏழைகள்
    மருக்கும் அசபையை மாற்றி முகந்து
    கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்து
    உருக்கொண்டு தொக்க உடல்ஒழி யாதே. 8

    2150
    ஒளித்திட்ட டிருக்கும் ஒருபதி னாலை
    அளித்தவன் என்னுள்ளே ஆரியன் வந்து
    அளிக்கும் கலைகளி னால்அறு பத்து
    ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே. 9

    2151
    மண்ணினில் ஒன்று மலர்நீரும் மருங்காகும்
    பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்
    மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓர்ஒன்றாய்
    உன்னின் முடிந்தது ஒருபூத சயமே. 10

    2152
    முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர்
    வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
    கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள்இல்லை
    கன்னியைக் கன்னியே காதலித் தானே. 11

    2153
    கண்டன ஐந்தும் கலந்தனதான் ஐந்தும்சென்று
    உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
    பண்டைய தாகிப் பரந்து வியாக்கிரத்து
    அண்டமும் தானாய் அமர்ந்துநின்றானே. 12

    2154
    நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்து
    ஒன்றிய அங்தக் கரணங்கள் நான்குடன்
    மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
    கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே. 13

    2155
    தானம் இழந்து தனிபுக்கு இதயத்து
    மானம் அழிந்து மதிகெட்டு மாலாகி
    ஆன விரிவுஅறி யாஅவ் வியத்தத்தில்
    மேனி அழிந்து கழுத்தியது ஆமே. 14

    2156
    கழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி
    கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
    ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து
    விழுமப் பொருளுடன் மேவிநின் றானே. 15

    2157
    தானத்து எழுந்து தருக்கு துரியத்தின்
    வானத்து எழுந்துபோய் வையம் பிறகிட்டுக்
    கானத்து எழுந்த கருத்தின் தலையிலே
    ஊனத்து அவித்தைவிட்டு ஊமன்நின் றானே. 16

    2158
    Yஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்
    ஆமை அகத்தினில் அஞ்சம் அடங்கிடும்
    ஓமயம் உற்றுஅது உள்ளொளி பெற்றது
    நாமயம் அற்றது நாம்அறி யோமே. 17

    2159
    துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே
    நரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தன
    பரிய புரவியும் பாறிப் பறந்தது
    துரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே. 18

    2160
    மாறா மலம்ஐந்தால் மன்னும் அவத்தையில்
    வேறாய மாயா தநுகர ணாதிக்குஇங்கு
    ஈறாகா தேஎவ்வுயிரும் பிறந்துஇறந்து
    ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே. 19

    2161
    உண்ணும்தன் ஊடாடது ஊட்டிடு மாயையும்
    அண்ணல் அருள்பெற்ற முத்தியது ஆவது
    நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்து
    எண்னுறு ஞானத்தின் நேர்முத்தி எய்துமே. 20

    2162
    அதிமூட நித்திரை ஆணவம் நந்த
    அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி
    நிதமான கேவலம் இத்திறம் சென்று
    பரமாகா ஐஅவத் தைப்படு வானே. 21

    2163
    ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்
    தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்
    நேசாய ஈசனும் நீடுஆண வத்தரை
    ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே. 22

    2164
    மஞ்சொடு மந்தா கினிகுட மாம்என
    விஞ்சுஅறி வில்லோன் விளம்பும் மிகுமதி
    எஞ்சலில் ஒன்றெனு மாறுஎன இவ்வுடல்
    அஞ்சணும் மன்னன்அன் றேபோம் அளவே. 23

    2165
    படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
    வடிவுடை மாநகர் தான்வரும் போது
    அடியுடை ஐவரும் அங்குஉறை வோரும்
    துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே. 24

    2166
    நேரா மலத்தை நீடுஐந்து அவத்தையின்
    நேரான வாறுஉன்னி நீடு நனவினில்
    நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து
    நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே. 25

    4. மத்திய சாக்கிர அவத்தை

    2167
    சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி
    சாக்கிர சொப்பனம் தன்னிடை மாமாயை
    சாக்கிரம் தன்னில் அழுத்திதற் காமியம்
    சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே. 1

    2168
    மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்
    நேய இராகாதி ஏய்ந்த துரியத்துத்
    தோயும் கழுமுனை கனாநனா வும்துன்னி
    ஆயினன் அந்தச் சகலத்துஉ ளானே. 2

    2169
    மேவிய அந்த கண் விழிகண் குருடனாம்
    ஆவயின் முன்அடிக் காணு மதுகண்டு
    மேவும் தடிகொண்டு சொல்லும் விழிபெற
    மூவயின் ஆன்மா முயலும் கருமமே. 3

    2170
    மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள்
    ஒத்துஅங் கிருந்து உயிருண்ணு மாறுபோல்
    அத்தனும் ஐம்பொறி ஆடகத்துள் நின்று
    சத்த முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே. 4

    2171
    வைச்சன வச்சு வகையிரு பத்தஞ்சும்
    உச்சம் உடன்அணை வான்ஒரு வன்உளன்
    பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று
    நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே. 5

    2172
    நாலா றுடன்புருடன் நல்தத் துவமுடன்
    வேறான ஐ ஐந்து மெய்ப்புரு டன்பரன்
    கூறா வியோமம் பரம்எனக் கொண்டனன்
    வேறான நாலேழு வேதாந்த தத்துவமே. 6

    2173
    ஏலங்கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை
    கோலங்கொண்டு ஆங்கே குணத்துடன் புக்கு
    மூலங்கொண்டு ஆங்கே முறுக்கிமுக் கோணிலும்
    காலங்கொண் டான்அடி காணலும் ஆமே. 7

    2174
    நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
    ஓடிய காலில் ஒடுங்கி யிருந்திடும்
    கூடிய காமம் குளிக்கும் இரதமும்
    நாடிய நல்ல மனமும் உடலிலே. 8

    2175
    ஆவன ஆக அழிவ அழிவன
    போவன போவ புகுவ புகுவன
    காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
    ஏவன செய்யும் இலங்கிழை யோனே. 9

    2176
    பத்தொடு பத்துமோர் மூன்றும் பகுதியும்
    உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்
    மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும்
    தத்துவ நாலேழ் எனஉன்னத் தக்கதே. 10

    2177
    விளங்கிடு முந்நூற்று முப்பதோடு ஒருபான்
    தளங்கொள் இரட்டிய தாறு நடந்தால்
    வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து
    விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே. 11

    2178
    நாலொரு கோடியே நாற்பத்தொண் ணாயிரம்
    மேலுமோர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்
    பாலவை தொண்ணூறோடு ஆறுள் படும்அவை
    கோலிய ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே. 12

    2179
    ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர்
    ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம்
    ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு
    ஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே. 13

    2180
    தத்துவ மானது தன்வழி நின்றிடில்
    வித்தக னாகி விளங்கி யிருக்கலாம்
    பொய்த்துவ மாம்அவை போயிடும் அவ்வழி
    தத்துவம் ஆவது அகார எழுத்தே. 14

    2181
    அறிவொன் றிலாதன ஐஏழும் ஒன்றும்
    அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
    அறிகின்றாய் நீஎன்று அருள்செய்தார் நந்தி
    அறிகின்ற நானென்று அறிந்து கொண்டேனே. 15

    2182
    சாக்கிர சாக்கிர மாதி தனில்ஐந்தும்
    ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி
    போக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறு
    நீக்கி நெறிநின்றுஒன்று ஆகியே நிற்குமே. 16

    2183
    ஆணவ மாதி மலம்ஐந்து அவரோனுக்கு
    ஆணவ மாதிநான் காம்மாற்கு அரனுக்கு
    ஆணவ மாதிமூன்று ஈசர்க்கு இரண்டென்ப
    ஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே.

    5. அத்துவாக்கள்

    2184
    தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ்கோடி
    மெய்த்தரு வன்னம்ஐம் பான்ஒன்று மேதினி
    ஒத்துஇரு நூற்றுஇரு பான்நான்குஎண் பான்ஒன்று
    வைத்த பதம்கலை ஓர்ஐந்தும் வந்தவே. 1

    2185
    நாடிய மண்டலம் மூன்றும் நலந்தெரிந்து
    ஓடும் அவரோடு உள்இரு பத்துஐஞ்சும்
    கூடுவர் கூடிக் குறிவழி யேசென்று
    தேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே. 2

    2186
    சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி
    ஆக்கிய தூலம் அளவாக்கி அதீதத்துத்
    தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்துஅது
    தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயவே. 3

    6. சுத்த நனவாதி பருவம்
    2187
    நானவாதி தூலமே சூக்கப் பகுதி
    அனதான ஐஐந்தும் விந்துவின் சத்தி
    தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து
    கனவா நனவில் கலந்ததுஇவ் வாறே. 1

    2188
    நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
    நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்
    நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்
    நனவில் கனவுஓட நன்செய்தி யானதே. 2

    2189
    செறியுங் கிரியை சிவதத் துவமாம்
    பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி
    குறிதல் திருமேனி குணம்பல வாகும்
    அறிவில் சராசரம் அண்டத் தளவே. 3

    2190
    ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம்
    ஏதம்இல் ஈசன்நல் வித்தியா தத்துவம்
    போதம் கலைகாலம் நியதிமா மாயை
    நீதிஈ றாக நிறுத்தினன் என்னே. 4

    2191
    தேச திகழ்சிவம் சத்தி சதாசிவம்
    ஈசன் அனல்வித்தை இராகம் கலைகாலம்
    மாசகல் வித்தை நியதி மகாமாயை
    ஆசில் புருடாதி ஆன்மாஈ றாறே. 5

    2192
    ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
    காணும் முளைக்குத் தவிடுஉமி ஆன்மாவும்
    தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்
    பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே. 6

    2193
    பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்
    பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்
    பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில்
    பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. 7

    2194
    உடல்இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம்
    அடலொன்று அகந்தை அறியாமை மன்னிக்
    கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால்
    அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே. 8

    2195
    தன்தெரியாத அதீதம்தற்கு ஆணவம்
    சொல்தெரி கின்ற துரியம்சொல் காமியம்
    பெற்ற சுழுத்திப்பின் பேசுறும் காதலாம்
    மற்றது உண்டிக் கனவுநன வாதலே. 9

    2196
    நனவில் கனவுஇல்லை ஐந்து நனவில்
    கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி
    தனலுண் பகுதியே தற்கூட்டும் மாயை
    நனவில் துரியம் அதீதம் தலைவந்தே. 10

    2197
    ஆறாறில் ஐஐந்து அகல நனாநனா
    ஆறாம் அவைவிட ஆகும் நனாக்கனா
    வேறான ஐந்தும் விடவே நனாவினில்
    ஈறாம் சுழுத்தி இதில்மாயை தானே. 11

    2198
    மாயையில் வந்த புருடன் துரியத்தில்
    ஆய முறைவிட்டு அதுவும்தான் அன்றாகிச்
    சேயதே வலவித் துடன் செல்லச் சென்றக்கால்
    ஆய தனுவின் பயனில்லை யாமே. 12

    2199
    அதீதத் துரியத்து அறிவனாம் ஆன்மா
    அதீதத் துரியம் அதனால் புரிந்தால்
    அதீதத்து எழுந்து அறிவாகிய மானன்
    முதிய அனலில் துரியத்து முற்றுமே. 13

    2200
    ஐஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
    கைகண்ட ஐஐந்தில் கண்டம் கனாஎன்பர்
    பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையின்
    மெய்கண்டவன்உந்தி மேவல் இருவரே. 14

    2201
    புரியட் டகமே பொருந்தல் நனவு
    புரியட் டகந்தன்னில் மூன்று கனவு
    புரியட் டகத்தில் இரண்டு கழுத்தி
    புரியட் டகத்தொன்று புக்கல் துரியமே. 15

    2202
    நனவில் நனவு புனலில் வழக்கம்
    நனவிற் கனவு நினைத்தல் மறத்தல்
    நனவிற் சுழுத்திஉள் நாடல் இலாமை
    நனவில் துரியம் அதீதத்து நந்தியே. 16

    2203
    கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்
    கனவினில் கண்டு மறத்தல் கனவாம்
    கனவில் சுழுத்தியும் காணாமை காணல்
    அனுமாதி செய்தலில் ஆன துரியமே. 17

    2204
    சுழுத்தி நனவுஒன்றும் தோன்றாமை தோன்றல்
    சுழுத்தி கனவுஅதன் உண்மை சுழுத்தியில்
    சுழுத்தி அறிவுஅறி வாலே அழிகை
    சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே. 18

    2205
    துரிய நனவாம் இதமுணர் போதம்
    துரியக் கனவாம் அகமுணர் போதம்
    துரியச் சுழுத்தி வியோமம் துரியம்
    துரியம் பரமெனத் கோன்றிடும் தானே. 19

    2206
    அறிவுஅறி கின்ற அறிவு நனவாம்
    அறிவுஅறி யாமை அடையக் கனவாம்
    அறிவுஅறி அவ்அறி யாமை சுழுத்தி
    அறிவுஅறி வாகும் ஆன துரியமே. 20

    2207
    தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு
    ஞானம் தனதுரு வாகி நயந்தபின்
    தான்எங்கு மாய்நெறி நின்றது தான்விட்டு
    மேல்நந்தச் சூக்கம் அவைவண்ணம் மேலிட்டே. 21

    2208
    ஐஐந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில்
    எய்யும் நனவு கனவு சுழுத்தியாம்
    மெய்யும்பின் சூக்கமும் மெய்ப்பகுதி மாயை
    ஐயமும் தான்அவன் அத்துரி யத்தனே. 22

    2209
    ஈதென்று அறிந்திலன் இத்தனை காலமும்
    ஈதென்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
    ஈதென்று அறியும் அறிவை அறிந்தபின்
    ஈதென்று அறியும் இயல்புடை யோனே. 23

    2210
    உயிர்க்குஉயி ராகி உருவாய் அருவாய்
    அயல்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய்
    நயப்புறு சத்தியும் நாதன் உலகாதி
    இயற்பின்றி எல்லாம் இருண்மூட மாமே. 24

    2211
    சத்தி இராகத்தில் தான்நல் உயிராகி
    ஒத்துறி பாச மலம்ஐந்தோடு ஆறாறு
    தத்துவ பேதம் சமைத்துக் கருவியும்
    வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே. 25

    2212
    சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை
    சாக்கிரா தீதம் துரியத்தில் தானுறச்
    சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான்விடாச்
    சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே. 26

    2213
    மலக்கலப் பாலே மறைந்தது சத்தி
    மலக்கலப் பாலே மறைந்தது ஞானம்
    மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு
    மலக்கலப்பு அற்றால் மதியொளி யாமே. 27

    2214
    திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
    நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
    வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து
    பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே. 28

    2215
    கதறு பதினெட்டுக் கண்களும் போகச்
    சிதறி எழுந்திடுஞ் சிந்தையை நீரும்
    விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால்
    அதிர வருவதோர் ஆனையும் ஆமே. 29

    2216
    நனவகத் தேயொரு நாலைந்தும் வீடக்
    கனவகத் தேஉள் கரணங்க ளோடு
    முனவகத் தேநின்று உதறியுட் புக்கு
    நினைவகத்து இன்றிச் சுழுத்திநின் றானே. 30

    2217
    நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்
    ஒன்றி உலகின் நியமாதிகள் உற்றுச்
    சென்று துரியாதீ தத்தே சிலகாலம்
    நின்று பரனாய் நின்மல னாமே. 31

    2218
    ஆனஅவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத்
    தான்உலகு உண்டு சதாசிவ மாசத்தி
    மேனிகள் ஐந்தும்போல் விட்டுச் சிவமாகி
    மோனம் அடைந்தொளி மூலத் னாமே. 32

    2219
    மண்டலம் மூன்றினுள் மாயநன் நாடனைக்
    கண்டுகொண்டு உள்ளே கருதிக் கழிகின்ற
    விண்டவர் தாமரை மேலொன்றும் கீழாக
    அண்டமும் தானாய் அகத்தினுள் ஆமே. 33

    2220
    போதறி யாது புலம்பின புள்ளினம்
    மாது அறி யாவகை நின்று மயங்கின
    வேதுஅறி யாவணம் நின்றனன் எம்இறை
    சூதறி வாருச்சி சூடிநின் றாரே. 34

    2221
    கருத்தறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே
    பொருந்தறிந் தேன்புவ னாபதி நாடித்
    திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை
    பருத்தறிந் தேன்மனம் மன்னிநின் றேனே. 35

    2222
    ஆன விளக்கொளி தூண்டும் அவன் என்னத்
    தான விளக்கொளி யாம்மூல சாதனத்து
    ஆன விதிமூலத் தானத்தில் அவ்விளக்கு
    ஏனை மதிமண்ட லம்கொண்டு எரியுமே. 36

    2223
    உள்நாடும் ஐவர்க்கு மண்டை ஓதுங்கிய
    விண்நாட நின்ற வெளியை வினவுறில்
    அண்ணாந்து பார்த்துஐவர் கூடிய சந்தியில்
    கண்நாடி காணும் கருத்ததுஎன் றானே. 37

    2224
    அறியாத வற்றை அறிவான் அறிவான்
    அறிவான் அறியாதான் தன்னறிவு ஆகான்
    அறியா தவத்தை அறிவானைக் கூட்டி
    அறியாது அறிவானை யார்அறிவாரே. 38

    2225
    துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்
    அரியன தூடணம் அந்தண வாதி
    பெரியன கால பரம்பின் துரியம்
    அரிய அதீதம் அதீதத்த தாமே. 39

    2226
    மாயையிற் சேதனன் மன்னும் பகுதியோன்
    மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்
    கேவல மாகும் சகலமா யோனியுள்
    தோயும் மனிதர் துரியத்துள் சீவனே. 40

    7. கேவல சகல சுத்தம்

    2227
    தன்னை அறிசுத்தன் தற்கேவ லன்தானும்
    பின்னம் உறநின்ற பேத சகலனும்
    மன்னிய சத்தசத் துச்சத சத்துடன்
    துன்னவர் தத்தம் தொழில்கள் வாகவே. 1

    2228
    தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
    தானே தனக்கு மறுமையும் இம்மையும்
    தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
    தானே தனக்குத் தலைவனும் ஆமே. 2

    2229
    ஆமுயிர் கேவலம் மாமாயை யின்நடந்து
    ஆம்உயிர் மாயை எறிப்ப அறிவுற்று
    காமியம் மாமேய மும்கல வாநிற்பத்
    தாம்உறு பாசம் சகலத்து ஆமே. 3

    2230
    சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
    புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர்
    நிகரில் மலரோன்மால் நீடுபல் தேவர்கள்
    நிகழ்நரர் சீடம் அந்தமும் ஆமே. 4

    2231
    தாவிய மாயையில் தங்கும் பிரளயம்
    மேவிய மற்றது உடம்பாய்மிக் குள்ளன
    ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர்
    ஆவயின் நூற்றெட்டு உருத்திர ராமே. 5

    2232
    ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர்
    ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர்
    ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர்
    ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே. 6

    2233
    ஆம்அவ ரில்சிவ னார்அருள் பெற்றுளோர்
    போம்மலந் தன்னால் புகழ்விந்து நாதம்விட்டு
    ஒம்மய மாகி ஒடுங்கலின் நின்மலம்
    தோம்அறும் சுத்த அவத்தைத் தொழிலே. 7

    2234
    ஒரினும் மூவகை நால்வகை யும்உள
    தேரில் இவைகே வலம்மாயை சேர்இச்சை
    சார்இய லாயவை தாமே தணப்பவை
    வாரிவைத்து ஈசன் மலம்அறுத் தானே. 8

    2235
    பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டகன்று
    எய்யாமை நீங்கவே எய்தவன் தானாகி
    மெய்யாம் சராசர மாய்வெளி தன்னுட்புக்கு
    எய்தாமல் எய்தும்சுத் தாவத்தை என்பதே. 9

    2236
    அனாதி பசுவியாத்தி யாகும் இவனை
    அனாதியில் வந்த மலம்ஐந்தால் ஆட்டி
    அனாதியில் கேவலம் அச்சக லத்திட்டு
    அனாதி பிறப்புறச் சுத்தத்துள் ஆகுமே. 10

    2237
    அந்தரம் சுத்தாவத் தைகே வலத்தாறு
    தந்தோர்தம் சுத்தகே வலத்தற்ற தற்பரத்
    தின்பால் துரியத் திடையே அறிவுறத்
    தன்பால் தனையறி தத்துவந் தானே. 11

    2238
    ஐ ஐந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும்
    மெய்கண்டு சுத்த அவத்தையில் வீடாகும்
    துய்யஅவ் வித்தை முதன்மூன்றும் தொல்சத்தி
    ஐயன் சிவன்சத்தி யாம்தோற்றம் அவ்வாறே. 12

    2239
    ஐஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கியும்
    மெய்கண்ட மேல்மூன்றும் மேவுமெய் யோகத்தில்
    கைகண்ட சத்தி சிவபாகத் தேகாண
    எய்யும் படியடங்கும் நாலேழ் எய்தியே. 13

    2240
    ஆணவத் தார்ஒன்று அறியாத கேவலர்
    பேணிய மாயைப் பிரளயா கலராகும்
    காணும் உருவினர் காணாமை காண்பவே
    பூணும் சகலர்முப் பாசமும் புக்கோரே. 14

    2241
    ஆணவம் ஆகும் விஞ்ஞான கலருக்குப்
    பேணிய மாயை பிரளயா கலருக்கே
    ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே
    காணும் சகலர்க்குக் காட்டும் மலங்களே 15

    2242
    கேவலம் தன்னில் கிளர்ந்தவிஞ் ஞாகலர்
    கேவலம் தன்னில் கிளர்விந்து சத்தியால்
    பூவயின் கேவலத்து அச்சக லத்தையும்
    மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே. 16

    2243
    மாயையில் மன்னும் பிரளயா கலர்வந்து
    மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவ
    மாய சகலத்துக் காமிய மாமாயை
    ஏயமன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே. 17

    2244
    மும்மலம் கூடி முயங்கி மயங்குவோர்
    அம்மெய்ச் சகலத்தர் தேவர் சுரர்நரர்
    மெய்ம்மையில் வேதா விரிமிகு கீடாந்தத்து
    அம்முறை யோனிபுக்கு ஆர்க்கும் சகலரே. 18

    2245
    சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச்
    சத்துஅசத்து ஓடத் தனித்தனி பாசமும்
    மத்த இருள்சிவ னான கதிராலே
    தொத்தற விட்டிடச் சுத்தஆ வார்களே. 19

    2246
    தற்கே வலம்முத்தி தானே தனிமையாம்
    பிற்பால் சகலம் கலாதிப் பிறிவதாம்
    சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்
    தற்பால் புரிவது தற்சுத்தம் ஆமே. 20

    2247
    அறிவின்றி முத்தன் அராகாதி சேரான்
    குறியொன்றி லாநித்தன் கூடான் காலதி
    செறியும் செயலிலான் தினங்கற்ற வல்லோன்
    கிறியன் மலவியாபி கேவலம் தானே. 21

    2248
    விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்
    சந்தத ஞான பரையும் தனுச்சுத்தி
    விந்துவின் மெய்ஞ்ஞான மேவும் பிரளயர்
    வந்த சகலசுத் தான்மாக்கள் வையத்தே. 22

    2249
    கேவல மாதியின் பேதம் கிளக்குறில்
    கேவல மூன்றும் கிளரும் சகலத்துள்
    ஆவயின் மூன்று மதிசுத்த மூடவே
    ஓவலில் லாஒன்பான் ஒற்றுணர் வோர்கட்கே. 23

    2250
    கேவலத்தில் கேவலம் அதீதா தீதம்
    கேவலத் தில்சகலங்கள் வயிந்தவம்
    கேவத் திறசுத்தம் கேடில்விஞ் ஞாகலர்க்கு
    ஆவயின் நாதன் அருண்மூர்த்தி தானே. 24

    2251
    சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம்
    சகல சகலமே சாக்கிர சாக்கிரம்
    சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை
    சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே. 25

    2252
    சுத்தத்தில் சுத்தமே தொல்சிவ மாகுதல்
    சுத்தத்தில் கேவலம் தொல்லுப சாந்தமாம்
    சுத்த சகலம் துரிய விலாசமாம்
    சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே. 26

    2253
    சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடுஞ்
    சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே
    சாக்கிரா தீதம் தனிற்சுகா னந்தமே
    ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே. 27

    2254
    சாக்கிரா தீதத்தில் தானறும் ஆணவம்
    சாக்கிரா தீதம் பிராவத்தை தங்காது
    ஆக்கு பரோபதி யாஉப சாந்தத்தை
    நோக்கும் மலங்குணம் நோக்குதல் ஆகுமே. 28

    2255
    பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்
    சுத்த அதீதமும் தோன்றாமல் தானுணும்
    அத்தன் அருள்என்று அருளால் அறிந்தபின்
    சித்தமும் இல்லை செயல்இல்லை தானே. 29

    2256
    எய்திய பெத்தமும் முத்தமும் என்பன
    எய்தும் அரன்அரு ளேவிளை யாட்டோ டு
    எய்திடு உயிர்சுத்தத் திடுநெறி என்னவே
    எய்தும் உயிர்இறை பால்அறி வாமே. 30

    2257
    ஐம்மலத் தாரும் மதித்த சகலத்தர்
    ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தார்
    ஐம்மலத் தார்சுவர்க் கந்நெறி யான்பவர்
    ஐம்மலத் தார்அர னார்க்குஅறி வோரே. 31

    2258
    கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
    அரிய துரியம் அதிலுண்ணும் ஆசையும்
    உரிய கழுனை முதல்எட்டும் சூக்கத்து
    அரிய கனாத்துலம் அந்தன வாமே. 32

    2259
    ஆணவம் ஆகும் அதிதம்மேல் மாயையும்
    பூணும் துரியம் சுழுத்திபொய்க் காமியம்
    பேணும் கனவும் மாமாயை திரோதாயி
    காணும் நனவில் மலக்கலப்பு ஆகுமே. 33

    2260
    அரன்முத லாக அறிவோன் அதீதத்தன்
    அரன்முத லாமாயை தங்கிச் சுழுனை
    கருமம் உணர்ந்து மாமாயைக் கைகொண்டோ ர்
    அருளும் அறைவார் சகலத்துற் றாரே. 34

    2261
    உருவுற்றுப் போகமே போக்கியம் துற்று
    மருவுற்றுப் பூதம னாதியான் மன்னி
    வரும்அச் செயல்பற்றிச் சத்தாதி வைகிக்
    கருவுற் றிடுஞ் சீவன் காணும் சகலத்தே. 35

    2262
    இருவிடை ஒத்திட இன்னருள் சத்தி
    மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னிக்
    குருவினைக்கொண்டருள் சத்திமுன் கூட்டிப்
    பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே. 36

    2263
    ஆறாறும் ஆறதின் ஐ ஐந்து அவத்தையோடு
    ஈறாம் அதீதத் துரியத்து இவன்எய்தப்
    பேறான ஐவரும் போம்பிர காசத்து
    நீறார் பரம்சிவம் ஆதேய மாகுமே. 37

    2264
    தன்னை அறியாது உடலைமுன் தான்என்றான்
    தன்னைமுன் கண்டான் துரியம் தனைக்கண்டான்
    உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால்
    பின்னையும் வந்து பிறந்திடும் தானே. 38

    2265
    சாக்கிரத் தன்னில் அதீதம் தலைப்படில்
    ஆக்கிய அந்த வயிந்தவம் ஆனந்தம்
    நோக்கும் பிறப்புஅறும் நோன்முத்தி சித்தியாம்
    வாக்கும் மனமும் மருவல்செய் யாவே. 39

    2266
    அப்பும் அனலும் அகலத்து ளேவரும்
    அப்பும் அனலும் அகலத்து ளேவாரா
    அப்பும் அனலும் அகலத்துள் ஏதெனில்
    அப்பும் அனலும் கலந்ததுஅவ் வாறே. 40

    2267
    அறுநான்கு அசுத்தம் அதிசுத்தா சுத்தம்
    உறும்ஏழு மாயை உடன்ஐந்தே சுத்தம்
    பெறுமாறு இவைமூன்றும் கண்டத்தால் பேதித்து
    உறும்மாயை மாமாயை ஆன்மாவி னோடே. 41

    2268
    மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட
    ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
    ஏயும் உயிர்க்கே வலசகலத்து எய்தி
    ஆய்தரு சுத்தமும் தான்வந்து அடையுமே. 42

    8. பராவத்தை

    2269
    அஞ்சும் கடந்த அனாதி பரன்தெய்வம்
    நெஞ்சம தாய நிமலன் பிறப்பிலி
    விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட
    வஞ்சத் திருந்த வகையறிந் தேனே. 1

    2270
    சத்தி பராபரம் சாந்தி தனிலான
    சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து
    சத்திய மாயை தனுச்சத்தி ஐந்துடன்
    சத்தி பெறுமுயிர் தான்அங்கத்து ஆறுமே. 2

    2271
    ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்
    ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்
    ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே
    ஆறாறுக்கு அப்பால் அரன்இனி தாமே. 3

    2272
    அஞ்சொடு நான்கும் கடந்துஅக மேபுக்குப்
    பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற
    விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு
    நஞ்சுற நாடி நயம்செய்யு மாறே. 4

    2273
    உரிய நனாத்துரி யத்தில் இவளாம்
    அரிய துரிய நனவாதி மூன்றில்
    பரிய பரதுரி யத்தில் பரனாம்
    திரிய வரும்துரி யத்தில் சிவமே. 5

    2274
    பரமாம் அதீதமே பற்றறப் பற்றப்
    பரமாம் அதீதம் பயிலப் பயிலப்
    பரமாம் அதீதம் பயிலாத் தபோதனார்
    பரமாகார் பாசமும் பற்றொன்றுஅ றாதே. 6

    2275
    ஆயும்பொய்ம் மாயை அகம்புற மாய்நிற்கும்
    வாயு மனமும் கடந்துஅம் மயக்கறின்
    தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
    வேயும் பொருளாய் விளைந்தது தானே. 7

    2276
    துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப்
    பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு
    நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு
    உரிய வினைகள் நின்று ஓலமிட் டன்றே. 8

    2277
    நின்றஇச் சாக்கிர நீள்துரி யத்தினின்
    மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும்
    மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும்
    அன்றே இவனும் அவன்வடி வாமே. 9

    2278
    விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
    இருந்த இடத்திடை ஈடான மாயை
    பொருந்தும் துரியம் புரியல்தா னாகும்
    தெரிந்த துரியத்துத் தீதுஅக லாதே. 10

    2279
    உன்னை அறியாது உடலைமுன் நான்ஒன்றாய்
    உன்னை அறிந்து துரியத்து உறநின்றாய்
    தன்னை அறிந்தும் பிறவி தணவாதால்
    அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே. 11

    2280
    கருவரம்பு ஆகிய காயம் துரியம்
    இருவரும் கண்டீர் பிறப்புஇறப்பு உற்றார்
    குருவரம் பெற்றவர் கூடிய பின்னை
    இருவரும் இன்றிஒன் றாகி நின் றாரே. 12

    2281
    அணுவின் துரியத்தில் ஆன நனவும்
    அணுஅசை வின்கண் ஆனகனவும்
    அணுஅசை வில்பரா தீதம் கழுத்தி
    பணியில் பரதுரி யம்பர மாமே. 13

    2282
    பரதுரி யத்து நனவும் பரந்து
    விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி
    உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத்
    தெரியும் சிவதுரி யத்தனு மாமே. 14

    2283
    பரமா நனவின்பின் பால்சக முண்ட
    திரமார் கனவும் சிறந்த சுழுத்தி
    உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே
    தரனாம் சிவதுரி யத்தனும் ஆமே. 15

    2284
    சீவன் துரியம் முதலாகச் சீரான
    ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்தும்
    ஓவும் பராநந்தி உண்மைக்குள் வைகியே
    மேவிய நாலேழ் விடுவித்துநின் றானே. 16

    2285
    பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில்
    பரம்சிவன் மேலாம் பரநனவாக
    விரிந்த கனாவிடர் வீட்டும் கழுமுனை
    உரந்தரும் மாநந்தி யாம்உண்மை தானே. 17

    2286
    சார்வாம் பரம்சிவன் சத்தி பரநாதம்
    மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப்
    பாலாய்ப் பிரமன் அரிஅம ராபதி
    தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே. 18

    2287
    கலப்புஅறி யார்கடல் சூழ்உல கேழும்
    உலப்புஅறி யார்உட லோடுஉயிர் தன்மை
    அலப்புஅறிந்து இங்குஅர சாளகி லாதார்
    குறிப்பது கோலம் அடலது வாமே. 19

    2288
    பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய்
    தன்னை அறியில் தயாபரன் எம்இறை
    முன்னை அறிவு முடிகின்ற காலமும்
    என்னை அறியலுற்று இன்புற்ற வாறே. 20

    2289
    பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
    பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்
    தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்
    தன்னின் மறைந்தது தன்கர ணங்களே. 21

    2290
    மரத்தை மறைத்தது மாமத யானை
    மரத்தின் மறைந்தது மாமத யானை
    பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
    பரத்தை மறைந்தது பார்முதல் பூதமே. 22

    2291
    ஆறாறு ஆகன்று நமவிட்டு அறிவாகி
    வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி
    ஈறார் பரையின் இருளற்ற தற்பரன்
    பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே. 23

    2292
    துரியத்தில் ஓரைந்தும் சொல்அக ராதி
    விரியப் பரையில் மிகும்நாதம் அந்தம்
    புரியப் பரையில் பராவத்தா போதம்
    திரிய பரமம் துரியம் தெரியவே. 24

    2293
    ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப்
    பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்
    நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
    அந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே. 25

    2294
    ஐஐந்து மட்டுப் பகுதியும் மாயையும்
    பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்டு
    எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி
    உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே. 26

    2295
    நின்றான் அருளும் பரமும்முன் நேயமும்
    ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
    சென்றான் எனைவிடுத்து ஆங்கிச் செல்லாமையும்
    நன்றான ஞானத்தின் நாதப் பிரானே. 27

    9. முக்குண நிர்க்குணம்

    2296
    சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால்
    வாய்ந்த இராசதம் மன்னும் கனவென்ப
    ஒய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
    மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே. 1

    10. அண்டாதி பேதம்

    2297
    பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்
    எறிகடல் ஏழின் மணல்அள வாகப்
    பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
    செறியும் அண் டாசனத் தேவர் பிரானே. 1

    2298
    ஆனந்த தத்துவம் அண்டா சலத்தின்மேல்
    மேனிஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்க்
    தான்அந்த மில்லாத தத்துவம் ஆனவை
    ஈனமி லா அண்டத்து எண்மடங்கு ஆமே.

    11. பதினோராம் தானமும் அவத்தையெனக் காணல்

    2299
    அஞ்சில் அமுதும்ஓர் ஏழின்கண் ஆனந்தம்
    முஞ்சில்ஓங் காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில்
    வஞ்சக மேநின்று வைத்திடில் காயமாம்
    கிஞ்சுகக் செவ்வாய்க் கிளிமொழி கேளே. 1

    2300
    புருட னுடனே பொருந்திய சித்தம்
    அருவமொ டாறும் அதீதத் துரியம்
    விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்
    அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே. 2

    2301
    காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்
    நாட்டி அழுத்திடின் நந்திஅல்லால் இல்லை
    ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை
    ஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே. 3

    12. கலவு செலவு

    2302
    கேவலம் தன்னில் கலவச் சகலத்தின்
    மேவும் செலவு விடவரு நீக்கத்துப்
    பாவும் தனைக்கண்டால் மூன்றும் படர்வற்ற
    தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே. 1

    2303
    வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்
    செல்லும் அளவும் செலுத்துமிஹ் சிந்தையை
    அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
    கல்லும் பிளந்து கடுவெளி யாமே. 2

    13. நின்மல அவத்தை

    2304
    ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்
    ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள
    வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்
    ஆமையின் மேலும்ஓர் ஆயிரத்து ஆண்டே. 1

    2305
    காலங்கி நீர்பூக் கலந்தஆ காயம்
    மாலங்கி ஈசன் பிரமன் சதாசிவன்
    மேலஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்
    காலனும் இல்லை கருத்தில்லை தானே. 2

    2306
    ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பது
    தான்மா மறையறை தன்மை அறிகிலர்
    ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன்என்றால்
    ஆன்மாவும் இல்லையால் ஐஐந்தும் இல்லையே. 3

    2307
    உதயம் அழுங்கில் ஒடுங்கல்இம் மூன்றின்
    கதிசாக் கிரங்கன வாதி சுழுத்தி
    பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து
    அதிசுப னாய்அனந் தான் அந்தி யாகுமே. 4

    2308
    எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி
    நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
    பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச்
    செல்லாச் சிவகதி சென்றுஎய்தும் அன்றே. 5

    2309
    காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
    வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
    ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்
    தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே. 6

    2310
    ஆன மறையாதி யாம் உரு நந்திவந்து
    ஏனை அருள்செய் தெரிநனா அவத்தையில்
    ஆன வகையை விடும்அடைத் தாய்விட
    ஆன மாலதீதம் அப்பரந் தானே. 7

    2311
    சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்
    அத்தன் அருள்நீங்கா ஆங்கணில் தானாகச்
    சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதிசெய்து
    அத்தனோடு ஒன்றற்கு அருள்முத லாமே. 8

    2312
    வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை
    வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்
    வேறுசெய் யாஅருள் கேவலத் தேவிட்டு

    வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே. 9

    2313
    கறங்குஓலை கொள்ளிவட் டம்கட லில்திரை
    நிறஞ்சேர் ததிமத்தன் மலத்தே நின்றங்கு
    அறங்காண் சுவர்க்க நரகம் புவிசேர்த்து
    கிரங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே. 10

    2314
    தானே சிவமான தன்மை தலைப்பட
    ஆன மலமும்அப் பாச பேதமும்
    ஆன குணமும் பரான்மா உபாதியும்
    பானுவின் முன்மதி போல்பலராவே. 11

    2315
    நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு
    அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
    திருத்தக்க மாலும் திசைமுகன் தானும்
    உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே. 12

    2316
    ஆனைகள் ஐந்தம் அடங்கி அறிவென்னும்
    ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு
    ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
    வானகம் ஏற வழிஎளி தாமே. 13

    2317
    ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்
    தாடித் தெழுந்த தமருக ஓசையும்
    பாடி எழுகின்ற வேதாக மங்களும்
    நாடியின் உள்ளாக நான்கண்ட வாறே. 14

    2318
    முன்னை அறிவினில் செய்த முதுதவம்
    பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
    தன்னை அறிவது அறிவாம் அஃ தன்றிப்
    பின்னை அறிவது பேயறி வாகுமே. 15

    2319
    செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்
    செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்
    செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்
    செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே. 16

    2320
    தான்அவ னாகும் சமாதிகை கூடினால்
    ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்
    ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்து
    ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே. 17

    2321
    தொலையா அரனடி தோன்றும் அம் சத்தி
    தொலையா இருளொளி தோற்ற அணுவும்
    தொலையாத் தொழின்ஞானம் தொன்மையில் நண்ணித்
    தொலையாத பெத்தம்முத் திக்கிடை தோயுமே. 18

    2322
    தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி
    மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை
    தான்தரு ஞானம் தன் சத்திக்குச் சாதனாம்
    ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கு ஒளி யாமே. 19

    2323
    அறிகின்றி லாதன ஐஏழும் ஒன்றும்
    அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
    அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்தி
    அறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே. 20

    2324
    தான்அவ னாகிய ஞானத் தலைவனை
    வானவ ராதியை மாமணிச் சோதியை
    ஈனமில் ஞானத்து இன்னருள் சத்தியை
    ஊனமிலாள்தன்னை ஊனிடைக் கண்டதே. 21

    2325
    ஒளியும் இருளும் பரையும் பரையுள்
    அளியது எனலாகும் ஆன்மாவை யன்றி
    அளியும் அருளும் தெருளும் கடந்து
    தெளிய அருளே சிவானந்த மாமே. 22

    2326
    ஆனந்த மாகும் அரனருட் சத்தியில்
    தான் அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்து
    ஊன்அந்த மாய் உணர் வாய்உள் உணர்வுறில்
    கோன்அந்தம் வாய்க்கும் மகாவா கியமாமே. 23

    2327
    அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்
    அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்
    அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே
    அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே. 24

    2328
    சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடிச்
    சித்தும் அசித்தும் சிவசித்த தாய்நிற்கும்
    சுத்தம் அசுத்தம் தொடங்காத துரியத்துச்
    சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே. 25

    2329
    தானே அறியான் அறிவிலோன் தானல்லன்
    தானே அறிவான் அறிவு சதசத்தென்று
    ஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்
    தானே அறிந்து சிவத்துடன் தங்குமே. 24

    2330
    தத்துவ ஞானம் தலைப்பட் டவர்க்கே
    தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்
    தத்துவ ஞானத்துத் தான்அவ னாகவே
    தத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே. 27

    2331
    தன்னை அறிந்து சிவனுடன் தானாக
    மன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும்
    பின்அது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
    நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே. 28

    2332
    ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்
    தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்
    மேனிகொண்டு ஐங்கரு மத்தவித் தாதலான்
    மோனிகள் ஞானத்து முத்திரை பெற் றார்களே. 29

    2333
    உயிர்க்குஅறி உண்மை உயிர்இச்சை மானம்
    உயிர்க்குக் கிரியை உயிர்மாயை சூக்கம்
    உயிர்க்குஇவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே
    உயிர்ச்சொல் அன்றி அவ்வுளத்து ளானே. 30

    2334
    தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர்
    கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்
    பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு
    அழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே. 31

    2335
    இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
    இல்லதம் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்
    சொல்வது சொல்லிடில் தூராகி தூரமென்று
    ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே. 32

    2336
    உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்தி
    உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்
    உயிரிச்சை யூட்டி யுடனுறலாலே
    உயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே. 33

    2337
    சேரும் சிவமானார் ஐம்மலம் தீர்ந்தவர்
    ஓர்ஒன்றி லார் ஐம் மலஇருள் உற்றவர்
    பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்
    ஆருங்கண் டோ ரார் அவையருள் என்றே. 34

    2338
    எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்
    எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்
    எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்
    எய்தினர் செய்யும் இறையருள் தானே. 35

    2339
    திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
    திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
    திருந்தினர் விட்டார் செறிமலர் கூட்டம்
    திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே. 36

    2340
    அவமும் சிவமும் அறியார் அறியார்
    அவமும் சிவமும் அறிவார் அறிவார்
    அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
    அவமும் சிவமும் அவனரு ளாமே. 37

    2341
    அருளான சத்தி அனல் வெம்மை போல
    பொருள் அவனாகத்தான் போதம் புணரும்
    இருள் ஒளியாய் மீண்டு மும்மல மாகும்
    திருவருள் ஆனந்தி செம்பொருளாமே. 38

    2342
    ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள்
    பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப
    ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்
    பேதித்தப் பேதியா வாறுஅருட் பேதமே. 39

    2343
    பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
    போதம் புணர்போதம் போதமும் நாதமும்
    நாத முடன்நாக நாதாதி நாதமும்
    ஆதன் அருளின் அருள்இச்சை யாமே. 40

    2344
    மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப்
    பாவிய பூதம்கொண்டு ஆட்டிப் படைப்பாதி
    பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்
    ஆவியை நாட்டும் அரன்அரு ளாமே. 41

    2345
    ஆறாது அகன்று தனையறிந் தானவன்
    ஈறாகி யாவினும் இயலாவும் தனில்எய்த
    வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்
    தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே. 42

    2346
    தீண்டற்குரிய அரிய திருவடி நேயத்தை
    மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று
    தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித்
    தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே. 43

    2347
    சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
    சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
    சார்ந்தவர் நேயந் தலைப்ட்ட ஆனந்தர்
    சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே. 44

    2348
    தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம்
    தான்என்று அவன்என்று இரண்டற்ற தன்மையத்
    தான்என்று இரண்டுஉன்னார் கேவலத் தானவர்
    தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே. 45

    2349
    தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
    தன்னினில் தன் ஐ அறியத் தலைப்படும்
    தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில்
    தன்னினில் தன்ஐயும் சார்தற்கு அரியவே. 46

    2350
    அறியகி லேன்என்று அரற்றாதே நீயும்
    நெறிவழி யேசென்ற நேர்பட்ட பின்னை
    இருசுட ராகி இயற்றவல் லானும்
    ஒருசுட ராவந்துஎன் உள்ளத்துள் ஆமே. 47

    2351
    மண்ஒன்று தான்பல நற்கலன் ஆயிடும்
    உள்கின்ற யோனிகட்டு எல்லாம் ஒருவனே
    கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா
    அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின்றானே. 48

    2352
    ஓம்புகின் றான்உலகு ஏழையும் உள்நின்று
    கூம்புகின் றார்குணத் தின்னொடும் கூறுவர்
    தேம்புகின்றார்சிவன் சிந்தைசெய் யாதவர்
    கூம்பகில் லார்வந்து கொள்ளலும் ஆமே. 49

    2353
    குறிஅறி யார்கள் குறிகாண மாட்டார்
    குறிஅறி யார்கடம் கூடல் பெரிது
    குறிஅறி யாவகை கூடுமின் கூடி
    அறிவறி யாஇருந்து அன்னமும் ஆமே. 50

    2354
    ஊனோ உயிரோ உறுகின்றது ஏதுஇன்பம்
    வானோர் தலைவி மயக்கத்து உறநிற்கத்
    தானோ பெரிதுஅறி வோம் என்னும் மானுடர்
    தானே பிறப்போடு இறப்பறி யாரே. 51

    14. அறிவுதயம்

    2355
    தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
    தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
    தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
    தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே. 1

    2356
    அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச்
    சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று
    சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப்
    பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றாளே. 2

    2357
    அறிவு வடிவென்று அறியாத என்னை
    அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி

    அறிவு வடிவென்று அருளால் உணர்ந்தே
    அறிவு வடிவென்று அருந்திருந் தானே. 3

    2358
    அறிவுக்கு அழிவில்aல ஆக்கமும் இல்லை
    அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை
    அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு
    அறைகின் றனமறை ஈறுகள் தாமே. 4

    2359
    ஆயு மலரின் அணிமலர் தன்மேலே
    பாய இதழ்கள் பதினாறும் அங்குள
    தூய அறிவு சிவானந்த மாகியே
    போய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே. 5

    2360
    மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து
    முன்னிநின் றாமை மொழிந்தேன் முதல்வனும்
    பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்
    பின்னிநின் றேன்நீ பெரியையென் றானே. 6

    2361
    அறிவுஅறி வாக அறிந்துஅன்பு செய்மின்
    அறிவுஅறி வாக அறியும்இவ் வண்ணம்
    அறிவுஅறி வாக அணிமாதி சித்தி
    அறிவுஅறி வாக அறிந்தணன் நந்தியே. 7

    2362
    அறிவுஅறி வென்று அங்கு அரற்றும் உலகம்
    அறிவுஅறி யாமை யாரும் அறியார்
    அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால்
    அறிவுஅறி யாமை அழகிய வாறே. 8

    2363
    அறிவுஅறி யாமையை நீவி யவனே
    பொறிவாய் ஒழிந்துஎங்கும் தானான போது
    அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின்
    செறிவாகி நின்றவன் சிவனும் ஆமே. 9

    2364
    அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது
    அறிவுடை யார்நெஞ்ச அருந்தவம் ஆவது
    அறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும்
    அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே. 10

    2365
    மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க்
    காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன்
    சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்
    பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே. 11

    2366
    என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
    என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
    என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது
    என்னையிட்டு என்னை உசாவுகின் றானே. 12

    2367
    மாய விளக்கது நின்று மறைந்திடும்
    தூய விளக்கது நின்று சுடர்விடும்
    காய விளக்கது நின்று கனன்றிடும்
    சேய விளக்கினைத் தேடுகின் றேனை. 13

    2368
    தேடுகின் றேன்திசை எட்டோ டு இரண்டையும்
    நாடுகின் றேன்நல மேஉடை யானடி
    பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக்
    கூடுகின் றேன்குறை யாமனைத் தாலே. 14

    2369
    முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
    பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத்
    தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தன்
    மன்னிச் சிவமாக வாரா பிறப்பே. 15

    15. ஆறு அந்தம்

    2370
    வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்
    நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
    ஓதத் தகும்எட்டு யோகாநந்த அந்தமும்
    ஆதிக்க லாந்தமும் ஆறந்தம் ஆமே. 1

    2371
    அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர்
    அந்தம்ஒர் ஆறும் அறிவார் அமலத்தர்
    அந்தம்ஓர் ஆறும் அறியார் அவர்தமக்கு
    அந்தமோடு ஆதி அறியஒண் ணாதே. 2

    2372
    தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம்
    ஆனாத் துரியத்து அணுவன் தனைக்கண்டு
    தேனார் பராபரம் சேர்சிவ யோகமாய்
    ஆனா மலமற்று அரும்சித்தி யாதலே. 3

    2373
    நித்தம் பரனோடு உயிருற்று நீள்மனம்
    சத்தம் முதல்ஐந்தும் தத்துவத் தால்நீங்கச்
    சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்து
    அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே. 4

    2374
    மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
    மேவுசெய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால்
    மேவும் பரவிந்து நாதம் விடாஆறாறு
    ஓவும் பொழுதுஅணு ஒன்றுஉள தாமே. 5

    2375
    உள்ள உயிர்ஆறாற தாகும் உபாதியைத்
    தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்
    உள்ள இருள்நீங்க ஓர்iஉணர் வாகுமேல்
    எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே. 6

    2376
    தேடும் இயம நியமாதி சென்றகன்று
    ஊடும் சமாதியில் உற்றுப் படர்சிவன்
    பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்
    கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே. 7

    2377
    கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில்
    விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு
    உள்ளன வாம்விந்து உள்ளே ஓடுங்கலும்
    தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே. 8

    2378
    தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவேறு
    ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்கு
    அளியவ னாகிய மந்திரம் தந்திரம்
    தெளிஉப தேசஞா னத்தொடுஐந் தாமே. 9

    2379
    ஆகும் அனாதி கலைஆ கமவேதம்
    ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல்
    ஆகும் அனாதி உடல்அல்லா மந்திரம்
    ஆகும் சிவபோ தகம்உப தேசமே. 10

    2380
    தேசார் சிவமாகும் தன்ஞானத் தின்கலை
    ஆசார நேய மறையும் கலாந்தத்துப்
    பேசா உரையுணர் வற்ற பெருந்தகை
    வாசா மகோசர மாநந்தி தானே. 11

    2381
    தான்அவ னாகும் சமாதி தலைப்படில்
    ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்
    ஏனைய போதாந்தம் சித்தாந்த மானது
    ஞான மென்ஞேய ஞாதுரு வாகுமே. 12

    2382
    ஆறந்த மும்சென்று அடங்கும்அந் நேயத்தே
    ஆறந்த ஞேயம் அடங்கிடும் ஞாதுரு
    கூறிய ஞானக் குறியுடன் வீடவே
    தேறிய மோனம் சிவானந்த மாமே. 13

    2383
    உண்மைக் கலைஆறுஓர் ஐந்தான் அடங்கிடும்
    உண்மைக் கலாந்தம் இரண்டுஐந்தோடு ஏழ்அந்தம்
    உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்து
    உண்மைக் கலைசொல்ல ஓர்அந்தம் ஆமே. 14

    2384
    ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்
    தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து
    வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
    கூளி யருளிய கோனைக் கருதுமே. 15

    2385
    கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப
    அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில்
    வருசமயப் புற மாயைமா மாயை
    உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே. 16

    2386
    வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரை
    போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேய
    நாதாந்தம் ஆனந்தம் சீரோ தயமாகும்
    மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே. 17

    2387
    வேதாந்தம் தன்னில் உபாதிமே வேழ்விட
    நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பதம்
    மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன்
    போதாந்த தற்பதம் போமசி என்பவே. 18

    2388
    அண்டங்கள் ஏழும் கடந்துஅகன்று அப்பாலும்
    உண்டென்ற பேரொளிக் குள்ளாம் உளஒளி
    பண்டுறு நின்ற பராசக்தி என்னவே
    கொண்டவன் அன்றிநின் றான்தங்கள் கோவே. 19

    2389
    கோஉணர்ந் தும்சத்தி யாலே குறிவைத்துத்
    தேவுணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவே
    பாவனைத் தும்படைத் தர்ச்சனை பாரிப்ப
    ஓஅனைத் துண்டுஒழி யாத ஒருவனே. 20

    2390
    ஒருவனை உன்னார் உயிர்தனை உன்னார்
    இருவினை உன்னார் இருமாயை உன்னார்
    ஒருவனு மேயுள் உணர்ந்திநின் றூட்டி
    அருவனு மாகிய ஆதரத் தானே. 21

    2391
    அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து
    வருமவை சத்திகள் முன்னா வகுத்திட்டு
    உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
    திரனுறு தோயாச் சிவாநந்தி யாமே. 22

    2392
    வேதாந்த தொம்பதம் மேவும் பசுஎன்ப
    நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி
    போதாந்த தற்பதம் போய்இரண்டு ஐக்கியம்
    சாதா ரணம்சிவ சாயுச் சிய மாமே. 23

    2393
    சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
    அவம்அவம் ஆகும் அவ்வவ் இரண்டும்
    சிவமாம் சதாசிவன் செய்துஒன்றான் ஆனால்
    நவமான வேதாந்தம் ஞானசித் தாந்தமே. 24

    2394
    சித்தாந்த தேசீவன் முத்திசித் தித்திலால்
    சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்திவர்
    சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
    சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே. 25

    2395
    சிவனைப் பரமனுள் சீவனுள் காட்டும்
    அவமற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனால்
    நவமுற்று அவத்தையில் ஞானம் சிவமாம்
    தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத் தாரே. 26

    2396
    தத்துவம் ஆகும் சகள அகளங்கள்
    தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்
    தத்துவ மாகும் சீவன் தன் தற்பரம்
    தத்துவ மாம்சிவ சாயுச் சியமே. 27

    2397
    வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்
    ஓதும் பொதுவும் சிறப்பும்என்று உள்ளன
    நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்
    பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே. 28

    2398
    பராநந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்
    பரானந்தம் மேல்மூன்றும் பாழுறா ஆனந்தம்
    விராமுத்தி ரானந்தம் மெய்நடன ஆனந்தம்
    பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே. 29

    2399
    ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம்
    ஆகும் பொழுதிற் கலைஐந்தாம் ஆதலில்
    ஆகும் அரனேபஞ் சாந்தகன் ஆம் என்ற
    ஆகும் மறைஆ கமம்மொழிந் தான்அன்றே. 30

    2400
    அன்றாகும் என்னாதுஐ வகைஅந்தம் அன்னை
    ஒன்றான வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு
    நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
    மன்றாடி பாதம் மருவலும் ஆமே. 31

    2401
    அனாதி சீவன்ஐம் மலமற்றுஅப் பாலாய்
    அனாதி அடக்கித் தனைக்கண்டு அரனாய்த்
    தன்ஆதி மலம்கெடத் தத்துவா தீதம்
    வினாவுநீர் பாலாதல் வேதாந்த உண்மையே. 32

    2402
    உயிரைப் பரனை உயிர்சிவன் தன்னை
    அயர்வற்று அறிதொந் தத்தசி அதனால்
    செயலற்று அறிவாகி யும்சென்று அடங்கி
    அயர்வற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே. 33

    2403
    மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்
    சென்னிய தான சிவயோகமாம் ஈதென்ன
    அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள்
    துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே. 34

    2404
    முதலாகும் வேத முழுதுஆ கமம்அகப்
    பதியான ஈசன் பகர்ந்தது இரண்டு
    முதிதான வேதம் முறைமுறை யால்அமர்ந்து
    அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே. 35

    16. பதி பசு பாசம் வேறின்மை

    2405
    அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி
    அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி
    அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
    அறிவு பதியில் பிறப்பறுந் தானே. 1

    2406
    பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
    பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
    பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால்
    பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. 2

    2407
    கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று
    நடக்கின்ற ஞானத்தை நாடோ றும் நோக்கித்
    தொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்
    குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே. 3

    2408
    பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை
    நேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தாலும்
    கூசம் செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்
    வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே. 4

    2409
    விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
    விட்ட பசுபாசம் மெய்கண்டோ ன் மேவுறான்
    சுட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
    சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே. 5

    2410
    நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
    நீடுமாம் நித்தன் நிலையறி வார்இல்லை
    நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
    நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே. 6

    2411
    ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
    ஆய பசுவும் அடலே றெனநிற்கும்
    ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்
    ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே. 7

    2412
    பதிபசு பாசம் பயில்வியா நித்தம்
    பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப்
    பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும்
    பதிபசு பாசம் பயில நிலாவே. 8

    2413
    பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
    கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
    மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்
    துதிதந்து வைத்தனன் சத்தசை வத்திலே. 9

    2414
    அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆகும்
    அறிந்தணு மூன்றுமெ யாங்கணும் ஆக
    அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
    அறிந்த பதிபடைப் பான்அங்கு அவற்றையே. 10

    2415
    படைப்புஆதி யாவது பரம்சிவம் சத்தி
    இடைப்பால உயிர்கட்கு அடைத்துஇவை தூங்கல்
    படைப்பாதி சூக்கத்தைத் தற்பரன் செய்ய
    படைப்பாதி தூய மலம்அப் பரத்திலே. 11

    2416
    ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
    ஆகிய சத்தி சிவபர மேம்ஐந்தால்
    ஆகிய சூக்கத்தில் ஐங்கரு மம்செய்வோன்
    ஆகிய தூயஈ சானனும் ஆமே. 12

    2417
    மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்
    மேவும் பரவிந்து ஐம்முகன் வேறுஈசன்
    மேவும் உருத்திரன் மால்வேதா மேதினி
    ஆகும் படிபடைப் போன்அர னாமே. 13

    2418
    படைப்பும் அளிப்பும் பயில்இளைப் பாற்றும்
    துடைப்பும் மறைப்பும்முன் தோன்ற அருளும்
    சடத்தை விடுத்த அருளும் சகலத்து
    அடைத்த அனாதியை ஐந்தென லாமே. 14

    2419
    ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
    வேறாகு மாயைiல் முப்பால் மிகுத்திட்டுஅங்கு
    ஈறாம் கருவி இவற்றால் வகுத்திட்டு
    வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே. 15

    2420
    வீட்கும் பதிபசு பாசமும் மீதுற
    ஆட்கும் இருவினை ஆங்குஅவற் றால் உணர்ந்து
    ஆட்கு நரசு சுவர்க்கத்தில் தானிட்டு
    நாட்குற நான்தங்கு நற்பாசம் நண்ணுமே. 16

    2421
    நண்ணிய பாசத்தில் நான்எனல் ஆணவம்
    பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
    கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
    அண்ணல் அடிசேர் உபாயமது ஆகுமே. 17

    2422
    ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
    மோசு மறச்சுத்தன் ஆதற்கு மூலமே
    ஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல்
    ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே. 18

    2423
    பாசம் பயிலுயிர் தானே பரமுதல்
    பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப
    பாசம் பயிலப் பதிபர மாதலால்
    பாசம் பயிலப் பதிபசு வாகுமே. 19

    2424
    அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
    அத்தத்தில் உத்தர மாகும் அருள்மேனி
    அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்
    அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே. 20

    17. அடிதலை அறியும் திறங்கூறல்

    2425
    காலும் தலையும் அறியார் கலதிகள்
    கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்
    பாலொன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
    கால்அந்த ஞானத்கைக் காட்டவீ டாகுமே. 1

    2426
    தலைஅடி யாவது அறியார் காயத்தில்
    தலைஅடி உச்சியில் உள்ளது மூலம்
    தலைஅடி யான அறிவை அறிந்தோர்
    தலைஅடி யாகவே தான்இருந் தாரே. 2

    2427
    நின்றான் நிலமுழுது அண்டமும் மேலுற
    வன்தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
    பின்தான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
    தன்தாள் இணைஎன் தலைமிசை ஆனதே. 3

    2428
    சிந்தையின் உள்ளே எந்தை திருவடி
    சிந்தையின் எந்தை திருவடிக் கீழது
    எந்தையும் என்னை அறியகி லான்ஆகில்
    எந்தையை யானும் அறியகி லேனே. 4

    2429
    பன்னாத பாரொளிக்கு அப்புறத்து அப்பால்
    என்நா யாகனார் இசைந்தங்கு இருந்திடம்
    உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம்
    சொன்னான்கழலினை சூடிநின் றேனே. 5

    2430
    பதியது தோற்றும் பதமது வைம்மின்
    மதியது செய்து மலர்ப்பதம் ஓதும்
    நதிபொதி யும்சடை நாரியோர் பாகன்
    கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே. 6

    2431
    தரித்துநின்றானடி தன்னிட நெஞ்சில்
    தரித்து நின்றான் அமராபதி நாதன்
    கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை
    பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே. 7

    2432
    ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள
    தன்தாதை தாளும் இரண்டுள காயத்துள்
    நன்றாகக் காய்ச்சிப் பதஞ்செய வல்லார்கட்கு
    இன்றேசென்று ஈசனை எய்தலும் ஆமே. 8

    2433
    கால்கொண்டுஎன் சென்னியிற் கட்டறக் கட்டற
    மால்கொண்ட நெஞ்சின் மயக்கிற் றுயக்கறப்
    பால்கொண்ட என்ணைப் பரன்கொள்ள நாடினான்
    மேல்கொண்டென் செம்மை விளம்ப ஒண்ணாதே. 9

    2434
    பெற்ற புதல்வர்போல் பேணிய நாற்றமும்
    குற்றமுங் கண்டு குணங்குறை செய்யவோர்
    பற்றைய ஈசன் உயிரது பான்மைக்குச்
    செற்றமி லாச் செய்கைக்கு எய்தின செய்யுமே. 10

    18. முக்குற்றம்

    2435
    மூன்றுள குற்றம் முழுதும் நலிவன
    மான்றுஇருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
    மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
    மூன்றினுள் பட்டு முடிகின்ற வாறே. 1

    2436
    காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்து
    ஏமம் பிடித்திருந் தேனுக்கு எறிமணி
    ஓமெனும் ஓசையின் உள்ளே உறைவதோர்
    தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே. 2

    19. முப்பதம்

    2437
    தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர
    ஏன்ற அசிபதம் இம்மூன்றோடு எய்தனோன்
    ஆகின்ற பராபர மாகும் பிறப்பற
    ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே. 1

    2438
    போதந் தனையுன்னிப் பூதாதி பேதமும்
    ஓதுங் கருவிதொண் ணூறுடன் ஓராறு
    பேதமும் நாதாந்தப் பெற்றியில் கைவிட்டு
    வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே. 2

    2439
    தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்
    நிற்பது அசியத்துள் நேரிழை யாள்பதம்
    சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன்
    கற்பனை யின்றிக் கலந்துநின் றானே. 3

    2440
    அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்த
    கணுஒன் றிலாத சிவமும் கலந்தால்
    இணையறு பால்தேன் அமுதென இன்பத்
    துணையது வாயுரை யற்றிடத் தோன்றுமே. 4

    2441
    தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
    நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும்
    அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்
    செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 5

    2442
    ஐம்பது அறியா தவரும் அவர்சிலர்
    உம்பனை நாடி உரைமுப்ப தத்திடைச்
    செம்பர மாகிய வாசி செலுத்திடத்
    தம்பரயோகமாய்த் தான்அவன் ஆகுமே. 6

    2443
    நந்தி அறிவும் நழுவில் அதீதமாம்
    இந்தியும் சத்தாதி விடவிய னாகும்
    நந்திய மூன்றுஇரண்டு ஒன்று நலம்ஐந்து
    நந்தி நனவாதி மூட்டும் அனாதியே. 7

    2444
    பரதுரி யத்து நனவு படியுண்ட
    விரிவிற் கனவும் இதன்உப சாந்தத்து
    துரிய கழுமுனையும் ஓவும் சிவன்பால்
    அரிய துரியம் அசிபதம் ஆமே. 8

    20. முப்பரம்

    2445
    தோன்றிஎன் உள்ளே சுழன்றுஎழு கின்றதோர்
    மூன்று படிமண் டலத்து முதல்வனை
    ஏன்றெய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி
    நான்று நலம்செய் நலந்தரு மாறே. 1

    2446
    மன்று நிறைந்தது மாபர மாயது
    நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
    கன்று நினைந்தெழு தாயென வந்தபின்
    குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே. 2

    2447
    ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப்புரம்
    கூறா உபதேசம் கூறில் சிவபரம்
    வேறாய் வெளிப்பட்ட வேதப் பசுவனார்
    பேறாக ஆனந்தம் பேறும் பெருகவே. 3

    2448
    பற்றறப் பற்றில் பரம்பதி யாவது
    பற்றறப் பற்றில் பரனறி வேபரம்
    பற்றறப் பற்றினில் பற்றவல் லோர்கட்கே
    பற்றறப் பற்றில் பரம்பர மாமே. 4

    2449
    பரம்பர மான பதிபாசம் பற்றாப்
    பரம்பர மாகும் பரஞ்சிவ மேவப்
    பரம்பர மான பரசிவா னந்தம்
    பரம்பர மாகப் படைப்பது அறிவே. 5

    2450
    நனவில் கலாதியாம் நாலொன்று அகன்று
    தனியுற்ற கேவலம் தன்னில் தானாகி
    நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயந்
    தனையுற்று இடத்தானே தற்பர மாமே. 6

    2451
    தற்கண்ட தூயமும் தன்னில் விசாலமும்
    பிற்காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத்
    தற்பரன் கால பரமும் கலந்தற்ற
    நற்பரா தீதமும் நாடுஅக ராதியே. 7

    21. பரலட்சணம்

    2452
    அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி
    அதீதத்து ளாகி அறிவிலோன் ஆன்மா
    மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம்
    பதியிற் பதியும் பரவுயிர் தானே. 1

    2453
    ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
    சோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின்
    நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர
    போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே. 2

    2454
    துரியங் கடங்கு துரியா தீதத்தே
    அரிய வியோகங்கொண்டு அம்பலத் தாடும்
    பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே
    துரியவல் லார்க்குத் துரிசில்லை தானே. 3

    2455
    செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிவபோல்
    அம்மெய்ப் பரத்தோடு அணுவன்உள் ளாயிடப்
    பொய்மைச் சகமுண்ட போத வெறும்பாழில்
    செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே. 4

    2456
    வைச்ச கலாதி வருதத்து வங்கெட
    வெச்ச இருமாயை வேறாக வேரறுத்து
    உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே
    அச்சம் அறுத்தென்னை ஆண்டவன் நந்தியே. 5

    2457
    என்னை அறிய இசைவித்த என்நந்தி
    என்னை அறிந்து அறி யாத இடத்துய்த்துப்
    பின்னை ஒளியிற் சொரூபம் புறப்பட்டுத்
    தன்னை அளித்தான் தற்பர மாகவே. 6

    2458
    பரந்தும் சுருங்கியும் பார்புனல் வாயு
    நிரந்தர வளியொடு ஞாயிறு திங்கள்
    அரந்த அறநெறி யாயது வாகித்
    தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே. 7

    2459
    சத்தின் நிலையினில் தானான சத்தியும்
    தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கு உடல்
    உய்த்தரும் இச்சையில் ஞானாதி பேதமாய்
    நித்தம் நடத்தும் நடிக்கும்மா நேயத்தே. 8

    2460
    மேலொடு கீழ்பக்கம் மெய்வாய்கண் நாசிகள்
    பாலிய விந்து பரையுள் பரையாகக்
    கோலிய நான்சுவை ஞானம் கொணர் விந்து
    சீலமி லாஅணுச் செய்திய தாமே. 9

    2461
    வேறாம் அதன்தன்மை போலும்இக் காயத்தில்
    ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்
    பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய்
    ஊறாய் உயிர்த்துண்டு உறங்கிடும் மாயையே. 10

    2462
    தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி
    சிற்பரம் தானே செகமுண்ணும் போதமும்
    தொற்பதம் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்கு
    அப்புறம் மற்றதுஇங்கு ஒப்பில்லை தானே. 11

    2463
    பண்டை மறைகள் பரவான் உடலென்னும்
    துண்ட மதியோன் துரியாதீ தந்தன்னைக்
    கண்டு பரனும்அக் காரணோ பாதிக்கே
    மிண்டின் அவன்சுத்தம் ஆகான் வினவிலே. 12

    2464
    வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற
    தனியா இயதற் பரங்காண் அவன்தான்
    வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற
    வெளியாய சத்தி அவன்வடி வாமே. 13

    2465
    மேருவி னோடே விரிகதிர் மண்டலம்
    ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்
    சீரார் தவம்செய்யில் சிவனருள் தானாகும்
    பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே. 14

    22. முத்திரியம்

    2466
    நனவாதி மூன்றினில் சீவ துரியம்
    தனதுஆதி மூன்றினில் பரதுரி யந்தான்
    நனவாதி மூன்றி னில்சிவ துரியமாம்
    இனதாகும் தொந்தத் தசிபதத் துஈடே. 1

    2467
    தானாம் நனவில் துரியம்தன் தொம்பதம்
    தானாம் துரியம் நனவாதி தான்மூன்றில்
    ஆனாப் பரபதம் அற்றது அருநனா
    வானான மேல்மூன்றில் துரியம் அணுகுமே. 2

    2468
    அணுவின் துரியத்து நான்கும துஆகிப்
    பணியும் பரதுரி யம்பயில் நான்கும்
    தணிவில் பரமாகிச் சாரமுந் துரியக்
    கணுவில் இந் நான்கும் கலந்தார் ஐந்தே. 3

    2469
    ஈர்ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள்
    நேர்அந்த மாகநெறிவழி யேசென்று
    பார்அந்த மான பராபத்து அயிக்கியத்து
    ஓர்அந்த மாம்இரு பாதியைச் சேர்த்திடே. 4

    2470
    தொட்டே இருமின் துரிய நிலத்தினை
    எட்டாது எனின்நின்று எட்டும் இறைவனைப்
    பட்டாங்கு அறிந்திடில் பன்னா உதடுகள்
    தட்டாது ஒழிவதோர் தத்துவந் தானே. 5

    2471
    அறிவாய் அசத்தென்னும் ஆறாறு அகன்று
    செறிவாய மாயை சிதைத்துஅரு ளாலே
    பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி
    நெறியான அன்பர் நிலையறிந் தாரே. 6

    2472
    நனவின் நனவாகி நாலாம் துரியம்
    தனதுயிர் தெம்பதம் ஆமாறு போல
    வினையறு சீவன் நனவாதி யாகத்
    தனைய பரதுரி யந்தற் பதமே. 7

    2473
    தொம்பதம் தற்பதம் சொன்முத் துரியம்பொல்
    நம்பிய மூன்றாம் துரியத்து நல்நாமம்
    அம்புலி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்
    செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 8

    23. மும்முத்தி

    2474
    சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்தி
    ஓய்உப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
    Yமூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய்
    ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே. 1

    2475
    ஆவது அறியார் உயிர்பிறப் பாலுறும்
    ஆவது அறியும் உயிர்அருட் பாலுறும்
    ஆவது ஒன்றில்லை அகம்புறத் தென்றுஅகன்று
    ஓவு சிவனுடன் ஒன்றாதல் முத்தியே. 2

    2476
    சிவமாகி மும்மலம் முக்குணம் செற்றுத்
    தவமான மும்முத்தி தத்துவத்து அயிக்கியத்
    துவம்ஆ கியநெறி சோகம்என் போர்க்குச்
    சிவமாம் அமலன் சிறந்தனன் தானே. 3

    2477
    சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய
    சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த
    சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும்
    பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே. 4

    24. முச்சொரூபம்

    2478
    ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்து
    ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு
    வேறும் எனமுச் சொரூபத்து வீடுற்று அங்கு
    ஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே. 1

    2479
    மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
    மூன்றினில் முப்பத் தாறும் உதிப்புள
    மூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக்
    காண்டலும் காயக் கணக்கற்ற வாறே. 2

    2480
    உலகம் புடைபெயர்ந்து ஊழியம் போன
    நிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாய
    பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்
    அளவும் பெருமையும் ஆரறி வாரே. 3

    2481
    பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து
    அருவாய் உருவாய் அருவுரு வாகிக்
    குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை
    உருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே. 4

    2482
    மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து
    மணிஎன வாய்நின்ற வாறுஅது போலத்
    தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப்
    பணிவித்த பேர்நந்தி பாதம்பற்றாயே. 5

    2483
    கல்லொளி மாநிறம் சோபை கதிர்தட்ட
    நல்ல மணியொன்றின் நாடிஒண் முப்பதும்
    சொல்லறும் முப்பாழில் சொல்லறு பேருரைத்து
    அல்அறும் முத்திராந் தத்துஅனு பூதியே. 6

    2484
    உடந்தசெந் தாமரை உள்ளுறு சோதி
    நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால்
    அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ்
    விடம்தரு வாசலை மேல்திற வீரே. 7

    25. முக்கரணம்

    2485
    இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன்
    கடன் உறும் அவ்வுரு வேறெனக்காணும்
    திடமது போலச் சிவபர சீவர்
    உடனுரை பேதமும் ஒன்றென லாமே. 1

    2486
    ஒளியைஒளிசெய்து ஓம்என்று எழுப்பி
    வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
    வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத்
    தெளியத் தெளியும் சிவபதம் தானே. 2

    2487
    முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅக்
    கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்தி
    மிக்க மனோன்மணி வேறே தனித்துஏக
    ஒக்குமது உன்மணி ஓதுஉள் சமாதியே. 3

    26. முச்சூனிய தொந்தத்தசி

    2488
    தற்பதம் தொம்பதம் தானாம் அசிபதம்
    தொல்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றலே
    நிற்பது உயிர்பரன் நிகழ்சிவ மும்மூன்றின்
    சொற்பத மாகும் தொந்தத் தசியே. 1

    2489
    தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி
    தொந்தத் தசிமூன்றில் தொல்கா மதமாதி
    வந்த மலம்குணம் மாளச் சிவம்தோன்றின்
    இந்துவின் முன்இருள் ஏகுதல் ஒக்குமே. 2

    2490
    தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியே
    அந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டு
    அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்து
    உந்து முறையில் சிவன்முன்வைத்து ஓதிடே. 3

    2491
    வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்து
    உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை
    மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து
    அத்தற்கு அடிமை அடைந்துநின் றானே. 4

    2492
    தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்
    அம்புரை தன்னில் உதிக்கும் அசிபதம்
    நம்புறு சாந்தியில் நண்ணும்அவ் வாக்கியம்
    உம்பர் உரைதொந்தத் தசிவாசி யாமே. 5

    2493
    ஆகிய அச்சோயம் தேவதத் தன்இடத்து
    ஆகிய வைவிட்டால் காயம் உபாதானம்
    ஏகிய தொந்தத் தசியென்ப மெய்யறிவு
    ஆகிய சீவன் பரசிவன் ஆமே. 6

    2494
    தாமதம் காமியம் ஆசித் தகுணம்
    மாமலம் மூன்றும் அகார உகாரத்தோடு
    ஆம்அறும் மவ்வும் அவ் வாய்உடல் மூன்றில்
    தாமாம் துரியமும் தொந்தத் தசியதே. 7

    27. முப்பாழ்

    2495
    காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்
    காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக்
    காரிய காரண வாதனை கண்டறும்
    சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே. 1

    2496
    மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
    சேயமுப் பாழெனச் சிவசத்தி யில் சீவன்
    ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத்
    தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே. 2

    2497
    எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும்
    பதியெனும் நந்தி பதமது கூடக்
    கதியெனப் பாழை கடந்து அந்தக் கற்பனை
    உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே. 3

    2498
    துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
    அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்
    அரிய பரம்பரம் என்றே துதிக்கும்
    அருநிலம் என்பதை யார்அறி வாரே. 4

    2499
    ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டு
    வேறா கயபரை யாவென்று மெய்ப்பரன்
    ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோ
    தேறாச் சிவாய நமவெனத் தேறிலே. 5

    2500
    உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும்
    உள்ள பரிசறித் தோரும் அவர்கட்குப்
    பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லை
    உள்ளமும் இல்லை உருவில்லை தானே. 6

    28. காரிய காரண உபாதி

    2501
    செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்
    பற்றும் பரோபதி ஏழும் பகருரை
    உற்றிடும் காரிய காரணத் தோடற
    அற்றிட அச்சிவ மாகும் அணுவனே. 1

    2502
    ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு
    வேறாய் நனவு மிகுந்த கனாநனா
    ஆறாறு அகன்ற கழுத்தி அதில் எய்தாப்
    பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே. 2

    2503
    அகாரம் உயிரே உகாரம் பரமே
    மகாரம் சிவமாய் வருமுப் பதத்துச்
    சிகாரம் சிவமே வகாரம் பரமே
    யகாரம் உயிரென்று அறையலும் ஆமே. 3

    2504
    உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்று
    அயிர்ப்புஅறும் காரணோ பாதி விதிரேகத்து
    உயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தால்அன்றி
    வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே. 4

    2505
    காரியம் ஏழில் கலக்கும் கடும்பசு
    காரணம் ஏழில் கலக்கும் பரசிவன்
    காரிய காரணம் கற்பனை சொற்பதப்
    பாரறும் பாழில் பராபரத் தானே. 5

    29. உபசாந்தம்

    2506
    முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
    பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே
    சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
    சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே. 1

    2507
    காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
    காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
    காரிய காரண வாதனைப் பற்றறப்
    பாரண வும் உப சாந்தப் பரிசிதே. 2

    2508
    அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
    முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி
    மன்னும் பரங்காட்சி யாவது உடனுற்றுத்
    தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே. 3

    2509
    ஆறாதுஅமைந்துஆண வத்தையுள் நீக்குதல்
    பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி
    கூறாத சாக்கிரா தீதம் குருபரன்
    பேறாம் வியாத்தம் பிறழ்உப சாந்தமே. 4

    2510
    வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப் போய்
    ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத்
    தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடே
    ஆய்ந்துஅதில் தீர்க்கை யானதுஈர் ஐந்துமே. 5

    2511
    பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த்
    திரையின்நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று
    உரையுணர்ந்து ஆரமுது ஒக்க உணர்ந்துளோன்
    கரைகண் டானுரை அற்ற கணக்கிலே. 6

    30. புறங்கூறாமை

    2512
    பிறையுள் கிடந்த முயலை எறிவான்
    அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக்
    கறைமணி கண்டனக் காண்குற மாட்டார்
    நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே. 1

    2513
    கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக்
    கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க
    பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே
    அருந்தர அலைகடல் ஆறசென் றாலே. 2

    2514
    கருதலர் மாளக் கருவாயில் நின்ற
    பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை
    மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்
    தருவலர் கேட்ட தனியும்ப ராமே. 3

    2515
    பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும்
    இணங்கிஎம் ஈசனே ஈசன்என்று உன்னில்
    கணம்பதி னெட்டும் கழலடி காண
    வணங்ககெழு நாடி அங்கு அன்புற லாமே. 4

    2516
    என்னிலும் என்னுயி ராய இறைவனைப்
    பொன்னிலும் மாமணி யாய புனிதனை
    மின்னிய எவ்வுய ராய விகிர் தனை
    உன்னிலும் உன்னும் உறும்வகை யாலே. 5

    2517
    நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
    ஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும்
    வென்றுஐம் புலனும் விரைந்து பிணக்கறுவந்து
    ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே. 6

    2518
    நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும்
    எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப்
    பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரை
    விண்அறி வாளர் விரும்புகின் றாரே. 7

    2519
    விண்ணவ ராலும் அறிவுஅறி யான்தன்னைக்
    கண்ணற வுள்ளே கருதிடின் காலையில்
    எண்உற வாசமுப் போதும் இயற்றிநீ
    பண்ணிடில் தன்மை பராபர னாமே. 8

    2520
    ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்
    பின்தான் அருள்செய்த பேரருள் ஆளவன்
    கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்
    பொன்றாத போது புனைபுக ழானே. 9

    2521
    போற்றியென் றேன்எந்தை பொன்னான சேவடி
    ஏற்றியே தென்றும் எறிமணி தான்அகக்
    காற்றின் விளக்கது காயம் மயக்குறும்
    அற்றலும் கேட்டது மன்றுகண் டேனே. 10

    2522
    நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை
    ஊடுபுக் காரும் உணர்ந்தறி வாரில்லை
    கூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண்
    மூடிக்கண் டேனுல கேழுங்க்ண் டேனே. 11

    2523
    ஆன புகழும் அமைந்த தோர் ஞானமுந்
    தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுடண்
    டூனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்கு
    வானகஞ் செய்யு மறவனு மாமே. 12

    2524
    மாமதி யாமதி யாய்நின்ற மாதவர்
    தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தந்
    தாமதி யாகச் சகமுணச் சாந்திபுக்
    காமல மற்றார் அமைவுபெற் றாரே. 13

    2525
    பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்
    டிதமுற்ற பாச இருளைத் துரந்து
    மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே
    திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே. 14

    2526
    சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
    சுத்தாசுக் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர்
    முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்
    சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே. 15

    31. எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை

    2527
    உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
    துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு
    மதிக்கும் குபேரன் வடதிசை யீசன்
    நிதித்தெண் டிசையு நிறைந்துநின் றாரே. 16

    2528
    ஒருங்கிய பூவுமோர் எட்டித ழாகும்
    மருங்கிய மாயா புரியத னுள்ளே
    சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே
    ஒருங்கிய சோதியை ஒர்ந்தெழும் உய்ந்தே. 17

    2529
    மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்
    விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர்
    எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற்
    பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே. 18

    2530
    ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு
    நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
    கூறே குவிமுலைக் கொண்பனை யாளொடும்
    வேறே யிருக்கும் விழுபொருள் தானே. 19

    2531
    திகையெட்டும் தேரேட்டும் தேவதை எட்டும்
    வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை
    வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து
    முகையெட்டும் உள்நின் றுதிக்கின்ற வாறே. 20

    2532
    ஏழுஞ் சகளம் இயம்பு கடந்தெட்டில்
    வாழும் பரமென் றதுகடந் தொன்பதில்
    ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில்
    தாழ்வது வான தனித்தன்மை தானே. 21

    2533
    பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
    நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற வூழிகள்
    செல்லூழி அண்டத்துக் சென்றவவ் வூழியுள்
    அவ்வூழி யுச்சியு ள்ஒன்றிற் பகவனே 22

    2534
    புரியும் உலகினிற் பூண்டவெட் டானை
    திரியுங் களிற்றொடு தேவர் குழாமும்
    எரியு மழையும் இயங்கும் வெளியும்
    பரியுமா காசத்திற் பற்றது தானே. 23

    2535
    ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல்
    ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு
    சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்
    பூவின்றிச் சூடான் புரிசடை யோனே. 24

    2536
    ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
    நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
    வென்று மிருந்து விகிர்தனை நாடுவர்
    சென்றும் இருந்தும் திருவடை யோரே. 25

    32. ஒன்பான் அவத்தை - ஒன்பான் அபிமானி

    2537
    தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன்
    நற்பத விராட்டன்பொன் கர்ப்பனவ் யாகிர்தன்
    பிற்பதஞ் சொலிதையன் பிரசா பத்தியன்
    பொற்புவி சாந்தன் பொருதபி மானியே. 26

    2538
    நவமாம் அவத்தை நன்வாதி பற்றிற்
    பவமா மலங்குணம் பற்றற்றுப் பற்றாத்
    தவமான சத்திய ஞானப் பொதுவிற்
    றுவமார் துரியஞ் சொருபம தாமே. 27

    2539
    சிவமான சிந்தையிற் சீவன் சிதைய
    பவமான மும்மலம் பாறிப் பறிய
    நவமான அந்தத்தின் நற்சிவ போதந்
    தவமான மவையாகித் தானல்ல வாகுமே. 28

    2540
    முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவந்
    தன்சொல்லில் எண்ணத்தகாவொன்பான் வேறுள
    பின்சொல்ல லாகுமிவ் வீரொன்பான் பேர்த்திட்டுத்
    தன்செயத வாண்டவன் றான்சிறந் தானே. 29

    2541
    உகந்த ஒன்பதும் ஐந்தும் உலகம்
    பகர்ந்த பிரானென்னும் பண்பினை நாடி
    அகந்தெம் பிரானென்பன் அல்லும் பகலும்
    இகந்தன வல்வினை யோடறுத் தானே. 30

    2542
    நலம்பல காலந் தொகுத்தன நீளங்
    குலம்பல வண்ணங் குறிப்பொடுங் கூடும்
    பலம்பல பன்னிரு கால நினையும்
    நிலம்பல வாறின் நீர்மையன் றானே. 31

    2543
    ஆதி பராபர மாகும் பராபரை
    சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம்
    ஓதுங் கமைமாயே யோரிரண் டோ ரமுத்தி
    நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே. 32

    2544
    தேராத சிந்தை தெளியத் தெளிவித்து
    வேறாத நரக சுவர்க்கமும் மேதினி
    ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான்
    வேறாத் தெளியார் வினையுயிர் பெற்றதே. 33

    2545
    ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி
    நன்பாற் பயிலு நவதத் துவமாதி
    ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்
    செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே. 34

    33. சுத்தாஅசுத்தம்

    2546
    நாசி நுனியினின் நான்குமூ விரலிடை
    ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
    பேசி யிருக்கும் பெருமறை யம்மறை
    கூசி யிருக்குங் குணமது வாமே. 35

    2547
    கருமங்கள் ஒன்று கருதுங் கருமத்
    துரிமையுங் கன்மமும் முன்னும் பிறவிப்
    கருவினை யாவது கண்டகன் றன்பின்
    புரிவன கன்மக் கயத்துட் புகுமே. 36

    2548
    மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
    மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
    மாயை மறைய மறையவல் லார்கட்குக்
    காயமும் இல்லை கருத்தில்லை தானே. 37

    2549
    மோழை யடைந்து முழைதிறந் துள்புக்குக்
    கோழை யடைகின்ற தண்ணற் குறிப்பினில்
    ஆழ அடைந்தங் கனலிற் புறஞ்செய்து
    தாழ அடைப்பது தன்வலி யாமே. 38

    2550
    காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
    காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
    தேயத்து ளேயெங்குந் தேடித் திரிவர்கள்
    காயத்துள் நின்ற கருத்தறி யாரே. 39

    2551
    ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
    ஆசூச மாமிடம் ஆரும் அறிகிலார்
    ஆசூச மாமிடம் ஆரும் அறிந்தபின்
    ஆசூச மானிடம் ஆசூச மாமே. 40

    2552
    ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு
    ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு
    ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு
    ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே. 41

    2553
    வழிபட்டு நின்று வணங்கு மவர்ககுச்
    சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்
    குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
    கழிபட் டவர்க்கன்றிக் காணவொண் ணாதே. 42

    2554
    தூய்மணி தூயனல் தூய ஒளிவிடும்
    தூய்மணி தூயனல் தூரறி வாரில்லை
    தூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத்
    தூய்மணி தூயனல் தூயவு மாமே. 43

    2555
    தூயது வாளா வைத்தது தூநெறி
    தூயது வாளா நாதன் திருநாமம்
    தூயது வாளா அட்டமா சித்தியும்
    தூயது வாளா தூயடிச் சொல்லே. 44

    2556
    பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை
    அருளது போற்றும் அடியவ ரன்றிச்
    சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்
    மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே. 45.

    2557
    வினையா மசத்து விளைவ துணரார்
    வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார்
    வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார்
    வினையாளார் மிக்க விளைவறி யாரே. 46

    34. முத்திநிந்தை.

    2558
    பரகதி யுண்டென இல்லையென் போர்கள்
    நரகதி செல்வது ஞாலம் அறியும்
    இரகதி செய்திடு வார்கடை தோறும்
    துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே. 1.

    2559
    கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
    நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்
    பாடகில் லாரவன் செய்த பரிசறிந்
    தாடவல் லாரவர் பேறெது வாமே. 2.

    2560
    புறப்பட்டுப் போகும் புகுதுமென் னெஞ்சில்
    திறப்பட்ட சிந்தையைப் தெய்வமென் றெண்ணி
    அறப்பட்ட மற்றப் பதியென் றழைத்தேன்
    இறப்பற்றி னேன்இங் கிதென்னென்கின் றானே 3.

    2561
    திடரடை நில்லாத நீர்போல் ஆங்கே
    உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக்
    கடலிடை நில்லா கலஞ்சேரு மாபோல்
    அடலிடை வண்ணனும் அங்குநின் றானே. 4.

    2562
    தாமரை நூல்போல் தடுப்பார் பரந்தொடும்
    போம்வழி வேண்டிப் புறமே யுழிதர்வர்
    காண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள்
    தீநெறி செல்வான் திரிகின்ற வாறே. 5.

    2563
    மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
    கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்
    காடும் மலையுங் கழனி கடந்தோறும்
    ஊடும் உருவினை யுன்னிகி லாரே. 6.

    2564
    ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
    போவார் குடக்கும் குணக்கும் குறுவழி
    நாவினின் மந்திர மென்று நடுவங்கி
    வேவது செய்து விளங்கிடு வீரே. 7.

    2565
    மயக்குற நோக்கினும் மாதவஞ் செய்யார்
    தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்
    சினக்குறப் பேசின தீவினை யாளர்
    தமக்குற வல்லினை தாங்கிநின் றாரே. 8.

    35. இலக்கணாத் திரயம்

    2566
    விட்ட விலக்கணைதான்போம் வியோமத்துத்
    தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும்
    விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியிற்
    சுட்டு மிலக்கணா தீதஞ் சொருபமே. 9.

    2567
    வில்லின் விசைநாணிற்கோத்திலக்கெய்தபின்
    கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன
    வில்லு ளிருந்தெறி கூரும் ஒருவற்குக்
    கல்கலன் என்னக் கதிரெதி யாமே. 10.

    36. தத்துவமசி வாக்கியம்.

    2568
    சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார்
    தாவு பரதுரி யத்தனில் தற்பதம்
    மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பத
    மோவி விடும் தத் துவமசி உண்மையே. 1.

    2569
    ஆறா றகன்ற அணுத்தொம் பதஞ்சுத்தம்
    ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப்
    பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து
    வீறான தொந்தத் தசிதத்வ மசியே. 2.

    2570
    ஆகிய வச்சோயம் தேவகத் தன்னிடத்து
    ஆகிய விட்டு விடாத விலக்கணைத்து
    ஆருப சாந்தமே தொந்தத் தசியென்ப
    ஆகிய சீவன் பரன்சிவ னாமே. 3.

    2571
    துவந்தத் தசியே தொந்தத் தசியும்
    அவைமன்னா வந்து வயத்தேகமான
    தவமுறு தத்துவ மசிவே தாந்த
    சிவமா மதுஞ்சித் தாந்தவே தாந்தமே. 4.

    2572
    துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
    அரிய பரமென்ப ராகாரி தன்றென்னார்
    உரிய பரம்பர மாமொன் றுதிக்கும்
    அருநிலம் என்பதை யாரறி வாரே. 5.

    2573
    தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதம்
    நம்பிய முத்துரி யத்துமே னாடவே
    யும்பத மும்பத மாகும் உயிர்பரன்
    செம்பொரு ளான சிவமென லாமே. 6.

    2574
    வைத்த துரிய மதிற்சொரு பானந்தத்
    துய்த்த பிரணவ மாமுப தேசத்தை
    மெய்த்த விதயத்து விட்டிடு மெய்யுணர்
    வைத்த படியே யடைந்து நின்றானே. 7.

    2575
    நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்துப்
    பினமா மலத்தைப் பின்வைத்துப் பின்சுத்தத்
    தனதாஞ் சிவகதி சத்தாதி சாந்தி
    மனவா சகங்கெட்ட மன்னனை நாடே. 8.

    2576
    பூரணி யாது புறம்பொன்றி லாமையின்
    பேரணி யாதது பேச்சொன்றி லாமையின்
    ஓரணை யாததுவொன்றுமி லாமையிற்
    காரண மின்றியே காட்டுந் தகைமைத்தே. 9.

    2577
    நீயது வானா யெனநின்ற பேருரை
    ஆயது நானானேன் என்னச் சமைந்தறச்
    சேய சிவமாக்குஞ் சீர்நந்தி பேரருள்
    ஆயது வாயனந் தானந்தி யாகுமே. 10.

    2578
    உயிர்பர மாக உயர்பர சீவன்
    அரிய சிவமாக அச்சிவ வேதத்து
    இரியிலுஞ் சீராம் பராபரன் என்ன
    உரிய உரையற்ற வோமய மாமே. 11.

    2579
    வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்
    ஆய்நாசி யுச்சி முதலவை யாய்நிற்கும்
    தாய்நாடி யாதிவாக் காதி சகலாதி
    சேய்நா டொளியெனச் சிவகதி யைந்துமே. 12.

    2580
    அறிவறி யாமை இரண்டும் அகற்றிப்
    செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப்
    பிறிவறி யாது பிரானென்று பேணுங்
    குறியறி யாதவர் கொள்ளறி யாரே. 13.

    2581
    அறிவார் அறிவன அப்பும் அனலும்
    அறிவார் அறிவன அப்புங் கலப்பும்
    அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால்
    அறிவான் அறிந்த அறிவறி யோமே. 14.

    2582
    அதீதத்துள் ளாகி அகன்றவன் நந்தி
    அதீதத்துள் ளாகி அறிவிலோன் ஆன்மா
    மதிபெற் றுருள்விட்ட மன்னுயி ரொன்றாம்
    பதியிற் பதியும் பரவுயிர் தானே. 15.

    2583
    அடிதொழ முன்னின் றமரர்க ளத்தன்
    முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப்
    படிதொழ நீபண்டு பாவித்த தெல்லாங்
    கடிதொழ காணன்னுங் கண்ணுத லானே. 16.

    2584
    நின்மல மேனி நிமலன் பிறப்பிலி
    என்னுளம் வந்திவன் என்னடி யானென்று
    பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்
    நின்மல மாகென்று நீக்கவல் லானே. 17.

    2585
    துறந்துபுக் கொள்ளொளி சோதியைக் கண்டு
    பறந்ததென் உள்ளம் பணிந்து கிடந்தே
    மறந்தறி யாவென்னை வான்வர் கோனும்
    இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே. 18.

    2586
    மெய்வாய் கண்மூக்குச் செவியென்னும் மெய்த் தோற்றத்
    தவ்வாய அந்தக் கரணம் அகில்மும்
    எவ்வா யியுரும் இறையாட்ட ஆடலாற்
    கைவா யிலாநிறை எங்குமெய் கண்டதே. 19.

    37. விசுவக் கிராசம்.

    2587
    அழிகின்ற சாயா புருடனைப் போலக்
    கழிகின்ற நீரிற் குமிழியைக் காணில்
    எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப்
    பொழிகின்ற இவ்வுடற் போமப் பரத்தே. 1.

    2588
    உடலும் உயிரும் ஒழிவற ஒன்றிற்
    படருஞ் சிவசத்தி தாமே பரமாம்
    உடலைவிட் டிந்த உயிரெங்கு மாகிக்
    கடையுந் தலையுங் கரக்குஞ் சிவத்தே. 2.

    2589
    செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம்
    அவியின் றியமன மாதிகள் ஐந்துங்
    குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து
    தவிர்வொன் றிலாத சராசரந் தானே. 3.

    2590
    பரனெங்கு மாரப் பரந்துற்று நிற்கும்
    திரனெங்கு மாகிச் செறிவெங்கு மெய்தும்
    உரனெங்கு மாயுல குண்டு உமிழ்க்கும்
    வரமிங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே. 4.

    2591
    அளந்து துரியத் தறிவினை வாங்கி
    உளங்கொள் பரஞ்சகம் உண்ட தொழித்துக்
    கிளர்ந்த பரஞ்சிவஞ்சேரக் கிடைத்தால்
    விளங்கிய வெட்ட வெளியனு மாமே. 5.

    2592
    இரும்பிடை நீரென என்னையுள் வாங்கிப்
    பரம்பர மான பரமது விட்டே
    உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
    இருந்தஎன் நந்தி இதயத்து ளானே. 6.

    2593
    கரியுண் விளவின் கனிபோல் உயிரும்
    உரிய பரமுமுன் னோதுஞ் சிவமும்
    அரிய துரியமேல் அகிலமும் எல்லாம்
    திரிய விழுங்குஞ் சிவபெரு மானே. 7.

    2594
    அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன்
    தந்தம் பரம்பரன் தன்னிற் பரமுடன்
    நந்தமை யுண்டுமெய்ஞ் ஞானநே யாந்தத்தே
    நந்தி யிருந்தனன் நாமறி யோமே. 8.

    38. வாய்மை

    2595
    அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள்
    குற்ற மறுத்தபொன் போலுங் கனலிடை
    அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில்
    செற்றம் அறுத்த செழுஞ்சுட ராகுமே. 1.

    2596
    எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு
    எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை
    எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில்
    எல்லாம் அறிந்த இறையென லாமே. 2.

    2597
    தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து
    முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
    புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து
    கலைநின்ற கள்வனை கண்டுகொண் டேனே. 3.

    2598
    தானே யுலகில் தலைவ னெனத்தகும்
    தானே யுலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்
    வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும்
    ஊனே யுருகிய வுள்ளமொன் றாமே. 4.

    2599
    அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில்
    இருளற்ற சிந்தை இறைவனை நாடி
    மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
    பொருளுற்ற சேவடி போற்றுவோர் தாமே. 5.

    2600
    மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்தன்னை
    பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
    உய்கலந் தூழித் தலைவனுமாய் நிற்கும்
    மெய்கலந் தின்பம் விளைந்திடும் மெய்யர்க்கே. 6.

    2601
    மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப்
    பொய்கலந் தாருட் புகுதாப் புனிதனை
    கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக்
    கைகலந் தார்க்கே கருத்துற லாமே. 7.

    2602
    எய்திய காலத் திருபொழு துஞ்சிவன்
    மெய்செயின் மேலை விதியது வாய்நிற்கும்
    பொய்யும் புலனும் புகலொன்று நீத்திடில்
    ஐயனும் அவ்வழி யாகிநின் றானே. 8.

    2603
    எய்துவ தெய்தா தொழிவ திதுவருள்
    உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்தி
    பொய்செய்புலன் நெறியொன்பதுந்தாட்கொளின்
    மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே. 9.

    2604
    கைகலந் தானை கருத்தினுள் நந்தியை
    மெய்கலந் தான்தன்னை வேத முதல்வனைப்
    பொய்கலந் தார்முன் புகுதாப் புனிதனைப்
    பொய்யொழிந் தார்க்கே புகலிட மாமே 10.

    2605
    மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
    கைத்தாள் கொண்டாருந் திறந்தறி வாரில்லை
    பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டாம்
    கத்தாள் திறக்கில் அரும் பேற தாமே. 11.

    2606
    உய்யும் வகையால் உணர்வில் ஏத்துமின்
    மெய்யன் அரனெறி மேலுண்டு திண்ணெனப்
    பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு
    ஐயனும் அங்கே அமர்ந்துநின் றானே. 12.

    2607
    வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு
    தம்பாற் பறவை புகுந்துணத் தானொட்டா
    தம்புகொண் டெய்திட் டகலத் துரத்திடிற்
    செம்பொற் சிவகதி சென்றெய்த லாமே. 13

    2608
    மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்
    துயக்கறுத்தானைத் தொடர்மின்தொடர்ந்தால்
    தியக்கஞ் செய்யாதே சிவனெம் பெருமான்
    உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே. 14

    2609
    மனமது தானே நினையவல் லாருக்குக்
    கினமெனக் கூறு மிருங்காய மேவற்
    றனிவினி னாதன்பால் தக்கன செய்யில்
    புனிதன் செயலாகும் போதப் புவிக்கே. 15

    39. ஞானி செயல்

    2610
    முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர்
    பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள்
    தன்னை யறிந்திடுந் தததுவ ஞானிகள்
    நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே. 1.

    2611
    தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்
    முன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள்
    பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்
    சென்னியின் வைத்த சிவனரு ளாலே. 2.

    2612
    மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
    மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
    மனவாக்கு கெட்டவர் வாதனை தன்னால்
    தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே. 3

    40. அவா அறுத்தல்

    2613
    வாசியு மூசியும் பேசி வகையினால்
    பேசி இருந்து பிதற்றிப் பயனில்லை
    ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
    ஈசன் இருந்த இடம் எளிதாமே. 1.

    2614
    மாடத்து ளானலன் மண்டபத் தானலன்
    கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன்
    வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
    மூடத்து ளேநின்று முத்திதந் தானே. 2.

    2615
    ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
    ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
    ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
    ஆசை விடவிட ஆனந்த மாமே. 3.

    2616
    அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
    படுவழி செய்கின்ற பற்றற வீசி
    விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
    தொடுவது தம்மைத் தொடர்தலு மாமே. 4.

    2617
    உவாக்கடல் ஒக்கின்ற வூழியும் போன
    துவாக்கட லுட்பட்டுத் துஞ்சினர் வானோர்
    அவாக்கட லுட்பட் டழுந்தினர் மண்ணோர்
    தவாக்கடல் ஈசன் தரித்து நின்றானே. 5.

    2618
    நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
    துந்தொழி லற்றுச் சுத்தம தாகலும்
    பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
    துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே. 6.

    2619
    உண்மை யுணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம்
    பெண்மயற் கெட்டறப் பேறட்ட சித்தியாம்
    திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
    வண்மை யருள்தான் அடைந்தபின் ஆறுமே. 7.

    2620
    அவனிவன் ஈசனென் றன்புற நாடிச்
    சிவனிவன் ஈசனென் றுண்மையை யோரார்
    பவனிவன் பல்வகை யாமிப் பிறவி
    புவனிவன் போவது பொய்கண்ட போதே. 8.

    2621
    கொதிக்கின்ற வாறுங் குளிர்கின்ற வாறும்
    பதிக்கின்ற வாறிந்தப் பாரக முற்றும்
    விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்
    நொதிக்கின்ற காயத்து நூலொன்று மாமே. 9.

    2622
    உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
    கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
    சிந்தையில் வைத்துத் தெளிவுறச் சேர்த்திட்டால்
    முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே. 10.

    41. பக்தியுடைமை

    2623
    முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும்
    அத்தனை மாயா அமரர் பிரான்தனைச்
    சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப்
    பத்தர் பரசும் பசுபதி தானென்றே. 1.

    2624
    அடியார் அடியார் அடியார்க் கடிமைக்
    கடியவனாய் நல்கிட் டடினையும் பூண்டேன்
    அடியார் அருளால் அவனடி கூட
    அடியா னிவனென் றடிமைகொண் டானே. 2.

    2625
    நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்
    ஆரிக் கடனந்தி யாமா ரறிபவர்
    பாரிற் பயனாரைப் பார்க்கிலும் நேரியர்
    ஊரில் உமாபதி யாகிநின் றானே. 3.

    2626
    ஒத்துல கேழும் அறியா ஒருவனென்
    ற்த்தன் இருந்திடம் ஆரறிவார்சொல்லப்
    பத்தர்தம் பத்தியிற் பாற்படில் அல்லது
    முத்தினை யார்சொல்ல முந்துநின் றாரே. 4.

    2627
    ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல்
    நான்கன்றாய் நாடி யழைத்தேனென் நாதனை
    வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள்
    ஊன்கன்றா னாடிவந் துள்புகுந் தானே. 5.

    2628
    பெத்தத்துந் தன்பணி இல்லை பிறத்தலான்
    முத்தத்துந் தன்பணி இல்லை முறைமையால்
    அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலாற்
    பத்திப்பட் டோ ர்க்குப் பணியொன்றும் இல்லையே. 6.

    2629
    பறவையிற் கற்பமும் பாம்புமெய் யாகப்
    குறவஞ் சிலம்பக் குளிர்வரை யேறி
    நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்
    இறைவனென் றென்மனம் ஏத்தகி லாவே. 7.

    2630
    உறுதுணை நந்தியை உம்பர் பிரானை
    பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின்
    செறிதுணை செய்து சிவனடி சிந்தித்
    துறுதுணை யாயங்கி யாகிநின் றானே. 7.

    2631
    வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற
    தானவர் முப்புரஞ் செற்ற தலைவனைக்
    கானவன் என்றுங் கருவரை யானென்றும்
    ஊனத னுள்நினைந் தொன்றுபட் டாரே. 8.

    2632
    நிலைபெறு கேடென்று முன்னே படைத்த
    தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம்
    மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்
    உலையுளும் உள்ளத்து மூழ்கிநின் றேனே. 9.

    42. முத்தியுடைமை

    2633
    முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்
    தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி
    மெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்
    பத்தியி லுற்றோர் பரானந்த போதரே. 1.

    2634
    வளங்கனி தேடிய வன்றாட் பறவை
    உளங்கனி தேடி யுழிதரும் போது
    களங்கனி யங்கியிற் கைவிளக் கேற்றி
    நலங் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே. 2

    43. சோதனை

    2635
    பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து
    அம்மா நடிதந் தருட்கடல் ஆடினோம்
    எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச்
    சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே. 1.

    2636
    அறிவுடை யானரு மாமறை யுள்ளே
    செறிவுடை யான்மிகு தேவர்க்குந் தேவன்
    பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த
    குறியுடை யானொடுங் கூடுவன் நானே. 2.

    2637
    அறிவறி வென்றங் கரற்றும் உலகம்
    அறிவறி யாமையை யாரும் அறியார்
    அறிவறி யாமை கடந்தறி வானால்
    அறிவறி யாமை யழகிய வாறே. 3.

    2638
    குறியாக் குறியினிற் கூடாத கூட்டத்
    தறியா அறிவில் அவிழ்ந்தேக சித்தமாய்
    நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றுஞ்
    செறியாச் செறிவே சிவமென லாமே. 4.

    2639
    காலினில் ஊருங் கரும்பினில் கட்டியும்
    பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
    பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை
    காவலன் எங்குங் கலந்துநின் றானே. 5.

    2640
    விருப்பொடு கூடி விகிர்த்னை நாடிப்
    பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல
    இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
    நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே. 6.

    2641
    நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
    வந்தென் அகம்படி கோயில்கொண் டான்கொள்ள
    எந்தைவந் தானென் றெழுந்தேன் எழுதலுஞ்
    சிந்தையி லுள்ளே சிவனிருந் தானே. 7.

    2642
    தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை
    நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
    புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்
    பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே. 8.

    2643
    தொடர்ந்துநின் றானென்னைச் சோதிக்கும் போது
    தொடர்ந்துநின் றானல்ல நாதனும் அங்கே
    படர்ந்துநின் றாதிப் பராபரன் எந்தை
    கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே. 9.

    2644
    அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள்
    இவ்வழி தந்தை தாய் கேளியான் ஒக்குஞ்
    செவ்வழி சேர்சிவ லோகத் திருந்திடும்
    இவ்வழி நந்தி இயல்பது தானே. 10.

    2645
    எறிவது ஞானத் துறைவாள் உருவி
    அறிவது னோடேயவ் வாண்டகை யானைச்
    செறிவது தேவர்க்குத் தேவர் பிரானைப்
    பறிவது பல்கணப் பற்றுவி டாரே. 11.

    2646
    ஆதிப் பிரான்தந்த வாள்ங்கைக்கொண்டபின்
    வேதித்து என்னை விலக்கவல் லாரில்லை
    சோதிப்பன் அங்கே சுவடு படாவண்ணம்
    ஆதிக்கட் டெய்வ மவனிவ னாமே. 12.

    2647
    அந்தக் கருவை யருவை வினைசெய்தற்
    பந்தம் பணியச்சம் பல்பிறப் பும்வாட்டிச்
    சிந்தை திருத்தலுஞ் சேர்ந்தாரச் சோதனை
    சந்திக்கத் தற்பர மாகுஞ் சதுரர்க்கே. 13.

    2648
    உரையற்ற தொன்றை யுரைத்தான் எனக்குக்
    கரையற் றெழுந்த கலைவேட் டறுத்துத்
    திரையொத்த என்னுடல் நீங்கா திருத்திப்
    புரையற்ற என்னுட் புகுந்தற் பரனே. 14.

    எட்டாம் தந்திரம் முடிவு பெற்றது