MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்

    1. வந்தே மாதரம்
    2. ஜய வந்தே மாதரம்
    3. நாட்டு வணக்கம்
    4. பாரத நாடு
    5. பாரத தேசம்
    6. எங்கள் நாடு
    7. ஜயபாரத
    8. பாரத மாதா
    9. எங்கள் தாய்
    10. வெறி கொண்ட தாய்
    11. பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி
    12. பாரத மாதா நவரத்தின மாலை
    13. பாரத தேவியின் திருத் தசாங்கம்
    14. தாயின் மணிக்கொடி பாரீர்
    15. பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
    16. போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்
    17. பாரத சமுதாயம்
    18. ஜாதீய கீதம்
    19. ஜாதீய கீதம்
    20. செந்தமிழ் நாடு
    21. தமிழ்த்தாய்
    22. தமிழ்
    23. தமிழ்மொழி வாழ்த்து
    24. தமிழச் சாதி.
    25. வாழிய செந்தமிழ்!
    26. சுதந்திரப் பெருமை
    27. சுதந்திரப் பயிர்
    28. சுதந்திர தாகம்
    29. சுதந்திர தேவியின் துதி
    30. விடுதலை
    31. சுதந்திரப் பள்ளு
    32. சத்ரபதி சிவாஜி
    33. கோக்கலே சாமியார் பாடல்
    34. தொண்டு செய்யும் அடிமை
    35. நம்ம ஜாதிக் கடுக்குமோ
    36. நாம் என்ன செய்வோம்.
    37. பாரத தேவியின் அடிமை
    38. வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று
    39. தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி
    40. நடிப்பு சுதேசிகள்


    1. தேசிய கீதங்கள்

    1. வந்தே மாதரம்



    ராகம் - நாதநாமக்கிரியை தாளம் - ஆதி

    பல்லவி

    வந்தே மாதரம் என்போம் - எங்கள்
    மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)

    சரணங்கள்

    ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
    ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
    வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
    வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

    ஈனப் பறையர்க ளேனும் அவர்
    எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
    சீனத் தராய்விடு வாரோ? - பிற
    தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

    ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
    அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்
    தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
    சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
    நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
    ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

    எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
    யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
    முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
    முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)

    புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
    போயின நாட்களுக் கினிமனம் நாணித்
    தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
    தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)
    -----

    2. ஜய வந்தே மாதரம்



    ராகம் - ஹிந்துஸ்தானி பியாக் தாளம் - ஆதி

    பல்லவி

    வந்தே மாதரம் - ஜய
    வந்தே மாதரம்.

    சரணங்கள்

    ஜயஜய பாரத ஜயஜய பாரத
    ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே)

    ஆரிய பூமியில் நாரிய ரும் நர
    சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே)

    நொந்தே போயினும் வெந்தே மாயினும்
    நந்தே சத்தர்உ வந்தே சொல்வது (வந்தே)

    ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
    சென்றா யினும்வலி குன்றா தோதுவம். (வந்தே)
    ------

    3. நாட்டு வணக்கம்



    ராகம் - காம்போதி தாளம் - ஆதி

    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
    இருந்ததும் இந்நாடே - அதன்
    முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
    முடிந்ததும் இந்நாடே - அவர்
    சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
    சிறந்ததும் இந்நாடே - இதை
    வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
    வாயுற வாழ்த்தேனோ? - இதை
    வந்தே மாதரம், வந்தே மாதரம்
    என்று வணங்கேனோ?

    இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
    ஈந்ததும் இந்நாடே - எங்கள்
    அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
    அறிந்ததும் இந்நாடே - அவர்
    கன்னிய ராகி நிலவினி லாடிக்
    களித்ததும் இந்நாடே - தங்கள்
    பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
    போந்ததும் இந்நாடே - இதை
    வந்தே மாதரம், வந்தே மாதரம்
    என்று வணங்கேனோ?

    மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
    வளர்த்ததும் இந்நாடே - அவர்
    தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
    தழுவிய திந்நாடே - மக்கள்
    துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
    சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
    அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
    ஆர்ந்ததும் இந்நாடே - இதை
    வந்தே மாதரம், வந்தே மாதரம்
    என்று வணங்கேனோ?
    -----

    4. பாரத நாடு



    ராகம் - இந்துஸ்தானி தாளம் - தோடி

    பல்லவி

    பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
    பாரத நாடு.

    சரணங்கள்

    ஞானத்தி லேபர மோனத்திலே - உயர்
    மானத்தி லேஅன்ன தானத்திலே
    கானத்தி லேஅமு தாக நிறைந்த
    கவிதையி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

    தீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில்
    ஈரத்தி லேஉப காரத்திலே
    சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
    தருவதி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

    நன்மையி லேஉடல் வன்மையிலே - செல்வப்
    பன்மையி லேமறத் தன்மையிலே
    பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின்
    புகழினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

    ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே - புய
    வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
    காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
    கடலினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

    வண்மையி லேஉளத் திண்மையிலே - மனத்
    தண்மையி லேமதி நுண்மையிலே
    உண்மையி லேதவ றாத புலவர்
    உணர்வினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

    யாகத்தி லேதவ வேகத்திலே - தனி
    யோகத்தி லேபல போகத்திலே
    ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம்
    அருளினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

    ஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றல்
    காற்றினி லேமலைப் பேற்றினிலே
    ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி
    இனத்தினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

    தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி
    ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
    தேட்டத்தி லேஅடங் காத நதியின்
    சிறப்பினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்))
    ----

    5. பாரத தேசம்



    ராகம் - புன்னாகவராளி

    பல்லவி

    பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
    பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.

    சரணங்கள்

    வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
    மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
    பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
    பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)

    சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
    சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
    வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
    மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)

    வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
    வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
    எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
    எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)

    முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
    மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
    நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
    நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)

    சிந்து நதியின்மிசை நிலவினி லே
    சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
    சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
    தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)

    கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
    காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
    சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
    சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)

    காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
    காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
    ராசபுத் தானத்து வீரர் தமக்கு
    நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத)

    பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
    பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
    கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்
    காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)

    ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
    ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
    ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
    உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)

    குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
    கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
    நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
    ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

    மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
    வானையளப் போம்கடல் மீனையளப்போம்
    சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
    சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத)

    காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
    கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்
    ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்
    உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத)

    சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
    தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
    நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
    நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத)

    6. எங்கள் நாடு



    ராகம் - பூபாளம்

    மன்னும் இமயமலை யெங்கள் மலையே
    மாநில மீதிது போற்பிறி திலையே!
    இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
    இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
    பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே
    பார் மிசை யேதொரு நூல்இது போலே?
    பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே
    போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே.

    மாரத வீரர் மலிந்தநன் னாடு
    மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு
    நாரத கான நலந்திகழ் நாடு
    நல்லன யாவையும் நாடுறு நாடு
    பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
    புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
    பாரத நாடு பழம்பெரு நாடே
    பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே.

    இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
    ஏழைய ராகிஇனி மண்ணில் துஞ்சோம்
    தன்னலம் பேணி இழிதொழில்கற் போம்
    தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
    கன்னலும் தேனும் கனியும் இன் பாலும்
    கதலியும் செந்நெலும் நல்கும் எக் காலும்
    உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
    ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே.

    7. ஜயபாரத



    சிறந்து நின்ற சிந்தை யோடு
    தேயம் நூறு வென்றிவள்
    மறந்த விர்ந்த் நாடர் வந்து
    வாழி சொன்ன போழ்தினும்
    இறந்து மாண்பு தீர மிக்க
    ஏழ்மை கொண்ட போழ்தினும்
    அறந்த விர்க்கி லாது நிற்கும்
    அன்னை வெற்றி கொள்கவே!

    நூறு கோடி நூல்கள் செய்து
    நூறு தேய வாணர்கள்
    தேறும் உண்மை கொள்ள இங்கு
    தேடி வந்த நாளினும்
    மாறு கொண்டு கல்லி தேய
    வண்ணி தீர்ந்த நாளினும்
    ஈறு நிற்கும் உண்மை யொன்று
    இறைஞ்சி நிற்பவள் வாழ்கவே!

    வில்லர் வாழ்வு குன்றி ஓய
    வீர வாளும் மாயவே
    வெல்லுஞானம் விஞ்சி யோர்செய்
    மெய்மை நூல்கள் தேயவும்
    சொல்லும் இவ் வனைத்தும் வேறு
    சூழ நன்மை யுந்தர
    வல்ல நூல் கெடாது காப்பள்
    வாழி அன்னை வாழியே!

    தேவ ருண்ணும் நன்ம ருந்து
    சேர்ந்த கும்பம் என்னவும்
    மேவுவார் கடற்கண் உள்ள
    வெள்ள நீரை ஒப்பவும்
    பாவ நெஞ்சினோர் நிதம்
    பறித்தல் செய்வ ராயினும்
    ஓவி லாதசெல்வம் இன்னும்
    ஓங்கும் அன்னை வாழ்கவே!

    இதந்தரும் தொழில்கள் செய்து
    இரும்பு விக்கு நல்கினள்
    பதந்தரற் குரிய வாய
    பன்ம தங்கள் நாட்டினள்
    விதம்பெறும்பல் நாடி னர்க்கு
    வேறொ ருண்மை தோற்றவே
    சுதந்திரத்தி லாசை இன்று
    தோற்றி னாள்மன் வாழ்கவே!

    8. பாரத மாதா



    தான தனந்தன தான தனந்தன
    தானனத் தானா னே.

    முன்னை இலங்கை அரக்கர் அழிய
    முடித்தவில் யாருடை வில்? - எங்கள்
    அன்னை பயங்கரி பாரத தேவி நல்
    ஆரிய ராணியின் வில்.

    இந்திர சித்தன் இரண்டு துண்டாக
    எடுத்தவில் யாருடைய வில்? - எங்கள்
    மந்திரத் தெய்வம் பாரத ராணி,
    வயிரவி தன்னுடைய வில்.

    ஒன்று பரம்பொருள் நாம்அதன் மக்கள்
    உலகின்பக் கேணி என்றே - மிக
    நன்று பல்வேதம் வரைந்தகை பாரத
    நாயகி தன்திருக் கை.

    சித்த மயமிவ் உலகம் உறுதி நம்
    சித்தத்தில் ஓங்கி விட்டால் - துன்பம்
    அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
    ஆரிய ராணியின் சொல்.

    சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத்
    தட்டி விளையாடி - நன்று
    உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி
    ஒளியுறப் பெற்ற பிள்ளை.

    காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
    கல்லொத்த தோள்எவர் தோள்? - எம்மை
    ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்
    ஆரிய தேவியின் தோள்.

    சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்
    தந்த தெவர் கொடைக்கை? - சுவைப்
    பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்
    பாரத ராணியின் கை.

    போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை
    புகன்ற தெவருடை வாய்? - பகை
    தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத
    தேவிமலர் திரு வாய்.

    தந்தை இனிதுறந் தான் அர சாட்சியும்
    தையலர் தம்முறவும் - இனி
    இந்த உலகில் விரும்புகி லேன் என்றது
    எம் அனை செய்த உள்ளம்.

    அன்பு சிவம்உல கத்துயர் யாவையும்
    அன்பினிற் போகும் என்றே - இங்கு
    முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்
    மொழி எங்கள் அன்னை மொழி.

    மிதிலை எரிந்திட வேதப் பொருளை
    வினவும் சனகன் மதி - தன்
    மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
    வல்ல நம் அன்னை மதி.

    தெய்வீகச் சாகுந்தல மெனும் நாடகம்
    செய்த தெவர் கவிதை? - அயன்
    செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத
    தேவி அருட் கவிதை.
    -----

    9. எங்கள் தாய்



    (காவடிச் சிந்தில் ஆறுமுக வடிவேலவனே என்ற மெட்டு)

    தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
    சூழ்கலை வாணர்களும் - இவள்
    என்று பிறந்தவள் என்றுண ராத
    இயல்பின ளாம் எங்கள் தாய்.

    யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
    ளாயினு மேயங்கள் தாய் - இந்தப்
    பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்
    பயின்றிடு வாள்எங்கள் தாய்.

    முப்பதுகோடி முகமுடை யாள்உயிர்
    மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
    செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
    சிந்தனை ஒன்றுடையாள்.

    நாவினில் வேத முடையவள் கையில்
    நலந்திகழ் வாளுடை யாள் - தனை
    மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை
    வீட்டிடு தோளுடையாள்.

    அறுபது கோடி தடக்கைக ளாலும்
    அறங்கள் நடத்துவள் தாய் - தனைச்
    செறுவது நாடி வருபவ ரைத்துகள்
    செய்து கிடத்துவள் தாய்.

    பூமி யி னும்பொறை மிக்குடை யாள்பெறும்
    புண்ணிய நெஞ்சினள் தாய் - எனில்
    தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்
    துர்க்கை யனையவள் தாய்.

    கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்
    கைதொழு வாள்எங்கள் தாய் - கையில்
    ஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும்
    ஒருவனை யுந்தொழு வாள்.

    யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும்
    ஒன்றென நன்றறி வாள் - உயர்
    போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்
    பொற்குவை தானுடையாள்.

    நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
    நயம்புரி வாள்எங்கள் தாய் - அவர்
    அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்
    ஆனந்தக் கூத்தி டுவாள்.

    வெண்மை வளரிம யாசலன் தந்த
    விறன்மக ளாம்எங்கள் தாய் - அவன்
    திண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ்
    சீருறு வாள்எங்கள் தாய்.

    -----

    10. வெறி கொண்ட தாய்



    ராகம் - ஆபோகி தாளம் - ரூபகம்

    பேயவள் காண் எங்கள் அன்னை - பெரும்
    பித்துடையாள் எங்கள் அன்னை
    காய்தழல் ஏந்திய பித்தன் - தனைக்
    காதலிப்பாள் எங்கள் அன்னை. (பேயவள்)

    இன்னிசை யாம்இன்பக் கடலில் - எழுந்து
    எற்றும் அலைத்திரள் வெள்ளம்
    தன்னிடை மூழ்கித் திளைப்பாள் - அங்குத்
    தாவிக் குதிப்பாள் - எம் அன்னை (பேயவள்)

    தீஞ்சொற் கவிதையஞ் சோலை - தனில்
    தெய்வீக நன்மணம் வீசும்
    தேஞ்சொரி மாமலர் சூடி - மது
    தேக்கி நடிப்பாள்எம் அன்னை. (பேயவள்)

    வேதங்கள் பாடுவள் காணீர் - உண்மை
    வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
    ஓதருஞ் சாத்திரம் கோடி - உணர்ந்
    தோதி யுலகெங்கும் விதைப்பாள் (பேயவள்)

    பாரதப் போரெனில் எளிதோ? - விறற்
    பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள்
    மாரதர் கோடிவந் தாலும் - கணம்
    மாய்த்துக் குருதியில் திளைப்பாள் (பேயவள்)

    -----

    11. பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி



    பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால்,
    புன்மை யிருட்கணம் போயின யாவும்,
    எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
    எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,
    தொழுதுனை வாழ்த்தி வனங்குதற்கு இங்குஉன்
    தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம
    விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே
    வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே!

    புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம்,
    பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்
    வெள்ளிய சங்கம் முழங்கின, கேளாய்!
    வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்!
    தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
    சீர்த்திரு நாமமும் ஓதி நிற் கின்றார்,
    அள்ளிய தெள்ளமு தன்னை எம் அன்னை!
    ஆருயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே!

    பருதியின் பேரொளி வானிடைக் கண்டோ ம்,
    பார்மிசை நின்னொளி காணுதற்கு அளந்தோம்,
    கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே
    கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்
    சுருதிகள் பயந்தனை! சாத்திரம் கோடி
    சொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே!
    நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!
    நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே!

    நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
    நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ?
    பொன்னனை யாய்! வெண் பனிமுடி யிமயப்
    பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!
    என்ன தவங்கள் செய்து எத்தனை காலம்
    ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?
    இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ?
    இன்னுயிரே? பள்ளி யெழுந்தரு ளாயே!

    மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?
    மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ?
    குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?
    கோமகளே! பெரும் பாரதர்க் கரசே!
    விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
    வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்
    இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!
    ஈன்றவளே! பள்ளி யெழுந்தரு ளாயே!

    ------

    12. பாரத மாதா நவரத்தின மாலை



    (இப்பாடல்களில் முறையே ஒன்பது இரத்தினங்களின்
    பெயர்கள் இயற்கைப் பொருளிலேனும் சிலேடைப் பொருளிலேனும்
    வழங்கப் பட்டிருக்கின்றன)

    (காப்பு)

    வீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த
    பாரதமா தாவின் பதமலர்க்கே - சீரார்
    நவரத்ன மாலையிங்கு நான் சூட்டக் காப்பாம்
    சிவரத்தன மைந்தன் திறம்.

    (வெண்பா)

    திறமிக்க நல்வயி ரச் சீர்திகழும் மேனி
    அறமிக்க சிந்தை அறிவு - பிறநலங்கள்
    எண்ணற் றனபெறுவார் இந்தியா என்ற நின்றன்
    கண்ணொத்த பேருரைத்தக் கால்.

    (கட்டளை கலித்துறை)

    காலன் எதிர்ப்படிற் கைகூப்பிக்
    கும்பிட்டுக் கம்பனமுற்
    றோலிமிட்டோ டி மறைந்தொழி
    வான், பகை யொன்றுளதோ?
    நீலக் கடலொத்fத கோலத்தி
    ளாள்மூன்று நேத்திரத்தாள்
    காலக் கடலுக்கோf பாலமிட்
    டாள்அன்னை காற்படினே.

    (எண்சீர் கழிநெடி லாசிரிய விருத்தம்)

    அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம்
    ஆணிமுத்துப் போன்றமணிமொழிக ளாலே
    பன்னிநீ வேதங்கள், உபநிட தங்கள்
    பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகா சங்கள்
    இன்னும்பல நூல்களிலே இசைத்த ஞானம்
    என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்?
    மின்னுகின்ற பேரொளிகாண்! காலங் கொன்ற
    விருந்துகாண்! கடவுளுக்கோர் வெற்றி காணே.

    (ஆசிரியப்பா)

    வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்!
    கற்றவ ராலே உலகுகாப் புற்றது
    உற்றதிங் கிந்நாள்! உலகினுக் கெல்லாம்
    இற்றைநாள் வரையினும் அறமிலா மறவர்
    குற்றமே தமது மகுடமாக் கொண்டோ ர்,
    மற்றை மனிதரை அடிமைப் படுத்தலே
    முற்றிய அறிவின் முறையென்று எண்ணுவார்
    பற்றை அரசர் பழிபடு படையுடன்
    சொற்றை நீதி தொகுத்துவைத் திருந்தார்
    இற்றைநாள்

    பாரி லுள்ள பலநாட் டினர்க்கும்
    பாரத நாடு புதுநெறி பழக்கல்
    உற்றதிங் கிந்நாள் உலகெலாம் புகழ
    இன்பவ ளம்செறி பண்பல பயிற்றும்
    கவீந்திரனாகிய ரவீந்திர நாதன்

    சொற்றது கேளீர்! புவிமிசை யின்று
    மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன்
    தர்மமே உருவமாம் மோஹன தாஸ்
    கர்ம சந்திர காந்தி யென் றுரைத்தான்
    அத்தகைக் காந்தியை அரசியல் நெறியிலே

    தலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே
    அரசிய லதனிலும் பிறஇய லனைத்திலும்
    வெற்றி தருமென வேதம் சொன்னதை
    முற்றும் பேண முற்பட்டு நின்றார்
    பாரத மக்கள் இதனால் படைஞர் தம்

    செருக்கொழிந் துலகில் அறந்திறம் பாத
    கற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே
    (வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்! )

    (தரவு கொச்சக் கலிப்பா)

    ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்
    ஓதுமினோ வேதங்கள்! ஓங்குமினோ! ஓங்குமினோ!
    தீதுசிறி தும்பயிலாச் செம்மணிமா நெறிகண்டோ ம்
    வேதனைகள் இனிவேண்டா, விடுதலையோ திண்ணமே.

    (வஞ்சி விருத்தம்)

    திண்ணங் காணீர்! பச்சை
    வண்ணன் பாதத் தாணை
    எண்ணம் கெடுதல் வேண்டா!
    திண்ணம் விடுதலை திண்ணம்.

    (கலிப்பா)

    விடுத லைபெறு வீர்வரை வாநீர்
    வெற்றி கொள்வீர் என்றுரைத் தெங்கும்
    கெடுத லின்றிநந் தாய்த்திரு நாட்டின்
    கிளர்ச்சி தன்னை வளர்ச்சிசெய் கின்றான்?
    சுடுத லும்குளி ரும்உயிர்க் கில்லை
    சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக் கில்லை
    எடுமி னோஅறப் போரினை என்றான்
    எங்கோ மேதகம் ஏந்திய காந்தி!

    (அறுசீர் விருத்தம்)

    காந்திசேர் பதுமராகக் கடிமலர் வாழ்ஸ்ரீதேவி
    போந்துநிற் கின்றாள் இன்று பாரதப் பொன்னாடெங்கும்
    மாந்தரெல்லோரும் சோர்வை அச்சத்தை மறந்துவிட்டார்
    காந்திசொற் கேட்டார், காண்பார் விடுதலை கணத்தினுள்ளே

    (எழுசீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்)

    கணமெனு மென்றன் கண்முன்னே வருவாய்
    பாரத தேவியே கனல்கால்
    இணைவழி வால வாயமாஞ் சிங்க
    முதுகினில் ஏறிவீற் றிருந்தே
    துணைநினை வேண்டும் நாட்டினர்க் கெல்லாம்
    துயர்கெட விடுதலை யருளி
    மணிநகை புரிந்து திகழ்திருக் கோலம்
    கண்டுநான் மகிழ்ந்திடு மாறே.-

    -----

    13. பாரத தேவியின் திருத் தசாங்கம்



    நாமம் (காம்போதி)

    பச்சை மணிக்கிளியே! பாவியெனக் கேயோகப்
    பிச்சை யருளியதாய் பேருரையாய்! - இச்சகத்தில்
    பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த
    பாரதமா தேவியெனப் பாடு.

    நாடு (வசந்தா)

    தேனார் மொழிக்கிள்ளாய் தேவியெனக் கானந்த
    மானாள் பொன் னாட்டை அறிவிப்பாய்! - வானாடு
    பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
    ஆரியநா டென்றே அறி.

    நகர் (மணிரங்கு)

    இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிரானாள்
    நன்மையுற வாழும் நகரெதுகொல்? - சின்மயமே
    நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது
    தானென்ற காசித் தலம்.

    ஆறு (சுருட்டி)

    வண்ணக் கிளி! வந்தே மாதரமென் றோதுவரை
    இன்னலறக் காப்பா ளியாறுரையாய்! - நன்னர்செயத்
    தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும்
    வான்போந்த கங்கையென வாழ்த்து.

    மலை (கானடா)

    சோலைப் பசுங்கிளியே! தொன்மறைகள் நான்குடையாள்
    வாலை வளரும் மலைகூறாய்! - ஞாலத்துள்
    வெற்பொன்றும் ஈடிலதாய் விண்ணில் முடிதாக்கும்
    பொற்பொன்று வெள்ளைப் பொருப்பு.

    ஊர்தி (தன்யாசி)

    சீரும் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள்
    ஊரும் புரவி உரைதத்தாய்! தேரின்
    பரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சும்
    அரிமிசையே ஊர்வாள் அவள்.

    படை (முகாரி)

    கருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய்
    செருநரைவீழ்த் தும்படையென் செப்பாய்! - பொருபவர்
    மேல்தண்ணளியால் வீழாது, வீழின் தகைப்பரிதாம்
    திண்ணமுறு வான்குலிசம் தேறு.

    முரசு (செஞ்சுருட்டி)

    ஆசை மரகதமே! அன்னை திரு முன்றிலிடை
    ஓசை வளர்முரசம் ஓதுவாய்! - பேசுகவோ
    சத்தியமே, செய்க தருமமே என்றொலிசெய்
    முத்திதரும் வேத முரசு.

    தார் (பிலகரி)

    வாராய் இளஞ்சுகமே! வந்திப்பார்க் கென்றுமிடர்
    தாராள் புனையுபணித் தார்கூறாய்! - சேராரை
    முற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தானொளிர்வாள்
    பொற்றா மரைத்தார் புனைந்து.

    கொடி (கேதாரம்)

    கொடிப்பவள வாய்க்கிள்ளாய்! சூத்திரமும் தீங்கும்
    மடிப்பவளின் வெல்கொடிதான் மற்றென்? - அடிப்பணிவார்
    நன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி
    குன்றா வயிரக் கொடி.

    ------

    14. தாயின் மணிக்கொடி பாரீர்



    (பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்)

    தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு

    பல்லவி

    தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்
    தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

    சரணங்கள்

    ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
    உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
    பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
    பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)

    பட்டுத் துகிலென லாமோ? - அதில்
    பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
    மட்டு மிகுந்தடித் தாலும் - அதை
    மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்)

    இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்
    எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
    மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்
    மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)

    கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
    காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
    நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள்
    நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்)

    அணியணி யாயவர் நிற்கும் - இந்த
    ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
    பணிகள் பொருந்திய மார்பும் - விறல்
    பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)

    செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
    தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர்
    சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
    சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)

    கன்னடர் ஓட்டிய ரோடு - போரில்
    காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்,
    பொனகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும்
    பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் (தாயின்)

    பூதலம் முற்றிடும் வரையும் - அறப்
    போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும்
    மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில்
    மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)

    பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப்
    பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
    துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத்
    தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)

    சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர்
    சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
    தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்
    தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)

    ------

    15. பாரத ஜனங்களின் தற்கால நிலைமை



    நொண்டிச் சிந்து

    நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த
    நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
    அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
    அஞ்சாத பொருளில்லை அவனியிலே
    வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
    மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்
    துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
    துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு)

    மந்திர வாதி என்பார் - சொன்ன
    மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்,
    யந்திர சூனி யங்கள் - இன்னும்
    எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!
    தந்த பொருளைக் கொண்டே - ஜனம்
    தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம
    அந்த அரசியலை - இவர்
    அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார். (நெஞ்சு)

    சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்
    சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்,
    துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு
    தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்,
    அப்பால் எவனோ செல்வான் - அவன்
    ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்,
    எப்போதும் கைகட்டுவார் - இவர்
    யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு)

    நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
    நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்,
    கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
    கோடிஎன் றால் அது பெரிதா மோ?
    ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்
    ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்
    நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு
    நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். (நெஞ்சு)

    சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்
    சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
    கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு
    கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்,
    தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்
    சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார,
    ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்
    அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு)

    நெஞ்சு பொறுக்கு திலையே - இதை
    நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே,
    கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
    காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
    பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
    பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
    துஞ்சி மடிகின் றாரே - இவர்
    துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. (நெஞ்சு)

    எண்ணிலா நோயுடையார் - இவர்
    எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
    கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர்
    காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்,
    நண்ணிய பெருங்கலைகள் - பத்து
    நாலாயிரங் கோடி நயந்துநின்ற
    புண்ணிய நாட்டினிலே - இவர்
    பொறியற்ற விலங்குகள்போல வாழ்வார். (நெஞ்சு)

    -----

    16. போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்



    (போகின்ற பாரதத்தைச் சபித்தல்)

    வலிமையற்ற தோளினாய் போ போ போ
    மார்பி லேஒடுங்கினாய் போ போ போ
    பொலிவி லாமுகத்தினாய் போ போ போ
    பொறி யிழந்த விழியினாய் போ போ போ
    ஔங்யி ழந்த குரலினாய் போ போ போ
    ஒளியி ழந்த மேனியாய் போ போ போ
    கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ
    கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ

    இன்று பார தத்திடை நாய்போல
    ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ
    நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ
    நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ
    சென்று போன பொய்யெலாம் மெய்யாகச்
    சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ
    வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
    விழிம யங்கி நோக்குவாய் போ போ போ

    வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
    வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
    நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்
    நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ
    மாறு பட்ட வாதமே ஐந்நூறு
    வாயில் நீள ஓதுவாய் போ போ போ
    சேறுபட்ட நாற்றமும் தூறுஞ்சேர்
    சிறிய வீடு கட்டுவாய் போ போ போ

    ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
    தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
    நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
    நீட்டினால் வணங்குவாய் போ போ போ
    தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
    தீமை நிற்கி லோடுவாய் போ போ போ
    சோதி மிக்க மணியிலே காலத்தால்
    சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ.

    (வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்)

    ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
    உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
    களிப டைத்த மொழியினாய் வா வா வா
    கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
    தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
    சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
    எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
    ஏறு போல் நடையினாய் வா வா வா

    மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
    வேதமென்று போற்றுவாய் வா வா வா
    பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா
    பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா
    நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா
    நோய்க ளற்ற உடலினாய் வா வா வா
    தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்
    தேசமீது தோன்றுவாய் வா வா வா

    இளைய பார தத்தினாய் வா வா வா
    எதிரிலா வலத்தினாய் வா வா வா
    ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
    உதய ஞாயி றொப்பவே வா வா வா
    களையி ழந்த நாட்டிலே முன்போலே
    கலைசி றக்க வந்தனை வா வா வா
    விளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல்
    விழியி னால் விளக்குவாய் வா வா வா

    வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
    விநயம் நின்ற நாவினாய் வா வா வா
    முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
    முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா
    கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
    கருதிய தியற் றுவாய் வா வா வா
    ஒற்றுமைக்கு ளுய்யவே நாடெல்லாம்
    ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா

    -----

    17. பாரத சமுதாயம்



    ராகம் - பியாக் தாளம் - திஸ்ர ஏகதாளம்

    பல்லவி

    பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க வாழ்க!
    பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய (பாரத)

    அனுபல்லவி

    முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
    முழுமைக்கும் பொது உடைமை
    ஒப்பிலாத சமுதாயம்
    உலகத் துக்கொரு புதுமை - வாழ்க! (பாரத)

    சரணங்கள்

    மனித ருணவை மனிதர் பறிக்கும்
    வழக்கம் இனியுண்டோ ?
    மனிதர் நோக மனிதர் பார்க்கும்
    வாழ்க்கை இனியுண்டோ ? - புலனில்
    வாழ்க்கை இனியுண்டோ ? - நம்மி லந்த
    வாழ்க்கை இனியுண்டோ ?
    இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
    எண்ணரும் பெருநாடு,
    கனியும் கிழங்கும் தானி யங்களும்
    கணக்கின்றித் தரு நாடு - இது
    கணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம்
    கணக்கின்றித் தரு நாடு - வாழ்க! (பாரத)

    இனியொரு விதிசெய் வோம் - அதை
    எந்த நாளும் காப்போம்,
    தனியொரு வனுக் குணவிலை யெனில்
    ஜகத்தினை அழித்திடு வோம் - வாழ்க! (பாரத)

    எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்
    என்றுரைத்தான் கண்ண பெருமான்,
    எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
    இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
    இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்
    இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க! (பாரத)

    எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
    எல்லாரும் இந்திய மக்கள்,
    எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
    எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
    எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
    எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க! (பாரத)

    -----

    18. ஜாதீய கீதம்



    (பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் எழுதிய
    வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு)

    இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
    தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
    பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே)

    வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
    மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
    குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
    நல்குவை இன்பம், வரம்பல நல்குவை!

    முப்பதுகோடி வாய் (நின்னிசை) முழங்கவும்
    அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்
    திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்?
    அருந்திற லுடையாய்! அருளினைப் போற்றி!
    பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை!
    (வந்தே)

    நீயே வித்தை நீயே தருமம்!
    நீயே இதயம் நீயே மருமம்!
    உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே)

    தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே!
    சித்தம் நீங்காதுறு பக்தியும் நீயே!
    ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
    தெய்விக வடிவமும் தேவியிங் குனதே! (வந்தே)

    ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
    கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலைநீ!
    வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவிநீ! (வந்தே)

    போற்றி வான்செல்வி! புரையிலை நிகரிலை!
    இனிய நீர்ப்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை
    சாமள நிறத்தினை சரளமாந் தகையினை!
    இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை!
    தரித்தெமைக் காப்பாய், தாயே போற்றி! (வந்தே)

    -----

    19. ஜாதீய கீதம்


    (புதிய மொழிபெயர்ப்பு)

    நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்
    குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
    வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)

    தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
    தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
    புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
    வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)

    கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
    கோடி கோடி புயத்துணை கொற்றமார்
    நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்,
    கூடு திண்மை குறைந்தனைஎ என்பதென்?
    ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,
    மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)

    அறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
    மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ
    தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ.
    ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
    தெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே. (வந்தே)

    பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
    கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்
    அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ! (வந்தே)

    திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
    தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை
    மருவு செய்களின் நற்பயன் மல்குவை
    வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
    பெருகு மின்ப முடையை குறுநகை
    பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்fடணை.
    இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
    எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே)

    ----

    2. தமிழ்நாடு

    20. செந்தமிழ் நாடு



    செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
    தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
    தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
    சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

    வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
    வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
    காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
    கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

    காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
    கண்டதோர் வையை பொருனை நதி - என
    மேவிய யாறு பலவோடத் - திரு
    மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)

    முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
    மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
    எத்தனையுண்டு புவிமீதே - அவை
    யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

    நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
    நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
    மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
    மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)

    கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
    கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
    பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
    பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)

    வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
    வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
    அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
    யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

    சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
    தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
    தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
    சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

    விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
    வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
    பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
    பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

    சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
    தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
    ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
    நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)

    ------

    21. தமிழ்த்தாய்



    தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்
    (தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்)

    ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை
    ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர்
    வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
    மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

    முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
    மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,
    ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
    ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.

    கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
    காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
    தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
    தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

    சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
    தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
    நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
    நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.

    நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்
    நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
    சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்
    சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.

    கன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன்
    காதில் விழுந்த திசைமொழி - யெல்லாம்
    என்னென்ன வோ பெய ருண்டு - பின்னர்
    யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்!

    தந்தை அருள்வலி யாலும் - முன்பு
    சான்ற புலவர் தவ வலி யாலும்
    இந்தக் கணமட்டும் காலன் என்னை
    ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.

    இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
    ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
    கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
    கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

    புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
    பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
    மெத்த வளருது மேற்கே - அந்த
    மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

    சொல்லவும் கூடுவ தில்லை - அவை
    சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
    மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
    மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

    என்றந்தப் பேதை உரத்தான் - ஆ!
    இந்த வசையெனக் கெய்திடலாமோ?
    சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
    செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

    தந்தை அருள்வலி யாலும் - இன்று
    சார்ந்த புலவர் தவவலி யாலும்
    இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
    ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

    -----

    22. தமிழ்



    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
    இனிதாவது எங்கும் காணோம்,
    பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
    இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
    நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
    வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
    தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
    பரவும்வகை செய்தல் வேண்டும்.

    யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
    வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
    பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
    உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
    ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
    வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
    சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
    தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

    பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
    தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும
    இறவாத புகழுடைய புதுநூல்கள்
    தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
    மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
    சொல்வதிலோர் மகிமை இல்லை
    திறமான புலமையெனில் வெளி நாட்டோ ர்
    அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

    உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
    வாக்கினிலே ஒளி யுண்டாகும்
    வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
    கவிப்பெருக்கும் மேவு மாயின்
    பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
    விழிபெற்றுப் பதவி கொள்வார்,
    தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
    இங்கமரர் சிறப்புக் கண்டார்.

    -----

    23. தமிழ்மொழி வாழ்த்து



    தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே

    வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
    வாழிய வாழிய வே!

    வான மளந்த தனைத்தும் அளந்திடும்
    வண்மொழி வாழிய வே!

    ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
    இசைகொண்டு வாழிய வே!

    எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
    என்றென்றும் வாழிய வே!

    சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
    துலங்குக வையக மே!

    தொல்லை வினை தரு தொல்லை யகன்று
    சுடர்க தமிழ்நா டே!

    வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
    வாழ்க தமிழ்மொழி யே!

    வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
    வளர்மொழி வாழிய வே!

    -----

    24. தமிழச் சாதி.



    .....எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்,
    நாட்பட நாட்பட நாற்றமு சேறும்
    பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்
    நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ?
    விதியே விதியே தமிழச் சாதியை

    என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?
    சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்
    தன்மையும் தனது தருமமும் மாயாது
    என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்
    வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடு வாயோ?

    தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று
    உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்
    சிதவற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?
    அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?
    வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?

    கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?
    விதியே தமிழச் சாதியை எவ்வகை
    விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.
    ஏனெனில்
    சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்

    திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
    ஆழமும் விரிவும் அழகும் கருதியும்
    எல்லை யொன் றின்மைஎ எனும் பொருள் அதனைக்
    கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
    முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச்

    சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று
    உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம்
    சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
    உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக்
    கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.

    ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
    தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
    பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
    பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய
    தமிழச் சாதி தடியுதை யுண்டும்

    காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
    வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
    பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
    செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
    பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்

    நாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும்
    இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்,
    தெய்வம் மறவார, செயுங்கடன் பிழையார்,
    ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்,
    இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்,

    என்பதென் னுலத்து வேரகழ்ந் திருத்தலால்
    எனினும்
    இப்பெருங் கொள்கை இதயமேற் கொண்டு
    கலங்கிடா திருந்த எனைக்கலக் குறுத்தும்
    செய்தியொன் றதனைத் தெளிவுறக் கேட்பாய்.

    ஊனமற் றெவை தாம் உறினுமே பொறுத்து
    வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல்,
    தானமும் தவமுந் தாழ்ந்திடல் பொறுத்து
    ஞானமும் பொய்க்க நசிக்குமோர் சாதி
    சாத்திரங் கண்டாய் சாதியின் உயர்த்தலம்,

    சாத்திர மின்றேற் சாதியில்லை,
    பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடும் மக்கள்
    பொய்ம்மை யாகிப் புழுவென மடிவார்,
    நால்வகைக் குலத்தார் நண்ணுமோர் சாதியில்
    அறிவுத் தலைமை யாற்றிடும் தலைவர் -

    மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும் -
    இவர்தம்
    உடலும் உள்ளமும் தன்வச மிலராய்
    நெறிபிழைத் திகழ்வுறு நிலைமையில் வீழினும்
    பெரிதிலை பின்னும் மருந்திதற் குண்டு

    செய்கையுஞ் சீலமும் குன்றிய பின்னரும்
    உய்வகைக் குரிய வழிசில உளவாம்.
    மற்றிவர்
    சாத்திரம் -- (அதாவது மதியிலே தழுவிய
    கொள்கை கருத்து குளிர்ந்திடு நோக்கம்) --

    ஈங்கிதில் கலக்க மெய்திடு மாயின்
    மற்றதன் பின்னர் மருந்தொன்று இல்லை
    இந்நாள் எமது தமிழ்நாட் டிடையே
    அறிவுத் தலைமை தமதெனக் கொண்டார்
    தம்மிலே இருவகை தலைபடக் கண்டேன்,

    ஒரு சார்
    மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின்
    செய்கையும் நடையும் தீனியும் உடையும்
    கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை
    யவற்றினுஞ் சிறந்தன, ஆதலின், அவற்றை

    முழுதுமே தழுவி மூழ்கிடி நல்லால்,
    தமிழச் சாதி தரணிமீ திராது
    பொய்த் தழி வெய்தல் முடி பெனப் புகழும்
    நன்றடா! நன்று! நாமினி மேற்றிசை
    வழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ

    ஏ! ஏ! அஃதுமக் கிசையா தென்பர்,
    உயிர்தரு மேற்றிசை நெறிகளை உவந்து நீர்
    தழுவிடா வண்ணந் தடுத்திடும் பெருந் தடை
    பல அவை நீங்கும் பான்மையை வல்ல
    என்றருள் புரிவர், இதன் பொருள் சீமை

    மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச்
    சாதியின் நோய்க்குத் தலையசைத் தேகினர்,
    என்பதே யாகும்; இஃதொரு சார்பாம்
    பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரோடு
    நமதுமூ தாதையர் (நாற்பதிற் றாண்டின்)

    முன்னிருந்தவரோ? முந்நூற்றாண்டிற்கு
    அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ? ஆயிரம்
    ஆண்டின் முன்னவரோ, ஐயா யிரமோ?
    பவுத்தரே நாடெலாம் பல்கிய காலத்
    தவரோ? புராண மாக்கிய காலமோ?
    சைவரோ? வைணவ சமயத் தாரோ?
    இந்திரன் தானே தனிமுதற் கடவுள்
    என்றுநம் முன்னோர் ஏந்திய வைதிகக்
    காலத் தவரோ? கருத்திலா தவர்தாம்
    எமதுமூ தாதைய ரென்பதிங் கெவர்கொல்?
    நமதுமூ தாதையர் நயமுறக் காட்டிய
    ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்
    ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே
    தழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு
    எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம்
    கலிதடை புரிவன் கலியின் வலியை
    வெல்லலா காதென விளிம்புகின் றனரால்,
    நாசங் கூறும் எநாட்டு வயித்தியர்
    இவராம். இங்கிவ் விருதலைக் கொள்ளியின்
    இடையே நம்மவர் எப்படி உய்வர்?
    விதியே! விதியே! தமிழச் சாதியை
    என்செயக் கருவி யிருக்கின் றாயடா?

    விதி

    மேலே நீ கூறிய விநாசப் புலவரை
    நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும்
    எத்திசைத் தெனினும் யாவரே காட்டினும்
    மற்றவை தழுவி வாழ்வீ ராயின்,
    அச்சமொன்று இல்லை! ஆரிய நாட்டின்
    அறிவும் பெருமையும் - .. ..-

    -----

    25. வாழிய செந்தமிழ்!



    (ஆசிரியப் பா)

    வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
    வாழிய பாரத மணித்திரு நாடு!
    இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
    நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக
    அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
    ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
    சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
    நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
    வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

    -----

    சுதந்தங்ரம்

    26. சுதந்திரப் பெருமை



    ( தில்லை வெளியிலே கலந்துவிட்டாலவர்
    திரும்பியும் வருவாரோ? என்னும் வர்ணமெட்டு)

    வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர்
    வேறொன்று கொள்வாரோ? - என்றும்
    ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில்
    அறிவைச் செலுத்துவா ரோ? (வீர)

    புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும்
    பொய்யென்று கண்டாரேல் - அவர்
    இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு
    இச்சையுற் றிருப்பா ரோ? (வீர)

    பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்
    பெற்றியை அறிந்தாரேல் - மானம்
    துறந்தரம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது
    சுகமென்று மதிப்பா ரோ? (வீர)

    மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்
    வாய்மையை உணர்ந்தாரேல் - அவர்
    ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
    உடன்படு மாறுளதோ? (வீர)

    விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்
    மின்மினி கொள்வாரோ?
    கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
    கை கட்டிப் பிழைப்பாரோ? (வீர)

    மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
    மாண்பினை யிழப்பாரோ?
    கண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
    கைகொட்டிச் சிரியா ரோ? (வீர)

    வந்தே மாதரம் என்று வணங்கியபின்
    மாயத்தை வணங்கு வாரோ?
    வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
    என்பதை மறப்பாரோ? (வீர)

    ----

    27. சுதந்திரப் பயிர்



    தண்ணீர்விட் டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
    கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?

    எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
    வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?

    ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
    வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?

    தர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ?
    கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ?

    மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
    நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?

    எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
    கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ?

    மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து
    காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ?

    எந்தாய்! நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து
    நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ?

    இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ?
    அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ?

    வான்மழை யில்லையென்றால் வாழ்வுண்டோ ?எந்தை சுயா
    தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே?

    நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்
    வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?

    பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
    பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே?

    நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால்,
    என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ?

    இன்று புதிதாய் இரக்கின்றோ மோ? முன்னோர்
    அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ?

    நீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால்
    ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே.

    ------

    28. சுதந்திர தாகம்



    ராகம் - கமாஸ் தாளம் - ஆதி

    என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
    என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
    என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?
    என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
    அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே!
    ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!
    வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ?
    மெய்யடி யோம்இன்னும் வாடுதல் நன்றோ?

    பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ?
    பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
    தஞ்ச மடைந்தபின் கை விடலோமோ?
    தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
    அஞ்சலென் றருள் செயுங் கடமை யில்லாயோ?
    ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ?
    வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனோ!
    வீர சிகாமணி! ஆரியர் கோனே!

    -----

    29. சுதந்திர தேவியின் துதி



    இதந்தரு மனையின் நீங்கி
    இடர்மிகு சிறப்பட் டாலும்
    பதந்திரு இரண்டும் மாறிப்
    பழிமிகுந் திழிவுற் றாலும்
    விதந்தரு கோடி இன்னல்
    விளைந்தெனை அழித்திட் டாலும்
    சுதந்திர தேவி! நின்னைத்
    தொழுதிடல் மறக்கி லேனே.

    நின்னருள் பெற்றி லாதார்
    நிகரிலாச் செல்வ ரேனும்,
    பன்னருங் கல்வி கேள்வி,
    படைத்துயர்ந் திட்டா ரேனும்,
    பின்னரும் எண்ணி லாத
    பெருமையிற் சிறந்தா ரேனும்,
    அன்னவர் வாழ்க்கை பாழாம்,
    அணிகள்வேய் பிணத்தோ டொப்பார்.

    தேவி! நின்னொளி பெறாத
    தேயமோர் தேய மாமோ?
    ஆவியங் குண்டோ ? செம்மை
    அறிவுண்டோ ? ஆக்க முண்டோ ?
    காவிய நூல்கள் ஞானக்
    கலைகள் வேதங்க ளுண்டோ ?
    பாவிய ரன்றோ நிந்தன்
    பாலனம் படைத்தி லாதார்?

    ஒழிவறு நோயிற் சாவார்,
    ஊக்கமொன் றறிய மாட்டார்,
    கழிவுறு மாக்க ளெல்லாம்
    இகழ்ந்திடக் கடையில் நிற்பார்
    இழிவறு வாழ்க்கை தேரார்,
    கனவிலும் இன்பங் காணார்,
    அழிவுறு பெருமை நல்கும்
    அன்னை! நின் அருள் பெறாதார்.

    வேறு

    தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து
    ஆவி யுந்தம தன்பும் அளிப்பவர்
    மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்
    தாவில் வானுல கென்னத் தகுவதே.

    அம்மை உன்றன் அருமை யறிகிலார்
    செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார்,
    இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை
    வெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே.

    மேற்றிசைப்பல நாட்டினர் வீரத்தால்
    போற்றிநினைப் புதுநிலை யெய்தினர்,
    கூற்றினுக்குயிர் கோடி கொடுத்தும்நின்
    பேற்றினைப்பெறு வேமெனல் பேணினர்.

    அன்னை தன்மைகொள்நின்னை அடியனேன்
    என்ன கூறிஇசைத்திட வல்லனே
    பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின்
    சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன்.

    பேர றத்தினைப் பேணுதல் வேலியே!
    சோர வாழ்க்கை, துயர் மிடி யாதிய
    கார றுக்கக் கதித்திடு சோதியே!
    வீர ருக்கமு தே! நினை வேண்டுவேன்.

    ----

    30. விடுதலை



    ராகம் - பிலகரிவிடுதலை

    விடுதலை! விடுதலை! விடுதலை!

    பறைய ருக்கும் இங்கு தீயர்
    புலைய ருக்கும் விடுதலை
    பரவ ரோடு குறவருக்கும்
    மறவ ருக்கும் விடுதலை!
    திறமை கொண்டதீமை யற்ற
    தொழில் புரங்ந்து யாவரும்
    தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
    வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)

    ஏழை யென்றும் அடிமையென்றும்
    எவனும் இல்லை ஜாதியில்,
    இழிவு கொண்ட மனித ரென்பது
    இந்தி யாவில் இல்லையே
    வாழி கல்வி செல்வம் எய்தி
    மனம கிழ்ந்து கூடியே
    மனிதர் யாரும் ஒருநிகர் கர்ச
    மானமாக வாழ்வமே! (விடுதலை)

    மாதர் தம்மை இழிவு செய்யும்
    மடமை யைக்கொ ளுத்துவோம்
    வைய வாழ்வு தன்னில் எந்த
    வகையி னும்ந மக்குள்ளே
    தாதர் என்ற நிலைமை மாறி
    ஆண்க ளோடு பெண்களும்
    சரிநி கர்ச மான மாக
    வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)

    -----

    31. சுதந்திரப் பள்ளு


    (பள்ளர் களியாட்டம்)

    ராகம் - வராளி தாளம் - ஆதி

    பல்லவி

    ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
    ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று (ஆடு)

    பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்
    பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை
    ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை
    ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு)

    எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
    எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
    சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்
    தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே. (ஆடு)

    எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்
    ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி
    நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட
    நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே. (ஆடு)

    உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
    உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
    விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோ ம் - வெறும்
    வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோ ம். (ஆடு)

    நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் - இது
    நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப்
    பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரி
    பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு)

    -----

    தேசிய இயக்கப் பாடல்கள்

    32. சத்ரபதி சிவாஜி



    (தன் சைனியத்திற்குக் கூறியது)

    ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்!
    ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா!
    வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
    சேனைத் தலைவர்காள்! சிறந்த மந்திரிகாள்!
    யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்!

    அதிரத மனர்காள்! துரகத் ததிபர்காள்
    எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்!
    வேலெறி படைகாள்! சூலெறி மறவர்காள்!
    கால னுருக்க்கொளும் கணைதுரந் திடுவீர்.
    மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச்

    செற்றிடுந் திறனுடைத் தீரரத் தினங்காள்!
    யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய!
    தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக!
    மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா
    ஆற்றல்கொண் டிருந்ததில் வரும்புகழ் நாடு!

    வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
    பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?
    வீரரும் அவரிசை விரித்திடு புலவரும்
    பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு!
    தர்மமே உருவமாத் தழைத்த பே ரரசரும்

    நிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு!
    வீரரைப் பெறாத மேன்மைநீர் மங்கையை
    ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு!
    பாரதப் பூமி பழம்பெரும் பூமி;
    நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!

    பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;
    நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
    வானக முட்டும் இமயமால் வரையும்
    ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்
    காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும்

    தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்
    இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
    உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!
    பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க
    மைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு!

    தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்
    ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு!
    ஊனமொன்றறியா ஞானமெய் பூமி,
    வானவர் விழையும் மாட்சியார் தேயம்!
    பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ?

    நீரதன் புதல்வர் நினைவகற் றாதீர்!
    தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்
    பேய்த்தகை கொண்டோ ர் பெருமையும் வன்மையும்
    ஞானமும் அறியா நவைபுரி பகைவர்
    வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல்

    இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய் கின்றார்!
    ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
    பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்
    மாதர்கற் பழித்தலும் மறைவர் வேள்விக்கு
    ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்!

    சாத்திரத் தொகுதங்யைத் தாழ்த்துவைக் கங்ன்றார்
    கோத்தங்ர மங்கையர் குலங்கெடுக் கின்றார்
    எண்ணில துணைவர்காள்! எமக்கிவர் செயுந்துயர்
    கண்ணியம் மறுத்தனர, ஆண்மையுங் கடிந்தனர்,
    பொருளினைச் சிதைத்தனர், மருளினை விதைத்தனர்

    திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்,
    பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்,
    சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்,
    வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
    ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்.

    மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை
    வெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்?
    மொக்குகள்தான் தோன்றி முடிவது போல
    மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்.
    தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை

    மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்?
    மானமென் றிலாது மாற்றலர் தொழும்பாய்
    ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்?
    தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி
    நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ?

    பிச்சைவாழ் வுகந்து பிறருடைய யாட்சியில்
    அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன்,
    புன்புலால் யாழ்க்கையைப் போற்றியே தாய்நாட்டு
    அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன்.
    மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்

    ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன்.
    ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்
    யாரிவண் உளரவர் யாண்டேனும் ஒழிக!
    படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக்
    கடைபடு மாக்களென் கண்முனில் லாதீர்!

    சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப
    மாதரர் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க,
    நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான்
    வீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக!
    தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின்

    பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க!
    நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு
    ஊட்டுதல் பெரங்தென உண்ணுவோன் செல்க!
    ஆணுருக் கொண்ட பெண்களும் அலிகளும்
    வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்.

    ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்!
    வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்!
    மானமே பெரிதென மதிப்பவர் இருமின்!
    ஈனமே பொறாத இயல்பினர் இருமின்!
    தாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்!

    மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்!
    புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்!
    கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்!
    ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்!
    சோர நெஞ்சங்லாத் தூயவர் இருமின்!

    தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்!
    பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!
    உடலினைப் போற்றா உத்தமர் இருமின்!
    கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்!
    வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்!

    நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்
    புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?
    மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின்
    இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும்
    பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்

    வீமனும் துரோணனும் வீட்டுமன் றானும்
    ராமனும் வேறுள இருந்திறல் வீரரும்
    நற்றுணை புரிவர்; வானக, நாடுறும்!
    வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்!
    பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர்

    செற்றினி மிழேச்சரைத் தீர்த்திட வம்மீன்!
    ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!
    நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!
    வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும்,
    ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின்

    உருளையி னிடையினும் மாற்றலர் தலைகள்
    உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்!
    நம்இதம், பெருவளம் நலிந்திட விரும்பும்
    (வன்மியை) வேரறத் தொலைத்தபின் னன்றோ
    ஆணெனப் பெறுவோம், அன்றிநாம் இறப்பினும்

    வானுறு தேவர் மணியுல கடைவோம்,
    வாழ்வமேற் பாரத வான்புகழ்த் தேவியைத்
    தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்!
    போரெனில் இதுபோர், புண்ணியத் திருப்போர்!
    பாரினில் இதுபோற் பார்த்திடற் கெளிதோ?

    ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி
    வீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே
    நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து
    வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம்
    வேள்வியில்இதுபோல் வேள்வியொன் றில்லை!

    தவத்தினில் இதுபோல் தவம்பிறி தில்லை!
    முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
    தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
    மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
    காதலின் நண்பர் கலைதரு குரவரென்று

    இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த்
    தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்
    ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்?
    வையகத் தரசும் வானக ஆட்சியும்
    போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன்.

    மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால,f
    கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது.
    வாயுலர் கின்றது; மனம் பதைக்கின்றது,
    ஓய்வுறுங் கால்கள, உலைந்தது சிரமமும்,
    வெற்றியை விரும்பேன், மேன்மையை விரும்பேன்

    சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன்,
    எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்,
    சினையறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி?
    எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன்
    கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து

    சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த்
    தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்
    வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி
    புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்
    அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச்

    செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்,
    உண்மையை அறியாய் உறவையே கருதிப்
    பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய்
    வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்,
    நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்; இன்னோர்

    தம்மொடு பிறந்த சகோதரராயினும்
    வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
    ஆரிய நீதிநீ அறிகிலை போலும்!
    பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை
    அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்

    பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை?
    பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
    ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக! என்று
    மெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக்
    குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன்

    அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய்
    மறமே உருவுடை மாற்றலர் தம்மைச்
    சுற்றமும் நோக்கான் தோழமை மதியான்
    பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன்.
    விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில்

    இசையுநற் றவத்தால் இன்றுவாழ்ந் திருக்கும்
    ஆரிய வீரர்காள்! அவருடை மாற்றலர்,
    தேரில்இந் நாட்டினர், செறிவுடை உறவினர்,
    நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர்,
    செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம்

    பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர்
    சிறப்புடை யாரியச் சீர்மையை அறியார்.

    ----

    33. கோக்கலே சாமியார் பாடல்



    (இராமலிங்க சுவாமிகள் ஏகளக்கமறப் பொதுநடம் நான்
    கண்டுகொண்ட தருணம என்று பாடிய பாட்டைத்
    திரித்துப் பாடியது)

    களக்கமுறும் மார்லிநடம் கண்ண்டுகொண்ட தருணம்
    கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
    விளக்கமுறப் பழுத்திடுமோ? வெம்பிவிழுந் திடுமோ?
    வெம்பாது விழினுமென்றன் கரத்திலகப் படுமோ?
    வளர்த்தபழம் கர்சா னென்ற குரங்குகவர்ந் திடுமோ?
    மற்றிங்ஙன் ஆட்சிசெய்யும் அணில்கடித்து விடுமோ?
    துளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ அல்லால்
    தொண்டவிக்குமோ, ஏதும் சொல்லறிய தாமோ?

    -----

    34. தொண்டு செய்யும் அடிமை



    (சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு
    ஆங்கிலேயஉத்தியோகஸ்தன் கூறுவது)

    நந்தனார் சரித்திரத்திலுள்ள மாடு தின்னும் புலையா! உனக்கு
    மார்கழித் திருநாளா? என்ற பாட்டின் வர்ணமெட்டு

    தொண்டு செய்யும் அடிமை! - உனக்கு
    சுதந்திர நினைவோடா?
    பண்டு கண்ட துண்டோ ? - அதற்கு
    பாத்திர மாவாயோ? (தொண்டு)

    ஜாதிச் சண்டை போச்சோ? - உங்கள்
    சமயச் சண்டை போச்சோ?
    நீதி சொல்ல வந்தாய்! - கண்முன்
    நிற்கொ ணாது போடா! (தொண்டு)

    அச்சம் நீங்கி னாயோ? - அடிமை
    ஆண்மை தாங்கி னாயோ?
    பிச்சை வாங்கிப் பிழைக்கும் - ஆசை
    பேணு தலொழித் தாயோ? (தொண்டு)

    கப்ப லேறு வாயோ? - அடிமை
    கடலைத் தாண்டு வாயோ?
    குப்பை விரும்பும் நாய்க்கே - அடிமை
    கொற்றத் தவிசு முண்டோ ? (தொண்டு)

    ஒற்றுமை பயின் றாயோ? - அடிமை
    உடல்பில் வலிமை யுண்டோ ?
    வெற்று ரைபே சாதே! அடிமை!
    வீரியம் அறி வாயோ? (தொண்டு)

    சேர்ந்து வாழு வீரோ? - உங்கள்
    சிறுமைக் குணங்கள் போச்சோ?
    சோர்ந்து வீழ்தல் போச்சோ - உங்கள்
    சோம்பரைத் துடைத் தீரோ? (தொண்டு)

    வெள்ளை நிறத்தைக் கண்டால் - பதறி
    வெருவலை ஒழித் தாயோ?
    உள்ளது சொல்வேன் கேள் - சுதந்திரம்
    உனக்கில்லை மறந் திடடா! (தொண்டு)

    நாடு காப்ப தற்கே - உனக்கு
    ஞானம் சிறது முண்டோ ?
    வீடு காக்கப் போடா! - அடிமை
    வேலை செய்யப் போடா! (தொண்டு)

    சேனை நடத்து வாயோ? - தொழும்புகள்
    செய்திட விரும்பு வாயோ?
    ஈன மான தொழிலே - உங்களுக்கு
    இசைவ தாகும் போடா! (தொண்டு)

    -----

    35. நம்ம ஜாதிக் கடுக்குமோ



    (புதிய கட்சித் தலைவரை நோக்கி நிதானக் கட்சியார்
    சொல்லுதல்)

    ஓய் நந்தனாரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ?
    நியாயந் தானோ? நீர் சொல்லும்? என்ற வர்ணமெட்டு

    பல்லவி

    ஓய் திலகரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ?
    செய்வது சரியோ? சொல்லும்

    கண்ணிகள்

    முன்னறி யாப் புது வழக்கம் நீர்
    மூட்டி விட்ட திந்தப் பழக்கம் - இப்போது
    எந்நகரிலு மிது முழக்கம் - மிக
    இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் (ஓய் திலகரே)

    சுதந்திரம் என்கிற பேச்சு - எங்கள்
    தொழும்புக ளெல்லாம் வீணாய்ப் போச்சு - இது
    மதம்பிடித் ததுபோலாச்சு - எங்கள்
    மனிதர்க் கெல்லாம் வந்த தேச்சு (ஓய் திலகரே)

    வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் - அன்றி
    வேறெ வர்க்குமது தியாஜ்யம் - சிறு
    பிள்ளைக ளுக்கே உபதேசம் - நீர்
    பேசிவைத்த தெல்லாம் மோசம் (ஓய் திலகரே)

    -------

    36. நாம் என்ன செய்வோம்.



    (நாம் என்ன செய்வோம்! புலையரே! - இந்தப்
    பூமியி லில்லாத புதுமையைக் கண்டோ ம் என்றவர்ணமெட்டு)

    ராகம் - புன்னாகவராளி தாளம் - ரூபகம்

    பல்லவி

    நாம் என்ன செய்வோம்! துணைவரே! - இந்தப்
    பூமியிலில்லாத புதுமையைக் கண்டோ ம். (நாம்)

    சரணங்கள்

    திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு
    செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு
    இபலதிசையும் துஷ்டர் கூட்டங்க ளாச்சு
    பையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு. (நாம்)

    தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார்
    செய்யுந் தொழில்முறை யாவரும் விட்டார்,
    பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார்,
    பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார் (நாம்)

    பட்டம்பெற் றோர்க்குமதிப் பென்பது மில்லை
    பரதேசப் பேச்சில் மயங்குபவ ரில்லை
    சட்டம் மறந்தோர்க்குப் பூஜை குறைவில்லை
    சர்க்கா ரிடம்சொல்லிப் பார்த்தும் பயனில்லை (நாம்)

    சீமைத் துணியென்றால் உள்ளம் கொதிக்கிறார்
    சீரில்லை என்றாலோ எட்டி மிதிக்கிறார்
    தாமெத் தையோ எவந்தேஎ யென்று துதிக்கிறார்
    தரமற்ற வார்த்தைகள் பேசிக் குதிக்கிறார் (நாம்)

    -------

    37. பாரத தேவியின் அடிமை



    (நந்தன் சரித்திரத்திலுள்ள ஆண்டைக் கடிமைக்காரன்
    அல்லவே என்ற பாட்டின் வர்ணமெட்டையும் கருத்தையும்
    பின்பற்றி எழுதியது)

    பல்லவி

    அன்னியர் தமக்கடிமை யல்லவே - நான்
    அன்னியர் தமக்கடிமை யல்லவே.

    சரணங்கள்

    மன்னிய புகழ் பாரத தேவி
    தன்னிரு தாளிணைக் கடிமைக் காரன். (அன்னியர்)

    இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம்
    திலக முனிக் கொத்த அடிமைக்காரன். (அன்னியர்)

    வெய்ய சிறைக்குள்ளே புன்னகை யோடுபோம்
    ஐயன் பூபேந்தரனுக் கடிமைக் காரன். (அன்னியர்)

    காவலர் முன்னிற்பினும் மெய் தவறா எங்கள்
    பாலர் தமக்கொத்த அடிமைக் காரன். (அன்னியர்)

    காந்தன லிட்டாலும் தர்மம் விடாப்ரமம்
    பாந்தவன் தாளிணைக் கடிமைக் காரன். (அன்னியர்)

    -----

    38. வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று



    ராகம் - தாண்டகம் தாளம் - ஆதி

    நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை
    நாட்டினாய், கனல் மூட்டினாய்,
    வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
    மாட்டுவேன்; - வலி காட்டுவேன். (நாட்டி)

    கூட்டம் கூடி வந்தே மாதரமென்று
    கோஷித்தாய், - எமை தூஷித்தாய்,
    ஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல்
    ஓட்டினாய், - பொருள் ஈட்டினாய் (நாட்டி)

    கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள்
    கூறினாய், - சட்டம் மீறினாய்,
    ஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே
    ஏசினாய், - வீரம் பேசினாய் (நாட்டி)

    அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
    ஆக்கினாய், - புன்மை போக்கினாய்,
    மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
    மீட்டினாய், - ஆசை ஊட்டினாய் (நாட்டி)

    தொண்டொன் றேதொழிலாக் கொண்டிருந்தோரைத்
    தூண்டினாய், - புகழ் வேண்டினாய்,
    கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள்
    காட்டினாய். - சோர்வை ஓட்டினாய் (நாட்டி)

    எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை
    ஏவினாய், - விதை தூவினாய்,
    சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
    செய்யவோ? - நீங்கள் உய்யவோ? (நாட்டி)

    சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச்
    சொல்லுவேன், - குத்திக் கொல்லுவேன்
    தடிப் பேசுவோ ருண்டோ ? சிறைக்குள்ளே
    தள்ளுவேன், - பழி கொள்ளுவேன். (நாட்டி)

    ------

    39. தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி



    சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
    துஞ்சிடோ ம் - இனி அஞ்சிடோ ம்
    எந்த நாட்டினும் இந்த அநீதிகள்
    ஏற்குமோ? - தெய்வம் பார்க்குமோ?

    வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை
    வாழ்த்துவோம் - முடி தாழ்த்துவோம்
    எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
    ஈனமோ? - அவ மானமோ?

    பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு
    போகவோ? - நாங்கள் சாகவோ?
    அழுது கொண்டிருப் போமோ? ஆண்பிள்ளைகள்
    அல்லமோ? - உயிர் வெல்லமோ?

    நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
    நாய்களோ? - பன்றிச் சேய்களோ?
    நீங்கள் மட்டும் மனிதர்களோ? - இத்
    நீதமோ? - பிடி வாதமோ?

    பார தத்திடை அன்பு செலுத்துதல்
    பாபமோ? - மனஸ் தாபமோ?
    கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது
    குற்றமோ? - இதில் செற்றமோ?

    ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது
    ஓர்ந்திட்டோ ம் - நன்கு தேர்ந்திட்டோ ம்
    மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெல்லாம்
    மலைவு றோம்; - சித்தம் கலைவுறோம்.

    சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்
    சாயுமோ? - ஜீவன் ஓயுமோ?
    இதயத் துள்ளே இலங்கு மஹாபக்தி
    ஏகுமோ? - நெஞ்சம் வேகுமோ?

    ------

    40. நடிப்பு சுதேசிகள்



    (பழித்தறிவுறுத்தல்)

    கிளிக்கண்ணிகள்

    நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
    வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
    வாய்ச் சொல்லில் வீரரடி.

    கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
    நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
    நாளில் மறப்பா ரடீ

    சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்
    அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே!
    அகலிகளுக் கின்ப முண்டோ ?

    கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற
    பெண்களின் கூட்டமடீ! - கிளியே!
    பேசிப் பயனென் னடீ

    யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
    மந்திரத் தாலே யெங்கும் - கிளியே!
    மாங்கனி வீழ்வ துண்டோ !

    உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
    செப்பித் திரிவா ரடீ! - கிளியே!
    செய்வ தறியா ரடீ!

    தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
    நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே!
    நம்புத லற்றா ரடீ!

    மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
    பேதைகள் போலு யிரைக் - கிளியே
    பேணி யிருந்தா ரடீ!

    தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
    ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே
    அஞ்சிக் கிடந்தா ரடீ!

    அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
    உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே
    ஊமைச் சனங்க ளடீ!

    ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
    மாக்களுக் கோர் கணமும் - கிளியே
    வாழத் தகுதி யுண்டோ ?

    மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
    ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
    இருக்க நிலைமை யுண்டோ ?

    சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
    வந்தே மாதர மென்பார்! - கிளியே!
    மனத்தி லதனைக் கொள்ளார்

    பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
    பழமை இருந்த நிலை! - கிளியே!
    பாமர ரேதறி வார்!

    நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
    தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
    சிறுமை யடைவா ரடீ!

    சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
    சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
    செம்மை