MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    திருவருட்பா
    இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
    நான்காம் திருமுறை

    1. குஞ்சிதபாதப் பதிகம் (2571- 2580)
    2. போற்றித் திருப்பதிகம் (2581 - 2590)
    3. அம்மை திருப்பதிகம் (2591 - 2600)
    4. ஆனந்த நடனப் பதிகம் (2601 - 2610)
    5. எதிர்கொள் பத்து (2611 - 2620)
    6. புறமொழிக் கிரங்கல் (2621 - 2630)
    7. திருப்புகற் பதிகம் (2631 - 2640)
    8. சிந்தைத் திருப்பதிகம் (2641 - 2650)
    9. உய்கைத் திருப்பதிகம் (2651 - 2662)
    10. அபராத விண்ணப்பம் (2663 - 2684)
    11. கலி விண்ணப்பம் (2685 - 2694)
    12. அடிமைப் பதிகம் (2695 - 2704)
    13. சரணப் பதிகம் (2705 - 2715)
    14. பொதுத் தனித் திருவெண்பா (2716 - 2728)
    15. தனித் திருவிருத்தம் (2729 - 2785)
    16. திருக்குறிப்பு நாட்டம் (2786 - 2789)
    17. தனித் திருப்புலம்பல் (2790 - 2793)
    18. பரம ராசியம் (2794 -2795)
    19. திருப்புகழ்ச்சி (2796 - 2798)
    20. திருமருந்தருள் நிலை (2799 -2800)
    21. திருவருள் விலாசம் (2801 - 2802)
    22. சிவ சிதம்பர சங்கீர்த்தனம் (2803 - 2807)
    23. சிவகாமவல்லி துதி (2808 - 2812)
    24. சிவ பரம்பொருள் (2813 -2816)
    25. நடராஜ அலங்காரம் (2817 -2819)
    26. பாங்கிமார் கண்ணி (2820 -- 2846)
    27. வெண்ணிலாக் கண்ணி (2847 - 2869)
    28. முறையீட்டுக் கண்ணி (2870 - 2938)
    29. திருவடிக் கண்ணி (2939 - 2949)
    30. பேரன்புக் கண்ணி (2950 - 2963)
    31. நடேசர் கொம்மி (2964 -2970)
    32. தோழியர் உரையாடல் (2971 - 2976)
    33. தெண்டனிட்டேன் (2977 - 2985)
    34. இன்னந் தயவு வரவிலையா (2986 - 2992)
    35. வினா விடை (2993 - 2995)
    36. நற்றாய் கவன்றது (2996 - 3004)
    37. சல்லாப லகரி (3005 - 3006)
    38. தலைமகளின் முன்ன முடிபு (3007 - 3016)
    39. வேட்கைக் கொத்து (3017 - 3026)
    40. அறநிலை விளக்கம் (3027)
    41. அருள்நிலை விளக்கம் (3028)

    1. குஞ்சிதபாதப் பதிகம் (2571- 2580)


    காப்பு
    பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2571 திருவண்ண நதியும்வளை ஒருவண்ண மதியும்வளர் செவ்வண்ணம் நண்ணுசடையும்
    தெருள்வண்ண நுதல்விழியும் அருள்வண்ண வதனமும் திகழ்வண்ண வெண்ணகையும்ஓர்
    மருவண்ண மணிகுவளை மலர்வண்ண மிடறும்மலை மகள்வண்ண மருவும்இடமும்
    மன்வண்ண மிகுதுணைப் பொன்வண்ண அடிமலரும் மாணிக்க வண்ணவடிவும்
    இருவண்ண மாம்என்மன தொருவண்ணம் ஆகியே இடையறா தெண்ணும்வண்ணம்
    எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்றிவண் இயம்பல்உன் கருணைவண்ணம்
    கருவண்ணம் அறஉளம் பெருவண்ணம் உறநின்று கடல்வண்ணன் எண்ணும்அமுதே
    கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ..1
    2572 எண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம் இடைவிடா துழலஒளிஓர்
    எள்அளவும் இன்றிஅஞ் ஞானஇருள் மூடிட இருண்டுயிர் மருண்டுமாழ்க
    நண்ணுமன மாயையாம் காட்டைக் கடந்துநின் ஞானஅருள் நாட்டைஅடையும்
    நாள்எந்த நாள்அந்த நாள்இந்த நாள்என்று நாயினேற் கருள்செய்கண்டாய்
    விண்ணுறுசு டர்க்கெலாம் சுடர்அளித் தொருபெரு வெளிக்குள்வளர் கின்றசுடரே
    வித்தொன்றும் இன்றியே விளைவெலாம் தருகின்ற விஞ்ஞான மழைசெய்முகிலே
    கண்ணுறுநு தற்பெருங் கடவுளே மன்றினில் கருணைநடம் இடுதெய்வமே
    கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ..2
    2573 பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப் புகலுமூ வுலகுநீத்துப்
    புரையுற்ற மூடம்எனும் இருள்நிலம்அ கன்றுமேல் போய்அருள்ஒ ளித்துணையினால்
    வேதநெறி புகல்சகல கேவலம்இ லாதபர வெளிகண்டு கொண்டுகண்ட
    விளைவின்றி நான்இன்றி வெளிஇன்றி வெளியாய் விளங்குநாள் என்றருளுவாய்
    வாதநெறி நடவாத போதநெறி யாளர்நிறை மதிநெறிஉ லாவும்மதியே
    மணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு மருந்தேபெ ருந்தெய்வமே
    காதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு கடிமதிற் றில்லைநகர்வாழ்
    கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ..3
    2574 கூர்கொண்ட வாள்கொண்டு கொலைகொண்ட வேட்டுவக் குடிகொண்ட சேரிநடுவில்
    குவைகொண்ட ஒருசெல்வன் அருமைகொண் டீன்றிடு குலங்கொண்ட சிறுவன்ஒருவன்
    நேர்கொண்டு சென்றவர்கள் கைகொண் டுறக்கண்கள் நீர்கொண்டு வாடல்எனவே
    நிலைகொண்ட நீஅருட் கலைகொண் டளித்தயான் நெறிகொண்ட குறிதவறியே
    போர்கொண்ட பொறிமுதல் புலைகொண்ட தத்துவப் புரைகொண்ட மறவர்குடியாம்
    பொய்கொண்ட மெய்என்னும் மைகொண்ட சேரியில் போந்துநின் றவர்அலைக்கக்
    கார்கொண்ட இடிஒலிக் கண்கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள்புரிகுவாய்
    கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ..4
    2575 படமெடுத் தாடுமொரு பாம்பாக என்மனம் பாம்பாட்டி யாகமாயைப்
    பார்த்துக் களித்துதவு பரிசுடையர் விடயம் படர்ந்தபிர பஞ்சமாகத்
    திடமடுத் துறுபாம்பின் ஆட்டமது கண்டஞ்சு சிறுவன்யா னாகநின்றேன்
    தீரத்து ரந்தந்த அச்சந்த விர்த்திடு திறத்தன்நீ ஆகல்வேண்டும்
    விடமடுத் தணிகொண்ட மணிகண்ட னேவிமல விஞ்ஞான மாம்அகண்ட
    வீடளித் தருள்கருணை வெற்பனே அற்புத விராட்டுருவ வேதார்த்தனே
    கடமடுத் திடுகளிற் றுரிகொண்ட ணிந்தமெய்க் டவுளே சடைகொள்அரசே
    கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ..5
    2576 எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும் எய்துகபி றப்பில்இனிநான்
    எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம்எய் தினும்எய்துக
    வழுவகைத் துன்பமே வந்திடினும் வருகமிகு வாழ்வுவந் திடினும்வருக
    வறுமைவரு கினும்வருக மதிவரினும் வருகஅவ மதிவரினும் வருகஉயர்வோ
    டிழிவகைத் துலகின்மற் றெதுவரினும் வருகஅல தெதுபோ கினும்போகநின்
    இணையடிகள் மறவாத மனம்ஒன்று மாத்திரம் எனக்கடைதல் வேண்டும்அரசே
    கழிவகைப் பவரோக நீக்கும்நல் லருள்எனும் கதிமருந் துதவுநிதியே
    கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ..6
    2577 பற்றுவது பந்தம்அப் பற்றறுதல் வீடிஃது பரமவே தார்த்தம்எனவே
    பண்புளோர் நண்பினொடு பகருவது கேட்டும்என் பாவிமனம் விடயநடையே
    எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும் ஏறுவதும்வீண்
    எண்ணுவதும் நண்ணுவதும் இப்புவன போகங்கள் யாவினும் சென்றுசென்றே
    சுற்றுவதும் ஆகிஓர் சற்றுமறி வில்லாது சுழல்கின்ற தென்செய்குவேன்
    தூயநின் திருவருளின் அன்றிஇவ் வேழைஅச் சுழல்மனம்அ டக்கவருமோ
    கற்றுவழு வற்றவர் கருத்தமர் கருத்தனே கண்ணுதற் கடவுள்மணியே
    கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ..7
    2578 எளியனேன் சிறியன்யான் செய்பிழைகள் சிறியவோ எழுகடலி னும்பெரியவே
    என்செய்கேன் என்செய்கேன் இனிஆயி னும்செயா தெந்தைநினை ஏத்தஎன்றால்
    வளியின்வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின் றேன்அடியனேன்
    மனம்எனது வசமாக நினதுவசம் நானாக வந்தறிவு தந்தருளுவாய்
    ஒளியின்ஒளி யேநாத வெளியின் வெளியேவிடய உருவின்உரு வேஉருவினாம்
    உயிரின்உயி ரேஉயர்கொள் உணர்வின்உணர் வேஉணர்வின் உறவினுற வேஎம்இறையே
    களியின்நிறை வேஅளிகொள் கருணைநிதி யேமணிகொள் கண்டஎண் தோள்கடவுளே
    கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ..8
    2579 சந்ததம்எ னக்குமகிழ் தந்தைநீ உண்டுநின் தன்னிடத் தேமவல்லி
    தாயுண்டு நின்அடியர் என்னும்நல் தமர்உண்டு சாந்தம்எனும் நேயர்உண்டு
    புந்திகொள்நி ராசையாம் மனைவிஉண் டறிவெனும் புதல்வன்உண் டிரவுபகலும்
    போனவிட முண்டருட் பொருளுமுண் டானந்த போகபோக் கியமும்உண்டு
    வந்தனைசெய் நீறெனும் கவசம்உண் டக்கமா மணியும்உண் டஞ்செழுத்தாம்
    மந்திரப் படைஉண்டு சிவகதிஎ னும்பெரிய வாழ்வுண்டு தாழ்வும்உண்டோ
    கந்தமிகு கொன்றையொடு கங்கைவளர் செஞ்சடைக் கடவுளே கருணைமலையே
    கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ..9
    2580 நான்முகனும் மாலும்அடி முடியும்அறி வரியபர நாதமிசை ஓங்குமலையே
    ஞானமய மானஒரு வானநடு ஆனந்த நடனமிடு கின்றஒளியே
    மான்முகம்வி டாதுழலும் எனையும்உயர் நெறிமருவ வைத்தவண்வ ளர்த்தபதியே
    மறைமுடிவில் நிறைபரப் பிரமமே ஆகம மதிக்கும்முடி வுற்றசிவமே
    ஊண்முகச் செயல்விடுத் துண்முகப் பார்வையின் உறுந்தவர்பெ றுஞ்செல்வமே
    ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண் டற்றநிலையே
    கான்முகக் கடகளிற் றுரிகொண்ட கடவுளே கண்கொண்ட நுதல்அண்ணலே
    கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ..10
    திருச்சிற்றம்பலம்
    ------------------------------------

    2. போற்றித் திருப்பதிகம் (2581 - 2590)


    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2581 அருள்தரல் வேண்டும் போற்றிஎன் அரசே
    அடியனேன் மனத்தகத் தெழுந்த
    இருள்கெடல் வேண்டும் போற்றிஎந் தாயே
    ஏழையேன் நின்றனைப் பாடும்
    தெருள்உறல் வேண்டும் போற்றிஎன் அறிவே
    சிந்தைநைந் துலகிடை மயங்கும்
    மருள்அறல் வேண்டும் போற்றிஎன் குருவே
    மதிநதி வளர்சடை மணியே. . .1
    2582 மணிமிடற் றமுதே போற்றிஎன் தன்னை
    வாழ்விக்க வேண்டுவல் போற்றி
    அணிமதி முடியோய் போற்றிஇவ் வேழைக்
    கருளமு தருளுக போற்றி
    பணிஅணி புயத்தோய் போற்றிநின் சீரே
    பாடுதல் வேண்டும்நான் போற்றி
    தணிவில்பே ரொளியே போற்றிஎன் தன்னைத்
    தாங்குக போற்றிநின் பதமே. ..2
    2583 நின்பதம் பாடல் வேண்டும்நான் போற்றி
    நீறுபூத் தொளிர்குளிர் நெருப்பே
    நின்புகழ் கேட்டல் வேண்டும்நான் போற்றி
    நெற்றியங் கண்கொளும் நிறைவே
    நின்வச மாதல் வேண்டும்நான் போற்றி
    நெடியமால் புகழ்தனி நிலையே
    நின்பணி புரிதல் வேண்டும்நான் போற்றி
    நெடுஞ்சடை முடித்தயா நிதியே. ..3
    2584 நிதிதரு நிறைவே போற்றிஎன் உயிர்க்கோர்
    நெறிதரு நிமலமே போற்றி
    மதிமுடிக் கனியே போற்றிஎன் தன்னை
    வாழ்வித்த வள்ளலே போற்றி
    விதிமுதற் கிறையே போற்றிமெய்ஞ் ஞான
    வியன்நெறி விளக்கமே போற்றி
    பதிபசு பதியே போற்றி நின்பாதம்
    பாடஎற் கருளுக போற்றி. ..4
    2585 போற்றிஎன் உயிர்க்கோர் இன்பமே அன்பர்
    புரிதவக் காட்சியே போற்றி
    போற்றிஎன் அன்பாம் தெய்வமே சைவம்
    புகல்சிவ போகமே போற்றி
    போற்றிஎன் பெரிதாஞ் செல்வமே கருணைப்
    பூரண வெள்ளமே போற்றி
    போற்றிஎன் வாழ்வுக் கொருபெரு முதலே
    போற்றிநின் சேவடிப் போதே. ..5
    2586 போதஆ னந்த போகமே என்னைப்
    புறம்பிட நினைத்திடேல் போற்றி
    சீதவான் பிறைசேர் செஞ்சடை யாய்என்
    சிறுமைதீர்த் தருளுக போற்றி
    பேதம்ஒன் றில்லா அருட்கட லேஎன்
    பிழைஎலாம் பொறுத்தருள் போற்றி
    வேதமெய்ப் பொருளே போற்றிநின் அல்லால்
    வேறெனக் கிலைஅருள் போற்றி. ..6
    2587 போற்றுவார் உள்ளம் புகுந்தொளிர் ஒளியே
    போற்றிநின் பூம்பதம் போற்றி
    ஆற்றுவார் சடைஎன் அப்பனே போற்றி
    அமலநின் அடிமலர் போற்றி
    ஏற்றுவார் கொடிகொள் எந்தையே போற்றி
    இறைவநின் இருங்கழல் போற்றி
    சாற்றுமா றரிய பெருமையே போற்றி
    தலைவநின் தாட்டுணை போற்றி. ..7
    2588 துணைமுலை மடந்தை எம்பெரு மாட்டி
    துணைவநின் துணையடி போற்றி
    புணைஎன இடரின் கடலினின் றேற்றும்
    புனிதநின் பொன்னடி போற்றி
    இணையில்பே ரின்ப அமுதருள் கருணை
    இறைவநின் இணையடி போற்றி
    கணைஎனக் கண்ணன் தனைக்கொளும் ஒருமுக்
    கண்ணநின் கழலடி போற்றி. ..8
    2589 அடியனேன் பிழைகள் பொறுத்தருள் போற்றி
    அயல்எனை விட்டிடேல் போற்றி
    கொடியனேற் கின்பந் தந்தருள் போற்றி
    குணப்பெருங் குன்றமே போற்றி
    நெடியஎன் துன்பந் துடைத்தருள் போற்றி
    நினைஅலால் பிறிதிலேன் போற்றி
    படிமிசைப் பிறர்பால் செலுத்திடேல் எங்கள்
    பரமநின் அடைக்கலம் நானே. ..9
    2590 நான்செயும் பிழைகள் பலவும்நீ பொறுத்து
    நலந்தரல் வேண்டுவன் போற்றி
    ஏன்செய்தாய் என்பார் இல்லைமற் றெனக்குன்
    இன்னருள் நோக்கஞ்செய் போற்றி
    ஊன்செய்நா வால்உன் ஐந்தெழுத் தெளியேன்
    ஓதநீ உவந்தருள் போற்றி
    மான்செயும் நெடுங்கண் மலைமகள் இடங்கொள்
    வள்ளலே போற்றிநின் அருளே. ..10
    திருச்சிற்றம்பலம்

    ----------------------------------------

    3. அம்மை திருப்பதிகம் (2591 - 2600)


    காப்பு
    பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2591 உலகின்உயிர் வகைஉவகை யுறஇனிய அருளமுதம் உதவும்ஆ னந்த சிவையே
    உவமைசொல அரியஒரு பெரியசிவ நெறிதனை உணர்த்துபே ரின்ப நிதியே
    இலகுபர அபரநிலை இசையும்அவ ரவர்பருவம் இயலுற உளங்கொள் பரையே
    இருமைநெறி ஒருமையுற அருமைபெறு பெருமைதனை ந்தெனை அளித்த அறிவே
    கலகமுறு சகசமல இருளகல வெளியான< ஸ஡௰஺஢஧ூ ஸ௕ந஽ ி஢நை஧௅
    கடகரட விமலகய முகஅமுதும் அறுமுகக் கநஅமுதும் உதவு கடலே
    அலகில்வளம் நிறையும்ஒரு தில்லையம் பதிமேவும் அண்ணலார் மகிழும் மணியே
    அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ..1
    2592 கற்பவைஎ லாங்கற்றுள் உணர்பவைஎ லாமனக் கரிசற உணர்ந்து கேட்டுக்
    காண்பவைஎ லாங்கண்டு செய்பவைஎ லாஞ்செய்து கருநெறி அகன்ற பெரியோர்
    பொற்பவைஎ லாஞ்சென்று புகல்பவைஎ லாங்கொண்டு புரிபவை எலாம்பு ரிந்துன்
    புகழவைஎ லாம்புகழ்ந் துறுமவைஎ லாம்உறும் போதவை எலாம்அ ருளுவாய்
    நிற்பவைஎ லாம்நிற்ப அசைபவைஎ லாம்அசைய நிறைபவை எலாஞ்செய் நிலையே
    நினைபவைஎ லாம்நெகிழ நெறிஅவைஎ லாம்ஓங்கும் நித்தியா னந்த வடிவே
    அற்புடைய அடியர்புகழ் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
    அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ..2
    2593 இக்கணம்இ ருந்தஇம் மெய்யென்ற பொய்க்கூரை இனிவரு கணப்போ திலே
    இடியாதி ருக்குமோ இடியுமோ என்செய்கோம் என்செய்கோம் இடியும் எனில்யாம்
    தெக்கணம் நடக்கவரும் அக்கணம் பொல்லாத தீக்கணம் இருப்ப தென்றே
    சிந்தைநைந் தயராத வண்ணம்நல் அருள்தந்த திகழ் பரம சிவசத்தியே
    எக்கணமும் ஏத்தும்ஒரு முக்கணி பரம்பரை< ௾ு஡஺௄ ௌு஡௃஢ ௅஢ுந௄
    இறைவிபை ரவிஅமலை எனமறைகள் ஏத்திட இருந்த ருள்தருந் தேவியே
    அக்கணுதல் எம்பிரான் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
    அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ..3
    2594 பொய்யாத மொழியும்மயல் செய்யாத செயலும்வீண் போகாத நாளும் விடயம்
    புரியாத மனமும்உட் பிரியாத சாந்தமும் புந்திதள ராத நிலையும்
    எய்யாத வாழ்வும்வே றெண்ணாத நிறைவும்நினை என்றும்மற வாத நெறியும்
    இறவாத தகவும்மேற் பிறவாத கதியும்இவ் ஏழையேற் கருள்செய் கண்டாய்
    கொய்யாது குவியாது குமையாது மணம்வீசு கோமளத் தெய்வ மலரே
    கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணிவி ளக்கே
    ஐயான னம்கொண்ட தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
    அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ..4
    2595 பவமான எழுகடல் கடந்துமேற் கதியான பதிநிலை அணைந்து வாழப்
    பகலான சகலமுடன் இரவான கேவலப் பகையுந் தடாத படிஓர்
    தவமான கலனில்அருள் மீகாம னால்அலது தமியேன் நடத்த வருமோ
    தானா நடக்குமோ என்செய்கேன் நின்திருச் சரணமே சரணம் அருள்வாய்
    உவமான மற்றபர சிவமான சுத்தவெளி உறவான முத்தர் உறவே
    உருவான அருவான ஒருவான ஞானமே உயிரான ஒளியின் உணர்வே
    அவமான நீக்கிஅருள் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
    அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ..5
    2596 சூரிட்ட நடையில்என் போரிட்ட மனதைநான் சொல்லிட்ட முடன்அ ணைத்துத்
    துன்றிட்ட மோனம்எனும் நன்றிட்ட அமுதுண்டு சும்மா இருத்தி என்றால்
    காரிட்டி தற்குமுன் யாரிட்ட சாபமோ கண்டிலேன் அம்மம் மஓர்
    கணமேனும் நில்லாது பொல்லாது புவியில் கறங்கெ னச்சுழல் கின்றதே
    தாரிட்ட நீஅருள் சீரிட்டி டாய்எனில் தாழ்பிறவி தன்னில் அதுதான்
    தன்னைவீழ்த் துவதன்றி என்னையும் வீழ்த்தும்இத் தமிய னேன்என் செய்குவேன்
    ஆறிட்ட சடையாளர் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
    அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ..6
    2597 மாயைஎனும் இரவில்என் மனையகத் தேவிடய வாதனைஎ னுங்கள் வர்தாம்
    வந்துமன அடிமையை எழுப்பிஅவ னைத்தமது வசமாக உளவு கண்டு
    மேயமதி எனும்ஒரு விளக்கினை அவித்தெனது மெய்ந்நிலைச் சாளி கைஎலாம்
    வேறுற உடைத்துள்ள பொருள்எலாம் கொள்ளைகொள மிகநடுக் குற்று நினையே
    நேயம்உற ஓவாது கூவுகின் றேன்சற்றும் நின்செவிக் கேற இலையோ
    நீதிஇலை யோதரும நெறியும்இலை யோஅருளின் நிறைவும்இலை யோஎன் செய்கேன்
    ஆயமறை முடிநின்ற தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
    அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ..7
    2598 வெவ்வினைக் கீடான காயம்இது மாயம்என வேத முதல்ஆ கமம்எலாம்
    மிகுபறைஅ றைந்தும்இது வெயில்மஞ்சள் நிறம்எனும் விவேகர் சொற்கேட் டறிந்தும்
    கவ்வைபெறு கடலுலகில் வைரமலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பலகால்
    கண்ணுறக் கண்டும்இப் புலைஉடலின் மானம்ஓர் கடுஅளவும் விடுவ தறியேன்
    எவ்வம்உறு சிறியனேன் ஏழைமதி என்னமதி இன்னமதி என்று ணர்கிலேன்
    இந்தமதி கொண்டுநான் எந்தவகை அழியாத இன்பநிலை கண்டு மகிழ்வேன்
    அவ்வியம்அ கற்றிஅருள் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
    அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ..8
    2599 ஒளிமருவும் உனதுதிரு வருள்அணுத் துணையேனும் உற்றிடில் சிறுது ரும்பும்
    உலகம் படைத்தல்முதல் முத்தொழில் இயற்றும்என உயர்மறைகள் ஓர்அ னந்தம்
    தெளிவுறமு ழக்கஅது கேட்டுநின் திருவடித் தியானம் இல்லா மல்அவமே
    சிறுதெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள்பால் சேராமை எற்க ருளுவாய்
    களிமருவும் இமயவரை அரையன்மகள் எனவரு கருணைதரு கலாப மயிலே
    கருதும்அடி யவர்இதய கமலமலர் மிசைஅருட் கலைகி ளரவளர் அன்னமே
    அளிநறைகொள் இதழிவனை தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
    அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ..9
    2600 நீறணிந் தொளிர்அக்க மணிதரித் துயர்சைவ நெறிநின்று னக்கு ரியஓர்
    நிமலமுறும் ஐந்தெழுத் துள்நிலையு றக்கொண்டு நின்னடிப் பூசை செய்து
    வீறணிந் தென்றும்ஒரு தன்மைபெறு சிவஞான வித்தகர்ப தம்பர வும்ஓர்
    மெய்ச்செல்வ வாழ்க்கையில் விருப்பமுடை யேன்இது விரைந்தருள வேண்டும் அமுதே
    பேறணிந் தயன்மாலும் இந்திரனும் அறிவரிய பெருமையை அணிந்த அமுதே
    பிரசமலர் மகள்கலைசொல் மகள்விசய மகள்முதல் பெண்கள்சிரம் மேவும் மணியே
    ஆறணிந் திடுசடையர் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
    அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ..10
    திருச்சிற்றம்பலம்
    -----------------------------

    4. ஆனந்த நடனப் பதிகம் (2601 - 2610)


    பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2601 பரசிவா னந்தபரி பூரண சதானந்த பாவனா தீதமுக்த
    பரமகை வல்யசை தன்யநிஷ் களபூத பெளதிகா தாரயுக்த
    சர்வமங் களசச்சி தானந்த செளபாக்ய சாம்பவ விநாசரகித
    சாஸ்வத புராதர நிராதர அபேதவா சாமகோ சரநிரூபா
    துருவகரு ணாகர நிரந்தர துரந்தர சுகோதய பதித்வநிமல
    சுத்தநித் தியபரோ க்ஷாநுபவ அபரோக்ஷ சோமசே கரசொரூபா
    அரஹர சிவாயநம என்றுமறை ஓலமிட் டணுவளவும் அறிகிலாத
    அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ..1
    2602 ஜோதிமணி யேஅகண் டானந்த சைதன்ய சுத்தமணியே அரியநல்
    துரியமணி யேதுரிய முங்கடந் தப்பால் துலங்குமணி யேஉயர்ந்த
    ஜாதிமணி யேசைவ சமயமணி யேசச்சி தானந்த மானமணியே
    சகஜநிலை காட்டிவினை யோட்டிஅருள் நீட்டிஉயர் சமரச சுபாவமணியே
    நீதிமணி யேநிரு விகற்பமணி யேஅன்பர் நினைவிலமர் கடவுண்மணியே
    நின்மல சுயம்பிர காசங்குலவும் அத்வைத நித்யஆ னந்தமணியே
    ஆதிமணி யேஎழில் அநாதிமணி யேஎனக் கன்புதவும் இன்பமணியே
    அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ..2
    2603 தேனமர் பசுங்கொன்றை மாலையா டக்கவின் செய்யுமதி வேணியாட
    செய்யுமுப் புரிநூலு மாடநடு வரியுரி சிறந்தாட வேகரத்தில்
    மானிமிர்ந் தாடஒளிர் மழுவெழுந் தாடமக வானாதி தேவராட
    மாமுனிவர் உரகர்கின் னரர்விஞ்சை யருமாட மால்பிரம னாடஉண்மை
    ஞானஅறி வாளர்தின மாடஉல கன்னையாம் நங்கைசிவ காமியாட
    நாகமுடன் ஊகமன நாடிஒரு புறமாட நந்திமறை யோர்களாட
    ஆனைமுக னாடமயி லேறிவிளை யாடுமுயர் ஆறுமுக னாடமகிழ்வாய்
    அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ..3
    2604 பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பிவீண் போக்கிநன் னாளைமடவார்
    போகமே பெரிதெனக் கொண்டறி வழிந்துநின் பொன்னடிக் கானபணியைச்
    செய்யாத பாவியேன் என்னைநீ கைவிடில் செய்வதறி யேன்ஏழையேன்
    சேய்செய்த பிழையெலாம் தாய்பொறுப் பதுபோல சிந்தைதனில் எண்ணிடாயோ
    மெய்யான நிலைபெறக் கையா லணைத்தருள வேண்டுமறை யாகமத்தின்
    மேலான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த மேதையர்கள் பரவிவாழ்த்தும்
    ஐயான னங்கொண்ட தெய்வமே கங்கைஅர வம்புலியு மாடமுடிமேல்
    அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ..4
    2605 (போதாரு நான்முகப்) புத்தேளி னாற்பெரிய பூமியிடை வந்துநமனாற்
    போகுமுயிர் கள்வினையை ஒழிமின்என் றேகுரவர் போதிக்கும் உண்மைமொழியைக்
    காதார வேபல தரங்கேட்டும் நூற்களிற் கற்றும்அறி வற்றிரண்டு
    கண்கெட்ட குண்டையென வீணே யலைந்திடும் கடையனேன் உய்வதெந்நாள்
    மாதாவு மாய்ஞான வுருவுமாய் அருள்செயும் வள்ளலே உள்ளமுதலே
    மாலாதி தேவர்முனி வோர்பரவி யேதொழுது வாழ்த்திமுடி தாழ்த்துமுன்றன்
    ஆதார மானஅம் போருகத் தைக்காட்டி யாண்டருள வேண்டும்அணிசீர்
    அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ..5
    2606 பண்ணாரு மூவர்சொற் பாவேறு கேள்வியிற் பண்படா ஏழையின்சொற்
    பாவையும் இகழ்ந்திடா தேற்றுமறை முடிவான பரமார்த்த ஞானநிலையை
    கண்ணார நெல்லியங் கனியெனக் காட்டிநற் கருணைசெய் தாளாவிடில்
    கடையனேன் ஈடேறும் வகைஎந்த நாள்அருட் கடவுளே கருணைசெய்வாய்
    தண்ணா ரிளம்பிறை தங்குமுடி மேன்மேனி தந்தஒரு சுந்தரியையும்
    தக்கவா மத்தினிடை பச்சைமயி லாம்அரிய சத்தியையும் வைத்துமகிழ்என்
    அண்ணாஎன் அப்பாஎன் அறிவேஎன் அன்பேஎன் றன்பர் (எப் பொழுதும்) வாழ்த்தும்
    அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ..6
    2607 பவமான எழுவகைப் பரப்பான வேலையிற் பசுவான பாவிஇன்னும்
    பற்றான குற்றமதை உற்றலை துரும்பெனப் படராது மறையனைத்தும்
    உவமான முரைசெய்ய அரிதான சிவநிலையை உற்றதனை யொன்றிவாழும்
    உளவான வழியீ தெனக்காட்டி அருள்செய்யில் உய்குவேன் முடிவானநல்
    தவமான நெறிபற்றி ரண்டற்ற சுகவாரி< ா௽௉஢௸ி஢ந௉ ி஡ொ஦ூ௸௄஡௵
    தானான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த தற்பரர்க ளகநிறைந்தே
    அவமான கருணைப்பிர காசநின் னருள்தனை அடியனுக் கருள்செய்குவாய்
    அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ..7
    2608 சந்ததமும் அழியாமல் ஒருபடித் தாயிலகு சாமிசிவ காமியிடமார்
    சம்புவா மென்னுமறை ஆகமத் துணிவான சத்யமொழி தன்னைநம்பி
    எந்தையே என்றறிஞர் யாவரும் நின்புகழை ஏத்திவினை தனைமாற்றியே
    இன்பமய மாயினிது வாழ்ந்திடப் புவியினிடை ஏழையேன் ஒருவன்அந்தோ
    சிந்தையா னதுகலக் கங்கொண்டு வாடலென் செப்புவாய் வேதனாதி
    தேவர்முனி வர்கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல்புரிய
    அந்தணர்கள் பலகோடி முகமனா டப்பிறங் கருண்முக விலாசத்துடன்
    அற்புத சிதாகாச ஞானிஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ..8
    2609 நீறணிந் தொளிர்அக்க மணிபூண்டு சன்மார்க்க நெறிநிற்கும் அன்பர்மனமாம்
    நிலமீது வளர்தேவ தாருவே நிலையான நிறைவே (மெய் யருட்சத்தியாம்)(169)
    வீறணிந் தழியாத நிதியமே ஒழியாத விண்ணே அகண்டசுத்த
    வெளியே விளங்குபர ஒளியே வரைந்திடா வேதமே வேதமுடிவே
    தூறணிந் தலைகின்ற பாவியேன் நின்திருத் துணைமலர்த் தாட்குரியனாய்த்
    துயர்தீர்ந் திளைப்பாறும் இன்பஅம் போதியில் தோயஅருள் புரிதிகண்டாய்
    ஆறணிந் திடுவேணி அண்ணலே அணிகுலவும் அம்மைசிவ காமியுடனே
    அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ..9
    2610 மணிகொண்ட நெடியஉல காய்அதில் தங்கும்ஆன் மாக்களாய் ஆன்மாக்களின்
    மலமொழித் தழியாத பெருவாழ் வினைத்தரும் வள்ளலாய் மாறாமிகத்
    திணிகொண்ட முப்புரா திகளெரிய நகைகொண்ட தேவாய் அகண்டஞானச்
    செல்வமாய் வேலேந்து சேயாய் கஜானனச் செம்மலாய் அணையாகவெம்
    பணிகொண்ட கடவுளாய்க் கடவுள ரெலாம்தொழும் பரமபதி யாய்எங்கள்தம்
    பரமேட்டி யாய்ப்பரம போதமாய் நாதமாய் பரமமோ க்ஷாதிக்கமாய்
    அணிகொண்ட சுத்தஅனு பூதியாய்ச் சோதியாய் ஆர்ந்துமங் களவடிவமாய்
    அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ..10
    திருச்சிற்றம்பலம்
    -------------------
    169. அடிக்குறிப்பு 163 காண்க.
    ---------------------------

    5. எதிர்கொள் பத்து (2611 - 2620)


    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (170)
    2611 ஆனந்தக் கூத்தனை அம்பலத் தானை
    அற்புதத் தேனைஎம் ஆதிப்பி ரானைத்
    தேனந்தக் கொன்றைஅம் செஞ்சடை யானைச்
    செங்கண்வி டையனை எங்கண்ம ணியை
    மோனந்தத் தார்பெறும் தானந்தத் தானை
    முத்தனை முத்தியின் வித்தனை முத்தை
    ஈனந்தக் காதெனை ஏன்றுகொண் டானை
    இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ..1
    2612 அடுத்தவர்க் கெல்லாம்அ ருள்புரி வானை
    அம்பலக் கூத்தனை எம்பெரு மானைத்
    தடுத்தெமை ஆண்டுகொண் டன்பளித் தானைச்
    சங்கரன் தன்னைஎன் தந்தையைத் தாயைக்
    கடுத்ததும் பும்மணி கண்டத்தி னானைக்
    கண்ணுத லானைஎம் கண்ணக லானை
    எடுத்தெனைத் துன்பம்விட் டேறவைத் தானை
    இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ..2
    2613 மாலயன் தேடியும் காணாம லையை
    வந்தனை செய்பவர் கண்டம ருந்தை
    ஆலம்அ முதின்அ ருந்தல்செய் தானை
    ஆதியை ஆதியோ டந்தமி லானைக்
    காலன்வ ருந்திவி ழவுதைத் தானைக்
    கருணைக்க டலைஎன் கண்ணனை யானை
    ஏலம ணிகுழ லாள்இடத் தானை
    இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ..3
    2614 சுந்தரர்க் காகமுன் தூதுசென் றானைத்
    தூயனை யாவரும் சொல்லரி யானைப்
    பந்தம்அ றுக்கும்ப ராபரன் தன்னைப்
    பத்தர்உ ளங்கொள்ப ரஞ்சுட ரானை
    மந்தர வெற்பின்ம கிழ்ந்தமர்ந் தானை
    வானவர் எல்லாம்வ ணங்கநின் றானை
    எந்தமை ஆண்டுநல் இன்பளித் தானை
    இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ..4
    2615 அன்பர்கள் வேண்டும்அ வைஅளிப் பானை
    அம்பலத் தேநடம் ஆடுகின் றானை
    வன்பர்கள் நெஞ்சில்ம ருவல்இல் லானை
    வானவர் கோனைஎம் வாழ்முத லானைத்
    துன்பம் தவிர்த்துச்சு கங்கொடுப் பானைச்
    சோதியைச் சோதியுள் சோதியை நாளும்
    என்பணி கொண்டெனை ஏன்றுகொண் டானை
    இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ..5
    2616 கண்ணுத லானைஎன் கண்ணமர்ந் தானைக்
    கருணாநி தியைக்க றைமிடற் றானை
    ஒண்ணுத லாள்உமை வாழ்இடத் தானை
    ஒருவனை ஒப்பிலா உத்தமன் தன்னை
    நண்ணுதல் யார்க்கும்அ ருமையி னானை
    நாதனை எல்லார்க்கும் நல்லவன் தன்னை
    எண்ணுதல் செய்தெனக் கின்பளித் தானை
    இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ..6
    2617 வெள்விடை மேல்வரும் வீறுடை யானை
    வேதமு டிவினில் வீற்றிருந் தானைக்
    கள்விரை யார்மலர்க் கொன்றையி னானைக்
    கற்பகந் தன்னைமுக் கண்கொள்க ரும்பை
    உள்வினை நீக்கிஎன் உள்ளமர்ந் தானை
    உலகுடை யானைஎன் உற்றது ணையை
    எள்வினை ஒன்றும்இ லாதவன் தன்னை
    இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ..7
    2618 பெண்ணமர் பாகனைப் பேரரு ளோனைப்
    பெரியவர்க் கெல்லாம்பெ ரியவன் தன்னைக்
    கண்ணமர் நெற்றிக் கடவுள்பி ரானைக்
    கண்ணனை ஆண்டமுக் கண்ணனை எங்கள்
    பண்ணமர் பாடல்ப ரிசளித் தானைப்
    பார்முதல் அண்டம்ப டைத்தளிப் பானை
    எண்அம ராதஎ ழிலுடை யானை
    இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ..8
    2619 வளங்கொளும் தில்லைப்பொன் மன்றுடை யானை
    வானவர் சென்னியின் மாணிக்கம் தன்னைக்
    களங்கம்இ லாதக ருத்துடை யானைக்
    கற்பனை முற்றும்க டந்துநின் றானை
    உளங்கொளும் என்தன்உ யிர்த்துணை யானை
    உண்மையை எல்லாம்உ டையவன் தன்னை
    இளம்பிறை சூடிய செஞ்சடை யானை
    இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ..9
    2620 குற்றமெல் லாம்குண மாகக்கொள் வானைக்
    கூத்துடை யானைப்பெண் கூறுடை யானை
    மற்றவர் யார்க்கும்அ ரியவன் தன்னை
    வந்திப்ப வர்க்குமி கஎளி யானைப்
    பெற்றம தேறும்பெ ரியபி ரானைப்
    பிறைமுடி யோனைப்பெம் மானைஎம் மானை
    எற்றிஎன் துன்பம்எ லாம்ஒழித் தானை
    இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ..10
    திருச்சிற்றம்பலம்
    ____________________________________________________________________________

    170. எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம். தொ. வே. 1. ச. மு. க. ஆ. பா.
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். தொ. வே. 2.
    --------------------------------

    6. புறமொழிக் கிரங்கல் (2621 - 2630)


    கட்டளைக் கலித்துறை
    2621 கேளனந் தான்ஒரு போதுண் டனைமனக் கேதம்அற
    நீளனம் தேடு முடியான் எதுநினக் கீந்ததென்றே
    வேளனம் போல்நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய்
    ஏளனம் செய்குவர் நீஅரு ளாவிடில் என்அப்பனே. ..1
    2622 அப்பாநின் பொன்னருள் என்மேல் தயைசெய் தளித்திலையேல்
    துப்பா னவும்ஒரு போதுதுவ் வாது சுழன்றனையே
    இப்பாரில் ஈசன் திருவருள் நீபெற்ற தெங்ஙனமோ
    செப்பாய் எனவரிப் பார்சிரிப் பார்இச் செகத்தவரே. ..2
    2623 தீதுசெய் தேற்கருள் செய்வான்நின் சித்தம் திரும்பிலையேல்
    தாதுசெய் தேகத்து ணாஒரு போது தவிர்ந்தநினக்
    கேதுசெய் தான்சிவன் என்றே உலகர் இழிவுரைத்தால்
    யாதுசெய் வேன்தெய்வ மேஎளி யேன்உயிர்க் கின்னமுதே. ,,,3
    2624 தெரியாமை யால்சிறி யேன்செய்குற் றத்தைநின் சித்தமதில்
    பிரியாமை வைத்தருள் செய்திலை யேல்எனைப் பெற்றவளும்
    பெரியாசை கொண்டபிள் ளாய்அரன் என்தரப் பெற்றதென்றே
    பரியாசை செய்குவ ளால்அய லார்என் பகருவதே. ..4
    2625 எண்ணாமல் நாயடி யேன்செய்த குற்றங்கள் யாவும்எண்ணி
    அண்ணாநின் சித்தம் இரங்காய் எனில்இங் கயலவர்தாம்
    பெண்ஆர் இடத்தவன் பேரருள் சற்றும் பெறாதநினக்
    கொண்ணாதிவ் வண்மை விரதம்என் றால்என் உரைப்பதுவே. ..5
    2626 பொய்யான வஞ்சக னேன்பிழை யாவும் பொறுத்துனருள்
    செய்யாய் எனில்எது செய்குவன் யான்இச் செகதலத்தோர்
    எய்யா விரதத்தில் யாதுபெற் றாய்என் றிகழ்வர்கண்டாய்
    அய்யாஎன் இன்னமு தேஅர சேஎன தாண்டவனே. ..6
    2627 உன்உள்ளம் கொண்டேற் கருளாய் எனில்இவ் உலகர்பொய்யாம்
    என்உள்ளம் கொண்ட களவறி யாதுநின் றேடவிங்கே
    நின்உள்ளம் கொள்விர தப்பயன் யாது நிகழ்த்தெனவே
    முன்உள்ளம் கொண்டு மொழிவர்கண் டாய்எம் முதலவனே. ..7
    2628 முந்தோகை கொண்டுநின் தண்ணருள் வாரியின் மூழ்குதற்கிங்
    கந்தோஎன் துன்பம் துடைத்தரு ளாய்எனில் ஆங்குலகர்
    வந்தோ சிவவிர தாஎது பெற்றனை வாய்திறஎன்
    றிந்தோர் தருசடை யாய்விடை யாய்என்னை ஏசுவரே. ..8
    2629 ஆசும் படியில் அகங்கா ரமும்உடை யான்என்றெண்ணிப்
    பேசும் படியில் எனக்கரு ளாய்எனில் பேருலகோர்
    ஏசும் படிவரும் பொய்வேடன் என்றதை எண்ணிஎண்ணிக்
    கூசும் படிவரு மேஎன்செய் கேன்என் குலதெய்வமே. ..9
    2630 ஐதட் டிடும்நெஞ் சகத்தேன் பிழைகளை ஆய்ந்துவெறும்
    பொய்தட் டிகல்உடை யேற்குன் கருணை புரிந்திலையேல்
    வெய்தட்டி உண்ட விரதாநின் நோன்பு விருத்தம்என்றே
    கைதட்டி வெண்ணகை செய்வர்கண் டாய்அருட் கற்பகமே. . .10
    திருச்சிற்றம்பலம்
    ---------------------------------

    7. திருப்புகற் பதிகம் (2631 - 2640)


    கொச்சகக் கலிப்பா(171)
    2631 வேகமுறு நெஞ்ச மெலிவும் எளியேன்றன்
    தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல்
    மாக நதியும் மதியும் வளர்சடைஎம்
    ஏக இனிமற் றெனக்கார் இரங்குவரே. ..1
    2632 கள்ள மனத்துக் கடையோர்பால் நாணுறும்என்
    உள்ள மெலிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்
    எள்ளின் அளவும் இரங்கி அருளாயேல்
    எள்ளும் உலகில் எனக்கார் இரங்குவரே. ..2
    2633 பொன்னை வளர்ப்பாரைப் போற்றாமல் எம்பெருமான்
    உன்னைமதித் துன்னுறும்என் உள்ளம் அறிந்திருந்தும்
    அன்னையினும் சால அருள்வோய் அருளாயேல்
    என்னை முகம்பார்த் தெனக்கார் இரங்குவரே. ..3
    2634 துன்னுடைய வியாக்கிரமத் தோலுடையான் தானிருக்கப்
    பொன்னுடையார் பக்கம் புகுவானேன் என்றிருப்பேன்
    தன்னுடைய துன்பம் தவிர்த்திங் கருளாயேல்
    என்னுடையாய் மற்றிங் கெனக்கார் இரங்குவரே. ..4
    2635 வன்கண்ணர் தம்மை மதியாதுன் பொன்னடியின்
    தன்கண் அடியேன்தன் சஞ்சலவன் நெஞ்சகத்தின்
    புன்கண் உழல்வைப் புகல்கின்றேன் காத்திலையேல்
    என்கண் அனையாய் எனக்கார் இரங்குவரே. ..5
    2636 தோன்றுவதும் மாய்வதும்ஆம் சூழ்ச்சியிடைப் பட்டலைந்து
    மான்றுகொளும் தேவர் மரபை மதியாமே
    சான்றுகொளும் நின்னைச் சரணடைந்தேன் நாயேனை
    ஏன்றுகொளாய் என்னில் எனக்கார் இரங்குவரே. ..6
    2637 தீதுமுற்றும் நாளும் செயினும் பொறுத்தருளும்
    சாதுமுற்றும் சூழ்ந்த தயாநிதிநீ என்றடைந்தேன்
    கோதுமுற்றும் தீரக் குறியாயேல் நன்மைஎன்ப
    தேதும்அற்ற பாவிக் கெவர்தான் இரங்குவரே. ..7
    2638 துன்றியமா பாதகத்தோன் சூழ்வினையை ஓர்கணத்தில்
    அன்றுதவிர்த் தாண்ட அருட்கடல்நீ என்றடுத்தேன்
    கன்றுறும்என் கண்கலக்கம் கண்டும் இரங்காயேல்
    என்றும்உளாய் மற்றிங் கெவர்தான் இரங்குவரே. ..8
    2639 கோடாமே பன்றிதரும் குட்டிகட்குத் தாயாகி
    வாடா முலைகொடுத்த வள்ளல்என நான்அடுத்தேன்
    வாடாஎன் றுன்அருளில் வாழ்வான் அருளிலையேல்
    ஈடாரும் இல்லாய் எனக்கார் இரங்குவரே. ..9
    2640 கல்லா நடையேன் கருணையிலேன் ஆனாலும்
    நல்லார் புகழும் நமச்சிவா யப்பெயரே
    அல்லாது பற்றொன் றறியேன் அருளாயேல்
    எல்லாம் உடையாய் எனக்கார் இரங்குவரே. ..10
    திருச்சிற்றம்பலம்
    ___________________________________________________________________________

    171. கலிவிருத்தம் ஦ தொ. வே. 1. 2. ச. மு. க.
    கொச்சகக் கலிப்பா. ஆ. பா.
    -----------------------------------

    8. சிந்தைத் திருப்பதிகம் (2641 - 2650)


    கொச்சகக் கலிப்பா
    2641 விடைஆர்க்கும் கொடிஉடைய வித்தகஎன் றுன்அடியின்
    இடைஆர்த்து நின்றழும்இவ் ஏழைமுகம் பாராமே
    நடைஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க் கீயாத
    உடையார்க்கோ என்னை உடையாய் உதவுவதே. ..1
    2642 கற்றே அறியாக் கடைப்புலையேன் ஆனாலும்
    உற்றேநின் தன்னைநினைந் தோதுகின்றேன் அல்லாமே

    மற்றேதும் தேறேன்என் வன்துயர்தீர்ந் துள்குளிரச்
    சற்றே இரங்கித் தயவுசெய்தால் ஆகாதோ. ..2
    2643 கல்லா ரொடும்திரிந்தென் கண்ணேநின் தாள்வழுத்தும்
    நல்லார் தமைக்காண நாணுகின்றேன் ஆனாலும்
    வல்லாய்நின் தன்னைஅன்றி மற்றொன் றறியேன்நான்
    எல்லாம் அறிவாய்க் கிதனைஇயம் பல்என்னே. ..3
    2644 கள்ளநெறி கொள்ளும் கடைநாயேன் என்னினும்நின்
    வள்ளல் மலர்த்தாளே வழுத்துகின்றேன் என்னுடைய
    உள்ள மெலிவோ டுடல்மெலிவும் கண்டும்அந்தோ
    எள்ளளவும் எந்தாய் இரங்கா திருந்தனையே. ..4
    2645 சீர்துணையார் தேடும் சிவனேநின் தன்னைஅன்றி
    ஓர்துணையும் இல்லேன்நின் ஒண்பொற் பதம்அறிய
    கார்துணையா நாடும் கலாபிஎன நாடுகின்றேன்
    ஆர்துணைஎன் றையா அகல இருந்தனையே. ..5
    2646 பேய்அனையா ரோடும் பிழைபுரிந்தேன் ஆனாலும்
    நாய்அனையேன் நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன்
    தீஅனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும்
    தாய்அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே. ..6
    2647 வெள்ள மருவும் விரிசடையாய் என்னுடைய
    உள்ள விரிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்
    தள்ளரிய நின்னருள்ஓர் சற்றும் புரியாமே
    கள்ளவினைக் கென்உளத்தைக் கைகாட்டி நின்றனையே. ..7
    2648 என்னுரிமைத் தாய்க்கும் இனியாய்நின் ஐந்தெழுத்தை
    உன்னுநிலைக் கென்னை உரித்தாக்க வேண்டுதியேல்
    மன்னுலகில் பொன்னுடையார் வாயில்தனைக் காத்தயர்ந்தேன்
    தன்னுடைய எண்ணந் தனைமுடிக்க வேண்டுவதே. ..8
    2649 குற்றம்எலாம் நல்ல குணமாகக் கொண்டருளும்
    உற்றதுணை நீயேமற் றோர்துணையும் இல்லைஎன்றே
    நற்றலைமை யாம்உனது நாமம் நவில்கின்றேன்
    கற்றவனே என்றனைநீ கைவிடில்என் செய்வேனே. ..9
    2650 அறியாப் பருவத் தறிவுறுத்தி ஆட்கொண்ட
    நெறியானே நின்ஆணை நின்ஆணை நின்ஆணை
    பொறியார்நின் நாமம் புகலுவதே அன்றிமற்றை
    வெறியார்வன் நாமமொன்றும் வேண்டேன்நான் வேண்டேனே. ..10
    திருச்சிற்றம்பலம்

    -----------------------------------

    9. உய்கைத் திருப்பதிகம் (2651 - 2662)


    கலிவிருத்தம்
    2651 திருவும் சீரும்சி றப்பும்தி றலும்சற்
    குருவும் கல்வியும் குற்றமில் கேள்வியும்
    பொருவில் அன்னையும் போக்கறு தந்தையும்
    தரும வெள்விடைச் சாமிநின் நாமமே. ..1
    2652 பொய்ய னேன்பிழை யாவும்பொ றுத்தருள்
    செய்ய வேண்டும்நின் செம்பொற்ப தமலால்
    அய்ய னேமுக்க ணாஇவ்அ டியனேற்
    குய்ய வேறுபு கல்இலை உண்மையே. ..2
    2653 கள்ள நெஞ்சக னேனும்க டையனேன்
    வள்ளல் நின்மலர் வார்கழற் பாதமே
    உள்ளு வேன்மற்றை ஓர்தெய்வ நேயமும்
    கொள்ள லேன்என்கு றிப்பறிந் தாள்கவே. ..3
    2654 வஞ்ச மாதர்ம யக்கம்க னவினும்
    எஞ்சு றாதிதற் கென்செய்கு வேன்என்றன்
    நெஞ்சம் அம்மயல் நீங்கிட வந்தெனைத்
    தஞ்சம் என்றுன் சரண்தந்து காக்கவே. ..4
    2655 பற்று நெஞ்சகப் பாதக னேன்செயும்
    குற்றம் யாவும்கு ணம்எனக் கொண்டருள்
    உற்ற எள்துணை யேனும்உ தவுவாய்
    கற்ற நற்றவர் ஏத்தும்முக் கண்ணனே. ..5
    2656 மதியும் கல்வியும் வாய்மையும் வண்மையும்
    பதியும் ஈந்தெம்ப சுபதி மெய்ந்நெறிக்
    கதியின் வைப்பது நின்கடன் வன்கடல்
    வதியும் நஞ்சம்அ ணிமணி கண்டனே. ..6
    2657 நீடு வாழ்க்கை நெறிவரு துன்பினால்
    வாடும் என்னைவ ருந்தல்என் றுன்பதம்
    பாடும் வண்ணம்நற் பாங்கருள் வாய்மன்றுள்
    ஆடும் முக்கண்அ ருட்பெரு வெள்ளமே. ..7
    2658 சிந்தை நொந்திச்சி றியஅ டியனேன்
    எந்தை என்றுனை எண்ணிநிற் கின்றனன்
    இந்து சேகர னேஉன்றன் இன்னருள்
    தந்து காப்பதுன் தன்கடன் ஆகுமே. ..8
    2659 உன்னை நாடும்என் உள்ளம் பிறரிடைப்
    பொன்னை நாடும்பு துமைஇ தென்கொலோ
    மின்னை நாடும்நல் வேணிப்பி ரான்இங்கே
    என்னை நாடிஎ னக்கருள் செய்கவே. ..9
    2660 இழைபொ றுத்தமு லையவர்க் கேற்றஎன்
    பிழைபொ றுப்பதுன் பேரருட் கேதகும்
    மழைபொ றுக்கும்வ டிவுடை யோன்புகழ்
    தழைபொ றுக்கும்ச டைமுடித் தந்தையே. ..10
    2661 மூட னேன்பிழை முற்றும் பொறுத்துனைப்
    பாட வேஅருட் பாங்கெனக் கீதியேல்
    நாட வேறும னையிடை நண்ணிநான்
    வாட வேண்டுவ தென்னைஎம் வள்ளலே. ..11
    2662 மின்னொப் பாகி விளங்கும்வி ரிசடை
    என்னப் பாஎனக் கின்னருள் ஈந்துநின்
    பொன்னொப் பாந்துணைப் பூம்பதம் போற்றியே
    உன்னப் பாங்கின்உ யர்நெறி உய்க்கவே. ..12
    திருச்சிற்றம்பலம்

    ------------------------------

    10. அபராத விண்ணப்பம் (2663 - 2684)


    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2663 உலகம் பரவும் பொருளேஎன் உறவே என்றன் உயிர்க்குயிரே
    இலகம் பரத்தே பரம்பரமாய் இன்ப நடஞ்செய் எம்இறையே
    கலகம் பரவும் மனத்தேனைக் கைவிட் டிடநீ கருதுதியோ
    திலகம் பரவும் நுதற்பாகன் என்ப தருளின் திறத்தன்றே. ..1
    2664 அன்றோர் பொருளாய் அடியேனை ஆட்கொண் டருளி அறிவளித்தாய்
    இன்றோ சிறியேன் பிழைகருதி இரங்கா தகற்ற எண்ணுதியோ
    குன்றோர் அனைய குறைசெயினும் கொண்டு குலம்பே சுதல்எந்தாய்
    நன்றோ கருணைப் பெருங்கடலே ஆளாய் இந்த நாயினையே. ..2
    2665 நாய்க்குங் கடையேன் பிழைஅனைத்தும் நாடில் தவத்தால் நல்கியநல்
    தாய்க்கும் கோபம் உறும்என்னில் யாரே யென்பால் சலியாதார்
    வாய்க்கும் கருணைக் கடல்உடையாய் உன்பால் அடுத்தேன் வலிந்தெளிய
    பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே. ..3
    2666 பேதைப் பருவத் தெனைவலியப் பிடித்தாட் கொண்ட பெருமானே
    போதைக் கழிப்பான் வீண்புரியும் புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல்
    வாதைப் படும்என் உயிரைஉன்றன் மலர்த்தாள் முன்னர் மடிவித்தே
    ஓதைக் கடல்சூழ் உலகத்தே பழிசூழ் விப்பேன் உரைத்தேனே. ..4
    2667 உரைத்தார் சிலர்சின் னாள்கழிய உறுவேம் என்ன உரைத்தவரே
    நரைத்தார் இறந்தார் அவர்தம்மை நான்கண் டிருந்தும் நாணாமே
    விரைத்தாள் மலரைப் பெறலாம்என் றெண்ணி வீணே இளைக்கின்றேன்
    திரைத்தாழ் கடலிற் பெரும்பிழையே செய்தேன் என்ன செய்வேனே. ..5
    2668 செய்வேன் தீமை நலம்ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை
    வைவேன் அன்றி வாழ்த்தேன்என் வண்ணம் இந்த வண்ணம்எனில்
    உய்வேன் என்ப தெவ்வாறென் உடையாய் உய்வேன் உய்வித்தால்
    நைவேன் அலதிங் கென்செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே. ..6
    2669 எண்ணி நலிவேன் நின்பாதம் எந்நாள் அடைவோம் எனஎன்பால்
    நண்ணி நலிவைத் தவிராயேல் என்செய் திடுவேன் நாயகனே
    கண்ணி நலியப் படும்பறவைக் கால்போல் மனக்கால் கட்டுண்ணப்
    பண்ணி நலஞ்சேர் திருக்கூட்டம் புகுத எனினும் பரிந்தருளே. ..7
    2670 பரியும் மனத்தால் கருணைநடம் பரவுந் தொண்டர் பதப்பணியே
    புரியும் இனத்தா ரொடுங்கூடிப் புனித னாக வேண்டும்எனத்
    திரியும் அடிமைச் சிறியேனுக் கிரங்கா திருந்தால் சின்னாட்பின்
    எரியுங் கொடுவாய் நரகத்துக் கென்செய் வேன்என் செய்வேனே. ..8
    2671 என்செய் திடுவேன் புலைநாயேன் இயற்றும் பிழைகள் எல்லாம்நின்
    பொன்செய் மலர்த்தாள் துணைஅந்தோ பொறுத்துக் கருணை புரியாதேல்
    புன்செய் விளவிப் பயனிலியாய்ப் புறத்திற் கிடத்தி எனஅடியார்
    வன்செய் உரையில் சிரிப்பார்மற் றதுகண் டெங்ஙன் வாழ்வேனே. ..9
    2672 வாழா மனத்தின் வழிசென்று வாளா நாளைக் கழிக்கின்ற
    பாழாம் உலகச் சிறுநடையில் பாவி யேனைப் பதிவித்தாய்
    ஊழாம் எனில்எம் பெருமானே இன்னும் வினையால் ஒதிஅனையேன்
    ஏழாம் நரகுக் காளாவேன் அல்லால் புகல்என் எளியேற்கே. ..10
    2673 எளியேன் கருணைத் திருநடஞ்செய் இணைத்தாள் மலர்கண் டிதயமெலாம்
    களியேன் கருங்கற் பாறைஎனக் கிடக்கின் றேன்இக் கடையேனை
    அளியே பெருக ஆளுதியோ ஆள்கி லாயோ யாதொன்றும்
    தெளியேன் அந்தோ அந்தோஎன் செய்வேன் விலங்கிற் சிறியேனே. ..11
    2674 சிறியேன் பிழையைத் திருவுளத்தே தேர்ந்திங் கென்னைச் சீறுதியோ
    எறியேம் எனக்கொண் டிரங்குதியோ இவ்வா றவ்வா றெனஒன்றும்
    அறியேன் அவலக் கடல்அழுந்தி அந்தோ அழுங்கி அயர்கின்றேன்
    பிறியேன் என்னைப் பிரிக்கினும்பின் துணையும் காணேன் பெருமானே. ..12
    2675 காணேன் நினது திருவருளைக் கண்டார் தமது கழல்தலைமேல்
    பூணேன் உலகச் சிறுநடையில் போந்து பொய்யே புகன்றந்தோ
    வீணே சுழன்று மெலிகின்றேன் என்னே இன்னல் மிகச்சுமக்கும்
    தூணே எனஇங் கெனைவிதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே. ..13
    2676 சூழ்வேன் நினது கருணைநடம் சூழும் பெரியார் தமைச்சூழ்ந்து
    வாழ்வேன் எளியேன் குறிப்பிந்த வண்ணம் எனது மனக்குரங்கோ
    தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவலக் கடலில் சலியாமே
    வீழ்வேன் என்றால் எம்பெருமான் இதற்கென் செய்கேன் வினையேனே. . .14
    2677 வினையே பெருக்கிக் கடைநாயேன் விடயச் செருக்கால் மிகநீண்ட
    பனையே எனநின் றுலர்கின்றேன் பாவி யேனுக் கருளுதியோ
    நினையே நினையாப் பிழைகருதி நெகிழ விடவே நினைதியோ
    அனையே அனையாய் திருக்குறிப்பை அறியேன் ஈதென் றடியேனே. ..15
    2678 அடியேன் முடுகிச் செயும்பிழைகள் அனந்தம் அவற்றை அந்தோஇக்
    கொடியேன் நினக்குந்தொறும்உள்ளம் குமைந்து நடுங்கிக் குலைகின்றேன்
    செடியேன் மனமோ வினையோநின் செயலோ செய்கை தெரியேன்வெண்
    பொடியே திகழும் வடிவுடையாய் யாது புரிவேன் புலையேனே. ..16
    2679 புலையே புரியும் மனம்போன போக்கே அல்லால் புண்ணியநல்
    நிலையே அறியேன் சிறியேனுக் கருளல் அழகோ நிறைந்தகுண
    மலையே மணியே மருந்தேஎன் வாழ்வே எல்லாம் வல்லோனே
    கலையே கருதும் கழலுடையாய் அருளா மையும்நின் கடன்அன்றே. ..17
    2680 கடந்தாழ் கயம்போல் செருக்கிமயற் கடலில் அழுத்திக் கடுவினையேன்
    மடந்தாழ் மனத்தோ டுலைகின்றேன் கரைகண் டேறும் வகைஅறியேன்
    தொடர்ந்தார் எடுப்பார் எனையெடுக்கும் துணைநின் மலர்த்தாள் துணைகண்டாய்
    அடர்ந்தார் தமக்கும் அருள்கின்றோய் ஆணை ஆணை அடியேனே. ..18
    2681 அடியார் இன்பம் அடைகின்றார் அடியேன் ஒருவன் அயர்கின்றேன்
    படியார் பலரும் பலபேசிச் சிரியா நின்றார் பரந்திரவும்
    விடியா நின்ற தென்புரிவேன் இன்னுங் கருணை விளைத்திலையே
    கொடியார் பிழையும் குணமாகக் கொண்டு மகிழும் குணக்குன்றே. . .19
    2682 குன்றா நிலைநின் றருள்அடைந்தார் அன்பர் எல்லாம் கொடியேன்நான்
    நன்றாம் நெறிசென் றறியாதே மனஞ்செல் வழியே நடக்கின்றேன்
    பொன்றா மணியே அவர்க்கருளி என்னை விடுத்தல் புகழன்றே
    என்றால் எனக்கே நகைதோன்றும் எந்தாய் உளத்துக் கென்னாமே. ..20
    2683 என்ஆ ருயிருக் குயிர்அனையாய் என்னைப் பொருளாய் எண்ணிமகிழ்ந்
    தந்நாள் அடிமை கொண்டளித்தாய் யார்க்கோ வந்த விருந்தெனவே
    இந்நாள் இரங்கா திருக்கின்றாய் எங்கே புகுவேன் என்புரிவேன்
    நின்னால் அன்றிப் பிறர்தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே. ..21
    2684 நின்பால் அடைந்தார் அன்பாலே அடியார் எல்லாம் நெடுவினையேன்
    வன்பால் மனப்பேய் தன்பாலே வருந்திச் சுழன்று மயர்கின்றேன்
    தென்பால் நோக்கி இன்பநடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா
    முன்பால் அமுதக் கடல்அளித்த முதல்வா என்னை முன்னுதியே. ..22
    திருச்சிற்றம்பலம்

    ---------------------

    11. கலி விண்ணப்பம் (2685 - 2694)


    கட்டளைக் கலித்துறை
    2685 செறியாத நெஞ்சக வஞ்சக னேன்இச் சிறுதலத்தே
    அறியா தறிந்தவன் போற்சில செய்திடல் ஐயநின்தாள்
    குறியா தரித்தல தாணைமற் றில்லைஎங் கொற்றவனே
    முறியா தருள்செய்தி யோதெரி யேன்எந்தை முன்னியதே. ..1
    2686 தீதொன்று மேகண் டறிந்ததல் லால்பலன் சேரநலம்
    யாதொன்றும் நான்கண் டறியேன் அறிந்தவன் என்னஇங்கே
    போதொன்று போக்குகின் றேன்பிழை யாவும் பொறுத்தருள்வாய்
    மாதொன்று பாகத் துணைஅன்றி நற்றுணை மற்றிலையே. ..2
    2687 எல்லாம் தெரிந்த இறைவாநின் தண்ணருள் எய்துகிலாப்
    பொல்லாத பாவிப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்வாய்
    கல்லா மனக்கடை யாலே கடைவைத்துக் கண்டதுதுன்
    பல்லால் அணுத்துணை யும்அறி யேன்இன்பம் ஆவதுவே. ..3
    2688 மண்ணுடை யாரிடை வாளா மனஞ்செல வைத்ததலால்
    எண்ணுடை யாரிடை எய்திநின் தாண்மலர் ஏத்துகிலேன்
    புண்ணுடை யாரிற் புலம்புகின் றேனைப் பொறுத்தருள்முக்
    கண்ணுடை யாய்கழற் காலுடை யாய்மணி கண்டத்தனே. ..4
    2689 தாழாத துன்பச் சமுத்திரத் தேஇத் தனிஅடியேன்
    வீழாத வண்ணம் கருணைசெய் வாய்என்னை வேண்டிஅந்நாள்
    ஊழாம் வினைதவிர்த் தாண்டனை யேஎன் உடையவனே
    வாழா வகைஎனை இந்நாள் விடுத்தல் வழக்கலவே. ..5
    2690 ஊன்செய்த வெம்புலைக் கூட்டின் பொருட்டிங் குனைமறந்து
    நான்செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன்
    ஏன்செய் தனைஎனக் கேளாது மேலும் இரங்குகின்றாய்
    வான்செய்த நாதநின் தண்ணருள் வண்ணம்என் வாழ்த்துவனே. ..6
    2691 ஆயாது நான்செயும் குற்றங் களைக்கண் டறியில்பெற்ற
    தாயாயி னும்பொறுப் பாளல ஆங்கவை சற்றலவே
    ஓயாது செய்யுந் தொறும்பொறுத் தாளும் உனைஎளியேன்
    வாயால் உரைக்கவும் மாட்டேன்அந் தோஎன்ன வன்மைஇதே. ..7
    2692 ஒன்றுந் தெரிந்திட மாட்டாப் பருவத் துணர்வுதந்தாய்
    இன்றுந் தருதற் கிறைவா நின்உள்ளம் இயைதிகொலோ
    கன்றுங் கருத்தொடு மாழ்குகின் றேன்உன் கழல்அடிக்கே
    துன்றுங் கருத்தறி யேன்சிறி யேன்என் துணிவதுவே. ..8
    2693 ஆவா எனஎனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட
    தேவாஎன் குற்றம் திருவுளத் தெண்ணில்என் செய்திடுவேன்
    வாவா எனஅழைப் பார்பிறர் இல்லை மறந்தும்என்றன்
    நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே. ..9
    2694 பள்ளத்தி லேசெலும் நீர்போல்என் உள்ளம் பரப்பதலால்
    எள்ளத்தி லேசிறி தாயினும் நான்செல்வ தில்லைஎந்தாய்
    கள்ளத்தி லேசொல்லு கின்றேன் அலநின் கழலிணைஎன்
    உள்ளத்தி லேநின்ற ஆங்கவை காண்க உடையவனே. ..10
    திருச்சிற்றம்பலம்

    ------------------------

    12. அடிமைப் பதிகம் (2695 - 2704)


    எண்சீர்க்(172) கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2695 ஆள்வினையால் பயன்உறுவார் அசதி யாட
    அந்தோ இப் புலைநாயேன் அன்பால் நின்பால்
    வேள்விசெயும் பெருந்தவர்க்கே வேள்வி செய்ய
    வேண்டும்இதற் கெம்பெருமான் கருணை செய்யும்
    நாள்விளைவில் சின்னாளே இதுதான் உண்மை
    நம்பும்என நவின்றுனையே நம்பி நின்றேன்
    கேள்வியிலாத் துரைத்தனமோ அலது நாயேன்
    கிளக்குமுறை கிளக்கிலனோ கேட்டி லாயே. ..1
    2696 கேட்டிலாய் அடியேன்செய் முறையை அந்தோ
    கேடிலாக் குணத்தவர்பால் கிட்டு கின்றோய்
    ஏட்டில்ஆ யிரங்கோடி எனினும் சற்றும்
    எழுதமுடி யாக்குறைகொண் டிளைக்கின் றேன்நான்
    சேட்டியா விடினும்எனைச் சேட்டித் தீர்க்கும்
    சிறுமனத்தால் செய்பிழையைத் தேர்தி யாயில்
    நாட்டில்ஆர் காக்கவல்லார் என்னை எந்தாய்
    நாள்கழியா வண்ணம்இனி நல்கல்வேண்டும். ..2
    2697 வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை
    வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும்
    தூண்டாத மணிவிளக்கே பொதுவி லாடும்
    சுடர்க்கொழுந்தே என்னுயிர்க்குத் துணையே என்னை
    ஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டு கொண்ட
    அருட்கடலே என்உள்ளத் தமர்ந்த தேவே
    ஈண்டாவ எனச்சிறிய அடியேன் உள்ளத்
    தெண்ணம்அறிந் தருளாயேல் என்செய் கேனே. ..3
    2698 என்னைஅறியாப்பருவத் தாண்டுகொண்ட
    என்குருவே எனக்குரிய இன்ப மேஎன்
    தன்னைஇன்று விடத்துணிந்தாய் போலும் அந்தோ
    தகுமோநின் பெருங்கருணைத் தகவுக் கெந்தாய்
    உன்னைஅலா தொருவர்தம்பால் செல்லேன் என்னை
    உடையானே என்னுள்ளத் துள்ளே நின்று
    முன்னைவினைப் பயன்ஊட்ட நினைப்பிக் கின்றாய்
    முடிப்பிக்கத் துணிந்திலையேல் மொழிவ தென்னே. ..4
    2699 என்நாணை அறிந்தும்என்னை அந்தோ அந்தோ
    இவ்வகைசெய் திடத்துணிந்தாய் என்னே எந்தாய்
    நின்ஆணை நின்னையலா தொன்றும் வேண்டேன்
    நீஇதனை அறிந்திலையோ நினைப்பிக் கின்ற
    மன்னாஎன் ஆருயிர்க்கு வாழ்வே என்கண்
    மணியேஎன் குருவேஎன் மருந்தே இன்னும்
    உன்னால்இங் குயிர்தரித்து வாழ்கின் றேன்என்
    உள்ளம்அறிந் துதவுதியோ உணர்கி லேனே. ..5
    2700 உள்ளமறிந் துதவுவன்நம் உடையான் எல்லாம்
    உடையான்மற் றொருகுறைஇங் குண்டோ என்னக்
    கள்ளமனத் தேன்அந்தோ களித்தி ருந்தேன்
    கைவிடுவார் போல்இருந்தாய் கருணைக் குன்றே
    எள்ளலுறப் படுவேன்இங் கேது செய்வேன்
    எங்கெழுகேன் யார்க்குரைப்பேன் இன்னும் உன்றன்
    வள்ளலருள் திறநோக்கி நிற்கின் றேன்என்
    மனத்துயர்போம் வகைஅருள மதித்தி டாயே. ..6
    2701 வகைஅறியேன் சிறியேன்சன் மார்க்க மேவும்
    மாண்புடைய பெருந்தவத்தோர் மகிழ வாழும்
    தகைஅறியேன் நலம்ஒன்றும் அறியேன் பொய்ம்மை
    தான்அறிவேன் நல்லோரைச் சலஞ்செய் கின்ற
    மிகைஅறிவேன் தீங்கென்ப எல்லாம் இங்கே
    மிகஅறிவேன் எனினும்எனை விடுதி யாயில்
    பகைஅறிவேன் நின்மீதில் பழிவைத் திந்தப்
    பாவிஉயிர் விடத்துணிவேன் பகர்ந்திட் டேனே. ..7
    2702 இட்டவகை வாழ்கின்றேன் எந்தாய் நானே
    எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என்செய் வேன்நின்
    மட்டலர்சே வடிஆணை நினைத்த வண்ணம்
    வாழ்விக்க வேண்டும்இந்த வண்ணம் அல்லால்
    துட்டன்என விடத்துணிதி யாயில் அந்தோ
    சூறையுறு துரும்பெனவும் சுழன்று வானில்
    விட்டசிலை எனப்பவத்தில் விழுவேன் அன்றி
    வேறெதுசெய் வேன்இந்த விழல னேனே. ..8
    2703 விழற்கிறைத்து மெலிகின்ற வீண னேன்இவ்
    வியன்உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம்
    அழற்கிறைத்த பஞ்செனவே ஆக்கி நீயே
    ஆட்கொண்டால் தடுப்பவரிங் காரே ஐயா
    கழற்கடிமை எனஉலகம் அறிய ஒன்றும்
    கருதறியாச் சிறுபருவத்தென்னை ஆண்டு
    நிழற்கருணை அளித்தாயே இந்நாள் நீகை
    நெகிழவிட்டால் என்செய்வேன் நிலையி லேனே. ..9
    2704 நிலைஅறியேன் நிலைஅறிந்து பெற்ற நல்லோர்
    நெறிஅறியேன் எனினும்உன்றன் நேச மன்றி
    இலைஅறியேன் மற்றவரைக் கனவி லேனும்
    எட்டுணைஓர் துணைஎனவும் எண்ணு றேன்நல்
    கலைஅறியேன் கருத்திலிருந் தறிவித் தாய்நான்
    கண்டறிந்தேன் எனினும்அவை காட்ட வேண்டும்
    அலைஅறியா அருட்கடலே அமுதே தேனே
    அம்பலத்தென் குருவேநான் அடிமை ஆளே. ..10
    திருச்சிற்றம்பலம்
    ____________________________________________________________________________

    172. எழுசீர். தொ. வே. 1, 2. எண்சீர். ச. மு. க. ஆ. பா.
    -------------------------

    13. சரணப் பதிகம் (2705 - 2715)


    கலிநிலைத்துறை
    2705 மதிவார் சடைமா மணியே அருள்வள் ளலேநன்
    நிதியே திருஅம் பலத்தா டல்செய்நித் தனேநின்
    துதியேன் எனினும் உனைஅன் றித்துணையி லேன்என்
    பதியே எனதெண் ணம்ப லிக்கும்படிக் கருளே. ..1
    2706 படிமேல் அடியேன் உனைஅன் றிஓர்பற்றி லேன்என்
    முடிமேல் அடிவைத் தருள்செய் திடமுன்னு கண்டாய்
    கொடிமேல் விடைநாட் டியஎண்கு ணக்குன் றமே
    பொடிமேல் விளங்குந் திருமே னிஎம்புண் ணியனே. ..2
    2707 புண்ணாம் மனம்சஞ் சலித்துள் ளம்புலர்ந்து நின்றேன்
    அண்ணா எனைஆட் கொளவேண் டும்அகற்று வாயேல்
    கண்ணார் களைகண் பிறிதொன் றிலைகள்ள னேனை
    எண்ணா வினைஎன் செயுமோ இதற்கென்செய் வேனே. ..3
    2708 செய்வேன் அவம்அன் றித்தவம் ஒன்றும்செய் தறியேன்
    நைவேன் பிழையா வும்பொறுத் தருள்நல்கு வாயேல்
    உய்வேன் அலதுய் வகைஇன் றுமன்றோங்கு கின்றாய்
    வைவேன் துதிப்பேன் உனைஎன் றும்மறந்தி லேனே. ..4
    2709 மறவா துனைவாழ்த் துமெய்அன் பரைமாநி லத்தே
    இறவா வகைஆட் கொண்டரு ளியஈச னேமெய்
    உறவா கியநின் பதம்அன் றிஒன் றோர்கி லேன்நான்
    பிறவா நெறிதந் தருள்என் பதென் பேசி டாயே. ..5
    2710 என்னே இனும்நின் அருள்எய் திலன்ஏழை யேனை
    முன்னே வலிந்தாட் கொண்டதின் றுமுனிந்த தேயோ
    பொன்னேர் அணிஅம் பலத்தா டியபுண்ணி யாஎன்
    அன்னே அரசே அமுதே அருள்ஆண்ட வனே. ..6
    2711 ஆண்டாய் எனைஏழ் பிறப்பும் உனைஅன்றி ஒன்றும்
    தீண்டா தெனதுள் ளம்என்றால் என்சிறுமை தீர்க்க
    வேண்டா தயலார் எனக்காண் பதென்மெய்ய னேபொன்
    ஆண்டான் திருஎய் தநஞ்சைக் களம்நாட்டி னோயே. ..7
    2712 நாட்டார் நகைசெய் வர்என்றோ அருள்நல்கி லாய்நீ
    வீட்டார் நினைஎன் னினைப்பார் எனைமேவி லாயேல்
    தாட்டா மரைஅன் றித்துணை ஒன்றும்சார்ந் திலேன்என்
    மாட்டா மைஅறிந் தருள்வாய் மணிமன்று ளானே. ..8
    2713 மன்றா டியமா மணியே தனிவான வாஓர்
    மின்றாழ் சடைவே தியனே நினைவேண்டு கின்றேன்
    பொன்றா தமெய்அன் பருக்கன் புளம்பூண்டு நின்று
    நன்றாய் இரவும் பகலும் உனைநாடு மாறே. ..9
    2714 மாறா மனமா யையினால் மதிமாழ்கி மாழ்கி
    ஏறா மல்இறங் குகின்றேன் இதற்கென் செய்வேன்
    தேறா வுளத்தேன் றனைஏ றிடச்செய்தி கண்டாய்
    பேறா மணிஅம் பலமே வியபெற்றி யானே. ..10
    2715 ஆனே றிவந்தன் பரைஆட் கொளும்ஐய னேஎம்
    மானே மணிமன் றில்நடம் புரிவள்ள லேசெந்
    தேனே அமுதே முதலா கியதெய்வ மேநீ
    தானே எனைஆண் டருள்வாய் நின்சரண் சரணே. ..11
    திருச்சிற்றம்பலம்

    ----------------------

    14. பொதுத் தனித் திருவெண்பா (2716 - 2728)


    நேரிசை வெண்பா
    2716 வந்திக்கும் மெய்யடியார் மாலற்ற ஓர்மனத்தில்
    சந்திக்கும் எங்கள் சயம்புவே - பந்திக்கும்
    வன்மலக்கட் டெல்லாம் வலிகெட் டறநினது
    நின்மலக்கண் தண்ணருள்தான் நேர். ..1
    2717 சங்கரா முக்கட் சயம்புவே தாழ்சடைமேல்
    பொங்கராத் திங்கள் பொலிந்தோனே - வெங்கரா
    வாய்நின்று பிள்ளை வரப்பாடும் வன்தொண்டர்க்
    காய்நின்று சந்துரைத்த தார். ..2
    2718 நீலக் களங்கொண்ட நீடொளியே நீள்கங்கை
    கோலச் சடைக்கணிந்த கோமளமே - ஞாலத்தில்
    அந்தோ சிறியேன் அருளின்றி வாடுவது
    சந்தோட மோநின் றனக்கு. ..3
    2719 நான்சிறியேன் என்னினும்இந் நானிலத்தில் நான்செய்பிழை
    தான்சிறிதோ அன்றுலகில் தான்பெரிதே - மான்கரத்தோய்
    அங்ஙனமே னும்உன் அருட்பெருமைக் கிப்பெருமை
    எங்ஙனம்என் றுள்ளம் எழும். ..4
    2720 ஆவித் துணையேஎன் ஆரமுதே நின்வடிவைப்
    பாவித்துள் நையேன்இப் பாவியேன் - சேவித்து
    வாழ்த்தேன்நின் பொன்னடியில் வந்தென் தலைகுனித்துத்
    தாழ்த்தேன்என் செய்தேன் தவம். ..5
    2721 உன்னைநினைந் திங்கே உலாவுகின்றேன் அன்றிஎந்தாய்
    பின்னை நினைப்பொன்றும் பெற்றிலேன் - என்னை
    விடாதேநின் பொன்னடியை மேவார்சேர் துன்பம்
    கொடாதே எனைஏன்று கொள். ..6
    2722 என்னரசே நின்னடிக்கீழ் என்னிடரை நீக்கெனநான்
    சொன்னதலால் தாயுடனும் சொன்னேனோ - இன்னுமிந்தத்
    துன்பச் சுமையைச் சுமக்கமுடி யாதென்னால்
    அன்பர்க் கருள்வோய் அருள். ..7
    2723 அன்னேஎன் அப்பாஎன் ஆருயிர்க்கோர் ஆதரவே
    என்னேநின் உள்ளம் இரங்கிலையே - பொன்னே
    உடையா ரிடைஎன் உளநொந்து வாடிக்
    கடையேன் படுந்துயரைக் கண்டு. ..8
    2724 பகுதி தகுதி விகுதிஎனும் பாட்டில்
    இகலில் இடையை இரட்டித் - தகவின்
    அருச்சித்தால் முன்னாம் அதுகடையாம் கண்டீர்
    திருச்சிற் சபையானைத் தேர்ந்து. (173) ..9
    2725 தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதும்யாம்
    தாதாதா என்றுலகில் தான்அலைந்தோம் - போதாதா
    நந்தா மணியே நமச்சிவா யப்பொருளே
    எந்தாய் எனப்புகழ வே. (174) ..10
    2726 பொய்கண்டாய் காமப் புதுமயக்கிற் போய்உழலக்
    கைகண்டாய் என்னபலன் கண்டாயே - மெய்கண்ட
    பொன்னே அனையார்பால் போய்வணங்கக் கற்றிலையோ
    என்னேநின் தன்மைமன மே. ..11
    2727 இவ்வழியில் செல்லாதே என்னுடையான் தன்னடிசேர்
    அவ்வழியில் செல்என் றடிக்கடிக்குச் - செவ்வழியில்
    சொன்னாலும் கேட்கிலைநீ துட்டமன மேஉனக்கிங்
    கென்னால் உறவே தினி. ..12
    2728 கால்வாங் கியஉட் கதவம் கொளும்அகத்தின்
    பால்வாங் கியகால் பரம்பரனே - மால்வாங்
    கரிதாரம் ஊணாதி யாம்மயல்கொண் டேழைப்
    பெரிதார ஓர்மொழியைப் பேசு. ..13
    திருச்சிற்றம்பலம்
    ____________________________________________________________________________

    173. இதன் பொருள்: பகுதி, தகுதி, விகுதி என்னும் மூன்று சொற்களின் இடையெழுத்தை இரட்டித்து அருச்சித்தால் அவற்றின் கடையெழுத்துகள் சேர்ந்த முன்னெழுத்துகள் கிடைக்கும். மூன்று சொற்களிலும் இடையெழுத்து கு. 3கு x 2 = 6கு, அறுகு (அறுகம்புல்). முதலெழுத்துகள் சேரின்: ப, த, வி - பதவி. கடையெழுத்துகள் சேரின்: தி, தி, தி - மூன்று தி, முக்தி. சிற்சபையானை அறுகால் அருச்சித்தால் முத்திப் பதவி பெறலாம்.

    174. தா தா தா தா தா தா தாக்குறை என்பதில் தா என்னும் எழுத்து எழுமுறை அடுக்கி வந்தது. அதனை எழுதாக்குறை என்று படிக்க. ஏழு தா எழுதா. எழுதாக்குறைக்கு என் செய்குதும் - எமது தலையில் எழுதாத குறைக்கு என்ன செய்வோம். இரண்டாவது அடியில் தா தா தா என மும்முறை அடுக்கி வந்ததை தாதா, தா எனப் பிரித்துப் பொருள் கொள்க. தாதா - வள்ளலே, தா - கொடு.
    568 ஆம் பாடல் காண்க. முதல் அடியில் எழுதாக்குறை. இரண்டாவது அடியில் ததிதி - ஒலிக்குறிப்பு. மூன்றாம் அடியில் திதிதி - முத்தி. இங்கிதமாலையிலும் இவ்வாறு ஒருபாடல் உண்டு. பாடல் 1930.
    குகுகுகுகுகு அணிவேணி - அறுகு அணிந்த சடை . குகுகுகுகுகுகுகு: குகு - அமாவாசை, குகு நான்குமுறை அடுக்கி வந்தது. நாலு குகு என்று கொண்டு தொடங்கும் இருண்ட கூந்தல் எனப் பொருள் கொள்ளவேண்டும். விரிக்கிற் பெருகும்.
    -------------------

    15. தனித் திருவிருத்தம் (2729 - 2785)


    கட்டளைக் கலித்துறை
    2729 நீர்பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறைமதியின்
    சீர்பூத் தமுத இளநகை பூத்த திருமுகமும்
    பார்பூத்த பச்சைப் பசுங்கொடி பூத்தசெம் பாகமும்ஓர்
    கார்பூத்த கண்டமும் கண்பூத்த காலும்என் கண்விருந்தே. ..1
    2730 வீழாக ஞான்றசெவ் வேணிப் பிரான்என் வினைஇரண்டும்
    கீழாக நான்அதன் மேலாக நெஞ்சக் கிலேசமெல்லாம்
    பாழாக இன்பம் பயிராக வாய்க்கில்அப் பாற்பிறவி
    ஏழாக அன்றிமற் றெட்டாக இங்கென்னை என்செயுமே. ..2
    2731 ஆயிரங் கார்முகில் நீர்விழி நீர்தர ஐயநின்பால்
    சேயிரங் கார்எனக் கென்றேநின் பொற்பதம் சிந்திக்கின்றேன்
    நீஇரங் காய்எனில் என்செய்கு வேன்இந் நிலத்திற்பெற்ற
    தாய்இரங் காள்என்ப துண்டோ தன் பிள்ளை தளர்ச்சிகண்டே. ..3
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2732 செம்பவளத் தனிக்குன்றே அருளா னந்தச்
    செழுங்கனியே முக்கணுடைத் தேவே மூவா
    அம்புவிநீர் அனல்வளிவான் ஆதி யாய
    அரசேஎன் ஆருயிர்க்கோர் அரண மாகும்
    சம்புசிவ சயம்புவே சங்க ராவெண்
    சைலம்வளர் தெய்வதவான் தருவே மிக்க
    வம்பவிழ்மென் குழல்ஒருபால் விளங்க ஓங்கும்
    மழவிடைமேல் வருங்காட்சி வழங்கு வாயே. ..4
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2733 நீடுகின்ற மாமறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை
    நாடுகின்ற முனிவரரும் உருத்திரரும் தேடஅருள் நாட்டங் கொண்டு
    பாடுகின்ற மெய்யடியர் உளம்விரும்பி ஆநந்தப் படிவ மாகி
    ஆடுகின்ற மாமணியை ஆரமுதை நினைந்துநினைந் தன்பு செய்வாம். ..5
    வேறு
    2734 மறைமுடி விளக்கே போற்றி மாணிக்க மலையே போற்றி
    கறைமணி கண்ட போற்றி கண்ணுதற் கரும்பே போற்றி
    பிறைமுடிச் சடைகொண் டோ ங்கும் பேரருட் குன்றே போற்றி
    சிறைதவிர்த் தெனையாட் கொண்ட சிவசிவ போற்றி போற்றி. ..6
    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2735 செய்வகை அறியேன் மன்றுண்மா மணிநின்
    திருவுளக் குறிப்பையுந் தெரியேன்
    உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ
    உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன்
    மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்
    வினையனேன் என்செய விரைகேன்
    பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுகேன்
    புலையனேன் புகல்அறி யேனே. . .7
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2736 நிதியைநினைந் துனைமறந்த மதியைநினைந் தழுகேனோ நிமலா னந்தக்
    கதியைஇகழ்ந் திருள்விழைந்த விதியைநினைந் தழுகேனோ கண்போல் வாய்ந்த
    பதியைஉனைப் பாடாத பாட்டைநினைந் தழுகேனோ படிற்று நெஞ்சச்
    சதியைநினைந் தழுகேனோ யாதுகுறித் தழுகேன்இத் தமிய னேனே. ..8
    வேறு
    2737 தாய்தடை என்றேன் பின்னர்த் தாரமே தடைஎன் றேன்நான்
    சேய்தடை என்றேன் இந்தச் சிறுதடை எல்லாந் தீர்ந்தும்
    தோய்தடைச் சிறியேன் இன்னுந் துறந்திலேன் எனைத் தடுக்க
    ஏய்தடை யாதோ எந்தாய் என்செய்கேன் என்செய் கேனே. ..9
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2738 எண்கடந்த உயிர்கள்தொறும் ஒளியாய் மேவி
    இருந்தருளும் பெருவாழ்வே இறையே நின்றன்
    விண்கடந்த பெரும்பதத்தை விரும்பேன் தூய்மை
    விரும்புகிலேன் நின்அருளை விழைந்தி லேன்நான்
    பெண்கடந்த மயல்எனும்ஓர் முருட்டுப் பேயாற்
    பிடிஉண்டேன் அடிஉண்ட பிஞ்சு போன்றேன்
    கண்கடந்த குருட்டூமர் கதைபோல் நின்சீர்
    கண்டுரைப்பல் என்கேனோ கடைய னேனே. ..10
    வேறு
    2739 மின்னைப் போல்இடை மெல்இய லார்என்றே
    விடத்தைப் போல்வரும் வெம்மனப் பேய்களைப்
    பொன்னைப் போல்மிகப் போற்றி இடைநடுப்
    புழையி லேவிரல் போதப்பு குத்திஈத்
    தன்னைப் போல்முடை நாற்றச்ச லத்தையே
    சந்த னச்சலந் தான்எனக் கொள்கின்றேன்
    என்னைப் போல்வது நாய்க்குலம் தன்னிலும்
    இல்லை அல்ல தெவற்றினும் இல்லையே. ..11
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2740 கள்உருகும் மலர்மணம்போல் கலந்தெங்கும் நிறைந்தோய்நின் கருணைக் கந்தோ
    முள்உருகும் வலியபராய் முருடுருகும் உருகாத முறைசேர் கல்லும்
    வள்உருகும் மலைஉருகும் மண்உருகும் மரம்உருகும் மதியி லேன்றன்
    உள்உருகும் வகையிலைஎன் செய்கேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே. ..12
    2741 மன்உயிர்க்குத் தாய்தந்தை குருதெய்வம் உறவுமுதல் மற்றும் நீயே
    பின்உயிர்க்கோர் துணைவேறு பிறிதிலைஎன் றியான்அறிந்த பின்பொய்யான
    மின்உடற்குத் தாய்தந்தை யாதியரை மதித்தேனோ விரும்பி னேனோ
    என்உயிர்க்குத் துணைவாநின் ஆணைஒன்றும் அறியேன்நான் இரங்கி டாயே. ..13
    2742 மாற்றரிய பசும்பொன்னே மணியேஎன் கண்ணேகண் மணியே யார்க்குந்
    தோற்றரிய சுயஞ்சுடரே ஆனந்தச் செழுந்தேனே சோதி யேநீ
    போற்றரிய சிறியேனைப் புறம்விடினும் வேற்றவர்பாற் போகேன் வேதம்
    தேற்றரிய திருவடிக்கண் பழிவிளைப்பேன் நின்ஆணைச் சிறிய னேனே. ..14
    2743 உள்உணர்வோர் உளத்துநிறைந் தூற்றெழுந்த தெள்ளமுதே உடையாய் வஞ்ச
    நள்உணர்வேன் சிறிதேனும் நலமறியேன் வெறித்துழலும் நாயிற் பொல்லேன்
    வெள்உணர்வேன் எனினும்என்னை விடுதியோ விடுதியேல் வேறென் செய்கேன்
    தள்உணர்வோன் எனினும்மகன் தனைஈன்றோர் புறம்பாகத் தள்ளார் அன்றே. ..15
    2744 கலைபயின்று நெறிஒழுகும் கருத்துடையேன் அலன்நின்னைக் கனவி லேனும்
    மலைபயின்ற பெருங்குணத்தெம் வள்ளலே எனத்துதியேன் வஞ்ச மில்லா
    நிலைபயின்ற நல்லோர்தம் நேசமிலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ
    உலைபயின்ற அரக்கெனநெஞ் சுருகேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே. ..16
    2745 இரும்புன்னை மலர்ச்சடையாய் இவ்வுலகில் சிலர்தங்கட் கென்று வாய்த்த
    அரும்பின்னை மார்பகத்தோன் அயனாதி சிறுதெய்வ மரபென் றோதும்
    கரும்பொன்னைச் செம்பொன்னில் கைவிடா திருக்கின்றார் கடைய னேற்கே
    தரும்பொன்னை மாற்றழிக்கும் அரும்பொன்நீ கிடைத்தும்உனைத் தழுவி லேனே. ..17
    2746 கஞ்சமலர்த் தவிசிருந்த நான்முகனும் நெடுமாலும் கருதிப் போற்ற
    அஞ்சநடை அம்மைகண்டு களிக்கப்பொன் அம்பலத்தில் ஆடு கின்ற
    எஞ்சல்இலாப் பரம்பொருளே என்குருவே ஏழையினே னிடத்து நீயும்
    வஞ்சம்நினைத் தனையாயில் என்செய்வேன் என்செய்வேன் மதியி லேனே. ..18
    கட்டளைக் கலித்துறை
    2747 வேம்புக்கும் தண்ணிய நீர்விடு கின்றனர் வெவ்விடஞ்சேர்
    பாம்புக்கும் பாலுண வீகின் றனர்இப் படிமிசையான்
    வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல்எனைநீ
    தேம்புக்கும் வார்சடைத் தேவே கருணைச் சிவக்கொழுந்தே. ..19
    2748 அடமுடி யாதுபல் ஆற்றாலும் ஏழைக் கடுத்ததுன்பம்
    படமுடி யாதென்னை செய்கேன்என் தன்முகம் பார்த்திரங்காய்
    திடமுடி யால்அயன் மால்வணங் குந்துணைச் சேவடியாய்
    தடமுடி யாய்செஞ் சடைமுடி யாய்நந் தயாநிதியே. ..20
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2749 பொல்லா வாழ்க்கைத் துயரம்எனும் புணரிப் பெருக்கில் வீழ்ந்தழுந்திப்
    பல்லார் நகைக்கப் பாவிபடும் பாட்டை முழுதும் பார்த்திருந்தும்
    கல்லால் அமர்ந்தீர் என்னிரண்டு கண்கள் அனையீர் கறைமிடற்றீர்
    எல்லாம் உடையீர் மால்விடையீர் என்னே இரங்கி அருளீரே. . .21
    2750 பொன்னை உடையார் மிகுங்கல்விப் பொருளை உடையார் இவர்முன்னே
    இன்னல் எனும்ஓர் கடல்வீழ்ந்திவ் வேழை படும்பா டறிந்திருந்தும்
    மின்னை நிகரும் சடைமுடியீர் விடங்கொள் மிடற்றீர் வினைதவிர்ப்பீர்
    என்னை உடையீர் வெள்விடையீர் என்னே இரங்கி அருளீரே. ..22
    கலித்துறை
    2751 ஆயும் வஞ்சக நெஞ்சன்இவ் அடியனேன் ஐயா
    நீயும் வஞ்சக நெஞ்சன்என் றால்இந்த நிலத்தே
    ஏயும் இங்கிதற் கென்செய்வேன் என்செய்வேன் எவைக்கும்
    தாயும் தந்தையும் ஆகிஉள் நிற்கின்றோய் சாற்றாய். ..23
    2752 நானும் பொய்யன்நின் அடியனேன் தண்ணருள் நிதிநீ
    தானும் பொய்யன்என் றால்இதற் கென்செய்வேன் தலைவா
    தேனும் பாலுந்தீங் கட்டியும் ஆகிநிற் றெளிந்தோர்
    ஊனும் உள்ளமும் உயிரும்அண் ணிக்கின்ற உரவோய். ..24
    நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா
    2753 நேசனும்நீ சுற்றமும்நீ நேர்நின் றளித்துவரும்
    ஈசனும்நீ ஈன்றாளும் எந்தையும்நீ என்றேநின்
    தேசுறுசீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை
    ஆசகலும் வண்ணம் அருள்புரிந்தால் ஆகாதோ. ..25
    கட்டளைக் கலித்துறை
    2754 ஆற்றால் விளங்கும் சடையோய்இவ் வேழை அடியனும்பல்
    ஆற்றால் வருந்தும் வருத்தம்எல் லாம்முற் றறிந்தும்இன்னம்
    ஆற்றா திருத்தல்நின் பேரருள் ஆற்றுக் கழகுகொலோ
    ஆற்றாமை மேற்கொண் டழுதால் எவர்எனை ஆற்றுவரே. ..26
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2755 அருளார் அமுதே அரசேநின் அடியேன் கொடியேன் முறையேயோ
    இருள்சேர் மனனோ டிடர்உழந்தேன் எந்தாய் இதுதான் முறையேயோ
    மருள்சேர் மடவார் மயலாலே மாழ்கின் றேன்நான் முறையேயோ
    தெருளோர் சிறிதும் அறியாதே திகையா நின்றேன் முறையேயோ. . .27
    2756 ஒழியாக் கவலை உறுகின்றேன் உடையாய் முறையோ முறையேயோ
    அழியாக் கருணைக் கடலேஎன் அரசே முறையோ முறையேயோ
    பொழியாப் புயலே அனையார்பால் புகுவித் தனையே முறையேயோ
    இழியாத் திரிதந் துழல்கின்றேன் இறைவா முறையோ முறையேயோ. ..28
    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2757 மதிஒளிர் கங்கைச் சடைப்பெருங் கருணை வள்ளலே தெள்ளிய அமுதே
    நிதிஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர்நிலைத்தவான் செல்வமும் மண்ணில்
    பதிஒளிர் வாழ்க்கை மணிமுடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன்
    கதிஒளிர் நினது திருவருட் செல்வக் களிப்பையே கருதுகின் றனனே. ..29
    கட்டளைக் கலித்துறை
    2758 வெள்ளங்கொண் டோ ங்கும் விரிசடை யாய்மிகு மேட்டினின்றும்
    பள்ளங்கொண் டோ ங்கும் புனல்போல்நின் தண்ணருட் பண்புநல்லோர்
    உள்ளங்கொண் டோ ங்கும் அவமே பருத்த ஒதிஅனையேன்
    கள்ளங்கொண் டோ ங்கும் மனத்துறு மோஉறிற் காண்குவனே. ..30
    2759 ஐயாமுக் கண்கொண்ட ஆரமு தேஅரு ளார்பவள
    மெய்யாமெய்ஞ் ஞான விளக்கே கருணை விளங்கவைத்த
    மையார் மிடற்று மணியேஅன் றென்னை மகிழ்ந்ததந்தோ
    பொய்யாஎன் செய்வல் அருளா யெனில்எங்குப் போதுவனே. ..31
    2760 நாரா யணன்திசை நான்முகன் ஆதியர் நண்ணிநின்று
    பாரா யணஞ்செயப் பட்டநின் சேவடிப் பங்கயமேல்
    சீரா யணம்பெறப் பாடுந் திறம்ஓர் சிறிதும்இலேன்
    ஆரா யணங்குற நின்றேன்பொன் மன்றத் தமர்ந்தவனே. ..32
    2761 பேய்கொண்ட நெஞ்சகப் பாழால் வரும்என் பெருந்துயரை
    வாய்கொண் டனந்தர் அனந்தர்க்கும் சொல்ல வராதெனில்இந்
    நாய்கொண் டுரைக்க வருமோஎன் செய்குவன் நச்சுமரக்
    காய்கொண்டு வாழைக் கனியைக்கை விட்ட கடையவனே. ..33
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2762 வன்மானங் கரத்தேந்தும் மாமணியே மணிகண்ட மணியே அன்பர்
    நன்மானங் காத்தருளும் அருட்கடலே ஆனந்த நடஞ்செய் வாழ்வே
    பொன்மானம் பினைப்பொருந்தும் அம்பினைவைத் தாண்டருளும் பொருளேநீ இங்
    கென்மானங் காத்தருள வேண்டுதியோ வேண்டாயேல் என்செய்வேனே. ..34
    கலிநிலைத் துறை
    2763 வைவ மென்றெழு கின்றவர் தமக்கும்நல் வாழ்வு
    செய்வம் என்றெழு கின்றமெய்த் திருவருட் செயலும்
    சைவ மென்பதும் சைவத்திற் சாற்றிடுந் தலைமைத்
    தெய்வ மென்பதும் என்னள வில்லைஎன் செய்வேன். ..35
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2764 ஐய ரேஉம தடியன்நான் ஆகில் அடிகள் நீர்என தாண்டவர் ஆகில்
    பொய்ய னேன்உளத் தவலமும் பயமும்புன்கணும்தவிர்த் தருளுதல்வேண்டும்
    தைய லோர்புறம் நின்றுளங் களிப்பச் சச்சி தானந்தத் தனிநடம் புரியும்
    மெய்ய ரேமிகு துய்யரே தரும விடைய ரேஎன்றன் விழிஅமர்ந் தவரே. . .36
    வேறு
    2765 எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார் ஈயினும் நாயினும் இழிந்தேன்
    புழுவினுஞ் சிறியேன் பொய்விழைந் துழல்வேன் புன்மையேன்புலைத்தொழிற்கடையேன்
    வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பிலா வஞ்சக நெஞ்சக்
    குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே. ..37
    கலி விருத்தம்
    2766 பொன்அ ளிக்கும்நற் புத்தியுந் தந்துநின்
    தன்ன ருட்டுணைத் தாண்மலர்த் தியானமே
    மன்ன வைத்திட வேண்டும்எம் வள்ளலே
    என்னை நான்பல கால்இங்கி யம்பலே. ..38
    2767 தாயும் தந்தையும் சற்குரு நாதனும்
    ஆயும் தெய்வமும் நீஎன் றறிந்தனன்
    பாயும் மால்விடை ஏறும் பரமனே
    நீயும் கைவிட என்னை நினைத்தியோ. ..39
    வேறு
    2768 ஒழியா மயல்கொண் டுழல்வேன் அவமே
    அழியா வகையே அருள்வாய் அருள்வாய்
    பொழியா மறையின் முதலே நுதல்ஏய்
    விழியாய் விழியாய் வினைதூள் படவே. ..40
    வெண்துறை
    2769 உலகெ லாம்நிறைந் தோங்கு பேரருள் உருவ மாகிஎவ் உயிரும் உய்ந்திட
    இலகு வானொளி யாம்மணி மன்றிடை என்றும்நின்றே
    அலகில் ஆனந்த நாடகஞ் செய்யும் அம்பொற் சேவடிக் கபயம் என்னையும்
    திலக நீவிழை வாய்நட ராசசி காமணியே. ..41
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2770 என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்
    முன்னிருவர் காணாமல் அலைந்தனரால் இனுங்காண முயலா நின்றார்
    நன்னிருபர் தொழுதேத்தும் அம்பலத்தே ஓரிடத்தோர் நாள்ஆ தித்தர்
    பன்னிருவர் ஒளிமாற்றும் பரஒளியைப் பார்த்துயர்ந்தீர் பண்பி னீரே. ..42
    2771 சேணாடர் முனிவர்உயர் திசைமுகன்மால் உருத்திரன்அத் திரளோர் சற்றும்
    காணாத காட்சியைநான் கண்டேன்சிற் றம்பலத்தின் கண்ணே பன்னாள்
    ஆணாகப் பிறந்தடியேன் அருந்தவம்என் புரிந்தேனோ அறிகி லேன்முன்
    பேணாத பிறப்பெல்லாம் பிறப்பலஇப் பிறப்பேஎன் பிறப்பாம் அந்தோ. ..43
    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2772 இருளற ஓங்கும் பொதுவிலே நடஞ்செய் எங்குரு நாதன்எம் பெருமான்
    அருளெனும் வடிவங் காட்டிஒண் முகத்தே அழகுறும் புன்னகை காட்டித்
    தெருளுற அருமைத் திருக்கையால் தடவித் திருமணி வாய்மலர்ந் தருகில்
    பொருளுற இருந்தோர் வாக்களித்தென்னுள்புகுந்தனன் புதுமைஈதந்தோ. ..44
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2773 பொன்என்கோ மணிஎன்கோ புனிதஒளித் திரள்என்கோ பொற்பின் ஓங்கும்
    மின்என்கோ விளக்கென்கோ விரிசுடர்க்கோர் சுடர்என்கோ வினையனேன்யான்
    என்என்கோ என்என்கோ எம்பெருமான் திருமேனி இருந்த வண்ணம்
    முன்என்கோ தறுதவத்தால் கண்டுகளித் திடப்பெற்றேன் முக்கண்மூர்த்தி. ..45
    2774 வஞ்சகர்க்கெல் லாம்முதலாய் அறக்கடையாய் மறத்தொழிலே வலிக்கும்பாவி
    நெஞ்சகத்துன் மார்க்கனைமா பாதகனைக் கொடியேனை நீச னேனை
    அஞ்சல்எனக் கருணைபுரிந் தாண்டுகொண்ட அருட்கடலை அமுதைத்தெய்வக்
    கஞ்சமல ரவன்நெடுமாற் கரும்பொருளைப் பொதுவினில்யான் கண்டுய்ந் தேனே. ..46
    கட்டளைக் கலித்துறை
    2775 நாதாபொன் அம்பலத் தேஅறி வானந்த நாடகஞ்செய்
    பாதா துரும்பினும் பற்றாத என்னைப் பணிகொண்டெல்லாம்
    ஓதா துணர உணர்த்திஉள் ளேநின் றுளவுசொன்ன
    நீதா நினைமறந் தென்நினைக் கேன்இந்த நீணிலத்தே. ..47
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2776 கந்த நாண்மலர்க் கழலிணை உளத்துறக் கருதுகின் றவர்க்கெல்லாம்
    பந்த நாண்வலை அவிழ்த்தருள் சிதம்பரை பரம்பரை யுடன்ஆடும்
    அந்த நாள்மகிழ் வடைபவர் உளர்சிலர் அவர்எவர் எனில்இங்கே
    இந்த நாள்முறை திறம்பல ராய்உயிர்க் கிதம்செயும் அவர்அன்றே. ..48
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2777 வெட்டை மாட்டி விடாப்பெருந் துன்பநோய்
    விளைவ தெண்ணிலர் வேண்டிச்சென் றேதொழுக்
    கட்டை மாட்டிக் கொள்வார்என வேண்டிப்பெண்
    கட்டை மாட்டிக் கொள்வார்தங் கழுத்திலே
    துட்டை மாட்டின் கழுத்தடிக் கட்டையோ
    துணிக்கும் கட்டைய தாம்இந்தக் கட்டைதான்
    எட்டை மாட்டி உயிர்விடக் கட்டைமேல்
    ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே. ..49
    2778 புண்ணைக் கட்டிக்கொண் டேஅதன் மேல்ஒரு
    புடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும்
    பெண்ணைக் கட்டிக்கொள் வார்இவர் கொள்ளிவாய்ப்
    பேயைக் கட்டிக்கொண் டாலும் பிழைப்பர்காண்
    மண்ணைக் கட்டிக்கொண் டேஅழு கின்றஇம்
    மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
    கண்ணைக் கட்டிக்கொண் டூர்வழி போம்கிழக்
    கழுதை வாழ்வில் கடைஎனல் ஆகுமே. . .50
    கட்டளைக் கலிப்பா
    2779 உடுக்க வோஒரு கந்தைக்கு மேலிலை
    உண்ண வோஉண வுக்கும் வழியிலை
    படுக்க வோபழம் பாய்க்கும் கதியிலை
    பாரில் நல்லவர் பால்சென்று பிச்சைதான்
    எடுக்க வோதிடம் இல்லைஎன் பால்உனக்
    கிரக்கம் என்பதும் இல்லை உயிரைத்தான்
    விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்
    வெண்பி றைச்சடை வித்தக வள்ளலே. ..51
    2780 தொடுக்க வோநல்ல சொன்மலர் இல்லைநான்
    துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லைஉள்
    ஒடுக்க வோமனம் என்வசம் இல்லைஊ
    டுற்ற ஆணவ மாதிம லங்களைத்
    தடுக்க வோதிடம் இல்லைஎன் மட்டிலே
    தயவு தான்நினக் கில்லை உயிரையும்
    விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்
    விளங்கு மன்றில் விளங்கிய வள்ளலே. ..52
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2781 இறகெடுத்த அமணர்குலம் வேரறுத்த சொக்கேஈ தென்ன ஞாயம்
    அறுகடுத்த சடைமுடிமேல் மண்ணெடுக்க மாட்டாமல் அடிபட் டையோ
    பிறகெடுத்தீர் வளையல்விற்றீர் சொற்கேளாப்பிள்ளைகளைப் பெற்றதோஷம்
    விறகெடுத்தீர் என்செய்வீர் விதிவசந்தான் யாவரையும் விடாது தானே. ..53
    கலி விருத்தம்
    2782 சச்சிதா நந்தசிற் சபையில் நாடகம்
    பச்சிதாந் திருவுருப் பாவை நோக்கிட
    மெச்சிதா காரமா விளைப்பர் மெல்லடி
    உச்சிதாழ் குவர்நமக் குடையர் நெஞ்சமே. ..54
    கட்டளைக் கலித்துறை
    2783 தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா
    தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா
    தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா
    தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனஞ்சொல்லுமே. ..55
    நேரிசை வெண்பா
    2784 இம்மை யறையனைய வேசூர மாதருமா
    இம்மையுமை யிம்மையையோ என்செய்த - தம்மைமதன்
    மாமாமா மாமாமா மாமாமா மாமாமா
    மாமாமா மாமாமா மா. . .56
    2785 ஆவியீ ரைந்தை அபரத்தே வைத்தோதில்
    ஆவியீ ரைந்தை அகற்றலாம் - ஆவியீர்
    ஐந்துறலா மாவியீ ரைந்தறலா மாவியீ
    ரைந்திடலா மோரிரண்டோ டாய்ந்து. (176) ..57
    திருச்சிற்றம்பலம்
    ___________________________________________________________________________

    176. இதன் பொருள் : ஆவி - ஆன்மவக்கரமென்னும், ஈரைந்து - பத்தாகிய யகரத்தை, ஐ - சிவத்திற்கு, அபரத்தே - பின்னாக, வைத்து - பொருத்தி, ஓதில் - செபிக்கில், ஆவியீ ரைந்தை - ஆ என்னும் ஆபத்துகளையும் வி என்னும் விபத்துகளையும், அகற்றலாம் - நீக்கிக் கொள்ளலாம். ஆவி - ஆன்மவியற்கையை, ஈர் - கெடுக்கும், ஐந்து - பஞ்சமலங்களையும், அறலாம் - களைந்து விடலாம், ஆவி - ஆன்மாவுக் குறுதியாய், ஈரைந்து - பத்தியை, உறலாம் - பொருந்தலாம், ஆய்ந்து - சேர்க்கும் வகை தெரிந்து, ஆவி - பிராணனது கலைகள், ஈரைந்து - பத்துடன், ஓர் - ஒரு, இரண்டோ டு - இரண்டையுங் கழியாமல், இடலாம் - சேர்த்துக் கட்டிக் கொள்ளலாம்.

    - ஆறாம் திருமுறை முதற் பதிப்பு 1885

    இப்பதிகத்துள் கலித்துறைகளும் விரவி நிற்கவும், விருத்தமெனக் குறியிட்டாளப் பட்டமைக் கீண்டு விதியெழுதப் புகின் மிகப் பெருகுமாதலின் விடுக்கப்பட்டது. சைவம் பன்னிரண்டு திருமுறைகளுள் ஆளுடைய வரசாகிய அப்பர் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறையில் குலம்பலம்பாவரும் என்றற் றொடக்கத் திலக்கியங்களாற் கண்டுகொள்க. - தொ. வே.

    -------------------------

    16. திருக்குறிப்பு நாட்டம் (2786 - 2789)


    ஆசிரியத் துறை(177)
    2786 ஆற்றுக் கேபிறைக் கீற்றுக் கேசடை ஆக்கிச் சேவடி தூக்கி ஆருயிர்ப்
    பேற்றுக்கே நடிப்பாய் மணிமன்றில் பெருந்தகையே
    சோற்றுக் கேஇதஞ் சொல்லிப் பேதையர் சூழல் வாய்த்துயர் சூழ்ந்து மேற்றிசைக்
    காற்றுக்கே கறங்காய்ச் சுழன்றேனைக் கருதுதியோ. ..1
    2787 ஞாலத் தார்தமைப் போலத் தாம்இங்கு நண்ணு வார்நின்னை எண்ணு வார்மிகு
    சீலத்தார் சிவமே எவையும்எனத் தேர்ந்தனரால்
    சாலத் தான்கொடுஞ் சாலத் தாலத்தைத் தாவி நான்பெரும் பாவி ஆயினன்
    ஏலத்தார் குழலா ளிடத்தாய்எனை எண்ணுதியோ. ..2
    2788 அண்ண லேநின்னை எண்ண லேன்என்னை ஆண்டு கொண்டனை மீண்டும் விண்டனன்
    நண்ணலே அறியேன் கடையேன்சிறு நாயனையேன்
    பெண்ண லேன்இயல் ஆண லேன்அலிப் பேய னேன்கொடும் பேதை யேன்பிழை
    கண்ணலே புரியா தினும்மீட்கக் கருதுதியோ. ..3
    2789 வல்லி ஆனந்த வல்லி சேர்மண வாள னேஅரு ளாள னேமலை
    வில்லியாய் நகைத்தே புரம்வீழ்த்த விடையவனே
    புல்லி யான்புலைப் போகம் வேட்டுநின் பொன்ன டித்துணைப் போகம் போக்கினேன்
    இல்லிஆர் கடம்போ லிருந்தேன்எனை எண்ணுதியோ. ..4
    திருச்சிற்றம்பலம்
    ___________________________________________________________________________

    175. ஆசிரியத்தாழிசை. தொ. வே. 1, 2. ஆசிரியத்துறை. ச. மு. க. ஆ. பா.

    17. தனித் திருப்புலம்பல் (2790 - 2793)


    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2790 திங்கள் விளங்கும் சடைத்தருவைத் தீம்பாற் சுவையைச் செந்தேனைச்
    செங்கை மருவும் செழுங்கனியைச் சீரார் முக்கட் செங்கரும்பை
    மங்கை மலையாள் மணந்தபெரு வாழ்வைப் பவள மலைதன்னை
    எங்கள் பெருமான் தனைஅந்தோ என்னே எண்ணா திருந்தேனே. ..1
    2791 அன்பர் இதய மலர்க்கோயில் அமர்ந்த பரமா னந்தத்தைத்
    துன்பம் அகலச் சுகமளிக்கும் தூய துணையைச் சுயஞ்சுடரை
    வன்ப ரிடத்தின் மருவாத மணியை மணியார் மிடற்றானை
    இன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணா திருந்தேனே. ..2
    2792 ஒருமைப் பயனை ஒருமைநெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப்
    பெருமைக் கதியைப் பசுபதியைப் பெரியோர் எவர்க்கும் பெரியோனை
    அருமைக் களத்தில் கருமைஅணி அம்மான் தன்னை எம்மானை
    இருமைப் பயனுந் தருவானை என்னே எண்ணா திருந்தேனே. ..3
    2793 கறையோர் கண்டத் தணிந்தருளும் கருணா நிதியைக் கண்ணுதலை
    மறையோன் நெடுமாற் கரியசிவ மலையை அலையில் வாரிதியைப்
    பொறையோர் உள்ளம் புகுந்தொளிரும் புனித ஒளியைப் பூரணனாம்
    இறையோன் தன்னை அந்தோநான் என்னே எண்ணா திருந்தேனே. ..4
    திருச்சிற்றம்பலம்
    ---------------------------

    18. பரம ராசியம் (2794 -2795)


    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2794 விதிஎ லாம்விலக் கெனவிலக் கிடுவேன்
    விலக்கெ லாங்கொண்டு விதிஎன விதிப்பேன்
    நிதிஎ லாம்பெற நினைத்தெழு கின்றேன்
    நிலமெ லாங்கொளும் நினைப்புறு கின்றேன்
    எதிஎ லாம்வெறுத் திட்டசிற் றூழை
    இன்பெ லாங்கொள எண்ணிநின் றயர்வேன்
    பதிஎ லாங்கடந் தெவ்வணம் உய்வேன்
    பரம ராசியப் பரம்பரப் பொருளே. ..1
    2795 செடிய னேன்கடுந் தீமையே புரிவேன்
    தெளிவி லேன்மனச் செறிவென்ப தறியேன்
    கொடிய னேன்கொடுங் கொலைபயில் இனத்தேன்
    கோள னேன்நெடு நீளவஞ் சகனேன்
    அடிய னேன்பிழை அனைத்தையும் பொறுத்துன்
    அன்பர் தங்களோ டின்புற அருள்வாய்
    படிஅ னேகமுங் கடந்தசிற் சபையில்
    பரம ராசியப் பரம்பரப் பொருளே. ..2
    திருச்சிற்றம்பலம்

    ----------------------------

    19. திருப்புகழ்ச்சி (2796 - 2798)


    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2796 திருவுளந் தெரியேன் திகைப்புறு கின்றேன்
    சிறியரிற் சிறியனேன் வஞ்சக்
    கருவுளக் கடையேன் பாவியேன் கொடிய
    கன்மனக் குரங்கனேன் அந்தோ
    வெருவுறு கின்றேன் அஞ்சல்என் றின்னே
    விரும்பிஆட் கொள்ளுதல் வேண்டும்
    மருவுமா கருணைப் பெருங்கடல் அமுதே
    வள்ளலே என்பெரு வாழ்வே. . .1
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2797 தாயும் தந்தையும் தெய்வமும் குருவும்
    தாங்கு கின்றதோர் தலைவனும் பொருளும்
    ஆயும் இன்பமும் அன்பும்மெய் அறிவும்
    அனைத்தும் நீஎன ஆதரித் திருந்தேன்
    ஏயும் என்னள விரக்கம்ஒன் றிலையேல்
    என்செய் வேன்இதை யார்க்கெடுத் துரைப்பேன்
    சேயும் நின்னருள் நசைஉறுங் கண்டாய்
    தில்லை மன்றிடைத் திகழ்ஒளி விளக்கே. ..2
    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2798 அருள்பழுத் தோங்கும் கற்பகத் தருவே
    அருண்மருந் தொளிர்குணக் குன்றே
    அருள்எனும் அமுதந் தரும்ஒரு கடலே
    அருட்கிர ணங்கொளும் சுடரே
    அருள்ஒளி வீசும் அரும்பெறன் மணியே
    அருட்சுவை கனிந்தசெம் பாகே
    அருள்மணம் வீசும் ஒருதனி மலரே
    அருண்மய மாம்பர சிவமே. ..3
    திருச்சிற்றம்பலம்

    --------------------------------

    20. திருமருந்தருள் நிலை (2799 -2800)


    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2799 பனகஅணைத் திருநெடுமால் அயன்போற்றப் புலவரெலாம் பரவ ஓங்கும்
    கனகமணி அம்பலத்தே பெரியமருந் தொன்றிருக்கக் கண்டேன் கண்டேன்
    அனகநடத் ததுசச்சி தானந்த வடிவதுபே ரருள்வாய்ந் துள்ள
    தெனகமமர்ந் திருப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா. ..1
    2800 திருநெடுமால் அயன்தேடத் துரியநடு ஒளித்ததெனத் தெளிந்தோர்சொல்லும்
    ஒருகருணை மருந்துதிரு அம்பலத்தே இருந்திடக்கண் டுவந்தேன் அந்தோ
    அருவுருவங் கடந்ததுபே ரானந்த வடிவதுநல் லருள்வாய்ந் துள்ள
    திருமையும்நன் களிப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா. . .2
    திருச்சிற்றம்பலம்

    -----------------------------

    21. திருவருள் விலாசம் (2801 - 2802)


    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2801 ஆண்டவன்நீ யாகில்உனக் கடியனும்நா னாகில்
    அருளுடையாய் இன்றிரவில் அருள் இறையாய் வந்து
    நீண்டவனே முதலியரும் தீண்டரிதாம் பொருளின்
    நிலைகாட்டி அடிமுடியின் நெறிமுழுதும் காட்டி
    வீண்டவனே காலையில்நீ விழித்தவுடன் எழுந்து
    விதிமுடித்துப் புரிதிஇது விளங்கும்எனப் புகல்வாய்
    தாண்டவனே அருட்பொதுவில் தனிமுதலே கருணைத்
    தடங்கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே. ..1
    2802 திருநெறிமெய்த் தமிழ்மறையாம் திருக்கடைக்காப் பதனால்
    திருவுளங்காட் டியநாளில் தெரிந்திலன் இச் சிறியேன்
    பெருநெறிஎன் உளத்திருந்து காட்டியநாள் அறிந்தேன்
    பிழைபடாத் தெய்வமறை இதுவெனப்பின் புணர்ந்தேன்
    ஒருநெறியில் எனதுகரத் துவந்தளித்த நாளில்
    உணராத உளவைஎலாம் ஒருங்குணர்ந்து தெளிந்தேன்
    தெருணெறிதந் தருளும்மறைச் சிலம்பணிந்த பதத்தாள்
    சிவகாம வல்லிமகிழ் திருநடத்தெள் ளமுதே. . .2
    திருச்சிற்றம்பலம்

    ----------------------

    22. சிவ சிதம்பர சங்கீர்த்தனம் (2803 - 2807)


    எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்(178)
    2803 உலக முஞ்சரா சரமும் நின்றுநின் றுலவு கின்றபே ருலகம் என்பதும்
    கலகம் இன்றிஎங் கணுநி றைந்தசிற் கனம்வி ளங்குசிற் ககனம் என்பதும்
    இலக ஒன்றிரண் டெனல்அ கன்றதோர் இணையில் இன்பமாம் இதயம் என்பதும்
    திலகம் என்றநங் குருசி தம்பரம் சிவசி தம்பரம் சிவசி தம்பரம். ..1
    2804 வரமு றுஞ்சுதந் தரசு கந்தரும் மனம டங்குசிற் கனந டந்தரும்
    உரமு றும்பதம் பெறவ ழங்குபே ரொளிந டந்தரும் வெளிவி டந்தரும்
    பரமு றுங்குணங் குறிக டந்தசிற் பரம மாகியே பரவு மாமறைச்
    சிரமு றும்பரம் பரசி தம்பரம் சிவசி தம்பரம் சிவசி தம்பரம். ..2
    2805 நித்தி யம்பரா பரநி ராதரம் நிர்க்கு ணஞ்சதா நிலய நிட்களம்
    சத்தி யம்கனா கனமி குந்ததோர் தற்ப ரம்சிவம் சமர சத்துவம்
    வித்தி யஞ்சுகோ தயநி கேதனம் விமலம் என்றுநால் வேத முந்தொழும்
    சித்தி யங்குசிற் கனசி தம்பரம் சிவசி தம்பரம் சிவசி தம்பரம். ..3
    2806 அருள்அ ளித்துமெய் யன்பர் தம்மைஉள் ளங்கை நெல்லிபோல் ஆக்கு கின்றதும்
    பொருள்அ ளித்துநான் மறையின் அந்தமே புகலு கின்றதோர் புகழ்அ ளிப்பதும்
    வெருள்அ ளித்திடா விமல ஞானவான் வெளியி லேவெளி விரவி நிற்பதாம்
    தெருள்அ ளிப்பதும் இருள்கெ டுப்பதும் சிவசி தம்பரம் சிவசி தம்பரம். ..4
    2807 பெத்த முஞ்சதா முத்தி யும்பெரும் பேத மாயதோர் போத வாதமும்
    சுத்த முந்தெறா வித்த முந்தரும் சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும்
    நித்த முந்தெரிந் துற்ற யோகர்தம் நிமல மாகிமெய்ந் நிறைவு கொண்டசிற்
    சித்த முஞ்செலாப் பரம ராசியம் சிவசி தம்பரம் சிவசி தம்பரம். ..5
    திருச்சிற்றம்பலம்
    ___________________________________________________________________________

    178. கட்டளைக் கலிப்பா. தொ. வே. 1, 2. ச. மு. க.
    எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம். ஆ. பா.

    --------------------------

    23. சிவகாமவல்லி துதி (2808 - 2812)


    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2808 அரங்காய மனமாயை அளக்கர் ஆழம்
    அறியாமல் காலிட்டிங் கழுந்து கின்றேன்
    இரங்காயோ சிறிதும்உயிர் இரக்கம் இல்லா
    என்மனமோ நின்மனமும் இறைவி உன்றன்
    உரங்காணும் அரசியற்கோல் கொடுங்கோல் ஆனால்
    ஓடிஎங்கே புகுந்தெவருக் குரைப்ப தம்மா
    திரங்காணாப் பிள்ளைஎனத் தாய்வி டாளே
    சிவகாம வல்லிஎனும் தெய்வத் தாயே. ..1
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2809 தனத்தால் இயன்ற தனிச்சபையில் நடிக்கும் பெருமான் தனக்கன்றே
    இனத்தால் உயர்ந்த மணமாலை இட்டுக் களித்த துரைப்பெண்ணே
    மனத்தான் விளங்கும் சிவகாம வல்லிக் கனியே மாலொடும்ஓர்
    அனத்தான் புகழும் அம்மேஇவ் வடியேன் உனக்கே அடைக்கலமே. ..2
    2810 திருவே திகழுங் கலைமகளே திருவே மலையான் திருமகளே
    உருவே இச்சை மயமேமெய் உணர்வின் வணமே உயர்இன்பக்
    குருவே ஆதித் தனித்தாயே குலவும் பரையாம் பெருந்தாயே
    மருவே மலரே சிவகாம வல்லி மணியே வந்தருளே. ..3
    2811 அருளே அறிவே அன்பேதெள் ளமுதே மாதர் அரசேமெய்ப்
    பொருளே தெருளே மாற்றறியாப் பொன்னே மின்னே பூங்கிளியே
    இருளேய் மனத்தில் எய்தாத இன்பப் பெருக்கே இவ்வடியேன்
    மருளே தவிர்த்த சிவகாம வல்லி நினக்கே வந்தனமே. ..4
    கட்டளைக் கலித்துறை
    2812 தருவாய் இதுநல் தருணங்கண் டாய்என்னைத் தாங்கிக்கொண்ட
    குருவாய் விளங்கு மணிமன்ற வாணனைக் கூடிஇன்ப
    உருவாய்என் உள்ளத்தின் உள்ளே அமர்ந்துள்ள உண்மைஎலாம்
    திருவாய் மலர்ந்த சிவகாம வல்லிநின் சீர்அருளே. ..5
    திருச்சிற்றம்பலம்

    ----------------------------

    24. சிவ பரம்பொருள் (2813 -2816)


    கலிநிலைத் துறை
    2813 உருத்தி ரன்திரு மால்அயன் ஒப்பமுக் குணமாய்
    இருத்தல் இன்றிஅக் குணங்களை என்றும்ஆண் டருளுங்
    கருத்தன் ஆகையிற் குணேசன்அக் குணவிகா ரத்திற்
    பொருத்த மின்மையன் ஆகையால் புகல்குண ரகிதன். ..1
    2814 களங்க அக்குணம் கடந்திருத் தலில்குணா தீதன்
    வளங்கொ ளத்தகும் உலகெலாம் மருவிநிற் றலினால்
    விளங்கு விச்சுவ வியாபிஇவ் விசுவத்தை யாண்டு
    துளங்கு றாநலந் தோற்றலின் விச்சுவ கருத்தன். ..2
    2815 வெய்ய னாய்உல கழித்தலின் விசுவசங் காரி
    பைய மேலெனப் படுவன பலவற்றின் மேலாம்
    ஐயன் ஆதலிற் பராபர னாம்எனப் பட்ட
    செய்ய னாகிய சிவபிரான் ஒருவனுண் டமரீர். ..3
    2816 உய்வ தாம்இது நம்குரு வாணையொன் றுரைப்பேன்
    சைவ மாதிசித் தாந்தத்து மறைமுடித் தலத்தும்
    நைவ தின்றிஆங் கதுவது வாயது நமது
    தெய்வ மாகிய சிவபரம் பொருளெனத் தெளிவீர். . .4
    திருச்சிற்றம்பலம்

    -----------------------

    25. நடராஜ அலங்காரம் (2817 -2819)


    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2817 இரண்டே காற்கை முகந்தந்தீர் இன்ப நடஞ்செய் பெருமானீர்
    இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னே அடிகள் என்றுரைத்தேன்
    இரண்டே காற்கை முகம்புடைக்க இருந்தாய் எனைக்கென் றிங்கேநீ
    இரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே.(179) ..1
    2818 இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னை உடையீர் அம்பலத்தீர்
    இரண்டே காற்கை முகந்தந்தீர் என்னை இதுதான் என்றுரைத்தேன்
    இரண்டே காற்கை முகங்கொண்டிங் கிருந்த நீயும் எனைக்கண்டே
    இரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் தோழி இவர்வாழி.(180) ..2
    2819 ஆடுங் கருணைத் திருநடத்தீர் ஆடும் இடந்தான் யாதென்றேன்
    பாடுந் திருவுஞ் சவுந்தரமும் பழமுங் காட்டும் இடமென்றார்
    நாடும் படிநன் கருளுமென்றேன் நங்காய் முன்பின் ஒன்றேயாய்
    ஈடுந் தியபன் னடுவுளதால் என்றார் தோழி இவர்வாழி.(181) ..3
    திருச்சிற்றம்பலம்
    ___________________________________________________________________________

    179. பதவுரை : இன்பம் - பேரின்பம் தருவதாகிய, நடஞ்செய் - திருநடனத்தைப் புரியா நின்ற, பெருமானீர் - பெருமானாகிய நீர், இரண்டே - இரண்டேயாகிய, காற்கு - பாதங்களையுடைய எனக்கு, ஐ - அழகிய, முகம் - முகம் ஒன்றினை, தந்தீர் - கொடுத்தீர், இங்ஙனம் இருக்க, இரண்டே காற்கு - இரண்டு பாதாம்புயங்களுக்கு, ஐமுகம் - பஞ்சமுகங்களை, கொண்டீர் - கொண்ட நீராக இருக்கின்றீர், என்னே - யாதுபற்றி, அடிகள் - அடிகளே, என்றுரைத்தேன் - எனப் புகன்றேன். அதற்கு மன்றில் நின்றார் - அம்பலத்தின் கண்ணின்ற இவர் அடியாளைக் கண்ணுற்று, இரண்டே கால் - இரண்டு காலாகப் பெற்ற நீ, கைமுகம் புடைக்க விருந்தாய் - கைத்த முகம் பெருக்கக் காட்டினை, எனைக்கென்று - யாதுபற்றி என வினவி, இங்கே நீ - இப்போது இவ்விடத்து, இரண்டே காற்கு - இரு காலாகிய அரை ( அல்குலுக்கு இன்பம் பெருக்க எண்ணி ) ஐமுகம் கொண்டாய் என்றார் - சுமுகங் கொண்டனை எனப் புகல்கின்றனர். ஏ! தோழி ! இஃது என் ? என வினவியது. - ச.மு.க.

    180. பதவுரை : இரண்டேகாற்கு - இருவினை வழி செல்லாதவர்களுக்கு, ஐமுகம் - ஆசாரிய முகத்தினை, கொண்டனை - கொண்ட நீராயிருக்கின்றீர். என்னை - அடியாளை, உடையீர் - உடையவரே, அம்பலத்தீர் - திருவம்பலத்தில் நடிக்கின்றவரே, இரண்டேகாற்கு - சூரியகலை சந்திரகலையாகிய வாசியனுபவத்திற்கு, ஐ - அழகிய, முகந்தந்நீர் - முகத்தினைத் தந்தவரே, என்னை இது தானென்று - இஃது என்ன விஷயத்திற்கு என்று, உரைத்தேன் - செப்பினேன். அதற்கு அன்னார், இரண்டே கால், கை, முகங் கொண்டிருந்த நீயும் - இரண்டு காலும், இருகையும், முகமும் அடையப் பெற்றிரா நின்ற நீயும், எனைக் கண்டே - நம்மைத் தரிசித்த தக்ஷணம் நீ முன் உரைத்த வண்ணமே, இரண்டேகாற்கு - வாசிக்கு, ஐமுகங்கொண்டாய் - அழகிய முகத்தினை அனுபவ இடமாகக் கொண்டு விட்டனை என்கின்றனர் தோழி, இன்னார் நீடுழி வாழ்க எனத் தலைவி வாழ்த்தியதாகக் கொள்க.
    இரண்டேகாற்கை - தமிழில் எழுதினால் இரண்டு (உ), கால் (வ), கை : உவகை.
    இரண்டேகாற் கைமுகந் தந்தீர் என்றதற்கு, விநாயகருக்கு கை - துதிக்கையுடைய முகத்தினைத் தந்தீர் எனப் பொருள் கூறுவாரும் உளர். தலைவி தலைவருக்குள் நடந்த அலங்கார விவகாரத்துள் விநாயகரைப் பற்றிக் கூறுதல் அவ்வளவு விசேட மன்றெனக் கொள்க.

    181. குறிப்பு : ஆடுமிடம் - நடனஞ் செய்யுமிடம், பாடும் - வேதாகமங்களால் புகழப்படும், திருவும் - பொன் என்னுஞ் சொல்லும், சவுந்தரமும் - அழகு, அழகுக்குப் பிரதிபதமாய அம் என்னும் சொல்லும், பழமும் - (பழம் = பலம் வடமொழி ) - பலம் என்னும் சொல்லும் சேர்ந்தால், பொன்னம்பலம் ஆகிறது. முன்பின் ஒன்றேயாய் - முன்னும் பின்னும் ஒரு சொல்லாகிய அம், பல் நடு வுளது - பல் என்னுஞ் சொல் நடுவுளது. அம்+பல்+அம் - அம்பலம், ஦ ச. மு. க.

    ------------------------

    26. பாங்கிமார் கண்ணி (2820 -- 2846)


    சிந்து
    2820 அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமா ரே - அவர்
    ஆட்டங்கண்டு நாட்டங்கொண்டேன் பாங்கிமாரே. ..1
    2821 ஆடுகின்ற சேவடிமேற் பாங்கிமா ரே - மிக
    ஆசைகொண்டு வாடுகின்றேன் பாங்கிமாரே. ..2
    2822 இன்பவடி வாய்ச்சபையிற் பாங்கிமா ரே - நட
    மிட்டவர்மே லிட்டம்வைத்தேன் பாங்கிமாரே. ..3
    2823 ஈனவுடற் கிச்சைவையேன் பாங்கிமா ரே - நட
    னேசர்தமை யெய்தும்வண்ணம் பாங்கிமாரே. . .4
    2824 உத்தமர்பொன் னம்பலத்தே பாங்கிமா ரே - இன்ப
    உருவாகி ஓங்குகின்றார் பாங்கிமாரே. ..5
    2825 ஊனவுல கைக்கருதேன் பாங்கிமா ரே - மன்றில்
    உத்தமருக் குறவாவேன் பாங்கிமாரே. ..6
    2826 கற்பனையெல் லாங்கடந்தார் பாங்கிமா ரே - என்றன்
    கற்பனைக்குட் படுவாரோ பாங்கிமாரே. ..7
    2627 கண்டிலர்நான் படும்பாடு பாங்கிமா ரே - மூன்று
    கண்ணுடையா ரென்பாரையோ பாங்கிமாரே. ..8
    2828 கன்மனமெல் லாங்கரைப்பார் பாங்கிமா ரே - மனங்
    கரையாரென் னளவிலே பாங்கிமாரே. ..9
    2829 கள்ளமொன்று மறியேனான் பாங்கிமா ரே - என்னைக்
    கைவிடவுந் துணிவாரோ பாங்கிமாரே. ..10
    2830 கற்பழித்துக் கலந்தாரே பாங்கிமா ரே - இன்று
    கைநழுவ விடுவாரோ பாங்கிமாரே. ..11
    2831 கண்டவரெல் லாம்பழிக்கப் பாங்கிமா ரே - என்றன்
    கன்னியழித் தேயொளித்தார் பாங்கிமாரே. ..12
    2832 காமனைக்கண் ணாலெரித்தார் பாங்கிமா ரே - என்றன்
    காதலைக்கண் டறிவாரோ பாங்கிமாரே. ..13
    2833 காவலையெல் லாங்கடந்து பாங்கிமா ரே - என்னைக்
    கைகலந்த கள்ளரவர் பாங்கிமாரே. ..14
    2834 காணவிழைந் தேனவரைப் பாங்கிமா ரே - கொண்டு
    காட்டுவாரை யறிந்திலேன் பாங்கிமாரே. ..15
    2835 கிட்டவர வேண்டுமென்றார் பாங்கிமா ரே - நான்
    கிட்டுமுன்னே யெட்டநின்றார் பாங்கிமாரே. ..16
    2836 கின்னரங்கே ளென்றிசைத்தார் பாங்கிமா ரே - நான்
    கேட்பதன்முன் சேட்படுத்தார் பாங்கிமாரே. ..17
    2837 கிள்ளையைத்தூ தாவிடுத்தேன் பாங்கிமா ரே - அது
    கேட்டுவரக் காணேனையோ பாங்கிமாரே. ..18
    2838 கீதவகை பாடிநின்றார் பாங்கிமா ரே - அது
    கேட்டுமதி மயங்கினேன் பாங்கிமாரே. ..19
    2839 கீழ்மைகுறி யாமலென்னைப் பாங்கிமா ரே - மனக்
    கேண்மைகுறித் தாரேயன்று பாங்கிமாரே. ..20
    2840 கீடமனை யேனெனையும் பாங்கிமா ரே - அடிக்
    கேயடிமை கொண்டாரன்று பாங்கிமாரே. ..21
    2841 குற்றமெல்லாங் குணமாகப் பாங்கிமா ரே - கொள்ளுங்
    கொற்றவரென் கொழுநர்காண் பாங்கிமாரே. ..22
    2842 குற்றமொன்றுஞ் செய்தறியேன் பாங்கிமா ரே - என்னைக்
    கொண்டுகுலம் பேசுவாரோ பாங்கிமாரே. ..23
    2843 குஞ்சிதப்பொற் பாதங்கண்டாற் பாங்கிமா ரே - உள்ள
    குறையெல்லாந் தீருங்கண்டீர் பாங்கிமாரே. . .24
    2844 கூற்றுதைத்த பாதங்கண்டீர் பாங்கிமா ரே - நங்கள்
    குடிக்கெல்லாங் குலதெய்வம் பாங்கிமாரே. ..25
    2845 கூறரிய பதங்கண்டு பாங்கிமா ரே - களி
    கொண்டுநிற்க விழைந்தேனான் பாங்கிமாரே. ..26
    2846 கூடல்விழைந் தேனவரைப் பாங்கிமா ரே - அது
    கூடும்வண்ணம் கூட்டிடுவீர் பாங்கிமாரே. ..27
    திருச்சிற்றம்பலம்

    --------------------------

    27. வெண்ணிலாக் கண்ணி (2847 - 2869)


    சிந்து
    2847 தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே - ஒரு
    தந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே. ..1
    2848 நாதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - அங்கே
    நானும்வர வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ..2
    2849 சச்சிதானந் தக்கடலில் வெண்ணிலா வே - நானுந்
    தாழ்ந்துவிழ வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ..3
    2850 இராப்பகலில் லாவிடத்தே வெண்ணிலா வே - நானும்
    இருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலா வே. ..4
    2851 தேசுநிற மாய்நிறைந்த வெண்ணிலா வே - நானுஞ்
    சிவமயம தாய்விழைந்தேன் வெண்ணிலா வே. ..5
    2852 போதநடு வூடிருந்த வெண்ணிலா வே - மலப்
    போதமற வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ..6
    2853 ஆருமறி யாமலிங்கே வெண்ணிலா வே - அரு
    ளாளர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே. ..7
    2854 அந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலா வே - யெங்கள்
    ஐயர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே. ..8
    2855 வேதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - மல
    வேதையுள வேதுசொல்லாய் வெண்ணிலா வே. ..9
    2856 குண்டலிப்பால் நின்றிலங்கும் வெண்ணிலா வே - அந்தக்
    குண்டலிப்பால் வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ..10
    2857 ஆதியந்த மென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
    ஆதியந்த மாவதென்ன வெண்ணிலா வே. ..11
    2858 வித்திலாம லேவிளைந்த வெண்ணிலா வே - நீதான்
    விளைந்தவண்ண மேதுசொல்லாய் வெண்ணிலா வே. ..12
    2859 முப்பொருளு மொன்றதென்பார் வெண்ணிலா வே - அந்த
    மூன்றுமொன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலா வே. . .13
    2860 நானதுவாய் நிற்கும்வண்ணம் வெண்ணிலா வே - ஒரு
    ஞானநெறி சொல்லுகண்டாய் வெண்ணிலா வே. ..14
    2861 ஞானமய மாய்விளங்கும் வெண்ணிலா வே - என்னை
    நானறியச் சொல்லுகண்டாய் வெண்ணிலா வே. ..15
    2862 வாசிவாசி யென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
    வாசியென்ன பேசுகண்டாய் வெண்ணிலா வே. ..16
    2863 ஐந்தலைப்பாம் பாட்டுகின்றார் வெண்ணிலா வே - அவர்
    அம்பலத்தில் நின்றதென்ன வெண்ணிலா வே. ..17
    2864 ஓரெழுத்தி லைந்துண்டென்பார் வெண்ணிலா வே - அது
    ஊமையெழுத் தாவதென்ன வெண்ணிலா வே. ..18
    2865 அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
    ஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே. ..19
    2866 அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
    ஆடும்வகை எப்படியோ வெண்ணிலா வே. ..20
    2867 அணுவிலணு வாயிருந்தார் வெண்ணிலா வே - எங்கும்
    ஆகிநின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே. ..21
    2868 அண்டபகி ரண்டமெல்லாம் வெண்ணிலா வே - ஐயர்
    ஆட்டமென்று சொல்வதென்ன வெண்ணிலா வே. ..22
    2869 அம்பரத்தி லாடுகின்றார் வெண்ணிலா வே - என்னை
    ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலா வே. ..23
    திருச்சிற்றம்பலம்

    -----------------------

    28. முறையீட்டுக் கண்ணி (2870 - 2938)


    தாழிசை
    2870 பற்று நினைத்தெழுமிப் பாவிமனத் தீமையெலாம்
    உற்று நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ..1
    2871 எள்ளேத நின்னிடத்தே எண்ணுகின்ற தோறுமதை
    உள்ளே நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ..2
    2872 துன்னுகின்ற தீமைநின்பாற் சூழ்ந்துரைக்குந் தோறுமதை
    உன்னுகின்ற போதிலெனக் கூடுருவிப் போகுதடா. . .3
    2873 எள்ளுகின்ற தீமைநின்பா லெண்ணுகின்ற தோறுமதை
    உள்ளுகின்ற போதிலெனக் கூடுருவிப் போகுதடா. ..4
    2874 மிக்க நிலைநிற்க விரும்பேன் பிழைகளெலாம்
    ஒக்க நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ..5
    2875 கோகோ வெனுங்கொடியேன் கூறியகுற் றங்களெலாம்
    ஓகோ நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ..6
    2876 பித்து மனக்கொடியேன் பேசியவன் சொல்லையெலாம்
    ஒத்து நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ..7
    2877 தேர்ந்து தெளியாச் சிறியவனேன் தீமையெலாம்
    ஓர்ந்து நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ..8
    2878 நிறுத்தி யறியே நிகழ்த்தியவன் சொல்லை
    உறுத்தி நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ..9
    2879 தோன்றி விரியுமனத் துட்டனேன் வன்பிழையை
    ஊன்றி நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ..10
    2880 எண்ணினைப்ப தின்றிநினை யெள்ளி யுரைத்ததனை
    உண்ணினைக்குந் தோறுமெனக் குள்ள முருகுதடா. ..11
    2881 கடையவனேன் வைதகடுஞ் சொன்னினைக்குந் தோறும்
    உடையவனே யென்னுடைய வுள்ள முருகுதடா. ..12
    2882 பித்தனெனத் தீமை பிதற்றியதெண் ணுந்தோறும்
    உத்தமனே யென்னுடைய வுள்ள முருகுதடா. ..13
    2883 மன்றுடையாய் நின்னருளை வைதகொடுஞ் சொற்பொருளில்
    ஒன்றை நினைக்கிலெனக் குள்ள முருகுதடா. ..14
    2884 வெருவாம லையோ விளம்பியசொல் லெல்லாம்
    ஒருவா நினைக்கிலெனக் குள்ள முருகுதடா. ..15
    2885 புலைக்கொடியேன் புன்சொற் புகன்றதெண் ணுந்தோறும்
    உலைக்கண்மெழு காகவென்ற னுள்ள முருகுதடா. ..16
    2886 ஈடில்பெருந் தாயி லினியாய்நின் றண்ணருட்பால்
    ஊடியசொல் லுன்னிலெனக் குள்ள முருகுதடா. ..17
    2887 புரைத்தமன வஞ்சப் புலையேன் றிருவருளை
    உரைத்தபிழை யெண்ணிலெனக் குள்ள முருகுதடா. ..18
    2888 நாடி நினையா நவையுடையேன் புன்சொலெலாம்
    ஓடி நினைக்கிலெனக் குள்ள முருகுதடா. ..19
    2889 வெப்பில் கருணை விளக்கனையா யென்பிழையை
    ஒப்பி நினைக்கிலெனக் குள்ள முருகுதடா. ..20
    2890 அஞ்சலென்றாய் நின்பால் அடாதமொழி பேசியதை
    அஞ்சிநினைக் கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ..21
    2891 மெய்யோர் சிறிதுமிலேன் வீண்மொழியா லூடியதை
    ஐயோ நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. . .22
    2892 இத்தா ரணிக்குளெங்கு மில்லாத தீமைசெய்தேன்
    அத்தா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ..23
    2893 பொய்யால் விரிந்த புலைமனத்தேன் செய்பிழையை
    ஐயா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ..24
    2894 இப்பாவி நெஞ்சா லிழுக்குரைத்தே னாங்கதனை
    அப்பாநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ..25
    2895 எண்ணாக் கொடுமையெலா மெண்ணியுரைத் தேனதனை
    அண்ணா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ..26
    2896 வெம்மான் மனத்து வினையேன் புகன்றதெலாம்
    அம்மா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ..27
    2897 எச்சோடு மில்லா திழிந்தேன் பிழைகளெலாம்
    அச்சோநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ..28
    2898 வந்தோடி நைமனத்து வஞ்சகனேன் வஞ்சமெலாம்
    அந்தோநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ..29
    2899 ஓவாக் கொடியே னுரைத்த பிழைகளெலாம்
    ஆவா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ..30
    2900 கரைசேர வொண்ணாக் கடையேன் பிழையை
    அரைசேநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ..31
    2901 மருளுடையேன் வஞ்ச மனத்தீமை யெல்லாம்
    அருளுடையா யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ..32
    2902 ஈண்டவனேன் வன்சொல் இயம்பியதை யென்னுடைய
    ஆண்டவனே யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ..33
    2903 வற்புதனேன் வஞ்ச மனப்பிழையை மன்றாடும்
    அற்புதனே யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ..34
    2904 துன்புடையேன் புன்மொழிகள் தூற்றியதை யெவ்வுயிர்க்கும்
    அன்புடையா யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ..35
    2905 கொதிக்கின்ற வன்மொழியாற் கூறியதை யையோ
    மதிக்கின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ..36
    2906 சினங்கொண்ட போதெல்லாஞ் செப்பிய வன்சொல்லை
    மனங்கொள்ளுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ..37
    2907 செய்தநன்றி யெண்ணாச் சிறியவனே னின்னருளை
    வைத்தெண்ணுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ..38
    2908 பொய்த்த மனத்தேன் புகன்றகொடுஞ் சொற்களெலாம்
    வைத்துநினைக் குந்தோறும் வாளிட் டறுக்குதடா. ..39
    2909 பொங்குகின்ற தீமை புகன்றதெலா மெண்ணியெண்ணி
    மங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ..40
    2910 ஊடுகின்ற சொல்லா லுரைத்ததனை யெண்ணியெண்ணி
    வாடுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ..41
    2911 உயங்குகின்றேன் வன்சொல் லுரைத்ததனை யெண்ணி
    மயங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ..42
    2912 சொல்விளைவு நோக்காதே சொன்னதெலா மெண்ணுதொறும்
    வல்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா. ..43
    2913 மேல்விளைவு நோக்காதே வேறுசொன்ன தெண்ணுதொறும்
    மால்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா. ..44
    2914 விஞ்சகத்தா லந்தோ விளம்பியதை யெண்ணுதொறும்
    வஞ்சகத்தே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா. ..45
    2915 விலங்குகின்ற நெஞ்ச விளைவையெண் ணுந்தோறும்
    மலங்குகின்றே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா. ..46
    2916 தூய்மையிலா வன்மொழியாற் சொன்னவெலா மெண்ணுதொறும்
    வாய்மையிலே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா. ..47
    2917 கலிக்கின்ற வஞ்சகக் கருத்தைக் கருதி
    வலிக்கின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. . .48
    2918 நீட்டுகின்ற வஞ்ச நெடுஞ்சொலெலா நெஞ்சகத்தே
    மாட்டுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ..49
    2919 பொருந்துகின்ற வஞ்சப் புதுமையெண்ணி யையோ
    வருந்துகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ..50
    2920 வெருவிக்கும் வஞ்ச வெறுஞ்சொலெலாம் நெஞ்சில்
    வருவிக்குந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ..51
    2921 ஊடும்போ துன்னை யுரைத்தவெலா நாயடியேன்
    நாடும்போ தெல்லாமென் னாடி நடுங்குதடா. ..52v
    2922 வாய்க்கடையா வன்சொல் வழங்கியவென் வன்மனத்தை
    நாய்க்கடையே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ..53
    2923 கன்றி யுரைத்த கடுஞ்சொற் கடுவையெலாம்
    நன்றியிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ..54
    2924 புன்மையினால் வன்சொற் புகன்றபுலைத் தன்மையெலாம்
    நன்மையிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ..55
    2925 ஊனெண்ணும் வஞ்ச வுளத்தா லுரைத்தவெலாம்
    நானெண்ணுந் தோறுமென்ற னாடி நடுங்குதடா. ..56
    2926 வஞ்சனையா லஞ்சாது வன்சொல் புகன்றவெலாம்
    நஞ்சனையே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ..57
    2927 கோணநெடு நெஞ்சக் குரங்காற் குதித்தவெலாம்
    நாணமிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ..58v
    2928 ஊனமிலா நின்னை யுரைத்தகொடுஞ் சொல்லையெலாம்
    ஞானமிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ..59
    2929 எற்றே மதியிலியே னெண்ணா துரைத்ததனைச்
    சற்றே நினைத்திடினுந் தாது கலங்குதடா. ..60
    2930 இனியேது செய்வே னிகழ்ந்துரைத்த சொல்லைத்
    தனியே நினைத்திடினுந் தாது கலங்குதடா. ..61
    2931 நாயனையே னெண்ணாம னலங்கியவன் சொல்லையெலாம்
    தாயனையா யெண்ணுதொறுந் தாது கலங்குதடா. ..62
    2932 நிற்குருகா வஞ்ச நினைவால் நினைத்தவெலாஞ்
    சற்குருவே யெண்ணுதொறுந் தாது கலங்குதடா. ..63
    2933 வெந்நரகில் வீழும் விளைவால் விளம்பியதை
    என்னரசே யெண்ணுதொறு மென்னை விழுங்குதடா. ..64
    2934 நன்கறியேன் வாளா நவின்ற நவையனைத்தும்
    என்குருவே யெண்ணுதொறு மென்னை விழுங்குதடா. ..65v
    2935 ஆவ தறியா தடியே னிகழ்ந்தகொடும்
    பாவ நினைக்கிற் பகீரென் றலைக்குதடா. ..66
    2936 வந்திப் பறியேன் வழங்கியவன் சொல்லையெலாம்
    சிந்திக் கிலுள்ளே திடுக்கிட் டழுங்குதடா. ..67
    2937 குற்ற நினைத்த கொடுஞ்சொலெலா மென்னுளத்தே
    பற்ற நினைக்கிற் பயமா யிருக்குதடா. ..68
    2938 எள்ளுகின்ற தீமை யெடுத்துரைத்தே னாங்கதனை
    விள்ளுகின்ற தோறு முள்ளம்வெந்து வெதும்புதடா. ..69
    திருச்சிற்றம்பலம்

    -------------------------

    29. திருவடிக் கண்ணி (2939 - 2949)


    தாழிசை
    2939 மின்னிடையாள் காண விளங்குமன்றி லாடுகின்றாய்
    என்னுடையா யுன்ற னிணையடிதான் நோவாதா. ..1
    2940 வன்னமுதே யின்ப மலியமன்றி லாடுகின்றாய்
    என்னமுதே யுன்ற னிணையடிதான் நோவாதா. ..2
    2941 நண்ணியமெய் யன்பர் நயக்கமன்றி லாடுகின்றாய்
    புண்ணியனே யுன்றனது பொன்னடிதான் நோவாதா. ..3
    2942 அன்பரின்பங் கொள்ளநட மம்பலத்தே யாடுகின்றாய்
    இன்புருவா முன்ற னிணையடிதான் நோவாதா. ..4
    2943 நூலுணர்வா நுண்ணுணர்வி னோக்கநட மாடுகின்றாய்
    மாலறியா வுன்றன் மலர்ப்பாதம் நோவாதா. ..5
    2944 எள்ளலற வம்பலத்தே யின்பநட மாடுகின்றாய்
    வள்ளலே யுன்றன் மலரடிதான் நோவாதா. ..6
    2945 சைவ நிலைத்துத் தழைத்தோங்க வாடுகின்றாய்
    தெய்வ மணியே திருவடிதான் நோவாதா. ..7
    2946 எல்லாரு மின்புற் றிருக்கநட மாடுகின்றாய்
    வல்லாரின் வல்லாய் மலர்ப்பாதம் நோவாதா. ..8
    2947 அவமே கழிந்தின்ப மன்பர்கொள வாடுகின்றாய்
    சிவமே நினது திருவடிதான் நோவாதா. ..9
    2948 தற்பரமா மன்றிற் றனிநடன மாடுகின்றாய்
    சிற்பரமே யுன்றன் திருமேனி நோவாதா. ..10
    2949 வில்வவேர் மாலை மிளிர்ந்தசைய வாடுகின்றாய்
    செல்வமே யுன்றன் திருமேனி நோவாதா. . .11
    திருச்சிற்றம்பலம்
    ------------------------

    30. பேரன்புக் கண்ணி (2950 - 2963)


    தாழிசை
    2950 கற்றதென்றுஞ் சாகாத கல்வியென்று கண்டுகொண்டுன்
    அற்புதச்சிற் றம்பலத்தி லன்புவைத்தேன் ஐயாவே. ..1
    2951 ஈடணைகள் நீக்கிநமக் கின்பளிக்கு மென்றுமன்றில்
    ஆடுந் திருவடிக்கே ஆசைவைத்தேன் ஐயாவே. ..2
    2952 நானந்த மெய்தா நலம்பெறவே யெண்ணிமன்றில்
    ஆனந்த நாடகத்துக் கன்புவைத்தேன் ஐயாவே. ..3
    2953 வாடலறச் சாகா வரங்கொடுக்கு மென்றுமன்றில்
    ஆடலடிப் பொன்மலர்க்கே அன்புவைத்தேன் ஐயாவே. ..4
    2954 பொற்புறவே பொன்றாப் பொருளளிக்கு மென்றுமன்றில்
    அற்புதப்பொற் சேவடிக்கே அன்புவைத்தேன் ஐயாவே. ..5
    2955 ஈனமறுத் தென்றும் இறவாமை நல்குமென்றே
    ஞானமணி மன்றிடத்தே நண்புவைத்தேன் ஐயாவே. ..6
    2956 ஓர்துணைநின் பொன்னடியென் றுன்னுகின்றே னுன்னையன்றி
    ஆர்துணையும் வேண்டேனென் அன்புடைய ஐயாவே. ..7
    2957 பூசைசெய்து பெற்றவுன்றன் பொன்னடிமே லன்றியயல்
    ஆசையொன்று மில்லையெனக் கன்புடைய ஐயாவே. ..8
    2958 இச்சைநின்மே லன்றியெனக் கெள்ளளவும் வேறுமொன்றில்
    இச்சையிலை நின்னாணை யென்னருமை ஐயாவே. ..9
    2959 எப்படிநின் னுள்ள மிருக்கின்ற தென்னளவில்
    அப்படிநீ செய்கவெனக் கன்புடைய ஐயாவே. . .10
    2960 எவ்வண்ணம் நின்கருத்திங் கென்னளவி லெண்ணியதோ
    அவ்வண்ணஞ் செய்கவெனக் கன்புடைய ஐயாவே. ..11
    2961 தேசுறுநின் றண்ணருளாந் தெள்ளமுதங் கொள்ளவுள்ளே
    ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே. ..12
    2962 மாசறுநின் பொன்னருளா மாமணிபெற் றாடவுள்ளே
    ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே. ..13
    2963 நாசமிலா நின்னருளாம் ஞானமருந் துண்ணவுள்ளே
    ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே. ..14
    திருச்சிற்றம்பலம்
    ---------------------

    31. நடேசர் கொம்மி (2964 -2970)


    சிந்து
    பல்லவி
    2964 கொம்மிய டிப்பெண்கள் கொம்மி யடி - இரு
    கொங்கைகு லுங்கவே கொம்மியடி. ..1
    பல்லவி எடுப்பு
    2965 நம்மை யாளும்பொன் னம்பல வாணனை
    நாடிக் கொம்மிய டியுங்க டி - பதம்
    பாடிக் கொம்மிய டியுங்கடி. கொம்மி ..1
    கண்ணிகள்
    2966 காம மகற்றிய தூய னடி - சிவ
    காம சவுந்தரி நேய னடி
    மாமறை யோதுசெவ் வாய னடி - மணி
    மன்றெனு ஞானவா காயனடி. கொம்மி ..1
    2967 ஆனந்தத் தாண்டவ ராஜ னடி - நமை
    ஆட்கொண் டருளிய தேஜ னடி
    வானந்த மாமலை மங்கை மகிழ் - வடி
    வாளன டிமண வாளனடி. கொம்மி ..2
    2968 கல்லைக் கனிவிக்குஞ் சுத்த னடி - முடி
    கங்கைக் கருளிய கர்த்த னடி
    தில்லைச்சி தம்பர சித்த னடி - தேவ
    சிங்கம டியுயர் தங்கமடி. கொம்மி ..3
    2969 பெண்ணொரு பால்வைத்த மத்த னடி - சிறு
    பிள்ளைக் கறிகொண்ட பித்த னடி
    நண்ணி நமக்கரு ளத்த னடி - மிக
    நல்லன டியெல்லாம் வல்லனடி. கொம்மி ..4
    2970 அம்பலத் தாடல்செய் ஐய னடி - அன்பர்
    அன்புக் கெளிதரு மெய்ய னடி
    தும்பை முடிக்கணி தூய னடி - சுயஞ்
    சோதிய டிபரஞ் சோதியடி. கொம்மி ..5
    ---------------------------

    32. தோழியர் உரையாடல் (2971 - 2976)


    தாழிசை
    2971 தண்மதி யொண்முகப் பெண்மணி யே - உன்னைத்
    தான்கொண்ட நாயக ராரே டி
    அண்மையிற் பொன்னணி யம்பலத் தாடல்செய்
    ஐய ரமுத ரழகரடி. ..1
    2972 செங்கயற் கண்மட மங்கைநல் லாய் - உன்றன்
    செங்கை பிடித்தவ ராரே டி
    அங்கய லாரன்று பொன்னம்ப லத்தெங்கள்
    ஆனந்தத் தாண்டவ ராஜனடி. ..2
    2973 கன்னற் சுவைமொழி மின்னிடை யாய் - உன்னைக்
    கன்னி யழித்தவ ராரே டி
    உன்னற் கரியபொன் னம்பலத் தாடல்செய்
    உத்தம ரானந்த சித்தரடி. ..3
    2974 தீமையி லாதபெண் மாமயி லே - உன்னைச்
    சேர்ந்து கலந்தவ ராரே டி
    தாமமு டிக்கணிந் தம்பலத் தேயின்பத்
    தாண்டவஞ் செய்யுஞ் சதுரரடி. ..4
    2975 அன்னந டைப்பெண்க ளாரமு தே - உன்னை
    அன்பிற் புணர்ந்தவ ராரே டி
    துன்ன லுடையின ரம்பலத் தேநின்ற
    தூய திருநட ராயரடி. ..5
    2976 காரள கப்பெண் சிகாமணி யே - உன்றன்
    கற்பை யழித்தவ ராரே டி
    பேரள வைக்கடந் தம்பலத் தேநின்ற
    பித்தர் பரானந்த நித்தரடி. ..6
    திருச்சிற்றம்பலம்
    ----------------------------

    33. தெண்டனிட்டேன் (2977 - 2985)


    சிந்து
    பல்லவி
    2977 தெண்டனிட்டே னென்று சொல்ல டி - சு வாமிக்குநான்
    தெண்டனிட்டே னென்று சொல்லடி. ..1
    பல்லவி எடுப்பு
    2978 தண்டலை விளங்குந் தில்லைத் தலத்திற்பொன் னம்பலத்தே
    கண்டவர் மயங்கவேடங் கட்டியாடு கின்றவர்க்கு தெண்ட ..1
    கண்ணிகள்
    2979 கற்பூர வாசம்வீசும் பொற்பாந்தி ருமுகத்தே
    கனிந்தபுன் னகையாடக் கருணைக்க டைக்கணாட
    அற்பார்பொன் னம்பலத்தே ஆனந்தத் தாண்டவம்
    ஆடிக்கொண் டேயென்னை ஆட்டங்கண் டாருக்கு தெண்ட ..1
    2980 இழிந்தாலு நம்மையிங்கே யேற்றுவா ரென்றடைந்தால்
    ஏற்றுவார் போலேபின்னு மிழியவைப் பாருக்குப்
    பழந்தான் நழுவிமெல்லப் பாலில் விழுந்ததென்னப்
    பசப்பிப் பசப்பியன்பர் பண்டம் பறிப்பவர்க்கு தெண்ட ..2
    2981 சுட்டதிரு நீறுபூசித் தொந்தோமென் றாடுவார்க்குத்
    தோன்றுதலை மாலையணி தோள்விளங்க வருவார்க்குப்
    பிட்டுக்காசைப் பட்டுமாறன் பிரம்படி பட்டவர்க்குப்
    பிள்ளைக்கறிக் காசைகொண்ட கள்ளத்தவ வேடருக்கு தெண்ட ..3
    2982 வாழ்ந்தாரை மேன்மேலும் வாழச்செய் பவருக்கு
    மாசுபறித் தவர்கையிற் காசுபறிக் கின்றவர்க்குத்
    தாழ்ந்தாரை யடிக்கடி தாழக்காண் பவருக்குத்
    தானாகி நானாகித் தனியேநின் றவருக்கு தெண்ட ..4
    2983 ஆதியந்த நடுவில்லா ஆனந்த நாடருக்கு
    அண்டருயிர் காத்தமணி கண்டசசி கண்டருக்குச்
    சோதிமய மாய்விளங்குந் தூயவடி வாளருக்குத்
    தொண்டர்குடி கெடுக்கவே துஜங்கட்டிக் கொண்டவர்க்கு தெண்ட ..5
    2984 பாட்டுக்காசைப் பட்டுமுன்னம் பரவைதன் வாயிலிற்போய்ப்
    பண்புரைத்துத் தூதனென்றே பட்டங்கட்டிக் கொண்டவர்க்கு
    வீட்டுக்காசைப் படுவாரை வீட்டைவிட்டுத் துரத்தியே
    வேட்டாண்டி யாயுலகில் ஓட்டாண்டி யாக்குவார்க்கு தெண்ட ..6
    2985 தாய்வறிற்றிற் பிறவாது தானே முளைத்தவர்க்குச்
    சாதிகுல மறியாது தாண்டவஞ்செய் கின்றவர்க்கு
    ஏய தொழிலருளு மென்பிராண நாயகர்க்கு
    ஏமாந்த வரையெல்லாம் ஏமாத்து மீசருக்கு ..7
    தெண்டனிட்டே னென்று சொல்ல டி - சு வாமிக்குநான்
    தெண்டனிட்டே னென்று சொல்ல டி.
    திருச்சிற்றம்பலம்
    ----------------------------

    34. இன்னந் தயவு வரவிலையா (2986 - 2992)


    சிந்து
    பல்லவி
    2986 இன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில்
    என்ன வர்மஞ் சொலையா. ..1
    கண்ணிகள்
    2987 அன்னம் பாலிக்குந்தில்லைப் பொன்னம் பலத்திலாடும்
    அரசே - அரசே - அரசேயென் றலறவும் இன்னந் ..1
    2988 சின்னஞ் சிறுவயதி லென்னை யடிமைகொண்ட
    சிவமே - சிவமே - சிவமேயென் றலறவும் இன்னந் ..2
    2989 முன்னம் பிழைபொறுத்தா யின்னம் பொறாதுவிட்டால்
    முறையோ - முறையோ - முறையோவென் றலறவும் இன்னந் ..3
    2990 தன்னை யறியாவென்னை யின்ன லுறச்செய்தாயே
    தகுமோ - தகுமோ - தகுமோவென் றலறவும் இன்னந் ..4
    2991 பண்டு மகிழ்ந்தெனையாட் கொண்டு கருணைசெய்த
    பரமே - பரமே - பரமேயென் றலறவும் இன்னந் ..5
    2992 கொண்டு குலம்பேசுவா ருண்டோ வுலகிலெங்கள்
    குருவே - குருவே - குருவேயென் றலறவும் ..6
    இன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில்
    என்ன வர்மஞ் சொலையா.
    திருச்சிற்றம்பலம்

    ------------------------------

    35. வினா விடை (2993 - 2995)


    கொச்சகக் கலிப்பா
    2993 ஆகமமு மாரணமு மரும்பொருளென் றொருங்குரைத்த
    ஏகவுரு வாகிநின்றா ரிவரார்சொல் தோழி
    மாகநதி முடிக்கணிந்து மணிமன்று ளனவரத
    நாகமணி மிளிரநட நவில்வார்காண் பெண்ணே. ..1
    தாழிசை
    2994 அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங்
    கனுபவ மாகின்ற தென்னடி தாயே
    தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
    திருநட இன்பம்என் றறியாயோ மகளே. ..2
    2995 அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங்
    கனுபவ மாகின்ற தென்னடி தாயே
    செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
    திருவருள் உருவம்என் றறியாயோ மகளே. ..3
    திருச்சிற்றம்பலம்

    ----------------------

    36. நற்றாய் கவன்றது (2996 - 3004)


    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    2996 திருவருட் புனிதை மகிழநின் றாடும் தில்லைமன் றழகனே என்பாள்
    மருவருட் கடலே மாணிக்க மலையே மதிச்சடை வள்ளலே என்பாள்
    இருவருக் கரிய ஒருவனே எனக்கிங் கியார்துணை நின்னலா தென்பாள்
    வெருவிஉட் குழைவாள் விழிகணீர் துளிப்பாள் வெய்துயிர்ப் பாள்என்றன் மின்னே. ..1
    2997 ஓடுவாள் தில்லைத் திருச்சிற்றம் பலம்என் றுருகுவாள் உணர்விலள் ஆகித்
    தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள்
    பாடுவாள் பதைப்பாள் பதறுவாள் நான் பெண்பாவி காண்பாவிகாண் என்பாள்
    வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்வினை யேன்பெற்ற மகளே. ..2
    2998 உலகெலாந் தழைப்பப்பொதுவினில் ஓங்கும் ஒருதனித் தெய்வம்என்கின்றாள்
    இலகுபே ரின்ப வாரிஎன் கின்றாள் என்னுயிர்க் கிறைவன்என் கின்றாள்
    அலகிலாக் கருணை அமுதன்என் கின்றாள் அன்பர்கட்கன்பன்என் கின்றாள்
    திலகவா ணுதலாள் இவ்வணம் புலம்பித் தியக்கமுற் றழுங்குகின் றாளே. ..3
    2999 திருஎலாம்அளிக்கும் தெய்வம்என் கின்றாள் திருச்சிற் றம்பலவன்என்கின்றாள்
    உருஎலாம் உடைய ஒருவன்என் கின்றாள் உச்சிமேல் கரங்குவிக் கின்றாள்
    கருஎலாங் கடந்தாங் கவன்திரு மேனி காண்பதெந் நாள்கொல்என் கின்றாள்
    மருஎலாம்மயங்கும் மலர்க்குழல் முடியாள் வருந்துகின்றாள்என்றன் மகளே. ..4
    3000 மின்இணைச் சடில விடங்கன்என் கின்றாள் விடைக்கொடி விமலன்என் கின்றாள்
    பொன்இணை மலர்த்தாள் புனிதன்என் கின்றாள் பொதுவிலே நடிப்பன்என் கின்றாள்
    என்இணை விழிகள் அவன்திரு அழகை என்றுகொல் காண்பதென் கின்றாள்
    துன்இணை முலைகள் விம்முற இடைபோல் துவள்கின்றாள் பசியபொற் றொடியே. ..5
    3001 கருங்களிற் றுரிபோர்த் தம்பலத் தாடும் கருணைஎங் கடவுள்என் கின்றாள்
    பெருங்களி துளும்ப வடவனத் தோங்கும் பித்தரில் பித்தன்என் கின்றாள்
    ஒருங்களி மிழற்றும் குழலினார் என்போல் உறுவரோ அவனைஎன்கின்றாள்
    தருங்களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என்அருந் தவளே. ..6
    3002 மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால் மதிப்பனோ பிறரைஎன்கின்றாள்
    வன்துயர் நீக்கும் அவன்திரு வடிவை மறப்பனோ கணமும்என் கின்றாள்
    ஒன்றுமில் லவன்என் றுரைக்கினும் எல்லாம் உடையவன்ஆகும்என்கின்றாள்
    பொன்றுதல் பிறழ்தல் இனியுறேன் என்றே பொற்றொடி பொங்குகின்றாளே. ..7
    3003 திருத்தகு தில்லைத் திருச்சிற்றம்பலத்தே தெய்வம்ஒன் றுண்டெமக்கென்பாள்
    பெருத்தகுங் குமப்பொற் கலசவாண் முலையார் பேசுக பலபல என்பாள்
    மருத்தகு குழலாள் மனமொழி உடலம் மற்றவும் அவன்கழற் கென்பாள்
    குருத்தகு குவளைக் கண்ணின்நீர் கொழிப்பாள் குதுகுலிப் பாள்பசுங் கொடியே. ..8
    3004 அம்பலத் தாடும் அழகனைக் காணா தருந்தவும் பொருந்துமோ என்பாள்
    கம்பமுற் றிடுவாள் கண்கள்நீர் உகுப்பாள் கைகுவிப் பாள்உளங் கனிவாள்
    வம்பணி முலைகள் இரண்டும்நோக் கிடுவாள் வள்ளலைப்பரிகிலீர் என்பாள்
    உம்பரன் தவஞ்செய் திடுமினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே. ..9
    திருச்சிற்றம்பலம்

    ----------------------------

    37. சல்லாப லகரி (3005 - 3006)


    கலிநிலைத்துறை (182)
    3005 சுந்தர நீறணி சுந்தரர் நடனத் தொழில்வல்லார்
    வந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதேநீ
    மந்தணம் இதுகேள் அந்தனம் இலநம் வாழ்வெல்லாம்
    அந்தரம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே. ..1
    3006 நம்பல மாம்என நன்மனை புக்கார் நடராஜர்
    எம்பல மாவீர் எம்பெரு மானீ ரேஎன்றேன்
    வம்பல மடவாய் எம்முடை இன்ப வாழ்வெல்லாம்
    அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே. ..2
    திருச்சிற்றம்பலம்
    ___________________________________________________________________________

    182. கலிச்சந்த விருத்தம். தொ. வே. 1, 2. ச. மு. க. கலிநிலைத்துறை. ஆ. பா.
    ---------------------

    38. தலைமகளின் முன்ன முடிபு (3007 - 3016)


    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    3007 வெறுத்துரைத்தேன் பிழைகளெலாம் பொறுத்தருளல் வேண்டும்
    விளங்கறிவுக் கறிவாகி மெய்ப்பொதுவில் நடிப்போய்
    கறுத்துரைத்தார் தமக்கும்அருள் கனிந்துரைக்கும் பெரிய
    கருணைநெடுங் கடலேமுக் கண்ணோங்கு கரும்பே
    மறுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
    மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பறியேன்
    செறுத்துரைத்த உரைகளெலாம் திருவருளே என்று
    சிந்திப்ப தல்லாமல் செய்வகைஒன் றிலனே. ..1
    3008 மிகுத்துரைத்தேன் பிழைகளெலாம் சகித்தருளல் வேண்டும்
    மெய்யறிவின் புருவாகி வியன்பொதுவில் நடிப்போய்
    தொகுத்துரைத்த மறைகளும்பின் விரித்துரைத்தும் காணாத்
    துரியநடு வேஇருந்த பெரியபரம் பொருளே
    பகுத்துரைத்த பயன்உரைக்கோர் பொருளாகி விளங்கும்
    பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன்
    வகுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
    மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பிலனே. .2
    3009 முன்னவனே சிறியேன்நான் சிறிதும்அறி யாதே
    முனிந்துரைத்த பிழைபொறுத்துக் கனிந்தருளல் வேண்டும்
    என்னவனே என்துணையே என்உறவே என்னை
    ஈன்றவனே என்தாயே என்குருவே எனது
    மன்னவனே என்னுடைய வாழ்முதலே என்கண்
    மாமணியே மணிமிடற்றோர் மாணிக்க மலையே
    அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே
    ஆறணிந்த சடையாய்யான் வேறுதுணை இலனே. . .3
    3010 சினந்துரைத்தேன் பிழைகளெலாம் மனம்பொறுத்தல் வேண்டும்
    தீனதயா நிதியேமெய்ஞ் ஞானசபா பதியே
    புனைந்துரைப்பார் அகத்தொன்றும் புறத்தொன்றும் நினைத்தே
    பொய்யுலகர் ஆங்கவர்போல் புனைந்துரைத்தேன் அலன்நான்
    இனந்திருந்தி எனையாட்கொண் டென்னுள்அமர்ந் தெனைத்தான்
    எவ்வுலகும் தொழநிலைமேல் ஏற்றியசற் குருவே
    கனந்தருசிற் சுகஅமுதம் களித்தளித்த நிறைவே
    கருணைநடத் தரசேஎன் கண்ணிலங்கு மணியே. ..4
    3011 ஊடுதற்கோர் இடங்காணேன் உவக்கும்இடம் உளதோ
    உன்னிடமும் என்னிடமும் ஓர்இடம்ஆ தலினால்
    வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமை யாலும்
    மனம்பிடியா மையினாலும் சினந்துரைத்தேன் சிலவே
    கூடுதற்கு வல்லவன்நீ கூட்டிஎனைக் கொண்டே
    குலம்பேச வேண்டாம்என் குறிப்பனைத்தும் அறிந்தாய்
    நாடுதற்கிங் கென்னாலே முடியாது நீயே
    நாடுவித்துக் கொண்டருள்வாய் ஞானசபா பதியே. ..5
    3012 என்னுளம்நீ கலந்துகொண்டாய் உன்னுளம்நான் கலந்தேன்
    என்செயல்உன் செயல்உன்றன் இருஞ்செயல்என் செயலே
    பின்னுளநான் பிதற்றல்எலாம் வேறுகுறித் தெனைநீ
    பிழைஏற்ற நினைத்திடிலோ பெருவழக்கிட் டிடுவேன்
    அன்னையினும் தயவுடையாய் அப்பன்எனக் கானாய்
    அன்றியும்என் ஆருயிருக் காருயிராய் நிறைந்தாய்
    மன்னுமணிப் பொதுநடஞ்செய் மன்னவனே கருணை
    மாநிதியே எனக்கருள்வாய் மனக்கலக்கந் தவிர்த்தே. ..6
    3013 எணங்குறியேன் இயல்குறியேன் ஏதுநினை யாதே
    என்பாட்டுக் கிருந்தேன்இங் கெனைவலிந்து நீயே
    மணங்குறித்துக் கொண்டாய்நீ கொண்டதுதொட் டெனது
    மனம்வேறு பட்டதிலை மாட்டாமை யாலே
    கணங்குறித்துச் சிலபுகன்றேன் புகன்றமொழி எனது
    கருத்தில்இலை உன்னுடைய கருத்தில்உண்டோ உண்டேல்
    குணங்குறிப்பான் குற்றம்ஒன்றுங் குறியான்என் றறவோர்
    கூறிடும்அவ் வார்த்தைஇன்று மாறிடுமே அரசே. ..7
    3014 மனம்பிடியா மையினாலோ மாட்டாமை யாலோ
    மறதியினா லோஎனது வருத்தமத னாலோ
    தினம்பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர்மேல்
    சினத்தாலோ எதனாலோ சிலபுகன்றேன் இதனைச்
    சினம்பிடியாத் தேவர்திரு வுளம்பிடியா தெனவே
    சிந்தைகளித் திருக்கின்றேன் திருவுளத்தை அறியேன்
    இனம்பிடியா மையும்உண்டோ உண்டெனில்அன் புடையார்
    ஏசல்புகழ் பேசல்என இயம்புதல்என் உலகே. ..8
    3015 நாயகரே உமதுவசம் நான்இருக்கின் றதுபோல்
    நாடியதத் துவத்தோழி நங்கையர்என் வசத்தே
    மேயவர்ஆ காமையினால் அவர்மேல்அங் கெழுந்த
    வெகுளியினால் சிலபுகன்றேன் வேறுநினைத் தறியேன்
    தூயவரே வெறுப்புவரில் விதிவெறுக்க என்றார்
    சூழவிதித் தாரைவெறுத் திடுதல்அவர் துணிவே
    தீயவர்ஆ யினும்குற்றம் குறியாது புகன்றால்
    தீமொழிஅன் றெனத்தேவர் செப்பியதும் உளதே. ..9
    3016 குற்றம்ஒரு சிறிதெனினும் குறித்தறியேன் வேறோர்
    குறைஅதனால் சிலபுகன்றேன் குறித்தறியேன் மீட்டும்
    சற்றுமனம் வேறுபட்ட தில்லைகண்டீர் எனது
    சாமிஉம்மேல் ஆணைஒரு சதுரும்நினைத் தறியேன்
    பெற்றவளும் உற்றவரும் சுற்றமும்நீர் என்றே
    பிடித்திருக்கின் றேன்பிறிதோர் வெடிப்பும்உரைத் தறியேன்
    இற்றைதொடுத் தென்அளவில் வேறுநினை யாதீர்
    என்னுடைய நாயகரே என்ஆசை இதுவே. ..10
    திருச்சிற்றம்பலம்

    ----------------------

    39. வேட்கைக் கொத்து (3017 - 3026)


    தலைமகள் பாங்கியொடு கூறல்
    எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்
    3017 விண்படைத்த பொழிற்றில்லை(183) அம்பலத்தான் எவர்க்கும்
    மேலானான் அன்பருளம் மேவுநட ராஜன்
    பண்படைத்த எனைஅறியா இளம்பருவந் தனிலே
    பரிந்துவந்து மாலையிட்டான் பார்த்தறியான் மீட்டும்
    பெண்படைத்த பெண்களெல்லாம் அவமதித்தே வலது
    பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சிஎனல் ஆனேன்
    கண்படைத்தும் குழியில்விழக் கணக்கும்உண்டோ அவன்றன்
    கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ. ..1
    3018 சீத்தமணி அம்பலத்தான் என்பிராண நாதன்
    சிவபெருமான் எம்பெருமான் செல்வநட ராஜன்
    வாய்த்தஎன்னை அறியாத இளம்பருவந் தனிலே
    மகிழ்ந்துவந்து மாலையிட்டான் மறித்தும்முகம் பாரான்
    ஆய்த்தகலை கற்றுணர்ந்த அணங்கனையார் தமக்குள்
    ஆர்செய்த போதனையோ ஆனாலும் இதுகேள்
    காய்த்தமரம் வளையாத கணக்கும்உண்டோ அவன்றன்
    கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ. ..2
    3019 என்னுயிரில் கலந்துகலந் தினிக்கின்ற பெருமான்
    என்இறைவன் பொதுவில்நடம் இயற்றும்நட ராஜன்
    தன்னைஅறி யாப்பருவத் தென்னைமணம் புரிந்தான்
    தனைஅறிந்த பருவத்தே எனைஅறிய விரும்பான்
    பின்னைஅன்றி முன்னும்ஒரு பிழைபுரிந்தேன் இல்லை
    பெண்பரிதா பங்காணல் பெருந்தகைக்கும் அழகோ
    கன்னல்என்றால் கைக்கின்ற கணக்கும்உண்டோ அவன்றன்
    கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ. ..3
    3020 தெருளமுதத் தனியோகர் சிந்தையிலும் ஞானச்
    செல்வர்அறி விடத்தும்நடஞ் செய்யும்நட ராஜன்
    அருளமுதம் அளிப்பன்என்றே அன்றுமணம் புணர்ந்தான்
    அளித்தறியான் அணுத்துணையும் அனுபவித்தும் அறியேன்
    மருளுடையான் அல்லன்ஒரு வஞ்சகனும் அல்லன்
    மனம்இரக்கம் மிகஉடையான் வல்வினையேன் அளவில்
    இருளுடையார் போலிருக்கும் இயல்பென்னை அவன்றன்
    இயல்பறிந்தும் விடுவேனோ இனித்தான்என் தோழீ. ..4
    3021 சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று
    திருநடஞ்செய் பெருங்ருணைச் செல்வநட ராஜன்
    என்மயம்நான் அறியாத இளம்பருவந் தனிலே
    என்னைமணம் புரிந்தனன்ஈ தெல்லாரும் அறிவார்
    இன்மயம்இல் லாதவர்போல் இன்றுமணந் தருளான்
    இறைஅளவும் பிழைபுரிந்தேன் இல்லைஅவன் இதயம்
    கன்மயமோ அன்றுசுவைக் கனிமயமே என்னும்
    கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ. ..5
    3022 என்குணத்தான் எல்லார்க்கும் இறைவன்எல்லாம் வல்லான்
    என்அகத்தும் புறத்தும்உளான் இன்பநட ராஜன்
    பெண்குணத்தை அறியாத இளம்பருவந் தனிலே
    பிச்சேற்றி மணம்புரிந்தான் பெரிதுகளித் திருந்தேன்
    வண்குணத்தால் அனுபவம்நான் அறியநின்ற பொழுதில்
    வந்தறியான் இன்பம்ஒன்றும் தந்தறியான் அவனும்
    வெண்குணத்தான் அல்லன்மிகு நல்லன்எனப் பலகால்
    விழித்தறிந்தும் விடுவேனோ விளம்பாய்என் தோழீ. ..6
    3023 பொய்யாத புகழுடையான் பொதுவில்நடம் புரிவான்
    புண்ணியர்பால் நண்ணியநற் புனிதநட ராஜன்
    கொய்யாத அரும்பனைய இளம்பருவந் தனிலே
    குறித்துமணம் புரிந்தனன்நான் மறித்தும்வரக் காணேன்
    செய்யாத செய்கைஒன்றும் செய்தறியேன் சிறிதும்
    திருவுளமே அறியும்மற்றென் ஒருஉளத்தின் செயல்கள்
    நையாத என்றன்உயிர் நாதன்அருட் பெருமை
    நானறிந்தும் விடுவேனோ நவிலாய்என் தோழீ. ..7
    3024 கண்ணனையான் என்னுயிரில் கலந்துநின்ற கணவன்
    கணக்கறிவான் பிணக்கறியான் கருணைநட ராஜன்
    தண்ணனையாம் இளம்பருவந் தன்னில்எனைத் தனித்துத்
    தானேவந் தருள்புரிந்து தனிமாலை புனைந்தான்
    பெண்ணனையார் கண்டபடி பேசவும்நான் கூசாப்
    பெருமையொடும் இருந்தேன்என் அருமைஎலாம் அறிந்தான்
    உண்ணனையா வகைவரவு தாழ்த்தனன்இன் றவன்றன்
    உளம்அறிந்தும் விடுவேனோ உரையாய்என் தோழீ. ..8
    3025 ஊன்மறந்த உயிரகத்தே ஒளிநிறைந்த ஒருவன்
    உலகமெலாம் உடையவன்என் னுடையநட ராஜன்
    பான்மறந்த சிறியஇனம் பருவமதின் மாலைப்
    பரிந்தணிந்தான் தெரிந்ததனிப் பருவமிதிற் பரியான்
    தான்மறந்தான் எனினும்இங்கு நான்மறக்க மாட்டேன்
    தவத்தேறி அவத்திழியச் சம்மதமும் வருமோ
    கோன்மறந்த குடியேபோல் மிடியேன்நான் அவன்றன்
    குணம்அறிந்தும் விடுவேனோ கூறாய்என் தோழீ. ..9
    3026 தனித்தபர நாதமுடித் தலத்தின்மிசைத் தலத்தே
    தலைவரெலாம் வணங்கநின்ற தலைவன்நட ராசன்
    இனித்தசுகம் அறிந்துகொளா இளம்பருவந் தனிலே
    என்புருவ நடுஇருந்தான் பின்புகண்டேன் இல்லை
    அனித்தம்இலா இச்சரிதம் யார்க்குரைப்பேன் அந்தோ
    அவன்அறிவான் நான்அறிவேன் அயலறிவார் உளரோ
    துனித்தநிலை விடுத்தொருகால் சுத்தநிலை அதனில்
    சுகங்கண்டும் விடுவேனோ சொல்லாய்என் தோழீ. ..10
    திருச்சிற்றம்பலம்
    -----------------

    183. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு 26-11-1866 இல் வரைந்த திருமுகத்தில் விண்படைத்த பொழிற்றில்லை அம்பலத்தான் எவர்க்கு மேலானா னன்பருள மேவு நடராஜன் எனல் வேண்டும் என வள்ளற்பெருமான் திருத்தமொன்றை அருளியுள்ளார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, ஊரன் அடிகள் பதிப்பு பக்கம், 399 காண்க. எனினும் 1867 தொ. வே. முதற் பதிப்பில் விண்படைத்த புகழ்த்தில்லை என்றே அச்சாகியுள்ளது. பின்வந்த பதிப்புகளிலும் அவ்வாறே. ஆ. பா. மட்டும் பெருமானின் திருத்தத்தைப் பின்பற்றி விண் படைத்த பொழிற்றில்லை எனப் பதிப்பித்துள்ளார்.
    ----------------------------

    40. அறநிலை விளக்கம் (3027)


    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    3027 மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண்
    உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவ னேனும்
    கருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்
    குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானிஎனக் கூறொ ணாதே.(184) ..1
    திருச்சிற்றம்பலம்
    ____________________________________________________________________________

    184. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகமொன்றின் தொடக்கத்தில் பெருமான் இப்பாடலை எழுதியருளியுள்ளார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, ஊரான் அடிகள் பதிப்பு, பக்கம் 385 காண்க.
    -------

    41. அருள்நிலை விளக்கம் (3028)


    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    3028 மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக் கில்லைஎன்றார் மேலோர் நானும்
    பொய்விளக்கே விளக்கெனஉட் பொங்கிவழி கின்றேன்ஓர் புதுமை அன்றே
    செய்விளக்கும் புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்
    நெய்விளக்கே போன்றொருதண் ணீர்விளக்கும் எரிந்ததுசந் நிதியின் முன்னே.(185) ..1
    திருச்சிற்றம்பலம்
    ____________________________________________________________________________

    185. கருங்குழியில் பெருமான் திருவறையில் தண்ணீரால் விளக்கெரிந்த அற்புதத்தைக் குறிக்கும் இப்பாடல் பெருமான் சென்னை நண்பர்களுக்கு எழுதிய திருமுகமொன்றன்பாற்பட்டது போலும். பெருமான் கையெழுத்திலுள்ள ஏட்டுச் சுவடியொன்றிலும் காணப்படுவதாக ஆ. பா. குறிக்கிறார். தொ. வே. இதனையும் மருவாணைப் பெண்ணாக்கி என்னும் பாடலையும் இரண்டாந் திருமுறையில் சேர்த்துப் பதிப்பித்துள்ளார்.

    அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு

    1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
    2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
    3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
    4. பி. இரா --- பிருங்கிமாநகரம் இ¬¬ராமசாமி முதலியார்
    5. பொ.சு --- பொன்னேரி சுந்தரம் பிள்ளை

    நான்காம் திருமுறை முற்றிற்று