MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  



    5. நக்கீரதேவ நாயனார் பாசுரங்கள் (302 - 513)

    5.1 நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த
    கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
    302. சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா
    நல்லிடிஞ்சல் என்னுடைய நாவாகச் -சொல்லரிய
    வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த
    பெண்பாகர்க் கேற்றினேன் பெற்று. 1
    303. பெற்ற பயனிதுவே அன்றே பிறந்தியான்
    கற்றவர்கள் ஏத்துஞ்சீர்க் காளத்திக் - கொற்றவர்க்குத்
    தோளாகத் தாடவரம் சூழ்ந்தணிந்த அம்மானுக்
    காளாகப் பெற்றேன் அடைந்து. 2
    304. அடைந்துய்ம்மின் அம்மானை உம்ஆவி தன்னைக்
    குடைந்துண்ண எண்ணியவெங் கூற்றம் - குடைந்துநும்
    கண்ணுளே பார்க்கும் பொழுது கயிலாயத்
    தண்ணலே கண்டீர் அரண். 3
    305. அரணம் ஒருமூன்றும் ஆரழலாய் வீழ
    முரணம்பு கோத்த முதல்வன் சரணமே
    காணுமால் உற்றவன்றன் காளத்தி கைதொழுது
    பேணுமால் உள்ளம் பெரிது. 4
    306. பெரியவர்கா ணீர்என் உள்ளத்தின் பெற்றி
    தெரிவரிய தேவாதி தேவன் - பெரிதும்
    திருத்தக்கோர் ஏத்துந் திருக்கயிலைக் கோனை
    இருத்தத்தான் போந்த திடம். 5
    307. இடப்பாகம் நீள்கோட் டிமவான் பயந்த
    மடப்பாவை தன்வடிவே ஆனால் - விடப்பாற்
    கருவடிசேர் கண்டத்தெங் காளத்தி ஆள்வார்க்
    கொருவடிவே அன்றால் உரு. 6
    308. உருவு பலகொண் டுணர்வரிதாய் நிற்கும்
    ஒருவன் ஒருபால் இருக்கை - மருவினிய
    பூக்கையிற் கொண் டெப்பொழுதும் புத்தேளிர் வந்திறைஞ்சு
    மாக்கயிலை என்னும் மலை. 7
    309. மலைவரும்போல் வானவருந் தானவரும் எல்லாம்
    அலைகடல்வாய் நஞ்செழல்கண் டஞ்சி -நிலைதளரக்
    கண்டமையால் நண்சாரல் காளத்தி ஆள்வார்நஞ்
    சுண்டமையால் உண்டிவ் வுலகு. 8
    310. உலகம் அனைத்தினுக்கும் ஒண்ணுதல்மேல் இட்ட
    திலகம் எனப்பெறினுஞ் சீசீ - இலகியசீர்
    ஈசா திருக்கயிலை எம்பெருமான் என்றென்றே
    பேசா திருப்பார் பிறப்பு. 9
    311. பிறப்புடையர் கற்றோர் பெருஞ்செல்வர் மற்றும்
    சிறப்புடையர் ஆனாலுஞ் சீசீ - இறப்பில்
    கடியார் நறுஞ்சோலைக் காளத்தி யாள்வார்
    அடியாரைப் பேணா தவர். 10
    312. அவரும் பிறந்தவராய்ப் போவார்கொல் ஆவி
    எவரும் தொழுதேத்தும் எந்தை - சிவமன்னு
    தேக்குவார் சோலைத் திருக்கயிலை ஏத்தாதே
    போக்குவார் வாளா பொழது. 11
    313 வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்
    கேளார்கொல் அந்தோ கிறிபட்டார் - கீளாடை
    அண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுள்நின்ற
    கண்ணப்ப ராவார் கதை. 12
    314 கதையிலே கேளீர் கயிலாயம் நோக்கிப்
    புதையிருட்கண் மாலோடும் போகிச் - சிதையாச்சீர்த்
    தீர்த்தன்பால் பாசுபதம் பெற்றுச் செருக்களத்தில்
    பார்த்தன்போர் வென்றிலனோ பண்டு. 13
    315 பண்டு தொடங்கியும் பாவித்தும் நின்கழற்கே
    தொண்டு படுவான் தொடர்வேனைக் - கண்டுகொண்டு
    ஆளத் தயாவுண்டோ இல்லையோ சொல்லாயே
    காளத்தி யாய்உன் கருத்து. 14
    316 கருத்துக்குச் சேயையாய்க் காண்தக்கோர் காண
    இருத்தி திருக்கயிலை என்றால் - ஒருத்தர்
    அறிவான் உறுவார்க் கறியுமா றுண்டோ
    நெறிவார் சடையாய் நிலை. 15
    317 நிலையிற் பிறவி நெடுஞ்சுழியிற் பட்டுத்
    தலைவ தடுமாறு கின்றேன் - தொலைவின்றிப்
    போந்தேறக் கைதாராய் காளத்திப் புத்தேளிர்
    வேந்தேஇப் பாசத்தை விட்டு. 16
    318 பாசத்தை விட்டுநின் பாதத்தின் கீழேஎன்
    நேசத்தை வைக்க நினைகண்டாய் - பாசத்தை
    நீக்குமா வல்ல கயிலாயா நீஎன்னைக்
    காக்குமா றித்தனையே காண். 17
    319 காணா தலக்கின்றார் வானோர்கள் காளத்திப்
    பூணார மார்பன்தன் பொற்பாதம் - நாணாதே
    கண்டிடுவான் யானிருந்தேன் காணீர் கடல்நஞ்சை
    உண்டிடுவான் தன்னை ஒருங்கு. 18
    320 ஒருங்கா துடனேநின் றோரைவர் எம்மை
    நெருங்காமல் நித்தம் ஒருகால் -நெருங்கிக்
    கருங்கலோங் கும்பல் கயிலாயம் மேயான்
    வருங்கொலோ நம்பால் மதித்து. 19
    321 நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதே
    வம்பார் மலர்தூய் வணங்காதே - நம்பாநின்
    சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன்
    காலங்கள் போன கழிந்து. 20
    322 கழிந்த கழிகிடாய் நெஞ்சே கழியா
    தொழிந்தநாள் மேற்பட் டுயர்ந்தோர் - மொழிந்தசீர்க்
    கண்ணுதலான் எந்தை கயிலாய மால்வரையை
    நண்ணுதலாம் நன்மை நமக்கு. 21
    323 நமக்கிசைந்த வாநாமும் ஏத்தினால் நம்பர்
    தமக்கழகு தாமே அறிவர் -அமைப்பொதும்பிற்
    கல்லவா நீடருவிக் காளத்தி ஆள்வாரை
    வல்லவா நெஞ்சமே வாழ்த்து. 22
    324 வாழ்த்துவாய் வாழ்த்தா தொழிவாய் மறுசுழியிட்
    டாழ்த்துவாய் அஃதறிவாய் நீயன்றே - யாழ்த்தகைய
    வண்டார் பொழிற்கயிலை வாழ்கென் றிருப்பதே
    கண்டாய் அடியேன் கடன். 23
    325 கடநாகம் ஊடாடுங் காளத்திக் கோனைக்
    கடனாகக் கைதொழுவார்க் கில்லை - இடம்நாடி
    இந்நாட்டிற் கேவந்திங் கீண்டிற்றுக் கொண்டுபோய்
    அந்நாட்டில் உண்டுழலு மாறு. 24
    326 மாறிப் பிறந்து வழியிடை ஆற்றிடை
    ஏறி இழியும் இதுவல்லால் -தேறித்
    திருக்கயிலை ஏத்தீரேல் சேமத்தால் யார்க்கும்
    இருக்கையிலை கண்டீர் இனிது. 25
    327 இனிதே பிறவி இனமரங்கள் ஏறிக்
    கனிதேர் கடுவன்கள் தம்மில் -முனிவாய்ப்
    பிணங்கிவருந் தண்சாரற் காளத்தி பேணி
    வணங்கவல்ல ராயின் மகிழ்ந்து. 26
    328 மகிழந்தலரும் வன்கொன்றை மேலே மனமாய்
    நெகிழ்ந்து நெகிழ்ந்துள்ளே நெக்குத் - திகழ்ந்திலங்கும்
    விண்ணிறங்கா ஓங்கும் வியன்கயிலை மேயாய்என்
    பெண்ணுறங்காள் என்செய்கேன் பேசு. 27
    329 பேசும் பரிசறியாள் பேதை பிறர்க்கெல்லாம்
    ஏசும் பரிசானாள் ஏபாவம் - மாசுனைநீர்க்
    காம்பையலைத் தாலிக்குங் காளத்தி என்றென்று
    பூம்பயலை மெய்ம்முழுதும் போர்த்து. 28
    330 போர்த்த களிற்றுரியும் பூண்ட பொறியரவும்
    தீர்த்த மகளிருந்த செஞ்சடையும் - மூர்த்தி
    குயிலாய மென்மொழியாள் கூறாய வாறும்
    கயிலாயா யான்காணக் காட்டு. 29
    331 காட்டில் நடமாடிக் கங்காள ராகிப்போய்
    நாட்டிற் பலிதிரிந்து நாடோறும் - ஓட்டுண்பார்
    ஆனாலும் என்கொலோ காளத்தி ஆள்வாரை
    வானோர் வணங்குமா வந்து. 30
    332 வந்தமரர் ஏத்தும் மடைக்கூழும் வார்சடைமேல்
    கொந்தவிழும் மாலை கொடுத்தார்கொல் - வந்தித்து
    வாலுகுத்த வண்கயிலைக் கோனார்தம் மாமுடிமேல்
    பாலுகுத்த மாணிக்குப் பண்டு. 31
    333 பண்டிதுவே அன்றாயிற் கேளீர்கொல் பல்சருகு
    கொண்டிலங்கத் தும்பிநூற் கூடிழைப்பக் - கண்டு
    நலந்திக் கெலாம்ஏத்தும் காளத்தி நாதர்
    சிலந்திக்குச் செய்த சிறப்பு. 32
    334 செய்த சிறப்பெண்ணில் எங்குலக்குஞ் சென்றடைந்து
    கைதொழுவார்க் கெங்கள் கயிலாயர் -நொய்தளவிற்
    காலற்காய்ந் தார்அன்றே காணீர் கழல்தொழுத
    பாலற்காய் அன்று பரிந்து. 33
    335 பரிந்துரைப்பார் சொற்கேளாள் எம்பெருமான் பாதம்
    பிரிந்திருக்க கில்லாமை பேசும் - புரிந்தமரர்
    நாதாவா காளத்தி நம்பாவா என்றென்று
    மாதாவா உற்ற மயல். 34
    336 மயலைத் தவிர்க்கநீ வாராய் ஒருமூன்
    றெயிலைப் பொடியாக எய்தாய் - கயிலைப்
    பருப்பதவா நின்னுடைய பாதத்தின் கீழே
    இருப்பதவா உற்றாள் இவள். 35
    337 இவளுக்கு நல்லவா றெண்ணுதிரேல் இன்றே
    தவளப் பொடிஇவள்மேற் சாத்தி - இவளுக்குக்
    காட்டுமின்கள் காளத்தி காட்டிக் கமழ்கொன்றை
    சூட்டுமின்கள் தீரும் துயர். 36
    338 துயர்க்கெலாம் கூடாய தோற்குரம்பை புக்கு
    மயக்கில் வழிகாண மாட்டேன் - வியற்கொடும்போர்
    ஏற்றானே வண்கயிலை எம்மானே என்கொலோ
    மேற்றான் இதற்கு விளைவு. 37
    339. விளையும் வினையரவின் வெய்ய விடத்தைக்
    களைமினோ காளத்தி ஆள்வார்- வளைவில்
    திருந்தியசீர் ஈசன் திருநாமம் என்னும்
    மருந்தினைநீர் வாயிலே வைத்து. 38
    340 வாயிலே வைக்கும் அளவில் மருந்தாகித்
    தீய பிறவிநோய் தீர்க்குமே - தூயவே
    கம்பெருமா தேவியொடு மன்னு கயிலாயத்
    தெம்பெருமான் ஓரஞ் செழுத்து. 39
    341 அஞ்செழுத்துங் கண்டீர் அருமறைகள் ஆவனவும்
    அஞ்செழுத்துங் கற்க அணித்தாகும் - நஞ்சவித்த
    காளத்தி யார்யார்க்குங் காண்டற் கரிதாய்ப்போய்
    நீளத்தே நின்ற நெறி. 40
    342 நெறிவார் சடையாய் நிலையின்மை நீயொன்
    றறியாய் கொல் அந்தோ அயர்ந்தாள் - நெறியிற்
    கனைத்தருவி தூங்குங் கயிலாயா நின்னை
    நினைத்தருவி கண்சோர நின்று. 41
    343 நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்யாம்
    என்றும் நினைந்தாலும் என்கொலோ -சென்றுதன்
    தாள்வா னவர்இறைஞ்சுந் தண்சாரற் காளத்தி
    ஆள்வான் அருளாத வாறு. 42
    344 அருளாத வாறுண்டே யார்க்கேனும் ஆக
    இருளார் கறைமிடற்றெம் ஈசன் -பொருளாய்ந்து
    மெய்ம்மையே உன்னில் வியன்கயிலை மேயான்வந்
    திம்மையே தீர்க்கும் இடர். 43
    345 இடரீர் உமக்கோர் இடம்நாடிக் கொண்டு
    நடவீரோ காலத்தால் நாங்கள் - கடல்வாய்க்
    கருப்பட்டோங் கொண்முகில்சேர் காளத்தி காண
    ஒருப்பட்டோம் கண்டீர் உணர்ந்து. 44
    346 உணருங்கால் ஒன்றை உருத்தெரியக் காட்டாய்
    புணருங்கால் ஆரமுதே போலும் - இணரிற்
    கனியவாஞ் சோலைக் கயிலாயம் மேயாய்
    இனியவா காண்நின் இயல்பு. 45
    347 நின்னியல்பை யாரே அறிவார் நினையுங்கால்
    மன்னியசீர்க் காளத்தி மன்னவனே - நின்னில்
    வௌிப்படுவ தேழுலகும் மீண்டே ஒருகால்
    ஒளிப்பதுவும் ஆனால் உரை. 46
    348 உரையும் பொருளும் உடலும் உயிரும்
    விரையும் மலரும்போல் விம்மிப் -புரையின்றிச்
    சென்றவா றோங்குந் திருக்கயிலை எம்பெருமான்
    நின்றவா றெங்கும் நிறைந்து. 47
    349 நிறைந்தெங்கும் நீயேயாய் நின்றாலும் ஒன்றன்
    மறைந்தைம் புலன்காண வாராய் - சிறந்த
    கணியாருந் தண்சாரற் காளத்தி ஆள்வாய்
    பணியாயால் என்முன் பரிசு. 48
    350 பரிசறியேன் பற்றிலேன் கற்றிலேன் முற்றும்
    கரியுரியாய் பாதமே கண்டாய் - திரியும்
    புரம்மாளச் செற்றவனே பொற்கயிலை மன்னும்
    பரமா அடியேற்குப் பற்று. 49
    351 பற்றாவான் எவ்வுயிர்க்கும் எந்தை பசுபதியே
    முற்றாவெண் திங்கள் முளைசூடி -வற்றாவாங்
    கங்கைசேர் செஞ்சடையான் காளத்தி யுள்நின்ற
    மங்கைசேர் பாகத்து மன். 50
    352. மன்னா கயிலாயா மாமுத்தம் மாணிக்கம்
    பொன்னார மாக்கொண்டு பூணாதே - எந்நாளும்
    மின்செய்வார் செஞ்சடையாய் வெள்ளெலும்பு பூண்கின்ற
    தென்செய்வான் எந்தாய் இயல்பு. 50
    353 இயம்பாய் மடநெஞ்சே ஏனோர்பால் என்ன
    பயம்பார்த்துப் பற்றுவான் உற்றாய் - புயம்பாம்பால்
    ஆர்த்தானே காளத்தி அம்மானே என்றென்றே
    ஏத்தாதே வாளா இருந்து. 52
    354 இருந்தவா காணீர் இதுவென்ன மாயம்
    அருந்தண் கயிலாயத் தண்ணல் - வருந்திப்போய்த்
    தான்நாளும் பிச்சை புகும்போலும் தன்னடியார்
    வான்ஆள மண்ஆள வைத்து. 53
    355 வைத்த இருநிதியே என்னுடைய வாழ்முதலே
    நித்திலமே காளத்தி நீள்சுடரே - மொய்த்தொளிசேர்
    அக்காலத் தாசை அடிநாயேன் காணுங்கால்
    எக்காலத் தெப்பிறவி யான். 54
    356 யானென்று தானென் றிரண்டில்லை என்பதனை
    யானென்றுங் கொண்டிருப்பன் ஆனாலும் - தேனுண்
    டளிகள்தாம் பாடும் அகன்கயிலை மேயான்
    தௌிகொடான் மாயங்கள் செய்து. 55
    357 மாயங்கள் செய்தைவர் சொன்ன வழிநின்று
    காயங்கொண் டாடல் கணக்கன்று -காயமே
    நிற்பதன் றாதலாற் காளத்தி நின்மலன்சீர்
    கற்பதே கண்டீர் கணக்கு. 56
    358 கணக்கிட்டுக் கொண்டிருந்து காலனார் நம்மை
    வணக்கி வலைப்படா முன்னம் - பிணக்கின்றிக்
    காலத்தால் நெஞ்சே கயிலாயம் மேவியநற்
    சூலத்தான் பாதந் தொழு. 57
    359 தொழுவாள் பெறாளேதன் தோள்வளையுந் தோற்றாள்
    மழுவாளன் காளத்தி வாழ்த்தி - எழுவாள்
    நறுமா மலர்க்கொன்றை நம்முன்னே நாளைப்
    பெறுமாறு காணீர்என் பெண். 58
    360 பெண்ணின் றயலார்முன் பேதை பிறைசூடி
    கண்ணின்ற நெற்றிக் கயிலைக்கோன் - உண்ணின்ற
    காமந்தான் மீதூர நைவாட்குன் கார்க்கொன்றைத்
    தாமந்தா மற்றிவளைச் சார்ந்து. 50
    361 சார்ந்தாரை எவ்விடத்துங் காப்பனவுஞ் சார்ந்தன்பு
    கூர்ந்தார்க்கு முத்தி கொடுப்பனவும் -கூர்ந்துள்ளே
    மூளத் தியானிப்பார் முன்வந்து நிற்பனவும்
    காளத்தி யார்தம் கழல். 60
    362 தங்கழல்கள் ஆர்ப்ப விளக்குச் சலன்சலனென்
    றங்கழல்கள் ஆர்ப்ப அனலேந்திப் - பொங்ககலத்
    தார்த்தா டரவம் அகன்கயிலை மேயாய்நீ
    கூத்தாடல் மேவியவா கூறு. 61
    363 கூறாய்நின் பொன்வாயால் கோலச் சிறுகிளியே
    வேறாக வந்திருந்து மெல்லனவே - நீல் தாவு
    மஞ்சடையும் நீள்குடுமி வாளருவிக் காளத்திச்
    செஞ்சடைஎம் ஈசன் திறம். 62
    364 ஈசன் திறமே நினைந்துருகும் எம்மைப்போல்
    மாசில் நிறத்த மடக்குருகே - கூசி
    இருத்தியால் நீயும் இருங்கயிலை மேயாற்
    கருத்தியாய்க் காமுற்றா யாம். 63
    365 காமுற்றா யாம்அன்றே காளத்தி யான்கழற்கே
    யாமுற்ற துற்றாய் இருங்கடலே - யாமத்து
    ஞாலத் துயிரெல்லாங் கண்துஞ்சும் நள்ளிருள்கூர்
    காலத்துந் துஞ்சாதுன் கண். 64
    366 கண்ணுங் கருத்துங் கயிலாய ரேஎமக்கென்
    றெண்ணி இருப்பன்யான் எப்பொழுதும் - நண்ணும்
    பொறியா டரவசைத்த பூதப் படையார்
    அறியார்கொல் நெஞ்சே அவர். 65
    367 நெஞ்சே அவர்கண்டாய் நேரே நினைவாரை
    அஞ்சேல்என் றாட்கொண் டருள் செய்வார் - நஞ்சேயும்
    கண்டத்தார் காளத்தி ஆள்வார் கழல்கண்டீர்
    அண்டத்தார் சூடும் அலர். 66
    368 அலரோன் நெடுமால் அமரர்கோன் மற்றும்
    பலராய்ப் படைத்துக் காத் தாண்டு - புலர்காலத்
    தொன்றாகி மீண்டு பலவாகி நிற்கின்றான்
    குன்றாத சீர்க்கயிலைக் கோ. 67
    369 கோத்த மலர்வாளி கொண் டநங்கன் காளத்திக்
    கூத்தன்மேல் அன்று குறித்தெய்யப் - பார்த்தலுமே
    பண்பொழியாக் கோபத்தீச் சுற்றுதலும் பற்றற்று
    வெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து. 68
    370 வெந்திறல்வேல் பார்த்தற் கருள்செய்வான் வேண்டிஓர்
    செந்தறுகண் கேழல் திறம்புரிந்து -வந்தருளும்
    கானவனாம் கோலம்யான் காணக் கயிலாயா
    வானவர்தங் கோமானே வா. 69
    371 வாமான்தேர் வல்ல வயப்போர் விசயனைப் போல்
    தாமார் உலகில் தவமுடையார் - தாம்யார்க்குங்
    காண்டாற் கரியராய்க் காளத்தி ஆள்வாரைத்
    தீண்டத்தாம் பெற்றமையாற் சென்று. 70
    372 சென்றிறைஞ்சும் வானோர்தம் சிந்தைக்குஞ் சேயராய்
    என்றும் அடியார்க்கு முன்னிற்பர் - நன்று
    கனியவாஞ் சோலைக் கயிலாயம் மேயார்
    இனியவா பத்தர்க் கிவர். 70
    373 இவரே முதல்தேவர் எல்லார்க்கும் மிக்கார்
    இவரல்லர் என்றிருக்க வேண்டா -கவராதே
    காதலித்தின் றேத்துதிரேல் காளத்தி ஆள்வார்நீர்
    ஆதரித்த தெய்வமே ஆம். 71
    374 ஆமென்று நாளை உளஎன்று வாழ்விலே
    தாமின்று வீழ்கை தவமன்று - யாமென்றும்
    இம்மாய வாழ்வினையே பேணா திருங்கயிலை
    அம்மானைச் சேர்வ தறிவு. 73
    375. அறியாம லேனும் அறிந்தேனுஞ் செய்து
    செறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறிநின்று
    நன்முகில்சேர் காளத்தி நாதன் அடிபணிந்து
    பொன்முகிலி ஆடுதலும் போம். 74
    376 போகின்ற மாமுகிலே பொற்கயிலை வெற்பளவும்
    ஏகின் றெமக்காக எம்பெருமான் - ஏகினால்
    உண்ணப் படாநஞ்சம் உண்டாற்கென் உள்ளுறுநோய்
    விண்ணப்பஞ் செய்கண்டாய் வேறு. 75
    377 வேறேயுங் காக்கத் தகுவேனை மெல்லியலாள்
    கூறேயும் காளத்திக் கொற்றவனே - ஏறேறும்
    அன்பா அடியேற் கருளா தொழிகின்ற
    தென்பாவ மேயன்றோ இன்று. 76
    378 இன்று தொடங்கிப் பணிசெய்வேன் யானுனக்
    கென்றும் இளமதியே எம்பெருமான் - என்றும்என்
    உட்காதல் உண்மை உயர்கயிலை மேயாற்குத்
    திட்காதே விண்ணப்பஞ் செய். 77
    379 செய்ய சடைமுடியென் செல்வனையான் கண்டெனது
    கையறவும் உள்மெலிவும் யான்காட்டப் -பையவே
    காரேறு பூஞ்சோலைக் காளத்தி ஆள்வார்தம்
    போரேறே இத்தெருவே போது. 78
    380 போது நெறியனவே பேசிநின் பொன்வாயால்
    ஊதத் தருவன் ஒளிவண்டே - காதலால்
    கண்டார் வணங்குங் கயிலாயத் தெம்பெருமான்
    வண்தார்மோந் தென்குழற்கே வா. 79
    381 வாவா மணிவாயால் மாவின் தளிர்கோதிக்
    கூவா திருந்த குயிற்பிள்ளாய் - ஓவாதே
    பூமாம் பொழிலுடுத்த பொன்மதில் சூழ் காளத்திக்
    கோமான் வரவொருகாற் கூவு. 80
    382 கூவுதலும் பாற்கடலே சென்றவனைக் கூடுகஎன்
    றேவினான் பொற்கயிலை எம்பெருமான் - மேவியசீர்
    அன்பாற் புலிக்காலன் பாலன்பால் ஆசையினால்
    தன்பாற்பால் வேண்டுதலுந் தான். 81
    383 தானே உலகாள்வான் தான்கண்ட வாவழக்கம்
    ஆனால்மற் றார்இதனை அன்றென்பார்- வானோர்
    களைகண்தா னாய்நின்ற காளத்தி ஆள்வார்
    வளைகொண்டார் மால்தந்தார் வந்து. 82
    384 வந்தோர் அரக்கனார் வண்கயிலை மால்வரையைத்
    தந்தோள் வலியினையே தாம்கருதி - அந்தோ
    இடந்தார் இடந்திட் டிடார்க்கீழ் எலிபோற்
    கிடந்தார் வலியெலாங் கெட்டு. 83
    385 கெட்ட அரக்கரே வேதியரே கேளீர்கொல்
    பட்டதுவும் ஓராது பண்டொருநாள் - ஒட்டக்
    கலந்தரனார் காளத்தி ஆள்வார்மேற் சென்று
    சலந்தரனார் பட்டதுவுந் தாம். 84
    386 தாம்பட்ட தொன்றும் அறியார்கொல் சார்வரே
    காம்புற்ற செந்நெற் கயிலைக் கோன் - பாம்புற்ற
    ஆரத்தான் பத்தர்க் கருகணையார் காலனார்
    தூரத்தே போவார் தொழுது. 85
    387 தொழுது நமனுந்தன் தூதுவர்க்குச் சொல்லும்
    வழுவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப்
    பத்தர்களைக் கண்டால் பணிந்தகலப் போமின்கள்
    எத்தனையுஞ் சேய்த்தாக என்று. 86
    388 வென்றைந்துங் காமாதி வேரறுத்து மெல்லவே
    ஒன்ற நினைதிரேல் ஒன்றலாம் - சென்றங்கை
    மானுடையான் என்னை உடையான் வடகயிலை
    தானுடையான் தன்னுடைய தாள். 87
    389 தாளொன்றால் பாதாளம் ஊடுருவத் தண்விசும்பில்
    தாளொன்றால் அண்டங் கடந்துருவித் -தோளொன்றால்
    திக்கனைத்தும் போர்க்குந் திறற்காளி காளத்தி
    நக்கனைத்தான் கண்ட நடம். 88
    390 நடமாடுஞ் சங்கரன்தாள் நான்முகனுங் காணான்
    படமாடு பாம்பணையான் காணான் - விடமேவும்
    காரேறு கண்டன் கயிலாயன் தன் உருவை
    யாரே அறிவார் இசைந்து. 89
    391 இசையுந்தன் கோலத்தை யான்காண வேண்டி
    வசையில்சீர்க் காளத்தி மன்னன் - அசைவின்றிக்
    காட்டுமேல் காட்டிக் கலந்தென்னைத் தன்னோடும்
    கூட்டுமேல் கூடலே கூடு. 90
    392 கூடி யிருந்து பிறர்செய்யுங் குற்றங்கள்
    நாடித்தம் குற்றங்கள் நாடாதே - வாடி
    வடகயிலை யேத்தாதே வாழ்ந்திடுவான் வேண்டில்
    அடகயில ஆரமுதை விட்டு. 91
    393 விட்டாவி போக உடல்கிடந்து வெந்தீயில்
    பட்டாங்கு வேமாறு பார்த்திருந்தும் - ஒட்டாதாம்
    கள்ளலைக்கும் பூஞ்சோலைக் காளத்தி யுள்நின்ற
    வள்ளலைச்சென் றேத்த மனம். 92
    394 மனமுற்றும் மையலாய் மாதரார் தங்கள்
    கனமுற்றுங் காமத்தே வீழ்வர் -புனமுற்
    றினக்குறவர் ஏத்தும் இருங்கயிலை மேயான்
    தனக்குறவு செய்கலார் தாழ்ந்து. 93
    395 தாழ்ந்த சடையுந் தவளத் திருநீறும்
    சூழ்ந்த புலியதளும் சூழ்அரவும் - சேர்ந்து
    நெருக்கிவா னோர்இறைஞ்சுங் காளத்தி யாள்வார்க்
    கிருக்குமா கோலங்கள் ஏற்று. 94
    396 ஏற்றின் மணியே அமையாதோ ஈர்ஞ்சடைமேல்
    வீற்றிருந்த வெண்மதியும் வேண்டுமோ - ஆற்றருவி
    கன்மேற்பட் டார்க்குங் கயிலாயத் தெம்பெருமான்
    என்மேற் படைவிடுப்பாற் கீங்கு. 95
    397 ஈங்கேவா என்றருளி என்மனத்தில் எப்பொழுதும்
    நீங்காமல் நீவந்து நின்றாலும் - தீங்கை
    அடுகின்ற காளத்தி ஆள்வாய் நான்நல்ல
    படுகின்ற வண்ணம் பணி. 96
    398 பணியாது முன்னிவனைப் பாவியேன் வாளா
    கணியாது காலங் கழித்தேன் - அணியும்
    கருமா மிடற்றெங் கயிலாயத் தெங்கள்
    பெருமான தில்லை பிழை. 97
    399 பிழைப்புவாய்ப் பொன்றறியேன் பித்தேறி னாற்போல்
    அழைப்பதே கண்டாய் அடியேன் - அழைத்தாலும்
    என்னா தரவேகொண் டின்பொழில்சூழ் காளத்தி
    மன்னா தருவாய் வரம். 98
    400 வரமாவ தெல்லாம் வடகயிலை மன்னும்
    பரமாஉன் பாதார விந்தம் - சிரமார
    ஏத்திடும்போ தாகவந் தென்மனத்தில் எப்பொழுதும்
    வைத்திடுநீ வேண்டேன்யான் மற்று. 99
    401 மற்றும் பலபிதற்ற வேண்டாம் மடநெஞ்சே
    கற்றைச் சடைஅண்ணல் காளத்தி - நெற்றிக்கண்
    ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும்
    சோராமல் எப்பொழுதுஞ் சொல். 100

    திருச்சிற்றம்பலம்