MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    2. கந்தன் மணம்புரி சிந்து

    நூலாசிரியர்: சண்முக தாசன்
    வாழ்த்து

    கங்கா தரனற் கருணையா லீன்றெடுத்த
    சிங்கார ஆனைமுகத் தேசிகனே-மங்காத
    கந்தன் மணம் புரியக் காதல்தனை மாநிலத்தில்
    சிந்துகவி யானுரைக்கச் செய்

    கங்காதரன் - கங்கையை முடியில் தரித்தவன்

    தூம்பினில் வீழுஞ் சலந்தனைச் சாகரஞ் சூழ்ந்து கொண்டால்
    வீம்பனென் றெண்ணி வெறுப்பதுண் டோயிந்த மேதினியில்
    கூம்பலில் லாத தமியே னுரைத்த குழறு புன்சொல்
    தாம்புக ழாகவாழ் வார்பெரி யோர்தடை வேறுள்ளதே

    தூம்பு - சலதாரை
    சாகரம் - கடல்
    வீம்பன் - வம்பு வார்த்தை சொல்வோன்
    கூம்பல் - ஒடுங்கல்
    (மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு - குறள்
    கூம்பாத மெய்ந்நெறியோர் - திருவருட்பா)

    சீருடன் வள்ளியைச் சேரும்வடி வேலன்
    சேவடியைப் போற்றி - கந்தன்
    சிந்துநான் சொல்ல எந்தனக்கருள்
    செல்வவி நாயகனே
    சிறிய(ன்)னுரை மொழியுந் தமிழ்
    குறமா தையே மணஞ் செய்திடும்
    செந்தூ ரதனில் மேவியே
    சேர்ந்து வாழ்ந்து சாந்த முடனே (சீருடன் வள்ளியைச்)
    1. செந்தூர் - திருச்செந்தூர்; குறமாது - வள்ளி 1

    பேரு பெரிய நம்பி மகரா சேந்திரன்
    பெண்ணாக வந்துதித்துத் - தாதிப்
    பெண்க ளுடன் தினைக் கங்காணங் காத்திடப்
    பேசியே காக்க வைத்தார்
    பிரியா மலே புனமே விய
    பரண்மீ தினில் கவணோ சையால்
    பலமாய்த் தினை விளை காத்து
    உணங்கிப் பிணங்கி இருக்கப் (பேருபெரிய)
    2. நம்பிமகராசேந்திரன்- நம்பிராசன் - வள்ளியின்தந்தை
    கங்காணம் - கண்காணம்; கவணோ சை-கவண்கல் எழுப்பும் ஒலி
    விளை - விளைபுலம் (ஆகுபெயர்)
    உணங்கி - வாட்டம் அடைந்து 2

    குன்றக் குருபரன் கோதையாள் வள்ளியைக்
    கோரி வழி நடந்து - கந்தன்
    குளறிக் குளறிப் புனத்தைத் தேடிக்
    கொண்டான் வணிக னைப்போல்
    குருநா ரத னுவந் தோதிய
    உரைகேட் டிட வரு வேலவர்
    குயிலோசையு மயில் பாசையும்
    குறித்துத் தரித்துச் சிரித்து நின்று (குன்றக்குரு)
    3. மயில் பாசை - குயில் ஓசைக்கு ஏற்பத் திரிந்து வந்தது
    கோரி - விரும்பி; குருநாரதர் - நாரதர் 3

    மன்றினி லுள்ள காலிகள் மாடுகள்
    வளருந் தினைப்புனத்தில் - வள்ளி
    மங்கையர் களுடன் செந்தினை காக்கவும்
    மாது தலை விதியோ
    மங்கைக் கிளி மொழியா ளென
    தங்கப் பிர காச(ம்) மென
    மருக இது சமய மென
    மயங்கித் தியங்கிச் செயஞ்செ யமென்று (மன்றினி)
    4. காலிகள் - பசுக்கள்; மாது - வள்ளி ; மருக - நெருங்க 4

    கானக் குறக்குல மானே உனைத்தேடி
    காவின் வழியே வந்தேன்
    கைக்கு வளையலு மிக்கணமே தாரேன்
    காசு கொடுத் திடு வாய்
    காசி வட காசிப் பணி
    ஆசை மிக வேகொண் டிடும்
    கன்னடியன் சென்னை நகர்
    கடந்து கடந்து தொடர்ந்து வந்தேனே (கானக்)
    5. கா - சோலை; கணமே - நேரத்திலே
    வட காசிப் பணி - வட காசியில் செய்த
    செயல்திரம் உடைய அணிகலன்
    கன்னடியன் - ஒரு சாதியான். 5

    சீனா வேலையிது தானே மலையாளம்
    செஞ்சிக் கோட்டை நகரம் - அதில்
    சீமான் மெச்சிய கோம ளப்பணி
    செங்கை நீ தருவாய்
    செக மொய்த்திடு வளை ரத்தினத்
    தொகை செப்பிட முகநட் பிலை
    திருமங்கை யாள்குல நங்கையே
    சிரித்து விரித்துப் பரிக்கும் குறப்பெண் (சீனா)
    6. சீனா வேலை - சீனர்களால் செய்யப் பெற்ற வளையல்
    சீமான் - ஸரீமான் - திருமகள் கேள்வன் - இங்கு செல்வரைக் குறித்தது
    கோமளப்பணி - அழகு மிகுந்த அணிகலன்
    முகநட்பிலை - விரும்பவில்லை 6

    கண்டி கதிர்காமம் காஞ்சி கொழும்புவங்
    காளதே சப்பணி யே-புனக்
    காவிற் கிளிகளைக் கூவிவி ரட்டிடும்
    கன்னியே பெண்மயிலே
    கவி வாணர்கள் அடி போற்றிடும்
    துதி பெறுமான் இசை பெற்றிடும்
    கலை மான துனை யீன்றதும்
    கலங்கி யிலங்கி அலங்கா ரத்துடன் (கண்டி)
    7. கண்டி, கதிர்காமம்-இலங்கையிலுள்ள முருகன்திருப்பதிகள்
    புனக்கா - புனம்; இசை - புகழ்
    கலைமான் - வள்ளியையீன்ற மான். (சிவமுனியின்
    காமநோக்கால் கருவுற்றது என்பது புராணவரலாறு) 7

    எண் டிசை போற்றிடும் யாழ்ப்பாண
    தேசத்தி லிருந்து வருகிறேனடி - மன
    திசைந்து யிசைந்து நடந்து வந்ததால்
    இளைப்பும் கொண்டே னடி
    இருநீ பரண் அடி கீழினில்
    கரநீட் டிடு அணிவேன் வளை
    இதுவே நல்ல சமய மல்லவோ
    இகனை முகனை தகையுந் தீர்ந்தேனடி (எண்டிசை)
    8. யாழ்ப்பாணம் - இலங்கைத் தலம்
    மன திசைந்து - மனம் விரும்பி; இளைப்பு - சோர்வு
    பரண் - காவல் மேடை
    இகனை முகனை - எதுகை மோனை
    இங்கே இடம்பப் பேச்சைக் குறிக்க வந்தது 8

    ஆயிரங் கோடி திரவியந் தந்தால்
    அதன்விலை மேலாகும் - வளை மேல்
    ஆசை கொள்ளுவார் நேச மாகுவார்
    அனாதியென் றெண்ணாதே
    அடரும் தினை படரும் விளை
    அதிலே கிளி களு மேயுது
    அழகா கவும் மழமா கவும்
    அறிந்து தெரிந்து மிருந்து மாவதென் (ஆயிரங்)
    9. வளை - வளையல் ; அனாதி - திக்கற்றவன்
    விளை - விளைபுலன் - ஆகுபெயர்
    மழமாகவும்- இளமையாகவும் எனலாம். 9

    சேயிழை யேகொங்கு தேசம் திருப்பேட்டை
    ஸரீரங்கப் பட்டணமாம் - (அதில்)
    சிறந்த மனித ருறவுண் டாகும்
    சித்திரப் பணியாம்
    திரு வாவினன் குடி மேவியே
    ஒரு மாதமும் அதில் தங்கியே
    திடமாகவும் நடையாகவும்
    சிகப்பு தரிப்பு முகப்புங் காற்குமே (சேயிழை)
    10. சித்திரப்பணி - அழகுடன் விளங்கும் வளையல் 10

    மக்கந் துலுக்காண மராட்டிய தேசமும்
    வந்து பணியெடுத் தேன் - சிறு
    மங்கையர்க் கேற்ற இங்கித முள்ள
    வளைய லுங் கொடுத்தேன்
    ம(ய)லுற் றிடு காருண் ணிய
    நகர்முற் றிலும் விலை கூறியே
    வரும் பாதையில் குறியாச்சுது
    மகிழ்ந்து புகழ்ந்து விருந்துவந் தேனடி (மக்கந்)
    11. மக்கம், துலுக்காணம், மராட்டியம்- தேசங்கள்
    பணி எடுத்தேன்- வளை கொடுத்தேன்
    இங்கிதமுள்ள - இனிமையான - விரும்பதக்க
    மயலுற்றிடு - ஆசை ஏற்படுத்தும்; காருண்ணிய - கிருபையுள்ள
    குறியாச்சுது - நற்சகுனம் ஏற்பட்டது
    விருந்து வந்தேன் - விருந்தாக வந்தேன்
    அயலுற்றிடு என்றும் பாடம் 11

    துக்காணிப் பாளையப் பட்டு கல்கத்தா
    கருதியே வந்தெடுத்தேன் - சேலம்
    சுத்தியே வந்து மஞ்சள்குப்ப மதனில்
    சில தோகையர்க் குங்கொடுத்தேன்
    தொலையா வழி கடவாம லே
    விலைமாதர்கள் குடி மேவிய
    சுருக்காய்த் தரிக்கப் பரிக்கக் கொடாமலே (துக்காணி)
    12. துக்காணி, பாளையப்பட்டு, கல்கத்தா - தேசங்கள்
    தோகையர் - மகளிர்; தொலையாவழி - நெடுவழி
    விலைமாதர்கள் - பரத்தையர்கள் 12

    செஞ்சிக் கோட்டைவிட்டு சீனாக்கப்பல் ஏறித்
    தென்தேசம் நாடி வந்தேன் - (வழி)
    திகைத்துத் திகைத்துப் புனத்தி லோசையும்
    செப்பிட வும் கண்டேன்
    சிந்தை தௌி வாகியே நான்
    வந்து னையுங் கண்டவு டன்
    செயல் பெற்றனன் பயமற்றனன்
    ஜெக மோகன புகழுண்டாகிய (செஞ்சிக்)
    13. ஜெக மோகன புகழ் - உலகினை மயக்கும் புகழ் 13

    வஞ்சிஎன் தாய்பேர் மீனாட்சி அல்லோ
    பெற்ற மக்க ளிருவரடி - பெரு
    வயிற்றன் கணேசன் இளைய செட்டிக்கு
    வடிவேல் பட்டமடி
    மாது தெய் வானை யல்லோ
    ஏது மறி யாள் சிறியாள்
    மணமுஞ் செய்தேன் துணை யாகவே
    மறித்துக் குறித்து வெறுத்து வந்தேனே (வஞ்சிஎன்)
    14. மீனாட்சி-பார்வதி தேவி; இளைய செட்டி - முருகன் 14

    கந்தன் செட்டியென்று யித்தலைக் கெல்லாம்
    கண்டவர் சொல்வகேள்-என்னைக்
    காண வென்றாலுமே தோணாமல் போகுமே
    காரணம் நீ யறியாய்
    கர நீட்டிடு ரதம் போலவே
    வளை மாட்டு வேன் இளையாமலே
    கனி வாயினால் பணம் ஓதடி
    கலங்கி யிலங்கு அலங்கிக் கொண்டானடி (கந்தன்)
    15. இத்தலை - இக்காலம்; காண வென்றாலும் - காணவேண்டுமென்றாலும்
    தோணாமல் - தோன்றமாட்டேன்
    கனிவாய் - கனிபோன்ற வாய்; பணம் ஓது - விலை கூறு
    அலங்கி - இரங்கி 15

    சந்திர வட்டமொரு கண்ணாடி ஆயிரம்
    பொண் பெருந் தையலரே - அது
    தானும் போதா தொரு
    சூரிய வட்டத்தின் மேல் விலை
    சற்குணமே சமய மிது
    தமையன் மார்கள் வருவாரடி
    தருவாய் திரவியம் ஓதடி
    தடித்துப் புடைத்துக் குடத்தி லடைக்க (சந்திர)
    16. சந்திர வட்டம், சூரிய வட்டம் - வளையல் வகைகள்
    சற்குணம் - நற்குணம் உடையவள்
    திரவியம் - பொருள் - விலை 16

    வள்ளி:-

    ஆயிரம் பொன்பொருள் தாரே னுனக்கு
    வரகு கூவரகு தனபடியாய் விளைந்த(து)
    தானே இருக்கு தவிட்டரிசி புல்என்
    தாய் தந்தைக் கோர் குழந்தை
    தாதிகளுஞ் சகியார் நீ வந்ததுமே அறியார்
    தருநிதி கள் வேறே இல்லை
    தருவாய் பெறுவாய் குறைசொல் லாமல்தானே (ஆயிரம்)
    17. தாரேன் - தரமாட்டேன்; கூவரகு - வரகின் ஒருவகை (வழக்கு)
    சகியார் - விரும்பார்; தருநிதிகள் - வேறு செல்வங்கள்
    தனபடியாய் - தானப்படிஎன்ற வழக்குச்சொல் -
    அதிகமாய் எனப்பொருள் தரும் 17

    முருகன்:-

    ஆருக்கு வேணும் தவிட்டரிசி புல்
    அசலார் வசை சொல்லுவார் - இதை
    அப்புறஞ் சொன்னாலுமே என் குலப்
    பழிப்பாக எனை வெல்லுவார்
    ஆதி நேரமும் ஆச்சே தினைப்
    பதிதா னிருப் பாச்சே
    அகங் காரமோ பகை நேரமோ
    அலைச்சல் உளைச்சல் விளைச்சல் இருந்தும் (ஆருக்கு)
    18. ஆருக்கு - யாருக்கு; அசலார் - அயலார் - அடுத்தவர் - இங்கே இனத்தவர்
    அதிநேரம் -அதிக நேரம்; இருப்பு - தங்குமிடம்
    அகங்காரமோ - உன் ஆணவமோ
    பகை நேரமோ - என் கெட்ட நேரமோ 18

    வள்ளி:-

    ஆனா லுனக்குத் தரவொரு காசில்லை
    அண்ணே யென் செய்வேன் - முள்
    ளடர்வனந் தனில் விளைதினை யல்லாமல்
    ஆர் கொடுப் பார் காசு
    அச்சமான தில்லாமலே
    இச்சணமே யேகிவிடு
    அறிந்து தெரிந்தும் இருந்தும் ஆவதென் (ஆனாலுனக்கு)
    19. முள்ளடர் வனம் - முள்ளடர்ந்த காடு
    இச்சணம்-இந்தக்ஷணம் - எதுகை நோக்கித் திரிந்தது 19

    முருகன்:-

    கானக் குறத்தியே நான் சொல்லும் வார்த்தை கேள்
    கைக்கு வளையிடு வேன்
    கட்டி யணைந்திடு முத்தங் கொடுத்திங்கு
    காமனையுஞ் செயிப்பாய்
    கலையைத் திற துடை தட்டியே
    சிலையைக் கனை மூட்டியே
    கனக ஸ்தனமும் நெருடியே
    கருத்தில் நினைத்த படிக்கு முடிப்பேன் (கானக்)
    20. காமனை - காமத்தைக் குறித்து வந்தது; கலை - ஆடை 20

    வள்ளி:-

    போங்காணும் பித்தப் பயித்தியங் கொண்டிடும்
    போதங் கெட்ட செட்டியே-(இந்தப்)
    புத்தி நீ எங்குப் படித்தாயிது
    போதுமோ சொல் மட்டியே
    பொறுக்க முடி யாதே யினி
    முறுக்கும் மீசைக் கார ருனைப்
    பொருவார் எதிர்வார் மனம்
    பொறுத்தேன் உரைத்தேன் குறத்தி நானல்லவோ(போங்காணும்)
    21. பித்தப் பயித்தியம் - ஒருபொருட் பன்மொழி
    போதங் கெட்ட - அறிவு கெட்ட; மட்டி - மடையன்
    முறுக்கும் மீசைக்காரர் - தமையன் மார் 21

    பாங்காக நெத்தியில் பட்டமுஞ் சாத்தி என்
    பக்கத்தில் வந்தா(ய்) - எந்தன்
    பாங்கிமார் காணாமல் போங்காணுஞ் செட்டியே
    பட்டப் பக லல்ல வோ
    பல பேருட மகனே குற
    குல மென்றெனை அறியாயோ நீ
    பகவான் விதிப் படியோ இது
    பகரும் விகடம் குகனுக் கேற்குமோ (பாங்காக)
    22. பாங்காக - அழகாக; பட்டமும் - திருநீறும்
    பாங்கிமார் - தோழியர்; பலபேருட மகன் - இழிவுரை
    பகவான்- இறைவன்; விகடம் - கேலிப் பேச்சு
    குகன் - முருகன் 22

    செட்டி மகன்செட்டி போலே யெனதுட்
    சிந்தையில் தோணவில்லை - கள்ளர்
    சில்லாக்கு வந்த கள்ளரே அல்லாது
    தெய்வ வணக்க மில்லை
    செங்கைவடி வேலனே எங்கள்குல தெய்வமே
    சின்னஞ்சிறு பெண்ணல்லவோ
    சிவனார் மகன் அடியாள் எனை
    தீங்காகவே நினையாம லேபோம் (செட்டிமகன்)
    23. சில்லாக்கு- வழக்குச்சொல்
    கள்ளரே - திருடர்போல்
    சிவனார் மகன் - முருகன் 23

    பட்டப் பகலில் பறிகொடுத்தவன் போல்
    பார்த்து விழிக்கிறாய் - உன்னைப்
    பார்க்கிலுங் கெட்டிக் காரன்போல்
    தோன்றுதென் பரணி லொளிக்கிறாய்
    பரிகாச மோயிரு உந்தனை ஒருபோதும்
    விடார் கந்தனே
    பயமில்லையோ அயில் கொண்டுனை
    பறித்துக் குறித்துத் தரித்து விடுவார் (பட்டப் பகலில்)
    24. ஒளிக்கிறாய் - ஒளிகிறாய்
    பரிகாசமோ - கேலி செய்கிறாயோ; அயில் - வேல் 24

    முருகன்:-

    ஆதர வாகவுன் ஆலோலச் சத்தங்கேட்
    டன்புட னிங்கு வந்தேன் - இங்கே
    ஆண்துணை இல்லையே நாம்போவோ மென்றெண்ணி
    அயர்ந்து நா னிங்கு வந்தேன்
    அழகு வடி வான பொருள்
    வளைய லிது கிடையா திது
    அறி ஒருப கார மிது
    அணிவாய் பணிவாய் துணிவா யிப்போது (ஆதரவாக)
    25. ஆதர வாக - அன்பாக; ஆலோலம் - ஒலி
    உபகாரம் - உதவி 25

    வள்ளி:-

    ஏதுமறி யாத போதங்கெட்ட செட்டி
    ஏகும் வழி பாரு - இங்கு
    எந்தனண் ணன்மார்கள் வந்து விடுவார்கள்
    ஏசல் புரி யாதே
    இண்டஞ்செடி யல்லோதலை கண்டுமவர் கொய்துவிட
    ஏகும் வழி யறியாமலே - நீ
    போகுந் தடந் தெரியாமலே
    இச்சணமே ஏகிவிடு (ஏதுமறி)
    26. ஏகும் வழி பாரு - தப்பிப் போக வழிபார்; ஏசல் - இகழ்ச்சி
    இண்டஞ்செடியல்லோ - இண்டஞ்செடியைக் கொய்வதுபோல்
    தடம் - பாதை; இச்சணம் - இ-க்ஷணம் - இப்பொழுதே 26

    முருகன்:-

    மாது குறவள்ளி மங்கையே நான்கொண்ட
    மய்யலைத் தீராயோ - மோக
    மாகினே னுந்தன்மேல் தாகமுங் கொண்டேன்
    காமன் றனை வெல்லுவாய்
    மலை யுற்றிடுங் குமரேசனும்
    வரமுற்றிலும் அருள் செய்குவார்
    மனதில் குறை நினையா மலே
    மருவி செருவி உருவிப் புணர்வோம் (மாது)
    27. மய்யல் - மையல்; மோகம் - காதல்
    மருவி - கலந்து; செருவி - ஊடி 27

    கோதை குழல்வள்ளி நாயகி யேஎன்னைக்
    கூடி மருவிடு வாய்
    கோமா னிருக்கும் கொலுவுக்கும் பாதை
    கொண்டுமே காட்டிடு வாய்
    குலவித்தைகளோ ஸ்தம்பனத்தில்
    வித்தைகளோ செப்படி குறி
    காரணமோ அறியேன்
    குறத்தி சமர்த்தி நிறுத்தி வையாதே (கோதைகுழல்)
    28. கோதை - மாலை
    கோமான் - அரசன் - இங்கே மன்மதனைக் குறிக்க வந்தது
    தம்பன வித்தை - உடலை அசைவற நிறுத்தும் வித்தை
    செப்படி - செப்பிடுவித்தை - தந்திரவித்தை - செப்பில்
    பந்தினை இட்டு மறைத்துக் காட்டும் வித்தை
    சமர்த்தி - கெட்டிக்காரி;
    குறி - ஒருவகைச் சாத்திரம் சொல்லுதல் 28

    வள்ளி:-

    செட்டி வெகு கெட்டிக்கார நீயல்லது
    கேலிக ளின்ன முண்டோ - புனக்
    கிள்ளைகளும் வனத்துள்ள பக்ஷிகளும்
    கிளைகள் கூட்டும் உண்டோ
    கிளையின் முறை உளதாயின
    குளவின்தகு வளை கழனியில்
    கெச கரணம் போட்டுவிடும்
    கிறுக்கோ திருக்கோ யிதுக்கோ வந்தாய்நீ (செட்டிவெகு)
    29. கெச கரணம் - யானை காதை அசைப்பது போல்
    அசைக்கும் வித்தை; திருக்கு - வஞ்சகம் 29

    ஒட்டாத வார்த்தையை நெட்டூர மாகவே
    முன்னே யுரைத்தாயே நீயும்
    ஓடிப்போ நில்லாத நானும் வேள்விமலைக்
    குகந்த குறத்தி யல்லோ
    உள்ளபடி சொல்லுகி றேன்
    வள்ளியெனும் பெயரானதும்
    உலகந் தனிலே கேட்டிடு
    ஒளியின்ற வெகு பலன் சொல் (ஒட்டாத)
    30. ஒட்டாத வார்த்தை - பொருந்தாத சொல்
    நெட்டூரம் - நிட்டூரம் - கொடுமை
    வேள்விமலை - வள்ளிக்குரிய மலை 30

    மேவுங் குணவிதரண வள்ளி யெனவடி
    வேலனுமே நினைந்தான் - குற
    வேடங்கொண் டாப ரணங்களை
    சூட்டினார் மெல்லியாள் என்றணைந்தார்
    வேறே கதையாச்சே முதற்
    சீரானதி லவன் போந்து
    விபதை மகளான தினால் விடுமா
    விரும்பி விரும்பிப் புகழ்ந்து (மேவும்)
    31. குணவிதரண - குணச்சிறப்பு மிகுந்த (விதரணம் - அறிவு)
    விபதை - தேவமகள் - திருமகள் 31

    நாவலர் போற்றும் கவிவாணர் களுக்கும்
    நாட்டி லனை வோர்க்கும்
    நாடரிய வேலவர் தாசனடி யவர்
    நண்பர்க்கும் வாழியதே
    பலமாக சண்முக தாசனும்
    கலைவாணி தனைப் போற்றியே
    நல்கு தமிழ்ச் செல்வ மிது
    நாளும் வாழ வாழி தாமே (நாவலர் போற்றும்)
    32. நாடரிய - அருமையான - உயர்ந்த
    (தேடக் கிடைக்காத செல்வம் என்பது போல)
    சண்முக தாசன் - ஆசிரியர் பெயர் 32
    கந்தன் மணம்புரி சிந்து முற்றும்