MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    சேக்கிழார் அருளிய
    திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
    முதற் காண்டம் (பன்னிரண்டாம் திருமுறை )
    சருக்கம் 1 (திருமலைச் சருக்கம்)

    1. திருமலைச் சருக்கம்
    1.00 பாயிரம் (1-10)
    1.01 திருமலைச் சிறப்பு (11-50)
    1.02 திரு நாட்டுச் சிறப்பு (51-85)
    1.03 திருநகரச் சிறப்பு (86-135)
    1.04 திருக்கூட்டச் சிறப்பு (136-146)
    1.05 தடுத்தாட்கொண்ட புராணம் (147-349)

    1.00 பாயிரம்


    001 உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
    நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
    அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
    மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம். 1.0.1
    002 ஊன் அடைந்த உடம்பின் பிறவியே
    தான் அடைந்த உறுதியைச் சாருமால்;
    தேன் அடைந்த மலர்ப் பொழில் தில்லையுள்
    மா நடஞ் செய் வரதர் பொற்றாள் தொழ. 1.0.2
    003 எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
    நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
    தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
    கடக் களிற்றைக் கருத்துள் இருத்து வாம். 1.0.3
    004 மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன்
    துதி செயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்
    பொதி நலன் நுகர்தரு புனிதர் பேரவை
    விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே. 1.0.4
    005 அளவிலாத பெருமையராகிய
    அளவிலா அடியார் புகழ் கூறுகேன்
    அளவு கூட உரைப்பது அரிது ஆயினும்
    அளவிலாசை துரைப்ப அறைகுவேன். 1.0.5
    006 தெரிவரும் பெருமைத் திருத் தொண்டர் தம்
    பொருவரும் சீர் புகலலுற்றேன் முற்றப்
    பெருகு தெண் கடல் ஊற்றுண் பெரு நசை
    ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன். 1.0.6
    007 செப்பலுற்ற பொருளின் சிறப்பினால்
    அப் பொருட்கு உரை யாவரும் கொள்வர் ஆல்
    இப் பொருட்கு என் உரை சிறிது ஆயினும்
    மெய்ப் பொருட்கு உரியார் கொள்வர் மேன்மையால். 1.0.7
    008 மேய இவ் உரை கொண்டு விரும்புமாம்
    சேயவன் திருப் பேர் அம்பலம் செய்ய
    தூய பொன்னணி சோழன் நீடூழிபார்
    ஆய சீர் அநபாயன் அரசவை. 1.0.8
    009 அருளின் நீர்மைத் திருத் தொண்டறிவரும்
    தெருளில் நீரிது செப்புதற்காம் எனின்
    வெருளில் மெய் மொழி வான் நிழல் கூறிய
    பொருளின் ஆகும் எனப் புகல்வாம் அன்றே. 1.0.9
    010 இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள்
    தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
    பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற
    செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம். 1.0.10


    1. திருமலைச் சருக்கம்

    1. 1 திருமலைச் சிறப்பு


    திருச்சிற்றம்பலம்

    011 பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப்
    பன்னும் நீள்பனி மால்வரைப் பாலது
    தன்னை யார்க்கும் அறிவரியான் என்றும்
    மன்னிவாழ் கயிலைத் திரு மாமலை. 1.1.1
    012 அண்ணல் வீற்றிருக்கப் பெற்றதாதலின்
    நண்ணும் மூன்று உலகுந் நான்மறைகளும்
    எண்ணில் மாதவம் செய்ய வந்தெய்திய
    புண்ணியந் திரண்டு உள்ளது போல்வது. 1.1.2
    013 நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி
    இலகு தண்தளிர் ஆக எழுந்ததோர்
    உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல்
    மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை. 1.1.3
    014 மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்
    கான வீணையின் ஓசையும் காரெதிர்
    தான மாக்கள் முழக்கமும் தாவில் சீர்
    வான துந்துபி ஆர்ப்பும் மருங்கெலாம். 1.1.4
    015 பனி விசும்பில் அமரர் பணிந்துசூழ்
    அனித கோடி அணிமுடி மாலையும்
    புனித கற்பகப் பொன்னரி மாலையும்
    முனிவர் அஞ்சலி மாலையும் முன்னெனலாம். 1.1.5
    016 நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்
    நாடும் ஐம் பெரும் பூதமும் நாட்டுவ
    கோடி கோடி குறட்சிறு பூதங்கள்
    பாடி ஆடும் பரப்பது பாங்கெலாம். 1.1.6
    017 நாயகன் கழல் சேவிக்க நான்முகன்
    மேய காலம் அலாமையின் மீண்டவன்
    தூயமால்வரைச் சோதியில் மூழ்கியொன்று
    ஆய அன்னமும் காணா தயர்க்குமால். 1.1.7
    018 காதில் வெண்குழையோன் கழல் தொழ
    நெடியோன் காலம் பார்த்திருந்தும் அறியான்
    சோதி வெண் கயிலைத் தாழ்வரை முழையில்
    துதிக்கையோன் ஊர்தியைக் கண்டு
    மீதெழு பண்டைச் செஞ் சுடர் இன்று
    வெண்சுடர் ஆனது என்றதன் கீழ்
    ஆதி ஏனமதாய் இடக்கலுற்றான்
    என்றதனை வந்தணைதரும் கலுழன். 1.1.8
    019 அரம்பையர் ஆடல் முழவுடன்
    மருங்கில் அருவிகள் எதிர் எதிர் முழங்க
    வரம் பெறு காதல் மனத்துடன் தெய்வ
    மது மலர் இருகையும் ஏந்தி
    நிரந்தரம் மிடைந்த விமான சோபான
    நீடுயர் வழியினால் ஏறிப்
    புரந்தரன் முதலாங் கடவுளர் போற்றப்
    பொலிவதத் திருமலைப் புறம்பு. 1.1.9
    020 வேத நான்முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்ணிலார் மற்றும்
    காதலால் மிடைந்த முதல் பெருந்த் தடையாம் கதிர் மணிக் கோபுரத்துள்ளார்
    பூத வேதாளப் பெரும் கண நாதர் போற்றிடப் பொதுவில் நின்று ஆடும்
    நாதனார் ஆதி தேவனார் கோயில் நாயகன் நந்தி எம்பெருமான். 1.1.10
    022 நெற்றியின் கண்ணர் நாற் பெருந்தோளர் நீறணி மேனியர் அநேகர்
    பெற்றமேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன் தன் அருள் பெறுவார்
    மற்றவர்க் கெல்லாம் தலைமையாம் பணியும் மலக்கையில் சுரிகையும் பிரம்பும்
    கற்றைவார் சடையான் அருளினால் பெற்றான் காப்பதக் கயிலைமால் வரைதான். 1.1.11
    022 கையில்மான் மழுவர் கங்கைசூழ் சடையில் கதிரிளம் பிறைநறுங் கண்ணி
    ஐயர் வீற்றிருக்கும் தன்மையினாலும் அளப்பரும் பெருமையினாலும்
    மெய்யொளி தழைக்கும் தூய்மையினாலும் வென்றி வெண்குடை அநபாயன்
    செய்யகோல் அபயன் திருமனத்தோங்கும் திருக்கயிலாய நீள்சிலம்பு. 1.1.12
    023 அன்ன தன்திருத் தாழ்வரையின் இடத்து
    இன்ன தன்மையன் என்றறியாச் சிவன்
    தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான்
    உன்னாரும் சீர் உபமன் னிய முனி. 1.1.13
    024 யாதவன் துவரைக்கிறை யாகிய
    மாதவன் முடிமேல் அடி வைத்தவன்
    பூதநாதன் பொருவருந் தொண்டினுக்கு
    ஆதி அந்தம் இலாமை அடைந்தவன். 1.1.14
    025 அத்தர் தந்த அருட் பாற்கடல் உண்டு
    சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்
    பத்தராய முனிவர் பல்லாயிரவர்
    சுத்த யோகிகள் சூழ இருந்துழி. 1.1.15
    026 அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு
    பொங்கு பேரொளி போன்று முன் தோன்றிடத்
    துங்க மாதவர் சூழ்ந்திருந்தாரெலாம்
    இங்கி தென்கொல் அதிசயம் என்றலும். 1.1.16
    027 அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்
    சிந்தியா உணர்ந்தம் முனி தென் திசை
    வந்த நாவலர் கோன்புகழ் வன்தொண்டன்
    எந்தையார் அருளால் அணைவான் என. 1.1.17
    028 கைகள் கூப்பித் தொழுதெழுந்து அத் திசை
    மெய்யில் ஆனந்த வாரி விரவிடச்
    செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி
    ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர். 1.1.18
    029 சம்புவின் அடித் தாமரைப் போதலால்
    எம்பிரான் இறைஞ்சாயிஃதென் எனத்
    தம்பிரானைத் தன் உள்ளம் தழீயவன்
    நம்பி ஆரூரன் நாம்தொழும் தன்மையான். 1.1.19
    030 என்றுகூற இறைஞ்சி இயம்புவார்
    வென்ற பேரொளியார் செய் விழுத்தவம்
    நன்று கேட்க விரும்பும் நசையினோம்
    இன்றெமக்குரை செய்து அருள் என்றலும். 1.1.20
    031 உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்
    வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொருளாகிய
    வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும்
    அள்ளும் நீறும் எடுத்தணை வானுளன். 1.1.21
    032 அன்னவன் பெயர் ஆலால சுந்தரன்
    முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன் தனக்கு
    இன்ன ஆமெனும் நாண்மலர் கொய்திடத்
    துன்னினான் நந்தவனச் சூழலில். 1.1.22
    033 அங்கு முன்னரே ஆளுடை நாயகி
    கொங்கு சேர் குழற்காம் மலர் கொய்திடத்
    திங்கள் வாள்முகச் சேடியர் எய்தினார்
    பொங்கு கின்ற கவினுடைப் பூவைமார். 1.1.23
    034 அந்தமில் சீர் அனிந்திதை ஆய்குழல்
    கந்த மாலைக் கமலினி என்பவர்
    கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி
    வந்து வானவர் ஈசர் அருள் என. 1.1.24
    035 மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்
    தீது இலாத் திருத் தொண்டத் தொகை தரப்
    போதுவார் அவர் மேல்மனம் போக்கிடக்
    காதல் மாதரும் காட்சியில் கண்ணினார். 1.1.25
    036 முன்னம் ஆங்கவன் மொய்ம்முகை நாண்மலர்
    என்னை ஆட்கொண்ட ஈசனுக்கேய்வன
    பன் மலர் கொய்து செல்லப் பனிமலர்
    அன்னம் அன்னவருங் கொண்டகன்ற பின். 1.1.26
    037 ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே
    மாதர் மேல் மனம் வைத்தனை தென்புவி
    மீது தோன்றி அம் மெல்லியலார் உடன்
    காதல் இன்பம் கலந்து அணைவாய் என. 1.1.27
    038 கைகள் அஞ்சலி கூப்பிக் கலங்கினான்
    செய்ய சேவடி நீங்குஞ் சிறுமையேன்
    மையல் மானுடமாய் மயங்கும் வழி
    ஐயனே தடுத்தாண்டருள் செய் என. 1.1.28
    039 அங்கணாளன் அதற்கருள் செய்த பின்
    நங்கை மாருடன் நம்பிமற்றத் திசை
    தங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாறுமென்று
    அங்கவன் செயல் எல்லாம் அறைந்தனன். 1.1.29
    040 அந்தணாளரும் ஆங்கது கேட்டவர்
    பந்த மானிடப் பாற்படு தென்திசை
    இந்த வான்திசை எட்டினும் மேற்பட
    வந்த புண்ணியம் யாதென மாதவன். 1.1.30
    041 பொருவருந் தவத்தான் புலிக் காலனாம்
    அரு முனி எந்தை அர்ச்சித்தும் உள்ளது
    பெருமை சேர்பெரும் பற்றப்புலியூர் என்று
    ஒருமையாளர் வைப்பாம் பதி ஓங்குமால். 1.1.31
    042 அத் திருப்பதியில் நமை ஆளுடை
    மெய்த் தவக்கொடி காண விருப்புடன்
    அத்தன் நீடிய அம்பலத்தாடும் மற்று
    இத் திறம் பெறலாம் திசை எத்திசை. 1.1.32
    043 பூதம் யாவையின் உள்ளலர் போதென
    வேத மூலம் வெளிப்படு மேதினிக்
    காதல் மங்கை இதய கமலமாம்
    மாதொர் பாகனார் ஆரூர் மலர்ந்ததால். 1.133
    044 எம்பிராட்டி இவ்வேழுலகு ஈன்றவள்
    தம்பிரானைத் தனித் தவத்தால் எய்திக்
    கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்று
    உம்பர் போற்றும் பதியும் உடையது. 1.1.34
    045 நங்கள் நாதனாம் நந்தி தவஞ்செய்து
    பொங்கு நீடருள் எய்திய பொற்பது
    கங்கை வேணி மலரக் கனல்மலர்
    செங்கை யாளர் ஐயாறும் திகழ்வது. 1.1.35
    046 தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை
    ஈசர் தோணி புரத்துடன் எங்கணும்
    பூசனைக்குப் பொருந்தும் இடம் பல
    பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை. 1.1.36
    047 என்று மாமுனி வன்தொண்டர் செய்கையை
    அன்று சொன்ன படியால் அடியவர்
    தொன்று சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி
    இன்று என் ஆதரவால் இங்கியம்புகேன். 1.1.37
    048 மற்றிதற்குப் பதிகம் வன்தொண்டர் தாம்
    புற்று இடத்து எம்புராணர் அருளினால்
    சொற்ற மெய்த் திருத்தொண்டத்தொகை எனப்
    பெற்ற நற்பதிகம் தொழப் பெற்றதாம். 1.1.38
    049 அந்த மெய்ப் பதிகத்து அடியார்களை
    நம்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பி
    புந்தி ஆரப் புகன்ற வகையினால்
    வந்த வாறு வழாமல் இயம்புவாம். 1.1.39
    050 உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும்
    அலகில் சீர்நம்பி ஆரூரர் பாடிய
    நிலவு தொண்டர்தம் கூட்டம் நிறைந்துறை
    குலவு தண்புனல் நாட்டணி கூறுவாம். 1.1.40

    1.2 திருநாட்டுச் சிறப்பு


    திருச்சிற்றம்பலம்

    051 பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுள்
    கோட்டுயர் பனிவரைக் குன்றின் உச்சியில்
    சூட்டிய வளர் புலிச் சோழர் காவிரி
    நாட்டியல்பதனை யான் நவிலல் உற்றனன். 1.2.1
    052 ஆதி மாதவமுனி அகத்தியன் தரு
    பூத நீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி
    மாதர் மண் மடந்தை பொன் மார்பில் தாழ்ந்ததோர்
    ஓதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால். 1.2.2
    053 சையமால் வரை பயில் தலைமை சான்றது
    செய்ய பூ மகட்கு நற் செவிலி போன்றது
    வையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும்
    உய்யவே சுரந்தளித் தூட்டும் நீரது. 1.2.3
    054 மாலின் உந்திச்சுழி மலர் தன் மேல் வரும்
    சால்பினால் பல்லுயிர் தரும் தன் மாண்பினால்
    கோல நற்குண்டிகை தாங்குங் கொள்கையால்
    போலும் நான்முகனையும் பொன்னி மாநதி. 1.2.41
    055 திங்கள் சூடிய முடிச் சிகரத்து உச்சியில்
    பொங்கு வெண் தலை நுரை பொருது போதலால்
    எங்கள் நாயகன் முடிமிசை நின்றேயிழி
    கங்கையாம் பொன்னியாம் கன்னி நீத்தமே. 1.2.5
    056 வண்ண நீள் வரை தர வந்த மேன்மையால்
    எண்ணில் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால்
    அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி
    உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது. 1.2.6
    057 வம்புலா மலர் நீரால் வழிபட்டுச்
    செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்து
    எம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னி
    உம்பர் நாயகர்க்கன்பரும் ஒக்குமால். 1.2.7
    058 வாசநீர் குடை மங்கையர் கொங்கையில்
    பூசும் குங்குமமும் புனை சாந்தமும்
    வீசு தெண்டிரை மீதிழந்தோடும் நீர்
    தேசுடைத் தெனினும் தெளிவில்லதே. 1.2.8
    059 மாவிரைத் தெழுந்து ஆர்ப்ப வரை தரு
    பூ விரித்த புதுமதுப் பொங்கிட
    வாவியிற் பொலி நாடு வளம்தரக்
    காவிரிப் புனல் கால்பரந்து ஓங்குமால். 1.2.9
    060 ஒண் துறைத் தலை மாமத கூடு போய்
    மண்டு நீர்வயலுட்புக வந்தெதிர்
    கொண்ட மள்ளர் குரைத் தகை ஓசைபோய்
    அண்டர் வானத்தின் அப்புறஞ் சாருமால். 1.2.10
    061 மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும்
    சீத நீர்முடி சேர்ப்பவர் செய்கையும்
    ஒதையார் செய் உழுநர் ஒழுக்கமும்
    காதல் செய்வதோர் காட்சி மலிந்ததே. 1.2.11
    062 உழுத சால்மிக வூறித் தெளிந்த சேறு
    இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம்
    தொழுது நாறு நடுவார் தொகுதியே
    பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம். 1.2.12
    063 மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்
    கண்டுழவர் பதங்காட்டக் களைகளையுங் கடைசியர்கள்
    தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்
    வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார். 1.2.13
    064 செங்குவளை பறித்தணிவார் கருங்குழல்மேல் சிறை வண்டை
    அங்கை மலர்களைக் கொடுகைத்தயல் வண்டும் வரவழைப்பார்
    திங்கள்நுதல் வெயர்வரும்பச் சிறுமுறுவல் தளவரும்பப்
    பொங்குமலர்க் கமலத்தின் புதுமதுவாய் மடுத்தயர்வார். 1.2.14
    065 கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்னச்
    கரும்பல்லி குடைநீலத் துகளல்ல பகலெல்லாம்
    அரும்பல்ல முலையென்ன அமுதல்ல மொழியென்ன
    வரும்பல்லாயிரம் கடைசி மடந்தையர்கள் வயல்எல்லாம். 1.2.15
    066 கயல்பாய் பைந்தட நந்தூன் கழிந்த கருங்குழிசி
    வியல்வாய் வெள்வளைத் தரள மலர்வேரி உலைப்பெய்தங்
    கயலாமை அடுப்பேற்றி அரக்காம்பல் நெருப்பூதும்
    வயல்மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பெல்லாம். 1.2.16
    067 காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
    மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
    கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
    நாடெல்லாம் நீர்நாடு தனை ஒவ்வா நலமெல்லாம். 1.2.17
    068 ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும்
    சோலை வாய்வண்டு இரைத்தெழு சும்மையும்
    ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும்
    வேலை ஓசையின் மிக்கு விரவுமால். 1.2.18
    069 அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில்
    துன்னும் மேதிபடியத் துதைந்தெழும்
    கன்னி வாளை கமுகின் மேற்பாய்வன
    மன்னு வான்மிசை வானவில் போலுமால். 1.2.19
    070 காவினிற் பயிலுங்களி வண்டினம்
    வாவியிற் படிந்து உண்ணும் மலர் மது
    மேவி அத்தடம் மீதெழப் பாய்கயல்
    தாவி அப்பொழிலிற் கனி சாடுமால் 1.2.20
    071 சாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு
    வாலிதாம் வெண்மை உண்மைக் கருவினாம் வளத்தவாகிச்
    சூல்முதிர் பசலை கொண்டு சுருல் விரித்தானுக் கன்பர்
    ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்களெல்லாம். 1.2.21
    072 பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர்
    தத்தமிற் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல்
    மொய்த்தநீள் பத்தியின்பால் முதிர்தலை வணங்கி மற்றை
    வித்தகர் தன்மை போல விளைந்தன சாலியெல்லாம். 1.2.22
    073 அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்
    பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்
    சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப் பெரும் பொருப்பு யாப்பர்
    விரிமலர் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார். 1.2.23
    074 சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்
    காலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்
    ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்
    மேல் வலங் கொண்டு சூழுங் காட்சியின் மிக்கதன்றே. 1.2.24
    075 வைதெரிந் தகற்றி ஆற்றி மழைப் பெயல் மானத் தூற்றிச்
    செய்ய பொற் குன்றும் வேறு நவமனிச் சிலம்பும் என்னக்
    கைவினை மள்ளர் வானம் கரக்கவாக்கிய நெல் குன்றால்
    மொய்வரை உலகம் போலும் முளரிநீர் மருத வைப்பு. 1.2.25
    076 அரசுகொள் கடன்கள் ஆற்றி மிகுதிகொண்டறங்கள் பேணிப்
    பரவருங் கடவுட் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின்
    விரவிய கிளையும் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி
    வரைபுரை மாடம்நீடி மல்ர்ந்துள பதிகள் எங்கும். 1.2.26
    077 கரும்படு களமர் ஆலைக் கமழ்நறும் புகையோ மாதர்
    சுரும்பெழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்விப்
    பெரும் பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய புகையோ வானின்
    வருங்கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும். 1.2.27
    078 நாளிகேரஞ் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்
    கோளி சாலந்த மாலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்
    தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்
    நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும். 1.2.28
    079 சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல் எங்கும்
    சாதி மாலதிகள் எங்கும் தண்தளிர் நறவம் எங்கும்
    மாதவி சரளம் எங்கும் வகுள சண்பகங்கள் எங்கும்
    போதவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம் எங்கும். 1.2.29
    080 மங்கல வினைகள் எங்கும் மணஞ் செய் கம்பலைகள் எங்கும்
    பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை எங்கும்
    பொங்கொளிக் கலன்கள் எங்கும் புது மலர்ப் பந்தர் எங்கும்
    செங்கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும். 1.2.30
    081 மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும்
    யாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும் எங்கும்
    யோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும் எங்கும்
    போகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர் எங்கும். 1.2.31
    082 பண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி எங்கும்
    வண்டறை குழல்கள் எங்கும் வளர் இசைக் குழல்கள் எங்கும்
    தொண்டர் தம் இருக்கை எங்கும் சொல்லுவ திருக்கை எங்கும்
    தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும். 1.2.32
    083 மாடு போதகங்கள் எங்கும் வண்டு போதகங்கள் எங்கும்
    பாடும் அம்மனைகள் எங்கும் பயிலும் அம்மனைகள் எங்கும்
    நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும்
    தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும். 1.2.33
    084 வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்
    சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பா
    நீதிய புள்ளும் மாவும் நிலத்திருப் புள்ளு மாவும்
    ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வரத் தாம் அஞ்சும் 1.2.34
    085 நற்றமிழ் வரைப்பின் ஓங்கு நாம்புகழ் திருநாடு என்றும்
    பொற் தடந் தோளால் வையம் பொதுக் கடிந்து இனிது காக்கும்
    கொற்றவன் அநபாயன் பொற் குடை நிழல் குளிர்வதென்றால்
    மற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்பலாமோ. 1.2.35
    திருச்சிற்றம்பலம்

    1.3 திருநகரச் சிறப்பு


    திருச்சிற்றம்பலம்

    086 சொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கது
    மன்னு மாமலராள் வழி பட்டது
    வன்னியாறு மதி பொதி செஞ் சடைச்
    சென்னியார் திருவாரூர்த் திருநகர். 1.3.1
    087 வேத ஓசையும் வீணையின் ஓசையும்
    சோதி வானவர் தோத்திர ஓசையும்
    மாதர் ஆடல் பாடல் மணி முழவோசையும்
    கீத ஓசையும் மாய்க் கிளர்உற்றவே. 1.3.2
    088 பல்லியங்கள் பரந்த ஒலியுடன்
    செல்வ வீதிச் செழுமணித் தேரொலி
    மல்லல் யானை ஒலியுடன் மாவொலி
    எல்லை இன்றி எழுந்துள எங்கணும். 1.3.3
    089 மாட மாளிகை சூளிகை மண்டபம்
    கூட சாலைகள் கோபுரம் தெற்றிகள்
    நீடு சாளர நீடரங்கு எங்கெணும்
    ஆடல் மாதர் அணி சிலம் பார்ப்பன . 1.3.4
    090 அங்குரைக்கென்ன அளவப் பதியிலார்
    தங்கள் மாளிகையின் ஒன்று சம்புவின்
    பங்கினாள் திருச் சேடி பரவையாம்
    மங்கையார் அவதாரஞ் செய் மாளிகை. 1.3.5
    091 படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிதான்
    இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார்
    தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூது போய்
    நடந்த செந்தாமரை அடி நாறுமால். 1.3.6
    092 செங்கண் மாதர் தெருவில் தெளித்த செங்
    குங்குமத்தின் குழம்பை அவர் குழல்
    பொங்கு கோதையிற் பூந்துகள் வீழ்ந்துடன்
    அங்கண் மேவி அளறு புலர்த்துமால். 1.3.7
    093 உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை
    வள்ளலார் திருவாரூர் மருங்கெலாம்
    தெள்ளும் ஓசைத் திருப்பதிகங்கள் பைங்
    கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள். 1.3.8
    094 விளக்கம் மிக்க கலன்கள் விரவலால்
    துளக்கில் பேரொலியால் துன்னு பண்டங்கள்
    வளத் தொடும் பலவாறு மடுத்தலால்
    அளக்கர் போன்றன ஆவண வீதிகள். 1.3.9
    095 ஆரணங்களே அல்ல மறுகிடை
    வாரணங்களும் மாறி முழங்குமால்
    சீரணங்கிய தேவர்களே அலால்
    தோரணங்களில் தாமமும் சூழுமால். 1.3.10
    096 தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்
    வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்
    வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார்
    சூழ்ந்த பல்வேறு இடத்தத் தொல் நகர். 1.3.11
    097 நில மகட்கு அழகார் திரு நீள் நுதல்
    திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி
    மலர் மகட்கு வண்தாமரை போல்மலர்ந்(து)
    அலகில் சீர்த்திருவாரூர் விளங்குமால். 1.3.12
    098 அன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான்
    துன்னு செங் கதிரோன் வழித் தோன்றினான்
    மன்னு சீர் அநபாயன் வழி முதல்
    மின்னும் மாமணிப் பூண்மனு வேந்தனே. 1.3.13
    099 மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட்கு எல்லாம்
    கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலான்
    விண்ணுளார் மகிழ்வு எய்திட வேள்விகள்
    எண்ணிலாதன் மாண இயற்றினான் . 1.3.14
    100 கொற்ற ஆழிகுவலயஞ் சூழ்ந்திடச்
    சுற்று மன்னர் திறை கடை சூழ்ந்திடச்
    செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம் மனுப்
    பெற்ற நீதியும் தன்பெயர் ஆக்கினான். 1.3.15
    101 பொங்கு மா மறைப் புற்றிடங் கொண்டவர்
    எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
    அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்துளான்
    துங்க ஆகமம் சொன்ன முறைமையால். 1.3.16
    102 அறம் பொருள் இன்பம் ஆன அறநெறி வழாமற் புல்லி
    மறங் கடிந்து அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில்
    சிறந்த நல் தவத்தால் தேவி திருமணி வயிற்றின் மைந்தன்
    பிறந்தனன் உலகம் போற்றப் பேர் அரிக் குருளை அன்னான். 1.3.17
    103 தவமுயன்று அரிதில் பெற்ற தனி இளங் குமரன் நாளும்
    சிவ முயன்றடையுந் தெய்வக் கலை பல திருந்த ஓதிக்
    கவனவாம் புரவி யானை தேர்ப் படைத் தொழில்கள் கற்றுப்
    பவமுயன்றதுவும் பேறே எனவரும் பண்பின் மிக்கான். 1.3.18
    104 அளவில் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க
    உளமகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி
    இளவரசு என்னும் தன்மை எய்துதற்கணியன் ஆகி
    வளரிளம் பரிதி போன்று வாழுநாள் ஒருநாள் மைந்தன். 1.3.19
    105 திங்கள் வெண் கவிகை மன்னன் திரு வளர் கோயில் நின்று
    மங்குல் தோய் மாட வீதி மன்னிளங் குமரர் சூழக்
    கொங்கலர் மாலை தாழ்ந்த குங்குமம் குலவு தோளான்
    பொங்கிய தானை சூழ்த் தேர்மிசைப் பொலிந்து போந்தான். 1.3.20
    106 பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒருபால் பாங்கர்
    விரை நறுங் குழலார் சிந்தும் வெள் வளை ஒருபால் மிக்க
    முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒருபால் வென்றி
    அரசிளங் குமரன் போதும் அணி மணி மாட வீதி. 1.3.21
    107 தனிப்பெருந் தருமம் தானோர் தயாஇன்றித் தானை மன்னன்
    பனிப்பில் சிந்தையினில் உண்மை பான்மை சோதித்தால் என்ன
    மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன்
    புனிற்றிளங் கன்று துள்ளிப் போந்ததம் மறுகினூடே. 1.3.22
    108 அம்புனிற்றாவின் கன்றோர் அபாயத்தின் ஊடு போகிச்
    செம்பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்லப் பட்டே
    உம்பரின் அடையக் கண்டங்கு உருகுதாய் அலமந்தோடி
    வெம்பிடும் அலறும் சோரும் மெய்ந் நடுக்குற்று வீழும். 1.3.23
    109 மற்றுது கண்டு மைந்தன் வந்ததிங்கு அபாயம் என்று
    சொற்றடுமாறி நெஞ்சில் துயருழந்து அறிவு அழிந்து
    பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாளச்
    செற்ற, என் செய்கேன் என்று தேரினின் இன்று இழிந்து வீழ்ந்தான். 1.3.4
    110 அலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்துச் சோரும்
    நிலமிசைக் கன்றை நோக்கி நெடிதுயிர்த்து இரங்கி நிற்கும்
    மலர் தலை உலகங் காக்கும் மனுவெனும் என் கோமானுக்(கு)
    உலகில் இப் பழி வந்து எய்தப் பிறந்தவா ஒருவன் என்பான். 1.3.5
    111 வந்த இப் பழியை மாற்றும் வகையினை மறை நூல் வாய்மை
    அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில்
    எந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன் என்று மைந்தன்
    சிந்தை வெந் துயரம் தீர்ப்பான்திரு மறையவர் முன் சென்றான். 1.3.26
    112 தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத் தரியாதாகி
    முன் நெருப்புயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார
    மன்னுயிர் காக்குஞ் செங்கோல் மனுவின் பொற் கோயில் வாயில்
    பொன்னணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்தது அன்றே. 1.3.27
    113 பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன்
    வழித்திரு மைந்தன் ஆவி கொளவரும் மறலி ஊர்திக்
    கழுத்தணி மணியின் ஆர்ப்போ என்னத்தன் சடைமுன் கோளாத்
    தெழித்தெழும் ஓசை மன்னன் செவிப்புலம் புக்க போது. 1.3.28
    114 ஆங்கது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து
    பூங்கொடி வாயில் நண்ணக் காவலர் எதிரே போற்றி
    ஈங்கிதோர் பசுவந்தெய்தி இறைவ! நின் கொற்ற வாயில்
    தூங்கிய மணியைக் கோட்டால் துளக்கியது என்று சொன்னார். 1.3.29
    115 மன்னவன் அதனைக் கேளா வருந்திய பசுவை நோக்கி
    என் இதற்குற்றது என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்க
    முன்னுற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வித்
    தொல் நெறி அமைச்சன் மன்னன் தாளிணை தொழுது சொல்வான். 1.3.30
    116 வளவ! நின் புதல்வன் ஆங்கோர் மணி நெடுந் தேர்மேல் ஏறி
    அளவில் தேர்த்தானை சூழ அரசுலாந் தெருவில் போங்கால்
    இளையஆன் கன்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்ததாக
    தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை என்றான். 1.3.31
    117 அவ்வுரை கேட்ட வேந்தன் ஆவுறு துயரம் எய்தி
    வெவ்விடந் தலைக் கொண்டாற் போல் வேதனை அகத்து மிக்கிங்கு
    இவ் வினை விளைந்தவாறு என்று இடருறும் இரங்கும் ஏங்கும்
    செவ்விது என் செங்கோல்! என்னும் தெருமரும் தெளியும் தேறான். 1.3.32
    118 மன்னுயிர் புரந்து வையம் பொதுக் கடிந்து அறத்தில் நீடும்
    என்னெறி நன்றால் என்னும் என்செய்தால் தீரும் என்னும்
    தன்னிளங் கன்று காணாத் தாய்முகங் கண்டு சோரும்
    அந் நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்றால். 1.3.33
    119 மந்திரிகள் அதுகண்டு மன்னவனை அடி வணங்கிச்
    சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்கு தீர்வு அன்றால்
    கொந்தலர்த்தார் மைந்தனை முன் கோவதை செய்தார்க்கு மறை
    அந்தணர்கள் விதித்தமுறை வழிநிறுத்தல் அறம் என்றார். 1.3.34
    120 வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்றது தான் வலிப்பட்டு
    குழக்கன்றை இழந்தலறும் கோவுறு நோய் மருந்தாமோ?
    இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீருஞ் சொல்லிய இச்
    சழக்கு இன்று நான் இசைந்தால் தருமந் தான் சலியாதோ? 1.3.35
    121 மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங் காலைத்
    தான தனக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால்
    ஊன மிகு பகைத் திறத்தால் கள்வரால் உயிர் தம்மால்
    ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ? 1.3.36
    122 என் மகன் செய் பாதகத்துக்கு இருந்தவங்கள் செய இசைந்தே
    அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனைக் கொல்வேன் ஆனால்
    தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும் வார்த்தை
    மன்னுலகில் பெற மொழிந்தீர்! மந்திரிகள்! வழக்கு என்றான். 1.3.37
    123 என்று அரசன் இகழ்து உரைப்ப எதிர் நின்ற மதி அமைச்சர்
    நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்ததால்
    பொன்று வித்தல் மரபு அன்று மறை மொழிந்த அறம் புரிதல்
    தொன்று தொடு நெறி யன்றோ? தொல் நிலங் காவல! என்றார். 1.3.38
    124 அவ் வண்ணம் தொழுதுரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி
    மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு வென்னும் விறல் வேந்தன்
    இவ் வண்ணம் பழுது உரைத்தீர் என்று எரியின் இடைத் தோய்ந்த
    செவ் வண்ணக் கமலம் போல் முகம் புலந்து செயிர்த்துரைப்பான். 1.3.39
    125 அவ்வுரையில் வருநெறிகள் அவை நிற்க அறநெறியின்
    செவ்விய உண்மைத் திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர்
    எவ் உலகில் எப் பெற்றம் இப்பெற்றித் தாம் இடரால்
    வெவ்வுயிர்த்துக் கதறி மணி எறிந்து விழுந்தது? விளம்பீர். 1.3.40
    126 போற்றிசைத்துப் புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச
    வீற்றிருந்த பெருமானார் மேவியுறை திருவாரூர்த்
    தோற்றமுடை உயிர் கொன்றான் ஆதலினால் துணிபொருள் தான்
    ஆற்றவுமற்று அவற் கொல்லும் அதுவேயாம் என நினைமின். 1.3.41
    127 என மொழிந்து மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இவ் ஆன்
    மனம் அழியுந் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது
    தனதுறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம் என
    அனகன் அரும் பொருள் துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் அகன்றார். 1.3.42
    128 மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்தொரு மந்திரி தன்னை
    முன்னிவனை அவ்வீதி முரண் தேர்க்கால் ஊர்க என
    அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறப்பத்
    தன்னுடைய குலமகனைத் தான் கொண்டு மறுங்கணைந்தான். 1.3.43
    129 ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான்
    தருமம் தன் வழிச்செல்கை கடன் என்று தன் மைந்தன்
    மருமம் தன் தேராழி உறஊர்ந்தான் மனு வேந்தன்
    அருமந்த அரசாட்சி அரிதோ? மற்று எளிதோ தான். 1.3.44
    130 தண்ணளி வெண் குடை வேந்தன் செயல் கண்டு தரியாது
    மண்ணவர் கண்மழை பொழிந்தார் வானவர் பூ மழை சொரிந்தார்
    அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல்
    விண்ணவர்கள் தொழ நின்றான் வீதி விடங்கப் பெருமான். 1.3.45
    131 சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்குந் திருநுதலும்
    இடம் மருங்கில் உமையாளும் எம் மருங்கும் பூதகணம்
    புடை நெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்ப
    விடை மருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான். 1.3.46
    132 அந் நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அவ் அரசன்
    மன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடன் எழலும்
    இன்ன பரிசானான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும்
    முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ? 1.3.47
    133 அடி பணிந்த திருமகனை ஆகமுற எடுத்து அணைத்து
    நெடிது மகிழ்ந்து அருந் துயரம் நீங்கினான் நிலவேந்தன்
    மடி சுரந்து பொழிதீம் பால் வருங் கன்று மகிழ்ந்துண்டு
    படி நனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே. 1.3.48
    134 பொன் தயங்கு மதிலாரூர்ப் பூங்கோயில் அமர்ந்தபிரான்
    வென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே அருள்கொடுத்து
    சென்று அருளும் பெரும் கருணைத் திறம் கண்டு தன் அடியார்க்கு
    என்றும் எளிவரும் பெருமை ஏழ் உலகும் எடுத்தேத்தும். 1.3.49
    135 இனைய வகை அற நெறியில் எண்ணிறந்தோர்க்கு அருள் புரிந்து
    முனைவர் அவர் மகிழ்ந்தருளப் பெற்றுடைய மூதூர் மேல்
    புனையும் உரை நம்மளவில் புகலலாந் தகைமையதோ?
    அனைய தனுக் ககமலராம் அறவனார் பூங்கோயில். 1.3.50

    திருச்சிற்றம்பலம்

    1.4 திருக்கூட்டச் சிறப்பு


    திருச்சிற்றம்பலம்

    136 பூத நாயகர் புற்று இடம் கொண்டவர்
    ஆதி தேவர் அமர்ந்த பூங் கோயிலிற்
    சோதி மாமணி நீள் சுடர் முன்றில் சூழ்
    மூதெயில் திரு வாயில் முன்னாயது. 1.4.1
    137 பூவார் திசை முகன் இந்திரன் பூ மிசை
    மா வாழ் அகலத்து மால் முதல் வானவர்
    ஓவாது எவரும் நிறைந்து உள்ளது
    தேவா சிரியன் எனுந் திருக் காவணம். 1.4.2
    138 அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல்
    நிரந்த நீற்று ஒளியால் நிறை தூய்மையால்
    புரந்த அஞ்சு எழுத்து ஓசை பொலிதலால்
    பரந்த ஆயிரம் பாற் கடல் போல்வது. 1.4.3
    139 அகில காரணர் தாள பணிவார்கள் தாம்
    அகில லோகமும் ஆளற்கு உரியர் என்று
    அகில லோகத்து உளார்கள் அடைதலின்
    அகில லோகமும் போல்வத தனிடை. 1.4.4
    140 அத்தர் வேண்டி முன் ஆண்டவர் அன்பினால்
    மெய்த் தழைந்து விதிர்ப்புறு சிந்தையார்
    கைத் திருத் தொண்டு செய்கடப் பாட்டினார்
    இத்திறத்தவர் அன்றியும் எண்ணிலார். 1.4.5
    141 மாசிலாத மணி திகழ் மேனி மேல்
    பூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள்
    தேசினால் எத் திசையும் விளங்கினார்
    பேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார். 1.4.6
    142 பூதம் ஐந்தும் நிலையிற் கலங்கினும்
    மாதோர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்
    ஓது காதல் உறைப்பின் நெறி நின்றார்
    கோதிலாத குணப் பெருங் குன்றனார். 1.4.7
    143 கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
    ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
    கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
    வீடும் வேண்டா விறலின் விளங்கினார். 1.4.8
    144 ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
    பாரம் ஈசன் பணி அலாது ஒன்று இலார்
    ஈர அன்பினர் யாதுங் குறைவு இலார்
    வீரம் என்னால் விளம்பும் தகையதோ? 1.4.9
    145 வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர்
    தாண்டவப் பெருமான் தனித் தொண்டர்கள்
    நீண்ட தொல் புகழார் தம் நிலைமையை
    ஈண்டு வாழ்த்துகேன் என்னறிந்து ஏத்துகேன். 1.4.10
    146 இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்
    அந்தம் இல் புகழ் ஆலால சுந்தரன்
    சுந்தரத் திருத் தொண்டத் தொகைத் தமிழ்
    வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம். 1.4.11
    திருச்சிற்றம்பலம்

    1.5. தடுத்தாட்கொண்ட புராணம்


    திருச்சிற்றம்பலம்

    147 கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த
    அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு
    மங்கையர் வதன சீத மதி இருமருங்கும் ஓடிச்
    செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு . 1.5.1
    148 பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன்னில்
    அரு மறைச் சைவம் ஓங்க அருளினால் அவதரித்த
    மருவிய தவத்தால் மிக்க வளம்பதி வாய்மை குன்றாத்
    திரு மறையவர்கள் நீடும் திரு நாவலூராம் அன்றே. 1.5.2
    149 மாதொ ஒரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும்
    வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்(கு)
    ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்பால்
    தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார். 1.5.3
    150 தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும்,
    நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றிமிக்க
    ஐம் படை சதங்கை சாத்தி அணிமணிச் சுட்டிச் சாத்தி
    செம் பொன் நாண் அரையில் மின்னத் தெருவில் தேர் உருட்டு நாளில். 1.5.4
    151 நர சிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு
    பரவருங் காதல்கூரப் பயந்தவர் தம்பால் சென்று
    விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்றுத் தங்கள்
    அரசிளங் குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார். 1.5.5
    152 பெருமைசால் அரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள்
    வரு முறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்து
    அரு மறை முந் நூல் சாத்தி அளவில் தொல் கலைகள் ஆய்ந்து
    திரு மலி சிறப்பின் ஓங்கிச் சீர் மணப் பருவஞ் சேர்ந்தார். 1.5.6
    153 தந்தையார் சடையனார் தம் தனித் திரு மகற்குச் சைவ
    அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப
    வந்த தொல் சிறப்பிற் புத்தூர்ச் சடங்கவி மறையோன் தன்பால்
    செந் திரு அனைய கன்னி மணத் திறஞ் செப்பி விட்டார். 1.5.7
    154 குல முதல் அறிவின் மிக்கோர் கோத்திர முறையும் தேர்ந்தார்
    நல மிகு முதியோர் சொல்லச் சடங்கவி நன்மை ஏற்று
    மலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை
    பலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான் 1.5.8
    155 மற்றவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல் தன்னைப்
    பெற்றவர் தம்பால் சென்று சொன்ன பின் பெருகு சிந்தை
    உற்றதோர் மகிழ்ச்சி எய்தி மண வினை உவந்து சாற்றிக்
    கொற்றவர் திருவுக்கு ஏற்பக் குறித்து நாள் ஓலை விட்டார். 1.5.9
    156 மங்கலம் பொலியச் செய்த மண வினை ஓலை ஏந்தி
    அங்கயற் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டிக்
    கொங்கலர்ச் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்து
    பங்கய வதனி மாரும் மைந்தரும் பணிந்து கொண்டார். 1.5.10
    157 மகிழ்ச்சி யால் மணம் மீக் கூறி மங்கல வினைகள் எல்லாம்
    புகழ்ச்சியால் பொலிந்து தோன்றப் போற்றிய தொழிலராகி
    இகழ்ச்சி ஒன்றானும் இன்றி ஏந்து பூ மாலைப் பந்தர்
    நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி நீள் முளை சாத்தினார்கள். 1.5.11
    158 மண வினைக்கு அமைந்த செய்கை மாதினைப் பயந்தார் செய்யத்
    துணர் மலர்க் கோதைத் தாமச் சுரும்பணை தோளினானைப்
    புணர் மணத் திருநாள் முன்னாட் பொருந்திய விதியினாலே
    பணை முரசு இயம்ப வாழ்த்தி பைம் பொன் நாண் காப்புச் சேர்த்தார். 1.5.12
    159 மா மறை விதி வழாமல் மணத்துறைக் கடன்கள் ஆற்றித்
    தூ மறை மூதூர்க் கங்குல் மங்கலந் துன்றி ஆர்ப்பத்
    தேமரு தொடையல் மார்பன் திரு மணக் கோலம் காணக்
    காமுறு மனத்தான் போலக் கதிரவன் உதயம் செய்தான். 1.5.13
    160 காலை செய் வினைகள் முற்றிக் கணித நூல் புலவர் சொன்ன
    வேலை வந்து அணையும் முன்னர் விதி மணக்கோலம் கொள்வான்
    நூல் அசைந்து இலங்கு மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன்
    மாலையுந் தாரும் பொங்க மஞ்சன சாலை புக்கான். 1.5.14
    161 வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர்ப்
    பாசனத்து அமைந்த பாங்கர்ப் பருமணி பைம்பொன் திண்கால்
    ஆசனத்து அணி நீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால்
    ஈசனுக்கு இனியான் மேனி எழில் பெற விளக்கினார்கள் 1.5.15
    162 அகில் விரைத் தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டாடை சாத்தி
    முகில் நுழை மதியம் போலக் கைவலான் முன் கை சூழ்ந்த
    துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தித் தன் தூய செங்கை
    உகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறுஞ்சிகழி ஆர்த்தான். 1.5.16
    163 தூநறும் பசும் கர்ப்பூரச் சுண்ணத்தால் வண்ணப் போதில்
    ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தனச் சேறாட்டி
    மான்மதச் சாந்து தோய்ந்த மங்கலக் கலவை சாத்திப்
    பான் மறை முந்நூல் மின்னப் பவித்திரஞ் சிறந்த கையான். 1.5.17
    164 தூமலர்ப் பிணையல் மாலை துணர் இணர்க் கண்ணிக் கோதை
    தாமம் என்று இனைய வேறு தகுதியால் அமையச் சாத்தி
    மா மணி அணிந்த தூய வளர் ஒளி இருள்கால் சீக்கும்
    நாம நீள் கலன்கள் சாத்தி நன்மணக் கோலம் கொண்டான். 1.5.18
    165 மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க
    நன்நகர் விழவு கொள்ள நம்பி ஆரூரர் நாதன்
    தன் அடி மனத்துள் கொண்டு தகும் திருநீறு சாத்திப்
    பொன் அணி மணியார் யோகப் புரவிமேற் கொண்டு போந்தார். 1.5.19
    166 இயம் பல துவைப்ப எங்கும் ஏத்தொலி எடுப்ப மாதர்
    நயந்து பல்லாண்டு போற்ற நான்மறை ஒலியின் ஓங்க
    வியந்துபார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பஞ் செய்தே
    உயர்ந்த வாகன யானங்கள் மிசை கொண்டார் உழையரானார். 1.5.20
    167 மங்கல கீத நாத மறையவர் குழாங்களோடு
    தொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துன்றிச் சூதும்
    பங்கய முகையும் சாயத்துப் பணைத்து எழுந் தணியில் மிக்க
    குங்கும முலையினாரும் பரந்தெழு கொள்கைத் தாகி. 1.5.21
    168 அருங்கடி எழுந்த போழ்தின் ஆர்த்த வெள்வளை களாலும்
    இருங்குழை மகரத் தாலும் இலங்கொளி மணிகளாலும்
    நெருங்கிய பீலிச் சோலை நீல நீர்த் தரங்கத் தாலும்
    கருங்கடல் கிளர்ந்தது என்னக் காட்சியில் பொலிந்தது அன்றே. 1.5.22
    169 நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்கப்
    பெருங்குடை மிடைந்து செல்லப் பிணங்கு பூங் கொடிகள் ஆட
    அருங் கடி மணம் வந்து எய்த அன்று தொட்டு என்றும் அன்பில்
    வருங்குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூராமால். 1.5.23
    170 நிறை குடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி
    நறை மலர் அறுகு சுண்ணம் நறும் பொரி பலவும் வீசி
    உறைமலி கலவை சாந்தின் உறுபுனல் தெளித்து வீதி
    மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர் கொள்ள வந்தார். 1.5.24
    171 கண்கள் எண்ணிலாத வேண்டுன்ங் காளையைக் காண என்பார்
    பெண்களில் உயர நோன் தாள் சடங்கவி பேதை என்பார்
    மண் களி கூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார்
    பண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடுவார்கள். 1.5.25
    172 ஆண்டகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம் என்பார்
    தாண்டிய பரியும் நம்பால் தகுதியின் நடந்தது என்பார்
    பூண்டயங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி என்பார்
    ஈண்டிய மடவார் கூட்டம் இன்னன இசைப்பச் சென்றார். 1.5.26
    173 வருமணக் கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாசத்
    திருமணப் பந்தர் முன்பு சென்று வெண் சங்கம் எங்கும்
    பெருமழைக் குலத்தின் ஆர்ப்பப் பரிமிசை இழிந்து பேணும்
    ஒரு மணத் திறத்தின் அங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன். 1.5.27
    174 ஆலுமறை சூழ்கயிலையின் கண் அருள் செய்த
    சாலுமொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான்
    மேலுற எழுந்து மிகு கீழுற அகழ்ந்து
    மாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார். 1.5.28
    175 கண்ணிடை கரந்த கதிர் வெண்படம் எனச் சூழ்
    புண்ணிய நுதல் புனித நீறு பொலிவு எய்தத்
    தண்மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதே
    வெண்ணரை முடித்தது விழுந்திடை சழங்க. 1.5.29
    176 காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழச்
    சோதி மணி மார்பின் அசை நூலினொடு தோளின்
    மீது புனை உத்தரிய வெண் துகில் நுடங்க
    ஆதபம் மறைக் குடை அணிக்கரம் விளங்க. 1.5.30
    177 பண்டிசரி கோவண உடைப் பழமை கூரக்
    கொண்டதோர் சழங்கலுடை ஆர்ந்து அழகு கொள்ள
    வெண் துகிலுடன் குசை முடிந்து விடு வேணுத்
    தண்டொருகை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள. 1.5.31
    178 மொய்த்து வளர் பேரழகு மூத்தவடி வேயோ
    அத்தகைய மூப்பெனும் அதன் படிவ மேயோ
    மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முத஧ல்யோ
    இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி . 1.5.32
    179 வந்துதிரு மாமறை மணத் தொழில் தொடங்கும்
    பந்தரிடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று
    இந்த மொழி கேண்மின் எதிர் யாவர்களும் என்றான்
    முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான். 1.5.33
    180 என்றுரை செய் அந்தணனை எண்ணில் மறை யோரும்
    மன்றல் வினை மங்கல மடங்கல் அனை யானும்
    நன்று உமது நல்வரவு நங்கள் தவம் என்று ஏ
    நின்றது இவண் நீர் மொழிமின் நீர்மொழிவது என்றார். 1.5.34
    181 பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி
    என்னிடையும் நின்னிடையும் நின்ற இசை வால்யான்
    முன்னுடையது ஓர்பெரு வழக்கினை முடித்தே
    நின்னுடைய வேள்வியினை நீ முயல்தி என்றான். 1.5.35
    182 நெற்றி விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான்
    உற்றதோர் வழக்கு எனிடை நீ உடையது உண்டேல்
    மற்றது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன்
    முற்ற இது சொல்லுக என எல்லை முடிவு இல்லான். 1.5.36
    183 ஆவதிது கேண்மின் மறையோர்! என் அடியான் இந்
    நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது என்றான்
    தேவரையும் மாலயன் முதன் திருவின் மிக்கோர்
    யாவரையும் வேறு அடிமை யாவுடைய எம்மான். 1.5.37
    184 என்றான் இறையோன் அது கேட்டவர் எம் மருங்கும்
    நின்றார் இருந்தார் இவன் என் நினைந்தான் கொல் என்று
    சென்றார் வெகுண்டார் சிரித்தார் திரு நாவல் ஊரான்
    நன்றால் மறையோன் மொழி என்று எதிர் நோக்கி நக்கான். 1.5.38
    185 . நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும்
    மிக்கான் மிசையுத்தரியத் துகில் தாங்கி மேல் சென்று
    அக் காலம் உன் தந்தை தன் தந்தை ஆள்ஓலை ஈதால்
    இக் காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏட என்ன. 1.5.39
    186 மாசிலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி
    நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி
    ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
    பேச இன்று உன்னைக் கேட்டோ ம் பித்தனோ மறையோன் என்றார் 1.5.40
    187 பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று
    எத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன்
    அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று
    வித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும் என்றார் 1.5.41
    188 கண்டதோர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும்
    கொண்டதோர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்
    உண்டொராள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன் என்று
    தொண்டனார் ஓலை காட்டுக என்றனர் துணைவனாரை. 1.5.42
    189 ஓலை காட்டு என்று நம்பி உரைக்க நீ ஓலை காணல்
    பாலையோ அவை முன் காட்டப் பணிசெயற் பாலை என்ற
    வேலையில் நாவலூரர் வெகுண்டு மேல் விரைந்து சென்று
    மாலயன் தொடரா தானை வலிந்து பின்தொடரல் உற்றார். 1.5.43
    190 ஆவணம் பறிக்கச் சென்ற அளவினில் அந்தணாளன்
    காவணத்து இடையே ஓடக் கடிது பின்தொடர்ந்து நம்பி
    பூவனத்து அவரை உற்றார் அவரலால் புரங்கள் செற்ற
    ஏவணச் சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார்? 1.5.44
    191 மறைகள் ஆயின முன் போற்றி மலர்ப்பதம் பற்றி நின்ற
    இறைவனைத் தொடர்ந்து பற்றி எழுதும்ஆள் ஓலை வாங்கி
    அறை கழல் அண்ணல் ஆளாய் அந்தணர் செய்தல் என்ன
    முறைS எனக் கீறியிட்டார் முறையிட்டான் முடிவிலாதான். 1.5.45
    192 அருமறை முறையிட்டின்னும் அறிவதற்கு அறியான் பற்றி
    ஒரு முறை முறையோ என்ன உழை நின்றார் விலக்கி இந்தப்
    பெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்கு கின்ற
    திரு மறை முனிவரே எங்குளீர் செப்பும் என்றார். 1.5.46
    193 என்றலும் நின்ற ஐயர் இங்குளேன் இருப்புஞ் சேயது
    அன்றிந்த வெண்ணெய் நல்லூர் அதுநிற்க அறத்தாறு இன்றி
    வன்றிறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி
    நின்றிவன் கிழித்துத் தானே நிரப்பினான் அடிமை என்றான். 1.5.47
    194 குழை மறை காதினானை கோல் ஆரூரர் நோக்கிப்
    பழைய மன்றாடி போலும் இவன் என்று பண்பின் மிக்க
    விழைவுறு மனமும் பொங்க வெண்ணெய் நல்லூராயேல் உன்
    பிழை நெறி வாழ்க்கை ஆங்கே பேச நீ போதாய் என்றார். 1.5.48
    195 வேதியன் அதனைக் கேட்டு வெண்ணெய் நல்லூரிலே நீ
    போதினும் நன்று மற்றப் புனித நான்மறையோர் முன்னர்
    ஆதியில் மூல ஓலை காட்டி நீ அடிமை ஆதல்
    சாதிப்பன் என்று முன்னே தண்டுமுன் தாங்கிச் சென்றான். 1.5.49
    196 செல்லு நான் மறையோன் தன்பின் திரிமுகக் காந்தஞ் சேர்ந்த
    வல்லிரும்பணையு மா போல் வள்ளலும் கடிது சென்றான்
    எல்லையில் சுற்றத்தாரும் இது என்னாம் என்று செல்ல
    நல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல்லூரை நண்ணி. 1.5.50
    197 வேத பாரகரின் மிக்கார் விளங்கு பேர் அவை முன் சென்று
    நாதனாம் மறையோன் சொல்லும் நாவலூர் ஆரூரன் தன்
    காதல் என் அடியான் என்னக் காட்டிய ஓலை கீறி
    மூதறிவீர் முன் போந்தானிது மற்றென் முறைபாடு என்றான். 1.5.51
    198 அந்தணர் அவையில் மிக்கார் மறையவர் அடிமை ஆதல்
    இந்த மா நிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயர் என்றார்
    வந்தவாறிசைவே அன்றோ வழக்கு இவன் கிழித்த ஓலை
    தந்தை தன் தந்தை நேர்ந்தது என்றனன் தனியாய் நின்றான். 1.5.52
    199 இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று
    விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி ஆமோ?
    தசையெலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினை சாரச் சொன்னான்
    அசைவில் ஆரூரர் எண்ணம் என் என்றார் அவையில்மிக்கார். 1.5.53
    200 அனைத்து நூல் உணர்ந்தீர்! ஆதி சைவன் என்று அறிவீர்! என்னைத்
    தனக்கு வேறு அடிமை என்று இவ் அந்தணன் சாதித்தானேல்
    மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை என் சொல்லுகேன் யான்
    எனக்கு இது தெளிய ஒண்ணாது என்றனன் எண்ணம் மிக்கான். 1.5.54
    201 அவ்வுரை அவையின் முன்பு நம்பி ஆரூரர் சொல்லச்
    செவ்விய மறையோர் நின்ற திரு மறை முனியை நோக்கி
    இவ்வுலகின் கண் நீ இன்று இவரை உன் அடிமை என்ற
    வெவ்வுரை எம்முன்பு ஏற்ற வேண்டும் என்று உரைத்து மீண்டும். 1.5.55
    202 ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
    காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன முன்னே
    மூட்சியிற் கிழித்த ஓலை படியோஓலை மூல ஓலை
    மாட்சியில் காட்ட வைத்தேன் என்றனன் மாயை வல்லான். 1.5.56
    203 வல்லையேல் காட்டிங்கு என்ன மறையவன் வலி செய்யாமல்
    சொல்ல நீர் வல்லீர் ஆகில் காட்டுவேன் என்று சொல்லச்
    செல்வ நான் மறையோய்! நாங்கள் தீங்குற ஒட்டோ ம் என்றார்
    அல்லல் தீர்த்து ஆள நின்றார் ஆவணம் கொண்டு சென்றார். 1.5.57
    204 இருள் மறை மிடறு ஒன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ
    அருள் பெறு காரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கிச்
    சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை நோக்கித்
    தெருள் பெறு சபையோர் கேட்ப வாசகம் செப்பு கின்றான். 1.5.58
    205 அரு மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன்செய்கை
    பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கியானும் என்பால்
    வரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை
    இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து. 1.5.59
    206 வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள்
    ஆசிலா எழுத்தை நோக்கி அவையொக்கும் என்ற பின்னர்
    மாசிலா மறையோர் ஐயா! மற்றுங்கள் பேரனார் தம்
    தேசுடை எழுத்தே ஆகில் தெளியப் பார்த்து அறிமின் என்றார். 1.5.60
    207 அந்தணர் கூற இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான்
    தந்தை தன் தந்தை தான் வேறு எழுதுகைச் சாத்துண்டாகில்
    இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி
    வந்தது மொழிமின் என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல். 1.5.61
    208 திரண்ட மா மறையோர் தாமும் திரு நாவலூரர் கோ முன்
    மருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலை
    அரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி
    இரண்டும் ஒத்திருந்தது என்னே! இனிச் செயல் இல்லை என்றார் 1.5.62
    209 நான் மறை முனிவ னார்க்கு நம்பி ஆரூரர் தோற்றீர்
    பான்மையின் ஏவல் செய்தல் கடன் என்று பண்பில் மிக்க
    மேன்மையோர் விளம்ப நம்பி விதி முறை இதுவே ஆகில்
    யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ என்று நின்றார். 1.5.63
    210 திருமிகு மறையோர் நின்ற செழுமறை முனியை நோக்கி
    அருமுனி! நீமுன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள்
    பெருமைசேர் பதியேயாகப் பேசியதுமக்கு இவ்வூரில்
    வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக என்றார். 1.5.64
    211 பெருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை
    ஒருவரும் அறியீராகில் போதும் என்றுரைத்துச் சூழ்ந்த
    பெருமறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்லத்
    திருவருட் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார். 1.5.65
    212 எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் எங்கள்
    நம்பர் தங்கோயில் புக்கது என்கொலோ என்று நம்பி
    தம்பெரு விருப்பினோடு தனித் தொடர்ந்து அழைப்ப மாதோ(டு)
    உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார். 1.5.66
    213 முன்பு நீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப்
    பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது
    துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து
    நன்புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோ ம் என்றார். 1.5.67
    214 என்று எழும் ஓசை கேளா ஈன்றஆன் கனைப்புக் கேட்ட
    கன்று போல் கதறி நம்பி கரசரண் ஆதி அங்கம்
    துன்றிய புளகம் ஆகத் தொழுத கை தலை மேல் ஆக
    மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட் கொண்டது என்றார். 1.5.68
    215 எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பிடை நிறைய எங்கும்
    விண்ணவர் பொழி பூ மாரி மேதினி நிறைந்து விம்ம
    மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப
    அண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளிச் செய்வார். 1.5.69
    216 மற்று நீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம்
    பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க
    அற்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மைச்
    சொற் தமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார். 1.5.70
    217 . தேடிய அயனும் மாலும் தெளிவுறா ஐந்து எழுத்தும்
    பாடிய பொருளாய் உள்ளான் பாடுவாய் நம்மை என்ன
    நாடிய மனத்தராகி நம்பி ஆரூரர் மன்றுள்
    ஆடிய செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று. 1.5.71
    218 வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த
    ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட
    கோதிலா அமுதே! இன்று உன் குணப் பெருங் கடலை நாயேன்
    யாதினை அறிந்து என் சொல்லிப் பாடுகேன் என மொழிந்தார் 1.5.72
    219 அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார்
    முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலால்லே
    என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் என்றார் நின்ற
    வன்பெருந் தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடல் உற்றார். 1.5.73
    220 கொத்தார் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால்
    மெய்த் தாயினும் இனியானை அவ்வியன் நாவலர் பெருமான்
    பித்தா பிறை சூடி எனப் பெரிதாம் திருப் பதிகம்
    இத்தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார். 1.5.74
    221 முறையால் வரு மதுரத் துடன் மொழி இந்தள முதலில்
    குறையா நிலை மும்மைப்பாடிக் கூடுங் கிழமை யினால்
    நிறை பாணியின் இசை கோள்புணர் நீடும் புகழ் வகையால்
    இறையான் மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான். 1.5.75
    222 சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன் தனை இன்னும்
    பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு என்றுறு பரிவில்
    நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள்துறை மேவிய நம்பன்
    எல்லா உலகும் உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான். 1.5.76
    223 அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்
    செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும்
    உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில்
    பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள். 1.5.77
    224 நாவலர் கோன் ஆரூரன் தனை வெண்ணெய் நல் ஊரில்
    மேவும் அருள்துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதற்பின்
    பூ அலரும் தடம் பொய்கைத் திருநாவலூர் புகுந்து
    தேவர் பிரான் தனைப் பணிந்து திருப் பதிகம் பாடினார். 1.5.78
    225 சிவன் உறையுந் திருத்துறையூர் சென்றணைந்து தீவினையால்
    அவ நெறியில் செல்லாமே தடுத்து ஆண்டாய் அடியேற்குத்
    தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று
    பவ நெறிக்கு விலக்கு ஆகுந் திருப்பதிகம் பாடினார். 1.5.79
    226 புலன் ஒன்றும் படி தவத்திற் புரிந்த நெறி கொடுத்து அருள
    அலர் கொண்ட நறுஞ் சோலைத் திருத் துறையூர் அமர்ந்து அருளும்
    நிலவும் தண் புனலும் ஒளிர் நீள்சடையோன் திருப்பாதம்
    மலர் கொண்டு போற்றிசைத்து வந்தித்தார் வன தொண்டர். 1.5.80
    227 திருத் துறையூர் தனைப் பணிந்து சிவபெருமான் அமர்ந்து அருளும்
    பொருத்தமாம் இடம் பலவும் புக்கிறைஞ்சி பொற்புலியூர்
    நிருத்தனார் திருக் கூத்துத் தொழுவதற்கு நினைவுற்று
    வருத்தம் மிகு காதலினால் வழிக் கொள்வான் மனங் கொண்டார் 1.5.81
    228 மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும்
    அலை தருதண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின்
    நிலவு பசும் புரவிநெடும் தேர் இரவி மேல் கடலில்
    செலவணையும் பொழுது அணையத் திருவதிகை புறத்து அணைந்தார் 1.5.82
    229 உடைய அரசு உலகேத்தும் உழவாரப் படையாளி
    விடையவர்க்குக் கைத்தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து
    அடையும் அதற்கு அஞ்சுவான் என்று அந் நகரில் புகுதாதே
    மடை வளர் தண் புறம் பணையிற் சித்தவட மடம் புகுந்தார் 1.5.83
    230 வரி வளர் பூஞ்சோலை சூழ் மடத்தின் கண் வன்தொண்டர்
    விரிதிரை நீர்க் கெடில வட வீரட்டானத்து இறை தாள்
    புரிவுடைய மனத்தினராய்ப் புடை எங்கும் மிடைகின்ற
    பரிசனமும் துயில் கொள்ளப் பள்ளி அமர்ந்து அருளினார். 1.5.84
    231 அது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங்கணரும்
    முது வடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமே
    பொது மடத்தின் உள்புகுந்து பூந் தாரான் திரு முடி மேல்
    பதும மலர்த் தாள் வைத்துப் பள்ளி கொள்வார் போல் பயின்றார். 1.5.85
    232 அந்நிலை ஆரூரன் உணர்ந்து அருமறையோய் உன்னடி என்
    சென்னியில் வைத்தனை என்னத் திசை அறியா வகை செய்த(து)
    என்னுடைய மூப்புக் காண் என்று அருள அதற்கு இசைந்து
    தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன். 1.5.86
    233 அங்குமவன் திரு முடிமேல் மீட்டும் அவர் தாள் நீட்டச்
    செங்கயல் பாய் தடம் புடை சூழ் திரு நாவலூராளி
    இங்கு என்னைப் பலகாலும் மிதித்தனை நீ யார் என்னக்
    கங்கை சடைக் கரந்த பிரான் அறிந்திலையோ எனக் கரந்தான். 1.5.87
    234 செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் எனத் தெளிந்து
    தம்மானை அறியாத சதியார் உளரே என்(று)
    அம்மானைத் திருவதிகை வீரட்டா னத்து அமர்ந்த
    கைம்மாவின் உரியானைக் கழல் பணிந்து பாடினார். 1.5.88
    235 பொன் திரளும் மணித் திரளும் பொரு கரிவெண் கோடுகளும்
    மின்றிரண்ட வெண்முத்தும் விரைமலரும் நறுங் குறடும்
    வன்றிரைகளாற் கொணர்ந்து திருவதிகை வழிபடலால்
    தென் திசையில் கங்கை எனும் திருக் கெடிலம் திளைத்தாடி. 1.5.89
    236 அங்கணரை அடிபோற்றி அங்கு அகன்று மற்று அந்தப்
    பொங்கு நதித் தென்கரை போய்ப் போர் வலித்தோள் மாவலி தன்
    மங்கல வேள்வியில் பண்டு வாமனனாய் மண் இரந்த
    செங்கணவன் வழி பட்ட திரு மாணிக்குழி அணைந்தார். 1.5.90
    237 பரம் பொருளைப் பணிந்து தாள் பரவிப்போய்ப் பணிந்தவர்க்கு
    வரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி
    நரம்புடை யாழ் ஒலி முழவின் நாத ஒலி வேத ஒலி
    அரம்பையர் தம் கீத ஒலி அறாத் தில்லை மருங்கு அணைந்தார். 1.5.91
    238 தேம் அலங்கல் அணி மா மணி மார்பின் செம்மல் அங்கயல்கள் செங்கமலத் தண்
    பூ மலங்க எதிர் பாய்வன மாடே புள்ளலம்பு திரை வெள் வளை வாவி
    தா மலங்குகள் தடம் பணை சூழும் தண் மருங்கு தொழுவார்கள் தம்மும்மை
    மா மலங்களற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி . 1.5.92
    239 நாக சூத வகுளஞ் சரளஞ் சூழ் நாளிகேரம் இலவங்கம் நரந்தம்
    பூக ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி
    மேக சாலமலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்றப்
    போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம்புறம்பணை கடந்து புகுந்தார். 1.5.93
    240 வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம்
    கன்னி காரங் குரவங் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித்
    துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்த
    பன் மலர்ப் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான். 1.5.94
    241 இடம் மருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்து
    நடநவின்று அருள் சிலம்பொலி போற்றும் நான் மறைப் பதியை நாளும் வணங்க
    கடல் வலங் கொள்வது போல் புடை சூழுங் காட்சி மேவி மிகு
    சேட் செல ஓங்கும் தடமருங்கு வளர் மஞ்சிவர்
    இஞ்சி தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார். 1.5.95
    242 மன்றுளாடு மதுவின் நசையாலே மறைச் சுரும்பறை புறத்தின் மருங்கே
    குன்று போலுமணி மாமதில் சூழுங் குண்ட கழக்கமல வண்டலர் கைதைத்
    துன்று நீறுபுனை மேனிய வாகித் தூய நீறு புனை தொண்டர்கள் என்னச்
    சென்று சென்று முரல்கின்றன கண்டு சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார். 1.5.96
    243 பார் விளங்க வளர் நான் மறை நாதம் பயின்ற பண்புமிக வெண்கொடி ஆடும்
    சீர் விளங்கு மணி நாவொலியாலும் திசைகள் நான்கு எதிர் புறப்படலாலும்
    தார் விளங்கு வரை மார்பின் அயன் பொன் சதுர்முகங்கள் என ஆயின தில்லை
    ஊர்விளங்கு திருவாயில்கள் நான்கின் உத்தரத் திசை வாயில் முன் எய்தி. 1.5.97
    244 அன்பின் வந்து எதிர் கொண்ட சீர் அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ
    முன் பிறைஞ்சினரி யாவர் என்று அறியா முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து
    பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும்
    பொன் பிறங்கு மணி மாளிகை நீடும் பொருவிறந்த திருவீதி புகுந்தார் 1.5.98
    245 அங்கண் மாமறை முழங்கும் மருங்கே ஆடரம்பையர் அரங்கு முழங்கும்
    மங்குல் வானின்மிசை ஐந்தும் முழங்கும் வாச மாலைகளில் வண்டு முழங்கும்
    பொங்கும் அன்பருவி கண்பொழி தொண்டர் போற்றிசைக்கும் ஒலி எங்கும் முழங்கும்
    திங்கள் தங்கு சடை கங்கை முழங்கும் தேவ தேவர் புரியும் திருவீதி. 1.5.99
    246 போக நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கி
    மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகைக் குலம் மிடைந்த பதாகை
    யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓமதூமம் உயர்வானில் அடுப்ப
    மேக பந்திகளின் மீதிடைஎங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும். 1.5.100
    247 ஆடு தோகை புடை நாசிகள் தோறும் அரணி தந்த சுடர் ஆகுதி தோறும்
    மாடுதாமமணி வாயில்கள் தோறும் மங்கலக் கலசம் வேதிகை தோறும்
    சேடு கொண்ட ஒளி தேர் நிரை தோறும் செந்நெல் அன்னமலை சாலைகள் தோறும்
    நீடு தண்புனல்கள் பந்தர்கள் தோறும் நிறைந்த தேவர் கணம் நீளிடை தோறும். 1.5.101
    248 எண்ணில் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லையில் அழகு சொல்லிய எல்லாம்
    மண்ணில் இப்பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகிப்
    புண்ணியப் புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும்
    அண்ணல் ஆடு திருஅம்பலம் சூழ்ந்த அம்பொன் வீதியினை நம்பி வணங்கி . 1.5.102
    249 மால் அயன் சதமகன் பெரும் தேவர் மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கி
    சீல மாமுனிவர் சென்று முன் துன்னித் திருப் பிரம்பின் அடி கொண்டு திளைத்துக்
    காலம் நேர் படுதல் பார்த்தயல் நிற்பக் காதல் அன்பர் கணநாதர் புகும்பொற்
    கோல நீடு திருவாயில் இறைஞ்சிக் குவித்த செங்கை தலை மேற்கொடு புக்கார். 1.5.103
    250 பெரு மதில் சிறந்த செம் பொன் மாளிகை மின் பிறங்கும் பேரம்பலம் மேரு
    வருமுறை வலம் கொண்டிறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார்
    அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர் தம் சிந்தையில் அலர்ந்த
    திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில். 1.5.104
    251 வையகம் பொலிய மறைச் சிலம்பு ஆர்ப்ப மன்றுளே மால் அயன் தேட
    ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த
    கைகளோ திளைத்த கண்களோ அந்தக் கரணமோ கலந்த அன்புந்தச்
    செய் தவப் பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திருக் களிற்றுப்படி மருங்கு. 1.5.105
    252 ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும்
    சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்து விகமே ஆக
    இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப் பெருங் கூத்தின்
    வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார். 1.5.106
    253 தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திருநடம் கும்பிடப் பெற்று
    மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம் ஆம் என்று
    கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரியக் கைம்மலர் உச்சி மேற் குவித்துப்
    பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார். 1.5.107
    254 தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனிப் பெருந் தாண்டவம் புரிய
    எடுத்த சேவடியார் அருளினால் தரளம் எறிபுனல் மறி திரைப் பொன்னி
    மடுத்த நீள் வண்ணப் பண்ணை ஆரூரில் வருக நம்பால் என வானில்
    அடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர் நாதம் கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார். 1.5.108
    255 ஆடு கின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த அப் பணி சென்னி மேற் கொண்டு
    சூடு தங்கரங்கள் அஞ்சலி கொண்டு தொழுந் தொறும் புறவிடை கொண்டு
    மாடு பேரொளியின் வளரும் அம்பலத்தை வலங் கொண்டு வணங்கினர் போந்து
    நீடுவான் பணிய உயர்ந்த பொன் வரை போல் நிலை எழு கோபுரங் கடந்து. 1.5.109
    256 நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து நெடுந் திருவீதியை வணங்கி
    மன்றலார் செல்வ மறுகினூடேகி மன்னிய திருப்பதி அதனில்
    தென்திசை வாயில் கடந்து முன் போந்து சேட்படுந் திரு எல்லை இறைஞ்சிக்
    கொன்றை வார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிடத் திருநதி கடந்தார். 1.5.110
    257 புறந் தருவார் போற்றி இசைப்ப புரி முந்நூல் அணிமார்பர்
    அறம் பயந்தாள் திருமுலைப் பால் அமுதுண்டு வளர்ந்தவர் தாம்
    பிறந்து அருளும் பெரும்பேறு பெற்றது என முற்றுலகில்
    சிறந்த புகழ்க் கழுமலமாம் திருப்பதியைச் சென்று அணைந்தார். 1.5.111
    258 பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி
    உள்ளு நான் மிதியேன் என்றூர் எல்லைப் புறம் வணங்கி
    வள்ளலார் வலமாக வரும்பொழுதின் மங்கை இடங்
    கொள்ளுமால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள. 1.5.112
    259 மண்டிய பேரன்பினால் வன்தொண்டர் நின்று இறைஞ்சித்
    தெண் திரை வேலையில் மிதந்த திருத் தேணி புரத் தாரைக்
    கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்று இருந்த படி என்று
    பண்டரும் இன்னிசை பயின்ற திருப் பதிகம் பாடினார். 1.5.113
    260 இருக்கோலம் இடும்பெருமான் எதிர் நின்றும் எழுந்து அருள
    வெருக் கோளுற்றது நீங்க ஆரூர் மேற் செல விரும்பிப்
    பெருக்கோதம் சூழ்புறவப் பெரும் பதியை வணங்கிப் போய்த்
    திருக்கோலக்கா வணங்கி செந்தமிழ் மாலைகள் பாடி. 1.5.114
    261 தேன் ஆர்க்கும் மலர்ச் சோலைத் திருப் புன்கூர் நம்பர் பால்
    ஆனாப் பேரன்பு மிக அடி பணிந்து தமிழ் பாடி
    மானார்க்கும் கரதலத்தார் மகிழ்த இடம் பல வணங்கிக்
    கானார்க்கும் மலர்த் தடஞ் சூழ் காவிரியின் கரை அணைந்தார். 1.5.115
    262 வம்புலா மலர் அலை மணிகொழித்து வந்திழியும்
    பைம் பொன் வார் கரைப் பொன்னிப் பயில் தீர்த்தம் படிந்தாடி
    தம்பிரான் மயிலாடுதுறை வணங்கித் தாவில் சீர்
    அம்பர் மாகாளத்தின் அமர்ந்த பிரான் அடி பணிந்தார். 1.5.116
    263 மின்னார் செஞ்சடை அண்ணல் விரும்பு திருப்புகலூரை
    முன்னாகப் பணிந்தேத்தி முதல்வன் தன் அருள் நினைந்து
    பொன்னாரும் உத்தரியம் புரி முந்நூல் அணி மார்பர்
    தென் நாவலூராளி திருவாரூர் சென்று அணைந்தார். 1.5.117
    264 தேர் ஆரும் நெடு வீதித் திருவாரூர் வாழ்வார்க்கு
    ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்க
    வாரா நின்றான் அவனை மகிழ்ந்து எதிர் கொள்வீர் என்று
    நீராரும் சடை முடிமேல் நிலவணிந்தார் அருள் செய்தார். 1.5.118
    265 தம்பிரான் அருள் செய்த திருத் தொண்டர் அது சாற்றி
    எம் பிரானார் அருள் தான் இருந்த பரிசு இதுவானால்
    நம் பிரானார் ஆவார் அவரன்றே எனும் நலத்தால்
    உம்பர் நாடு இழிந்தது என எதிர் கொள்ள உடன் எழுந்தார். 1.5.119
    266 மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெருங் கொடி நெருங்கத்
    தாளின் நெடுந் தோரணமும் தழைக் கமுகும் குழைத் தொடையும்
    நீள் இலைய கதலிகளும் நிறைந்த பசும் பொற்றசும்பும்
    ஒளி நெடு மணிவிளக்கும் உயர் வாயில் தொறும் நிரைத்தார். 1.5.120
    267 சோதி மணி வேதிகைகள் தூ நறுஞ் சாந்து அணி நீவிக்
    கோதில் பொரி பொற் சுண்ணங் குளிர் தரள மணி பரப்பி
    தாதிவர் பூந் தொடை மாலைத் தண் பந்தர்களுஞ் சமைத்து
    வீதிகள் நுண் துகள் அடங்க விரைப் பனிநீர் மிகத்தெளித்தார். 1.5.121
    268 மங்கல கீதம் பாட மழை நிகர் தூரியம் முழங்கச்
    செங் கயற் கண் முற்றிழையார் தெற்றி தொறும் நடம் பயில
    நங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன்
    பொங்கெயில் நீள் திருவாயில் புறம் உறவந்து எதிர்கொண்டார். 1.5.122
    269 வந்து எதிர் கொண்டு வணங்குவார் முன் வன்தொண்டர் அஞ்சலி கூப்பி வந்து
    சிந்தை களிப்புற வீதியூடு செல்வார் திருத் தொண்டர் தம்மை நோக்கி
    எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் என்னும்
    சந்த இசைப் பதிகங்கள் பாடித் தம் பெருமான் திருவாயில் சார்ந்தார். 1.5.123
    270 வானுற நீள் திரு வாயில் நோக்கி மண்ணுற ஐந்து உறுப்பால் வணங்கித்
    தேனுறை கற்பக வாசமாலைத் தேவாசிரியன் தொழுது இறைஞ்சி
    ஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்த செங்கைக஧ள்஡டும்
    தூநறுங் கொன்றையான் மூலட்டானம் சூழ் திரு மாளிகை வாயில் புக்கார். 1.5.124
    271 புற்றிடங் கொண்ட புராதனனைப் பூங்கோயில் மேய பிரானையார்க்கும்
    பற்று இடம் ஆய பரம் பொருளைப் பார்ப்பதி பாகனை பங்கயத்தாள்
    அர்ச்சனை செய்ய அருள் புரிந்த அண்ணலை மண்மிசை வீழ்ந்து இறைஞ்சி
    நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார். 1.5.125
    272 அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக
    முன்பு முறைமை யினால் வணங்கி முடிவு இலாக் காதல் முதிர ஓங்கி
    நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்தப் பெற்ற
    இன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றே இன்னிசை வண்டமிழ் மாலை பாட . 1.5.126
    273 வாழிய மா மறைப் புற்றிடங்கொள் மன்னவனார் அருளாலோர் வாக்கு
    தோழமை ஆக உனக்கு நம்மைத் தந்தனம் நாம் முன்பு தொண்டு கொண்ட
    வேள்வியில் அன்று நீ கொண்ட கோலம் என்றும் புனைந்து நின் வேட்கை தீர
    வாழி மண் மேல் விளையாடுவாய் என்று ஆரூரர் கேட்க எழுந்தது அன்றே. 1.5.127
    274 கேட்க விரும்பி வன்றொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றே
    ஆட்கொள வந்த மறையவனே ஆரூர் அமர்ந்த அருமணியே
    வாட்கயல் கொண்ட கண்மங்கை பங்கா! மற்று உன் பெரிய கருணை அன்றே
    நாட்கமலப் பதம் தந்தது இன்று நாயினேனை பொருளாக என்றார். 1.5.128
    275 என்று பல முறையால் வணங்கி எய்திய உள்ளக் களிப்பினொடும்
    வென்றி அடல் விடைபோல் நடந்து வீதி விடங்கப் பெருமான் முன்பு
    சென்று தொழுது துதித்து வாழ்ந்து திருமாளிகை வலம் செய்து போந்தார்
    அன்று முதல் அடியார்கள் எல்லாம் தம்பிரான் தோழர் என்றே அழைத்தார். 1.5.129
    276 மைவளர் கண்டர் அருளினாலே வண்டமிழ் நாவலர் தம் பெருமான்
    சைவ விடங்கின் அணிபுனைந்து சாந்தமும் மாலையும் தாரும் ஆகி
    மெய் வளர் கோலம் எல்லாம் பொலிய மிக்க விழுத்தவ வேந்தர் என்னத்
    தெய்வ மணிப் புற்றுளாரைப் பாடித்திளைத்து மகிழ்வொடுஞ் செல்லா நின்றார். 1.5.130
    277 இதற்கு முன் எல்லை இல்லாத் திரு நகர் இதனுள் வந்து
    முதல் பெருங் கயிலை ஆதி முதல்வர் தம் பங்கினாட்குப்
    பொதுக் கடிந்து உரிமை செய்யும் பூங்குழற் சேடிமாரில்
    கதிர்த்த பூண் ஏந்து கொங்கை கமலினி அவதரித்தாள். 1.5.131
    278 கதிர் மணி பிறந்தது என்ன உருத்திர கணிகை மாராம்
    பதியிலார் குலத்துள் தோன்றிப் பரவையார் என்னும் நாமம்
    விதியுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற
    மதியணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி. 1.5.132
    279 பரவினர் காப்புப் போற்றிப் பயில் பெருஞ் சுற்றம் திங்கள்
    விரவிய பருவம் தோறும் விழா அணி எடுப்ப மிக்கோர்
    வர மலர் மங்கை இங்கு வந்தனள் என்று சிந்தை
    தர வரு மகிழ்ச்சி பொங்கத் தளர் நடைப் பருவஞ் சேர்ந்தார். 1.5.133
    280 மானிளம் பிணையோ? தெய்வ வளரிள முகையோ? வாசத்
    தேனிளம் பதமோ? வேலைத் திரை இளம் பவள வல்லிக்
    கானிளம் கொடியோ? திங்கள் கதிரிளங் கொழுந்தோ? காமன்
    தானிளம் பருவம் கற்கும் தனி இளந் தனுவோ என்ன. 1.5.134
    281 நாடும் இன் பொற்பு வாய்ப்பு நாளும் நாள் வளர்ந்து பொங்க
    ஆடும் மென் கழங்கும் பந்தும் அம்மானை ஊசல் இன்ன
    பாடும் இன்னிசையும் தங்கள் பனிமலை வல்லி பாதம்
    கூடும் அன்பு உருகப் பாடும் கொள்கையோர் குறிப்புத் தோன்ற. 1.5.135
    282 பிள்ளைமைப் பருவம் மீதாம் பேதைமைப் பருவம் நீங்கி
    அள்ளுதற்கு அமைந்த பொற் பால் அநங்கன் மெய்த் தனங்கள் ஈட்டம்
    கெள்ள மிக்குயர்வ போன்ற கொங்கைகோங் கரும்பை வீழ்ப்ப
    உள்ள மெய்த் தன்மை முன்னை உண்மையும் தோன்ற உய்ப்பார் . 1.5.136
    283 பாங்கியர் மருங்கு சூழப் படரொளி மறுகு சூழத்
    தேங்கமழ் குழலின் வாசம் திசையெலாம் சென்று சூழ
    ஓங்கு பூங் கோயில் உள்ளார் ஒருவரை அன்பி னோடும்
    பூங்கழல் வணங்க என்றும் போதுவார் ஒருநாட் போந்தார். 1.5.137
    284 அணி சிலம்பு அடிகள் பார் வென்றடிப் படுத்தனம் என்று ஆர்ப்ப
    மணி கிளர் காஞ்சி அல்குல் வரி அர உலகை வென்ற
    துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற் கழிய விண்ணும்
    பணியும் என்றின வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில். 1.5.138
    285 புற்றிடம் விரும்பினாரைப் போற்றினர் தொழுது செல்வார்
    சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடை நம்பி
    நற் பெரும் பான்மை கூட்ட நகைபொதிந்து இலங்கு செவ்வாய்
    விற் புரை நுதலின் வேற்கண் விளங்கு இழையவரைக் கண்டார். 1.5.139
    286 கற்பகத்தின் பூங் கொம்போ? காமன் தன் பெரு வாழ்வோ?
    பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து
    விற் குவளை பவள மலர் மதிபூத்த விரைக் கொடியோ?
    அற்புதமோ? சிவனருளோ? அறியேன் என்று அதிசயித்தார் 1.5.140
    287 ஓவிய நான்முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தால்
    மேவிய தன் வருத்தமுற விதித்ததொரு மணி விளக்கோ
    மூவுலகின் பயனாகி முன் நின்றது என நினைந்து
    நாவலர் காவலர் நின்றார் நடு நின்றார் படை மதனார். 1.5.141
    288 தண்டரள மணித் தோடும் தகைத்தோடும் கடை பிறழும்
    கெண்டை நெடுங் கண் வியப்பப் கிளர் ஒளிப் பூண் உரவோனை
    அண்டர் பிரான் திருவருளால் அயல் அறியா மனம் விரும்பப்
    பண்டை விதி கடை கூட்டப் பரவையாருங் கண்டார். 1.5.142
    289 கண் கொள்ளாக் கவின் பொழிந்த திருமேனி கதிர் விரிப்ப
    விண் கொள்ளாப் பேரொளியான் எதிர் நோக்கும் மெல்லியலுக்கு
    எண் கொள்ளா காதலின் முன்பு எய்தாத ஒரு வேட்கை
    மண் கொள்ளா நாண் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து எழலும் . 1.5.143
    290 முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ? பெருகு ஒளியால்
    தன்னேரில் மாரனோ? தார் மார்பின் விஞ்சையனோ?
    மின் நேர் செஞ் சடை அண்ணல் மெய்யருள் பெற்று உடையவனோ?
    என்னே என் மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார். 1.5.144
    291 அண்ணல் அவன் தன் மருங்கே அளவு இறந்த காதலினால்
    உண்ணிறையும் குணம் நான்கும் ஒரு புடைச் சாய்ந்தன எனினும்
    வண்ண மலர்க் கரும் கூந்தல் மடக் கொடியை வலிதாக்கிக்
    கண் நுதலைத் தொழும் அன்பே கைக் கொண்டு செலவுய்ப்ப. 1.5.145
    292 பாங்கு ஓடிச் சிலை வளைத்துப் படை அநங்கன் விடு பாணம்
    தாங்கோலி எம் மருங்கும் தடை செய்ய மடவரலும்
    தேங்கோதை மலர்க் குழல் மேல் சிறை வண்டு கலந்து ஆர்ப்பப்
    பூங்கோயில் அமர்ந்த பிரான் பொற் கோயில் போய்ப் புகுந்தான். 1.5.146
    293 வன்தொண்டர் அது கண்டு என் மனம் கொண்ட மயில் இயலின்
    இன் தொண்டைச் செங்கனி வாய் இளங் கொடி தான் யார் என்ன
    அன்றங்கு முன் நின்றார் அவர் நங்கை பரவையார்
    சென்றும்பர் தரத்தார்க்கும் சேர்வு அரியார் எனச் செப்ப. 1.5.147
    294 பேர் பரவை பெண்மையினில் பெரும் பரவை விரும்பல்குல்
    ஆர்பரவை அணி திகழும் மணி முறுவல் அரும் பரவை
    சீர் பரவை ஆயினாள் திரு உருவின் மென் சாயல்
    ஏர் பரவை இடைப் பட்ட என் ஆசை எழு பரவை. 1.5.148
    295 என்றினைய பலவும் நினைந்து எம்பெருமான் அருள் வகையான்
    முன் தொடர்ந்து வருங் காதல் முறைமை யினால் தொடக்குண்டு
    நன்று எனை ஆட் கொண்டவர் பால் நண்ணுவன் என்றுள் மகிழ்ந்து
    சென்றுடைய நம்பியும் போய்த் தேவர் பிரான் கோயில் புக. 1.5.149
    296 பரவையார் வலங் கொண்டு பணிந்து ஏத்தி முன்னரே
    புரவலனார் கோயிலின் நின்று ஒரு மருங்கு புறப்பட்டார்
    விரவு பெருங் காதலினால் மெல்லியலார் தமை வேண்டி
    அரவின் ஆரம் புனைந்தார் அடி பணிந்தார் ஆரூரர். 1.5.150
    297 அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணிப் புற்றின்
    மை வாழும் திரு மிடற்று வானவர் பால் நின்றும் போந்து
    எவ்வாறு சென்றாள் என் இன்னுயிராம் அன்னம் எனச்
    செவ்வாய் வெண் நகைக் கொடியைத் தேடுவார் ஆயினார். 1.5.151
    298 பாசமாம் வினைப் பற்று அறுப்பான் மிகும்
    ஆசை மேலும் ஓர் ஆசை அளிப்பதோர்
    தேசின் மன்னி என் சிந்தை மயக்கிய
    ஈசனார் அருள் என் நெறிச் சென்றதே. 1.5.152
    299 உம்பர் நாயகர் தங்கழல் அல்லது
    நம்புமாறு அறியேனை நடுக்குற
    வம்பு மால் செய்து வல்லியின் ஒல்கியின்று
    எம் பிரான் அருள் எந்நெறிச் சென்றதே. 1.5.153
    300 பந்தம் வீடு தரும் பரமன் கழல்
    சிந்தை ஆரவும் உன்னும் என் சிந்தையை
    வந்து மால் செய்து மான் எனவே விழித்து
    எந்தையார் அருள் எந் நெறிச் சென்றதே 1.5.154
    301 என்று சாலவும் ஆற்றலர் என்னுயிர்
    நின்றது எங்கு என நித்திலப் பூண் முலை
    மன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான்
    சென்று தேவ ஆசிரியனைச் சேர்ந்த பின். 1.5.155
    302 காவி நேர் வரும் கண்ணியை நண்ணுவான்
    யாவரோடும் உரையியம்பாது இருந்து
    ஆவி நல்குவார் ஆரூரை ஆண்டவர்
    பூவின் மங்கையைத் தந்து எனும் போழ்தினில் . 1.5.156
    303 நாட்டு நல்லிசை நாவலூரன் சிந்தை
    வேட்ட மின்னிடை இன் அமுதத்தினைக்
    காட்டுவன் கடலை கடைந்தது என்ப போல்
    பூட்டும் ஏழ் பரித் தேரோன் கடல் புக. 1.5.157
    304 எய்து மென் பெடையோடும் இரை தேர்ந்து உண்டு
    பொய்கையிற் பகல் போக்கிய புள்ளினம்
    வைகு சேக்கை கண் மேற்செல வந்தது
    பையுள் மாலை தமியோர் புனிப்புற. 1.5.158
    305 பஞ்சின் மெல் அடிப் பாவையர் உள்ளமும்
    வஞ்ச மாக்கள் தம் வல் வினையும் அரன்
    அஞ்சு எழுத்தும் உணரா அறிவிலோர்
    நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட வான். 1.5.159
    306 மறுவில் சிந்தை வன்தொண்டர் வருந்தினால்
    இறு மருங்குலார்க்கு யார் பிழைப்பார் என்று
    நறு மலர்க் கங்குல் நங்கை முன் கொண்ட புன்
    முறுவல் என்ன முகிழ்த்தது வெண் நிலா . 1.5.160
    307 அரந்தை செய்வார்க்கு அழுங்கித் தம் ஆருயிர்
    வரன் கை தீண்ட மலர் குலமாதர் போல்
    பரந்த வெம் பகற்கொல்கிப் பனி மதிக்
    கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம். 1.5.161
    308 தோற்றும் மன் உயிர்கட்கு எலாம் தூய்மையே
    சாற்றும் இன்பமும் தண்மையும் தந்து போய்
    ஆற்ற அண்டம் எலாம் பரந்து அண்ணல் வெண்
    நீற்றின் பேரொளி போன்றது நீள் நிலா. 1.5.162
    309 வாவி புள்ளொலி மாறிய மாலையில்
    நாவலூரரும் நங்கை பரவையாம்
    பாவை தந்த படர் பெருங் காதலும்
    ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார். 1.5.163
    310 தந்திருக் கண் எரிதழலிற் பட்டு
    வெந்த காமன் வெளியே உருச் செய்து
    வந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே
    எந்தையார் அருள் இவ் வண்ணமோ? என்பார். 1.5.164
    311 ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல் கதிர்
    தூர்ப்பதே! எனைத் தொண்டு கொண்டு ஆண்டவர்
    நீர்த் தரங்க நெடுங் கங்கை நீள் முடிச்
    சாத்தும் வெண் மதி போன்றிலை தண் மதி!. 1.5.165
    312 அடுத்து மேன் மேல் அலைத்து எழும் ஆழியே
    தடுத்து முன் எனை ஆண்டவர் தாம் உணக்
    கடுத்த நஞ்சுன் தரங்கக் கரங்களால்
    எடுத்து நீட்டு நீ என்னை இன்று என் செயாய் ? 1.5.166
    313 பிறந்தது எங்கள் பிரான் மலயத்து இடைச்
    சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில்
    புறம் பணைத் தடம் பொங்கழல் வீசிட
    மறம் பயின்றது எங்கோ? தமிழ் மாருதம்! 1.5.167
    314 இன்ன தன்மைய பின்னும் இயம்புவான்
    மன்னு காதலன் ஆகிய வள்ளல் பால்
    தன் அரும் பெறல் நெஞ்சு தயங்கப் போம்
    அன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம். 1.5.168
    315 கனங்கொண்ட மணி கண்டர் கழல்
    வணங்கிக் கணவனை முன் பெறுவாள் போல
    இனங் கொண்ட சேடியர்கள் புடை சூழ எய்து பெருங் காதலோடும்
    தனங் கொண்டு தளர் மருங்குற் பரவையும் வன்தொண்டர் பால்
    தனித்துச் சென்ற மனங்கொண்டு வரும் பெரிய மயல்
    கொண்டு தன்மணிமாளிகையைச் சார்ந்தாள். 1.5.169
    316 சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிதளவே ஒலிப்ப முன்னர்
    வேறொருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால்
    ஏறி மரகதத் தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலங் கொள் பொற் கால்
    மாறில் மலர்ச் சேக்கை மிசை மணி நிலா முன்றில் மருங்கிருந்தாள் வந்து. 1.5.170
    317 அவ்வளவில் அருகிருந்த சேடிதனை முகநோக்கி ஆரூர் ஆண்ட
    மைவிரவு கண்டாரை நாம் வணங்கப் போம் மறுகெதிர் வந்தவரார்? என்ன
    இவ்வுலகில் அந்தணராய் இருவர் தேடொருவர் தாம் எதிர் நின்று ஆண்ட
    சைவ முதல் திருத் தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி என்றாள். 1.5.171
    318 என்றவுரை கேட்டலுமே எம் பிரான் தமரேயோ என்னா முன்னம்
    வன் தொண்டர் பால் வைத்த மனக் காதல் அளவு இன்றி வளர்ந்து பொங்க
    நின்ற நிறை நாண்முதலாங் குணங்களுடன் நீங்க உயிர் ஒன்றும் தாங்கி
    மின் தயங்கு நுண் இடையாள் வெவ்வுயிர்த்து மெல் அணை மேல் வீழ்ந்த போது. 1.5.172
    319 ஆர நறுஞ் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறுந்திவலை அருகு வீசி
    ஈர இளந் தளிர்க்குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம்
    பேரழலின் நெய் சொரிந்தால் ஒத்தன மற்று அதன் மீது சமிதை என்ன
    மாரனும் தன் பெருஞ் சிலையின் வலிகாட்டி மலர் வாளி சொரிந்தான் வந்து. 1.5.173
    320 மலரமளித் துயில் ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு ஆற்றாள் மங்குல் வானில்
    நிலவுமிழும் தழல் ஆற்றாள் நிறை ஆற்றும் பொறை ஆற்றா நீர்மை யோடும்
    கலவ மயில் என எழுந்து கருங் குழலின் பரமாற்றாக் கையள் ஆகி
    இலவ இதழ்ச் செந்துவர் வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள். 1.5.174
    321 கந்தம் கமழ் மென் குழலீர்! இது என்? கலை வாண் மதியம் கனல்வான் எனை இச்
    சந்தின் தழலைப் பனி நீர் அளவித் தடவுங் கொடியீர்! தவிரீர்! தவிரீர்!
    வந்து இங்கு உலவும் நிலவும் விரையார் மலையானிலமும் எரியாய் வருமால்
    அந்தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்றுடையார் அருளார். 1.5.175
    322 புலரும் படி யன்றி இரவென்னளவும்; பொறையும் நிறையும் இறையும் தரியா,
    உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ? பெரு வாழ்வுரையீர்
    பலரும் புரியும் துயர்தான் இதுவோ படை மன் மதனார் புடை நின்று அகலார்!
    அலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற்று உடையார் அவரோ அறியார் 1.5.176
    323 தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவா ரூரிர்! நீரே அல்லால்
    ஆரென் துயரம் அறிவார்? அடிகேள் அடியேன் அயரும் படியோ இதுதான்?
    நீரும் பிறையும் பொறிவாள் அரவின் நிரையும் நிரை வெண்டலையின் புடையே
    ஊரும் சடையீர்! விடைமேல் வருவீர்! உமது அன்பிலர் போல் யானோ உறுவேன்? 1.5.177
    324 என்றின்னவெ பலவும் புகலும் இருளார் அளகச் சுருள் ஓதியையும்
    வன் தொண்டரையும் படிமேல் வர முன்பு அருளுவான் அருளும் வகையார் நினைவார்
    சென்று உம்பர்களும் பணியும் செல்வத் திருவாரூர் வாழ் பெருமான் அடிகள்
    அன்று அங்கு அவர் மன்றலை நீர் செயும் என்று அடியார் அறியும் படியால் அருளி. 1.5.178
    325 மன்னும் புகழ் நாவலர் கோன் மகிழ மங்கை பரவை தன்னைத் தந்தோம்
    இன்னவ்வகை நம் அடியார் அறியும் படியே உரை செய்தனம் என்று அருளிப்
    பொன்னின் புரி புன் சடையன் விடையன் பொருமா கரியின் உரிவை புனைவான்
    அன்னந் நடையாள் பரவைக்கு அணியது ஆரூரன் பால் மணம் என்று அருள. 1.5.179
    326 காமத் துயரில் கவல்வார் நெஞ்சிற் கரையில் இருளும் கங்குல் கழி போம்
    யாமத்து இருளும் புலரக் கதிரோன் எழுகாலையில் வந்து அடியார் கூடிச்
    சேமத் துணையாம் அவர் பேர் அருளைத் தொழுதே திரு நாவலர் கோன் மகிழத்
    தாமக் குழலாள் பரவை வதுவை தகு நீர்மை யினால் நிகழச் செய்தார். 1.5.180
    327 தென் நாவலூர் மன்னன் தேவர் பிரான் திருவருளால்
    மின்னாருங் கொடி மருங்குல் பரவை எனும் மெல்லியல் தன்
    பொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வாகப்
    பன்னாளும் பயில் யோக பரம்பரையின் விரும்பினார். 1.5.181
    328 தன்னையாளுடைய பிரான் சரணர விந்த மலர்
    சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்துத் திருப் பதிகம்
    பன்னு தமிழ்த் தொடை மாலை பல சாத்திப் பரவை எனும்
    மின்னிடையாள் உடன் கூடி விளையாடிச் செல்கின்றார். 1.5.182
    329 மாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை
    போதலர் வாவி மாடு செய் குன்றின் புடையோர் தெற்றிச்
    சீதளத் தரளப் பந்தர்ச் செழுந் தவிசி இழிந்து தங்கள்
    நாதர் பூங் கோயில் நண்ணிக் கும்பிடும் விருப்பால் நம்பி. 1.5.183
    330 அந்தரத்து அமரர் போற்றும் அணி கிளர் ஆடை சாத்திச்
    சந்தனத்து அளறு தோய்ந்த குங்குமக் கலவை சாத்திச்
    சுந்தரச் சுழியஞ் சாத்திச் சுடர் மணிக் கலன்கள் சாத்தி
    இந்திரத் திருவின் மேலாம் எழில் மிக விளங்கித் தோன்ற 1.5.184
    331 கையினிற் புனை பொற்கோலும் காதினில் இலங்கு தோடும்
    மெய்யினில் துவளு நூலும் நெற்றியில் விளங்கும் நீறும்
    ஐயனுக்கு அழகு இதாம் என்று ஆயிழை மகளிர் போற்றச்
    சைவ மெய்த் திருவின் கோலம் தழைப்ப வீதியினைச் சார்ந்தார் 1.5.185
    332 நாவலூர் வந்த சைவ நற் தவக் களிறே என்றும்
    மேலவர் புரங்கள் செற்ற விடையவர்க்கு அன்பர் என்றும்
    தாவில் சீர்ப் பெருமை ஆரூர் மறையவர் தலைவ என்றும்
    மேவினர் இரண்டு பாலும் வேறு வேறாயம் போற்ற. 1.5.186
    333 கைக் கிடா குரங்கு கோழி சிவல் கவுதாரி பற்றிப்
    பக்கம் முன் போதுவார்கள் பயில் மொழி பயிற்றிச் செல்ல
    மிக்க பூம் பிடகை கொள்வோர் விரையடைப்பையோர் சூழ
    மைக்கருங் கண்ணினார்கள் மறுக நீள் மறுகில் வந்தார். 1.5.187
    334 பொலங் கலப் புரவி பண்ணிப் போதுவார் பின்பு போத
    இலங்கொளி வலயப் பொற்தோள் இடை இடைமிடைந்து தொங்கல்
    நலங் கிளர் நீழல் சூழ நான்மறை முனிவரோடும்
    அலங்கலந் தோளினான் வந்து அணைந்தான் அண்ணல் கோயில். 1.5.188
    335 கண் நுதல் கோயில் தேவ ஆசிரியன் ஆம் காவணத்து
    விண்ணவர் ஒழிய மண் மேல் மிக்க சீர் அடியார் கூடி
    எண் இலார் இருந்த போதில் இவர்க்கு யான் அடியேன் ஆகப்
    பண்ணு நாள் எந்நாள் என்று பரமர் தாள் பரவிச் சென்றார். 1.5.189
    336 அடியவர்க்கு அடியன் ஆவேன் என்னும் ஆதரவு கூரக்
    கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்துப் புக்கார்
    கடி கொள்பூங் கொன்றை வேய்ந்தார் அவர்க்கு எதிர் காணக் காட்டும்
    படி எதிர் தோன்றி நிற்கப் பாதங்கள் பணிந்து பூண்டு. 1.5.190
    337 மன் பெருந் திருமா மறை வண்டு சூழ்ந்(து)
    அன்பர் சிந்தை அலர்ந்த செந் தாமரை
    நன் பெரும் பரம ஆனந்த நன் மது
    என் தரத்தும் அளித்து எதிர் நின்றன. 1.5.191
    338 ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின;
    காலன் ஆருயிர் மாளக் கருத்தன;
    மாலை தாழ் குழல் மாமலையாள் செங் கை
    சீலம் ஆக வருடச் சிவந்தன. 1.5.192
    339 நீதி மாதவர் நெஞ்சில் பொலிந்தன;
    வேதி யாதவர் தம்மை வேதிப்பன;
    சோதியாய் எழுஞ் சோதியுட் சோதிய ;
    ஆதி மால் அயன் காணா அளவின . 1.5.193
    340 வேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன;
    பேதையேன் செய் பிழை பொறுத்து ஆண்டன;
    ஏதம் ஆனவை தீர்க்க இசைந்தன;
    பூத நாத! நின் புண்டரீகப் பதம் . 1.5.194
    341 இன்னவாறு ஏத்து நம்பிக் கேறு சேவகனார் தாமும்
    அந் நிலை அவர்தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி
    மன்னு சீர் அடியார் தங்கள் வழித் தொண்டை உணர நல்கிப்
    பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளிச் செய்வார். 1.5.195
    342 பெருமையால் தம்மை ஒப்பார்; பேணலால் எம்மைப் பெற்றார்
    ஒருமையால் உலகை வெல்வார்; ஊனம் மேல் ஒன்றும் இல்லார்;
    அருமையாம் நிலையில் நின்றார்; அன்பினால் இன்பம் ஆர்வார்
    இருமையும் கடந்து நின்றார்; இவரை நீ அடைவாய் என்று 1.5.196
    343 நாதனார் அருளிச் செய்ய நம்பி ஆரூரர் நான் இங்கு
    ஏதந் தீர் நெறியைப் பெற்றேன் என்றெதிர் வணங்கிப் போற்ற
    நீதியால் அவர்கள் தம்மைப் பணிந்து நீ நிறை சொன் மாலை
    கோதிலா வாய்மையாலே பாடென அண்ணல் கூற. 1.5.197
    344 தன்னை ஆளுடைய நாதன் தான் அருள் செய்யக் கேட்டுச்
    சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப்பாடி நாடர்
    இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன் அதற்கு யான் யார்
    பன்னுபா மாலை பாடும் பரிசு எனக்கு அருள் செய் என்ன. 1.5.198
    345 தொல்லை மால் வரை பயந்த தூய் ஆள் தன் திருப் பாகன்
    அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறை அளித்த திரு வாக்கால்
    தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று
    எல்லையில் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி என்றார். 1.5.199
    346 மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர்
    சென்னியுற அடி வணங்கித் திருவருள் மேல் கொள் பொழுதில்
    முன்னம் மால் அயன் அறியா முதல்வர் தாம் எழுந்து அருள
    அந் நிலை கண்டு அடியவர் பால் சார்வதனுக்கு அணைகின்றார். 1.5.200
    347 தூரத்தே திருக் கூட்டம் பல முறையால் தொழுது அன்பு
    சேரத் தாழ்ந்து எழுந்து அருகு சென்று எய்தி நின்று அழியா
    வீரத்தார் எல்லார்க்கும் தனித் தனி வேறு அடியேன் என்று
    ஆர்வத்தால் திருத் தொண்டத் தொகைப் பதிகம் அருள் செய்வார். 1.5.201
    348 தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆகத் தமிழ் மாலைச்
    செம் பொருளால் திருத் தொண்டத் தொகை ஆன திருப் பதிகம்
    உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகேத்த
    எம் பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார். 1.5.202
    349 உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்த
    நம்பி ஆரூரர் திருக் கூட்டத்தின் நடுவணைந்தார்
    தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே
    எம்பிரான் தமர்கள் திருத் தொண்டு ஏத்தல் உறுகின்றேன். 1.5.203

    திருமலைச் சருக்கம் முற்றிற்று.
    சருக்கம் ஒன்றுக்குத் திருவிருத்தம் - 349