MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    12.1 பூசலார் நாயனார் புராணம் (4171- 4188 )


    திருச்சிற்றம்பலம்

    4171 அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி
    ஒன்றும் அங்கு உதவாது ஆக உணர்வினால் எடுக்கும் தன்மை
    நன்று என மனத்தினாலே நல்ல ஆயம் தான் செய்த
    நின்ற ஊர்ப் பூசலார்தம் நினைவினை உரைக்கல் உற்றார் 12.1.1
    4172 உலகினில் ஒழுக்கம் என்றும் உயர் பெரும் தொண்டை நாட்டு
    நலமிகு சிறப்பின் மிக்க நான் மறை விளங்கும் மூதூர்
    குல முதல் சீலம் என்றும் குறைவுஇலா மறையோர் கொள்கை
    நிலவிய செல்வம் மல்கி நிகழ் திருநின்ற ஊராம் 12.1.2
    4173 அருமறை மரபு வாழ அப்பதி வந்து சிந்தை
    தரும் உணர்வான எல்லாம் தம்பிரான் கழல்மேல் சார
    வருநெறி மாறா அன்பு வளர்ந்து எழ வளர்ந்து வாய்மைப்
    பொருள் பெறு வேதநீதிக் கலை உணர் பொலிவின் மிக்கார் 12.1.3
    4174 அடுப்பது சிவன்பால் அன்பர்க்காம் பணி செய்தல் என்றே
    கொடுப்பது எவ்வகையும் தேடி அவர் கொளக் கொடுத்தும் கங்கை
    மடுப்பொதி வேணி ஐயர் மகிழ்ந்து உறைவதற்கு ஓர் கோயில்
    எடுப்பது மனத்துக் கொண்டார் இரு நிதி இன்மை எண்ணார் 12.1.4
    4175 மனத்தினால் கருதி எங்கும் மாநிதி வருந்தித் தேடி
    எனைத்தும் ஓர் பொருட் பேறு இன்றி என் செய்கேன் என்று நைவார்
    நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியம் எல்லாம்
    தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையால் திரட்டிக் கொண்டார் 12.1.5
    4176 சாதனத் தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி
    நாதனுக்கு ஆலயம் செய் நலம் பெறு நல் நாள் கொண்டே
    ஆதரித்து ஆகமத்தால் அடிநிலை பாரித்து அன்பால்
    காதலில் கங்குல் போதும் கண்படாது எடுக்கல் உற்றார் 12.1.6
    4177 அடிமுதல் உபானம் ஆதி ஆகிய படைகள் எல்லாம்
    வடிவுறும் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான
    முடிவுறு சிகரம் தானும் முன்னிய முழத்தில் கொண்டு
    நெடிது நாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவால் செய்தார் 12.1.7
    4178 தூபியும் நட்டு மிக்க சுதையும் நல்வினையும் செய்து
    கூவலும் அமைத்து மாடு கோயில் சூழ் மதிலும் போக்கி
    வாவியும் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னும்
    தாபரம் சிவனுக்கு ஏற்க விதித்த நாள் சாரு நாளில் 12.1.8
    4179 காடவர் கோமான் கச்சிக் கல்தளி எடுத்து முற்ற
    மாடெலாம் சிவனுக்கு ஆகப் பெரும் செல்வம் வகுத்தல் செய்வான்
    நாடமால் அறியாதாரைத் தாபிக்கும் அந்நாள் முன்னாள்
    ஏடலர் கொன்றை வேய்ந்தார் இரவிடைக் கனவில் எய்தி 12.1.9
    4180 நின்ற ஊர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த
    நன்று நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம் நீ இங்கு
    ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்று
    கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண்டு அருளப் போந்தார் 12.1.10
    4181 தொண்டரை விளக்கத் தூயோன் அருள் செயத் துயிலை நீங்கித்
    திண்திறல் மன்னன் அந்தத் திருப்பணி செய்தார் தம்மை
    கண்டு நான் வணங்க வேண்டும் என்று எழும் காதலோடும்
    தண் தலைச் சூழல் சூழ்ந்த நின்ற ஊர் வந்து சார்ந்தான் 12.1.11
    4182 அப்பதி அணைந்து பூசல் அன்பர் இங்கு அமைத்த கோயில்
    எப்புடையது என்று அங்கண் எய்தினார் தம்மைக் கேட்கச்
    செப்பிய பூசல் கோயில் செய்தது ஒன்று இல்லை என்றார்
    மெய்ப் பெரு மறையோர் எல்லாம் வருக என்று உரைத்தான் வேந்தன் 12.1.12
    4183 பூசுரர் எல்லாம் வந்து புரவலன் தன்னைக் காண
    மாசிலாப் புசலார் தாம் யார் என மறையோர் எல்லாம்
    ஆசில் வேதியன் இவ்வூரான் என்று அவர் அழைக்க ஓட்டான்
    ஈசனார் அன்பர் தம்பால் எய்தினான் வெய்ய வேலான் 12.1.13
    4184 தொண்டரைச் சென்று கண்ட மன்னவன் தொழுது நீர் இங்கு
    எண் திசை யோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது இங்கு
    அண்டர் நாயகரைத் தாபித்து அருளும் நாள் இன்று என்று உம்மைக்
    கண்டடி பணிய வந்தேன் கண் நுதல் அருள் பெற்று என்றான் 12.1.14
    4185 மன்னவன் உரைப்பக் கேட்ட அன்பர் தாம் மருண்டு நோக்கி
    என்னையோர் பொருளாக் கொண்டே எம்பிரான் அருள் செய்தாரேல்
    முன்வரு நிதி இலாமை மனத்தினால் முயன்ற கோயில்
    இன்னதாம் என்று சிந்தித்து எடுத்தா வாறு எடுத்துச் சொன்னார் 12.1.15
    4186 அரசனும் அதனைக் கேட்டு அங்கு அதிசயம் எய்தி என்னே
    புரையறு சிந்தை அன்பர் பெருமை என்று அவரைப் போற்றி
    விரை செறி மாலை தாழ நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து
    முரசெறி தானை யோடு மீண்டு தன் மூதூர்ப் புக்கான் 12.1.16
    4187 அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத்து அரனார் தம்மை
    நன் பெரும் பொழுது சாரத் தாபித்து நலத்தினோடும்
    பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில் பல நாள் பேணிப்
    பொன் புனை மன்றுளாடும் பொன் கழல் நீழல் புக்கார் 12.1.17
    4188 நீண்ட செஞ் சடையினார்க்கு நினைப்பினால் கோயில் ஆக்கி
    பூண்ட அன்பிடையறாத பூசலார் பொன்தாள் போற்றி
    ஆண்டகை வளவர் கோமான் உலகுய்ய அளித்த செல்வப்
    பாண்டிமா தேவியார் தம் பாதங்கள் பரவல் உற்றேன் 12.1.18
    திருச்சிற்றம்பலம்


Goto Main book