MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    2.5. மெய்ப் பொருள் நாயனார் புராணம்


    திருச்சிற்றம்பலம்

    467 சேதி நன்னாட்டு நீடு திருக் கோவலூரின் மன்னி
    மாதொரு பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான்
    வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு
    காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்து அறிந்து ஏவல் செய்வார் 2.5.1
    468 அரசியல் நெறியின் வந்த அறநெறி வழாமல் காத்து
    வரை நெடும்ந்தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி
    உரை திறம்பாத நீதி ஓங்கு நீர்மையினின் மிக்கார்
    திரை செய் நீர்ச்சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார் 2.5.2
    469 மங்கையைப் பாகமாக உடையவர் மன்னும் கோயில்
    எங்கணும் பூசை நீடி ஏழிசைப் பாடல் ஆடல்
    பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து வாழ்வார்
    தங்கள் நாயகருக்கு அன்பர் தாளலால் சார்பு ஒன்று இல்லார் 2.5.3
    470 தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள்
    ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று
    நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்த போது
    கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவு அறக் கொடுத்து வந்தார் 2.5.4
    471 இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர் மன்னன்
    அன்னவர் தம்மை வெல்லும் ஆசையால் அமர் மேற்கொண்டு
    பொன் அணி ஓடை யானைப் பொரு பரி காலாள் மற்றும்
    பன் முறை இழந்து தோற்றுப் பரிபவப் பட்டுப் போனான் 2.5.5
    472 இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான்
    மெய்ப் பொருள் வேந்தன் சீலம் அறிந்து வெண் நீறு சாத்தும்
    அப்பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வான் ஆகச்
    செப்பரு நிலைமை எண்ணித் திருக் கோவலூரில் சேர்வான் 2.5.6
    473 மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக்
    கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி
    மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப்
    பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன் 2.5.7
    474 மா தவ வேடம் கொண்ட வன்கணான் மாடம் தோறும்
    கோதை சூழ் அளக பாரக் குழைக் கொடி ஆட மீது
    சோதி வெண் கொடிகள் ஆடுஞ் சுடர் நெடு மறுகில் போகிச்
    சேயதிர் பெருமான் கோயில் திருமணி வாயில் சேர்ந்தான் 2.5.8
    475 கடை உடைக் காவலாளர் கை தொழுது ஏற நின்றே
    உடையவர் தாமே வந்தார் உள் எழுந்து அருளும் என்னத்
    தடை பல புக்க பின்பு தனித் தடை நின்ற தத்தன்
    இடை தெரிந்து அருள வேண்டும் துயில் கொள்ளும் இறைவன் என்றான் 2.5.9
    476 என்று அவன் கூறக் கேட்டே யான் அவற்கு உறுதி கூற
    நின்றிடு நீயும் என்றே அவனையும் நீக்கிப் புக்குப்
    பொன் திகழ் பள்ளிக் கட்டில் புரவலன் துயில மாடே
    மன்றலங் குழல் மென் சாயல் மா தேவி இருப்பக் கண்டான் 2.5.10
    477 கண்டு சென்று அணையும் போது கதும் என இழிந்து தேவி
    வண்டலர் மாலையானை எழுப்பிட உணர்ந்து மன்னன்
    அண்டர் நாயகனார் தொண்டராம் எனக் குவித்த செங்கை
    கொண்டு எழுந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று 2.5.11
    478 மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன
    இங்கு எழுந்து அருளப் பெற்றது என் கொலோ என்று கூற
    உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண்மேல்
    எங்கும் இலாதது ஒன்று கொடு வந்தேன் இயம்ப என்றான் 2.5.12
    479 பேறு எனக்கு இதன் மேல் உண்டோ பிரான் அருள் செய்த இந்த
    மாறிலா ஆகமத்தை வாசித்து அருள வேண்டும் என்ன
    நாறு பூங் கோதை மாது தவிரவே நானும் நீயும்
    வேறு இடத்து இருக்க வேண்டும் என்று அவன் விளம்ப வேந்தன் 2.5.13
    480 திருமகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கிப்
    பரிவுடன் விரைய அந்தப்புரத்திடைப் போக ஏவித்
    தரு தவ வேடத்தானைத் தவிசின் மேல் இருத்தித் தாமும்
    இரு நிலத்து இருந்து போற்றி இனி அருள் செய்யும் என்றான் 2.5.14
    481 கைத் தலத்து இருந்த வஞ்சக் கவளிகை மடி மேல் வைத்துப்
    புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்த அவர் வணங்கும் போதில்
    பத்திரம் வாங்கித் தான் முன் நினைத்த அப் பரிசே செய்ய
    மெய்த் தவ வேடமே மெய்ப்பொருள் எனத் தொழுது வென்றார் 2.5.15
    482 மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன்
    இறைப் பொழுதின் கண் கூடி வாளினால் எறியல் உற்றான்
    நிறைத்த செங் குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால்
    தறைப் படும் அளவில் தத்தா நமர் எனத் தடுத்து வீழ்ந்தார் 2.5.16
    483 வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப் பட்ட
    தாதனாந் தத்தன் தானும் தலையினால் வணங்கித் தாங்கி
    யாது நான் செய்கேன் என்ன எம்பிரான் அடியார் போக
    மீதிடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ என்றார் 2.5.17
    484 அத் திறம் அறிந்தார் எல்லாம் அரசனைத் தீங்கு செய்த
    பொய்த் தவன் தன்னைக் கொல்வோம் எனப் புடை சூழ்ந்த போது
    தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான்
    இத் தவன் போகப் பெற்றது இறைவனது ஆணை என்றான் 2.5.18
    485 அவ்வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகன்று நீங்கச்
    செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து
    கை வடி நெடுவாள் ஏந்தி ஆளுறாக் கானஞ் சேர
    வெவ் வினைக் கொடியோன் தன்னை விட்ட பின் மீண்டு போந்தான் 2.5.19
    486 மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல்
    செற்றவர் தம்மை நீக்கித் தீது இலா நெறியில் விட்ட
    சொல் திறம் கேட்க வேண்டிச் சோர்கின்ற ஆவி தாங்கும்
    கொற்றவன் முன்பு சென்றான் கோமகன் குறிப்பில் நின்றான் 2.5.20
    487 சென்று அடி வணங்கி நின்று செய் தவ வேடம் கொண்டு
    வென்றவற்கு இடையூறு இன்றி விட்டனன் என்று கூற
    இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய வல்லார் என்று
    நின்றவன் தன்னை நோக்கி நிறை பெரும் கருணை கூர்ந்தார் 2.5.21
    488 அரசியல் ஆயத்தார்க்கும் அழிவுறும் காதலார்க்கும்
    விரவிய செய்கை தன்னை விளம்புவார் விதியினாலே
    பரவிய திரு நீற்று அன்பு பாது காத்து உய்ப்பீர் என்று
    புரவலர் மன்றுள் ஆடும் பூங் கழல் சிந்தை செய்தார் 2.5.22
    489 தொண்டனார்க்கு இமயப் பாவை துணைவனார் அவர் முன் தம்மைக்
    கண்டவாறு எதிரே நின்று காட்சி தந்தருளி மிக்க
    அண்ட வானவர் கட்கு எட்டா அருள் கழல் நீழல் சேரக்
    கொண்டவாறு இடை அறாமல் கும்பிடும் கொள்கை ஈந்தார் 2.5.23
    490 இன்னுயிர் செகுக்கக் கண்டும் எம்பிரான் அன்பர் என்றே
    நன் நெறி காத்த சேதி நாதனார் பெருமை தன்னில்
    என் உரை செய்தேன் ஆக இகல் விறன் மிண்டர் பொற் தாள்
    சென்னி வைத்து அவர் முன் செய்த திருத் தொண்டு செப்பல் உற்றேன் 2.5.24

    திருச்சிற்றம்பலம்


Goto Main book