MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    3.3. கண்ணப்ப நாயனார் புராணம் (650-835)


    திருச்சிற்றம்பலம்

    650 மேலவர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக்
    காவலர் திருக் காளத்திக் கண்ணப்பர் திரு நாடு என்பர்
    நாவலர் புகழ்ந்து போற்றும் நல் வளம் பெருகி நின்ற
    பூவலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு 3.3.1
    651 இத் திரு நாடு தன்னில் இவர் திருப் பதியாதென்னில்
    நித்தில அருவிச் சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர்
    மத்த வெம் களிற்றுக் கோட்டு வன் தொடர் வேலி கோலி
    ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும் 3.3.2
    652 குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ் செவி ஞமலி யாத்த
    வன்றிரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப்
    பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை
    அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும் 3.3.3
    653 வன் புலிக் குருளையோடும் வயக் கரி கன்றினோடும்
    புன்றலைச் சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி
    அன்புறு காதல் கூற அணையும் மான் பிணைகளோடும்
    இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும் 3.3.4
    654 வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்
    கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்
    சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி
    கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும் 3.3.5
    655 ஆறலைத்து உண்ணும் வேடர் அயற் புலங் கவர்ந்து கொண்ட
    வேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றி
    ஏறுடை வானம் தன்னில் இடிக் குரல் எழிலி யோடு
    மாறுகொள் முழக்கங் காட்டும் மதக்கை மாநிரைகள் எங்கும் 3.3.6
    656 மைச் செறிந்தனைய மேனி வன் தொழில் மறவர் தம்பால்
    அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார்
    பொச்சை யின் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும்
    நச்சழற்பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான் 3.3.7
    657 பெற்றியால் தவமுன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால்
    குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலை நின்றுள்ளான்
    வில் தொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான்
    மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள் 3.3.8
    658 அரும் பெறல் மறவர் தாயத்தான்ற தொல் குடியில் வந்தாள்
    இரும் புலி எயிற்றுத் தாலி இடை இடை மனவு கோத்துப்
    பெரும் புறம் அலையப் பூண்டான் பீலியும் குழையும் தட்டச்
    சுரும்புறு படலை முச்சிச் சூர் அரிப் பிணவு போல்வான் 3.3.9
    659 பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனிப் புதல்வர் பேறே
    அரியது என்று எவரும் கூற அதற்படு காதலாலே
    முருகலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று
    பரவுதல் செய்து நாளும் பராய்க் கடன் நெறியில் நிற்பார் 3.3.10
    660 வாரணச் சேவலோடும் வரிமயிற் குலங்கள் விட்டுத்
    தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப்
    போரணி நெடுவேலோற்குப் புகழ்புரி குரவை தூங்கப்
    பேரணங்கு ஆடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை 3.3.11
    661 பயில் வடுப் பொலிந்த யாக்கை வேடர்தம் பதியாம் நாகற்கு
    எயிலுடைப் புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன
    மயிலுடைக் கொற்ற ஊர்தி வரையுரங் கிழித்த திண்மை
    அயிலுடைத் தடக்கை வென்றி அண்ணலார் அருளினாலே 3.3.12
    662 கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம் நீட
    ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறி ஆட்டோ டும்
    ஆன அத் திங்கள் செல்ல அளவில் செய் தவத்தினாலே
    பான்மதி உவரி ஈன்றால் என மகப் பயந்த போது 3.3.13
    663 கரிப்பரு மருப்பின் முத்தும் கழை விளை செழுநீர் முத்தும்
    பொருப்பின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி
    வரிச் சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும்
    அரிக்குறுந் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த 3.3.14
    664 அருவரைக் குறவர் தங்கள் அகன் குடிச் சீறூர் ஆயம்
    பெரு விழா எடுத்து மிக்க பெருங்களி கூறும் காலைக்
    கருவரை காள மேகம் ஏந்தியது என்னத் தாதை
    பொருவரைத் தோள்களாரப் புதல்வனை எடுத்துக் கொண்டான் 3.3.15
    665 கருங் கதிர் விரிக்கும் மேனி காமரு குழவி தானும்
    இரும்புலி பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி
    அரும் பெறல் உலகமெல்லாம் அளப்பரும் பெருமை காட்டித்
    தருங்குறி பலவும் சாற்றும் தன்மையிற் பொலிந்து தோன்ற 3.3.16
    666 அண்ணலைக் கையில் ஏந்தற்கு அருமையால் உரிமைப் பேரும்
    திண்ணன் என்றியம்பும் என்னத் திண்சிலை வேடர் ஆர்த்தார்
    புண்ணியப் பொருளாய் உள்ள பொருவில் சீர் உருவினானைக்
    கண்ணினுக்கு அணியாத் தங்கள் கலன்பல அணிந்தார் அன்றே 3.3.17
    667 வரையுறை கடவுட் காப்பு மறகுடி மரபில் தங்கள்
    புரையில் தொல் முறைமைக்கு ஏற்பப் பொருந்துவ போற்றிச் செய்து
    விரையிளந் தளிருஞ் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த
    அரை மணிக் கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில் 3.3.18
    668 வருமுறைப் பருவம் தோறும் வளமிகு சிறப்பில் தெய்வப்
    பெருமடை கொடுத்துத் தொக்க பெருவிறல் வேடர்க்கெல்லாம்
    திருமலி துழனி பொங்கச் செழுங்களி மகிழ்ச்சி செய்தே
    அருமையில் புதல்வர் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார் 3.3.19
    669 ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடித் தளர்வு நீங்கிப்
    பூண் திகழ் சிறு புன் குஞ்சிப் புலியுகிர்ச் சுட்டி சாத்தி
    மூண்டெழு சினத்துச் செங்கண் முளவு முள் அரிந்து கோத்த
    நாண்டரும் எயிற்றுத் தாலி நலங்கிளர் மார்பில் தூங்க 3.3.20
    670 பாசொளி மணியோடு ஆர்த்த பன் மணிச் சதங்கை ஏங்க
    காசொடு தொடுத்த காப்புக் கலன் புனை அரைஞாண் சேர்த்தித்
    தேசுடை மருப்பில் தண்டை செறிமணிக் குதம்பை மின்ன
    மாசறு கோலம் காட்டி மறுகிடை ஆடும் நாளில் 3.3.21
    671 தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்து
    புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில்
    உண்ணனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலைத் தீஞ் சொல்
    வண்ண மென் பவளச் செவ்வாய் குதட்டியே வளரா நின்றார் 3.3.22
    672 பொரு புலிப் பார்வைப் பேழ்வாய் முழை எனப் பொற்கை நீட்டப்
    பரிஉடைத் தந்தை கண்டு பைந்தழை கைக் கொண்டோ ச்ச
    இரு சுடர்க் குறு கண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி
    வருதுளி முத்தம் அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி 3.3.23
    673 துடிக் குறடு உருட்டி ஓடித் தொடக்கு நாய்ப் பாசம் சுற்றிப்
    பிடித்து அறுத்து எயினப் பிள்ளைப் பேதையர் இழைத்த வண்டல்
    அடிச் சிறு தளிரால் சிந்தி அருகுறு சிறுவரோடும்
    குடிச் செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து 3.3.24
    674 அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின்
    வனை தரு வடிவார் கண்ணி மறச் சிறு மைந்த ரோடும்
    சினை மலர்க் காவுகள் ஆடி செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த
    புனை மருப் புழலை வேலிப் புறச்சிறு கானிற் போகி 3.3.25
    675 கடு முயல் பறழினோடுங் கான ஏனத்தின் குட்டி
    கொடு வரிக் குருளை செந்நாய் கொடுஞ் செவிச் சாபம் ஆன
    முடுகிய விசையில் ஓடித் தொடர்ந்து உடன் பற்றி முற்றத்து
    இடு மரத் திரளில் கட்டி வளப்பன எண்ணிலாத 3.3.26
    676 அலர் பகல் கழிந்த அந்தி ஐயவிப் புகையும் ஆட்டிக்
    குலமுது குறத்தி ஊட்டிக் கொண்டு கண் துயிற்றிக் கங்குல்
    புலர ஊன் உணவு நல்கிப் புரி விளையாட்டின் விட்டுச்
    சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார் 3.3.27
    677 தந்தையும் மைந்தனாரை நோக்கித் தன் தடித்த தோளால்
    சிந்தை உள் மகிழப் புல்லிச் சிலைத் தொழில் பயிற்ற வேண்டி
    முந்தை அத் துறையில் மிக்க முதியரை அழைத்துக் கூட்டி
    வந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்குச் சொல்லி விட்டான் 3.3.28
    678 வேடர் தம் கோமான் நாதன் வென்றி வேள் அருளால் பெற்ற
    சேடரின் மிக்க செய்கைத் திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று
    ஆடியல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு
    மாடுயர் மலைகள் ஆளும் மறக் குலத் தலைவர் எல்லாம் 3.3.29
    679 மலை படு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும்
    கொலை புரி களிற்றுக் கோடும் பீலியின் குவையும் தேனும்
    தொலைவில் பல் நறவும் ஊனும் பலங்களும் கிழங்கும் துன்றச்
    சிலை பயில் வேடர் கொண்டு திசை தொறும் நெருங்க வந்தார் 3.3.30
    680 . மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறில் சீறூர்
    எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தா எங்கும்
    பல்பெருங் கிளைஞர் போற்றப் பராய்க் கடன் பலவும் செய்து
    வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமன் 3.3.31
    681 பான்மையில் சமைத்துக் கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்த
    தேனலர் கொன்றையார் தம் திருச்சிலைச் செம்பொன் மேரு
    வானது கடலின் நஞ்சும் ஆக்கிட அவர்க்கே பின்னும்
    கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினைக் காப்புச் செய்தார் 3.3.32
    682 சிலையினைக் காப்புக் கட்டும் திண் புலி நரம்பில் செய்த
    நலமிகு காப்பு நன்னாண் நாகனார் பயந்த நாகர்
    குலம் விளங்கு கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்தி
    மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்த எடுத்து இயம்பினார்கள் 3.3.33
    683 ஐவன அடிசில் வெவ்வேறு அமைந்தன புற்பாற் சொன்றி
    மெய் வரைத் தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும்
    கைவினை எயினர் ஆக்கிக் கலந்த ஊன் கிழங்கு துன்றச்
    செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சினவில் வேடர் 3.3.34
    684 செம் தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்து
    வெந்த ஊன் அயில்வார் வேரி விளங்கனி கவளம் கொள்வார்
    நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார் வெவ்வேறு
    அந்தமில் உணவின் மேலோர் ஆயினர் அளவிலார்கள் 3.3.35
    685 அயல் வரைப் புலத்தின் வந்தார் அருங்குடி இருப்பின் உள்ளார்
    இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம்
    உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவில் பல் நறவு மாந்தி
    மயலுறு களிப்பின் நீடி வரிசிலை விழவு கொள்வார் 3.3.36
    686 பாசிலைப் படலைச் சுற்றிப் பன் மலர்த் தொடையல் சூடிக்
    காசுடை வடத் தோல் கட்டி கவடி மெய்க் கலன்கள் பூண்டார்
    மாசில் சீர் வெட்சி முன்னா வருதுறைக் கண்ணி சூடி
    ஆசில் ஆசிரியன் ஏந்தும் அடற் சிலை மருங்கு சூழ்ந்தார் 3.3.37
    687 தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும்
    எண்டிசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும்
    திண்டிறல் மறவர் ஆர்ப்புச் சேண் விசும்பு இடித்துச் செல்லக்
    கொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலம் கொண்டார்கள் 3.3.38
    688 குன்றவர் களி கொண்டாடக் கொடிச்சியர் துணங்கை ஆட
    துன்றிய மகிழ்ச்சியோடும் சூர் அரமகளிர் ஆட
    வென்றி வில் விழவினோடும் விருப்புடை ஏழாம் நாளாம்
    அன்றிரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்னர் 3.3.39
    689 வெங்கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும்
    மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்பத்
    தங்கள் தொல் மரபின் விஞ்சைத் தனுத் தொழில் வலவர் தம்பால்
    பொங்கொளிக் கரும் போர் ஏற்றைப் பொருசிலை பிடிப்பித்தார்கள் 3.3.40
    690 பொற்றட வரையின் பாங்கர்ப் புரிவுறு கடன் முன் செய்த
    வில் தொழில் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும்
    அற்றை நாள் தொடங்கி நாளும் அடல் சிலை ஆண்மை முற்றக்
    கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம் 3.3.41
    691 வண்ணவெஞ் சிலையும் மற்றப் படைகளும் மலரக் கற்று
    கண்ணகல் சாயல் பொங்கக் கலை வளர் திங்களே போல்
    எண்ணிரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லாப்
    புண்ணியம் தோன்றி மேல் மேல் வளர் அதன் பொலிவு போல்வார் 3.3.42
    692 இவ் வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில்
    இருங் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய
    மை வண்ண வரை நெடுந் தோள் நாகன் தானும் மலை எங்கும்
    வனம் எங்கும் வரம்பில் காலம்
    கை வண்ணச் சிலை வேட்டை ஆடித் தெவ்வர் கண
    நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து
    மெய் வண்ணந்தளர் மூப்பின் பருவம் எய்தி வில்லுழவின்
    பெரு முயற்சி மெலிவன் ஆனான் 3.3.43
    693 அங்கண் மலைத் தடஞ்சாரல் புனங்கள் எங்கும்
    அடலேனம் புலி கரடி கடமை ஆமா
    வெங் கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள்
    மிக நெருங்கி மீதூர் காலைத்
    திங்கள் முறை வேட்டை வினை தாழ்தது என்று சிலை
    வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று
    தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல்
    நாகன் பால் சார்ந்து சொன்னார் 3.3.44
    694 சொன்ன உரை கேட்டலுமே நாகன் தானும் சூழ்ந்து
    வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி
    முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல்
    வேட்டையினில் முயல கில்லேன்
    என் மகனை உங்களுக்கு நாதனாக எல்லீரும் கைக்
    கொண்மின் என்ற போதின்
    அன்னவரும் இரங்கிப் பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி
    இம் மாற்றம் அரைகின்றார்கள் 3.3.45
    695 இத்தனை காலமும் நினது சிலைக் கீழ் தங்கி இனிது
    உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும்
    அத்த! நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி
    வேறு உளதோ அதுவே அன்றி
    மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம் படவே
    பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை
    வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை
    ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர் 3.3.46
    696 சிலை மறவர் உரை செய்ய நாகன் தானும் திண்ணனை
    முன் கொண்டுவரச் செப்பி விட்டு
    மலை மருவு நெடும் கானில் கன்னி வேட்டை மகன் போகக்
    காடு பலி மகிழ்வு ஊட்ட
    தலை மரபின் வழி வந்த தேவராட்டிதனை அழைமின் என
    அங்குச் சார்ந்தோர் சென்று
    நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து
    விருப்பினோடும் கடிது வந்தாள் 3.3.47
    697 கானில் வரித்தளிர் துதைந்த கண்ணி சூடிக் கலை
    மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து
    மானின் வயிற்று அரிதாரத் திலகம் இட்டு மயில் கழுத்து
    மனவு மணி வடமும் பூண்டு
    தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழத் தாழைப்பீலி
    மரவுரி மேல் சார எய்திப்
    பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கிப் போர் வேடர்
    கோமானைப் போற்றி நின்றாள் 3.3.48
    698 நின்ற முதுகுறக்கோலப் படிமத்தாளை நேர் நோக்கி
    அன்னை நீ நிரப்பு நீங்கி
    நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன்
    எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல
    மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை
    வளனும் வேண்டிற்று எல்லாம்
    அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி
    என் என்றாள் அணங்கு சார்ந்தாள் 3.3.49
    699 கோட்டமில் என்குல மைந்தன் திண்ணன் எங்கள்
    குலத் தலைமை யான் கொடுப்பக்கொண்டு பூண்டு
    பூட்டுறு வெஞ் சிலை வேடர் தம்மைக் காக்கும் பொருப்புரிமை
    புகுகின்றான் அவனுக்கு என்றும்
    வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு
    புலங் கவர் வென்றி மேவு மாறு
    காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ணக் காடு பலி
    ஊட்டு என்றான் கவலை இல்லான் 3.3.50
    700 மற்று அவன்தன் மொழி கேட்ட வரைச் சூராட்டி மனமகிழ்ந்து
    இங்கு அன்போடு வருகின்றேனுக்கு
    எற்றையினுங் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன்
    மைந்தன் திண்ணனான வெற்றி வரிச்
    சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான்
    என்று விரும்பி வாழ்த்திக்
    கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன
    குறைவின்றிக் கொண்டு போனாள் 3.3.51
    701 தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார்
    சிலைத் தாதை அழைப்பச் சீர்கொள்
    மைவிரவு நறுங் குஞ்சி வாசக் கண்ணி மணி நீல
    ஒன்று வந்தது என்னக்
    கைவிரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி
    தாதை கழல் வணங்கும் போதில்
    செய்வரை போல் புயம் இரண்டும் செறியப் புல்லிச்
    செழும் புலித்தோல் இருக்கையின் முன்சேர வைத்தான் 3.3.52
    702 முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன்
    மூப்பு எனை வந்து அடைந்தலினால் முன்புபோல
    என்னுடைய முயற்சியினால் வேட்டை ஆட இனி
    எனக்குக் கருத்து இல்லை எனக்கு மேலாய்
    மன்னு சிலை மலையர் குலக் காவல் பூண்டு மாறு
    எறிந்து மா வேட்டை ஆடி என்றும்
    உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்றுடைய
    தோலும் சுரிகையும் கைக் கொடுத்தான் அன்றே 3.3.53
    703 தந்தை நிலை உள்கொண்டு தளர்வு கொண்டு தங்கள்
    குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற
    வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட
    குறிப்பினால் மறாமை கொண்டு
    முந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை
    உடை தோலும் வாங்கிக் கொண்டு
    சிந்தை பரங்கொள நின்ற திண்ணனார்க்குத் திருத்
    தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான் 3.3.54
    704 நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு
    பரித்து அதன் மேல் நலமே செய்து
    தெம் முனையில் அயற் புலங்கள் கவர்ந்து கொண்ட திண்
    சிலையின் வளமொழியாச் சிறப்பின் வாழ்வாய்
    வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும்
    விரைந்து நீ தாழாதே வேட்டை ஆட
    இம் முரண் வெஞ் சிலை வேடர் தங்களோடும் எழுக என
    விடை கொடுத்தான் இயல்பில் நின்றான் 3.3.55
    705 செங்கண் வயக் கோளரியேறு அன்ன திண்மை
    திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற
    வெங்கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று விடை
    கொண்டு புறம் போந்து வேடரோடும்
    மங்கல நீர்ச் சுனை படிந்து மனையின் வைகி வைகிருளின்
    புலர் காலை வரிவிற் சாலைப்
    பொங்கு சிலை அடல் வேட்டைக் கோலம் கொள்ளப் புனை
    தொழில் கை வினைஞரோடும் பொலிந்து புக்கார் 3.3.56
    706 நெறி கொண்ட குஞ்சிச் சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்க
    முறி கொண்ட கண்ணிக்கு இடை மொய்யொளிப் பீலி சேர்த்தி
    வெறி கொண்ட முல்லைப் பிணைமீது குறிஞ்சி வெட்சி
    செறி கொண்ட வண்டின் குலம் சீர் கொளப் பின்பு செய்து 3.3.57
    707 முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி
    தன்னில் புரி கொண்ட மயிர் கயிறாரச் சாத்தி
    மின்னல் திகழ் சங்கு விளங்கு வெண் தோடு காதின்
    மன்னிப் புடை நின்றன மா மதி போல வைக 3.3.58
    708 கண்டத்திடை வெண் கவடிக் கதிர் மாலை சேர
    கொண்டக் கொடு பன் மணி கோத்திடை ஏனக் கோடு
    துண்டப் பிறை போல்வன தூங்கிட வேங்கை வன்தோல்
    தண்டைச் செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க 3.3.59
    709 மார்பில் சிறு தந்த மணித்திரள் மாலைத் தாழத்
    தாரிற் பொலி தோள் வலயங்கள் தழைத்து மின்னச்
    சேர்விற் பொலி கங்கண மீது திகழ்த முன் கைக்
    கார்விற் செறி நாண் எறி கைச் செறி கட்டி கட்டி 3.3.60
    710 அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவத்து
    திரையில் படு வெள்ளலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி
    நிரையில் பொலி நீளுடை தோல்கரி கைப்புறம் சூழ்
    விரையில் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி 3.3.61
    711 வீரக் கழல் காலின் விளங்க அணிந்து பாதம்
    சேரத் தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப்
    பாரப் பெரு வில் வலம் கொண்டு பணிந்து திண்ணன்
    சாரத் திருத்தாள் மடித்து ஏற்றி வியந்து தாங்கி 3.3.62
    712 அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கித்
    துங்கப் பெரு மா மழை போன்று துண் என்று ஒலிப்ப
    வெங்கண் சின நீடு விலங்கு விலங்கி நீங்கச்
    செங்கைத் தலத்தால் தடவிச் சிறு நாண் எறிந்தார் 3.3.63
    713 பல்வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏவி
    வில் வேடர் ஆயத் துடி மேவி ஒலிக்கு முன்றில்
    சொல் வேறு வாழ்த்துத் திசைதோறும் துதைந்து விம்ம
    வல்லேறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார் 3.3.64
    714 மானச் சிலை வேடர் மருங்கு நெருங்கும் போதில்
    பானற்குல மாமலரில் படர் சோதியார் முன்
    தேனற்றசை தேறல் சருப் பொரி மற்றும் உள்ள
    கானப் பலி நேர் கடவுள் பொறையாட்டி வந்தாள் 3.3.65
    715 நின்று எங்கும் மொய்க்கும் சிலை வேடர்கள் நீங்கப் புக்குச்
    சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்தி
    உன் தந்தை தந்தைக்கும் இந் நன்மைகள் உள்ள வல்ல
    நன்றும் பெரிது விறல் நம்மளவு அன்று இது என்றாள் 3.3.66
    716 அப் பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை ஆட்டி தன்னைச்
    செப்பற்கு அரிதாய சிறப்பு எதிர் செய்து போக்கிக் கைப் பற்றிய
    திண் சிலை கார் மழை மேகம் என்ன
    மெய்ப் பொற்புடை வேட்டையின் மேல் கொண்டு எழுந்து போந்தார் 3.3.67
    717 தாளில் வாழ் செருப்பர் தோல் தழைத்த நீடு தானையர்
    வாளியோடு சாபம் மேவு கையர் வெய்ய வன் கணார்
    ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்ணிலார்
    மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே 3.3.68
    718 வன் தொடர் பிணித்த பாசம் வன் கை மள்ளர் கொள்ளவே
    வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதமுன்
    சென்று நீளுமாறு போல்வ செய்ய நாவின் வாய வாய்
    ஒன்றோடு ஒன்று நேர் படாமல் ஓடு நாய்கள் மாடெலாம் 3.3.69
    719 போர் வலைச் சிலைத் தொழில் புறத்திலே விளைப்பச்
    சார் வலைத் தொடக்கு அறுக்க ஏகும் ஐயர் தம் முன்னே
    கார் வலைப் படுத்த குன்று கானமா வளைக்க நீள்
    வார் வலைத் திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார் 3.3.70
    720 நண்ணி மா மறைக் குலங்கள் நாட என்று நீடும் அத்
    தண்ணிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார் தமைக்
    கண்ணில் நீடு பார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர் முன்
    எண்ணில் பார்வை கொண்டு வேடர் எம் மருங்கும் ஏகினார் 3.3.71
    721 கோடுமுன் பொலிக்கவும் குறுங் கணா குளிக்குலம்
    மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும்
    சேடு கொண்டகை விளிச் சிறந்த ஓசை செல்லவும்
    காடு கொண்டு எழுந்த வேடு கை வளைந்து சென்றதே 3.3.72
    722 நெருங்கு பைந்தருக் குலங்கள் நீடு காடு கூட நேர்
    வருங்கருஞ் சிலைத் தடக்கை மான வேடர் சேனை தான்
    பொருந் தடந் திரைக்கடல் பரப்பு இடைப் புகும் பெருங்
    கருந்தரங்க நீள் புனல் களிந்தி கன்னி ஒத்ததே 3.3.73
    723 தென் திசைப் பொருப்புடன் செறிந்த கானின் மான் இனம்
    பன்றி வெம் மரைக் கணங்கள் ஆதியான பல் குலம்
    துன்றி நின்ற என்றடிச் சுவட்டின் ஒற்றர் சொல்லவே
    வன் தடக்கை வார்கொடு எம் மருங்கும் வேடர் ஓடினார் 3.3.74
    724 ஓடி எறிந்து வாரொழுக்கி யோசனைப் பரப்பு எலாம்
    நெடிய திண் வலைத் தொடக்கு நீளிடைப் பிணித்து நேர்
    கடி கொளப் பரந்த காடு காவல் செய்து அமைத்த பின்
    செடி தலைச் சிலைக்கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார் 3.3.75
    725 வெஞ்சிலைக்கை வீரனாரும் வேடரோடு கூடி முன்
    மஞ்சலைக்கு மாமலை சரிப் புறத்து வந்த மா
    அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் அட்டமாக விட்டு நீள்
    செஞ்சரத்தினோடு குழல் செய்த கானுள் எய்தினர் 3.3.76
    726 வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பராயம் ஓடி நேர்
    எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும்
    மொய் குரல் துடிக் குலங்கள் பம்பை முன் சிலைத்து எழக்
    கை விளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கானெலாம் 3.3.77
    727 ஏனமோடு மான் இனங்கள் எண்கு திண் கலைக் குலம்
    கான மேதி யானை வெம் புலிக் கணங்கள் கான் மரை
    ஆன மா அநேக மா வெருண்டு எழுந்து பாய முன்
    சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார் 3.3.78
    728 தாளறுவன் இடை துணிவன தலை துமிவன கலைமா
    வாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மா
    நீளுடல் விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா
    மீளிகொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே 3.3.79
    729 வெங்கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய்
    செங் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமா
    அங்கு எழும் சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனைப்
    பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள் 3.3.80
    730 பின் மறவர்கள் விடு பகழிகள் பிற குற வயிறிடை போய்
    முன் நடுமுக மிசை உருவிட முடுகிய விசையுடன் அக்
    கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவத்
    தன் எதிர் எதிர் பொருவன நிகர் தலையன பல கலைகள் 3.3.81
    731 கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர்
    குரிசில் முன் விடும் அடுசரம் எதிர் கொலை பயில் பொழுது அவையே
    பொரு கரி யொடு சின அரியிடை புரையறவுடல் புகலால்
    வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அவ்வனமே 3.3.82
    732 நீளிடை விசை மிசை குதிகொள நெடு முகில் தொட எழு மான்
    தாளுறு கழல் மறவர்கள் விடு சரம் நிரை தொடர்வன தாம்
    வாள் விடுகதிர் மதி பிரிவுற வருமென விழும் உழையைக்
    கோளொடு பயில் பணி தொடர் நிலை கொளவுள எதிர் பலவே 3.3.83
    733 கடல் விரி புனல் கொள விழுவன கரு முகிலென நிரையே
    படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல்
    அடலுறு சரம் உடலுற வரை அடியிடம் அலமரலால்
    மிடை கரு மரை கரடிகள் ஓடு விழுவன வன மேதி 3.3.84
    734 பல துறைகளின் வெருவரலொடு பயில் வலையற நுழை மா
    உலமொடு படர்வன தகையுற உறு சினமொடு கவர் நாய்
    நிலவிய இரு வினை வலை இடை நிலை சுழல் பவர் நெறி சேர்
    புலனுறு மனனிடை தடைசெய்த பொறிகளின் அலவுளவே 3.3.85
    735 துடியடியன மடி செவியன துறுகய முனி தொடரார்
    வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார்
    அடி தளர்வுறு கரு உடையன அணை உறு பிணை அலையார்
    கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவர் 3.3.86
    736 இவ்வகை வரு கொலை மறவினை எதிர் நிகழ்வுழி அதிரக்
    கைவரைகலும் வெருவுற இடை கான் எழுவதோர் ஏனம்
    பெய் கருமுகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி
    மொய் வலைகளை அற நிமிர் முடுகிய கடு விசையில் 3.3.87
    737 போமது தணை அடுதிறலொடு பொரு மறவர்கள் அரியேறு
    ஆமவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில்
    தாம் ஒருவரும் அறிகிலரவர் தனி தொடர்வுழி அதன்மேல்
    ஏமுனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார் 3.3.88
    738 நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரிவில்
    காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில்
    கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி
    நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல் 3.3.89
    739 குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இடக் குரல் நீள்
    பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிதோடித்
    துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி குழல்
    சென்று அதனிடை நின்றது வலிது தெருமர நிரையில் 3.3.90
    740 அத் தரு வளர் சுழல் இடை அடை அதன் நிலை அறிபவர் முன்
    கைத் தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகி
    மொய்த்தெழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி
    குத்தினர் உடல் முறிபட வெறி குல மறவர்கள் தலைவர் 3.3.91
    741 வேடர் தங்கரிய செங்கண் வில்லியார் விசையில் குத்த
    மாடிரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு நாணன்
    காடனே இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம்
    ஆடவன் கொன்றான் அச்சோ என்று அடியில் தாழ்ந்தார் 3.3.92
    742 மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்ற
    உற்றது பசி வந்து எம்மை உதவிய இதனைக் காய்ச்சிச்
    சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்து
    வெற்றி கொள் வேட்டைக் காடு குருகுவோம் மெல்ல என்றார் 3.3.93
    743 என்று அவர் கூற நோக்கித் திண்ணனார் தண்ணீர் எங்கே
    நன்றும் இவ் வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன்
    நின்ற இப் பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்ட
    குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான் 3.3.94
    744 பொங்கிய சின வில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே
    இங்கிது தன்னைக் கொண்டு போதுமின் என்று தாமும்
    அங்கது நோக்கிச் சென்றார் காவதம் அரையில் கண்டார்
    செங்கண் ஏறு உடையார் வைகும் திருமலைச் சாரல் சோலை 3.3.95
    745 நாணனே தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணன்
    காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச்
    சேணுயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே
    கோணமில் குடுமித் தேவர் இருப்பர் கும்பிடலாம் என்றான் 3.3.96
    746 ஆவதென் இதனைக் கண்டு இங்கு அணை தொறும் என் மேல் பாரம்
    போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல் மேல்
    மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா நிற்கும்
    தேவர் அங்கு இருப்பது எங்கே போகென்றார் திண்ணனார் தாம் 3.3.97
    747 உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து
    கரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும்
    வரை தரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம் தோறும்
    திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினைச் சார்ந்தார் 3.3.98
    748 ஆங்கு அதன் கரையின் பாங்கோர் அணி நிழல் கேழல் இட்டு
    வாங்கு வில் காடன் தன்னை மரக் கடை தீக் கோல் பண்ணி
    ஈங்கு நீ நெருப்புக் காண்பாய் இம்மலை ஏறிக் கண்டு
    நாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார் 3.3.99
    749 அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின்
    தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார் தாம்
    களி வரும் மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டு கொண்டு
    குளிர் வரு நதி ஊடு ஏகிக் குலவரைச் சாரல் சேர்ந்தார் 3.3.100
    750 கதிரவன் உச்சி நண்ணக் கடவுள் மால் வரையின் உச்சி
    அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர் கலி முழக்கம் காட்ட
    இது என் கொல் நாணா என்றார்க்கு இம் மலைப் பெருந்தேன் சூழ்ந்து
    மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி கொல் என்றான் 3.3.101
    751 முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பம் ஆன
    அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி
    மன் பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி
    என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கை யோடும் 3.3.102
    752 நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏறத் தாமும்
    பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி
    ஆணையாம் சிவத்தைச் சாரா அணைபவர் போல ஐயர்
    நீணிலை மலையை ஏறி நேர் படச் செல்லும் போதில் 3.3.103
    753 திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே
    அம் கண்ணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்தத்
    தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டு அகல நீங்கிப்
    பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன்பு உருவம் ஆனார் 3.3.104
    754 மாகமார் திருக் காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ள
    ஏக நாயகரைக் கண்டார் எழுந்த பேர் உவகை அன்பின்
    வேகம் ஆனது மேல் செல்ல மிக்கது ஓர் விரைவின் ஓடும்
    மோகமாய் ஓடிச் சென்றார் தழுவினார் மோந்து நின்றார் 3.3.105
    755 நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால் தோறும்
    வடிவெலாம் புளகம் பொங்க மலர்க் கண்ணீர் அருவி பாய
    அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று
    படி இலாப் பரிவு தான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற 3.3.106
    756 வெம் மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதியார் போல்
    கைம் மலை கரடி வேங்கை அரி திரி கானம் தன்னில்
    உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றிக் கெட்டேன்
    இம் மலைத் தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார் 3.3.107
    757 கைச்சிலை விழுந்தது ஓரார் காளையார் மீள இந்தப்
    பச்சிலையோடும் பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து
    மச்சிது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற
    அச்சிலை நாணன் தானும் நான் இது அறிந்தேன் என்பான் 3.3.108
    758 வன்றிறல் உந்தை யோடு மா வேட்டை ஆடிப் பண்டிக்
    குன்று இடை வந்தோம் ஆகக் குளிர்ந்த நீர் இவரை ஆட்டி
    ஒன்றிய இலைப் பூச்சூட்டி ஊட்டி முன்பு அறைந்த தேர் பார்ப்பான்
    அன்றிது செய்தான் இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான் 3.3.109
    759 உண்ணிறைந்து எழுந்த தேனும் ஒழிவின்றி ஆரா அன்பில்
    திண்ணனார் திருக் காளத்தி நாயனார்க்கு இனிய செய்கை
    எண்ணிய இவைகொலாம் என்று இது கடைப் பிடித்துக் கொண்டு அவ்
    அண்ணலைப் பிரிய மாட்டா அளவில் ஆதரவு நீட 3.3.110
    760 இவர் தமைக் கண்டேனுக்குத் தனியராய் இருந்தார் என்னே
    இவர் தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை
    இவர் தமைப் பிரிய ஒண்ணாது என்செய்கேன் இனி யான் சால
    இவர் தமக்கு இறைச்சி கொண்டிங்கு எய்தவும் வேண்டும் என்று 3.3.111
    761 போதுவர் மீண்டும் செல்வர் புல்லுவர் மீளப் போவர்
    காதலின் நோக்கி நிற்பர் கன்று அகல் புனிற்று ஆப் போல்வர்
    நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே
    கோதறத் தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார் 3.3.112
    762 ஆர்தமராக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன்
    நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்று
    சோர் தரு கண்ணீர் வாரப் போய் வரத் துணிந்தார் ஆகி
    வார் சிலை எடுத்துக் கொண்டு மலர்க் கையால் தொழுது போந்தார் 3.3.113
    763 முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து நாணன்
    பின்பு வந்து அணைய முன்னைப் பிற துறை வேட்கை நீங்கி
    அன்பு கொண்டு உய்ப்பச் செல்லும் அவர் திரு முகலி ஆற்றின்
    பொன் புனை கரையில் ஏறிப் புது மலர்க் காவில் புக்கார் 3.3.114
    764 காடனும் எதிரே சென்று தொழுது தீக் கடைந்து வைத்தேன்
    கோடுடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம்
    மாடுற நோக்கிக் கொள்ளும் மறித்து நாம் போகைக்கு இன்று
    நீட நீர் தாழ்த்தது என்னோ என்றலும் நின்ற நாணன் 3.3.115
    765 அங்கிவர் மலையில் தேவர் தம்மைக் கண்டு அணைத்துக் கொண்டு
    வங்கினைப் பற்றிப் போதாவல்லுடும்பு என்ன நீங்கான்
    இங்கும் அத் தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏகப் போந்தான்
    நம்குலத் தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு என்றான் 3.3.116
    766 என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள்
    முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார்
    வன் பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி மிக்க
    இன்புறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு 3.3.117
    767 கோலினில் கோத்துக் காய்ச்சி கொழும் தசை பதத்தில் வேவ
    வாலிய சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கிப் பார்த்துச்
    சாலவும் இனிய எல்லாம் சருகு இலை இணைத்த கல்லை
    ஏலவே கோலிக் கூட அதன் மிசை இடுவார் ஆனார் 3.3.118
    768 மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னே
    அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான்
    பெரும் பசி உடையன் ஏனும் பேச்சிலன் எமக்கும் பேறு
    தரும் பரிசு உணரான் மற்றைத் தசை புறத்து எறியா நின்றான் 3.3.119
    769 தேவுமால் கொண்டான் இந்தத் திண்ணன் மற்று இதனைத் தீர்க்கல்
    ஆவது ஒன்று அறியோம் தேவராட்டியை நாகனோடு
    மேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும் அவ் வேட்டைக் கானில்
    ஏவல் ஆட்களையும் கொண்டு போதும் என்று எண்ணிப் போனார் 3.3.120
    770 கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண்
    ஊன் அமுது அமைத்துக் கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி
    மா நதி நன்னீர் தூய வாயினில் கொண்டு கொய்த
    தூ நறும் பள்ளித் தாமங் குஞ்சி மேல் துதையக் கொண்டார் 3.3.121
    771 தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கிக் கல்லைப்
    புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி
    இனிய எம்பிரானார் சாலப் பசிப்பர் என்று இரங்கி ஏங்கி
    நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்தாம் 3.3.122
    772 இளைத்தனர் நாயனார் என்று ஈண்டச் சென்று எய்தி வெற்பின்
    முளைத்து எழு முதலைக் கண்டு முடிமிசை மலரைக் காலில்
    வளைத்த பொற் செருப்பால் மாற்றி வாயின் மஞ்சன நீர் தன்னை
    விளைத்த அன்பு உமிழ்வார் போன்று விமலனார் முடிமேல் விட்டார் 3.3.123
    773 தலை மிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடங் காளத்தி
    மலை மிசைத் தம்பிரானார் முடி மிசை வணங்கிச் சாத்திச்
    சிலைமிசைப் பொலிந்த செங்கைத் திண்ணனார் சேர்த்த கல்லை
    இலை மிசைப் படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து 3.3.124
    774 கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்கு
    அழலுறு பதத்தில் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி நாவில்
    பழகிய இனிமை பார்த்துப் படைத்த இவ் இறைச்சி சால
    அழகிது நாயனீரே அமுது செய்து அருளும் என்றார் 3.3.125
    775 அன்ன இம் மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர்
    மன்னனார் திருக் காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன்
    இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு
    பன்னெடுங் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில் தாழ்ந்தான் 3.3.126
    776 அவ்வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும்
    வெவ்விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளாச்
    செவ்விய அன்பு தாங்கித் திருக் கையில் சிலையும் தாங்கி
    மைவரை என்ன ஐயர் மருங்கு நின்று அகலா நின்றார் 3.3.127
    777 சார்வரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர் தாமும்
    கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார் தம்மை
    ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே
    நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார் 3.3.128
    778 கழை சொரி தரளக் குன்றில் கதிர் நிலவு ஒருபால் பொங்க
    முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒருபால் மொய்ப்பத்
    தழை கதிர்ப் பரிதியோடும் சந்திரன் தலை உவாவில்
    குழையணி காதர் வெற்பைக் கும்பிடச் சென்றால் ஒக்கும் 3.3.129
    779 விரவு பன்மணிகள் கான்ற விரிகதிர்ப் படலை பொங்க
    மரகதம் ஒளி கொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி
    பொர இரு சுடருக்கு அஞ்சிப் போயின புடைகள் தோறும்
    இரவு இருள் ஒதுங்கினாலே போன்று உளது எங்கும் எங்கும் 3.3.130
    780 செந்தழல் ஒளியில் பொங்கும் தீப மா மரங்களாலும்
    மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும்
    ஐந்தும் ஆறடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும்
    எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை 3.3.131
    781 வரும் கறைப் பொழுது நீங்கி மல்கிய யாமஞ் சென்று
    சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ் சிலம்பு ஓசை கேட்டுக்
    கருங்கடல் என்ன நின்ற கண் துயிலாத வீரர்
    அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி 3.3.132
    782 ஏறுகாற்பன்றியோடும் இருங்கலை புனமான் மற்றும்
    வேறு வேறு இனங்கள் வேட்டை வினைத் தொழில் விரகினாலே
    ஊறுசெய் காலம் சிந்தித்து உருமிகத் தெரியாப் போதின்
    மாறடு சிலையும் கொண்டு வள்ளலைத் தொழுது போந்தார் 3.3.133
    783 மொய் காட்டும் இருள் வாங்கி முகம் காட்டும் தேர் இரவி
    மெய் காட்டும் அன்புடைய வில்லியர் தனி வேட்டை
    எய்காட்டின் மாவளைக்க இட்ட கரும் திரை எடுத்துக்
    கை காட்டும் வான் போலக் கதிர் காட்டி எழும் போதில் 3.3.134
    784 எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்பக்
    கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார்
    மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழி பாடு
    செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவ கோசரியார் 3.3.135
    785 வந்து திருமலையின் கண் வானவர் நாயகர் மருங்கு
    சிந்தை நியமத்தோடும் செல் கின்றார் திரு முன்பு
    வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்து ஓடி
    இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார் என்று அழிவார் 3.3.136
    786 மேவநேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார்
    தேவ தேவ ஈசனே திருமுன்பே இது செய்து
    போவதே இவ் வண்ணம் புகுத நீர் திரு உள்ளம்
    ஆவதோ எனப் பதறி அழுது விழுந்து அலமந்தார் 3.3.137
    787 பொருப்பில் எழுஞ் சுடர்க் கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான்
    இருப்பது இனி ஏன் என்று அவ் இறைச்சி எலும்புடன் இலையும்
    செருப்பு அடியும் நாய் அடியும் திரு அலகால் மாற்றிய பின்
    விருப்பின் ஒடும் திருமுகலிப் புனல் மூழ்கி விரைந்து அணைந்தார் 3.3.138
    788 பழுது புகுந்தது அது தீரப் பவித்திரமாம் செயல் புரிந்து
    தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி
    வழுவில் திரு மஞ்சனமே வரும் முதலாக வரும் பூசை
    முழுது முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார் 3.3.139
    789 பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால்
    துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர்த் திங்கள்
    அணிந்த சடை முடிக் கற்றை அங்கணரை விடை கொண்டு
    தணிந்த மனத் திருமுனிவர் தபோ வனத்திடை சார்ந்தார் 3.3.140
    790 இவ் வண்ணம் பெருமுனிவர் ஏகினார் இனி இப்பால்
    மைவண்ணக் கருங் குஞ்சி வன வேடர் பெருமானார்
    கைவண்ணச் சிலை வளைத்துக் கான் வேட்டை தனி ஆடிச்
    செய்வண்ணத் திறம் மொழிவேன் தீவினையின் திறம் ஒழிவேன 3.3.141
    791 திரு மலையின் புறம் போன திண்ணனார் செறி துறுகல்
    பெருமலைகள் இடைச் சரிவில் பெரும் பன்றி புனம் மேய்ந்து
    வருவனவும் துணி படுத்து மான் இனங்கள் கான் இடை நின்று
    ஒரு வழிச் சென்று ஏறு துறை ஒளி நின்று கொன்று அருளி 3.3.142
    792 பயில் விளியால் கலை அழைத்துப் பாடு பெற ஊடுருவும்
    அயில் முகவெங் கணை போக்கி அடி ஒற்றி மரை இனங்கள்
    துயில் இடையில் கிடை செய்து தொடர்ந்து கடமைகள் எய்து
    வெயில் படு வெங்கதிர் முதிரத் தனி வேட்டை வினை முடித்தார் 3.3.143
    793 பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல்
    இட்டு அருகு தீக் கடை கோல் இரும் சுரிகை தனை உருவி
    வெட்டி நறுங் கோல் தேனும் மிக முறித்துத் தேக்கு இலையால்
    வட்டமுறு பெருங் கல்லை மருங்கு புடை பட அமைத்தார் 3.3.144
    794 இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில்
    வெம் தழலைப் பிறப்பித்து மிக வளர்த்து மிருகங்கள்
    கொந்தி அயில் அலகம்பால் குட்டம் இட்டுக் கொழுப்பரிந்து
    வந்தன கொண்டு எழும் தழலில் வக்குன வக்குவித்து 3.3.145
    795 வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின்
    ஆய உறுப்பு இறைச்சி யெலாம் அரிந்து ஒருகல் இலையில் இட்டு
    காய நெடும் கோல் கோத்துக் கனலின் கண் உறக்காய்ச்சி
    தூய திரு அமுது அமைக்கச் சுவை காணல் உறுகின்றார் 3.3.146
    796 எண்ணிறைந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும்
    வண்ண எரி வாயின் கண் வைத்தது எனக் காளத்தி
    அண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பதற்குத்
    திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது 3.3.147
    797 நல்ல பதமுற வெந்து நாவின் கண் இடும் இறைச்சி
    கல்லையினிற் படைத்துத் தேன் பிழிந்து கலந்து கொண்டு
    வல் விரைந்து திருப் பள்ளித் தாமமும் உந்தூய் மஞ்சனமும்
    ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார் 3.3.148
    798 வந்து திருக் காளத்தி மலை ஏறி வனசரர்கள்
    தந்தலைவனார் இமையோர் தலைவனார் தமை எய்தி
    அந்தணனார் பூசையினை முன்பு போல் அகற்றிய பின்
    முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார் 3.3.149
    799 ஊனமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்றால்
    ஏனமொடு மான் கலைகள் மரை கடமை இவையிற்றில்
    ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன்
    தேனும் உடன் கலந்து இதுதித்திக்கும் என மொழிந்தார் 3.3.150
    800 இப் பரிசு திரு அமுது செய்வித்துத் தம்முடைய
    ஒப்பரிய பூசனை செய்து அந்நெறியில் ஒழுகுவார்
    எப்பொழுதும் மேன்மேல்வந்து எழும் அன்பால் காளத்தி
    அப்பர் எதிர் அல்லுறங்கார் பகல் வேட்டை ஆடுவார் 3.3.151
    801 மாமுனிவர் நாள் தோறும் வந்து அணைந்து வன வேந்தர்
    தாம் முயலும் பூசனைக்குச் சால மிகத் தளர்வு எய்தித்
    தீமை என அது நீக்கிச் செப்பிய ஆகம விதியால்
    ஆமுறையில் அர்ச்சனை செய்து அந் நெறியில் ஒழுவாரால் 3.3.152
    802 நாணனொடு காடனும் போய் நாகனுக்குச் சொல்லியபின்
    ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டு
    பேணு மகனார் தம் பால் வந்து எல்லாம் பேதித்துக்
    காணு நெறி தங்கள் குறி வாராமல் கை விட்டார் 3.3.153
    803 முன்பு திருக் காளத்தி முதல்வனார் அருள் நோக்கால்
    இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கைத்
    தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற
    அன்பு பிழம் பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ? 3.3.154
    804 அந்நிலையில் அன்பனார் அறிந்த நெறி பூசிப்ப
    மன்னிய ஆகமப் படியால் மாமுனிவர் அருச்சித்து இங்கு
    என்னுடைய நாயகனே இது செய்தார் தமைக் காணேன்
    உன்னுடைய திருவருளால் ஒழித்து அருள வேண்டும் என 3.3.155
    805 அன்று இரவு கனவின் கண் அருள் முனிவர் தம்பாலே
    மின் திகழும் சடை மவுலி வேதியர் தாம் எழுந்து அருளி
    வன்திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல்
    நன்றவன் தன் செயல் தன்னை நாம் உரைப்பக் கேள் என்று 3.3.156
    806 அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும்
    அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு என்றும்
    அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும்
    அவனுடைய நிலை இவ்வாறு அறிநீ என்று அருள் செய்வார் 3.3.157
    807 பொருட்பினில் வந்தவன் செய்யும் பூசனைக்கு முன்பென்மேல்
    அருப்புறுமென் மலர்முன்னை அவை நீக்கும் ஆதரவால்
    விருப்புரும் அன்பெனும் வெள்ளக்கால் பெருகிற் றெனவீழ்ந்த
    செருப்படி அவ்விளம்பருவச் சேயடியிற் சிறப்புடைத்தால். 3.3.158
    808 உருகிய அன்பொழிவின்றி நிறைந்த அவன் உருவென்னும்
    பெருகியகொள் கலமுகத்தில் பிறங்கியினி தொழுகுதலால்
    ஒருமுனிவன் செவிஉமிழும் உயர்கங்கை முதல்தீர்த்தப்
    பொருபுனலின் எனக்கவன்தன் வாயுமிழும் புனல்புனிதம். 3.3.159
    809 இம்மலைவந் தெனையடைந்த கானவன்தன் இயல்பாலே
    மெய்மலரும் அன்புமேல் விரிந்தனபோல் விழுதலால்
    செம்மலர்மேல் அயனொடுமால் முதல்தேவர் வந்துபுனை
    எம்மலரும் அவன் தலையால் இடுமலர்போல் எனக்கொல்வா 3.3.160
    810 வெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ எனும் அன்பால்
    நையுமனத் தினிமையினால் நையமிக மென்றிடலால்
    செய்யுமறை வேள்வியோர் முன்புதருந் திருந்தவியில்
    எய்யும்வரிச் சிலையவந்தான் இட்டஊன் எனக்கினிய. 3.3.161
    811 மன்பெருமா மறைமொழிகள் மாமுனிவர் மகிழ்ந்துரைக்கும்
    இன்பமொழித் தோத்திரங்கள் மந்திரங்களியாவையினும்
    முன்பிருந்து மற்றவன்தன்முகமலர அகநெகிழ
    அன்பில்நினைந் தெனையல்லால் அறிவுறா மொழிநல்ல. 3.3.162
    812 உனக்கவன் தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால்
    எனக்கு அவன் தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய்
    மனக் கவலை ஒழிக என்று மறை முனிவர்க்கு அருள் செய்து
    புனல் சடிலத் திரு முடியார் எழுந்து அருளிப் போனார் 3.3.163
    813 கனவு நிலை நீங்கிய பின் விழித்து உணர்ந்து கங்குல் இடைப்
    புனை தவத்து மாமுனிவர் புலர் அளவும் கண் துயிலார்
    மனம் உறும் அற்புதமாகி வரும் பயமும் உடன் ஆகித்
    துனை புரவித் தனித் தேர் மேல் தோன்றுவான் கதிர் தோன்ற 3.3.164
    814 முன்னை நாள் போல் வந்து திருமுகலிப் புனல் மூழ்கிப்
    பன் முறையும் தம்பிரான் அருள் செய்த படி நினைந்து
    மன்னு திருக் காளத்தி மலை ஏறி முன்பு போல்
    பிஞ்ஞகனைப் பூசித்துப் பின்பாக ஒளித்திருந்தார் 3.3.165
    815 கருமுகில் என்ன நின்ற கண் படா வில்லியார் தாம்
    வருமுறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த காலை
    அருமறை முனிவனார் வந்தணை வதன் முன்னம் போகித்
    தருமுறை முன்பு போலத் தனிப்பெரு வேட்டை ஆடி 3.3.166
    816 மாறில் ஊன் அமுதும் நல்ல மஞ்சனப் புனலும் சென்னி
    ஏறு நாண் மலரும் வெவ்வேறு இயல்பினில் அமைத்துக் கொண்டு
    தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்தி
    ஆறுசேர் சடையார் தம்மை அணுக வந்து அணையா நின்றார் 3.3.167
    817 இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து ஏகுவார் முன்
    மொய்த்த பல்சகுனம் எல்லாம் முறை முறை தீங்கு செய்ய
    இத் தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரங் காட்டும்
    அதனுக்கு என் கொல் கெட்டேன் அடுத்தது என்று அணையும் போதில் 3.3.168
    818 அண்ணலார் திருக் காளத்தி அடிகளார் முனிவனார்க்கு
    திண்ணனார் பரிவு காட்டத் திரு நயனத்தில் ஒன்று
    துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அவ்
    வண்ணவெஞ் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார் 3.3.169
    819 வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நன்னீர்
    சிந்திடக் கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழக்
    கொந்தவர் பள்ளித் தாமம் குஞ்சி நின்று அலைந்து சோரப்
    பைந்தழை அலங்கல் மார்பர் நிலத்து இடைப் பதைத்து வீழ்ந்தார் 3.3.170
    820 விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வது
    ஒழிந்திடக் காணார் செய்வது அறிந்திலர் உயிர்த்து மீள
    அழிந்து போய் வீழ்ந்தார் தேறி யாரிது செய்தார் என்னா
    எழுந்தனர் திசைகள் எங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும் 3.3.171
    821 வாளியுந் தெரிந்து கொண்டு இம் மலையிடை எனக்கு மாறா
    மீளி வெம் மறவர் செய்தார் உளர் கொலோ? விலங்கின் சாதி
    ஆளி முன்னாகி யுள்ள விளைத்தவோ? அறியேன் என்று
    நீளிருங் குன்றைச் சாரல் நெடிதிடை நேடிச் சென்றார் 3.3.172
    822 வேடரைக் காணார் தீய விலங்குகள் மருங்கு எங்கும்
    நாடியுங் காணார் மீண்டும் நாயனார் தம்பால் வந்து
    நீடிய சோகத்தோடு நிறை மலர்ப் பாதம் பற்றி
    மாடுறக் கட்டிக் கொண்டு கதறினார் கண்ணீர் வார 3.3.173
    823 பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ?
    ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ ?
    மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ?
    ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும் 3.3.174
    824 என் செய்தால் தீருமோதான்? எம்பிரான் திறத்துத் தீங்கு
    முன்செய்தார் தம்மைக் காணேன் மொய் கழல் வேடர் என்றும்
    மின்செய்வார் பகழிப் புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடிப்
    பொன்செய் தாழ் வரையிற் கொண்டு வருவன் நான் என்று போனார் 3.3.175
    825 நினைத்தனர் வேறு வேறு நெருங்கிய வனங்கள் எங்கும்
    இனத்திடை பிரிந்த செங்கணேறு என வெருக் கொண்டு எய்திப்
    புனத்திடைப் பறித்துக் கொண்டு பூத நாயகன்பால் வைத்த
    மனத்தினும் கடிது வந்து தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார் 3.3.176
    826 மற்றவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக் காளத்திக்
    கொற்றவர் கண்ணில் புண்ணீர் குறை படாது இழியக் கண்டும்
    இற்றையின் நிலைமைக்கு என்னோ இனிச் செயல் என்று பார்ப்பார்
    உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரைமுன் கண்டார் 3.3.177
    827 இதற்கினி என்கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண்
    அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கும் என்று
    மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தங்கண்
    முதற்சரம் அடுத்து வாங்கி முதல்வர் தம் கண்ணில் அப்ப 3.3.178
    828 நின்ற செங்குருதி கண்டார் நிலத்தின் நின்றேப் பாய்ந்தார்
    குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி
    நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற
    ஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார் 3.3.179
    829 வலத்திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார் தம்
    நலத்தினைப் பின்னும் காட்ட நாயனார் மற்றைக் கண்ணில்
    உலப்பில் செம் குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர்
    குலப்பெருந் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார் 3.3.180
    830 கண்டபின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்று
    புண்டரு குருதி நிற்க மற்றைக் கண் குருதி பொங்கி
    மண்டுமற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும்
    உண்டொரு கண் அக்கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று 3.3.181
    831 கண்ணுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பிற் காணும் நேர்பாடு
    எண்ணுவர் தம்பிரான் தன் திருக் கண்ணில் இடக்கால் ஊன்றி
    உண்ணிறை விருப்பினோடும் ஒரு தனிப் பகழி கொண்டு
    திண்ணனார் கண்ணில் ஊன்றத் தரித்திலர் தேவ தேவர் 3.3.182
    832 செங்கண் வெள்விடையின் பாகர் திண்ணனார் தம்மை ஆண்ட
    அங்கணர் திருக் காளத்தி அற்புதர் திருக்கை அன்பர்
    தங்கண் முன் இடக்குங் கையைத் தடுக்க மூன்று அடுக்கு நாக
    கங்கணர் அமுதவாக்குக் கண்ணப்ப நிற்க என்ற 3.3.183
    833 கானவர் பெருமானார் தங்கண் இடந்து அப்பும் போதும்
    ஊனமும் உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும்
    ஞான மாமுனிவர் கண்டார் நான்முகன் முதலாய் உள்ள
    வானவர் வளர் பூ மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப 3.3.184
    834 பேறினி இதன் மேல் உண்டோ ? பிரான் திருக் கண்ணில் வந்த
    ஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்தப்ப உதவும் கையை
    ஏறுயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு என் வலத்தில்
    மாறிலாய் நிற்க என்று மன்னு பேர் அருள் புரிந்தார் 3.3.185
    835 மங்குல் வாழ் திருக் காளத்தி மன்னனார் கண்ணில் புண்ணீர்
    தங்கணால் மாற்றப் பெற்ற தலைவர் தாள் தலைமேற் கொண்டே
    கங்கை வாழ் சடையார் வாழும் கடவூரில் கலயனாராம்
    பொங்கிய புகழின் மிக்கார் திருத் தொண்டு புகலல் உற்றேன் 3.3.186
    திருச்சிற்றம்பலம்


Goto Main book