MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    4.1 மூர்த்தி நாயனார் புராணம் (973- 1021)


    திருச்சிற்றம்பலம்

    973 சீர் மன்னு செல்வக்குடி மல்கு சிறப்பின் ஓங்கும்
    கார் மன்னு சென்னிக் கதிர் மாமணி மாட வைப்பு
    நார் மன்னு சிந்தைப் பல நற்றுறை மாந்தர் போற்றும்
    பார் மன்னு தொன்மைப் புகழ் பூண்டது பாண்டி நாடு 4.1.1
    974 சாயுந்தளிர் வல்லி மருங்குல் நெடுந் தடங்கண்
    வேயும் படு தோளியர் பண்படும் இன்சொல் செய்ய
    வாயும் படும் நீள் கரை மண் பொருந்தண் பொருந்தம்
    பாயுங் கடலும் படும் நீர்மை பணித்த முத்தம் 4.1.2
    975 மொய்வைத்த வண்டின் செறிகுழல் முரன்ற சந்தின்
    மை வைத்த சோலை மலயந்தர வந்த மந்த
    மெய் வைத்த காலுந் தரும் ஞாலம் அளந்த மேன்மைத்
    தெய்வத் தமிழும் தரும் செவ்வி மணஞ்செயீரம் 4.1.3
    976 சூழும்஢தழ்ப் பங்கயமாக அத் தோட்டின் மேலாள்
    தாழ்வு இன்றி என்றும் தனி வாழ்வது அத் தையல் ஒப்பார்
    யாழின் மொழியில் குழல் இன்னிசையும் சுரும்பும்
    வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும் 4.1.4
    977 சால்பாய மும்மைத் தமிழ் தங்கிய அங்கண் மூதூர்
    நூல் பாய் இடத்தும் உள நோன்றலை மேதி பாயப்
    பால் பாய் முலை தோய் மதுப் பங்கயம் பாய எங்கும்
    சேல் பாய் தடத்தும் உள செய்யுள் மிக்கேறு சங்கம் 4.1.5
    978 மந்தா நிலம் வந்து அசை பந்தரின் மாடம் முன்றில்
    பந்தாடிய மங்கையர் பங்கயச் செங்கை தாங்கும்
    சந்தார் முலை மேலன தாழ் குழை வாள் முகப்பொற்
    செந்தாமரை மேலன நித்திலஞ் சேர்ந்த கோவை 4.1.6
    979 மும்மைப் புவனங்களின் மிக்கது அன்றே அம் மூதூர்
    மெய்ய்ம்மைப் பொருளாந் தமிழ் நூலின் விளங்கு வாய்மை
    செம்மைப் பொருளுந் தருவார் திருஆலவாயில்
    எம்மைப் பவந் தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால் 4.1.7
    980 அப் பொற் பதிவாழ் வணிகக் குலத்து ஆன்ற தொன்மைச்
    செப்பத் தகு சீர்க் குடி செய்தவஞ் செய்ய வந்தார்
    எப்பற்றினையும் அறுத்து ஏறுகைத்து ஏறுவார் தாள்
    மெய்ப் பற்று எனப் பற்றி விடாத விருப்பின் மிக்கார் 4.1.8
    981 நாளும் பெருங் காதல் நயப்புறும் வேட்கை யாலே
    கேளும் துணையும் முதல் கேடில் பதங்கள் எல்லாம்
    ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்
    மூளும் பெருக்கு அன்பு எனும் மூர்த்தியார் மூர்த்தியார்தாம் 4.1.9
    982 அந்திப் பிறை செஞ்சடை மேல் அணி ஆலவாயில்
    எந்தைக்கு அணி சந்தனக் காப்பிட என்றும் முட்டா
    அந்தச் செயலின் நிலை நின்று அடியார் உவப்பச்
    சிந்தைக்கு இனிதாய திருப்பணி செய்யும் நாளில் 4.1.10
    983 கானக் கடி சூழ் வடுகக் கரு நாடர் காவல்
    மானப் படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய்
    யானைக் குதிரைக் கருவிப் படை வீரர் திண்டேர்
    சேனைக் கடலுங் கொடு தென் திசை நோக்கி வந்தான் 4.1.11
    984 வந்துற்ற பெரும் படை மண் புதையப் பரப்பிச்
    சந்தப் பொதியில் தமிழ் நாடு உடை மன்னன் வீரம்
    சிந்தச் செரு வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால்
    கந்தப் பொழில் சூழ் மதுரா புரி காவல் கொண்டான் 4.1.12
    985 வல்லாண்மையின் வண் தமிழ் நாடு வளம் படுத்தி
    நில்லா நிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேரு
    வில்லான் அடிமைத் திறம் மேவிய நீற்றின் சார்பு
    செல்லாதரு கந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான் 4.1.13
    986 தாழும் சமண் கையர் தவத்தை மெய் என்று சார்ந்து
    வீழும் கொடியோன் அது அன்றியும் வெய்ய முன்னைச்
    சூழும் வினையால் அரவம் சுடர்த் திங்களோடும்
    வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான் 4.1.14
    987 செக்கர்ச் சடையார் விடையார் திரு ஆல வாயுள்
    முக்கட் பரனார் திருத் தொண்டரை மூர்த்தியாரை
    மைக்கற்புரை நெஞ்சுடை வஞ்சகன் வெஞ்ச மண் போர்
    எக்கர்க்குடனாக இகழ்தன செய்ய எண்ணி 4.1.15
    988 அந்தம் இலவாம் இறை செய்யவும் அன்பனார் தாம்
    முந்தை தம் முறைமைப் பணி முட்டலர் செய்து வந்தார்
    தம் தம் பெருமைக்கு அளவாகிய சார்பில் நிற்கும்
    எம் தம் பெரு மக்களை யாவர் தடுக்க வல்லார் 4.1.16
    989 எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்யத்
    தள்ளுஞ் செயல் இல்லார் சந்தனக் காப்புத் தேடிக்
    கொள்ளுந் துறையும் அடைத்தான் கொடும் கோன்மை செய்வான்
    தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து 4.1.17
    990 புன்மைச் செயல்வல் அமண்குண்டரிற் போது போக்கும்
    வன்மைக் கொடும் பாதகன் மாய்திட வாய்மை வேத
    நன்மைத் திரு நீற்று உயர் நன்னெறி தாங்கு மேன்மைத்
    தன்மைப் புவி மன்னரைச் சார்வதென்(று)? என்று சார்வார் 4.1.18
    991 காய்வுற்ற செற்றங் கொடு கண்டகன் காப்பவும் சென்று
    ஆய்வுற்ற கொட்பில் பகல் எல்லை அடங்க நாடி
    ஏய்வுற்ற நற்சந்தனம் எங்கும் பெறாது சிந்தை
    சாய் உற்றிட வந்தனர் தம்பிரான் கோயில் தன்னில் 4.1.19
    992 நட்டம் புரிவார் அணி நற்றிரு மெய்ப் பூச்சு இன்று
    முட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கைமுட்டாது என்று
    வட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார்
    கட்டும் புறந்தோல் நரம்பு என்பு கரைந்து தேய 4.1.20
    993 கல்லின் புறந் தேய்ந்த முழங்கை கலுழ்ந்து சோரி
    செல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்து முளை
    புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பிரான் ஆனார்
    அல்லின் கண் எழுந்தது உவந்து அருள் செய்த வாக்கு 4.1.21
    994 அன்பின் துணிவால் இது செய்திடல் ஐய! உன்பால்
    வன் புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு
    முன் பின்னல் புகுந்தன முற்றவும் நீத்துக் காத்துப்
    பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன 4.1.22
    995 இவ் வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்து அஞ்சி முன்பு
    செய் வண்ணம் ஒழிந்திடத் தேய்ந்த புண் ஊறு தீர்ந்து
    கை வண்ணம் நிரம்பின வாசம் எல்லாம் கலந்து
    மொய் வண்ண விளங்கு ஒளி எய்தினர் மூர்த்தியார் தாம் 4.1.23
    996 அந் நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும்
    மன் ஆகிய போர் வடுகக் கருநாடர் மன்னன்
    தன்னாளும் முடிந்தது சங்கரன் சார்பு இலோர்க்கு
    மின்னாம் என நீடிய மெய்ந் நிலையாமை வெல்ல 4.1.24
    997 இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர்
    மெய் வாழ் உலகத்து விரைந்து அணைவார்களே போல்
    அவ்வாறு அரனார் அடியாரை அலைத்த தீயோன்
    வெவ்வாய் நிரயத்து இடை விரைந்து வீந்தான் 4.1.25
    998 முழுதும் பழுதே புரி மூர்க்கன் உலந்த போதின்
    எழுதும் கொடி போல்பவர் உட்பட ஏங்கு சுற்றம்
    முழுதும் புலர்வுற்றது மற்று அவன் அன்ன மாலைப்
    பொழுதும் புலர்வுற்றது செங்கதிர் மீது மோத 4.1.26
    999 அவ் வேலையில் அங்கண் அமைச்சர்கள் கூடித் தங்கள்
    கை வேறு கொள் ஈம அருங்கடன் காலை முற்றி
    வை வேலவன் தன் குல மைந்தரும் இன்மை யாலே
    செய் வேறு வினைத் திறம் சிந்தனை செய்து தேர்வார் 4.1.27
    1000 தாழும் செயலின்று ஒரு மன்னவன் தாங்க வேண்டும்
    கூழும் குடியும் முதலாயின கொள்கைத்தேனும்
    சூழும் படை மன்னவன் தோள் இணைக் காவல் இன்றி
    வாழும் தகைத்து அன்றி இந்த வையகம் என்று சொன்னார் 4.1.28
    1001 பல் முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான்
    தன் நெடும் குடைக் கீழ்த் தம் தம் நெறிகளில் சரிந்து வாழும்
    மன்னரை இன்றி வைகும் மண்ணுலகு எண்ணுங் காலை
    இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார் 4.1.29
    1002 இவ் வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை
    செய்வகை இதுவே என்று தெளிபவர் சிறப்பின் மிக்க
    மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்றக்
    கை வரை கைக் கொண்டார் மண் காவல் கைக் கொள்வார் என்று 4.1.30
    1003 செம் மாண் வினை அர்ச்சனை நூல் முறை செய்து தோளால்
    இம் மாநிலம் ஏந்த ஓர் ஏந்தலை ஏந்துக என்று
    பெய்ம் மா முகில் போல் மதம் பாய் பெருகோடை நெற்றிக்
    கைம்மாவை நறுந் துகில் கொண்டு கண் கட்டி விட்டார் 4.1.31
    1004 கண் கட்டி விடுங்களி யானை அக் காவல் மூதூர்
    மண் கொள் புற வீதி மருங்கு திரிந்து போகித்
    திண் பொன் தட மாமதில் சூழ் திரு ஆல வாயின்
    விண் பிற்பட ஓங்கிய கோபுரம் முன்பு மேவி 4.1.32
    1005 நீங்கும் இரவின் கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர்
    ஈங்கு எம் பெருமான் அருளாம் எனில் இந்த வையம்
    தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கிப்
    பூங்கொன்றை மிலைந்தவர் கோயில் புறத்து நிற்ப 4.1.33
    1006 வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்று
    வாழ்வுற்று உலகம் செய்தவத்தினின் வள்ளலாரைச்
    சூழ் பொற் சுடர் மாமணி மாநிலம் தோய முன்பு
    தாழ்வுற்று எடுத்துப் பிடர் மீது தரித்தது அன்றே 4.1.34
    1007 மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மைக் காணா
    ஏதங்கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம்
    பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள் அப்போது
    ஓதங்கிளர் வேலையை ஒத்து ஒலி மிக்கது அவ்வூர் 4.1.35
    1008 சங்கங்கள் முரன்றன தாரைகள் பேரி யோடும்
    எங்கு எங்கும் இயம்பின பல்லியம் எல்லையில்ல
    அங்கு அங்கு மலிந்தன வாழ்த்தொலி அம்பொற் கொம்பின்
    பங்கன் அருளால் உலகு ஆள்பவர் பாங்கர் எங்கும் 4.1.36
    1009 வெங்கட் களிற்றின் மிசை நின்றும் இழிச்சி வேரித்து
    தொங்கல் சுடர் மாலைகள் சூழ் முடி சூடு சாலை
    அங்கண் கொடு புக்கரி ஆசனத்து ஏற்றி ஒற்றைத்
    திங்கட்குடைக் கீழ் உரிமைச் செயல் சூழ்ந்து செய்வார் 4.1.37
    1010 மன்னுந் திசை வேதியில் மங்கல ஆகுதிக் கண்
    துன்னுஞ் சுடர் வன்னி வளர்த்துத் துதைந்த நூல் சூழ்
    பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூ நீர்
    உன்னுஞ் செயல் மந்திர யோகர் நிறுத்தினார்கள் 4.1.38
    1011 வந்துற்றெழு மங்கல மாந்தர்கள் தம்மை நோக்கிச்
    சிந்தைச் சிவமே தெளியும் திரு மூர்த்தியார் தாம்
    முந்தைச் செயலாம் அமண் போய் முதல் சைவம் ஓங்கில்
    இந்தப் புவி தாங்கி இவ் வின்னரசு ஆள்வான் என்றார் 4.1.39
    1012 அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்சரோடு
    மெய் வாழ் தரு நூல் அறிவின் மிகு மாந்தர் தாமும்
    எவ்வாறு அருள் செய்தனை மற்று அவை அன்றி யாவர்
    செய்வார் பெரியோய் எனச் சேவடி தாழ்ந்து செப்ப 4.1.40
    1013 வையம் முறை செய்வென் ஆகில் வயங்கு நீறே
    செய்யும் அபிடேகமும் ஆக செழுங்கலன்கள்
    ஐயன் அடையாளமும் ஆக அணிந்து தாங்கும்
    மொய் புன் சடைமாமுடியே முடி ஆவது என்றார் 4.1.41
    1014 என்று இவ்வுரை கேட்டலும் எல்லையில் கல்வி யோரும்
    வன் திண் மதி நூல் வளர் வாய்மை அமைச்சர் தாமும்
    நன்றிங்கு அருள் தான் என நற்தவ வேந்தர் சிந்தை
    ஒன்றும் அரசாள் உரிமைச் செயலான உய்த்தார் 4.1.42
    1015 மாடு எங்கும் நெருங்கிய மங்கல ஓசை மல்கச்
    சூடும் சடை மௌலி அணிந்தவர் தொல்லை ஏனம்
    தேடுங் கழலார் திருஆல வாய் சென்று தாழ்ந்து
    நீடுங்களிற்றின் மிசை நீள் மறுகூடு போந்தார் 4.1.43
    1016 மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழ மீது
    தன்னின்றும் இழிந்து தயங்கு ஒளி மண்டபத்தில்
    பொன்னின் அரி மெல்லணைச் சாமரைக் காமர் பூங்கால்
    மன்னும் குடை நீழல் இருந்தனர் வையம் தாங்கி 4.1.44
    1017 குலவுந் துறை நீதி அமைச்சர் குறிப்பின் வைகக்
    கலகம் செய் அமண்செயல் ஆயின கட்டு நீங்கி
    நிலவும் திரு நீற்று நெறித் துறை நீடு வாழ
    உலகெங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன 4.1.45
    1018 நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின்
    பதம் எங்கும் நிறைந்து விளங்கப் பவங்கள் மாற
    உதவும் திருநீறு உயர் கண்டிகை கொண்ட வேணி
    முதன் மும்மையினால் உலகு ஆண்டனர் மூர்த்தியார் தாம் 4.1.46
    1019 ஏலம் கமழ் கோதையர் தம் திறம் என்றும் நீங்கும்
    சீலங்கொடு வெம் புலன் தெவ்வுடன் வென்று நீக்கி
    ஞாலந் தனி நேமி நடாத்தி நலம் கொள் ஊழிக்
    காலம் உயிர்கட்கு இடர் ஆன கடிந்து காத்து 4.1.47
    1020 பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற
    ஏதம் பிணியா வகை இவ் உலகு ஆண்டு தொண்டின்
    பேதம் புரியா அருள் பேர் அரசாளப் பெற்று
    நாதன் கழல் சேவடி நண்ணினர் அண்ணலாரே 4.1.48
    1021 அகல் பாறையின் வைத்து முழங் கையை அன்று தேய்த்த
    இகலார் களிற்று அன்பரை ஏத்தி முருகனாராம்
    முகில் சூழ் நறுஞ் சோலையின் மொய் ஒளி மாட வீதிப்
    புகலூர் வரும் அந்தணர் தம் திறம் போற்றல் உற்றாம் 4.1.49
    திருச்சிற்றம்பலம்


Goto Main book